மறுபிரசுரங்கள்

மறுபிரசுரங்கள்

“இது தமிழர்கள் பற்றியது. புலிகளை பற்றியது அல்ல”- நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்’

redcross-2801.jpgஇலங்கைத் தமிழருக்கு உத்தரவாதமளிக்க வேண்டிய கடமை புதுடில்லிக்கு இருப்பதாக “நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை வலியுறுத்தியுள்ளது. இது தமிழர்கள் பற்றியது. புலிகளை பற்றியது அல்ல என்று மகுடமிட்டு நேற்று திங்கட்கிழமை தீட்டியிருக்கும் ஆசிரியர் தலையங்கத்திலேயே “நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை இதனைச்சுட்டிக்காட்டியுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இலங்கைத் தமிழரின் தலைவிதி தொடர்பாக நெஞ்சுபடபடக்கும் திருப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. இலங்கையின் வடபகுதியில் சிறிய நிலப்பகுதிக்குள் விடுதலைப்புலிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அதிர்ச்சியும் கவலையும் தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. ஆனால் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இராணுவம் வலுவான முறையில் முன்னேறிவருவது இரகசியமானதல்ல. கடந்த வருட முற்பகுதியில் யுத்தநிறுத்தம் முறிவடைந்த பின் கொழும்பு முழுமையாக ஒழித்து விடுவதற்கான யுத்தத்தை ஆரம்பிப்பதென முடிவு செய்தது.

உண்மையான நிலைமை யாராலும் கண்டுகொள்ளக் கூடியதாகும். ஆனால், மாநிலத்தின் (தமிழ்நாடு) அரசியல்வாதிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் இது தொடர்பாக தமது கண்களை மூடிக் கொண்டுள்ளனர். அடையாளங்கள் தொடர்பான குழப்பங்களும் உள்ளன. விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று தமிழகத்தின் சிறிய மற்றும் குரல்கொடுக்கும் கட்சிகளைச் சேர்ந்த கணிசமான எண்ணிக்கையான தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த விடயத்தில் தலையிட வேண்டிய தெய்வீக உரிமை இந்திய அரசுக்கு இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். இந்த மாதிரியான நிலைப்பாட்டை புலிகள் ஊக்குவிக்கின்றனர். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் இந்தியா மீதான நல்லெண்ண வெளிப்பாடு பற்றி குறிப்பிட்டிருந்தமை இதற்கு சாட்சியமாகும்.

இலங்கை இறைமையுள்ள ஒரு நாடென்பதும் இந்தியாவோ அல்லது வேறு எவரோ உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாதென்பதும் உண்மையானதொன்றாகும். 1987 இல் மேற்கொள்ளப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கை தோல்வி கண்டது. பல காரணங்கள் இருந்தாலும் புலிகள் அதில் ஆர்வம் காட்டாதமையும் ஒரு காரணமாகும். 2002 இல் நோர்வே அனுசரணையுடனான யுத்த நிறுத்தமும் தோல்வி கண்டது. நம்பிக்கை தொடர்பாக இருதரப்பும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை தெரிவித்தன. எவ்வாறாக இருப்பினும் இலங்கையில் தமிழர்களுக்கு உத்தரவாதமளிக்க வேண்டிய கடமை புதுடில்லிக்கு உண்டு.

யுத்தம் முடிவடைந்த பின் தமிழர்கள் கௌரவத்துடனும் பாதுகாப்புடனும் அவர்கள் வாழ வேண்டியது அவசியமாகும். 25 வருட காலமாகக் கடுமையான போராட்டங்களின் பின்னரும் தலைமுறையினர் இடம்பெயர்ந்த பின்னரும் அவர்கள் எதிர்பார்க்கும் ஆகக் குறைந்த விடயமாக இது காணப்படுகிறது. இதனையே இங்குள்ள அரசியல் கட்சிகள் மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், இது தொடர்பான திட்டம் பலரிடம் இல்லை. அவர்களுடைய தற்போதைய நிலைப்பாடு சிந்தனையின் வங்குரோது தனத்தையே காட்டுவதுடன் நம்பிக்கையை ஊக்குவிப்பதாக இல்லை.

நாளையே தமிழ் ஈழம் மலருமானால் ஆட்சியை துறக்கத் தயார் – கருணாநிதி

karunanithi.jpgஇந்த ஆட்சி விலகினால், நாளையே தமிழ் ஈழம் மலரும் என்ற நிலை இருந்தால், இந்த ஆட்சியைத் துறக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இலங்கையில் அந்நாட்டுப் படையினரின் தாக்குதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பிரபாகரன் தப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகின. முல்லைத்தீவை விரைவில் ராணுவம் பிடித்து விடும் என அந்நாட்டு அரசு கூறி வருகிறது.

ஆனால் இந்த சண்டையில் 4 லட்சம் அப்பாவித் தமிழர்கள் சிக்கி சிதறுண்டு வருவதை அனைவருமே கவனிக்கத் தவறி வருகின்றனர் அல்லது மறந்து விட்டனர். வன்னிப் பகுதியில் அப்பாவித் தமிழர்கள் படும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சாப்பாடு, மருந்து, உடை என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் விலங்குகளை விட மோசமான நிலையில் உயிரைக் கையில் பிடித்து வாழ்ந்து வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான தமிழர்கள் இதுவரை இலங்கைப் படையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இலங்கை அரசு உடனடியாக போரை நிறுத்த வேண்டும். இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையை மத்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக தலைவர்கள் தொடர்ந்து கோரி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இதுவரை போரை நிறுத்துமாறோ அல்லது இனப்படுகொலையை நிறுத்துமாறோ இலங்கையிடம் கண்டிப்பான வார்த்தைகளில் கேட்டுக் கொள்ளவில்லை.

பிரணாப் முகர்ஜியை அனுப்புங்கள் என்றால் மேனனை அனுப்பினார்கள். அவரோ, ராஜபக்சேவிடம் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு, இந்திய, இலங்கை உறவு நன்றாக உள்ளது என்று பேட்டி அளித்தார். போரை நிறுத்துமாறு கோரி அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தமிழர்கள் பலியாவது குறித்தும் அவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இந்த நிலையில் இலங்கைப் பிரச்சினையில் தமிழக தலைவர்கள் மீண்டும் போர்க்கோலம் பூண்டுள்ளனர்.

சட்டசபையில் இன்று மீண்டும் தீர்மானம்

இந்தப் பின்னணியில், தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை கூட்டத்திலும் இலங்கை தமிழர்கள் விவகாரம் பெரிதாக உருவெடுக்க உள்ளது. அனைத்து கட்சி உறுப்பினர்களும் இந்த விவகாரத்தில் தங்கள் கருத்துகளை பதிவு செய்ய முன்வந்துள்ளனர். இலங்கை பிரச்சினையில் மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்து தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக சபை கூடியதும் கேள்வி நேரம் ஒத்திவைக்கப்பட்டு இந்த முக்கிய கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படுவதாக சபாநாயகர் ஆவுடையப்பன் அறிவித்தார்.

இதையடுத்து தீர்மானத்தை முதல்வர் கருணாநிதி முன்மொழிந்தார். பின்னர் விவாதத்தை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் அதிமுக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பேசினர். பின்னர் முதல்வர் கருணாநிதி பதிலளித்துப் பேசியதாவது…

இலங்கையில் நடை பெறுகின்ற இன வெறிப்போராட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்து இந்த அவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நண்பர் ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நண்பர் சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்ட் கட்சியின் சார்பில் நண்பர் கோவிந்தசாமி, ம.தி.மு.க. சார்பில் நண்பர் ராமகிருஷ்ணன், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நண்பர் ஜி.கே. மணி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் நண்பர் பீட்டர் அல்போன்ஸ், அ.இ.அ.தி.மு.க. பிரதான எதிர்க்கட்சியின் சார்பில் நண்பர் செங்கோட்டையன் ஆகியோர் தங்களுடைய கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

கடைசியாக ஒருமுறை …

இந்தத் தீர்மானம் அவசர அவசியமாக இன்றைக்கு இந்த மாமன்றத்திலே விவாதிக்கப்பட்டு, நிறை வேற்றப்பட வேண்டும் என்று நான் விரும்பியதற்குக் காரணமே – கடந்த காலத்தில் பல முறை சட்டப் பேரவை யிலும், அனைத்துக் கட்சித்தலைவர்களின் கூட்டத்திலும் ஒவ்வொரு கட்சி யினுடைய பொதுக் கூட்டங்களிலும், நிர்வாகக் குழு கூட்டங்களிலும் – எடுத்துரைத்த மிக முக்கியமான தீர்மானமாக இலங்கையில் தமிழ் இனத்தை அழிக்கின்ற போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதை கடைசியாக ஒரு முறை இன்றைக்கு மத்திய அரசுக்கு வலியுறுத்திச் சொல்லவேண்டும் என் பதற்காகத்தான்.

இதை ஏன் கடைசியாக ஒரு முறை என்று நான் குறிப்பிட்டேன் என்றால் – பல முறை இந்த அவையில் இது போன்ற தீர்மானங்கள் கட்சி மாச்சரியங்களுக்கு இடம் இல்லாமல் இந்தத் தீர்மானத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு இது தான் நேரம் என்று ஒருவரையொருவர் மறை முகமாகவோ, ஜாடையாகவோ, நேரடியாகவோ தாக்குவதற்கான வாய்ப்பு இருந்தாலும் அதைப்பயன்படுத்திக் கொள்ளாமல், வாய்மையோடு வாதத்திலே ஈடுபட்டு, நம்முடைய கோரிக்கையை மத்திய அரசுக்கு எடுத்து வைத்திருக்கிறோம்.

போர் நிறுத்தப்பட வேண்டும் …

இலங்கையில் நடைபெறுகின்ற போர் நிறுத்தப்பட வேண்டும் என்பது தான் நம்முடைய கோரிக்கையினுடைய முக்கியமான குறிக்கோள். அதை விட்டு எள் முனை அளவும் பிறழாமல், பேச வேண்டுமென்று நான் காலையிலே நம்முடைய நண்பர்களையெல்லாம் கூட வேண்டிக் கொண்டேன்.

சற்று அங்கு இங்கு அந்தத் தடம் மாறினாலுங்கூட – தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டும், தமிழர்களை இலங்கைத் தீவிலே பாதுகாக்க வேண்டும், அவர்களைக் காத்திட வேண்டும் என்ற அந்த உணர்வு ஒரு மைய இழையாக ஓடிக் கொண்டிருந்த காரணத்தால் – நான் எதிர்பார்த்தவாறு அல்லது வேறு சிலர் எதிர் பார்த்தவாறு எந்த விதமான சங்கடங்களும் இல்லாமல் நாம் நம்முடைய கருத்தை இந்தத் தீர்மானத்தின் மூலமாக வலியுறுத்துகின்ற கட்டத்திற்கு வந்திருக்கிறோம்.

ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். 1939ஆம் ஆண்டு – ஆசியாவின் ஜோதி பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். “இண்டியன் இன் சவுத் ஏசியா” என்ற நூலில் – அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அதிலே இந்தியாவுக்கு வெளியே வாழுகின்ற இந்தியர்களைப் பற்றி – அப்போது நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு நேரு அனுப்பிய செய்தி அது.

நேரு கூறியபடி ..

“இந்தியா இன்று பலவீனமாக உள்ளது. அது வெளிநாட்டில் வாழும் தனது மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. ஆனால் இந்தியா அவர்களையும் அவர்களுக்கு ஏற்படும் துயரத்தையும் இழிவையும் மறப்பதில்லை. ஒரு நாள் வரும் – அன்றைக்கு இந்தியாவின் பாதுகாப்பு கரம் நீளும் – அதன் வலிமையினால் அவர்களுக்கு நீதி கிடைக்கும்” என்று நேரு அவர்கள் 1939ஆம் ஆண்டு சொன்னதைத் தான் இப்போது நான் வலியுறுத்துகிறேன்.

நீதி கிடைப்பதற்கு ஜவகர்லால் நேரு அவர்கள் எந்த இந்தியாவிலே முதல் பிரதமராக பொறுப்பேற்றாரோ – அந்த இந்தியத் திருநாடு இப்போது முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்வதற்காகத் தான் நேருவின் அந்த வாசகத்தை நினைவுபடுத்தி – நான் என்னுடைய தீர்மானத்தை முன்மொழிய விரும்புகிறேன்.

“இலங்கையில் தமிழ் இனமே அழிந்து கொண்டி ருக்கிறது. ஐ.நா. மன்றம் கண்டனம் தெரி விக்கிற அளவுக்கு; அந்த நாடு அப்பாவித் தமிழ் மக்களின் இடுகாடாக – சுடுகாடாக – ஆகிக் கொண்டிருக்கிறது.

குழந்தை குட்டிகளோடு, குடும்பம் குடும்பமாக குய்யோ முறையோ என்ற கூச்சலும் – ஒப்பாரியும் புலம்பலும் – பின்னணி யாக, பிணங்கள் குவிக்கப் படுகின்றன. அத்தனையும் தமிழ் மக்களின் பிணங்கள்.

தமிழ் இனத்தை எப்படி மீட்கப் போகிறோம்…?

அய்யோ! அந்தச் சிங்கள இராணுவ குண்டு வீச்சுக்கிடையே – சிதறியோடும் – சிறுவர் சிறுமியர் – சிலராவது செத்துப் பிழைத்தார்கள் என்ற செய்தியும் கூட அறவே அற்றுப் போய் – இன்று கூண்டோடு சாகின்றனரே – பூண்டோடு அழிகின்றனரே – மனித நேயமற்ற மாபாவிகளின் சேட்டையால்; இத்தனை ஆண்டுகள்; இழித்தும் – பழித்தும் – இறுதியாக அழித்தும் ஒழிக்கப்படுகிறதே உலகை ஆண்ட ஓர் இனம் – அந்த இனத்தை இறுதியாக இலங்கையில் விடப்பட்டுள்ள இந்த அறை கூவலில் இருந்து எப்படி மீட்கப் போகிறோம்?

இந்தியாவில் உள்ள தமிழ் நாடு என்ற மாநிலத்தில் நாம் வாழுகிறோம் என்பதால் நம்மை அரவணைத்துக் காத்திடும் பொறுப்பை இந்தியப் பேரரசு பார்த்துக் கொள்ளும் – ஆம், பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உரிமையோடு எதிர்பார்க்கிறோம்.

நமக்கு பாதுகாப்பு தருவதாயினும் – பாதிப்பைக் களைவதாயினும் இரண்டையும் சீர்தூக்கி செயல்படுத்தி, இந்த மாநில மக்களுக்கும் – இந்த மாநில மக்களாம் தமிழ்க்குடி மக்களின் நலத்திற்கும் நமது தொப்புள் கொடி உறவு கொண்ட இலங்கைத் தமிழ் மக்களின் நலத்திற்கும் உத்திரவாதமளிக்கக் கூடிய பொறுப்பு; – உலகில் எங்கு இனப்படுகொலை நடந்தாலும் தட்டிக் கேட்கும் உணர்வும் உரிமையும் கொண்ட இந்தப் பெரிய ஜனநாயக நாடாம் இந்தியத் திருநாட்டில் மக்களாட்சியை நடத்துகிற மத்திய ஆட்சியின் கரங்களில் இருக்கும்போது; நாம் அந்தக் கரங்களைப் பிடித்துக் கொண்டு தானே; இலங்கையில் சீரழியும் – செத்து மடியும் எங்கள் தமிழ்ச் சாதியைக் காப்பாற்றுக என்று கண்ணீர் மல்கக் கேட்கிறோம்.

