மறுபிரசுரங்கள்

மறுபிரசுரங்கள்

இலங்கை அரசு இராணுவத் தீர்வை நோக்கிச் செல்கின்றது. நாங்கள் அரசியல் தீர்வினையே விரும்புகின்றோம். – பா. நடேசன்

nadesan.jpgஎமது மக்களின் அரசியல் விருப்பங்களை நிறைவு செய்யக்கூடிய அரசியல் தீர்வினையே நாங்கள் விரும்புகின்றோம் என விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து இந்தியாவிலிருந்து வெளிவரும் பிரதான பத்திரிகைகளுள் ஒன்றான தினமணியின் கேள்விகளுக்கு நடேசன் அளித்துள்ள சிறப்பு பேட்டி விபரம் வருமாறு:

கேள்வி: மக்கள் யாரும் இல்லாத, வெறிச்சோடிக் கிடந்த கிளிநொச்சியைத்தான் இலங்கை இராணுவம் பிடித்துள்ளது என்கிறார்களே, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை கிளிநொச்சியிலிருந்து அழைத்துச் செல்லும் பணியை எவ்வளவு நாட்களாக செய்தீர்கள்?

பதில்: கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்புகளை தமிழ் மக்கள் சந்தித்து வருகிறார்கள். அதுபோன்ற நேரங்களிலும் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உடுத்திய உடையோடு, எல்லா உடைமைகளையும் விட்டுவிட்டு, இடம்பெயர்ந்த வரலாறு பல உண்டு. வன்னி நிலப்பரப்பில் இராணுவ நடவடிக்கையை எங்கள் மக்கள் சந்திப்பதும் இது முதல் தடவையல்ல. இலங்கை இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளில் சிங்களப் படையினர் எத்தகைய சித்திரவதைகள், படுகொலைகள், கற்பழிப்புகள் செய்வார்கள் என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே இராணுவம் எப்போது வரும்? எவ்வாறு வரும்? என்பதை எங்கள் மக்கள் நன்கு அறிவார்கள். அதற்கேற்ப இம்முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓரிரு நாட்களுக்குள்ளேயே முழு உடைமைகளுடனும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். அவர்கள் எதிர்பார்த்த சகல உதவிகளையும் நாங்கள் செய்து வருகிறோம்.

logo.gifகேள்வி: அவர்கள் காடுகளில் தங்கியுள்ளதாகவும், உடல் நிலை மோசமாகி தினமும் பலர் உயிரிழப்பதாகவும் கூறப்படுகிறதே, அது உண்மையா?

பதில்: இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தியுள்ளோம். சிறு கிராமங்கள், காடுகள் என எல்லா இடங்களிலும் குடியேற்றியுள்ளோம். இலங்கை அரசின் பொருளாதாரத் தடை காரணமாக மருந்துப் பொருட்கள் கிடைக்கவில்லை. எனவே பாம்புக் கடிகள், தொற்றுநோய்கள் என எல்லா கொடுமைகளையும் எமது மக்கள் சந்தித்து வருகின்றனர். மிகவும் சிரமப்பட்டு அவர்களை பாதிப்பிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடில்களில் வசிக்கிறார்களா? வெட்ட வெளியில் உள்ளார்களா? அவர்களுக்கு உணவு, உடை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை எவ்வாறு அளித்து வருகிறீர்கள்?

பதில்:  ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தற்போது குடிசைகளிலும், தாற்காலிக கூடாரங்களிலும், மர நிழல்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இடம்பெயர்ந்த மக்களுக்கு மின்சாரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. குப்பி விளக்குகளிலும், காட்டில் நெருப்புகளை மூட்டியும் மக்கள் தமக்கு வேண்டிய வெளிச்சத்தைப் பெறுகின்றனர். தற்காலிக கிணறுகள், குளங்களிலிருந்து எடுக்கப்படும் நீரை, எமது சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்படி கொதிக்க வைத்து பருகி வருகின்றனர். உணவைப் பொறுத்தமட்டில், ஐ.நா. சபையின் உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்படும் உணவுகளையும், உள்ளூர் உற்பத்திகளில் சேகரித்து வைத்த உணவுகளையும் உண்டு வருகின்றனர். பெரிய சிரமங்களுக்கும், சவால்களுக்கும் மத்தியில் எங்கள் மக்கள் உணவு, உடை, குடிநீர் ஆகியவற்றைப் பெற்று வருகின்றனர்.

