உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“சர்வஜன வாக்கெடுப்புக்கு நாம் செல்லத் தேவையில்லை .மக்களுக்கு உறுதியளித்தது போல் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்றுவோம்” – பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி !

“சர்வஜன வாக்கெடுப்புக்கு நாம் செல்லத் தேவையில்லை .மக்களுக்கு உறுதியளித்தது போல் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்றுவோம்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதியாக தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்தச் சட்ட வரைவு குறித்து ஆளுங்கட்சி உறுப்பினர்களைத் தெளிவுபடுத்துகின்ற சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் பங்காளிகளாகச் செயற்பட்டு வருகின்ற அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கிவிட்டு 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்றுவோம் என்று தேர்தல் காலங்களில் நாட்டு மக்களுக்கு நாம் வாக்குறுதியளித்துவிட்டோம்.  அதேவேளை, புதிய அரசமைப்பும் கொண்டுவரப்படும் என்றும் உறுதியளித்துவிட்டோம். எனவே, இந்த இரு வாக்குறுதிகளையும் நாம் மீறவே முடியாது. முதலில் அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தையும் அதன்பின்னர் புதிய அரசமைப்பையும் நாம் நிறைவேற்றியே தீர வேண்டும். அந்தக் கருமங்களிலிருந்து நாம் பின்னிற்கப்போவதில்லை.

20ஆவது திருத்தம் அவசியமற்றது என்ற மதத் தலைவர்களின் கோரிக்கையை நாம் கவனத்தில்கொள்கின்றோம். ஆனால், எமது ஜனாதிபதியையும் எமது அரசையும் நம்பி வாக்களித்த நாட்டு மக்களை நாம் ஏமாற்ற முடியாது. 20ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள குழுநிலை விவாதத்தின்போதும்  திருத்தங்களை மேற்கொள்ள முடியும். இதன்போது உயர்நீதிமன்றத்தின் கட்டளையும் கவனத்தில்கொள்ளப்படும்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி நாம் எதனையும் செய்ய முடியாது. ஆனால், சர்வஜன வாக்கெடுப்புக்கு நாம் செல்லத் தேவையில்லை. அதைத் தவிர்க்கும் வகையில் சட்ட வரைவில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள தீவிரம் காட்டும் அரசு கொரோனாவைக் கூட பெரிதாக கவனத்தில் எடுக்காமல் இருக்கிறது” – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு !

“20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள தீவிரம் காட்டும் அரசு கொரோனாவைக் கூட பெரிதாக கவனத்தில் எடுக்காமல் இருக்கிறது” என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,

அரசாங்கத்திலுள்ள குறைகளை நாம் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டுவோம். இது எதிர்க்கட்சியொன்றின் வகிபாகமாகவே நாம் கருதுகிறோம். இன்று 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ளவே அரசாங்கம் தீவிரம் காட்டுகிறது.

இதனால்தான் கொரோனாவைக் கூட பெரிதாக கவனத்தில் எடுக்காமல் இருக்கிறது. எவ்வாறாயினும், 20ஆவது திருத்தத்தை தோற்கடிக்க நாம் அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்வோம்.

இது சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் என்று ஏற்கனவே நாம் அறிந்துள்ளோம். இப்படியான இந்த சட்டமூலத்தை நாம் நிச்சயமாக தோற்கடித்தே ஆக வேண்டும். 19ஆவது திருத்தச்சட்டத்தை தற்போது ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்துகிறார்கள். இது முற்றிலும் பிழையான, ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கருத்தாகும்.

உண்மையில் 19ஆல், நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது. இதனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றுதான் நாம் வலியுறுத்தி வருகிறோம். 19 பிளஸின் ஊடாக, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவருக்கும் சம அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

இதனைவிடுத்து, யாருடைய அதிகாரத்தையும் குறைத்து இன்னொருவருக்கு அதிகாரத்தை பலப்படுத்த வேண்டும் என நாம் விரும்பவில்லை. 19 தொடர்பாக அரசாங்கம் தொடர்ச்சியாக பொய்களை மட்டும்தான் கூறிக்கொண்டிருக்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நான் உங்களிடம் உண்மையை பேசுகின்றேன் . பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை நிச்சயமாக பெற்றுக்கொடுப்பேன் ”  – அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதி !

