ஜெயபாலன் த

ஜெயபாலன் த

இங்கிலாந்தில் மோசடிகள் அதிகரிக்கின்றது! தமிழர்கள் தமிழர்களையே மோசடி செய்கின்றனர்!!!

இங்கிலாந்தில் பல்வேறு விதமான மோசடிகள் தொடர்ந்து வருவதும் இந்த மோசடிகளினால் அப்பாவிகள் பலர் பாரிய இழப்புகளுக்கும் உள்ளாகி வருவதும் தொடர்கதையாகி வருகின்றது. வியாபாரம், இலாப மீட்டுவது என்ற பெயரில் ஊரையடித்து உலையில் போடும் வேலைகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். லண்டன் தமிழர்கள் சிலரும் தங்களை சமூகத் தலைவர்களாகக் காட்டிக்கொள்பவர்களும் கூட இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பணத்தை எப்படியாவது ஈட்டலாம் அதுவே தங்களது திறமை எனக்கருதும் இந்த உதவாக்கரைகள் தனிப்பட்ட பலரின் வாழ்க்கையை நாசமாக்குவதற்கு துணை போகின்றனர்.

இந்த மோசடிகளில் பெரும் இழப்பை ஏற்படுத்துவது வீட்டை வைத்து மேலதிக கடன்பெற்று முதலீடு செய்வது தொடர்பான மோசடிகள். ஹரோவில் இளம் தம்பதியினர் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட சிலர் ஆதாரங்களை வழங்கி உள்ளனர். அவர்களுக்கு எதிராக தற்போது சட்ட நடவடிக்கைகளும் தயாராகி வருகின்றது. ஒரு வயதான தம்பதிகள் இவ்வாறான ஒரு முதலீட்டு திட்டத்தில் 200,000 பவுண்களை வழங்கி கடந்த சில மாதங்களாக எவ்வித வருமானத்தையும் பெறாமல் அவர்கள் இருக்கின்ற வீடே தற்போது வங்கியினால் விற்கப்படும் அபாய நிலைக்கு வந்துள்ளது. இவ்வாறு பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் வீடுகளை வாங்குவதற்கு சட்டத்தரணிகளுக்கு செலுத்தப்படுகின்ற பணத்தை ஒரு சில சட்டத்தரணிகள் கையாடல் செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளனர். இவ்வாறு வீட்டை வாங்கவதற்கு வாங்குபவர்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 100,000 பவுண் வரை செலுத்திய தம்பதியினர் வீடும் வாங்காமல் அவ்வளவு பணத்தையும் இழந்து தொடர்ந்தும் வாடகை வீட்டில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

பப் அல்லது பார் – தவறணை நடத்துகிறோம் என்ற பெயரில் அரை நிர்வாண நடனங்களை ஏற்பாடு செய்து அவ்வாறான இடங்களில் போதைப்பொருட்களையும் கண்டும் காணாமல் அனுமதித்து இளம் சமூதாயத்தை அழிக்கும் தொழிலிலும் ஒரு சில தமிழ் தவறணை உரிமையாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

அதீதமாக ஆசைப்பட்டு இல்லாதவர்களை ஆவணங்களில் உருவாக்கி தனிப்பட்ட மோசடிகளில் ஈடுபட்டு இருந்ததையும் இழந்துகொண்டிருக்கின்றனர். இவர்கள் வீட்டையும் வைத்துக் கொண்டு அரச உதவிகளையும் எடுக்கும் பேராசையில் வீட்டை அவணங்களில் ஒருவரை உருவாக்குவது அல்லது இன்னொருவரின் பெயரில் வீட்டை மாற்றுவது போன்ற மோசடிகளும் தொடர்ந்து இடம்பெறுகின்றது. பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவபவர்கள் இங்குள்ளவர்களின் பெயர்களில் வீட்டை வாங்கி அந்த வீட்டில் இருந்துகொண்டே அரச உதவியை எடுப்பது போன்ற பல்வேறு மொள்ளமாரித்தனங்களிலும் ஈடுபடுகின்றனர்.

கிறடிட்காட் மோசடி மிகச் சாதாரணமான மோசடியாக இன்னமும் காணப்படுகின்றது. அண்மையில் கிங்ஸ்ரன் மருத்துவமனையில் மரணமானவரின் கிறடிட் காட்களை காணவில்லை என அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் கிறடிட் காட் தொலைத்துவிட்டதாக தாங்களே முறைப்பாடு செய்துவிட்டு அதனை பயன்படுத்திய சம்பவங்களும் சாதாரணமாக நடைபெற்று வருகின்றது. இவ்வாறானவர்கள் சிலர் மாட்டுப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.

பிரித்தானிய பிரதமரே தன்னுடை இல்லத்தைத் திருத்துவதற்கான செலவை மூடி மறைத்த மோசடி தேசிய ஊடகங்களில் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. இந்த நேர்மையின்மை சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் வெளிப்பட்டு வருகின்றது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம் 13 தடவைகள் பாங்கிரப்சி செய்து ஜனாதிபதியானார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மதப் படுகொலைகளுடன் சம்பந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டு இன்னமும் பலமாக உள்ளது. மோசடிகளைச் சகித்துக்கொள்கின்ற சமூகம் ஒன்று உருவாகிக்கொண்டு இருக்கின்றது.

புளொட் தள மாநாடும் ஜென்னியின் வெளியேற்றமும்! – பாகம் 23

புளொட் தள மாநாடும் ஜென்னியின் வெளியேற்றமும்!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 23 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 11.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 23

தேசம்: இப்ப நீங்கள் முழு வீச்சாக இந்த பின்தள மாநாட்டை நடத்துவதற்கான சகல முயற்சிகளையும் எடுத்து இருக்கிறீர்கள். பின்தள மாநாட்டில்…

அசோக்: பின் தள மாநாடு அல்ல தள மாநாடு…

தேசம்: மன்னிக்க வேணும். தள மாநாட்டில் எல்லாரும் கலந்து கொண்டார்களா? எப்படி என்ன மாதிரி?

அசோக்: நாங்கள் வட கிழக்கு மாவட்டங்கள் அனைத்திலும் புளொட் தோழர்களை சந்தித்து உட்கட்சிப் போராட்டம், மாநாடு, அதன் அவசியம் பற்றி உரையாடுகிறோம். ஒவ்வொரு மாவட்டங்களிலும் போய் மாணவர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள் என எல்லா அணிகளோடும் நாங்கள் கதைக்கிறம். அங்க இருந்து தெரிவு செய்யப்பட்ட முன்னணி தோழர்களை யாழ்ப்பாணம் வரவழைத்து அவர்களை கொண்டு மாநாட்டை நடத்துவதற்கு நாங்கள் உத்தேசிக்கிறோம்.

தேசம்: தனிய மாவட்ட அமைப்பாளர்கள் என்று இல்லாமல் முன்னணி தோழர்களை, விரும்பின ஆட்களும்…

அசோக்: ஓம். அந்தந்த மாவட்டம் தெரிவு செய்து அனுப்பும். நாங்கள் தெரிவு செய்வதில்லை. அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த தோழர்களே மாநாட்டில் தங்களின் பிரதிநிதிகளாக கலந்து கொள்ளும் தோழர்களை தெரிவு செய்து அனுப்புவார்கள். நான் நினைக்கிறேன் எண்பத்தி ஆறாம் ஆண்டு பெப்ரவரி கந்தரோடை கிராமத்தில் ஒரு பாடசாலையில் ரகசியமாக 6 நாட்கள் அந்த தள மாநாடு நடந்தது.

தேசம்: எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்…

அசோக்: எல்லா மாவட்டங்களிலிருந்து சுமார் 200 தோழர்கள் வந்திருப்பார்கள். அதற்கு பூரணமான ராணுவ பாதுகாப்பு சின்ன மென்டிஸ் தான் கொடுத்தது. மெண்டிஸ் தான் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் ஆனா மாநாடு நடப்பதற்கான பாதுகாப்பு எல்லாத்தையும் தான் செய்வதாக சொல்லிவிட்டார். அது எங்களுக்கு உதவியாக இருந்தது.

தேசம்: அதுவே ஒரு பெரிய விஷயம்…

அசோக்: ஆறு நாட்களும் பாதுகாப்பு தந்தார்.

தேசம்: நீங்கள் இந்த மாநாடு நடத்துகிறீர்கள் என்று சொல்லி பின் தளத்துக்கும் தெரியும் உமா மஹேஸ்வரனுக்கும் தெரியும்.

அசோக்: எல்லாருக்கும் தெரியும். மாநாடு நடக்கும் போது படைத்துறைச் செயலர் கண்ணன் தளத்தில்தான் நின்றவர். நாங்கள் மாநாடு நடாத்துவது பற்றி பின் தளத்தில் முகுந்தன் ஆட்களுக்கு தெரியும். தள மத்திய குழு உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் இந்த மாநாடு பற்றி பின் தள மத்திய குழுவுக்கும், முகுந்தனுக்கும் நாம் அறிவித்திருந்தோம்.

தேசம்: அவர்கள் அச்சுறுத்தல் விடுக்கலயா?

அசோக்: ஒன்றும் நடக்கவில்லை. எந்த பதிலும் கிடைக்கவில்லை.

தேசம்: ஏனைய அமைப்புகளாலும்…

அசோக்: அப்படி எதுவும் நடக்கவில்லை. அதற்கான சந்தர்ப்பம் இல்லை. அந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.

தேசம்: அந்த விவாதத்தில் எது முக்கியமாக இருந்தது.

அசோக்: பின்தள படுகொலைகள். தலைமையினுடைய எதேச்சதிகார அராஜக போக்குகள் தொடர்பாக கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. மத்திய குழுவும், தலைமையும் மாற்றப்பட வேண்டும் என்று சொல்லியும் ,அதன் மீதான நம்பிக்கை இல்லை என்று சொல்லியும் புதிதாக நிர்வாகம் வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்தோடு புளொட்டில் நடந்த படுகொலைகள் சித்திரவதைகள் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பாக விசாரணை நடாடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் புளொட்டின் சீர்குழைவுகளுக்கு காரணமான முகுந்தனின் மூல உபாயம் அற்ற அரசியல் இராணுவ போக்குகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சரியான அரசியல் இராணுவ மூல உபாயங்கள் வகுப்பதற்கான அடிப்படைகளை உருவாக்கவேண்டும் என்றும் அத்தோட தீர்மானிக்கபட்டது. உண்மையிலேயே மிக சிறப்பான கோட்பாட்டு அரசியல் சார்ந்த மாநாடு என்றுதான் சொல்ல வேணும்.

தேசம்: தள மாநாட்டுக்கு முதலே செல்வம் அகிலன் கொலை நடந்து விட்டதா?

அசோக்: ஓம். மாநாட்டுக்கு முதலே செல்வம், அகிலன் படுகொலை விட்டது. அந்தக் கொலைகள் தொடர்பாக விசாரணைகள் நடத்த வேண்டும் என்று சொல்லியும் அதில் சிவராம், வெங்கட் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லியும் பின் தளத்தில் நடந்த படுகொலைகள் தொடர்பாக விசாரணை கமிஷன் போட வேண்டும் என்று சொல்லியும் முடிவுகள் எடுக்கப்படுகின்றது.

தேசம்: என்னென்ன தீர்மானங்கள் நீங்கள் முக்கியமாக எடுத்தீர்கள்?

அசோக்: ஒரு பதினாறு பதினேழு முக்கிய தீர்மானங்கள். தலைமை இழைத்த அரசியல் கோட்பாட்டு மற்றும் நடைமுறைத் தவறுகள். இதுவரை தோழர்கள் வைத்திருந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் அதுல சொல்லப்படுது. அதில 17 பேர் கொண்ட அரசியல் வழிகாட்டி குழு ஒன்று தெரிவு செய்யப்படுது. அவர்கள் பின் தளம் போய் இந்த தீர்மானங்களை முன் வைத்து அங்கொரு பின்தள மாநாட்டை பின் தள தோழர்களின் ஒத்துழைப்போடு நடாத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தேசம்: பின் தளத்தில்…

இது தள மாநாடு. ஏனென்றால் நாங்கள் மாத்திரம் தீர்மானிக்க இயலாது தானே. பின் தளத்தில் பயிற்சி முகாங்களில் இருக்கும் தோழர்கள், மற்றய ஏனைய தோழர்களும் இருக்கிறார்கள்தானே. அவர்களை உள்ளடக்கிய பின் தள மாநாடு நடத்தத்தானே வேண்டும். அதுதானே முழுமையான ஜனநாயக பூர்வமான செயற்பாடாக இருக்க முடியும். இதன் மூலமே ஜனநாயக மீட்புக்காக ஒரு புதிய வடிவத்தை உருவாக்க முடியும் என நாங்க நம்புகிறோம்.

தேசம்: தெரிவு செய்பட்ட அந்த முக்கியமான தோழர்கள் ஞாபகம் இருக்கா?

அசோக்: எல்லா வெகுன அமைப்புக்களிருந்தும் ஜன நாயக அடிப்படையில் தேர்தல் மூலம்தான் இந்த தோழர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். பிரசாத்…

தேசம்: பிரசாத் இப்ப எங்க இருக்கிறார்.

அசோக்: பிரசாத் லண்டனில் இருக்கிறார்.

தேசம்: வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவரா?

அசோக்: இல்லை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், கிராமம் மறந்துட்டேன். தீபிநேசன் அமெரிக்காவிலயோ கனடாவிலயோ இருக்கிறார். பெண்கள் அமைப்பில் இருந்து கலா, தொழிற் சங்கத்தில் இருந்து கௌரிகாந்தன், முத்து, ராஜன், ஐ பி மூர்த்தி, சத்தியன் மாணவர் அமைப்பிருந்து தீபநேசன், டேவிட் அர்ச்சுனா ஏனைய அமைப்புக்களிலிருந்து தவநாதன் செல்வம் , துரைசிங்கம் , எல்லாளன், இப்படி 17 தோழர்கள். பெயர்கள் ஞாபகம் இல்லை. மொத்தம் 17 பேர் அதோட நாங்கள் நான்கு பேர் சென்றல் கமிட்டீ.

தேசம்: இங்கேயும் ஒரு பெண் தோழர்தானா…

அசோக்: இல்லை. ஜெயந்தி என்ற தோழரும் இருந்தவங்க என நினைக்கிறேன்.

தேசம்: முத்து என்டுறது?

அசோக்: சிறிதரன். லண்டனில் இருக்கிறார்.

தேசம்: ராஜன்?

அசோக்: ராஜன் கனடாவில் இருக்கிறார்.

தேசம்: ஜென்னியும் வருகின்றாரா?

அசோக்: இல்லை. முன்றாம் நாள் மாநாட்டிலிருந்து வெளியேறி விட்டாங்க என நினைக்கிறேன்.

தேசம்: அவர் ஏன் வெளியேறினவர்…?

அசோக்: குற்றச்சாட்டுகள் அவங்க மீதும் வந்தது. குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட உடன் அவர் வெளியேறிட்டாங்க. முகுந்தனின் விசுவாசி என்றும் தளத்தில் தோழர்களை உளவு பார்த்ததாகவும் அவங்க மீது குற்றச்சாட்டுக்கள் வந்ததென நினைக்கிறேன். பல விடயங்கள் ஞாபகம் இல்லாமல் இருக்கிறது.

