உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“கொரோனா தடுப்பூசியை பெற நடவடிக்கை மேற்கொள்ளாது அரசும் அமைச்சும் ஆயர்வேத பானங்களை அருந்திக் கொண்டிருக்கின்றனர் ” – ஹர்ஷன ராஜகருணா

“கொரோனா தடுப்பூசியை பெற நடவடிக்கை மேற்கொள்ளாது அரசும் அமைச்சும் ஆயர்வேத பானங்களை அருந்திக் கொண்டிருக்கின்றனர் ” ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், தொழிலை இழந்துள்ளவர்களுக்கும் வரவு செலவுத் திட்டத்தில் எந்தவொரு நிவாரணமும் அறிக்கவில்லை.

நாளொன்றுக்கு 500 முதல் 600 தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலைமையானது நாட்டில் வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்படவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.

இதன்மூலம் நாடு எந்தளவிற்கு அபாய நிலையை அடைந்துள்ளது என்பது சுகாதாரத் துறையினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில்கூட கொரோனா தடுப்பிற்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. மாறாக அமைச்சர்கள் அனைவரும் ஆயர்வேத பானங்களை அருந்திக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், கொரோனா கட்டுப்படுத்தலுக்காக செயற்பாட்டு ரீதியில் எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அநாவசிய அபிவிருத்தித் திட்டங்களுக்காக அரசாங்கம் கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை தமிழர் அரசியலில் போரை ஆதரித்தவர்கள் எதிர்ப்பு அரசியலையும் பொருளாதார மேம்பாட்டையும் தமது சொந்த நன்மைகளை எதிர்பார்த்தவர்கள் இணக்க அரசியலையும் ஆதரித்து வந்துள்ளார்கள்” – விக்னேஸ்வரன்

“இலங்கை தமிழர் அரசியலில் போரை ஆதரித்தவர்கள் எதிர்ப்பு அரசியலையும் பொருளாதார மேம்பாட்டையும் தமது சொந்த நன்மைகளை எதிர்பார்த்தவர்கள் இணக்க அரசியலையும் ஆதரித்து வந்துள்ளார்கள்”  என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதில் வழங்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார் .

கேள்வி :- நீங்கள் வரவு செலவுத்திட்ட பாராளுமன்ற அமர்வில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்காதது உங்களைப் பல கண்டனங்களுக்குள் உள்ளாக்கியுள்ளது. உங்கள் பக்கக் கருத்துக்களைக் கூற முடியுமா?

பதில் :- கட்டாயமாக! வட கிழக்குத் தமிழ் மக்களின் அரசியலானது எதிர்ப்பு அரசியல், இணக்க அரசியல் என்று இதுகாறும் இருந்துவந்துள்ளது. அல்லது எதிர்ப்புக்காக நடுநிலைமையும் அல்லது இணக்கத்திற்காக நடுநிலைமை என்றும் இடம்பெற்றுள்ளன. பொதுவாக போரை ஆதரித்தவர்கள் எதிர்ப்பு அரசியலையும் பொருளாதார மேம்பாட்டையும் தமது சொந்த நன்மைகளை எதிர்பார்த்தவர்கள் இணக்க அரசியலையும் ஆதரித்து வந்துள்ளார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையிலான தனது தனித்துவப் பெரும்பான்மை நிலையில் இருந்து சறுக்குவதற்குக் காரணம் அவர்கள் தமது சொந்த நலன்களை முதன்மைப்படுத்தி அப்போதிருந்த அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடத்தி வந்தமையே. இணக்க அரசியலால் தமது ஆதரவாளர்களை கவனிக்க, சென்ற அரசாங்கத்தின் கடைசி காலத்தில் அவர்களுக்கு நிதி கிடைத்தமை உண்மையே. ஆனால் அது மட்டுமே அவர்களுக்குக் கிடைத்த நன்மை. அரசியல் ரீதியாக அவர்களால் முன்னேற முடியவில்லை.

