உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 30 வருடங்களாகத் தமிழ் மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்” – நாடாளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் !

“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 30 வருடங்களாகத் தமிழ் மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பிய அவர், மேலும் கூறுகையில்,

“கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்திருந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, தியாகி திலீபனை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்டுப் பேசினார். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தனது மக்களுக்காக உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாகி திலீபன்  ஒசாமா பின்லேடனா..? அல்லது  2 வயது சிறுவன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட், தண்ணி கொடுத்துவிட்டு சுட்டுக்கொன்றவர்கள்  பின்லேடன்களா..? எனக் கேட்க விரும்புகின்றோம்.

அடுத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தியாகி திலீபனைப் பற்றி மிகவும் கேவலமாக விமர்சிக்கின்றார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 30 வருடங்களாகத் தமிழ் மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர். தியாகி திலீபன் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு மாவீரன்; தியாகி. எனவே, கெஹலியவுக்கும் டக்ளஸுக்கும் திலீபனைப் பற்றி விமர்சிக்க அருகதை கிடையாது”என குறிப்பிட்டுள்ளார்

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 11 இளம்பெண்களுக்கு கொரோனாத்தொற்று உறுதி !

கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களில் இதுவரை 831 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 இளம் பெண்களும் அடங்குகின்றனர் என்று யாழ். மாவட்ட கொரோனா ஒழிப்புச் செயலணி அறிவித்துள்ளது.

குறித்த பெண்களில் பெரும்பாலானவர்கள் புங்குடுதீவைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் புங்குடுதீவில் உள்ள வீட்டுக்கு விடுமுறையில் வந்தபோது யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் யாழ். மாவட்ட கொரோனா ஒழிப்புச் செயலணி மேலும் தெரிவித்துள்ளது.

ஏனைய 10 பேருக்கும் மினுவாங்கொடையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலால் குறித்த பெண்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களில் நேற்று மட்டும் 729 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய எண்ணிக்கையிலான கொரோனாத் தொற்றாளர்கள் நேற்றே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களில் மொத்தமாக 831 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இலங்கையில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 252ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 3 ஆயிரத்து 266 பேர் குணமடைந்துள்ளனர். 973 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13 பேர் சிகிச்சைகளின்போது உயிரிழந்துள்ளனர்.

“முகக்கவசம் அணிய மறுப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்” – இராணுவம் எச்சரிக்கை !

முகக்கவசம் அணிய மறுப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் நேற்று (06.10.2020) காலை முதல் வீதியால் வருவோர் இடைநிறுத்தப்பட்டு முகக்கவசம் அணிந்து செல்லுமாறு இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்டனர்.

முகக்கவசம் அணியாது செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைப்படுத்தலுக்கு உடபடுத்தப்படுவார்கள் எனவும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு பாதசாரிகள், வாகன உரிமையாளர்கள் மற்றும் பஸ்களில் பயணிப்பவர்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளனர்.

“பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரன், புலிகள் அமைப்பு சிறுவர் படைப் பிரிவின் கட்டளை அதிகாரி” – சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரன், புலிகள் அமைப்பு சிறுவர் படைப் பிரிவின் கட்டளை அதிகாரி என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரன் இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது உரையாற்றிய சரத் பொன்சேகா,

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் முழு குடும்பமும் பயங்கரவாதிகள். பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரன், புலிகள் அமைப்பு சிறுவர் படைப் பிரிவின்கட்டளை அதிகாரி எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். பாலச்சந்திரன் இராணுவத்திடம் கிடைத்திருந்தால், காற்சட்டை மற்றும் சட்டையை அணிவித்து ஒழுங்கப்படுத்தப்பட்டிருப்பார் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கு மேலுமொரு அமைச்சுப்பதவி !