“நான் உங்களிடம் உண்மையை பேசுகின்றேன் – பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை நிச்சயமாக பெற்றுக்கொடுப்பேன் ” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்ட வீதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு நேற்றையதினம்(18.10.2020) உரையாற்றிய போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஆயிரம் ரூபா சம்பளம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மௌனம் காப்பதாக சிலர் கூறுகின்றனர். உண்மை அதுவல்ல.நாங்கள் ஆட்சிக்கு வந்தது மக்களுக்கு சேவை செய்வதற்கே ஊடகங்களில் உலருவதற்கில்லை. அமைச்சர் நிமால் சிறிபால இரண்டு வாரங்களில் பெருந்தோட்ட கம்பனிகளை ஒரு தீர்மானத்துக்கு வந்து தீர்வை வழங்குமாறு கேட்டிருக்கின்றார்.

நான் உங்களிடம் உண்மையை பேசுகின்றேன். நான் உங்களிடம் உண்மையை கூறுவதாலேயே எனக்கு ஒரு இலட்சத்துக்கு அதிகமான வாக்குகளை வழங்கினீர்கள். கொரோனோ இலங்கையை மீண்டும் தாக்கும் என யாரும் நினைக்கவில்லை. கொரோனா வைரஸ் தாக்கத்தால் தனிப்பட்ட ரீதியில் நாம் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றோம். நிச்சயமாக ஆயிரம் ரூபா கிடைக்கும். நாட்டின் சூழ்நிலையையும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். கடந்த அரசாங்கத்தின் போது மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தான் எதிர்கட்சியில் இருந்துக்கொண்டு ஆளுங் கட்சிக்கு ஆதரவு வழங்கவேன் என்றார்.

ஆதரவு என்றால் ஆளுங்கட்சியுடன் இணைந்து அல்ல. எமது மக்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதாயின் அதற்கு ஆதரவு வழங்குவேன் என்றார். ஆனால் இன்று எதிர்கட்சியிலே இருப்பவர்கள். மக்களை பற்றி எண்ணாது எம்மிடம் கேள்விகளை மாத்திரம் தொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். இன்று நாங்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு ஆதரவு கேட்கவில்லை. நாங்கள் கூட்டணி அமைக்கவும் கேட்கவில்லை. மக்களுக்குதானே ஆதரவு கேட்கின்றோம்.

அனைத்து தொழிச்சங்கங்களும் ஒற்றுமையாக இருந்தால்தானே எதனையும் சாதிக்க முடியும். ஒற்றுமைதான் எமது பலம். இன்று எம்மீது சிலருக்கு பயம் ஏற்பட்டுள்ளது காரணம் அவர்களுக்கு எனது பலம் தெரிந்துள்ளது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது தெரிகிறது. நான் மலையகத்தை மாற்றி காண்பிப்பேன் அந்த நம்பிக்கை என்னிடம் இருக்கின்றது, எனத் தெரிவித்துள்ளார்.

வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைக்குண்டுடன் கைது !

சாவகச்சேரி – கச்சாய் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சாவகச்சேரி- கச்சாய் பகுதியில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு நேற்று (18.10.2020) இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

குறித்த இரகசிய தகவலையடுத்து, பொலிஸார் குறித்த வீட்டினை சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டனர். இந்த சுற்றிவளைப்பின்போது யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 31 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும்,  குறித்த இளைஞன் வவுனியா பேருந்து நிலையத்தில் சாதாரண ஊழியராக பணியாற்றுவதாகவும் யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் பிரதான சந்தேகநபராக தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸார்  கூறியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு வார தேடலுக்குப்பின் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீன் கைது !

பொலிஸாரினால் தீவிரமாக தேடப்பட்டு வந்த ரிசாத் பதியூதீன் தெஹிவளையில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொதுச்சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ரிசாத்தை கைது செய்ய சட்ட மா அதிபர், பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

எனினும், கைது செய்வதற்காக சில பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்ட போதும் ரிசாத் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. பொலிஸாரின் தீவிர தேடுதல் நடவடிக்கை காரணமாக அவர் தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ரிசாத் பதியூதீன் தலைமறைவாக இருக்க உதவி செய்த அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிபொலிஸ்மாஅதிபர் அஜித்ரோகண கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சாதிய ரீதியான பாரபட்சத்தால் கோயிலில் தேவாரம் பாட மாணவனுக்கு அனுமதி மறுப்பு !

