உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

‘அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்டுள்ள 20ஆவது திருத்தச்சட்டம் ஜனநாயகத்துக்கான மரணப்பொறி” – ரணில் விக்ரமசிங்க

19ஆவது திருத்தம் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தாக்கத்தை நிச்சயம் அரசாங்கம் எதிர்கொள்ளும் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில்  கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளதாவது,  “தனிநபருக்கான அதிகாரத்தை  நாடாளுமன்றத்துக்கும் மக்களுக்கும் 19 ஆவது திருத்தம் பகிர்ந்தளித்து இருந்தது. அதாவது, வேறொரு வழியில் நிறைவேற்று அதிகாரம் இல்லாது ஒழிக்கப்பட்டிருப்பின் 19 ஆவது திருத்தம் குறித்து கவலைப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆனால் தற்போது, தனிநபருக்கு நிறைவேற்று அதிகாரம் தடையின்றி முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மாத்திரமே  குறித்த 20ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு, ஜனாதிபதிக்குரிய அதிகாரம் மற்றும் அந்த முறைமையை முழுமையாகக் கட்டுப்படுத்த முயற்சித்தோம்.  ஆனால், அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்று உயர் நீதிமன்றம் விதித்த தடையால்  மேற்கொள்ள முடியாமல் போனது.

மேலும், அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்டுள்ள 20ஆவது திருத்தச்சட்டம் ஜனநாயகத்துக்கான மரணப்பொறி” என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

மசகு எண்ணெய்க் கப்பல் தீ விபத்து: கப்பலின் எண்ணெய்க்கசிவு 25-30 வருடங்கள் வரை தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை!

அம்பாறை சங்கமன்கந்த இறங்குதுறைக்கு 38 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடலில் தீபற்றிய MT – New Diamond கப்பல் இன்று (04.09.2020) காலை 5 மணியாகும் போது 25 கடல் மைல்கள் கரை நோக்கி கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை, ´இந்த கப்பல் மூலம் வெளியேறும் எரிப்பொருள் வலய ரீதியாகவும், உலகிலும் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், சட்டத்தரணி தர்சினி லஹந்தபுர கூறினார்.

´கிரிந்தையில் இருந்து கிழக்கே உள்ள கடற்பகுதிக்கு இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகவும் ஆபத்தானதாக இருக்கும். அது உலகில் மிகப்பெரிய எண்ணய் கசிவை ஏற்படுத்தும் ஆபத்து உண்டு. குறித்த கப்பலின் எரிபொருள் களஞ்சியசாலையில் சிறிய துளையொன்று ஏற்பட்டாலும் அதனை தடுக்க தயாராவதற்கு காலம் போதாது´ எனவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை ´எண்ணெய் கசிவு ஏற்பட்டவுடன், அது திடப்படுத்துகிறது. இது கிரீஸாக மாறி நீரில் மிதக்கிறது. ஆந்தளவு இந்த அளவு கிரீஸ் அருகம்பே, நிலாவெளி, வாகரை மற்றும் திருகோணமலை கடற்கரை பகுதிகளை அடையக்கூடும் அவ்வாறுவந்தால் அவற்றை அகற்ற சிறிது காலம் எடுக்கும்´ என கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் பேராசிரியர் தர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார். அவ்வாறு அகற்றினாலும் எம்மால் சுமார் 60 சதவீதத்தையே அகற்ற முடியும்´ என அவர் கூறினார்.

எனினும் 40 சதவீதத்தை அகற்ற முடியாது. ஒவ்வொரு மணற்கல்லையும் சுத்தம் செய்ய முடியாது. எண்ணெய் அடுக்கு அதன் உண்மை நிலைக்கு திரும்ப 25 அல்லது 30 வருடங்கள் எடுக்கும். ஏன அவர் கூறினார்.

எண்ணெய் மென்மையாய் இருப்பதால் திமிங்கலங்கள், ஆமைகள் போன்ற விலங்குகள் தண்ணீரிலிருந்து மேல் எழும்ப முடியாத நிலை ஏற்படலாம் எனவும் அவர் கூறினார்.

