உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“சுமந்திரன் பொய் கூறுவதை நிறுத்த வேண்டும்” – சி.வி.விக்னேஸ்வரன்

“சுமந்திரன் தனது திறமைகளைத் தமிழ் மக்களின் நன்மைகளுக்காக பயன்படுத்தாமல், அரசாங்கத்தின் நன்மைகளுக்காக பயன்படுத்தி வருவதே அவர் மீதான முரண்பாடுகளுக்கு காரணம்” என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

ஐ. நா மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தயாரித்து என்னால் நிராகரிக்கப்பட்ட வரைபுக்கு நான் தற்போது அனுமதி வழங்கியுள்ளதாக வவுனியாவில் செய்தியாளர்கள் மத்தியில் கூறியுள்ள தாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை என தமிழ் மக்கள் கூட்டனியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

குறித்த விடயம் தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார் .

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஐ. நா மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் தயாரித்து என்னால் நிராகரிக்கப்பட்ட வரைபுக்கு நான் தற்போது அனுமதி வழங்கியுள்ளதாக வவுனியாவில் செய்தியாளர்கள் மத்தியில் கூறி இருப்பதாக ஊடகங்களில் படித்தேன்.

சுமந்திரனின் இந்த கூற்றில் எந்த உண்மையும் இல்லை. இது அப்பட்டமான பொய். இந்த வரைபை தான் தயாரிக்கவில்லை என்றும் வேறு யாரோ தான் தயாரித்துள்ளார்கள் என்பதை அறிந்ததும் நான் இணக்கம் தெரிவித்துள்ளதாக வேடிக்கையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது போல இந்த கடித விவகாரம் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்துவரும் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக அமைகின்றன. சுமந்திரன் எனது பார்வைக்காக அனுப்பிய கடிதத்தை தான் வரையவில்லை என்றும் புலம்பெயர் அமைப்பு ஒன்றே வரைந்ததாகவும் கூறிவருகிறார்.

எது உண்மை எது பொய் என்பது எனக்கு தெரியாது. ஆனால், இந்த கடித்தை எனக்குத் தந்தது சுமந்திரனே. எனக்கு இந்த வரைபைத் தந்த சுமந்திரன் அதனைத் தயாரித்தது வேறு யாரோ என்று எதுவும் குறிப்பிட்டதாக எனக்கு ஞாபகமில்லை. “நாங்கள்” என்ற பதத்தைப் பாவித்ததாகவே எனக்கு நினைவு.

இந்த வரைபை படித்து பார்க்கின்ற எவருக்குமே இந்த வரைபின் நோக்கம் அரசாங்கத்துக்கு மனித உரிமைகள் சபையில் முன்னைய தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு மேலும் காலம் வழங்குவதே என்பது புலன் ஆகும். இதில் எந்த மயக்கமும் இருக்க முடியாது. சுமந்திரன் எனக்கு அனுப்பிய வரைபை நான் பகிரங்கப்படுத்தவில்லை. அதற்கு நான் அளித்த பதிலையே பகிரங்கப்படுத்தினேன். இவ்வாறு நான் பகிரங்கப்படுத்தியதனால் தான் அவரது கபடத்தனமான முயற்சி முறியடிக்கப்பட்டது.

நான் என் பதிலைப் பகிரங்கப்படுத்தியமை காரணமாக அரசாங்கம் நாம் என்ன செய்கின்றோம் என்று விழித்துக்கொண்டு விட்டது என்று நகைப்புக்கிடமான கருத்துக்களைக் கூறி வருகிறார். உண்மையில் சுமந்திரனின் வரைபு அரசாங்கத்தைக் காப்பாற்றும் ஒரு முயற்சி. இதில் அரசாங்கம் கோபப்பட என்ன இருக்கிறது என்று எனக்கு விளங்கவில்லை.

