ஜெயபாலன் த

ஜெயபாலன் த

ஆலய வளாகத்தில் வாள்வெட்டில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதேசசபை உறுப்பினர் 2வது நாளாகவும் தலைமறைவு!

யாழ் சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர் ரஜீவன் நடத்திய வாள்வெட்டு கோயிலில் இருந்த சிசிரிவி இல் பதிவாகி உள்ளது. அதனை ஆலய அடியவர் கெ யோகச்சந்திரன் தேசம்நெற்க்கு அனுப்பி வைத்திருந்தார்.

மேலும் தாக்குதல் நடத்திய ரஜீவன் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான குலசிங்கம் குலரத்தினம் ஆகியோரின் புகைப்படங்களையும் கெ யோகச்சந்திரன் தேசம்நெற்க்கு அனுப்பி வைத்தார். யூன் 11 மாலை 3:30 மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதலைத் தொடர்ந்து தலைமறைவான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் இன்னமும் தலைமறைவிலேயே உள்ளார் என உள்ளுர் செய்திகள் தெரிவிக்கின்றன.

தாக்குதலில் சம்பந்தப்பட்ட இருவரும் தொலைபேசியல் வாக்குவாதப்பட்டு பின் வாளோடு தாக்குதல் நடத்தும் நோக்கத்துடனேயே வந்துள்ளாதாக தோண்றுவதாக கெ யோகச்சந்திரன் தேசம்நெற்றுக்கு தெரிவித்தார். சம்பந்தப்ட்ட இருவருமே ஆலய நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் இவ்வாறான செயல்களால் ஆலயத்தின் நன்மதிப்பு மிகவும் பாதிக்கப்படுவதாகவும் யோகச்சந்திரன் தனது அதிருப்தியயை வெளியிட்டார். பொறுப்பற்ற மனிதர்கள் பொறுப்பான பதவிகளில் இருக்கக் கூடாது என்பதையும் யோகச்சந்திரன் வலியுறுத்தினார்.

இது விடயத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் யாழ் மாநகரசபை மேயர் மணிவண்ணனும் இன்னமும் மௌனமாகவே உள்ளனர். பட்டப்பகலில் ஆலய வளாகத்தில் வாளால் வெட்டிவிட்டு தப்பித்துக் கொள்ளலாம், யாரும் கேட்க முடியாது என்றுதான் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கருதுகிறது என தன்னை அடையாளம் காட்ட விரும்பாத இன்னுமொரு ஆலய அடியார் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

யாழ் சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் வாள்வெட்டு! தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதேசசபை உறுப்பினர் தலைமறைவு!

யூலை 11 மாலை யாழ் சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் வாள்வெட்டில் ஈடுபட்ட பிரதேசசபை உறுப்பினர் தலைமறைவாகி உள்ளார். சித்தங்கேணி பிள்ளையார் கோவிலின் மகாகும்பாபிசேகக் கணக்கு தொடர்பில் எழுந்த வாக்குவாதத்தில் கேள்விகேட்டவரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினார் வாளால் வெட்டியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்கு இலக்கானவர் தலையிலும் கையிலும் வெட்டுக் காயங்களுடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதலுக்கு உள்ளானவர் யாழ் பல்கலைக்கழகத்தில் தற்காப்புக் கலைப் பயிற்சி வழங்கும் பயிற்றுனர் எனவும் தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக அன்று சிவன்கோவிலின் 6ம் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர் ஒருவர் தகவல் தெரிவிக்கையில் சம்பவம் மாலை மூன்று மணியளவில் இடம்பெற்றதாகவும் சித்தங்கேணி பிள்ளையார் கோவிலின் கணக்கு வழக்குத் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் வாக்குவாதப்பட்டதை கேட்கக் கூடியதாக இருந்ததாகவும் தெரிவித்தார். சற்று நேரத்தில் வாக்குவாதம் மோதல்நிலைக்குச் செல்ல தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் வாளை எடுத்து வெட்டியதாகவும் அப்பக்தர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

சித்தங்கேணி சிவன் கோவிலும் பிள்ளையார் கோவிலும் சித்தங்கேணிச் சந்தியின் இரு புறமும் அருகருகே உள்ள ஆலயங்கள். இந்த ஆலயங்களின் நிர்வாகசபையில் உள்ளவர்களும் பெரும்பாலும் அதே உறுப்பினர்களாக இருப்பர். இந்த மோதலில் சம்பந்தப்பட்ட இருவருமே இரு ஆலயங்களினதும் நிர்வாகசபையில் உள்ளவர்களே.

தமிழ் பிரதேசங்கள் வன்முறை சம்பவங்கள் மலிந்த பிரதேசங்களாக மாறியுள்ள சூழலில் ஒழுக்கம் பண்புகளைப் பேண வேண்டிய ஆலயத்தில் வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுவதற்காக உழைக்க வேண்டிய அரசியல் கட்சியினரே இந்த வாள்வெட்டை மேற்கொண்டும் உள்ளமை தமிழ் பிரதேசங்கள் எதிர்கொள்ளும் ஆபத்தினை கட்டியம் கூறுபவையாக உள்ளன.

தமிழ் பிரதேசங்களில் நடைபெறும் இளைஞர்களின் காடைத்தனங்களின் பின்னால் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாப தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு ஆண்டுகளாக இருந்து வருகின்றது. கடைத்தனங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு மாறாக அவர்களை சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி வெளியே எடுத்து தங்கள் கட்சியின் நலன்களுக்கு பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டுகள் சமூகவலைத்தளங்களில் பரவலாக பதிவுசெய்யப்பட்டு உள்ளது. இந்தப் பின்னணியிலேயே நேற்று தமிழ் தேசிய முன்னணயின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரே பட்டப்பகலில் ஒரு ஆலய வளாகத்தில் அடியார்கள் முன்னிலையில் வாள்வெட்டில் ஈடுபட்டுள்ளார்.

ஆலயத்தை பாரம்பரியமாக பராமரித்து வருபவர்களிடம் பிடுங்கிக் கொண்ட புதிய நிர்வாகத்தினர் தற்போது ஆலயத்தை மிகமோசமான முறையில் பரிபாலனம் செய்வதாக பெயர் குறிப்பிடவிரும்பாத அடியார் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இதன் உச்சகட்டம் தான் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தாக்குதலில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் தற்போதைய யாழ் மேயர் மணிவண்ணனுக்கு ஆதரவானவர் என்றும் இந்த அணியிலேயே வன்முறைச் சம்பவங்களில் தொடர்புடைய பலர் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகின்றது. இவர்களுடைய மிரட்டல்களுக்கு அஞ்சியே யாழ் ஊடகங்கள் சம்பந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினரின் கட்சியை குறிப்பிடுவதைத் தவிர்த்துள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் சிவகுமார் கஜேன் மரணித்து இருந்தார். இவருடைய மரணம் கொலையாக இருக்கும் என்ற சந்தேகம் எழுவதற்கும் கட்சியின் வன்முறை போக்கே காரணம் என நம்பப்படுகின்றது. ஆனால் சிவக்குமார் கஜேனின் மரணம் தற்கொலை என இறந்தவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காதலித்த பெண்ணை மணக்க அனுமதியாமல் மற்றுமொரு பெண்ணுடன் திருமணத்திற்கு நிர்ப்பந்தித்ததாலேயே சிவக்குமார் கஜேன் தற்கொலை செய்துகொண்டதாக இராமாவில் பகுதியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டமை தெரிந்ததே

தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் யாழ் மேயர் மணிவண்ணனும் யாழில் நடைபெறும் வன்மறைச் சம்பவங்கள் தொடர்பில் பொறுப்பான முறையில் செயற்பட வேண்டும். கட்சிக்குள் வன்முறையைக் களையும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வன்முறையுடன் தொடர்புபட்டவர்களை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும். தங்களுடைய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களே ஒவ்வொருவராக தற்கொலை செய்வதை பொருட்படுத்தாமல் இருந்துகொண்டு சமூகத்துக்கு எப்படி இவர்களால் வழிகாட்ட முடியும்.

யாழ்ப்பாணம் நல்லலூரடியில் ஒடுக்கபட்ட சமூகப் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வந்த போது துரிதகதியில் வந்து அவர்களை விரட்டியடிக்க முழுமூச்சுடன் செயற்பட்ட மேயர் மணிவண்ணன் குழுவினர் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களின் வன்முறை தொடர்பிலும் அவர்களின் தற்கொலைகள் தொடர்பிலும் துரிதகெதியில் செயற்பட வேண்டும்.

புகைத்தலை வியாபாராமாக்கியவர்ளே சுவாசத்தை சீராக்கும் இன்ஹேலரையும் வழங்க உள்ளனர்!

புகைத்ததால் நுரையீரல் பிரச்சினை என்றால் இழுத்து சுவாசத்தை சீராக்கலாம் என புகைத்தல் வணிகக் நிறுவனம் பிலிப் மொறிஸ் இன்ரநசனல் நிறுவனம் புதிய முதலீட்டை மேற்கொண்டுள்ளது. சுவாசப் பிரச்சினையைச் சீராக்கி சுவாசத்தை சீர்படுத்தும் ‘இன்ஹேலர்’ உபகரணத்தை தயாரிக்கும் பிரித்தானியாவின் மருத்துவ நிறுவனமான வெக்ரூரா நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் பிலிப் மொறிஸ் இன்ரநசனல் நிறுவனம் இறங்கி உள்ளது. ஒரு பில்லியன் டொலருக்கு வெக்ரூரா நிறுவனத்தை வாங்குவதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளது. இதன்படி புகைத்தலுக்கு அப்பால் பிலிப் மொறிஸ் இன்ரநசனல் நிறுவனம் ஆண்டுக்கு ஒரு பில்லியன் வருமானத்தை ஈட்டலாம் என மதிப்பிடுகின்றது.

பிலிப் மொறிஸ் இன்ரநசனல் புகைத்தலுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்கான மருத்துவ சுவிங்கம் தயாரிக்கும் டெனிஸ் நிறுவனத்திற்கு 820 மில்லியன் டொலர் செலுத்தியுள்ளது. அதேசமயம் தனக்கு போட்டியான அல்ற்றியா நிறுவனத்தையும் தனக்குள் வளைத்துப் போட்டுக் கொள்ள, 200 பில்லியன் டொலர்களை பிலப் மொறிஸ் இன்ரநசனல் செலவழித்துள்ளது. இந்த இணைவின் மூலம் சிகரெட் பிடிப்பவர்களை அதனிலும் சற்று ஆபத்து குறைந்த புகைத்தல் முறைக்கு அடிமையாக்குவததை நோக்கி பிலிப் மொறிஸ் இன்ரநசனல் இறங்கியுள்ளது. பிள்ளையயையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் பல்தேசிய நிறுவனங்களும் அதற்குத் துணைபோகும் அரசுகளும் இப்படித்தான் இயங்குகின்றன.

முற்றிலும் இலாப நோக்கத்தோடு செயற்படும் நிறுவனங்களிடம் மக்களின் சுகாதார பராமரிப்பும் அது தொடர்பான ஆய்வுகளும் கையளிக்கப்படுவது தற்போது வைத்தியர்களால் வழங்கப்படும் மருந்துகள் தொடர்பில் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

உடலில் சீனியயைக் கட்டுப்படுத்தும் (நீரிழிவு) மருந்துகள், கொலஸ்திரோலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள், இதயத் தாக்கத்தை கட்டுப்படுத்தும் மருந்துகள் என ஆண்டாண்டு காலத்துக்கும் மருந்து எடுக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படும் மருந்துகள் தொடர்பில் பலர், மருத்துவ நிபுணர்கள் உட்பட கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மருந்துகளின் அதீத பாவனையால் 500,000 பேர் கொல்லப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது. அதல் 70 வீதமான மரணங்கள் ஓபியோய்ட் எனப்படும் போதைப்பொருள் சேர்க்கையுள்ள மருந்துகளின் தாக்கத்தால் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது. 2017ம் ஆண்டில் 117,000 பேர் ஓபியோய்ட் அதிதமான காரணத்தினால் மரணத்தை தளுவியுள்ளனர்.

தற்போது உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையை ஏற்றுள்ள சௌமியா சுவாமிநாதனின் தந்தை சுவாமிநாதன் இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்துகின்றேன் என்று ஆரம்பித்து, செயற்கை உரங்களுக்கு இந்தியப் பயிர்களையும் செயற்கை உர மற்றும் மருந்து பல்தேசிய கொம்பனிகளுக்கு இந்திய விவசாயிகளையும் அடிமையாக்கியவர். இதனால் பல நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடன்சுமை தாங்காமல் தற்கொலைக்கும் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிணமானாலும் பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தோடு முற்றிலும் இலாபநோக்கத்தோடு இயங்கும் பல்தேசிய நிறுவனங்களின் பெயர்களை உச்சரித்துக்கொண்டே மக்கள் அவர்களுக்கான சவக்குழியயை தாங்களே வெட்டுகின்றனர். பொருளாதார வளர்ச்சி என்ற மாயைக்காட்டி அரசுகளும் இதற்கு உடந்தையாகவே இருக்கின்றது.

பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் சுற்றாடலை அசுத்தப்படுத்தவும் எமது உடல்களை அசுத்தப்படுத்தவும் பிலிப் மொறிஸ் இன்ரநசனல் போன்ற பல்தேசியக் கொம்பனிகள் இயங்கவும் தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தவும் விற்பனை செய்யவும் அரசுகள் ஒப்புதல் அளித்தன. இப்போது ஒப்புதல் அளிக்கின்றன.

தமிழ்நாட்டில் நாடற்ற தமிழர்கள்: கைவிடப்பட்ட தமிழர்களும் அவர்களைக் கைகழுவிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் !

“எங்களை விடுதலை செய்யுங்கள் அல்லது கருணைக்கொலை செய்யுங்கள்” என்று கோரி தமிழ் நாட்டின் திருச்சி மத்திய சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 60 வரையான இலங்கைத் தமிழ் ஆண்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்களுடைய உண்ணாவிரதப் போராட்டம் எவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்வுண்ணாவிரதங்களை பார்வையிட வந்த இந்திய அதிகாரிகளிடம், ‘மனிதாபிமானத்தோடும் கருணை உள்ளத்தோடும் நடந்து எங்களை விடுவியுங்கள்’ என்று வேண்டிக்கொண்ட காணொளிப்பதிவு மனதை உருக்குவதாக அமைந்தது.

‘எங்கள் குறைகளையும் வேண்டுதல்களையும் தான் சொல்கின்றோமே தவிர, எந்தவகையிலும் உங்களோடு சண்டையிடவில்லை, உங்களை எதிர்க்கவும் இல்லை’ என்று மன்றாடி தங்கள் உருக்கமான வேண்டுகோளை முன்வைத்தனர். அங்கிருந்த உண்ணாவிரதிகளில் ஒருவர் கண்ணீரோடும் அடக்க முடியாத வேதனையோடும், “இப்படி எங்களை துன்புறுத்துவதற்குப் பதிலாக விச ஊசியயைப் போட்டு எங்களைக் கொல்லுங்கள்” எனக் கேட்டுக்கொண்டமை நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது.

யார் இந்த முகாம்களில், சிறப்பு முகாமில் உள்ளவர்கள்? அதற்கான விடை தெரிய வேண்டுமானால் காலச்சக்கரத்தினை ஐம்பது ஆண்டுகள் பின்நோக்கி நகர்த்த வேண்டும்.

– 1 –

1970க்களின் முற்பகுதியில் தமிழ் தேசியக் கட்சிகளின்: தமிழரசுக் கட்சி (ஆங்கிலத்தில் Federal Party – சமத்துவக் கட்சி) இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி – மலையகத் தமிழர்களின் வாக்குரிமையயைப் பறிக்க ஐக்கிய தேசியக் கட்சிக்குத் துணை போன தமிழ் காங்கிரஸ். அதாவது இன்றைய கஜேந்திரகுமாரின் தாத்தாவின் கட்சி. இவ்விரு கட்சி முக்கியஸ்தர்கள் தோல்வியைத் தழுவினர். இவர்களுக்கு ஒரு’பஞ்ச் ஸ்டேட்மன்ற்’ தேவைப்பட்டது. அதனால் உருவாக்கக்கப்பட்டது தான் ‘தமிழீழம்’ என்ற கோரிக்கை.