புத்தர் பூமியில் அமைதிப் பூ மலர்ந்திட …

கேட்டுக் கேட்டுப் பயன் விளையாமற் போனதால் – இறுதி வேண்டுகோளாக முறையிடுகிறோம்; உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்து; அந்தப் புத்தர் உலவிய பூமியில் அமைதிப் பூ மலர்ந்திட – ஆவன செய்திடுக என்று!

இந்த இறுதி வேண்டுகோள் புறக்கணிக் கப்படாமல் – இன்றே போர் நிறுத்தம் இலங்கையில் – அடுத்து அரசியல் தீர்வு – தொடர்ந்து அமைதி. எனவே அந்த நல்ல விளைவை எதிர்பார்த்து; இந்த மாமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த இறுதித் தீர்மானமாக இதனை நான் முன்மொழிகிறேன்.

திமுக முக்கிய முடிவை எடுக்க நேரிடும் …

இந்தத் தீர்மானத்திற்கும் பயன் ஏதும் ஏற்படா விட்டால் ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு அல்லது செயற்குழு கூட் டத்திலே விவாதித்து அடுத்து என்ன என்று முடிவு எடுக்கப்படும் என்பதை இந்த மன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே பேசிய நண்பர்கள் சில பேர் ஆட்சி எதற்காக என்றார்கள். ஆட்சி என்று ஒன்று இருக்கின்ற காரணத்தால் தான் நாம் இந்த அளவிற்காவது கேட்க முடிகிறது – இங்கே ஒரு தீர்மானத்தையாவது போட முடிகிறது என்பதையும் சில பேர் நமக்குச் சொல்கின்ற காரணத்தால் – அதையும் நாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

தேவையில்லை, நாளைக்கே ஆட்சியை இழந்து விட்டால், இலங்கையிலே தமிழ் ஈழம் மலரும் என்ற உறுதி கிடைக்குமேயானால், அதற்கும் நாம் தயாராக இருப்போம் என்பதையும் எடுத்துக் கூறி – மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் – “அய்யகோ, இலங்கையில் தமிழ் இனமே அழிகிறது – இந்தியப் பேரரசுக்கு இறுதி வேண்டுகோள்” என்பதை டெல்லியிலே உள்ளவர்களுடைய செவிகளிலே விழ ஓங்கி ஒலித்து இந்த தீர்மானத்தை இந்த மாபெரும் அவையிலே முன்மொழிந்து இந்த அளவில் நன்றி கூறி விடை பெறுகிறேன் என்றார் கருணாநிதி.

இதையடுத்து தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

அதிமுக – மதிமுக – சிபிஐ வெளிநடப்பு

முன்னதாக தீர்மானம் சரியாக இல்லை என்று கூறி அதிமுக, மதிமுக, சிபிஐ ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. துணை தலைவர் ஓ. பன்னீர்செல்வம் பேசிவிட்டு வெளி நடப்பு செய்தார். அவரை தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் வெளியேறினார்கள்.

அப்போது முதல்வர் கருணாநிதி கூறுகையில், உணர்ச்சிமிக்க தமிழர்களுடைய உள்ளங்களை யெல்லாம் ஈர்த்துள்ள ஒன்று பட்ட ஒரு தீர்மானத்திற்கு எப்படியும் களங்கம் விளைவித்தே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு – அதிலே வெற்றி பெற்று வெளி நடப்பு செய்துள்ள அ.தி.மு.க. தோழர்களுடைய சாமர்த்தியத்தை பாராட்டத்தான் வேண்டும் என்றார்.

முன்னதாக தி.மு.க. தலைமைக்கழகம் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், அய்யகோ; இலங்கையில் தமிழ் இனம் அழிகிறது – இந்திய பேரரசுக்கு இறுதி வேண்டுகோள் என்ற தலைப்பிட்டு, சபாநாயகர் மற்றும் சட்டசபையின் ஒப்புதலை பெற்று, 23-ம் தேதி சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி தீர்மானத்தை முன்மொழிகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி எச்சரிக்கை?

இந்தத் தீர்மானத்தை மத்திய அரசுக்கு விடும் இறுதி எச்சரிக்கையாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. இதற்கு மேலும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் முதல்வர் கருணாநிதி தானே களத்தில் இறங்கி கடும் போராட்டங்களை அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முன்வந்தார். நாங்கள் தடுத்து விட்டோம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சட்டசபைக்கு இன்றும் பாமக எம்.எல்.ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர்.

நன்றி: வன் இந்தியா

”இறுதிவரை போராடி மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை எமக்குண்டு.” : பா. நடேசன்

nadesan.jpgஈழத்தின் தற்போதைய கள நிலவரம் தான் என்ன? அதை அறிந்து கொள்ள சில தொடர்பாளர்களை நாம் அணுகினோம். “நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. இராணுவக் குண்டுவீச்சு அப்பாவி பொதுமக்களைத்தான் அதிகம் காவு கொள்கிறது. புலிகள் தரப்பில் இன்னும் பெரிய யுத்தம் தொடங்கப்படவில்லை. தற்கொலைப்படையான கரும்புலிகள் இன்னும் களமிறங்கவே இல்லை.
புலிகளின் முன்னணி தளபதிகளும் இன்னும் களமாட வரவில்லை. புலிகளின் முழுவேகத் தாக்குதல் தொடங்கும்போதுதான் என்ன நடக்கும் என்பது தெரியும். அதை இப்போதே கணிப்பது கடினமானது. இந்தக் கவலை இராணுவத்திற்கும் இருக்கிறது” என்றனர் அவர்கள்.

முல்லைத்தீவு தற்போது ஐம்பத்து ஏழாயிரம் இராணுவ வீரர்களின் முழு முற்றுகையில் இருக்கிறது. புலிகள் இப்போது முப்பது சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டு விட்டனர். புலிகளின் கதை விரைவில் முடியப் போகிறது” என்று கொக்கரித்திருக்கிறார் இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.

நிலைமை இப்படியிருக்க `யானை குழியில் விழப்போனால் தவளை கூட உதை கொடுக்கும்’ என்ற பழமொழிக்கேற்ப, ஈழத்தில் ஒரு சிக்கலான போர்ச் சூழல் நிலவும் நிலையில், இங்கோ கருணாவை வைத்து நீண்ட பொய்ப்பிரசாரம் ஒன்றைக் கட்டவிழ்க்கும் முயற்சி நடக்கிறது” என்று குற்றம் சாட்டுகிறார்கள் தமிழின ஆர்வலர்கள்.

இந்தச் சூழ்நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான பா.நடேசன் அவர்களை நாம் பேட்டி கண்டோம்.

இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர மேனன், இலங்கை அதிபர் ராஜபக்ஷ சந்திப்பால் போர் நிறுத்தம் ஏற்படும் என்று நினைக்கிறீர்களா? அல்லது என்ன வகையான மாற்றம் ஏற்படும் என்று கருதுகிறீர்கள்?

“கடந்த முப்பதாண்டு காலமாக எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தின்போது இந்திய இராஜதந்திரிகள் பலமுறை கொழும்புக்கு வந்து சென்றுள்ளனர். ஆனால் தமிழ் மக்களின் பிரச்னைகள், அவர்கள் எதிர்கொள்ளும் அழிவுகள் அதிகரித்துச் செல்கின்றனவேயொழிய குறைந்த பாடில்லை. இம்முறை சிவ்சங்கர் மேனன் வந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஒருபோதும் இல்லாத அளவிற்கு எமது மக்கள் மீது கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்கள், ஷெல் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பலநூறு தமிழர்கள் காயமடைந்து வரும் நிலையில், இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு அகதிகளாக காட்டிலும், மேட்டிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனித அவலத்தின் சின்னமாக தமிழீழ தேசம் காட்சியளிக்கிறது. சிவசங்கர மேனனின் வருகையின் போதோ அல்லது பின்னரோ எந்த மாற்றமும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. இது எமக்கும் எம் மக்களுக்கும் மிகுந்த வேதனையளிக்கிறது.”

புலிகளின் உளவுப்பிரிவு தலைவரான பொட்டு அம்மான் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததாக ஒரு செய்தி பரவியதே. இது உண்மையா, வதந்தியா? புலிகள் மற்றும் உலகத் தமிழர்களின் மனதிடத்தைச் சீர்குலைக்க அப்படி ஒரு செய்தி பரப்பப்பட்டதா? அதன் பின்னணி என்ன?

“அது ஒரு பொய்யான வதந்திதான். எமது விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான சக்திகள் போராட்டத்தைக் களங்கப்படுத்தவும், கொச்சைப்படுத்தவும் இதுபோன்ற பரப்புரைகளை மேற்கொள்வது வழமை. எமது மக்களுக்கும் இது பழகிப்போன ஒன்று. இதனால் உலகத் தமிழினத்தின் மனதிடம் ஒருபோதும் குலையாது. மாறாக முழுத் தமிழினமும் எமக்காக ஒருமித்து ஓங்கிக் குரலெழுப்புகிறது”.

கருணா அவரது பேட்டியொன்றில், `இலங்கைத் தமிழர்களின் இந்த அழிவுக்குக் காரணமே பிரபாகரன்தான்’. நான் ஒருவன் மட்டும்தான் அவரிடம் பேச முடியும். தனிமனிதக் கொலைகளைத் தவிர்க்க வேண்டும் என்று நான் எவ்வளவோ கூறியும் பிரபாகரன் அதைக் கேட்காமல் சர்வாதிகாரியாக நடந்து கொண்டார்’ என்றெல்லாம் கூறியிருக்கிறாரே?

“கருணா சொல்வது அப்பட்டமான பொய். தலைவர் எம் எல்லோரையும் அடிக்கடி சந்தித்துக் கதைப்பவர். மற்றவர்களின் கருத்துகளுக்கு செவி மடுப்பவர். கருணா இயக்கத்தில் இருந்த காலகட்டத்தில் மட்டக்களப்பு பகுதியில் மக்கள்மீது வெறுக்கத்தக்க வன்முறை சார்ந்த செயல்களைச் செய்ததால் பலமுறை தலைவரால் கண்டிக்கப்பட்டவர் கருணா. அவரது கூற்று கேலிக்கிடமானது. தமிழ்மக்கள் ஒருபோதும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள்”.

நான் எவ்வளவோ கூறியும் பிரபாகரன் கேட்காமல் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி, நூறுகோடி ரூபாய் மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துக்களைச் சூறையாடினார். புலிகள் இயக்கத்தில் உள்ள தளபதி பானு அந்தத் தாக்குதலை நடத்தினார். அதுபோல இந்திய அமைதிப் படை வெளியேறிய பின் இங்கிருந்த டி.என்.ஏ. எனப்படும் தமிழ்தேசிய இராணுவத்தைச் சேர்ந்த 1200 தமிழ் இளைஞர்களை பிரபாகரனின் உத்தரவின்பேரில் பதினெட்டு நாளில் நாங்கள் கொன்றோம். பல தமிழ்த் தலைவர்களின் கொலைகளுக்கு முழுக்காரணமும் பிரபாகரன்தான்’ என்று கருணா கூறியிருக்கிறாரே?

“யாழ்ப்பாண முஸ்லிம்கள் எமது சகோதரர்கள். எம்முடன் இரத்தமும் சதையுமாக வாழ்பவர்கள். எமது விடுதலைப் போராட்டத்துக்குக் களங்கம் ஏற்படுத்த நினைத்த சில தீயசக்திகள்தான் எமது இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி அம்மக்களை வெளியேற்றினர். எங்கள் தலைவர் அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக தூர இடமொன்றில் இருந்தார். இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் மீது பாரிய நடவடிக்கை எடுக்கக் கட்டளையிட்டார். இன்றும் அந்த மக்களை மீளவும் அவர்களது வாழ்விடத்தில் குடியேறுமாறு நாம் கூறிவருகிறோம். ஆனால் யாழ்ப்பாணம் மீண்டும் எங்கள் கட்டுப்பாட்டில் வந்தபிறகே அவர்கள் அங்கு வந்து எம் அரவணைப்பில் வாழ விரும்புவதாகக் கூறுகிறார்கள்.

தமிழ் தேசிய இராணுவத்தில் இருந்த இளைஞர்களையும், கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு எதிராகவும் கருணா எடுத்த நடவடிக்கைகள் பற்றி அங்குள்ள மக்களிடம் கேட்டால் தெரியும். கருணா அரசியல் ஞானமற்ற, பழமைக் கருத்துக்களில் ஊறிய எதையும் இராணுவவாதக் கண்ணோட்டத்துடன் அணுகக் கூடிய நபர். தற்போது அவர் அரசபடைகளின் ஒட்டுக்குழுவாகச் செயல்படுவதையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அவரது சமூக விரோதச் செயல்களுக்காக எமது தலைமைப் பீடம் நடவடிக்கை எடுக்க முயன்றபோதுதான் அவர் தப்பியோடி அரசப்படைகளிடம் சரணடைந்தார். எந்தவித அரசியல் தெளிவோ, கொள்கைப் பற்றோ இல்லாத, தனது சுகபோகங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் ஒரு நபராகவே அவரை நாம் பார்க்கிறோம்.”

`பிரபாகரன் எந்தப் போர்க்களத்திற்கும் வந்ததே இல்லை. பிரபாகரன் ஒரு டம்மி ஆள் போலத்தான்’ என்கிறாரே கருணா? அப்படியா?

“இது அவரது கனவுலக கற்பனைவாத கட்டுக் கதையாகும். எமது தலைவரின் போர்த்திறமையை அரசப்படைகளிள் தளபதிகளே வாயாறப் புகழ்ந்திருக்கிறார்கள். இந்திய அமைதிப்படையின் தளபதிகளும் பாராட்டியிருக்கிறார்கள். கருணாவின் கூற்று சித்த சுவாதீனமற்றர்களின் பேச்சைப் போன்றதாகும்.”

`புலிகளின் ஆள்பலமே கிழக்குப் பகுதிதான். அதை நான் கலைத்து விட்டேன். நான் வெளியேறிய பிறகு புலிகளுக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை’ என்று கருணா கூறியிருப்பது உண்மையா?

“தமிழ் மக்கள் முழுவதும் எம்முடன்தான் இருக்கிறார்கள். கருணா வெளியேறிய பிறகும் நாம் பல வெற்றிகளை அடைந்திருக்கிறோம். அவரது கூற்றைப் பெரிதுபடுத்த வேண்டாம்.”

`தமிழகத்தில் உள்ள தலைவர்கள் அனைவரும் புலிகளுக்காக ஆயுதம் கடத்தி பணம் பெறுபவர்கள்’ என்று கருணா கூறியிருப்பது பற்றி…..?

