புளட்

புளட்

புலிப்பொறியினுள் வீழ்ந்த தீப்பொறி புளொட்டின் புலியின் இன்னுமொரு பிரதிபலிப்பே – பகுதி 35

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 35 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 15.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 35

தேசம்: இந்த புலம்பெயர் அரசியல் சூழலில் நாங்கள் பல்வேறு அரசியல் இலக்கிய நகர்வுகளை பார்த்திருக்கிறோம். நீங்கள் வந்த 92ஆம் ஆண்டு காலப்பகுதியில் தீப்பொறியும் தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தது. இவ்வளவு அரசியலிலும் ஈடுபட்ட நீங்கள், தீப்பொறி அமைப்பிலிருந்து போன ஆட்களோடு அமைப்பிலும் இருந்திருக்கிறீர்கள் தொடர்பிலும் இருந்திருக்கிறீர்கள். நீங்கள் ஏன் அவர்களோடு ஒரு அரசியல் இணக்கப்பாட்டையோ தீப்பொறியை மீளக் கட்டமைக்கின்ற அந்த விடயங்களில் செயல்படவில்லை? அதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? ஏனென்றால் அவர்களுக்கும் 92 காலப்பகுதியில் இருந்து 2010 அதற்கு பிற்பாடும் தமிழீழ மக்கள் கட்சி, பிறகு மே 18 என்ற ஒரு தொடர்ச்சி இருக்குதானே. அது எதிலயும் நீங்கள் உங்களை இணைத்துக் கொள்ளவில்லை. என்ன காரணம்?

அசோக்: ஓம் 86 ஆம் ஆண்டில் பின் தளத்தில் நடந்த மத்திய குழுக் கூட்டத்தில் இருந்து தோழர்கள் ரகுமான் ஜான், கேசவன் வெளியேற அதன் பிறகு சந்திக்கவும் இல்லை. தொடர்வும் இருக்கவில்லை. நாங்களும் இயக்கத்தினுள் உட்கட்சிப் போராட்டம், தள மகாநாடு, பின் தள மகாநாடு என பிரச்னைகளில் முழ்கி இருந்த நேரம். அவர்களும் சந்திக்கவில்லை. நானும் முயலவில்லை. நான் இங்கு ஐரோப்பாவுக்கு வந்து தான் அவரை சந்திக்கிறேன். தொடர்பு கிடைக்குது எனக்கு. அவர் கனடாவில் இருக்கிறார். நான் பிரான்சுக்கு வந்துட்டேன்.

தேசம்: அது 2016இல் நடக்குது என? அதற்கு முதலே கண்டீர்களா?

அசோக்: இல்லை. இங்க வந்து தான் சந்திக்கிறேன்.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் நீங்கள் தொலைபேசி உரையாடலில் இருந்தீர்கள்? 90களில்…

அசோக்: வந்து கொஞ்ச காலம் அவர் தலைமறைவாக இருந்தார். அதற்குப் பிற்பாடு அவருக்கும் எனக்குமான உறவு வருது. அப்போ தமிழீழ மக்கள் கட்சி உருவாகிவிட்டது என்று நினைக்கிறேன்.

தேசம்: தமிழீழ மக்கள் கட்சி நான் நினைக்கிறேன் ஆனையிறவு தாக்குதல் கட்டத்தில்தான் உருவாகுது. அதற்கு முதல் அவர்கள் தீப்பொறி என்ற பெயரில் தான்…

அசோக்: எனக்கு நல்ல ஞாபகம் கனடாவிலிருந்து ரவி என்று சொல்லி அவரின் உண்மையான பெயர் இளங்கோ என நினைக்கிறேன். அவர் பாரிசுக்கு வாரார். வந்த இடத்தில் அவர் என்னை சந்திக்கிறார். தீப்பொறியா தமிழீழ மக்கள் கட்சியா என்று தெரியவில்லை. அந்தக் கட்சியினுடைய பத்திரிகை ஒன்று கொண்டு வந்தவர்.

தேசம்: தமிழீழ மக்கள் கட்சி ஒரு பத்திரிகை யை வெளியிட்டது.

அசோக்: அந்தக் கட்சி பத்திரிகையோடு வந்து என்னை சந்திக்கிறார்.

தேசம்: அதற்கு முதல் உங்களோடு தொடர்பு கொள்ளவில்லையா?

அசோக்: அந்த கட்சியோடு எந்த தொடர்பும் இருக்கவில்லை. முதலில் தீப்பொறி என்ற பெயரில் இயங்கிய அமைப்பு பிறகு தமிழீழ மக்கள் கட்சி என்ற பெயரில் இயங்கத் தொடங்கியது என நினைக்கிறேன்.

தேசம்: …. சுவிஸ் மாநாடு ஒன்று நடத்தினது தானே.

அசோக்: சுவிஸ் சில் அல்ல. தாய்லாந்தில் இந்த மாநாடு நடக்குது. சபாலிங்கம் தோழர் இங்கே படுகொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் தான் இந்த மாநாடு நடக்குது. 94 ஏப்ரல் கடைசி காலங்களில் மே முதல் வாரத்தில நடந்த தென நினைக்கிறேன். ஏனென்றால் எனக்கு தெரிந்த தோழர்கள் சிலர் இந்த மாநாட்டிக்கு சென்றிருந்தனர்.

தேசம்: அப்போ நீங்கள் அவர்களோடு தொடர்பு இல்லை.

அசோக்: அரசியல் சார்ந்து அந்த அமைப்போடு நான் எந்த தொடர்பும் வைத்துக் கெதள்ளவிரும்பவில்லை.

தேசம்: அவர்களும் உங்களோடு தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை.

அசோக்: அவர்களுக்குத் தெரியும். அவர்கள் மீது தீப்பொறி மீது எனக்கு கடும் விமர்சனம் இருக்கு என்று. ஏனென்றால் கண்ணாடி சந்திரன், நேசன் தொடர்பாக கடும் விமர்சனம் இருக்குதானே. அவங்களும் தீப்பொறியில் இருக்கிறபடியால் தெரியும் நான் தீப்பொறிக்குள் வரமாட்டேன் என்று. நேசன், கண்ணாடி சந்திரன், பாண்டி போன்ற யார் யாரெல்லாம் புளொட்டுக்குள்ள மிக மோசமாக அதிகாரதுஸ்பிரயோகம் செய்தார்களோ, பல்வேறு தவறுகளுக்கு உடந்தையாக இருந்தார்களோ அவர்கள் தான் தீப்பொறிக்குள் இருக்கிறார்கள். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் புளொட்டில் இருந்து கடைசி வரை உட்கட்சிப் போராட்டம் நடாத்தி வெளியேறிய தோழர்கள் எவரும் தீப்பொறிக்குள் இல்லை.

இவர்களுடைய அரசியல் நடவடிக்கைகள் கடந்தகாலம் பற்றி தெரிந்த யாருமே அதற்குள் போகத் தயாராக இல்லை. ரகுமான் ஜான் தோழர் தொடர்பாக நல்ல அபிப்ராயம் இருக்கலாம். ஆனால் அவரை நம்பி யாரும் போக மாட்டார்கள். அவர் கோட்பாடு சார்ந்து சிந்திக்கக் கூடியவர். ஆனால் செயற்பாட்டு நடைமுறை தளத்தில் சரியாக அவரால் செயற்பட முடிவதில்லை. வழி நடத்தும் திறன் அவரிடம் இருப்பதில்லை.

அப்போ இளங்கோ வாரார் என்னை சந்திப்பதற்கு வந்து அந்த பத்திரிக்கையைத் தந்து அதனுடைய கொள்கைகள் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

தேசம்: இவர் விடுதலைப் புலிகளில் இருந்து வந்தவரா?

அசோக்: அதற்குப் பிறகுதான் தெரியும் இவர் விடுதலைப்புலிகளில் இருந்தவர் என்றும் கிட்டுவினனுடைய வொடிகாட்ஸ் சாக இருந்தவர் என்றும். அவரும் தீப்பொறிக்குள் இருக்கிறார். அவர்தான் என்னை சந்திக்க வாரார். இந்த சந்திப்பு கலைச்செல்வனுடைய வீட்ட தான் நடக்குது.

தேசம்: கலைச்செல்வனும், லக்ஷ்மியும் தீப்பொறியில் இருக்கிறார்கள்…?

அசோக்: அந்தக் காலகட்டத்தில் அங்க வந்தபடியால் அவர்களுக்கு தொடர்வு இருந்திருக்கலாம். தாய்லாந்து மாநாட்டுக்கு கலைச்செல்வனும், லக்ஷ்மியும் போனது தெரியும். ஏனென்றால் சபாலிங்கம் படுகொலை செய்யப்படும் போது அவர்கள் இங்கு இல்லை. மரண இறுதி நிகழ்வுகளுக்தான் வந்தவர்கள்.

இளங்கோ கொள்கைப் பிரகடனம் எல்லாம் கதைக்கிறார். அவர் கதைத்து முடிய நான் கேட்டேன் ஏன் புதிய அமைப்பை தொடங்குகிறீர்கள் புலிகளோடு சேர்ந்து வேலை செய்யலாம் தானே என்று. ஏனென்றால் அதே இராணுவக் கண்ணோட்டம் அதே தமிழீழம். நான் சொன்னேன் எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்று சொல்லி அந்த பேச்சை அப்படியே ஆரோக்கியமாக முடித்துக்கொண்டோம். அதற்குப் பிற்பாடு எந்தவிதமான தொடர்பும் என்னுடன் வைத்துக் கொள்ளவில்லை. ரகுமான் ஜான் தோழருடன் தொடர்பு இருந்தது. அவர் இங்க பாரிசுக்கு மூன்று தடவை வந்தார். தீப்பொறி எல்லாம் உடைந்த பிறகுதான் பாரிசுக்கு வந்தவர். அவருக்கு தெரியும் கடும் விமர்சனங்கள் இருக்கிறபடியால் நான் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்யமாட்டேன் என்று முதலே தெரிந்திருக்கும்.

தேசம்: உங்கள் விமர்சனங்களை தோழர் ரகுமான் ஜானிடம் வைத்துள்ளீர்களா?

அசோக்: ரகுமான் ஜான் தோழர் இங்கு வந்தபோது கடும் விவாதம். நீங்கள் எந்த அடிப்படையில் தோழர்களை விட்டுப்போட்டு போனீர்கள்? நாங்களும் விட்டுட்டு போயிருக்கலாம் தானே? நீங்கள் உண்மையிலேயே உட்கட்சி போராட்டம் நடத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் நாட்டுக்கு வந்திருக்கலாம். ஏன் எங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இல்லையா? நாங்களும் தோழர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு தானே தளத்துக்கு போய் தள மாநாடு நடத்துறோம், நீங்கள் எங்களோடு வந்து இருந்தால் எவ்வளவு உறுதியான மாற்றத்தை கொண்டு வந்திருக்கலாம். கடைசியா தீப்பொறியை உருவாக்கி என்னத்தை நாங்கள் சாதித்தோம்? யாரும் உங்களோடு வரவே இல்லை, அதுவும் அதே புலிக் குணாம்சம். புளொட்டின் இன்னொரு பிரதி பிம்பமாக கூட தீப்பொறி இருக்கவில்லை. அதை விட மிக மோசமாக இருந்தது என்பதுதான் உண்மை என்று கடும் உரையாடல்.

நாட்டில் நடந்த ஆரம்பகால அனைத்து தவறுகளுக்கும் உடந்தையாக இருந்தது தீப்பொறியில் இருந்த ஆட்கள் தான். நாட்டில் குறிப்பிட்ட காலங்களில் நடந்த படுகொலைகளுக்கும், அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் பொறுப்பாக இருந்தது நேசனும், கண்ணாடிச் சந்திரனும் தான். மத்தியதர வர்க்க குணாம்சம் இருக்கும்தானே அந்த சொகுசுகளை அனுபவிப்பது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பை எப்படி சொகுசு வாழ்க்கைக்கு பயன்படுத்தினார்கள் என்று சொல்லி எனக்கு தான் தெரியும். அதை நான் கண்ணால் பார்த்தேன். இவர்களை நம்பி நாங்கள் எப்படி போக முடியும்?