1976 வட்டுக்கோட்டையின் சிறு கிராமம் ஆன பன்னாகத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என அறியப்பட்ட தமிழீழப் பிரகடனம் தமிழர் விடுதலைக் கூட்டணியால் (தமிழரசுக்கட்சி சக தமிழ் காங்கிரஸ்) முன்வைக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே 1977 தேர்தலில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் ‘பஞ் ஸ்டேட்மன்ற்’ தமிழீழம் – வாக்குகளை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு குவித்தது.

தெற்கில் ஐக்கிய தேசியக் கட்சி அமோக வெற்றியீட்டி ஆட்சியமைத்து. இடதுசாரிகளுடனான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கையை; ஐக்கிய தேசியக் கட்சி நேரெதிராகத் திருப்பி, அமெரிக்க சார்பு திறந்த பொருளாதாரக் கொள்ளைக்கு, நாட்டின் சந்தையைத் திறந்தது. தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கைகளால் வடக்கும் கிழக்கும் கூடப் பலன்பெற்றன. விவசாயிகள் செழிப்புப் பெற்றனர். தமிழ் சினிமா முளைவிட்டது. வன்னியில் தமிழ் குடியேற்றங்கள் பல உருவாகின. இப்போது அவையனைத்தும் ஸ்தம்பித்தது.

இடதுசாரிகளுடனான சிறிலங்கா சுதந்திரக் கட்சிக் காலத்தில்; இந்தியாவுடன் இலங்கைக்கு இருந்த நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. பனிப்போரின் உச்சத்தில் உலகம், இருந்த காலகட்டம். இந்தியா அணிசேராக் கொள்கையைக் கொண்டிருந்த போதும், ரஸ்யசோசலிசக் குடியரசோடு நெருக்கமாக இருந்த காலங்கள். இந்து சமுத்திர பிராந்தியத்தில் தன்னை மீறி இலங்கை நடந்துகொள்வதை பொறுக்காத இந்தியாவுக்கு, ‘தமிழீழ பிரகடனம்’ நல்ல வாய்ப்பாக அமைந்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலுக்காக விட்ட ‘தமிழீழ பிரகடனத்தை’; இந்தியா, அன்றைய ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைவர் ஜே ஆர் ஜெயவர்த்தனாவிற்கும்; பாடம் புகட்டுவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தியது. இந்த உள்ளூர், சர்வதேச அரசியல் எதனையும் புரிந்துகொள்ளும் அரசியல், அறிவும் அனுபவமும் அற்ற அப்பாவித் தமிழ் இளைஞர்கள் நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் தமிழீழக் கனவோடு போராடப் புறப்பட்டனர். இவர்களுக்கு இந்தியா சகல வசதிகளையும்: உணவு, உறைவிடம், இராணுவப் பயிற்சி, ஆயுதம் -என்பவற்றை ஏற்படுத்திக் கொடுத்தது.

இப்படி போராட வந்தவர்களுக்கு தலைமைகொடுக்க அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியினருடன் நெருங்கி இருந்த பல இளைஞர்கள் போட்டியிட்டனர். பிரபாகரனும் அவர்களில் ஒருவர். கடைசியில் பிரபாகரன் தமிழீழத்தின் பெயரில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் முதல், இறுதியில் சந்தேகப்படுபவர்கள் எல்லோரையும் போட்டுத் தள்ளியது வரலாறு. இறுதியில் 2009 மே 18இல் முள்ளிவாய்க்காலில் அவர் சரணடைந்ததும், சுட்டுக்கொல்லப்பட்டதும், அவருக்கு ஒரு நினைவுக் கூட்டம் கூட இதுவரை செய்யப்படாததும் கூட வரலாறாகிவிட்டது.

இன்று இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கின்றேன் – யூன் 19, இற்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பாக யூன் 19 1990 அன்று சென்னையில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா உட்பட அவ்வியக்கத்தின் முக்கியஸ்தர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஈவிரக்கமற்று சுட்டுக்கொல்லப்பட்ட தினம். இத்தாக்குதலில் இருந்து தப்பிய லாபிர் என்றழைக்கப்படும் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த, தற்போது பிரித்தானியாவில் பேர்மிங்ஹாம் பிரதேசத்தில் வாழும் பரமானந்தன் இது பற்றி தேசம்நெற்க்கு தெரிவிக்கையில், உள்ளாடையோடு மதில் பாய்ந்து தப்பியோடிய அன்றைய நினைவுகள் இன்றும் எப்படி உயிர் தப்பினேன் என பிரமிக்க வைப்பதாகத் தெரிவித்தார். பரந்தாமனின் குடும்பத்தில் பத்திற்கும் மேற்பட்டவர்கள் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர்.

அதனையடுத்து ராஜீவ் காந்தி மே 21, 1991இல் தமிழ்நாட்டில் சிறிபெரம்புத்தூரில் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். தமிழீழ விடுதலை இயக்கங்கள் தமிழ்நாட்டை தங்களுடைய போராட்டத்தின் பின் தளமாக மட்டும் பாவிக்கவில்லை, பல குற்றச்செயல்களில், அம்மண்ணில் ஈடுபட்டு இருந்தனர்.

1982 மே 19 இல் ராகவன் என்று அழைக்கப்படும் சின்னையா ராஜேஸ்குமாரும் வே.பிரபாகரனும் பாண்டி பஜாரில் நடத்திய துப்பாக்கிச்சூடு பரவலாக அறியப்பட்டதொன்று. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் முகுந்தன் என்றழைக்கப்பட்ட உமாமகேஸ்வரனைப் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி அது. சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டடு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். தற்போது லண்டனில் வாழும் சின்னையா ராஜேஸ்குமாரின் இந்த வழக்குப் பதிவுகள் காரணமாக அவர் நீண்டகாலமாக இந்தியா பயணிக்கத் தடை இருந்ததும், தற்போது அத்தடைகள் நீக்கப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தேசம்நெற்க்கு தெரிவித்தனர்.

1977 காலவரமும் 1983 கலவரமும் தமிழ் தேசியக் கட்சிகளின் தோழமைக் கட்சியாக எப்போதும் இருந்துவந்த ஐக்கிய தேசியக் கட்சியால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் இளைஞர்கள் மேலும் மேலும் ‘தமிழீழக் கனவு’ நோக்கித் தள்ளப்பட்டனர். இந்தியாவின் உதவியோடு வடக்கில் ஆயுதநடவடிக்கைகள் அதிகரித்தன.

1983 இன் இறுதிப் பகுதியில் இருந்து அல்லது 1984இன் முற்பகுதியில் இருந்து கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த பல குடும்பங்கள் இலங்கையயை விட்டு வெளியேறத் தீர்மானித்தனர். இவ்வாறு இலங்கையயை விட்டு வெளியேறுபவர்கள் மன்னார், பேசாலையில் இருந்து புறப்பட்டு தமிழ் நாட்டில் தங்கச்சிமடம், ராமேஸ்வரம் பகுதியயை வந்தடைவது வழக்கம் என்கிறார், இவ்வாறு வெளியேறிய குடும்பஸ்தர் போல் பெர்னான்டஸ். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியயைச் சேர்ந்த இவர், தான் சில தடவைகள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சென்று பலரையும் ராமேஸ்வரம் அழைத்து வந்ததாகத் தெரிவித்தார். முதற்தடவை ராமேஸ்வரம் வந்தபோது தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ‘முதல் மரியாதை’ திரைக்கு வந்திருந்தாகக் குறிப்பிட்ட அவர் அன்று அப்படத்தை நிலத்தில் இருந்து பார்த்த அனுபவத்தை தேசம்நெற் உடன் பகிர்ந்துகொண்டார். மன்னாரில் இருந்து இராமேஸ்வரம் மிகக் குறுகிய தூரத்தில் இருந்ததால் இக்கடல்வழிப் பாதையே பெரிதும் பாதுகாப்பானதாகவும் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் மாதகல் கடல்வழிப் பாதையினூடாக போராளிகள் பயணிப்பது வழமையாக இருந்தது. வல்வட்டித்துரை கடல்வழிப்பாதை வணிக நடவடிக்கைகளுக்கு பெயர்பெற்று விளங்கியது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மீனவர்கள் வந்து செல்வது ஐரோப்பிய நாடுகளுக்குள் இருப்பவர்கள் அயல்நாட்டுக்கு சென்று வருவது போன்று தடைகளற்ற பயணமாக அந்த நாட்களில் இருந்தது. இலங்கையில் இருந்து படம்பார்க்க வள்ளங்களில் இளைஞர்கள் சென்று வரக்கூடிய காலங்கள் அவை.

கிளிநொச்சி மாவட்டத்தின் நிர்வாகத்திற்குட்பட்ட இரணைத் தீவில் இருந்தும் பெரும்தொகையில் பலர் தமிழகம் சென்றுள்ளனர். மலையகத்தைச் சேர்ந்த ஹம்சகௌரி குடும்த்தினர் 1983இல் கிளிநொச்சிக்கு புலம்பெயர்ந்தனர். 1987 இலங்கை – இந்திய ஒப்பந்தமும் அதன் பின் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் இடையே ஏற்பட்ட முறுகல்நிலையும் மோதலும், மீண்டும் ஒரு யுத்தத்தை வடக்கு கிழக்கில் கட்டவிழ்த்து விட்டிருந்தது. அதிலிருந்து தப்பிக்க அன்று சிறுமியாக இருந்த ஹம்சகௌரியின் பெற்றோரும் ஒரு சகோதரியும் சகோதரனும் தமிழகம் செல்ல தீர்மானித்து, இரணைத்தீவை அடைந்தனர். அங்கு இவர்களை ஏற்றிச் செல்ல தமிழக மீனவர்களின் படகுகள் காத்திருந்தன. அம்பாள் குளத்தைச் சேர்ந்த ஹம்சகௌரி, தங்களோடு அப்போது 200க்கும் மேற்பட்டவர்கள் இந்தியா செல்வதற்கு வந்திருந்ததாக தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அந்தப் பயணத்தின் போது தங்களோடு வந்த படகுகளில் ஒன்றிணை நோக்கி கடற்படையினர் சுட்டதாகவும்; அப்போது அப்படகில் இருந்த ஒருவர் காயத்தோடு இராமேஸ்வரம் கொண்டுவரப்பட்டு, மரணமடைந்ததாகவும் தெரிவித்தார். இறந்தவரின் இளம் மனைவி கைக் குழந்தையோடு நிர்க்கதியாய் நின்ற காட்சி, 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் தனது நினைவுகளைவிட்டு அகலவில்லை என்கிறார் ஹம்சகௌரி.

இவ்வாறு வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழர்கள் தமிழகம் நோக்கி புலம்பெயர்ந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாகவும் மலையகத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் 100,000 இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் தற்போது வாழ்வதாக மதிப்பிடப்படுகின்றது. இவர்களில் 65,000 வரையானவர்கள் 50க்கும் மேற்பட்ட முகாம்களில் வாழ்கின்றனர்.

இம்முகாம்கள் ஒரு கிராமம் போன்று அடிப்படைத் தேவைகளையும் சிறு வீடுகளையும் கொண்டிருக்கும். இவ்வீடுகளை அவர்களே தமக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் கட்டிக்கொள்வார்கள். இவர்களுக்கு வாராவாரம் செலவுக்கு உதவிப்பணமும் வழங்கப்படும். அம்முகாமில் உள்ள காவலாளிகளின் அனுமதியோடு வெளியே சென்று சிறிய வேலைகளைச் செய்துவரவும் இவர்களுக்கு அனுமதியுண்டு.

ஆரம்ப காலங்களில் 1990க்கள் வரை இலங்கை அகதிகள் ஓரளவுக்கு வரவேற்கப்பட்டு கன்னியமாக நடத்தப்பட்டாதாகவே பலரும் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றனர். ஆரம்ப காலத்தில் விரும்புபவர்கள் தாங்கள் விரும்பிய இடத்தில் தங்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் முகாமில் பதிந்துவிட்டு, வெளியே சென்று வாழ்வார்கள். 1990க்களின் பின் தமிழீழ விடுதலை இயக்கங்களின் ஆயுத நடவடிக்கைகள் தமிழகத்தில் அதிகரித்ததையடுத்து அனைவரும் முகாம்களுக்குள் முடக்கப்படும் நிலை உருவானது.

ஆயினும் முகாம்களுக்கு வெளியே தற்போது 35,000 பேர் வரை வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது. இவர்கள் ஓரளவு சுயாதீனமாக செயற்படக் கூடியதாக உள்ளது.

இந்த யுத்தகாலத்திற்கு முன்னதாகவும் ஒரு இடப்பெயர்வு நிகழ்ந்தது. அது முற்றிலும் மாறுபட்டது. இலங்கை அரசினால் (தமிழ் காங்கிரஸின் ஒத்துழைப்போடு) பிரஜாவுரிமை மறுக்கப்பட்ட மலையகத் தமிழர்கள் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் 1970க்களின் நடுப்பகுதிகளில் கடலூரில் குடியிருக்கின்றனர். இவர்களுடைய பகுதி சிலோன் காலனி என்றழைக்கப்படுகின்றது.

சிறப்பு முகாம்கள், இம்முகாம்களில் இருந்து முற்றிலும் வேறானது என்கிறார் தோழர் எஸ் பாலச்சந்திரன். முன்னாள் சிறப்புமுகாம் கைதியான தோழர் எஸ் பாலச்சந்திரன் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் ‘சிறப்பு முகாம்கள்’ முற்றாக மூடப்பட வேண்டும் என்றும்; அம்முகாம்கள் அடிப்படை மனிதவுரிமைகளை மீறுவதாகவும்; அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் எவ்வித விசாரணைகளும் நடத்தப்படாமல் காலவைரயறையற்று தடுத்து வைக்கப்படுவதாகவும்; குற்றத்திற்கு தண்டனை பெற்ற பின்னரும் கூட அவர்கள் விடுதலை செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். இவருடைய சிறப்பு முகாம் அனுபவப் பதிவுகள் தேசம் சஞ்சிகையில் வெளிவந்ததுடன் அவற்றை தொகுத்து தோழர் எஸ் பாலச்சந்திரன் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூலாக வெளியிட்டும் உள்ளார். தற்போது லண்டனில் வாழும் எஸ் பாலச்சந்திரன், லண்டனில் வாழும் வேறும் சிறப்பு முகாம் கைதிகளையும் தேசம்நெற்க்கு அறிமுகப்படுத்தி இருந்தார். அவர்களில் ஒருவர் தேசம்நெற் உடன் தனது அனுபவத்தை பகிர்ந்துகொள்கையில், தன்னுடைய முதற் குழந்தையை கை விலங்கு அகற்றப்படாமல் விலங்கிடப்பட்ட கைகளோடு தூக்கியது இன்னமும் தனது நினைவில் நீங்காமல் இருப்பதாகத் தெரிவித்தார்.

அன்று பல நூறு பேர்களாக இருந்த சிறப்பு முகாமில் இன்று எண்ணிக்கை 70ற்கும் குறைவாகவே வந்துவிட்டதாகக் கூறும் தோழர் எஸ் பாலச்சந்திரன், சிறப்பு முகாம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் அது மத்திய அரசின் தேசிய பாதுகாப்பின் கீழ் மத்திய புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும் தெரிவித்தார். அது ஈழத்தமிழருக்கான ஒரு சிறைக்கட்டமைப்பாக இருந்த நிலைமாறி வேறு நாட்டவர்களும் சிறைவைக்கப்படுவதற்கான கட்டமைப்பாகவும் இருப்பதாகக் கூறினார்.

