ஜெயபாலன் த

ஜெயபாலன் த

பிரித்தானிய அமைச்சரவையில் வரலாறு காணாத ராஜினாமாக்கள்! ஜெயவர்த்தனபுரவில் கோட்டா Go Home – லண்டனில் பொறிஸ் Bye Bye …!!!

இன்று இரவு வரை பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனை வெளியேறும்படி வற்புறுத்தி 43 அமைச்சர்கள், இளைய அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமாச் செய்துள்ளனர். 24 மணி நேரத்தில் இவ்வளவு தொகையான அமைச்சர்கள் ராஜிநாமாச் செய்தது நவீன பிரித்தானிய அரசியல் வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும். நேற்று மாலை ஆறு மணியளவில் சுகாதார அமைச்சுச் செயலாளர் சஜித் ஜாவட் ராஜிநாமாச் செய்து ஆரம்பித்து வைத்த இந்த அரசியல் நாடகத்தில் அடுத்த பத்து நிமிடங்களில் நிதியமைச்சர் ரிஷி சுனாக் ராஜிநாமாச் செய்தார். இன்று பிரித்தானியாவில் இயங்கும் அரசு இல்லாத நிலையேற்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிராக இவ்வாறான அரசியல் நெருக்கடி ஏற்படுகின்ற சூழலில் பிரதமர் ராஜிநாமாச் செய்வதே ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமையாக இருந்து வந்துள்ளது. ஆனால் இது எதற்கும் அசைந்து கொடுக்காமல் தடித்த தோலுடன் எவ்வித சுரணையும் இன்றி தான் தொடர்ந்தும் பதவியில் இருப்பேன் என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்து இருக்கின்றார். பிரதமர் பொறிஸ்க்கு முன்னர் அப்பதவியில் இருந்த திரேசா மே, டேவிட் கெமரூன், மார்பிரட் தட்சர் கூட நெருக்கடிகள் ஏற்பட்ட போது கௌரவமாக தங்கள் பதவியை ராஜிநாமாச் செய்தனர். ஆனால் பிரதமர் பொறிஸ் பதவி விலகுவதற்கான எவ்வித சமிஞ்சையையும் வெளியிடவில்லை. மாறாக தன்னிடம் மக்களாணை இருக்கின்றது என்றும் அடுத்த தேர்தல் வரை பதவியில் இருப்பேன் என்றும் தெரிவித்து வருகின்றார்.

ஆனால் பிரித்தானிய பிரதமருக்கு மிகநெருக்கமானவரான உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் இன்று பிரதமர் பொறிஸை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றது. பிரதமர் பொறிஸ்க்கு நெருக்கமான நதீம் சகாவி, கிராம் சாப் போன்ற அமைச்சர்களும் அவரை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது. தற்போது மூழ்கிக்கொண்டிருக்கும் கொன்சவேடிவ் அமைச்சரவைக் கப்பலில் இருந்து குதித்துத் தப்புவதிலேயே அமைச்சர்கள் தீவிரமாக உள்ளனர்.

கடந்தவாரம் கொன்சவேடிவ் கட்சியினால் கொண்டுவரப்பட்ட பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 38 வாக்குகளால் தோல்வி கண்டது. ஆனால் இன்னுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால் 38 பேர் கூட பிரதமர் பொறிஸ்க்கு ஆதரவாக வாக்களிப்பார்களா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஜெயவர்த்தனபுர பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வந்தபோது ‘கோட்டா கோ ஹோம்’ என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோசம் எழுப்பினர். அதேபோல் வெஸ்ற்மினிஸ்ரர் பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் பொறிஸ் கேள்வி நேரம் முடிந்து செல்லும் போது ‘bye bye … பொறிஸ்’ என்று இனிமேல் பாராளுமன்றம் வரவேண்டாம் என்று வழியனுப்பி வைத்தனர்.

இன்னும் சில மணி நேரங்களில் அல்லது சில தினங்களில் ஏற்படவுள்ள பிரித்தானிய பிரதமர் பதவி வெற்றிடத்திற்கு பத்து வரையான கொன்சவேடிவ் கட்சியின் உறுப்பினர்கள் அணி வகுத்துள்ளனர். முதலில் தன் அமைச்சுப் பதவியை ராஜநாமாச் செய்த சஜித் ஜாவட் உட்பட முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக் மற்றும் பலர் பொறிஸ்க்கு எதிரான அணியில் இருந்து போட்டியிட உள்ளனர். கல்வி அமைச்சராக இருந்து தற்போது கடந்த 24 மணிநேரம் நிதி அமைச்சராக இருக்கும் நதீம் சகாவி மற்றும் உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் உட்பட இன்னும் சிலர் பொறிஸின் வெற்றிடத்தை நிரப்ப அவர் பக்கம் இருந்து போட்டியிடுவார்கள் எனத் தெரியவருகின்றது.

பிரித்தானியாவில் அடுத்த தேர்தல் 2024 இலேயே நடைபெற வேண்டும். ஆனால் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மீது கட்சியின் அழுத்தம் மேலும் மேலும் இறுக்கமடைந்தால் பொறிஸ் ஜோன்சன் பொதுத் தேர்தலுக்கு அறிவிப்பு விடவும் வாய்ப்பு உள்ளது. அதனால் பொறிஸ் ஜோன்சனுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது. ஆனால் அத்தேர்தலில் வெற்றி பெற்றால் ‘போனால் மயிர். வந்தால் மலை’ என்பது தான் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் கணிப்பாக இருக்கும். இன்று தூக்கத்தில் அவருடைய சிந்தனை “தோல்வியை ஏற்றுக்கொண்டு எதுவுமே இல்லாமல் வெளியேறுவதா? அல்லது அடுத்த தேர்தலை அறிவித்து மீண்டும் மக்களிடம் செல்வதா?” என்பதாகவே இருக்கும்.

இவ்வாறான ஒரு பொதுத் தேர்தல் நடந்தால் அதில் பொறிஸ் ஜோன்சன் வெல்வார் என்பதும் கேள்விக்குறி. ஏனெனில் ஏற்கனவே பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பற்றி கட்டப்பட்ட விம்பம் சுக்குநூறாகி விட்டது. ஐரோப்பாவில் இருந்து வெளியேறுவதை – பிரிக்ஸிற்றை வைத்து தேர்தலில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்ற பொறிஸ் ஜோன்சனால் ஐந்தாண்டு பதவிக்காலத்தைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை.

இந்நிலைமை இலங்கையின் அரசியலுடன் ஒப்புநொக்கக் கூடிய வகையில் உள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தை வென்று தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டபாய ராஜபக்சவால் தற்போது அரசைக் கொண்டு நடத்த முடியாத நிலையேற்பட்டுள்ளது. ஒரு விடயத்தை சாதித்துவிட்டோம் என்பதற்காக அதுவே காலம் பூராவும் வாக்குகளைக் குவிக்கும் என எண்ணுவது மடமை. ஆப்பிரஹாம் மாஸ்லோவின் படிநிலைத் தேவை விதிக்கமைய ஒரு தேவை நிறைவேற்றப்பட்டால் மக்கள் அத்துடன் திருப்தியடைந்து அதே நிலையில் இருக்க மாட்டார்கள். அவர்களது தேவை படிநிலையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிடும். புதிய தேவையை ஆட்சியாளர்கள் பூர்த்திசெய்யாது விட்டால் மக்களின் எதிர்ப்புக்கு ஆட்சித்தலைமை உள்ளாகும். பிரித்தானியாவிலும் இலங்கையிலும் நடப்பது அதுவே.

அதுமட்டுமல்லாமல் நாடு மிகப்பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளது. அண்மைய வரலாறு காணாத விலைவீக்கம், அதனால் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கீழ்நிலையில் இருந்த வட்டிவீதம் தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. செல்வந்த நாடுகளின் கூட்டில் பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது ஸ்தம்பிதத்துக்கு வந்துவிட்டது. அதனால் பிரித்தானியா பொருளாதார நெருக்கடிநிலையை சந்தித்துள்ளது.

உக்ரைன் யுத்தத்திற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் கூடுதல் கரிசனை காட்ட அல்லது யுத்தத்தைத் தூண்டிவிட அந்நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை மறைத்து மக்களைத் திசை திருப்பும் எண்ணமும் முக்கிய காரணம். பிரித்தானிய பிரதமரின் லொக்டவுன் குடி கும்மாளம், அடுக்கடுக்காக அவர் அவிழ்த்துவிட்ட பொய்கள், உள்ளடக்கம் இல்லாமல் மிகைப்படுத்திப் பேசுவது, இறுதியாக பாலியல் குற்றங்கள், துஸ்பிரயோகங்கள் செய்தவர்களைக் கண்டுகொள்ளாமல் அவை பற்றித் தெரிந்திருந்தும் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அமைய பதவி உயர்வுகள் வழங்கியது, பின் அவற்றை மறைக்க பொய்புரட்டுக்களை அவிழ்த்துவிட்டது என இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் உள்நாட்டில் தங்கள் இருப்பைத் தக்க வைக்க உக்ரெய்னில் உக்கிரமான யுத்தத்தை நடத்தி வந்த போதிலும்; உள்நாட்டில் அவர்களுக்குள்ள நெருக்கடியை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. இத்தலைவர்களின் கயமைக்கு உக்ரெய்ன் மற்றும் பிரித்தானிய அமெரிக்க மக்கள் விலையைச் செலுத்துகின்றனர்.

பிரித்தானிய பிரதமர் பொறிஸ் கௌரவமாகப் பதவி விலகுவாரா? இல்லையேல் அவர் பலாத்காரமாக கட்சியினால் வெளியேற்றப்படுவாரா? இல்லையேல் அவர் பொதுத் தேர்தலை அறிவிப்பாரா என்பது இன்றும் சில மணி நேரங்களில் அல்லது சில தினங்களில் தெரியவரும். பொருளாதாரம் அரசியல் கற்போருக்கு அதனை அவதானித்து வருவோருக்கு இதுவொரு உலக ஆய்வுகூடம்.

முன்னைய செய்தி : https://www.thesamnet.co.uk//?p=86949

பிரித்தானியாவின் முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா! ஜனாதிபதி கோட்டாவுக்கு முன் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நிரந்தரமாகவே வீட்டுக்குப் போக வேண்டி வரலாம்!!

சில மணிநேரங்களுக்கு முன்பாக குறிப்பாக பிரித்தானிய July 05, நேரம் மாலை ஆறுமணி இரு நிமிடங்கள் அளவில் பிரித்தானிய சுகாதாரத்துறைச் செயலாளர் சஜித் ஜாவட் அமைச்சுப் பதவியில் இருந்து ராஜிநாமாச் செய்தார். அதனைத் தொடர்ந்து அடுத்த பத்து நிமிடங்களில் பிரித்தானிய சான்சிலர் ஒப் எஸ்செக்கர் என்றழைக்கப்படும் நிதியமைச்சர் ரிஷி சுனாக் பதவி விலகினார். பிரித்தானியாவின் மிக முக்கியத்துவமான இரு அமைச்சர்கள் பத்து நிமிட இடைவெளியில் பதவி விலகியுள்ளனர்.

“அரசாங்கம் சரியாகவும் தகமையுடனும் கனதியுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதற்கு தகுதியுடையவர்கள்” என்றும் இந்த அடிப்படைகளுக்காக போராடுவது அவசியம் என்பதால் தான் பதவி விலகுவதாக ரிஷி சுனாக் தனது பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

“பணிவு, பற்றிக் கொள்ளல், புதிய பாதை என்பனவே கடந்த மாதம் பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் அடிப்படை. ஆனால் கவலைக்குரிய விடயம் அது உங்கள் தலைமையில் சாத்தியமில்லை. அதனால் அமைச்சுப் பொறுப்பை ராஜிநாமாச் செய்கின்றேன்” என்று சுகாதார அமைச்சர் சஜித் ஜாவட் தெரிவித்து இருந்தார்.

பிரித்தானிய பிரதமரின் நேர்மையற்ற, ஓழுக்கமற்ற போக்குகள் நாட்டை முடக்கத்தில் போட்டுவிட்டு அரசு குடித்து கும்மதாளம் போட்டது போன்ற விடயங்கள் அண்மைக்காலமாக பெரும் நெருக்கடியை பிரித்தானிய அரசியலில் ஏற்படுத்தி இருந்தது. இவ்வாறான நெருக்கடிகளின் போதெல்லாம் உண்மைக்குப் புறம்பாக எல்லாவற்றையும் மூடி மறைத்து பொய்யை உண்மையாகவே சொல்லும் பிரதமர் பொறிஸ் ஜோன்சன், உண்மைகள் அம்பலத்துக்கு வந்ததும் அதனை வெறும் கண்துடைப்புக்காக ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கோருவார். இது ஒன்றல்ல இரண்டல்ல பல தடவைகள் நடந்தேறி பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நம்பத்தகுதியற்ற ஒருவராக ஆனார்.

இதைவிட பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் ஆளும் கன்சவேடிவ் கட்சிக்குள் பாலியல் வல்லுறவு துன்புறுத்தல் சம்பவங்கள் மிகவும் சாதாரணமாக இடம்பெற்று வந்தது. இவ்வாறான கயவர்களுக்கு எதிராக பிரதமர் பொறிஸ் ஜோன்சன் எவ்வித இறுக்கமான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை.