திரு. சுமந்திரன் அவர்கள் இந்த இணக்க அரசியலுக்காக போர்க் குற்ற விசாரணை முடிவடைந்துவிட்டது என்று கூடக் கூறியிருந்தார். ஒற்றையாட்சிக்குள் பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரப் பரவலை  கூட்டாட்சி என்று அடையாளம் காட்டினார். “எக்சத்” “ஏகிய” பற்றி நிறையப் பேசினார். தற்போது அவரின் பேச்சுக்கள் மாறிவருவதை எல்லோரும் அவதானிக்கலாம். விசாரணை முடிந்தது என்று முன்னர் கூறியவர் விசாரணை வேண்டும் என்று இன்று கூறுகின்றார். மேலும் கூட்டாட்சி வேண்டும் என்கின்றார். என்ன நடந்தது? தமது இணக்க அரசியலை மக்கள் விரும்பவில்லை என்பதை அவர் உணர்ந்து கொண்டதே காரணம்.

என்றாலும் எதிர்ப்பு அரசிலுக்குள் மீண்டும் போவதையும் அவர் விரும்பவில்லை போலத் தெரிகின்றது. ஆகவே இம்முறை இரண்டும் இல்லாமல் நடுநிலைமை வகிக்கக் கூட்டமைப்பு முன்வந்துள்ளது. அவர்கள் வாக்களிக்கும் தினத்தில் காலை 11 மணிக்குக் கூடியே தமது முடிவுக்கு வந்துள்ளனர்.என்னைப் பொறுத்த வரையில் நான் குறித்த நடுநிலை நிலையை சுயமாகக வெளிப்படுத்த முன்வந்ததற்கான காரணம் பின்வருமாறு –

எதிர்ப்பு அரசியலால் நாம் கண்ட நன்மை ஒன்றுமில்லை. அத்துடன் இணக்க அரசியல் என்று கூறி சுயநலமிகள் இணக்க அரசியல் செய்து வந்ததால் எம் மக்கள் கண்ட நன்மை ஒன்றுமில்லை. ஏற்கனவே அரசாங்கத்தை நான் காரசாரமாக சாடியாகிவிட்டது. 20வது திருத்தச்சட்டத்தை எதிர்த்து வாக்களித்திருந்தேன். திரும்பவும் வேண்டும் போது அவ்வாறு செய்வேன். அதாவது உண்மைகளை எடுத்துரைப்பேன். ஆனால் பொதுவாக எதிர்த்து வாக்களிப்பதே எனது நிலைப்பாடு என்று பலர் எண்ணியிருந்தார்கள். நான் அவ்வாறு எண்ணவில்லை.

ஆகவே நான் வாக்களிக்காமல் இருப்பதே மேல் என்று எண்ணினேன். காரணம் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு அரசியலைக் காட்டி வந்த முன்னைய அரசியல்வாதிகள் தொடர்ந்து எதிர்ப்பு அரசியலையே வெளிப்படுத்தி வந்திருந்தார்கள். அவர்களை எதிரிகளாகவே அப்போதைய அரசாங்கத்தினர் பார்த்தார்கள். அதனால் அவர்களுடன் அரசாங்கங்களும் பேசவில்லை. இவர்களாலும் அவர்களுடன் பேசமுடியவில்லை.

நான் அவ்வாறு எனது காலத்தைத் தொடங்க விரும்பவில்லை. ஏற்கனவே 2ம் வாசிப்பில் நான் வாக்களிக்காது இருந்திருந்தேன். அதே போல்த் தொடர்ந்தால் என்ன என்று எண்ணினேன். காரணம் எமது அரசியல் கைதிகள் பற்றி அரசாங்கத்துடன் பேச வேண்டி இருக்கின்றது. மற்றும் ஒரு புதிய அரசியல் யாப்பு நிர்மாணத்தை நாம் எதிர் கொண்டுள்ளோம். முன்னைய அரசாங்கம் காலத்தில் எமது வாக்குகளுக்குப் பலம் இருந்தது. அப்போது “எமது சிறைக் கைதிகளை வெளிவிடுங்கள். நாங்கள் உங்களுக்கு வாக்களிக்கின்றோம்” என்று கூறியிருக்கலாம். எமது பிரதிநிதிகள் அவ்வாறு கூறவில்லை. தமது வாக்கை மக்கள் நலன் கருதிப் பாவிக்கவில்லை. இப்பொழுது அவ்வாறான ஒரு நிலை இல்லைபேசித் தீர்க்க வேண்டியுள்ளது.