பின்தங்கிய கிராம அபிவிருத்தி மற்றும் தேசிய கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு வர்த்தக பயிர்செய்கை அவிருத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் ஜனாதிபதி முன்னிலையில் பதிவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இன்று (06.10.2020) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தபால் மற்றும் ஊடக இராஜாங்க அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக குறித்த பதவியும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா சமூகப்பரவல் தீவிரம் – 707 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

திவுலபிட்டிய பகுதியில் உள்ள மினுவங்கொட ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்புபட்ட மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போது வரை கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் சேர்த்து அவருடன் சம்மந்தப்பட்ட 707 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

மேலும், கம்பஹா பொலிஸ் எல்லை பகுதிக்குள் மீள் அறிவிக்கும் வரையில் இன்று மாலை 6.00 மணி தொடக்கம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில், திவுலப்பிட்டிய, மினுவாங்கொட , வேயாங்கொட ஆகிய பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரிவுகளில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலைகளின் நிர்வாகத்திடம் தமது ஊழியர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் செயற்பாட்டை தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதேபோல், மினுவங்கொடை ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இலங்கையின் எந்த பிரதேசத்தில் வசித்தாலும் வீடுகளை விட்டு வெளியேறாமல் அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களின் குடும்ப உறுப்பினர்களை இராணுவத்தினரால் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த நபர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாமுக்கு செல்ல தயாராக ​வேண்டும் என தொற்றுக்குள்ளான நபர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

இலங்கையில் புதிதாக 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

இலங்கையில் மேலும் 220 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த 220 பேரும் கம்பஹா – மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 321ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 733 ஆக அதிகரித்துள்ளது.

“இன்று முதல் சுகாதார நடைமுறைகள் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும்“ – வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்

யாழ்.குடாநாட்டில் நேற்று மாலையிலிருந்து சுகாதார நடைமுறைகள் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அநாவசியமாக வீதிகளில் நடமாடாது பாதுகாப்பாக தங்கள் வீடுகளில் இருக்குமாறும் ஆ.கேதீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் நேற்று (05) வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஆ.கேதீஸ்வரன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“கொரோனா தொற்று தொடர்பாக ஊடகங்களினால் மக்களை தெளிவூட்டுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வந்த பரப்புரை நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளது“ – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை அடையாளம் கண்டு, நோய்ப் பரவுவதை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்று நோயாளர்களை அடையாளம் காணும் பி.சி.ஆர். பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணியுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் வைத்தே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அத்தோடு தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றுக்கு உறுதியானோருடன் பழகியவர்களை அவர்களுக்கு அண்மையில் உள்ள ஹோட்டல்களில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்று தொடர்பாக ஊடகங்களினால் மக்களை தெளிவூட்டுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வந்த பரப்புரை நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி இதனாலேயே தொற்று உள்ளதை பொதுமக்கள் மறந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆகவே மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை ஊடகங்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

இலங்கையில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ! – கொரோனா தொற்றுக்குள்ளான புங்குடுதீவு பெண் பயணித்த பேருந்தின் சாரதியும் ,நடத்துனரும் தனிமைப்படுத்தலில் .-

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி, நடத்துடனர் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

அத்துடன், பருத்தித்துறை பேருந்தில் பயணித்தவர்கள் சமூகப்பொறுப்புடன் தம்மையும் சமூகத்தையும் காக்க முன்வந்து இனங்காட்டுமாறு கேட்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்த புங்குடுதீவுப் பெண் கொழும்பிலிருந்து பயணித்த பேருந்து, புத்தளம் பகுதியில் பழுதடைந்துள்ளது. அதனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 புத்தளம் பகுதியிலிருந்து அந்தப் பெண் பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்துள்ளார். அவர் கொடிகாமத்தில் காலை 4.30 இறங்கிவிடப்பட்டுள்ளர்.

பின்னர் வேறொரு பேருந்தில் அந்தப் பெண் யாழ்ப்பாணம் நகருக்கு பயணித்துள்ளார்.

கொழும்பு – பருத்தித்துறை சேவையில் ஈடுபட்ட பேருந்தில் பணியாற்றிய நடத்துனர் மற்றும் நடத்துனர் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இனங்காணப்பட்டு சுயதனிமைப்படுதலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே அந்த பேருந்தில் பயணித்தோர் உடன் தன்னார்வமாக உங்களை வெளிப்டுத்தி வடமாகாண சுகாதார திணைக்களத்தின் 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மொத்தமாக 103 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.