கப்பலின் மேல்புறத்தில் நீர் மட்டத்திலிருந்து 20 மீட்டர் வரை எண்ணெய் சேமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார், வெடிக்கும் நேரத்தில் கப்பலின் கொதிகலனுக்குள் மட்டுமே தீ பரவியது.

இருப்பினும், கப்பலின் கேப்டன் தீயை அணைக்க முயற்சிக்காமல் அந்த பகுதியை மூடியுள்ளார். அந்த நேரத்தில் தீயைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் அவர் கூறினார்.

பனாமா நாட்டு கொடியுடன் பயணித்த நியூ டயமண்ட் என்ற குறித்த எண்ணை தாங்கி கப்பல் ஒடிசாவில் உள்ள பாரதீப் துறைமுகத்திற்கு, குவைத்தில் உள்ள மினா அல் அஹ்மதி துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளது. இவ்வாறு இலங்கைக்கு 38 கடல் மைல்களுக்கு அப்பால் பயணித்து கொண்டிருந்த போது கப்பலின் சமயலறையில் உள்ள எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்து நேற்று (03.09.2020) தீ பிடித்திருந்தது.

23 பேர் அடங்கிய கப்பல் பணியாளர்களில் 22 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. எனினும் கப்பலில் பயணித்த பிலிப்பினிய நாட்டவர் ஒருவர் உயிரழந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள 2,70,000 மெற்றிக்தொன் எரிபொருளுக்கு இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கடற்படை உறுதிப்பட தெரிவித்துள்ளது.

தீப்பற்றி உள்ள கப்பலின் தற்போதைய நிலையின் அடிப்படையில் இலங்கைக்கு  எவ்வித ஆபத்தும் இல்லை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதே நேரத்தில் விபத்திற்குள்ளாகியுள்ள MT – New Diamond எண்ணெய் கப்பலினால் கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுப்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

24 மணி நேரமும் செயற்படக்கூடிய ஒரு கூட்டு நடவடிக்கையின் ஊடாக விபத்திற்குள்ளான கப்பலினால் கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் இதனை  குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் தொல்லியல் செயலணிக்கு பொருத்தமான தமிழ், முஸ்லீம் புத்திஜீவிகளை தெரிவு செய்வது கடினமாகவுள்ளது ! – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

கிழக்கு தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணிக்கு பொருத்தமான தமிழ், முஸ்லீம் மக்களின் பிரதிநிதிளை தெரிவு செய்வது சவாலான விடயமாக இருக்கின்றது என ஆதங்கத்தினை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த கால அரசியல் தலைமைகளின் செயற்பாடுகளும் இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு காரணமாக அமைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

தமிழ், முஸ்லீம் மக்களின் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், குறித்த ஜனாதிபதி செயலணிக்கு பிரதிநிதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர், பொருத்தமான இருவரை சிபாரிசு செய்யுமாறு அமைச்சரிடம் தெரிவித்திருந்தனர்.

எனினும், இதுவரை குறித்த இருவர் நியமிக்கப்படாமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு காலத்தில் புத்திஜீவிகளினால் நிரம்பியவர்களாக நம்மவர்கள் இருந்தனர். ஆனால், கடந்த காலத்தில் தமிழர்களின் தலைமைகள் என்று கூறிக்கொண்டவர்களின் விவேகமற்ற வீரத்தின் வெளிப்பாடுகள் ஏற்படுத்திய விளைவுகளில் ஒன்றாக புத்திஜீவிகளுக்கும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த கால ஆயுதச் செயற்பாடுகளினால் பல புத்திஜீவிகள் விவேகமற்ற முறையில் கொல்லப்பட்டுள்ளனர். அதன் காரணமாக பெருமளவானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

தற்போது நாட்டில் இருக்கின்றவர்களும் பெரும்பாலும் சமூகம் சார் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறான காரணங்களினால் குறித்த செயலணிக்கு பொருத்தமான தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதநிதிகளை நியமிக்க முடியாமல் இருக்கின்றது.