அரசாங்கம் மற்றும் முக்கிய எதிர்க்கட்சி ஆகியோருடன் பேசுவதென்றால் பக்கச் சார்பில்லாமல் இருப்பதே உசிதம் என்று நான் கண்டு கொண்டேன். ஒன்றை எதிர்ப்பது வெற்றியல்ல. ஒன்றுடன் இணைவதும் வெற்றியல்ல. வருவதற்கு முகம் கொடுக்கக் கூடியதாக இருப்பதே வெற்றி. எமது தமிழ் அரசியல்வாதிகள் இதுவரையில் போர்களை வென்று யுத்தத்தைத் தோற்றுவிட்டார்கள். எமது மக்களின் தற்போதைய ஒன்றுபட்ட குறிக்கோளை அடைவது தான் எனது ஒரேயொரு இலக்கு. அதற்கு முகம் கொடுக்க நான் தயாராகின்றேன்.

ஆங்காங்கே எனக்கு எதிராக என் மக்கள் குறை கூறுவதைப் பொருட்படுத்தமாட்டேன். ஏனென்றால் அவர்கள் நன்மை கருதியே நான் பயணிக்கின்றேன். அது அவர்களுக்குத் தெரியாவிட்டால் நான் என்ன செய்வது? என்னை எனது மிக நெருக்கமான நண்பர்கள், நலன் விரும்பிகள் கூட குறை கூறியுள்ளார்கள். அவர்கள் மனோநிலையை நான் மதிக்கின்றேன். ஆனால் எனது பாதையில் இருந்து நான் சறுக்கமாட்டேன். அரசாங்கத்திற்கு எதிராகப் பேசுவதோ வாக்களிப்பதோ அல்ல முக்கியம். அரசாங்கத்தின் மனதை மாற்றுவது, எம் சார்பாக அவர்களைத் திசை மாற்றுவதே எனது கடமையும் கடப்பாடும். அதனைச் செய்வேன். வருங்காலம் எனது செயலைச் சீர்தூக்கிப் பார்க்கட்டும்!ஆகவே நான் வாளாதிருந்ததற்குக் காரணம் இவை தான்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதற்காக நடுநிலை வகித்தார்கள் என்பதை அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு மின் காற்றுவீசி ஓடாமல் இருப்பது போல்த்தான் விசையாக ஓடும் போதும் காட்சி அளிக்கும். அதற்காக இரண்டு நிலைகளையும் ஒரே நிலையென்று கூறலாமா? எனவும் அவர் தனது பதிலை வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பு பண்ணையாளர்கள் பிரச்சினை – “மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியாவிட்டால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுங்கள்” – செ.அடைக்கலநாதன்

அரசாங்கத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கால்நடை பண்ணையாளர்களின் துன்பங்களை நிவர்த்தி செய்வதாக இருந்தால் இந்த அரசாங்கத்துடன் பேச வேண்டும், இல்லையென்றால் இந்த அரசாங்கத்தைவிட்டு வெளியில் வரவேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு விஜயம் செய்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை சம்பந்தமாக நேரடியாக அவர்களை சந்திக்க நேர்ந்தது.

உண்மையில் இந்த அரசாங்கமானது திட்டமிட்டு இந்தப் பண்ணையாளர்கள் தமிழர்கள் என்ற காரணத்தினால் அவர்களை ஓரங்கட்டி அவர்களுடைய உடைமைகளை இல்லாதொழிக்கின்ற திட்டத்தோடுதான் செயற்படுகின்றது என இந்தப் பண்ணையாளர்கள் கவலை தோய்ந்த முகங்களோடு கூறுகின்ற நிலையை பார்க்கின்றபோது அரசாங்கமானது திட்டமிட்டு செய்கின்ற நிலைப்பாட்டை காணக்கூடியதாக இருக்கின்றது.