தேசம்: தள மாநாடு நடந்து உடனடியாக அங்க போனீர்களா அல்லது?

அசோக்: தள மாநாடு முடிந்தவுடன் எல்ரீரீஈ, ரெலோ பிரச்சனை தொடங்கி விட்டது. அதனால் உடனடியாக பின் தளம் போக முடியவில்லை.

தேசம்: எண்பத்தி ஆறு ஏப்ரலில் ரெலோவுக்கு எதிரான தாக்குதல்கள்…

அசோக்: நாங்கள் பின் தளம் போவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் போது புலிகளின் ரெலோ மீதான தாக்குதல் பயங்கரமாக தொடங்கிவிட்டது.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் போகல.

அசோக்: அதுக்குள்ள மாட்டுப்பட்டு விட்டோம் நாங்கள். அது முடிந்ததற்கு பிற்பாடுதான் நாங்கள் பின் தளம் போறம்.

தேசம்: மூன்று நான்கு மாதங்கள் அதற்குள்ளேயே இருந்திருக்கிறீர்கள்.

அசோக்: அதுக்கு பிற்பாடுதான் மன்னாருக்கு எல்லாரும் போறம். அங்கிருந்துதான் பின்தளம் சென்றது.

தேசம்: ஒரேயடியா போகிறீர்கள்…

அசோக்: இதுல ஒன்று சொல்லவேண்டும். அந்த மாநாட்டில் கண்ணனும் கலந்து கொள்கிறார். அவர் பார்வையாளராக கலந்து கொள்கினறார்.

தேசம்: படைத்துறைச் செயலாளர் கண்ணன்…

அசோக்: ஓம்.

தேசம்: அவர் மீதும் குற்றச்சாட்டு வந்திருக்கும் தானே…

அசோக்: அவர் மீது தனிப்பட்ட வகையில் குற்றச்சாட்டு இல்லை.

தேசம்: இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு 4 மாதத்திற்கு பிறகு தான் பின் தளம் போகிறீர்கள்…

அசோக்: சரியாக ஞாபகம் இல்லை. நான்கு மாதங்கள் இல்லை. குறைவு என நினைக்கிறேன்.

தேசம்: அப்போ இந்த குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் உமாமகேஸ்வரன்…

அசோக்: உமாமகேஸ்வரன் அவர் சார்ந்த உளவுத்துறை. முழுக்க முழுக்க தலைமை மீதும், மத்திய குழு மீதும் குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. புளொட்டின் அமைப்பு வடிவம், மேலிருந்து அதிகார உருவாக்கம், சமத்துவம், ஜனநாயகம்,தோழமை அற்ற தன்மை பற்றியெல்லாம் . அரசியல் கோட்பாடு சார்ந்து ஆரோக்கியமான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. உண்மையிலேயே இப்ப நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

தேசம்: அப்போ நீங்கள் இவர்கள் செய்த சிபாரிசு அல்லது தீர்மானங்களில் இப்ப இருக்கிற மத்திய குழு உறுப்பினர்கள் திருப்பியும் மத்திய குழுவில் இருப்பதற்கு சம்மதம் வழங்கப்பட்டதா? அல்லது பின் தளத்தில் மத்திய குழுவை முழுமையாக கலைத்துவிட்டு முற்றிலும் புதிய மத்திய குழுவை உருவாக்குவதுதான் நோக்கமா?

அசோக்: மத்திய குழுவை முழுமையாக கலைப்பதுதான் நோக்கம். அதில் நாங்களும் சம்பந்தப்பட்ட ஆட்கள் தானே. நாங்கள் நல்லவர்கள் அவர்கள் பிழையான ஆட்கள் என்று இல்லை. ஒட்டுமொத்தமாக மத்திய குழு அது எங்களையும் சாரும். புளொட்டின் தலைமை செய்த தவறுகள் என்ற அடிப்படையில் நாங்களும் குற்றவாளிகள்தானே. எனவே மத்திய குழு முழுமையாக கலைக்கப்பட்டு பின்தளத்தில் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்பபடும் தோழர்களும், தளத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட தோழர்களும் தலைமை அரசியல் வழிகாட்டி குழுவாக செயற்பட்டு புதிய மத்திய குழுவை உருவாக்குவார்கள் என்பதுதான் தீர்மானம்.

தமிழர்களுக்கு என்ன தேவை? அவர்களுக்கு என்ன வேண்டும்?

சிறு பிள்ளைகளோடு உரையாடல் நடத்தினால் “நீங்கள் யாரைப் போல் வரப்போகின்றீர்கள்? என்னவாக வரப் போகின்றீர்கள்?” அவர்களும் தங்களுக்கு தெரிந்ததைச் சொல்வார்கள். ஊரில் கேட்டால் டொக்டர், என்ஜினியர் என்பார்கள். அன்று அப்படித்தான் இருந்தது. இன்றும் அப்படி இருக்கும் என நம்புகிறேன். புலம்பெயர் நாடுகளில் கேட்டால் புட்போல் ப்பிளேயராக, யூரியூப்பராக, விடியோ கேம் டிசைனராக என்று சொல்வார்கள். ஏனெனில் இத்தொழில்களில் வருமானம் அதிகம். அவர்கள் வளர்ந்து பதின்ம வயதை அடையும் போது தங்கள் உண்மைநிலையை உணர்ந்து அதற்கமைய தங்கள் தெரிவுகளை மேற்கொள்வார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய தேவை என்ன என்பதை அடையாளம் கண்டுகொண்டால் தான், அத்தேவையை நிறைவேற்றுவதற்கான திட்டங்களை வகுத்துச் செயற்பட முடியும். இது தனிப்பட்டவர்களுக்கு மட்டுமானதல்ல.

சமூகத்திற்கும் இதே பிரச்சினை இருக்கின்றது. ‘தமிழர்களுக்கு என்ன தேவை?’ என்பதில் இதுவரை எந்தத் தெளிவும் உடன்பாடும் இல்லை. ஆனால் ஜனவரி முதலாம் திகதி நேற்று பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனின் வீட்டில் வைத்துத்தான் தமிழ் பேசும் தலைவர்களின் ஒருமித்த நிலைப்பாடு இறுதி செய்யப்பட்டதாம். அப்படி என்றால் 2021 டிசம்பர் 31 வரை இவர்களிடம் ஒருமித்த நிலைப்பாடு இருக்கவில்லை. தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்றதும் தெரியாது. டிசம்பர் 31 கொழுத்திப் போட்ட வெடிச்சத்ததில் எழும்பி சனிக்கிழமை ஒரு நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார்கள். அந்த நிலைப்பாடு என்ன என்பது தமிழ் சனத்துக்கு தெரியாது.

இந்தத் தமிழ் பேசும் தலைவர்கள் யார் என்பதிலேயே தெளிவில்லை. ரிஎன்ஏ யும் முஸ்லீம் காங்கிரஸ்ம் தான் தமிழ் தலைவர்கள் என்று யார் சொன்னது? முதலில் இந்தச் சொல்லாடல்களை வைத்து ரீல் விடுகின்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

சுதந்திர இலங்கையில் மலையகத் தமிழர்களுடைய வாக்குரிமை பறிக்கப்பட்ட போது அதற்குத் துணை போனவர்கள் இன்று தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக தங்கள் கறள்கட்டிய சைக்கிளை எடுத்து ஓடுகின்றனர். தனிச்சிங்களச் சட்டத்தை பண்டாரநாயக்க கொண்டு வந்தது சிங்கள மக்களின் நலனுக்காக அல்ல. அதேபோல் அதனை எதிர்த்தவர்கள் தமிழர்களுடைய நலன்களுக்காக மட்டும் அதை எதிர்க்கவில்லை.

எழுபதுக்களில் தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்ட போது அப்பிரச்சினை தமிழ் மக்களுடைய பிரச்சினையாக்கப்பட்டது. உண்மையில் அது யாழ்ப்பாணத்தில் இருந்த படித்த சமூகத்தின் ஒரு பிரச்சினையே. ஏனைய தமிழ் மாவட்டங்களைப் பொறுத்தவரை இந்த மாவட்டரீதியான தரப்படுத்தல் ஏனைய தமிழ் மாவட்டங்களில் இருந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து தேர்தலில் தோல்வியடைந்த தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ்ம் இணைந்து தமிழிர் விடுதலைக் கூட்டணியாக ‘தமிழீழம்’ என்ற கோசத்தை தங்கள் வாக்கு வங்கியை தக்க வைக்கும் செயற்திட்டமாக முன்வைத்தனர். அதில் மிகப்பெரிய வெற்றியும் கண்டனர். ஆனால் ‘தமிழீழம்’ அமைப்பது கூட்டணியின் எண்ணமாக ஒருபோதும் இருக்கவில்லை.

அதனை உணர்ந்த இளைஞர்களான வே பிரபாகரன் உட்பட்டவர்கள் தாங்கள் தமிழீழத்தை பெறுகிறோம் என்று கூறிக்கொண்டு சின்னதும் பெரிதுமாக ஆளுக்கொரு ஆயத இயக்கத்தைக் கட்டினர். பாராளுமன்ற அரசியல் கட்சிகளை ஓரம்கட்டிவிட்டு இளைஞர்கள் முன்னுக்கு வந்தனர். உடைந்தும், சேர்ந்தும், திருப்பியும் உடைந்தும் ஐந்து இயக்கங்கள் நாற்பது இயக்கங்களாகி எதற்காகவோ சண்டை பிடித்தனர். வே பிரபாகரன் உட்பட இவர்களுக்கும் ‘தமிழீழம்’ நோக்கமாக இருக்கவில்லை. தங்களின் தலைமையின் தாகங்களை, வெறிகளை தமழர்களின் தாகமாகக் கற்பிதம் செய்துகொண்டு தங்களையும் அழித்து சுற்றியிருந்த மற்றவர்களையும் அழித்து தமிழ் மக்களையும் அழித்தனர். தமிழீழத்திற்காக அல்ல தமிழீழத்தின் பெயரால்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் சர்வதேசத்தினதும் ஆதரவோடு இலங்கை அரசு வே பிரபாகரன் கேட்ட தமிழீழத்திற்கு அவரோடு சேர்த்து சங்கூதியது. வரலாற்றை சரியாகக் கற்றுக்கொள்ளாவிட்டால் அதன் திசையை மாற்றி அமைக்காவிட்டால் வரலாறு இன்னொரு சுற்று அதே ஓட்டத்தில் ஓடும். இப்போது ஆயதம் தாங்கியவர்கள் எல்லாம் ஆயதத்தை தூக்கிப் போட்டுவிட்டு மாறு வேசத்தில் வந்து மீண்டும் தமிழ் மக்களுக்கு தலைமை கொடுக்கின்றனர். இப்போது மீண்டும் பாராளுமன்ற அரசியல்.

தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை? என்ன தேவை? என்று இவர்கள் யாரும் அன்றும் தமிழ் மக்களிடம் சென்று கேட்டறியவில்லை. இன்றும் கேட்டறிய முயற்சிக்கவும் இல்லை. அது அவர்களுக்கு தேவையானதொன்றும் அல்ல. அவர்கள் தங்களுடைய நலன்களும் அபிலாசைகளும் என்னவென்பதை சரியாக அடையாளம் கண்டு அதற்கான திட்டத்தை மிகச் செம்மையாக வகுத்துள்ளனர். தங்களுடைய நலன்களையும் அபிலாஷைகளையும் தமிழ் மக்களினதாக மாற்றி விட்டுள்ளனர். அதனால் அவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்கின்றனர்.

கோயிலில் பிள்ளையார் சிலை திருட்டு முதல் வடக்கு கிழக்கு இணைவு வரை ஒரு கதையைச் சொல்லி இடையில் புத்தரையும் பிக்குவையும் செருகி அவர்கள் மக்களை வேறொரு மாயைக்குள் வைத்துள்ளனர். உலக நாணய நிதியம் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும், சீனாவுக்கு எதிராக இந்தியாவையும் அமெரிக்காவையும் உசுப்பிவிட்டு இடையால தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பம் என்றெல்லாம் தமிழ் பேப்பரிலேயே நாலு எழுத்து வாசிக்காத தமிழ் பாராளுமன்ற சீவன்கள் அறிக்கைவிடுகின்றன.

அல்வாயில் வாழ்ந்தால் என்ன அந்தாட்டிக்காவில் வாழ்ந்தால் என்ன நாம் சுவாசிக்கும் காற்று எவ்வளவு சுத்தமாக இருக்கின்றது என்பது முதல் என்ன உணவை உட்கொள்கின்றோம் என்பது உட்பட நாம் அகற்றும் கழிவுகளுக்கு என்ன நடக்கின்றது என்பது வரை அனைத்துமே அரசியல் தான். தமிழ் மக்களுக்கும் அரசியல் பிரச்சினை இருக்கின்றது. ஆனால் அது இந்த தமிழ் பேசும் தலைமைகளின் ஒருமித்த சுத்துமாத்து கதையளப்புகள் அல்ல.

இலங்கையில் வாழும் இந்த தமிழ் மற்றும் தமிழ் பேசும் மக்களது பிரச்சினைக்கும் தமிழ் பேசாத மக்களுடைய பிரச்சினைக்கும் இடையே பாரிய வேறுபாடுகளும் இல்லை. மேலும் தமிழ் பேசும் மக்களுக்கு இடையேயும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருக்கின்றது. ஆகையால் தமிழ் பேசும் மக்களும் தமிழ் பேசாத மக்களும் தங்களுடைய பொதுப் பிரச்சினைகளை அடையாளம் கண்டுகொண்டு அதற்கான தீர்வுக்கான செயற்திட்டங்களை இணைந்து வகுக்க வேண்டும். ஒரு தரப்பினரை இன்னொரு தரப்பினர் மீது ஏவிவிட்டு தமிழ் – சிங்கள அரசியல் தலைமைகள் நடாத்தும் கூட்டுக்கலவியை தமிழ் பேசும் தமிழ் பேசாத இலங்கை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தீப்பொறி வெளியேற்றம் – தோழியின் மீது கூட்டுப் பாலியல் வல்லுறவு – குற்றம்சாட்டப்பட்டவர்கள் கனடாவில் – பாகம் 22

 

பாகம் 22: தீப்பொறி வெளியேற்றம் – தோழியின் மீது கூட்டுப் பாலியல் வல்லுறவு – குற்றம்சாட்டப்பட்டவர்கள் கனடாவில்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!: தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 22 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 11.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 22:

தேசம்: நாங்கள் இப்போது 84, 85 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தோழர் சந்ததியர் வெளியேறினது சம்பந்தமாக கதைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த முரண்பாடுகளை நாங்கள் பார்க்கும் போது இவர்கள் வெளியேறும்போது வைத்த காரணங்கள் முதலே அது சம்பந்தமாக மற்றவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக வெளியேறுகின்ற தன்மைகள், உட்கட்சிப் போராட்டம் நடக்காதது சம்பந்தமாக எல்லாம் கதைத்திருக்கிறோம். சந்ததியார் வெளியேறுவதற்கு முதல் நடந்த மத்திய குழு கூட்டத்தில் சில மத்திய குழு உறுப்பினர்கள் தாங்கள் வெளியேறுவதாக அறிவிக்கிறார்கள். அவர்கள் வெளியேறிய பிறகுதான் சந்ததியார் கடத்தப்படுகிறார்.