எனினும் தொடர்ந்தும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினால் விரைவில் இருவர் நியமிக்கப்படுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

”எங்களுக்கு அடிக்கல் நாட்டுவது பிரச்சினை அல்ல. செய்யும் திட்டம் முறையாகவும், பயனாளர்களுக்கு நன்மை பயக்ககூடியதாகவும் இருக்கவேண்டும்” – ஜீவன் தொண்டமான்

” எங்களுக்கு அடிக்கல் நாட்டுவது பிரச்சினை அல்ல. செய்யும் திட்டம் முறையாகவும், பயனாளர்களுக்கு நன்மை பயக்ககூடியதாகவும் இருக்கவேண்டும்.” என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் புனிதஜோன் பொஸ்கோ கல்லூரியில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் இரண்டு மாடிக் கட்டடம் இன்று (04.09.2020) திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை மூலம் எனது அமைச்சுக்கு ஆயிரத்து 56 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த நான்கரை வருடங்களில் கடன் அடிப்படையிலேயே மலையகத்தில் வேலைகள் நடந்துள்ளன. அவற்றை மீள செலுத்த வேண்டியுள்ளது.

முதலில் அடிக்கல் நாட்டவேண்டும், கட்டிடத்தை நாமே திறந்து வைக்க வேண்டும் என்ற குறுகிய அரசியல் நோக்கில் திட்டங்களை உரிய வகையில் செய்யவில்லை. எங்களுக்கு அடிக்கல் நாட்டுவது பிரச்சினை அல்ல. செய்யும் திட்டம் முறையாகவும், பயனாளர்களுக்கு நன்மை பயக்ககூடியதாகவும் இருக்கவேண்டும்.

பிரச்சினைகளை பேசி, பேசி காலத்தை ஓட்டமுடியாது. நீங்கள் பாடசாலை பிரச்சினையை அறிவித்தீர்கள். இன்று தீர்வை வழங்கினோம். மைதானம் தேவையென கூறினீர்கள். இட ஒதுக்கீடு தொடர்பில் கம்பனியுடன் பேசி அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு மைதானப்பணியும் ஆரம்பமாகும். இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமலை சந்தித்தும் கலந்துரையாடவுள்ளேன்.

அதேவேளை, கல்வி என்பது புத்தக படிப்பு மட்டும் அல்ல, அதனையும் தாண்டி பல விடயங்கள் உள்ளன. விளையாட்டு உட்பட பல் துறைகளில் மாணவர்களால் சாதிக்க முடியும் அதேபோல் அமைதி, அமைதி எனக்கூறி மாணவர்களை முடக்காமல், அவர்களுக்கு கேள்வி கேட்பதற்கான வாய்ப்புகளை ஆசிரியர்கள் வழங்கவேண்டும். அப்போதுதான் சிறந்த தலைவர்களை உருவாக்கமுடியும். ” – என்றார் ஜீவன் தொண்டமான்.

ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பு வடக்கு மாகாணத்திற்கு அனுமதிக்கப்பட்ட 13,540 பேரில் 4,230 பேர் நீக்கம் ! – கிளிநொச்சியில் 950 பேர் மட்டுமே தெரிவு.

ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பு வடக்கு மாகாணத்திற்கு அனுமதிக்கப்பட்ட 13,540 பேரில் 4,230 பேர் நீக்கப்பட்டு எஞ்சிய தொகையினருக்கு மட்டுமே நியமனம் வழங்கப்படவுள்ளது.

குறிப்பாக யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 2,261 பேரிற்கு வழங்கப்பட்ட அனுமதி 950 பேராக குறைக்கப்பட்டுள்ளதும் நோக்கத்தக்கது.

வருமானம் குறைந்த ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் வடக்கு-கிழக்கு மாகாணத்தினை  தற்சமயத்திற்கு கவனத்தில்கொள்வதில்லை என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு 19ம் திகதி மாலை அவசர உத்தரவை பிறப்பித்தது.

க.பொ.த சாதாரணம் வரை கல்வி கற்றவர்களில் இருந்து நாடு பூராகவும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கவுள்ளதாக அறிவித்த அரசு தற்போது வடக்கு-கிழக்கில் மட்டும் அதனை நிறுத்த உத்தரவிட்ட அதேநேரம் ஏனைய 7 மாகாணங்களிலும் அதனை வழங்க அனுமதி வழங்கியுள்ளது.

