மறுபிரசுரங்கள்

மறுபிரசுரங்கள்

”பிரபாகரன் சுட்டுக் கொல்லப்படுவார் அல்லது தற்கொலை செய்து கொள்வார்.” அமைச்சர் முரளிதரன் லங்காதீபக்கு வழங்கிய செவ்வி.

karuna1.jpgகேள்வி : புலிகள் இயக்கத்தில் பொறுப்புவாய்ந்த ஈடு இணையற்ற தளபதியாக இருந்த நீங்கள், இன்று இந்த நாட்டின் பிரதான அமைச்சராக இருக்கின்றீர்கள். இந்த மாற்றத்திற்கான பிரதான காரணம் என்ன?

பதில் : ராஜிவ்காந்தி அவர்களின் படுகொலை தொடர்பில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன், அக்கொலை தொடர்பில் புலிகளுக்கு பாரிய பின்டைவை ஏற்படுத்தியிருந்தது. அக்கால கட்டத்தில் நான் பிரபாகரன் அவர்களிடம் இப்படிப்பட்ட செயற்பாடுகளினால் நாம் சிறந்த பயன் எதனையும் அடையப்போவதில்லை என பலமுறை சுட்டிக்காட்டியும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. ஜெனிவா பேச்சுவார்த்தைகளில் அரசுடன் இணைந்து செயற்படக்கூடிய விடயங்களையும், விட்டுக்கொடுப்புக்களையும் எடுத்தியம்பி என்னால் வழங்கப்பட்ட ஆலோசனைகளையும் பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லை, அவருடைய ஒரே நோக்கு பயங்கரவாத தாக்குதல்களாகவே இருந்தது, அப்படிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளினால் தமிழ் மக்களின் உண்மையான இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமலே போய்விட்டது, பிரபாகரனுக்கு தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொடுப்பதில் ஈடுபாடற்ற தன்மையையே என்னால் காணக்கூடியதாக இருந்தது. மற்றது ஜெனீவா பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்பட்டிருந்தாலும் அதை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் இருந்திருக்கவில்லை. இந்த நிலைமை காரணமாக எனக்கு எமது தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் பாரிய அச்சம் ஏற்படவே நான் அந்த அமைப்பிலிருந்து விலகினேன். தமிழ் மக்களின் விடிவிற்காய் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கு குழம்பிப்போயிருந்த பிரபாகரனின் பாசிச போக்குத்தான் என்னை இந்த ஜனநாயக நீரோட்டத்தில் குதிக்க வைத்தது.

கேள்வி : நீங்கள் த.ம.வி.புலிகளிலிருந்து விலகி சிறி லங்கா சுகந்திரக் கட்சியில் இணைந்து உறுப்பினராவதற்கான காரணம் என்ன?

பதில் : த.ம.வி.புலிகள் அமைப்பு ஒரு எதிர்காலம் இல்லாத அமைப்பு. தற்பொழுது அக்கட்சியில் மூன்றுபேரே எஞ்சியுள்ளனர். பிள்ளையான், பத்மினி, பிரதீப் ஆகியோரே உள்ளனர். எதிர்காலம் இல்லாத அக்கட்சியிலிருந்து கொண்டு மக்களுக்கு சேவையாற்ற முடியாது. அதனால்தான் என்னுடன் சேர்த்து மற்ற உறுப்பினர்கள் பலரும் சிறி லங்கா சுகந்திரக் கட்சியில் இணைந்து கொண்டோம்.

கேள்வி : தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் பெயரில் வரும் புலிகள் என்ற பதத்தினை நீக்குவதற்கு நீங்கள் பகீரத பிரயாத்தனம் செய்திருந்தீர்களல்லவா?

பதில் : ஆம், அது முற்றிலும் உண்மை. ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்ட கட்சிக்கு புலிகள் என்ற பதம் பொருத்தமான தொன்றல்ல,  இந்நாட்டின் சகல மக்களுக்கும் புலி என்ற பெயரில் அதிகபட்ஷ விருப்பமின்மையையே காணக்கூடியதாக இருக்கிறது. அதே போல் இந்நாட்டு மக்களுக்கு புலிகளால் பாரிய பொருளாதார இழப்புக்களும்,  அதே போல் உயிரிழப்புக்களும் ஏற்பட்டு,  அவர்களுடைய வீடு வாசல்,  அசையும் அசையா சொத்துக்கள் அழிந்திருப்பது மட்டுமில்லாது,  பல உறவினர்கள் உயிரிழந்துள்ளனர்,  அதிலும் பலர் அங்கவீனமடைந்துமுள்ளனர், நாட்டின் பொருளாதார அபிவிருத்தி அழிந்து போயிருக்கிறது,  இப்படிப்பட்ட பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திய புலிகள் என்ற பெயரை த.ம.வி.புலிகள் அமைப்பின் பெயரிலிருந்த நீக்குவதற்கு முயற்சித்தேன்,  அத்தோடு புலி என்ற பெயரிலிருக்கும் அமைப்பினால் (தற்கால கட்டத்தில்) தமிழ் மக்களை அரவணைத்துக் கொண்டு,  அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க முடியாது என்ற யதார்த்த நிலமையை உணர்ந்த பின்புதான் நான் அந்த முடிவினை எடுத்திருந்தேன்.

கேள்வி : தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் பெயரில் வரும் புலிகள் என்ற பதத்தை அகற்றுவதற்கு பிள்ளையான் விரும்பவில்லை. நீங்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு இதுதான் மூல காரணமா?

பதில் : எதிர்காலமே இருண்டு போயிருக்கும் அக்கட்சியிலிருந்து கொண்டு முன்னேற்றப் பாதையில் எமது மக்களுடன் பயணிக்க முடியாது. அரசியல் என்பது மக்களுக்காகவே அர்ப்பணிப்புடன், முன்நோக்கிச் செல்லும் பயணம். த.ம.வி.புலிகள் கட்சிக்கு எதிர்காலமே இல்லாத காரணத்தினால் நான் அக்கட்சியிலிருந்து வெளியேறினேன்.

கேள்வி : நீங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் கோபமாக இருக்கிறீர்களா?

பதில் : இல்லை, அப்படியொரு கோபமுமில்லை,  எங்கள் இருவரினதும் எதிர்பார்ப்பு மக்களுக்கு சேவை செய்வதும், அவர்களுடைய ஜீவனோபாய தேவைகளை பூர்த்தி செய்வதுமேயாகும். மக்களின் எதிர்காலம் பற்றிய இருவேறு கருத்துக்கள் இருக்கிறது. த.ம.வி.புலிகள் என்ற பெயரில் உள்ள புலிகள் என்ற பதத்தினை நீக்க பிள்ளையான் விரும்பவில்லை, ஆனால் நான் விரும்பினேன். கட்சிகளுக்குள் தலைமைத்துவ பிரச்சனை என்பது பொதுவானது. இன்றுகூட ஐக்கிய தேசிய கட்சிக்குள் தலைமைத்துவ பிரச்சனைகள் பூதாகரமாகிக் கொண்டிருக்கிறது. ஆகவே அவைகள் சாதாரணமானவைகள். ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில்,  மக்களின் சுபீட்ஷமான எதிர்காலத்தை நோக்கி நகரவேண்டுமே தவிர,  தனிப்பட்ட வைராக்கியங்களுடன் கூடிய அரசியலுக்கு இடமில்லை.. யார் தன்னலமற்ற மக்கள் சேவகன் என்பதை தீர்மானிப்பவர்கள் மக்கள் என்கின்ற எஜமான்கள். பெயரிலுள்ள புலிகள் என்ற பதத்தினை நீக்குவதற்கு பிள்ளையானக்கு விருப்பமில்லை, அவ்வளவுதான் இதில் தனிப்பட்ட கோபதாபங்களுக்கு வாய்ப்பில்லை.

கேள்வி : சிறிலங்கா சுகந்திரக் கட்சியில் உங்களுடன் சேர்த்து யார் யாரெல்லாம் இணைந்து கொண்டார்கள் என்று கூற முடியுமா?

பதில் : ஆம்,  என்னுடன் த.ம.வி.புலிகளுடன் தொடர்புபட்ட சுமார் 2000 இற்கும் அதிகமான உறுப்பினர்கள் சிறிலங்கா சுகந்திரக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்கள்.

கேள்வி : நீங்கள் என்ன எதிர்பார்ப்புடன், நோக்கத்துடன் சிறி லங்கா சுகந்திரக்கட்சியில் இணைந்து கொண்டீர்கள்?

பதில் : எனது அரசியல் பிரவேசத்துடன் கிழக்கில் பாரிய மாற்றத்தினை எதிர்பார்த்தேன், அது எனது நீண்டநாள் கனவாக இருந்தது. அதனால்தான் த.ம.வி.புலிகளிடமிருந்து வெளியேறினேன். நாட்டின் அனேக மக்களின் ஆசிர்வாதத்தின் மத்தியில்,  கிழக்கில் மாற்றத்தினை ஏற்படுத்தி,  அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகள் முதற்கொண்டு பாகுபாடற்ற சேவையினை எதிர்காலத்தில் வழங்க நான் தயாராக இருக்கிறேன். இந்த ஒரு நிலமை ஏற்பட்டு எமது மக்கள் கௌரவத்துடனும், போஷாக்குடனும்,  பொருளாதார கல்வி வளர்ச்சியுடனும் ஏனைய சமூகங்களுக்குக் கிடைக்கும் வளங்கள் அனைத்தும் அவர்களுக்குக்கிடைத்து,  ஏனைய சமூகங்கள் போல் அசுர வேகத்தில் எல்லாத்துறைகளிலும் முன்னேற வேண்டுமென்பதற்காகவுமே சிறிலங்கா சுகந்திரக் கட்சியில் இணைந்து கொண்டேன்.

கேள்வி : த.ம.வி.புலிகள் ஆயுதங்களை வைத்திருந்தார்கள் தற்பொழுது அவற்றுக்கு என்ன நடந்தது?

பதில் : குறிப்பாக எங்களிடம் ஆயுதங்கள் இல்லை. ஆயுதங்களைப் பாவிப்பது பயங்கரவாத அமைப்பாகும். நாங்கள் பயங்கரவாத அமைப்பல்ல. ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்து நாங்கள் அரசியலில் ஈடுபட்டிருக்கிறோம். எங்களிடமிருந்த ஆயுதங்களை கையளித்து விட்டோம். என்னுடன் இருப்பவர்கள் ஜனநாயக வழிக்குத்திரும்பி விட்டார்கள்,  தற்பொழுது எம்மிடம் ஆயுதங்களில்லை.

கேள்வி : அப்படியானால் உங்களுடைய பாதுகாப்பு?

பதில் : ஏனைய அமைச்சர்களைப் போன்று எனக்கும் பாதுகாப்பு அமைச்சினால் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

கேள்வி : நீங்கள் புலிப் பயங்கரவாதிகளின் பிரதான இலக்காக இருக்கிறீர்கள். தற்பொழுது உங்களக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு போதுமானதாக இரக்கிறதா?

பதில் : இலேசான புன்னகையுடன் பதில் : நான் அப்பயங்கரவாத அமைப்பிலிருந்து எப்பொழுது வெளியேறினேனோ, அன்றிலிருந்து நான் அவ்வமைப்பின் முதலாவது இலக்காகத்தான் இருந்து வருகிறேன்.

கேள்வி : தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சுப் பொறுப்பானது,  தங்களுக்கு திருப்தியானதாக இருக்கின்றதா?

பதில் : ஆம்,  திருப்தியானதாக இருக்கின்றது.

கேள்வி : வழங்கப்பட்டிருக்கும் அமைச்சுப் பொறுப்பைக் கொண்டு, நாட்டிற்கு சிறந்ததொரு சேவையை செய்யமுடியுமென்று கருதுகிறீர்களா?

பதில் : ஏன் முடியாது? எனக்கு கிடைத்திருக்கும் அமைச்சு நாட்டின் முக்கியமானதொரு பொறுப்புவாய்ந்த அமைச்சாகும். இன்று நாட்டில் தலைவிரித்தாடும் இனப்பிரச்சனைக்கு மூலகாரணமாக அமைந்தது இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வின்மையும், ஒற்றுமையின்மையும்தான். மீண்டும் இந்நாட்டில் நிரந்தரமான சமாதானம் மலர வேண்டுமாகில் அனைத்து இனங்களும் விட்டுக் கொடப்புக்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும், இது பேச்சளவில் இல்லாமல் அதற்கான களம் அமைத்துக் கொடக்கப்பட வேண்டும். அந்த நிலமையை ஏற்படுத்தவதற்கு எனது இந்த அமைச்சினூடாக பல வேலைத்திட்டங்களை செய்யலாம் என்று கருதுகிறேன். நான் அமைச்சர் டீயூ குணசேகர அவர்களுடன் இணைந்து சேவை செய்ய கிடைத்த வாய்ப்பையிட்டு பெருமகிழ்ச்சியடைகிறேன். எனக்கு அவரிடமிருந்து சிறந்த பங்களிப்பு கிடைத்திருக்கிறது. அரசியலில் முதர்ச்சியுள்ள, அனுபவம் மிக்க சிறந்த அரசியல்வாதி கௌரவ டீயூ குணசேகர அவர்கள்,  அவர் எனக்கு எல்லா வழிகளிலும் பக்க பலமாக, உதவியாக இருக்கின்றார்.

கேள்வி : நீங்கள் இந்த நிலையை அடைவதற்காகவே, ஜனாதிபதி அவர்களின் குடும்பத்தினருடன் நெருங்கிய உறவினை ஏற்படுத்தினீர்கள் என்று யாராவது சொன்னால்………

பதில் : பலரும் பத்தையும் கதைப்பார்கள். காலத்திற்கு ஏற்றமாதிரி மனிதர்கள் மாற்றமடைய வேண்டும், பழைய பத்தாம் பசளி கொள்கைகளுடன் வாழ முற்படக்கூடாது. ஜனநாயகத்திற்கு வந்துவிட்டால் அந்தப் பாதையிலேயே கவனமாக பயணிக்க வேண்டும். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போதே அதை நிரூபித்துக்காட்டியுள்ளேன். மேன்மை தங்கிய ஜனாதிபதின் சகோதரர்கள் என்னுடைய நல்ல நண்பர்கள். அவர்களிடமிருந்து எனக்கு விசேடமாக எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை. நான் அமைச்சுப் பதவிக்காக காத்திருந்தவனுமல்ல,  நான் அதைக்கேட்டதுமில்லை,  எனக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற முடிவினை எடுத்தவர் ஜனாதிபதி அவர்கள். அவருடைய வேண்டுகோளிற்கு இணங்கினேன். இதில் எந்தவிதமான குறைபாடுகளும் எனக்குத் தெரியவில்லை.

கேள்வி : யுத்தம் தொடர்பான கேள்வி ஒன்று, பிரபாகரனின் இன்றைய நிலை என்ன?

பதில் : இக்கேள்வி தொடர்பான நல்லதொரு விரிவான பதிலினை இன்னும் சில நாட்களுக்குள் உங்களுக்குக் கிடைக்கலாம். பிரபாகரன் தற்பொழுது அவருடைய படைகளில் மிஞ்சிய நன்கு பயிற்றப்பட்டவர்களை தனது பாதுகாப்பிற்காக வைத்திருக்கிறார். சுட்டுக் கொல்லப்படுவார் அல்லது தற்கொலை செய்து கொள்வார். இதற்காகத்தான் அப்பாவி மக்களை தனது கவசமாக வைத்திருக்கிறார்.

பிரபாவுக்கு ஒரு திறந்தமடல் – சங்கரி

anada_sangari.jpgஉமது கட்டுப்பாட்டின் கீழ் நீர் வைத்திருக்கும் 81,000 குடும்பங்களைச் சேர்ந்த, மூன்று இலட்சத்து முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களின் சாபம் உம்மை நிம்மதியாக வாழவிடாது. உம்மையும் உமது சந்ததியினரையும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இன்றும் உம்மை தொடர்ந்து ஆதரிப்பவர்களையும், அவர்களின் சாபம் விட்டுவைக்காது. இப்போதாவது உமது மனதை மாற்றி நீர் தடுத்து வைத்திருப்பவர்களை விடுதலை செய்யும்படி கேட்கின்றேன். அம்மக்கள் பட்டினியால் இறக்க ஆரம்பித்து விட்டனர். அதற்கு முழுப்பொறுப்பையும் நீரே ஏற்கவேண்டும்.

என்னசெய்வது என அறியாது உமது தற்போதய இருப்பிடம் தெரியாதமையால் இதை ஓர் பகிரங்க கடிதமாகவே எழுதுகின்றேன். இக்கட்டத்திலேனும் நீர் உருவாக்கிவைத்த சிலவற்றையேனும் மாற்றியமைக்க முடியாதாவென கேட்க விரும்புகின்றேன். வழமைபோல் இதற்கும் உம்மிடமிருந்து எதுவித பதிலையும் எதிர்பார்க்கவில்லை. என்றாலும் நீர் இந்த நிலைமைக்கு ஆளாக்கிய மக்களை காப்பதற்கு, உறுதியான சில நடவடிக்கைகளை எடுப்பீர் என நான் உண்மையாக நம்புகின்றேன். நல்ல எண்ணத்துடன் என்னால் எழுதப்பட்ட கடிதங்களை, அவற்றில் அனேகமானவை உம்முடைய உமது போராளிகளுடைய நடவடிக்கைகளை கண்டித்திருந்தும், அவற்றை நீர் பாரதூரமாக கருதாதமை துர்பாக்கியமே.