“ஏலவே நான் கூறியது போல கருணா அரசியல் விவேகமோ, ஞானமோ அற்றவர். எமது விடுதலைக்காக அன்று தொட்டு இன்றுவரை குரல் கொடுத்து வரும் எம் தொப்புள்கொடி உறவுகளான தமிழகத் தலைவர்கள் பற்றி இப்படிக் கருத்துக் கூறியிருப்பதில் இருந்தே கருணா எப்படிப்பட்டவர் என்பதைத் தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”

`இலங்கையில் தமிழ்ப் பொதுமக்களைக் காப்பாற்ற போர்நிறுத்தம் அவசியம். மக்கள் நலனை பிரபாகரன் கருத்தில் கொள்பவர் என்றால் அவர் சரணடைய வேண்டும்’ என்றும் கருணா கூறியிருக்கிறாரே?

“தமிழக மக்களைக் கொன்றழித்து வரும் இராணுவத்தின் கருத்தும், கருணாவின் கருத்தும் இந்த விஷயத்தில் ஒரேமாதிரியாக இருக்கிறது. எமது மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் எம் தலைவரைச் சரணடையுமாறு கோருவது கனவில்கூட நடக்கப் போவதில்லை. அரசின் கைக்கூலியான கருணாவின் இந்தக் கூற்றுபற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.”

கருணாவிற்கு கிழக்கு இலங்கையில் ஆதரவு இருக்கிறதா? அங்குள்ள தமிழர்கள் அவரை வரவேற்கிறார்களா?

“மக்களால் முற்றுமுழுதாக வெறுத்து ஒதுக்கப்பட்டவர் கருணா. முன்பே நான் கூறியது போல மக்கள் விரோதச் செயல்களுக்காக எமது இயக்கம் கருணா மீது நடவடிக்கை எடுக்க முற்பட்ட போதுதான் அவர் தப்பியோடி அரசப்படைகளிடம் சரணடைந்துள்ளார்.”

முல்லைத்தீவில் நிலைமை இப்போது எப்படியிருக்கிறது? இராணுவ சுற்றிவளைப்புக்குள் புலிகள் சிக்கிவிட்டார்கள். போராளிகளின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது’ என்கிறதே இராணுவத் தரப்பு. இதிலிருந்து எப்படி மீண்டெழப் போகிறீர்கள்?

“நாம் எவ்வித முற்றுகைக்குள் இருந்தாலும் எமது மக்களின் சுதந்திரமான சுபிட்சமான வாழ்விற்காக உலகத் தமிழினத்தின் ஆதரவோடு இறுதிவரை போராடி மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை எமக்குண்டு.”

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் திருமாவளவன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். ஒருசில கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள், அமைப்புகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தன. தமிழக மக்களின் இந்த ஆதரவை அங்குள்ள தமிழர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்?

“தமிழக மக்களை இங்குள்ள மக்கள் தமது உடன்பிறப்புகளாகவே, தொப்புள்கொடி உறவுகளாகவே பார்க்கிறார்கள். தாயகத் தமிழகத்தையும், தமிழீழத்தையும் ஒரு சிறிய கடல் நீரேரியே பிரித்து நிற்கிறது. இது வரலாற்று ரீதியாக யாராலும் மறுக்க முடியாத உண்மை.”

இந்தியாவில் மைய அரசியலில் பெரிய கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா `புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்’ என்றும் தமிழீழ மக்களுக்கு ஆதரவு என்றும் பேசி வருகிறதே? அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“எமது விடுதலைப் போராட்டம் நீதியானது, நியாயமானது, தர்மத்தின்பாற்பட்டது என்ற உண்மையை அவர்கள் புரிந்துள்ளார்கள் என்பதாகவே பார்க்கிறேன்”.

மீண்டும் முதல் கேள்விக்குத் தொடர்பான இன்னொரு கேள்விக்கு வருகிறேன். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகை தவிர்க்கப்பட்டு அந்தத் துறையின் செயலாளர் இலங்கை வந்ததை ஏமாற்றமாக எடுத்துக் கொள்ளலாமா? அங்குள்ள தமிழர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?

“இங்குள்ள தமிழர்கள் இந்தியாவிலிருந்து கொழும்பிற்கு யார் வந்தாலும் ஒரே மாதிரியாகவே பார்க்கிறார்கள். இன்னும் விளக்கமாகச் சொல்வதானால் எவ்வளவு திறமை வாய்ந்த இராஜ தந்திரிகள் இங்கு வந்தாலும் அவர்களை சிங்கள இராஜ தந்திரிகள் ஏமாற்றி விடுவார்கள் என்ற கருத்துப்படவே பார்க்கிறார்கள்.”
 
நன்றி: குமுதம்

இலங்கை தமிழர் பிரச்சனையை திருமாவளவன் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சனையாக்கிவிட்டார் – கருணாநிதி

karunanithi.jpgஇலங்கை தமிழர் பிரச்சனையை திருமாவளவன் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சனையாக்கிவிட்டதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ‘முரசொலி’ யில் அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

50 ஆண்டு கால வேதனை வரலாறு கொண்ட இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டில் ஒட்டு மொத்தக் கருத்து என்றும், அதே நேரத்தில் தனித்தனி கட்சிகளின் அணுகுமுறை என்றும், பல்வேறு கோணங்களில் மக்களுக்கு திசைகள் அறிவிக்கப்பட்டு, அவர்களைத் திண்டாட்டத்திலும், திகைப்பிலும் தள்ளி விடப்படுகிற செயல்கள் பஞ்சமில்லாமலே நடைபெற்று வருகின்றன.

அனைத்துக் கட்சிகளை ஒருங்கிணைத்து அறவழியில் எத்தனை எழுச்சியைத் தமிழ் மக்கள் வாயிலாக உணர்த்த வேண்டுமோ, அந்த வழிகளில் எல்லாம் உணர்த்தி விட்டு, பிரதமரையே சந்தித்து, வெளியுறவுத் துறை அமைச்சர், இலங்கை சென்று முயற்சி மேற்கொள்வது என்ற திட்டத்துடன் இந்த அறப்போரில் ஒரு அத்தியாயம் முடிவுற்றது.

ஆனால் அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படாததற்கான காரணங்களை முழுமையாக அறிந்து கொள்ளாத நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகளின் நடவடிக்கைகள் காரணமாக, இது ஏதோ இலங்கைத் தமிழரைப் பாதுகாக்கும் பிரச்சினை என்றில்லாமல், காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சனை என்ற கோணத்தில் திருப்பி விடப்பட்டுள்ளது.

தேர்தல் கூட்டணி, வெற்றி தோல்வி, ஆட்சி மாற்றம் என்பன போன்ற அரசியல் கட்சி தத்துவப் பிரச்சனைகளில் இலங்கைத் தமிழர் பிரச்சனையையும் ஒரு சில தலைவர்கள் இணைத்துக் குழப்புவது, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பிரச்சினையை விட்டு, வெகு தொலைவு போய் விட்டதாகவே தெரிகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை சென்று வருவதற்கு இயலாத காரணம் எதுவும் இருந்தாலும் அதனையும் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கலாம். அல்லது எது தக்க காலம், நேரம் என்பதையாவது எடுத்துரைத்திருக்கலாம். அப்படியெதுவும் நடைபெறாதது, மாநில அரசைப் பொறுத்தவரையில் வேதனையான நிலையாக உணரக் கூடியதுதான்.

இப்போது வெளியுறவுத் துறைச் செயலாளர் இலங்கை சென்று ராஜபக்சேவை சந்தித்துப்பேசி விட்டு வந்துள்ளார். அதன் விபரங்களும் சரியாக வெளிவரவில்லை. ஒருவேளை பிறகு வரக்கூடும். கடந்த காலத்து ஜெயவர்த்தனே-ராஜீவ் ஒப்பந்தம் பரிசீலிக்கப்படலாம் என்பது போன்ற செய்திகள் உள்ளனவே தவிர, அது வரையில் போர் நிறுத்தம் என்று கூட அறிவிக்கப்படவில்லை. போர் சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் என்ற பெயரால் அப்பாவித் தமிழர்கள் அன்றாடம் அங்கே உயிர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜெயவர்த்தனே-ராஜீவ் காந்தி உடன்பாடு பற்றிப் பேசி முடிக்கிற வரையில் போர் நிறுத்தப்படுகிற முயற்சியை மேற்கொள்வதில் பெரிய தவறு ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை.

அந்த ஒப்பந்தம் பற்றிய கருத்துக்களையும், உடன்பாடு பற்றிய எண்ணங்களையும், ஒப்புதலையும் இலங்கைத் தமிழர்கள் மீது இங்கிருந்து நாம் திணித்திட முனைவதில்லை என்ற நிபந்தனையுடன் அணுகுவதே ஆரோக்யமானது மட்டுமல்ல, அமைதி வழியும், அமைதி நிலையும் இலங்கையில் “மறு பிறவி” எடுப்பதற்கு ஏற்றதுமாகும். இது எப்படி உருவாகும், எப்படித் தீர்வாகும் என்ற வினாக்களுக்கு விடை கிடைப்பதற்கு முன்னர் இப்போது நம்மைப் பொறுத்தவரையில், நமது தமிழ் மாநில அரசைப் பொறுத்த வரையில் இதனை மையமாக வைத்து ஏதேனும் விஷப் பரிசோதனைகளில் இறங்கி இதனை வீழ்த்தி விட்டுத் தாங்கள் ஆட்சிக்கு வந்து விடலாமா என்றும் அவர்களோடு சேர்ந்து நாமும் பலன் பெற முடியுமா என்றும் சில மூளைகள் யோசனையில் ஈடுபட்டிருக்கின்றன.

அம்மையார் ஜெயலலிதாவின் அறிக்கைகளில் இந்த ஆண்டு முடிவதற்குள் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மலரும் என்றும், சட்டமன்றத்துக்கும் எப்படியாவது தேர்தல் வரவழைக்க வேண்டும் என்பது தான் அவரது விருப்பம் என்றும், விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வருவதற்கும் அவர் எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருப்பதாக தனது தொண்டர்களுக்கு உறுதி அளிப்பது எதற்காக என்று எல்லோர்க்கும் புரியுமென நம்புகிறேன்.

மாநிலத்தில் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை நீடித்திட வேண்டிய கழக ஆட்சியை, இது போன்ற பிரச்சினைகளில் வன்முறை அராஜகம் போன்ற கிளர்ச்சிகளை உசுப்பி விட்டு, கலைத்து விடலாம் என்று அவர் கருதுகிறார். அப்படிக் கலைத்தால் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக, நாம் மூன்றாவது முறையாக ஆட்சியை இழக்க நேரிடலாம்.

திட்டமிட்டு, இந்த அம்மையார் நடத்திட முனையும் `அரக்கு மாளிகை சதி’யை நாம் புரிந்து கொண்டு தானிருக்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக நாம் மீண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஜனவரி 12ம் நாள் என்னிடம் விவரித்து முடிவெடுக்க வேண்டுமென்று என் வீட்டுக்கு வந்த டாக்டர். ராமதாஸ், கி.வீரமணி, தொல். திருமாவளவன் ஆகிய மூவரும், `முதல்வர் எடுக்கிற முடிவை ஏற்று அவ்வாறு திட்டம் வகுப்போம்’ என்று தான் உறுதி அளித்தனர்.

உடனடியாக டெல்லியுடன் பேசுமாறு வேண்டினர். நானும் அன்று திருமங்கலம் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையைக் கூட கவனிக்க நேரமில்லை. அந்த மூவருடனும் அந்தச் சமயத்திலும் ஒரு மணி நேரம் என்கிற அளவுக்கு பேசி, அனுப்பி வைத்தேன்.

ஆனால் என்னைக் கலந்தே எதுவும் நடவடிக்கை என்று சென்றவர்கள், என்னைக் கலந்து பேசாமலே அந்த மூவரில் ஒருவர், நண்பர் தொல்.திருமாவளவன் தன்னிச்சையாக உண்ணாவிரதம் என அறிவிக்கப்பட்ட நிலையில், உண்ணாவிரதப் பந்தலில், சிங்கள அரசை விட இங்குள்ள காங்கிரஸ் கட்சியுடன் தான் தமக்குப் போராட்டம் என்பது போல விரிவுரைகள் ஆற்றிக் கொண்டிருந்தனர்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையின் உயிரோட்டத்தை எப்படி அங்கே போராளிகளுக்குள் நடந்த சகோதர யுத்தம் பலவீனப்படுத்தியதோ, அதைப் போலவே, இலங்கைத் தமிழர்களுக்காக வாதாடிடும் நமக்குள்ளேயும் `சகோதர யுத்தங்கள்’ எல்லாம் மொத்தப் பிரச்சினையை மூளியாக்கி விடுகிற கதை நடப்பதற்குத் தான் காரணமாகி வருகின்றன.

எப்படியோ, மூவர் கூடி முதல்வருடன் பேசினோமே, அடுத்த நாளே, இப்போது உண்ணா நோன்பு அறிவிக்கிறோமே என்று கூட எண்ணாது, அரசு பேருந்துகள் பல எரிக்கப்பட்டனவே இத் துணை அவசரத்துடன், இப்போது நிறுத்திக் கொண்டிருக்கிறோமே என்பதை சற்றுக் கூட சிந்திக்காமல் `இலங்கை தேசியக் கொடி எரிப்பு’ என்று திருமாவளவன் அறிவித்திருப்பது ஏன் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் அவருக்குப் புரிகிறதோ இல்லையோ, இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமென்று திட்டமிட்டு செயல்படுகிறவர்களுக்கு ஒன்று புரிகிறது.

தமிழ்நாட்டையே ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டத்தை கருணாநிதி நடத்த வேண்டும் என்பதையும், காங்கிரஸ் ஆட்சிக்கு இனி இங்கே இடமே இல்லை என்று சபதம் செய்வதையும், அப்படியொரு ஒட்டு மொத்தமான அராஜகப் புரட்சி மூலமாகவாவது, கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பி விட முடியாதா என்ற கவலை மிகுந்த ஆவலால் தானே தவிர வேறல்ல.

உடன் பிறப்பே கேரளத்து மாவலி மன்னனை வீழ்த்தியோர் கதையை மறந்து விட முடியுமா?

கருணாநிதி வீட்டுக்குப் போகவும் தயார், தமிழர்களின் ஒட்டுமொத்த நல் வாழ்வுக்காக காட்டுக்குப் போகவும் தயார். அது இலை தழை நிறைக் காடாகவும் இருக்கலாம், அல்லால் இடு காடாகவும் இருக்கலாம், எதுவாயினும் ஏற்பதில் எனக்கொரு மகிழ்ச்சியே! அதுவும் என் நாட்டுக்காக-நண்பர்களினால் கிடைத்தால், இரட்டிப்பு மகிழ்ச்சியே!