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் உயர்தரம் படிக்கும் மாணவன் ஒருவன் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது ஆலய நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பொது பிள்ளையாளர் ஆலயம் ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஆலய நிர்வாகத்தால் தேவாரம் பாடுவதற்கு அனுமதி மறுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான காணொளியும் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

குறித்த ஆலயத்தில்  காலை எட்டு மணிக்கு நவராத்திரி பூசைஇடம்பெற்று வருகிறது. இதன்போது அங்கு செல்லும் சிறுவனின் குடும்பத்தினரும் பூசை வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கம் ஆனால் குடும்பத்தினரை ஆலய நிர்வாகத்திற்கு வந்தவர்கள் பல வழிகளில் புறக்கணித்தே வந்துள்ளனர்.

இவர்களால் ஆலயத்திற்கு நேர்த்திக்காக பூ மாலை கொண்டுசென்றால் அதனை மூலஸ்தான சுவாமிக்கு அணிவிக்காது. வெளியில் உள்ள சுவாமிக்கு அணிவிப்பது. ஆலயத்திற்குள் உள்ள மணியை அடிக்கவிடுவதில்லை எனத் தொடர்ந்த பாரபட்சம் தற்போது அக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் தேவாரம்பாடுவதற்கு சென்ற போது பாடவிடாது தடுத்து நிறுத்திய ஆலய நிர்வாக சபையின் தலைவர், சிறுவனை ஆலயத்திற்கு வெளியே செல்லுமாறு கூறி வெளியேற்றியுள்ளார் என பாதிக்கப்பட்ட சிறுவனும் அவனது குடும்பத்தினரும் கவலை தெரிவித்துள்ளனர். சாதிய ரீதியான பாரபட்சமே இதற்கு காரணம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தின் தலைவரிடம் வினவிய போது ஆலயத்தில் பாரபட்சம் எதுவும் இல்லை எனவும், தேவாரம் பாடுவதற்கு இங்கு நிர்வாகத்தில் ஒருவர் (பெண்) நியமிக்கப்பட்டுள்ளார் அவர் தான் பாடவேண்டும் எனவும் தெரிவித்த அவர் இங்கு நிர்வாகம் எடுப்பது தீர்மானம் எனவும் அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் தாங்கள் ஆலயத்தில் தேவாரம் பாடிவிடக் கூடாது என்பதற்காகவே ஆலயநிர்வாகத்தால் தேவாரம் பாடுவதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினர் தெரிவித்தள்ளனர். அத்தோடு குறித்த சிறுவன் க.பொ.த.உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் எனடபதும் குறிப்பிடத்தக்கது.

விடயம் தொடர்பான பிரச்சினைக்கு அப்பால் இங்கு இதுபோன்ற சாதிய பிரச்சினைகள் இன்னமும் எரிந்துகொண்டுதான் இருக்கின்றன. பாடசாலை மாணவனிடம் தேவாரம் படிக்காதே எனத்தடுக்குளமளவிற்கு இந்தச்சமூகம் தரம்தாழ்ந்து போயுள்ளது என்பதே உண்மை. வெளிப்படையாக சாதிய ரீதியான தாழ்வுகள் பிரச்சினைகள் இல்லை என ஆளாளுக்கு மார்தட்டிக்கொண்டாலும் கூட இன்னமும் இது போன்ற பிரச்சினைகள் சமூகத்தின் ஆழத்தில் இது போன்ற எத்தனையோ மாணவர்களை உளவியல் சார்ந்து ஒடுக்கிக்கொண்டுதான் இருக்கின்றது.

மாற்றத்துக்காக ஒவ்வொருவரும் முன்வராத வரை இந்தச்சாதிய பிரச்சினையும் புற்றுநோய் போலத்தான் நமது சமூகத்தை எரித்துக்கொண்டேயிருக்கும்.

“அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு” – பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் !

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்ட கீழ்ப்பிரிவு பாதையை காபட் பாதையாக மாற்றியமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறும்போது ,

“19ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் எனக்கோரியே நாட்டு மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள், அதனை நிறைவேற்றுவதற்காகவே 20ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது. அதற்கு நாம் ஆதரவு வழங்குவோம்.