இவ்வாறு செய்வதற்கு எனக்கு எதுவித சுயநல நோக்கமும் இருக்கவில்லை. நான் எவருடைய முகவராகவும் செயற்படவில்லை. நான் என்றும் உமது ஆயுத போராட்டத்தை ஆதரித்தவனுமில்லை. எப்போதும் வன்முறையற்ற போராட்டத்திலேயே நம்பிக்கை கொண்டவனாகவே வாழ்ந்தேன். எவரையும் பகைக்காமல், அகிம்சை வழியில் எமது பிரச்சினையை வெற்றிகரமாக அணுகியிருக்கலாம் என இன்றும் எண்ணுகின்றேன். நான் உம்மை கண்டித்து எழுதிவந்தமைக்கு, இரு காரணங்கள் பிரதானமாக இருந்தன. அதில் ஒன்று தொடர்ந்து உமது குற்றங்களை சுட்டிக்காட்டிவந்தால், உம்மை அதன் மூலம் ஜனநாயக வழிக்குத் திருப்பலாம் என எண்ணினேன். எமக்கு எதுவித அந்தஸ்தும் கோராது, உமக்கு முழு ஆதரவு தந்ததன் நோக்கமும் அதுவே. மறு காரணம் உமது கட்டுப்பாட்டில் கால் நூற்றாண்டுக்குமேல் நிரந்தர பயத்துடனும், பீதியுடனும் விபரிக்கமுடியாத கஸ்டங்களை அனுபவித்துவந்த மக்களை, விடுதலையடையச் செய்யலாம் என கருதினேன். அம்முயற்சியில் உம்மனதை பெருமளவில் நோகடித்து உமது வெறுப்பையும் உமது போராளிகளின் கோபத்தையும் சம்பாதித்திருப்பேன். அது பற்றி நான் கவலைப்படவில்லை. என் முயற்சி சுயநலமற்ற உண்மையானதும் நேர்மையானதுமென நான் முழுக்க நம்பியதால் எனது உயிருக்கு ஏற்படக்கூடிய எந்த ஆபத்தையும் எதிர் நோக்க தயாராயிருந்தேன். எனது உண்மையான அக்கறை தமிழ் மக்களின் நன்மை தழுவியதையே பிரதிபலித்துக்காட்டியது என்பதை நீரும் பாராட்டுவீர் என திடமாக நம்புகின்றேன். இந்த நிலைப்பாட்டை எடுத்தமையால் உமக்காதரவான உலகம் முழுவதிலும் செயற்படும் அச்சு, மின் ஊடகங்கள் மூலமாக ஏற்படுத்திய அபகீர்த்தியும் மன உளைச்சலும் ஒரு மனிதனின் பொறுமையின் எல்லையை தாண்டியவையாகும். அவை மிக கீழ் தரமானவை என்றாலும் அவற்றை தாங்கிக்கொண்டேன்.

அரசியற் பிரமுகர்களாகிய இந்திய முன்னாள் பிரதமர் கௌரவ ராஜீவ்காந்தி, ஜனாதிபதி ஆர். பிரேமதாசா, ஜனாதிபதி வேட்பாளர் கௌரவ காமினி திசாநாயக்க அவருடன் பல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் படுகொலைகள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கொலைமுயற்சிகள் ஆகியவற்றில் நீர் சம்மந்தப்பட்ட கால கட்டத்திற்கு உமது சிந்தனையை பின்னோக்கி விட்டுப்பாரும். இச் செயல்களால், நீர் அடைந்த இலாபம்தான் என்ன? தமிழ்நாடு உட்பட முழு இந்தியாவினதும் சிங்கள மக்களினதும் கடும் வெறுப்பை சம்பாதித்தீர். அண்மையில் எமது இனப்பிரச்சினை சம்மந்தமாக தமிழ் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட எழுச்சி வெறும் அரசியல் இலாபந்தேடும் தந்திரமே. என்னால் மீணடும் மீண்டும் விடப்பட்ட அழைப்பை ஏற்று ஒரு தமிழ் நாட்டு தலைவரேனும் தள நிலைமையை அறிய வேண்டுமென ஆர்வம் கொண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் திரு. அ. அமிர்தலிங்கம் யாழ் மாவட்டசபை தலைவர் திரு எஸ் நடராசா, யாழ்மேயர் திரு. பொ.சிவபாலன், அரசியற் சட்ட வல்லுனர் கலாநிதி நீலன்திருச்செல்வம், யாழ் நகர மேயர் சறோஜினி யோகேஸ்வரன் இன்னும் பல அரச அதிகாரிகள் கல்விமான்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுர் அரசியல் வாதிகள் இது போன்று இன்னும்; பல பிரமுகர்கள் உம்மால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உமது கொலைகள் தமிழ் தலைமையில், பெரும் இடைவெளியை ஏற்படுத்தியது. உயர் மட்ட தலைவர்கள் பலர் கொலை செய்யப்பட்டமையால் தமிழர் மத்தியில் காளான்கள் போல பல புதிய தலைவர்கள் உருவானார்கள். எக்குழுவினருடனும் முரண்படாது செயற்பட்ட மிதவாதக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியை கூட நீர் விட்டுவைக்கவில்லை. சில கூட்டணி தலைவர்களை கொன்றீர். ஏனையவர் சிலரை பாராளுமன்ற பதவியைக் கொடுத்து விலைக்கே வாங்கி விட்டீர். எந்த ஒரு சிங்களவராலோ அல்லது இஸ்லாமியராலோ என்றும் ஒருவித தீங்கும் விளைவிக்கப்படாத இந்த தமிழ் தலைவர்களை, பூரணமாக அற்றுப் போகச்செய்ய அந்த தமிழ் தலைவர்கள் உமக்கு என்ன தீங்கு செய்தார்கள்? இஸ்லாமியரான, இந்து சமயத்தில் மிக பாண்டித்தியம் பெற்றிருந்த மன்னார் அரச அதிபராய் இருந்த என் நண்பன் ஜனாப் மக்பூல் அவர்களை நினைத்து இன்னும் அழுகின்றேன அவரைக் கொன்றதாலேயோ, அல்லது ஒரு சிங்களவர் இஸ்லாமியர் எதுவித தீங்கு விளைவிக்க எண்ணாத மற்றத்தலைவர்களை கொன்று என்ன இலாபத்தை அடைந்தீர்? படிப்படியாக உமது பெறுமதியினை இழந்ததைத்தவிர.

தமிழ் மொழியை தாய் மொழியாகக்கொண்ட இஸ்லாமிய சகோதரர்களை 10ம் திகதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக்கூட கொண்டாடவிடாது 15 அப்பாவி மக்களை பலி எடுத்தும் 40க்கு மேற்பட்டோரை காயப்படுத்தியும் உள்ளீர். இப்போதாவது உமது இரத்த வெறி அடங்கியதா? எப்படியேனும் ஓர் இனக்கலவரத்தை ஏற்படுத்தவேண்டுமென நீர் எடுத்துவரும் முயற்சியில் இதுவும் ஒனறு. உமது பொறிக்குள் இனியும் இந்நாட்டு மக்கள் விழத்தயார் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளவும்.

எத்தனை அப்பாவி சிங்களவர்கள், தமிழர்கள் இஸ்லாமியர்களை நீர் இரத்தத்தால் குளிப்பாட்டியுள்ளீர்? பள்ளி வாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி இஸ்லாமிய சகோதரர்களை ஒரு தடவைக்கு மேல் படுகொலை செய்துள்ளீர். பௌத்த மதத்தினருக்கு மிகவும் புனித நகராகிய அனுராதபுரத்தில் வைத்து பௌத்த யாத்திரிகளை படுகொலை செயதீர். உலகப் பிரசித்த பெற்ற புத்த பெருமானின் புனித தந்தங்களை கொண்டுள்ள கோவிலை அழிக்க முற்பட்டீர். ஓர் பேரூந்தில் நிறைந்திருந்த பௌத்த குருமாராக பிரதிக்கினை செய்யப்பட்ட சிறுவர்களை படுகொலை செய்ய உமது உள்ளம் எவ்வாறு இடம் கொடுத்தது? வட பகுதியில வாழ்ந்த இஸ்லாமிய சகோதரர்களை ஈவு இரக்கமின்றி அவர்களின் சகல சொத்துக்களையும் பறிமுதல் செய்துவிட்டு வெறும் 500 ரூபா கொடுத்து வெளியேற்றினீர். எல்லைக் கிராமங்களில் வாழ்ந்த சிறு பாலகர்களைத்தன்னும் விட்டுவைத்தீரா? பல அப்பாவி சேனை விவசாயிகளை காரணமின்றி சுட்டுத்தள்ளினீர்.

எத்தனை கிளைமோர் பொறி, நிலப் பொறி, கைக்குண்டு தாக்குதல்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான பெருமளவு அப்பாவி சிங்கள மக்களையும் அவர்களுடன் அப்பாவி தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்க காரணமாக இருந்திருக்கின்றீர். எத்தனை வாழ்விழந்த ஆண் பெண்கள் எத்தனை அநாதைகள் ஆகியோரை உருவாக்கியுள்ளீர்?. எத்தனை பேரை கால், கைகளை கண்பார்வையை இழக்க செய்துள்ளீர்?; எத்தனை பணக்காரர்களை ஒரே இரவில் ஓட்டாண்டியாக்கியுள்ளீர்?. அவர்களுக்கு எதைத்தான் விட்டுவைத்துள்ளீர்?. அவர்களின் விவசாயமும் கைத்தொழிலும் எங்கே?. அவர்கள் வீடுகள் வீட்டுத் தளபாடங்கள் வாகனங்கள் எல்லாம் எங்கே?. அவர்களின் கல்வி எங்கே? அத்தனையும் அழிந்து விட்டன. இதுதான் ஊழ்வினையா? என மக்கள் கேட்கின்றார்கள் அப்படியாயின் உமது கட்டுப்பாட்டின் கீழ் வாழ்ந்த, இத்தனை துன்பங்களை அனுபவித்த மக்களுக்கேன் இந்த நிலை வரவேண்டும் என, பிற நாட்டிலிருந்து பண உதவி செய்து, இத்தனையும் செய்ய உமக்கு உற்சாக மூட்டிவிட்டு, தம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடும் எமது வெளிநாட்டு உறவுகளிடம் நான் கேட்கின்றேன் . இந்த அப்பாவி மக்களுக்கு ஏற்பட்ட நஸ்டத்தை யாராலும் கணக்கிடமுடியுமா? உமது கட்டுப்பாட்டில் வாழ்ந்த காலத்தில் அனுபவித்த கொடூரங்களை யாராலும் விபரிக்கமுடியுமா? இதெல்லாம் முடிந்த கதை. நடந்தது நடந்ததுதான். ஆனால் அதற்கு பரிகாரமாக சிலவற்றை நீர்; தாமதமின்றி செய்தால் பலவிடயங்களில் முன்னேற்றம் காணமுடியும். தாங்கள் வைத்திருந்த இப்போது முழுக்க இழக்கும் தறுவாயில் உள்ள சில பொருட்களையேனும் மீட்டெடுக்கலாம் அல்லவா.

இவையும் இன்னும் பல விடயங்கள் நடந்துவிட்டன் உமது செயற்பாடுகள் பல தொகுப்புக்களாக எழுதலாம் அவற்றின் சுருக்கத்தின் ஓரு துளியே நான் எழுதியுள்ளவை. உமது அழிவுச் சாதனை கோடானுகோடி பெறுமதியான எமது மக்களின் உடமைகளுக்கும், உயிர்களுக்கும் பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. தம் வீடுகளைவிட்டு இடம் பெயர்ந்த மக்கள் மீளச்சென்ற போது எதையும் காணமுடியவில்லை. எனது கிளிநொச்சி வீட்டில் கூட எதுவும் இருக்கவில்லை. ஒவ்வொரு தடவையும், இடம் பெயர்ந்து சென்ற மக்கள் தம்முடன் எடுத்துச் செல்லக்கூடியவற்றை மட்டுமே எடுத்துச்சென்றனர். திரும்ப வீட்டுக்கு வந்த போது எதுவும் கிடைக்கவில்லை மன்னார் தொடக்கம் உமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் தமது உடமைகள் அத்தனையையும் கைவிட்டுவிட்டே சென்றனர். அதே போலவே வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கும் நடந்தது. இதுவே கிழக்கு மாகாண மக்களுக்கும் நடந்தது. இவ்வாறு இடம் பெயர்ந்த மக்கள் புதிதாக தற்காலிகமாக வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் அமைக்கப்பட்ட வீடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் எப்போது வீடுகளுக்கு திரும்புவார்களோ தெரியாது. அதற்கு பல மாதங்கள் அல்லது வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் அவர்கள் தம் வீடுகளுக்கு திரும்பும்போது அங்கே எதுவும் இருக்கப்போவதில்லை.

நான் எழுதிய கடிதங்கள் உம்மிடம் இருப்பின், அல்லது நான் எழுதியது உமக்கு ஞாபகம் இருப்பின், உமது முன் சிந்தனையற்ற செயற்பாடுகளின் விளைவுகள் புரியும். ஆயுதங்களை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு போகுமாறு எத்தனை தடவை மன்றாடி கேட்டிருந்தேன். ஏதாவது ஒரு கட்டத்திலேனும் எனது புத்திமதிகளைக் கேட்டு சரியாக செயற்பட்டிருந்தால் எல்லாத்தமிழ் மக்களுக்கும் ஏதாவது மிஞ்சி இருந்திருக்கும். இப்போது கால் நூற்றாண்டுக்குமேல் ஆயுதப் போராட்டம் நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை பலி கொடுத்து எம் அனைவரையும் ஓட்டாண்டியாக்கியதுதான் மிச்சம். வட பகுதி மக்களில் எத்தனை பேர் தம் உடமைகள் அனைத்தையும் இழந்த நிலையில் இன்று உணவுப் பொட்டலங்களை பெற வரிசையில் காத்து நிற்கின்றனர். எனது ஞாபகத்துக்கு எட்டியவரையில் வன்னிப் பகுதியில் பிச்சைக்காரரை நான் சந்தித்ததே இல்லை.

நீர் நினைத்தது போல், அத்தனையும் நடக்கும் என எதிர் பார்க்கவேண்டாம். அடுத்து வரும் சில நாட்களில் எதுவும் நடக்கலாம். மேலும் மேலும் மக்கள் பசியாலும் தாகத்தாலும் மடியக்கூடும். பசிக்கெர்டுமையால் ஏற்கனவே 13 பேர் இறந்துவிட்டதாக தெரிய வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில் பெரும் தொற்று நோய் கூட பெருமளவில் ஏற்படலாம். வன்னி மக்களுக்கு, பெரும் அனர்த்தம் கூட எதிர் பாராமல் நடக்கலாம் என எச்சரிக்கையாக இருக்கவும். இப்போது உமது கட்டுப்பாட்டுக்குள் அப்பாவி மக்களை வைத்திருப்பதனால் என்ன இலாபத்தை அடைகிறீர். அங்கே உம்மிடம் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட ஆண் பெண் பிள்ளைகள் ஆகியோர் உள்ளனர். அவர்களில் அநேகர் நோயாளிகளாகவும் காயப்பட்டவர்களாகவும் உள்ளனர். சிலர் முதியவர்களாகவும், நலிந்தவர்களாகவும் உள்ளனர். பல ஆண்டுகள் நீர் தொடர்ந்து போரிட்டாலும் உமது தற்போதய நிலைமைக்கு உம்மால் வர முடியுமென நான் எண்ணவில்லை. யுத்தம் முடிந்து விட்டது என்றே எம்மால் உணர முடிகிறது. இப்போது நடப்பதெல்லாம் 81000 குடுமபத்தினர் திணித்து வைக்கப்பட்டு வாழும் சிறுபகுதியை, துடைத்தெடுத்து அப்பகுதியில் யுத்ததிற்கு முற்றாக முடிவு கட்டும் பணியே நடக்கின்றது காலவரையின்றி இம் மக்களை தடுத்து வைத்திருப்பதால், எதுவித பலனும் ஏற்படப்போவதில்லை. உமது குழுவினரின் எதிர்காலம் கூட பாதுகாப்பற்ற நிலைதான். அவர்களையும் இழப்பதைவிடுத்து, தயவு செய்து புத்திசாலித்தனமாக அவர்களைக் காப்பாற்றவும். அவர்கள் அனைவரையும் சரணடையவைத்து பொதுமன்னிப்பு மூலம் காப்பாற்றலாம். அத்துடன் உமது இயக்கத்தை கலைத்துவிட்டு, இராணுவத்திடம் சரணடையவும். அவர்களைக்காப்பாற்ற இதுவும் ஒரு வழியாகும்.