தேசம்: தோழர் ரீட்டாவின் மீதான பாலியல் பலாக்காரம் தொடர்பாக என்ன அபிப்பிராயம்?

அசோக்: இந்த பிரச்சனை தொடர்பாக சம்பந்தப்பட்ட நேசன், ஜீவன் நந்தா கந்தசாமி அவங்க இரண்டு பேரும் நேரடியாக சம்பந்தப்படவில்லை. பாண்டி நேரடியாக சம்பந்தப்பட்டவர். அவர்களை இன்று வரையிலும் பாதுகாத்துக் கொண்டு நியாயப்படுத்தி கொண்டிருக்கின்ற நபர்கள் என்றால் அப்போது எப்படி இருந்திருப்பார்கள்? குறைந்தபட்சம் ஒரு சுயவிமர்சனம் வேண்டாமா? புளாட்டை போன்றே மோசமான அமைப்பாக தீப்பொறி இருந்தது.

தேசம்: அதைவிட மோசமாக போயிட்டுது…

அசோக்: தோழர் ரீட்டா தொடர்பான பிரச்சனையை ஜென்னியின் திட்டமிட்ட நாடகம் என்றார்கள். பிறகு ஆதாரங்கள், சாட்சியங்கள் இருந்த போது, சம்பவம் உண்மைதான் ஆனால் இதற்கும் தீப்பொறிக்கும் தொடர்பு இல்லை என்றும், வேறு ஆட்கள் தொடர்பு என்றும் சொன்னார்கள். ஆதாரம் கேட்டபோது பிறகு சொன்னார்கள், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று. இப்போது ஜென்னியின் நாடகம் என்ற பழைய பல்லவியை பாடுகிறார்கள். எந்த நேர்மையும் உண்மையும் இவர்களிடம் இல்லை.

அடுத்தது தனிநபர் பயங்கரவாத செயல்களும் இராணுவ வாத கண்ணோட்டமும்தானே தீப்பொறிக்குள் இருந்தது. கோட்பாடுகளுக்கும் அவர்களின் செயற்பாடுகளுக்கும் தொடர்பே இருக்கவில்லை. இல்லாவிட்டால் கிட்டுக்கு குண்டு விசுவார்களா? யோசித்துப் பாருங்கள். வெறும் இரரணுவ வாதம். என்ன ஆரோக்கியமான முன்னெடுப்பை செய்தீர்கள்? கட்டாயம் எங்களுக்கு சுய விமர்சனம் தேவை. இன்றைக்கு என்னை பொருத்தவரை நான் உட்பட யாருமே நல்லவர்கள் இல்லை. எல்லாருமே மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய ஆட்கள் தான். யாருமே சுய விமர்சனம் செய்யத் தயாரில்லை. குறைந்தபட்சமாவது நாங்கள் சுய விமர்சனம் செய்யவில்லை தானே. என்னை பொருத்தவரை யாராவது என் மீது குற்றச்சாட்டு வைத்தால் அந்தக் குற்றம் உண்மை என்றால் அதை நான் முதலில் ஏற்றுக் கொள்வேன்.

தேசம்: மற்றது புளொட்டில் இருந்த மாசில்பாலன் அவர் அல்லது அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தான் பிறகு தீப்பொறியில் இருந்தவர்கள் என்று நினைக்கிறேன். லண்டனில் தீப்பொறி யிலும் செயற்பட்டார்கள். அதுக்கப்புறம் 2010 வரைக்கும் 2009 முள்ளிவாய்க்கால் பிரச்சனை வரைக்கும் அவர்கள் தமிழீழ கட்சியிலிருந்து ஆனையிறவு தாக்குதல் எல்லாம் கொண்டாடுற மனநிலையில்தான் இருந்தது. அதற்கு பிறகு அவர்கள் திருப்பி புதிய திசைகள் என்று உருமாற்றம் பெறுகிறார்கள். அதில உங்களோடு நெருங்கி செயற்பட்ட நாவலன் தான் முக்கியமான ஆள். அதுக்குள்ளே ஏன் நீங்கள் போகவில்லை?

அசோக்: நான் மிகக் கவனமாக இருந்தேன். வார்த்தைகள் அல்ல முக்கியம். செயற்பாடே எனக்கு முக்கியம். மார்க்சியம், முற்போக்கு என்று எதையும் எங்களால் கதைக்க முடியும். ஆனால் அதற்கேற்றவாறு உண்மையாக நாம் வாழ்வதில்லை. செயற்படுவது இல்லை. நிறைய வாழ்வில் அனுபவப்பட்டு விட்டேன். எப்படி இவங்கள நம்பி போகமுடியும். மாசில் மாசில்பாலன் அப்பா இடதுசாரி என்று நினைக்கிறேன். நாட்டில் இருந்தவர்.

தேசம்: இருக்கலாம் பிற்காலத்தில் அவர் விடுதலைப்புலிகளின் நிதி சேகரிப்பில் பங்காற்றி இருந்தவர். நீங்கள் அதை தவறாக எடுக்கக்கூடாது அவர் உண்மையிலேயே புனர்வாழ்வு … சேர்த்தவர் ஏமாத்தியது என்று இல்லை.

அசோக்: அவர் இடதுசாரி பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்துதான் வந்தவர். அவரோடு எனக்கு உறவு இருக்கவில்லை. அறிந்திருக்கிறேன். அவருக்கு இரண்டு மூன்று சகோதரர்கள் லண்டனில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவர் தொடர்பாக எனக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. அவர் இப்ப நோர்வேயில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். நான் எழுதிய எழுதின கட்டுரைகளுக்கு எல்லாம் மிக மோசமான கமெண்ட்ஸ் கொடுத்தார். என் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்டினார். அவர் இப்ப நோர்வேயில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனா மாசில்பாலன் அவங்க கொஞ்சம் ஆரோக்கியமான விழிப்புணர்வு கொண்ட தோழர் என்று நினைக்கிறேன்.

தேசம்: தீப்பொறியில் இருந்தவர்?

அசோக்: இப்ப அவர்களுடைய நடவடிக்கைகளை பார்க்கும்போது அரசியல் கோட்பாட்டு ரீதியாக சிந்திப்பவர்களாக தெரிகிறாங்க.

தேசம்: அவர்கள் ஒரு காலகட்டத்திலும் 2009 வரைக்கும் விரும்பியோ விரும்பாமலோ புலிகளின் ஆதரவு தளத்திற்கு போயிட்டு திருப்பி புலிகள் இல்லாமல் போனதும்…

அசோக்: நிறைய தோழர்கள் அப்படி இருந்திருக்கிறார்கள். தவிர்க்க முடியாமல் சிங்கள பேரினவாதத்தின் செயற்பாடுகள் அவர்களை அவ்வாறான நிலைக்கு கொண்டுபோய் விட்டது என நினைக்கிறன். அவங்களுக்கு வேறு தெரிவு இல்லை. ஆனால் விமர்சன ரீதியாக புலிகளை விளங்கிக் கொண்டு அதன் மீது விமர்சனம் வைத்து புலிகளை தேர்ந்தெடுத்திருந்தால் அது ஆரோக்கியமானது. ஆனால் பெரும்பாலானவர்கள் தனிப்பட்ட நலன்களுக்காக புலிகளை ஆதரித்தார்கள். ஆனால் இங்க வந்த பிறகுதான் கேள்விப்பட்டேன் தீப்பொறியும், அதன் பின்னான தமிழிழ மக்கள் கட்சியும் புலி ஆதரவு நிலையை கொண்டிருந்தது பற்றி. அவங்களுடைய தமிழிழம் என்ற பத்திரிகை படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. அது புலிகளின் ஆதரவுத் தளமாக தான் அந்த பத்திரிகை இருந்தது. ஆணையிறவு தாக்குதலை ஆதரித்து தமிழ்தேசிய முற்போக்கு சக்தியான புலிகளை அடையாளப்படுத்துகின்ற போக்கு தீப்பொறியிடம் இருந்தது.

தேசம்: அந்த இடத்தில் அப்படித்தான் மாசில் பாலன் தோழர்களை நான் அடையாளம் காண்கிறேன்.

அசோக்: நான் நினைக்கிறேன் அது அவருடைய அரசியலில் உள்ள தவறான பார்வை. பேரினவாதத்திற்கு எதிராக செயற்பட முனையும் பலர் அரசியல் புரிதலில் தவறிழைத்து அவர்களும் மறுபுறம் தீவிர இனவாத தமிழ்த்தேசியததை தேர்வு செய்து விடுறாங்க. தீவிர இனவாத தமிழ் தேசியம் என்ன செய்யும் என்று கேட்டால் புலிகளையே ஆதரிக்க செய்யும். ஆரோக்கியமான முற்போக்கு தமிழ் தேசியத்தை தேர்ந்தெடுக்காத வரைக்கும் தமிழ்தேசிய போக்கு இப்படியான பிழையான வழிகளில்தான் கொண்டு போகும்.

தேசம்: தீப்பொறி தமிழீழ மக்கள் கட்சியாக புலிகளோடு இருந்திட்டு இப்ப மே 18 இயக்கம் அதுல நீங்க ஏதாவது தொடர்புபட்டிருக்கிறீர்களா?

அசோக்: தீப்பொறி, தமிழிழ மக்கள் கட்சியின் புலி ஆதரவு நிலைப்பாடு தொடர்பாக பிற்காலங்களில் தோழர் ரகுமான் ஜானோடு பேசி இருக்கிறன். அவர் புலிகள் தொடர்பாக கடும் விமர்சனம் கொண்டவராகவே இருந்தார். தீப்பொறி புலி ஆதரவு நிலை எடுத்த காலகட்டத்தில் அவர்வெளியேறி விட்டார் என நினைக்கிறேன்.

தோழர் ரகுமான் ஜானோடு அரசியல் தளத்தில் எந்தசெயற்பாட்டு உறவும் எனக்கு இருக்கவில்லை. தனிப்பட்ட உறவே இருந்தது. நிறைய அரசியல் உரையாடல் இருந்தது. அவரிடம் இருந்து அரசியல் கோட்பாட்டுத்தளங்களில் நிறைய கற்றுக்கொள் முடியும். இன்றைய தமிழ்ச் சூழலில் அவர் முக்கியமானவர் என்ற எண்ணம் என்னிடம் உண்டு. அவரும் சில தோழர்களும் சேர்ந்து வியூகம் என்று ஒரு சஞ்சிகை வெளியிட்டாங்க. வியூகம் வெளியிட்ட போது இங்க வந்தவர். நாங்க இங்க அதற்கு விமர்சன கருத்தரங்கு ஒன்றை செய்தோம். முள்ளிவாய்க்கால் முடிந்தபிறகு மே 18 தொடங்கிறார். மே 18 தொடங்கி இங்க வாரார். அப்போ நாங்கள் கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தோம். அதில் மே 18 பற்றிய கொள்கை பிரகடன விளக்கங்கள் சொல்லப்படுது. நான்தான் அந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன். தலைமைதாங்கும் போதே சொல்லிட்டேன் இவர் என்னுடைய தோழர் மே 18 அமைப்புக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று.

தேசம்: அப்போ ஏன் நீங்கள் தலைமை தாங்கினீர்கள்?

அசோக்: தலைமை தாங்குவதற்கு முழுக்கமுழுக்க அதில் உடன்பாடு இருக்க வேண்டும் என்று அவசியமில்லை தானே.

தேசம்: அதை அரசியல் கலந்துரையாடலாக தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.

அசோக்: தலைமை உரையில் நான் சொல்லிட்டேன் இதற்கும் எனக்கும் தொடர்பில்லை, மே18 அமைப்பு தொடர்பான கருத்துக்கள் விமர்சனங்கள் பற்றி ரகுமான் ஜான் தோழருடன் கதையுங்கள். இந்த அமைப்பை பற்றி சுதந்திரமான வெளியில் கலந்துரையாட நான் தலைமை தாங்குகிறேன் என்று சொல்லிட்டேன். ஆரோக்கியமான அரசியல் விமர்சன உரையாடல் வெளியை உருவாக்க முனையும் தளத்தில் நாம் கலந்து கொள்வதில் தவறில்லை. அதே நேரம் எங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அதை நான் செய்தேன்.