முதலில் மூவரும் கலந்து யோசிப்போம்-அதில் ஒரு முடிவெடுப்போம் என்பது பின்னர் தனித்தனியே முடிவெடுத்து அறிவித்து அதற்கேற்ப செயல்படுவது, என்னையே இறுதியாகப் பழி கூறத்திட்டமிடுவது நல்ல அரசியல் தந்திரங்களாக இருக்கலாம். அதற்கு நான் ஒருவன் மயங்கி பலிக்கடா ஆகத் தயாராக இருக்கலாம். ஆனால் அறிஞர் அண்ணா அவர்கள் வளர்த்து எம்மிடம் அளித்து விட்டுப் போன இந்த இயக்கத்தை ஆம், ஒரு கோடி உறுப்பினர் கொண்ட இந்த இயக்கத்தை பலியிட முனைவோருக்குத் துணை போக நான் தயாராக இல்லை. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கைப் பிரச்னையில் கருணாநிதியுடன் சேர்ந்து திருமாவளவன் நாடகம்: ஜெயலலிதா

jayalalitha-1701.jpgஇலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் திருமாவளவனும் சேர்ந்து நாடகமாடுவதாக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் தற்போது நிலவும் முக்கியப் பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக முதல்வர் கருணாநிதியும் திருமாவளவனும் சேர்ந்து நடத்திய நாடகம்தான் உண்ணாவிரதப் போராட்டம்.இதனால்,இலங்கையில் போர் நிறுத்தமும் ஏற்படவில்லை இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு எந்தத் தீர்வும் காணப்படவில்லை. தமிழகத்தில் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்தியதும் தமிழகத்தில் உள்ள மக்களை அச்சுறுத்திக் காயப்படுத்தியதும்தான் இந்தப் போராட்டத்தின் பலன்கள்.

நான்கு நாள்களாக பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.உண்ணாவிரதப் போராட்டம் முடிந்த பிறகு, “தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும்” என்று காவல்துறை அறிவித்தது.இதிலிருந்தே இதற்குப் பின்னணியில் திமுக இருப்பது தெளிவாகியுள்ளது.

ஐந்து லட்சம் இலங்கைத் தமிழர்கள் மரணத்தின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்போது,குடும்பத்துடன் மகிழ்ச்சியாக புத்தாண்டு கொண்டாடினார் முதல்வர் கருணாநிதி.இதுபோன்ற கண்துடைப்பு நாடகங்களைக் கண்டு தமிழக மக்கள் இனியும் ஏமாறக்கூடாது. இவ்வாறு ஜெயலலிதா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகமே ஸ்தம்பித்துப் போகும் அளவுக்கு 10 நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படும் – டாக்டர் ராமதாஸ்

இலங் கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகமே ஸ்தம்பித்துப் போகும் அளவுக்கு 10 நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

நேற்று மாலை பழச்சாறு கொடுத்து திருமாவளவனின் உண்ணாவிரதப் போராட்டத்தை டாக்டர் ராமதாஸ் முடித்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி, நான் நேற்று இதே மேடையில் கேட்டுக்கொண்டேன். அதற்கு திருமாவளவன், இன்று போய் நாளை வா என்று கூறிவிட்டார். ஆகையால் இன்று வந்து இருக்கிறேன். இன்று வெறுமனே போகமாட்டேன். பழச்சாறு கொடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்து வைத்து விட்டுத்தான் செல்வேன்.

இலங்கை பிரச்சினை தொடர்பாக திருமாவளவன் மற்றும் அரசியல் கட்சிகளுடன் பேசி, அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக நல்ல முடிவை எடுப்போம். அடுத்த கட்ட போராட்டம் என்பது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் நடக்க வேண்டும். உலகையே உலுக்க வேண்டும்:

இந்த போராட்டத்தால் தமிழகமே செயலிழக்க வேண்டும். பேருந்து, தொடருந்து எதுவும் ஓடக்கூடாது. மருந்து, பால் விநியோகம் மட்டுமே நடக்க வேண்டும். இந்த போராட்டம் உலகையே உலுக்க வேண்டும். இதை பார்த்துவிட்டு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்.

இது எனது தனிப்பட்ட முடிவு. திருமாவளவனுக்கு கூட நான் இப்படி ஒரு போராட்டத்தை கூறுவேன் என்பது தெரியாது. இதைவிட வேறு விதமான நல்ல போராட்டத்தை முதலமைச்சர் கூறினால், இதனை விட்டு விட்டு, முதல்வர் கூறும்படி போராட்டம் நடத்தலாம். முதல்வரை முன்நிறுத்தி, அவரது வழிகாட்டுதலின் பேரில் ஒரு நல்ல போராட்ட முடிவை எடுக்க வேண்டும்.

தமிழக முதல்வர், கோட்டை மற்றும் அறிவாலயத்தில் கூட்டம் போடாமல், பொதுவான இடத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் போட்டு, அதில் நாங்கள் முன்மொழிய, மற்ற கட்சிகள் வழி மொழிய செய்தால் சிறப்பாக இருக்கும்.

புலிகள் தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல – ஜெயலலிதா –

jayalalitha-1701.jpgவிடுதலைப் புலிகள்தான் இலங்கை தமிழர்களின் ஒரே பிரதிநிதி என்பதை நாங்கள் நம்பவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். சென்னையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் நிருபர்களுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டி:

கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சனைக்காக திருமாவளவன் 3வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார். அவரை உங்கள் கூட்டணி கட்சியினரான மதிமுக, சிபிஐ, சிபிஎம் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவளித்துள்ளனர். இதில் உங்கள் நிலைப்பாடு என்ன?

ஜெயலலிதா: இலங்கை பிரச்சனையைப் பொறுத்தவரை எங்களுக்கென்று தனிக்கொள்கை உண்டு. எங்கள் கூட்டணியில் சில கட்சிகள் இருந்தால், அவர்கள் அனைவருக்குமே எல்லாப் பிரச்சனையிலும் ஒருமித்த கருத்து இருக்க முடியாது. அவரவருக்கும் ஒரு கொள்கை உண்டு. இந்த உண்ணாவிரதம் கருணாநிதியும் திருமாவளவனும் பேசி வைத்துக் கொண்டு நடத்தும் நாடகம்.

கேள்வி: இலங்கை விஷயத்தில் உங்கள் கட்சியின் நிலை என்ன? மத்திய அரசு இதில் தலையிட வேண்டுமா? கூடாதா?

ஜெயலலிதா: இதுகுறித்து நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். மற்ற நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சனையில் எந்த நாடும் தன்னிச்சையாக தலையிட முடியாது. இலங்கை பிரச்சனையைப் பொறுத்த அளவில் அங்குள்ள தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும். கௌரவமான வாழ்வு அமைய வேண்டும். சிங்கள மக்களைப் போலவே சுதந்திரமான உரிமைகளோடு தமிழ் மக்களும் வாழவேண்டும் என்பது தான். ஆனால் பயங்கரவாதத்தை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. இதை பல நாடுகளும் அறிவித்துள்ளன. பல நாடுகளில் தடையும் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கான ஒரே பிரதிநிதி விடுதலைப் புலிகள்தான் என்பதை நாங்கள் நம்பவில்லை.

கேள்வி: போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறார்களே?

ஜெயலலிதா: கருணாநிதியும் திருமாவளவனும் தொடர்ந்து போர் நிறுத்தம் என மக்களை ஏமாற்றுகிறார்கள்.

கேள்வி: 1983ம் ஆண்டில் எம்ஜிஆர் விடுதலைப் புலிகளை முழுமையாக ஆதரித்தாரே?

ஜெயலலிதா: அப்போதிருந்த நிலை வேறு. இப்போதுள்ள நிலைமை வேறு.

கேள்வி: ஈழத் தமிழர்கள் அங்கு கொல்லப்பட்டு வருகிறார்களே?

ஜெயலலிதா: ஈழம் என்ற ஒரு நாடே இல்லை. அவர்கள் எல்லோரும் இலங்கைத் தமிழர்கள்தான். எங்கு யுத்தம் நடந்தாலும் அங்கு அப்பாவி பொதுமக்கள் சிலர் கொல்லப்படுவார்கள். இலங்கையில் தமிழர்களை கொல்ல ராணுவம் எண்ணவில்லை. போர் நடக்கும் போது அப்பாவிகளும் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதி விலக்கு அல்ல. இப்போது இலங்கையில் என்ன நடக்கிறது என்றால் அங்குள்ள தமிழர்கள் பாதுகாப்பான இடம் தேடி செல்ல முடியவில்லை. அவர்களை புலிகள் பிடித்து வைத்து, ராணுவத்திற்கு முன் கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே விடுதலைப் புலிகள் நினைத்தால், அப்பாவித்தமிழர்களை சாவிலிருந்து காப்பாற்ற முடியும்.

கேள்வி: ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற பிரச்சனையை மறைப்பதற்காகத்தான் இந்த நாடகமா?

ஜெயலலிதா: ஆமாம். நிச்சயமாக அதுதான் காரணம். சத்யம் என்கிற தனியார் நிறுவனத்தில் ரூ. 7,000 ரூபாய் மோசடிக்கே அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கிறது. போலீசார் ஐபிசியின் கீழ் வழக்குப்பதிவு செய்து முன்னாள் தலைவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் அரசு பணம் எதையும் களவாடவில்லை. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் இந்திய அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வரையிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனியார் மீது வேகமாக நடவடிக்கை எடுத்தவர்கள் இதில் தொடர்புடைய மத்திய அமைச்சர் மீதோ, அதற்கு உடந்தையானவர்கள் மீதோ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

கேள்வி: சத்யம் நிறுவனத் தலைவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். ஆனால் மத்திய அமைச்சர் ராஜா ஒப்புக் கொள்ளவில்லையே?

ஜெயலலிதா: உங்கள் கேள்வியே தவறு. ஏற்கனவே சந்தனக்கடத்தல் கொள்ளையன் உட்பட பலர் தவறு செய்தார்களே? அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகா அரசு நடவடிக்கை எடுத்தது?

கேள்வி: சத்யம் நிறுவன ஊழலில் அரசியல்வாதிகளும் உடந்தை என சொல்லப்படுகிறதே?

ஜெயலலிதா: யாராக இருந்தாலும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் என்னுடைய கேள்வி என்பது தனியார் நிறுவனத்தின் ரூ. 7,000 கோடிக்கே நடவடிக்கை எடுத்த அரசு ஒரு லட்சம் கோடி அரசுப் பணம் முறைகேட்டின்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான்.

கேள்வி: அதிமுக கூட்டணிக்கு பாமகவுக்கு அழைப்புண்டா?

ஜெயலலிதா: நிச்சயம் எங்கள் கூட்டணி மேலும் வலுப்பெறும். போகப் போக அது உங்களுக்குத் தெரியும்

கேள்வி: பாஜக உங்கள் அணிக்கு வருமா?

ஜெயலலிதா: ஏற்கனவே இதற்கு பதிலளித்து விட்டேன். வீணாக என்னை வம்புக்கு இழுக்க முடியாது. என்னை யாரும் கோபப்படுத்த முடியாது.

கேள்வி: வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்துக்கும் தேர்தல் வருமா? நீங்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?

ஜெயலலிதா: நான் ஏற்கனவே எம்எல்ஏ மற்றும் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை.

கேள்வி: சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வருமா?

ஜெயலலிதா: சட்டமன்றத்துக்கும் தேர்தல் எப்படியாவது வரும். வரவழைப்போம். எப்படியாவது அது வரும்வரை ஓயாது செயல்படுவோம். ஏனென்றால் நாடு விடுதலை அடைந்த பிறகு இந்த அளவுக்கு மிக மோசமான ஊழலாட்சி தமிழகத்தில் நடந்ததில்லை. வரலாறு காணாத ஊழல் ஆட்சியாக திமுக ஆட்சி நடக்கிறது. முதல்வரும் செயல்படவில்லை. கையாலாகாத்தனம், நிர்வாக திறமையின்மை தினமும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒரு குடும்பம்… குடும்பம் என்றும் சொல்ல மாட்டேன். ஒரு வன்முறை கும்பல் தமிழகத்தையே வேட்டை காடாக்கி வருகிறது. நிர்வாகத்தில் துளியும் அக்கறை இல்லாமல் தமிழகத்தை வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த குடும்பத்தின் ஆட்சியை அகற்றி அழிவுப் பாதையிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு என்ன வழியோ அதற்கான வேலைகளில் நாங்கள் ஈடுபடுவோம். திமுக ஆட்சியை அகற்றி நிச்சயம் எங்கள் இலக்கை அடைவோம் என்றார் ஜெயலலிதா.

நன்றி: வன் இந்தியா

திருமா உண்ணாவிரதம்: பல இடங்களில் வன்முறை, பஸ்கள் எரிப்பு-உடைப்பு

thirumavalavan-1601.jpgவிடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் தமிழகத்தி்ல் பல்வேறு மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தொடர் உண்ணாவிரம் இருந்து வருகிறார்.

சென்னை மறைமலை நகரில் உண்ணாவிரதம் இருந்து வரும் திருமாவளவனுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான விடுதலைச் சிறுத்தை தொண்டர்கள் அங்கு கூடியுள்ளனர். இதற்கிடையே மதுரை, கடலூர், சேலம், புதுச்சேரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.

மதுரை புறநகர் பகுதியில் 3 அரசு பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டது. மதுரையில் இருந்து மாத்தூர் சென்ற அரசு டவுன் பஸ் மீது குருத்தூர்பட்டி என்ற இடத்தில் ஒரு கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பஸ் தீ பிடித்துக் கொண்டது. பயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் தப்பினர். அலங்காநல்லூரில் இருந்து அழகர்கோவில் சென்ற பஸ்சை சத்திரப்பட்டி அருகே சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர். இதில் பஸ் முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது. கும்பல் பஸ்சை மறித்ததுமே பயணிகள் இறங்கிவிட்டதால் உயி்ர்ச் சேதம் ஏற்படவில்லை.

மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து அலங்காநல்லூருக்கு நேற்று இரவு டவுன் பஸ் போய்க்கொண்டிருந்தது. அப்போது, மாலப்பட்டி என்ற இடத்தில் பஸ்சை மறித்த ஒரு கோஷ்டியினர், பயணிகளை கட்டாயப்படுத்தி கீழே இறக்கினர். பின்னர் பஸ்சுக்கு தீவைத்து விட்டு தப்பினர். அதே போல மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு ஆங்காங்கே அரசு பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது. அண்ணாநகர், செல்லூர், ஒத்தக்கடை, கோரிப்பாளையம், செக்கானூரணி, கே.புளியங்குளம், அவனியாபுரம் ஆகிய இடங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட பஸ்கள் கல் வீச்சில் சேதமடைந்தன.

பழனியில் இருந்து மதுரைவந்த அரசு பஸ்சை சமயநல்லூர் ரயில்வே மேம்பாலம் அருகே நேற்றிரவு ஒரு கும்பல் வழிமறித்து கல்வீசி தாக்கியது. பின்னர் பயணிகளை இறங்கச் சொல்லிவிட்டு அதன் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் பஸ்சின் இருக்கைகள் எரிந்து நாசமாயின. இதனால் மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேர பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று காலையில் மீண்டும் பஸ்கள் ஓடத் தொடங்கின.

இந் நிலையில் இன்று காலையும் சில இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. பண்ருட்டி மற்றும் கடலூர் பகுதிகளில் 18 பஸ்கள் கல் வீச்சில் சேதமடைந்தன. காராமணி குப்பம் அருகே பஸ் மீது கல்வீசப்பட்டதில் அந்த பஸ்சில் பயணம் செய்த சுகுணா என்ற கர்ப்பிணி காயமடைந்தார்.