உமது குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொண்டு, உமக்கு முறையான புத்திமதி கூறத்தவறியவர்களும், தமிழ் நாட்டில் சில தலைவர்களால் மிகத்தவறாக வழிநடத்தப்பட்ட மக்கள் சிலரையும், தவிர முழு உலகமும் உங்களுக்கு மாறாக திரும்பிவிட்டது. மக்களை மிக மோசமாக நடத்துகிறீர் என சர்வதேச சமூகம் உம்மீது குற்றம் சுமத்துகிறது. உமது செயற்பாடுகளை ஐக்கிய நாடுகள் சபையும், ஐரோப்பிய ஒன்றியமும் வன்மையாக கண்டித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர், மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு போன்ற பல அமைப்புகள்கூட நீங்கள் அப்பாவி மக்களை பலாத்காரமாக தடுத்துவைத்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளன. பல்வேறு நாடுகளின் தலை நகர்களில் ஒன்றுகூடிய மக்கள், எம்மக்களை விடுவிக்கவேண்டுமென கேட்டார்களேயன்றி, உமக்காகபேசவில்லை. உமக்கு அவர்கள் விடுத்த செய்தி எமது மக்களை விடுவிக்கவேண்டும் என்பதே. தமிழ் மக்களை காப்பாற்றும் முழுப்பொறுப்பும் இப்போது உமது கையிலேயே.. அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர் நீரே. ஆகவே எதுவித தாமதமும் இன்றி மக்கள் எங்கே போக விரும்புகிறார்களோ அங்கே போக அனுமதிக்கவும். உம்மை ஆண்டவனின் பெயரால் கேட்கின்றேன் தயவு செயது, சுயநலத்துடன் செயற்படும் உமது இடத்தை பிடிக்க, ஆவலுடன்காத்திருக்கும் அரசியல் கழுகுகளிடம் மக்களை பாரம் கொடுத்து, போதிய கஸ்டங்களை அனுபவித்த மக்களின் துன்பமான வாழ்க்கையை மேலும் நீடிக்கவிடாது, சுதந்திரமாக வாழவிரும்பும் மக்களை அவர்கள் வழியிலேயே விட்டுவிடுங்கள். துப்பாக்கிகளை திரும்பி பார்க்கவே அவர்கள் இப்போது விரும்புகிறார்கள் இல்லை விளையாட்டு துப்பாக்கிகள் உட்பட.

இக்கட்டத்திலேனும் துப்பாக்கிகளை கைவிட்டு, யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவரவும். சாவதேச ஆதரவுடன் கண்ணிவெடிகளை அகற்ற அதிககாலம் எடுக்காது. விரைவில் வன்னிப்பகுதிமக்கள் தமது இல்லங்களுக்கு திரும்பி, எஞ்சியுள்ள தமது பொருட்களையும் மீட்டெடுக்க முடியும். இப்போது கூட நீர் எனது புத்திமதியை கேட்கத்தவறின், ஏற்கனவே மக்கள் இழந்தது போக அவர்களின் எஞ்சியுள்ள பல்லாயிரம் கோடி பெறுமதியான சொத்துக்களை அவர்கள் இழப்பதற்கு நீரே பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் தமது வீடுகளுக்கு திரும்ப நீண்ட காலமெடுக்குமாயின் அவர்களின் சொத்துக்கள் எதுவும் அவர்களுக்கு இல்லாமல்போய்விடும். இதுவே நான், உமக்கு நம்பிக்கை அத்தனையையும் இழந்தநிலையில் விடுக்குன், இறுதி வேண்டுகோளாகும். மிக தாழ்மையாக விடுக்கும் வேண்டுகோள். நாம் அனைவரும் சிங்களவர், தமிழர், இஸ்லாமியர் பறங்கியர் மலாயர்கள் உடன் ஏனைய இன மக்களும் சமாதானமாகவும் அமைதியாகவும் ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கைக்குள் சம உரிமையுடன் வாழவேண்டும் என்பதே. இந்த நாட்டீன் அமைதியை குலைத்த நீரே நிரந்தர சமாதானத்தையும் தரக்கூடிய தனி நபராகும்.

ஓர் இடைக்கால ஒழுங்காக, அரசை யுத்தத்தை நிறுத்துமாறு கேட்காது, நீரும் பதிலுக்கு அதேபோல் நடக்க சம்மதித்தால், விமான தாக்குதல், செல் அடித்தல், பீரங்கித்தாக்குதல் முதலியவற்றை நிறுத்தினால் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கலாம். அப்படியானதோர் நிலையில் அரசாங்கத்தை போதிய உணவு வகைகளையும் மருந்துவகைகளையும் மக்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளலாம். உமது பங்கிற்கு நீர் செல் அடிகளையும் பீரங்கித்தாக்குதல்களையும் உடன் நிறுத்தவேண்டும்.
நன்றி,

அன்புடன்,

வீ. ஆனந்தசங்கரி,

தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி.

நாங்கள் வெறுமனே பாலம் கட்ட விரும்பவில்லை; ஈழம் கட்டவே விரும்புகிறோம்: கவிஞர் காசி ஆனந்தன் விகடனுக்கு வழங்கிய பேட்டி

kasi-anandhan.jpgகாசி ஆனந்தன் அவர்களை ஆனந்த விகடன் சஞ்சிகையினர் சந்தித்துள்ளனர். அப்போது அவர் வழங்கியுள்ள விறுவிறுப்பான  பேட்டி வருமாறு:- 

‘பத்துத் தடவை பாடை வராது .பதுங்கிக்கிடக்கும் புலியே தமிழா!  செத்து மடிவது ஒருமுறைதானடா,  சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா!’ என்று

கேள்வி: கால் நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு, மீண்டும் தமிழகத்தில் ஈழ ஆதரவு எழுச்சி. 1983-க்கும் 2009-க்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

1983 என்பது தமிழீழ விடுதலைப் போராளிகள் இயக்கம் வீச்சோடு வளர்ந்து நிமிர்ந்த காலம். வெலிக்கடைச் சிறைச்சாலையில் 52 தமிழீழக் கைதிகள் துடிதுடிக்க அடித்து, வெட்டிக் கொல்லப்பட்டனர்.

குட்டிமணியின் கண்களைப் பிடுங்கிச் செருப்புக் கால்களின் கீழிட்டுச் சிங்கள சிறைக் காவலர்கள் வெறியாடிய காலம். அன்று தமிழகத்தில் எழுந்த பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பு இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் எழுந்திருக்கிறது. விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவான தமிழ் மக்களின் உணர்வுகள் இன்னும் பலமடங்கு அதிகரித்திருப்பதை நன்றியுடன், நெகிழ்வுடன் பார்க்கிறோம். 83-ல் தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சித் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய தமிழீழ அங்கீகார மாநாடு அன்று நடைபெறவில்லை. பத்துக்கும் மேற்பட்ட தாயகத் தமிழர்கள் ஈழச் சொந்தங்களுக்காகத் தங்கள் உடலைத் தீயின் பசிக்குத் தின்னக் கொடுத்த தியாகங்கள் அன்று இல்லை. இத்தனை காலமும் மறைத்து வைத்திருந்த உணர்வுகள் வெடித்துக் கிளம்பியிருக்கின்றன. ‘இன உணர்வைப் புதைப்பது என்பது விதையைப் புதைப்பது போலத்தான்’ என்பதைத்தான் உங்கள் விடுதலைப் புலிகள் பற்றிய விகடன் கருத்துக் கணிப்பு ஏற்கெனவே நிரூபித்ததே.

கேள்வி:அன்று பிரதமர் இந்திராகாந்தி ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்தார். ஆனால், இன்றைய மத்திய அரசு புலிகளுக்கு எதிராக உள்ளது பின்னடைவுதானே?

உண்மைதான். மத்திய அரசு புலிகளை அழிக்க சிங்கள அரசுக்கு ஆயுதம், பயிற்சிகள், போர் வழிகாட்டுதல்களை வழங்கி வருவதை காங்கிரஸ் தவிர்த்த தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒப்புக்கொள்கின்றன. இடைக்காலத்தில் ஏற்பட்ட ‘விரும்பத்தகாத விளைவு’ காரணமாக இந்த இடைவெளி ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இருதரப்புகளிலும் சில விட்டுக்கொடுப்புகள் அவசியம் என்று கருதுகிறேன்.

நல்ல நோக்கத்தோடு இலங்கைக்கு அனுப்பிய அமைதிப் படையினரைப் புலிகள் சுட்டுக் கொன்றது நியாயமா?’ என்று இந்திய அரசின் சார்பாகக் கேட்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். புலிகளோ, ‘எங்கள் போராளி திலீபனை இழந்தோமே, பெருமதியான தளபதிகள் குமரப்பாவையும் ஜானியையும் இன்னும் பல தளபதிகளையும் அமைதிப் படை சுட்டு வீழ்த்தியதே. போரில் சம்பந்தப்படாத அப்பாவித் தமிழ் மக்கள் 12 ஆயிரம் பேர் அமைதிப் படையால் கொலை செய்யப்பட்டார்களே, 300-க்கும் அதிகமான ஈழச் சகோதரிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்களே, இவையெல்லாம் சரிதானா?’ என்று கேட்கிறார்கள்.

இந்த நிகழ்வுகளை இருதரப்பும் முற்றிலுமாக மறக்க ஏலாதுதான். ஆனால், சில விட்டுக்கொடுப்புகள் இந்தியாவுக்கும் தமிழீழ மக்களுக்கும் இன்றியமையாதது. அண்டை நாடான இந்தியா அறம் தழுவிய ஈழப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற அனைத் திந்தியக் கட்சிகளே எங்களுக்கு ஆதரவாக இருக்கும்போது, மத்திய அரசு மட்டும் எங்களின் நியாயத்தைப் புரிந்துகொள்ளாமல் இருப்பது துரதிர்ஷ்டமே.

கேள்வி: சமீபத்திய போரின் தொடர் வீழ்ச்சிகள் புலிகள் பலவீனமடைந்துவிட்டார்கள் என்பதைத்தானே காட்டுகிறது?

ஒரு மாதப் போரை வைத்து புலிகளின் பலம், பலவீனத்தைக் கணிக்க முடியாது. 32 ஆண்டுகளுக்கு முன் 5 வீரர்களுடன் தொடங்கப்பட்ட இயக்கத்தில் இன்று 30 ஆயிரம் வீரர்கள் களமாடுகின்றனர். ஒரே ஒரு கைத்துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட இயக்கம் வான்படை, கடற்புலிகள், தரைப்படை என முப்படை கொண்ட ராணுவ இயக்கமாகப் பரிணமித்திருக்கிறது. தோழர் தியாகு அண்மையில் சொன்னதைப் போல், ‘புலிகளின் நிலம் சுருங்கியிருக்கிறது. ஆனால், உலகெங்கும் அது விரிந்திருக்கிறது!’ என்பதுதான் நிதர்சனம்.

இதுவரை 52 ஆயிரம் சிங்கள ராணுவ வீரர்கள் இலங்கை ராணுவத்தைவிட்டுத் தப்பி ஓடியதாகத் தகவல்கள் சொல்கின்றன. விடுதலைக்கான தேதி வேண்டுமானால் தள்ளிப்போகலாமே தவிர, ஒரு விடுதலை இயக்கத்தை அழித்துவிட முடியாது. நிச்சயம் தற்காலிகப் பின்னடைவிலிருந்து புலிகள் மீண்டு எழுவார்கள். ஒரு பாரியத் தாக்குதலை சிங்கள ராணுவத்தின் மீது நிகழ்த்தி வெற்றியடைவார்கள்.

கேள்வி: போர் நிறுத்தத்தை ஆதரிப்பதாகச் சொல்லும் காங்கிரஸ் கட்சி, ஈழப் பிரச்னைக்குத் தீர்வாக ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை முன்வைக்கிறதே?

ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை ஈழ மக்கள் என்றைக்குமே ஆதரித்தது இல்லை. அந்த ஒப்பந்தம் சிறிய உரிமைகளைக்கூட ஈழ மக்களுக்கு வழங்காது. இலங்கை என்பது இரு தேசங்களின் நாடு என்பதை இலங்கை அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளும் வரை இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடையாது. அதிகாரம் சிங்களவர்களுக்கும் அதிகாரப் பகிர்வு என்னும் பிச்சை தமிழர்களுக்கும் என்பதுதான் அந்த உடன்படிக்கையின் பின் உள்ள உண்மை.

அதிகாரப் பகிர்வைப் பற்றிப் பேசும்போதுகூட 7 சிங்கள மாகாணம், 2 தமிழ் மாகாணம், ஆக மொத்தம் 9 மாகாணங்களுக்கு இடையே அதிகாரப் பகிர்வு செய்யப்படும் என்கிறார்கள். இப்போது நடக்கும் போராட்டம் மாகாணங்களுக்கு இடையேயான போராட்டமா, தேசங்களுக்கு இடையேயான போராட்டமா? ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை ஏன் சுருக்கிச் சிறுமைப்படுத்துகிறீர்கள்?

ராஜீவ் – ஜெயவர்த்தன ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டாலோ, அல்லது இடைக்கால மாகாண சபைகள் அமைக்கப்பட்டாலோ, சாலை போடலாம், பாலம் போடலாம். ஆனால், நாங்கள் வெறுமனே பாலம் கட்ட விரும்பவில்லை, ஈழம் கட்டவே விரும்புகிறோம்.

கேள்வி: ஈழத் தமிழர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களைச் சேகரித்து அனுப்புமாறு தங்கள் கட்சியினருக்கு காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளதே?

நன்றி. ஆனால், உணவு என்பது இன்றைய தேவையே தவிர, லட்சியம் அல்ல. உணவுதான் லட்சியம் என்றால், திலீபன் உண்ணாவிரதம் இருந்து இறந்திருக்க மாட்டான். களத்தில் புலி நஞ்சைச் சாப்பிட்டுச் சாக மாட்டான்.

கேள்வி:  போர் நிறுத்தம் என்பது இரு தரப்பினரும் மேற்கொள்ள வேண்டியது. புலிகளும் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிற கோரிக்கைகள் பற்றி?

புலிகளின் ஆயுதம் என்பது புலிகளைக் காக்க அல்ல, ஈழ மக்களைக் காப்பதற்காகவே’ என்று நடேசன் கூறியுள்ளார். ஆயுதங்கள்தான் தமிழ் மக்களைக் காப்பாற்ற முடியும் என்று நினைத்ததால்தானே இந்திய அரசு புலிகளை அழைத்து ஆயுதம் வழங்கியது? தமிழ் மக்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் ஆயுதங்களைக் கீழே போடச் சொல்வது என்ன நியாயம்? இந்தியா கோரிக்கை விடுக்க வேண்டியது இலங்கை அரசிடம்தானே தவிர, புலிகளிடம் அல்ல.

தேர்தல் அறிவிப்புடன் புது வேகத்தில் நகரும் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் : தினக்குரல்

vaiko-black-flag.jpgஈழத்தில் தொடரும் தமிழினப் படுகொலையை கண்டித்தும் யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தியும் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் “புயலில்’ சிக்கி தொய்வு ஏற்பட்டு விடுமோ என்று தமிழுணர்வாளர்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சத்துக்கு மாறாக போராட்டங்கள் புதுவடிவம் பெற்று முழுவீச்சில் வீறுகொண்டுள்ளதுடன் நடக்கப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை அரசியல் ஆக்குவோம் என்று தேசிய, மாநில அரசியல் கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியிருப்பது மக்களைச் சிந்திக்க வைத்துள்ளது.

கடந்த வாரம் “தமிழீழ விடுதலை ஆதரவு கூட்டமைப்பின்’ சார்பில் இருபத்து ஐந்து அமைப்புகள் சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் முன்பாக “தூதரகத்தை இழுத்து மூடும்’ போராட்டத்தை ஒருபுறம் நடத்த, மறுபுறம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக ஐம்பது கிலோ மீற்றர் தூர “நாம் தமிழர் நடைப்பயணம்’ அறுநூறு குழுக்களாக மாவட்டம் தோறும் பிரிந்து செயல்பட மாநிலக் கல்லூரி மாணவர்கள் சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்தி சிறை நிரப்பியுள்ளனர்! இத்தனைக்கும் நடுவே, அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா திடீரென அறிவித்திருக்கும் ஈழத் தமிழருக்கான உண்ணாவிரதப் போராட்டம் சிகரம் வைப்பதுபோல் அமைந்துவிட்டது.

தமிழகத்தில் தலைதூக்கியுள்ள மும்முனைப் போராட்டங்களில் மக்கள் இன்று திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்றனர். ஒருபக்கம் வழக்கறிஞர்கள், பொலிஸார் மோதல் விவகாரம்; மறுபக்கம் நாடாளுமன்றத் தேர்தலின் எதிரொலி. நடுவே இருபக்கங்களையும் இணைக்கும் ஈழத் தமிழருக்கான ஆதரவுப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த மாதம் 19ஆம் திகதி வழக்கறிஞர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே மூண்ட பயங்கரமோதலைத் தொடர்ந்து இருசாராருக்கும் ஆதரவாக அங்குமிங்கும் உண்ணாவிரதப் போராட்டங்களும் கறுப்புக்கொடி ஏந்திய ஆர்ப்பாட்டங்களும் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் நிலையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களைப் புறக்கணித்து வருகின்றனர். சில மாவட்டங்களில் நீதிமன்ற உள்ளிருப்பு போராட்டம் நடக்கிறது. விழுப்புரம் நீதிமன்றத்தில் கடந்த வாரம், வழக்காட முயற்சித்த தி.மு.கழக ஆதரவு வழக்கறிஞர்களுக்கும் நீதிமன்றப் புறக்கணிப்பு செத அ.தி.மு.கழக ஆதரவு வழக்கறிஞர்களுக்குமிடையில் மூண்ட மோதல், பின்னர் திண்டிவனம் நீதிமன்றத்திலும் தொடர்ந்து வன்செயலில் முடிந்தது. தி.மு.கழக வழக்கறிஞர்கள் ஜெயலலிதா உருவ பொம்மையையும் அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் கலைஞர் கருணாநிதி உருவ பொம்மையையும் எரிக்கமுயன்று தடுக்கப்படவே இவர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் பதாகைகளை தீயிட்டுக் கொளுத்தினர்.