– 2 –

எண்பதுக்களின் நடுப்பகுதி முதல் கடைப்பகுதிவரை இவர்கள் ஓரளவு கௌரவமாகவே நடத்தப்பட்டனர். ஆனால் பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு முதல் சிறிபெரம்புத்தூர் ராஜீவ் படுகொலை வரை தமிழகத்தில் நடைபெற்ற ஈழவிடுதலை இயக்கங்களின் ஆயுத வன்முறைகள் இந்நிலையை முற்றாக மாற்றிவிட்டது. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட யுத்த சூழலும் தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழ் அகதிகள் விடயத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஈழவிடுதலை இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சிறப்பு முகாம்களில் எவ்வித விசாரணைகளும் இன்றி அடைக்கப்பட்டனர். 1990 இல் ஈபிஆர்எல்எப் பத்மநாபா உட்பட்டவர்களை படுகொலை செய்தவர்களை அன்றைய திமுக அரசு தப்பிக்கவிட்டது. அடுத்த ஆண்டு ராஜீவ்காந்தி படுகொலையை வைத்து தமிழகத்தில் திமுக ஆட்சியை அதிமுக ஜெயலலிதா கவிழ்த்து, தமிழகத்தின் ஆட்சியயைக் கைப்பற்றினார். 2000க்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

எண்பதுக்களின் நடுப்பகுதி முதல் தமிழகத்தில் தஞ்சமடைந்த அகதிகளுக்கு ஓரளவு அடிப்படை உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்பட்டு இருந்தது. பட்டமேற்படிப்பை மேற்கொள்ள விவசாயத்துறையில் (40 இடங்கள்), பொறியியல் துறையில் (20 இடங்கள்), மருத்துவத்துறையில் (10 இடங்கள்) தமிழக அரசு சலுகை வழங்கி இருந்தது. ஆனால் இவை ஆரம்ப காலத்தில் அகதி முகாம்களில் இருந்தவர்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால் பயன்பெற்றவர்கள்: இலங்கைத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகளும் அவர்களுடைய உறவுகளும் சகாக்களுமே.

ஆனால் இக்குற்றச்சாட்டை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அ அமிர்தலிங்கத்தின் மகன் மருத்துவ கலாநிதி பகீரதன் மறுக்கின்றார். 1983க்களில் வழங்கப்பட்ட பல்கலைக்கழக அனுமதியில், இலங்கையில் பல்கலைக்கழகம் சென்று படிப்பைத் தொடர முடியாத பலரும் தமிழகத்தில் கல்வியயைத் தொடர்ந்ததாகவும் அதிமுகா வின் செல்வி ஜெயலலிதா 1991இல் ஆட்சிக்கு வரும்வரை தமிழகத்தில் பல்கலைகழக இடஒதுக்கீடு பாதிக்கப்பட்ட மாணவர்களைச் சென்றடைந்ததாகவும் தெரிவிக்கின்றார். இக்காலகட்டங்களுக்கு முன் 1979இல் பல்மருத்துவ பிரிவுக்கு பரதெனியாவுக்கு தெரிவு செய்யப்பட்ட போதும் மருத்துவத்துறையில் கல்வியைத் தொடர்வதற்காக 1981இல் இந்தியா சென்று தன் மருத்துவ கற்கையயை மேற்கொண்டதாக தேசம்நெற் க்கு தெரிவித்தார்.

காசி ஆனந்தனின் இரு பிள்ளைகள், கேர்ணல் கிட்டுவின் மூத்த சகோதரரான காந்திதாசனின் இரு பிள்ளைகள் என பலர் பயன்பெற்றனர். அது தவறானதும் அல்ல. ஆனால் ‘இந்த உதவிகள் உண்மையாகப் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு கிடைக்கச் செய்யப்படவில்லை’ என்கிறார் அக்காலத்தில் தனது பிள்ளைகளை கற்பிக்க பல இன்னல்களை அனுபவித்த முன்னாள் போராளியாகி தமிழகத்தில் தஞ்சமடைந்த போல் பெர்னான்டஸ். ‘இந்த முகாம்களுக்கு எல்லாம் உதவுவதற்கு இந்திய மத்திய அரசாலும் தமிழக அரசாலும் அங்கிகரிக்க்பபட்ட ஒருவராகச் செயற்பட்ட சந்திரகாசனும் அவரது அமைப்பும் இத்தஞ்சமடைந்த தமிழர்களுக்கு இழைத்தது மிகப்பெரிய அநீதி’ எனத் தெரிவித்தார் போல் பெர்னான்டஸ்.

தமிழரசுக் கட்சியின் தலைவல் எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் மகன்தான் சந்திரகாசன். சந்திரகாசன் செல்வநாயகம் இந்திய உளவுத்துறையின் நம்பிக்கைக்குரிய நபர் என்பது அனைவரும் அறிந்த இரகசியம்.

அப்போது புளொட்டின் தலைவர் உமாமகேஸ்வரனுக்கு மிக நெருக்கமாகவும் நம்பிக்கைக்குரியவராக இருந்த வெற்றிச்செல்வன் தனக்கும் இந்திய உளவுப்பிரிவுக்கும் இருந்த தொடர்பை வெளிப்படுத்தி தனது முகநூலில் பதிவிட்டு வருகின்றார். இது பற்றி அவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில்இ ‘நான் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் உமாமகேஸ்வரனுக்கும் இந்திய உளவுத்துறைக்கும் இடையே ஒரு தொடர்புப்பாலமாக இருந்தேன்’ எனத் தெரிவித்தார். இந்த உறவானது முற்றிலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியலுடன் சம்பந்தப்பட்டதே அல்லாமல் அதனை இந்திய உளவுத்துறையின் முகவர் எனக் கொச்சைப்படுத்த முடியாது எனத் தெரிவித்தார். இவ்வாறான உளவுத்துறையுடனான தொடர்புகள் அவசியமானதும் தவிர்க்க முடியாததும் என வெற்றிச் செல்வன் தெரிவித்தார்.

தான் 1990க்களுடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கியது முதல் இந்திய உளவுத்துறையுடன் இருந்த தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டதாக தேசம்நெற்க்கு தெரிவித்தார். தற்போது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பற்றிய தொடரை எழுதிவரும் வெற்றிச்செல்வன்இ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் உமாமகேஸ்வரனின் படுகொலையின் பின்னணியயை எழுத உள்ளதாகவும் இதுவரை வெளிவராத பல தகவல்கள் வெளிவரும் எனவும் தற்போதைய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைமைக்கு இது இடைஞ்சலாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள விடுதலை அமைப்புகள் பற்றி வெளிவந்த நூல்களில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பற்றி வெளிவந்த நூல்களே அதிகம். வெற்றிச்செல்வனின் பதிவுகள் தொடர்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் உள்ளது. ஒரு காலத்தின் வரலாறு என்பது பல்வேறுபட்டவர்களினால்இ வெவ்வேறு கோணங்களில் எழுதப்படுவது தவிர்க்க முடியாதது. புதியதோர் உலகம் முதல் குமிழி வரை என்று நின்றுவிடாமல் இப்போது வெற்றிச்செல்வனின் சாட்சியமும் வெளிவருகின்றது. வெற்றிச்செல்வன் பெரும்பாலும் டெல்லியயை தளமாகக் கொண்டே இயங்கியவர். இவரது பதிவுகள் மீதான விமர்சனங்களும் நம்பகத்தன்மையும் வெவ்வேறு தரப்பினரால் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் நம்பகத்தன்மையை வரலாறு பதிவு செய்துகொள்ளும்.

ஒரு காலத்தில் இந்திய உளவுப் பிரிவுக்கு நெருக்கமாக இருப்பது சற்று கௌரவக் குறைச்சலாக கருதிய நிலைபோய்இ உளவுப் பிரிவின் முகவராக இருப்பது கௌரவம் என்ற நிலைக்கு இலங்கைத் தமிழர்கள் வந்தடைத்துள்ளனர். தற்போது பலரும் உளவுத்துறையினருடனான தங்கள் உறவுகளை வெளிப்படையாகவும் பெருமையாகவும் வெளிப்படுத்தி வருகின்றனர். சந்திரகாசனில் இருந்து அடைக்கலநாதன் வரை இதனை கௌரவமாகவே கருதுகின்றனர். தற்போது பலருடைய முகச்சாயமும் கரைந்து போய்விட்டது.

கட்டுரையை முழுமையாக வாசிக்க:

இந்திய உளவுத்துறை தங்களுக்கு சேவையாற்றுவதற்கு தமிழ், மலையக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் சகாக்களுக்கும் சலுகைகளை அன்று முதல் வழங்கி வந்தது. இந்த வசதிகளும் சலுகைகளும் சாதாரண அகதி மக்களைச் சென்றடையவில்லை. இதனால் பயன்பெற்ற இலங்கைத் தமிழ், மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களைச் சுற்றி உள்ளவர்கள் இன்றும் இந்திய அரசுக்கு மிகவும் விசுவாசமாக இருக்கின்றனரே அல்லாமல் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த தயாரில்லாதவர்களாகவே உள்ளனர். இப்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியாவில் அசையும் அசையாத சொத்துக்கள் இருப்பதும்; தொடர்ந்தும் வசதிகளும் சலுகைகளும் வழங்கப்பட்டுக் கொண்டிருப்பதும்; இவர்களுடைய இந்திய விசுவாசத்திற்கு மிக முக்கிய காரணம். அந்த விசுவாசத்தை வைத்து எவ்வித நன்மைகளையும் இவர்கள் பாதிக்கப்பட்ட, தஞ்சமடைந்த தமிழ் மக்களுக்கு இவர்கள் பெற்றுக்கொடுக்கவில்லை.

தாயகத்தில் உள்ள தங்களுக்கு வாக்களிக்கும் மக்களுக்கே இவர்கள் விசுவாசமாக உழைக்காமல் அவர்களை ஏமாற்றுகின்ற அரசியலையே முன்னெடுக்கின்ற போது, எப்போதுமே வாக்களிக்காத தமிழகத்தில் வாழும் மக்கள் விடயத்தில் இவர்கள் கவனமெடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதே சற்று பேராசையான விடயம்தான்.

ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின் அதிமுக ஆட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல், தமிழகத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள் சர்ச்சைக்குரியவர்களாக மாறினர். அவர்கள் மீதான கெடுபிடிகள் முடக்கிவிடப்பட்டது. தஞ்சம் பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விச்சலுகைகளை தமிழக அரசு நிறுத்தியது, மட்டுமல்ல 12ம் வகுப்புக்கு மேல் படிப்பதற்கே அரசு தடை உத்தரவு பிறப்பித்தது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உதவி வழங்குவதையும் ஜெ ஆட்சி தடுத்து நிறுத்தியது.

தமிழகத்தின் அப்போதைய நிலையை 2013 மே இல் புதிய ஜனநாயகம் என்ற சஞ்சிகையில், ‘ஈழ அகதிகள் : தமிழகத்தின் முள்வேலி முகாம்கள் !’ என்ற கட்டுரையில் சூரியன் என்பவர் வருமாறு விபரிக்கின்றார்: “முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் அகதி வீட்டுப் பெண்களை கியூ பிரிவு உளவுத்துறை போலீசார் வல்லுறவுக்கு ஆளாக்குவதும், மனைவியை அனுப்ப மறுக்கும் கணவன் மீது பொய்வழக்கு போடுவதும், முகாம்களுக்கு அருகில் உள்ள போலீசு நிலையங்களின் அதிகாரிகள் கேட்கும்போதெல்லாம், அவர்களுக்குத் தேவைப்படும் வழக்குகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைத்தண்டனை “அனுபவிப்பதற்கு” ஆள் அனுப்ப வேண்டியிருப்பதும், ஈழத்தமிழ் அகதிகள் அனுபவித்து வரும் இன்னபிற துயரங்களும் தமிழக மக்கள் பலரும் அறியாதவை” என்கிறார். இதனை தேசம்நெற்க்கு உறுதிப்படுத்திய போல் பெர்னான்டஸ் இப்பொழுதெல்லாம் சமூக ஊடகங்கள் சற்று பலமாக இருப்பதாலும் செய்திகள் வேகமாகப் பரப்பப்படுவதாலும் இவ்வாறான மோசமான செயல்கள் சற்று தணிந்து இருப்பதாகவும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சம்பவங்கள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கின்றார்.

இப்போது ‘விடுதலை செய்யுங்கள் அல்லது கருணைக் கொலை செய்யுங்கள்’ என்ற கோரிக்கையுடன் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுவது போன்று 2013 இல் இடம்பெற்ற சம்பசங்களை சூரியன் வருமாறு பதிவிட்டுள்ளார்: “செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் சசிகரன் என்பவர், கியூ பிரிவு போலீசின் துன்புறுத்தல் தாங்காமல், ஏப்ரல் 28 அன்று நஞ்சருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் வைக்கப்பட்டிருக்கிறார். பூந்தமல்லி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் சந்திரகுமார் என்ற தனது கணவரைப் பார்ப்பதற்குக் கூட அனுமதிக்கவில்லை என்று, இரண்டு குழந்தைகளுடன் முகாம் வாயிலில் உண்ணாவிரதம் இருந்தார் ஜெயநந்தினி என்ற ஈழ அகதிப் பெண். அதன் பிறகும் பார்க்க அனுமதிக்காதது மட்டுமின்றி, தற்கொலை முயற்சி வழக்கில் குழந்தைகளுடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செய்தி கேள்விப்பட்டு மனம் நொந்த சந்திரகுமார் தூக்கமாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். செங்கல்பட்டு முகாமில் சிறை வைக்கப்பட்டிருக்கும் 40 ஈழத்தமிழரையும் விடுவிக்க வேண்டும் என்று கோரி, சென்ற ஆண்டு செந்தூரன் என்ற ஈழ அகதி 27 நாட்கள் நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக 17 பேர் விடுவிக்கப்பட்டனர்”.

இதில் மிகவும் வேடிக்கையானது என்னவென்றால் இதே ஜெயலலிதா 2009 ஏப்ரலில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தங்களைக் காப்பாற்றுவார் என தமிழீழ விடுதலைப் புலிகள் மலையாக நம்பியிருந்தனர். இந்த நம்பிக்கைக்காகவே கடைசி யுத்தத்தில் மண்மூட்டைகளாக வன்னி மக்களைப் பயன்படுத்தி ஏப்ரல் இறுதியில் முடிய வேண்டிய யுத்தத்தை மே 18 வரை இழுததடித்தனர். 2009 ஏப்ரலிற்கு பின்னரேயே மிகக் கூடுதலானவர்கள் இறுதி யுத்த்தில் கொல்லப்பட்டனர். அம்மா ஜெ யின் வரவுக்காக தம்பி பிராபாகரன் காத்திருந்தார். இந்தத் தெளிவின்மைக்கு மக்கள் உயிர்களே இறுதியில் பலியிடப்பட்டு உள்ளது. கொள்கைத் தெளிவற்ற அரசியல் தலைமைகளின் முட்டாள்தனமான முடிவுகள் வகைதொகையற்ற மரணங்களுக்கு வித்திட்டமைக்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் நல்ல உதாரணமாகும்.

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் அகதிகள் அனைவருமே ஒரே மாதிரியான கஸ்டங்களையும் வேதனைகளையுமே அனுபவிக்கின்றனர். ஆனாலும் இந்த அகதிகள் ஒரே மொழி பேசி ஒரே மத நம்பிக்கையுடையவர்களாக இருந்தபோதும் காலகாலமாக திணிக்கப்பட்ட முரண்பாடுகள் இன்றும் அவர்களைப் பிரித்தே வைத்துள்ளது. இந்தப் பிரிவினை தமிழ்நாட்டிலும் தொடர்கிறது. தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகள் இரு பிரிவினராகப் பார்க்கப்படுகின்றனர். இந்தியபூர்வீகத்தைக் கொண்டவர்கள் ‘இலங்கைத் தமிழர்கள் – சிலோன் காரர்’ என்றும் ஏனைய தமிழர்கள் ‘ஈழத் தமிழர்கள்’ என்றும் வகைப்படுத்தப்படுகின்றனர். அப்படிப் பார்க்கப்பட்ட போதும் அவர்கள் அனைவருமே இந்திய – தமிழக அரசுகளைப் பொறுத்தவரை ‘சட்டவிரோத குடியேற்றவாசிகள்’ என்றே நோக்கப்படுகின்றனர். தமிழ் நாட்டிலேயே நாடற்ற தமிழர்களாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

1970க்களின் நடுப்பகுதியில் இருந்து சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாடுகடத்தப்பட்ட மலையகத் தமிழர்கள் முதல் அண்மைக்காலம் வரை தமிழ்நாட்டுக்கு அகதிகளாகச் சென்ற தமிழர்கள் வரை அனைவருமே நாடற்றவர்கள். இவர்கள் கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக அங்கு வாழ்ந்த போதும் இன்றும் நாடற்றவர்களே. அவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளும் நாடற்றவர்களே. முதல் தலைமுறையான விரல் விட்டு எண்ணக் கூடிய சில அகதிகள் அங்குள்ள இந்தியப் பிரஜைகளை மணம்முடித்து இந்த நாடற்ற வாழ்விற்குள் இருந்து வெளியேறி உள்ளனர்.

