உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“தமிழீழ விடுதலைப் புலிகளை கொழும்புக்கு அழைத்து வந்து ஜனாதிபதி கோட்டாபாயரைாஜபக்ஷவை கொலை செய்ய முற்பட்ட அமைச்சர்” – பாராளுமன்றில் ராஜித சேனாரத்ன குற்றச்சாட்டு!

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை படுகொலை செய்வதற்காக கொழும்புக்கு அழைத்து வந்தவர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தான் என்று பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பாராளுமன்றில் நேற்று உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்து விவாதம் பாராளுமன்றில் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்திற்கு 2 மணிநேரம் வழங்கப்பட்டுள்ள போதிலும் மேலுமொரு மணித்தியாலம் வழங்குமாறு எதிர்கட்சியினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஆளுந்தரப்பு நிராகரித்தது.

இதன்போது எழுந்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துமோதலிலே ராஜித எம்.பி மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்.

”மிக நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்து வைத்திருந்த எல்லா வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம்” – ஜனாதிபதி மற்றும் பிரதைமரின் தீபாவளித்திருநாள் வாழ்த்துச்செய்தி.!

தீபாவளித்திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ஷ அவர்கள் வாழ்த்ததுச்செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிடும் போது ..,

“உலகெங்கிலும் வாழும் இந்துக்கள், தீபாவளி பண்டிகை தினமான இன்று, அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபடுவர்.

தீபத் திருநாள் தீபாவளி பண்டிகையானது அனைத்து உள்ளங்களிலும் இருள் நீங்குவதுடன், தாம் ஒளிபெற்று நல்வாழ்வு வாழ்வதற்கான பிரார்த்தனையுடன், பரஸ்பரம் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறி அன்பையும் மகிழ்ச்சியையும் அவர்கள் தமக்குள் பகிர்ந்துகொள்ளும் கலாசார விழா என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது.

அந்த வகையில் இன மற்றும் சமய நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் மனிதர்களிடையே மேம்படுத்துவதற்கு இத்தகைய இறை நம்பிக்கை சார் விழாக்கள் பெரிதும் உதவும் என்பது எனது நம்பிக்கையாகும்.

முழு உலகமும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பல்வேறு பாரிய பிரச்சனைகளுக்கும் முகம்கொடுத்துள்ள இச்சந்தர்ப்பத்தில் வழிபாட்டுக் கிரியைகளில் ஈடுபடுவது மனித உள்ளங்களுக்கு அமைதியை தருகின்றது.

இந்த தீபத் திருநாளில், அந்த அமைதிக்காக, எமது நாட்டிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து இந்துக்களும் ஒருமனதாக கடவுளுக்காக அர்ப்பணிப்புகளைச் செய்வர் என்பது எனது நம்பிக்கையாகும்.

அது சிறந்ததோர் சமூகத்தையும் ஆரோக்கியமான வாழ்வையும் கட்டியெழுப்பும் எமது நோக்கத்திற்கும் ஆசீர்வாதமாக அமையும் என்றே நான் எண்ணுகின்றேன்.

இந்த தீபத் திருநாள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும், அவர்கள் எதிர்பார்க்கும் உள அமைதி கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை நாட்டினுடைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களும் மக்களுக்கான தீபாவளி வாழ்த்துச்செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது..,

“இருளை அகற்றி ஒளி ஏற்றும் இந்து மக்களின் உயர்ந்த சமயப் பண்டிகைத் தினமான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை விடுப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இருட்டு வழியிற் தீபம் இருந்தால் அதுவே வழிக்குத் துணையாக அமையும். மனித வாழ்க்கைப் பாதைக்கு அருட்தீபம் துணை நின்றால் வாழ்வு சுபீட்சமாகும். அத்தகைய அருட் தீபமாகிய ஆன்மீக ஞான ஒளியை இறைவழிபாடு மூலம் பெறும் சிறப்பு வாய்ந்த நன்னாளே தீபாவளித் திருநாள்.

தேசிய ஒற்றுமைக்கு இது ஒரு சிறந்த நாளாகும். எல்லா மதங்களிலும் விளக்கு ஏற்றுவதன் காரணம் இருளையும் அறியாமையையும் அகற்றி ஒளியை பரப்புவதற்கே. தீபாவளியும் அதன் எதிர்பார்ப்புகள் நிறைந்த தீப ஒளியும் சமூகங்களுக்கு மத்தியிற் சிறந்த புரிந்துணர்வுக்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.