சுமந்திரனின் கருத்துடன் உடன்பட மறுத்து பெரும்பான்மையான புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கூட்டாக ஒரு வரைபை தயாரித்து அனுப்பி இருந்தார்கள். அந்த வரைபில் சர்வதேச நீதிமன்றம் (நேரடியாக குறிப்பிடப்படாவிட்டாலும்), நீதிக்கான சர்வதேச நீதிமன்றம், சர்வதேச சுயாதீன விசாரணை போன்ற அடிப்படையான விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இந்த வரைபுக்கு நான் இணக்கம் தெரிவித்துள்ளேனே தவிர சுமந்திரனின் வரைபுக்கு அல்ல. அதேவேளை, மனித உரிமைகள் சபை ஆணையாளர் மற்றும் சபையின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பும் பொருட்டு மிகவும் இறுக்கமான ஒரு வரைபை தயாரித்து ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இணக்கம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

இதேவேளை, வவுனியாவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சுமந்திரன், கஜேந்திரகுமார் ஆகியோர் மனித உரிமைகள் சபை தொடர்பிலான பொதுவான வரைபு ஒன்றை தயாரிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன். இது நல்ல விடயம். மூன்று கட்சிகளுக்கும் இடையே இது தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுவதற்கு என்னால் ஆன ஒத்துழைப்பை வழங்குவேன். குறித்த வரைபு எது என்று இதுவரையில் தெரியாது.

ஆனால், அடிப்படை விடயங்களில் விட்டுக்கொடுப்பதற்கு நான் தயார் இல்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் ஆகியவை சாத்தியம் இல்லை போன்ற கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இவை சாத்தியமோ? சாத்தியம் இல்லையோ? பாதிக்கப்பட்ட சமூகம் என்ற வகையில் கிடைக்கின்ற எல்லா வழிகளையும் நாம் முயற்சிக்க வேண்டும். சரிவராதுவிட்டால் பரவாயில்லை. வெற்றி தோல்விகள் என்னைப் பொதுவாகப் பாதிப்பதில்லை.

ஆனால், இவற்றுக்காக முயற்சிப்பது சர்வதேச ரீதியில் நீதிக்கான எமது போராட்டத்தை மேலும் முன்னெடுத்து செல்வதற்கு வலுவான ஒரு அடித்தளத்தை ஏற்படுத்தித் தரும் என்பது எனது நம்பிக்கை. அதேவேளை, நாம் கடும்போக்கு நிலையில் நின்றால், ஐ. நா மனித உரிமைகள் சபையின் பிடியில் இருந்து இலங்கை விடுபட்டுபோகும் என்ற அர்த்தம் அற்ற கருத்துக்களையும் நான் நிராகரிக்கின்றேன். நாம் கேட்பது எதுவுமே கடும்போக்கு அல்ல. அவை நீதியின் பாற்பட்ட நியாயமான கோரிக்கைகளே.

இறுதியாக, சுமந்திரன் பொய் கூறுவதை நிறுத்த வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுக்கின்றேன். மூன்று நாட்களுக்கு முன்னர்தான் அவருக்கும் எனக்கும் இடையில் எந்தவித தனிப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை என்றேன். அவருக்கு எனக்கெதிராக ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதைச் சொல்லட்டும். அதை விட்டு விட்டு பொய் கூற விழையக் கூடாது.

சுமந்திரன் தனது திறமைகளைத் தமிழ் மக்களின் நன்மைகளுக்காக பயன்படுத்தாமல், அரசாங்கங்களின் நன்மைகளுக்காக பயன்படுத்தி வருவதே எனக்கும் அவருக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு காரணமாகும். விரைவில் அவர் இந்த நிலைமையில் இருந்து விடுபட்டு, தனது சொந்த மக்களுக்கு நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதை புரிந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுவதற்கு முன்வருவார் என்று நம்புகிறேன்.