கேள்வி: கிளிநொச்சியில் தற்போது கட்டடங்கள் அனைத்தும் தரைமட்டமாகக் கிடக்கின்றன. மின்சாரம், குடிநீர் விநியோகம் எதுவும் இல்லை. கிளிநொச்சியை காலி செய்யும் முன் நீங்களே அழித்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறதே. இது உண்மையா?

பதில்:  இது முற்றிலும் பொய்யான பிரசாரமாகும். இலங்கை விமானப் படையின் குண்டு வீச்சுக்களாலும், ஷெல் (பீரங்கிக் குண்டு) வீச்சுக்களாலும் கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. நேரில் சென்று பார்ப்பவர்களுக்கு இது நன்றாகப் புரியும்.

கேள்வி: தமிழ் மக்கள் கிளிநொச்சியை விட்டு முன்னரே வெளியேறி விட்டார்கள் என்றால், தமிழக அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்கள் யாருக்கு போய்ச் சேர்ந்தது?

பதில்:  முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சியை ஒட்டிய பிரதேசங்களில், மக்கள் இடம்பெயர்ந்து சென்று வாழ்கின்ற இடங்களில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரால் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. எமது பிரதேசத்தில் இயங்குகின்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் எங்களுடன் மிகவும் நெருக்கமாகவும், அந்நியோன்னியமாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை எளிதாக விநியோகிக்க முடிகிறது.

கேள்வி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உடல் நிலை மோசமாக உள்ளதாகவும், அவர் விரைவில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வார் என்றும் தொடர்ந்து செய்திகள் வருகின்றன. உண்மை நிலை என்ன?

பதில்:  அவர் மிகவும் தேக ஆரோக்கியத்துடன் இருந்து போராட்டத்தை வழிநடத்தி வருகிறார். இலங்கை அரசுக்கு ஆதரவான ஊடகங்களே இவ்வாறு பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

கேள்வி: இலங்கை இராணுவத்துக்கு இந்திய இராணுவம் உதவி வருவதாகக் கூறப்படுவது உண்மையா?

பதில்:  பல ஊடகங்கள், குறிப்பாக கொழும்பு ஊடகங்கள் இவ்வாறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

கேள்வி: கிளிநொச்சியை மீண்டும் மீட்போம் எனக் கூறுகிறீர்கள். கிளிநொச்சியிலிருந்து இலங்கை இராணுவத்தை விரட்டுவது அவ்வளவு எளிதானதா?

பதில்: இங்குள்ள தமிழ் மக்கள் அனைவரும் எங்களுடன் உள்ளனர். அது மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகத் தமிழ் இனத்தின் தார்மிக ஆதரவும் எங்களுக்கு உள்ளது. இதுவே எங்கள் பலம். இந்த பலத்தின் மூலம் நாங்கள் இழந்த ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

கேள்வி: இலங்கை இனப் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகளின் அணுகுமுறை மற்றும் செயல்பாடு குறித்து தங்கள் கருத்து என்ன?

பதில்:  எங்கள் விடுதலைப் போராட்டத்திற்காக அரசியல் மாறுபாடுகளை மறந்து, குரல் கொடுப்பது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும், எழுச்சியையும் கொடுக்கின்றது.

கேள்வி: இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து தங்கள் கருத்தென்ன?

பதில்:  இந்திய அரசினுடைய, இந்திய மக்களுடைய வரலாற்று ரீதியான நண்பர் யார்? பகைவன் யார்? என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள்தான் இந்தியாவின் வரலாற்று ரீதியான நண்பன் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்தியாவுக்கு நம்பிக்கைக்குகந்த நண்பனாக இலங்கை அரசு என்றைக்குமே நடந்து கொள்ளவில்லை. இதற்குப் பல்வேறு ஆதாரங்களைக் கூறமுடியும்.

கேள்வி: போர் நிறுத்த உடன்படிக்கை முறிய விடுதலைப் புலிகளே காரணம் என இங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் கூறி வருவது உண்மையா?

பதில்:  போர் நிறுத்த உடன்படிக்கை முறிந்ததற்கு இலங்கை அரசே காரணம். போர் நிறுத்தத்திலிருந்து விலகுவதாக அவர்கள்தான் முதலில் அறிவித்தனர். நாங்கள் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை. இப்போதும் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்று உருவானால் அதனை வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம்.