இந்நிலையில் கிறிஸ் பின்சர் கொன்சவேடிவ் கட்சியின் ஒழுக்கக் கட்டுப்பாடுகளுக்கு பொறுப்பான உதவித் தலைவராக நியமிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன் கிரிஸ் பின்சர் பாலியல் தொந்தரவு பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருபவர் என்ற குற்றச்சாட்டு ஏழுந்திருந்தும் பிரதமர் உடன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் கடுமையான அழுத்தங்கள் வரவே விசாரணைகள் முடியும் வரை கிரிஸ் பின்சர் பாராளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலத்தி வைக்கப்பட்டார்.

ஆனால் தற்போது அமைச்சர்கள் பதவி விலகுகின்ற அளவுக்கு போனதற்குக் காரணம், பிரித்தானிய பிரதமர் தெரிவித்த இன்னுமொரு பொய். அதாவது கிரிஸ் பின்சரை இந்த முக்கிய பதவியில் அமர்த்துகின்ற போது அவர் ஒரு பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுபவர் என்ற விடயம் தனக்கு தெரியாது என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்து இருந்தார். ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரே பிரதமருக்கு தனக்கு ஏற்பட்ட பாதிப்பை எடுத்துக் கூறியிருக்கின்றார். தற்போது எல்லாம் அம்பலமானதும் பிரதமர் பொறிஸ் தனது நடவடிக்கைக்காக மன்னிப்புக் கோரி இருக்கின்றார்.

ஏற்கனவே குடியும் கும்மாளமும் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கி இருக்கையில், கிறிஸ் பின்சர் விவகாரமும் அதனைத் தொடர்ந்து முக்கிய அமைச்சர்கள் ராஜிநாமாச் செய்ததும் பிரித்தானிய அரசியலில் பெரும் நெருக்கடி நிலையைத் தோற்றுவித்துள்ளது. கொன்சவேடிவ் கட்சிக்குள் தலைமைத்துவப் போட்டி இடம்பெற்றால் சஜித் ஜாவட் உம் ரிஷி சுனாக் கும் களமிறங்குவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் தங்களை அடுத்த தலைமைத்துவப் போட்டிக்கு தயார்படுத்தவே பதவி விலகியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது.

தனியார் வகுப்பு – தனித்து வகுப்பு: கணக்கு ஆசிரியர் மாணவர்களுடன் சேர்ந்த போட்ட கணக்கு! முல்லைத்தீவில் கா.பொ.த சாதாரண தரத்தில் கற்கின்ற 20 மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல்!!!

முல்லைத்தீவில் 20 மாணவிகள் மீது பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆசிரியர் யூன் 24இல் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஒருவரோடு முன்னிலையானார்.

முல்லைத்தீவின் முக்கிய பாடசாலை ஒன்றின் கணித ஆசிரியர் சில மாணவர்களின் துணையோடு மிகக் கீழ்த்தரமான பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமை அண்மையில் அம்பலமாகி இருந்தது. 1,500 முதல் 2,000 வரையான மாணவ மாணவிகள் கற்கின்ற இப்பாடசாலையில் காபொத சாதரண தர, உயர்தர வகுப்புகளுக்கு கணித பாடம் கற்பிக்கின்ற ஆசிரியரே இந்த பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். தனது முப்பதுக்களை இன்னமும் தொட்டிராத திருமணமாகாத இந்த ஆசிரியர் தச்துதன் என அறியப்படுகின்றார். இவரது படமும் வெளியிடப்பட்டுள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்ட இவர் கணித பாட ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி தேசம்நெற்கு தகவலளித்த அப்பாடசாலையின் கபொத உயர்தர முதலாம் ஆண்டு மாணவர், இவருடைய பாலியல் சேட்டைகள் அனைத்தும் அவருடைய பேர்சனல் க்கிளாஸ் (personal class) நடைபெறும் வீட்டிலேயே நடைபெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட 20 மாணவிகள் இவரிடம் தனியார் கல்விக்கு சென்றவர்களாகவே உள்ளனர். குறித்த பாடசாலையைச் சேர்ந்த மாணவிகளே பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மற்றுமொரு பெண்கள் பாடசாலையில் இருந்து இவரிடம் பேர்சனல் க்கிளாஸ் க்கு வந்த ஒரு சில மாணவிகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் பற்றி சம்பந்தப்பட்ட பாடசாலையின் மாணவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் தச்சுதன் முல்லைத்தீவில் தனியாக ஒரு வீட்டை எடுத்து பேர்சனல் க்கிளாஸ் எடுத்து வந்ததாகவும் அங்கு அவர் கபொத சாதாரண தரம் முடித்து உயர்தரம் முதலாம் ஆண்டு கற்கச் சென்ற மாணர்கள் சிலருக்கு மது பானங்களை வாங்கிக் கொடுத்து நட்பாகி தன்னுடைய கபடநாடகத்திற்கு அவர்களைப் பயன்படுத்தி உள்ளார். இம்மாணவர்களும் பருவ வயதின் கோளாறுகளுக்கு உட்பட்டு மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை அரைநிர்வாணமாக நிர்வாணமாக தங்கள் மொபைல் போன்களில் படங்களை எடுத்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு இந்த மோபைல் போன்களையும் தச்சுதனே வாங்கிக் கொடுத்துள்ளார் என்றும் அம்மாணவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தியதுடன் நிற்காமல் பேர்சனல் க்கிளாஸ் நடக்கும் வீட்டின் குளியல்அறையில் மாணவிகளுக்கு தெரியாமல் கமரா பொருத்தப்பட்டு அவை பதிவு செய்யப்பட்டும் உள்ளதாக அம்மாணவர் மேலும் தெரிவித்தார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் அத்தனை பேரும் தரம் 11 தரம் 12 யைச் சேர்ந்தவர்களே. அதாவது கபொத சாதாரண தர மாணவிகளும் உயர்தரத்திற்குச் சென்ற முதலாம் ஆண்டு மாணவிகளும் எனத் தெரியவருகின்றது.

ஆசிரியர் தச்சுதனுடன் சம்பந்தப்பட்ட சில மாணவர்களுடைய நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படவே சில மாணவர்கள் அவர்களுடைய மோபைல்களைப் பறித்து சோதணையிட்டுள்ளனர். அதன் போது மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள், விடியோக்கள், மாணவிகளுடன் தகாதமுறையில் நடந்துகொள்ளும் விடியோக்கள் என்பன இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் மீது ஏனைய மாணவர்கள் இளைஞர்கள் சிலர் தாக்கவே அம்மாணவர்கள் தச்சுதனை நோக்கி விரலைக் காட்டியுள்ளனர். இந்த இளைஞர்கள் ஆறு பேர் பொலிஸாரிகனால் கைது செய்யப்பட்டனர்.

தச்சுதனைப் தேடிப் பிடித்து அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மாணவர்கள் இளைஞர்கள் தெருவுக்கு இழுத்து வந்து அவரைத் தாக்கி உள்ளனர். இந்நிலையில் தலைமறைவான ஆசிரியர் தச்சுதன் யூன் 24 இல் சட்டத்தரணியூடாக நீதிமன்றில் முன்னிலையாகி உள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றில் எஸ் தனஞ்செயன் முன்னிலையாகி இருந்தார்.

பாதிக்கப்பட்ட மாணவிகளில் சிலர் மருத்துவ பரிசோதணைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தனர். அதன் போது அவர்களில் ஒரு மாணவி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. ஆசிரயர் தச்சுதனை மேலும் விசாரிக்க வேண்டி இருப்பதாலும் அவர் குற்றத்துடன் சம்பந்தப்பட்ட தடயங்களை பெற்றுக்கொள்ள வேண்டி இருப்பதாலும் தச்சுதனுக்கு பிணை வழங்கக் கூடாது என காவல்துறையினர் கேட்டிருந்தனர். முலைத்தீவு மாவட்ட நீதிபதி ரி சரவணராஜா ஆசிரியர் தச்சுதனை யூன் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

தச்சுதன் குறித்த பாடசாலையில் வைத்து மாணவிகளுடன் எவ்வித சேட்டையிலும் ஈடுபட்டதாக எந்தக் குற்றச்சாட்டுகளும் இதுவரையில்லை. ஆனால் இவர் இச்சம்பவத்திற்கு முன்னதாக வேறொரு பாடசாலையின் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்டு பிரச்சினைக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இச்செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.

பெண்கள் குறிப்பாக இளம் மாணவிகள் பாதிக்கப்படுகின்ற போது அவர்கள் சமூகத்தின் பழிக்கு ஆளாகவேண்டி வரும் என்பதால் இவ்வாறான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை அவர்கள் மௌனமாகவே கடந்து போகின்றனர். அதனால் இப்பாலியல் கொடுமையை இழைக்கின்றவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குவதேயில்லை. முல்லைத்தீவில் நடந்த சம்பவம் முதலாவது சம்பவம் அல்ல. அதே போல் அது கடைசிச் சம்பவமாக இருக்கப் போவதுமில்லை.

2009இற்கு முன்னதாக இவ்வாறான சம்பவங்கள் எதுவும் தமிழ் பகுதிகளில் நடைபெறவில்லை என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிப்பது மிகவும் வேடிக்கையானது. பொங்கு தமிழ் நடத்திய பேராசிரியர் கணேசலிங்கம் தன்னுடைய வீட்டில் வேலை செய்து வந்த மலையகச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய வழக்கு இலங்கையில் மிக அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அச்சிறுமி பின்னர் தமிழீழ விடுதலைப் புலகளால் காணாமலாக்கப்பட்டார்.

20.09.2005இ யாழ்ப்பாணத்தில் நீதியரசர் திருமதி சிறிநிதி நந்தசேகரம் முன்னிலையில் ‘பொங்கு தமிழ்’ கனேசலிங்கம் என்று யாழ்ப்பாணத்தில் பிரபலமாகத் அறியப்பட்டிருந்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் தங்கராசா கனேசலிங்கம்இ ஆஜர்ப்படுத்தப்பட்டார். இவர் முள்ளையவளையைச் சேர்ந்த முத்தையா யோகேஸ்வரி என்ற பதின்மூன்று வயது வேலைக்காரப் பெண்னைப் பாலியல் கொடுமை செய்த குற்றத்திற்காகவே நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார். சிறு வயதிலிருந்து கனேசலிங்கம் வீட்டில் வேலைக்காரியாய் இருந்த யோகேஸ்வரியை கணேசலிங்கம் நாற்பது தடவைகள் பாலியற் கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஸ்தாபனத்தைச் சேர்ந்த றமேடியஸ் என்பவர் யோகேஸ்வரிக்காக வழக்காடினார். தங்கராசா கணேசலிங்கம் சார்பில் இன்றைய ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தியும் அன்றைய ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ம் வாதிட இருந்தனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக இவர்கள் வழக்கில் இருந்து வாபஸ்பெற்றனர். அதன் பின் தங்கராசா கணேசலிங்கத்தின் சட்டத்தரணியாக ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ந ஸ்ரீகாந்தா வழக்கை எடுத்திருந்தார். இவ்வழக்குடன் தொடர்பற்ற வேறு காரணங்களுக்காக மனித உரிமைவாதியான றேமடியாஸ் இலங்கை இராணுவத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணக் கல்லூரியில் கற்பித்த ஆசிரியர் ஒருவர் தன்னிடம் கற்ற மாணவிகளை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதும் அவ்வாசிரியருக்காக தமிழ் தேசியசவாத சட்டத்தரணிகள் வாதிட்டதும் தெரிந்ததே.

மாணவிகளுக்கு வீட்டுக்கு வெளியே பாதுகாப்பானதாகக் கருதப்படும் பாடசாலைகளில் கல்வி நிலையங்களில் எமது மாணவிகளுக்கு பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது. பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களுமே மாணவிகளை துகிலுரியும் நிறுவனங்களாகி உள்ளன.

லண்டன் சைவ மாநாடு ஒரு பார்வை

ஒரு சமூகம் புலம்பெயர்ந்து செல்லும் போது அந்த சமூகத்தினுடைய கலாச்சார பாரம்பரியங்களையும் அது சுமந்தே செல்கின்றது. ஒருவருடைய அடையாளம் என்பது இந்த சமய, கலாச்சார விழுமியங்களும் இணைந்தது தான். புலம்பெயர்ந்த தமிழர்கள் எங்கே தங்கள் அடையாளத்தை இழந்து அடையாளமற்ற மனிதர்களாக உலகில் உருவாகிவிடுவமோ என்ற அச்சத்தில் புலம்பெயர்ந்த மண்ணில் தங்கள் சமய, கலாச்சார விழுமியங்களை இறுக்கிப் பிடித்தனர். இது தங்கள் அடையாளத்தை இழந்துவிடுவோம் என்ற அச்ச உணர்வினால் உந்தப்பட்டதன் விளைவு. ஆயிரத்து தொளாயிரத்து எண்பதுக்களில் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் பிரித்தானியாவில் தங்களுக்கான வழிபாட்டுத்தலங்களை நிறுவ முயன்றனர்.

