உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“மட்டக்களப்பில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அரச உத்தியோகத்தர்களை அடித்து அடாவடித்தனம் செய்துகொண்டிருக்கின்றார் “ – பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன்.

“மட்டக்களப்பில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அரச உத்தியோகத்தர்களை அடித்து அடாவடித்தனம் செய்துகொண்டிருக்கின்றார். அவர் உடனடியாகக் கைது செய்யப்படவேண்டும். அங்கே அவருடைய செயற்பாடுகள் தமிழர்களுடைய பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து கொண்டிருக்கின்றன” என  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் சபையில் நேற்று (22.09.2020) தெரிவித்தார்.

தியாகி திலீபன் நினைவேந்தலுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பொலிஸ்! சபையில்  கஜேந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு - Tamilwin

நேற்றை அமர்வில் அவர் மேலும் பேசுகையில்…

“வடக்கு, கிழக்கிலே எங்கள் உரிமைக்காக உயிர்நீத்தவர்களை நினைவுகூர முடியாது என்று நீதிமன்றம் ஒன்று கட்டளையிட்டிருக்கின்றது. அதேபோன்று வவுனியா வடக்கு நெடுங்கேணியிலே வெடுக்குநாறி சிவன் ஆலயத்தில் திருவிழா நடத்துவதற்கு நிர்வாகம் முயன்றபோது பொலிஸார் வலிந்து சென்று அதனைத் தடை செய்யுமாறு வழக்குத் தாக்கல் செய்தார்கள்.

திருவிழாவை நடத்த முடியும் அதனைத் தடுக்கமுடியாது என்று அங்கே நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், நீதிமன்றத்தின் கட்டளையை மீறி நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் திருவிழாவை நடத்தவிடாது குழப்பிக்கொண்டே இருக்கின்றார்கள்.

எங்களுடைய நினைவேந்தல் விடயத்திலே நீதிமன்றம் சொன்னதை அவ்வாறே கடைப்பிடித்து வீடுகளில் சாமிக்குக் கூடப் பூவைக்க முடியாத அளவுக்குப் பொலிஸாரின் கெடுபிடிகள் உச்ச அளவில் நடைபெற்று வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திலே பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் குணராசா குணசேகரனை அழைத்து, திலீபனுக்கு நினைவேந்தல் செய்தால் உனக்கு நினைவேந்தல் செய்வதற்கு எவரும் இருக்கமாட்டார்கள் என்று அச்சுறுத்தியிருக்கின்றார்.

எங்களுடைய உரிமைகளுக்காக உயிர்நீத்தவர்களை நினைவுகூருவதற்காக நாங்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்துக்கொண்டே இருப்போம். உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் நினைவேந்தலுக்காக நாங்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருப்போம்.

”மட்டக்களப்பில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அரச உத்தியோகத்தர்களை அடித்து அடாவடித்தனம் செய்துகொண்டிருக்கின்றார். அவர் உடனடியாகக் கைது செய்யப்படவேண்டும். அங்கே அவருடைய செயற்பாடுகள் தமிழர்களுடைய பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து கொண்டிருக்கின்றன” எனவும் செல்வராசா கஜேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார் .

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராகிறார் பிள்ளையான் !

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது தொடர்பான நியமனக் கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கையொப்பத்துடன், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை வழங்கி வைக்கப்பட்டது.

இவருடன், கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அநுராதா யஹம்பத்தும் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

”வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஐக்கிய தேசியக் கட்சி 2001 ஆம் ஆண்டு நாட்டை எழுதிக்கொடுத்தது ” – மஹிந்தானந்த அழுத்தகமே

20 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியதுடன் பதாகைகளையும் சபையில் ஏந்தியவாறு இன்று(22.09.2020) எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த விடயம் குறித்து நாடாளுமன்றில் உரையாற்றிய மஹிந்தானந்த அழுத்தகமே ”வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஐக்கிய தேசியக் கட்சி 2001 ஆம் ஆண்டு நாட்டை எழுதிக்கொடுத்தது” என குற்றம் சுமத்தியுள்ளார்.