ஆமை புகுந்த வீடும் ராகவன், நிர்மலா, ஷோபாசக்தி புகுந்த இலக்கியச் சந்திப்பும்! : பாகம் 34

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 34 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 13.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

தேசம்: நாங்கள் பரிசில் நடந்த கலை இலக்கிய முரண்பாடுகள் பற்றி கதைத்துக் கொண்டிருக்கிறோம். அதுல நீங்கள் சொல்லி இருந்தீர்கள் எக்ஸில் முரண்பாடு. அன்றைக்கு முக்கியமாக ஷோபாசக்தி அந்த முரண்பாட்டை தூண்டியதாக குற்றம்சாட்டி இருந்தீர்கள். அது என்ன மாதிரி நடந்தது? எக்ஸில் அது என்ன பிரச்சனை?

அசோக்: எக்சில் சஞ்சிகையில் ஏற்பட்ட முரண்பாடுகள் கோட்பாடு சார்ந்த பிரச்சனை இல்லைத்தானே கோட்பாடுகளில் சினேக முரண்கள்தோன்றினால் விவாதங்கள், உரையாடல்கள், கற்றல்கள் முலம் தீர்த்துக் கொள்ளலாம். கோட்பாடு ரீதியான பெரிய முரண்பாடுகள் வந்தா ஒன்று சேருவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாமல் போகும். இது தனிப்பட்ட முரண்பாட்டில் இருந்து தான் தோற்றம் பெறுது. இங்க கோட்பாடும் இல்லை. சித்தாந்த பிரச்சனையும் இல்லை. முழுக்க முழுக்க தனிநபர் முரண்பாடுகள்தான். இங்க ஈகோ பிரச்சனைதான். இதை இலகுவாக தீர்த்திருக்க முடியும். திட்டமிட்டு சாதிய முரண்பாடாக்கி ஊதிப் பெருக்கடி வைத்த புண்ணியம் நம்ம சோபாசத்தியைத்தான் சாரும். இந்த காலகட்டத்திலதான் தமிழ்நாட்டில் தலித்திய இலக்கிய அரசியல் ஏழுச்சி கொள்ளுது. அப்ப இந்த தனிப்பட்டமுரண்பாடுகளை சாதிய பிரச்சனை சார்ந்த முரண்பாடாக கட்டமைத்தால் இவர்களுக்கு சாதகம் என சோபாசக்தியின் சாணக்கிய மூளை கணக்குப்போட்டு இருக்கும்.

தேசம்: இதுக்குள்ள சாதிய முரண்பாடு என்று சொல்லுற அளவுக்கு இல்லை. பெரும்பாலும் இதுக்குள்ள அரசியல்ரீதியாக இருந்தவர்கள் எல்லாருமே ஏதோ ஒரு வகையில் சாதிய எதிர்ப்பை கொண்டவங்கதானே.

அசோக்: தனி நபர் முரண்பாட்டை கூர்மையாக்க மற்றவர்களின் ஆதரவை பெற கலைச்செல்வன், லக்சுமி ஆட்கள் மீது இவ்வாறன குற்றச்சாட்டை வைக்க வேண்டிய தேவை அவங்களுக்கு வருகிறது. இந்த முரண்பாட்டிக்கு நீங்கள் நியாயம் கற்பிப்பதற்கான தேவை ஒன்று ஏற்படும் தானே. ஒவ்வொரு சாதியிலும் பிறப்பது தற்செயல் நிகழ்வு. ஆதிக்க சாதியான வேளாளர்கள் என்று சொல்லப்படுகின்ற சமூகத்தில் பிறக்கிற ஆட்களை வந்து முழுக்க முழுக்க எங்கள் மீதான ஒடுக்குமுறையாளர்கள் என்று கருத இயலாது. ஏனென்றால் அதிலும் நல்ல சக்திகள் உண்டு. ஒடுக்குமுறைக்கு எதிராக செயற்படுகின்ற இடதுசாரி கருத்தியல் கொண்ட ஆட்கள் இருப்பார்கள். இலங்கையில் நடந்த சாதிய எதிர்ப்புப் போராட்டங்களை கவனித்தம் என்றால் அந்த போராட்டங்களில் தீவிரமாக முண்ணனி வகித்தவங்க வேளாள சமூகத்தை சேர்ந்த தங்களை சாதிய தற்கொலை செய்து கொண்ட இடதுசாரிய கருத்தியல் கொண்ட தோழர்களாக இருப்பாங்க.

எங்களை ஒடுக்கிற ஆதிக்கம் செலுத்துகிற தங்களின் சுய சாதியிலிருந்து விடுபட்டு தோழமையோடு எம்மை நோக்கி வருகின்ற சக்திகளை நாம் சாதியின் பெயரால் புறம் தள்ளக் கூடாதுதானே. இவங்களிட்ட சாதியம் தொடர்பான எந்த புரிதல்களும் இருக்கல்ல. கோட்பாட்டு அரசியலும் இருக்கல்ல. தங்களை முதன்மைப்படுத்துற அடையாள சிக்கல்தான் இவங்களிட்ட இருந்தது. இது கலைச்செல்வன், லக்சுமி பக்கத்திலிருந்து பறிக்கப்படுவதாக இவங்க நினைக்கும் போது இந்த முரண்பாடுகள் வருகிறது. இவங்களால சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்குதானே அந்தக் காரணங்கள் எல்லாம் வந்து சோடிக்கப்பட்ட கட்டுக்கதைகள் ஆகத்தான் இருந்தது. அதற்கான உருவாக்கத்திற்கான பின்புலமாக சோபாசக்தி தான் இருந்தவர். சோபாசக்தி நினைத்திருந்தால் அந்த பிரச்சனையை தீர்த்து இருக்கலாம்.

நான் எப்பவுமே புலிகள் மீதான விமர்சனத்தை வைப்பதற்கான காரணம் என்னவென்றால் புலிகள் எப்பவுமே ஒரு ஜனநாயக அமைப்புகளை ஜனநாயக சக்திகள் ஒன்று கூடுவதை எப்பவுமே விரும்புவது இல்லை. எங்க போராட்ட வரலாற்றை எடுத்து பார்த்தீர்களென்றால் ஈழத்தில் தமிழ்ப் பிரதேசங்களில், புகலிட நாடுகளில் சகல ஜனநாயக அமைப்புகளை உடைத்தது எல்லாம் புலிகள்தான். அதுக்குள்ள ஊடுருவுவார்கள் அல்லது அப்படியே உள்வாங்குவார்கள். அல்லது அதிகாரத்தை பயன்படுத்தி அப்படியே இல்லாமல் ஆக்குவார்கள். இதில் அபத்தம் என்னவென்றால் கலைச்செல்வன், லக்சுமி ஆளுமைக்குள் உட்பட்டிருந்த இவங்கள், சுயநலப்போக்கும், மோசமான அரசியலும் கொண்ட பிழையான சத்தியான சோபாசக்தியின் வலையில் சிக்கிக் கொண்டதுதான்.

தேசம்: புலிகள் எதையுமே உருவாக்கினது கிடையாது…

அசோக்: ஷோபாசக்தி புலிகளில் இருந்து வந்தபடியால் அவரிடமும் அந்த இயல்பு இருக்கும்.

நான் முதலே சொல்லிஇருக்கிறன் புலிகளிடமிருந்து வந்த யாரையும் நம்புவதும் இல்லை, நான் ஏற்றுக்கொள்வதும் இல்லை. போராளிகள் பற்றியதல்ல இந்த அபிப்பிராயம். புலிகளில் குறிப்பிட்ட மட்டங்களில் கருத்தியல் சார்ந்து இயங்கிய எல்லாரிடமும் தங்களைத் தவிர ஏனைய அமைப்புகள் உருவாகுவதையோ ஏனைய சக்திகள் உருவாகுவதையோ அவங்கள் விரும்புவது இல்லை. ஒரு இலக்கிய சஞ்சிகையோ, இலக்கிய சந்திப்போ சாதாரண அமைப்புகள் கூட தங்களை வரக்கூடாது என்றுதான் விரும்புவார்கள்.

தேசம்: தங்கட கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று நினைக்கினம்…

அசோக்: அப்படி தங்கட கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றால் உடைப்பார்கள் அல்லது அவர்கள் மீது ஏதும் அதிகாரத்தை பிரயோகிப்பார்கள். இலக்கிய சந்திப்புக்கும் அதுதான் நடந்தது. எக்ஸிலுக்கும் அதுதான் நடந்தது.

தேசம்: நீங்கள் இதே குற்றச்சாட்டை தான் ராகவன் நிர்மலா நித்தி மீதும் வைத்தீர்களா?

அசோக்: என்னைப் பொருத்தவரை இவர்கள் புலிகளை எதிர்க்கின்ற இன்னொரு புலிகள்தான். அதுல நீங்கள் ராகவன் ஆக இருந்தால் என்ன, நித்தியானந்தனாக இருந்தா என்ன நிர்மலாவாக இருந்தால் என்ன, முழு பேரும் அந்த மனோநிலையோடு, அந்த அந்த ஆதிக்க உளவியல் கட்டமைப்போடுதான் சிந்திப்பாங்க செயற்படுவாங்க. இவர்களை எல்லாம் ஒரு ஜனநாயக சக்தியாக நான் ஒருபோதும் பார்க்கவில்லை. ஏனென்றால் இருக்கிற முரண்பாடுகளை தீர்க்கின்ற நபர்களாக அவர்கள் எப்பொழுதும் இருந்ததில்லை. முரண்பாடுகளை கூர்மையாக்கி, குழுவாதத்தை உருவாக்கி தாங்க நினைப்பதை சாதிப்பாங்க. அதற்கு நாங்களும் துணை போவம். நீங்க பார்த்தீங்க என்றால் இவங்களுக்கு பின்னால் நாங்கதான் போனோமே தவிர எங்களுக்கு பின்னால் அவங்க வரவில்லை. தங்களின் அதிகாரத்தில் மேலாதிக்கத்தில் அவங்க கவனமாக இருந்தாங்க.

எல்லாத்தின் உடைவுகளுக்கும் மூல காரணங்களை தேடி போனீர்கள் என்றால் புலிகளில் இருந்த பழைய உறுப்பினர்களாக தான் இருப்பார்கள். ஒன்று சோபாசக்தி ஆக இருக்கும் ஒன்று ராகவன் ஆக இருக்கும், ஒன்று நிர்மலாவாக இருக்கும், இவர்கள்தான் பின்புலமாக இருந்திருப்பார்கள். இலக்கியச் சந்திப்புகளின் உடைவுகளை தேடி போனீர்கள் என்றால் முடிவு அங்க தான் இருக்கும். ஆனா என்னதான் உடைவு இருந்தாலும் சோபாசக்தி, ராகவன், நிர்மலா எனைய முன்னாள் புலிகள் இவங்களுக்குள்ள ஒற்றுமை இருக்கும். ஒரே அணியில இருப்பாங்க. யோசித்துப்பாருங்க. புலிகளின் வன்முறைகளுக்கும் கொலைக் கலாச்சாரத்திற்கும் எதிராக புகலிடத்தில் செயற்பட்ட TBC ரேடியோவுக்கு என்ன செய்தார்கள்? உங்க தேசம் இணையத்தளத்தை முடக்க தங்களின்ற குழுவாத கும்பல்களோடு சேர்ந்து கையெழுத்து வேட்டை நடத்தினாங்களே. இதையெல்லாம் எந்த நோக்கத்தில் செய்தாங்க.

தேசம்: புலிகள் என்பதும் எங்களுடைய சமூகத்தின் ஒரு உற்பத்தி தானே. நீங்க சொல்லுற இந்த குணாம்சம் இந்தப் பிரிவிடம் மிகக் கூடுதலாக இருக்கு என்று சொல்லவாறீர்களா?