பாராளுமன்றத்தில் அடுத்தவாரம் 20ஆவது திருத்தச்சட்டம் நிறைவேறும். அதற்கான பெரும்பான்மை பலமும் ஆளுங்கட்சி வசம் இருக்கின்றது. எதிரணி உறுப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவர்களும் ஆதரவு வழங்குவார்கள் என நம்புகின்றோம்.

ரிஷாட் பதியுதீன் விரைவில் கைதுசெய்யப்பட வேண்டும் என்பது எனது கருத்தாகும். ”  எனவும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.

“எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வீட்டில் ரிஷாட் பதியுதீன் மறைந்திருக்கக்கூடும்” – இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா

“ரிஷாட் பதியுதீன் உடனடியாக கைது செய்யப்படவேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அல்லது அவருக்கு ஆதரவு வழங்கும் நபர் ஒருவரின் வீட்டில் ரிஷாட் பதியுதீன் மறைந்திருக்ககூடும்“ என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார்.

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்ட கீழ்ப்பிரிவு பாதையை காபட் பாதையாக மாற்றியமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறும்போது ,

ரிஷாட் பதியுதீன் உடனடியாக கைது செய்யப்படவேண்டும், அவர் அங்கம் வகிக்கும் கட்சி தலைவரான சஜித் பிரேமதாசவுடனேயே அவர் கலந்துரையாடியும் உள்ளார். எனவே, ரிஷாட் இருக்கும் இடம் சஜித்துக்கு தெரியும். கூடியவிரைவில் ரிஷாட்டை ஒப்படைக்குமாறு கோருகின்றோம். 20 ஐ நிறைவேற்றுவதற்கு ரிஷாட்டின் ஒத்துழைப்பு தேவையில்லை, ஏனெனில் எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே, 22 ஆம் திகதி இரவு ´20´ ஆவது திருத்தச்சட்டமூலம் நிச்சயம் நிறைவேறும். 20 நிறைவேற்றப்படும் என்பது நாட்டு மக்களுக்கு நாம் வழங்கிய உறுதிமொழியாகும் அந்த உறுதிமொழியை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

ரிஷாட் பதியுதீன் சஜித் பிரேமதாச அல்லது அவருக்கு ஆதரவு வழங்கும் ஒருவரின் வீட்டில் மறைந்திருக்ககூடும் என்றே நாம் சந்தேகிக்கின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“19 வது திருத்தம் நல்லாட்சியின் சாபக்கேடு“ – அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர

“19 வது திருத்தம் நல்லாட்சியின் சாபக்கேடு – 20 ஆவது திருத்ததினால் அரசாங்கத்திற்குள் எவ்வித பாதிப்பும் ஏற்படாது” என அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நாட்டு நலன் கருதி கொண்டு வரப்படவில்லை. அரசியல் பழிவாங்கல் உள்ளிட்ட குறுகிய நோக்கங்களை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டது. 20 ஆவது திருத்தம் ஒரு வார காலத்திற்குள் உருவாக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் வழங்கிய வாக்குறுதியை நம்பி அப்போதைய எதிர்க்கட்சியினர் 19ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கினார்கள்.

எவரது வாக்குறுதியின் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாத காரணத்தினால் நான் மாத்திரம் தற்துணிவுடன் 19ஆவது திருத்ததுக்கு எதிராக வாக்களித்தேன். 19 வது திருத்தம் நல்லாட்சியின் சாபக்கேடு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விமர்சிக்கும் அளவிற்கு அது தாக்கத்தை ஏற்படுத்தியது.

நல்லாட்சி அரசாங்கத்தின்  வீழ்ச்சிக்கு 19ஆவது திருத்தமே மூலக்காரணியாகும். இத்திருத்ததை இரத்து செய்யாமல் அரச நிர்வாகத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல முடியாது என்பதற்காகவே 20 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டது. இந்த  20ஆவது திருத்தம் தனிப்பட்ட தரப்பின் யோசனை அல்ல. ஆளும் தரப்பின் அனைத்து உறுப்பினர்களின் யோசனைகளுக்கு அமையவே உருவாக்கப்பட்டது. எனவே 20 ஆவது திருத்ததினால் அரசாங்கத்திற்குள் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை உள்ளடக்கிய விசேடவர்த்தமானியில் கூறப்பட்டுள்ள விடயங்கள்..!