தாயகத்தில் வீடுகளில் சாமியறை என்றொன்னு இருக்கும். ஆனால் புலம்பெயர் தேசத்தில் சாமிக்கு ஒரு அறையை ஒதுக்க பொருளாதாரம் இடம்கொடாது. சாமிக்கு ஒதுக்கும் அறையை வாடகைக்கு விட்டால் நாலு காசு வரும் என்ற நிலையே புலம்பெயர் தேசத்தில் உள்ளது. அதனால் பெரும்பாலும் படிகளுக்கு கீழே, அல்லது கொரிடோரில் ஒரு தட்டை அடித்து அதில் சாமியை வைத்துவிடுவார்கள். ஆரம்பநாட்களில் வானில் சாமிப்படத்தை கொண்டுவந்து வானை வடக்கு நோக்கி ரிவேர்ஸ் பண்ணிவிட்டு பூசைகள் நடத்திய கதைகளும் உண்டு. மோபைல் கோயில்கள். காலங்கள் உருண்டோட வருமானம் போதாததாலட கிறிஸ்தவ தேவாலங்கள் தமது கட்டிடங்களை விற்க ஆரம்பித்தன. தவறணைகளும் நட்டத்தில் ஓட ஆரம்பித்ததால் அவற்றை விற்க ஆரம்பித்தன. ஒன்றோடு ஒன்று முற்றிலும் முரண்பட்ட இந்த சமூக நிறுவனங்களுக்கு மக்கள் கூடுவதற்கான அனுமதி இருப்பதால் அவற்றை வாங்கி கோயில்களைக் கட்டுவது ஒரு ரென்ட்டாகி விட்டது. இவ்வாறு கோயில்கள் உருவாகி லண்டனில் தற்சமயம் நாற்பது கோயில்கள் வரை உள்ளன. அவற்றில் ஈஸ்ற்ஹாம் முருகன் கோயில், ஈஸ்ற்ஹாம் மகாலட்சுமி கோயில் இரண்டும் மட்டும் இலங்கைத் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இல்லை.

ஈஸ்ற்ஹாம் முருகன் கோயில் தவிர்ந்த ஏனைய தமிழ் கோயில்களில் சாமி வெளிவீதி சுற்றுவதற்கே இடமில்லை. திருவிழா காலங்களில் மட்டும் உள்ளுராட்சிமன்றில் அனுமதி பெற்று சாமி வீதிக்கு வரும். இவ்வாலயங்கள் அனைத்தும் திருவிழாக்களை எப்படியாவது செய்துவிடுவார்கள். இல்லையேல் ஆலயத்தினது வருமானமும் கௌரவமும் பாதிக்கப்படும். இந்த நாற்பது ஆலயங்களுமே பெரும்பாலும் திட்டமிடல் இல்லாமல் வாய்க்கின்ற இடத்தை எடுத்து கோயிலாக்கப்பட்டுள்ளது. அதனால் இவ்வாலயங்கள் குடிமனையான இடங்களிலேயே உள்ளன. அதலால் இவ்வாலங்களில் பெரும்தொகையானவர்கள் கூடுவதற்கான வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டே இருக்கும். மேலும் குடியிருப்பாளர்களுக்கும் இவ்வாலயங்களுக்கும் இடையே முரண்பாடுகள் அடிக்கடி ஏற்படும். தங்கள் பகுதிகளில் கார் நிறுத்துவதில் நெருக்கடி, அதீத சனநடமாட்டம், சத்தம் என குற்றச்சாட்டுகள் எழும்.

இப்பின்னணியில் லண்டன் திருக்கோயில்களின் ஒன்றியம் தனது 22வது வருடாந்த மாநாட்டை நடாத்த வழமை போல் யூன் 18, 19ம் திகதிகளில் ஏற்பாடு செய்துள்ளது. அரசியல் வாதிகள், நடிகர்கள், பாடகர்கள், தேவாரம் திருவாசகம் பாடுபவர்கள், சொற்பொழிவாளர்கள் என்று ஒரு பல்சுவை மசாலா நிகழ்வாக அது இடம்பெறும். ஆனால் கடந்த 22 ஆண்டுகளில் லண்டன் ஆலயங்கள் குறிப்பிடத்தக்கதாக எதையும் சாதித்து இருக்கின்றனவா என்றால் . இவ்வாலயங்கள் இருக்கின்றது என்பதனைக் உறுதிப்படுத்துவதற்காகவும் தாங்களும் இவ்வாறானதொரு நிகழ்ச்சியை நாடாத்துகின்றோம் என்று காட்டுவதற்கு அப்பால் இவ்வாலயங்கள் என்ன செய்கின்றன என்பது அவ்வாலயங்களின் நிர்வாகத்திற்கே வெளிச்சம்.

தனித்தனி ஆலயங்களாக ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம், வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயம் என்பன தாயக உறவுகளுக்கு கணிசமான உதவிகளை மேற்கொண்டு வருகின்றன. மற்றும்படி ஏனைய ஆலயங்கள் அவ்வாறான உதவிகளைப் பெயரளவில் மட்டுமே மேற்கொள்கின்றன. இவ்வுதவிகள் கூட தாயகத்தின் வாழ்நிலை முன்னேற்றத்தில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றதா என்றால் அதுவும் கேள்விக்குறியே.

வெறும் பேச்சுக்காக தமிழும் சைவமும் ஒன்றென்று முழங்கும் திருக்கோயில்கள் ஒன்றியம் தமிழுக்கோ சைவத்துக்கோ கடந்த கால்நூற்றாண்டில் என்ன செய்தார்கள் என்ற மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். ஒரு சுப்பர்மாக்கற் நடத்துவது போலவே லண்டனில் உள்ள இந்த ஆலயங்கள் செயற்படுகின்றன.

இவர்களுடைய வருடாந்த நிகழ்வு கூட ஒரு கலை நிகழ்ச்சி என்பதற்கு அப்பால் செல்வதில்லை. புலம்பெயர் மண்ணில் தமிழையோ சைவத்தையோ எப்படி வழக்கப் போகின்றனர் என்ற எந்தத் திட்டமிடலும் சிந்தனையும் இல்லை. அதற்கான பார்வையும் இவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

லண்டனில் உள்ள ஆலயங்கள் அவைகள் தனிநபர்களுடைய ஆலயங்களாக இருந்தாலென்ன பொது ஆலயங்களாக இருந்தாலென்ன அவற்றிடம் தூரநோக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ கோயிலை நடத்துகிறோம் திருவிழாச் செய்கின்றோம் என்பதோடு சரி. அடுத்த தலைமுறைக்கு எமது வரலாற்றை எவ்வாறு கைமாற்றப் போகின்றோம் என்பது பற்றி அவர்களிடம் எவ்வித சிந்தனையும் இல்லை. இன்று வரையும் தமிழுக்கும் சைவத்துக்குமான ஒரு ஆவணக்காப்பகமோ ஆய்வு நிறுவனமோ கிடையாது.

ஆலயங்கள், புலம்பெயர்ந்த அடுத்த தலைமுறையினர் மத்தியில் தமிழ் மற்றும் சைவம் பற்றிய எவ்வித விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தவில்லை. இது விடயமாக நூலகவியலாளர் என் செல்வராஜா பலரையும் அணுகி இருந்தார். தனது கருத்துக்களையும் தெரியப்படுத்தி இருந்தார். அவர் ஒரு தனி மனிதனாக 20,000க்கும் அதிகமான இலங்கைத் தமிழ் நூல்களைத் தொகுத்து தனது சொந்த முயற்சியிலும் உழைப்பிலும் அவற்றை வெளியிட்டுவிருகின்றார். நாற்பது ஆண்டுகளுக்கு முன் தீக்கிரையான யாழ்ப்பாணப் பொது நூலகம் எப்போது தீக்கிரையானது என்பதே திரிபுபடுத்தப்பட்ட நிலையில் 1981 மே 31இல் தீக்கிரையான யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் வரலாற்றை தனி மனிதனாக தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுத்து வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு ஆலயமும் ஒரு நூலகத்தை வைத்திருக்காவிட்டாலும் இந்தத் திருக்கோயில்கள் ஒன்றியம் ஒரு ஆவணக்காப்பகத்தை உருவாக்கி தமிழினதும் சைவத்தினதும் வரலாற்றை பாதுகாக்க வேண்டும். மேலும் அடுத்த தலைமுறையினருக்கு எமது வரலாற்றை கைமாற்றுவதற்கான காத்திரமான ஆய்வு செய்யப்பட்ட தரமான நூல்கள் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் அதற்கான எவ்வித முயற்சிகளிலும் இத்திருக்கோயில்கள் ஒன்றியம் ஈடுபடவில்லை.

இப்பொழுது முதுமையை எட்டும் இந்தத் திருக்கோயில்களின் உறுப்பினர்கள் தற்போது அவர்களது அந்திம காலத்தை நெருங்குகின்றனர். இவர்களுக்குப் பின் இவர்களுடைய வாரிசுகள் யாரும் இந்த காளாஞ்சிக் கெடுபிடிக்கு வரப்போவதில்லை. அடையாளம் இல்லாத சிலர் தங்களிடம் உள்ள டாம்பீகத்தை பறைசாற்ற கோயில்களுக்கு வருவார்களேயல்லாமல் அடுத்த தலைமுறையினரில் கோயில்களின் எதிர்காலம் கேள்விக்குறியே. ஏற்கனவே லண்டனுக்கு வெளியே உள்ள கோயில்கள் ஒன்றிரண்டு நாளாந்த செலவுகளை ஈடுசெய்ய முடியாமல் திண்டாடுகின்றன. மேலும் தற்போதைய விலைவாசி உயர்வு பொருளாதார வீழ்ச்சியும் ஆலயங்களின் வருமானத்தையும் கணிசமான அளவு பாதிக்கும்.

இந்நிலையில் வெளியில் இருந்து பல்லாயிரங்களைக் கொட்டி ஏற்பாடு செய்யப்படும் இந்த வருடாந்த நிகழ்வுகள் அது முடிந்த சில நிமிடங்களிலேயே அர்த்தமற்றதாகிவிடும். இந்நிகழ்வுகள் சைவத்தையும் தமிழையும் விஞ்ஞானபூர்வமாக ஆய்வுசெய்யும் மாநாடுகளாகவும் அம்மாநாட்டின் அறிக்கைகள் ஆவணங்களாகவும் கொண்டுவரப்பட்டு இருந்தால் இம்மாநாடுகள் மிகக் கனதியானவையாக இருந்திருக்கும்.

இத்திருக்கோயில்கள் ஒன்றியத்தால் அதனைப் பற்றிச் சிந்திப்பதற்கான வாய்ப்பே இல்லை. அதற்கு முக்கிய காரணம் இந்த ஆலயங்களில் ஆளுமை செலுத்துபவர்களிடம் அதற்கான அறிவுநிலையோ சிந்தனையோ கிடையாது. தலைப்பாகையைக் கட்டி காளாஞ்சி வாங்குவதற்கு அப்பால் அவர்கள் இதுவரை சிந்திக்கவில்லை.

இவர்களது குறுகிய சிந்தனைகளை வைத்து தங்களை சைவப் பெரியார்கள் எனச் சொல்லிக்கொள்ளும் ஆறுதிருமுருகன், கம்பவாருதி போன்றோர் வெளிநாடுகளுக்கும் வந்து வசூல் செய்துகொண்டு திரும்புகின்றனர். ஆறுதிருமுருகனின் திருவிளையாடல்கள் “யாழ் பல்கலைக்கழகம்: ஒரு பார்வை” என்ற நூலில் விரிவாக தொகுக்கப்பட்டு உள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்களை குறைத்து மதிப்பிட்டதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனே அடுத்த மாவீரர் உரையில் அவர்களைப் புகழ வேண்டியதாகிவிட்டது. அப்படியிருக்கு “வாராதே வரவல்லாய்” என்று கம்பவாருதி ஜெயராஜ் மல்லிகையில் எழுதிய கட்டுரைக்கு “வம்பவாரிசு ஆருக்கு வைக்கிறார் ஆப்பு”, “ஒரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சு” என்ற தலைப்பில் தேசம் சஞ்சிகையில் 2004இல் கட்டுரைகள் வெளிவந்தன. இவர்கள் சமூக மேம்பாட்டிற்காக தாயகத்தில் குறிப்பிடத்தக்க சேவைகள் எதனையும் வழங்கவில்லை.