அசோக்: எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் இந்தக் குணாம்சம் கொண்டவர்கள்தான் புலிகளிடம் போகிறார்களா அல்லது புலிகளுக்கு ஒரு சிந்தனை முறை இருக்குதானே புலிகளுடைய பயிற்றுவிப்பு கல்வியூட்டல்கள் சிந்தனை முறை இருக்குதானே அது இப்படித்தான் இவர்களை உருவாக்கிறது. தங்களை மீறி யாரும் வரக்கூடாது என்று. ஜனநாயக சக்திகளோ, தங்களை கேள்வி கேட்கின்றவர்களோ தங்கட இருப்புக்கு அது தடையாக இருக்கிறது என்று நினைப்பார்கள். தங்கட இருப்புக்கு ஒரு அமைப்பு சாதகமாக இருக்கும் பட்சத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ள நினைப்பார்கள். இல்லாதபட்சத்தில் அதை அழிப்பார்கள். இல்லாட்டி இவ்வளவு ஆரோக்கியமான இலக்கியச் சந்திப்புக்கு கடைசியில் என்ன நடந்தது?

இன்னொன்றையும் நீங்க அவதானிக்கலாம். புலிகள் பலரிடம் இந்த திறமை இருக்கு. எங்கட பலவீனங்களை கண்டு பிடித்து அதற்கு தீனி போடுவாங்க. பலரும் இவங்க பின்னால் அலைவதற்கு இதுவும் ஒருகாரணம். முற்போக்காளர்கள் என்று சொல்லிக் கொள்கிற நாங்க தனிப்பட்ட வாழ்வில் மிகமிக பலவீனமானவங்க. அத அவங்க தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறாங்க. எவ்வளவுதிறமை சாலி அவங்க பாருங்க.

தேசம்: இலக்கிய சந்திப்பு எப்படி இப்படி உடைந்தது ?

அசோக்: இலக்கியச் சந்திப்பின் உருவாக்கம் சிறு சஞ்சிகைகளினுடைய ஆசிரியர்களின் வாசகர்களின் இணைவாக இருந்து ஒரு காலகட்டத்தில் அராஜகங்களுக்கு எதிரான ஒரு வடிவமாக வருது ஜனநாயகத்தையும், அதிகார எதிர்ப்பையும் முன்னிலைப்படுத்திய புகலிட இலக்கியச்சந்திப்பை சார்ந்தவர்கள், விடுதலைப் புலிகளால் புகலிடத்திலும், இலங்கையிலும் இருந்த அச்சுறுத்தலால், விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்களாக இருந்தது இயல்பாக இருந்தது. அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரான ஒரு இயல்பான அரசியல் அதுக்குள்ள மேலோங்கியிருக்கிறது.

நான் முதலாவது இலக்கிய சந்திப்பில் தொண்ணூற்றி மூன்றாம் ஆண்டு கலந்து கொள்கிறேன். அதுக்குப் பிறகு இரண்டு இலக்கிய சந்திப்பு பாரிசில் நடந்தது. அதை நாங்கள் லக்ஷ்மி, கலைச்செல்வன், புஸ்பராஜா, அசோக் பிரகாஸ், கிருபன், மோகன், உதயன், யோகராஜா நடத்தினோம். நாங்க எல்லா இலக்கிய சந்திப்புக்கும் போவோம். ஜெர்மனியில்தான் அதிகம்தான் நடந்தது. 2009 மே முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பின்பு நிலைமை நிலமை மாறிப் போய்விட்டது. முள்ளிவாய்க்கால் பிரச்சனைக்குப் பிற்பாடு இலக்கிய சந்திப்பு ஒரு டேர்ன் எடுக்குது. முழுக்க முழுக்க புலிகள் அழிக்கப்பட்டதன் பிற்பாடு பாரிசில் நடந்த இலக்கிய சந்திப்பில் இலங்கை அரசு சார்பான ஒரு போக்கை அவர்கள் எடுக்கிறார்கள். அந்த எடுவைக்கு காரணம் அதுக்குள்ள இருந்த ஒரு சக்திதான். அதுல தலித் முன்னணி முக்கியமான ஆட்கள். அதுல ஷோபா சக்தியும் இருந்தவர். அடுத்தது ராகவன் ஆட்களும் அதுக்குள்ள இருந்தார்கள்.

புலிகள் மீது கடும் விமர்சனம் இருக்கு. முள்ளிவாய்க்கால் தொடர்பாக. பொதுமக்கள் அழிக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணம் புலிகளுடைய நடவடிக்கையும் ஒன்று. அது விமர்சிக்கப்பட வேண்டியது. புலிகள் மீது கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட வேண்டியது. அதற்காக நீங்கள் பேரினவாத அரசின் ஆதரவு சக்தியாக மாற முடியாது. நான் முள்ளிவாய்க்கால் படுகொலையை ஒரு இனப்படுகொலை என்றுதான் பார்க்கிறேன். அது தொடர்பாகக் கருத்து முரண்பாடு இருக்கலாம். மிக மோசமாக கொத்துக் கொத்தாக மக்கள் படுகொலை செய்யப்பட்டதை மறந்து இலங்கையில் ஜனநாயக சூழல் உருவாகிவிட்டது, ஜனநாயக இடைவெளி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லி இலங்கைப் பேரினவாத அரசு ஆதரவு நிலை கொண்டு நடத்தும் போது எப்படி எங்களால் ஏற்றுக் கொள்ளமுடியும். எப்படி நாங்கள் கலந்து கொள்ள முடியும்? அப்போ நான் அதில் இருந்து ஒதுங்கிக் கொண்டேன். இலக்கிய சந்திப்பின் பிரதான நோக்கத்தையே குழிதோண்டி புதைத்து விட்டார்கள்.

அதற்கு பிற்பாடு லண்டனில் நடந்த இலக்கிய சந்திப்பில் முரண்பாடு வருகிறது. இலக்கிய சந்திப்பை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சி நடக்குது. இந்த இலக்கிய சந்திப்பு புகலிடத்திற்காக, அதன் அரசியல் இலக்கிய சமூக வெளிக்காக உருவாக்கப்பட்டது. எனவே, இலங்கைக்கு கொண்டு போக முடியாதென்று என்று பலரும் இதை எதிர்க்கிறாங்க. புகலிட இலக்கியச் சந்திப்பை இலங்கைக்கு கொண்டு போவதற்கான அவசியம், காரணம் என்ன என்ற முக்கியமான கேள்வி எங்களுக்கு எழுகிறது

தேசம்: புகலிடத்திற்காக உருவாக்கப்பட்ட இலக்கிய சந்திப்பை ஏன் இவர்கள் இலங்கைக்கு கொண்டு போக விரும்புகின்றார்கள்?

அசோக்: நல்ல கேள்வி. இவங்க முழுப்பேர்களுமே குறிப்பாக தலித் முண்ணனி, பிள்ளையான் அணி, ராகவனும் அவருடன் சேர்ந்த ஆட்களைப் பார்த்தீர்கள் என்றால், வெறும் இலங்கை அரசு ஆதரவாளர்களாக இருந்தார்களே தவிர தனித்துவ அடையாளங்கள் அற்றவங்க இவங்க. ஆழமான அரசியல் புரிதல்களோ, இலக்கிய ஆற்றலோ அற்றவங்க. இவங்க இலங்கைக்கு, வெறும் இலங்கை அரச விசுவாசத்தோடு தமிழ்ப் பிரதேசங்களுக்கு செல்லமுடியாது. அங்க யாரும் இவர்களை கவனிக்க மாட்டார்கள். அப்ப இவங்களுக்கு அடையாளம், ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. இலக்கிய சந்திப்புக்கு ஒரு வரலாற்று தடம் பங்களிப்பு இருக்கிறது. இலக்கிய சந்திப்பு பற்றி இலங்கையில் பெரிய எதிர்பார்ப்பு உண்டு. அப்ப இந்த இலக்கிய சத்திப்பினுடாக, அங்கு தங்கட அடையாளத்தை, இருத்தலை நிறுவ முயலுறாங்க இதுதான் நடந்தது.

தேசம்: இதை உங்களைப் போன்றவர்கள் எதிர்க்க வில்லையா?

அசோக்: இவர்கள் இலங்கை அரசு ஆதரவு நிலைப்பாடு எடுத்ததன் பின் இந்த இலக்கிய சந்திப்பில் கலந்து கொள்வதை நான் விட்டுட்டன். ஆனா இவர்களின் இந்த செயற்பாட்டிக்கு எதிராக கடும் கண்டனங்களை எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறன். நான் சிறிரங்கன், நாவலன் பலர் இதுபற்றி எழுதியுள்ளோம்.

இலங்கைக்கு கொண்டு போவதற்கு இவங்க முடிவு செய்த லண்டன் இலக்கிய சந்திப்பில் பலர் இதனை எதிர்த்திருக்காங்க. கிருஸ்ணராஜா, லட்சுமி, சுசிந்திரன், றஞ்சி, சிவலிங்கம் தோழர் போன்றவங்க. புலம்பெயர் இலக்கியச் சந்திப்பு இது. நீங்கள் நாட்டுக்கு கொண்டு போக இயலாது என்று. அதை மீறித்தான் அவங்க அங்கு கொண்டு போகிறார்கள். அப்போ இந்த ஜனநாயகப் பண்பை எப்பவும் ஏற்கவில்லை தானே இவர்கள். நாங்கள் எதற்காக ஒரு அமைப்பை உருவாக்கினோம், எதனை நோக்கி உருவாக்கினோம் என்ற அடிப்படை அம்சங்கள் எல்லாவற்றையும் இல்லாமலாக்கிப்போட்டு, நீங்கள் உங்களுடைய சுயநலத்துக்காக, உங்களுடைய அரசியலுக்காக கொண்டு போகின்ற போக்கு இருக்குதானே அது எனக்கு பெரிய அதிருப்தியாக இருந்தது.

இந்த ஜனநாயகத் தன்மை கொண்ட இலக்கிய சந்திப்பை தங்களின்ற அதிகார மேலாண்மை இருத்தலுக்காக பயகன்படுத்திக் கொண்ட இந்த நபர்களை பார்த்தால், இவங்களின்ற இந்த இலக்கிய சந்திப்பு தொடர்பு இடைக்காலத்தில்தான் ஏற்பட்டது. ஆனால் இந்த குறுகிய காலத்தில் தங்களுக்கேற்ற குழுவாதத்தை முரண்பாட்டை உருவாக்கி இலக்கிய சந்திப்பை தங்கள் உடமையாக்கிக் கொண்டாங்க. இதனைத்தான் நான் புலிக்குணம் என்றது. இதுதான் எனக்கு இருந்த விமர்சனமே தவிர தனிப்பட்ட ரீதியில் இவங்களோட எந்த முரண்பாடுகளும் எனக்கில்லை. சந்திக்கும்போது கதைப்பதுண்டு. அதேநேரம் கருத்துக்களும் விமர்சனங்களும் எனக்கு இருக்கும். இங்க ஒன்றை பதிவு செய்யணும். இவங்கட முரண்பாட்டிக்கு பிறகு இவங்க வெளியிட்ட எக்சில் சஞ்சிகையின் அட்டையில் லக்சுமியைபற்றி மிக மோசமாக தாக்கி எழுதி இருந்தாங்க. ஒரு இலக்கிய சஞ்சிகையின் அட்டையில் ஒருவரை தாக்கி மோசமாக எழுதி வெளியிட்ட பெருமை இவங்களைத்தான் சாரும்.

