உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“தவறான வழிநடத்தல்களாலே அவர்கள் கைதிகளாக உள்ளனர். அவர்களுள் என்னை கொல்ல வந்தவர்களும் உள்ளனர். ஆனாலும் அவர்கள் விடுவிக்க நான் பாடுபடுவேன் ” – அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா 

“தவறான வழிநடத்தல்களாலே அவர்கள் கைதிகளாக உள்ளனர். அவர்களுள் என்னை கொல்ல வந்தவர்களும் உள்ளனர். ஆனாலும் அவர்கள் விடுவிக்க நான் பாடுபடுவேன் ”  என்று கடற்தொழில் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவிற்கு இன்று(16.12.2020) விஐயம் செய்த அவர் போகஸ்வெவ பகுதியில் மின் இணைப்பு பணியை ஆரம்பித்து வைத்திருந்தார். அதன் பின்னர் தனியார் வி்ருந்தினர் விடுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த டக்ளஸ்தேவானந்தா ,

நானும் ஒரு அரசியல் கைதியாக இருந்து எங்களை நாங்கள் விடுவித்தவர்கள். 1983 ஆம் ஆண்டு சிறை உடைப்பு மூலம் யாரையும் நம்பாமல் நாங்களே விடுவித்தோம். பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் எமக்கு பொதுமன்னிப்பு கிடைத்தது. அந்த ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பு. அந்த ஒப்பந்தத்தின் பிறகு எதனையும் விடுதலை போராட்டமாக நான் கருதவில்லை. அன்றிலிருந்து இதனை சொல்லிவருகிறேன்.

எனினும் தவறான வழிநடாத்தலால் அவர்கள் கைதிகளாக இருக்கின்றமையால் அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சியை செய்வேன். அவர்களில் என்னை கொல்லவந்தவர்களும் இருக்கின்றனர். எனக்கு அதிக ஆசனங்களை தந்திருந்தால் இதனை இலகுவாக தீர்த்திருக்கலாம். இன்று கூட்டமைப்பினர் குடி போதையில் கூட்டம் நடாத்துவதாக செய்தி வந்திருந்தது. அப்படியான போராட்டங்கள் இருக்கின்ற சூழலையும் கெடுக்கும் நோக்கமே.

எமது மீனவர்களுக்கு பின்னால் கடற்தொழில் அமைச்சர் நிற்பதாகவும் தகவல் வருகிறது. எது உண்மை என்று நீங்கள் தான் தெரியப்படுத்த வேண்டும். இந்திய மீனவர்களின் இழுவைப்படகு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளால் எமது வளங்கள் அழிகின்றது. இதனால் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகின்றது. இந்நிலையில் வாழ்வா, சாவா என்றவகையில் அவர்கள் கிளர்ந்தெளுந்துள்ளனர். அந்தவகையில் 5 படகுகளையும் 36 இந்திய மீனவர்களையும் கடற்படை கைது செய்துள்ளது. அந்த நடவடிக்கை இன்றும் தொடரும்.

இது தொடர்பாக ஒரு பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு இந்திய மத்திய அரசு தூதரகம் ஊடாக அழைப்பு விடுத்துள்ளது. அதுவரை நல்லெண்ண நோக்கத்தில் அவர்களை விடுவிக்குமாறு கோரியுள்ளது. நல்லெணத்தை அவர்களே காட்டவேண்டும். ஏனெனில் தொடர்ந்து அத்து மீறி வருவது அவர்களே. இந்த பிரச்சனையில் இரண்டு நாடுகளிற்கும் இடையில் இருக்க கூடிய நட்பையும் பாதுகாக்க வேண்டும். எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பார்க்க வேண்டியுள்ளது. என்றார்.

குறித்த நிகழ்வுகளில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அதே நேரம் அமைச்சர் உதயன்கம்மன்பில அரசியல்கைதிகள் என யாருமே இல்லை என ஊடகசந்திப்பில் கூறியுள்ளதுடன் இருந்தால் அவர்களின் பெயர்களை கூறுங்கள் எனவும் சவால் விடுத்துள்ளமையும் நினைவில் கொள்ளத்தக்கது.

சங்கானை சந்தைவர்த்தகர்கள் 08 பேருக்கு கொரோனா! 

இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் சங்கானை சந்தை வர்த்தகர்கள் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது, இதில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் முழு விவரம் வருமாறு,

சங்கானை – 4

உடுவில் – 1

பண்டத்தரிப்பு – 1

மானிப்பாய் – 1

வடலியடைப்பு – 1 5

“தமிழர் என்பதற்காக இங்கு எவரும் கைது செய்யப்படவில்லை என்பதால் தமிழ்க் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை” – உதய கம்மன்பில

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர்களால் பிரதமரிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ள நிலையில் “தமிழர் என்பதற்காக இங்கு எவரும் கைது செய்யப்படவில்லை என்பதால் தமிழ்க் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை” அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில மீண்டும் தெரிவித்துள்ளார்.

சிறைகளில் அரசியல் கைதிகள் அவ்வாறு இருப்பார்களாயின் அவர்களில் ஒருவரின் பெயரையாவது வெளியிடுமாறு அவர் சவால் விடுத்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று(15.12.2020) அரச தகவல் திணைக்களத்தில் காணொளி மூலம் நடத்தப்பட்டது. இதன்போது, ‘இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என நீங்கள் கடந்த வாரம் அறிவித்திருந்தீர்கள். ஆனால், அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பிரதமரிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவை பிரதமரும் ஏற்றுக்கொண்டுள்ளார். சுமார் 80 பேர் வரை தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது. இந்த விடயத்தில் அரசின் நிலைப்பாடு என்னவென்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்பதை அரசின் பேச்சாளர் என்ற வகையில் மிகவும் பொறுப்புடன் கூறுகின்றேன்.

தாம் வகிக்கும் அரசியல் நிலைப்பாட்டால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுபவர்களையே அரசியல் கைதிகள் என விளிக்கலாம். சிங்கப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட பின்னர், கம்யூனிஸ்ட் நிலைப்பாட்டை – சித்தாந்தங்களைக் கொண்டிருந்தவர்கள், இரகசியமாக அரசியலில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். அவ்வாறானவர்கள்தான் அரசியல் கைதிகள்.

இலங்கையில் 1983ஆம் ஆண்டு ஜே.வி.பி., கம்யூனிஸ்ட் கட்சி, நவசமசமாஜக் கட்சி ஆகியன தடைசெய்யப்பட்டன. கட்சிகளின் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் குற்றங்கள் இழைக்கவில்லை. மேற்படி கட்சியில் இணைந்தமை, தலைவராகியமை, கொள்கைகளை முன்னெடுத்தமை ஆகியவற்றுக்காகவே அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இப்படியானவர்கள்தான் அரசியல் கைதிகளாவர்.

தமிழர் என்பதற்காக இங்கு எவரும் கைது செய்யப்படவில்லை என்பதால் தமிழ்க் கைதிகள் என எவரும் இல்லை. அரசியல் கைதிகளும் இல்லை.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் இருக்கலாம். குற்றமிழைத்தவர்கள் இருக்கலாம். அவ்வாறான கைதிகளை ஆண் மற்றும் பெண் கைதிகள் என்ற வகையிலும், அவர்கள் இழைத்த குற்றங்களின் அடிப்படையிலும், அனுபவிக்கும் தண்டனை அடிப்படையிலும், வயது அடிப்படையிலுமே வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மாறாக இன ரீதியாக எவரும் வகைப்படுத்தப்படவில்லை.

சிறைகளில் அரசியல் கைதிகள் 80 பேர் இருக்கின்றனர் எனில், அவர்களில் ஒருவரின் பெயரையாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிடட்டும். அப்போது அது பற்றி ஆராயலாம். எமக்குத் தெரியாமல்கூட யாராவது தடுத்துவைக்கப்பட்டுள்ளனரா? என்பது பற்றி விசாரணை நடத்தி உங்களுக்கும் அறிவிக்க முடியும்.

எனவே, ஒரு அரசியல் கைதியின் பெயரையும், அந்தக் கைதியின் இலக்கத்தையும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கட்டும்.

பிரதமரிடம் யார் வேண்டுமானாலும் மகஜர்களைக் கொடுக்கலாம். அதனை அவர் ஏற்ற பின்னர் சம்பந்தப்பட்ட துறையிடத்தில் அது ஒப்படைக்கப்படும். அதன்பின்னர் அதிலுள்ள காரணிகள் ஆராயப்படும். செய்ய முடியுமா, முடியாதா என்று முடிவு எடுக்கப்படும். ஆகவே, பிரதமரிடம் மகஜர் கையளித்தால், அதிலுள்ள பிரச்சினைகளை, கோரிக்கைகளை அவர் ஏற்றுக்கொண்டு விட்டார் என அமையாது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் உள்ளனர். பயங்கரவாத சந்தேகநபர்கள், தண்டனை அனுபவித்தால் பயங்கரவாதிகள். அதைவிடுத்து அவர்களை அரசியல் கைதிகள் என விளிக்க முடியாது” – என்றார்.