கோட்டா- மஹிந்த ஆட்சி காலத்தில் இந்த நாட்டுக்கு எந்வொரு அநீதியும் நடக்காது.

2015 இல் வெற்றி பெற்று, எமது இராணுவத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் முற்பட்டீர்கள். அரச சொத்துக்களை விற்றீர்கள். இதனைத் தான் நீங்கள் கடந்த காலத்தில் செய்தீர்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.

ஆடை விவகாரத்தால் பாராளுமன்றை விட்டு வெளியேறிய அதாவுல்லா !

தேசிய மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாவுல்லா நாடாளுமன்றிலிருந்து வெளியேறியுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட அதாவுல்லா அணிந்திருந்த உடை, எந்த வகையிலும் பாராளுமன்ற கலாசாரத்திற்குப் பொருத்தமானதல்ல என்றும், இது நிலையியற் கட்டளைச் சட்டத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதாக சக உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்தனர்.

இதனை தொடர்ந்து ஏ.எல்.எம் அதாவுல்லா நாடாளுமன்றிலிருந்து தாம் வெளியேறுவதாக அறிவித்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடை விவகாரம்: நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றப்பட்டார் அதாஉல்லா | Puthithu

எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்பு , போராட்டங்களுக்கு மத்தியில் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு நீதி அமைச்சர் அலி சப்ரியினால் சமர்ப்பிப்பு !

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு தயாரித்த அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் குறித்த திருத்தச் சட்ட வரைவு இன்று பிற்பகல் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

20ஆவது திருத்தச் சட்ட வரைவு சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வேளை அதற்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

உடனடியாக 20ஆவது திருத்த வரைவை வாபஸ் பெற வேண்டும் எனக் கோரி, எதிர்க்கட்சித்  தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் சபைக்கு நடுவே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், திருத்த வரைவு வாபஸ் பெறப்படவில்லை.

அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் நோக்கில் அரசால் கொண்டுவரப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பான விவாதம் மற்றும் குழு நிலை விவாதங்கள் நடைபெறவுள்ளன. இந்தத் திருத்த வரைவுக்கான திருத்தங்கள் குழு நிலை விவாதத்தின்போது முன்வைக்கப்படவுள்ளன. இதையடுத்து அந்தச் திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்றுவதற்காக வாக்கெடுப்பு நடத்தப்படும்.

1 15 4

இதேவேளை, 20ஆவது திருத்த  வரைவு தற்போது நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பை வெளியிடும் பிரஜைகள் ஏழு நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும் என நாடாளுமன்ற செயலாளரின் அலுவலகம் கூறியுள்ளது.

இதன்மூலம் 20ஆவது திருத்தச் சட்ட வரைவின் அரசமைப்பு ரீதியான செல்லுப்படித் தன்மையை சவாலுக்கு உட்படுத்த முடியும்.

”20ஆம் திருத்தத்தின் மூலம் எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்கு வருகை தருவார்கள்” – அரசை எச்சரிக்கிறார் ருவன் விஜேவர்தன!

20ஆம் திருத்தம் நடைமுறைக்கு கொண்டுவரப்படுமாயின் இரட்டைக்குடியுரிமையை பயன்படுத்தி  எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்கு வருகை தருவதற்கு வாய்ப்புள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்தன  எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும்  இதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 20ஆம் திருத்தம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே ருவன் விஜேவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இரட்டைக் குடியுரிமையுடைய ஒருவர் நாடாளுமன்றத்துக்கு வரக்கூடிய வாய்ப்பை அரசாங்கம் அரசியலமைப்பின் ஊடாக ஏற்படுத்திக்கொடுப்பதற்கான காரணம் என்ன? இதனூடாக வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் வடக்கு- கிழக்கிற்கு வந்து இனவாதத்தைப் பரப்பி, அதிகாரபீடத்திற்கு வருவார்களாயின், அதற்கு இந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்தவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.