அசோக்: ஓம்.

தேசம்: நீங்கள் பின் தளத்திலிருந்து ஐஞ்சுபேர் தளத்துக்கு போறீங்கள்..?

அசோக்: நாலு பேர்.

தேசம்: ஓ நாலுபேர். சென்றல் கமிட்டீ 4 பேர்; ஜென்னியுமாக ஐந்து பேர் போறீங்க.

அசோக்: ஓம். நாட்டுக்கு தளம் செல்லும்போது ஜென்னியும் எங்களோடு வருகின்றார்.

தேசம்: ஜென்னிக்கும் – உங்களுக்குமான அதாவது மத்திய குழு உறுப்பினர்களுக்குமான தொடர்பு உறவு எப்படி இருந்தது? பொதுவாக சொல்லப்பட்ட விஷயம் ஜென்னி கம்யூனிகேஷன்ல இருந்தவர். பொதுவா கம்யூனிகேஷன் ல இருப்பவர்கள் உமா மகேஸ்வரனோட நெருக்கமானவர்களாக அல்லது நம்பிக்கையானவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்படுறது. அப்போ நீங்க போகும்போது அந்த உறவு நிலை எப்படி இருந்தது?

அசோக்: ஜென்னிக்கும் எனக்குமான உறவு ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே நல்லதாகவே இருந்தது. அவங்களோட பேமிலி பேக்ரவுண்ட் அவங்க அம்மா எல்லாரையும் தெரியும் எனக்கு. ஆனால் அரசியல் சார்ந்து எனக்கும் ஜென்னிக்கும் முரண்பாடுகள் உண்டு. விமர்சனங்களும் இருக்கிறது. மற்றது எனக்கும் ஜென்னிக்கும் இருந்த இந்த உறவு, மற்ற மூன்று தோழர்களுக்கு இருக்கவில்லை. தோழர்கள் குமரன், முரளி, ஈஸ்வரன் ஜென்னி தொடர்பில் அரசியல் விமர்சனங்களையும், கோபத்தையும் கொண்டிருந்தனர்.

தேசம்: அந்தக் கோபம் கூடுதலா அவர் உமா மகேஸ்வரன் தலைமைக்கு கீழ்…

அசோக்: ஓம். அவர் உமா மகேஸ்வரன்ற விசுவாசியாக இருக்கிறார். அவர் சொல்ற எல்லாத்தையும் நியாயப்படுத்துகிறார் என்று சொல்லி ஆரம்ப காலத்தில் இருந்தே அந்த பிரச்சனை இருந்து கொண்டிருந்தது.

தேசம்: அந்தக் கடல் போக்குவரத்து எவ்வளவு நேரம்?

அசோக்: கடல்போக்குவரத்து நோர்மலா நாற்பத்தி ஐந்து நிமிஷத்துக்கு உள்ள நாங்க போயிடுவோம். ஏனென்றால் ஸ்பீட் போட் தானே. ஆக கூடினால் கடல் கொந்தளிப்பு மழை பெய்தா ஒரு 2 மணித்தியாலம் எடுக்கும்.

அன்றைக்கு சரியான மழையும் கடல் கொந்தளிப்பும். மிகவும் கஷ்டப்பட்டுதான் நாட்டிக்கு போன நாங்கள். அது கடும் கஷ்டமான பயணம்.

தேசம்: அந்தப் பயணத்தில் ஒரு பெண். துணிஞ்சு வாரது என்றது – என்ன சொல்றது கொஸ்டைல் சிட்டிவேசன் தான் அது. ஜென்னிக்கும் இது ஒரு கொஸ்டைல் தான். தனக்கு உடன்பாடு இல்லாதவர்கள் ஓட பயணிக்கிறது. அன்டைக்கு நடந்த உரையாடல் எதையும் மீட்க கூடியதா இருக்கா உங்களால…?

அசோக்: ஞாபகம் இல்ல, ஆனா நாங்கள் எந்த அரசியல் உரையாடலும் செய்திருக்க மாட்டம் என்றுதான் நினைக்கிறேன். ஜென்னி தொடர்பான ஒரு பயம் ஒண்டு இருந்தது. அப்ப நாங்கள் போய் மாதகல்லில் தான் இறங்கினது. ஜென்னி உடனே போயிட்டாங்க. அவங்க எங்களோட தங்கல. அடுத்த நாள் காலையில நாங்க வெளிக்கிட்டு கொக்குவில் போகின்றோம்.

தேசம்: ஜென்னி அப்ப மகளிர் அமைப்புக்கு, பொறுப்பா இருந்தா வா..? என்ன..?

அசோக்: அப்ப மகளிர் அமைப்புக்கு அவங்க பொறுப்பில்ல. அப்ப வந்து மகளிர் அமைப்புக்கு பொறுப்பாய் இருந்தது செல்வி, நந்தா போன்றவங்கதான். சரியா ஞாபகம் இல்ல. ஜென்னி அப்ப தான் தளத்திற்கு வாராங்களோ தெரியல்ல. இது பற்றி எனக்கு ஞாபகம் இல்லை. அதுக்குப் பிறகுதான் ஜென்னி பொறுப்பெடுக்கிறார் என நினைக்கிறேன்.

தேசம்: அப்ப நீங்க நாலு பேரும் களைப்புல படுத்திட்டிங்க நிம்மதியா நித்திரை கொண்டு இருக்கீங்க.

அசோக்: நிம்மதி எண்டு சொல்ல முடியாது. ஒரே குழப்பமான மனநிலைதான் எங்களுக்கு இருந்தது. காலையில் கொக்குவிலுக்குப் போறோம். அங்க போன பின்புதான் கேள்விப்படுகிறோம், நேசன், ஜீவன், பாண்டி ஆக்கள் எல்லாம் வெளியேறிட்டாங்கள் என்று சொல்லி.

தேசம்: அங்க அவர்கள் வெளியேறுற அதே காலகட்டத்தில் இங்க,

அசோக்: நான் நினைக்கிறேன் அவங்களுக்கு பின் தளத்தில் காந்தன், கேசவன், கண்ணாடிச் சந்திரன் வெளியேறினது தெரிய வந்தவுடன் இவங்கள் வெளியேறி இருக்கலாம்.

தேசம்: ஓம் நீங்க ஒன்றரை மாதத்திற்கு பிறகு தானே தளத்திற்கு வந்தீங்கள்.

அசோக்: ஓம். ஓம். நாங்க இங்க வந்து பார்த்தால் நிறையக் குழப்பம். சிக்கல்கள். எங்களை சந்திக்கின்ற தோழர்கள் எல்லாருமே எங்களை சந்தேகமாக தான் பார்க்கிறார்கள். இங்க வதந்தி பரப்பபட்டு விட்டது , என்ன என்றால், நாங்க புளொட் அமைப்போட முரண்பட்டு தோழர்கள் ரகுமான் ஜான், கேசவன் ஆட்களோடு சேர்ந்து புளொட்டை உடைச்சிட்டு வெளியேறி வாறம் என்று. இவங்கள் இங்க வந்து பிரச்சினை கொடுக்க போறாங்க, புளொட்டை உடைக்கப்போறாங்க என்று சொல்லி ஒரே பிரச்சினை. எங்கள் மீது சந்தேகம். வந்து ரெண்டு மூணு நாளால பெண்கள் அமைப்பினர் சொல்கின்றனர் எங்களை சந்திக்க வேண்டும் என்று. அப்ப நான், ஈஸ்வரன், குமரன், முரளி எங்க நாலு பேரையும் பெண்கள் அமைப்பு சந்திக்குது. எங்க மேல குற்றச்சாட்டு. நாங்கள் புளொட்ட உடைச்சுட்டு வந்துட்டம் என்று.

அதுவரைக்கும் நாங்கள் எதுவும் கதைக்காம இருந்தனாங்கள். அப்ப தான் மௌனம் கலைக்குறம். அங்க நடந்த பிரச்சனைகளை சொல்லுறம். இதுதான் பிரச்சினை, இதுதான் நடந்தது, அங்க ஒரு ஜனநாயக சூழல் இல்லை. தோழர்கள் ரகுமான் ஜான், கேசவன் வெளியேற்றம், மத்திய குழுவில் நடந்த பிரச்சனை எல்லாவற்றையும் சொல்கிறோம்.

பிறகு நாங்கள் முடிவெடுக்குறோம். இவங்களுட்ட மட்டும் கதைக்க கூடாது. எல்லா அணிகளையும் கூப்பிட்டு கதைக்கலாம் என்று. அதன் பின் மாணவர் அமைப்பு, தொழிற்சங்கம், மக்கள் அமைப்பு எல்லாரோடையும் நாங்கள் உரையாடல் செய்கிறோம், இதுதான் பிரச்சினை என்று சொல்லி விளங்கப்படுத்துகிறோம்.

பிறகு யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் இல்லாமல் ஏனைய மாவட்டங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும், பிரச்சனைகளை விளங்கப்படுத்த வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்கிறோம். கிளிநொச்சி, முல்லைத்தீவு எல்லாத்துக்கும் நான் போறேன். ஈஸ்வரன் கிழக்கு மாகாணம் போறார். முரளி வந்து வவுனியா போறாங்க. இப்படி எல்லா இடமும் போய் எங்கட நிலைப்பாட்டை சொல்கிறோம்.

தேசம்: இந்தக் காலகட்டத்தில் பாதுகாப்பு ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கேலையா உங்களுக்கு தளத்துல?

அசோக்: அந்த நேரத்தில் தளத்தில் இராணுவப் பொறுப்பாளராக சின்ன மென்டிஷ் தான் இருந்தவர். சின்ன மென்டிஸ் உமாமகேஸ்வரனின் விசுவாசிதான். ஆனால் அவரிடம் பின்தளத்தில் நடக்கும் பிரச்சனைகள் தொடர்பாக அதிருப்தி இருந்தது. கொஞ்சம் நேர்மையான ஆள். வித்தியாசமான ஆள். அவரோட உரையாடலாம். பிரச்சனைகளை புரிந்து கொள்ளக்கூடியவர். குமரன் பின்தளத்தில் நடந்த பிரச்சனைகள் பற்றி விளங்கப்படுத்தி விட்டார்.

தேசம்: சின்ன மென்டிஸ் தான் தள பொறுப்பு…?

அசோக்: ஓம். தள இராணுவ பொறுப்பு.

தேசம்: அவர மீறி எந்த படுகொலைகளும் …?

அசோக்: நடக்காது. நடக்க வாய்ப்பில்லை. பின் தளத்தில் இருந்து வந்து செய்யலாமே தவிர இங்க செய்ய வாய்ப்பில்லை. நாங்கள் தோழர்களை சந்தித்து பிரச்சனைகளை கதைக்கும் போதெல்லாம் மென்டிஸ் எதுவும் கதைக்கல மௌனமா இருந்துட்டார். பிறகு நாங்கள் எல்லா இடங்களுக்கும் போய் கதைத்த பின் ஒரு முடிவுக்கு வருகின்றோம். நாங்கள் நினைக்கிறோம் , ஜனநாயக பூர்வமான முறையில் ஒரு தள மாநாட்டை நடத்தி அந்த மாநாட்டுக்கூடாக சில தீர்மானங்களை நிறைவேற்றலாம் என்று.

தேசம்: தளமாநாடு – மத்திய குழுக் கூட்டம் முடிந்து வரும்போது உங்களுட்ட இந்த நோக்கம் இருந்ததா?

அசோக்: இல்ல அப்படியான ஒரு நோக்கம் இருக்கல. ஆனால் பின்தளப் பிரச்சனைகளை பற்றி தோழர்களோடு கதைத்து ஏதாவது முடிவுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

தேசம்: தளத்துக்கு வந்த பிறகு…

அசோக்: ஓம். தளத்துக்கு வந்த பிறகு குழப்ப நிலையைப் பார்த்த பிறகு இப்பிரச்சனைகளுக்கு, குழப்ப நிலைகளுக்கு தீர்வு காண வேண்டிய கட்டாய நிலை எங்களுக்கு ஏற்படுகிறது. தனிப்பட்ட வகையில் நம்பிக்கையான தோழர்களோடு உட்கட்சிப்போராட்டம் பற்றி கதைக்கின்றோம். தள மாநாடு நடத்தி ஜனநாயக பூர்வமான முறையில் முடிவுகள் எடுக்கவேண்டும், உட்கட்சிப் போராட்டத்தை ஆரோக்கியமான முறையில் கொண்டு நடத்தவேண்டும் என நினைக்கிறோம். இதற்கெல்லாம் வழிகாட்டியாக மிக்க துணையாக இருந்தவர் தோழர் கௌரிகாந்தன். கோட்பாட்டு ரீதியாக உட்கட்சிப் போராட்டத்தையும், தள மாநாட்டையும் நடாத்திமுடிக்க துணை நின்றவர் அவர்தான். அவர் இல்லாவிட்டால் சாத்தியப்பட்டு இருக்காது.

தேசம்: அவர் அந்த பின்னாட்கள்ல தீப்பொறியோட போய் இருந்ததோ…?

அசோக்: இல்ல. அவர் போகல்ல. கடைசி வரைக்கும் எங்களோடு இருந்தவர்.

தேசம்: அவருக்கும் தீப்பொறி வெளியேறினாக்களுக்கும் பெரிய தொடர்பில்லை…

அசோக்: எந்த தொடர்பும் இல்லை. அவர் கடைசி வரைக்கும் எங்களுடன் தான் இருந்தார். உட்கட்சி போராட்டத்துல மிகத் தீவிரமாக புளொட்ட திரும்பவும் சரியான திசைவழி கொண்டு வரலாம், ஒரு முற்போக்கு அணியா திரும்ப சீரமைக்கலாம் என்றதுதுல உறுதியாக இருந்தவர். இந்த உட்கட்சிப் போராட்டம் பலமா நடக்கிறதுல பெரும்பங்கு அவருக்குறியது தான். அந்த நேரத்தில் தோழர் கௌரி காந்தனின் இயக்கப் பெயர் தோழர் சுப்பையா என்பது.

தேசம்: அதுக்கு முதல் இந்த புதியதொரு உலகம் புத்தகம் எந்த காலகட்டத்தில வந்தது?

அசோக்: பின் தளத்தில் தோழர் ரகுமான் ஜான் ஆட்கள் வெளியேறிய பின் அவர்களால் எழுதப்பட்டு… அந்த காலகட்டத்தில வெளிவந்தது. அது வந்து 86 நடுப்பகுதி என நினைக்கிறேன்.

தேசம்: வெளியேறினா பிறகு தான் அவை எழுதத் தொடங்கினம்.