சென்னையில் ஐநூறுக்கும் அதிகமான வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். சில மாவட்ட தலைநகரங்களில் வாயில் கறுப்புத் துணி கட்டி வழக்கறிஞர்கள் மௌன ஊர்வலம் நடத்தினார்கள். சென்னை உயர் நீதிமன்ற மோதல் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, (டில்லி) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனிடம் அறிக்கை தாக்கல் செதிருந்த போதிலும் இதனை எழுதிக் கொண்டிருக்கும் வரை மேற்படி அறிக்கை மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. ஆனாலும், மோதலுக்கு காரணமான பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கும்வரை நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் என்றும் அந்த நடவடிக்கையும் வெறும் இடமாற்றம் என்றில்லாமல் இடைநீக்கம் ஒன்று இருக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

பொலிஸ் வழக்கறிஞர்கள் மோதல் பின்னர் வழக்கறிஞர்களுக்கிடையே மோதலாக மாறி, இப்பொழுது கட்சி ஆதரவு வழக்கறிஞர்கள் மோதலாக முடிந்திருக்கிறது. இவர்கள் மோதலினால் நீதிமன்றங்களே இயங்கமுடியாதிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நிலைமை

கட்சியைக் கட்டிக் காப்பதிலும் கூட்டணி உருவாக்குவதிலும் கடந்தவாரம் முழுவதும் கணக்குப் பார்த்த அரசியல் தலைவர்கள், நாளை முதல் தங்கள் பலத்தை வெளிப்படையாகக் காட்டத் தொடங்குவார்கள். இன்றைய நிலையில் காங்கிரஸ் தி.மு.க.கூட்டணி என்றும் பாரதிய ஜனதா கூட்டணி என்றும் இடதுசாரிக் கட்சிகள் தலைமையில் எட்டுக் கட்சிகள் அங்கம் வகிக்கும் மூன்றாவது அணி என்றும் மூன்று முக்கிய அணிகள் தேர்தல் களத்தில் குதித்துள்ளன. எதிர்வரும் பன்னிரண்டாம் திகதி உதயமாகும் மூன்றாவது அணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிய கம்யூனிஸ்ட், பார்வார்ட் புளக், புரட்சிகர சோஷலிஸ்ட், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரியசமிதி, மதசார்பற்ற ஜனதாதளம் அ.தி.மு.க. காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்து, அழைப்பு புறக்கணிக்கப்பட்ட நிலையில் “நான் விடுத்தது அழைப்பல்ல, வெறும் ஆலோசனை’ என்று ஜெயலலிதா இப்பொழுது விளக்கம் அளித்திருப்பதன் மூலம் மூன்றாம் அணியில் அ.தி.மு.கழகம் இணைவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தே.மு.தி.க.தலைவர் நடிகர் விஜயகாந்த் தனது நிலைபற்றி வாதிறக்காவிட்டாலும் அவருக்கு காங்கிரஸ் தி.மு.க.கூட்டணியில் ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், இக்கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் ஒரு இடம் கிடைத்திருப்பதாக தகவல். தொல்.திருமாவளவனுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் அ.தி.மு.க. கூட்டணியில் வைகோ இருப்பதையும் உரத்தகுரலில் புலி ஆதரவு எழுப்பியும் “அம்மா’ கண்டுகொள்ளாமல் இருப்பதையும் காரணம் காட்டி வெற்றி ஒன்று மட்டும்தான் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று “டில்லி அம்மா’ கூறி வாயை அடைத்துவிட்டாராம். “நான் தி.மு.க. கூட்டணிக்காரன். காங்கிரஸ் கூட்டணியில் நான் இல்லை’ இது திருமா மந்திரம். இதுமட்டுமல்ல, “ஈழத்தமிழன் தமிழினம் இதுதான் எனது குறிக்கோள். இலட்சியம். தேர்தல், பதவி எல்லாம் இரண்டாம் பட்சம்தான்!’ என்று அடிக்கடி கூறுகிறார் தொல்.திருமாவளவன்.

தேர்தலில் குதிக்கும் சமத்துவ கட்சித் தலைவர் சரத்குமார் தனித்துப் போட்டியிட தயாரில்லை. ஏதாவது ஒரு அணியின் பச்சை விளக்கை எதிர்பார்த்திருக்கிறார்.

ஈழத் தமிழர் ஆதரவு

நாடாளுமன்றத் தேர்தலினால், பிரசாரத்தினால்,ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்களில் தொவு ஏற்பட்டுவிடுமோ என்று தமிழ் உணர்வாளர்கள் அச்சப்பட அவசியமில்லாத அளவுக்கு உணர்வுத் தீ எரிந்து கொண்டே இருக்கிறது. கல்லூரிகள் முழு அளவில் திறக்கப்படாதபோதிலும் மாணவர்களின் பங்களிப்பு நீடிக்கிறது. பல்வேறு போராட்டங்களை அவர்கள் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். கட்சிகள் தரப்பில் மட்டுமன்றி தமிழ் அமைப்புகள் கூட மாவட்டங்கள் தோறும் ஆர்ப்பாட்டங்கள் நடத்திவருகின்றன.

கடந்த திங்கட்கிழமை இருபத்து ஐந்து தமிழ் அமைப்புகள் ஒன்றுகூடி, சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தை இழுத்து மூடக்கோரும் போராட்டத்தை நடத்தின. “தமிழ் மக்களே அணிதிரள்வோம்’ “ஈழத்து இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்துவோம்’ என்று முழக்கமிட்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர். தமிழீழ விடுதலை ஆதரவுக் கூட்டமைப்பு ஆதரவில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சுமார் முந்நூறு பேர் கைதாகி விடுதலை செயப்பட்டனர். ஈழத் தமிழின விடுதலைக்கும் ஆதரவுக்கும் உரமேற்றும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளின் மாணவர்களைக் கொண்டு “தமிழ் மாணவர் பேரவை’ என்ற வலுவான அமைப்பையும் அழிவிலிருந்து இனத்தையும் மொழியையும் காப்பாற்ற அரசியல் கடந்து பணியாற்ற “தமிழ் இளைஞர் பேரவை’யும் தொடக்க விழா சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது. தொல். திருமாவளவன், கவிஞர் காசி ஆனந்தன், பாவாணன், இயக்குநர் மணிவண்ணன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால்.கனகராஜ், வணிகர்சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன், தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் அன்பழகனார், மு.பாலகுரு, பேராசிரியர் அறிவரசு உட்பட பலர் எழுச்சி உரை நிகழ்த்தினார்கள்.

கட்சி சார்பற்ற தமிழ் இன உணர்வாளர்களை ஒன்றுசேர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டுவரும் இயக்குநர் விஜ டி.ராஜேந்தர், “”தமிழ் இன பாதுகாப்பு முன்னணி’ எனும் அமைப்பை ஆரம்பித்து ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். தமிழினப் படுகொலையை சர்வதேச மட்டத்தில் கொண்டுவர எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார்.

இனப்படுகொலையைக் கண்டித்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தொடர்ச்சியாக கண்டனக் கூட்டங்களையும் ஐ.நா.வுக்கான மனுவில் இரண்டு கோடி கையெழுத்து வேட்டையும் நடத்திவரும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்திவருகிறது.

வழக்கறிஞர்கள் பொலிஸ் மோதல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் களைகட்டியபோதிலும் ஈழத் தமிழருக்கு ஏற்பட்ட கொடுமைக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கும் போராட்டங்கள் எதுவுமே வலுவிளக்கவில்லை. மாறாக கொளுந்து விட்டெரிந்து தேர்தல் முடிவுகளையே மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. தமிழக மக்களை பெரிதும் பாதித்துவிட்ட ஈழத் தமிழர் பிரச்சினை எதிர்வரும் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிய ஜனதாக் கட்சி இதற்கு உடனடியாகவே பச்சை விளக்கு காட்டிவிட்டது!

பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை இனப் படுகொலையைத் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதை முன்வைத்து பா.ஜ.கட்சி பிரசாரம் செயும் என்று பா.ஜ.க. தமிழ் மாநிலத் தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “இலங்கை இனச் சிக்கலில் தமிழர்களுக்கு மத்திய அரசு இரண்டகம் செய்துவிட்டது. பொறுப்பும் கடமையும் இருந்தும் செய்ய வேண்டியதை செய்யாமல் செய்யக்கூடாததை இந்திய மத்திய அரசு செய்திருக்கிறது.

தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்தவோ போர் நிறுத்தத்தை ஏற்படுத்தவோ நடவடிக்கை எடுக்கவில்லை. விடுதலைப் புலிகளை ஒழிக்கின்றோம் என்ற பெயரில் அங்கு அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். நாகர் கோவிலில் அத்வானியால் தொடங்கிவைக்கப்படும் பா.ஜ.கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் இலங்கை இனப்பிரச்சினையே முக்கிய சிக்கலாக முன்நிறுத்தப்படும். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கட்சி வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் இலங்கை இனப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப்படும்’ என்று இல.கணேசன் சூளுரைத்தார்.

இதே கருத்தை இயக்குநர் தங்கர் பச்சானும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட சீமானைப் பார்த்துவிட்டுவந்த தங்கர்பச்சான் செதியாளர்களிடம், “தமிழர் அணி எனும் பெயரில் ஒரு புதிய அமைப்பு உருவாக வேண்டும். இளைஞர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட தமிழ் உணர்வுமிக்க அனைவரும் கட்சியே தங்களைத் துறந்து இதில் திரள வேண்டும். இந்த அமைப்பின் அரங்கேற்றமாக இயக்குநர் சீமான் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

இயக்குநர் மணிவண்ணன் தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு இலங்கை போர்நிறுத்தத்தை வலியுறுத்தியும் அங்கு தமிழினத்தை அழிவிலிருந்து காப்பாற்றுமாறும் குரல் கொடுத்து வருகின்றார். தமிழக சஞ்சிகை ஒன்றுக்கு மணிவண்ணன் அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் போட்ட “கணக்கு’ இது.

இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்று அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகிறார். ஆனால், இலங்கையில் சார்க் மாநாடு நடந்தபோது பிரணாப் முகர்ஜி அங்கு போகவில்லை. ரணிலும் சந்திரிகாவும் டில்லி வந்து பிரணாப் முகர்ஜியை சந்தித்துள்ளனர். விடுதலைப் புலிகள் வசம் இரண்டரை லட்சம் தமிழர் சிக்கியிருப்பதாக சிங்கள அரசு சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்தது. ஆனால், இப்போது வெறும் 75,000 தமிழர்கள் மட்டுமே இருப்பதாக அதே அரசு அறிவித்துள்ளது. இதே எண்ணிக்கையைத்தான் ரணிலும் சந்திரிகாவும் இப்போது சொல்கிறார்கள். பிரணாப் முகர்ஜியும் 75,000 தமிழர்கள்தான் உயிருடன் இருக்கிறார்கள் என்று உறுதிப்படுத்துகின்றார். அப்படியானால் இரண்டரை லட்சம் தமிழர்களின் எண்ணிக்கை 75,000 ஆக மாறியது எப்படி? மீதமுள்ளவர்கள் எங்கே போனார்கள்? இரண்டரை லட்சம் தமிழர்களை 75,000 ஆகக் குறைக்க சிங்கள அரசுடன் அந்நாட்டு எதிர்க்கட்சிகளும் சதித்திட்டம் தீட்டியிருக்கின்றன. அதையொட்டித்தான் முன்கூட்டியே தமிழர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுகிறார்கள். இந்த நிலையில் இலங்கைத் தமிழர் இனப்படுகொலையை மறைத்து அல்லது ஈழத் தமிழருக்கான வெளிப்படை ஆதரவைக் குறைத்து மதிப்பிடும் அரசியல் கட்சிகள் நிச்சயம் அதன் பலனை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது அரசியல் அவதானிகள் கருத்து.

தமிழகத்திலிருந்து கே.ஜி.மகாதேவா

நன்றி: தினக்குரல் 08.03.2009

ஒரு வரலாற்று ஆவணதத்தின் மீள் வெளியீடு : மார்க்சிச – லெனினிச ஆய்வு மையம்

Wanni_War இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை பாரிய உள்நாட்டு யுத்தமாக உருவெடுத்து 25 வருடங்கள் உருண்டோடி விட்டன. இலங்கையை 400 ஆண்டுகள் தமது காலனித்துவ பிடியின் கீழ் வைத்திருந்த ஏகாதிபத்தியவாதிகளினால் உருவாக்கப்பட்ட இப்பிரச்சினை சிங்கள – தமிழ் முதலாளித்துவ அரசியல் சக்திகளினால் தமது குறுகிய அரசியல் லாபம் கருதி இனவாத பாதையில் இழுத்து செல்லப்பட்டதால் இன்று நாடு முழுவதுமே அதல பாதாளத்தில் விழுந்துள்ளது.

தமிழ் மக்கள் தம்மீதான தேசிய ஒடுக்குமுறையை ஏகாதிபத்திய எதிர்பபு தேசிய -ஜனநாயக போராட்டமாக முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய தமிழ் முதலாளித்தவ இனவாத சக்திகளின் தவறான வழிகாட்டல்களினால் அலைக்கழிக்கப்பட்டு, தமிழ் மக்கள் இன்று உலகின் மிகமோசமான இனவாத பாசிச இயக்கமான தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் பிடியில் சிக்கி, இருந்த உரிமைகளையும் இழந்து தவிக்கின்றனர். இன்று தமிழ் மக்களது போராட்டம் சிங்கள பேரினவாத தேசிய ஒடுக்கு முறைக்கு எதிரானதாக மட்டுமின்றி, தமிழ் இனவாத பாசிசத்துக்கு எதிரானதாகவும் பரிணமித்து நிற்கின்றது. மக்களுக்கு எதிரான, இந்த இரண்டு போக்குகளையும் சர்வதேச ஏகாதிபத்தியம் உருவாக்கி ஆதரித்து நிற்பதால், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது தவிர்க்க முடியாதபடி தமிழ் மக்களின் போராட்ட அடிப்படையாக இருக்கின்றது.

மறுபக்கத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடி பெற்ற தேசிய சுதந்திரத்தை இறுதிவரை முன்னெடுத்தச் சென்று, நாட்டில் உண்மையான மக்கள் ஜனநாயக அரசை உருவாக்குவதற்கு பதிலாக, தமது நீடித்த அதிகார இருப்புக்கு பேரினவாத அரசியலை ஒரு ஆயுதமாக பயன்படுத்திய சிங்கள இனவாத முதலாளித்துவ சக்திகளின் திட்டங்களுக்கு பலியானதன் மூலம், நாட்டின் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்கள் இன்று தேவையற்ற இனவாத யுத்தமொன்றின் சுமைகளால் அழுத்தப்பட்டு அவல வாழ்க்கையில் சிக்கி தவிக்கின்றனர்.

ஏகாதிபத்தியத்தாலும் உள்நாட்டு முதலாளித்துவ சக்திகளாலும் உருவாக்கப்பட்ட இந்தப் பிரச்சினையில், ஒரு சரியான நிலைப்பாட்டை பின்பற்றி, நாட்டின் அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த மக்களையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு – தேசிய விடுதலை போராட்டத்தில் வழிநடாத்தி, ஒரு புதிய ஜனநாயக இலங்கையை சிருஷ்டித்திருக்க வேண்டிய இடதுசாரி கட்சிகள் (கம்யூனிஸ்ட் – சமசமாஜ கட்சிகள்), 1960க்கு பின்னர் பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்திலும், அதன் உடன்பிறப்பான இனவாதத்திலும் மூழ்கி, தேசிய இனப்பிரச்சினையை முதலாளித்துவ சக்திகளிடம் முற்று முழுதாக கையளித்து, பெரும் வரலாற்று தவறை இழைத்துள்ளனர்.

1964ல் சர்வதேச அரங்கில் நிகிட்டா குருஷேவ் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி நவீன திரிபுவாத பாதையில் பயணிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் அதை பின்தொடரத் தொடங்கியது. அதன் காரணமாக திரிபுவாத, பாராளுமனற் வாத கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற உண்மையான கம்யூனிஸ்ட்டுகள், ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினராயினும், அக்கட்சியின் தலைமையும் சரியான கொள்கைகளை பின்பற்றத் தவறிவிட்டது. அக்கட்சி தலைமை பின்பற்றிய வரட்டுத்தனமான, இடது சந்தர்ப்பவாத போக்கு காரணமாக, தேசிய இனப்பிரச்சினையில் ஒரு சரியான நிலைபப்பாட்டை எடுகக் முடியாமல் போய்விட்டது. சொல்லில் புரட்சியும், நடைமுறையில் தொழிற்சங்கவாத சீர்திருத்தவாத வேலைமுறையையும் கொண்டிருந்த அக்கட்சியின் தலைமை, தேசிய இனப்பிரச்சினையை கட்சி கையில் எடுப்பது, கட்சியை இனவாதப்பாதையில் கொண்டு போய்விடும் என்ற மார்கசிச – லெனினிச விரோத வாதத்தை முன்வைத்தின் மூலம் தமிழ் மக்களின் தேசிய ஜனநாயக போராட்டத்துக்கான தலைமையை தமிழ் பிற்போக்கு சக்திகளிடம் கைகழுவிவிட்டது.

புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றிய இந்த நவநவீன திரிபுவாத பாதையை பெரும்பாலான கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களும் கீழ்மட்ட உறுப்பினர்களும் ஏற்கவில்லை. அதனால் அவர்களால் 1972ல் மார்கசிச – லெனினிச இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. இக்கட்சிக்குள்ளும் இழுபறி நிலையே தோன்றியது.

கட்சி தேசிய இனப்பிரச்சினையில் முக்கிய கவனம் செலுத்தி வேலை செய்வதின் அவசியத்தை நிராகரித்த ஒரு பிரிவினர் தேசிய முதலாளித்துவத்தின் (சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்) பின்னால் இழுபட்டு செல்லும் போக்கை பின்பற்ற ஆரம்பித்தனர். அவர்களை வெளியேற்றி கட்சியை தூய்மைப்படுத்திய பின்னர், இரு நாட்கள் விசேட தேசிய மாநாடொன்றை கூட்டி, தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமான சரியான கொள்கையை கட்சி வகுத்தது. இருந்தும் நாட்டில் உருவாகி வந்த தீவிரமான இனவாத சூழல் காரணமாகவும், தமிழ் பகுதிகளில் பாசிச சக்திகள் தலைதூக்கியதின் காரணமாகவும், கட்சி சில ஆண்டுகளில் செயலற்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. (இன்று தனிநபர்களாக இருக்கும் அக்கட்சி உறுப்பினர்கள் தற்பொழுது கட்சியை மீண்டும் புனரமைப்பதற்கான முயற்சிகளில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஈடுபட்டு வருவதாக தெரிகின்றது.) இருப்பினும் அக்கட்சி, தமது தாய்வழி கட்சிகள் இரண்டும் பின்பற்றிய வலதுசாரி – இடதுசாரி சந்தர்ப்பவாத பாதைகளை சீர்செய்வதில், கணிசமான அளவுக்கு சித்தாந்த – அரசியல் ரீதியாக குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது.

அதில் முக்கியமானது, தேசிய இனப்பிரச்சினையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆரம்பகால, சரியான கொள்கையை உயர்த்தி பிடித்ததாகும். ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடப் பிரதேசங்களுக்கு சுயாட்சி அமைப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மிகச்சரியான, ஆரம்பகால கொள்கையை மார்க்கிச – லெனினிச கட்சி மீண்டும் உறுதி செய்ததுடன், அதை பல்வேறு தமிழ் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து அடைவதற்காக தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி என்ற வெகுஜன போராட்ட அமைப்பையும் தோற்றுவித்தது.

தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் புதிய தலைமை, பின்னர் உருவாகி வந்த ஆயுதப்போராட்ட சூழலில், தனது பெயரையும் (தமிழீழ தேசிய விடுதலை முன்னணி – NLFT), கொள்கைகளையும், போராட்ட வழிமுறைகளையும் மாற்றியது. எனினும், தமிழ் தேசியப் போராட்டத்தின் கடந்த 25 ஆண்டுகால அனுபவங்கள், தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் ஆரம்பகால பெயர், கொள்கைகள், போராட்ட வழி முறைகள் என்பனவற்றின் பிசகற்ற தன்மையை மீண்டும் ஒருமுறை தெளிவுற நிரூபித்துள்ளன. அது மாத்திரமின்றி இன்றைய சூழலில், அத்தகைய ஒரு பரந்தபட்ட வெகுஜன போராட்ட ஸ்தாபனம் ஒன்று, தமிழ் மக்களுக்கு இருக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியுள்ளது.

எனவே இன்றைய சூழ்நிலையில், வரலாற்றை மீள் மதிப்பீடு செய்வதற்கு உதவியாக, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் கம்யூனிஸ்ட்டுகள் எடுக்க வேண்டிய நிலைப்பாட்டுக்கு ஒர் உதாரணமாக, 1975ம் ஆண்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) வட பிரதேச குழு வெளியிட்ட மிக முக்கியமான வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த அறிக்கையை வெளியீட்டில் இணைத்து உள்யோம். இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே பின்னர் ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ உருவாகக்ப்பட்டது.

தேசிய இனபிரச்சினை உருவெடுத்து 25 அண்டுகளைக் கடந்து, தமிழ் மக்கள் பல பெறுமதிமிக்க அனுபவங்களை பெற்றுவிட்ட இன்றைய சூழ்நிலையிலும் சில சிங்கள இடதுசாரிகள் சிங்களப் பேரினவாத தேசிய இறைமையின் பெயராலும், தமிழ் இடதுசாரிகள் சிலர் தமிழ் இனவாத பாசிசத்தை தமிழ் தேசிய விடுதலையின் பெயராலும் நியாயப்படுத்தி நிற்கும் ஒரு சூழலில் இந்த அறிக்கை 33 ஆண்டுகளை கடந்தும், இன்றைக்கும் மிகச் சரியான நிலைப்பாட்டை கொண்டிருப்பதுடன், தீர்க்கதரிசன பார்வையையும் கொண்டுள்ளதையும் காணமுடியும்.

அத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே, தமிழர் விடுதலைக் கூட்டணியின் கீர்த்தி வாயந்த வட்டுக்கோட்டை மாநாட்டு தமிழழீ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (அது நடைபெற்றது 1976ல்), இலங்கையில் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஐ.தே.கட்சி பதவிக்கு வந்தது (அவர் ஆட்சிக்கு வந்தது 1977ல்), நிறைவேற்று ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்திய ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது (அது 1978ல் அறிமுகப்படுத்தப்பட்டது), 1983ன் இனவன்செயலும், அதைத் தொடர்ந்து தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டமும் ஆரம்பமாகியது, என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.

இந்த அறிக்கையை தயாரிப்பதில், மார்க்சிச – லெனினிச கட்சியின் அன்றைய முக்கிய தலைவர்களான, காலஞ்சென்ற தோழர்கள் மு.கார்த்திகேசன், வி.ஏ.கந்தசாமி ஆகியோர் முக்கிய பங்கு வகித்ததுடன், அவர்கள் உட்பட கட்சியின் வட பிரதேச குழுவின் 15 உறுப்பினர்களினதும், ஏகமனதான ஆதரவுடன் அது வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வறிக்கையினை அன்றைய தினசரி பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்ததோடு, இவ்வறிக்கை கட்சியினால் துண்டு பிரசுரமாக அச்சிடப்பட்டு நாடு முழுவதும் தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக விநியோகமும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிக்கை மூல நகல் இவ்வெளியீட்டில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆங்கில மொழியாக்கம், கனடிய – சோவியத் நட்புறவு கவுன்சில், கனடாவில் வெளியிடும் மாத சஞ்சிகையான NORTH STAR COMPASS, தழிலும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்சிச – லெனினிச ஆய்வு மையம்
இலங்கை
04 – 03 – 2009

._._._._._._.

தேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்கும் எதிராக தமிழ் மக்களே ஐக்கியப்படுவீர்!

குடியரசு தினத்தை பகிஷ்கரிப்பது என்பதை தமிழர் கூட்டணி வருடாவருடம் ஒரு சடங்காக நடாத்தி வருகின்றது. இது தமிழ் மக்களின் நலன்களுக்கு உகந்ததுதானா, என்பதை தமிழ் மக்கள் தீர்க்கமாக சிந்திக்க வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.

தமிழ் மக்களினதும் சிங்கள மக்களினதும் பொது எதிரி ஏகாதிபத்தியமாகும். அது உலக மக்களினதும் பொது எதிரியாகும். இந்த உண்மையை முன்பு தமிழ் காங்கிரஸ் தமிழரசுக் கட்சி என்பனவும் தற்போது தமிழர் கூட்டணியும் அங்கீகரிக்க மறுத்தது மட்டுமல்லாமல், ஏகாதிபத்தியமே தமிழ்மக்களின் நலன்களுக்கு உதவவல்லது என்ற தவறான கொள்கையையே நீண்டகாலமாக பின்பற்றி வந்தனர். அதன் விளைவே தமிழ் மக்களை உரிமையற்றவர்களாக வாழவேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளியது.

அதுமட்டுமல்லாமல் இலங்கை மக்கள் ஏகாதிபத்தியத்திற்கெதிராக – தேசிய சுதந்திரத்தை வென்றெடுக்கும் பாதையில் எடுத்த சகல நடவடிக்கைகளையும் (குடியரசு பிரகடனம் உட்பட) தமிழ்த் தலைவர்கள் எதிர்த்து வந்ததின் மூலம், இலங்கை மக்களில் பெரும்பான்மையோரின் எதிர்ப்பை சம்பாதித்ததுமல்லாமல் தமிழ் மக்கள் தேசிய சுதந்திரத்திற்கும், தேசிய அபிலாசைகளுக்கும் எதிரானவர்கள் என்ற தவறான எண்ணத்தை தென்னிலங்கை மக்கள் மத்தியில் வளர்த்தும் விட்டது. இதனால் இலங்கையில் பல்வேறு ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்படும் மக்களாக தமிழ் மக்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

மறுபுறத்தில் தமிழ்க் காங்கிரஸ் தமிழரசுக் கட்சி தமிழர் கூட்டணி என்பன தொடர்ச்சியாக பின்பற்றி வந்த தேசவிரோதக் கொள்கையைச் சாட்டாக வைத்துக் கொண்டு அரசியல் சுயலாபம் தேடும் பூர்ஜூவாக் கட்சிகள், சிங்கள மக்கள் மத்தியில் மட்டும் தங்கியிருந்து பாராளுமன்ற ஆசனங்களை பெரும்பான்மையாக வென்றெடுக்கும் குறுகிய தேசியவாத, சர்தர்ப்ப வாதக் கொள்கைகளைப் பின்பற்றி வருவதால், தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படுவது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல தேசிய நலன்களுக்கும் மிகவும் அவசியமானது என்பதை உணர மறுப்பது மூலம், ஏகாதிபத்தியவாதிகள் இப்பிரச்சினையில் தலையிட்டு, சைப்பிரஸில் நடப்பது போல் அல்லது பாகிஸ்தானில் நடந்தது போல ஒரு நிலையை உருவாக்க வாய்ப்பைத் தேடிக் கொடுத்துள்ளார்கள்.

இந்த நிலையை உணர்ந்ததினால் பொலும் இலங்கையின் பிரபல தேசியவாதியான முன்னாள் பிரதமர் திரு.எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அணுகு முறையையும், கொள்கையையும் பண்டா – செல்வா ஒப்பந்தத்தின் மூலம் முன் வைத்தார். இந்த நல்ல வாய்ப்பை ஏகாதிபத்திய சார்பு யூ.என்.பியும் இதர வகுப்புவாத சக்திகளும் வடக்கிலும், தெற்கிலும் நடாத்திய எதிர்ப்பு இயக்கத்தின் மூலம் சிதறடித்துவிட்டார்கள். இது இந்நாட்டின் துர்ப்பாக்கியமாகும்.

இன்று பண்டாரநாயக்கா கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கம், தமிழ் மக்களின் பிரச்சினை அடிப்படையில் ஒரு தேசியப் பிரச்சினை என்பதை ஏற்றுக் கொண்டு செயல்பட்ட அமரர் பண்டாரநாயக்காவின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் செயல்படுத்த தயங்குவதன் மூலம் தமிழ் மக்களை ஏகாதிபத்திய, பிற்போக்கு முகாமில் தள்ளிவிட்டுள்ளது. இதனால் நாட்டுக்கும், தேசிய சுதந்திரத்திற்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் ஏற்படுத்த ஏகாதிபத்தியவாதிகளுக்கு பெருவாய்ப்பை ஏற்படுத்திவிட்டார்கள். இதையிட்டு நாட்டு நலனில் அக்கறையுள்ள சகலரும் சிந்திக்க வேண்டும். இந்த அபாயம் சிறிய விஷயமல்ல.

எம்மைப் பொறுத்தளவில் தமிழ் மக்களின் மொழி, இன பாதுகாப்புக்கான சரத்துக்கள் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்படாததை நாம் எதிர்க்கின்றோம். அதேபோல பதிவுப் பிரஜைகளுக்கும், இலங்கை பிரஜைகளுக்கும் இடையில் பாகுபாடு காட்டப்படுவதை முற்றாக அகற்ற வேண்டும் என வற்புறுத்துகின்றோம். கல்வி, வேலைவாய்ப்பு என்பவற்றில் இனரீதியான பாகுபாட்டை நாம் எதிர்க்கின்றோம். பொருளாதார ரீதியாக சிங்கள பிரதேசத்திற்கும், தமிழ் பிரதேசத்திற்கும் இடையில் பாரபட்சம் காட்டப்படுவதை நாம் எதிர்க்கின்றோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் குறைந்தபட்சம் பண்டாரநாயக்காவின் கொள்கைகளையாவது அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

இன்று தமிழ் மக்கள் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தத்தளிக்கிறார்கள். தமிழ் தலைவர்களின் ஏகாதிபத்திய சார்புக் கொள்கை அவர்களை ஒரு புறத்தில் நாசம் செய்கிறது. மறுபுறத்தில் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்காமல் இருப்பதன் மூலம் சுயநல அரசியல் லாபம் தேடும் சந்தர்ப்பவாத, குறுகிய தேசிய அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதில் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவதும், ஐக்கியப்படுவதுமான அரசாங்கத்தினதும், ஐக்கிய தேசியக் கட்சியினதும் தந்திரோபாயங்களினால் தேசிய வாழ்விலிருந்து தமிழ் மக்கள் ஒதுக்கப்படுகிறார்கள். ஆகவே இந்த இரண்டு தவறான போக்குகளுக்கும் எதிரக தமிழ் மக்கள் ஐக்கியப்பட வேண்டும். போராட வேண்டும். இதைத்தவிர தமிழ் மக்கள் முன் வேறு மார்க்கமே கிடையாது.

தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஜனநாயக சக்திகள், தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், புத்திஜீவிகள் தொழிற் சங்கங்கள் மற்றும் தேசாபிமானிகள் அனைவரும் ஒன்றுபட்டு தமிழர் கூட்டணித் தலைமைக்கும் அரசாங்கத்தினதும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் தமிழர் விரோதப் போக்குக்கும், எதிராக ஐக்கியப்பட்டு தமிழ் மக்கள் ஜனநாயக அணி ஒன்றைத் தோற்றுவிப்பதே தமிழ் மக்கள் பிரச்சினையின் தீர்வுக்கான முதற் தேவையாகும். ஒரு சிலரின் தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காக குடியரசு தினத்தைப் பகிஷ்கரிப்பதன் மூலம் தமிழ் மக்கள் எந்த நன்மையையும் அடைய முடியாது. மாறாக இளைஞர்களினதும், மாணவர்களினதும் எதிர்காலத்தைத்தான் பாழடிக்க முடியும்.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளையோ வேறெந்த ஏகாதிபத்தியத்தையோ அல்லது அந்நிய நாடு எதனையுமோ நம்பி தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட முடியாது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இலங்கை மக்களே தீர்வு காண வேண்டும். கம்போடியாவிலும், வியட்நாமிலும் மக்கள் ஈட்டிய மகத்தான வெற்றி நமக்கு நல்ல பாடமாக அமைய வேண்டும். ஏகாதிபத்தியத்தின் காலைப் பிடித்தோரையே ஏகாதிபத்தியம் உதறித்தள்ள வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. ஏகாதிபத்தியத்தைச் சார்ந்தல்ல, எதிர்த்தே மக்கள் விடுதலைபெற முடியும். தமிழ் மக்கள் இந்நாட்டில் சமத்துவ, ஜனநாயக உரிமையுள்ளவர்களாக வாழ தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான பரந்த அணி ஒன்றே தமிழ் மக்களுக்கு வழிகாட்ட முடியும். பெரும் முதலாளிகளாலும் வர்த்தகர்களாலும், நிலச் சொந்தக்காரர்களாலும் தலைமை தாங்கப்படும் தமிழர் கூட்டணியால், தமிழ் மக்களுக்கு எந்த நல்வழியையும் காட்ட முடியவில்லை. இனிமேலும் காடட் முடியாது. ஆகவே இந்த நேரத்திலாவது தமிழ் மக்கள் திர்க்கமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட் – லெனினிஸ்ட்) வட பிரதேசக் கமிட்டி வேண்டுகோள் விடுக்கிறது.

எமது தேசத்தின் ஒருமைப்பாடு, நமது மக்களின் ஐக்கியம், நமது பல்வேறு தேசிய இனங்களின் ஐக்கியம், இவையே நமது இலட்சியத்தின் நிச்சய வெற்றிக்கான அடிப்படை உத்தரவாதங்கள் ஆகும்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்ஸிஸ்ட் – லெனினிஸ்ட்)
வட பிரதேசக்கமிட்டி
19–5-75
நாவலன் பதிப்பகம் நல்லூர் யாழ்ப்பாணம்

பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதை ஐ.நா. அனுமதிக்குமா?அதேபோலத்தான் இதுவும் – பா.நடேசன்

nadesanltte.jpgதமது வாழ்விடங்களில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் இடங்களில் இருந்து தமிழர்களை வெறியேற்ற முயற்சிப்பது மிகப் பெரிய வரலாற்றுத் தவறு. காஸா பகுதியிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதை ஐ.நா. அனுமதிக்குமா? அதேபோலத்தான் இதுவும் என்று விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் தலைவர் பா.நடேசன் கூறியுள்ளார்.