கேள்வி: ஈழத் தமிழர் பிரச்னைக்கு எத்தகைய தீர்வை எட்ட முடியும் என நம்புகிறீர்கள்? அதற்குத் தங்களிடம் எத்தகைய திட்டம் உள்ளது?

பதில்:  எமது மக்களின் அரசியல் விருப்பங்களை நிறைவு செய்யக்கூடிய அரசியல் தீர்வினையே நாங்கள் விரும்புகின்றோம். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், நோர்வே போன்ற நாடுகள் அரசியல் பேச்சுவார்த்தைகள் வழியாகவே இனப் பிரச்னைக்கான தீர்வை காண முடியும் என கூறி வரும் நேரத்தில், இலங்கை அரசு எங்கள் மீது தடை விதித்துள்ளது. இலங்கை அரசு இராணுவத் தீர்வை நோக்கிச் செல்கின்றது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. இது சிங்கள அரசின் அப்பட்டமான தமிழின விரோதப் போக்கிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.என்றார் நடேசன்.

நன்றி: தினமணி

ஈழத்தமிழர்கள் யாருமற்ற அநாதைகள் அல்ல; இன்னல் ஏற்பட்டால் 7 கோடி தொப்புள் கொடி உறவுகள் குரல் கொடுப்பர் – புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர்

nadesan.jpgஈழத்தமிழர்கள் யாருமற்ற அநாதைகள் அல்லர். அவர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால் தொப்புள்கொடி உறவுகளான ஏழு கோடி தமிழர்கள் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பார்கள் என்ற செய்தியே இலங்கை அரசிற்கும் இந்த உலகத்திற்கும் முக்கிய செய்தியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது என்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தமிழகத்திலிருந்து வெளிவரும் ஜுனியர் விகடன் வாரமிருமுறை இதழுக்கு அவர் அளித்த நேர்காணல் வருமாறு;

பத்தாண்டுகளாக உங்கள் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி கடைசியில் இலங்கையின் வசம் போய்விட்டது. புலிகளுக்கு பின்னடைவுதானே…?

கிளிநொச்சி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது முதல் தடவையல்ல பல தடவைகள் இராணுவத்திடமிருந்து கிளிநொச்சியை நாம் மீட்டதுமட்டுமல்ல கட்டுப்பாட்டுக்குள்ளும் நீண்ட காலம் வைத்திருந்துள்ளோம். இதுதான் வரலாறு. நாம் இதனைப் பின்னடைவாகப் பார்க்கவில்லை.

தற்போது நடந்து வரும் போரில் விடுதலைப் புலிகள் சில இடங்களில் எதிர்த்தாக்குதல் நடத்தாமல் பின்வாங்கி போகிறார்களே ஏன்…?

யுத்தத்தில் இழப்புக்களை குறைப்பதற்காக பின்வாங்குவதென்பது தந்திரோபாயம்.

இந்தப் போரால் என்ன சாதிக்க நினைக்கிறது இலங்கை அரசு?

முழுத்தமிழ் தேசிய இனத்தையும் பூண்டோடு அழிக்கவே இலங்கை அரசு நினைக்கின்றது. ஈழத் தமிழர்கள் யாருமற்ற அநாதைகள் அல்லர் என்பதையும் ஈழத் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால் தொப்புள்கொடி உறவுகளான ஏழு கோடி தமிழர்கள் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பார்கள் என்ற செய்தியை இலங்கை அரசிற்கும் உலகத்திற்கும் முக்கிய செய்தியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

பிரபாகரனின் கனவு நகரமாக உருப்பெற்ற கிளிநொச்சி சிதைந்து தகர்க்கப்பட்டதில் உங்களுக்கு வருத்தம் இல்லையா…?

வருத்தம்தான். கட்டடங்கள் பாதிக்கப்பட்டனவே ஒழிய விடுதலைக்கான எமது கதவுகள் தகர்க்கப்படவில்லை. மீளவும் இழந்த பிரதேசங்களை கைப்பற்றி கட்டிடங்களை உருவாக்குவோம். ஆனால் காவல்துறை, வங்கி, நிதித்துறை என்பன இடம்பெயர்ந்த நிலையில் இயங்கி வருகிறது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

கிளிநொச்சியில் இருந்த மக்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்?