ஜனாதிபதியும் இராணுவத் தளபதியும் காணாமற்போன நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் குறித்து சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டத்தின் படி பொறுப்பு கூற வேண்டியவர்கள்” – உண்மைக்கும் நீதிக்குமான திட்டம்

ஜனாதிபதியும் இராணுவத் தளபதியும் காணாமற்போன நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் குறித்து சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டத்தின் படி பொறுப்பு கூற வேண்டியவர்கள் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் அறிவித்துள்ளது.

காணாமற்போனவர்கள் பற்றிய அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி இறுதிக் கட்டப் போரில் 330 தமிழர்களும் 1989 இன் இறுதிக் காலாண்டுப் பகுதியில் 154 சிங்களவர்கள் காணாமற் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் காணாமற்போனவர்கள் பற்றிய இந்த அலுவலகத்தின் அறிக்கையில் பெரியளவில் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன என்றும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது, எங்கு இருக்கின்றார்கள் என்ற உண்மையைக் கண்டறிவதற்கான உரிமை குடும்பங்களுக்கு உண்டு என குறித்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

அத்துடன் வலிந்து காணாமற் போதல் என்பது ஒரு குற்றம் என்பதனால் இறுதிப் போரில் கட்டளைப் பொறுப்பில் இருந்த இராணுவ அதிகாரிகளும் யாருடைய பொறுப்பில் கீழ் அவர்கள் சரணடைந்தார்களோ அந்த அதிகாரிகள் சரணடைந்த நூற்றுக்கணக்கான தமிழர்களை எவ்வாறு தொலைந்து போக விட்டார்கள் என்பதைப் பற்றி விளக்கம் தருவதற்கான சட்ட ரீதியான கடப்பாடு உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், 1989 இல் ஜனாதிபதி பொறுப்பாக இருந்தபோது மாத்தளையில் இருந்து பல சிங்கள இளைஞர்கள் ஏன் காணாமற்போனார்கள் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை மக்களுக்கு விளக்கமளிக்கப் போகின்றாரா?  என்றும் ஜஸ்மின் சூக்கா கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்தோடு அரசாங்கத்தின் இந்தக் காணாமற்போனவர்களின் பட்டியல்கள் இலங்கையின் இராணுவத் தளபதிக்கு எதிராக வழக்கு தொடர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை பதவியில் இருந்த வெளியேறிச் சென்ற பின்னர் ஒரு நாள் ஜனாதிபதிக்கு எதிராகவும் வழக்கு தொடரமுடியும் என்பதையும் காணாமற்போனவர்களின் பட்டியல்கள் காட்டுகின்றன என்றும் ஜஸ்மின் சூக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

மரணச்சடங்கிற்கு சென்ற கொரோனா நோயாளி – யாழில் 50 பேர் தனிமைப்படுத்தலில் !

யாழ்.நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கு ஒன்றுக்கு கொரோனா தொற்றாளர் ஒருவர் சென்றுவந்த நிலையில் குறித்த மரண சடங்கில் கலந்து கொண்ட 50ற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

மருதனார்மடம் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் குறித்த நபர் நாவாந்துறை – கண்ணாபுரம் பகுதியில் மரண சடங்கு ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.

இதனையடுத்து மரண சடங்கில் கலந்து கொண்டிருந்த சுமார் 50ற்கும் மேற்பட்டவர்களை உடனடியாக தனிமைப்படுத்த சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்திருக்கின்றர்.

இறந்த முஸ்லீம்களின் உடல்கள் எரிக்கப்படுவதை தடைசெய்யுமாறு கூறி மன்னாரில் விழிப்புணர்வு போராட்டம்!  