பண்ருட்டியில் இருந்து கடலூர் சென்ற அரசு டவுன் பஸ், கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே வந்தபோது ஒரு கும்பலால் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பஸ்சின் பின் பக்க டயர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் பஸ் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதையடுத்து டிரைவரும், கண்டக்டரும் பயணிகளை கீழே இறங்குமாறு கூறி இறக்கி விட்னர்.

இதையடுத்து அக்கும்பல் பஸ் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது.  இந்த சம்பவங்களையடுத்து கடலூரில் நேற்றிரவு 10 மணிக்கு மேல் பெருமபாலான பஸ்கள் நிறுத்தப்பட்டன. பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் 2வது நாளாக பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் பஸ்கள் உடைப்பு தொடர்பாக 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதே போல மேட்டூரை அடுத்த கொளத்தூரில் நேற்று மாலை அரசு பஸ் உடைத்து நொறுக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் அரூர் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன. அரூரில் இருந்து ஊத்தங்கரை சென்ற தனியார் பஸ் மீது தீர்த்தமலை அருகே சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
புதுவையில் இருந்து சென்னை புறப்பட்ட தமிழக அரசு பஸ்சை புதுவையில் அண்ணாசிலை அருகே சிலர் மறித்தனர். இதையடுத்து டிரைவர் மாற்றுப்பாதையில் பஸ்சை ஓட்டினார். அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் பஸ் மீது கல்வீசியும், இரும்பு பைப்களாலும் தாக்கி உடைத்தனர்.

சென்னையில் பெரியார் நகரில் இருந்து பிராட்வேக்கு நேற்று இரவு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. கேசவ பிள்ளை பூங்கா பகுதியில் நடராஜ் தியேட்டர் எதிரே பஸ்ஸை வழி மறித்து சிலர் தாக்கினர். இதில் பஸ்சின் பின் புற கண்ணாடி உடைந்தது. இதற்கிடையே கடலூர் மாவட்ட பஸ்களில் ”உண்ணாவிரதம் இருக்கும் திருமாவளவனை காப்பாற்று” என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நன்றி: தட்ஸ்  இந்தியா (17.01.2009)

புலிகளுடன் தமிழக தலைவர்கள் ஆயுத வியாபாரம் – தினமலர் பேட்டியில் கருணா அம்மான்

karuna.jpgபுலிகளுக்குத் தேவையான பயங்கர ஆயுதங்களை தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள், தமிழகத்தில் இருந்து கடல் வழியாகக் கடத்தப்படுகின்றன. இந்த கடத்தலின் பின்னணியில் தமிழகத்தில் புலி ஆதரவு பேசும் தலைவர்கள் இருக்கின்றனர். கடத்தலை முறியடிக்க இலங்கை ராணுவம் முயலும் போது தான், தமிழகத்தின் அப்பாவி மீனவர்களும் பாதிக் கப்படுகின்றனர்,” என்று புலிகள் இயக்கத்தில் ராணுவப் பொறுப்பில் இருந்த கருணா அம்மான் தினமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தப் பேட்டியின் முதலாம் கட்டம் கீழே தரப்பட்டுள்ளது

thina-malar.pngவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் ராணுவத் தளபதியாக இருந்தவர் கருணா அம்மான். இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில், விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற பெயரில் பிறந்த இவர், ’83ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் சேர்ந்து, கருணா அம்மானாக மாறினார். படிப்படியாக உயர்ந்து புலிகளின் ராணுவப்பிரிவு தலைமை தளபதியாக இருந்து, இலங்கை அரசுப் படைக்கு எதிராக போர்க்களங்களில் நின்றவர். இலங்கையின் வடக்குப்பகுதி முழுவதையும், போர் நடவடிக்கையால் புலிகள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர். தற்போது, இலங்கை ராணுவ வசமாகியுள்ள கிளிநொச்சி, ஆனையிறவு போன்ற பகுதிகளில் இருந்த ராணுவ முகாம்களை தாக்கி அழித்து அவற்றை புலிகள் கட்டுப் பாட்டில் வைத்திருந்தார். பிரபாகரனோடு ஏற்பட்ட மோதலால், 2004ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய இவர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (டி.எம்.வி.பி.,) என்ற அமைப்பைத் துவக்கினார். இலங்கை கிழக்கு மாகாணத்தில் இவரது கட்சி தான் தற்போது ஆட்சியில் உள்ளது. இலங்கை அரசில் நியமன எம்.பி.,யாக பதவியில் உள்ளார். இவர், புலிகளின் ராணுவத் தளபதியாக இருந்த போது பிடித்த பகுதிகள் முழுவதும் இப்போது மீண்டும் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. இலங்கையில் புலிகளின் நிலைக்களங்களை ராணுவம் முழுவதுமாக அழித்து, உள்நாட்டுப் போர் முடிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையில் கடுமையான பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு இடையே, “தினமலர்’ இதழுக்கு அவர் அளித்த விரிவான பேட்டி:

உங்கள் குடும்ப பின்னணி பற்றி…

இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் வயல்களின் ஊடாக இருக்கிறது எனது சொந்த கிராமம்; அருகில் கடலும் உண்டு. அப்பா விவசாயி. சொந்தமாக நிலம் இருந்தது. அம்மாவின் குடும்பத்தில் அனைவரும் படித்தவர்கள். நாங்கள் ஐந்து பேர். நான் கடைசியாக பிறந்தவன். எங்கள் அனைவரையும் அப்பா நன்கு படிக்க வைத்தார். படித்து பட்டம் பெற்று அனைவரும் நல்ல நிலையில் இருக்கின்றனர். குடும்பத்தில் எதற்கும் குறைவில்லாமல் மகிழ்ச்சியாகவே இருந்தது.

இலங்கைத் தமிழர் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு நேரடியான பாதிப்புகள் எதுவும் உங்களுக்கு இருந்ததா?

இது பற்றி விரிவாக சொல்ல வேண்டும். ’83ம் ஆண்டு குடாநாட்டில் அரசியல் ரீதியான போராட்டங்கள் தீவிரமாகியிருந்தன. ஆதே ஆண்டு ஜூலை 23ம் தேதி நடந்த போராட் டத்தின் போது, 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் இலங்கை முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழர்களுக்கு எதிராக துவேஷங்கள் விதைக்கப்பட்டன. அப்போதைய சிங்கள அரசியல்வாதிகள் இப்பிரச்னையை மிகவும் மோசமாக கை யாண்டு, இனமோதலை உருவாக்கினர்; இலங்கையில் கலவரம் வெடித்தது. கிட்டத் தட்ட ஐந்தாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்; உடைமைகள் நாசமாக்கப்பட்டன. கொழும்பில் கலவரம் தீவிரமாக இருந்தது. கலவரத்தில் சிதைந்து போன பல குடும்பங்கள், எங்கள் பகுதிக்கு அகதிகளாய் தஞ்சம் வந்தனர். அவர்கள் சொன்ன விஷயங்கள் கடுமையான அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தின. இலங்கை முழுவதும் கொந்தளிப்பான நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பு இது தொடர்பான துண்டு பிரசுரங்களை கிராமங்கள் தோறும் வெளியிட்டு பிரசாரம் செய்தது. அதில் இருந்த விஷயங்கள் எங்களை ஈர்த்தன. இதைத் தொடர்ந்து எங்கள் பகுதியில் இருந்து 20 இளைஞர்கள் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தோம். உடனடியாக பயிற்சிக்காக வல்வெட்டித்துறையில் இருந்து, தமிழகத்தின் கோடியக்கரைக்கு படகில் அனுப்பினர். அங்கிருந்து மதுரை சென்றோம். அங்கு தான் பிரபாகரனை சந்தித்தோம். சேலம், கொளத்தூரில் இருந்த மையத்தில் தான் நான் பயிற்சி எடுத்தேன். இந்திய அரசு எங்கள் போராட்டத்தை ஆதரித்து, எல்லாவகை உதவியையும் செய்ததை இப்போதும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

நீங்கள் புலிகளுடன் சேர்ந்த காலத்தில் இலங்கையில் பல்வேறு விடுதலை இயக்கங்கள் தோன்றியிருந்ததே…

பிளாட், ஈரோஸ், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., என்று பல அமைப்புகள் இருந்தன. இவை எல்லாமே இந்தியாவில் உதவி பெற்றன. ஆனால், இவைகளில் இல்லாத அமைப்பு ரீதியான ஒழுக்கம் புலிகள் இயக்கத்தில் இருந்தது. குடிப்பது, பெண்கள் மீதான தவறான கண்ணோட்டம் போன்ற பல்வேறு விஷயங்களில் தீவிரமான தனி மனித ஒழுக்கத்தை கடைபிடித்தது. எங்கள் குடும்பம் ஏற்கனவே கட்டுப்பாடு ஒழுக்கத்தை அதிகமாக வலியுறுத்தியது. இந்த பின்னணியால் தான் புலிகள் இயக்கத்தை தேர்ந்தெடுத்தேன்.

ஒழுக்கமான இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தில் தங்கியிருந்த போது, பல நேரங்களில் தங்களுக்குள் மோதிக் கொள்வதும், பொதுமக்களுடன் மோதிக்கொள்வதையும் நடைமுறையில் கடைபிடித்தார்களே. 1986ம் ஆண்டு தீபாவளியன்று சென்னை சூளைமேட்டில் சாலையில் சென்றவர்களை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்களே. பாண்டி பஜாரில் துப்பாக்கியால் மோதிக்கொண்டார்களே…

உண்மை தான். விடுதலை இயக்கம் என்று இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்டு, சகல உதவிகளையும் பெற்ற நாங்கள், அதன் பின் தான் உலக நாடுகள் பலவற்றாலும் விடுதலைப் போராளிகள் என்று அங்கீகரிக்கப்பட்ட நாங்கள், எப்படி பயங்கரவாதிகளாக மாற்றம் பெற்றோம் என்பதை சொல்ல வேண்டும்.விடுதலை இயக்கமாக அங்கீகரிக்கப்பட்டதை, அமைப்பின் தலைவராக இருந்த பிரபாகரன் முறையாகப் பயன்படுத்தவில்லை. அவரது எதேச்சதிகாரமான போக்கும், ஆணவமும், வரட்டு கவுரவமும் இதை பயங்கரவாத இயக்கமாக மாற்றியது.இந்திய அமைதிப்படையை அனுப்பி சமாதான முயற்சி நடந்தபோது, பல்வேறு பிரச்னைகள் நடந்தன. அவற்றை அத்துடன் விட்டிருக்க வேண்டும். ஆனால், நன்றி மறந்து, இந்தியாவுக்குள் புகுந்து, அங்கு ராஜிவ் காந்தியை கொலை செய்துவிட்டார். இப்படித்தான், இயக்கத்தை எதேச்சதிகாரமாக பயங்கரவாத இயக்கமாக மாற்றிவிட்டார்.

ராஜிவ்காந்தியை கொலை செய்வது பற்றிய முடிவு எடுத்த போது நீங்கள் உடன் இருந்தீர்களா? அப்போது இயக்க ரீதியாக விமர்சனங்கள் சொல்லப்படவில்லையா?

தெரியவே தெரியாது. ஆண்டன் பாலசிங்கத்துக்குக் கூட தெரியாது.

கொலை நடந்து முடிந்த உடனேயாவது தெரியுமா?

அப்போதும் தெரியாது. பின்னர், சிவராசன் ஆட்கள் பெங்களூரில் பிடிபட்டார்களே, அதுக்குப்பிறகு தான் இயக்கத்தில் அனைவருக்கும் தெரிந்தது. சிவராசனை அனைவருக்கும் தெரியும் என்பதால், இதை இயக்கம் தான் செய்தது என்று தெரிந்தது. தொடர்ந்து இயக்கத்தில் அது தொடர்பான விமர்சனங்கள் எழுந்தன. நானும் எனது கருத்தை தெரிவித்தேன். விடுதலைக்காக இயங்கிக் கொண்டிருக்கும் நாம், இது போன்ற செயல்களை செய்வது தேவையற்றது. இது இயக்கத்தை பாதிக்கும் என்று சொன்னேன். பிரபாகரன் அதை நியாயப்படுத்தினார். அமைதிப்படை செய்த காரியம் சரியல்ல… “தமிழ்ப் பெண்களை அவர்கள் கற்பழித்தனர்’ என்று, பல விஷயங்களைச் சொல்லி நியாயப்படுத்தினார். மற்றொரு நாட்டில் சென்று ஒரு தலைவரை கொல்வது நியாயமான செயல் அல்ல; இதை எந்த நாட்டுக்காரனும் ஏற்கமாட்டான் என்று சொன்னேன். அதை அவர் ஏற்காமல் மழுப்பி விட்டார்.

இந்த காரணத்தை முன்வைத்து இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யாரும் உண்டா?

அப்படி யாரும் இல்லை. ஆனால் இனி இந்தியாவின் உதவி கிடைக்காது என்பது தெளிவாக தெரிந்தது. அதன்பின் தான், ஐரோப்பிய நாடுகளில் உதவி தேடப்பட்டது. தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன.

இயக்கத்தை நடத்துவதற்கும், ஆயுதங்கள் வாங்குவதற்கும் பணம் வேண்டுமே. எந்த உற்பத்தியையும் சாராமல் இருந்த அமைப்புக்கு பணம் எப்படி வந்தது?

ஈழத் தமிழர்கள் அறிவாளிகள். பொருளீட்டுவதற்காக அவர்கள் பல நாடுகளுக்கும் சென்றனர். 40ம் ஆண்டு வாக்கிலே, ஐரோப்பிய நாடுகளில் குடியேறி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டவர்கள் ஏராளம். ’83ம் ஆண்டு கலவரத்துக்குப்பின், வெளியேறி, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா என்று வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் ஏராளம். இவர்கள் மத்தியில் பிரசாரம் செய்து புலிகள் பணம் திரட்டினர். கண்டிப்பாக பணம் தரவேண்டும். அவர்கள் பற்றிய பட்டியல் இயக்கத்தில் இருந்தது. கண்டிப்பாக அவர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டது.

போராட்டத்துக்கான ஆயுதங்களை வாங்குவதற்கு பேரங்கள் நடத்தியது யார்?

கிழக்காசிய நாடுகளில் இருந்து தான் முதலில் ஆயுதங்கள் வாங்கப்பட்டன. கே.பி.என்., என்ற கே.பத்மநாபன் தான் ஆயுத பேரம் நடத்தியவர். கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து நாடுகளில் தான் வியாபாரிகளுடன் பேசி ஆயுதங்களை வாங்கி அனுப்புவார். அதன்பின், உக்ரேன் நாட்டில் இருந்து ஆயுதங்கள் வாங்கப்பட்டன. சீன தயாரிப்புகளும், உக்ரேன் கம்பெனிகள் மூலம் எங்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்தன.

ஆயுதங்களை சிக்கலின்றி எப்படி கொண்டு வந்தீர்கள்?