அவர்கள் அனைவரும் வன்னிப்பெரு நிலப்பரப்பில் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர். எமக்கு சாதகமாக சூழல் ஏற்படும்பொழுது கிளிநொச்சியை மீளவும் கைப்பற்றி மக்களை குடியேற்றுவோம்.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலப்பரப்பில் தற்போதுள்ள நிலைமை என்ன?

எம்முடைய மக்கள் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளுக்கும் இடம்பெயர்வுகளுக்கும் முகங்கொடுத்த நிலையில் இழந்த பிரதேசங்களை மீளக்கைப்பற்ற வேண்டும் என்ற மனோநிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதற்காக சகல மக்களும் அளப்பரிய தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் நல்கி வருகின்றனர்.

புலிகளின் தலைமை மற்றும் புலிகளின் மனவுறுதி குறித்து வரும் செய்திகள் பற்றி…?

இந்த விடுதலைப் போராட்டம் ஒரு மக்கள் விடுதலைப் போராட்டமாக வளர்ச்சிபெற எம்முடைய மனவலிமையே காரணம். இந்த மனவலிமையே கடந்த முப்பது வருடங்களாக இராணுவத்துடன் வீராவேசத்துடன் நாங்கள் போரிடக் காரணம்.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் இராணுவத்தின் பிடியில் போனது அவர்களுக்கு பலம் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?

இலங்கை ஒரு அரசு. அதற்கு பல நாடுகள் இராணுவ பொருளாதார உதவிகளை நல்கி வருகின்றன. நாம் ஒரு விடுதலை இயக்கம். தமிழ் தேசிய இனத்தின் எண்ணிக்கை சிங்கள தேசிய இனத்தின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது சிறியதே. எம்முடைய மக்களின் பலத்துடனும் உலகத்தமிழ் இனத்தின் தார்மீக ஆதரவுடனும் இந்த விடுதலைப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. சமர்க்களங்களில் இடங்கள் பறிபோவதும் மீளநாம் கைப்பற்றுவதும் வழமை.

புலிகள் மீதான தடையை அகற்றி, விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்கிறீர்கள். இது நடக்கக்கூடியதா?

உலகத் தமிழினம் ஒன்றுபட்டு எமது விடுதலைப் போராட்டத்திற்காக நல்கிவரும் ஆதரவு, எதிர்காலத்தில் இது சாத்தியம் என்பதை காட்டுகிறது.

புலிகளைவிட இலங்கை அரசு மீது இந்தியாவுக்கு நேசம் அதிகமாக இருக்கிறதே…?

இது எமக்கு மிகவும் மனவேதனையைத் தருகின்றது. இந்தியாவின் உண்மையான நண்பர்கள் தமிழ் மக்கள் தான் என்பதனை இந்திய அரசு விளங்கிக் கொள்ளவேண்டும் என்ற உண்மையை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இலங்கையோடு பிற நாடுகள் கைகோர்த்துக் கொண்டு போர் நடத்தி வருகிறது என்று சொல்லப்படுகிறதே?

இது முற்றிலும் உண்மை. அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து கப்பல் கப்பலாக ஆயுதங்கள் வந்த வண்ணம் உள்ளன. இதை கொழும்பில் உள்ள ஊடகங்களே உறுதிப்படுத்துகின்றன.

இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு எந்த வடிவில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகளை நிறுத்தி எம்முடைய மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

இலங்கை அரசின் வானூர்தி குண்டு வீச்சுகள், ஏறிகணைத் தாக்குதல்கள் அதிகமாகி வருகிறதே… இதில் இருந்து மக்கள் எப்படித் தங்களைத் தற்காத்து கொள்கிறார்கள்?

முப்பது வருடகாலமாக எம்முடைய மக்கள் வானூர்தி குண்டு வீச்சுக்களுக்கும் எறிகணை வீச்சுக்களுக்கும் பாரிய இராணுவ நடவடிக்கைகளுக்கும் முகங்கொடுத்த வண்ணமே வாழ்ந்து வருகின்றனர். அரசின் கொடிய தாக்குதல்களுக்கு இலக்காகும் பொழுது தம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பதில் மக்களுக்கு நிறைய அனுபவங்கள் உண்டு. போராட்டமே வாழ்வாக மாறிவிட்ட எம் மக்கள் சிறு குழந்தைகளிலிருந்து முதியோர் வரை தம்மை தற்காத்துக்கொள்வதில் தேர்ச்சிபெற்று வருகின்றனர். உலக அளவில் தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளையே அரசு எம்மக்கள் மீதான தாக்குதல்களுக்கு பயன்படுத்தி வருகின்றது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்கிறேன்.