அசோக்: பின் தளத்தில் தோழர் ரகுமான் ஜான், கேசவன் வெளியேறி பின் சில மாதங்களில் தோழர் கேசவன் கோவிந்தன் என்ற பெயரில் இந்த புதியதொரு உலகம் நாவலை எழுதுகிறார். உண்மையில் இது ஒரு கூட்டு முயற்சி. தோழர் ரகுமான் ஜான் பங்கும் அதில் நிறைய உண்டு. அவங்க வெளியேறின பிறகு 86 முற்பகுதியில் தீப்பொறி என்ற பத்திரிகையை வெளியிட்டாங்கள். பெப்ரவரி மார்ச்சில தீப்பொறி வந்திட்டுது என நினைக்கிறேன்.

தேசம்: அதுல என்ன குற்றச்சாட்டுகள் வருது. ஏதாவது?

அசோக்: அது வந்து பின்தளப் பிரச்சனைகள், கொலைகள் தொடர்பாக கடும் விமர்சனங்களோட அரசியல் சார்ந்துதான் அது வந்தது.

தேசம்: அதுல ஆதாரங்கள் வழங்கப்பட்டதா? யார் கொல்லப்பட்டது? என்ன நடந்தது…? எப்ப கொல்லப்பட்டது.

அசோக்: பெருசா ஆதாரங்கள் ஒன்றுமில்லை. புளொட்டினது அராஜகங்கள். முகுந்தனுடைய தனிநபர் பயங்கரவாத போக்குகள் பற்றி இருந்தது.

தேசம்: தாங்கள் பற்றிய சுய விமர்சனம்…?

அசோக்: ஒன்றுமே இல்லை. சுய விமர்சனம் ஒன்றுமில்லை.

தேசம்: பார்க்குறமாதிரி ஏட்டிக்கு போட்டியான,

அசோக்: ஏட்டிக்கு போட்டியானது என்று சொல்ல முடியாது. புளாட்டில் நடந்த பிரச்சனைகளை முன்வைத்தாங்க. ஆனால் எல்லாவற்றிக்கும் முகுந்தனே பொறுப்பு என்றே குற்றம் சுமத்தினார்கள். தங்களைப் பற்றிய விமர்சனம், சுயவிமர்சனம் எதையுமே முன் வைக்கவில்லை. வெளியேறுவதற்கான சுதந்திரம் எல்லாருக்கும் இருக்கு தானே. கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பான பூரணமான பட்டியல்கள் யாரிடமும் இல்ல தானே.

தேசம்: இல்ல பூரணமான பட்டியல் தேவையில்ல. அட்லிஸ்ட் யார் யார் கொல்லப்பட்டார்கள்…? என்னத்துக்காக கொல்லப்பட்டார்கள்…? ஏனென்றால் இன்றைக்கு வரைக்கும் அது பெருசா வெளியில் வராத விஷயம் அதான்.

அசோக்: ஆனால் சில தோழர்கள் மத்தியில் குறிப்பிட்ட விவரங்கள் இருக்கு. ஆனா அவை ஆவணப்படுத்தப்படவில்லை. உண்மையில் என்ன பிரச்சனை என்றால் இதுவரை யாரும் வெளிப்படையாக யார் யார் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற விபரங்களை வெளியிடவில்லை. ஒருசில பெயர்களை சொல்லுகின்றனர்.

தேசம்: அப்ப தோழர் ரீட்டா பிரச்சனை எப்போது நடந்தது… ?

அசோக்: நேசன், ஜீவன், பாண்டி வெளியேறிய பின் இந்த சம்பவம் நடக்கிறது. அதிருப்தி ஆகி இவங்க வெளியேறிட்டாங்க. வேறு சில தோழர்களும் வெளியேறிட்டாங்க. தீப்பொறி பத்திரிகை வந்தபிறகுதான் தங்களை தீப்பொறி குழுவினர் என ஐடின்டி பண்ணுறாங்க. வெளியேறியவர்கள் தொடர்பா தளத்தில் எந்த ஒரு சிக்கலும் இருக்கவில்லை. எங்களுக்கும் வெளியேறியவர்கள் தொடர்பில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்க வில்லை. புளொட் மிக மோசமான அமைப்பாக இருந்ததால தானே அவர்கள் வெளியேறினார்கள். அதால எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இருக்கவில்லை. வெளியேறுவதற்கான ஜனநாயகமும், சுதந்திரமும் அவங்களுக்கு இருக்குத்தானே. அதை எப்படி மறுக்கமுடியும் ?

ஆனால் வெளியேறிய நேசன், ஜீவன், கண்ணாடிச் சந்திரன் தொடர்பாக எங்களுக்கு விமர்சனம் இருந்தது. பின் தளத்தில் நடந்த அதிகார துஸ்பிரயோசங்கள், கொலைகள், தன்னிச்சையான போக்குகளை போன்று , தளத்தில் இவர்களும் செயற்பட்டவங்கதானே. இவை தொடர்பாக முன்னர் கதைத்திருக்கிறேன். சில தோழர்கள் எங்களிடம் ஒதுங்கி இருக்கப் போவதாக சொல்லி இருக்காங்க. அவங்களுக்கு சுதந்திரம் இருக்குத்தானே. ஆனால் நாங்க உட்கட்சிப் போராட்டம் பற்றி தள மகாநாடு நடத்துவது பற்றி நம்பிக்கை ஊட்டிய பின் தங்களின் எண்ணங்களை மாற்றிக் கொண்டாங்க.

இந்த காலகட்டத்தில்தான் திடீரென்று ஒரு நாள் பிரச்சனை வருகின்றது, ரீட்டா என்ற தோழரைக் காணவில்லை என்று சொல்லி. பிறகு உதவி ராணுவ பொறுப்பாளர் காண்டீபன் வந்து எங்களிட்ட சொல்றார் ரீட்டா என்ற தோழர் மீது பாலியல் பலாத்காரம் நடந்திருக்கிறது என்று சொல்லி. எங்களால முதல் இத நம்ப முடியல, அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கும் என்று. பிறகு பெண்கள் அமைப்பு தோழர்கள் உறுதிப்படுத்துகின்றனர். இச்சம்பவம் உண்மை என. நாங்க நினைக்கிறோம் வேறு யாராவது இப்படி செய்திருக்கலாம் என்று சொல்லி.

தேசம்: வேற அமைப்புக்கள்…?

அசோக்: வேற அமைப்புகள் அல்லது வேற நபர்கள் யாராவது செய்திருக்கலாம் என்ற எண்ணம்தான் எங்களுட்ட இருந்தது.

தேசம்: நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல அந்த கொக்குவில் பகுதி அந்தக் காலம் புளொட் கோட்டையாக இருந்த பகுதி.

அசோக்: ஓம். கோட்டையாக இருந்த இடம். எந்தப் பகுதியில் நடந்தது என்று ஞாபகமில்லை எனக்கு.

தேசம்: அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று சொல்லி தீப்பொறி தரப்பில இருந்து சொல்லப்பட்டிருக்கு இல்லையா…?

அசோக்: ஆரம்பத்தில் மறுத்தாங்க. பிறகு உண்மை என நிருபிக்கப்பட்டதும் வேறு யாரோ தங்களை மாட்ட இப்படி செய்ததாக சொன்னார்கள். காலப்போக்கில தங்கள் மீது பழி சுமத்த வேறு யாராவது செய்து இருக்கலாம் எண்டு ஒரு கதையைக் கொண்டு வந்தாங்கள். இப்போது இவங்க ஃபேஸ்புக்லகில் எழுதுறாங்க அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. கட்டுக் கதை என்று.

தோழர் ரீட்டாவை கண்ணை கட்டித்தான் கடத்தி இருக்கிறார்கள். பிறகு பாலியல் பலாத்காரம் நடந்திருக்கு. பெரிய டோச்சர் எல்லாம் நடந்திருக்கிறது. கதைத்த குரல்களை வைத்து ஒருவர் பாண்டி என்பதை அந்த தோழி அடையாளம் கண்டு விட்டா. அடையாளப்படுத்தின பிறகுதான் ஆகப்பெரிய பிரச்சினை தொடங்கினது. பெண்கள் அமைப்பில பெரிய கொந்தளிப்பு. பாண்டி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலை செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்கள்.

அதன் பின்தான் பாண்டியை இராணுவப்பிரிவு தேடத் தொடங்கியது. இந்த நேரத்தில் பாண்டியோடு, நேசன், ஜீவன் ஆட்களும் தலைமறைவாக ஒன்றாக இருந்தாங்க. இதனால் இவங்களையும் புளாட் இராணுவப் பிரிவு தேடத் தொடங்கினாங்க.

பாண்டி, ஜீவனோடயும் நேசனோடையும் தான் எங்கேயோ ஒளிந்து இருக்கிறதா தகவல் வருது. ஒரு தடவை போய் ரவுண்டப் பண்ணி இருக்காங்க, அதுல தப்பிவிட்டாங்கள். தொடர்ந்து பாண்டிய தேடும்போது, இவங்க மூணு பேரும் ஒன்றாக த்தான் இருக்காங்க. பிறகு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருந்தது. அதுல அவங்கள் பிடிபடல.

அதுக்கிடையில, அங்க திருநெல்வேலி கிராமத்தில விபுல் என்றொரு தோழர் இருந்தவர். அந்த தோழர் இவங்களோடு மிக நெருக்கமானவர். புளொட் இராணுவம் அவரை அரெஸ்ட் பண்றார்கள். அரெஸ்ட் பண்ணி அவரை அடித்து துன்புறுத்தினார்கள்… இவர்கள் ஒழிந்திருக்கும் இடத்தை காட்டும் படி. பிறகு அந்த கிராம மக்கள் அந்த தோழருக்கு ஆதரவாக போராட்டம் செய்ததால அவர் விடுதலை செய்யப்பட்டார். அந்தத் தோழர் இப்ப கனடாவில இருக்கிறார். அவர் நல்ல தோழர். அவர் இதுல சம்பந்தப்பட வில்லை.

தேசம்: அவர் இதுல சம்பந்தப்படல. இவங்களை தெரியும் என்டதால…

அசோக்: ஓம். ஓம். அந்தத் தோழர் புளொட்டுக்காக நிறைய தன்னுடைய வாழ்க்கையை இழந்தவர். நிறைய வேலை செய்தவர். திருநெல்வேலி பகுதியில் நிறைய தோழர்களை தங்க வைக்கிறதுக்கும், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து தந்த மிக அருமையான தோழர். இவங்களோட தொடர்பு இருந்ததால் இவங்கள தெரியும் என்று கைது செய்தாங்க. ஊராக்கள் சப்போட் அவருக்கு. ஆர்ப்பாட்டம் ஊர்வலம் எல்லாம் நடத்த, உடனே அவர விட்டுட்டாங்கள்.

தேசம்: இந்த மூன்று பேரும் தப்பி இப்ப இவை …

அசோக்: ஓம் கனடாவுல மூன்று பேரும் பாண்டியோட நெருக்கமாக தான் இருக்குறாங்க. பாண்டி மீது எந்த விமர்சனமும் இவர்களுக்கு இல்லை. கொஞ்சம் கூட இவங்களுக்கு மன உறுத்தல் இல்லை.

தேசம் : தோழர் ரீட்டாவின் பிற்கால வாழ்க்கையில்…

அசோக்: அவங்க இங்கதான் பிரான்சிலதான் வாழ்ந்தாங்க. மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டு, மனச்சிதைவுக்குள்ளாக்கப்பட்டாங்க. அவர், குடும்பத்தினராலும் – உறவினர்களாலும் கைவிடப்பட்ட நிலையில் ஜெகோவின் சாட்சியம் என்ற கிறிஸ்தவ நிறுவனம், அவரைப் பராமரித்து வைத்தியசாலையில் அனுமதிச்சாங்க. மனநல சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்தாங்க. இறுதியில் அவர்களும் கைவிட்டுட்டாங்க…

அதன் பின்னான காலங்களில் அவருக்குத் தெரிந்த பெண்கள் உதவினாங்க. காப்பாற்ற முடியல்ல. இளம் வயதிலேயே இறந்துட்டா…

தேசம்: ஏற்பட்ட அந்த அகோரமான சம்பவங்களால அவாவோட குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டு…

அசோக்: ஓம். குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டு மிகமிக துன்பப்பட்டு தான் அவங்க இறந்தாங்க. உண்மையில் நான் உட்பட எல்லாப் பேர்களும் குற்றவாளிகள், தண்டனை அனுபவிக்க வேண்டியவர்கள். இதைப்பற்றி கதைப்பதென்பது வேதனையானது.

தேசம்: அது மிக துரதிர்ஷ்டம் என. 85ம் ஆண்டு தான் முதல் பெண் போராளி ஷோபாட மரணமும் நிகழுது. இப்பிடி ஒரு பெண் போராளிகளாலேயே துன்புறுத்தப்படுறா.

அசோக்: பெரிய வேதனை. அந்த அவலத்தை, துன்பத்தை, கொடுரத்தை உணர்கின்ற சூழல் இன்று இல்ல.

தேசம்: இதற்கு பிற்பட்ட காலத்தில இதுல சம்பந்தப்பட்ட ஒருவர் தான் அதுல ஈடுபடல என்டு கடிதத்தில கையெழுத்து வாங்கினதாக;

அசோக்: ஓம். அந்தப் பாண்டி என்றவர் இதில சம்பந்தம் இல்லை என்று ரீட்டா தங்களுக்கு கடிதம் எழுதித் தந்ததாக. ஃபேஸ்புக்ல ஜீவன் நந்தா கந்தசாமி, நேசன் தான் எழுதியிருந்தவங்க. இச்சம்பவம் தொடர்பாக ஜீவனும், நேசனும் மிக மோசமான பொய்களையும், புனைவுகளையும் எழுதினாங்க. இவர்களின் இந்த செயலை என்னோடு அரசியல் முரண்பாடு கொண்ட பலர் ஆதரித்தாங்க. ஜீவன், நேசன், பாண்டி ஆட்களை விட இவர்கள் மிக ஆயோக்கியர்கள். இவரகளின் பெயர்களை சொல்லமுடியும். வேண்டாம்.

தேசம் : அதே மிக மோசமானது.

அசோக்: ஓ. மோசமானது தான். ஒருபெண் இப்படி கொடுப்பாங்களா. இப்படி எழுதுவது எவ்வளவு மோசமான சிந்தனையும் ஆணாதிக்கதனமும் பாருங்க. அப்படி குடுப்பாங்களா ஒரு கடிதம்…

வட்டுக்கோட்டை ‘மாவடி சிறி’யின் படைப்புகள் – நாடகங்கள் ஒரு பகிர்தல்

நாடகத்துறையில் அண்மைக் காலமாக வளர்ந்து வருகின்ற ஒரு கலைஞர் மாவடி சிறி என்று அறியப்பட்ட ஏ ஆர் சிறிதரன். யாழ் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த அவர் நான் கற்ற யாழ் வட்டு இந்துக் கல்லூரியிலேயே கற்றவர் எனப்தும் எனக்கு சில ஆண்டுகள் சீனியர் என்பதாலும் எனக்கு அவர் மீது எப்போதும் ஒரு ஈடுபாடு ஏற்படக் காரணமாக இருந்துள்ளது.