சில மாதங்களுக்கு முன் ஜெயராஜ் சக்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலும் புலம்பெயர்ந்தவர்களின் குடும்ப உறவுகள் மிகச் சிதைந்து இருப்பதாக கம்பவாருதி ஜெயராஜ் குறிப்பிடுகின்றார். அதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் ஜெயராஜ் வாழ்கின்ற தாயகத்தில் கல்வி மிகக்கீழ் நிலைக்குச் சென்றுள்ளது, இளவயதுத் திருமணங்கள் அதிகரித்து விட்டது, அதன் தொடர்ச்சியாக குடும்ப உறவுகள் சிதைந்து வருகின்றது, திருமணமாகாமலேயே குழந்தைகள் தாய்மை அடைகின்றனர், திருமணத்திற்கு அப்பாலான உறவுகளும் அதிகரித்து வருகின்றது. அப்படிப்பட்ட மண்ணில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஒரு உரைக்கு கம்பவாருதி ஜெயராஜ் குழவிற்கு ஒரு லட்சம் செலவாகும் என நிதி திரட்டப்பட்டது. இப்போது கிளிநொச்சியில் கலைக்கூடம் அமைக்கவும் நிதி திரட்டப்படுகின்றது. இதே போல் ஆறுதிருமுருகனும் அடிக்கடி அடிக்கல் நாட்டுகிறார் கட்டிடங்கள் கட்டுகின்றனர். ஆனால் அதனைப் பயன்படுத்த வேண்டிய இளைய தலைமுறை பற்றி இவர்களிடம் எவ்வித பார்வையும் இல்லை. அடிக்கல் நாட்டுவது, கட்டிடம் கட்டுவது, அதன் பின் அது தேடுவாரற்று கிடக்கும். இதுதான் அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்றது. புலத்தில் இருந்து வசூலிக்கப்படும், திரட்டப்படும் வழங்கப்படும் நிதி பெரும்பாலும் இதுவரை விழலுக்கு இறைத்த நீராகவே ஆனது. ஒரு வகையில் ஆறுதிருமுருகன், கம்பவாருதி ஜெயராஜ் போன்றவர்களை வளர்க்கவும் தாயகத்தில் சமூகச் சீரழிவிற்குமே புலம்பெயர் பணம் பெரும்பாலும் பயன்பட்டது.

பிரபல்யமானவர்கள் என்பதற்காக அவர்களுக்கு வாரி இறைப்பதினால் சமூகத்திற்கு எந்தப்பலனும் கிடைப்பதில்லை. ஆளுக்கொரு பிரபலத்தை கொண்டு திரிந்து எமது சமூகப் பிரச்சினையை தீர்க்க முடியாது. இவைகளையுணர்ந்து நீண்டகால நோக்கில் சிந்தித்துச் செயற்பட அனைவரும் முன்வர வேண்டும். தற்போது தங்கள் கடைசிக்காலத்திலாவது, தங்கள் பெயர் சொல்லும் வகையில் காலத்தால் அழியாமல் இருக்க தமிழுக்கும் சைவத்துக்கும் பிரித்தானியாவில் ஒரு ஆவணக்காப்பகத்தை அமைக்க இத்திருக்கோயில்களின் ஒன்றியம் முன்வரவேண்டும்.

 

கிழக்கு உக்ரைனில் இரு பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை! திடீர் திருப்புமுனை!!!

இன்று யூன் 9, முன்னாள் பிரித்தானியா இராணுவ வீரர் ஒருவர் உட்பட பிரித்தானியர் இருவருக்கு ரஷ்ய ஆதரவோடு இயங்கும் டொனேஸ்க் படைகள் மரண தண்டனை விதித்துள்ளன. பிரித்தானியர்கள் இருவருக்கும் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த ஒருவருக்குமாக மூவருக்கு பயங்கரவாதிகள் எனக் குற்றம்சாட்டி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. ரஷ்ய படையெடுப்பிற்கு முன்னதாகவே 2018இல் பிரித்தானியர்கள் இருவரும் உக்ரைன் இராணுவத்தில் இணைந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. பிரித்தானியாவில் இருந்து உக்ரைன் இராணுவத்தில் இணைந்த மற்றையவர் எய்டன் அஸ்லின், பெட்போர்ட்செயரைச் சார்ந்தவர். இவரும் மொரோக்கோ நாட்டு பின்னணியை உடையவர்.

மரியோபோலில் சரணடைந்த பல நூற்றுக்கணக்கான ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் இவர்கள் மூவரும் அடங்குகின்றனர். டொனேஸ்க் படைகள், சரணடைந்த உக்கிரைன் படைகளை சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய யுத்தக்கைதிகளாக நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் பிரித்தானியர்கள் இருவரும் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவரும் நாடுவிட்டு நாடுவந்த கூலிப்படைப் பயங்கரவாதிகள் என்றும் அவர்களுக்கு சர்வதேசச் சட்டங்கள் பொருந்தாது என்று குறிப்பிட்டுமே மரண தண்டனை அழிக்கப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அதற்கான காnணொலியும் வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய சம்பவம் நடப்பதற்கு இருவாரங்களுக்கு முன் ரஷ்ய ராங்கர் படையைச் சேர்ந்த ஒருவர் தங்களால் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் அப்பாவி உக்ரைனியர்களைக் கொன்றதாக ஒப்புக்கொண்ட காணொலியை உக்ரைன் மற்றும் பிரித்தானிய நேட்டொ அணி நாடுகள் தொடர்ச்சியாக வெளியிட்டன. குறிப்பிட்ட ரஷ்ய படை வீரருக்கு எதிராக யுத்தக் குற்றங்கள் சுமத்தப்பட்டு அவர் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டு வந்தார். அதே பாணியில் பிரித்தானியாவுக்கு ஒரு பாடம் புகட்டுவதற்காகவும் யுத்தக்கைதிகளை பரிமாறுவதற்காகவும் இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.

ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையே நடக்கின்ற யுத்தத்தில் ஒரு நாளைக்கு 250 பேர் கொல்லப்படுவதாக மதிப்பிடப்படுகின்றது. பிரித்தானியாவில் இருந்தும் சில நூறுபேர்கள் உக்ரைன் இராணுவத்துடன் இணைந்துகொண்டுள்ளனர். யுத்தத்தின் ஆரம்ப நாட்களில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் லிஸ் ரஸ் உக்ரைன் இராணுவத்துடன் சென்று போராடும் பிரித்தானியர்களை ஊக்கப்படுத்தியும் வரவேற்றும் இருந்தார். உக்ரைன் இராணுவத்துடன் இணைந்துகொண்ட சில நூறு பிரித்தானியர்களில் இதுவரை 20 பிரித்தானியர் கொல்லப்பட்டு இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இரு பிரித்தானியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை பிரித்தானிய அரசை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கும். ஏற்கனவே பிரித்தானிய அரசு ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாகின்றது. “பிரித்தானிய பிரஜைகளுக்கு ஏதாவது நடந்தால் …” என்றெல்லாம் தொனிகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் ரஷ்யாவுக்கோ “தலைக்கு மேலால் தண்ணி போய்விட்டது. இனி சான் ஏறினாள் என்ன முழம் ஏறியால் என்ன?” என்ற நிலையே. மேலும் ரஷ்யா ஒடிசா துறைமுகத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் தானிய ஏற்றுமதி முற்றாகத் தடைப்பட்டுள்ளது. தற்போது இவை இரண்டையும் ரஷ்யா தனக்கு சார்பாகப் பயன்படுத்தி யுத்தக் குற்றவாளிகளை பரிமாறுவது, ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை தளர்த்துவது போன்ற பேரம் பேசலுக்கு தயாராகலாம்.

பிரித்தானிய பிரதமரின் முடிவின் ஆரம்பம்! நம்பிக்கையிலாப் பிரேரணையில் தற்போது தப்பித்துக்கொண்டார் பிரதமர் பொறிஸ்!!!

இன்று யூன் ஆறாம் திகதி சில நிமிடங்களுக்கு முன் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் தப்பித்துக்கொண்டார். ஆனால் அவருடைய எதிர்காலம் மிகக் குறுகியதாகவே இருக்கும் என நம்பப்படுகின்றது. ஆளும் கொன்சவேடிவ் கட்சியின் 359 பாராளுமன்ற உறுப்பினர்களில் 211 கொன்சவேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 148 கொன்சவேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது தங்களுக்கு நம்பிக்கையிலை என வாக்களித்தனர். ஆட்சியில் உள்ள தங்களுடைய பிரதமருக்கு எதிராக அவர்களுடைய கட்சி உறுப்பினர்களே நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்ததால் அக்கட்சியை தலைமை தாங்குவதில் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பெரும் சவால்களை எதிர்கொள்ள உள்ளார்.

பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் பொறுப்பற்ற தலைமைத்துவம் அவருடைய குடியும் கும்மாளமும் பற்றி தேசம்நெற் தொடர்ச்சியாக விமர்சித்துவந்ததுடன் வாக்காளர்களிடம் நம்பிக்கையிழந்து வந்ததை சுட்டிக்காட்டி இருந்தோம். இன்று பிரதமர் 32 வாக்குகளால் பதவியை தக்க வைத்துக்கொண்டார். ஆனால் நீண்டகாலத்திற்கு இவரால் பதவியில் நீடிப்பது மிகக் கடினமாக இருக்கும். மே 6ம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சித் தேரதலில் ஆளும் கொன்சவேடிவ் கட்சி கணிசமான ஆசனங்களை இழந்ததால் பொறிஸ் ஜோன்சன் தலைமையில் அடுத்த தேர்தலை எதிர்கொண்டால் தாங்கள் தோற்றுப் போவோம் என பல கட்சி உறுப்பினர்களும் கருதுவது தான் அவர்கள் இவ்வாறான சடுதியான தாக்குதலை நடத்த காரணமாக இருந்தது.

இன்னும் இரு வாரங்களில் இரு இடைத்தேர்தல்கள் வருகின்றது. இத்தேர்தல் முடிவுகள் கட்சிக்கு எதிரானதாக மாறினால் பொறிஸ் ஜோன்சனின் எதிர்காலம் இன்னும் ஆபத்தானதாகும்.

முன்னாள் பிரதமர் திரேசா மே மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அவர் பெற்ற நம்பிக்கை வாக்குளிலும் குறைவான வாக்குகளையே பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இப்போதைய நம்பிக்கையிலாப் பிரேரணையில் பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் தெரேசா மே நம்பிக்கை வாக்குகளைப் பெற்ற போதும் கணிசமான எதிர்ப்பின் காரணமாக அவரால் தொடர்ந்தும் பிரதமராக செயற்பட இயலாமல் போனமையினால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஏழு மாதங்களில் பதவியை இராஜிநாமச் செய்தார். பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அவ்வாறு பதவியை இராஜினாமாச் செய்யும் இயல்புடையவரல்ல. ஆனாலும் அவருடைய எதிர்காலம் முடிவை நோக்கி நகரத் தொடங்கிவிட்டது என்றே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

பாராளுமன்ற ஜனநாயகத்தின் தாயாக தன்னை முன்னிலைப்படுத்தும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களுக்கு பிரதமர் பொய் சொல்லி இருக்கின்றார். லொக்டவுன் அறிவித்து நாட்டுமக்களை வீட்டுக்குள் இருக்கச்செய்ய விதிமுறைகளை அறிவித்து விட்டு அந்த விதிமுறைகளை மீறி பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லாமான 10 டவுனிங் ஸ்ரீற்றில் அதிகாலை மூன்றுமணிவரை கூத்தும் கும்மாளமும் என்று இருபது தடவைகள் பார்ட்டி நடந்துள்ளது. அவ்வாறு நடக்கவில்லை என்று பாராளுமன்றத்தில் பொறிஸ் பொய்யுரைத்தார். இதனை ஆதாரங்களுடன் வெளிப்படுத்த ஸ்கொட்லண்ட் யாட் பிரதமருக்கும் பார்ட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் எதிராக அபராதாம் விதித்தது. சூ கிரேயின் சுயாதீனா விசாரணை அறிக்கையும் பல விடயங்களை அம்பலப்படுத்தியது தெரிந்ததே.

உக்ரைனுக்காகக் குரல்கொடுத்ததுஇ உக்ரைனுக்கு ஆயுதங்களை வாரி வழங்கியது, உக்ரைன்னுக்கு பறந்து சென்றதெல்லாம் லண்டனில் தனது இருப்பை தக்க வைக்கவே. பெரியளவிலான எரிபொருள் கொடுப்பனவை வழங்க முன் வந்ததும் தனது பொட்டுக்கேடுகளை மறைக்கவே.அது போதாது என்று தானே அறிமுகப்படுத்திய அமைச்சர்களுக்கான கட்டுப்பாட்டு விதிகளையும் கிழித்தெறிந்தார். அதாவது அமைச்சர்கள் தவறுவிட்டால் பதவிவிலகவேண்டும் என்ற விதியை நீக்கிவிட்டார். தனது தவறுகளுக்காக தான் பதவி விலகவேண்டி வரும் என்பதால். போறிஸ் ஜோன்சனாக இருந்தாலும் முழப்பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்க முடியுமா?

சிவ அல்ல ‘சுய’புராணம்: வெற்றி பெறுவதால் பெறும் மகிழ்ச்சி நிரந்தரமற்றது. ஆனால் மகிழ்ச்சியாக இருந்தால் நீங்கள் வெற்றிபெற முடியும்!

தமிழ் சமூகம் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்குகின்ற சமூகமாகவே இருக்கின்றது. ஆனாலும் தமிழ் சமூகத்தில் கல்விபற்றிய புரிதல் என்பது மிகக் கீழ்நிலையிலேயே உள்ளது. இந்தக் கல்விக்காக எமது பிள்ளைகள், குடும்பங்கள் கொடுக்கின்றவிலை மிகக் கனதியானது. அதன் உச்சமாக சிலர் தங்களையே அழித்துக்கொண்டும் உள்ளனர். பல குடும்பங்கள் தங்கள் சந்தோசத்தையே இழந்தும் உள்ளனர். பலர் எதிர்காலத்தையும் இழந்துள்ளனர். ஒரு சேட்டிபிக்கற் எடுப்பதற்காக.