சிறுபான்மை இன மக்களின் மத உரிமைக்கு மதிப்பளிக்குமாறுக் கோரி மன்னாரில் அமைதியான முறையில் விழிர்ப்புணர்வு போராட்டம் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் (மெசிடோ) ஏற்பாட்டில், வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக குறித்த விழிர்ப்புணர்வு போராட்டம் இடம் பெற்றது.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று (புதன்கிழமை) காலை ஒன்று கூடிய மக்கள் அமைதியான முறையில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டத்திற்கு மன்னாரின் இளம் சட்டத்தரணிகள் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர சபையின் உப தலைவர் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது சிறுபான்மை இன மக்களின் மத உரிமைக்கு மதிப்பளிக்க கோரியும் உயிருடன் இருக்கின்றபோது உடலுக்கு கொடுக்கின்ற மதிப்பினை அவர்கள் மரணிக்கின்றபோது அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை விழிர்ப்புணர்வு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் முன்வைத்தனர்.

மேலும் கொரோனா தொற்றால் இறந்த உடல்கள் தகனம் செய்யப்படுகின்றமை உறவினர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்துகின்றது. எனவே உலக சுகாதார ஸ்தாபனத்தின் செயற்திட்டங்களை உள்வாங்கி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து குறித்த விழிர்ப்புணர்வு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம் !

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

அண்மைய நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் இழுவை படகுகளின் அத்துமீறிய செயல் காரணமாக தொடர்ச்சியாக தமது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் எல்லை தாண்டி வருகின்ற மீனவர்களை கட்டுப்படுத்த இலங்கை கடற்படையினர் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் உரிய வகையில் எல்லைதாண்டி வந்தவர்களை கட்டுப்படுத்தினால் தமது வாழ்வாதாரத் தொழிலை சிறந்த முறையில் செய்ய முடியும் எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்

இந்திய -இலங்கை அரசாங்கங்கள் உரிய வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி எல்லை மீறி தமது பகுதிகளில் வருகின்ற மீன்பிடி படகுகளை கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி தமக்கு  வாழ்வாதாரத் தொழிலை நிம்மதியாக செய்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தருமாறு கோரி இந்த போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.மாநகர சபையின் 2021ஆம் ஆண்டிக்கான வரவு செலவுத் திட்டம்  தோல்வி !

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டிக்கான வரவு செலவுத் திட்டம் 03 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிக்கான வரவு – செலவுத் திட்டம், மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்டினால் கடந்த 2ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அந்தச் சமர்ப்பணத்தின்போது, அதற்கு ஆதரவாக 19 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டு முதலாவது வாசிப்பு தோற்கடிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற விசேட பொதுக் கூட்டத்தில் வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு இடம்பெற்றது.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் 03 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் ஒருவரும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் வரவு – செலவுத் திட்டத்திக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் வரவு – செலவுத் திட்டத்திக்கு எதிராக வாக்களித்தனர்.

இதனையடுத்து மாநகர சபையின் 2021ஆம் ஆண்டிக்கான வரவு செலவுத் திட்டம் 03 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் எடுக்கும் முஸ்லீம் ஜனசாக்கள்  எரிக்கப்படும் விவகாரம் – முஸ்லீம்களை மாலைதீவிற்கு அழைக்க வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் வலியுறுத்தல்! 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்து போகும் முஸ்லீம் மக்களுடைய உடல்கள் எரிக்கப்படுவது அம்மக்களுடைய மத நம்பிக்கைகளை சிதைப்பது போன்றது என பலரும் தம்முடைய ஆதங்கத்தை வெளியிட்டு வருவதுடன் போராட்டங்களையும் ஆங்காங்கே மேற்கொண்டு வருகின்றனர். உலகின் அமைப்புக்கள் பலவும் இதனை எதிர்த்து தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படும் இலங்கையின் முஸ்லீம்களிற்கு மாலைதீவு அரசாங்கம் அழைப்பு விடுக்கவேண்டுமென அந்த நாட்டின் முன்னாள் முதலமைச்சர் தன்யா மமூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்த போது,

“இலங்கை முஸ்லீம்களை மாலைதீவிற்கு வருமாறு மாலைதீவு அரசாங்கம் அழைப்பு விடுக்காதமை எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது . இலங்கை முஸ்லீம்களை அந்த நாட்டிலிருந்து மாலைதீவிற்கு வந்து வசிக்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கவேண்டும்.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களுக்கு தங்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் இறுதிசடங்கினை நடத்துவதற்கான சிறுபான்மை முஸ்லீம்களின் உரிமைகளை இலங்கை அரசாங்கம் மதிக்கவேண்டும்.