தமிழக மக்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் நேர்மையான முறையில் விநியோகிக்கப்பட்டதா?

தமிழக மக்களால் அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களும் உடைகளும் எம்முடைய பிரதேசத்தில் செயற்பட்டுவரும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. முழுமையாக நேர்மையான முறையில் பொருட்களின் விநியோகம் இருக்கிறது. தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களின் இவ்வுதவி எமது மக்களின் மனங்களில் பசுமரத்தாணி போல பதிந்துள்ளது.

இலங்கையில் சமஷ்டித் தீர்வு முயற்சிகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும் – பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுநர் ராமதாஸ்

இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை மேசையில் விவாதிக்கக் கூடிய தேர்வுகளில் ஒன்றாக சமஷ்டி முறை கட்டமைப்பை உருவாக்குதல் அமையும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுநர் டாக்டர். எஸ். ராமதாஸ் கூறியுள்ளார்.  “இந்து’ பத்திரிகைக்கு  செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் இதனைக் குறிப்பிட்டிருக்கும் ராமதாஸ், சமஷ்டி முறைமை யோசனைக்கு புலிகள் ஆதரவு தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகரான மறைந்த அன்ரன் பாலசிங்கம் இருந்த போது இந்த யோசனைக்கு புலிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த யோசனை பற்றி கலந்துரையாடுவதற்கு முன்னர் யுத்த நிறுத்தம் ஏற்பட வேண்டும். இந்தப் பாதையில் நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இன நெருக்கடிக்கு தீர்வு காணும் முழு நடவடிக்கைகளிலும் விடுதலைப் புலிகள் உள்ளடக்கப்பட வேண்டும். விடுதலைப் புலிகளை அழித்ததன் பின்னர் இணக்கப்பாடு காண்பதென்பது முட்டாள்தனமானதாகும். தேர்வானது தமிழ் தாயக சுயாட்சியை கொண்டதாக இருக்க வேண்டும். இலங்கை அரசும் புலிகளும் பேச்சுவார்த்தையூடாக இதனை எட்ட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட முயற்சிகளை ராமதாஸ் பாராட்டியுள்ளார். ஆனாலும், துரதிர்ஷ்டவசமாக அவர் ஆட்சி நீடித்திருக்கவில்லை என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். இலங்கையானது பல்லின, பல்மத, பல்கலாசார நாடென்பதை இலங்கைத் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியின் போது இதனை மனதில் கொள்ள வேண்டும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையின் பின்னர் புலிகள் நம்பிக்கையானவர்களாக இருக்கிறார்களா என்று கேட்கப்பட்ட போது, நோர்வே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் ஈடுபட்டது. புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது இதன் மூலம் இலங்கைத் தமிழரின் பிரதிநிதிகள் புலிகள் என்பதைக் காண முடிகிறது என்றும் ராமதாஸ் சுட்டிக்காட்டினார். இனநெருக்கடி தொடர்பாக இந்திய மத்திய அரசின் மனப்பாங்கு குறித்து ராமதாஸ் கவலை தெரிவித்தார். ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது இப்பிரச்சினை தொடர்பாக அவர் கொண்டிருந்த உணர்வு தற்போதைய ஆட்சியாளரிடம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழரின் நியாயபூர்வமான உரிமைகள் என்ற ரீதியிலேயே இப்பிரச்சினை தொடர்பாக அக்கறை காட்ட வேண்டும். பயங்கரவாதமென்ற கோணத்தில் பார்க்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இலங்கைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு என்று இந்திய அரசு காலத்துக்குக் காலம் கூறி வருகின்ற போதும் அதன் கொள்கை மாறவில்லை எனவும் வார்த்தைகள் செயலில் இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இப்பிரச்சினையின் பாரதூரமான நிலைமை குறித்து போதியளவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோருக்கு தெரிவித்திருப்பதாகவும் ஆனால், முழுக் கொள்கையையும் சில அதிகாரிகளே தீர்மானிப்பதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழீழம் உருவாக்கப்படுவது இந்தியாவுக்கு கேந்திர உபாய ரீதியான அனுகூலமாக அமையுமென குறிப்பிட்ட அவர், இலங்கை இந்தியாவின் நண்பனாக இல்லையெனவும் பாகிஸ்தான் அல்லது சீனா அல்லது அமெரிக்கா இலங்கைக்கு முன்னுரிமைக்குரியதாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

“விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை சிங்கள அரசியல்வாதிகளிடம் காணவில்லை’- பிரிட்டனின் காடியன்

kili-02.jpgசிங்கள வரை பெரும்பான்மையாகக் கொண்ட நாட்டில் தன்னாட்சிக்காக போராடும் புலிகள் இயக்கத்திற்கு கிளிநொச்சியை இழந்திருப்பது பாரிய பின்னடைவாகும். ஆனால், நேற்று அந்த நகரத்தைக் கைப்பற்றுவதில் இராணுவம் அடைந்திருக்கும் வெற்றியானது விடுதலைப் புலிகளின் மறைவை வெளிப்படுத்துவதாக அமையப்போவதில்லை. புலிகளின் அரசியல் தலைமையகமான கிளிநொச்சி கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான பிரதான பாதையில் அமைந்துள்ளது. இதன் மீது வான்வழித் தாக்குதல்களை எப்போதுமே கொழும்பு நடத்திக்கொண்டிருந்தது. ஒருவருடத்திற்கு முன்னர் சு.ப.தமிழ்ச்செல்வனின் அலுவலகத்திற்கு குண்டு வீசப்பட்டது. வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனும் அரசாங்கத்துடனும் அடிக்கடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தவரான தமிழ்ச்செல்வனின் அலுவலகம் குண்டு வீச்சுக்கு இலக்காகி இருந்தது.

தரை மார்க்கமாக இராணுவத்தின் முன்னேற்றமானது அங்கிருந்த புலிகளை ஒட்டுமொத்தமாக வாபஸ்பெறவைத்தது. ஆனால் இயக்கத்தின் இராணுவ தலைமையகமும் அதன் தளங்களும் அந்தப்பகுதிக்குக் கிழக்கே முல்லைத்தீவில் மறைவான இடத்தில் உள்ளன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எங்கே இருக்கிறார் என்பது ஒருபோதும் தெளிவாக அறியப்படாதது. கிளிநொச்சியை கைப்பற்றியதானது அச்சமூட்டக்கூடிய வகையில் மனித உயிர்களுக்கு விலை செலுத்திய விடயமாகும். காஸாவுடன் ஒப்பிடக்கூடியவை. தணிக்கைகள், அந்தப் பகுதிகளுக்குப் பத்திரிகையாளர்கள் செல்ல அனுமதிக்கப்படாமை என்பனவும் நடைமுறை விடயங்களாகும். பல நாட்களாக விமானத் தாக்குதல்கள், ஆட்லறித் தாக்குதல்கள் இடம்பெற்றன. பொதுமக்களும் புலிகளும் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் காடுகளுக்குள் இடம்பெயர்ந்தனர். இரு தரப்பிலும் 100 க்கணக்கான படையினர் கொல்லப்பட்டனர். பலமாதங்கள் எடுத்த இந்நடவடிக்கை நேற்று தனது இலக்கை எட்டியுள்ளது.

காஸாவைப்போன்றே இதுவும் சமச்சீர் அற்ற போர் முறைமையாகும். கொழும்புக்கு துரிதமாக தற்கொலை குண்டுதாரியை அனுப்பியதன் மூலம் அரசாங்கத்தின் வெற்றிப் பிரகாசத்தை புலிகள் எடுத்துக் கொண்டுவிட்டனர். இச்சம்பவத்தில் விமானப்படை தலைமையகத்தைச் சேர்ந்த இரு படையினர் கொல்லப்பட்டனர். இது எப்போதுமே புலிகளால் மேற்கொள்ளப்படும் தந்திரோபாயமாகும். கிளிநொச்சியை இழந்த பின்னர் அதிகளவில் இதனை அவர்கள் மேற்கொள்ளும் தன்மை காணப்படுகின்றது. அதேவேளை, ஆனையிறவைக் கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் அரசாங்கம் உள்ளது. யாழ்ப்பாண வீதிக்கான புலிகளின் கடைசி அரணாக ஆனையிறவு உள்ளது. அது வீழ்ச்சி கண்டால் இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமான யாழ்ப்பாணத்துக்கான விநியோகத்தை மீள சுலபமாக்கிவிடும். தற்போது கடல் மற்றும் வான் மார்க்கமாகவே யாழ்ப்பாணத்துக்கான விநியோகம் இடம்பெறுகிறது.