அரசாங்கம் தமிழர்களுக்கான தீர்வை புதிய அரசியல் யாப்பினுடாகத் தரும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்தும் செயற்படாமல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேரில் தன்னை ஆதரித்த மக்களுக்காகவும் தமிழ்த் தேசியத்துக்காகவும் உண்மையாக உழைக்க முன்வருமாறு அவரை அன்புடன் வேண்டுகின்றேன்” எனவும் அந்த அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

“பேரினவாத செயற்பாடுகளுக்கு மத்தியில், பலமிழந்திருக்கும் சமூகங்களுக்கு ஒரே குரலான ஊடகங்களை அடக்கவே ‘உதயன்’ மீதான வழக்குத்தாக்கல் நிகழ்ந்துள்ளது” – இரா.சாணக்கியன் கண்டனம் !

“அடக்கு முறை, பௌத்த மேலாதிக்க, பேரினவாத செயற்பாடுகளுக்கு மத்தியில், பலமிழந்திருக்கும் சமூகங்களுக்கு ஒரே குரலாக ஊடகங்களே உள்ளன. இத்தகைய குரலை நசுக்கவே ‘உதயன்’ மீதான வழக்குத்தாக்கல் நிகழ்ந்துள்ளது.” என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

‘உதயன்’ மீதான யாழ். பொலிஸாரின் வழக்குத் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உதயன் பத்திரிகை வடபுல மக்களுக்காக மட்டுமன்றி தமிழ் பேசும் மக்களின் குரலாக மிக நீண்டகாலமாக உரிமைக் குரல் எழுப்பிவருகின்றது. தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படத்தையும், அவரது சொற்களையும் வெளியிட்டமைக்காக ‘உதயன்’ பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை விசனிக்கத்தக்கதும், கவலை தரும் விடயமுமாகும்.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என முக்கியத்துவம் பெற்றுள்ள ஊடகத்துறையின் பணிகளைக் கேள்விக்குறியாக்கும் வகையிலேயே இந்த விடயம் அமைந்துள்ளது. தமிழ்த் தேசியத்துக்கான தமிழ் ஊடகங்களின் பெரும்பங்களிப்புகளுக்கு மத்தியில், உதயனின் சேவை கடந்த காலங்களிலும், தற்போதும் சிறப்புற அமைந்துள்ளது. உதயனின் குரல் வளையை நசுக்கி, மௌனிக்கச் செய்யும் செயற்பாடாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.

கடந்த காலங்களில் ஊடக அடக்கு முறையின் கீழ் பல தடவைகள் உதயன் அலுவலகம், தாக்கப்பட்டும், எரியூட்டப்பட்டும் நெருக்குதல்களை உதயன் சந்தித்து வந்தபோதிலும், நெஞ்சுரமும், தமிழ் பேசும் மக்களின் பேராதரவும் காரணமாக வீரியத்துடனேயே மீண்டெழுந்து வந்து அது மக்கள் குரலாக வீறுநடை போடுகின்றது.

எரிப்பு, துப்பாக்கிச் சூடுகள், தாக்குதல்கள் என்ற நிலைமாறி உதயனின் குரலை ஒடுக்கும் செயற்பாடுகள் புதிய வடிவம் பெற்றுள்ளமையே உதயன் மீதான வழக்குத் தாக்கலாகும். மக்களுக்குத் தகவல் வழங்குவது ஊடகங்களின் உரிமை எனும் அடிப்படையில் ஊடக தர்மத்துடன் செயற்பட்ட உதயன் மீதான வழக்கை அரசு மீளப்பெறவேண்டும்” – என்றார்.

“கொரோனாவினால் உயிரிழந்தவர்களை தகனம் செய்வது தொடர்பான பரிந்துரைகளை வழங்க எந்தக்குழுவும் நியமிக்கப்படவில்லை” – அரசு திட்டவட்டம் !