அன்றைய காலகட்டங்களில் வடக்கில் பஷனைக் கொண்டுவருவது யாழ் வட்டுக்கோட்டையும் மானிப்பாயும். அதற்குக் காரணம் இப்பிரதேசங்களில் காணப்பட்ட கிறிஸ்தவர்களின் அளுமை. யாழ்ப்பாணக் கல்லூரி. அதுவே தமிழ் பிரதேசத்தின் முதல் பல்கலைக்கழகமாகவும் மாறியது. கலைத்துறையைப் பொறுத்தவரை சோமசுந்தரப் புலவர் குறிப்பிடத்தக்கவர்.

யாழில் சனத்தொகை செறிந்த பிரதேசங்களில் ஒன்றாகவும் வட்டுக்கோட்டை இருந்துள்ளது. அதுவொரு தனியான தேர்தல் தொகுதியுமாகும். வட்டுக்கோட்டை இல்லாமல் இலங்கைத் தமிழரின் வரலாற்றை யாரும் எழுதிவிட முடியாது. இலங்கையின் ஒரேயொரு தமிழ் எதிர்க்கட்சித் தலைவரை தந்த மண். போராட்ட காலங்களில் ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக இருந்த மண். இராணுவ மற்றும் கடற்படை முகாம்களில் இருந்து சில மைல் தூரத்தில் இருந்த படியால் பாரிய இழப்புகளை சந்திக்காத மண்.

ஆனால் விடுதலைப் போராட்ட அரசியலில் மிகவும் அரசியல் மயப்பட்ட மண். முதலாவது அரசியல் படுகொலை – சுந்தரம் படுகொலை வட்டுக்கோட்டையிலேயே நடந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் புதிய பாதை சுந்தரத்தை படுகொலை செய்தனர். வட்டுக்கொட்டையிலேயே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மிகக் காட்டுமிராண்டித்தனமாக தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த பள்ளிமாணவர்களான ஆறுவரை படுகொலை செய்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்திற்கும் இடையே நடந்த மோதலில் வட்டுக்கோட்டையில் மட்டுமே படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்க போராளிகளின் உடல்கள் மக்களால் பொறுப்பேற்கப்பட்டு கௌரவமான முறையில் தகனம் செய்யப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் பெயர்பெற்ற அமைப்புகள் எல்லாம் இருக்கின்ற போதும் தனியொருவனாக சாகசம் புரிந்து தாக்குதல்களை நடத்திய ரெலி என்கின்ற இயக்கத்தின் தலைவர் ஜெகனின் ஊரும் வட்டுக்கோட்டை. அவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதும் வட்டுக்கோட்டையில் தான்.

சாதியத்திற்கு எதிராக முதல் முதல் ஆயதம் ஏந்தியதும் வட்டுக்கோட்டையில் தான். ஆனாலும் இன்று சாதியம் மையங்கொண்டிருப்பதும் வட்டுக்கோட்டையில் தான்.

ஒரு காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய வட்டுக்கோட்டையில் இன்றும் மலாயன் பென்சனியர்களை அதிகம் காணலாம். வட்டுக்கோட்டைக்கும் மலேசியாவுக்கும் இன்றும் நெருங்கிய உறவு உள்ளது.

இது வட்டுக்கோட்டை பற்றிய என் மனப்பதிவுகளில் இருந்து குறிப்பிட்ட சில. அப்பேற்பட்ட பிரதேசத்தில் இருந்து வருகின்ற ஒரு எழுத்தாளனோ படைப்பாளியோ அரசியலற்ற ஒருவராக இருப்பது முடியாத காரியம். அந்த வகையில் மாவடி சிறி ஒரு அரசியல், சமூக படைப்பாளியே. அதனாலோ என்னவோ அவருடைய படைப்புகளில் கலையையும் கடந்து அரசியல் வெளிப்பட்டுவிடுகின்றது. அதனால் படைப்பின் கலையம்சத்திற்கும் அதன் அரசியல், சமூக கருத்தியலுக்கும் இடையேயான சமநிலை மாறிப்போய்விடுகின்றது.

2014 முதல் இதுவரை 5 நாடகங்களை மாவடி சிறி மேடையேற்றி உள்ளார். கனவுகள் மெய்ப்பட வேண்டும், நல்லதோர் வீணை செய்து, உன் பார்வை ஒருவரம், கும்மியடி பெண்ணே கும்மியடி, அக்கினிக்குஞ்சு ஆகியவற்றோடு அண்மையில் கொரோனாவுடன் தொடர்புபடுத்தி ஒரு மணிநேர படத்தையும் தந்திருந்தார். மாவடி சிறி கலையை கலைக்காக படைப்பவரல்ல. கலையை மக்களுக்காக படைப்பவர். அவருடைய படைப்புகள் மக்களின் வாழ்நிலையை பிரதிபலிக்கும் விதத்தில் அமைக்கப்படுகின்றது.

ஆனால் பல சந்தர்ப்பங்களில் அவருடைய அரசியல் சமூக கருத்தியல் அவருடைய கலையுணர்வுச் சமநிலையை மீறி பிரச்சாரச் சாயலை ஏற்படுத்திவிடுகின்றது. அதற்கு அவர் ஒரு சமூக செயற்பாட்டாளராக இருப்பதும் காரணம் எனலாம். பன்முக ஆளுமை மிக்க மாவடி சிறி திங் ருவைஸ் என்ற அமைப்பை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மோலாக நடத்தி வருபவர். ஒன்றினது தாக்கம் அவர்களை அறியாமலேயே மற்றைய அம்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது. மாவடி சிற புலம்பெயர்ந்த வாழ்வின் பல்வேறு இன்னல்கள் தடைகள் மத்தியிலும் இவ்வாறான படைப்புகளை தொடர்ந்தும் வழங்கிக் கொண்டிருப்பதற்கு அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன் அவருடைய குழவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

‘சமூக செயற்பாட்டில் படைப்பாளர் பற்றிய பகிர்தல் வெளி’ என்ற தலைப்பில் செம்முகம் ஆற்றுகைக் குழு சூம் ஊடாக இணைய வெளி கலந்துரையாடல் ஒன்றை நாளை டிசம்பர் 30 2021இல் இலங்கை நேரம் மாலை 6:30 ற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் எழுத்தாளர்கள் மீரா பாரதி, யதார்த்தன், செம்முகம் ஆற்றுகைக் குழு இயக்குநர் சத்தியசீலன், நாடகச் செயற்பாட்டாளர் தருமலிங்கம் புலவர் சிவநாதன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர். மாவடி சிறி இறுதியில் ஏற்புரை நிகழ்த்துவார்.

பாகம் 21: சந்ததியார் தீப்பொறி உறுப்பினரா? ஏன் தீப்பொறியினர் சந்ததியாரை பலிக்கடாவாக்கினர்?

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 21 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 10.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 21:

தேசம்: நாங்கள் இப்போது 84, 85 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தோழர் சந்ததியர் வெளியேறினது சம்பந்தமாக கதைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த முரண்பாடுகளை நாங்கள் பார்க்கும் போது இவர்கள் வெளியேறும்போது வைத்த காரணங்கள் முதலே அது சம்பந்தமாக மற்றவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக வெளியேறுகின்ற தன்மைகள், உட்கட்சிப் போராட்டம் நடக்காதது சம்பந்தமாக எல்லாம் கதைத்திருக்கிறோம்.சந்ததியார் வெளியேறுவதற்கு முதல் நடந்த மத்திய குழு கூட்டத்தில் சில மத்திய குழு உறுப்பினர்கள் தாங்கள் வெளியேறுவதாக அறிவிக்கிறார்கள்.
அவர்கள் வெளியேறிய பிறகுதான் சந்ததியார் கடத்தப்படுகிறார்.

அசோக்: ஓம். தோழர்கள் ரகுமான் கேசவன் வெளியேறி கொஞ்ச நாட்களிலேயே தோழர் சந்ததியார் கடத்தப்படுகிறார்…

தேசம்: கூட்டத்தை தொடர்ந்து தான் கடத்தப்படுகிறார்?

அசோக்: ஓம். இந்த மத்திய குழு கூட்டத்திற்கு பின் வெளியேறிய தோழர்கள் ரகுமான் ஜான், கேசவன், கண்ணாடி சந்திரன் என்னுமொரு தோழர் பெயர் ஞாபகம் இல்லை. அவரும் சேர்ந்து மான மதுரை என நினைக்கிறேன் அங்கு தலைமறைவாக போய் இருந்தாங்க. இதன் பிற்பாடுதான் தோழர் சந்ததியார் கடத்தப்படுகிறார்.

தேசம்: இதில தெளிவில்லாமல் இருக்கு என்ன என்றால் சந்ததியார் ரெண்டு மூன்று கூட்டங்களுக்கு கலந்துகொள்ளவில்லை. இவர்கள் சந்ததியர் வராமைக்கான காரணத்தை கேட்கிறார்கள். அதை தொடர்ந்து சில குற்றச்சாட்டுகள் வைக்கிறார்கள் படுகொலைகள் சம்பந்தமாக. ஆனால் அதற்கான ஆதாரங்கள் பெருசாக சொல்லப்படவில்லை. இப்ப இந்த வெளியேற முற்பட்ட உறுப்பினர்களுக்கும் சந்ததியாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லையா? இந்த வெளியேற்றம் அவர்களுடன் இணைந்த கூட்டான வெளியேற்றம் இல்லையா?

அசோக்: உண்மையில் நடந்தது என்ன என்று கேட்டால் தோழர் சந்ததியார் இந்த மத்திய குழுக் கூட்டம் நடப்பதற்கு நான்கைந்து மாதங்களுக்கு முன்னரே அவர் வெளியேறிவிட்டார். அவர், டேவிட் ஐயா, சரோஜினிதேவி, சண்முகலிங்கம் எல்லோரும் வெளியேறி அண்ணாநகரிலேயே இருக்கிறார்கள். தோழர் சந்ததியாருக்கும் டேவிட் அய்யாவுக்கும் மிக நெருக்கமான உறவு இருந்தது. இது காந்திய அமைப்பு காலத்திலிருந்து தொடர்வது. அண்ணாநகரில் டேவிட் ஐயாவும், சந்ததியாரும் ஒன்றாகத்தான் இருந்தவர்கள். தோழர் ரகுமான் ஜான் ஆட்கள் வெளியேறி மானாமதுரைக்கு போய்விட்டார்கள்.

உண்மையிலேயே நீங்கள் கேட்ட கேள்வி நியாயமானது. இவர்கள் வெளியேறி போனதற்கு பிற்பாடு சந்ததியாருடன் உறவு இருந்ததோ தெரியாது. ஆனால் உறவு இருந்திருந்தால் இவர்கள் வெளியேறும்போது சந்ததியாரையும் கூட்டிக் கொண்டு போய் இருப்பாங்க. ஏனென்றால் இவங்கள் வெளியேறினது முகுந்தனுக்கு தெரியவர நிச்சயமாக சந்ததியார் மீது சந்தேகம் வரும்.

உண்மையிலேயே அப்படி உறவு இருந்திருந்தால் இவர்கள் கூட்டிக்கொண்டு போய் இருக்க வேண்டும். அல்லது அவரின் பாதுகாப்பு விடயத்தில் கவனம் செலுத்தி இருக்கவேண்டும். இவங்கள் மத்திய குழுக் கூட்டம் நடந்து இரண்டு மூன்று நாட்களுக்கு நாளைக்குப் பிறகுதான் வெளியேறுறாங்கள். அதற்குப் பிறகுதான் எங்கள் மேல சந்தேகம் வந்து எங்களை தளத்துக்கு அனுப்பாம வைத்திருந்து… அதைப் பற்றி முதலே கதைத்திருக்கிறேன். ஒரு மாதத்துக்கு பிறகுதான் தளத்துக்கு அனுப்பினார்கள். அப்ப சந்ததியார் விடயத்தில் பாதுபாப்பில் இவர்கள் கவனம் செலுத்தி இருக்கவேண்டும்.

தேசம்: இந்த வெளியேற்றத்தில் கூட சந்ததியார், சரோஜினி, சண்முகலிங்கம் மூன்று பேரும் வெளியேறிட்டினம். ஆனால் அவைக்கு எதிரான எந்த ஒரு துன்புறுத்தலும் இந்தக் கூட்டம் நடக்கும் வரைக்கும் நடக்கேல.

அசோக்: நடக்கேல. ஆனால் அவங்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் நடந்தது.

தேசம்: சந்ததியார் வேறு அமைப்புகளோடு சேரவோ அல்லது தான் புதிய அமைப்பை உருவாக்குவதற்கோ ஏதாவது முயற்சி எடுத்த மாதிரி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

அசோக்: இல்லை இல்லை. அவங்க மிக அமைதியாக தான் அண்ணாநகரில் இருந்தவங்க. டேவிட் ஐயா, சந்ததியார், சரோஜினிதேவி, சண்முகலிங்கம் அவங்க பூரணமாக புளொட்டிலிருந்து ஒதுங்கிட்டார்கள். அவர்களுக்கு புளொட்டில் எந்த அரசியல் ஈடுபாடும் இருக்கவில்லை. புளொட்டிக்கு எதிராக இந்த நடவடிக்கைகளிலும் அவங்க ஈடுபடவில்லை. அவர்கள் ஒதுங்கி அமைதியாகத்தான் இருந்தாங்க.

தேசம்: அதற்கு பிறகு இவர்கள் வெளியேறுகிறார்கள் ஆனால் சந்ததியாரை அழைத்துக் கொண்டு செல்லேல. இவர்களுக்கும் உறவு இருந்தது தொடர்பாக தெரியாது. அவர்கள் எங்கேயாவது பதிவு செய்திருக்கிறார்களா தீப்பொறி அல்லது…

அசோக்: தங்களோட தீப்பொறியில் சந்ததியார் இருந்தது என்று நிறைய இடத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். தீப்பொறி தங்களுடைய உறுப்பினராக சந்ததியாரை அடையாளப்படுத்துகிறார்கள்.

தேசம்: ஆனால் அதற்குள் ஒரு முரண்பாடு வருது எல்லோ. சந்ததியார் தீப்பொறி யோடு இருந்திருந்தால் அவர்கள் ஒன்றாக தானே போயிருக்க வேண்டும்.