அதேபோன்று 20ஆவது திருத்தத்தின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையையும் இல்லாமல் செய்வதற்கு தயாராகியிருக்கிறார்கள் . ஜனாதிபதித்தேர்தலின் ஊடாக ஐந்து வருட காலத்திற்கு ஜனாதிபதியொருவரும் பொதுத்தேர்தலின் ஊடாக ஐந்து வருட காலத்திற்கு நாடாளுமன்றம் நியமிக்கப்படுவதை மறந்துவிட்டு, ஜனநாயகத்தை முற்றிலும் புறந்தள்ளி அனைத்தையும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவர் தான் விரும்பியவாறு நிர்வகிக்கக்கூடியவாறான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அமைச்சரவைக்கு அதிகளவானோர் நியமிக்கப்படுவதன் காரணமாக ஏற்படக்கூடிய வீண்செலவுகள், முகாமைத்துவ சிக்கல்கள் ஆகியவற்றைத் தவிர்த்துக்கொள்ளும் நோக்கிலேயே 19 வது திருத்தத்தின் மூலமாக அமைச்சரவை அமைச்சர்களின் உச்சபட்ச எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட்டது.

எனினும் அதனையும் நீக்கும் வகையிலான திருத்தத்தை சமர்ப்பித்திருப்பதன் ஊடாக பலருக்கும் வெவ்வேறு வரப்பிரசாதங்களுடன் கூடிய அமைச்சுப்பதவிகளைப் பெற்றுக்கொடுத்து, தமது அணியைப் பலப்படுத்திக்கொள்வதையே இந்த அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

இந்நிலையில் அரசியலமைப்பிற்கான 20ஆவது திருத்தம், ஒட்டுமொத்தமாக நாட்டை சீரழிப்பதாகவே அமையும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

”20 வது திருத்தத்தை நிறைவேற்றி கொள்வதற்கு அரசாங்கம் காண்பித்து வருகின்ற அவசரம் ஆச்சரியம் அளிக்கின்றது” – கரு ஜயசூரிய

அரசியலமைப்புத் திருத்தங்களின் உள்ளடக்கங்களைத் தயாரிக்கும் போது அது குறித்த கலந்துரையாடல்களில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்குவதற்குத் தவறுவது அரசியலமைப்பின் எதிர்கால தோல்விக்கு வழிவகுப்பதுடன் அதனை உருவாக்கியவர்களையே அது பிரதிநிதித்துவப்படுத்தும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசாங்கம் அவசரம் காண்பிக்கக்கூடாது என்றும், முதலில் அந்த யோசனை விரிவான கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கரு ஜயசூரிய தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார். அது மாத்திரமன்றி 19 வது திருத்தத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜனநாயகக் கட்டமைப்புக்கள் 20 வது திருத்தத்தின் மூலம் நீக்கப்படுவது குறித்தும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்புத் திருத்தங்களின் உருவாக்கம் என்பது அதனுடன் தொடர்புடைய தரப்பினர் மத்தியில் பொறுமையையும் பணிவையும் உயர்ந்தளவில் கொண்டிருக்க வேண்டிய மிகவும் கடினமானதொரு கலந்தாராய்வு செயன்முறையாகும் என்று அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

அது மாத்திரமன்றி அரசியலமைப்புத் திருத்தங்களின் உள்ளடக்கங்களைத் தயாரிக்கும் போது அதனை முன்நிறுத்திய கலந்துரையாடல்களில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்குவதற்குத் தவறுவது அரசியலமைப்பின் எதிர்கால தோல்விக்கு வழிவகுப்பதுடன் அதனை உருவாக்கியவர்களையே அது பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்றும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அத்தோடு அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தத்தை நிறைவேற்றி கொள்வதற்கு அரசாங்கம் காண்பித்து வருகின்ற அவசரம் ஆச்சரியம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