ஆனால் 2003இல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது திருமணபந்தத்தில் ஒருவர் சட்டவிரோத குடியேற்றவாசியாக இருந்தாலும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் குடியுரிமை கிடையாது என்று அறிவித்தது. தமிழனாகப் பிறந்து தமிழ் நாட்டிலேயே நாடற்றவர்களாக்கப்படும் கொடியநிலை இன்னமும் தொடர்கிறது. சட்டவிரோ குடியேற்றவாசி என்றால் வாக்குரிமை மட்டுமல்ல வாழ்வாதாரத்திற்கான உரிமையே இல்லாமல் செய்யப்பட்டுவிடுகின்றது என்கிறார் போல் பெர்னானடஸ்.

இலங்கை அகதிகள் என்னதான் கஸ்டப்பட்டாலும் அரசு அவர்களுடைய கல்வியுரிமைகளைத் தடுத்தாலும் அவர்கள் தனியார் துறையினூடகக் கல்வி கற்று பட்டமேற்படிப்பை கணிசமான தொகையானவர்கள் முடித்துள்ளனர். முகாம்களில் உள்ளவர்கள் கூட மிகுந்த கஸ்டத்தின் மத்தியில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையோடு தங்கள் கல்வியயை முடித்துள்ளனர். ஆனால் அவர்களால் இன்னமும் ஒரு ஒளிக்கீற்றைக் கூட காண முடியவில்லை. நம்பிக்கைகள் சிதறடிக்கப்படுகின்றது. கணணித் தொழில்நுட்பத்தில் உள்ள இந்தியப் பிரஜையின் சம்பளம் 40,000 இந்திய ரூபாய் என்றால். அதே வேலைக்கு தஞ்சமடைந்த இலங்கைத் தமிழனுக்கு 15,000 இந்திய ரூபாய்களே வழங்கப்படும். அரசின் எவ்வித அடையாள அட்டைகளும் சலுகைகளும் வழங்கப்படாது. எவ்வித பத்திரங்களும் இன்றி சொத்துக்களை வாங்க முடியாது. வங்கி கணக்கை ஆரம்பிக்க முடியாது. முன்னேற்றத்திற்கான அத்தனை கதவுகளும் அடைக்கப்பட்டுள்ளது.

இதனால் விரக்தியுற்ற பலர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து 7,000 கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருக்கும் அவுஸ்திரேலியாவுக்கு பாதுகாப்பற்ற, உயிராபத்தான படகுகளில் பயணத்தை மேற்கொண்டு நூற்றுக் கணக்கில் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு இதுவரை 1,000 பேர்வரை உயிரிழந்திருக்கலாம் என மதிப்பிடப்படுகின்றது. இவையெதுவுமே குறும்செய்தியாகக் கூட பத்திரிகைகளை எட்டியிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இம்மக்கள் ஏழைகள். அனைவராலும் கைவிடப்பட்டவர்கள் .கேட்பதற்கு யாருமற்றவர்கள். அதனால் இவர்கள் பற்றிய செய்திகள் கூட யாருக்கும் பயனற்றதாகிவிட்டது. மெடிற்றிரேனியன் கடலில் ஆண்டாண்டு தோறும் ஆயிரக்கணக்கில் ஐரோப்பிய கனவுகளுடன் வரும் ஆபிரிக்கர்கள் கடலினுள் மூழ்கிவிடுகின்றனர். அதுபோல் எமது உறவுகளும் நூற்றுக் கணக்கில் இந்துசமூத்திரத்தினுள் மூழ்கிப் போகின்றனர்.

– 3 –

தமிழகத்தில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினை என்பது வெறுமனே அரசியல், மற்றும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது அல்ல. அன்று அந்த மண்ணுக்கு தங்களது பதின்ம வயதில் சென்று வாழ்க்கையை விதைத்தவர்கள்; இன்று அந்த மண்ணிலே வேர்விட்டு, அவர்களது பிள்ளைகள், பிள்ளை பெற்றுள்ளனர். அம்மண்ணிலே மூன்றாவது தலைமுறை ஒன்று உருவாகிக் கொண்டுள்ளது. அவர்களை சர்வசாதாரணமாக மீண்டும் இலங்கைக்கு வாருங்கள் என்று அழைத்துவிட முடியாது.

கடந்த நாற்பது ஆண்டுகளில் அவர்ளில் சிலர் இலங்கைக்கு கட்டம் கட்டமாக வந்துள்ளனர். 1987 இலங்கை – இந்திய ஒப்பந்தத்தோடு கணிசமானவர்கள் நாடு திரும்பினர். ஆனால் மீண்டும் யுத்தம் தொடங்கியது. 1992க்குப் பின் ஜெயலலிதா ஆட்சியில் ஆயிரக்கணக்கில் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனாலும் அவர்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கு செல்ல முடியாமல் மன்னார், வவுனியா, திருகோணமலை ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மீண்டும் யுத்தம் ஆரம்பித்தது. 2002 சமாதான ஒப்பந்தத்தை அடுத்து சிலர் திரும்பிச் சென்றனர். ஆனால் மீண்டும் யுத்தம். ஆனால் தமிழகத்தில் வேரூன்றியவர்கள் இப்போது மூன்றாவது தலைமுறையைக் காண்கின்றனர். மீண்டும் நாடு திரும்புவது என்பது இப்போது முதல் தலைமுறையினரின் கையில் இல்லை. இரண்டாம் மூன்றாம் தலைமுறையினர் இலங்கையை வரைபடத்தில் மட்டுமே பார்த்துள்ளனர். 2009 யுத்த முடிவிற்குப் பின் கூட தமிழ், மலையகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்மக்கள் விடயத்தில் குறிப்பாக எதனையும் செய்ய விரும்பவில்லை.

வடக்கின் முதலமைச்சராக இருந்த சி.வி விக்கினேஸ்வரன், காம வெறியன் பிரேமானந்தாவுக்கு துணை போனவர்களை சிறை மீட்க, அவர்களை விடுவிக்க, இந்திய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார். ஆனால் சிறப்பு முகாம் பற்றி வாயே திறக்கவில்லை. தமிழகத்தில் உள்ள இலங்கையர் யாருக்கும் இந்திய குடியுரிமை தேவையில்லை, அவர்கள் இலங்கை திரும்ப வேண்டும் என்று முட்டாள்தனமாக ஒரு கருத்தை வெளியிட்டார். இதே கருத்து ஏனைய தமிழ் தேசிய வாதிகளிடமும் புரையோடிப் போயிருந்தது. ஆனால் இவர்கள் யாரும் தாங்கள் மாகாண ஆட்சியில் இருந்த போதும் கூட தமிழகத்தில் இருந்து மீளக் குடியேறும் மக்களுக்கு எவ்வித வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முயற்சிக்கவே இல்லை.

இந்திய – தமிழக அரசும் இலங்கை அரசும் எப்படி இந்த மக்களை சுமையாக அல்லது தங்களுடைய பொறுப்பல்ல என்று கருதுகின்றனவோ அவ்வாறே தமிழ், மலையகபாராளுமன்ற உறுப்பினர்களும் அம்மக்களை சுமையாகவே கருதுகின்றனர். இதிலொரு அடிப்படை மாற்றம் நிகழ்வதற்கான வாய்பு இதுவரை தெரியவில்லை. அதற்குக் காரணம், தமிழ் தேசிய அரசியலுக்கு வெளியே தலைமுறை மாற்றம் ஏற்பட்டது போல் தமிழ் தேசிய அரசியலுக்குள் தலைமுறை மாற்றம் நிகழவில்லை அல்லது தமிழ் தேசிய அரசியலுக்குள் உள்வாங்கப்பட்டவர்களும் கூட பழைய அரசியல் அரிசுவடியுடனேயே அரசியலை நகர்த்துகின்றனர். இரா சம்பந்தனுக்குப் பதில் மாவையின் மகன் அரசியலுக்கு வந்தாலும் தமிழ் தேசிய அரசியலில் மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்பில்லை.

அதற்கு உதாரணமாக யூன் 17 அன்று இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே யை கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சந்தித்தனர். ‘எங்களை விடுதலை செய்யுங்கள் அல்லது கருணைக்கொலை செய்யுங்கள்’ என்று திருச்சியில் சிறப்புமுகாம் கைதிகள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். அவர்களோடு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உரையாடியும் இருந்தார். செல்வம் அடைக்கலநாதன் யூன் 14 அன்று புதிய தமிழக முதல்வர் மு க ஸ்ராலினுக்கு எழுதிய கடிதத்தின் சாரம்:

“இலங்கை வாழ் தமிழ் மக்கள் அயல் நாடாம் இந்திய தாய் திருநாட்டில் அடைக்கலம் புகுந்த வேளையில் இது வரை காலமும் ஆற்றி வந்த அளப்பரிய நன்மைகளை நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.

மேலும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு முகாம்களில் வாழும் இலங்கை வாழ் தமிழ் மக்களின் சிரமங்களையும் கஸ்டங்களையும் தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வந்து அதற்கான தீர்க்கமான சாத்தியமான முடிவுகளை எடுக்குமாறு தங்களை வேண்டி நிற்கின்றேன்.

அத்தோடு இந்த குடும்பங்களின் ஒரு சில குடும்ப தலைவர்கள் திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் தங்களது குடும்ப அங்கத்தவர்களுடன் இணைந்து தங்கள் வாழ்க்கையினை முன்னெடுக்க எதிர் பார்த்துள்ளனர்.

முகாம்களில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டும், திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் தங்களது விடுதலை தொடர்பாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் சிறைக்கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் இவர்களுடைய மன ஆதங்கத்தை கருத்தில் கொண்டு இவர்களுடைய விடுதலைக்காகவும் மேலான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் எனவும் நான் நம்புகிறேன்”.

இலங்கையின் உப சபாநாயகராக இருந்த, தற்போதும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் செல்வம் அடைக்கலநாதன் ஒரு மாநில முதல்வருக்கு எழுதிய கடிதத்தின் நிலை இது. ஒரு பத்தாம்பசலித்தனமான கடிதம். விடுதலை செய்யுங்கள் என்ற ஒரு கோரிக்கையைக் கூட அழுத்தம் திருத்தமாக எழுதத்துணிவற்ற, முதுகெலும்பற்ற தமிழ் தேசியவாதிகள். இன்று இலங்கைச் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அறுபது வரையான குற்றவாளிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். குறைந்தது ஒன்றுக்கு மேற்பட்ட படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள். அவர்களுடைய செயற்பாடுகளுக்கான ஆவணங்களும் அரசிடம் உண்டு. அப்படியிருந்தும் இலங்கைப் பாராளுமன்றத்திலேயே அவர்களை விடுதலை செய்யக் கோரி முழங்கும் உங்களுக்கு, இவ்வாறான எந்தக் குற்றச் செயலையுமே செய்யாத சில்லறைக் குற்றங்களுக்காக அல்லது பொய்வழக்கு போட்ட குற்றங்களுக்காக சிறையில் அடைத்து விசாரணையின்றி வைத்திருப்பவர்களை விடுதலை செய்யக் கேட்பதற்கு வாயில் என்ன கொழுக்கட்டையா? வைத்திருக்கிறீர்கள்.

சிறப்பு முகாம் தொடர்பான எவ்வித அதிகாரமும் தமிழக அரசிடம் இல்லை என்பது கூடவா ஒரு இயக்கத்தின் தலைவரான செல்வம் அடைக்கலநாதனுக்கு தெரியாது. சிறப்பு முகாம்கள் மத்திய அரசின் கீழ் உள்ளது. அது பற்றி இலங்கையில் உள்ள இந்தியத் தூதுவர் கோபால் பக்லேயுடன் தான் நீங்கள் பேச வேண்டும். யூன் 17ம் திகதி இந்தியத் தூதுவருடன் என்னதான் பேசினீர்கள்? வடக்கு – கிழக்கு அபிவிருத்தி, புதிய அரசமைப்பு, அதிகாரப் பகிர்வு என்று பேசியதாக அறிக்கை விடுகிறீர்கள். இதை யாரோடு பேச வேண்டும்? இலங்கை அரசாங்கத்தோடு. உங்களிடம் 5 ஆண்டுகள் வடமாகாண சபை இருந்ததே. அப்போது வடக்கு – கிழக்கு அபிவிருத்தி, அதிகாரப் பகிர்வு தொடர்பாக என்ன செய்தீர்கள்? அபிவிருத்தி செய்யவில்லை. அபிவிருத்தி என்ற பெயரில் அமைச்சருக்கு அமைச்சர் சுருட்டி; ஆளை ஆள் மாட்டி பதவியை விட்டு ஓட்டப்பட்டீர்கள். மிகுதி நிதியை திருப்பி அனுப்பினீர்கள். நியதிச் சட்டங்களை உருவாக்கவில்லை. அதனால் அதிகாரப் பகிர்வை தமிழ் மக்களால் பயன்படுத்த முடியவில்லை. நீங்கள் கொண்டுவந்த சி வி விக்கினேஸ்வரனே உங்களுக்கு ஆப்பு வைச்சு, இப்ப தனிக்கட்சி. ரெலோவும் புளொட்டும் இப்பவே யாரோடு ஒட்டினால் ஆசனத்தை தக்கவைக்கலாம் என்ற கணக்கில் தலையயையும் வாலையும் மாறி மாறிக் காட்டிக்கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு உண்ணாவிரதிகள் பற்றியெல்லாம் என்ன அக்கறை.

அப்படியானால் தமிழ் தேசியம் பேசாத அல்லது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி கோரும் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்கின்றனர்? ஆளும் கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் ஏன் பேசவில்லை? தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும், முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ஏன் குரல்கொடுக்கவில்லை? மக்களுக்காக நீங்கள் நிற்பதை உறுதிப்படுத்துவதற்கு இதுவொரு சந்தர்ப்பம் அல்லவா? வெறும் அரசியலுக்காக அல்ல உங்கள் இதயத்தையும் திறமையையும் ஒரு முகப்படுத்தி சிறப்பு முகாம் கைதிகளின் விடுதலையையும் தமிழகத்தில் உள்ள நாடற்ற தமிழர்களுக்கான தீர்வையும் முன்வையுங்கள்!

இலங்கை திரும்பி வந்து வாழ விரும்புபவர்களுக்கு சகல விதமான மறுவாழ்வு நடவடிக்கைகளும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுங்கள். இலங்கை ஜனாதிபதியை உங்கள் திட்டத்திற்கு சம்மதிக்க வையுங்கள். சிங்கள, முஸ்லீம், மலையக பாராளுமன்ற உறுப்பினர்களையும் உங்களோடு அணிசேருங்கள். தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் நீங்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டுங்கள். இவர்களின் தமிழ் தேசியவாதம் காலாவதியாகிப் போய்விட்டதை நிரூபியுங்கள். இவற்றை நீங்கள் செய்யத் தவறினால் தமிழ் தேசியவாதிகள் மீது வைக்கப்படும் அதே குற்றச்சாட்டு உங்கள் மீது வைக்கப்படும்.

1989 இல் இரணைதீவில் இருந்து இந்தியா சென்ற ஹம்சகௌரி சிவஜோதியின் தந்தை கனடிய உயர்ஸ்தானிகராலயத்தில் பணியாற்றியவர். கொழும்பில் இருந்து விடுமுறையில் கிளிநொச்சி சென்றிருந்த வேளையிலேயே, இவர் குடும்பத்தோடு இந்தியா செல்ல வேண்டிய நிலையேற்பட்டது. அவரைத் தேடிய கனடிய உயர் ஸ்தானிகர் அலுவலகம் அமெரிக்க உயர் ஸ்தானிகர் அலுவலகத்தோடு தொடர்பு கொண்டு இவர்களை ஒரு வாரத்திற்குள்ளாகவே அவசர கடவுச் சீட்டை ஒழுங்கு செய்து இலங்கைக்குத் அழைத்துவந்தனர். ஒரு உயர்ஸ்தானிகராலயம் இவ்வளவு பொறுப்போடு ஒரு பணியாளருக்காக இவ்வளவு செய்ய இயலுமானால் அந்த மக்களின் வாக்குகளைப் பெறும் தலைவர்கள் நீங்கள் எவ்வாறு இவ்வளவு பொறுப்பற்று நடந்துகொள் முடியும்?