அசோக்: இதுல தான் பெரிய சிக்கல் என்ன என்று கேட்டால் உண்மையிலேயே இவங்கள் சந்ததியார் தீப்பொறியில் இருந்தார் என்று அடையாளப்படுத்துகிறார்கள். எந்த அடிப்படையில் சொல்கிறார்களோ தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் இவங்கள் வெளியேறும்போது சந்ததியாரையும் கூட்டிக்கொண்டு போயிருக்கவேண்டும். ஏனென்றால் இந்த வெளியேற்றத்துக்குப் பிறகு அவங்களுக்கு தெரியும் சந்ததியாருக்கு பிரச்சனை வரும் என்று. ஆனால் இவங்கள் கூட்டிக்கொண்டு போகவே இல்லை. சந்ததியர் அங்க சுதந்திரமாக திரியுறார். ஆனால் அவருக்கு எதிரான பிரச்சாரங்கள் முகுந்தன் தரப்பினாரால் வைக்கப்படுகின்றது. பிறகு நாங்கள் நாட்டுக்கு போனதற்குப் பிறகு தான்…

தேசம்: அந்த விடயத்துக்கு பிறகு வாரேன். இது ஒரு சிக்கலான விடயம். மேலும் தெளிவுபடுத்திக் கொள்ளுவோம். டேவிட் ஐயா, சரோஜினி ஒரு இடத்தில் இருக்கிறீனம் என்றால் டேவிட் ஐயாவின் ஒரு நேர்காணலில் அவர் சொல்லுறார் உமாமகேஸ்வரன் தலைமையிலான புளொட் அமைப்பு வந்து ஒரு சர்வாதிகார போக்கை கொண்டிருக்கிறது என்று சொல்லுகிறார். தான் அதை உமாமகேஸ்வரனுக்கும் சொன்னதாகவும் இது சம்பந்தமாக மற்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் இருந்ததா? சந்ததியார் இருக்கிறார், டேவிட் ஐயா இருக்கிறார் முக்கியமான ஆட்கள் இருக்கினம். தோழர் ரகுமான் ஜான், தோழர் நேசன் நீங்கள் .. எனக்கு இன்னும் அதற்கான… எனக்கும் விளங்கவில்லை ஒரு பலமான முற்போக்கு சக்திகள் இருந்தும் எப்படி ஒரு பலவீனமான உமாமகேஸ்வரன் அந்த அதிகாரத்தை கைப்பற்றுகிறார்

அசோக்: டேவிட் ஐயா முரண்பட்டுக் கொண்டு போகும்போது அந்த முரண்பாட்டுக்கான காரணங்களை அவர் நிச்சயமாக சந்ததியாருக்கு சொல்லியிருப்பார். பேட்டியிலும் அதைத்தான் சொல்லுறார். நான் சொல்வது என்ன என்று கேட்டால் ஆரம்பத்துல டேவிட் ஐயா வெளியே போகும்போது ஒரு சில குற்றச்சாட்டுகளை வைக்கிறார். டேவிட் ஐயா வைத்த குற்றச்சாட்டுக்கள் பற்றி பின் தளத்தில் இருந்த முக்கிய தோழர்கள் எல்லோருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். ஆனால் யாரும் அதைப் பற்றி அக்கறை கொள்ளாதது மிக மிக கவலைக்குரியதுதான். அந்தக் காலகட்டத்திலேயே நாங்கள் எல்லோரும் தீர்க்கமான முடிவெடுத்து இவ்வாறான பிரச்சனைகளுக்கு முடிவு கண்டிருக்கவேண்டும்.

ஆனால் டேவிட் ஐயா முன்வைத்த குற்றச்சாட்டுகளை புளொட் அமைப்பின் பிரச்சனையாக பார்க்காமல் டேவிட் ஐயாவின் பிரச்சனையாக குறுக்கி பார்த்ததின் விளைவுதான் அது என நினைக்கிறேன். இது புளொட்டில் தொடர்ச்சியாக நான் அவதானித்த விடயம்தான். மற்றவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் முரண்பாடுகள் பற்றி யாரும் அக்கறை கொள்ள மாட்டார்கள். தனி நபர் சார்ந்த விடயமாக, அவருடைய பிரச்சனையாக, அதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரிகடந்து சென்றுவிடும் பழக்கம் எல்லோரிடமும் இருந்தது. அது இயக்கத்தை பாதிக்கும் சீர்குழைக்கும் என நாங்க நினைப்பதில்லை. எங்களின் இருப்பும் தனிநபர் சார்ந்த எங்களின் அபிலாசைகளும்தான் இதற்கு காரணம்.

தேசம்: சந்ததியாருக்கு முதலே டேவிட் ஐயா வெளியேறிவிட்டாரா?

அசோக்: ஓம் டேவிட் ஐயா முதலே வெளியேறிவிட்டார்.

தேசம்: எவ்வளவு காலத்துக்கு முதல்?

அசோக்: நீண்டகாலத்துக்கு முதலே முகுந்தனோடு முரண்பட்டு வேலை செய்ய முடியாது என்று டேவிட் ஐயா போயிட்டார்.

தேசம்: டேவிட் ஐயாவின் உடைய குறிப்பின்படி எண்பத்தி மூன்றாம் ஆண்டு தாங்கள் மட்டக்களப்பு சிறை உடைப்பு எல்லாரும் தமிழ்நாட்டுக்கு போன பிறகு அவர் ஒரு ஆறு மாதம் செய்கிறார். அப்ப கிட்டத்தட்ட எண்பத்தி நான்கு தொடக்கத்திலேயே அல்லது 83 கடைசியிலேயோ போயிட்டார்.

அசோக்: நான் நினைக்கிறேன் டேவிட் ஐயா 84 கடைசியில்தான் வெளியேறிப் போய் இருப்பார் என. அதுக்குப் பிறகு புளொட்டோட தொடர்பு இருந்தது அவருக்கு. உத்தியோக பூர்வமாக எந்த வேலையும் செய்யவில்லை. காலப்போக்கில் முற்றாக புளொட்டினுடைய தொடர்பை விட்டுவிட்டார்.

தேசம்: உங்களுக்கு அவர் வெளியேறினது தெரியுமா?

அசோக்: டேவிட் ஐயா வெளியேறினது தெரியும்.

தேசம்: அப்போ நீங்கள் தோழர் ரகுமான் ஜான் ஆட்களுடன் அல்லது மற்ற தோழர்களுடன் கதைக்கவில்லையா இதைப்பற்றி…?

அசோக்: பெருசா இதைப்பற்றி கதைக்கவில்லை. உண்மையிலேயே அது பெரிய பிழைதான். இன்னொரு சிக்கல் என்னவென்றால் கம்யூனிகேஷன் பிரச்சினையாக இருந்தது அந்த நேரம். நாங்கள் நாட்டிலிருந்து போற ஆட்கள் தானே. நிறைய விடயங்கள் தளத்தில் இருந்த எங்களுக்கு காலம் கடந்துதான் தெரியவரும். பின்தளம் செல்லும் போதும் இப்பிரச்சனைகள், முரண்பாடுகள் பற்றி யாரும் எங்களோடு கதைப்பதில்லை. இதுபற்றி முன்னரே நிறைய கதைத்துள்ளேன். உண்மையிலேயே நாங்க நிறைய தவறுகள் விட்டிருக்கிறம். ஆரம்ப காலத்தில் இந்த தவறுகளை பற்றி நாங்க கவனம் கொள்ள தவறிட்டம்.

தேசம்: அந்த நேரம் இப்போ உள்ள தொலைத்தொடர்பு வசதிகள் இல்லை என்பது உண்மைதான். நீங்கள் அங்கே இருந்து சில மத்தியகுழு கூட்டங்களுக்கு வரேக்க மத்திய குழுக் கூட்டத்துக்கு வெளியிலேயும் சில கருத்தாடல்கள் நடந்திருக்கும் தானே… அதுகளிலும் இது சம்பந்தமாக எதுவும் முக்கியத்துவம் பெற இல்லையா? தோழர் ரகுமான் ஜான் யாரும் இதைப் பற்றி உங்களுடன் கலந்துரையாடவில்லையா.

அசோக்: டேவிட் ஐயாவின் வெளியேற்றம் எங்களுக்குப் பெரிய பாதிப்பை தரவில்லை. நான் முன்னர் சொன்ன மாதிரி டேவிட் ஐயாவின் பிரச்சனையை வெளியேற்றத்தை அவரின் தனிப்பட்ட பிரச்சனையான நாங்க பார்த்ததன் விளைவுதான் அது. அத்தோடபுளாட்டின் முக்கிய ஆளாக இல்லை என்ற நினைப்பும் எங்களிடம் இருந்தது. டேவிட் ஐயாவின் குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் இயக்கத்தின் ஒட்டு மொத்த பிரச்சனையாக நாங்க காணத் தவறிட்டம். இப்ப யோசிக்கும் போது மற்றவர்களை குற்றம் சுமத்துவதில் பிரயோசனம் இல்லைப் போல் தெரிகிறது. எங்களிடம் நிறைய பிரச்சனைகள் தவறுகள் இருந்திருக்கு.

தேசம்: காந்தியத்தில் முக்கியமான ஆள். ஆனால் அவர் வைக்கும் குற்றச்சாட்டு மிகப் பயங்கரமானது. அந்த நேரமே அதற்கு எதிரான ஒரு நடவடிக்கை எடுத்திருந்தால் இது நிச்சயமாக தடுக்கப்பட்டு இருக்கலாம். டேவிட் ஐயாவை கடத்தினவர்களுக்கு டேவிட் ஐயா சந்ததியார முழு பேரையும் தெரியுமா.

அசோக்: தெரிந்திருக்க வில்லையா அல்லது முகுந்தனின் கட்டளையை தவறாக புரிந்து கொண்டார்களா தெரியல்ல. டேவிட் ஐயா அந்த நேர்காணலில் ஒரு இடத்தில் சொல்லுகிறார் தன்னை வாகனத்தில் கடத்திக்கொண்டு போகிறார்கள். போகும்போது இடையில அந்த வாகன சாரதிதான் டேவிட் ஐயாவின் குரலை அடையாளம் காண்கிறார் இவர் டேவிட் ஐயா என்று. ஆனால் இவர்கள் உண்மையாக கடத்த வந்தது சந்ததியாரை. கடத்திக் கொண்டு போன உறுப்பினர்களுக்கு சந்ததியார் யாரென்று தெரியாமல் கடத்தினார்களா அது தெரியல்ல. சங்கிலி கந்தசாமி போகவில்லை. அவரின்ர உளவுப்படைதான் போனது. அந்த ட்ரைவர் இருந்தபடியால் தான் விட்டுட்டு போனவர்கள் இல்லாவிட்டால் அவரையும் மேடர் பண்ணி இருப்பார்கள்.

தேசம்: சந்ததியார் வெளியேறி எவ்வளவு காலத்திற்கு பிறகு அவர் கொலை செய்யப்படுகிறார்? அவர் கொலை செய்யப்பட்ட விடயம் எப்போது தெரிய வருகிறது?

அசோக்: நான் நினைக்கிறேன் 85 கடைசிப் பகுதியில் கொலை செய்யப்படுகிறார் என்று. மத்திய குழுக் கூட்டம் முடிந்து இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு கொலை செய்யப்படுகிறார் என நினைக்கிறேன்.

தேசம்: கடத்தப்பட்ட இரண்டு மூன்று மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு இருக்குறார்?

அசோக்: இல்லை. மத்திய குழுக் கூட்டம் நடந்த பிற்பாடு அவர் சுதந்திரமாக அண்ணாநகரில் தான் இருக்கிறார். அதுக்குப் பிறகுதான் கடத்தப்படுகிறார்.

தேசம்: மத்திய குழுக் கூட்டத்திற்கு பிறகு தானே கடத்தப்படுகிறார்?

அசோக்: மத்தியகுழு கூட்டத்திற்கும் அவர் கடத்தப்படுவதற்கு இடையில் நான் நினைக்கிறேன் 2, 3 மாதம் இடைவெளி இருக்கும். சரியாக காலத்தை என்னால் நினைவு படுத்தமுடியாமல் உள்ளது. கடத்தப்பட்டு ஒரு வாரத்துக்குள்குள்ளேயே கொலை செய்யப்பட்டு விட்டார் என நினைக்கிறேன். இதனோடு சம்பந்தப்பட்ட பலர் இன்னும் இருக்கிறார்கள். கடத்தப்பட்டு என்ன நடந்தது என்றே தெரியாது. எப்ப கொலை செய்தார்கள் என்ன நடந்தது ஒன்றுமே தெரியாது தானே.

தோழர் சந்ததியார் கடத்தப்பட்ட உடனேயே டேவிட் ஐயா பொலிசில் என்ரி போட்டுட்டார், சந்ததியாரை காணேல என்று . காணேல என்று சொன்னதுமே விளங்கிவிட்டது புளொட் தான் கடத்தி விட்டது என்று சொல்லி. பிறகு அப்படியே போனது தான் போலீசாரும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

தேசம்: அந்த நேர்காணலில் டேவிட்டையா சொல்லுகிறார் தன்னைக் கடத்த வந்தவர்கள் தன்னை கடத்தவில்லை உன்னைத்தான் கடத்த வந்தார்கள் ஆகவே நீ பாதுகாப்பாக இரு என்று சந்ததியாரிடம் சொல்லுறார். அப்படி இருந்தும் அந்த எச்சரிக்கையை மீறி இவர் திரிகிறார். அது எப்படி புளொட்டில் படுகொலைகள் நடக்கிறதை நீங்கள் முழுமையாக நம்பி இருந்தால் டேவிட் ஐயாவை கடத்தி போட்டு விடுவித்திருக்கிறார்கள் அதைத் தொடர்ந்து அவர் கவனம் இல்லாமல் வெளியில் திரிந்து.

அசோக்: டேவிட் ஐயா சந்ததியாரை கவனமாக பாதுகாப்பாக இருக்கும் படி சொல்லியுள்ளார். அதுல கொஞ்சம் கவனம் இல்லாமல் தான் இருந்திருக்கிறார் என நினைக்கிறேன். அதற்குப் பிறகு தோழர் சந்ததியாருக்கு வேண்டிய ஒருவர் கஷ்டத்தில் இருப்பதாக தெரிவித்து தான் சந்ததியாரை வர வைக்கிறார்கள். திட்டமிட்டுத்தான் வர வைக்கிறார்கள். டெலிபோன் பண்ணினதும் நம்பிட்டார் என்று நினைக்கிறேன். நான் கேள்விப்பட்டது அப்படித்தான் நம்பிக்கையான ஒரு ஆளை கொண்டு டெலிபோன் பண்ணி வெளியில வரவழைத்து தான் கடத்தினார்கள் என்று சொல்லி.

தேசம்: நான் நினைக்கிறேன் இந்த தகவல்கள் கூடுதலாக சரோஜினி அக்காவுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கு.

அசோக்: சரோஜினி அக்காவுக்கு தெரியும். சண்முகலிங்கத்துக்கும் தெரியும் அவர் இறந்து போய் விட்டார். ஒரே ஒரு ஆள் சரோஜினி அக்கா தான். ஏனென்றால் சரோஜினி அக்கா தான் அந்த காலகட்டத்தில் டேவிட் ஐயா, தோழர் சந்ததியார் ஆட்களோடு நெருக்கமாக இருந்தவங்க. ஆனால் தோழர் சந்ததியாரின் கடத்தலோடும், கொலையோடும் சம்பந்தப்பட்ட, இந்த விடயம் தெரிந்த பலர் இப்போதும் உயிருடன் இருக்காங்க. அவங்களின்ற மனச்சாட்சி அவங்களை உறுத்தாது என நினைக்கிறன். அவங்க வாய் திறக்க மாட்டாங்க.