இவ்வாறு இடைநிறுத்துவதற்கான உத்தரவு வடக்கு கிழக்கின் 8 மாவட்டத்திலும் உள்ள மாவட்டச் செயலகங்களிற்கு கடந்த 19 ஆம் திகதி மாலை தொலை நகல் மற்றும் மின் அஞ்சல்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதேநேரம் இந்த எண்ணிக்கையில் ஏனைய 7 மாகாணத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட்டு ஒரு லட்சம் வேலை வாய்ப்பும் 7 மாகாணத்திற்குள் முடக்கப்படுமா என்ற ஐயம் அப்போது எழுப்பப்பட்டது.

இதேநேரம் வடக்கு-கிழக்கில் போட்டியிட்ட அரச ஆதரவுக் கட்சிகள் இந்த வேலை வாய்ப்பினை வழங்குவதாக ஆசை வார்த்தைகள் கூறியே இளையோரின் வாக்கினையும் தேர்தல் பணிகளையும் பெற்றதான குற்றச் சாட்டுக்களும் எழுந்தன.

இந்த நியமனத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6,626 பேரும் , கிளிநொச்சியில் 2,261 பேரும் , மன்னாரில் 1830 பேரும் , முல்லைத்தீவில் 1565 பேரும் நியமிக்கப்படவிருந்ததோடு வவுனியாவில் 1258 பேரும் என 13,540 பேர் நியிமிக்க தயாராக இருந்தனர். இவர்களிற்கு கடந்த 31ஆம் திகதி முதல் நியமனம் வழங்கப்படும் எனவும் மாவட்டச் செயலகங்களிற்கு உறுதியளிக்கப்பட்டது.

இருந்தபோதும் வடக்கு-கிழக்கிற்கு அதிக நியமனம் செல்வதாக தெரிவித்து அனைத்தும் இடை நிறுத்தப்பட்டு தற்போது ஒரு கிராம சேவகர் பிரிவில் 10 பேரிற்கு மட்டுமே என்ற அடிப்படையில் குறித்த எண்ணிக்கை பாதியாக குறைகின்றது.

இதனால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட 6626 பேரிற்குப் பதிலாக 4,350 பேருக்கும் , கிளிநொச்சியில் 2,261 பேரிற்கு வழங்கப்பட்ட அனுமதி 950 பேராகவும் , மன்னாரில் 1,830 பேரிற்கு முன்பு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 1,530 பேரிற்குமே சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முன்னர் 1,565 பேரிற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 1,360 பேர் நியமிக்கப்படவிருப்பதோடு வவுனியாவில் 1,258 பேரும் என முன்னர் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 1,020 பேரிற்கே அனுமதி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்திற்கு முன்னர் 13 ஆயிரத்து 540 பேர் நியமிக்க அனுமதிக்கப்பட்டபோதும் இந்த தொகையில் 4,230 பேரை நீக்கி 9,210 பேரிற்கு மட்டுமே நியமனம் வழங்கப்படவுள்ளது.

வடக்கு – கிழக்கிற்கு இடை நிறுத்தினாலும் இந்த நியமனம் கிடைக்கும் எனவும் அரசு எந்த பாராபட்சமும் காட்டாது எனவும் ஆளுங்கட்சிக்கு ஆதரவு வழங்கிய டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் குறிப்பிட்டிருந்த நிலையில் , இது இவ்வாறு நடைபெற்றமையானது பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியதுடன் அரசு ஒரு தலைப்பட்சமாக நடக்கின்றதோ..? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை மேலும் விரிவாக்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை. – ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை உபகுழு நியமிப்பு !

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு ஏற்றவாறான நடைமுறைச்சாத்தியமான செயற்திட்டமொன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சமான எதிர்காலம் என்ற திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான தேசிய அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஊடாக வறுமையை ஒழித்து, அனைத்து மக்களும் பயனடையத்தக்க வகையிலான உயர் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை மேலும் விரிவாக்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது.