 

முரண்பாடுகள், படுகொலைகள், மரணங்கள் – சபாலிங்கம் முதல்… புலம்பெயர் இலக்கியச் சூழல்: பாகம் 33

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 33 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 13.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

தேசம்: தோழர் திரும்பவும் நாங்க அந்த புலம்பெயர் அரசியல் சூழல் பற்றி கதைப்பம். கிட்டத்தட்ட 92 இலிருந்து 30 ஆண்டுகள் புலம்பெயர் அரசியல்ல இருந்திருக்கீங்கள். இந்த அரசியல் சூழலில் பெரிய மாற்றங்கள் வந்துட்டு. 92 ல இருந்து 2010 மட்டுமான 20 ஆண்டுகள் புலிகள் அதிகாரத்தில் இருந்த காலகட்டம். புலிகள் கட்டுப்பாட்டில் தான் புலம் பெயர்ந்த தேசங்களும் இருந்தது. அதுக்கு பிறகு புலிகள் இல்லாத காலகட்டம். நாங்க அந்த முதல் காலகட்டத்தை பார்ப்போம். அந்தக் காலகட்டம் கூட புலிகள் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. இங்கேயும் அரசியல் கருத்துக்களுக்கான சுதந்திரமின்மை ஒன்றும் இருந்தது. அதுகள பற்றி கொஞ்சம் சொல்லுங்க. ஏனென்டா நிறைய பேருக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது எவ்வளவு தூரம் அபாயகரமானதாக இருந்தது?

அசோக்: 92 களில் புலிகளின் அதிகார ராஜ்ஜியமாகத்தான் இருந்தது. சுதந்திரம் அற்ற தன்மை தான். புலிகள் பற்றி எதுவும் வெளிப்படையாகப் பேசமுடியாத சூழல். எங்கும் எதிலும் புலிகள்தான். அவங்களின்ற உளவு வலைப்பின்னல், கொலைக்கரங்கள் இங்க எல்லா இடங்களிலும் வியாபித்துக் கொண்டிருந்த காலம் அது. சிறுபத்திரிகைகள் வெளியிட இயலாது. புலிகளின் இந்த கருத்துச் சுதந்திர மறுப்பு, அடாவடித்தனங்களுக்கு எதிராக வெளிவந்து கொண்டிருந்த புகலிட இலக்கிய சஞ்சிகைகளின் வருகையும் இக்காலங்களில் குறைந்துவிட்டது. புலிகளுக்கு எதிரான ஒரு குரலா ஒலித்துக்கொண்டிருந்தது அந்த நேரத்துல இலக்கியச் சந்திப்புகள் தான்.

தேசம்: அது யார் தொடங்கினது…? எப்படி தொடங்கியது…?

அசோக்: அது ஜெர்மன்ல தான் 1988ல் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டது. சிறுபத்திரிகை ஆசிரியர்கள் படைப்பாளிகளின், இலக்கிய ஆர்வலர்களின் ஒன்று கூடலாகத்தான் இந்த இலக்கிய சந்திப்பு ஆரம்பத்தில் இருந்ததென நினைக்கிறேன். ஜெயரெத்தினம் என்ற இலக்கிய ஆர்வலரின் முன் முயற்சியால் இச்சந்திப்பு தொடங்கப்பட்டது. இதில் தோழர்கள் சிறி ரங்கன், பரா, பார்த்தீபன், பாரதி, சுசிந்திரன், சந்தோஷ், வாணிதாசன், ராகவன், சிவராஜன் போன்றவங்க முக்கியமானவர்களாக இருந்திருக்கிறாங்க. உண்மையில் இந்த இலக்கிய சந்திப்பின் வரலாற்றை சொல்லக்கூடியவர்கள் இவங்கதான். அது காலத்துக்கு காலம் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

தேசம்: அது எப்ப பாரிசுக்கு மாறுது…

அசோக்: 92 பாரிசில் நடந்த சந்திப்பில் தான் நான் முதலாவதாக கலந்து கொள்ளுறன். அந்த இலக்கிய சந்திப்பை பொறுப்பெடுத்து பாரிசில் நடத்தியவர்கள் கலைச்செல்வன், லஷ்மி, புஸ்பராஜா, சபாலிங்கம் போன்ற தோழர்கள்தான்.

நிறைய அரசியல் இலக்கியம் சார்ந்த நண்பர்களின் தொடர்வும் அறிமுகமும் இந்த இலக்கிய சந்திப்பில்தான் ஏற்படுகிறது. சபாலிங்கம் 94 மே யில புலிகளால படுகொலை செய்யப்படுகிறார்.

தேசம்: சபாலிங்கத்தை ஏன் புலிகள் கொலை செய்கிறார்கள்…?

அசோக்: சபாலிங்கம் ஆரம்ப காலத்திலேயே விடுதலைப் புலிகளோடு நெருக்கமான உறவில் இருந்தவர். இலங்கையில் மாணவர் பேரவையின் முக்கிய செயற்பாட்டாளராக இருந்தவர். ஒரு தடவை பிரபாகரன் காயப்பட்ட போது சபாலிங்கம் தான் அவரை காப்பாற்றி எல்லா உதவியும் செய்தவர்.

தேசம்: இலங்கையிலயோ…?

அசோக்: ஓம் இலங்கைல. அந்த காலகட்டத்தில் பிரபாகரனுக்கும் சபாலிங்கத்திற்கும் நெருங்கிய உறவு இருந்திருக்கிறது. அப்ப பிரபாகரனோட பலமும் பலவீனமும் சபாலிங்கத்துக்கு தெரியும். அவர் ஆவண சேகரிப்பாளர். அத்தோட அகதி தஞ்சம் கோருகின்றவர்களூக்கு உதவிகள் செய்றது. மனித உரிமைவாதி அவர். மனித உரிமைவாதி என்றால் புலிகளுக்கு சார்பாக இருக்க முடியாதுதானே. அப்ப விடுதலைப் புலிகளுக்கும் அவருக்கும் நிறைய முரண்பாடுகள் இருந்தது. அந்த நேரத்தில் அவர் தன்னைப்பற்றி ஒரு பயோகிராபி எழுத வெளிக்கிட்டவர். அவர் துணிந்தவர் நேரடியா ஓபனா கதைப்பார். அவர் பிரபாகரனை பற்றிய விமர்சனங்களை வெளிப்படையாக வைத்துக்கொண்டிருந்தவர்.

பரிஸ் இலக்கியச் சந்திப்புக்கு பிறகு சுவிஸ்ல இலக்கியச் சந்திப்பு நடந்தது. அதுல சபாலிங்கம், புஸ்பராஜா, கலைச்செல்வன், லச்சுமி எல்லாம் கலந்து கொள்கிறாங்க. அங்க நடந்த உரையாடலின் போது சபாலிங்கம் புலிகள் தொடர்பிலான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அது எப்படியோ புலிகளுக்கு…,

தேசம் : பொறுங்கோ இது தனிப்பட்டமுறையில நடந்ததா…?

அசோக்: இல்லை. இது இலக்கிய சந்திப்பில் நடந்தது.

தேசம்: தனிய புலிகள் மீது மட்டும் வச்சாதான் இல்ல பிரபாகரன் மீதும் அந்த விமர்சனத்தை வச்சாரா…?

அசோக்: புலிகள் வேற – பிரபாகரன் வேற இல்ல தானே. அந்த விமர்சனங்கள் ரெண்டுபேரையும் நோக்கி தான் போயிருக்கும். அது வந்து நான் நினைக்கிறேன், இவர் பயோகிராபி எழுதுற கதை வந்த காலகட்டங்களில் இவருடைய இந்த விமர்சனங்களும் அவங்களுக்கு ஒரு எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கும். அதுக்குப் பிறகுதான் இந்த படுகொலை நடந்தது.

தேசம்: அப்ப இந்த குறிப்பிட்ட சம்பவம் – குறிப்பிட்ட நிகழ்ச்சி தான் இதற்கு பிரதான காரணமாக இருந்தது…?

அசோக்: அந்த நிகழ்ச்சி ஒரு தூண்டுதல். ஆனா அவர் நீண்ட காலமாகவே புலிகளுக்கு எதிரானவராக புலிகளின் மனித உரிமைமீறல்கள், படுகொலைகள் தொடர்பாக கடும் விமர்சனங்கள் அவருக்கு இருந்தது.

தேசம்: அப்போ அவர் எழுதியிருக்கிறார் நிறைய ஏற்கனவே…?

அசோக்: அவர் எழுதியது குறைவு. அது சம்பந்தமான டொக்கியூமென்ற்ஸ் எல்லாம் சேமித்து வைத்திருந்தார். புலிகளுடைய படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான எல்லா ஆவணங்களையும் சேர்த்துக் கொண்டிருந்தவர். அடுத்தது புலிகள் மாத்திரமல்ல, புதியதோர் உலகம் இருக்குதானே. புளொட்ல நடந்த படுகொலைகள் தொடர்பாக கோவிந்தன் என்ற பெயரில் தோழர் கேசவன் எழுதின புத்தகம், அதைக் கூட இங்க ரீ பிரின்ட் போட்டவர். இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆவணங்களை எல்லாம் அவர் சேர்த்தவர். அவர் புலிகளுக்கு எதிரா மாத்திரமில்லை அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் எதிராகவும் இருந்தவர். கூடுதலா அந்த நேரத்தில் புலிகள் அதிக படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்ததால அவருடைய கவனம் அவர்கள் மீது போனது.

தேசம்: அவருடைய கொலை வந்து எவ்வளவு பெரிய தாக்கத்தை புலம்பெயர் தேசங்களில் ஏற்படுத்தியிருந்தது..?
அசோக்: அது ஜெயபாலன், நிறைய பேரை பயமுறுத்தி போட்டுது.

தேசம்: சபாலிங்கம் படுகொலை தான் முதன்முதலில் இலங்கை, இந்தியாவுக்கு வெளியே நடந்த முதல் படுகொலை என நினைக்கிறேன்.

அசோக்: ஓம் புலம்பெயர் தேசத்தில் நடந்த முதல் படுகொலை. அந்தப் படுகொலைக்கு பிறகு சுதந்திரமா பேசுற தொணி எல்லாம் ஆட்களுட்ட குறைஞ்சு போய்விட்டது. ஏன் சபாலிங்கம் செத்தவுடனயே துண்டுப்பிரசுரம் வெளியிடுவதற்கு கூட யாருமே முன்வரவில்லை தானே. அந்த நேரம் மனிதம் குரூப் இருந்தது சுவிஸ்ல, அவங்க தான் முதன்முதலில் சபாலிங்கம் படுகொலை பற்றி கடுமையான அறிக்கை விட்டவங்க. அது மாதிரி இங்க பாரிசில் நாங்க ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தனாங்க. அந்த அறிக்கைய துண்டுப் பிரசுரத்தை விநியோகிக்க ஆக்கள் எவருமே வரவில்லை. பயம் நிறைய பேருக்கு. கடைசியில் நானும், இப்ப லண்டன்ல இருக்க நாவலனும் தான் வினியோகித்தம். அப்படியான நெருக்கடிதான் இருந்தது. அதுக்குப் பிறகு நாங்கள் சபாலிங்கம் காலமாகி ஒரு மாதத்தில் அஞ்சலிக் கூட்டம் நடாத்தினோம். அஞ்சலி கூட்டத்துக்கு வருவதா நிறைய பேர் சொன்னவங்கள். எதிர்பார்த்த அளவுக்கு யாருமே வரல. பேசுவதா ஒப்புக்கொண்ட ஆக்கலும் கூட வரல. கடைசியா நானும் தோழர் அழகிரி, சுகன், யோகராஜா நாங்க தான் பேசினது. நான் நினைக்கிறேன் ஒரு 15 பேர் தான் வந்திருப்பாங்க. அதுவும் பயந்து பயந்து வந்தவங்க. யாருமே வரல. அப்படி ஒரு பயத்தை அது கொடுத்திருந்தது.

தேசம்: இந்தக் கொலை சம்பந்தமாக யாராவது கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருந்ததா…?

அசோக்: அந்த வழக்கில் யாருமே கைது செய்யப்படவில்லை. வெளி நாட்டவர்கள், அகதிகள் மத்தியில் இதுபோன்ற படுகொலைகள் நடந்தால் இந்த அரசுகள் பெரிய கவனம் கொள்ளாது. தங்களுக்கு பாதிப்பு வந்தால் மட்டும்தான் கவனம் கொள்ளுவாங்க.

தேசம்: பிரித்தானியாவிலும் அப்படியான சம்பவங்கள் நடக்கிறதுக்கான வாய்ப்புகள் …

அசோக்: ஓம். குறைவு.