இந்தப் பதிவை இடுவதற்கு நான் ஒரு கால்நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. எனது கொள்கைகள், எனது இலட்சியங்கள், எனது எழுத்துக்கள் உட்பட என்னையே உரசிப்பார்த்து மதிப்பிடும் ஒரு தருணம். அந்த நாளும் வந்தது.

ஆயிரத்து தொழாயிரத்து எண்பதுக்களில் எங்களுக்கு இன்ரநெற் மட்டும் இல்லாமல் இல்லை. இன்றைய மதிப்பீட்டில் அத்தியவசிய தேவைகளே இருக்கவில்லை. தொலைபேசியில்லை. மின்சாரம் இல்லை அதையொட்டிய எந்த சாதனங்களும் இல்லை. கொம்பியூட்டரல்ல, ரீவியைப் பார்ப்பதே அதிசயம். ‘அடாது மழை பெய்தாலும் விடாது காண்பிக்கப்படும்’ என்று சொல்லி சிவராத்திரியில் தான் படம் ஓடியகாலம். தகவல் என்பது மிக மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் பொய்யான செய்திகள் நிலையாத காலம். எமது தலைமுறையில் தாயகத்தில் உயிர்வாழ்தல் என்பதுகூட ஒரு காலத்தில் விளையாட்டுத்தான். ஹர்த்தால், கடையடைப்பு, யுத்தம் என்று பாடசாலைகள் மூடப்பட அல்லது செயழிழக்க தனியார் கல்வி நிலையங்கள் பரவ ஆரம்பித்த காலம். பலதிக்கும் சென்று வேரூன்றினார்கள்.

இப்போது தொண்ணுறுக்களின் நடுப்பகுதியல் இளம் குடும்பஸ்தர்களாக வாழ்க்கையை ஆரம்பித்த காலம். எமது பிள்ளைகளுக்கு எதை வழங்குவது? பிள்ளையை என்னவாக ஆக்குவது? இலெவன் பிளஸ் – ’11+’? ரியுசன்? எந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது? கிரம்மர் ஸ்கூல் – grammer school? ப்ரைவேட் ஸ்கூல் – private school? தமிழ் படிப்பிப்பதா? இதுக்கு மேல், நடனம், சங்கீதம், … கிரிக்கட்? புட்போல்? எல்லாமே பிரச்சினையாக இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு மத்தியில் அகதி வாழ்வின் அடுத்த படியாக எமது மெலனியம் தலைமுறையினர் பிறந்தனர்.

எங்களுக்கு பிள்ளைகள் பிறக்க முன்னரேயே அவர்களுடைய வாழ்வை இப்படித்தான் அமைத்துக்கொடுப்போம் என்ற ஒரு திட்டம் இருந்தது. அன்றைய வாழ்க்கைத்துணையும் அதே புரிதலிலேயே இருந்தார். பிள்ளைகளை இயல்பாக அவர்களுடைய சுதந்திரத்துடன் வளரவிடுவது, நாங்கள் வழிகாட்டிகள் மட்டுமே. முடிவுகளை அவர்களையே எடுக்க அனுமதிப்பது. சமயம் பற்றி அக்கறைகொள்வதில்லை. 11 பிளஸ் (இலங்கையில் புலமைப்பரிசில் பரீட்சை போன்றதொரு பரீட்சை) பற்றியெல்லாம் அக்கறையெடுப்பதில்லை. அவர்களது குழந்தைப் பருவத்தை குழந்தைகளாகவே இருக்க அனுமதிப்பது. ஓரளவுக்கு தரமான வீட்டுக்கு அருகில் உள்ள அரச பள்ளியில் அவர்களைச் சேர்ப்பது. உயர்தரம் வரை தனியார் கல்விக்கு அனுப்புவதில்லை.

மேலும் எனக்கு எத்தனை பிள்ளைகள் பிறந்தாலும் அவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு குறித்த வயது வந்ததும் எனது நண்பன் கந்தையா ரவீந்திரனிடம் தற்காப்பு கலைப் பயிற்சிக்கு அனுப்புவது. எமது பிள்ளைகள் அனைவரும் பல்கலைக்கழகம் செல்வார்கள் என்பதும் எமது தெளிவான முடிவாக இருந்தது. என்ன படிக்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். அவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை காதலிக்கவும் திருமணம் செய்யவும் அவர்களுக்கு எவ்வித தடையும் கிடையாது. ஆனால் அவர்கள் பட்டிப்படிப்பை முடித்து கார் வாங்குதற்கு முன் வீடொன்றை வாங்கிக்கொண்டு திருமணம் செய்துகொள்ளலாம்.

இவ்வாறான ஒரு எண்ணத்துக்கு மத்தியில் தான் எனக்கு மூன்று குழந்தைகளும் பிறந்தனர். மேடு பள்ளங்களுக்கூடாக வாழ்க்கைச் சக்கரம் ஓடி இப்போது மூத்த மகன் 21 வயதில் நிற்கின்றான். நான் முப்பது ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த பருவம். இப்போது 30 ஆண்டுகள் கடந்து எனது கொள்கைகள், எனது இலட்சியங்கள், எனது எழுத்துக்கள் உட்பட என்னையே உரசிப்பார்த்து மதிப்பிடும் ஒரு தருணம்.

11 பிளஸ் பரீட்சையில் வெற்றிபெற கருத்தரித்தவுடனேயே நல்ல ஆசிரியரிடம் ஆங்கிலம் கணிதம் படிக்க பதிவு செய்ய வேண்டும். இல்லையேல் கைதேர்ந்த ஆசிரியரிடம் இடம் கிடைக்காது. இடம் கிடைத்து படிக்க ஆரம்பித்தால் வாரதித்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 15 முதல் 25 பவுண்கள். கணிதமும் ஆங்கிலமும் வாரத்திற்கு நாற்பது பவுண் வருடத்திற்கு இரண்டாயிரம் பவுண்களுக்கு மேல். ஐந்து வருடத்திற்கு பத்தாயிரம் பவுண்கள். அதைவிட ஆங்கிலத்தில் மேதையாக்குவதற்கு ‘குமோன் – Kumon’. அது 12 மாதங்கள் அதற்கு ஆயிரம் பவுண். கணிதத்தில் மேதையாக்குவதற்கு ‘அபகஸ் – Abacus’, அதில் 12 மட்டங்கள் ஒவ்வொரு மட்டத்திற்கும் ஐந்து மாதங்கள். ‘அபகாஸ் – Abacus’ முடித்து வர ஆறு வருடங்கள் ஆறாயிரம் பவுண். ஆக மொத்தத்தில் 11 பிளஸ் பரீட்சையில் தோற்றும் சராசரிப் பெற்றார் மொத்தமாக பதினாராயிரம் பவுண்களை செலவிழிக்கின்றனர்.

ஆனால் இந்த வகுப்புகள் என்ன சூமிலா நடக்கும். பிள்ளைகளை நேரடியாக அந்ததந்த இடங்களுக்கு கூட்டிச்சென்று இறக்க வேண்டும். அவர்களுக்கு வகுப்பு முடியும் வரை காத்துக்கிடக்க வேண்டும். இதற்காக வாரத்திற்கு 5 மணித்தியாலங்கள் என்று பார்த்தால் ஜந்து ஆண்டுகளுக்கு 1300 மணிநேரங்களைச் செலவிடுகின்றனர். இதற்கு பிரித்தானியாவின் குறைந்த சம்பள வீதத்தை போட்டுப் பார்த்தால் கூட பத்தாயிரம் பவுண்கள். பெற்றோல் செலவை விட்டால் கூட ஒரு பிள்ளையின் 11 பிளஸ் பரீட்சையின் செலவீனம் 25,000 பவுண்கள். ஒரு குடும்பத்தில் குறைந்தது இரு பிள்ளைகள் என்று கணக்குப் பார்த்தால் ஐம்பதிணாயிரம் பவுண். ஒருவர் பல்கைல்கழகம் சென்று பட்டப்படிப்பை முடிப்பதற்கும் இவ்வளவு செலவேயாகும்.

பெற்றோர் இப்பரீட்சைகளுக்ககாக ஒரு குழந்தைக்கு இருப்தியயையாயிரம் பவுண்களைச் செலவிடுவது ஒரு பிரயோசனமற்ற முதலீடே. மாறாக அவர்கள் இவ்வளவு பணத்தை அவர்களுடைய சேமிப்பில் போட்டிருந்தால் மிகக்கூடுதல் பயனைப்பெற்றிருப்பதுடன் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையையும் அனுபவித்து இருக்கலாம்.

மேலும் தீவிர கல்வி அழுத்தங்கள் பிள்ளைகளில் மிகக் கடுமையான காயங்களை உண்டுபண்ணுகின்றது. பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான நிரந்தர இடைவெளியை ஏற்படுத்துகின்றது. கல்வியின் மீது சில பிள்ளைகளுக்கு நிரந்தரமான வெறுப்பையும் ஏற்படுத்துகின்றது. மேலும் சுயமான தேடலையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்வதற்கு மாறாக; ஊட்டப்படும், திணிக்கப்படும் கல்வி பிள்ளைகளின் ஆளுமையை முளையிலேயே கருக்கிவிடுகின்றது. பால்போத்தலில் ஊட்டுவது போல் கல்வியூட்டப்பட்ட சில பிள்ளைகள் பல்கலைக்கழகங்களில் திணறுகின்றனர். பெற்றோர் சுற்றத்தாரினால் திணிக்கப்பட்ட எதிர்பார்ப்புகளை புர்த்தி செய்ய முடியாத பிள்ளைகள், பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டுவரை சென்று; இறுதியில் தற்கொலை செய்து கொண்டனர். இவ்வாறான தற்கொலைகள் தமிழ் சமூகத்தில் இன்னமும் தொடர்கின்றது. இவை குடும்பங்களுக்குள்ளும் நிம்மதியை இழக்கச்செய்து ஒரு நிம்மதியற்ற குடும்பச் சூழலுக்குள் எமது மெலனியம் குழந்தைகளை வளர நிர்ப்பந்திக்கிறது.

ஆனால் ஆய்வுகள் என்ன சொல்கின்றது என்றால் இந்த 11 பிளஸ் பரீட்சைக்கும் பிள்ளைகளின் எதிர்காலக் கல்வி வளர்ச்சிக்கும் தொடர்பில்லை என்கிறது. தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால் இப்பரீட்சைகளை இல்லாமலாக்கும் எனக்கு குறிப்பிட்டு இருந்தது. உலகத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் அதேசமயம் மகிழ்ச்சியான சிறுவர்களைக் கொண்ட ஸ்கன்டிநேவிய நாடுகள் பிள்ளைகளை ஆறுவயதுவரைக்கும் பள்ளிக்கு அனுப்புவதில்லை. ஒரு ஆசிரியனாக பலநூறு மாணவர்களின் பெறுபேறுகளை எனக்கு ஆராயும் வாய்ப்பு உள்ளது. அதன்படி பார்ததிலும் அவர்கள் ஆரம்பப்;பள்ளிகளில் பெற்ற பெறுபேறுகளுக்கும் இடைநிலைப் பள்ளிகளில் பெறும் பெறுபேறுகளுக்கும் சில சமயம் எவ்வித சம்பந்தமும் இருப்பதில்லை. உண்மையென்னவெனில்; இந்த அதீத கல்வித் திணிப்பைச் செய்யாவிட்டாலும் கூட அம்மாணவர்கள் தங்கள் எதிர்காலக் கல்வியில் வெற்றிபெற்றிருப்பதுடன் மிகவும் சந்தோசமானவர்களாகவும் இருந்திருப்பார்கள். அதுவே என் அனுபவமும் கூட.

எனது பிள்ளைகள் 11 பிளஸ்க்கு ரியுசன் போகவில்லை. அதைப்பற்றி அக்கறை கொள்ளவில்லை. வீட்டுக்கு அருகில் உள்ள அரச பாடசாலைகளுக்கே சென்றனர். உயர்தர வகுப்பிற்குக்கூட சில நண்பர்களே கற்பித்தனர். தனியார் கல்வியில் தங்கியிருக்கவில்லை. எனது நண்பன் கந்தையா ரவீந்திரனிடம் மூவரும் தற்காப்புக் கலைப் பயிற்சி பெற்று முத்தவர்கள் இருவரும் கறுப்புப்பட்டியும் பெற்றுவிட்டனர். எனது அரசியல் மற்றும் நிலைப்பாடுகளால் எனது பிள்ளைகள் பழிவாங்கப்படலாம் என்பதால் அன்றைய நாட்களில் நான் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்பவில்லை. ஆனால் என்னுடைய பிள்ளைகள் நாங்கள் ஆங்கிலத்தில் கேட்டாலும் பதிலை தங்களுக்குத் தெரிந்த தமிழில் தான் சொல்வார்கள். எங்களோடு ஆங்கிலத்தில் அவர்களுக்கு கதைக்க வராது.