இலங்கையில் இருந்து தமிழகம் சென்ற அனைவரும் மீண்டும் நாட்டுக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதற்கு அம்பாள்குளத்தில் இருந்து வெளியேறிய மற்றுமொரு குடும்பத்தின் கதை பொருத்தமாக இருக்கும். பத்து பிள்ளைகளைப் பெற்ற தாயும் தந்தையும் அதில் மூவர் வெவ்வேறு காரணங்களினால் தற்கொலை செய்துகொண்டதாலும் ஏனைய மூவர் திருமணம் செய்து கொண்டதாலும் மற்றைய நான்கு பிள்ளைகளோடு படகில் தமிழகம் சென்றனர். கணவன் இந்தியாவிலேயே இறந்து விட்டார். தமிழகம் சென்ற நான்கு பிள்ளைகளில் ஒருவர் அவுஸ்திரேலியாவிற்குச் சென்றுவிட்டார். ஏனையவர்கள் தமிழகத்திலேயே மணம் முடித்து வாழ்கின்றனர். அவர்களில் ஒருவர் இந்தியத் தமிழரையே திருமணமும் செய்துள்ளார். தற்போது வயதான தாயார் மட்டும்அவுஸ்திரேலியாவில் உள்ள மகனின் விருப்பப்படி மீண்டும் அம்பாள்குளத்தில் வந்து வாழ்கின்றார். அதனால் அனைவரும் இலங்கைக்கு வாருங்கள்! எங்கள் விகிதாசாரத்தை கூட்டுவோம்! என்று கேட்க முடியாது. ஆனால் இலங்கைக்கு வந்து வாழ விரும்புபவர்களுக்கு அவர்கள் நாடு திரும்புவதற்கான அத்தனை வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். அவர்களுடைய எதிர்காலத்திற்கான வாழ்வாதாரங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

மேலும் தமிழகத்திலேயே வாழ விரும்புபவர்களுக்கு தமிழக – இந்திய அரசுகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அம்மக்களின் கௌரவமான எதிர்காலத்திற்கு தமிழக – இந்திய அரசுகளுக்கு அழுத்தங்கள் வழங்கப்பட வேண்டும். தமிழ் – மலையகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அரசின் கைக்கூலிகளாக அல்லாமல் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகளாக செயற்பட கற்றுக்கொள்ள வேண்டும்.

50 ஆண்டுகளாக: அமிர்தலிங்கம் முதல் அடைக்கலநாதன் வரை ஆடும் முறை மாறவில்லை! ஆனால் ஆட்டம் தொடர்கிறது!! – த.ஜெயபாலன் .

கிரேக்கத் தத்துவஞானி சாக்கிரட்டீஸ் தன்னை ஒரு மேதை என்றார். அவர் தான் அவ்வாறு எண்ணியதற்கு என்ன காரணம் என்பதையும் மிகத்தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, “எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு நன்கு தெரியுமாதலால்  நான் ஒரு மேதை – I know that I am intelligent, because I know that I know nothing” என்கிறார் சாக்கிரட்டீஸ். தனக்கு ஒரு விடயம் தெரியாது என்பதை உணர்ந்த ஒருவரே அந்த விடயத்தைத் தேடுவதற்கும் அறிவதற்கும் தூண்டப்படுவார். அதன் மூலம் அறிவை வளர்த்துக்கொள்வார். ஆனால் தனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்று நம்புவவர்களிடம் தேடல் இருக்காது அறிவும் வளராது. இன்றும் சிறந்த விஞ்ஞானியாகக் கருப்படும் ஐசாக் நியூட்டன் கூட எமது மூதாதையர் குறிப்பிட்டது போல கற்றது கைமண் அளவு கல்லாதது உலக அளவு என்றே கூறுகின்றரர். இன்னும் கற்பதற்கும் அறிவதற்கும் நிறைந்த விடயங்கள் இருக்கின்றன என்பதையே அது குறிக்கின்றது.

ஆனால் தங்கள், தங்கள் கிணற்றுக்குள் வாழும் தமிழ் தேசிய வாதிகளோ தாங்கள் அனைத்தும் அறிந்துவிட்ட தோரணையில் அறிக்கைவிடுவதும் முடிந்த முடிவாக கருத்துக்களை முன்வைப்பதும் வேடிக்கையாக உள்ளது. இது ஒருவகை அதிமேதாவித்தனக் கோளாறு – superiority complex. பட்டும் இன்னமும் புத்தியில் தெளிவில்லை. சில சமயம் இது இவர்களுக்கு தீர்க்க முடியாத மரபணு சம்பந்தப்பட்ட பிரச்சினையாகவும் இருக்கலாம்.

இந்தப் பழமொழி அரசியல் அடிப்படையில் தவறு என்றாலும் தமிழ் தேசியத்திற்கு பொருத்தமாக இருப்பதால் குறிப்பிடுகிறேன். ‘குருடன் பெண்டிலுக்கு அடித்தது போல’ தமிழ் தேசிய வாதிகள் எப்போதாவது சொல்லவது, கத்துவது சரியாக இருந்துவிடுவதும் உண்டு. அதை வைத்துத்தான் அவர்களது அரசியல் பிழைப்பு நடக்கின்றது. ஆனால் தமிழ் மக்களுக்கு இவர்களால் எப்போதுமே இழப்புத்தான். உயிரை வகைதொகையின்றி இழந்தனர். அளவில்லாத உடைமைகளை இழந்தனர். இப்போது எஞ்சியிருக்கின்ற உரிமைகளை இழக்கின்றனர். பொருளாதாரத்தை இழக்கின்றனர். கல்வியை இழக்கின்றனர்.

தமிழ் மக்களின் உரிமைகளை, பொருளாதாரத்தை, கல்வியை அழிக்கின்ற விடயத்தை மிகச்சிரத்தையாக செய்துவருகின்றனர், தமிழ் தேசிய வாதிகள். பாராளுமன்றத்திலும் மாகாணசபையிலும் இவர்கள் தங்களை வளர்த்துக் கொண்டு மக்களை அழித்தனர். அரசியல் என்பதன் அடிப்படையே இயலாததை இயலுமாக்கும் திறன் – politics is the art of making imposible posible என்பதை உணராமல், தங்களை வளர்க்கும் திறன் என்று புரிந்து வைத்துள்ளனர். இவ்வளவு காலத்தில் இவர்கள் தங்களையும் ஒன்றும் பெரிய அளவில் வளர்த்துக் கொண்டதாகத் தெரியவில்லை. வைக்கோல் பட்டறையைச் சுற்றிச் சுற்றி வந்து குரைப்பவர்களாகவே உள்ளனர்.

இந்த லட்சணத்தில் மாவை சேனாதிராஜா வாரிசு அரசியலுக்கும் மகனைக் களமிறக்கி உள்ளார். மாவை சேனாதிராஜா ஒன்றும் தன் திறமையால் முன்னுக்கு வந்தவரல்ல. தனக்கு மேலுள்ளவர்கள் சுட்டுக்கொல்லப்பட படிப்படியாக முன்னுக்கு நகர்ந்தவர். இதே பாணியில் இப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி எப்போது பாடையில் ஏறுவார் தான் எப்போது பதவியேற்கலாம் என்று லண்டனில் இருந்து வந்த சாதிமான் எஸ்.அரவிந்தன் கிளிநொச்சியில் காத்துக்கிடக்கின்றார். இவருக்கு அரசியலுக்கு வர உள்ள ஒரே தகுதி யாழ்ப்பாண மேயர் செல்லன் கந்தையனை தன்னுடைய நண்பர் தங்கமுகுந்தனோடு சேர்ந்து அடித்ததே.

தங்கமோ பித்தளையோ முகுந்தன் யாழ்பாண நூலகம் எரிக்கப்பட்ட நாளை மாற்றி வைப்பேன் என்று சன்னதம் ஆடுகின்றார். மே 31 1981இல் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதை யூன் 1இல் எரிக்கப்பட்டது என்று எழுதி நூலக எரிப்பின் சூத்திரதாரிகளான காமினிதிஸ்சநாயக்காவைவும் சிறில் மத்தியூவையும் காப்பாற்ற முனைகின்றார். அ அமிர்தலிங்கம் மே 31 முதல் யூன் 2 வரை நடந்த சம்பவங்களை தொகுத்து குறிப்பிட்டுள்ளார். அதில் அ.அமிர்தலிங்கத்திற்கே எந்த நாள் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது என்பதில் உறுதி இருக்கவில்லை. அப்போதைய ஈழநாட்டின் தவறான செய்தியின் அடிப்படையிலேயே இந்தக் குழப்பம் ஏற்பட்டது. இவ்வாறு தான் தமிழ் தேசியம் புனைவுகளையே வரலாறாக்க கொக்கரிக்கின்றது. இப்படி சொந்த விடயங்களிலேயே விவரம் போதாதவர்கள் தற்போது வெளிவிவகாரம் பற்றியும் பேச ஆரம்பித்து விட்டனர்.

How LTTE killed TULF leader Amirthalingam - NewsIn.Asiaதமிழ் தேசியம் எப்போதும் பிரச்சினைகளைத் தணிக்க அல்லது தீர்த்துவைக்க விரும்புவதில்லை. எப்போதும் முரண்பாடை மோசமடையச் செய்யும் வகையிலேயே செயற்படும். அதற்கு அவர்களது அரசியல் போதாமை முக்கியகாரணம். 1980க்களில் அவர்களுடைய சமன்பாடு ‘எதிரியின் எதிரி, தங்களின் நண்பன்’. இந்த உலுத்துப்போன சமன்பாட்டைத் தான் அவர்கள் இன்றும் கடைப்பிடிக்கின்றனர். இலங்கை அமெரிக்காவின் நண்பன். இந்தியாவின் எதிரி. அதனால் இந்தியாவுக்கு சேவகம் செய்து, இந்தியாவை தமிழர்களின் நண்பனாக்கினால் தமிழர்களின் பிரச்சினையை, இந்தியா தீர்த்து வைக்கும். இதுதான் அன்று முதல் இன்று வரை தமிழ் தேசியம் பின்பற்றுகின்ற சமன்பாடு.

இந்தியாவின் அரசியல் வாரிசான ராஜீவ் காந்தியயைப் படுகொலை செய்த பின்னரும் கூட இந்தக் கூட்டம் இந்தச் சமன்பாட்டை மாற்றவில்லை. ராஜீவ் படுகொலை ஒரு துன்பியல் சம்பவம். ”கள்ளத்தோணிகள், தோட்டக்காட்டான்கள், வடக்கத்தையான்’ என்றெல்லாம் நாங்கள் செல்லமாகத்தான் கூப்பிடுகிறோம்.  மற்றும்படி நாங்களும் நீங்களும் நண்பர்கள் தான். எங்களுக்கு ஒன்றென்றால் தமிழகம் கொந்தளிக்கும்” என்றெல்லாம் இவர்கள் சில பஞ்டயலக் வைத்து அரசியல் செய்ததைவிட இவர்களிடம் ஒரு துளி அரசியல் தெளிவும் இருந்ததில்லை.

சங்கானை நிச்சாமத்தில் சாதியப் போராட்டத்திற்காக குண்டெறிந்த பொழுது அ அமிர்தலிங்கம்  சங்கானையயை சங்ஹாய் ஆக்குகிறார்கள் என்று புலம்பினார். இன்றோ யாழ்ப்பாணத்தில் சீனா பனிப்போர் தொடுக்கிறது என்று முன்னாள் மாகாணசபை அமைச்சர் அனந்தி அறிக்கைவிடுகின்றார். கடந்த 50 ஆண்டுகளில் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் மாறியிருக்கிறார்களே அல்லாமல் அவர்களுடைய அரசியலில் எந்தவித மாற்றமும் இல்லை.

2009இல் தமிழ் தேசியம் முள்ளிவாய்க்காலில் மண்கவ்வியதை அவர்களால் இன்றும் ஜீரணிக்க முடியவில்லை. தங்களுடைய அரசியல் போதாமையின் விளைவே இது என்பதை அவர்கள் இன்றும் ஏற்றுக்கொள்ளவில்லை. கீ போர்ட் மார்க்ஸிட்டுக்களும் தமிழ் தேசியப் பூநூல் அணிந்த காலம் அது. மதியுரைஞர் பாலசிங்கத்தின் இடத்தை நிரப்ப கீ போர்ட் மார்க்ஸிட்டுக்களுக்கு ஐபிசி இல் நேர்முகத் தேர்வுகள் பல நடந்தன. காற்றடிக்கும் பக்கம் சாய்ந்து இவர்கள் தமிழ் தேசியத்துக்கு மார்ஸிய மூலாம் பூசினர். பூசிய மூலாம் கொட்டிண்ண, தமிழ் தேசியம் வேகமாகக் கறள்பிடித்தது. இந்த கீ போர்ட் மார்க்ஸிட்டுகள் இன்று கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சியில் ‘ஓர்கானிக்’  வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். வறுமையில் வாழும் மாணவர்களுக்கு கல்வியூட்டுவதே அரசுக்கு துணைபோகும் என்று புரட்சிகர தமிழ் தேசியம் பேசியவர்கள் இன்று, ஓர்கானிக் தமிழ் தேசியப் புரட்சியில் மும்மரமாக ஈடுபட்டு உள்ளனர்.

கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் தேசிய அரசியல்வாதிகள், ஆய்வாளர்கள்,  கீ போர்ட் மார்க்ஸிஸ்டுக்களும் அ.அமிர்தலிங்கம் விட்டுப்போன சமன்பாட்டையே பயன்படுத்துகின்றனர். இந்தச் சமன்பாட்டில் எதிரியும் நண்பர்களும் மாறிவிட்டனர். இலங்கைக்கு இப்போதும் இந்தியா தான் எதிரியாம். அமெரிக்கா உட்பட மேற்குநாடுகளும் இலங்கைக்கு எதிரியாம். சீனா தான் இலங்கையின் நண்பனாம். அதனால் சீனாவுக்கு எதிராக தமிழ் மக்கள் கிழர்ந்து எழுந்து இந்தியாவையும்  அமெரிக்க நேசநாடுகளையும் குசிப்படுத்தினால், அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பார்களாம். இதுதான் தமிழ் தேசியவாதிகளான பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் முதல் அனைவரதும் முடிவான நிலைப்பாடு. இந்தப் பின்னணியில் தான் இவர்கள் இப்போது கத்தி வருகின்றனர்.

இந்தப் பின்னணியில் வைத்துத்தான் தமிழ் தேசியவாதிகள் ஏன் அறிக்கை விடுகின்றனர்; கத்துகின்றனர்; ஏன் அறிக்கைவிடவில்லை; கத்தவில்லை என்பதைப் பார்க்க வேண்டும். வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்  சார்ள்ஸ் நிர்மலநாதன் “இலங்கை அரசாங்கம் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியாவை எதிர்த்து சீனாவின் பக்கம் நிற்பதனாலேயே கொரோனா தடுப்பூசிகளை வழங்க குறித்த நாடுகள் முன்வருவதில்லை” என்று முற்று முழுதான பொய்யான தகவலை வெளியிட்டது வேறொன்றுக்கும் அல்ல. அமெரிக்க, பிரித்தானிய நேச நாடுகளையும் இந்தியாவையும் குசிப்படுத்தி அவர்களுடைய தூதரகங்களில் கவனத்தைப் பெறவே.