தேசம்: குறைவு எண்டில்ல அப்படி நடந்திருந்தால் கைதுசெய்யப்பட்டு இருப்பாங்க. தப்பி போவதற்கான வாய்ப்பு இல்லை. பிரான்சுல இத கண்டும் காணாம விடுறது. தங்களுக்குள் மோதிக் கொண்டு போகட்டும் என்று…

அசோக்: ஓம். அவங்களைப் பொறுத்தவரை தங்கள் சமூகததை, தங்கள் சட்டம் பாதுகாப்பை பாதித்தால், தங்களோட அரச நிர்வாகத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் பட்சத்தில் நடவடிக்கை எடுப்பாங்க. அதுவரை அது அவங்களுக்கு வெளிநாட்டார் பிரச்சனைதான். அது எங்க சமூகத்தோட பிரச்சனை. எத்தனை படு கொலைகள் நடந்தது. ஒரு தடவை யோகராஜா என்ற தோழரை புலிகள் தாக்கினாங்க. அவர் EPRLF தோழர். அவரும் நானும், நாவலனும் போய் பொலிசில் முறையிட்டோம். பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவங்களைப் பொறுத்தவரை இது தங்கட பிரச்சனை அல்ல. வெளிநாட்டார் பிரச்சனை. இப்படி பல சம்பவங்கள்…

தேசம்: அதனாலதான் புலிகளுடைய படுகொலை கடைசியானதுமில்ல. தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருந்தது.

அசோக்: ஓம்.

தேசம்: பாரிஸில் தான் கூடுதலான படுகொலைகள் நடந்தது. நாதன் படுகொலை …

அசோக்: ஓம். புலிகளுடைய படுகொலைகள் எல்லாம் வந்து, அரசுகள் பெருசா கவனத்தில் எடுத்து எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல. அது அவங்களுக்கு சாதகமா போய்விட்டது. அடுத்தது ஆட்களைக் கடத்திக் கொண்டு போய் அடிக்கிறது தொடர்பான பிரச்சனைகளும் இருந்தது தானே. இங்க மாத்திரம் இல்லை, அதை எல்லா இடங்களையும் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

தேசம்: அடிக்கிறது நடந்திருக்கிறது. ஆனா கொலை அளவுக்கு மற்ற நாடுகளில் போகல.

அசோக்: அந்த சூழல் பெரிய மோசமான ஒரு சூழல் தான். அதுக்குப் பிறகுதான் சிறு சஞ்சிகைகள் வெளியிடுவதற்கான தயக்கம் நிறைய பேர்கிட்ட வந்தது.

தேசம்: அப்படியிருந்தாலும் பரிஸில நிறைய இலக்கிய ஈடுபாடு நடந்தது. அந்த நேரம் ஒரு காலகட்டம் வரைக்கும் – நான் நினைக்கிறேன் 2007 வரைக்கும் புலம்பெயர் இலக்கியத்தின் ஒரு மையமாக பரிஸ் இருந்தது என்டு.

அசோக்: ஓம் ஆரம்பத்தில் மனோ ‘ஓசை’ சஞ்சிகையை வெளியிட்டவர். நான் வந்து முதன்முதல்ல அவருடைய சஞ்சிகையில தான் துடைப்பான் என்ற பெயரில் எழுதினனான். ஒரு இலக்கிய உறவு அவரோட தான் ஏற்பட்டது. ஓசை சஞ்சிகைக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி வந்தபோது தோழர் சபாலிங்கம்தான் உதவினவர். சபாலிங்கம் படுகொலைக்கு பிறகு ஓசை வெளிவரவில்லை. பிறகு மனோ ‘அம்மா’ என்றொரு சஞ்சிகை கொண்டு வந்தவர்.

தேசம்: அம்மாவுல தான்; நீங்க சேனன்…?

அசோக்: சேனன், வின்சென்ட் ரபேல் பலரும் எழுதினாங்க. நான் எழுதல்ல. அது சிறு கதைகளுக்காக கொண்டுவரப்பட்ட சஞ்சிகை. சபாலிங்கத்தின் படுகொலை அரசியல் எழுத்துக்களை கொண்டு வரும் பயத்தை கொடுத்து விட்டது.

தேசம்: அது 2000க்கு முன்பே வந்துட்டுதா…?

அசோக்: ஓம் வந்துட்டுது. அதோட அரவிந்தன், முகுந்தன், எல்லாருமாக சேர்ந்து ‘மௌனம்’ என்ற சஞ்சிகையை வெளியிட்டாங்க.

பிறகு ‘எக்ஸில்’ வந்தது. லட்சுமி, கலைச் செல்வன், ஞானம், விஜி, கிருஸ்ணராஜா ஆட்கள் சேர்ந்து இந்த சஞ்சிகையை கொண்டு வந்தாங்க. பிறகு அதுல முரண்பாடுகள் ஏற்பட்டு பிரிந்து, அதுக்கு பிறகு லட்சுமி கலைச்செல்வன் ‘உயிர் நிழல்’ என்ற சஞ்சிகையை கொண்டு வராங்க. பரிஸ் வந்து ஒரு அரசியல் இலக்கிய மையமாக இருந்தது.

தேசம்: 2007-2010 பரிஸ் ஒரு முக்கிய மையமாகத் தான் இருந்தது.

அதே நேரம் பரிஸ் ஒரு இலக்கிய அரசியல் முரண்பாட்டின் மையமாகவும் இருந்தது.

அசோக்: ஓம்… ஏனென்றால் இங்க வந்து அரசியல் இலக்கிய பிரக்ஞை உள்ள ஆட்கள் நிறைய பேர் இருந்தாங்கள். புலிகளோட நெருக்கடி இருந்த அந்த காலங்களில் எங்களுக்குள்ள அதற்கெதிரான ஒரு உத்வேகம் ஒற்றுமை இருந்தது. அதே நேரம் நீங்க சொல்வதுபோல் எங்களுக்குள்ளும் முரண்பாடுகள் இருந்தன.

தேசம்: புலிகளுடைய காலத்தில் புலிகளின் இந்த செயற்பாடுகள். உங்களுக்கு ஒரு ஊக்க சக்தியாகவும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.?

அசோக்: புலிகளுடைய அடக்குமுறை என்பது ஐரோப்பிய நாடுகளில் எல்லா இடங்களிலும் பரவித்தானே இருந்தது. இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது தானே… அதற்கு எதிரான பிரச்சாரங்களை செயற்பாடுகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்தோம். இன்று புலி எதிர்ப்பு பேசுகிற பலரை அந்தக் காலத்தில் நான் கண்டதே இல்லை. 2009க்கு பிறகு நிறைய புலி எதிர்ப்பாளர்களை சந்திக்கிறன். இப்போ பேசுறது பிழை இல்ல. ஆனா அந்தக் காலத்துல அவங்களோட குரல் புலிகளுக்கு எதிராக ஒலிக்கவில்லை.

தேசம்: ஒலிக்க வேண்டிய காலத்தில் அது ஒலிக்கல்ல. ஒரு சந்தர்ப்பவாதமா தான் பார்க்க வேண்டியிருக்கு.

அசோக்: ஓம்.

தேசம்: அப்படி யாரைப் பார்க்கிறீர்கள் நீங்கள்…?

அசோக்: பெயர்கள் வேண்டாம். நிறைய பேர் இருக்கிறார்கள் அப்படி.

அந்த நேரத்தில கலைச்செல்வனும் நண்பர்களும் சேர்ந்து பள்ளம் என்றொரு இலக்கிய சஞ்சிகையை வெளியிட்டாங்க. இதற்காக புலிகள் கலைச் செல்வனைக் கடத்தி சென்று சித்திரவதை செய்தாங்க. இப்படி புலிகளின் வன்முறைக்கலாச்சாரம் இங்க இருந்தது.

தேசம்: கலைச்செல்வன் உங்களுடைய நெருங்கிய நண்பர்.

கலைச்செல்வன் எனக்கு மாத்திரம் அல்ல பலருக்கும் நெருங்கிய நண்பனாக இருந்தவர். உதவும் குணத்திற்கும், ஆபத்தில் உதவுவதற்கும் உதாரணம் காட்டமுடியும் என்றால் அது கலைச்செல்வனாகத்தான் இருக்கமுடியும். நிறைய தோழர்களிடையே நல்ல உறவு இருந்தது. ஒரு காலகட்டத்தில் மிக தீவிரமாக எல்லோரும் வேலை செய்தார்கள். அவர்களுடைய அந்த அராஜகங்களுக்கு எதிரான குரலையும் நடவடிக்கையும் நாங்கள் மறுக்க இயலாது.

தேசம்: அதை யாரும் மறுப்பதற்கில்லை.

அசோக்: அடுத்தது புஸ்பராஜா தோழர். எல்லாருக்கும் ஊக்கமாக இருந்தவர் அவர் சபாலிங்கத்தின் மிக நெருங்கிய நண்பராக இருந்தவர். சபாலிங்கம் படுகொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் மிக நெருக்கமாக இருந்தவரும் அவர்தான்.

தேசம்: மற்றது அவருடைய ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற வரலாற்று நூலும் மிக முக்கியமானது. அதுல பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அதை ஆவணப்படுத்தி நூலாக கொண்டு வந்தது ஒரு முக்கியமான விஷயம்.

அசோக்: அடுத்தது புஸ்பராஜா தோழர் எங்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவும் இருந்தவர்.

தேசம்: அரசியல் இலக்கிய தளங்களில் பரா மாஸ்டரின் பங்களிப்பும் முக்கியானது.

அசோக்: தோழர் பரா குடும்ப உறுப்பினர்கள் முழுப்பேருமே அரசியல் இலக்கிய மற்ற மனித உரிமை விடயங்களில் நிறைய செயற்பட்டாங்க. மல்லிகா, உமா, சந்தோஸ் எல்லாரும். இவங்க சிறு சஞ்சிகை ஒன்றைக் கூட வெளியிட்டாங்க. ‘சிந்தனை’ என்று பெயர்.

பாரா தோழருக்கு நீண்ட அரசியல் வரலாறு உண்டு. இலங்கையில் இடதுசாரி தொழிற்சங்கங்களை உருவாக்கியதில், அதனை முன்னெடுத்ததில் பரா தோழருக்கு நிறைய பங்குண்டு. அந்த வரலாறுகளெல்லாம் பதிவு செய்யப்படவேண்டியது. நானும் ஜெகாவும் பரா தோழரின் அனுபவங்களை ஒளிப்பதிவு செய்தோம். எழுத்தில் கொண்டு வரமுடியல்ல. சுவிஸ்ல ‘மனிதம்’ என்றெரு சஞ்சிகை நீண்ட காலம் வெளிவந்தது. அவங்க அமைப்பு வடிவத்தில் இயங்கினாங்க. ‘மனிதம்’ குரூப்புக்கு வரலாறு ஒன்று இருக்கு. ஒரு காலகட்டத்தில் பரிஸ் மாதிரி, சுவிஸிலையும் மிக மோசமான நெருக்கடியை புலிகள் கொடுத்தார்கள். அதற்கு எதிராக மனிதம் குரூப் நிறைய வேலை செய்தது. அந்த நண்பர்கள் துணிந்து புலிகளுக்கு எதிராக செயற்பட்டார்கள். ஜே ர்மனியில் தான் நிறைய சிறு சஞ்சிகைகள் வெளிவந்தன. பார்த்தீபன் ஆட்கள் ‘தூண்டில்’ என்றும், நிருபா ‘ஊதா’ என்றும், பாரதி ஆட்களும் ஒரு சஞ்சிகை வெளியிட்டாங்க. நான் இங்கு வருவதற்கு முன்னர் 80களின் கடைசி வரை நிறைய சிறுசஞ்சிகைகள் வெளிவந்திருக்கின்றன. எப்படியும் சுமார் 25 சஞ்சிகைகள் வெளி வந்திருக்கும் என நினைக்கிறன். அந்தளவிற்கு இலக்கிய சூழல் இருந்தது.