வெளிநாடுகளில் உள்ள வர்த்தக கம்பெனிகள் பெயரில் உள்ள கப்பல்களில் அனுப்புவர். அதை யாரும் கண்டுபிடிக்க முடியாது. பெரும்பாலும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் பெயரில் இருந்த கப்பல்களில் தான் ஆயுதங்கள் வந்தன. பல நேரங்களில் உபயோகத்துக்கு இனி உதவாது என்ற நிலையில் உள்ள கப்பல்களில் தான் ஆயுதங்கள் கொண்டுவரப்படும். அத்துடன் அந்த கப்பல் அங்கேயே கிடக்கும்.

தமிழகத்தில் உள்ள தமிழர்கள் யாராவது ஆயுத ரீதியாக உதவி செய்திருக்கிறார்களா?

தமிழகத்தில் இருந்து ஆயுத ரீதியாக பல உதவிகள் கிடைத்திருக்கின்றன. வெடி பொருட்கள், கண்ணிவெடி செய்வதற்கான மூலப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து பலர் கடத்தி தந்துள்ளனர். அலுமினியம் பவுடர், பைபர் பிளாஸ்டிக் மெட்டரீயல் போன்றவையும் தமிழகத்தில் இருந்து கொண்டு வருவார்கள். அது இப்போது வரை கடத்தப்பட்டது. மன்னார் வளைகுடா வழியாத்தான் அதைக் கொண்டு வருவார்கள். இதை, இலங்கை ராணுவம் தற்போது தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. எனவே இனி கடத்தல் நடத்துவது கடினம்.

தமிழகத்தில், புலி ஆதரவு பேசும் தலைவர்களுக்கு இந்த ஆயுதக் கடத்தல் பேரத்தில் தொடர்பு இருந்ததா?

இருந்தது. இந்த கடத்தலின் ஊடாகத்தான், நெடுமாறன் வந்திருக்கிறார். வைகோ வந்திருக்கிறார். எல்லாரும் இல்லீகலாகத்தான் வந்தனர்; கள்ளத்தோணியில் தான் வந்தனர்.

ஆயுத கடத்தல் ரீதியான நேரடி தொடர்பு தமிழக தலைவர்களுக்கு இருக்கிறதா?

இருக்கிறது; பணம் விடுதலைப் புலிகளால் வழங்கப்படுகிறது. இதுதான் உண்மையான விஷயம். தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாகக் கூறும் பலத் தலைவர்களுக்கும் அந்த சப்போர்ட் தான், ஆயுதம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் கடத்துவதற்கு உதவியாக உள்ளது. இதில் கிடைக்கும் பணம் தான் இவர்களை, புலிகளுக்கு ஆதரவாக பேச வைக்கிறது.

பணம் நேரடியாக தமிழகத் தலைவர்களுக்கு போய்ச் சேர்ந்ததா?

இல்லை. மீனவர்கள் போர்வையில் ஆயுத தயாரிப்புக்கான மூலப்பொருள் கடத்தப்படுகிறது. தமிழகத்தில் பல ஏஜென்டுகள், மீனவர்கள் போர்வையில் இதைச் செய்கின்றனர். இந்த ஏஜென்டுகளுக்கு பின்னணியில் புலி ஆதரவு பேசும் தமிழகத் தலைவர்கள் இருக்கின்றனர். அவர்கள் மூலமாக பணம் தாராளமாக போய் சேர்கிறது. இப்படி வரும் மூலப் பொருட்களை இலங்கை கடற்படை மடக்கிப் பிடிக்கிறது. இந்த கடத்தலை தடுக்கும் பொருட்டுத்தான், அடிக்கடி துப்பாக்கிச் சூடுகள் நடக் கின்றன. இலங்கை கடற்படை அனைவரையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பதால் தமிழகத்தில் பல அப்பாவி மீனவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இலங்கையில் தமிழர் வாழ்க்கை இவ்வளவு நெருக்கடிகளை சந்திக்க யார் காரணம்? இன்றைக்கு இலங்கையில் இந்த அழிவுகளும் விளைவுகளும் யாரால் நடக்கிறது? அது பிரபாகரனால் தானே நடக்கிறது. இதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவருடன் நான் 22 ஆண்டுகள் இருந்திருக்கிறேன். ராணுவத்துடனான அனைத்து சண்டைகளையும் நான் தான் நடத்தினேன். அவர் ஒரு முறை கூட போர்க்களத்துக்கு வந்தது கிடையாது. பிரபாகரன் என்றால் ஒரு டம்மி ஆள் போலத்தான். அரசியல் ரீதியாக முதிர்ச்சியடைந்த நபராக மாற்றுவதற்கு நாங்கள் முயற்சி செய்தோம். குறிப்பாக நானே அவரிடம் நேரடியாக பலமுறை பேசியுள்ளேன். நான் ஒருவன் தான் அப்போது அவரிடம் பேச முடியும். இயக்கத்தின் செயல்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். கொள்கைகளை மாற்ற வேண்டும். தனிநபர்களை கொல்வதை நிறுத்த வேண்டும்; பொதுமக்களை கொல்வதை நிறுத்த வேண்டும் என்று சொன்னேன். சிங்கள மக்களை கொலை செய்வதை நிறுத்த வேண்டும்; முஸ்லிம் மக்களுடன் இணக்கம் வேண்டும் என்று சொன்னேன்.

புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்களே…

இது பிரபாகரனின் பாசிச மனநிலை. தான் என்ற அகங்காரத்தில் எடுத்த முடிவு. கிழக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய போது நான் கடுமையாக எதிர்த்தேன். அங்கே தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் சேர்ந்து வாழ்கின்றனர். ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதை வலியுறுத்தி சொன்னேன். எதையும் கேட்கவில்லை. யாழ்ப்பாணம் பகுதியில் இருந்த முஸ்லிம்களை விரட்டியடித்தனர். வீடுகளில் இருந்த பொருட்களை சூறையாடினர். வர்த்தக மையங்களை கொள்ளையடித்து பொருட்களை தெருவில் போட்டு விற்றனர். நூறு கோடி ரூபாய்க்கு மேல் இப்படி பொருட்கள் விற்கப்பட்டது. ஒரு பொருளை கூட எடுத்துச் செல்வதற்கு அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இப்போது போர்க்களத்தில் நிற்கிற பானு என்பவர் தான் சூறையாடுவதற்கு தலைமை ஏற்றவர். இவையெல்லாம் மறையாத வடுக்கள். இவற்றையெல்லாம் தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழர் பிரச்னையை தீர்க்க பல வாய்ப்புகள் இருந்தன. பேச்சுவார்த்தைக்கு சாதகமான சூழ்நிலைகள் இருந்தன. இவை எதையும் பிரபாகரன் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பேச்சுவார்த்தைகளுக்கும் வாய்ப்பு அளிக்கவில்லை.

நீங்கள் இயக்கத்தை விட்டு வெளியேறுவதற்கு இவைதான் காரணமா…

நான் வெளியேறுவதற்கு பல காரணங்கள் இருந்தன. 22 ஆண்டுகள் நான் போர்க்களத்தில் இருந்துள் ளேன். சண்டைகளுக்கு தலைமை ஏற்றிருந்தேன். ராணுவப் பொறுப்பாளராக நான்தான் இருந்தேன். அமைப்பில் 25க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு பொறுப்பாளர் இருந்தனர். அயல்நாட்டு உறவுக்கு என்று கூட பிரிவு இருக்கிறது. ராணுவத்துக்கு நான் தான் தலைமை பொறுப்பாளன். ஒரு நாட்டின் ராணுவ அமைப்பு போல் தான் செயல்பட்டோம். 30 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். இதில், ஆறாயிரம் பேர் பெண்கள். ஒரு கட்டத்தில், அரசியல் தீர்வுக்கு வாய்ப்பு இருக்கும் போது ஏன் போராட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. குறிப்பாக 2000 ஆண்டுகளுக்கு பின், நடந்த பேச்சுவார்த்தைகளை கணக்கில் எடுக்க வேண்டும். 2001ம் ஆண்டில் நடந்த பேச்சுவார்த்தை முக்கியமானது. சர்வதேச சமூகத்தின் கண்காணிப்புடன் பேச்சு நடந்தது. பேச்சு வார்த்தைக் குழுவில் நானும் ஒருவனாக நியமிக்கப்பட்டிருந்தேன். உலக நாடுகளில் நாங்கள் பேசினோம். சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றை எடுப்பதற்கு முயற்சி செய்தோம். கடைசியில் நார்வேயில் நடந்த பேச்சு வார்த்தையில் ஓர் ஒப்பந்தத்தை பரிசீலிக்கிறோம் என்பதாக ஒரு அறிக்கையை தயாரித்து ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்கான இறுதி வடிவம் தயாரித்து முடிவு எடுக்கப்பட்ட போது, நாங்கள் பிரபாகரனிடம் இது பற்றி கேட்கவில்லை. அதற்கு ஒரு காரணம் இருந்தது. பேச்சு வார்த்தைக்கு எங்களை அழைத்த போதே, “பேச்சு பேச்சு என்று சொல்லி ஐந்து ஆண்டுகளை கடத்துங் கள். அதற்குள் ஆயுதங்களை வாங்கி குவித்து மீண்டும் தாக்குதல் நடத்தலாம்’ என்று, பிரபாகரன் எங்களிடம் சொல்லி அனுப்பியிருந்தார். நாட்களைக் கடத்துவது என்றால் விஷயம் இல்லாமல் முடியாது. ஐந்து வருடம் என்பது இயலாது. சர்வதேச சமூகமே இதை பார்த்துக் கொண்டிருக்கிறது. என்ன செய்ய முடியும். மீண்டும் காலம் கடத்த முடியாது. ஒப்பந்தத்தை பரிசீலிப்பதாகத்தான ஒப்பந்தத்தில்தானே கையெழுத்துப் போடுகிறோம். நீங்கள் போடுங்கள் என்று பாலசிங்கத்திடம் நான் சொன்னேன். அவரும் சம்மதித்து கையெழுத்தைப் போட்டார். அதன்பின்தான் சொன்னார், “இதை நான் அங்கு கொண்டு வந்தால், பிரபாகரன் என்னை சுட்டுப்போடுவான். நான் என்ன செய்ய’ என்றார். “நார்வேயிலிருந்து நீங்கள் நேராக லண்டனுக்கு போய்விடுங்கள். ஒப்பந்த பத்திரத்தை நான் கொண்டு போகிறேன்’ என்று சொன்னேன். நானும், தமிழ்ச்செல்வனும் ஒப்பந்தத்துடன் இலங்கைக்கு கொண்டு வந்து மொழிப் பெயர்ந்து பிரபாகரனிடம் கொடுத்தோம். இதைப் பார்த்ததும் மிகுந்த கோபப்பட்டார். அதைத் தூக்கி வீசி எறிந்தார் பிரபாகரன்.

நன்றி: தினமலர்

பிரபாகரன் அழிந்தால் இன்னும் பிரபாகரன்கள் தோன்றலாம் என்கின்றனர். ஆனால், அவ்வாறு தோன்றுவதற்கான சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்த மாட்டோம் – பாதுகாப்பு செயலர் கோதாபய

gothabaya.jpgவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இனிமேல் தப்பிவிட முடியாது . தண்டிக்கப்பட வேண்டியவர் நிச்சயம் தண்டிக்கப்படுவார். பயங்கரவாதிகளான புலிகளுக்காக குரல் கொடுப்பவர்கள் எவராக இருப்பினும் எந்த இனத்தைச் சேர்ந்தவராயினும் அவர்கள் தேசத்துரோகிகளாவர். அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு இந்தப் பேட்டியினை ரூபவாஹினி, நேத்ரா டிவி. தெரண, ஐ.டி.என் ஆகிய தொலைகாட்சிகள் நேரடியாக ஓளிபரப்பின. யுத்த நிலைவரம், அரசியல் நிலைமைகள், ஊடகங்கள் என பல விடயங்கள் தொடர்பாக தனது பேட்டியில் அவர் விளக்கமளித்தார். கோதாபய ராஜபக்ஷவின் பேட்டியின் சாரம்சம் வருமாறு

வடக்கில் முன்னெடுக்கப்படும் படை நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாத புலிகள் தொடர்ந்து பின்வாங்கிச் செல்கின்றனர். புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கும் பகுதியை தற்போது நெருங்கிக்கொண்டிருக்கிறோம். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இனிமேல் தப்பிவிட முடியாது.

எந்தவேளையிலும் பிடித்தே தீருவோம். தண்டிக்கப்பட வேண்டியவர் நிச்சயம் தண்டிக்கப்படுவார். பயங்கரவாதிகளான புலிகளுக்காக குரல் கொடுப்பவர்கள் எவராக இருப்பினும் எந்த இனத்தைச் சேர்ந்தவராயினும் அவர்கள் தேசத்துரோகிகளாவர். அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. பயங்கரவாதத்தை முற்றுமுழுதாக தோற்கடித்து இலங்கையை ஒரே நாடாக மாற்றியமைப்பது மட்டுமே எமது ஒரே இலக்கு. இதைவிட்டு சில்லறைத்தனமான விடயங்களில் ஈடுபாடு காட்டுவது அர்த்தமற்றது.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டிராவிட்டால் இலங்கை இரண்டாகப் பிளவுபட்டு தமிழீழம் உருவாகியிருக்கும். ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பல்வேறு சவால்களையும் அழுத்தங்களையும் எதிர்கொண்டு நாட்டை ஒரு பாரிய யுத்த வெற்றிக்குக் கொண்டுசென்றிருக்கின்றார். ஜே.ஆர். முதல் சந்திரிகா வரை பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

தற்போது எமக்கு வெற்றி கிட்டியதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முதலாவது படையினரின் தியாகமாகும். போரில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்கின்றனர். இதுவே வெற்றியின் அடிப்படை ஆகும்.

இது தவிர ஜனாதிபதியின் தலைமைத்துவமும் மிக முக்கியமான காரணியாகும். ஜனாதிபதிக்கு தேசிய சர்வதேச மட்டத்திலிருந்து பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. பொருளாதார ரீதியிலும் பல சவால்களுக்கும் அவர் முகம்கொடுத்தார். ஆயுதங்களை கொள்வனவு செய்வதிலும் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

இந்த சவால்களுக்கு முகம்கொடுத்து சிறப்பானதொரு அரசியல் தலைமைத்துவத்தை கொடுத்திருந்தார். பல்வேறு சந்தர்ப்பங்களில் சீனா, பாகிஸ்தான் ஜனாதிபதிகளுடன் பலமுறை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். அதன் மூலம் கிடைத்த உதவி ஒத்துழைப்புகளினால் தான் இந்த வெற்றியை அடைய முடிந்தது.
இராணுவத்தினர் பெற்றிருக்கும் இந்த வெற்றியின் மூலம் உலகத்தையே கவர்ந்திருக்கின்றனர்.