கொரோனாவினால் உயிரிழந்தவர்களை தகனம் செய்வது தொடர்பான விவகாரத்தில் பரிந்துரைகளை வழங்க ஒரு குழுவை நியமிப்பது குறித்து வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை தகனம் செய்தல் அல்லது அடக்கம் செய்வது குறித்து ஆராய்வதற்கு ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, குழு ஒன்றினை நியமித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் கொவிட் -19 கட்டுப்பாடு எப்போதும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் நோய் கட்டுப்பாடு குறித்த முடிவுகளை எடுக்கும்போது மதம், இனம், அரசியல், சமூக மற்றும் புராண நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்று ஒரு புதிய நோய் என்பதால் உலக சுகாதார அமைப்பின் ஆரம்ப பரிந்துரைகள் மாற்றமடைவதாகவும் இந்நிலையில் இந்த நோய் குறித்து அவ்வப்போது பரிந்துரைகளை வழங்குமாறு நிபுணர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணா அம்மானை சந்திக்க கூரிய ஆயுதங்களுடன் சென்றவர் கைது !

கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கத்திகளுடன் சந்திக்க சென்ற நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முரசுமோட்டை பகுதியில் தங்கியிருந்த கருணாவை , நேற்றைய தினம்(03.01.2021)சந்திக்க சென்ற நபரை கடமையில் நின்ற பொலிஸார் சோதனைக்குட்படுத்திய வேளை அவரிடமிருந்து கூரிய ஆயுதங்கள் இரண்டை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வயலிற்கு பசளைகளை  இடுவதற்காக செல்கையில், கத்தி மற்றும் அரிவாள் ஆகியவற்றை எடுத்து சென்றதாகவும் வயலில் இருந்து திரும்புகையில் கருணாவை  சந்தித்து செல்வதற்காகவே வந்ததாகவும் குறித்த சந்தேக நபர் தெரிவித்துள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாம் உருவாக்கிய கட்சி.தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும் தயாராகவே உள்ளோம்” – கருணா

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாம் உருவாக்கிய கட்சி.தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும் தயாராகவே உள்ளோம்” என  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தொிவித்துள்ளாா்.

கிளிநொச்சியில், நேற்று (03.01.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளாா்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றீர்கள் இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் இணைந்து போட்டியிட தயாராக உள்ளீர்களா?  என அவரிடம் ஊடகவியலாளர் வினவினார்,

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாம் உருவாக்கிய கட்சி. அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டியும், விமர்சித்தும் உள்ளோம். அந்த வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும் தயாராகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். அந்த ஒற்றுமைக்காக தமிழ்த் தலைவர்கள் முன்வர வேண்டும்.

நாங்கள் பல தேர்தல்களுக்கு முகம்கொடுத்து பல வெற்றிகளை கண்டுள்ளோம். இதனால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் போன்ற இடங்களில் எமது கட்சியின் செயற்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறோம். இம்முறை வடக்கில், முதன் முறையாக யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் எமது கட்சி போட்டியிடுவது தொடர்பாக எனது அமைப்பாளர் உடன் இன்று சந்திக்க உள்ளோம்.

தமிழ்த் தலைமைகளின் கடந்த கால செயற்பாடுகள் அரசியல்களை விட்டு தற்போது காணப்படும் சூழலை கருத்தில் கொண்டு ஒற்றுமையாக செயற்பட முன்வர வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

“கொரோனாவினால் பாதிக்கப்படும் வெளிநாட்டவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படும் அதேநேரம்  நாட்டு மக்கள் சிறை கைதிகளை போன்று பார்க்கப்படுகிறார்கள்” – ஹர்ச டி சில்வா குற்றச்சாட்டு !

“கொரோனாவினால் பாதிக்கப்படும் வெளிநாட்டவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படும் அதேநேரம்  நாட்டு மக்கள் சிறை கைதிகளை போன்று பார்க்கப்படுகிறார்கள்”என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று(03.01.2021) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மீள கட்டியெழுப்ப சுற்றுலா சபை தயாரித்த திட்டத்திற்கு முரணாகவே சுற்றுலாத்துறை சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்திய நாடுகளில் இருந்து மாத்திரமே சுற்றுலாப்பிரயாணிகளை நாட்டுக்கு அழைத்து வர சுற்றுலா சபை திட்டம் வகுத்தது.