மூத்தவன் கர்ணன் தற்போது பொருளியில் துறையில் முதல் தரத்தில் சித்தியடைந்து தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு உடனடியாகவே வேலையும் எடுத்துக்கொண்டான். நான் ரியூஷனுக்கு விடாமல் எனது பிள்ளைகளது கல்வியையும் பாழடிக்கிறேன் என்ற விமர்சனங்கள் அன்று ஏராளம் இருந்தது. சிலர் என்னை குற்றவுணர்வுக்குள் தள்ளியதும் உண்டு. கர்ணன் சதாராண தரப் பரீட்சையிலோ உயர்தரப் பரீட்சையிலோ எல்லாப் பாடங்களிலும் அதீத சித்திகளைப் பெறவில்லை. இன்னும் சொல்லப்போனால் சராசரி அல்லது சராசரியிலும் குறைவான பெறுபேறுகளையே பெற்றான். அவை பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் பல்கைலக்கழகத்தில் அவனால் சாதிக்க முடியும் என்ற ஊக்கத்தை அழித்தேன். அவனது முன்னேற்றத்தில் தான் எனது வெற்றியும் என்னைப் பற்றிய மதிப்பீடும் தங்கி இருந்தது. அவன் பட்டப்படிப்பில் தவறி இருந்தாலும் நாங்கள் துவண்டுவிடக்கூடாது எதற்காகவும் சந்தோசத்தை தொலைத்துவிடக்கூடாது என்ற உணர்வு எனக்குள் இருந்தது. ஒரு போதும் எதிர்காலத்தை எண்ணிப் பயந்து நிகழ்கால சந்தோசத்தை தொலைத்துவிடக் கூடாது என்பது எனது அனுபவப்பாடம்.

இந்த சமயத்தில் எம்மோடு கர்ணணின் கல்வியில் அவனின் வளர்ச்சியில் அக்கறைகொண்டிருந்த பலருக்கும் என் நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். குறிப்பாக என் பால்ய நண்பன் சிவக்குமார் லண்டனில் அவனது முதலாவது மாணவன் கர்ணன். நண்பன் கந்தையா ரவீந்திரன், நண்பன் டேவிட் நோபல் – வலிந்து இழுத்துவைத்து கற்பித்தவர், ரவி சுந்தரலிங்கம், எல்கின்ஸ், சோதிலிங்கத்தின் மகள் வர்சி இவர்களோடு எனக்கு தந்தையாக நண்பனாக இருக்கும் செல்வராஜா குடும்பத்தினர் அனைவருக்கும் என் நன்றிகள்.

நான் எனது பிள்ளைகளின் கல்விக்கு என்று பெரிய அளவில் பணத்தையோ நேரத்தையோ செலவழிக்கவில்லை. தன்னார்வக் கல்வியிலேயே நான் எப்போதும் நம்பிக்கையுடையவனாக இருக்கிறேன். ஆசிரியர்கள் கற்கின்றவரிலும் பார்க்க சற்று அதிகம் குறிப்பிட்ட விடயத்தில் அறிவுடையவர்கள் (more knowledgeable than others) அவ்வளவுதான். எப்படிக் கற்பது என்று வழிகாட்டுவதே எமது கடமை. சந்தேகங்களைத் தீர்த்து வைக்கலாம். கற்றல் கற்பித்தல் என்பது பால்போத்தலில் போர்மியுளா மில்க் ஊட்டி புஸ்டியாக்குவதல்ல.

பிள்ளைகளை விடுமுறையில் வசதிக்கு ஏற்ப வெவ்வேறு இடங்களுக்கு கூட்டிச் செல்லுங்கள். மியூசியங்கள், கண்காட்சியகங்கள், பல்தரப்பட்ட நிகழ்வுகளுக்கும் கூட்டிச்செல்லுங்கள். பரந்த விரிந்த உலகைப் பார்க்க வையுங்கள். பிள்ளைகளுடன் உரையாடுங்கள், விவாதியுங்கள், குடும்ப முடிவுகளை பிள்ளைகளையும் உட்படுத்தி எடுங்கள். பெற்றோராக தந்தையாக மட்டுமல்லாமல் நல்ல நண்பராகவும் இருங்கள். நாங்கள் இணைந்து தண்ணியும் அடிப்போம். அவர்கள் யாரில் கண் வைத்திருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். நான் யாரில் கண் வைத்திருக்கிறேன் என்பதும் அவர்களுக்குத் தெரியும். எல்லோருக்கும் எல்லோரது எல்லைகளும் தெரியும்.

ரஷ்யா – உக்ரைன் யுத்தம் பற்றி நான் எழுதிய கட்டுரையை கூகிள் உதவியோடு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து படித்துவிட்டு கர்ணன் என்மீது ஒரு மணி நேரத்திற்கு மேல் விமர்சனம் வைத்தான். இருமணி நேரம் விவாதித்தோம். மனஉளைச்சல் என்பது ஒரு தெரிவு என்று இரண்டாவது மகன் இன்னொருநாள் விவாதத்தைத் தொடங்கினான். மூவரும் ஒன்றரை மணிநேரம் விவாதித்தோம். நாங்கள் மூவருமே உடன்பட மறுப்பதற்கு உடன்பட்டு விவாதத்தை முடிப்போம். அவர்களுடைய விவாதத்திற்குள் என்னால் சிலசமயம் ஈடுகொடுக்க முடியாமல் இருப்பதையிட்டு மிகப் பெருமைப்படுகின்றேன்.

வாழ்வுக்கான பாதையை நீங்கள் திட்டமிடாவிட்டால் தோல்விக்கான பாதையை நீங்கள் தெரிவு செய்துவிட்டீர்கள் என்பதே அர்த்தம். அதற்காக திட்டங்கள் நூறுவீதம் திட்டமிட்டபடி நடக்கும் என்று எண்ணிவிட வேண்டாம். எனது மூத்தமகனுக்கு பத்துவயதாக இருக்கும் போதே நானும் துணைவியும் எமது மணவுறவை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டோம். ஆனால் அதன் தாக்கம் எங்கள் இருவரையும் தாண்டி பிள்ளைகளைப் பாதிக்காதவாறு வாழ்க்கையை நகர்த்திக்கொண்டோம்.

நாங்கள் சேர்ந்து வாழ்கின்றோமோ, பிரிந்து வாழ்கின்றோமோ, வாழ்க்கை என்பது மிகவும் அழகானது. அதன் ஒவ்வொரு திருப்பு முனைகளும் சுவாரஸியமானது. வலிகளும் வேதனைகளும் துயரங்களும் நிரந்தரமானவை அல்ல. மகிழ்ச்சியும், கொண்டாட்டங்களும் வெற்றிகளும் போல். அதுவும் கடந்து போகும். ஆனால் வாழ்க்கையை சற்றுத்தள்ளியிருந்து ரசிக்க ஆரம்பித்தால் அதன் சுவையே தனி. மகிழ்ச்சி வெளியே இருந்து வருவதில்லை. மற்றவர்கள் தருவதுமில்லை. அது எம்மிடமே இருக்கின்றது.

எதற்காகவும் மகிழ்ச்சியை விலைகொடுக்காதீர்கள்.

வெற்றி பெறுவதால் பெறும் மகிழ்ச்சி நிரந்தரமற்றது.

ஆனால் மகிழ்ச்சியாக இருந்தால் நீங்கள் வெற்றிபெற முடியும்.

பொறுப்பற்ற யாழ் பல்கலை முன்னாள் துணைவேந்தரின் பொறுப்பற்ற உரை!!!

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள்துணைவேந்தர் பொன் பாலசுந்தரம்பிள்ளை இலங்கையின் இன்றைய பொருளாதார நிலை பற்றிய உரையில் மிகத் தவறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். “பிரித்தானியா எங்கள் நாட்டைச் சுரண்டவில்லை” என்றும் “தங்களது நாட்டில் உள்ள முதலீட்டைக் கொண்டு வந்தனர்” என்றும் உண்மைக்குப் புறம்பாக பொது மேடையில் பேசியுள்ளார். பெருந்தோட்டச் செய்கை குடியான பயிர்ச்செய்கை என இரு பெரும் பொருளாதாரங்களை எங்களுக்கு விட்டுச் சென்றனர் என்றும் பிரச்சினையில் இருந்த குடியானவர் பயிர்ச் செய்கைக்கும் பெரிய குளங்களைக் கட்டியும் திருத்தியும் சென்றதாகக் குறிப்பிடுகின்றார்.

பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இரு முறை 1996 முதல் 2003 வரை பணியாற்றியவர். இருந்தாலும் பேராசிரியர் சண்முகலிங்கள் காலம் வரை நிலவிய அசாதாரண நிலைகாரணமாக துணைவேந்தர்கள் சில மாதங்களே நீடித்தால் 2011 வரையான உத்தியோகபூர்வமாற்ற அதிகாரம் பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளையிடமே இருந்தது.

1974 முதல் கல்வியின் மகுடமாக சிறந்து விளங்கிய யாழ் பல்கலைக்கழகம் பொன் பாலசுந்தரம் பிள்ளையின் காலத்தில் தான் அதன் கீழ்நிலைக்கு வீழ்ச்சியடைந்தது. இதன் வெளிக்கொணரும் வகையில் “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பல்கலைக்கழகம் அல்ல பள்ளிக்கூடம்” என்ற தலைப்பில் தேசம்நெற் ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகம் பற்றி தான் எழுதிய கட்டுரைகளை தொகுத்து “யாழ் பல்கலைக்கழகம் ஒரு பார்வை” என்ற தலைப்பில் ஒரு நூல் வெளியிடப்பட்டது.

பொறுப்பான மனிதர்கள் பொறுப்பான இடங்களில் அமர்த்தப்பட வேண்டும். பொறுப்பற்ற மனிதர்கள் பொறுப்பான பதவிகளில் அமர்த்தப்படுவது சீரழிவுக்கே இட்டுச்செல்லும். ஒரு பேராசிரியர் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எவ்வித அடிப்படையும் இல்லாமல் எழுந்தமானமாக உரையாற்றினால் அரசியல் வாதிகளிடம் எதனை எதிர்பார்க்க முடியும். இந்தியாவையும் இலங்கையையும் கைப்பற்றி அதிகாரத்திற்கு உட்படுத்தியது ஈஸ்ற் இந்திய கொம்பனி என்ற முற்றிலும் லாபநோக்கத்தோடு செயற்பட்ட தனியார் நிறுவனம். அவர்கள் மூலதனத்தை பிரித்தானியாவில் இருந்து கொண்டுவந்து இந்தியாவையும் இலங்கையையும் அபிவிருத்தி செய்ய வரவில்லை. கொள்ளையடிக்கவே வந்தனர். இந்தியாவை விட்டுச் செல்லும் போது இந்தியாவில் இருந்து 45 ரில்லியன் டொலர்களை கொள்ளையிட்டுச் சென்றதாக 2021இல் பிரித்தானியாவின் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள கிளாஸ்கோவில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி மிகக் கடுமையாக குற்றம்சாட்டி இருந்தார்.

பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை ஒரு புவியியல் துறை பேராசிரியர். இவர் சொல்கின்றார் குடிசனப் பயிர்ச்செய்கையை வலுப்படுத்த பிரித்தானிய ராஜ்யம் குளங்களைக் கட்டியும் திருத்தியும் கொடுத்தது என்று. இலங்கையில் கட்டிய குளங்கள் குடிசனப் பயிர்ச்செய்கையை விருத்தி செய்ய இலங்கை மன்னர்களால் கட்டப்பட்டது. பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளைக்கு இது புரியாவிட்டால் காலம்சென்ற முன்னாள் பிரித்தானிய பிரதமர் மார்கிரட் தட்சர் இலங்கைப் பாராளுமன்றத்தில் இலங்கையின் குளங்கள் பற்றி 1979இல் ஆற்றிய உரையில் 2000 ஆண்டுகளுக்கு முன் இலங்கையின் நீர்ப்பாசனத்திட்டம் ஐரோப்பாவை விடச் சிறந்ததாக இருந்ததைச் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான பொறுப்பற்ற பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை எப்போதும் அறிவுமட்டத்தில் பலவீனமான தனக்கு அடங்கிப் போகக்கூடியவர்களையும் தனக்கு சலாம் போடக்கூடியவர்களையும் பொறுப்பான பதவிகளில் நியமித்தார். இவருக்கு பணிந்து போபவர்களுக்கு முற்றிலும் சுதந்திரம் வழங்கப்பட்டது. அதனாலேயே யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வித்தரம் இவருடைய காலத்தில் மிக வீழ்ச்சிகண்டது. பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்தது. பேராசிரியர்கள், விரிவுரையாளர்களின் இச்சைகளுக்கு இணங்காத மாணவிகளுக்கு குறைந்த பெறுபேறுகள் வழங்கப்பட்டது. விசனம் கொண்ட மாணவர்கள் பழிவாங்கப்பட்டனர். ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டனர். ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள முற்பட்டால் “உனக்கு வரம்பு கட்டுவது” பற்றி ஆராய்ச்சி செய்வது தான் சரியாக இருக்கும் என்று திட்டியும் அனுப்பியதாக லண்டனில் இவரிடம் கற்ற ஒரு முன்னாள் யாழ் பல்கலை மாணவன் மிக மனவருத்தத்தோடு தெரிவித்தார்.