உலகத்திலேயே சிறந்த இராணுவத் தளபதியை இலங்கை கொண்டுள்ளது என இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராணயன் என்னிடம் ஒரு தடவை தனிப்பட்ட முறையில் பாராட்டியுள்ளார். இராணுவத்தின் தலைமைத்துவம். அதுவும் மிக முக்கியமானதாகும். இராணுவத் தளபதியின் பொறுப்பு தேர்ச்சி அனுபவங்கள் இத்தருணத்தில் இன்றியமையாதவை.தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போராட்டங்களில் பெற்ற வெற்றிகளுக்கு தரைப்படையினரின் பங்களிப்பு அளப்பரியது. இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மிகவும் சரியான யுக்திகளைக் கையாண்டு எதிரிகளை அழித்து வருகின்றார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்த நாம் இந்த இடத்திற்கு சென்றமை குறித்த காரணங்களை வரிசைப்படுத்த முடியாது. எனினும் யுத்த களத்தில் உயிரைத் தியாகம் செய்து சமாதானம் மலரவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் போராடுகின்ற இராணுவ வீரர்களை மறந்துவிட முடியாது. அதுவே இந்த வெற்றியின் அடிப்படை காரணமாகும்.

 ஆயுதம் முக்கியமல்ல வெற்றிக்கு ஆயுதம் முக்கியமல்ல. அந்த ஆயுதத்திற்குப் பின் நிற்கின்ற மனிதனே முக்கியமானவனாவான். அந்த மனிதனுக்கு தைரிய மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும். அதனை நாம் திறம்பட செய்து கொண்டிருக்கின்றோம். அதனால்தான் இவ்வாறான தொடர் வெற்றிகளை பெற முடிந்தது.

விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படகுகளை எதிர்கொண்டவிதம் குறித்து இலங்கை கடற்படையின் நடவடிக்கைப் பணிப்பாளருடன் அரை மணிநேரம் கலந்துரையாடுவதற்கு இஸ்ரேலிய கடற்படைத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
“பொதுமக்களுக்குக் குறைந்தளவு பாதிப்பை மாத்திரம் ஏற்படுத்தி இலக்கைத் துல்லியமாகத் தாக்குவதில் தலைசிறந்த இலங்கை விமானப்படை உலகிலேயே சிறந்த விமானிகளைக் கொண்ட படை” என்பதே எனது கருத்தாகும்.

பிரபாகரன் சிறந்ததொரு யுத்தத்தை முன்னெடுக்கக் கூடியவர். அவரை யுத்தத்தின் மூலம் வெல்லமுடியாது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண சமாதான பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே முடியும். எனவே புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டுமென பல தரப்புகளிடமிருந்தும் தொடர்ச்சியாக எமக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. அதனையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர். புலிகளுடன் யுத்தம் செய்ய வேண்டாமென்று சர்வதேச நாடுகள் பலவும் கூட ஜனாதிபதி அவர்களுக்கு பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகித்தன.புலிகள் மீது கை வைத்து அவார்களைத் தோற்கடிக்க முடியாது என்றும் புலிகள் 30 வருட காலமாகவுள்ள பலமான ஒரு அமைப்பு என்றும் அந்த நாடுகள் வலியுறுத்தின.அது மாத்திரமன்றி பொருளாதார ரீதியாகவும் எமக்கு சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிட்டது.சில நாடுகள் யுத்தம் செய்வதற்குத் தேவையான ஆயுதங்களை எங்களுக்கு விற்பனை செய்யவும் மறுத்தன.அவ்வாறான நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொண்டபோதும் இந்நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கில் உறுதியுடன் செயற்பட்ட ஜனாதிபதி அவர்கள் அந்த நோக்கில் முன்வைத்த காலை எந்தக் கட்டத்திலும் பின் வைக்கத் தயாராக இருக்கவில்லை.

விடுதலைப்புலிகள் இயக்கம் என்பது ஒரு சர்வாதிகாரியின் பயங்கரவாத இயக்கமாகும். தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் கொன்றொழித்த தலைவனே இந்த சர்வாதிகாரி. தனக்கு அடுத்த தளபதியைக் கூட தலைதூக்கவிடாத சர்வாதிகாரியாகவே பிரபாகரன் செயற்பட்டார்.

இவ்வாறான நிலையில் முல்லைத்தீவை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் போராடிவரும் எமது இராணுவத்தினர் தொடர்ச்சியாக தாய்நாட்டை வெல்ல வைப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.வடக்கில் முன்னெடுக்கப்படும் படை நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாத புலிகள் தொடர்ந்து பின்வாங்கிச் செல்கின்றனர்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கும் பகுதியை தற்போது நெருங்கிக் கொண்டிருக்கிறோம். விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை இன்னும் சில நாட்களுக்குள் எமது இராணுவத்தினர் கைது செய்து விடுவார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் நாட்டைவிட்டு தப்பியோடாவிட்டால் நிச்சயமாக அவரைக் கைதுசெய்ய படையினரால் முடியும். அதே நேரம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பாதுகாப்பான ஓர் இடத்திற்கு தப்பிச் சென்று விட்டால் அங்கிருந்து போராட்டத்தை முன்னெடுக்கக் கூடும். ஆனாலும் அவர் இதுவரை இலங்கைக்குள் இருந்து கொண்டிருப்பாராயின் இனி பிரபாகரன் தற்கொலை செய்துகொண்டாலும் எந்தக் கட்டத்திலும் நாட்டைவிட்டுத் தப்பிச் செல்ல முடியாது.

பிரபாகரனை உயிரோடு பிடிப்பது அல்லது அழிப்பது எமக்கு முக்கியமானதாகும். சிறியதொரு பதுங்குக் குழிக்குள் பிரபாகரன் ஒளித்துக் கொண்டுள்ளார். அவரால் இனிமேல் தப்பிச்செல்ல முடியாது. எந்தவேளையிலும் பிரபாகரன் பிடிபடுவார். வடமராட்சியில் முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கையின் போது வல்வெட்டித்துறையில் பிரபாகரன் சிக்கிக் கொண்டார். அவ்வேளையில் அவர் சயனைட் உட்கொள்வதற்கு முற்பட்டாலும் சிறிய இடைவெளியில் முல்லைத்தீவுக்கு தப்பியோடிவிட்டார். அந்த குறுகிய காலத்திற்குள் அவரது மனநிலை மாறிவிட்டது. தற்பொழுது இருக்கும் சூழ்நிலையில் சைனட்டை உற்கொள்வதா இல்லையா என்ற மனோ நிலையிலேயே பிரபாகரன் இருந்து கொண்டிருக்கின்றார். வடக்கில் முன்னெடுக்கப்படும் படை நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாத புலிகள் தொடர்ந்து பின்வாங்கிச் செல்கின்றனர். புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கும் பகுதியை தற்போது நெருங்கிக்கொண்டிருக்கிறோம். எமது தூரநோக்கத்துடனான இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னெடுக்காவிடின் பிரபாகரன் அந்த சமாதான நடவடிக்கையை மீண்டும் குழப்பி விடுவார்.

பிரபாகரன் அழிந்தால் இன்னும் பிரபாகரன்கள் தோன்றலாம் என்கின்றனர். உண்மை தான்.  ஆனால், அவ்வாறு தோன்றுவதற்கான சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்த மாட்டோம். திட்டமிட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அனைத்தும் முடிந்து விட்டது எனக் கருதிவிடவும் முடியாது. பிரபாகரனோ அல்லது இன்னொருவரோ இந்த வெற்றியை தட்டிப்பறிக்க இடமளிக்க முடியாது. இந்த யுத்தம் இறுதி வரை முன்னெடுக்கப்படும்.புலிகள் மீண்டும் வெகுண்டெழ வேண்டும் என்பதே புலி ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாகும். ஆனால் நாங்கள் புலிகளை மீண்டும் தலைதூக்க விடமாட்டோம்.

படையினர் நிலங்களை மீட்பதன் மூலம் எவ்வாறான வெற்றியையும் அடைய முடியாதென சிலர் தெரிவித்தனர். எனினும், பிரபாகரன் தனது அதிகாரத்தின் கீழ் கிளிநொச்சியில் வங்கி, பொலிஸ், நீதிமன்றம் போன்றவற்றை நிர்வகித்து வந்தார். அந்த நிர்வாகத்தைச் சீர்குலைக்க முடியாதெனவும், கிளிநொச்சியைக் கைப்பற்ற முடியாதெனவும் எமது தலைவர்கள் நினைத்திருந்தனர். தொடர்ச்சியாக பின்வாங்கினார்கள்.

இன்று புலிகளுக்காகப் பேசுபவர்களே அன்று அவர்களைப் பாதுகாத்தனர். புலிகளுக்கும் எமக்கும் எந்த உடன்படிக்கையும் கிடையாது. நாட்டைக்காட்டிக் கொடுப்பவர்கள் நாமல்ல. துரோகிகளை நாடு விரைவில் கண்டு கொள்ளத்தான் போகிறது.

ஒரு சிலர் பாராளுமன்ற உறுப்பினர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றமையாலேயே அரசாங்கம் யுத்த வெற்றிகளைப் பெற்றதாக கூறுகின்றனர். கருணாவைப் பிரித்ததன் மூலம் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்றால் ஏன் அன்றைய அரசாங்கம் இந்தப் புத்திசாதுரியமான நடவடிக்கையைச் செய்யவில்லை ?

கருணா குழுவின் உறுப்பினர்களை இந்தச் சந்தர்ப்பத்தில் எம்மால் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. அதனை ஏன் அவர்கள் செய்யவில்லை.யுத்த நிறுத்த காலத்திலேயே கருணா பிரிந்து வந்தார்.அதனாலேயே புலிகள் பலமிழந்தனர் என்பதை என்னால் ஏற்க முடியாது.ஏனெனில் யுத்த நிறுத்த காலத்திலேயே புலிகள் அதிகளவான ஆயுதங்களை வாங்கிக் குவித்தனர்.அதைக் கருணாவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.நாம் கிழக்கை மீட்டதைத் தொடர்ந்து அங்கு கைப்பற்றிய ஆயுதங்கள் அனைத்தும் யுத்த நிறுத்த காலத்தில் புலிகள் கொள்வனவு செய்த ஆயுதங்கள்தான்.

மங்கள சமரவீரவும் நாட்டுக்கு துரோகியாக மாறிவிட்டார். படைத்தரப்பு இழப்புகள் பற்றிய கணக்குக்காட்டி வருகின்றார். 11 வருடங்கள் அவரும் அமைச்சராக இருந்தவர். அவர் அமைச்சுப்பதவி வகித்த 2000ஆம் ஆண்டில் 2,248 படையினர் பலியானார்கள். அதற்கு அவரும் பொறுப்புக்கூறியாக வேண்டும். முல்லைத்தீவு, ஆனையிறவு, மாங்குளம், கிளிநொச்சி என அனைத்தும் அன்று அவர் அமைச்சராக இருந்தபோதே வீழ்ச்சி கண்டன.

மூன்று வருடங்களுக்கிடையில் இன்று அவை அனைத்தையும் மீட்டெடுத்துள்ளோம். இதுதான் எமது படைவீரர்களின் தியாகத்துக்குக் கிடைத்த வெற்றி. யாழ்.குடாநாட்டை முழுமையாக மீட்டு விட்டோம். கிளிநொச்சி, பரந்தன், பூநகரி அனைத்தையும் வென்றுவிட்டோம். அடுத்த எந்த நிமிடத்திலும் முல்லைத்தீவும் கைப்பற்றப்படும்.

பிரபாகரனை தப்பிச் செல்ல இடமளிக்கப் போவதேஇல்லை. பிரபாகரனை பிடிப்பது உறுதியானது பிடிபட்டதும் எவருக்கும் கையளிக்கும் எண்ணம் எமக்குக்கிடையாது. ஜனாதிபதி என்ன செய்வாரோ எனத் தெரியாது. ஆனால் நாம் எடுத்திருக்கும் முடிவு பிரபாகரன் தண்டிக்கப்பட வேண்டும். எமது நாட்டில் தூக்கிலிடப்படவேண்டும் என்பதேயாகும். அதனைச் செய்ய எமக்கு உரிமையுண்டு. அவர் மாபெரும் கொலைக்குற்றவாளி. 200 வருடங்களுக்கு சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பவர். இந்தியாவிடம் கையளித்துவிட்டு எம்மால் ஆறுதலடைய முடியாது.
 
எமது நாட்டின் ஊடகங்கள் நடந்து கொள்ளும் முறை வேதனைதரக்கூடியதாகவே உள்ளது. நேர்மையாக நடக்க வேண்டிய ஊடகங்கள் துரோகத்தனமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில முக்கிய ஊடகங்கள் புலிகளுக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. “சிரச’ ஊடகத்தை யார் தீ வைத்தனர். அவர்களே செய்துள்ளனர். காப்புறுதிபெறவும், இன்னொருதரப்புக்கு அரசியல் இலாபம் தேடவுமே அப்படிச் செய்தனர். உலகில் எங்குமில்லாத வகையில் இலங்கையில் ஊடகங்கள் தவறான வழியில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. நாட்டில் எந்த ஊடகத்தையும் விட எமது பாதுகாப்புத் தரப்பு இணையத்தை 6 மில்லியன் மக்கள் நாள்தோறும் பார்க்கின்றனர். எமது நாட்டு ஊடகங்கள் பெரும்பான்மையாக புலிகளுக்குத்துணைபோவதாகவே உள்ளன. சிரச தீவைப்பு தொடர்பாக ஒரு ஊடகவியலாளர் “சி.என்.என்.’னுக்கு பேட்டியளித்து அதனை அரசுதான் செய்ததாகக் கூறியுள்ளார். உண்மையை வெளிக்கொண்டு வந்ததும் முதல் வேலை அந்த ஊடகவியலாளரைப்பிடித்து சிறையில் அடைப்பதுதான்.

புலிகளை தாமதமாகியே தடைசெய்துள்ளோம். ஆனால், நான் எப்போதே தடை செய்து விட்டேன். பிரபாகரனைப் பிடிக்க திட்டமிட்ட அன்றே நான் புலிகள் மீது தடையை போட்டுவிட்டேன். பிரபாகரனை பிடிக்காதவரை நான் நித்திரை கொள்ளமாட்டேன். அந்த நல்ல செய்தி எந்த நேரத்திலும் எமதுகாதுகளில் விழத்தான் போகிறது. இலங்கை விடயத்தில் புதுடில்லி அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காது. அங்கு புத்திசாதுர்யமான தலைவர் இருக்கின்றார். இந்தியா எடுத்திருக்கும் முடிவு சரியானது, நியாயமானது.

ஒரு குழு சொல்வதற்காக இந்தியா அவசரப்பட்டு மூக்குடைபட்டுக் கொள்ளமுற்படமாட்டாது. அரச சார்பற்ற நிறுவனங்கள் கூட புலிகளுக்காகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. உள்ளூர், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் தமிழ் மக்களுக்கென்று கூறிக் கொண்டு கோடிக்கணக்கான பணத்தை புலிகளுக்கு வழங்கியுள்ளன. வடக்கிலோ, கிழக்கிலோ அரச சார்பற்ற நிறுவனங்கள் செய்த அபிவிருத்தி எதுவுமே கிடையாது. முழுவதும் புலிகளுக்கே சேர்க்கப்பட்டுள்ளன.