தேசம்: உங்களை பொறுத்த வரைக்கும் நீங்கள் பாரிஸில் வாழ்ந்தாலும் கலை இலக்கியச் சூழலை பொருத்த வரைக்கும் நீங்கள் எல்லைகளை கடந்து தான் வேலை செய்தீர்கள்.

அசோக்: இங்க வந்த பின் நிறைய தொடர்புகள் இருந்தது. Human Rights Watch என்ற மனித உரிமை அமைப்புடனும் உறவு இருந்தபடியால் அதன் ஆங்கில, தமிழ் பிரசுரங்களை யூரோப் ஃபுல்லா நாங்கள் விநியோகித்திருக்கிறோம். அந்த நேரம் நான் வேலை செய்ததை விட இதற்குப் பின்னால் அலைந்ததுதான் கூட. இதனால் நிறைய வேலைகளை இழந்திருக்கிறேன். தெரியும் தானே வேலைக்கு போனால் ஒழுங்காக வேலைக்கு போக வேண்டும். ஒருநாள் போகாவிட்டாலும் பிரச்சனை. நான் இப்படி ஜெர்மன், பெர்லின் போனேன் என்று சொன்னா இங்க வேலை போய்விடும்.

அடுத்தது தோழர் உமாகாந்தன். அவரும் இறந்து போய்விட்டார். அவரும் முக்கியமானவர். கட்டாயம் நிறைய பெயர்களை குறிப்பிட வேண்டும். ஆனால் பெயர்கள் உடனடியா ஞாபகம் இப்ப வரவில்லை. இந்த பெயர்களையெல்லாம் பதிவு செய்யவேண்டும். அடுத்தது நாங்கள் ‘நண்பர்கள் வட்டம்’ ஒன்றை இங்கு வைத்திருந்தோம். அந்த நண்பர்கள் வட்டத்துக்கு ஊடாக நிறைய வேலை செய்திருக்கிறம். நிறைய சந்திப்புகளை, கலந்துரையாடல்களை செய்திருக்கிறம். நிறைய புத்தக வெளியீடுகளை குறும்பட நிகழ்வுகளை புகைப்பட கண்காட்சி எல்லாம் செய்திருக்கிறம். நண்பர்கள் வட்டத்தில கலைச்செல்வன், லஷ்மி, அசோக் பிரகாஷ், கிருபன், மோகன், வன்னியசிங்கம், பிரதீபன், உதயகுமார் என்று நிறைய நண்பர்கள் இருந்தாங்க.

தேசம்: மற்றது நீங்கள் ‘அசை’ என்று ஒரு சஞ்சிகை கொண்டு வந்தீங்க அல்லவா?

அசோக்: அது மூன்று இதழ் வந்தது. அது ஒரு அரசியல் கோட்பாட்டுசஞ்சிகை. தொடர்ச்சியாக கொண்டுவரமுடியல்ல.

தேசம்: மற்றது இங்கே இருந்து அரசியல் கலை இலக்கியத்துடன் ஈடுபட்டவர்கள் கனடா வேறு நாடுகளுக்கும் போயிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அசோக்: இங்கே இருந்து நிறைய பேர் போயிருக்கிறார்கள். வின்சென்ட் ரபேல், சேனன், கற்சுறா…

தேசம்: சேனன் லண்டனில் இருக்கிறார். கற்சுறா …

அசோக்: கற்சுறா, வின்சென்ட் ரபேல் கனடாவில் இருக்கிறாங்க. அவர் நிறைய திறமைசாலி. மொழியியல் தொடர்பாக மிக புலமைகொண்டவர். கற்சுறா இங்க இருக்கும் போது தேவி கணேசன் என்ற பெயரில் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவர். நல்ல சிறந்த கவிஞராக வரவேண்டியவர். சேனனின் இன்றைய அரசியல் வளர்ச்சியும் செயற்பாடும் முக்கியமானது. அவர் பாரிசில் இருந்திருந்தால் சோபாசக்தியோடு சேர்ந்து தன் அரசியலை அழித்திருப்பார். தப்பிவிட்டார்…

ஜெர்மனியில் சுசீந்திரன், பாரதி, சிறிரங்கன், பார்த்தீபன், சிவபாலன் என்று நிறைய. பார்த்தீபன் தூண்டில் என்றொரு சஞ்சிகையை வெளியிட்டவர். மற்றது பெண்கள் தொடர்பான நிறைய சந்திப்புகள் நடந்தது. இலக்கிய சந்திப்பு மாதிரி ‘பெண்கள் சந்திப்பு’ ம் இருந்தது. அதுல நிறைய பெண்கள் கலந்து கொண்டார்கள். இதுவும் ஜெர்மனியில் தான் 1990 இல் உருவானது. ஆரம்பத்தில் இதனுடைய முன்னணி செயற்பாட்டாளராக தேவிகா கங்காதரன் இருந்தாங்க என நினைக்கிறன். பிறகு தொடர்ச்சியான செயற்பாட்டில் நிருபா, உமா, இன்பா, ரஞ்சினி, மல்லிகா, தேவா …

தேசம்: லண்டனில் ராஜேஸ் பாலா…

அசோக்: ஓம். ராஜேஷ் பாலாவும் அதில் இருந்தாங்க. பிரான்சிலிருந்து லக்சுமி, சுவிசிலிருந்து ரஞ்சி, நோர்வேயிலிருந்து தயாநிதி போன்றவங்க முக்கியமானவங்களாக அதனோடு செயற்பட்டாங்க. தயாநிதி அந்த நேரத்தில காத்திரமான பெண்ணிய கோட்பாட்டு சஞ்சிகை ஒன்றை கொண்டு வந்தாங்க. சக்தி என்று பெயர். காலப்போக்கில் இலக்கிய சந்திப்பிலும், பெண்கள் சந்திப்பிலும் முரண்பாடு வந்தது என்பது இன்னுமொரு வரலாறு. ஒரு காலகட்டத்தில் ஆரோக்கியமான செயற்பாடுகளில் பெண்கள் சந்திப்பும், இலக்கிய சந்திப்பும் இருந்தது.

தேசம்: அடுத்தது பரிஸ் அரசியல் இலக்கியத்துக்கான களம். தலித் முன்னணியின் உருவாக்கம் ரஜாகரனுடைய கட்சியின் உருவாக்கம்.

அசோக்: நான் இங்க வந்ததும் ரஜாகரனுடன் தான் உறவு ஏற்பட்டது.

தேசம்: உறவுகளும் அதைத் தொடர்ந்து முரண்பாடுகளும்,,,

அசோக்: ஹட்டன் நெசனல் வங்கி கொள்ளை தொடர்பான பிரச்சனைகளிளால் இந்த முரண்பாடு வருகின்றது. அவர் ஜனநாயக உரையாடலுக்கான ஆளில்லை. தன்னுடைய கருத்துக்குக்கும் ஆளுமைக்கும் உட்பட்டு நாங்க இருந்தா அவருக்கு அது ஓகே. எந்த பிரச்சனையும் இல்லை. ஹட்டன் நெசனல் வங்கி கொள்ளை தொடர்பாக கேள்வி கேட்கத் தொடங்கித்தான் இந்த முரண்பாடுகள் வந்தது.

தேசம்: அவருடைய மொழியும் ஒரு ஆணாதிக்க மொழிதான்.

அசோக்: ஆனால் தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு நல்லவர். உபசரிப்பது, உதவி செய்வது. நான் வந்த பொழுது மிக நெருக்கடியான பொருளாதார நிலையில் நான் வீடு எடுப்பதற்கு அட்வான்ஸ் தந்ததே அவர்தான். பிறகு ஆரம்ப காலத்தில் எனக்கு ஒரு கேமரா வாங்கி தந்தார். எல்லாப்பணமும் கொடுத்து விட்டேன். நல்ல உபசரிப்பு செய்வார். ஆனால் அவருடைய தவறுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். கேள்விகள் கேட்டால் பிரச்சனை.

தேசம்: ஏற்றுக் கொள்ளும் வரைக்கும் பிரச்சினையில்லை…

அசோக்: ஒரு காலகட்டத்தில் மிக நெருக்கமான நண்பர்களாக தான் நாங்கள் இருந்தோம். இப்படி அரசியல் முரண்பாட்டுக்கு அப்பால் தனிப்பட்ட ரீதியில் பார்த்தோம் என்றால் மிக அன்பான ஆட்களாக இருப்பார்கள். கஷ்டத்தில் உதவி செய்கிற தன்மை எல்லாம் இருக்கும். ஆனால் நிபந்தனை அடிப்படையில் தான் அது அமையும் அது கஷ்டம் எங்களுக்கு.

தேசம்: அதே மாதிரி தலித் முன்னணியுடன் உங்களுக்கு நிறைய முரண்பாடுகள் இருந்தது என்று நினைக்கிறேன்…

அசோக்: ஓம். தலித் முன்னணியினர் எனக்கு முதலே நண்பர்கள். தேவதாஸ், அசுரா என்கிற நாதன்.

தேசம்: ஏன் அந்த முரண்பாடு உங்களுக்கு தலித் முன்னணி உடைய ஏற்படுகிறது? என்ன பிரச்சினை அது?

அசோக்: தலித் முன்னணியுடன் இலங்கை அரசியல் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுதான். விடுதலைப் புலிகள் மீது எத்தகைய கடும் விமர்சனம் வைத்திருக்கிறனோ, அதைவிட மிகக் கடுமையான விமர்சனம் இலங்கை அரசு மீதும் எனக்கு இருக்கு. பேரினவாத அரசு ஒடுக்குமுறைகளை புறம்தள்ளி விட்டு, புலிகள்தான் எங்கள் எதிரி என்று சொல்லிக் கொண்டிருக்கமுடியாது. அப்போ இரண்டையும் நாங்கள் எதிர்க்க வேண்டும். புலிகளை எதிர்க்கிற அந்நேரம், பேரினவாத அரசையும் எதிர்க்க வேண்டும் என்ற உணர்வு என்னிடம் இருக்கிறது.

2009க்கு பிற்பாடு தான் என்னுடைய நிறைய தோழர்களுடன் முரண்பாடு வருது. அதுவரையில் மிக தீவிரமாக புலி எதிர்ப்பாளர்களாக, அனைத்து அடக்குமுறைகளுக்கு எதிராகவும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதாக சொல்லிக்கொண்ட நாங்கள், புலிகள் அழிக்கப்பட்ட உடனேயே இன்னாரு ஒடுக்குமுறையாளனான இலங்கை பேரினவாத அரசோடு இணைகிறோம். அதனை ஆதரிக்கிறம் .நியாயப்படுத்துறம்.

விமர்சன பூர்வமான கண்ணோட்டத்தோடு மக்களின் நன்மைக்காக நாங்கள் இலங்கை அரசோடு பேசலாம். அந்த வகையில் நீங்கள் மக்களின் நன்மைக்காக மக்களின் விடுதலைக்காக பேசுவது தவறு இல்லை. ஏனென்றால் நீங்கள் உரிமை பற்றி பேச வேண்டும் என்றால் உடன்பாட்டுக்கு வர வேண்டுமென்றால் அந்த அரசுடன் தான் பேச வேண்டும். ஆனால் அவங்க தனிப்பட்ட நலன்களுக்காக போய்ச் சேருகிறார்கள் ஆதரிக்கின்றார்கள் . அதை என்னால் சகிக்க முடியாமல் போய்விட்டது. வர்க்கத்தாலும், சாதித்தாலும் ஒடுக்கப்பட்ட எங்கட மக்களின் விடுதலை உரிமை பற்றி பேசுவதுதான் தலித்திய அரசியல். ஆனால் இவங்க ஒடுக்குமுறையாளர்களுடன் தனிப்பட்ட சுயநலன்களுக்காக கைகோர்க்கிறாங்க.

தேசம்: பொதுவாக பாரிஸ் இலக்கியத் தளம், அரசியல் தளம் போன்றவற்றில் பேசப்பட்ட மிகக் கூர்மையான முரண்பாடு என்டு நினைக்கிறேன். ஞானம் அவர்களுடனான முரண்பாடு. அது எப்படி..? அது வந்து அவர் இருக்கிற அரசியல் நிலைக்காக அல்ல. அதுக்கு முதலே அந்த முரண்பாடு வந்துட்டு என்டு நினைக்குறேன்.