உலகின் செல்வந்த நாடுகளான அமெரிக்க, பிரித்தானிய நேச நாடுகளின் கூட்டத்தொடர் பிரித்தானியாவின் சுற்றுலாக் கடற்கரைப் பிரதேசமான கோன்வோலில் நடைபெறுகின்றது. அங்கு  வைத்துத் தான் இந்த நேசநாடுகள் ஒரு பில்லியன் (பத்துக்கோடி) வக்சீன்களை வறிய நாடுகளுக்கு வழங்க முன்வந்தன. இந்த உதவியயைச் செய்ய முன் வந்தமைக்கு காரணமே எங்கே சீனா இந்நாடுகளுக்கு வக்சீனை வழங்கி ராஜதந்திர ரீதியில் தங்களை தோற்கடித்துவிடும் என்ற பயத்தினால் என்பதை பிரித்தானியாவின் முன்னணிப் பொருளியல் பத்திரிகையான ‘பினான்சியல் ரைம்ஸ்’ நேற்று முன்பக்கத்தின் தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. இன்னும் பல ஊடகங்களும் இதனை வெளியிட்டு இருந்தன. இந்த செல்வந்த நாடுகளின் மாநாட்டில் சீனா இடம்பெறாத போதும், இம்மாநாட்டில் சீனாவே ஆளுமை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஆபிரிக்க ஒன்றியம் இந்தச் செல்வந்த நாடுகளின் உதவியயே வரவேற்றிருந்த போதும், இந்நாடுகளின் போக்கை ‘தடுப்பூசி இனவாதம்’ என பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் கண்டித்து இருந்தது. நோயைக் கட்டுப்படுத்தும் வக்சீனை ஏனைய நாடுகள் உருவாக்கத் தடைவிதித்துவரும் இந்தச் செல்வந்த நாடுகள், உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுக்கொண்டதால் பத்துவீதத்தையே வறிய நாடுகளுக்கு கையளிக்க முன்வந்துள்ளன. அதுவும் எப்போது இந்நாடுகளைச் சென்றடையும் என்பது இன்னமும் புதிராகவே உள்ளது. சீனாவும் ரஸ்யாவும் தங்களது வக்சீனை வறிய நாடுகளுக்கு வழங்கி வருவதால் தான் இந்தச் செல்வந்த நாடுகள் தங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள குறைந்தளவு வக்சீனை அதுவும் காலதாமதமாக வழங்க முன்வந்தன.

யாழ்ப்பாணத்தில் இந்தியா – சீனா இடையே பனிப்போருக்கான வாய்ப்பு என்று அனந்தி சசிதரன் யூன் 11இல் வலம்புரியில் வெளியிட்ட கருத்துக்களும் இந்தப் பின்னணியிலேயே நோக்கப்பட வேண்டும். செல்வந்த நாடுகளின் தூதராலயங்கள் சார்ள்ஸ் நிர்மலநாதன், அனந்தி சசிதரன் போன்ற விபரமும் விவேகமுமற்றவர்களைக் கொண்டு அந்தந்த நாடுகளில் தங்களுக்கான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன.

Selvam Adaikalanathan - Photos | Facebookதிருகோணமலை சம்பூரில் அனல் மின்நிலையம் அமைக்கப்படுவது தொடர்பிலும் திருச்சியில் விடுதலை செய்யுங்கள் அல்லது எங்களை கருணைக்கொலை செய்யுங்கள் என்று கூறும் இலங்கைத் தமிழ் அகதிகள் விடயத்தில் தமிழ் தேசியவாதிகள் மௌனமாக இருப்பதும், இதனால் தான். இந்த அகதிகளோடு தொலைபேசியில் உரையாடியதாகக் கூறும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளிப்படையாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற சமன்பாட்டில் அரசியல் விபரமும் விவேகமுமற்ற அ அமிர்தலிங்கம் முதல்  செல்வம் அடைக்கலநாதன் வரை பிரபாகரனின் முன்னாள் ஆலோசகர் மு திருநாவுக்கரசு உட்பட எல்லாத் தமிழ் தேசியவாதிகளும் இந்தியாவின் தாளத்துக்கு தப்பாமல் ஆட்டத்தை தொடர்கின்றனர்.
_._._._._._
அகர வரிசையில் அனந்தி முதல் உயிர்மெய் வரிசையில் கடைசியில் வரும் விக்கினேஸ்வரன் வரை தமிழ் தேசியத்தை தூக்கிப்பிடிப்பவர்கள் தாங்கள் வாழும் கிணற்றுக்கு வெளியே பெரியதொரு உலகம் இருக்கின்றது என்பதை ஒரு போதும் எண்ணிப் பார்க்காமலேயே வாழ்ந்தும் கத்தியும் பழகிவிட்டனர். இந்த இருவருக்கும் இடையேதான் மற்றைய தமிழ் தேசியவாதிகளும் தங்கள் தங்கள் கிணற்றுக்குள் வாழ்ந்தும் கத்தியும் வருகின்றனர். இவர்களது கத்தல்களையும் புலம்பல்களையும் காதுகுத்து மற்றும் மரணச் செய்திகளுக்கிடையே வெளியிடுவதற்கு சில ஊடகங்கள்: உதயன், வலம்புரி, காலைக்கதிர், லங்காசிறி ஜப்னா நியூஸ் என்று காத்திருக்கும் அளவுக்குத் தான் தமிழ் தேசியத்தின் இருத்தல் இருக்கின்றது.

 

தமிழ் தேசியத்துக்கு கிடைத்த ஒரேயொரு மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தையும் தலைவர் துரத்திவிட்டதும் அவர் இயற்கை எய்தியதும் வரலாறாகிப் போனபின் அந்த இடம் இன்னமும் வெற்றிடமாகவே உள்ளது. அந்த இடத்தை நிரப்ப பலர் போட்டி போட்டாலும் யாராலும் அதனை நிரப்ப முடியவில்லை. இப்போது அதற்குத் தேவையும் இல்லாமல் போய்விட்டது. தமிழ் தேசியம் இப்போது அல்ஸமியர் எனும் ஞாபகமறதி நோய் (தமிழில் அறளைபேர்ந்துவிட்டது என்றும் சொல்வார்கள்) க்கு ஆளாகிவிட்டது. அவர்களுக்கு பழையதும் ஞாபகம் இருக்காது. தாங்கள் என்ன கதைக்கின்றோம் என்பதும் ஞாபகம் இருக்காது. அதனால் அவர்கள் அரசியலில் இருந்து சுகவீன விடுமுறையில் செல்வது அவர்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் பேருதவியாக இருக்கும்.

எம் பி சார்ள்ஸ்ம் கொரோனாவும்: கொரோனா வைரஸில் இருந்து தப்பினாலும் ரிஎன்ஏ வைரஸில் இருந்து தப்பிக்க முடியவில்லை!!!

கொரோனாவையே கட்டுப்படுத்தும் தடுப்பூசி பத்து மாதங்களில் ரெடியாகிவிட்டது. ஆனால் தமிழ் தேசிய வைரஸ்களின் அழிவில் இருந்து தமிழ் மக்களை எந்தக் கடவுளாலும் காப்பாபற்ற முடியவில்லை. ஐம்பது வருடங்களாக இந்த தமிழ் தேசிய வைரஸ்கள் உருமாறி, உருமாறி காலத்திற்குக் காலம் தமிழ் மக்களை அழித்து வருகின்றன. சிங்கள பேரினவாதத்துடன் போட்டி போட்டு தமிழ் மக்களை அழித்து வருகின்ற இந்த தமிழ் தேசிய வைரஸ்கள்: தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய புடுங்கிகள்: (ரெலோ, புளொட், புலி) என்றெல்லாம் உருமாறி தமிழ் மக்களிடம் இருந்த கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பிடுங்கி எடுத்துக்கொண்டுள்ளனர்.

கேள்விச் செவியன் ஊரைக்கெடுத்த கதையாக தாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற கோதாவில் வீம்பு பேச்சுக்களும் வீம்புத்தனங்களும் செய்து தமிழ் மக்களை இன்று கடைநிலையில் கொண்டுவந்து விட்டுள்ளனர். அன்று ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ் தலைமைகளும் சரி, இன்று பாராளுமன்றம் செல்கின்ற அரசியல் தலைமைகளும் சரி இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. இவர்கள் எல்லோருக்கும் அறிவு எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. அதனால் அவர்கள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் முட்டாள்களாகவே எண்ணுகின்றனர். முன்னவர்களது அதிகாரவெறிக்கு தமிழ் மக்கள் மண் மூட்டைகளாக்கப்பட்டனர். பின்னையவர்களது பாராளுமன்றக் கதிரைகளுக்கு தமிழ் மக்கள் மந்தைக் கூட்டங்களாக்கப்பட்டனர்.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் தேசிய ஆயுதக் குழுக்களும் கட்சிகளும் தமிழ் மக்களின் குருதியயை குடித்தே வருகின்றனர். இதில் இரா சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், த சித்தார்த்தன் எல்லோருமே ஒரே டிஎன்ஏ உள்ள வைரஸ்கள் தான். இந்த வரிசையில் கடைசியில் உருமாற்றம் அடைந்தவர்கள் தான் சி வி விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் மற்றும் அவரில் இருந்து திரிபடைந்த மணிவண்ணன்.

வைரஸ்கள் திரிபடைந்து உருமாற்றம் பெறும் பொழுது பொதுவாக அவற்றின் வீரியம் குறைவடைந்து பலவீனமாகும். ஆனால் தமிழ் தேசிய வைரஸ்கள் திரிபடைந்தாலும் அவற்றின் தமிழ் மக்களை அழிக்கின்ற ஆற்றலில் எவ்வித பலவீனமும் ஏற்படவில்லை. அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார, பண்பாட்டு அனைத்து நிலைகளிலும் இவர்கள் தமிழ் மக்களை அழித்தொழித்து வருகின்றனர். பொறுப்பற்ற முட்டாள்கள் பொறுப்பான பதவிகளில் அமருகின்ற போது சமூகம் பேரழிவை நோக்கித் தள்ளப்படுவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

இதற்கு வளர்ந்த நாடுகள் வளர்முக நாடுகள் என்று விதிவிலக்குகள் இல்லை. பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனினதும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்மினதும் இந்திய ஜனாதிபதி நரேந்திர மோடியினதும் முட்டாள் தனமான முடிவுகளே இந்நாடுகளில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொரோனாவிற்குப் பலியாகக் காரணம். இன்று உலகமெங்கும் வளர்முக நாடுகளில் கொரோனாவிற்கு மக்கள் பலியாவதற்கு முக்கிய காரணம் பிரித்தானிய, அமெரிக்க அரசுகளின் பணத்தாசை மட்டுமே. அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் பதவிக்கு வரும்வரை கொரொனா தடுப்பூசியின் உரிமத்தை சிறிதுகாலத்திற்கு விட்டுக்கொடுப்பதாகத் தெரிவித்து இருந்தார். ஆனால் பதவிக்கு வந்த பின் அதனை அடக்கியே வாசிக்கின்றார்.

கொரோனா தடுப்பூசிக்கான உரிமம் விட்டுக்கொடுக்கப்பட்டு இருந்தால் உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பு வக்சின் உருவாக்கப்பட்டு கூடிய விரைவில் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் பெரும் தடையாக உள்ளன. இவர்களே இன்றைய கொரோனா கொலையாளிகள். தங்களுக்கு தேவையான போது மனித உரிமை அரசியலைத் தூக்கிப் பிடிக்கும் இவர்கள் இப்பொழுது தங்களால் பல்லாயிரக் கணக்காண மக்கள் கொல்லப்படுவதை நாசுக்காக மூடி மறைக்கின்றனர். இவர்களுடைய மேற்குலக பிரச்சார ஊடகங்களும் அதனை கண்டும் காணாமல் மௌனமாய் உள்ளன. தமிழ் தேசிய வைரஸ்களைப் போன்றவர்களே இன்னும் இந்த காலனித்துவத்திற்கு அடிமைச்சானம் எழுதிக்கொடுத்துவிட்டு கதையளந்து திரிகின்றனர்.

பொது மக்களின் வரிப்பணத்திலும் உலகெங்கும் இருந்து பெறப்பட்ட தகவலையும் அறிவையும் கொண்டு தயாரிக்கப்பட்ட வக்சீனுக்கு இப்பொது ஒரு சில உலகப்பெரும் மருத்துவ நிறுவனங்கள் உரிமம் பாராட்டுகின்றன. ரஸ்யாவினதும் சீனாவினதும் வக்சீனே இன்று வளர்முக நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வக்சீனை உற்பத்தி செய்து பிரித்தானியாவுக்கு வழங்கிய இந்தியாவுக்கே தன்னிடம் உள்ள வக்சினில் ஒரு பகுதியயை பிரித்தானியா வழங்க மறுத்திருந்தது சில வாரங்களுக்கு முன் வந்த செய்தி.

சுற்றத்தில் என்ன நடக்கின்றது என்பதை பார்க்காமல், கேட்காமல், தீரவும் விசாரிக்காமல் சார்ள்ஸ் நிர்மலநாதன் என்ற வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர், “இலங்கை அரசாங்கம் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியாவை எதிர்த்து சீனாவின் பக்கம் நிற்பதனாலேயே கொரோனா தடுப்பூசிகளை வழங்க குறித்த நாடுகள் முன்வருவதில்லை” என்று பாராளுமன்றத்தில் முழங்கினார்; அல்ல யாருக்கோ முதுகு சொறிந்தார்.

உலகில் கொரோனாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ பொலிஸ் அதிகாரம் உடைய நாடுகளே. அந்தக் கட்டமைப்புத் தான் அந்நாடுகளில் கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவியது. (அது மட்டுமே காரணம் அல்ல என்பதையும் குறித்துக்கொள்க.) அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையும் ஒப்பீட்டளவில் கொரோனாவை கட்டுப்பாட்டுக்கள் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கு இலங்கையின் இராணுவக் கட்டமைப்பும் ஒரு காரணம் என்பதை மருத்துவத்துறை சார்ந்தவர்களே ஏற்றுக்கொண்டும் உள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பத்தில் விட்ட அறிக்கைகளில் வடக்கு கிழக்கில் கொரோனா தடுப்பு மையங்களை உருவாக்குவதற்கே எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தாங்களும் ஏதோ அறிக்கை வெளியிட வேண்டும், பாராளுமன்றத்தில் முழங்க வேண்டும் என்பதற்காக சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அறிக்கை விடுவது பின்னர் அதுபற்றி மௌனமாக இருப்பது என்பது இவர்களுடைய சாக்கடை அரசியல் தந்திரம். அதற்கு தானும் சளைத்தவன் அல்ல என்பதை சாரள்ஸ் நிர்மலநாதன் நிரூபித்துள்ளார். “சுகாதாரத்துறையினர் செய்ய வேண்டிய வேலைகளை இராணுவத்தினர் செய்வதனாலேயே நாடு தற்போது பேராபத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த செயற்பாடு தொடர்ந்தால் மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது” என்று சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்து உள்ளார். எதை எதிர்ப்பது எதை ஆதரிப்பது என்ற விவஸ்தையே இல்லாத முட்டாள்களை பாராளுமன்றம் அனுப்பியதன் விளைவை தமிழ் மக்கள் அனுபவித்துத்தானே ஆக வேண்டும்.

இந்த தமிழ் தேசிய வைரஸ்களுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டால் எஞ்சியுள்ள தமிழ் சமூகமும் அழிந்துபோய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு விடயம் பற்றி பேசுவதாக இருந்தால் அதனைப் பற்றி தேடி ஆய்வு செய்து பேச வேண்டும். இல்லையேல் தெரியாத விடையத்தை பேசுவதைத் தவிர்க்க வேண்டும். தெரியாத விடையத்தை தெரிந்தது போல் காட்டி இப்படி ஊதிக்கெடுக்கின்ற ஆண்டிகள் சேர்ந்து தமிழ் மக்களுக்கு தமிழீழ மடம் கட்டித் தர வெளிக்கிட்டு உள்ளனர். இவர்கள் மடம் கட்டுகிறார்களோ இல்லையோ தமிழ் மக்களுக்கு கொல்லி வைப்பது என்றே விறகுக்கட்டைகளுடன் வலம்வருகின்றனர். ஜாக்கிரதை!

இலங்கையின் வரலாற்றில் இல்லாத சுற்றுச்சூழல் அனர்த்தம்! இரு வாரங்களாகியும் அணையாத தீ!!