ஜனாதிபதி தான் வெற்றி பெற்றவுடன் கூறிய விடயம் நான் சிங்கள மக்களால் வென்றிருக்கின்றேன் என்பதாகும். ஒரு நாடு ஒரு சட்டம் என அவர் சொல்கின்ற விடயம் காணாமல் போயிருக்கின்றது.

இந்த சந்தர்ப்பத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக இருக்கின்ற பிள்ளையானிடமும் கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இருக்கின்ற வியாழேந்திரனிடமும் நான் ஒரு கேள்வியை கேட்கின்றேன்.

இந்த மக்கள் உங்களுக்கு வாக்களித்திருக்கின்றார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள்? நீங்கள் இந்த மண்ணை காப்பாற்றுவதற்கான செயற்பாட்டை கட்டாயம் செய்தாக வேண்டும்.

எங்களுடைய கால்நடை பண்ணையாளர்களின் துன்பங்களை நீங்கள் நிவர்த்தி செய்வதாக இருந்தால் இந்த அரசாங்கத்துடன் பேச வேண்டும். இல்லையென்றால் இந்த அரசாங்கத்தைவிட்டு வெளியில் வரவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடுதலான வாக்குகள் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. அந்த கடமையும் பொறுப்பும் உங்களிடம் இருக்கின்றது. ஏனென்றால் நீங்கள் அரசாங்கத்தோடு இருக்கின்றீர்கள்.

இந்த அரசாங்கம் எங்களுடைய நிலங்களை கபளீகரம் செய்கின்றது. ஆனால் நீங்கள் கூட்டமைப்பை தாக்குவதும் தேவையில்லாத கதைகளை கதைப்பதுமாகத்தான் உங்களுடைய செயற்பாடுகள் இருக்கின்றன” என அவர் மேலும் தெரிவித்தார்.

“இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்ட எதனையும் இந்தியா செய்யாததால் இந்தியாவினுடைய மாகாணசபை முறைகளும் இங்கு தேவையற்றது” – அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர

“எமது நாட்டில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களனைவரும் ஒரு குடும்பமாக இருக்கவேண்டுமாயின் மாகாணசபை முறை நீக்கப்பட வேண்டும்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தல்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர மேலும் கருத்து தெரிவிக்கையில் ,

அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தின் ஊடாகவே மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது என்பதனாலேயே நான் ஆரம்பத்திலிருந்து அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றேன்.

13 ஆவது திருத்தம் எம்மீது வலுகட்டாயமாகத் திணிக்கப்பட்டதொன்றாகும். ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்து, பொதுமக்களைத் தாக்கி, பாராளுமன்ற உறுப்பினர்களை தனியாக வரவழைத்து தான் இந்தத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவினால் எம்மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே அவ்வாறு செய்யப்பட்டது.

ஆனால் உண்மையில் இந்திய – இலங்கை ஒப்பந்தம் வலுவிழந்து விட்டதாகவே நான் கருதுகின்றேன். ஏனெனில் இந்தியாவினால் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தல், விடுதலைப்புலிகளை தாக்குதல், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீளக்குடியமர்த்துதல் போன்றவை இந்தியாவினால் செய்யப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அவை எதனையும் இந்தியா செய்யவில்லை.

மாறாக விடுதலைப்புலிகளை அழிப்பதற்காக எமது தரப்பிலிருந்து சுமார் 29,000 பேர் மரணமடைந்ததுடன் சுமார் 14,000 பேர் ஊனமுற்றமையால் இனிமேலும் இந்திய – இலங்கை ஒப்பந்தம் அமுல்படுத்தப்படக்கூடிய நிலையில் இல்லை என்பதே எனது நிலைப்பாடாகும். ஆகவே அந்த ஒப்பந்தத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமையும் எமக்குத் தேவையில்லை.

நாம் இலங்கையைத் தனியொரு நாடு என்றே கருதுகின்றோம். அத்தகைய நாட்டில் அனைவருக்கும் பொதுவான தனியொரு சட்டமே இருக்கவேண்டும். ஆனால் மாகாணசபை அமுலில் இருக்கும் பட்சத்தில் 9 மாகாணங்களுக்கும் வெவ்வேறு விடயங்கள் தொடர்பில் வெவ்வேறான சட்டங்களை உருவாக்கிக்கொள்ள முடியும்.