இதேவேளை கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கான அனுமதி அந்த நாட்டிடம் கோரப்பட்டமை குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு எதுவும் தெரியாது என ஊடக பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.அமைச்சரவையிலும் இது குறித்து ஆராயப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மாலைதீவின் உதவி கோரப்பட்டமை குறித்து வெளிவிவகார அமைச்சு பதிலளிக்ககூடும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் தன்னிச்சையான முடிவுகள் எதனையும் எடுக்காது இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் முடிவை அடிப்படையாக வைத்தே அரசாங்கம் தனது முடிவை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீங்கள் குழுவொன்றை அமைக்கும் போது அவர்களின் ஆலோசனைகளை செவிமடுக்கவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம், அவர்களின் ஆலோசனைகளை செவிமடுக்காவிட்டால் அவ்வாறான குழுவை நியமிக்கவேண்டிய அவசியம் இல்லை நீங்கள தன்னிசை;சையான முடிவுகளை எடுக்கலாம் எனவும் ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை வேறு எங்காவது எடுத்துச்செல்லுவது குறித்து யாராவது தெரிவித்தால் அது குறித்தும் நிபுணர்களுடன் ஆராய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை மாலைதீவில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்வதற்கு உதவுமாறு இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச விடுத்த வேண்டுகோள் குறித்து ஆராய்ந்து வருவதாக மாலைதீவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஜனாதிபதியின் விசேட வேண்டுகோலை மாலைதீவு ஜனாதிபதி ஆராய்ந்துவருகின்றார் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவினை அடிப்படையாக வைத்தே மாலைதீவு ஜனாதிபதி இது குறித்து ஆராய்கின்றார் கொரோனா வைரசினால் எதிர்நோக்கப்படும் சவால்களிற்கு தீர்வை காண்பதற்க்கு உதவும் நோக்கிலும் மாலைதீவு இது குறித்து ஆராய்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“தமிழ் அரசியல்கைதிகளை ஜனாதிபதி விடுவித்தால் நாம் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டோம் ” – ஞானாசார தேரர் 

‘தமிழ் அரசியல் கைதிகள்’ என்ற பெயரில் சிறைச்சாலைகளில் காலத்தைக் கழிக்கின்ற தமிழ்க் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து ஜனாதிபதி விடுவித்தால் அதை நாம் எதிர்க்க மாட்டோம்” என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசியல் பழிவாங்கல் காரணமாக நானும் சிறையில் சில காலத்தைக் கழித்தேன். அவ்வேளையில் சிறையிலிருந்த தமிழ் அரசியல் கைதிகள் பலருடன் நேரில் பேசியிருக்கின்றேன். அவர்கள் தங்கள் துயரங்களை நேரில் என்னுடன் பகிர்ந்தார்கள். அவர்களில் சிலர் 15 வருடங்களுக்கு மேலாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.

குற்றம் செய்தார்களோ இல்லையோ அவர்கள் சிறைகளில் பல வருடங்கள் தண்டனைகளைப் பெற்று விட்டார்கள். எனவே, அப்படியானவர்களை அரசியல் தீர்மானம் எடுத்து ஜனாதிபதி விடுவித்தால் அதற்கு நாம் ஆட்சேபனை தெரிவிக்கமாட்டோம்.

எமது இந்த நிலைப்பாட்டை தமிழ் அரசியல்வாதிகள் சிலரிடமும் நாம் தெரிவித்திருக்கின்றேன்.

ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் பலர் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தை தமது அரசியலுக்காகப் பயன்படுத்துகின்றனர். அதனால் சிறைகளில் பல வருடங்கள் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி தலைமையிலான அரசிடம் நாம் நேரடியாகத் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி விடுவித்தால் அந்த விடயத்தைத் தமிழ் அரசியல்வாதிகள் தலையில் வைத்துக் கொண்டாடி இனமுறுகலை ஏற்படுத்தக்கூடாது.

சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்குப் புனர்வாழ்வு வழங்கி விடுவித்த அரசு, தமிழ் அரசியல் கைதிகளையும் ஏதோவொரு விதத்தில் விடுவிக்க முடியும். எனினும், இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிதான் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்” – என்றார்.

அரசியல் கைதிகளுடைய விடுவிப்பு தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. இதனை பயன்படுத்தி தமிழ்அரசியல்கைதிகளை விடுவிக்க வேண்டும் என பல தமிழ் அரசியல் தலைவர்களும் இணைந்து பிரதமரிடம் மனு ஒன்றினை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.