அதனை முன்னிறுத்தி கொள்கை ரீதியானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான செயற்திட்டம் தொடர்பில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் முதலீட்டு விரிவாக்கம் தொடர்பான அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த உபகுழுவில் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, காமினி லொகுகே, பந்துல குணவர்தன, டளஸ் அழகப்பெரும, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, விமல் வீரவன்ச, மஹிந்த அமரவீர, எஸ்.எம்.சந்திரசேன, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரண, பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன மற்றும் அலி சப்ரி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

அதேவேளை மேற்படி உபகுழுவின் செயற்பாடுகளுக்காக இராஜங்க அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, ஜயந்த சமரவீர, திலும் அமுணுகம, டி.வி.சானக, நாலக கொடஹேவா மற்றும் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியிருக்கிறது.

”தொழில் கிடைக்காத பட்டதாரிகள் எதிர்வரும் 17ஆம் திகதி வரை மேன்முறையீடு செய்ய முடியும் ” – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

62,000 பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் தொழில் கிடைக்காத பட்டதாரிகள் எதிர்வரும் 17ஆம் திகதி வரை மேன்முறையீடு செய்ய முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பட்டதாரி அல்லது இதற்கு முன்னர் தொழில் ஒன்றிலிருந்து ஊழியர் சேமலாபநிதி நிதியத்தின் அங்கத்துவராக இருந்தால் மேற்படி தொழில்வாய்ப்பு கிடைக்காமல் போகுமென அதற்கான செயற்பாட்டு முறைமைகளில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் விண்ணப்பதாரிகள் தமது உண்மையான நிலையை குறிப்பிட்டு மேன்முறையீட்டை சமர்ப்பிக்க முடியும்.

சில பட்டதாரிகள் கடந்த காலங்களில் அவர்களுக்கு தொழில் இல்லாத நிலையில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவை கருத்திற்கொண்டு தாம் பெற்றுக்கொண்ட பட்டத்திற்கு பொருத்தமற்ற சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்கள் ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களென மேற்படி செயற்பாட்டு முறைமைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு தமக்கு பொருத்தமில்லாத சம்பளத்தைப் பெற்றுக்கொண்டுள்ள பட்டதாரிகள் இத்தகைய அனைத்து காரணங்களையும் குறிப்பிட்டு தமது மேன்முறையீட்டை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன் அனுப்ப வேண்டும்.

மேற்படி வேலைத் திட்டத்தின் கீழ் 50,000 பேருக்கு தொழில்வாய்ப்பு வழங்குவதாக குறிப்பிடப்பட்டாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பணிப்புரைக்கமைய மேலும் 12,000 பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முதல் கட்டத்தின் கீழ் அரச சேவையில் 38,760 பெண்கள் உட்பட 50,171 பட்டதாரிகள் நியமிக்கப்பட்டனர். கலைப் பட்டதாரிகள் 31,172, உள்ளக பட்டதாரிகள் 29,156 மற்றும் வெளிவாரி பட்டதாரிகள் 20,322 பேரும் நியமனம் பெற்றுக்கொண்டுள்ளனர். இதில் 1,000 பௌத்த துறவிகளும் உள்ளடங்குகின்றனர்.

அரச துறையை பலவீனப்படுத்தி தனியார் துறையை மட்டும் பலப்படுத்தும் நோக்கில் கடந்த அரசாங்கத்தின் கொள்கைகள் அமைந்திருந்தன. கடந்த அரசாங்க காலத்தில் போக்குவரத்து சபையில் மறுசீரமைப்பு மேற்கொள்வதற்காக ஊழியர்களை வெளியேற்றிய சம்பவத்தின் பிரதிபலனை இன்றும் அரச துறை போக்குவரத்து சேவை வீழ்ச்சி எமக்கு சுட்டிக்காட்டுகின்றது“ எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் மாணவர்களின் பாடத்திட்டங்களிலிருந்து தீவிரவாத மற்றும் வஹாபி போதனைகளை அகற்றுவதற்கான யோசனை !