பேராசிரியர் பொன் பாலசுந்தரம் பிள்ளையின் காலத்தில் கொழும்பு பல்கலைக்கழகம் 2000மாவது இடத்தில் இருந்த போது யாழ் பல்கலைக்கழகம் உலகத் தரவரிசையில் 10,000மாவது இடத்தில் இருந்தது. இன்று வடமாகாணம் கல்வியில் மிகக் கீழ்நிலையில் உள்ளமைக்கு முக்கிய காரணம் யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வித் தரத்திலும் விழுமியத்திலும் ஏற்பட்ட வீழ்ச்சியே. வடமாகாண பள்ளிகளில் பணியாற்றும் பெரும்பாலான ஆசிரியர்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் தயாரிப்புகளே.
பேரசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை தான் பொறுப்பான பதவியில் இருக்கும் போது எவ்வித பொறுப்புமற்று நடந்துவிட்டு இப்போது நாட்டை முன்னேற்றுவது எப்படி, கல்வியை முன்னேற்றுவது எப்படி என்று மேடைகளில் மிகப் பொறுப்பாக தன்னைக் காண்பிக்கின்றார். அதைக்கூட அவரால் சரிவரச் செய்ய முடியவில்லை. ஆனாலும் இவரை லண்டன் வரை அழைத்துக் கூட்டம் போட்ட கனவான்களும் உண்டு. பொறுப்பற்ற மனிதர்களை முன்னுதாரணமாக்கி அவர்களை முன்னிலைப்படுத்துபவர்களும் எதிர்கால சந்ததியினருக்கு அநியாயமே இழைக்கின்றனர். தமிழ் சமூகத்தின் விழுமியங்களை மேலும் கொச்சைப்படுத்துகின்றனர். தன்னை பேச அழைத்தவர்கள் முட்டாள்களாக இருக்க வேண்டும் என்று மதிப்பிட்ட பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை மற்றையவர்களும் முட்டாள்கள் என்று கணித்துவிட்டார் போலும்.

ஆனால் தற்போதைய துணை வேந்தர் பேராசிரியர் எஸ் சற்குணராஜாவின் வரவைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது. தனது பதவியின் பொறுப்புணர்ந்து கருத்துக்களை முன்வைக்கின்றார். Vision தான் முதல் எங்களுடைய (strength) பலம். எங்களுக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது. எங்களுக்கு ஒரு கலை இருக்கு, அழிவில்லாத மொழி எங்களுக்குஇருக்கு. இன்றைக்கு எங்களுக்கு முழெறடநனபந நிறைய வேணும்” என்கிறார். முரண்பட வேண்டிய இடத்தில் முரண்படவும் துணைவேந்தர் தயங்கவில்லை. தமிழ் அரசியல் தலைவர்களை பிச்சைக்கராரர் என்று முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை ‘கொழும்பு செவன்’ இறக்குமதி என்றும் கடுமையாகச்சாடி உள்ளார். வடக்கு – கிழக்கு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் ஒருவர் இவ்வளவு துணிச்சலாக தனது கருத்தை வெளிப்படுத்தி இருப்பது இதுவே முதற் தடவை. “எங்களுக்கு மார்ட்டின் லூதர் கிங் வேணும். மொரார்ஜி தேசாய் வேணும். மாவோ சேத்துங் வேணும், லெனின் வேணும்” என்று தமிழ் மக்களிடம் சீரான ஒரு அரசியல் தலைமையில்லாத ஆதங்கத்தையும் கொட்டியுள்ளார். தான் பொறுப்பான ஒரு பதவியில் இருந்து எதனைச் செய்ய வேண்டுமோ அதனைச் செய்கின்றார். எதனைச் சொல்ல வேண்டுமோ அதனை அழுத்தம் திருத்தமாக சொல்கின்றார். யாழ் பல்கலைக்கழகம் மீண்டும் தனது முன்னைய சிறப்பை எட்டும் என்ற நம்பிக்கை தற்போது துளிர்விட்டுள்ளது.

பிரித்தானிய வீரர்கள் உட்பட தினமும் 250 படையினர் கொல்லப்படுகின்றனர்!! உக்ரெய்ன் இன்னுமொரு வன்னி!!!

பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர் லிஸ் ரஸ், உக்ரெய்ன்னுக்கு சென்று யுத்தத்தில் ஈடுபடுபவதை தான் ஆதரிப்பதாக அறிவித்ததையடுத்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உக்ரெய்ன் யுத்தத்திற்குச் சென்றுள்ளனர். இவர்களில் 20க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தினமும் உக்ரெயினில் நடைபெறும் யுத்தத்தில் இரு தரப்பிலும் 250 படையினர் கொல்லப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர் லிஸ் ரஸ், யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட சில தினங்களிலேயே இந்த அறிவிப்பை வெளிளிட்டார். இதுவரை மரணித்துள்ள 20 பிரித்தானியர்கள் பற்றி பிரித்தானிய பிரதமரோ அமைச்சர்களோ எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.

உக்ரெய்ன் யுத்தத்திற்குச் சென்றவர்களில் பிரித்தானிய இராணுவத்தில் பணிபுரிந்தவர்களும் அடங்குகின்றனர். ஆனால் இவர்கள் யாரும் பிரித்தானிய அரசு அனுமதியோடு சென்றதாகச் சொல்லப்படவில்லை. உக்ரெய்ன் யுத்தத்திற்குச் சென்று அங்குள்ள இராணுவச் செயற்பாடுகளால் விரக்தியடைந்து நாடு திரும்பிய இருவரை பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி இன்று மே 31 நேர்கண்டு ஒளிபரப்பி இருந்தது. இந்நேர்காணல்களைத் தொடர்த்து பிரித்தானிய தொலைக்காட்சி தனது செய்திகளில் உக்ரெய்ன் வெற்றிபெற்று வருவதாக கூறுவதை நேற்றைய தினம் மே 30 முதல் அடக்கி வாசிக்கின்றது.

உக்ரெய்ன் யுத்தத்தில் உக்ரெய்ன் இராணுவத்துடன் சேர்ந்து யுத்தம் புரியச் சென்ற 18 வயதேயான இளைஞர், தங்களுக்கு உறுதியளித்தது போல் எவ்வித ஆயதப் பயிற்சியும் வழங்கப்பட வில்லை என்றும் உக்ரெய்ன் இராணுவத்திடம் எவ்வித இராணுவ ஒழுங்கமைப்புகளும் இருக்கவில்லை என்றும் அடிப்படை பாதுகாப்பு அங்கிகளே தங்களுக்கு தரப்படவில்லை என்றும் தெரிவித்தார். தன்னையும் தன்னைப் போன்ற வேறுநாடுகளில் இருந்தும் இராணுவத்தில் சேர வந்தவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தின் மீது மறுநாள் ரொக்கற் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அந்த இளைஞன் தெரிவித்தார். இத்தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக உக்ரெய்ன் தெரிவித்து இருந்தபோதும் இதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்றும் அதில் நூறுபேர்வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் அவ்விளைஞர் தெரிவித்தார்.

இதே போல் பிரித்தானிய இராணுவத்தில் பணியாற்றிய ஒருவரும் அங்குள்ள நிலைமைகளை கடுமையாக விமர்சித்ததுடன் அங்கு எவ்வித இராணுவ கட்டுப்பாட்டு விதிமுறைகளும் இல்லையென்றும் ஒழுங்கற்ற கும்பலாகவே அவர்கள் இயங்குவதாகவும் அவர்களுடைய தொலைபேசி உரையாடல்களை வைத்தே ரஷ்யா தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். அங்கு யுத்தத்தில் பயிற்சிபெற்ற அனுபவமிக்கவர்களை காணமுடியவில்லை என்றும் பெரும்பாலும் எவ்வித பயிற்சியுமற்ற இளைஞர்களும் ஆர்வத்தால் உந்தப்பட்டவர்களுமே களமுனைகளில் நிற்பதாகத் தெரிவித்தார். மேலும் முன்னைய இளைஞர் குறிப்பிட்டது போல் அடிப்படைப் பாதுகாப்பு அங்கிகள் மற்றும் உணவுக்கே தட்டுப்பாடு நிலவுவதாகவும் சாதாரண மக்கள் இராணுவ நிலைகளை தங்கள் செல்போன்களில் படமெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

நேற்று மே 30 முதல் பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி உக்ரெய்ன் யுத்தம் பற்றிய செய்திகளை வெளியிடுவதில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏப்ரல் பிற்பகுதியில் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இந்தியாவில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் கிழக்கு உக்ரெய்ன் ரஷ்யாவிடம் வீழ்ந்துவிடும் என்ற தொனியிலேயே குறிப்பிட்டு இருந்தார். உக்ரெய்ன் யுத்தத்தில் தோல்வியைத் தழுவலாம் என்றும் கோடிகாட்டி இருந்தார். ஆனால் நாடுதிரும்பியதும் மீண்டும் வீரமுழக்கங்களையே வெளியிட்டார்.

ஆனால் இப்போது உக்ரெய்ன் பற்றி பேசுவதற்கே நேரம் இல்லாத அளவுக்கு பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் குடியும் கும்மாளமும் கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது. தான் வரைந்த அமைச்சரவை ஒழுக்கவிதிகள் தனக்கே ஆபத்தாகும் என்றதால் அவற்றை நேற்று மே 30 அழித்துவிட்டார். சூ கிரே இன் சுயாதீன விசாரணை அறிக்கையைத் தொடர்ந்து தற்போது பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் கட்சியைச் சேர்ந்தவர்களே அவரை பதவி விலகும்படி கோரிக்கை வைக்கின்றனர். இலங்கை ஜனாதிபதி வீட்டிற்கு போவதற்கு முன்னரே பிரித்தானிய பிரதமர் வீட்டிற்குப் போக வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

யுத்தம் என்பது அழிவை ஏற்படுத்தும். யுத்தத்தால் எதனையும் சாதித்துவிட முடிவதில்லை. அமெரிக்கா வியட்நாமில் தொடுத்த யுத்தம், அமெரிக்கா அப்கானிஸ்தானில் தொடுத்த யுத்தம், அமெரிக்கா ஈராக்கில் தொடுத்த யுத்தம், அமெரிக்கா சிரியாவில் தொடுத்த யுத்தம், பிரித்தானியா லிபியாவில் தொடுத்த யுத்தம் இவை எல்லாமே அந்நாடுகளைச் சீரழித்தது மட்டுமல்லாமல் அங்கு யுத்தத்திற்கு வழங்கப்பட்ட ஆயதங்கள் அமெரிக்க, பிரித்தானிய படைகளுக்கு எதிராக திருப்பப்பட்டது மட்டுமல்லாமல் அங்கு பயிற்சி பெற்றவர்கள் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குள்ளளும் ஊடுருவி தாக்குதல்களை நடத்தினர்.

இப்போது ரஷ்யாவுக்கும் உக்ரெயினுக்கும் இடையேயான யுத்தம், படையெடுப்பிற்கு முன்னதாகவே ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையேயான யுத்தமாக மாற்றப்பட்டு விட்டது. பிரித்தானியாவில் இருந்து உக்ரெய்ன் இராணுவத்துடன் இணையச் சென்றவர்களின் தகவல்களின் படி நேட்டோ நாடுகள் வழங்கிய ஆயதங்கள் ஏதும் அவர்களைச் சென்றடைந்ததாகத் தெரியவில்லை. ஆனால் நேட்டோ நாடுகளில் உள்ள ஊடகங்களோ தினம் தினம் ஆயதங்கள் அனுப்பப்படுகிறது என்றும் அந்த ஆயதங்களைக் கொண்டு உக்ரெய்ன் ரஷ்ய இராணுவத்தை பின்னடையச் செய்வதாகவும் செய்திகள் வெளியிடுகின்றன. உக்ரெய்ன் ஜனாதிபதி ஸ்லென்ஸ்கி தாங்கள் கிழக்கு உக்ரெய்னின் மரியோபோலை மீண்டும் கைப்பற்றுவோம் என்று குறிப்பிட்ட சில தினங்களிலேயே மரியோபோல் இரும்புத் தொழிற்சாலையில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரெய்ன் இராணுவத்தினர் (இவர்களில் ஒரு பகுதியின் தீவிர வலதுசாரிகள் என்றும் கூறப்படுகின்றது) ரஷ்ய இராணுவத்திடம் சரணடைந்தனர்.