யார் என்ன சொன்னாலும் அரசாங்கத்தின் பயணத்தில் எந்த விதமான மாற்றமும் நிகழாது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்த நாம் இந்த இடத்திற்கு சென்றமை குறித்த காரணங்களை வரிசைப்படுத்த முடியாது. எனினும், யுத்த களத்தில் உயிரைத் தியாகம் செய்து சமாதானம் மலரவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் போராடுகின்ற இராணுவ வீரர்களை மறந்துவிட முடியாது. அதுவே இந்த வெற்றியின் அடிப்படை காரணமாகும். இலக்கு நோக்கிய பயணத்தில் வெற்றிக்கம்பம் வரை செல்வோம். மக்களுக்கான பயணமே அரசின் பயணம். காட்டிக் கொடுப்பவர்களுக்கோ, பச்சோந்திகளுக்கோ பயந்து நாம் ஒதுங்கப் போவதில்லையென்றார்.

ஒரு இதயம்-இருவருக்கு புது வாழ்வு!

surgery.jpgகேரளாவிலிருந்து கர்நாடகத்திற்கு வந்திருந்த என்ஜீனியர் சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவை சந்தித்தார். இதையடுத்து அவரது இதயம், பாதுகாப்பாக சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு நோயாளிக்குப் பொருத்தப்பட்டது. மேலும் என்ஜீனியரின் இதய ரத்தக் குழாய்கள் தான்சானியாவைச் சேர்ந்தவருக்குப் பொருத்தப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த 28 வயது என்ஜீனியர் பெங்களூரில் பணியாற்றி வந்தார். வியாழக்கிழமை இரவு எச்.ஏ.எல். விமான நிலைய சாலையில் சாலை விபத்தில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மணிப்பால் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் மூளைச் சாவை சந்தித்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த என்ஜீனியரின் குடும்பத்தினரை மணிபால் மருத்துவமனை நிர்வாகம் தொடர்பு கொண்டு உறுப்பு தானத்தை அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகியவை எடுக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து பெங்களூரைச் சேர்ந்த 36 வயது நோயாளிக்கு கல்லீரல் பொருத்தப்பட்டது. பின்னர் 37 வயதுப் பெண்மணிக்கு ஒரு சிறுநீரகமும், பெங்களூர் கமாண்ட் மருத்துவமனைக்கு இன்னொரு சிறுநீரகமும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதயத்தைப் பொருத்துவதற்கு சரியான நபர் கிடைக்கவில்லை. இதையடுத்து மணிபால் மருத்துவமனை சென்னையைச் சேர்ந்த பிரபல இதயவியல் நிபுணர் டாக்டர் செரியனை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவரது பிரான்டியர் லைப்லைன் மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இருப்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த சஜாஸ் ஏர் சார்ட்டர் நிறுவனத்தின் விமான ஆம்புலன்ஸ் புக் செய்யப்பட்டு அது பெங்களூர் விரைந்தது. அந்த விமானம் மூலம் பெங்களூர் விரைந்த பிரான்டியர் மருத்துவமனை டாக்டர்கள், மூளைச் சாவை சந்தித்த என்ஜீனியரின் இதயத்தை அறுவைச் சிகிச்சை செய்து பத்திரமாக எடுத்தனர். பின்னர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து அதே விமானத்தில் சென்னை திரும்பினர். விமான நிலையத்திலிருந்து பிரான்டியர் லைப் லைன் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் தடையின்றி விரைய வழி ஏற்படுத்தி சென்னை போலீஸாரும், பேருதவி புரிந்தனர்.

அங்கு இரு டாக்டர்கள் குழு தயார் நிலையில் இருந்தன. அவர்கள் விரைவாக செயல்பட்டு இதய மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். ஒரு குழு நோயாளியின் உடலிலிருந்து இதயத்தை எடுத்தது. இன்னொரு குழு உடனடியாக இதயத்தை பொருத்தியது. இரு அறுவைச் சிகிச்சைகளும் வெற்றிகரமாக இருந்ததாகவும், நோயாளி நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கேரள என்ஜீனியரின் இதயத்தைப் பெற்று புது வாழ்வு பெற்ற நோயாளிக்கு 32 வயதாகிறது. அவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த 3 மாதங்களில் நான்கு முறை பிரான்டியர் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார். டாக்டர் செரியனின் உதவியால் அவருக்குப் புது வாழ்வு கிடைத்துள்ளது.

வால்வுகளும் உதவின …

இதற்கிடையே லைப்லைன் மருத்துவமனையில் இதய ரத்த குழாய்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தான்சானியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் அனுமதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் மிகச் சரியான நேரத்தில் அங்கிருந்தார். உடனடியாக செரியன் தலைமையிலான டாக்டர்கள் குழு, அந்த தான்சானியா நாட்டுக்காருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். பழுதடைந்திருந்த அவரது ரத்தக்குழாய்கள் அகற்றப்பட்டு, பெங்களூர் என்ஜினீயரின் ரத்தக்குழாய்கள் பொருத்தப்பட்டன.

பெங்களுரில் அறுவை சிகிச்சை செய்து, இதயத்தை தனி விமானத்தில் எடுத்து வந்து, சென்னை போலீஸ் காரருக்கும், தான்சானியா நாட்டுக்காரருக்கும் பொருத்த டாக்டர்கள் எடுத்துக்கொண்ட மொத்த நேரம் 2 மணி 40 நிமிடமே. இந்த மின்னல் வேக சிகிச்சை இந்திய மருத்துவ உலகில் புதிய சாதனையாக கருதப்படுகிறது.  இந்த மின்னல் வேக சிகிச்சை காரணமாக 2 உயிர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளன. இதுகுறித்து டாக்டர் செரியன் கூறுகையில், பெங்களூர் என்ஜினீயர் கொடுத்த இதயத்தால் சென்னையில் ஒரு போலீஸ்காரரும், தான்சானியா நாட்டுக்காரரும் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

நிறைய மருத்துமனைகளில் சிறுநீரகத்தை மட்டும் எடுத்துவிட்டு இதயத்தை கைவிட்டு விடுகிறார்கள். இதயத்தையும் இப்படி எடுக்க அனுமதித்தால் ஏராளமான இதய நோயாளிகளுக்கு வாழ்வு கொடுக்க முடியும் என்றார்.

நன்றி; வன் இந்தியா

பிரபாகரனை சிங்கள இராணுவத்தால் ஒருநாளும் பிடிக்க முடியாது: யாழ். எம்.பி் பத்மினி

patmini.jpgபறவைகள் சரணாலயம்’ என பொருள்தரும் கிளிநொச்சியை புலிகளிடம் இருந்து கைப்பற்றியபின் உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறது சிங்கள இராணுவம். `விரைவில் பிரபாகரனையும் பிடித்து விடுவோம்’ என்று கொக்கரித்துள்ளார், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷ. ஆனால், “ஈழத்தமிழர்களின் தலைவராக இருக்கும் பிரபாகரனை சிங்கள இராணுவத்தால் ஒருநாளும் பிடிக்கமுடியாது” என்கிறார், யாழ்ப்பாணத் தமிழ் எம்.பி.யான பத்மினி சிதம்பரநாதன்.

சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்த அவர் நமக்களித்த பிரத்தியேக பேட்டி.

ஈழத்தில் தற்போதைய போர் நிலவரம் என்ன?

“இலங்கை நாடு சிங்களவர்களுக்கு மட்டும்தான் என்ற அடிப்படையில் ஓர் இனத்தையே (தமிழ் இனத்தையே) சிங்கள அரசு அழித்து வருகிறது. கிளிநொச்சி பகுதியிலுள்ள அனைத்து தமிழர்களையும் அது புலிகளாகவே பாவிக்கிறது. யாழ்ப்பாணத்தில் முழத்திற்கு முழம் சோதனைச் சாவடிகளை அமைத்து தமிழ் மக்களிடம் சோதனை நடத்தி வருகிறது. ஈழப்போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ நினைக்கும் சமூக சேவகர்களை இலங்கை இராணுவம் கடத்துகிறது. ஈழத் தமிழர்கள் `செயலற்றவர்களாக’ இருக்க வேண்டும் என்பதே சிங்கள அரசின் ஆசை.

ஈழத்தின் வன்னிப் பகுதியில் அகதிகளாக இடம் பெயர்ந்த மக்கள் ஓலைக்கீற்றுகளால்தான் குடில் அமைத்துத் தங்க வேண்டும் என்று சிங்கள அரசு நிர்ப்பந்தப்படுத்துகிறது. மேற்கூரைக்கு பிளாஸ்டிக் அல்லது சிமெண்ட் ஷீட் பயன்படுத்த அவர்களுக்கு அனுமதியில்லை. தமிழ் அகதிகளுக்காக தமிழக அரசு உணவுப் பொருள்களைக் கொடுத்தனுப்பியதால், உலக உணவுத்திட்டம் (டபிள்யூ.எஃப்.பி) கொடுத்தனுப்பிய உணவுப் பொருள்களை இலங்கை அரசு திருப்பியனுப்பி, அதன் மூலம் அந்நியச் செலாவணியைச் சம்பாதித்துள்ளது.

தமிழர் வாழும் பகுதிகளில் தினமும் ஆயிரம் கிலோ எடை கொண்ட வெடிகுண்டுகளை சிங்கள இராணுவம் வீசுகிறது. அவை சில இடங்களில் முப்பதடி ஆழம் வரை பள்ளம் தோண்டி அதனால் நிலத்துக்கடியிலிருந்து தண்ணீர்கூட வந்து விடுகிறது. இதுபோக சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் (கொத்து) குண்டுகளையும் இலங்கைப்படை வீசுகிறது. இந்தக் குண்டுவீச்சுகளுக்குப் பயந்து தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறிய தமிழர்கள் நான்கு இலட்சத்து அறுபதாயிரம் பேர் இன்று நான்கு ஊர்களில் மிகநெருக்கமாக வாழும் நிலை உள்ளது. இதுதான் இலங்கைப் போரின் இப்போதைய நிலை.”

கிளிநொச்சியை சிங்கள இராணுவம் கைப்பற்றியது புலிகளுக்குப் பின்னடைவுதானே?

“அப்படிச் சொல்ல முடியாது. தங்கள் தற்காப்புக்காக புலிகளும், மக்களும் கைவிட்டுச் சென்ற இடங்களைத்தான் சிங்கள இராணுவம் கைப்பற்றியுள்ளது. கிளிநொச்சியில் இருந்து புலிகள் பின்வாங்கிச் சென்றது, அவர்களின் போர்த்தந்திரமாக இருக்கலாம்.”

மக்களை கேடயமாகப் பயன்படுத்தத்தான் பிரபாகரன் அவர்களை முல்லைத்தீவுக்கு அழைத்துச் சென்றிருப்பதாக குற்றம் சாட்டுகிறார்களே?

“அப்படியெதுவும் இல்லை. கிளிநொச்சிப் பகுதி தமிழர்களின் அடையாள அட்டையை வைத்து, அவர்களை புலிகளாகவே சிங்கள இராணுவம் பார்க்கிறது. அத்தியாவசிய மருந்துகளை வாங்க அருகிலுள்ள பகுதிகளுக்குக் கூட மக்கள் நிம்மதியாகச் சென்று வர முடியாத நிலை உள்ளது.

மன்னார் பகுதியில், சிங்கள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை என்ன? அவர்கள் கிட்டத்தட்ட இராணுவக் கட்டுப்பாட்டில் சிறைக்கைதிகள் போலத்தான் உள்ளனர். முள்வேலிகளுக்கு நடுவில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். ஈழத் தமிழர்களுக்கு சிங்கள இராணுவம் உரிய பாதுகாப்பு, சுதந்திரம் தந்தால் அவர்கள் ஏன் புலிகளுடன் செல்ல வேண்டும்?”

ஈழப்பிரச்னையில் இந்திய அரசு எந்த விதத்தில் உதவ வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

“இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. இதனால்தான் அங்கே துப்பாக்கிச் சத்தம் கேட்டால், இங்குள்ள தமிழர்கள் துடிக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள தமிழர்கள், ஈழ மக்களுக்காக பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்கள் இந்திய அரசுக்கு மேலும் அழுத்தம் தந்து ஈழத் தமிழர்களின் சுய உரிமைகளையும், அவர்களுக்கான அங்கீகாரத்தையும் இந்திய அரசின் மூலம் பெற்றுத்தர வேண்டும். அவர்களால்தான் அது முடியும்.”

`பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்’ என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வீரப்ப மொய்லி கூறியிருக்கும் போது, இந்தியஅரசிடம் இருந்து ஆதரவு கிடைக்கும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?

“ஈழத் தமிழர்களுக்குச் சுதந்திரம் கிடைத்தால்தான் அவர்களால் சுதந்திரமாக சுவாசிக்க, யோசிக்க, முடியும். உலக ரீதியாக சுதந்திரத்தை மதிப்பவர்கள் யாரும் ஈழ மக்களின் சுதந்திரத்தையும் மறுக்க முடியாது. அந்த அடிப்படையில் பார்த்தால், ஈழ மக்களுக்கு சுதந்திரம் பெற்றுத்தரும் வல்லமை உடைய அமைப்பு விடுதலைப்புலிகள் அமைப்புதான். எனவே ஈழத்து மக்களின் அபிலாஷையை நிறைவேற்ற இந்தியாதான் உதவி புரிய வேண்டும்.”

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப பிரதமர் ஒப்புக்கொண்டார். தற்போது பிரணாப் முகர்ஜி வருவதை இலங்கை விரும்பவில்லை. இந்தநிலையில் அழையா விருந்தாளியாக அவர் எப்படி இலங்கை செல்வது என மத்திய அரசு கூறியுள்ளதே?

“கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எங்களது அழைப்பை ஏற்று பிரணாப் முகர்ஜி இலங்கை வர இருக்கிறார் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித பொகொல்லகம அறிவித்திருந்தாரே!”

தமிழர் பகுதியில் சிங்கள இராணுவத்தின் முன்னேற்றத்துக்கு புலிகளிடம் இருந்து பிரிந்து சென்ற கருணா அமைத்துக் கொடுக்கும் வியூகமும் ஒரு காரணம் என்று நினைக்கிறீர்களா?

“அப்படி நினைக்கவில்லை. ஏழை நாடான இலங்கைக்கு சர்வதேச அளவில் பல நாடுகள் உதவி புரிகின்றன. இலங்கைக்கு பாகிஸ்தான் ஆயுத சப்ளை செய்கிறது. சிங்கள இராணுவத்திற்கு இந்திய அரசும் தொழில்நுட்ப உதவி புரிவதாகக் கூறப்படுகிறது.”

பிரபாகரனை எப்படியும் பிடித்துவிடுவோம் என்று சிங்கள ராணுவம் கூறிவருகிறதே?

“கடந்த முப்பது வருடங்களாக சுதந்திர தாகத்தோடு சிங்கள இராணுவத்தினரை எதிர்த்து புலிகள் போராடி வருகிறார்கள். மக்களும் அவர்களது அனுபவ தந்திரத்தால் சிங்கள இராணுவத்தின் குண்டுமழையில் இருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த குண்டுவீச்சு இலட்சக்கணக்கான தமிழர்களை இன்று ஒரே இடத்தில் குவித்துள்ளது. புலிகளின் தலைவராக உள்ள பிரபாகரனை ஒருநாளும் பிடிக்க முடியாது.”என்றார் பத்மினி சிதம்பரநாதன்.
 
நன்றி:குமுதம்