தேசம்: தீப்பொறி உடனான தொடர்புகளையும் அவா தான் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். இப்ப மத்திய குழுக் கூட்டம் நடந்து முரண்பாடுகள் ஏற்பட்டு அவர்கள் வெளியேறுகிறார்கள் தீப்பொறி சார்ந்த நபர்கள். அப்ப தீப்பொறி என்று பெயர் வைக்கவில்லை என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு ஒன்றரை மாதங்களுக்கு பிறகு நீங்கள் தாயகத்திற்கு திரும்புகிறீர்கள். இந்தக் காலகட்டத்தில் உங்களுக்கு பாதுகாப்பு நீங்கள் தாயகத்தில் இருந்து இங்கு வந்த உடனேயே உங்களை கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததா?

அசோக்: எங்களுக்கு படகு ஒழுங்கு செய்து தரப்படவில்லை.

தேசம்: அது திரும்பிப் போவதற்கு. மத்திய குழுக் கூட்டத்துக்கு பின் தளத்துக்கு வரும்போது நீங்கள் கண்காணிக்கப்பட்டீர்களா?

அசோக்: அதுல எந்த கண்காணிப்பும் இருக்கவில்லை. நோர்மலா தான் இருந்தது. அதற்குப் பிற்பாடு நடந்த விடயங்க ள்தானே எல்லாம். மத்தியகுழு கூட்டம் பிரச்சனை வெளியேற்றம் இவை எல்லாம்.. அதன்பின்தான் எங்களுக்கு நெருக்கடி தொடங்குகிறது.

தேசம்: அதற்குப் பிறகு ஒன்றரை மாதங்கள் ஏற்பாடு செய்து தரேல.

அசோக்: ஒன்றரை மாதங்கள் இருக்காது என நினைக்கிறேன் ஒரு மாதம் இருக்கும். கரையில் நிற்கும் போதுதான் கண்காணிப்பு போடப்பட்டது. பிறகு அவர்கள் ஒழுங்கு பண்ணிக் தந்துதான் நாட் டிக்கு தளத்திற்கு போன நாங்கள். இது பற்றி முன்னர் கதைத்துள்ளோம்.

தேசம்: அப்போ உங்களுக்கு அச்ச உணர்வு வரேல்லையா. கடலுக்குள்ளே ஏதாவது? உங்களை அனுப்பி போட்டு இலங்கை ராணுவத்துக்கு தகவல் கொடுத்து இருந்தால்…

அசோக்: அப்படி எங்களுக்கு அச்சம் இருக்கல. எங்களோடு வந்த ஓட்டி மிக நம்பிக்கையான ஆள். ஓட்டி மாதகலைச் சேர்ந்தவர். . குமரனுக்கு மிக நெருக்கமான ஒரு ஆள்.

தேசம்: யார் யாரெல்லாம் போனது.

அசோக்: நான், ஈஸ்வரன், முரளி, குமரன்.

தேசம்: இப்ப வந்து எண்பத்தி ஆறு முற்பகுதி இலங்கைக்கு போகிறீர்கள். 85 கடைசிப் பகுதியில் தான் போறோம்.

இளைஞர்களின் கூலிப்படைக் கலாச்சாரம் முடிவுக்கு வரவேண்டும் – லிற்றில் எய்ட் ஒளிவிழாவில் வண பிதா எஸ் கே டானியல் சிறப்புரை

தமிழ் இளைஞர்களின் கூலிப்படைக் கலாச்சாரம் முடிவுக்கு வரவேண்டும் என லிற்றில் எய்ட் அமைப்பில் நத்தார் தினத்தையொட்டி நடந்த ஒளிவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வண பிதா எஸ் கே டானியல் தெரிவித்தார். இன்றைய இளைஞர்கள் பணத்துக்கு அடிமையாகி கூலி அடிமைகளாக மாறும் கலாச்சாரம் முடிவுக்கு வரவேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்த வண பிதா டானியல் எல்லா சமயங்களும் அன்பையே போதிக்கின்றன, யேசுபிரான் அன்பின் அவதாரமாகவே பிறந்து இந்த உலகத்தை காக்கின்றார் என்றும் அன்பையும் காருண்யத்தையும் உடையவர்கள் யேசுவின் சகோதரர்கள் ஆவீர்கள் என்றும் தெரிவித்தார்.

லிற்றில் எய்ட் மாணவிகளாலும் மாணவர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். லண்டனில் இருந்து தாயகம் செய்னிறருந்த லிற்றில் எய்ட் அமைப்பின் உறுப்பினர் டொக்டர் பொன் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்து மாணவ மாணவியருக்கு பரிஸில்களை வழங்கினார்.

மேலும் லிற்றில் எய்ட் கிளிநொச்சி உறுப்பினர் குகனும் லிற்றில் எய்ட் ஆசிரியை அனுஷியாவும் மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கினர். லிற்றில் எய்ட் இணைப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி, கணணி தொழில்நுட்ப ஆசிரியர்கள் பவதாரனி, கோபி ஆகியோர் நிகழ்வை மேற்பார்வை செய்து மாணவ மாணவிகளுக்கு அணுசரனையாகச் செயற்பட்டனர்.

மாணவிகளின் தமிழ் வாழ்த்துடன் ஆரம்பமான நிகழ்வில் செல்வி அ அன்பரசி வருகைதந்தோரை வரவேற்றுக்கொள்ள வண பிதா போல் அனக்கிளிற் ஆசியுரை வழங்கினார். மாணவன் ச தர்சன் தலைமையுரை நிகழ்த்தி விழாவை ஆரம்பித்து வைக்க மாணவர்கள் கி ஐதுஷிஹன், அ கடல்வேந்தன் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வு முற்றிலும் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களினாலேயே நிகழ்த்தப்பட்டமையும் இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் தொழில்நுட்பக் கல்வி விருத்தியுடன் மட்டும் நின்று விடாமல் அவர்களின் ஆளுமை விருத்தியையும் மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளிலும் லிற்றில் எய்ட் கடந்த சில ஆண்டுகளாகச் செயற்பட்டு வருகின்றது. காலம்சென்ற வயித்தீஸ்வரன் சிவஜோதி லிற்றில் எய்ட் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டது முதல் கிளிநொச்சியின் சமூக மையத்தளமாக லிற்றில் எய்ட் வளர்க்கப்பட வேண்டும் என்ற கனவுக்கு அவர் உரமளித்திருந்தார்.

மாணவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய வண பிதா போல் அனக்கிளிற் நாங்கள் அனைவரும் அன்பினால் இணைக்கப்பட்டு செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார். கிளிநொச்சியில் லிற்றில் எய்ட் இன் பங்களிப்பையும் விதந்துரைத்தார்.

இளைஞர்களின் வன்முறைக்கு எதிராக காட்டமாக தனது கருத்துக்களை முன்வைத்த வண பிதா டானியல் அண்மையில் கிளிநொச்சி சாந்தபுரத்தில் வாள்வெட்டுக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலையைச் சுட்டிக்காட்டி இவ்வாறான வழிகளில் இளைஞர்கள் செல்வதை தடுப்பதற்கு அவர்களுக்கு வழிகாட்டுபவர்கள் சரியானவர்களாக நடக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். வ சிவஜோதியின் வழிகாட்டலில் வளர்ந்த இந்த மாணவர்கள் அப்படிச் செல்லமாட்டார்கள் என்றும் அவ்வாறு சென்றால் அது சிவஜோதியின் கனவுகளை மிதிக்கின்ற அவருடைய ஆத்மாவை அவமதிக்கின்ற செயல் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த இளைஞர்களை வழிப்படுத்துவதில் வழிநடத்துவதில் லிற்றில் எய்ட் இன் பங்களிப்பு மிகக் காத்திரமானது எனத் தெரிவித்த வண பிதா டானியல், இவர்களின் இந்த சேவை இந்தப் பகுதிக்கு மிக அவசியமானது என்பதை வலியுறுத்தினார்.

நிகழ்வின் இறுதியில் லிற்றில் எய்ட் இணைப்பாளர் மற்றும் ஆசிரியர்களோடு உரையாடிய லண்டனில் இருந்து வந்திருந்த லிற்றில் எய்ட் உறுப்பினர் டொக்டர் பொன் சிவகுமார் மாணவர்களின் திறமைகளைப் பாராட்டியும் ஆசிரியர்களின் சேவையை பாராட்டியும் கருத்துக்களைத் தெரிவித்து இருந்தார்.

கடந்த 12 ஆண்டுகளாக தனது சேவைகளை கிளிநொச்சி மண்ணில் வழங்கி வரும் லிற்றில் எய்ட் கணணிக் கற்கை நெறிகளோடு சுயதொழில் வேலை வாய்ப்பிற்கான தையல் மற்றும் வடிவமைப்பு பயிற்சிகளை வழங்கி வருகின்றது. ஆங்கில மொழிக் கல்வி லிற்றில் எய்ட் இல் வழங்கப்படுவதுடன் கிளி விவேகானத்தா பாடசாலை மாணவர்களுக்கும் ஆங்கில மொழி வகுப்புகளை நடத்துகின்றனர். மேலும் கல்வியூட்டலுக்கு அப்பால் மாணவர்களின் ஏனைய துறைகளை வளர்ப்பதற்காக விளையாட்டு – செஸ் கிளப் நடத்தப்படுகின்றது. லண்டனில் இருந்து சேனன் இதனை நடத்துகின்றார். மாணவர்களின் ஆளுமை மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்ப்பதற்கான சிரமதானம், கலைநிகழ்வுகள், விழ்ப்புணர்வு நிகழ்வுகள் என்பனவற்றையும் மாணவர்கள் தம் பொறுப்பில் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வாழ்வதற்கான உரிமைக்குள் ஒளிந்திருப்பது சாவதற்கான உரிமையே!! இந்த வாரம் பார்சல் டெலிவரி மோசடி 500,000 ஆக அதிகரிப்பு!!!

கிறிஸ்மஸ் மற்றும் நியூஇயர் காலக் கொண்டாட்டங்கள் பிரித்தானியாவில் நடைபெறும் பார்சல் தொடர்பான மோசடிகளின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பை கொண்டுள்ளன. இவ்வாராம் பார்சல் டெலிவரிகளின் மிக உச்சமான காலமாகையால் மோசடிகளின் எண்ணிக்கையும் எகிறியுள்ளது. ஸ்கொட்லன்ட் யாட் இன் மோசடிதடுப்புப் பிரிவின் கணிப்பின்படி இவ்வாரம் மட்டும் 500,000 மோசடிகள் நடைபெறும் என மதிப்பிட்டுள்ளது.

எனக்கு ஹேர்மிஸ் டெலிவரி நிறுவனத்தின் பெயரில் ஒரு கைத்தொலைபேசி இலக்கத்தில் இருந்து டிசம்பர் 21இல் அனுப்பி வைக்கப்பட்ட குறும்தகவலில் தாங்கள் டெலிவரி செய்ய முயற்சித்த போது நாங்கள் வீட்டில் இல்லாததால் நான் மேலதிகமாக 1.45 செலுத்த வேண்டும் என்று சொல்லி அதற்கான இணைப்பை வழங்கி இருந்தனர். இந்த இணைப்பைக் க்கிளிக் செய்தால் அது எங்களின் மிக முக்கியமான தகவல்களைப் பெற்று அதிலிருந்து எம்மி;டம் இருந்து பணத்தைக் கறக்கின்றனர். நான் பொதுவாகவே ஒன்லைனில் எதுவும் ஓடர் செய்வதில்லை என்பதால் எனக்கு அதன் நம்பகத்தன்மையில் ஒரு சந்தேகம் ஏற்பட்டு இருந்தது. இன்று பிபிசி செய்தியில் இவ்வாறான மோசடிகள் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன.

மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் இலங்கையில் இருந்து புத்தகப் பார்சல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. டிபிடி குறித்த திகதியில் பார்சலை டெலிவரி செய்யவில்லை. அவர்கள் டெலிவரி செய்ய முயற்சித்த தினத்தில் நான் வீட்டில் இல்லை. அவர்கள் அருகில் உள்ள அவர்களின் கலக்சன் பொயின்ற்றில் பார்சலை விட்டுச் செல்ல வேண்டும். ஆனால் ஏதோ காரணத்தால் அவர்கள் அதனைச் செய்யவில்லை.அவர்களுடைய டெப்போவுக்கு போன் பண்ணி அதனை பெற்றுக்கொள்ள முயன்றால் கொரோனா காரணமாக நாங்கள் டெப்போ பக்கமே வர இயலாது என்றார்கள். போனில் இருந்த பெண்ணும் பிரச்சினையை தீர்க்க முயற்சிக்கவில்லை. எனக்கும் இரத்தக் கொதிப்பாகியது. மனேஜரை கூப்பிடச் சொன்னால் மனேஜரும் அரை மணிநேரத்திற்குள் போன் எடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால் போன் எடுக்கவேயில்லை. திருப்பியும் இன்னொரு சுற்று அதே பதில் அதே விளைவு. இன்று ஒரு மாதம் கடந்தும் அந்த பார்சலுக்கு என்ன நடந்தது என்பதே தெரியாது.

இதற்கிடையே பார்சலை அனுப்பியவர் தான் இன்னுமொரு பார்சல் அனுப்பி உள்ளதாகவும் அது புதிய முகவரிக்கு வரும் என்றும் சொன்னார். அதுவும் குறித்த டெலிவரியில் வரவில்லை. அதன் பின் அமெக்ஸ் டெலிவரி நிலையத்தில் இருந்து ஒரு குறும் தகவல் வந்தது 11:25க்கும் – 12:25க்கும் இடையே பார்சல் வரும் என்று. அன்று பார்சல் வரவில்லை.

அதன் பின் மறுநாள் மாலை 18:40க்கும் – 19:40க்கும் இடையே பார்சல் வரும் என்று டிஎச்எல் இல் இருந்து ஒரு குறும்தகவல் வந்தது. ஆனால் பார்சல் வரவில்லை. குறும்தகவல் வந்தது. உங்களுடைய பார்சல் டெலிவரி செய்யப்பட்டதாகவும் நான் – ஜெயபாலன் பார்சலை பெற்றுக்கொண்டதாகவும்.

ஆனால் பார்சல் அதன் பின் 48 மணிநேரங்களிற்குப் பின்னரே என் கைக்கு வந்தது. புத்தகம் என்பதால் யாரும் அதனை களவாடியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் பெறுமதியான பொருட்கள் என்றால் சில வேளை இந்தப் பார்சல் எனக்கு கிடைத்தே இருக்காது.

ஒரு பார்சலை டெலிவரி செய்வதற்கு ஏன் இத்தனை நிறுவனங்கள். இந்நிறுவனங்கள் எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையே. தங்களுடைய பொறுப்புக்களை தட்டிக்கழிப்பதற்காக வெவ்வேறு பெயர்களில் இயங்கி மக்களை ஏமாற்றுகின்றனர். நீங்கள் பொருளை அனுப்புவதற்கான பணத்தைக் கட்டும்வரை தான் அவர்களுக்கு கஸ்டமர். அதற்குப் பின் நீங்கள் யாரோ அவர்கள் யாரோ. அவர்களுக்கு பணத்தையும் கட்டி அவர்களுக்கு போன் பண்ணி அவர்களுக்காக காத்திருந்து நேரத்தையும் வீணடித்து அமசோன் நிறுவன உரிமையாளர் ஜெப் பெஸோஸ் போன்றவர்களை அதீத செல்வந்தராக்கி கொண்டிருக்கிறோம். எமது நுகர்வோர் கலாச்சாரமே அவர்களது அதீத செல்வத்தின் பின்னணி. எமக்கு என்ன வேண்டும் என்பதை இன்று இவர்களே தீர்மானிக்கின்றனர்.