எம்வி எக்ஸ் பிரஸ் பேர் என்ற சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கப்பல் இரு வாரங்களாகியும் தொடர்ந்தும் எரிந்துகொண்டும் கடலுக்குள் வெடித்துச் சிதறிக்கொண்டும் உள்ளது. இலங்கை – இந்திய கரையோர கடற்படையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவர முடிந்த போதும் பல முயற்சிகளை எடுத்த போதும் கப்பல் தொடர்ந்தும் எரிந்த வண்ணமே உள்ளது. தற்போது இலங்கையயை நோக்கி விசுகின்ற பருவக்காற்று இத்தீயை கட்டுப்படுத்த பெரும் தடையாக இருந்து வருகின்றது. கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் சிப்பந்திகள் 25 பேர் காப்பாற்றப்பட்டுவிட்டனர். ஆனால் கப்பலில் ஏற்றி வரப்பட்ட ஆபத்தான இரசாயணப் பொருட்கள் மற்றும் 300 தொன் எரிபொருட்கள் என்பன அளவிட முடியாத சேதத்தை இலங்கையின் கடற்பரப்பில் ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையின் மேற்கு கரையான நீர்கொழும்பு களுத்துறையைச் சுற்றியுள்ள 50 மைல் பிரதேசம் பாரிய பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. நுண் பிளாஸ்ரிக் துகள்கள் மற்றும் இரசாயணப் பொருட்கள்: நைற்றிக் அமிலம், சோடியம் குளோரைட் என்பன கடலில் கலப்பதுடன் கடல் வாழ் உயிரினங்களையும் பாதிப்படையச் செய்கின்றன. இப்பகுதிகளில் மீன் பிடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டு உள்ளதுடன் அயலில் உள்ள பகுதிகளிலும் மக்கள் கடலுணவுகளை பெற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர். ஏற்கனவே கோவிட் இனால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் தற்போது ஏற்பட்டுள்ள சுற்றுச் சூழல் நெருக்கடியால் மேலும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

“கடலுக்குள் செல்லாமல் வியாபாரத்தைச் செய்யாமல் எப்படி தனது குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்?” தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றார். டேவிட் பெர்னான்டோ. நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் நீர்கொழும்புப் பகுதி மீனவர். இந்த அனர்த்தத்தால் சிறிது காலத்திற்கு மக்கள் கடல் உணவுகளை தவிர்க்கவே விரும்புவார்கள் என்று சொல்லும் டேவிட் பெர்னான்டோ அவர்கள குற்றம்சொல்ல முடியாது என்றும் அவர்கள் கடலுணவை சாப்பிடத் தயங்குவது நியாயம்தானே என்றும் டேவிட் பெர்னான்டோ தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

கடற்பரப்பில் கடந்த இரு வாரங்களாக தொடரும் இந்த அனர்த்தம் சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது. கரையொதுங்கும் கழிவுகள் எதனையும் தொட வேண்டாம் என கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அனர்த்தத்தை கட்டுப்படுத்தவும் கரையொதுங்கும் கழிவுகளை பாதுகாப்பானமுறையில் அகற்றவும் ஆயிரக்கணக்கான கடற்படையினர் பாதுகாப்பு அங்கிகளோடு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இலங்கை, பிரித்தானியாவின் பயண அபாயப் பட்டியலில் சேர்க்கப்பட்டது!

சில மணிநேரங்களுக்கு முன்னதாக பிரித்தானிய அரசு இலங்கையை தனது சிவப்பு அபாய பட்டியலில் சேர்த்துக்கொண்டது. பிரித்தானியர்கள் எந்தெந்த நாடுகளுக்கு செல்வது என்ற முடிவை எடுப்பதற்கு வசதியாக வீதிப் போக்குவரத்து சமிஞை நிறப் பட்டியலை அறிமுகப்படுத்தியது. அதன்படி பச்சை நிறப்பட்டியலில் அடங்கும் நாடுகளுக்கு பிரித்தானியர்கள் பெரும் கெடுபிடிகள் இல்லாமல் பயணம் செய்யக் கூடியதாக இருந்தது. மஞ்சள் அல்லது அம்பர் நிறப் பட்டியலில் அடங்கும் நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும். இம்முறையின் படி சிவப்பு நிறப்பட்டியலில் உள்ள நாடுகளுக்கு அத்தியவசிய தேவையின்றி பயணிக்கக் கூடாது என பிரித்தானிய அரசு அறிவுறுத்துகின்றது. மேலும் இந்நாடுகளுக்கு பயணிப்பவர்கள் மீது நடைமுறை விதிகளும் கெடுபிடியாக இருப்பதுடன் இவர்கள் அரச கட்டுப்பாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் இடங்களில் இருவாரங்கள் வரை தனிமைப்படுத்தலுக்குள் வைக்கப்படுவர். பயணிகளே அதற்கான செலவுகளையும் பொறுப்பேற்க வேண்டும்.

இந்தப் பயணக் கட்டுப்பாடுகள் சுற்றுலா மற்றும் பயணத்துறையயை பாரதூரமாகப் பாதிப்பதுடன், பயணிகளது பயணச் செலவையும் மிகவும் அதிகரித்துள்ளது. மே இறுதிப்பகுதியில் திருமண நிகழ்வுக்குப் பாரிஸ் சென்றிருந்த தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் (படம்) ஈரோ ஸ்ராருக்கு செலுத்திய £200 பவுண் பயணக் கட்டணத்துடன் கோவிட் பரிசோதணைகளுக்காக £305 பவுண்கள் செலுத்தியதாக தேசம்நெற் க்கு ஆதாரங்களுடன் தெரிவித்தார். பிரித்தானியாவை விட்டு நீங்குவதற்கு முன் கோவிட் இல்லை என்ற சான்றிதழைப் பெற £150 பவுண்கள் செலுத்தி உள்ளார். பின்னர் பாரிஸில் அதனைப் புதுப்பிக்க மேலும் £50 பவுண்களைச் செலுத்தி உள்ளார். ஏனெனில் முதற் சான்றிதழ் 72 மணிநேரங்களிற்கே செல்லுபடியாகும் என தனக்கு அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். அதன் பின்னர் பிரித்தானியாவிற்கு திரும்பி வந்து 10 நாட்கள் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தலில் இருக்கும் போது கோவிட் பரிசோதணைப் பொருட்களுக்காக £105 பவுண்கள் செலுத்தி உள்ளார். மொத்தத்தில் சஞ்சீவ்ராஜ் பாரிஸ் சென்று திரும்ப £505 பவுண்களைச் செலுத்தி உள்ளார். இதில் ஐந்தில் மூன்று பங்கு கோவிட் பரிசோதணைகளுக்காக தனியார் நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது.

தற்போது இலங்கையும் அபாயப்பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளதால் போகும் போது கோவிட் பரிசோதணை, தனிமைப்படுத்தல் இலங்கையில்; திரும்பி வரும் போது கோவிட் பரிசோதணை, தனிமைப்படுத்தல் என்று ஒவ்வொருவருடைய போக்குவரத்துக் கட்டணங்களும் இரு ஆயிரங்களைத் தொட்டு நிற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரித்தானிய கொன்சவேடிவ் அரசினால் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள: கோவிட் பரிசோதணை மற்றும் தனிமைப்படுத்தல் இடங்கள்; இதன்மூலம் கொள்ளை இலாபமீட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பிரித்தானியாவின் நிதி நேர்மையற்ற ஒருவராகக் கருதப்படுகின்றார். அவருடைய வீட்டுத் திருத்த வேலைகள் தொடர்பிலும் அவர் பொதுப்பணத்தில் கை வைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைப் போராளியின் மீதான கூட்டுப் பாலியல்வல்லுறவு: புளொட் – தீப்பொறி கொட்டியவர்களை காட்டிக்கொடுங்கள்!!! : த ஜெயபாலன்

பாலியல் வல்லுறவு என்பது மன்னிக்க முடியாதவொரு கொடும் குற்றம். ஆனாலும் இந்தக் கொடும் குற்றத்திற்கு ஆளான பெண்கள் சமூகத்தின் பழிச்சொல்லுக்கும் ஏளனத்திற்கும் பயந்து மௌனமாக்கப்படுகின்றனர். இது பாலியல் வன்கொடுமை செய்த ஆணைத் தப்பிக்க வைக்கின்றது. இதனால் இந்தக் கொடுமையயைப் புரிந்த ஆண்கள் எதிர்காலத்திலும் இவ்வாறான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டம், தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிரானதாக முன்னெடுக்கப்பட்ட போதும் அப்போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்ட பலர்: பெண்களை, ஏனைய சமூகத்தவர்களை, ஏனைய பிரதேசத்தவர்களை, ஏனைய மதத்தவர்களை ஒடுக்குபவர்களாகவும் மற்றையவர்கள் பற்றிய கழிவிரக்கம் அற்றவர்களாகவும் இருந்துள்ளனர்.

இவர்களை அரசியல் ரீதியில் வளம்படுத்தி மனித நேயர்களாக்குவதற்கான தேவையயை இயக்கங்கள் கொண்டிருக்கவலில்லை. அதற்கான கால அவகாசமும் அந்த இயக்கங்களுக்கு இருக்கவில்லை. சில அரசியல் வகுப்புகளினூடாக சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அடிப்படையில் பாரிய மாற்றங்கள் நிகழவில்லை. இது அனைத்து தமிழ் விடுதலை அமைப்புகளிலும் காணப்பட்ட ஒரு குணாம்சம். அதனால் தான் பெண்களுக்கு எதிரான அல்லது பெண்களை இரண்டாம் தரமாக எண்ணும் போக்கு, பாலியல் துன்புறுத்தல்கள், ஏனையவர்களுக்கு எதிரான வன்மம், சித்திரவதைகள், கொலைகள் சர்வ சாதாரணமாக தமிழீழ விடுதலை இயக்கங்களால் (குறிப்பாக புளொட் – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், புலிகள் – தமிழீழ விடுதலைப் புலிகள், ரெலோ – தமிழீழ விடுதலை இயக்கம்) மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எந்த விடுதலை இயக்கமும் விதிவிலக்காக இருக்கவில்லை.

2020 இல் கூட பிரித்தானியாவில் 118 பெண்கள், ஆண்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு குட்டித்தீவான இலங்கையில் 100,000 பேருக்கு 8 பாலியல் வல்லுறவு நடைபெறுகின்றது. ஒப்பீட்டளவில் இந்தியாவின் பாலியல் வல்லுறவு விகிதாசாரத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் விகிதாசாரம் நான்கு மடங்கு அதிகம். இந்தியாவில் 100,000 பேருக்கு இருவரே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகின்றனர். பாலியல் வல்லுறவு தொடர்பான மயையான விம்பங்களுக்குள் இருந்து நாம் வெளிவர வேண்டும்.

1980க்களின் நடுப்பகுதி, தமிழீழ விடுதலைப் போராட்டம் எழுச்சி கொண்டிருந்த காலம். அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணம் ‘பொடியளின்’ கைகளில் இருந்தது. புளொட், ரெலோ, புலி ஆகிய மூன்று பிரதான இயக்கங்களே ஆள் மற்றும் ஆயுத பலத்தில் முன்நின்றனர். புளொட் – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளை அணிசேர்த்து மிகப்பலமான ஆளணி உடைய அமைப்பாக இருந்தது.

அவ்வமைப்பின் தலைமையின் எதேச்சதிகாரப் போக்கு, இராணுவக் கட்டமைப்பிற்கும் அரசியல் கட்டமைப்பிற்கும் இடையே ஏற்பட்ட பிளவு குழுவாதப் போக்கு என்பன விடுதலைக் கனவோடு அல்லது சாகசங்கள் நிகழ்த்த வந்த பலரையும் இயக்கத்தை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்தது. இயக்கத்தை விட்டு வெளியேறுபவர்களை துரோகிகளாக கருதும் மனநிலை; தலைமைக்கு விசுவாசமான சிறுபிரிவினரிடம் இருந்தாலும்; பெரும்பாலானவர்கள் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அவ்வாறான வெளியேற்றங்களை தடுக்கவோ கட்டுப்படுத்தவோ முயற்சிக்கவில்லை.

அவர்கள் இயக்கத்தை விட்டு வெளியேறாமல் இருந்ததற்கு முக்கிய காரணங்களில் தங்களை நம்பி இயக்கங்களுக்குள் வந்தவர்கள்; அல்லது தங்களால் இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்களைக் கைவிட்டுவிட்டு தாங்கள் மட்டும் தப்பிச் சென்றுவிட முடியாது; என்ற எண்ணப்பாடும் முக்கியமானது. அதனை இங்கு எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது. மேலும், நாம் நம்பி வந்த இயக்கத்தை அதற்குள் போராடியே திருத்தலாம் என்ற நம்பிக்கையிலும் சிலர் இருந்தனர்.

அதனால் புளொட்டை விட்டு வெளியேறிய குறிப்பாக தீப்பொறிக் குழுவினர் அனைவரும் முற்போக்கானவர்கள் புரட்சியாளர்களும் அல்லர் புளொட்டை விட்டு வெளியேறாத அனைவரும் புளொட் தலைமையின் விசுவாசிகளும், துரோகத்தை சுமந்தவர்களும் அல்லர். ஆகவே புளொட்டில் இருந்து வெளியேறிய தீப்பொறிக் குழுவினரோ அல்லது வெளியேறாமலே இருந்த புளொட் அமைப்பினரோ சுத்தமான சுவாமிப்பிள்ளைகள் என்ற முடிவுக்கு யாரும் ஒரு தலைப்பட்சமாக வந்துவிடமுடியாது. இருதரப்பிலுமே அடிப்படை நேர்மையும் மனிதத்துவமும் உடையவர்களும் அற்றவர்களும் இருந்துள்ளனர். இந்தப் பின்னணியிலேயே புளொட்டின் 17 வயதேயான பெண் குழந்தைப் போராளியயை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சிலர் கூடியிருக்க வன்புணர்ந்த சம்பவத்தை நோக்க வேண்டும். இன்று அந்தப் பெண் போராளி எம்மத்தியில் இல்லை. அவருக்கு இழைக்கப்பட்ட மிகக் கொடிய குற்றத்தின் தாக்கத்தால் அவர் புலம்பெயர்ந்தும் தனது கொடிய நினைவுகளைவிட்டுப் புலன்பெயர முடியாமல் கொடூரத்திற்கு பிந்திய மனச்சிதைவுக்கு உள்ளாகி, இறுதியில் மரணம் அடைந்தார். 2011 மார்ச் 8 பெண்கள் தினத்தையொட்டி இச்சம்பத்தின் முக்கிய சாட்சியும் புளொட் அமைப்பின் மகளீர் அணியின் பொறுப்பாளராக இருந்தவருமான ஜெ ஜென்னி எழுதிய மூலக் கட்டுரையயையும் அதன் மீதான விவாதங்களையும் பார்க்க இவ்விணைப்பை அழுத்தவும்: https://www.padippakam.com/padippakam/document/EelamHistory/Janni/jnei04.pdf

இதில் உள்ள மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் இக்குற்றச்செயலை இழைத்த அக்குழுவினர் இன்றும் எம்மத்தியில் கௌரவத்தோடு வாழ்கின்றனர். அரசியல் செய்கின்றனர். முதலாளித்துவ சமூகமே சட்டதிட்டத்திற்கு கட்டுப்பட்டு ஏதோ யாருக்கோ நியாயம் பெற்றுக்கொடுக்க பல்லாண்டு பழமையான சம்பவங்களை தூசிதட்டி எடுத்து சம்பந்தப்பட்டவர்களை அம்பலப்படுத்த முயலும் போது; எமக்கு விடுதலை பெற்றுத் தரப்போவதாகவும், சமூகத்தின் முற்போக்கானவர்களாக தங்களைக் கட்டமைத்தவர்களும் முதலில் இவ்வாறான ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று வாதிட்டனர். ஆனால் அவர்களைச் சேர்ந்த ஒருவர் தனக்கும் அந்த வன்புணர்வுச் சம்பவத்திற்கும் தொடர்பே இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடமே எழுதி வாங்கி வைத்துள்ளார்.