சுற்றுலா சபை தயாரித்த திட்டத்தில் கொவிட்-19 வைரஸ் தொற்று  பரவலை கட்டுப்படுத்தியுள்ள நாடுகள் பல உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நாடுகளின் பட்டியலில் உக்ரைன் நாடு குறிப்பிடப்படவில்லை.

உக்ரைன் நாட்டில் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் இதுவரையில் 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். எமது நாட்டு சனத்தொகையில் ஒரு மில்லியனுக்கு ஒருவர் கொவிட்-19 வைரஸ் தொற்றினால் இறக்கின்ற நிலையில் உக்ரைன் நாட்டு சனத்தொகையில் ஒரு மில்லியன் பேரில் 430 பேர் இறக்கின்றனர்.

எந்த நாடும் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்தியுள்ளது என உலக சுகாதார தாபனம் அறிவிக்கவில்லை. சுகாதார பாதுகாப்பினை பின்பற்றி சுற்றுலா சேவையில் ஈடுப்பட சுற்றுலாத்துறை சேவையாளர்கள் தயார் நிலையில் உள்ள போது பிற தரப்பினர் அரசியல் செல்வாக்குடன் சுற்றுலாத்துறை சேவையில் தற்போது ஈடுப்படுகிறார்கள்.

உதயங்க வீரதுங்க அலரி மாளிகையின் விலாசத்தை தனது உத்தியோகபூர்வ விலாசமாக குறிப்பிட்டு சுற்றுலாத்துறை சேவையில் ஈடுப்படுகிறார். அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் சுற்றுலாத் ஊடாக கொவிட்-19 வைரஸ் கொத்தணி தோற்றம் பெறும் அபாயம் காணப்படுகிறது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பு இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் சுகாதார தரப்பினர் எதற்கு. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்னெடுக்கும் செயற்பாடுகள் பொறுத்தமற்றதாக உள்ளது. கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகும்  வெளிநாட்டவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.  மறுபுறம் நாட்டு மக்கள் சிறை கைதிகளை போன்று பார்க்கப்படுகிறார்கள்.

உயர்வர்க்கத்தை திருப்திப்படுத்த அரசாங்கம் பல வரிச்சலுகைகளை வழங்கியது. இதன் தாக்கத்தை இவ்வருடம் எதிர்க் கொள்ள நேரிடும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வகுப்புத் தடையை நீக்குமாறு கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டம் !

யாழ்.பல்கலைக்கழக வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் இன்றைய தினம் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டம் யாழ்.பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

VideoCapture 20210104 100041

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை நீக்குமாறு கோரியே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த கோப்பாய் காவல்துறையினர் போராட்டத்தை கைவிடுமாறும், இந்த விடையத்தை உயர் அதிகரிகளின் கவனத்திற்கு தெரியப்படுத்துமாறும் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

காவல்துறையினரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத மாணவர்கள் தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

“இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. சுயலாப அரசியல் நடத்தும் தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” – அமைச்சர் தினேஷ் குணவர்தன

“இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. சுயலாப அரசியல் நடத்தும் தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

உங்கள் படைகள் போர்க்குற்றம் ஏதும் இழக்கவில்லை என்று நீங்கள் கூறுவது உண்மை என்றால், சர்வதேச விசாரணைகளைக் கண்டு அஞ்சுவது ஏன்?’ என தமிழர் தலைமைகள் கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இது தொடர்பில் தமிழர் தலைமைகள் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் கருத்துரைக்கும் போதே தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

எமது படையினர் உண்மையில் நல்லொழுக்கம் மிக்கவர்வர்கள். மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள். அவர்கள் தமது உயிர்களை அர்ப்பணித்து விடுதலைப்புலிகளின் பிடியில் இருந்த பல்லாயிரக்கணக்கானத் தமிழ் மக்களை மீட்டவர்கள். அப்படியானவர்கள் மீது போர்க்குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயமானது?

நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட எமது படையினர் ஒருபோதும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதை ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் நாம் பல தடவைகள் கூறி விட்டோம். இதைத் தமிழ் அரசியல்வாதிகள் உணர வேண்டும். சுயலாப அரசியல் நடத்தும் அவர்கள் தங்கள் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

செய்யாத குற்றங்களுக்காக எமது படையினரின் தியாகங்களைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று இந்தத் தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசு கடந்த வருடம் விலகிவிட்டது.

இந்தநிலையில், எதிர்வரும் ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வில் போர்க்குற்றங்கள் தொடர்பிலோ அல்லது சர்வதேச விசாரணை தொடர்பிலோ இலங்கை அரசு அலட்டிக்கொள்ளாது. புதிய பிரேரணை எம் மீது திணிக்கப்பட்டால் அதையும் எதிர்கொண்டு வலுவிழக்கச் செய்ய நாம் தயாராக இருக்கின்றோம்.

உண்மையில் எமது படையினர் போர்க்குற்றங்கள் செய்திருந்தால் அதற்கான விசாரணையை நாம் உள்நாட்டில் நடத்தலாம் அல்லது சர்வதேசத்தில் கோரலாம். அப்படி எதுவும் இடம்பெறாத நிலையில் எதற்கு விசாரணையை நாம் நடத்த வேண்டும்? எதற்கு சர்வதேச விசாரணையை நாம் எதிர்கொள்ள வேண்டும்” – என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“இலங்கை அரசு பகிரங்கமாக ஐ.நாவுடன் அரசு மோதினால் ஆபத்து பேராபத்தாக மாறக்கூடும். அது நாட்டை உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்திவிடும்.” – ரஞ்சித் மத்தும பண்டார எச்சரிக்கை !

“இலங்கை அரசு பகிரங்கமாக ஐ.நாவுடன் அரசு மோதினால் ஆபத்து பேராபத்தாக மாறக்கூடும். அது நாட்டை உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்திவிடும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார அரசை எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் வினவியபோதே நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக இலங்கை இருப்பதால் அங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்களை உதாசீனம் செய்யாத வகையில் அரசு நடக்க வேண்டும். தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு விலகியமை மிகவும் தவறான நடவடிக்கையாகும்.

கால அவகாசம் கேட்டாவது தீர்மானங்களின் பரிந்துரைகளை அரசு நிறைவேற்றியிருக்க வேண்டும். அதைவிடுத்து தீர்மானங்களை உதாசீனம் செய்தமையால் மேலும் பல நெருக்குவாரங்களை இலங்கை சந்திக்க வேண்டி வந்துள்ளது. அதன் ஓர் கட்டமாக இம்முறை புதிய பிரேரணை ஒன்றை இலங்கை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

அந்தப் பிரேரணை மிகவும் வலுமிக்கதாக இருக்கும் என்று தமிழ்த் தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்தநிலையில், போர்க்குற்ற விவகாரத்தை அரசு தூக்கிப் பிடிக்க ஆரம்பித்துள்ளது.

போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள இராணுவத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் அரசு சாதுரியமாக ஈடுபட வேண்டும். அதைவிடுத்து பகிரங்கமாக ஐ.நாவுடன் அரசு மோதினால் ஆபத்து பேராபத்தாக மாறக்கூடும். அது எமது நாட்டை உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்திவிடும். எனவே, வீர வசனங்கள் பேசி சர்வதேச விசாரணைப் பொறிக்குள் இலங்கையைச் சிக்கவைக்க வேண்டாம் என்று அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிட்டார்.