இந்தப் பெரும் நிறுவனங்களும் லாப நோக்கில் டெலிவரி ரைவர்களை மிகவும் கசக்கி புளிகின்றனர். ப்றிலன்ஸாக தங்கள் வாகனத்தை பயன்படுத்தும் இவர்களுக்கு சிறுநீர் கழிக்க நேரம் இல்லாத அளவுக்கு டெலிவரி செடுயூல் போடப்பட்டு இருக்கும். அவர்கள் வானில் உள்ள போத்தலிலேயே சிறுநீர் கழிக்கின்றனர். வாகனத்தை ஓட்டிக் கொண்டே உணவருந்துகின்றனர். எல்லாத் தவறுகளும் எல்லா பொறுப்புகளும் அவர்கள் தலையிலேயே கட்டப்படுகின்றன. சம்பளம் பெறும் நவீன கூலி அடிமைகளாக்கப்பட்டு உள்ளனர். கொன்சவேடிவ் அரசின் சிரோ அவர் கொன்ராக் இந்த மல்டிநஷனல் நிறுவனங்கள் லாபத்தை குவிக்கவே உதவுகின்றது. தொழிலாளர்களின் நலன்பற்றியோ மக்களின் நலன்பற்றியோ எவ்வித கரிசனையும் கிடையாது.

திறந்த சந்தைப் பொருளாதாரம் உங்களுக்கு தேர்வு செய்வதற்காக உரிமையை வழங்குவதாக மார்தட்டி பீற்றிக்கொள்கின்றது. அந்த தேர்வு என்ன? ரைட் செடுயூலில் சிறுநீரை போத்தலில் களித்து வேலையைச் செய்ய வேண்டும். இல்லையேல் வேலையில்லாமல் பிச்சைப் பணத்திற்கு கையேந்த வேண்டும். இந்த மேற்கு நாடுகளின் வாழ்வதற்கான உரிமை என்பதற்குள் ஒளிந்திருப்பது சாவதற்கான உரிமையும் தான். அதனை கோவி;ட் அம்மணமாக நிரூபித்துள்ளது. கோவிட்இல் வறுமைகோட்டில் வாழ்வோரே பெரும்பாலும் உயிரிழந்தனர். உயிர் இழந்துகொண்டிருக்கின்றனர். உயிரிழப்பர். 2000க்கும் மேற்பட்ட அதீத செல்வந்தர்களின் லாபம் கோவிட் காலத்தில் ரொக்கட் வேகத்தில் அதிகரித்துள்ளது.

லண்டனில் எனது இன்றைய அனுபவம்!!!

இன்று காலை எனக்கு தொலைபேசியில் ஒரு குறும் தகவல் Hey dad this is my new number you can delete my old number. இரண்டாவது மகன் பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருக்கிறான். ஆனால் இப்ப விடுமுறையில் வந்துவிட்டான். இதற்கு முன்னரும் இவன் இப்படி போன் நம்பரை மாற்றி இருக்கிறான். நான் பஞ்சிப்பட்டு மாற்றாமல் குழம்பி சத்தம் போட்டும் இருக்கிறேன். அந்த போன் நம்பருக்கு போன் செய்தேன் போன் கரகரத்தது. இப்படி அனுபவங்கள் முன்னரும் நடந்தது. மீண்டும் ஒரு மசேஜ். தன்னுடைய போன் உடைந்துவிட்டதாகவும் கதைக்க முடியாது என்றும் மசேஜ் வந்தது. சரி போன் வாங்கி இப்ப ஒரு ஆறு மாதம் தான் வொறன்ரியில் மாற்றுவோம் என்றன். முன்னம் விட்ட தவறை திரும்பவும் விடக்கூடாது. அப்பனுக்கு மகன் அட்வைஸ பண்ண விடக்கூடாது என்று என்பதுக்காக உடனேயே நம்பரை மாற்றி புதிய நம்பரை சேவ் பண்ணிக்கொண்டேன்.

பிறகு இன்னுமொரு மசேஜ் தனது பாங்க் எக்கவுண்டை ப்றீஸ் பண்ணி வச்சிருக்கிறதாகவும் தனக்கு பில்லைக் கட்டிவிடவும் கேட்டான். சரி என்ன பல்கலைக்கழகத்தில் படிப்பவனுக்கு ஒரு ஐம்பது நூறு பவுண் தானே பெத்ததுக்கு அதுவும் செய்யாவிட்டால் மரியாதையில்லை தானே. ‘நோ புரம்பளம்’ என்றும் தகவல் அனுப்பிவிட்டு எவ்வளவு கட்ட வேண்டும் என்றேன். £1800 பவுண் என்று தகவல் வந்தது. எனக்கு தூக்கிவாரிப் போட்டது. நான் ஒரு பிச்சைக்கார வாத்தி என்றது நம்மட கொன்ஸ் தோழரின் புண்ணியத்தில உலகத்துக்கே தெரியும். என்ர பாங்கில எந்தக் காலத்தில £1800 பவுண் இருந்தது. நாங்கள் எல்லாம் முன்னாள் கவுன்சிலர் போல் சத்தியநேசன் மாதிரி £50 பவுண் தாளையே கண்டிராத ஆட்கள்.

ஆனால் பாவம் மகனுக்கு பல்கலைக்கழகத்தில் ரூம் வாடகை குவாட்டருக்கு (இது அந்தக் கூவாட்டர் இல்ல. காலாண்டு) அவ்வளவு வரும் அது தான். அதுவா கட்ட வேணும் என்று மசேஜ் அனுப்பிவிட்டு இன்னுமொரு மசேஜ்ம் போட்டேன். எனக்கு சம்பளம் இன்னும் வரவில்லை. அண்ணாவிடம் வாங்கிக் கட்டு அண்ணாவுக்கு நான் பிறகு குடுக்கிறேன் என்று. என்னிடம் காசு இல்லாமல் அண்ணாவிட்ட கேள் என்று சொன்னது கொஞ்சம் வெட்கமாக இருந்தாலும் வேறு வழியில்லை. அவனுக்கு ஏற்கனவே ஒரு £1000 குடுக்கக்கிடக்கு. (இந்தத் தகவல் தோழர் கொன்ஸ்க்கு அல்வா கொடுக்க.) திரும்பி மசேஜ் வந்தது நீங்கள் அண்ணாவிடம் சொல்லுங்கள் என்று. இப்ப எனக்கு உதைக்கத் துவங்கியது. எற்கனவே டாட் என்று அழைத்ததே எனக்கு இடித்தது.

என்னுடைய பிள்ளைகள் யாரும் என்னை ஒரு போதும் டாட் என்றோ டாடி என்றோ அழைப்பதில்லை. அப்பா என்றே அழைப்பார்கள். ஆங்கிலத்தில் மசேஜ் வந்தாலும் Appa என்றே எழுதுவார்கள். கொஞ்சம் அன்பு கூடினால் டோய் அப்பா அப்பா லூசா என நான் அவர்களை அழைப்பது போலே அழைப்பார்கள். டாட் டாடி எல்லாம் கொஞ்சம் ரூமச் மாதிரித்தான் தெரிந்தது. ஆனால் யூனிவர் சிற்றியில குவாட்டர் இறங்கிச்சுதோ தெரியேல்ல. அத்தோடு அண்ணாவிட்ட கேள் என்றால் அவன் நேர அண்ணனின் கழுத்தைப் பிடித்து காசை மாற்றியிருப்பான். அண்ணன் தான் அலறி அடித்து எனக்கு அடித்திருப்பான். சரி என்று மூத்தவனுக்கு அடித்தேன். அவன் போனைத் தூக்வில்லை. அண்ணவோடு கதைத்துவிட்டு சொல்கிறேன் என்றுஒரு மசேஜ் போட்டுவிட்டு இருக்க மூத்தவன் அடித்தான்.

‘தம்பி நிக்கிறானா?’. ‘ஓம்’ என்றான். கொடுத்தான். ‘ஏன் ரூம் ரென்ற் கட்டவில்லையா’ என்றேன். ‘ஏன் காசு கேட்ட நீ’ என்றேன். அப்பதான் நித்திரையால் எழும்பியவன், ‘உங்களுக்கு என்ன லூசா?’ என்றான். அப்ப தான் ஓடி வெளித்தது. பிச்சைக்காரனாய் இருந்தால் எங்களிட்ட இருந்து காசு பிடுங்குவது கொஞ்சம் கஸ்டம் என்று.

உடனே நான் மசேஜ் போட்டேன் ‘நீ தந்த எக்கவுண்டுக்கு 1500 பவுண் போட்டிருக்கிறேன்’ என்று அதுக்குப் பிறகு அவரை இழுத்தடித்து சம்பாசணையில் இருந்து கொண்டே அக்சன் புரொடில் போய் கொம்பிளெயின் பண்ணிவிட்டு அவன் தந்த எக்கவுண்டுக்கு 1.50 மாற்றிவிட்டு வங்கிக்கு போன் பண்ணிச் சொல்லி உள்ளேன்.

பெரும்பாலும் நாங்கள் ஊகங்களின் அடிப்படையிலேயே செயற்படுகிறோம். அதனால் தவறான முடிவுகளுக்கு தள்ளப்பட்டு பொருளாதார நஸ்டத்தையும் சந்திக்கின்றோம். இன்று எனது வங்கியில் பணம் இருந்திருந்தால் சில வேளை நான் அந்தத்தொகையை இழந்திருப்பேன். ஏதோ எனக்குத் தட்டிய சிறுபொறி என்னைக் காப்பாற்றியது. மிகக் கவனம். சிறிய கவனக் குறைவுகள் பெரும் இழப்புகளுக்கு எம்மைக் கொண்டு செல்லும். பொருளாதார இழப்புகள் மட்டுமல்ல அதனிலும் மோசமான உறவு முறிவுகள்இ உயிரிழப்புகள் என அவை பாரதூரமானவையாகவும் அமைந்துவிடும்.

முன்கூட்டிய முடிவுகளை வைத்துக்கொண்டு தான் நாம் பலவற்றைச் செய்கின்றோம். முதல் குறும் தகவலில் நான் ‘நீ யார்? என்று கேட்காமல் அந்தச் தகவல் என்னுடைய பிள்ளைகளிடம் இருந்துதான் வந்தது என்று முடிவுக்கு வந்துவிட்டேன். அவன் காசு கேட்ட போது நானாக அது வாடகைக் காசாகத்தான் இருக்கும் என்று முடிவுக்கு வந்துவிட்டேன். இந்த முன் கூட்டிய முடிவுகள் என்னை தவறான முடிவுகளை எடுக்க வைத்தது. அதனால் எதனையும் தீர ஆராய்ந்து இயலுமான தகவல்களை திரட்டிய பின்னரேயே முடிவெடுக்க வேண்டும்.

இன்னும் சில நாட்களில் £250,000 பவுண்களை பறிகொடுத்த லண்டன் தமிழர்களின் கதை தேசம்நெற்றில். பறிகொடுத்தவர்களும் தமிழர்கள் பறித்தவர்களும் தமிழர்கள்.

சிவஜோதி ஓராண்டு நினைவு: ஒரு சமூகப் போராளிக்கு ஒரு சமூக அரசியல் தலைவரின் மனையில் நினைவுக்கூட்டம்

சமூக செயற்பாட்டாளனும் லிற்றில் எய்ட் அமைப்பின் இணைப்பாளராகவும் இருந்து எம்மைவிட்டுப் பிரிந்த வ சிவஜோதியின் ஓராம் ஆண்டு நினைவு நிகழ்வு அவன் பிறந்த இளமைக்காலக் கல்வியைக் கற்ற சுளிபுரம் மண்ணில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சமூக, கலை, இலக்கியச் செயற்பாட்டாளனான சிவஜோதி தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஒரு உருவாக்கம். அந்த வகையில் தேசிய கலை இலக்கியப் பேரவை நாளை டிசம்பர் 19 அன்று மாலை நான்கு மணி முதல் 6 மணிவரை நினைவு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்வு இலங்கையின் இடதுசாரி அரசியல் தலைவர்களில் முன்னோடியான சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்த எம் கே சுப்பிரமணியம் அவர்கள் வாழ்ந்த சத்தியமனையில் உள்ள மண்டபத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. தந்தையின் வழியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சத்தியராஜன் (மீரான் மாஸ்டர்) பெயரில் உள்ள அரங்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
வ சிவஜோதி என்ற ஆளுமையை உருவாக்கியதிலும் அவனுடைய சமூக செயற்பாடுகளுக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்த தேசிய கலை இலக்கியப் பேரவையின் சோ தேவராஜா தலைமையில் நடைபெறுகின்றது. இந்நிகழ்வில் சிவஜோதியின் துணைவியார் பெற்றோர் கல்லூரி நண்பர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்கின்றனர்.
 
இந்நிகழ்வில் சட்டத்தரணியும் கொழும்பு தமிழ் சங்க தலைவரான நடராசா காண்டீபன்இ தாயகம் ஆசிரியர் கந்தையா தணிகாசலம் ஆசிரியம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் தெட்சனாமூர்த்தி மதுசூதனன்இ புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சியின் தலைவரும் புதியநீதி பத்திரிகை ஆசியருமான சி கா செந்திவேல், ஆய்வாளரும் ஓய்வுபெற்ற விரிவுரையாளருமான கலாநிதி நடேசன் இரவீந்திரன் ஆசிரியர் பரமானந்தர் மதனகோபாலன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
 
நிகழ்வின் இறுதியில் வ சிவஜோதியின் பயணத்தை அவன் விட்ட இடத்திலிருந்து தொடரும் அவருடைய துணைவி லிற்றில் எய்ட் இன் இணைப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி நன்றியுரை வழங்கி நிகழ்வை நிறைவு செய்பாவர். ஹம்சகௌரி சிவஜோதி சிவஜோதியின் வழியில் குறிப்பாக சமூகத்தில் பெண்களுடைய நிலையை மேம்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை லிற்றில் எய்ட் ஊடாக மேற்கொண்டு வருகின்றார். பெண் சமத்துவம், குடுபங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை, இளவயதுத் திருமணங்கள், இளவயதில் தாய்மை அடைதல் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிகழ்வில் ‘சிவஜோதியின் ‘என் எண்ண ஓட்டத்தில் …’ என்ற தொகுப்பு நூலும் வெளியிடப்படும்.
 
தற்போதைய சுகாதார சுகாதார விதி முறைகளுக்கு அமைய நிகழ்வுகள் நடைபெறும் என தேசிய கலை இலக்கியப் பேரவை தனது நிகழ்வு பற்றிய பிரசுரத்தில் குறிப்பிட்டு உள்ளது.