அவ்வாறெனின் இது ‘ஒருமித்த நாடாக’ இருக்காது எமது நாட்டில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களனைவரும் ஒரு குடும்பமாக இருக்கவேண்டும். அனைவரும் தமக்கு விரும்பிய இடங்களில் வசிப்பதற்கும் தாம் விரும்பிய தொழிலை செய்வதற்கும் சுதந்திரம் இருக்கவேண்டும்.

ஆகவே இந்த மாகாணசபை முறைமையை முற்றாக இல்லாதொழித்து, அந்த அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என்றார்.

“இலங்கையில் முஸ்லீம்கள் அமைதியாக வாழ முடியாத சூழல் காணப்படுகின்றது” – முஸ்லீம்களின் உடல்கள் எரிக்கப்படுவதற்கு சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம் !

“இலங்கையில் முஸ்லீம்கள் அமைதியாக வாழ முடியாத சூழல் காணப்படுகின்றது”  என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

நாட்டு மக்கள் அனைவரையும் சமத்துவத்துடன் நடத்தவேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதை இலங்கை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது என்றும் அந்தச்சபை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்த முஸ்லீம்களினுடைய உடல்களை தகனம் செய்வது தொடர்பாக பல அமைப்புக்கள் தங்களுடைய கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபை இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிராந்திய அலுவலகத்தின் தொடர்பாடல் மற்றும் பிரசார உதவியாளர் ரெஹாப் மஹமூர் தெரிவிக்கையில்,

“கொரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பெருமளவானோர் அச்சத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தொற்று ஏற்படல், தம்மால் வைரஸ் தொற்று பிறருக்குப் பரவுதல், தமது அன்பிற்குரியவர்கள் வைரஸ் தொற்றினால் துன்பப்படுவதைக் காணுதல் மற்றும் அவர்களின் மரணத்தை எதிர்கொள்ளல் உள்ளிட்ட அச்சம் பலர் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், மேற்கூறப்பட்ட அச்சத்திற்கு மேலாக தமது அன்பிற்குரியவர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களை அடக்கம் செய்யமுடியாது என்றும் அவர்களுக்கான இறுதி கௌரவத்தை அளிக்கமுடியாது என்றும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்கு முறைகள் பிரயோகிக்கப்படும் நாட்டில், தற்போது கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அவர்களது மத ரீதியான நம்பிக்கையின் பிரகாரம் அடக்கம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதுடன், அந்த சடலங்கள் வலுகட்டாயமாகத் தகனம் செய்யப்படுகின்றன. இது இலங்கையின் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முஸ்லிம்கள் அமைதியாக வாழ்வதற்கு இயலாத சூழ்நிலை காணப்படுவதுடன், அவர்கள் மீதான வன்முறைகள் குறித்த அச்சம் அதிகரித்துவரும் நிலையில், தற்போது முஸ்லிம்களின் மரணம் கூட நிம்மதியானதாக இருக்காது என்பதை உறுதிசெய்வதற்கு அரசாங்கம் கொவிட்19  என்ற காரணத்தைப் பயன்படுத்திக்கொண்டிக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றினால் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுபவர்களின் சடலங்களைத் தகனம் செய்வதைக் கட்டாயமாக்கியிருக்கும் மிகச்சில நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். எனினும் இவ்வருடத் தொடக்கத்தில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களில் தகனம் செய்தல் மற்றும் அடக்கம் செய்தல் ஆகிய இரண்டிற்குமே அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் கொரோனா வைரஸ் தொற்றினால் முதன்முறையாக முஸ்லிம் நபரொருவர் உயிரிழந்தபோது, அவரது குடும்பத்தினரின் விருப்பத்தையும் மீறி அவரின் சடலம் வலுகட்டாயமாகத் தகனம் செய்யப்பட்டது. அதற்கு முஸ்லிம் மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் முஸ்லிம் சமூகத்திடமிருந்து வலுவான எதிர்ப்பு வெளிப்பட்டதைத் தொடர்ந்தே சுகாதார அமைச்சினால் ‘தகனம் செய்வது’ கட்டாயமாக்கப்பட்டது.