‘இலங்கை இராணுவம் படுகொலைகளில் ஈடுபடவில்லை. போர்க்குற்றங்களை இழைக்கவில்லை. இதை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உரிய சாட்சியங்களுடன் இந்த முறை நிரூபிப்போம். நாம் எதற்கும் அஞ்சமாட்டோம்’ என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்தன மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோர் அடுத்தடுத்துக் கருத்துக்களை வெளியிட்டுள்ளமையினை தொடர்ந்தே ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையைக் கொண்டு செல்வதற்கான ஓர் அறிக்கையை தயாரிக்க தமிழ்தேசியக்கட்சிகள் இணக்கம் !

சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை கொண்டு செல்லுமாறு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆணையாளர், உறுப்பு நாடுகளிடம் கூட்டாகக் கோருவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையைக் கொண்டு செல்வதற்கான ஓர் அறிக்கையையும் தயாரிப்பதற்கும் இந்தக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்தத் தகவலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செ. கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா குருமன்காடு விருந்தினர் விடுதியில் நேற்று(03.12.2021) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் கட்சிகள் சந்தித்துப் பேசின. மேலும், ஜெனிவா விவகாரத்தைக் கையாள இந்த மூன்று கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம். ஏ. சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன் கட்சியின் பிரதிநிதி ஒருவர் என மூவர் கொழும்பில் கூடிப் பேசுவது என்று முடிவு எட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் . தகவல் தருகையில், பொறுப்புக்கூறல் தொடர்பாக மனித உரிமைகள் கவுன்ஸிலில் எத்தனையோ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், அவை பூச்சியத்தில் இருக்கும் நிலையில் எதிர்காலத்தில் எவ்வாறான அணுகுமுறைகளை எடுப்பது என்பது தொடர்பாக இன்று பேசியிருந்தோம்.

2012இலிருந்து தமிழ்தேசிய மக்கள் முன்னணி அந்த விடயத்தில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை வலியுறுத்தி வந்திருக்கிறது. அது தொடர்பிலும் பேசப்பட்டது. மனித உரிமைகள் விடயத்தில் பொறுப்புக்கூறல் தொடர்பாக கட்சிகள் மட்டத்தில் இருக்கக்கூடிய பலவீனத்தை முழுமையாக விளங்கிக் கொள்ளக்கூடிய அளவிற்கு ஓர் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

மேலதிகமாக வட, கிழக்கை சேர்ந்த தமிழ்க் கட்சிகள் சிவில் அமைப்புகள் ஒரு புள்ளியில் சந்திக்கக்கூடிய வகையில் உறுப்பு நாடுகள் மற்றும் மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆணையாளர் ஆகியோருக்கு தெளிவான ஒரு செய்தியை வழங்க வேண்டியமை தொடர்பாகவும் இணக்கப்பாடு எட்டப்பட்டது. குறித்த விடயம் தொடர்பாக மேலதிகமாக செயல்பாட்டை முன்னெடுப்பதற்கு நானும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சிவில் சமூக பிரதிநிதிகளின் அமைப்பும்,நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனுடைய அமைப்பு உள்ளிட்ட ஒரு குழு இணைந்து ஒரு புள்ளி என்ற விடயத்தை எழுத்து மூலம் ஆவணப்படுத்துவதற்கு இணங்கியிருக்கிறோம். மிக விரைவில் அது முன்னெடுக்கப்படும். அதனை ஒரு ஆரம்பமாக வைத்து அடுத்தகட்ட சந்திப்புகளை மேற்கொள்வதற்கு நாம் இணங்கியிருக்கிறோம்” என்றார்.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் எஸ். சிவகரனின் ஒருங்கிணைப்பில் நேற்று இடம்பெற்ற இந்தச்சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்பதில் பொதுச் செயலாளர் ப. சத்தியலிங்கம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம், ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் தலைவர் திருமதி அனந்தி சசிதரன், காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரதிநிதிகள், வடக்கு – கிழக்கு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆன்மீகத் தலைவர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்