மிக நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்து வைத்திருந்த எல்லா வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம்.

இந்த ஒளியை நாம் அணைய விடாமல் பாதுகாத்து மறுபடியும் இருளுக்குள் மூழ்காமல் எம்மைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் இன்று நம் தேசம் “நாட்டைக் கட்டியயெப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ எனும் அரசாங்கத்தின் தேசிய கொள்கைக்கு அமைவாக ஒளிநிறைந்த வளர்ச்சிப் பாதையிற் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் நாம் முன்னேற்றம் காண முயல்கின்றோம்.

இன்று உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாக்கும் பணியினை அரசாங்கம் மக்கள் அனைவரதும் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக செயற்படுத்தி வருகின்றது. கொரோனா நோய்த்தொற்றிருந்து இலங்கைத் திருநாடு விரைவில் மீள்வதற்கும் எம் மக்களுக்கு எல்லா சுபீட்சங்களையும் தரும் நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்பநாளாக இத்தீபாவளித் திருநாள் அமையட்டும்.

இலங்கைவாழ் இந்து மக்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் சென்ற அகதிகளின் படகுகள் நடுக்கடலில் விபத்துக்குள்ளானதில் 94 பேர் கடலில் மூழ்கி பலி !

வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.  போராளிக் குழுக்கள் அரசுப்படையினர் இடையேயான மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதலில் இருந்து தப்பித்து உயிரை பாதுகாத்துகொள்ள லிபியாவில் வாழும் மக்கள் பலர் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி சட்ட விரோதமாக கடல் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் தொடர்ச்சியாக விபத்து ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், லிபியா நாட்டின் திரிபோலி இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹாம்ஸ் என்ற நகரின் பகுதிக்குள் அமைந்துள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் 120-க்கும் மேற்பட்ட பயணிகள் ஒரு படகில் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். ஆனால், மோசமான வானிலை காரணமாக அகதிகள் சென்ற படகு இன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 74 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல், தலைநகர் திரிபோலில் இருந்து வடகிழக்கு பதியில் அமைந்துள்ள சோர்மன் என்ற நகரின் கரையில் அமைந்துள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் மற்றொரு படகில் 50-க்கும் அதிகமான அகதிகள் ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொண்டனர். அவர்கள் சென்ற படகும் நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். எஞ்சியோர் அப்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தவர்களால் மீட்கப்பட்டனர்.
இதனால், லிபியாவின் மத்திய தரைக்கடல் பகுதியில் இன்று ஒரே நாளில் நடந்த படகு விபத்துக்களில் அகதிகள் 94 பேர் உயிரிழந்தனர். ஆண்டுதோறும் மத்திய தரைக்கடல் பகுதியில் ஏற்படும் படகு விபத்துகளில் ஆயிரக்கணக்கான அகதிகள் உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு  ஏற்பட்ட நிலைமையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் ஏற்படும்”  – எச்சரிக்கின்றார் பா.உ.மயந்த திசாநாயக்க !

“அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு  ஏற்பட்ட நிலைமையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் ஏற்படும்”  என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (13.11.2920) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் பேசும் போது..,

மஹிந்தவின் புதிய கட்சியானது சுதந்திரக் கட்சிக்கு மட்டுமல்லாது நாட்டினுடைய முழு அரசியலுக்கும் சேதம் விளைவிக்க போகின்றது. மேலும், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்து 100 நாட்களில் செய்தவற்றைக் கூட இந்த அரசாங்கம் இதுவரையில் செய்யவில்லை .

தற்போது பாரிய சுகாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.  இது தொடர்பாக அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ளதாகத் தெரியவில்லை . இந்நிலையில் டொனால்ட் ட்ரம்புக்கு ஏற்பட்ட நிலைமையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் ஏற்படும்.கோட்டாபய ராஜபக்‌ஷவும் இரண்டாவது தடவை ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போகும் நிலை ஏற்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்

இலங்கையில் வேகமெடுக்கும் கொரோனா வைரஸ் தொற்று – மேலும் 5பேர் பலி !