பிரித்தானிய மற்றும் நேட்டோ நாட்டு ஊடகங்கள் உசுப்பிவிட்டதேயல்லாமல் உக்ரெய்னின் நிலைமைகள் மோசமானதாகவே உள்ளது. பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் ஜனாதிபதி ஜோ பைடனும் உள்ளுர் அரசியலில் தங்களைத் தக்கவைக்க உசுப்பிவிட்டதில் உக்ரெய்ன் மிக மோசமான நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யாவில் இருந்து எரிவாயு, மற்றும் பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதை முற்றாக தடை செய்வதாகக் குறிப்பிட்டு இருந்தது. ஆனால் இன்று அந்த முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளது. ஜேர்மன் உக்ரெய்ன் க்கு கனரக யுத்த தளபாடங்களை வழங்குவதாக கூறப்பட்டது. அதுவும் தற்போது கைவிடப்பட்டு உள்ளது. அமெரிக்க நெடுந்தூர ஏவகணைகளை வழங்கமாட்டோம் என தற்போது அறிவித்துள்ளது. உசுப்பிவிட்டவர்களை நம்பிய உக்ரெய்ன் இப்போது கடுமையான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரிலும் இந்த நேட்டோ நாடுகளில் வாழ்ந்த புலம்பெயர்ந்த புலிகளின் பிரதிநிதிகள் மிகக் கச்சிதமாக தமிழீழ விடுதலைப் புலிகளை உசுப்பிவிட்டனர். இந்த உசுப்பலால் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது என்பதால் அவர்கள் அதனை கச்சிதமாகச் செய்தனர். அங்குள்ள மக்கள் போரின் வலியை அனுபவிக்க வேண்டிவரும் என்று எண்ணம் பெரும்பாலும் வரவில்லை. 2009 ஜனவரியில் இருந்தே தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைத்து சரணடைவதே ஒரே வழியென்று தேசம்நெற் இல் பல கட்டுரைகள் வெளிவந்தது. மே 17 2009 வரை தமிழீழத்தை நாங்கள் நெருங்கிவிட்டோம் என்று தான் புலிசார் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஒரு சமயத்தில் கட்டுடைக் குளத்தை புலிகள் தகர்த்தால் அந்த வெள்ளத்தில் ஆயிரக் கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இராணுவத்தின் உடல்கள் இறக்கப்படுவதாகவும் செய்திகள் பரப்பப்பட்டது. இதே மாதிரியான செய்திகளை தற்போது பிரித்தானிய ஊடகங்களிலும் கேட்க முடிகின்றது, உக்ரெய்ன் பற்றி.

உக்ரெய்ன் மீது படையெடுப்பதற்கு ரஷ்யாவுக்கு எவ்வதி தார்மீக உரிமையும் கிடையாது. ஆனால் ரஷ்யா படையெடுத்தபின் அழிவை எப்படி குறைத்துக்கொள்ளளலாம் என்பது பற்றி சிந்தித்து செயற்படுவதே உக்ரெய்ன் மக்களுக்கு நன்மையளிக்கும். உசுப்பிவிட்டு தங்கள் தங்கள் நலனை எட்டுவது நேர்மையற்றது. தற்போது உக்ரெய்ன் மிக நீண்ட கால அழிவுக்குள் தள்ளப்பட்டு உள்ளது. உக்ரெய்னுக்குள் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் கொட்டும் ஆயதங்கள் பல்வேறு நாடுகளிலும் செயற்படும் சட்டவிரோதமான ஆயதக் குழக்களிடம் சென்றடையும். உக்ரெய்ன் ஆயதக் கருப்புச் சந்தையின் மையம். இவ்வாயுதங்கள் மீண்டும் தீவிரவாத சக்திகளால் நோட்டோ நாடுகளிலேயே தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதுவே கடந்த காலங்களிலும் நடந்தது. இனிமேல் நடக்காது என்பதற்கு எவ்வித உத்தவவாதமும் இல்லை.

நேட்டோ நாடுகளால் குவிக்கப்படும் ஆயதங்கள் உக்ரெய்னில் ஆயுதக் கலாச்சாரம் ஒன்றைத் தூண்டிவிட்டுக்கொண்டிருக்கிறது. அங்கு எல்லோரும் விரும்பி ஆயதம் ஏந்தவில்லை. பதினெட்டு வயதிற்கும் நாற்பது வயதிற்கும் உட்பட்டவர்கள் தங்கள் பிரதேசங்களைவிட்டு வெளியேறத் தடைவிதிக்கப்பட்டு கட்டாய ஆட்சேர்ப்பிற்கு உட்படுத்தப்படுகின்றனர். நேட்டோ நாடுகளின் உந்துதலால் ஒரு சிறு பிரிவினர் தொடர்ந்தும் ரஷ்யாவுக்கு எதிரான யுத்தத்தை தொடர்வார்கள். ஆனால் இந்த யுத்தத்தை உக்ரெய்னால் நீண்ட காலத்திற்கு முன்னெடுக்க முடியாது. அதற்கான உள்ளுணர்வையும் ஆட்பலத்தையும் உக்ரெய்ன் இழந்து வருகின்றது.

அதேசமயம் ரஷ்யாவுக்கும் இதுவொரு சிக்கலான பலப்பரீட்சையே. ரஷ்யா தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பிரதேசங்களை நேட்டோ உதவியோடு உக்ரைன் படைகள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தும். இந்த யுத்தம் மிக நீண்ட யுத்தமாக மாறிவருகின்றது என்பதை உணர முடிகின்றது.

நாட்டிற்குள் டொலரை வர வழிவிடுங்கள்! உல்லாசப் பயணிகளுக்கு வழிவிடுங்கள்! – த.ஜெயபாலன்

நாட்டின் மொத்த உற்பத்தியில் 12வீதத்தை அதாவது 10 பில்லியன் டொலர்களை நாட்டிற்குள் கொண்டுவரும் உலாசப் பயணிகளுக்கு வழிவிடுங்கள். நாட்டின் பொருளாதாரம் நெருக்கடி நிலையைச் சந்திக்கிறது என்று போராடுபவர்கள் நாட்டின் பொருளாதார விருத்தியை முடக்குவது தீர்வு அல்ல.

இன்று எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பது அவற்றை கொள்வனவு செய்வதற்கான அந்நியச் செலவாணி இல்லாமையே. அதனால் நாட்டிற்குள் டொலரைக் கொண்டுவரக்கூடிய நடவடிக்கைகளை முடக்கிவிட வேண்டும். இக்கருத்துக்கு முற்றிலும் முரணாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டிற்குள் வரும் உல்லாசப் பயணிகள் காலிமுகத்திடலில் மட்டையைப் பிடித்து போராடலாம் என்ற வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இப்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை நாங்கள் பயப்படும் அளவுக்கு ஆபத்தானது அல்ல. இச்சூழலை சாதகமாக்கவும் வாய்ப்பு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்த வெளிநாட்டவர் தற்போது உலகம் சுற்ற விரும்புகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள நாணய ஒடுக்கும் அல்லது நாணயத்தின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இலங்கையின் உல்லாசப் பயணத்துறைக்கு ஒரு வரப்பிரசாதம். உல்லாசப் பயணிகளை எங்கள் நாட்டுக்கு வந்து, குறைந்த செலவில் எம் நாட்டின் அழகை ரசியுங்கள். எங்கள் கலை கலாச்சாரங்களை அறியுங்கள் என்று உல்லாசப் பயணிகளுக்கு செங்கம்பள வரவேற்பளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு போராடுகிறோம், எரிக்கிறோம், கொழுத்துகிறோம் என்பதெல்லம் கஞ்சி ஊத்தாது.

இரண்டு ஆண்டுகால கோவிட் முடக்கத்தில் உலக பொருளாதாரமே முடங்கிக் கிடந்தது. அந்த முடக்கத்தில் இருந்து மெல்ல எழ ரஷ்யா, உக்ரைன் மீது படைநகர்த்தி சர்வதேச அரசியல் – பொருளாதாரச் சூழலை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது. இந்த நெருக்கடி நிலைக்குள் இருந்து மீள்வதற்கு எவ்வித திட்டமிடலும் இல்லாமல் ஜேவிபி இப்போராட்டத்தை மிகத் திட்டமிட்ட முறையில் நடாத்தி வருகின்றது. இந்தப் போராட்டம் இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக தன்னியல்பானதாக நடைபெற்றதாகச் சொல்லப்பட்டாலும் ஜேவிபிக்கு ஆதரவாகவே போராட்டம் நகர்கின்றது. ஜேவிபின் தவைரைத் தவிர ஏனைய கட்சித் தலைவர்கள் போராட்ட களத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

ஒரே நாளில் 30 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை திட்டமிட்டு எரிக்கின்ற அளவுக்கு இலங்கையில் தன்னியல்பு தலைமைகள் கிடையாது.

முப்பது ஆண்டுகள் உலகின் மிக நவீன ஆயதங்களை வைத்து போராடிய விடுதலைப் புலிகளால் மே 19ற்குப் பின் ஒரு துப்பாக்கிச் சூட்டைக் கூட நடத்த முடியவில்லை. ஆகையால் நடந்த எரிப்புச் சம்பவங்களுக்குப் பின்னணியில் ஜேவிபி இல் இருந்து பிரிந்த அதிதீவிரவாதப் பிரிவாகச் செயற்பட்டுவரும் முன்னிலை சோசலிசக்கட்சி குமார் குணரட்ணம் மீதே மையம்கொள்கின்றது.

ஆனால் இடதுசாரித்துவம் பேசும் ஜேவிபியோ முன்னிலைவாத சோசலிசக் கட்சியோ இந்தப் பொருளாதார நெருக்கடியில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் பங்களிப்புப் பற்றி வாயே திறக்கவில்லை. சர்வசே நாணய நிதியம் உலக வங்கி பற்றி தொடர்ந்தும் மௌனமாகவே உள்ளனர். இவர்களின் தோழமைக் கட்சியாக அணுகக் கூடிய பிரித்தானியாவில் செயற்படும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினர் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாகவும் முன்னிலை சோசலிசக் கட்சி மௌனம் காக்கின்றது.

பிரித்தானியாவில் இருந்து இயங்கும் இடதுசாரி அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி என்ற அமைப்பு காலிமுகத்திடல் போராட்டத்திற்கு கொள்கையளவான ஆதரவை வழங்கிய போதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அவை அனைத்துமே சர்வதேச நாணய நிதியத்த்தினதும் உலக வங்கியினதும் கொள்கைகளுக்கும் அவர்களுடைய நிபந்தனைகளுக்கும் முற்றிலும் எதிரானதாக உள்ளது. அனைத்து கடன்களையும் இரத்து செய்யுமாறு கோருவதோடு பெரு முதலாளிகளின் சொத்துக்கள் உட்பட ராஜபக்ச குடும்பத்தின் சொத்துக்களையும் பறிமுதல் செய்யக் கோருகின்றது. விவசாயிகளுக்காக மானியங்களை வழங்குவதுடன் மலையக தொழிலாளர்களின் நிலவுரிமையை உறுதி செய்யவும் கோருகின்றது. ஆனால் காலிமுகத்திடல் போராட்டம் இந்த நிபந்தனைகளைப் பற்றி எவ்வித கரிசனையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு பொருளாதார நெருக்கடிக்காகப் போராடும் தன்னை தீவிர இடதுசாரியாக தக்கவைத்துக்கொள்ளும் ஜேவிபி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி எந்தவொரு இடதுசாரி பொருளாதாரக் கோசங்களையும் வைக்கவில்லை. மாறாக அரசியல் கோஷத்தை மட்டுமே வைக்கின்றனர்.

இதன் பின்னணி என்ன? ஜேவிபி, முன்னிலை சோசலிசக் கட்சி தற்போது விலைபோகத் தயாராகி விட்டதா? குமார் குணரட்ணம் முன்னிலை சோசலிசக் கட்சியயை உருவாக்கியதைத் தொடர்ந்து பின் புலம்பெயர்நாடுகளில் இருந்தும் பலர் முன்னிலை சோசலிசக் கட்சியின் – சமவுடமை இயக்கத்தில் தங்களை வெளிப்படையாக இனம்காட்டிக்கொண்டனர். குறிப்பாக பிரான்ஸில் இடதுசாரிப் புயல் இரயாகரன், பிரித்தானியாவில் புதிய திசைகள் மற்றும் பல இடதுசாரி சிந்தனையுடையவர்களும் தங்களை முன்னிலை சோசலிசக்கட்சியுடன் அடையாளம் காட்டினர்.

ஆனால் தமிழ் சொலிடாரிட்டி தவிர்ந்த ஏனை இடதுசாரிக்குழுக்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிராகவோ உலக வங்கிக்கு எதிராகவோ கருத்துக்களை மிக அடக்கியே வாசிக்கின்றனர். பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்பும் வெற்று அரசியல் கோஷங்களையே வைத்து போராட்டம் நடத்தினர்.

அரசும் புதிய பிரதமர் உட்பட போராட்டகாரர்களும் நாட்டின் நிலைமையை மோசமடையச் செய்துகொண்டுள்ளனர். அரசு ஆணித்தரமான முடிவுகளை எடுக்க வேண்டும். இன்று ஏற்பட்டுள்ள நிலையை இலங்கையின் எதிர்காலத்திற்கு சாதகமாக மாற்ற முடியும். அதற்கு அரசியல் வாதிகளும், பல்கலைக்கழகங்களும் ஒருங்கிணைந்து நீண்டகாலத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

நாட்டை உல்லாசப் பயணிகளுக்கு திறந்துவிடுவதுடன் உல்லாசப் பயணத்துறையை காத்திரமான முறையில் வளர்க்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
அரசு நாடுகளுக்கு இடையேயான கடன்கள் உட்பட அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்!
நாணயப் பெறுமதி குறைந்துள்ளதை சாதகமாக்கி ஏற்றுமதி நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும்!!
சிறிலங்கா பெஸ்ற் மற்றும் மேடின் சிறிலங்கா என்பன நாட்டின் தாரகமந்திரமாக வேண்டும்!!!