இலங்கையில் கொரோனாத்தொற்று வேகமான சமூகப்பரவலாக உருமாறியுள்ள நிலையில்  அதனைக்கட்டுப்படுத்தும் வகையில் அண்மையில் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை உள்ளடக்கிய வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு..,

90.கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்- 19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இப்பிரதேசத்தில் பொது இடமொன்றில் உள்ள ஆட்கள் ஒவ்வொருவரும் அல்லது அத்தகைய ஆள் இன்னோராளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பவராக வரக்கூடிய வேறேதேனும் இடத்திலுள்ள ஆள் ஒவ்வொருவரும்-

(அ) எல்லா நேரங்களிலும் முகக் கவசமொன்றை அணிந்திருத்தல் வேண்டும்:
(ஆ) இரு ஆட்களிடையே ஒரு மீற்றருக்குக் குறையாத சமூக இடைவெளியைப் பேணுதல் வேண்டும்.
91. கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட் – 19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தில்-
(அ) ஆட்களின் நடமாட்டத்தை மட்டுப்படுத்துவது:
(ஆ) நோய்க்குட்பட்ட ஆளொருவரை அல்லது நோய்க்குட்பட்டவரெனச் சந்தேகிக்கப்பட்ட ஆளொருவரைச் சிகிச்சை அல்லது தனிமைப்படுத்தல் நோக்கத்துக்காக ஒரு வைத்தியசாலைக்கு, அவதானிப்பிடத்துக்கு அல்லது தனிமைப்படுத்தல் நிலையத்துக்குக் கொண்டு செல்வது அல்லது கொண்டு செல்வதற்கு எவரேனுமாளைத் தேவைப்படுத்துவது, அல்லது
(இ) ஒரு நோய்க்குட்பட்டவரெனச் சந்தேகிக்கப்பட்ட எவரேனும் ஒருவரை, இலங்கை முழுவதற்குமான முறையான அதிகாரியினால் தீர்மானிக்கப்படக்கூடியவாறான நோயரும்பற் காலப் பகுதியை விஞ்சாதவொரு காலப்பகுதிக்கு அவரது வீட்டில், வளவுகளில் அல்லது வதிவிடத்தில் சுயதனி​மைப்படுத்தலுக்கு உட்படுமாறு பணிப்பதும் அவரது வீட்டில், வளவுகளில் அல்லது வதிவிடத்தில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு பணிப்பதும், முறையான அதிகாரிக்குச் சட்டமுறையானதாதல் வேண்டும்.
92. (1) ஆளொவ்வொருவரும், 91 ஆம் பிரிவின் கீழ் ஆட்களின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்படுவதன் மேல், கொரோனா வைரஸ் தொற்று நோய் 2019 (கொவிட்-19) பரவுவதனைத் தடுப்பதற்காக, முறையான அதிகாரியினால் தீர்மானிக்கப்பட்டவாறான அத்தகைய காலப் பகுதிக்கு அவரது வீட்டில், வளவுகளில் அல்லது வதிவிடத்தில் தங்கியிருத்தல் வேண்டும்.
92. (2) உப ஒழுங்கு விதி (1) இன் கீழ் தீர்மானிக்கப்பட்ட காலப்பகுதியின் போது, ஆளொருவர்-
(அ) கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்- 19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தினுள் பிரவேசித்தலோ அல்லது இடப்பிரசேத்திலிருந்து விட்டு செல்லுதலோ ஆகாது:
அல்லது
(ஆ) கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்-19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தினுள் ஏதேனும் பொது இடத்திற்குப் பயணித்தலோ, கொண்டு செல்லுதலோ அல்லது அதனுட் பிரவேசித்தலோ ஆகாது,
அல்லது
(இ) கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட் – 19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தினுள் பயணித்தலாகாது.