இந்தியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சிக்கு நடேசன் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது …

ஐ.நா.வின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (27.02.09) உரையாற்றிய ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் ஜோன் கோல்ம்ஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மக்கள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை வெளியேற அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதற்கான உங்களின் பதில் என்ன?

ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் ஜோன் கோல்ம்ஸ் வன்னிக்கு வந்து அங்குள்ள மக்களின் நிலமைகளை பார்வையிடுவதற்கும், பொதுமக்கள் இங்கு பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா என்பதை பார்வையிடுவதற்குமான பாதுகாப்பான பயண ஒழுங்குகளை மேற்கொள்ளாதது வருத்தமானது.

வன்னியில் பணியாற்றி வந்த ஐ.நா. மற்றும் தொண்டர் நிறுவனங்கள் போன்றவற்றை அங்கிருந்து வெளியேறும்படி கடந்த வருடம் அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து ஐ.நா. தமிழ் மக்களை கைவிட்டுள்ளது. அதன் பின்னர் அரசு சாட்சிகள் அற்ற நிலையில் தனது போரை நடத்தி வருகின்றது.

தமது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தான் மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். அவர்கள் தாங்கள் வாழும் பிரதேசத்தில் அமைதியும், பாதுகாப்பும் வேண்டும் என விரும்புகின்றனர். ஐ.நா.வின் ஆதரவுடன் சிறிலங்கா அரசு நடத்தி வரும் தடை முகாம்களுக்கு செல்வதற்கு அவர்கள் விரும்பவில்லை. சிறிலங்காவின் இந்த முகாம்களை தடை முகாம்களுக்கு ஒப்பானவை என கடந்த மாதம் 20 ஆம் நாள் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது.

சிறிலங்கா வேறு நாடுகளின் அதிகாரங்களுக்கு உட்பட்ட நாடு அல்ல. எனவே யாரும் போரை நிறுத்தும் படி அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உங்களின் கருத்து என்ன?

காசா பகுதியை விட வன்னியில் அதிகளவான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக உலக நாடுகள் கவனம் செலுத்துகின்றன. உலக நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று, அது அணிசேரா நாடுகள், ஐ.நா. போன்றவற்றிலும் உறுப்புரிமை உள்ள நாடு. உலகின் இந்த நிலைப்பாடு ஆளுகைக்கு உட்பட்ட நாடு என்ற வாதத்தின் அடிப்படையிலானது அல்ல. இருந்த போதும், ஐ.நா. மற்றும் உலகின் மனிதாபிமான சமூகம் என்பன வன்னியில் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கையை நிறுத்துவது தொடர்பாகவும், சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் முக்கிய கவனத்தை இதுவரையில் செலுத்தவில்லை.

பயங்கரவாதத்தின் மீதான போரை மேற்கொண்டு மக்களை விடுவிக்கின்றோம் என்ற போர்வையில் திட்டமிட்ட படுகொலைகளையும், இனவாத தாக்குதல்களையும், பயங்கரமான வன்முறைகளையும் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. மனித கேடயங்களாக பொதுமக்களை பயன்படுத்துவதாக போலியாக அரசு கூறியவாறு அவர்கள் மீது எறிகணைகளை வீசி படுகொலை செய்து வருகின்றது. இது இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக அரசினால் மேற்கொள்ளப்படும் இன அழிப்பு நடவடிக்கையாகும்.

தமிழ் மக்களை பாரம்பரியமாக வாழ்ந்து வரும் அவர்களின் இடங்களில் இருந்து வெறியேற்றுவதற்கு முயற்சிப்பது வேதனையானது. நான் ஒன்றை கேட்கின்றேன், தீர்வு ஒன்றை காண்பதற்காக காசா பகுதியில் உள்ளவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதனை ஐ.நா. ஆதரிக்குமா?

இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்கள் அனைத்துலகத்திற்கு ஆபத்தானது அல்லாத உள்நாட்டு விவகாரம் என தெரிவித்து சிறிலங்காவின் படை நடவடிக்கையை நிறுத்துவது தொடர்பாக ஐ.நா. வின் பாதுகாப்புச் சபையில் விவாதிப்பதற்கு சில நாடுகள் கவலைப்படுவது வேதனையானது. ஐ.நா. வின் பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகள் துன்பத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு உதவிகளை புரிவதுடன், மனித பேரவலத்தையுத் தடுக்க முன்வர வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போது மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கையை நிறுத்துவதற்கு அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுக்காததனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் என்ன?

சிங்கள படையினரின் கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களினால் இங்கு நாளாந்தம் 50 பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். சிறுவர்களின் கல்வியும் தடைப்பட்டுள்ளது. உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பீரங்கி மற்றும் பல்குழல் உந்துகணை செலுத்திகளின் தாக்குதலினால் சிறுவர்களும், பெண்களும், முதியவர்களும் கொல்லப்படுகின்றனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் திட்டமிட்ட வகையில் சிறிலங்கா அரசு தமிழ் மக்களை பலவந்தமாக வெளியேற்றிவதனை அனைத்துலக சமூகத்தின் செயற்திறன் அற்ற நடவடிக்கை ஊக்கிவிக்கின்றது. வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள தடை முகாம்கள் ஒன்றை மட்டும் தான் வெளிப்படுத்துகின்றன. அதாவது, ஆடுகளை எதிர்பார்த்து ஓநாய்கள் காத்திருக்கின்றன.

விடுதலைப் புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என சிறிலங்கா அரசு தெரிவித்து வருகின்றது. அதற்கான உங்களின் பதில் என்ன?

வன்னியில் இருந்து வெளியேறும் மக்களை சிறிலங்கா அரசு தடுத்து வைத்துள்ளது. அவர்களை நேர்காணல் காண்பதற்கு இராணுவத்தினரால் வழிநடத்தப்படும் ஊடகங்களையே அனுமதித்து வருகின்றது. துன்பத்தினாலும், அச்சத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களை பயன்படுத்தி ஆக்கிரமிக்கும் இராணுவத்தை விடுவிப்பவர்களாக சித்தரிக்கின்றது.

ஆனால், சில அனைத்துலக ஊடகங்களின் தகவல்களின் படி வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா சென்ற மக்கள் மீண்டும் வன்னிக்கு திரும்பவே விரும்புவதாக அறியமுடிகின்றது. இந்த தமிழ் மக்களை பிரச்சாரத்திற்கான கேடயமாக சிறிலங்கா அரசு பயன்படுத்தி வருவதுடன், அவர்களை நிரந்தரமாக அகதிகளாக்கவும் முற்பட்டு வருகின்றது.

அரசு தனது அதிகளவான வளங்களை பயன்படுத்தி பெருமளவில் திட்டமிட்ட பிரச்சாரத்தினை படை நடவடிக்கைகளுடன் இணைத்து மேற்கொண்டு வருகின்றது. அரசியல் தீர்வு தொடர்பான சிறிலங்கா அரசு காண்பித்து வரும் அசிரத்தையும், தற்போது மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கையும் நோக்கும் போது ஒன்று மட்டும் உறுதியானது. அதாவது, படையினர் மேற்கொண்டு வரும் எல்லா நடவடிக்கைகளும் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படுகின்றன என்பது தான்.

போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும் என சில நாடுகளும், ஐ.நா.வும் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றன. அதற்கான உங்களின் பதில் என்ன?

இவை எல்லாம் தமது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற நடவடிக்கையை மெருகுபடுத்தும் வார்த்தைகள். ஜனநாயக வழிகளில் 1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை பிரகடனத்தின் மூலம் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக முன்மொழிந்த சுயாட்சியும், தமிழ் மக்களின் உரிமையுமே எமது நோக்கம்.

எனவே, பெருமளவில் தமிழ் மக்களை அவர்களின் வாழ்நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு அனைத்துலக சமூகம் ஆதரவினையும், உற்சாகத்தினையும் வழங்கக்கூடாது. அனைத்துலக சமூகம் தொடர்ந்தும் மௌனமாக இருந்து கொண்டு தடை முகாம்களுக்கு நிதிகளை வழங்குவார்களாக இருந்தால் அது உண்மையாகவே இது ஒரு வரலாற்று பேரழிவும், தவறுமாகும்.

மிகவும் கொடூரமான அரசுகள் பலவந்தமாக பொருமளவில் வெளியேற்றப்பட்ட மக்களை அவர்களின் செர்ந்த இடங்களில் மீண்டும் குடியேற்றியதாக உலகின் எந்தப்பகுதியிலும், எப்போதும் வரலாறு இல்லை. ஆனால், அனைத்துலக சமூகம் தமது சுருதியை மாற்றியுள்ள போதும் மீண்டும் பழைய கோசத்தையே தற்போதைய புதிய சூழலிலும் பயன்படுத்தி வருவது வருத்தமானது.

மீளக்குடியமர்த்துதல், மறுவாழ்வு திட்டம் என்ற பெயரில் சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களுக்கு நிதி உதவிகளை நேரடியாக வழங்குவது தொடர்பாக அனைத்துலக கொடையாளி நாடுகளுக்கான உங்களின் கருத்துக்கள் என்ன?

கொழும்பு போன்ற பிரதேசங்களில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் உரிமைகளையோ, பாதுகாப்பையோ கூட அரசு ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றது. மக்களை மீளகுடியமர்த்துவதாக சிறிலங்கா அரசு அனைத்துலக சமூகத்திற்கு தெரிவித்து வரும் வாக்குறுதிகள் அவர்கள் கொடுக்கும் நிதி உதவிகள் கிடைக்கப் பெற்றதும், அதே வேகத்தில் காணாமல் போய்விடும்.

ஆழிப்பேரலை முகாமைத்துவ கட்டமைப்புக்கான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பல தடவைகள் அனைத்துலக சமூகம் கோரிக்கை விடுத்து வந்திருந்தன. முன்னாள் அமெரிக்க அரச தலைவர் பில் கிளின்டன் கூட இதனை மேற்கொண்டிருந்தார். ஒன்றுமையையும் அரசியல் தீர்வையும் பலப்படுத்தும் வழி இதுவென கருதப்பட்டது. ஆனால் நீதித்துறையை தவறாக பயன்படுத்தி அதனை சிறிலங்கா அரசு சீரழித்து விட்டது.

தற்போது கூட மக்கள் முன்னணி அரசில் அங்கம் வகிப்பவர்களும், அரச தலைவரின் சொந்த கட்சியில் இருப்பவர்களும் தாம் இராணுவத் தீர்வுக்கே ஆதரவுகளை வழங்குவோம் எனவும் அதிகார பரவலாக்கத்திற்கு அல்ல எனவும் தெரிவித்து வருகின்றனர். போரை நிறுத்தி, மக்களை தமது வாழ்விடங்களில் வாழ அனுமதித்து, அவர்களை சுயமரியாதையுடன் வாழ அனுமதிப்பதே உண்மையான மனிதாபிமானம். தமிழ் மக்களின் பிரச்சினைகள், சிறுபான்மை மக்களை அரசு நடத்தும் முறை, மனித உரிமை மீறல்கள் போன்றன தொடர்பான சிறிலங்கா அரசின் உண்மையான தோற்றத்தை உலகில் உள்ள மனிதாபிமான சமூகம் தமதிக்காது உணர்ந்துகொள்ளும் என நாம் நம்புகின்றோம்.

மக்களை விடுதலைப் புலிகள் மனித கேடயங்களாக வைத்துள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவித்து வருகின்றதே அதற்கான உங்களின் பதில் என்ன?

தமிழ் மக்களை அவர்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து வெறியேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் இது. இங்கு தமிழ் மக்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இங்கு தொடர்ந்து வாழவே விரும்புகின்றனர். சிறிலங்கா அரசு, ஐ.நா. மற்றும் அனைத்துலக நாடுகள் போன்றவை தமிழ் மக்களுக்கு நன்மை செய்வதாக தமது அறிக்கைகளில் தெரிவித்தவாறு அவர்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றி இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் முட்கம்பிகளுடன் கூடிய முகாம்களுக்குள் அடைப்பதற்கு முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

யாழ். குடநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் ஒரு தசாப்பதற்கு மேலாக அரசு ஆக்கிரமித்துள்ள இடங்களில் மீளக்குடியேறுவதற்காக காத்திருக்கின்றனர். அண்மையில் கிழக்கிலும் இது நிகழ்ந்துள்ளது. கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையின் பின்னர் சம்பூரில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிஉயர் பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் பல இடங்கள் தமிழ் மக்கள் செல்ல முடியாத பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் திட்டமிட்ட முறையில் சிங்கள குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

இடம்பெயர்ந்து செல்லும் மக்களை தனக்கு ஆதரவான துணை இராணுவக்குழுவினரை பயன்படுத்தி அரசு மிரட்டி வருகின்றது. இதனை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையம் இந்த வருடத்தின் தொடக்கத்தில் தெரிவித்திருந்தது. கிழக்கில் மக்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அது தெரிவித்திருந்தது.

இவ்வாறான ஆபத்தான நிலமையில் தமிழ் மக்கள் இந்த தடை முகாம்களுக்குள் விருப்பத்துடன் செல்ல வேண்டுமா? தமது பாரம்பரிய வாழ்விடங்களை கைவிட்டு தமிழ் மக்கள் வெயேற வேண்டும் என ஐ.நா.வும், ஏனைய நாடுகளும் எதிர்பார்க்கின்றனவா? வெளியேறும் மக்களை தடை முகாம்களுக்குள் அடைப்பதற்கு அவை முயற்சிக்கின்றனவா? இந்த முயற்சி தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்பத்துடன் தான் மேற்கொள்ளப்படுகின்றதா?

பயங்கரவாதத்தின் மீதான போரை மேற்கொண்டு மக்களை விடுவிக்கின்றோம் என்ற போர்வையில் திட்டமிட்ட படுகொலைகளையும், இனவாத தாக்குதல்களையும், பயங்கரமான வன்முறைகளையும் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. மனித கேடயங்களாக பொதுமக்களை பயன்படுத்துவதாக போலியாக அரசு கூறியவாறு அவர்களை வெளியேற்றவும் முற்றாக அழிக்கவும் முயன்று வருகின்றது. இது இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த 61 வருடங்களாக அரசினால் மேற்கொள்ளப்படும் இன அழிப்பு நடவடிக்கையாகும்.

விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த அழைப்பை பயன்படுத்தி மக்களை வெளியேற்றுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொன்னதையிட்டு உங்கள் கருத்து என்ன?

மக்களின் பாதுகாப்பை முன்னிட்டு முன்வைக்கப்பட்ட இந்த போர் நிறுத்த கோரிக்கையை, தமக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என சிறிலங்கா அரசு ஏற்கெனவே நிராகரித்து விட்டது. தமிழ்நாடு தூத்துக்குடியில் பிரணாப் முகர்ஜி இதனை சொல்லியிருப்பதை அரசியல் அழுத்தத்தால் சொல்லப்பட்ட ஒரு விடயமாகவே கொழும்பு பார்க்கின்றது.

அத்தோடு, மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான ஒரு போர் நிறுத்தம் தொடர்பாக இந்தியா தொடர்ந்து சொல்லி வருவதை, ஒரு தற்காலிக நடவடிக்கையாகவும், தமிழர் தாயகம் மீதான சிறிலங்காவின் படையெடுப்பக்கு வழங்கப்படும் ஓர் ஆசீர்வாதமாகவுமே நாம் கருத முடியும். அத்தோடு, பிரணாப் முகர்ஜியின் கருத்துக்கு பதில் வழங்கியிருக்கும் சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடுவதே ஓர் போர் நிறுத்தத்தை நோக்கி இட்டுச்செல்லும் என்று சொல்லியிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஆயுதங்களை கீழே போடுவதற்கான எந்த கோரிக்கையையும் நாம் நிராகரிக்கின்றோம். ஏனெனில், இந்த ஆயுதங்கள் எமது அரசியல் போராட்டத்தின் கருவிகள் மட்டுமன்றி, அவையே எமது மக்களின் பாதுகாப்பு கவசங்களுமாகும். இந்தியா இப்போது, போரை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்களின் துன்பங்களைப் போக்கி, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒர நிரந்தரத் தீர்வு காணவே சிறிலங்காவை வலியுறுத்த வேண்டும். என்றார்.

”தப்பியோடுவதா? தற்கொலை செய்வதா? தீர்மானிக்க முடியாத நிலையில் பிரபாகரன்” – கோதபாய : ”நாங்கள் போராடுவோம்!! சரண் அடையமாட்டோம்!!!” – யோகி

gothabaya.jpgஅப்பாவி மக்களைக் கவசமாக வைத்துக் கொண்டு பயங்கரவாதிகள் வன்னியில் மறைந்துள்ளார்கள். தாம் தப்பியோடுவதா? அல்லது தற்கொலை செய்துகொள்வதா? என்று தீர்மானிக்க முடியாத நிலையில் பிரபாகரன் இருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் புலிகளின் தலைவர் அரசியல் புகலிடம் கோரக்கூடுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு படையினர் எந்த நேரமும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் பாதுகாப்புச் செய லாளர் தெரிவித்துள்ளார். அப்பாவி பொதுமக்களை புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியிருப்பதே இதற்குக் காரணம். பாதுகாப்பு படையினர் உயிர் தியாகத்துடன் மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக கோதபாய ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.

ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு அவர் அளித்த விசேட பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த 10 நாட்களுக்குள் 30 ஆயிரம் பேரை புலிகளிடமிருந்து மீட்டெடுத்திருப்பதாகவும் 50 ஆயிரத்துக்கும் 70 ஆயிரத்துக்கும் இடையிலான மக்களை புலிகள் தடுத்துவைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

நாங்கள் போராடுவோம். பணிய மாட்டோம். சரணடைய மாட்டோம் விடுதலைப்புலிகளின் போர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி

yokaradnam-yoki.jpgநாங்கள் நம்பிக்கையை இழந்து விடவில்லை. விடுதலைப் போர் என்பது ஒரு காலமும் மக்கள் போராடுகின்ற போது, மக்கள் உணர்வை இழக்காத போராட்டம் தோற்றது கிடையாது. நாங்கள் யாருக்கும் நியாயமற்ற முறையில் செய்யப்படுகின்ற அடக்குமுறைகளுக்கு அடிபணிந்து வாழப் போவதில்லை. நாங்கள் போராடுவோம். பணிய மாட்டோம். சரணடைய மாட்டோம் என்று விடுதலைப்புலிகளின் போர் ஆய்வுமையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் வானொலியான புலிகளின் குரலில் ஒலிப்பரப்பாகிய கருத்து பகிர்வு நிகழ்வில் விடுதலைப்புலிகளின் போர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்து இருப்பதாவது:-

நீண்ட நெடிய எங்களுடைய விடுதலைப் போராட்ட வரலாற்றில் நாங்கள் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்திலே நிற்கின்றோம். நாங்கள் நம்பிக்கை இழந்து, உளவுரண் உடைந்து எதிரியிடம் சரணடைய வேண்டும் என்பது எதிரியின் விருப்பம் மட்டுமல்ல. இந்த உலகத்தின் விருப்பமும் கூட. நாங்கள் மில்லரை, திலீபனை, அன்னை பூபதியை எல்லாம் ஒரு குறியீடாகத்தான் பார்க்கின்றோம். அந்த குறியீடு என்பது நெருக்கடி வர வர நாங்கள் நிமிர்ந்து நின்று போராடுவோம். எந்த நெருக்கடிக்குள்ளும் நாங்கள் போராடுவோம்; இறுதிவரை போராடுவோம் என்பதை சுட்டி நிற்கின்றது.

ஈற்றில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடுதான் நாங்கள் வாழ்ந்திருக்கின்றோம். போராடியிருக்கின்றோம். இன்றும் போராடி கொண்டிருக்கின்றோம். இந்த நம்பிக்கையை நாங்கள் இழந்துவிடக் கூடாது. வடமராட்சியில் ‘ஒப்ரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கை நடைபெற்ற போதும், இந்தியப் படை வந்த போதும் விடுதலைப் போராட்டம் அழிந்து விட்டது என்றுதான் குறிப்பிட்டார்கள். ‘ஜெயசிக்குறு’ காலத்திலும் இதே கருத்தைதான் முன்வைத்தார்கள்.

ஆனால் போராட்டம் இந்த நெருக்கடிகளைச் சந்தித்த போதும் எழுந்தது; வளர்ந்தது; வீறுகொண்டு பெரிய எல்லைகளைத் தொட்டது. இதனை நாங்கள் மறந்து விடக்கூடாது.

இன்று உலகம் முழுவதிலும் ஒரு திட்டத்தின் அடிப்படையில், போராடுகின்ற அமைப்பை செயலிழக்கச் செய்து, பலமிழக்கச் செய்து பிறகு ஒரு தீர்வை வைக்க முற்பட்டால் அந்த தீர்வு நிலைக்கும் என்ற நம்பிக்கையோடு அந்த கோட்பாட்டோடு எப்போதுமே இப்படியான கோட்பாடுகள் பிழையானவைதான் என்று தெரிந்தும் செயற்பட்டு வருகின்றன. அவர்களுக்குச் சிங்கள அரசு சில நம்பிக்கைகளைக் கொடுக்கின்றது.

இவர்கள் எல்லாம் திட்டம் போட்டு செயற்படுகின்றனர். இன்னும் சில காலங்களில், ஒரு பத்து நாளிலோ அல்லது 15 நாளிலோ புலிகள் அழிந்து விடுவார்கள் என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தான் சொன்னதையே சிங்கள அரசு நம்புகிறது. அதனையே வெளிநாட்டவர்களும் நம்புகின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குகின்றது. தான் சொன்னதையே நம்பிக் கொள்வது சிங்கள தேசம்தான்.

அண்மை காலமாக நாங்கள் எதிர்த்து ஒரு வலிந்த தாக்குதலை தொடங்கிய போது கூட ஆடிப் போய் நிற்கின்றது. பெரிய அளவில் ஒரு வலிந்த தாக்குதலை நடத்த வேண்டுமாக இருந்தால் எங்களோடு எல்லா மக்களும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். இந்த உலகத் திட்டம் என்பது எங்களைச் செயலிழக்கச் செய்து பலமிழக்கச் செய்த பின் ஒரு தீர்வை வைப்பது என்பதாகும். ஆனால், அப்படி ஒரு தீர்வு வைக்கப்படாது எங்களுக்குத் தெரியும்; அது நடைமுறைப் படுத்தப்படாது என்பதும் எங்களுக்குத் தெரியும்.

புலிகள் பலமாக இருக்கின்ற ஒரு நிலையில்தான் தமிழர்களுக்காக தீர்வு குறித்து சிங்கள தேசம் பேசும். உலகம் பேசும். இல்லையேல் யாருமே இதைப்பற்றி இனி பேச மாட்டார்கள். புலிகள் பலமாக இருக்க வேண்டும் என்று சொன்னால் மற்றவர்கள் உதவ வேண்டும் என்றில்லை. இன்றைக்கு இருக்கின்ற மக்களில் வலுவுள்ளவர்கள் எல்லாரும் ஒன்று திரண்டு நின்றால் போதும்.

நாங்கள் போராட முடியும்; அதிசயிக்கத்தக்க வகையில் வெற்றிகளைச் சாதிக்க முடியும்.  எங்களுக்குப் பின்னால் புலம்பெயர் வாழ் தமிழர்கள் எல்லோரும் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கின்ற தமிழர்கள் எல்லாரும், ஒரு குறிப்பிட்டவர்களைத் தவிர எங்களோடுதான் நிற்கின்றனர். இவர்கள் எல்லோரும் உலகு எங்கும் வாழ்கின்ற மக்களின் மனசாட்சியோடு பேச வேண்டும். அரசோடு பேசி பிரயோசனமில்லை. அரசுகளை தீர்மானிப்பவர்கள் மக்கள்தான். அந்த மக்களின் மனசாட்சியோடு பேச வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் 160 பேர் இறந்து போன போது, பிபிசி போன்ற செய்தி நிறுவனங்கள் அதனை முதன்மைச் செய்தியாகச் சொல்லி அழுகின்றன. உலகம் முழுவதும் அழுகின்றன. இன்று தமிழீழத்தில் மருத்துவமனைகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. மருத்துவமனைகள் மீது குண்டுகள் போடப்பட்டு, உணவுகள் தடுக்கப்பட்டு, மருந்துப் பொருட்கள் தடுக்கப்பட்டு நான்கு இலட்சம் மக்களுக்கு மேல் ஒரு பாதுகாப்பு வலயம் என்று பொய்க்காக ஒன்றை உருவாக்கி, அந்த வலயத்திற்குள்ளே நாளாந்தம் குண்டுகளை வீசி, 50 இலிருந்து 60 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்படும் நிலையில், நாளாந்தம் 100 க்கும் அதிகமான மக்கள் காயப்படுகின்ற நிலை காணக்கூடியதாய் இருக்கின்றது.

கிட்டதட்ட ஒரு கிழமைக்குள்ளே 500 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காயப்பட்டிருக்கிறார்கள். அதில் பல குழந்தைகளும் அடங்கும். அதனைப்பற்றியெல்லாம் இந்த உலகம் கருத்தில் கொள்ளாமல் கண்மூடி நிற்பதையும் நாங்கள் இங்கு சுட்டிக்காட்டத்தான் வேண்டும்.

இருந்தபோதும் நாங்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது. உலகத்தின் மனசாட்சி என்பது உலகத்தின் மக்கள்தான். அந்த மக்களோடு பேசுவோம். அந்த மக்களுக்குத் தொடர்ந்து எங்கள் கருத்துகளைச் சொல்லி வைப்போம். அதன் மூலம் அரசுகளையும் அதன் எண்ணங்களையும் மாற்ற வைப்போம். ஒன்றில் நாங்கள் உறுதியாக இருப்போம். இன்றைக்கு உலக நாடுகள் எல்லாமே இந்த தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்து விட வேண்டும் என நினைக்கின்றன; குறிப்பாக தேசிய தலைவரை அழித்து விட வேண்டும் என நினைக்கின்றன. அவரை, அழித்து விட்டால் இந்த போராட்டத்தில் நாங்கள் நினைக்கின்ற எதனையுமே செய்துவிட முடியும் என்றும் எங்களை அழித்து எங்கள் போராட்டத்தை இல்லாமல் செய்த தாங்கள் விரும்பியதைச் செய்ய முடியும் என நினைக்கின்றன.

அது நடக்காது என்பதே வெளிச்சம். இந்த போராட்டத்தில் நாங்கள் இறுதிவரை போராடுவோம் என்று சொல்லி வைப்போம். தேசியத் தலைவரின் வழித்தடத்தில் நாங்கள் எல்லாரும் ஒன்றுபட்டு உறுதியாக நின்று போராடுவோம் என்று சொல்லி வைப்போம்.

இன்று காலம் குறித்து நிற்கிறது சிங்கள அரசு. அந்த காலம் சரிவராது என எடுத்துக் காட்டுவோம். அதற்கும் மேலாக எங்கள் போராட்டம் தொடரும் என எடுத்துக் காட்டுவோம். அவற்றுக்கு எல்லாம் மேலாக இந்த முற்றுகையினை உடைத்து எங்கள் மண்ணை மீட்கின்ற வகையில் ஒரு போராட்டத்தை எங்களால் தொடர முடியும் என்பதை நாங்கள் எடுத்துக் காட்டுவோம்.

ஹிட்லர் போன்றவர்கள் கூட படையெடுத்த போது இந்த உலகம் அழிந்து விடும்; உலகத்தில் உள்ள எல்லாமே ஹிட்லரிடம் வீழ்ந்துவிடும் என்றபோது கூட பலர் தொடர்ந்து போராடினர். அழிவுக்குள் நின்று போராடினர். அந்த அழிவுக்குள்ளும் நம்பிக்கையோடு போராடினர். ஹிட்லரினும் பார்க்க மிகக்கொடிய ஒரு அரக்கனை, காட்டுமிராண்டியை, மக்களை கொலை செய்கின்ற ஒரு மக்களைக் கொலை செய்கின்ற ஒரு மனிதனை அந்த மனிதனோடு சேர்ந்து ஒரு சிங்கள இனத்தை நாங்கள் எதிர்கொண்டு நிற்கின்றோம். அவனுக்குப் பின்னால் மனசாட்சியற்று நிற்கின்றவர்களை நாங்கள் ஏதோ ஒரு வகையில் மீண்டும் அந்த மனசாட்சியை அவர்களுக்குள் ஆழ புதைத்து எங்கள் குரலைக் கேட்கச் செய்ய வேண்டும்.

அதற்காக நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம். இந்த நெருக்கடியான கால கட்டத்தில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இந்த போராட்டம் ஒரு குறுகிய காலத்தில் அழிந்துவிடும், அழிக்கப்பட்டு விடும் என்று சிங்கள தேசம் சொல்வதை நம்பிக் கொண்டு ஒரு திட்டத்தை வகுத்து நிற்கின்ற உலகத்தின் திட்டத்தை மாற்றுவோம். எங்கள் வெற்றிகள், நாங்கள் செய்கின்ற சாதனைகள் மீண்டும் இந்த உலகத்தை எங்களை நோக்கி வரவழைக்கும்.

நாங்கள் நம்பிக்கையை இழந்து விடவில்லை. விடுதலைப் போர் என்பது ஒரு காலமும் மக்கள் போராடுகின்ற போது, மக்கள் உணர்வை இழக்காத போராட்டம் தோற்றது கிடையாது. தேசியத் தலைவர் அவர்கள் எங்கள் மீது வளர்த்தது இந்த ஓர்மத்தைதான். நாங்கள் யாருக்கும் நியாயமற்ற முறையில் செய்யப்படுகின்ற அடக்குமுறைகளுக்கு அடிபணிந்து வாழப் போவதில்லை. நாங்கள் போராடுவோம். பணிய மாட்டோம். சரணடைய மாட்டோம் என்றார்.

சிங்களப் பேரினவாதப் போக்கால் மேலும் பல பிரபாகரன்கள் உருவாகிவிடுவார்கள் – ஜுனியர் விகடனுக்கு மங்கள சமரவீர அளித்த பேட்டி

mangala_saramaweera.jpgசர்வகட்சி பிரதிநிதிகள் குழுவென்பது சர்வதேச நெருக்குதலை குறிப்பாக இந்திய அழுத்தத்தை சமாளிப்பதற்கான கேலிக்கூத்து. இந்தியாவில் நடைமுறையிலிருப்பது போன்ற கூட்டாட்சி அமைப்பே இலங்கையின் சிக்கலைத் தீர்க்க தேவைப்படுகிறது என்று நம்புகிறேன் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவுத் தலைவரும் எம்.பி.யுமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜுனியர் விகடனுக்கு அவர் அளித்த பேட்டியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். பேட்டி வருமாறு;

கேள்வி: மகிந்த ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாவதற்கு நீங்கள் பெரிதும் உழைத்தீர்கள். ஆனால், இப்போது அவருடனான உறவை முறித்துக் கொண்டது ஏன்?

பதில்: கடந்த 2005 இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றபோது ராஜபக்ஷவுக்கு தலைமைப் பிரசார ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டேன். அவர் ஜனாதிபதியானதும், எனக்கும் அமைச்சரவையில் பங்கு கொடுக்கப்பட்டது. 2006 இற்கு பிற்பகுதியில் தான் எங்கள் உறவில் கசப்பு ஏற்படத் தொடங்கியது. குறிப்பாகச் சொன்னால் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்டது குறித்தும், மூதூரில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் கொல்லப்பட்டது குறித்தும் நான் கவலை தெரிவித்த போதுதான் கசப்பு மேலிட்டது.

இத்தகைய கொடுமைகள் நடக்கும்போது அரசு செயலற்று இருந்தால், சர்வதேச அளவில் ஏற்படும் பழிச்சொல் பற்றி வெளியுறவுத் துறை அமைச்சர் என்ற முறையில் அவரிடம் எடுத்துரைத்தேன். நானும் ராஜபக்ஷவும் சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியில் மூத்த அமைச்சர்களாக இருந்தபோது, இது போன்ற நிலைமைகளை சந்திரிகா எவ்வாறு கையாண்டார் என்பதை சுட்டிக் காட்டினேன்.

1995 இல் பொல்கோட வாவியில் பிணங்கள் மிதந்தபோது, சந்திரிகா அரசு குற்றவாளிகள் மீது உறுதியாக நடவடிக்கை எடுத்தது. கிருஷாந்தி குமாரசாமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கிலும் தொடர்புடைய இராணுவ அதிகாரிகள் மீதும் வழக்குத் தொடரப்பட்டு, முடிவில் அவர்களுக்கு தண்டனை கிடைத்தது. ஆனால், இப்போது குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முயன்றால், அது இராணுவத்தின் மனஉறுதியைக் குலைத்துவிடும் என்று சாக்குச் சொல்லி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எனவே, என் கவலைகளை எல்லாம் 13.12.2006 இல் ஜனாதிபதிக்கு ஒரு கடிதமாகக் கொடுத்தேன். ஆறு வாரம் கழித்து 27.1.2007 இல் நான் வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டேன். 09.02.2007 இல் அமைச்சரவையிலிருந்தே அகற்றப்பட்டேன். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் போற்றி வளர்த்த ஜனநாயக நிறுவனங்களை ராஜபக்ஷவும் அவருடைய சகோதரர்களும் குட்டிச்சுவராக்கி விட்டார்கள். சிங்கள பௌத்த பேரினவாத கொடுங்கோலாட்சியை, பர்மிய அரசு மாதிரி நிறுவக் கனவுகாணும் தீவிரவாத சக்திகளான இவர்களின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க என் மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை.