இவ்வாறு அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

”20ஆம் திருத்தத்துக்கு எதிராக நீதிமன்றின் கருத்தை தேடுவதும் ஒரு நல்ல முடிவு” – வாசுதேவ நாணயக்கார

19ஆம் திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டைக் குடியுரிமை குறித்த பிரிவு 20ஆம் அரசியலமைப்பு திருத்தத்திலும் தக்கவைக்கப்பட வேண்டுமென ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கியூபத் தூதுவருடனான சந்திப்பின் பின்னர் அமைச்சர் நாணயக்கார ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

19ஆம் திருத்தத்தில் அநேக சாதகமான அம்சங்கள் இருந்ததால் அதை முற்றாக நிராகரிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.“தகவல் உரிமைக்கு உத்தரவாதமளிக்கும் விதிகள், ஜனாதிபதிக்கான 5 ஆண்டு வரையறை, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடக்கூடிய எண்ணிக்கையை இரண்டாக வரையறுத்தல், இரட்டைக் குடியுரிமை கொண்டோரை தேர்தலில் போட்டியிடாது தடுத்தல் போன்ற 19ஆம் திருத்தத்தில் காணப்பட்ட நல்ல பல அம்சங்களைத் தக்க வைக்க வேண்டும்” என அவர் மேலும் கூறினார்.

20ஆம் திருத்தத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றம் செல்லவுள்ளமை பற்றிக் கேட்டபோது, நீதிமன்றின் கருத்தை தேடுவதும் ஒரு நல்ல முடிவு என்பதால் இது ஒரு சிறந்த நகர்வாகும் என்றார்.

”20வது அரசியலமைப்பு சட்டமூலம் நாமலுக்கானது அல்ல , அது கோட்டாபய ராஜபக்ஷவின் மகனுக்கானது” . – நலின் பண்டார சந்தேகம்!

20வது அரசியலமைப்பு சட்டமூலம் மஹிந்த குடும்பத்திற்கு அல்லாமல் கோட்டாபய ராஜபக்ஷ குடும்பத்திற்கு இலக்கு வைத்து கொண்டு வரப்பட்டுள்ளதென சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இரட்டை குடியுரிமை தடையை நீக்கி ஜனாதிபதி வேட்பாளரின் வயது எல்லையை 30 வரை குறைத்தமையானது நாமல் ராஜபக்ஷவுக்காக அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த திட்டமானது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகனை இலக்கு வைத்து மேற்கொண்டிருக்கலாம் எனவும், அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக அவரின் மகனை நிறுத்துவதற்கு திட்டமிடுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

20 ஆவது சட்டமூலம் தொடர்பில் பரிந்துரை முன்வைப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை குப்பையில் வீசப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணக்கப்பாட்டிடிற்கு வர முடியவில்லை என்றால் அதனை முன்னோக்கி கொண்டு செல்வது எவ்வாறு என்ற கேள்வி எழுந்துள்ளதாக நலின் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்த வரைவு முதல் வாசிப்புக்காக இன்று பாராளுமன்றத்தில் !

அரசமைப்பின் 20ஆவது திருத்த வரைவு முதல் வாசிப்புக்காக இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி 20 ஆவது திருத்த வரைவை இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்காகவும், நிறைவேற்றத்துக்காகவும் சபையில் சமர்ப்பிப்பார்.

அதன்பின்னர் எந்தவொரு குடிமகனுக்கும் திருத்த வரைவுக்கு எதிராக ஏழு நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்ய முடியும் என்று நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி‍ எந்தவொரு தரப்பினரோ 20 ஆவது திருத்தத் வரைவை சம்பந்தப்பட்ட காலத்துக்குள் சவால் செய்தால், மனுவைத் தாக்கல் செய்த நாளிலிருந்து 21 நாட்களுக்குள் உயர்நீதிமன்றம் தனது முடிவை அறிவிக்க வேண்டும்.

சட்டமா அதிபரின் கூற்றுப்படி, இந்தத் திருத்த வரைவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகின்றது.