ஆளொருவர், முறையான அதிகாரியினால் அனுமதிக்கப்பட்டாலொழிய, உப ஒழுங்கு விதி (1) இன்கீழ் தீர்மானிக்கப்பட்ட காலப்பகுதியினுள் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்திலுள்ள ஏதேனும் நிறுவனத்தை, தொழிலிடத்தை அல்லது வேறேதேனும் ஒத்து வளவுகளைப் பொது மக்களுக்குத் திறந்து வைத்தலாகாது.
93. கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட் – 19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தில் தேசியப் பாதுகாப்பை அல்லது பொதுச் சுகாதாரத்தைப் பேணுவதற்குத் தேவைப்பட்ட அத்தியாவசிய சேவைகளை அல்லது வேறேதேனும் சேவையை வழங்குகின்ற ஏதேனும் நிறுவனம், வேலைத் தளம், பல்பொருள் அங்காடி, கடை, விற்பனை நிலையம் அல்லது வேறேதேனும் தொழிலிடம் என்பன தொழிற்படுத்தப்படுவதனை அல்லது பணியாற்றுவதனை முறையான அதிகாரி அனுமதிக்கலாம்.
94. கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்- 19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இப்பிரதேசத்தில் தேசியப் பாதுகாப்பை, தேசிய பொருளாதாரத்தை, பொதுச் சுகாதாரத்தைப் பேணுவதற்கு அல்லது கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்- 19) பரவுவதைத் தடுப்பதற்குத் தேவைப்படுகின்ற அத்தியாவசிய சேவைகளை அல்லது வேறேதேனும் சேவையை வழங்குகின்ற ஏதேனும் நிறுவனத்தின் அல்லது வேலைத்தலத்தின் தொழில்தருநர் அல்லது அதற்குப் பொறுப்பாகவுள்ள ஆள்,
(அ) முறையான அதிகாரியினால் விதிக்கப்பட்டவொரு நேரத்தில் வளவுகளினுள் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களினதும் வேறு ஆட்களினதும் அதிக பட்ச எண்ணிக்கையை விஞ்சுதலாகாது:
(ஆ) அத்தகைய நிறுவனத்தினுள் அல்லது வேலைத்தளத்தினுள் பிரவேசிக்கும் ஆள் ஒவ்வொருவரும் எல்லா நேரங்களிலும் முகக் கவசமொன்றை அணிந்திருப்பதனை உறுதிப்படுத்தல் வேண்டும்:
(இ) இரு ஆட்களிடையே ஒரு மீற்றருக்குக் குறையாத சமூக இடைவெளியை உறுதிப்படுத்தல் வேண்டும்.
(ஈ) நிறுவனத்தினுள் அல்லது வேலைத்தளத்தினுள் பிரவேசிக்கும் முன்னர் ஆள் ஒவ்வொருவரினதும் உடல் வெப்பநிலை அளவிடப்படுவதனை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
(உ) நிறுவனத்தினுள் அல்லது வேலைத்தளத்தினுள் பிரவேசிக்கின்ற ஆட்களுக்குச் சவர்க்காரம் அல்லது கிருமிநீக்கியுடன் போதிய கைகழுவும் வசதியை அளிக்க வேண்டுமென்பதுடன் அத்தகைய நிறுவனத்தினுள் அல்லது வேலைத் தளத்தினுள் பிரவேசிக்கும் ஆள் ஒவ்வொருவரும் அத்தகைய நிறுவனத்தினுள் அல்லது வேலைத் தளத்தினுள் பிரவேசிக்கு முன்னர் தமது கைகளைக் கழுவுவதனை உறுதிப்படுத்துதலும் வேண்டும், அத்துடன்
(ஊ) நிறுவனத்தினுள் அல்லது வேலைத் தளத்தினுள் பிரவேசிக்கின்ற ஆள் ஒவ்வொருவரினதும் பெயர், ஆள் அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொடர்பு விபரங்கள் பற்றிய பதிவேட்டைப் பேணுதல் வேண்டும், அத்துடன்
(எ) முறையான அதிகாரியினால் காலத்துக்குக்காலம் தீர்மானிக்கப்படக்கூடியவாறான அத்தகைய வேறு நோய்த்தடுப்பு வழிமுறைகளுக்கு இணங்கியொழுகுதல் வேண்டும்.
95. கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்- 19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தில் அத்தியாவசிய அல்லது வேறேதேனும் சேவையை வழங்குகின்ற ஒரு பல்பொருள் அங்காடியின், கடையின் விற்பனை நிலையத்தின் அல்லது வேறேதேனும் தொழிலிடத்தின் சொந்தக்காரராகவுள்ள அல்லது அதற்குப் பொறுப்பாகவுள்ள ஆளொருவர்,