இப்போது மீண்டும் இச்சம்பவம் எமது போராட்ட கனவான்களின் மீது பல கேள்விகளை எழுப்புகின்றது. அக்குழந்தைப் போராளியின் மீது வன்கொடுமை புரிந்தவர்கள் யாரும் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்த ஏலியன்கள் அல்ல. இக்கொடுமையயைப் புரிந்தவர்கள் புளொட் அமைப்பினர் அல்லது அதிலிருந்து வெளியேறிய குறிப்பாக தீப்பொறி சார்ந்தவர்கள் என்பது அப்போதைய சந்தர்ப்ப சூழ்நிலைகளின்படி உறுதியாகின்றது. யாழ் கொக்குவில் பொற்பதியில், புளொட் செறிந்திருக்கின்ற இப்பகுதியில் இவ்வாறான ஒரு சம்பவம் நடந்துள்ளது. மாற்று அமைப்புகள் எதுவுமே இச்சம்பவத்துடன் தொடர்புபடுத்தப்படவில்லை. அதனால் ஒரு குழந்தைப் போராளியின் மீது வன்கொடுமை புரிந்தவர்களை புளொட் அமைப்பும் தீப்பொறியினரும் இனம்கண்டு அம்பலப்படுத்த வேண்டும். இக்கொடுமை தனி ஒருவரினால் மட்டும் இழைக்கப்பட்டிருக்கவில்லை. இந்த உண்மைகளை தனியொருவர் மறைக்கவில்லை. ஒரு குழுவாகவே இந்த உண்மைகளை மறைக்கின்றனர்.

பாலியல் வல்லுறவு என்பது வெறுமனே பாலியல் இச்சையால் தூண்டப்பட்டு நடைபெறுகின்ற கொடுமை என்பது மிகவும் குறுகிய பார்வை. இக்குழந்தைப் போராளியின் மீது மேற்கொள்ளப்பட்ட கொடுமையானது, பிற்காலத்தில் யாழ் புங்குடுதீவில் மாணவி வித்தியாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமையுடன் ஒப்பிடக் கூடியதே. குற்றத்தை இழைத்தவர்கள் வித்தியாவை நன்கு தெரிந்தவர்கள். வித்தியாவின் குடும்பத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். அந்தப் பழிவாங்கல் மற்றும் பெண் மீதான தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்தும் வகையிலேயே இக்கொடுமையயைப் புரிந்தனர். இவ்விரு குழந்தைகளின் மீதும் இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு இடையே நிறைய ஒற்றுமைகளை அவதானிக்க முடியும்.

இவ்விரு பாலியல் வன்கொடுமைகளும் பாலியல் வன்கொடுமையாளர்களின் ஒத்த மனநிலையயை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கூட்டாக இணைந்து இவ்வண்கொடுமையயைப் புரிந்துள்ளனர். வன்புணர்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட பெண் சார்ந்தவர்களினால் பாதிக்கப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையிலேயே அக்கொடுமையயைப் புரிந்துள்ளனர். மாணவி வித்தியாவின் தாயார் வன்புணர்ந்தவர்களுக்கு எதிராக ஒரு வழக்கில் சாட்சி சொன்னதும், வித்தியா ஒருவனின் காதலை நிராகரித்ததும் வித்தியாவின் இக்கொடூர நிகழ்வுக்கு அடிப்படைக்காரணங்களாக இருந்தது. அதேபோல் குழந்தைப் போராளியின் வன்புணர்விலும் அக்கொடுமையயைப் புரிந்தவர்கள் தங்களது உரையாடலை பதிவு செய்ததை கேட்டுள்ளனர் தங்களை வேவுபார்ப்பதை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். தங்களுடைய அதிகாரத்தை நிலைநிறுத்துவதிலும் தங்களுடைய கொடிய செயலை நியாயப்படுத்தவும் அவர்கள் முயன்றுள்ளனர். ஒரு பெண்ணுடல் மீது ஆண் செலுத்தக் கூடிய அதிஉட்சபட்ச அதிகாரமே பாலியல் வன்புணர்வு. அவளைக் கொல்லாமல், விட்டுவைப்பது காலத்திற்கும் அவளைப் பழிதீர்க்கின்ற கட்டற்ற அதிகார வன்முறை. மாணவி வித்தியாவைக் கூட கொடியவர்கள் கொலைசெய்ய முற்பட்டதாகத் தெரியவில்லை. இழைக்கப்பட்ட கொடுமையினால் அவர் உயிரிழந்தார். குழந்தைப் போராளியின் விடயத்தில் கொடியவர்கள், அவள் தனக்கு நிகழ்ந்ததை மற்றவர்களுக்கும் சொல்லி அவர்கள் மீதும் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று எண்ணியுள்ளனர்.

இவ்விரு சம்பவங்களிலும் பாலியல் வன்புணர்வாளர்களின் மனநிலை சர்வதேச பாலியல் வன்புணர்வாளர்களின் மனநிலையோடு ஒத்ததாகவே இருந்துள்ளது. 1970க்களில் அமெரிக்காவில் 50 பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவர்கள் மத்தியில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பாலியல் வன்புணர்வு செய்தவர்கள் அதனை ஒத்துக்கொண்டும் இருந்தனர். இவர்கள் பல்வேறுபட்ட சமூக, பொருளாதார, கலாச்சாரப் பினினணிகளுடன் இருந்தனர். ஆகவே இவ்வாறானவர்கள் தான் பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவார்கள் என்றும் மற்றையவர்கள் ஈடுபடமாட்டார்கள் என்ற முடிவுக்கும் வந்துவிட முடியாது. புரட்சியாளன் போர்வையில் இருப்பவனும் மற்றையவர்களும் யாரும் இக்கொடுமையயை நிகழ்த்த தயங்காதவர்கள்.

பொதுவாக பாலியல் வன்புணர்வாளர்கள் மற்றவர்கள் பற்றிய கழிவிரக்கம் அற்றவர்களாகவும், தங்களைப் பற்றிய அதீத உணர்வுடையவர்களாகவும், தங்களுக்கு அதீத முக்கியத்துவம் அளிப்பவர்களாகவும், பெண்களை மதிக்காதவர்களாக, அவர்கள் மீது வெறுப்பை வெளிப்படுத்துவபவர்களாக இருப்பர். பாலியல் வன்புணர்வு என்பது பாலியல் இச்சையைக் காட்டிலும் அதிகாரத்தை நிலைநிறுத்தவே அது பெரும்பாலும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. பெரும்பாலும் இளம் ஆண்களினால் மேற்கொள்ளப்படுகின்ற பாலியல் வன்புணர்வுகள் பெருமளவில் அவர்களால் அறியப்பட்ட பெண்களுக்கு எதிராகவே மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பாலியல் வன்புணர்வாளர்கள் தெரியாத பெண்களை வன்புணர்வது அரிதாகவே நடைபெறுகின்றது. குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவரினால் பெரும்பாலும் அறியப்பட்டவர்களாகவே உள்ளனர்.

குழந்தைப் போராளியின் மீதான பாலியல் வன்புணர்வைச் செய்த கொடியவர்கள் அவருக்கு நன்கு தெரிந்தவர்களாகவும் அவரினால் அல்லது அவரைச் சார்ந்தவர்களினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் மற்றவர்கள் மீது கழிவிரக்கம் காட்டாதவர்களாகவும் இருந்திருக்க வேண்டும். இவர்கள் பெண்களை வெறுப்பவர்களாக, ஐயப்பாடு உடையவர்களாகவும் இருந்திருக்க வாய்ப்புண்டு.

கொடிய அச்சம்பவம் நடந்து நான்காவது தசாப்தத்தை எட்டுகின்ற நிலையிலும் கொடியவர்களை பாதுகாத்து வருகின்றோம். நட்புக்காக, உறவுக்காக ஒரு மிகப்பெரிய கொடுமையை மூடி மறைக்கின்றோம். இதில் தற்போது வெளிப்படையாக தங்களுடைய சாட்சியங்களை பதிவு செய்ய ஜெ ஜென்னியும் இச்சம்பவம் பற்றிய கேள்வியயை எழுப்பியுள்ள அசோக் என அறியப்பட்ட யோகன் கண்ணமுத்துவும் அன்றைய காலகட்டத்தில் புளொட் அமைப்பின் முக்கிய பொறுப்புகளில் இருந்த போதும் அவ்வமைப்புப் பற்றி என்றுமே ஒரே அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தவர்கள் அல்ல. இவ்விடயத்தில் சம்பந்தமுடையதாக தொடர்புபடுத்தப்படும் தீப்பொறி மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் இது தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு முன்வரவேண்டும். அதைவிடுத்து ஜென்னி மீதும் அசோக் மீதும் காழ்ப்புணர்வுகளைக் கொட்டுவது உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு எவ்விதத்திலும் உதவாது. முதலாளித்துவ நீதித்துறையே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ஆண்கள், தாங்கள் குற்றத்தை புரியவில்லை என்பதை நிரூபிக்க கோருகின்றது. அப்படியிருக்கும் போது விடுதலை வேண்டிப் போனவர்கள் அதே நோக்கத்திற்காகச் சென்ற ஒரு பெண்ணுக்கு நடந்த கொடுமையின் உண்மையை வெளிகொணர கடந்த மூப்பதற்கும் மேற்பட்ட ஆண்டுகளாக என்ன செய்கின்றார்கள்?

ஜெமினி – தேனீ – கருத்துச் சுதந்திரம்: கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு சுதந்திர வேட்கைகொண்ட மனிதன்

சரத்து 19: ஒவ்வொருவரும் சுயாதீனமான கருத்துக்களைக் கொண்டிருக்கவும் அதனை வெளிப்படுத்தவும் உரிமையுடையவர்கள். இந்த உரிமை என்பது இடையூறற்று கருத்துக்களைக் கொண்டிருக்கவும் தகவல்களையும் கொள்கைகளையும் தேடவும் எந்த ஊடகத்தினூடாகவும் எல்லைகளைக் கடந்தும் அதனை வெளிப்படுத்தவுமான உரிமையயை உள்ளடக்குகின்றது. – ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பிரகடனத்தின் 19வது சரத்து.

Article 19: Everyone has the right to freedom of opinion and expression; this right includes freedom to hold opinions without interference and to seek, receive and impart information and ideas through any media and regardless of frontiers.

இந்தக் கருத்துச் சுதந்திரத்தை நிலை நாட்டுவதற்காகப் போராடிய விரல்விட்டு எண்ணக்கூடிய ஊடகங்களில் ‘தேனீ’ இணையத்தளத்தின் பாத்திரம் மிகமுக்கியமானது. அதற்குப் பின்நின்ற ஜெமினியின் – கங்காதரனின் உழைப்பு மதிப்பிட முடியாதது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தமிழர்களை உலகெங்கும் புலம்பெயர நிர்ப்பந்தித்த போது, யுத்தத்தின் ஆரம்ப காலகட்டங்களில் வடக்கு கிழக்கை விட்டு, ஆரம்ப நாட்களில் புலம்பெயர்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் அராஜகப் போக்கினால் பாதிக்கப்பட்ட மாற்று இயக்கத்தைச் சார்ந்தவர்களே. இலங்கையில் மறுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தை, தாங்கள் புலம்பெயர்ந்த தேசங்களில் அவர்கள் கட்டியெழுப்ப முற்பட்டனர்.

ஆனாலும் மிகக் கூறுகிய காலத்தினுள்ளேயே கட்டமைப்பு ரீதியாக மிகப்பெரும் பலத்துடன் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கம், புலம்பெயர் தேசங்களிலும் கோலோச்ச ஆரம்பித்தது. கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான அரசியல் வன்முறையானது; அரசியல் படுகொலைவரை சென்றது. பாரிஸ், பேர்ளின், லண்டன், ரொறொன்ரோ, சிட்னி என வன்முறைகள் தொடர்ந்து சில படுகொலைகளும் நிகழ்ந்தது.

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மிகப்பெரும் பொருளாதார, அரசியல், பலம்பொருந்திய கட்டமைப்பாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் அராஜகத்திற்கு எதிராக தனியன்களாக; தங்களுடைய நாளாந்த குடும்பச் சுமைகளுடன், ஒரு சமூகத்தின் கருத்துச் சுதந்திரத்திற்காக ஒரிரு ஆண்டுகள் அல்ல கால்நூற்றாண்டாக போராடி வருவது என்பது சாதாரணமானதல்ல.

1990க்களின் பிற்பகுதியில் இணையத் தொழில்நுட்பம் வீச்சுப்பெறத்தொடங்கியது. இலங்கைத் தமிழர்களின் கருத்துச் சுதந்திரத் தளத்திலும் இது அதிர்வை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் பாரம்பரிய ஊடகங்களான பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி ஊடாக தங்கள் கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்டப் போராடியவர்கள்; அதற்கான கூட்டு உழைப்பை பெறுவதிலும், அதற்கான அதீத செலவீனங்களை தாங்க முடியாத நிலையிலும் தத்தளித்தனர். தங்களுடைய உழைப்பை வழங்குகின்ற அதேசமயம், தங்களுடைய வருமானத்தையும் செலவிட்டே இந்த கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைப் போராட்டத்தை நடத்தினர். இணையத்தின் வருகை இந்தச் செலவீனங்களை மிகமிக குறைத்துக்கொண்டது. வாசகர் பரப்பை நாட்டின் எல்லைகளைக் கடந்தும் விரித்துச் சென்றது.

தங்களுடைய உழைப்பினை மட்டும் வைத்துக்கொண்டு கருத்துச் சுதந்திரத்திற்காகப் போராட முடியும் என்ற ஒரு நிலையயை இணையத்தொழில்நுட்பம் வழங்கியது. உலெகெங்கும் பரந்திருந்த மாற்றுக் கருத்தாளர்களை இணைக்கின்ற தளமாக ‘தேனீ’ யயை ஜெமினி என எல்லோராலும் அறியப்பட்ட கங்காதரன் உருவாக்கினார்.

தேனீ, தேசம்நெற் (தேசம், லண்டன் உதயன், லண்டன் குரல்), ரிபிசி வானொலி என விரல்விட்டு எண்ணக் கூடிய ஊடகங்களே 1990க்களின் பிற்பகுதி முதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரங்களுக்கு சவாலாக செயற்பட்டு வந்தன. இணையத் தளங்கள் 2000ம் ஆண்டிற்குப் பின் வீச்சுப்பெற்று வந்தது. வன்னி யுத்தத்தின் போது தாயகத்தின் உண்மை நிலவரங்கள் மூடிமறைக்கப்பட்டு மக்கள் ஒரு மய உலகிற்குள் தள்ளப்பட்டிருந்த போது பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தது இந்த ஊடகங்கள் மட்டுமே.

இந்தப் பின்னணியிலேயே ஜெமினி – கங்காதரனின் வரலாற்றுப் பாத்திரத்தை என்னால் மதிப்பிட முடிகின்றது. ஒரு தனிமனிதனின் உழைப்பு ஒரு சமூகத்தின் கருத்துச் சுதந்திரத்தை தக்க வைத்துக்கொள்வதில் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தி இருக்கும் என்பதற்கு தேனீ இணையமும் ஜெமினியின் உழைப்பும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றால் அது மிகையல்ல.

ஜெமினி – கெங்காதரனை ஸ்ருட்காட் ஜேர்மனியில் ஒரு சில கூட்டங்களில் சந்தித்து பேசியதைத் தவிர எனக்கு அவருடன் அவ்வளவு உறவு இருந்ததில்லை. அவருடைய அரசியல் நிலைப்பாடுகளுடனும் எனக்கு அவ்வளவு உடன்பாடும் இருந்ததில்லை. ஆனால் அவருக்கு சமூகத்தின் மீது இருந்த நேசமும் அதற்காக அவர் செய்த தன்னலமற்ற அர்ப்பணிப்பும் எனக்கு ஜெமினி மீது எப்போதும் ஒரு மரியாதையயை ஏற்படுத்தியது. இரவோடு இரவாக அரசியல் ஞானம்பெற்ற ‘கீ போர்ட் மார்க்ஸிட்டுக்கள்’ மத்தியில் தான் நம்பிய அரசியல் கருத்துக்களுக்கா இறுதிவரை போராடிய ஒரு தன்னலமற்ற போராளி ஜெமினி. அப்படிப்பட்ட ஒரு போராளியயை இக்கொடிய நோய் கொண்டு போனது கருத்துச் சுதந்திரத்தை மதிக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட பேரிழப்பே.

“I disapprove of what you say, but I will defend to the death your right to say it”. Voltaire
“உன்னுடைய கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை, ஆனால் அதனைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமைக்காக எனது உயிரைக்கொடுத்தும் போராடுவேன்”. வோல்ரயர்

த ஜெயபாலன்
ஆசிரியர் தேசம் – தேசம்நெற்.