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு – 14 பகுதியைச் சேர்ந்த 83 வயது பெண்ணொருவரும், சிலாபம் பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஆணொருவர், இரத்மலானை பகுதியை சேர்ந்த 69 வயது ஆண், கொழும்பு – 13 பகுதியைச் சேர்ந்த 78 வயது ஆண் மற்றும் 64 வயதுடைய கொழும்பு – 13 பகுதியைச் சேர்ந்த ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் மேலும் 198 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்து 12 ஆயிரத்து 425ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 921ஆக அதிகரித்துள்ளது.

இதே நேரம் “நாட்டில் கொரோனா தொற்று சமூகமயமாக்கப்படவில்லை. இலங்கை இன்னும் கொரோனா தொற்று மூன்றாம் கட்டத்திலுள்ளது . நிலைமையைக் கட்டுப்படுத்துவது கடினமல்ல”   என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகள் மீதான தடையை பிரித்தானியா நீக்க கூடாது – இந்தியா வேண்டுகோள் ?

பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை நீக்கக்கூடாது என பிரித்தானியாவிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளதாக இந்தியத் இந்தியாவின் நெய்தி ஊடகங்கள் பல  தெரிவித்துள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடித்தது இந்தியா! - jaffnavision.com

2000ஆம் ஆண்டளவில் பிரித்தானியா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இணைத்தது. யுத்தம் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இலங்கையில் எந்த விதமான வன்முறைகளும் இடம்பெறாததையடுத்தும் புலிகள் அமைப்பின் தடையை நீக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த நிலையில் புலிகள் மீதான தடையை பிரித்தானியா நீக்கவுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சும் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தது.

இவ்வாறான சூழலில் புலிகள் மீதான தடையை பிரித்தானியா நீக்கக்கூடாதென இந்தியா. பிரித்தானிய உள்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும்போது  சிறுபான்மையினரின் உரிமைகளை அரசாங்கம் மதிக்கவேண்டும்” – ஐ.நா.சபையிலிருந்து அரசாங்கத்துக்கு வந்த கடிதம் !

“கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும்போது  சிறுபான்மையினரின் உரிமைகளை அரசாங்கம் மதிக்கவேண்டும்” என ஐ.நா.அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதியுமான ஹனா சிங்கர், இலங்கை அரசாங்கத்துக்கு குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது தொடர்பாக பலத்த விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையிலேயே, இவ்விடயம் தொடர்பாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு, ஐ.நா.அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதியுமான ஹனா சிங்கர் எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“தொற்று நோயால் இறந்தவர்கள் மூலம் வைரஸ் பவவுவதைத் தடுப்பதற்கு, அந்த உடலங்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என்ற பொதுவான அனுமானம், ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக தகனம் என்பது அவரவர் கலாசார தேர்வுகளை அடிப்படையாக கொண்டவை’ எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும்போது  சிறுபான்மையினரின் உரிமைகளை அரசாங்கம் மதிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அரசாங்கம் பின்பற்றவேண்டும் எனவும் அந்த சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு, முஸ்லிம் சமூகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. அதேபோன்று முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கை நியாயமானது என்பதன் அடிப்படையில் பல சமூக அமைப்புக்களும் அவர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

“இலங்கையில் கொரோனா தொற்று சமூகமயமாக்கப்படவில்லை. நிலைமையைக் கட்டுப்படுத்துவது கடினமல்ல”  – சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன

“நாட்டில் கொரோனா தொற்று சமூகமயமாக்கப்படவில்லை.இலங்கை இன்னும் கொரோனா தொற்று மூன்றாம் கட்டத்திலுள்ளது . நிலைமையைக் கட்டுப்படுத்துவது கடினமல்ல”   என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“உலக சுகாதார அமைப்பு மற்றும் தொற்றுநோயியல் பிரிவின் அளவுகோல்களின்படி, வைரஸ் இலங்கையில் சமூகமயமாக்கப்படவில்லை .

வைரஸின் சமூக மயமாக்கல் என்பது எங்கிருந்து தோன்றியது என்பதைக் கண்டுபிடிப்பது கடினமாக இருப்பதேயாகும். தற்போது மினுவாங்கொட மற்றும் பேலிய கொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் மாத்திரமே கொரோனா தொற்றாளர்களாக காணப்படுகின்றனர்., குறித்த கொத்தணியில் முதலாவது கட்டதில் உள்ளவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது நாட்டின் பொருளாதார நிலைமையைப் பொறுத்தவரை நாடு முழுமையாக மூடும் சாத்தியம் இல்லை , நாட்டை முடக்காது கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிவக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்இலங்கையில் இதுவரையில் 15,723 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 12,226 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் 1,041 பேர் ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் 1,007 பேர் மீன் சந்தை ஊழியர்கள் என்பதுடன் ஏனைய 10,178 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதுவரையில் 10,653 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 5,022 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ?