இதனைக் கைப்பற்றுவது விடுதலைப் புலிகளை மிகக் கடுமையாக பாதிக்கும் என்பது நிச்சயம். ஆனால், தமிழ் சொந்த சமூகங்களின் மத்தியில் அவர்களின் செல்வாக்கு இருக்கும் வரை கெரில்லா இயக்கங்கள் தலைமறைவாகி மீண்டும் வெளிக்கிளம்பும் ஆற்றலைக் கொண்டுள்ளன. விடுதலைப் புலிகளை அரசாங்கம் பயங்கரவாதிகள் என அழைக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாத அமைப்பின் பட்டியலில் புலிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், பலருக்காக அவர்கள் குரல் கொடுக்கின்றனர் என்பதை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டுள்ளது. பல்லின பல்கலாசார மக்கள் வாழ்கின்ற இலங்கையில் தமிழ் மக்கள் மிக மோசமான முறையில் பாரபட்சத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்நிலையில் உடனடியாக புலிகளுக்கு நிதி உதவி வழங்குவதை புலம் பெயர்ந்த தமிழர்கள் முடிவுக்குக் கொண்டுவரும் சாத்தியமில்லை.

நியாயமான அரசியல் தீர்வே இலங்கைக்கு தேவைப்படுகிறது. இராணுவத் தீர்வு இருக்க முடியாது. நேற்று இராணுவம் ஈட்டிய வெற்றியானது கொழும்பில் வெற்றிக்களிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு, நிதி, தேசத்தைக் கட்டியெழுப்புதல் ஆகிய அமைப்புப் பொறுப்புகளை ஏற்கனவே தன்வசம் வைத்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தற்போது ஊடகத்துறை அமைச்சையும் தன்வசமாக்கியுள்ளார். நாட்டின் செய்தியாளர்கள் மீது இறுக்கமான கட்டுப்பாட்டை அவர் வைத்திருக்கும் சாத்தியம் தென்படுகிறது. இனிவரப் போகும் பல மாதங்களில் விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ளவதற்கான மனப்பான்மை சிங்கள அரசியல் வாதிகளிடம் இல்லை. பயங்கரமான புதுவருடத்தையே இலங்கை எதிர்கொள்கின்றது. இவ்வாறு பிரிட்டனின் காடியன் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

கிலி’ வீழலாம். ஆனால் புலி வீழ மாட்டார்கள் – கவிஞர் வைரமுத்து

vairamuthu.jpg
இன்றைக்கு கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது என்ற செய்தி வருகிறது. நெஞ்சில் இடி விழுகிறது. ஒரு தமிழன், தமிழ் சகோதரி அங்கு அடிபடுகிற போது, எனக்கு குளிப்பதற்கோ, உண்பதற்கோ, சிரிப்பதற்கோ தோன்றவில்லை.

கிளிநொச்சி வீழலாம். கிலி’ வீழலாம். ஆனால் புலி வீழ மாட்டார்கள். அவனும் சேர்த்து தான் தமிழர். அவன் நம் ரத்தத்தின் நீட்சி. அவனை இழப்பதற்கு நாம் தயாராக முடியாது. 

நாங்கள் போர் நிறுத்தம் வேண்டும் என்று கேட்கிறோம். பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அங்கே போர்முனைக்கு செல்லுமாறு வேண்டிக்கொண்டோம். இன்னும் காலம் கடந்துவிடவில்லை.

இலங்கையில் போர்நிறுத்தத்தை எவ்வளவு வலியுறுத்துகிறோமோ அதைப் போல இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் வந்துவிடக்கூடாது என்பதும் முக்கியம். பொருளாதார சீரழிவு வந்து கொண்டிருக்கும் நேரத்தில் இன்னொரு யுத்தத்தை உலகம் தாங்காது. பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் ஒழிக்கப்படவேண்டும். போர் மூலம்தான் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்றார்.