கேள்வி: நீங்கள் உரிமைகளுக்காகப் பேசக்கூடியவராக அறியப்பட்டுள்ளீர்கள். உங்கள் நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நிறுவுவதற்கு அடிப்படையாக இருந்த ஜனநாயகசோஷலிசக் கொள்கைகளை, உறுதியாக நம்புகிறவன் நான். ஆனால், ராஜபக்ஷ ஆட்சியில் மாற்றுக் கருத்துகளை சகித்துக்கொள்ளாத இருண்ட காலம் உருவாகி இருக்கிறது. தீவிரவாத சக்திகள், ஆளுங்கட்சியைக் கைப்பற்றி, அதன் மிதவாதக் கொள்கையை ஒழித்துக்கட்டிவிட்டு, இராணுவ சர்வாதிகாரம் போன்ற ஒன்றை உருவாக்கி வருகின்றன.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் அரசாங்கம் எம்முடைய நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புகளைத் திட்டமிட்டே நொருக்கி வருகிறது. பொலிஸ் துறையும், தேர்தல் ஆணையமும் அரசு நிர்வாகமும் சுயேச்சையாக இயங்குவதை உறுதி செய்யும் 17 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை அலட்சியமாக ஒதுக்கித் தள்ளிவிட்டனர். நீதித்துறை கடுமையான நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளது. தலைமை நீதிபதியையே ஆட்சியாளர்கள் தாக்கி வருகின்றனர். இனவாதமே அரசாங்கக் கொள்கையாகிவிட்டது.

கொழும்பில் உள்ள தமிழர்களை வெளியாளர்கள் என்று சொல்லி பொலிஸ் துறை சித்திரவதை செய்கிறது. இது ஒரு சிங்களபௌத்த நாடு. இங்கே சிறுபான்மையினரின் கோரிக்கைகளுக்கு இடமில்லை என்று ஜாதிக ஹெல உறுமய அமைச்சர் சம்பிக்கவும் இராணுவத் தளபதி பொன்சேகாவும் கூறிய கருத்தும் இதைத்தான் காட்டுகின்றன. அரசில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் இவ்வளவு மோசமான கருத்துகளை வெளியிட்டபோதும், யாரும் இதை மறுக்கவோ திருத்தவோ இல்லை.

கேள்வி: ராஜபக்ஷ அரசு போர் வெறிபிடித்து அலைவதாக உலக நாடுகள் சிலவும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனவே?

பதில்: இலங்கையின் மக்கள் தொகை வெறும் இரண்டு கோடிதான். ஆனால், இவர்களை ஆள்வதற்கு அனைத்து வசதிகளோடும் சலுகைகளோடும் 113 அமைச்சர்கள் உள்ளனர். இதனால், ஏற்படும் வீண்செலவும் ஊழலும் சேர்ந்து இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கின்றன. இதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கான ஒரு கருவியாகத்தான் போர் பயன்படுத்தப்படுகிறது.

இலங்கை நிலைமை குறித்துக் கவலை தெரிவிக்கும் நட்பு நாடுகளைச் சேர்ந்த தூதர்களும், ஐ.நா. உயர் அதிகாரிகளும் கூட அரசு நடத்தும் ஊடகங்களால் புலி ஆதரவாளர்களாக தவறாகச் சித்திரித்துக் காட்டப்படுகின்றனர். இந்தப்போர், ஒரே நாட்டில் இரு இனக்குழுக்களுக்கு இடையே நடக்கும் மோதல். இதில் வெற்றிபெற்றவர்கள், தோல்வியுற்றவர்கள் என்று யாரும் இல்லை. பயங்கரவாதத்தைத் தோற்கடித்து, நீடித்த அமைதி மலரச் செய்வதற்கு இங்கே ஒரேயொரு வழி உண்டென்றால், அது தமிழ் மக்களின் உண்மையான மனக்குறைகளைப் போக்குவதுதான்.

ராஜபக்ஷ அரசாங்கத்தின் அப்பட்டமான பேரினவாதக் கொள்கைகள், மிதவாதத் தமிழர்களைக்கூட அதிதீவிர நிலைகளுக்குத் தள்ளிவிடுகின்றன. தற்போதைய போரில் பிரபாகரனையே ஒழித்துவிட்டாலும், சிங்களப் பேரினவாதப் போக்கால் மேலும் பல பிரபாகரன்கள் உருவாகிவிடுவார்கள் என்பது நிச்சயம். இதனால், இலங்கையின் துயரம் அடுத்த தலைமுறைக்கும் தொடரும்.

கேள்வி: அப்படியென்றால், ராஜபக்ஷ மனதிலுள்ள திட்டம் தான் என்ன?

பதில்: ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் தீர்வு ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவரே அனைத்துக் கட்சி ஆய்வுக் குழுவிடம் ஒற்றையாட்சி திட்டத்தைத் தாண்டிச் சிந்திக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவு செய்வதில் அவருக்கு அக்கறை இல்லை.

கிழக்கு மாகாணத்தை விடுதலை செய்து, அங்கு ஜனநாயகத்தை நிறுவி இருப்பதாக உலகுக்குக் காட்டுகிறார்களல்லவா. அந்தக் கிழக்கு மாகாண சபைக்கு எவ்வித அதிகாரமும் தரப்படவில்லை. அப்பகுதியின் முதலமைச்சர் அரசுத் தரப்பின் ஆளாக இருந்தும் தனக்கு அதிகாரமே தரப்படவில்லை என்று கூறியிருக்கிறார். 13 ஆவது சட்டதிருத்தத்தின்படியான அதிகாரங்கள் கூட எந்த மாகாண சபைக்கும் தரப்படவில்லை.

அனைத்துக் கட்சி ஆய்வுக்குழு என்பது சர்வதேச நெருக்குதலையும் குறிப்பாக இந்திய நெருக்குதலையும் சமாளிப்பதற்காக நடத்தப்படும் கேலிக்கூத்து. இந்தியாவில் இருப்பது போன்ற கூட்டாட்சி அமைப்பே எம்முடைய சிக்கலைத் தீர்க்கத் தேவைப்படுவதாக நம்புகிறேன். 2000 த்தில் சந்திரிக்கா முன்வைத்த அரசமைப்புச் சட்ட வரைபை தமிழர் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாகக் கருதலாம்.

கேள்வி: சிவராம், லசந்த விக்கிரமதுங்க உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் இலங்கையில் உண்மைகளை வெளியிட்டதற்காக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் பின்னணியில் அரசின் கைங்கரியம் தான் இருக்கிறது என்று சொல்லப்படுகிறதே?

பதில்:அனுமதிப்பத்திரம் இல்லாத மோட்டார் பைக்குகளில் வந்தவர்கள் இராணுவப் பாணி தாக்குதலில் இறங்கி இரத்மலானை விமான நிலையம் அருகில் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் லசந்தவை கொன்றனர். ஒரு சராசரிக் குடிமகன் நம்பர் பிளேட் இல்லாமல் இப்பகுதியில் 10 மீற்றர் தூரத்தைக்கூட கடந்து செல்லமுடியாது. நம்மிடம் திட்டவட்டமான சான்று ஏதும் இல்லையென்றாலும் பாதுகாப்புத் துறை வட்டாரங்களிலிருந்து கிடைத்துள்ள நம்பத்தக்க தகவலின்படி இதுபோன்ற நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கென்றே பயிற்சி பெற்ற கொலைக்குழுக்கள் இலங்கையில் பல இருப்பதாக தெரிகிறது.

இந்தக்குழு பாதுகாப்புத் துறையில் உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரிக்கு மட்டும்தான் பதில் சொல்லவேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜை இவர்கள்தான் கொன்றனர். கீத்நோயர் என்ற பத்திரிகையாளர் மீது நடைபெற்ற கொடுந்தாக்குதலும் லசந்த கொல்லப்பட்டதும் இவை எல்லாம் இப்படியொரு கொலைக்குழு இருப்பதையே காட்டுகின்றன.

கேள்வி: ராஜபக்ஷவின் ஆட்சி நடைமுறைக்கு எதிராக ஹிலாரி கிளின்டனை அணுகி புகார் தெரிவிக்க நீங்கள் திட்டமிட்டு இருப்பதாகச் செய்தி வந்துள்ளது. உங்களின் முயற்சிக்குப் பலன் கிடைக்குமா?

பதில்: பாதுகாப்புத் துறைச்செயலாளர் அமெரிக்கக் குடிமகன் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் பசில் ராஜபக்ஷவும் பச்சை அட்டை வைத்திருப்பவர்கள். இந்த மூவரின் குற்றச் செயல்கள் குறித்து ஓர் ஆவணத்தைத் தொகுத்துக் கொண்டிருந்தபோதுதான் லசந்த கொல்லப்பட்டார் என்பது எனக்குத் தெரியும் . இப்போது நானும் வேறு சிலரும் சேர்ந்து இந்த ஆவணத் தொகுப்பை முடித்துவிட முடியும் என நம்புகின்றோம். அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனிடம்இந்தத் தொகுப்பை கையளிப்பதற்காக சந்திப்பு நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்போம்.

ஒபாமா அரசாங்கம் ஜனநாயகத்திலும் சட்டத்தின் ஆட்சியிலும் உறுதியான பற்றுக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் ஆசியாவின் மிகத் தொன்மையான ஜனநாயகங்களில் ஒன்றாகிய இலங்கையில் ஜனநாயகப் பாரம்பரியத்தை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்கக் குடிமக்களான இவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறார்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறோம்.

இதையெல்லாம் செய்வதற்காக என்மீதும் அரசு தரப்பு பழிவாங்குதலையும் தாக்குதலையும் நடத்தக்கூடும். என் ஆதரவாளர்கள் மூலமாக எதையும் சமாளித்து கொடுங்கோலாட்சிக்கு முடிவு கட்டுவேன். இதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றார் மங்கள சமரவீர.

“எதிர்காலத்தில் புலிகளுடன் பேச்சு இல்லை’

gothapaya_rajapaksa.jpgசரண டையும் நிபந்தனைகள் தொடர்பாக விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அமெரிக்கா உட்பட இணைத்தலைமை நாடுகள் விடுத்த அழைப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

உடனடியாகத் தோல்வியை எதிர்நோக்கியுள்ள புலிகள் முழுமையாக சரணடைந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியுமென பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக “ஐலன்ட்’ ஆங்கில நாளேடு நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே ஆகியவை கடந்த செவ்வாய்க்கிழமை விடுதலைப்புலிகளை ஆயுதங்களை கைவிடுமாறும் சரணடையும் நிபந்தனைகள் தொடர்பாக பேசுமாறும் அரசியல் பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறும் கேட்டிருந்தன.

“கேலிக்கிடமானதை தவிர வேறொன்றும் இதில் இல்லை’ நிபந்தனையற்ற விதத்தில் ஆயுதங்களை சரணடையச் செய்வதைவிட அதற்கு குறைவானதாக ஒன்றும் இல்லை, என்று கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். அத்துடன், இணைத்தலைமைகளின் அறிக்கையானது புலிகளை காப்பாற்றும் வெளிப்படைத் தன்மையான முயற்சி என்றும் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன், புலிகளுக்கு எதிர்காலத்தில் அரசியல் ரீதியான பங்களிப்பு எதுவும் இருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ஆயுதப் படையினர் புலிகளை ஒழித்த பின்னர் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் அரசியல் கட்சியாக புலிகள் பங்கேற்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்குமென்று சர்வதேச சமூகம் எதிர்பார்க்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவுவதாக கூறுவது பொய்க்குற்றச்சாட்டு – கலைஞர் கருணாநிதி

0302-karunanidhi.jpgஇலங்கைப் போரில் அந்நாட்டு இராணுவத்துக்கு இந்தியா உதவுவதாக கூறுவது பொய்யான குற்றச்சாட்டு என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னையில் நேற்று தி.மு.க. செயற்குழுவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு;

கே: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதா?

ப: அதற்காகத் தான் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றோம். மாநில அரசுக்கு நேரடியாக தலையிட்டு போரை நிறுத்த அதிகாரமோ வலிமையோ இல்லை.

கே: தி.மு.க. அரசுக்கெதிராக சதித்திட்டம் தீட்டப்படுவதாகக் கூறியுள்ளீர்களே அதற்கு என்ன ஆதாரம்?

ப: தேவையற்ற கிளர்ச்சிகளை நடத்துகின்றனர். முதலில் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து போராட்டம் நடத்துவதாக அறிவித்துவிட்டு இப்போது பிரதான கட்சியான தி.மு.க.விற்கு எந்த அழைப்பும் இல்லை. இது ஒன்றே போதாதா?

கே: நாளை (04) பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து ?

ப: இது குறித்து நான் எதுவும் சொல்லவிரும்பவில்லை.

கே : முதல்வர் என்ற முறையில் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

ப: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கே: ராஜபக்ஷ தமிழக அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாரே?

ப: எதுவும் கூற விரும்பவில்லை.

கே: பந்த் தேவையற்றது என்று மார்க்ஸிஸ்ட் மாநில செயலாளர் என்.வரதராஜன் கூறியுள்ளாரே?

ப: அவரது கருத்தை வரவேற்கின்றேன்.

கே: இலங்கையில் பாதுகாப்பு பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடத்திலும் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்துகின்றதே?

ப: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதில் இரு வேறு கருத்துக்கே இடமிருக்க முடியாது. இதனைத் தடுத்து நிறுத்திட தமிழர்கள் ஒன்றுபட வேண்டும்.

கே: அப்படியென்றால் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்துக்கு அழைப்பு விடுப்பீர்களா?

ப: மதியார் தலைவாசல் மிதிக்கமாட்டோம்.

கே: இலங்கைப் பிரச்சினையில் தமிழர்களின் பிரதிநிதி விடுதலைப்புலிகள் தான் என்றும் பிரபாகரனோடே சமரசத் தீர்வு குறித்து பேச முடியும் என்றும் கூறப்படுகிறதே?

ப: பிரபாகரனா அல்லவா என்பது அல்ல பிரச்சினை. இலங்கையில் நடைபெறும் தமிழர் படுகொலை நிறுத்தப்பட வேண்டுமென்பதே முக்கியம்.

கே: ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டுமென்று கட்சிகள் கூறுகின்றனவே?

ப: ஐக்கிய நாடு தலையிட்டால் நல்லது. வரவேற்பேன்.

கே: இலங்கையில் நடக்கும் போரை இந்தியா தான் பின்னின்று நடத்துகிறது. தேவையான எல்லா உதவிகளையும் அளிக்கிறது என்று குற்றஞ்சாட்டப்படுகிறதே?

ப: இத்தகைய பொய்க்குற்றச்சாட்டுக்கு பலமுறை இந்தியா பதிலளித்து விட்டது. பாதுகாப்பு அமைச்சரும் உரிய பதில் அளித்துள்ளார்.

கே: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு நடவடிக்கை திருப்தியளிக்கிறதா?

ப: போதுமானதாக இல்லை என்பதால்தான் இன்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.

கே: பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணம் திருப்தியளிக்கிறதா?

ப: அவருக்கே முழுத்திருப்தியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு கொழும்புடன் இணைந்து தீர்வுகாண டில்லியிடம் தி.மு.க. கோரிக்கை

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு இந்திய மத்திய அரசாங்கம் கொழும்புடன் இணைந்து தீர்வு காணவேண்டும் என்றும் குறித்த காலவரையறைக்குள் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு முழுமையான அதிகாரப் பகிர்வையும் சுயாட்சியையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தமிழக ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் நேற்று செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் இந்திய மத்திய அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் தி.மு.க. கோரியுள்ளது.

இதேவேளை, தமிழக அரசியல் கட்சிகள் பல ஒன்று சேர்ந்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கும்நிலையில், அந்த இயக்கத்துடன் தன்னை ஒன்றிணைத்துக்கொள்ள விரும்பாத கருணாநிதி தலைமையிலான தி.மு.க. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு நலப் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி எதிர்வரும் 7ஆம் திகதி சென்னையிலும் 8,9 ஆம் திகதிகளில் மாவட்டங்களின் தலைநகரங்களிலும் பேரணிகள், பிரசாரப் பொதுக்கூட்டங்களை நடத்தப்போவதாக முடிவுசெய்திருக்கிறது.

அத்துடன், இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றைக் காண்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் மேற்கொள்வதுடன், குறிப்பிட்டகால வரையறைக்குள் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள தமிழ் மக்களுக்கு பூரண அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.இதற்கு இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் “”தமிழக எம்.பி.க்கள் ராஜிநாமா செய்யும் சூழ்நிலை உருவாகும்’ என எச்சரிக்கப்பட்டது.

அதன் பிறகு சட்டப்பேரவையில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சியினர் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து முறையிட்டனர். ஆனாலும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. இரு வாரங்களுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவை கூடியபோது இறுதி வேண்டுகோள் என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனாலும் பலன் ஏதும் ஏற்படவில்லை.

இதற்கிடையில், இலங்கைத் தமிழர்களுக்காக முத்துக்குமார் சென்னையில் தீக்குளித்து இறந்தார். இலங்கைப் போர் பற்றி போராட்டங்கள் நடத்தி வந்த கட்சிகள், அமைப்புகள் எல்லாம் இப்போது ஓரணியில் திரண்டு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை உருவாக்கியுள்ளன.

எனவே இப் பிரச்சினையில் மக்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் மத்திய அரசில் இருந்து தி.மு.க.அமைச்சர்கள் ராஜிநாமா அல்லது மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் போன்ற முக்கிய முடிவு இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படக்கூடும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், இலங்கைப் பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்க நேற்று கூடிய தி.மு.க.செயற்குழு கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு நலப் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி பேரணி மற்றம் பிரசார பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.