(அ) முறையான அதிகாரியினால் விதிக்கப்பட்டவொரு நேரத்தில் வளவுகளினுள் அனுமதிக்கப்பட்ட ஆட்களின் அதிக பட்ச எண்ணிக்கையை விஞ்சுதலாகாது,
(ஆ) அத்தகைய வளவுகளினுள் பிரவேசிக்கும் ஆள் ஒவ்வொருவரும் எல்லா நேரங்களிலும் முகக் கவசமொன்று அணிந்திருப்பதனை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
(இ) இரு ஆட்களிடையே ஒரு மீற்றருக்குக் குறையாத சமூக இடைவெளியை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
(ஈ) வளவுகளினுள் பிரவேசிக்கு முன்னர் ஆள் ஒவ்வொருவரினதும் உடல் வெப்பநிலை அளவிடப்படுவதனை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
(உ) வளவுகளினுள் பிரவேசிக்கின்ற ஆட்களுக்குச் சவர்க்காரம் அல்லது கிருமிநீக்கியுடன் போதிய கை கழுவும் வசதியை அளிக்க வேண்டுமென்பதுடன் அத்தகைய வளவுகளினுள் பிரவேசிக்கும் ஆள் ஒவ்வொருவரும் அத்தகைய வளவுகளினுள் பிரவேசிக்க முன்னர் தமது கைகளைக் கழுவுவதனை உறுதிப்படுத்துதலும் வேண்டும்,
(ஊ) முறையான அதிகாரியினால் காலத்துக்குக்காலம் தீர்மானிக்கப்படக்கூடியவாறான அத்தகைய வேறு நோய்த்தடுப்பு வழிமுறைகளுக்கு இணங்கியொழுகுதல் வேண்டும்.
96. எவரேனுமாளின் உடல் வெப்பநிலையானது, முறையான அதிகாரியினால் தீர்மானிக்கப்பட்ட உடல் வெப்பநிலையை விடக் கூடுதலாகவுள்ள விடத்து அத்தகைய ஆள், 94 ஆம், 95 ஆம் ஒழுங்குவிதிகளில் குறித்துரைக்கப்பட்டவாறு அத்தகைய வேலைத் தளத்தினுள் அல்லது வளவுகளினுள் பிரவேசிப்பதற்கு அனுமதிக்கப்படுதலாகாது.
97. கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்-19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தில் பொது மக்களை இடம்பெயர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு மோட்டார் வாகனத்தின் சாரதி, நடத்துநர் மற்றும் சொந்தக்காரர் முறையான அதிகாரியினால் தீர்மானிக்கப்பட்டவாறாக இரு பயணிகளுக்கிடையே அத்தகைய சமூக இடைவெளியை உறுதிப்படுத்துதல் வேண்டுமென்பதுடன் முறையான அதிகாரியினால் காலத்துக்குக் காலம் தீர்மானிக்கப்படக்கூடியவாறான அத்தகைய வேறு நோய்த்தடுப்பு வழிமுறைகளுக்கு இணங்கியொழுகுதலும் வேண்டும்.
98. கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்- 19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இடப்பிரதேசத்தில் நடமாட்டத்தின் மீதான மட்டுப்பாடு முறையான அதிகாரியினால் தளர்த்தப்படுமிடத்து, ஒரு பொது இடத்தினுள் அல்லது ஆளொருவர் இன்னோராளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பவராக வரக்கூடிய வேறேதேனும் இடத்தினுள் பிரவேசிக்கின்ற ஒரு கூடத்தை, கருத்தரங்கை அல்லது வேறேதேனும் ஒத்த ஒன்றுகூடுதலை ஒழுங்கேற்பாடு செய்கின்ற அல்லது ஒழுங்குபடுத்துகின்ற அல்லது அத்தியாவசிய சேவைகளுக்குட்பட்ட எல்லாச் சேவைகளையும் பெற்றுக்கொள்கின்ற அத்தகைய ஆள் ஒவ்வொருவரும், முறையான அதிகாரியினால் காலத்துக்குக் காலம் தீர்மானிக்கப்படக்கூடியவாறான அத்தகைய வேறு நோய்த்தடுப்பு வழிமுறைகளுக்கு இணங்கியொழுகுதல் வேண்டும்.
ஆகிய சட்ட ஒழுங்கு விதிகளும் இந்த விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.