விஜி

விஜி

நாங்களும் வெள்ளரசங் கிளையும்! : விஜி

botreeநீண்ட தரைப்பாதையின்
சிதைவுற்ற கரைகள் எங்கும்
பாதி எரிந்த மரங்கள்
முகங்களை திருப்பிக் கொள்ளும்.

முட்கம்பி வேலிகளுக்கப்பால்
சோர்வுற்ற மலர்கள்
வெற்றுப் பார்வையை வீசும்.

படிந்து போயுள்ள புழுதி போல்
பட்ட அவமானங்கள்
சொல்லவும் கேட்கவும்
ஆளற்று மௌனிக்கும்;.

மழையிற் கரைந்ததாயினும்
அவர் கண்ணீர்
தனியே உறைந்து கிடக்கிறது

சிந்திய குருதியோ
அடையாளம் காட்ட விரும்பாது
இன்னும் ஆழமாய்
தன்னை புதைத்து கொண்டுளது.

தூக்கிய கைகள்
காற்றில் சோர்ந்து விழ
தீ கக்கும் துப்பாக்கிகளே
அவர்களுடன் பேசின.

சுவடின்றி அள்ளப்பட்ட
சாம்பலின்
தப்பியொட்டிய துகள்கள்
என்னை விட்டு
போகாதே என்கின்றன.

எத்தனை தடவைதான்
குழந்தை
செத்த தாயிடம் பால் அருந்தும்?

வெள்ளரசங் கிளையை
எம்மால்
நிமிர்ந்து பார்க்க முடியவில்லை!

முள்ளி வாய்க்கால் : விஜி

Nanthi_Kadal_lagoon
புல் வெளியும்
கொஞ்ச மரங்களும்
கொண்ட இடங்களெல்லாம்
முள்ளிவாய்க்காலாய்தான்
கண்முன் விரிகிறது.

கடலின் நினைவு
அச்சம் தருகிறது
அதன் ஓ வென்ற
இரைச்சல்; தாண்டி
மனிதர்களின்
மரண ஓலம் மேலெழுகின்றது!

கடல் அறியுமோ
எங்கள் மனிதர்களின்
கண்ணீரின் உப்பையும்
குருதியின் அடர்த்தியையும்!

எந்தக் குழந்தை
தன் இறுதி மூச்சை
எங்கு நிறுத்தியதோ?
இன்னும் குழந்தைகள்
வழிதவறி அங்கு
அலைந்து திரியுமோ?

நீர்க்கரையில்
பாத்திரங்கள் பண்டங்கள்
சிதறிக் கிடக்கின்றன.
யாருக்காய் அவை காத்திருக்கின்றனவோ?

தனியே தொங்கும்
கைப்பை
சோகமாய் பார்த்திருக்கிறதே
போனவர் எப்போது
திரும்பி வருவாரோ?

புலம்பெயர் தெருக்களில்
இப்போது
சுடு சாம்பல்
காற்றில் மணக்கிறது!
சுற்றிலும்
மரண ஓலம் ஓயாது
துரத்துகிறது!

எந்தக்காலம் இனி
முள்ளிவாய்க்கால்
தன்
கதை பேசும்?

 விஜி