இஸ்லாம் பாடப் புத்தகத்தின் பாடத்திட்டங்களிலிருந்து தீவிரவாத மற்றும் வஹாபி போதனைகளை அகற்றுவதற்கான யோசனையொன்றை விரைவில் கல்வி அமைச்சிக்கு முன்வைக்கவுள்ளதாக முஸ்லிம் விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சி வழங்கிய அவர், முஸ்லிம் விவகார திணைக்களம் கடந்த காலத்தில் தீவிர அரசியல்மயமாக்கலில் சிக்கியதாக தெரிவித்தார்.

20 ஆவது அரசியலமைப்பு சட்டமூலத்தில் உள்ள முக்கிய விடயங்கள் இதோ..! (தமிழ்)

20 ஆவது அரசியல் அமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (03.09.2020) வெளியிடப்பட்டது.

அதில் அடங்கியுள்ள சில விடயங்கள் இதோ…

19 ஆவது அரசியலமைப்பில் எஞ்சிய சில விடயங்கள்.

தகவல் அறியும் உரிமை

ஜனாதிபதிக்கு இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது.

ஜனாதிபதியினதும், பாராளுமன்றத்தினதும் ஆயுட் காலம் 5 வருடங்களாகும்.

மேற்குறித்த விடயங்கள் மாத்திரம் 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன.

19 ஆவது திருத்தத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு சபை நீக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் உரிமையும் நீக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர், உயர் நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளர் மற்றும் நீதிபதிகள், சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், கணக்காய்வாளர், ஒம்புட்ஸ்மென் உள்ளிட்ட பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

19 ஆம் திருத்தத்திற்கமைய நான்கரை வருடங்களில் பாராளுமன்ற காலத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும்.

ஆனால் புதிய திருத்தத்திற்கு அமைய பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு வருடத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுகிறது.

மேலும் அமைச்சர்கள் நியமனத்தின் போது பிரதமரின் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சரத்து நீக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களின் எண்ணிக்கை 40 க்கு மேல் அதிகரிக்க கூடாது என்ற சரத்து நீக்கப்பட்டுள்ளது.

19 ஆவது அரசியல் அமைப்பில் இரட்டை குடியுரிமை கொண்ட ஒருவருக்கு பாராளுமன்றம் செல்ல முடியாது என்ற சரத்து 20 ஆவது அரசியல் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு, பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களை நீக்கவும், அவர்களுக்குள்ள விடயதானங்களை தன்னிடம் வைத்துக்கொள்ள முடியும்.

ஜனாதிபதிக்கு குறித்த ஒரு விடயதானத்தையும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயத்தையும் தன் வசம் வைத்துக்கொள்வதற்கான இயலுமை உள்ளது.

ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மூன்று உறுப்பினர்களை நியமிக்க முடியும் என்பதோடு அதில் ஒருவரை தலைவராக நியமிக்கவும் வாய்ப்புள்ளது.

முழுமையானதை வாசிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

474670316-20th-Amendment-Gazetted-Tamil (1)

எந்த வகையான பிரதேச – இன – மத ரீதியான பாகுபாடுகள் தலை தூக்க இடமளிக்கப்படாது என அரசாங்கம் உறுதியளித்துள்ளது ! – டக்ளஸ் தேவானந்தா

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு புறக்கணிக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இருவரும் உறுதியளித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையிலேயே மேற்படி உறுதி மொழி வழங்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் வறிய குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் அரசாங்க வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் செயற்றிட்டம் வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தின்போது பிரஸ்தாபித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டின் ஏனைய பிரதேச மக்களைப் போன்று வடக்கு கிழக்கு மக்களும் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் பலாபலன்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர், ஒரே நாடு ஒரே சட்டம் என்பதில் இந்த அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என்ற அடிப்படையில், எந்த வகையான பிரதேச – இன – மத ரீதியான பாகுபாடுகள் தலை தூக்க இடமளிக்கப்படாது என்பதை வலியுறுத்தியதுடன் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு நியமனங்கள் சில காரணங்களுக்காக தற்போது வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நிறுத்தப்பட்ட போதிலும் விரைவில் வழங்கி வைக்கப்படும் எனவும், குறித்த பிரதேச மக்கள் தேவையற்ற வகையில் குழப்பமடையத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.