எனினும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களிலும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை உரியமுறையில் தகனம் செய்யவோ அல்லது அடக்கம் செய்யவோ முடியும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ஆராய்வதற்கு அரசாங்கத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன் தகனம் செய்வதைக் கட்டாயமாக்கும் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியத்தைப் பலரும் உணர்ந்துகொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், ஏற்கனவே அடக்கு முறைக்கும் அச்சத்திற்கும் உட்பட்டிருக்கும் ஒரு சமூகத்தை மேலும் வலுவிழக்கச்செய்வதற்கான வழிமுறையையே இலங்கை தெரிவு செய்திருக்கிறது.

நாட்டு மக்கள் அனைவரையும் சமத்துவத்துடன் நடத்தவேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதை இலங்கை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது” என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்வதை நிறுத்தக் கோரி பிரித்தானியாவில் போராட்டம் !

இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழக்கும் முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்யும் நடவடிக்கைகளிற்கு எதிராக லண்டன் உள்ள இலங்கை தூதுரகம் முன்பாக நேற்று(12.12.2020) ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது.

தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சமீபத்தில் கொரோனாவால் உயிரிழந்ததன் காரணமாக தகனம் செய்யப்பட்ட 20 நாட்களேயான குழந்தையின் படத்தையும் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் காண முடிந்தது. இதேவேளை பிரிட்டன் அரசாங்கம் இந்த விடயம் குறித்து தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.

கட்டாயமாக உடல்கள் தகனம் செய்யப்படுவது முஸ்லீம் சமூகத்தின் மீதும் ஏனைய சமூகத்தினர் மீதும் ஏற்படுத்திவரும் தாக்கம் குறித்து பிரிட்டன் கவனத்தினை ஈர்த்துள்ளது. மனித உரிமை விவகாரங்களிற்கான அமைச்சரான தாரிக் அஹமட் பிரபு இலங்கை உயர்ஸ்தானிகருடன் நேரடியாக இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

“குற்றச்செயல்களில் ஈடுபட்டனர் என சந்தேகிக்கப்படுபவர்களின் படங்கள் ஊடகங்களில் வெளியிடப்படும்” – அமைச்சர் சரத்வீரசேகர !

குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் புகைப்படங்கள் விபரங்களை பகிரங்கப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு விவகார அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோகம்,பாலியல்வன்முறை, கொள்ளை தாக்குதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டனர் என சந்தேகிக்கப்படுபவர்களின் படங்கள் விபரங்களை ஊடகங்களிற்கு எதிர்காலத்தில் வெளியிடவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரங்களை அறிந்துகொள்வதை உறுதி செய்வதற்காகவும் இதன் காரணமாக ஏற்பட்ட அவமானத்தினாலும் அச்சத்தினாலும் குற்றவாளிகள் மீண்டும் அவ்வாறான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் நிலையை ஏற்படுத்துவதற்காகவுமே படங்கள் விபரங்களை பகிரங்கப்படுத்தவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குற்றச்செயல்கள் தொடர்பில் எவரும் 118 இலக்கத்தினை தொடர்புகொள்ள முடியும் நாங்கள் தற்போது குற்றங்களில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வதற்கான ஏற்பாடுகள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக தொற்றுநீக்கிகள் சோதனைகருவிகள் போன்றவற்றின் மூலம் கிடைக்ககூடிய வருமானம் குறித்தே அரசாங்கம் ஆர்வமாகவுள்ளது“ – சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு !

“கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக  தொற்றுநீக்கிகள் சோதனைகருவிகள் போன்றவற்றின் மூலம் கிடைக்ககூடிய வருமானம் குறித்தே அரசாங்கம் ஆர்வமாகவுள்ளது“ என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு அதனை கட்டுப்படுத்த தவறிவிட்டது என ஐக்கியமக்கள் சக்தி தொடர்ச்சியாக குற்றஞசாட்டி வருகின்ற நிலையில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடும் போது,

அரசாங்கம் தாமதமின்றி சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள கொரோனா மருந்தினை இலங்கைக்கு கொண்டுவரவேண்டும். அரசாங்கம் சுகாதார பிரிவினரின் பி.சி.ஆர் சோதனையிடும் திறனையும் வளங்களையும் அதிகரிக்கவில்லை.முகக்கவசங்கள் தொற்றுநீக்கிகள் சோதனைகருவிகள் போன்றவற்றின் மூலம் கிடைக்ககூடிய வருமானம் குறித்தே அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது.