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக முன்னெடுக்கப்படுகின்ற அரசாங்கத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறந்ததாக இல்லை என  குற்றம் சுமத்தியுள்ள  ஐக்கிய மக்கள் சக்தி  , சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை  பாராளுமன்றத்தில் கொண்டு வர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக இலங்கையிலுள்ள சிங்கள ஊடகமொன்றே இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

சமூகத்திலுள்ள பெரும்பாலானோருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகின்ற நிலையில் சுகாதார அமைச்சு சமூகத் தொற்று இல்லை என கூறி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியுள்ளதெனவும்   கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தாமல், மக்களின் துன்பங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்த, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமெனவும் ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

இந்நிலையிலேயே, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி  தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“வடக்கின் அபிவிருத்திக்காக நடப்பு ஆண்டில் அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை” – பாராளுமன்றில் கஜேந்திரன் !

‘யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு பகுதியில் எந்தவித அபிவிருத்திக்கும் 2020ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.இந்த நிலைமை தொடர்ந்தால் அரசாங்கம் பாரிய தோல்வியொன்றைச் சந்திக்கும்”  என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதம், நேற்றையதினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. குறித்த  விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கடந்த தேர்தல் காலத்தின்போது பலருக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன. சுதந்திரக் கட்சி சார்ந்தவர்கள் மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வாறான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டன.

பருத்தித்துறையில் இவ்வாறு பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவரின் பதவி கடந்த ஓகஸ்ட் மாதம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் உள்ள பட்டியலில் அவரின் பெயர் இருந்ததாகவும் பின்னர் வந்த பட்டியலில் இல்லையென்றும் அவர் இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதுபோன்று 600ற்கும் அதிகமானவர்களின் பெயர்கள் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன. வடபிராந்திய போக்குவரத்துத் திணைக்களத்தில் தகுதியற்றவர்கள் நியமிக்கப்படுகின்றனர். தேர்தல் காலத்தில் தமக்குப் பணியாற்றியவர்கள் இவ்வாறு பதவியில் இணைக்கப்படுகின்றனர்.

இரண்டு அரசாங்கங்களும் மாறி மாறி இவ்வாறான செயற்பாடுகளையே தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட செலவீனங்களையும் தாண்டிய சட்டவிரோதமான செலவீனங்களுக்கும் சேர்த்து அங்கீகாரம் பெறுவதற்கு விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் எமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இலங்கையில் மிகவும் புகழ்பெற்ற வடமாகாண போக்குவரத்து சபையானது சீரழிந்து வருகிறது. ஏதாவது விபத்தொன்று இடம்பெற்றால் இதற்கான தீர்ப்புக்காக சம்பந்தப்பட்ட சாரதிகள் கொழும்புக்கு அனுப்பப்படுகின்றனர். ஏனைய மாகாணங்களில் அவ்வாறு இல்லை. வடமாகாணத்தின் கல்வி நிலைமை மோசமாகியுள்ளது. கல்வி நிர்வாக சேவையின் வகுப்பு ஒன்றைச் சேர்த்த வடபகுதியைச் சேர்ந்தவர்களுக்கு சம்பள உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை.

பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் ஆக்குகின்றோம் என்ற போர்வையில் பாடசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லும் நிலைமைகள் காணப்படுகின்றன. மாகாண நிர்வாகத்தின் கீழ் உள்ள முன்பள்ளிகளுக்கு வசதிகள் எதுவும் இல்லை. இவ்வாறான நிலையில் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் முன்பள்ளிகளை அமைத்து ஆசிரியர்களுக்கு சம்பளங்களை வழங்கி அவற்றை நிர்வகித்து வருகிறது.

மாகாண நிர்வாகத்தின் கீழ் உள்ள விடயம் வேண்டும் என்றே சீரழிக்கப்படுகின்றன. இந்த மாதிரியான முறைகேடான செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும். யுத்தத்தினால் அழிக்கப்பட்ட வடபகுதியில் எந்தவித அபிவிருத்திக்கும் 2020ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் அரசாங்கம் பாரிய தோல்வியொன்றைச் சந்திக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.