கொரோனா வைரசினை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசியல் மயப்படுத்தியுள்ள அரசாங்கம் எதிர்கட்சியினரின் திட்டங்களை பலவீனப்படுத்தியுள்ளது .கொரோனா வைரசிற்கான மருந்திற்கு முன்னுரிமை வழங்க வண்டும்” எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“யாழ். குடாநாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள  வேண்டும்” – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா

“யாழ். குடாநாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள  வேண்டும்” என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கோரியுள்ளார்.

யாழ். மருதனார்மடத்தில் திடீரெனக் கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றமை தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனாவை ஒழிக்கும் நடவடிக்கைக்கு யாழ். மாவட்ட மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வந்தார்கள். இந்தநிலையில், இங்கு பொதுமக்கள் அதிகம் ஒன்றுகூடும் பகுதியிலிருந்து கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றார்கள் என்ற தகவல் எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலும் வெளியில் இருந்துதான் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கக் கூடும். தொற்றாளர்கள் தாம் சென்று வந்த இடங்கள் தொடர்பில் எதையும் மறைக்காமல் உண்மைகளைக் கூற வேண்டும்.

வர்த்தகர்கள் இந்த விடயத்தில் பொறுப்புடன் நடக்க வேண்டும். அவர்கள் வெளியிடங்களில் வர்த்தக ரீதியில் தொடர்புகளை வைத்திருப்பவர்கள். அவர்கள் அனைவரும் பீ.சி.ஆர். பரிசோதனையைச் செய்ய வேண்டும்.

அதேவேளை, புதிய தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்தி பீ.சி.ஆர். பரிசோதனையைக் கட்டாயம் செய்ய வேண்டும்.

இந்த விடயத்தில் யாழ். குடாநாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் நடக்க வேண்டும், சுகாதாரப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஆகியோரின் கடமைகளுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மினுவாங்கொடை, பேலியகொட போல் பெரிய கொத்தணிகளைப் போன்றோ அல்லது அக்கரைப்பற்று போல் சிறிய கொத்தணியைப் போன்றோ ஒரு நிலைமை யாழ்.குடாநாட்டிலும் ஏற்பட இடமளிக்க வேண்டாம் என இங்குள்ள மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை பிரச்சினை – தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் பிரமுகர்கள் கூட்டாக கள விஜயம் !

இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட கால்நடைகள் மேய்ச்சல் தரை இன்றி தவித்து வருவதாக கூறி மட்டக்களப்பு மயிலந்தனை மடு ,மாதவனை  மடு பண்ணையாளர்கள் கடந்த இரு மாத காலங்களாக பல்வேறுபட்ட கோரிக்கை முன்னிறுத்தி போராட்டங்களை மேற்கொண்டு வந்திருந்தனர்.

மட்டக்களப்பு மயிலந்தனை மடு ,மாதவனை  மடு மேய்ச்சல் தரை விடயம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் பிரமுகர்கள் கூட்டாக கள விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் அனுராதா ஜகம்பத் சிங்கள குடியேற்றத்தை ஆதரித்ததாக   பண்ணையாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா. சாணக்கியன்,தவராஜா கலையரசன்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் ,  ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் , கோவிந்தன் கருணாகரன் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் உள்ளிட்ட இளைஞரணியினர்களும் குறித்த இடத்தில் வருகை தந்திருந்தனர்.

இங்கு குறைகளை எடுத்துரைத்த பண்ணையாளர்கள்
மயிலந்தனை  மடு பண்ணையார்கள் சார்பான வழக்காளிகளாக  மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்  இரா.சாணக்கியன் , கோவிந்தன் கருணாகரன் இருவரையும்  சனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஊடாக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக குறிப்பிட்டனர்.