அசோக்: ஞானம் பற்றி முன்னர் கதைத்திருக்கிறன் என நினைக்கிறன். நான் பாரிசிக்கு வந்த புதிதில் எனக்கு உதவி செய்ததில் முக்கியமானவர் ஞானம்.

தேசம்: அவர் மட்டக்களப்புகாரர் தானே…?

அசோக்: நாங்க ஒரே கிராமத்தை அதாவது களுதாவளை கிராமத்தை சேர்ந்தவங்க. புளொட் மாணவர் அமைப்பில் வேலை செய்தவர். மிகவும் நல்லவர். நல்ல திறமைசாலி. நல்ல ஆற்றலும் திறமையும் உள்ளவர். இங்க பாரிசிக்கு வந்த போது அவர் செய்த உதவிகளை மறக்கமுடியாது. இதுபற்றி முன்னர் சொல்லி உள்ளேன். இதில ஒரு பெரிய சிக்கல் என்னென்டு கேட்டால், வெறும் புலி எதிர்ப்பு என்று சொல்லி சொல்லி இலங்கை அரசோடு அதன் ஆதரவு சக்திகளோடு இணைய முடியாது. போய் சேர ஏலாது. அத்தோட புலிகளிலிருந்து கொண்டு எங்கட மக்களையும் தோழர்களையும் நண்பர்களையும் கொடுரமாக கொன்றொழித்துவிட்டு புலிகளோடு இருந்த காலத்தில் எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்து விட்டு அதிகாரப் போட்டியால் தனிப்பட்டமுரண்பாடுகளினால் வெளியேறி விட்டு புலிகளை எதிர்க்கின்ற எந்த பேர்வழிகளையும் நான் நம்புவதில்லை.

புலிகள்ல மேல்மட்டங்கள்ல வேலைசெய்தவங்கள் இருக்காங்கள் தானே… நான் இவங்களை எப்போதும் எப்போதுமே நம்புறது இல்ல. புலிகளோட மனோநிலை என்டுறதுல ஒரு உளவியல் கட்டமைப்பு இருக்கும். அவங்கள் இயல்பாகவே அந்த உளவியல் கட்டமைப்பால் வடிவமைக்கப்பட்டிருப்பாங்க. அவங்களிட்ட ஜனநாயக பண்பாடே இருக்காது. ஜனநாயக அமைப்புக்களுக்கு எதிராக இருப்பாங்கள். புலிகள எதிர்க்கின்ற இன்னோரு புலிகளாதான் இருப்பாங்கள். அப்படி தான் நான் பிள்ளையானையும் , கருணாவையும் பார்க்குறன். அப்ப ஞானம் போன்ற ஆட்களின் இணைவு என்டது பலத்த அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் கொடுத்தது.

நீங்கள் ஒரு இடதுசாரிய முற்போக்கு சிந்தனைகளுடன் வளர்ந்தவர்கள் – பேசுபவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் கருணாவோடயும் பிறகு பிள்ளையானோடயும் – எந்த அடிப்படையில எப்பிடி வேலைசெய்வீங்கள். விடுதலைப் புலிகள் என்ற சொல்லாடலே ரத்தவாடை அடிப்பது. பிள்ளையான் கட்சியின் பெயரைப் பாருங்கள். தமிழ் மக்கள் வடுதலைப் புலிகள் . அதே ரத்தவாடை அடிக்கும் சொல்லாடல். இவர்கள் வன்னிப் புலிகளை எதிர்த்தார்களே தவிர எண்ணமும் செயலும் மனக் கட்டமைப்பும் புலி அரசியலைக் கொண்டதுதான்.

புலிகள் பிற்போக்குத்தனமான அரசியலை கொண்டு தமிழ்தேசிய வாதத்தை அணுகினாங்க. அதன் விளைவுகளை நாங்க பார்த்தோம் அனுபவித்தோம். இதே அரசியலை பிற்போக்கு அரசியலை கொண்டு பிள்ளையான் கட்சியினர் பிரதேசவாத அரசியலை கட்டமைக்கிறாங்க. எப்போதுமே தேசியவாதம், பிரதேச வாதம் போன்ற அடையாள அரசியல்கள் பிற்போக்குத்தனமான சிந்தனைகளையும் சுய நல பிழைப்பு வாதத்தையும் கொண்டவங்க கையில் அகப்படும் போது அது ஆபத்தான விளைவுகளைதான் கொடுக்கும். இவ்வாறான பிற்போக்குத்தன அரசியலை வைத்து அரசியல்வாதிகளும், அவர்களை அண்டிப்பிழைப்பவர்களும் வாழ்வாங்க. ஆனா பாதிக்கப்படுவது அப்பாவி மக்களும், இளம் தலைமுறையும்தான். இத நாங்க மட்டக்களப்பு பிரதேசத்தில பார்க்க முடியும். இதனால்தான் ஞானம் தொடர்பாக முரண்பாடுகள் எனக்கு வருகிறது.

தேசம்: உங்களுக்கும் அவருக்கும் இடையிலான முரண்பாடு அதுக்குப் பிறகுதான் வருதா…?

அசோக்: இல்லை இல்லை இதற்கு முதலே முரண்பாடு தொடங்கி விட்டது. இப்ப கருத்தியல் சார்ந்து மிகத் தீவிரமானது இந்த கருணா பிள்ளையானோடு சேர்ந்த பிறகுதான். இதற்கு முதல் எப்படி இந்த முரண்பாடு தொடங்குது என்றால் ‘எக்சில்’ என்றொரு சஞ்சிகையை கலைச்செல்வன், லக்சுமி, ஞானம், விஜி, கிருஸ்ணராஜா, கற்சுறா இவங்கள் எல்லாருமா சேர்ந்து வெளியிடுறாங்க. அந்தக் காலகட்டத்தில் நானும் இங்க பாரிசில் இருந்தேன். இவர்களின் இந்த ஒருங்கிணைவு, சஞ்சிகை வெளியீடு தொடர்பாக எனக்கு சில சிக்கல்கள் இருந்தது. ஏனென்றால் உண்மையில் கருத்தியல் சார்ந்து ஒன்றுபட வேணும். கோட்பாட்டு செயற் தளத்தில் ஒரு ஒன்றிணைவு இருக்க வரவேண்டும். அப்போதுதான் ஆக்க பூர்வமாக செயற்பட முடியும்.

ஒரு கட்டத்துக்குப் பிறகு தனி நபர்கள் முரண்பாடுகள் இவங்களிடம் தலை தூக்கிறது. ஏனென்டா இந்த புத்தகத்தின் வருகைக்கான உழைப்பும் பொருளாதார ரீதியான உதவியும் கலைச்செல்வன், லட்சுமி பக்கம்தான் கூடுதலா இருந்தது. அவங்கட முயற்சியால்தான் அது வெளிவந்தது. அத்தோட கலைச் செல்வன், லக்சுமி அரசியல் சார்ந்து ஆளுமையானவங்க. அப்ப அதன் தாக்கம் இருக்கும். இவங்களால ஒருகட்டத்திற்கு மேல இணைந்து செயற்பட முடியல்ல. அரசியல் சமநிலை இவர்களிடம் இருக்கல்ல. முரண்பாடுகள் வருகிறது. முரண்பாடு வந்தவுடன் இவங்க கலைச்செல்வன், லட்சுமி மீது வைத்த கூற்றச்சாட்டு இருக்குத்தானே அது அபாண்டமான ஆரோக்கியமற்றதா இருந்தது.

தேசம்: யார் குற்றச்சாட்டுகள வைச்சது…?

அசோக்: ஞானம், கற்சுறா ஆட்கள்தான் அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போயிட்டு. அப்ப ஞானமெல்லாம் எங்களுடன் மிக நெருக்கமான உறவு தான். கற்சுறாவோடும் நாங்கல்லாம் நெருக்கமான நண்பர்கள் தான். இந்த முரண்பாட்டின் அடிப்படையில நாங்க ஒரு சைட் எடுக்க வேண்டி வந்து விட்டது. நாங்கள் பார்த்தோம், கலைச்செல்வன், லட்சுமி ஆட்கள் பக்கம்தான் நியாயம் இருந்தது. நான் தோழர் புஷ்பராஜா எல்லாரும் கலைச்செல்வன் பக்கம்தான் சப்போர்ட் பண்ணினோம். இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு நாங்கள் மிகத் தீவிரமாக ஈடுபட்டம். பிரச்சனை மிக தீவிரமாக கூர்மை அடைந்தது.

பிரச்சினையின் போது இவங்க முன்வைக்கிற குற்றச்சாட்டு தெரியும்தானே. “இவன் வேளாளன், இவன் சாதி பார்க்கிறான்” போன்ற அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். இந்த குற்றச்சாட்டை நீங்கள் வேறாக்கள் மேல முன்வைக்க முடியும். ஆனா கலைச்செல்வன், லட்சுமி மேல முன்வைக்கிறது அபாண்டம். அவங்க சாதிய தற்கொலை செய்து கொண்டவர்கள். இயல்பாகவே அரசியல் ரீதியாக வளர்ந்தாக்கள். திட்டமிட்டு இந்த குற்றச்சாட்டுகளை அவங்க மேல முன்வைத்தார்கள். அத எங்களுக்கு சகிக்க முடியாமல் இருந்தது. அடுத்தது இவங்க நடந்துகொண்ட முறைகள். நாங்கள் புலிகளின் வன்முறைகள் பற்றி கதைக்கிறம். இவங்க கலைச் செல்வன் இல்லாத நேரம் பார்த்து லட்சுமி வீட்டுக்கு போய் கதவுல எல்லாம் அடிச்சு பெரிய கலாட்டா பண்ணினாங்க. என்ன பிரச்சனை என்றால் கருத்தியல் சார்ந்து வருகிற முரண்பாடுகள் அனேகமாக வன்முறைகளுக்கு போவதில்லை. ஆனா தனிநபர் பிரச்சனைகளால வாற முரண்பாடுகள் இப்படித்தான் வன்முறை மனோபாவத்தை ஏற்படுத்தும். அதுதான் இங்கையும் நடந்தது. இந்த பிரச்சனைகளுக்கு பிறகு பேர்லினில் நடந்த இலக்கிய சந்திப்பில் இவங்க நடந்துகொண்ட முறை மோசமானது. அடிபுடி வரும் நிலைக்கு போனது. நல்ல வேளை சுசிந்திரன், பாரதி, பரா ஆட்கள் தடுத்துவிட்டாங்க.

ஒரு பக்கம் நாங்க வன்முறைகளை எதிர்க்கிறோம். மறுபக்கம் இப்படி செய்றத ஏற்க முடியாது. அந்த அடிப்படையில் தான் நாங்கள் கலைச்செல்வன், லட்சுமி ஆட்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தோம். பிறகு அது பெரிய முரண்பாடா போய். அதுல அவங்க நடந்துகொண்ட முறை பிழை. அதால எங்களுக்கு அவங்கட நட்புகளும் போயிட்டு. உண்மையிலேயே இந்த முரண்பாட்டை தீர்த்திருக்க முடியும். ஞானமும், கற்சுறாவும் மோசமானவர்கள் இல்லை. நியாயங்களை ஏற்று இருப்பார்கள்.பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியும். ஆனா இந்த முரண்பாட்டை பயன்படுத்தி இதை கூர்மையாக்கியதில் வேறு சிலருக்கு பங்கு உண்டு. இவங்களும் அவங்களின்ற கதையை கேட்டு பின்னால போனாங்க. இந்த முரண்பாடு வந்த உடனே ஒரு குரூப் அவங்களுடன் இணைந்து கொண்டது. அது எப்ப எப்ப என்டு பார்த்துக் கொண்டிருக்கிற தவறான சக்திகள் இணைந்து கொண்டாங்க.

தேசம்: யார் அந்த தவறான சக்திகள்..?

அசோக்: அந்த நேரம் சோபாசக்தி எல்லாம் உடனடியாக போய் சேர்ந்தாங்கள்.

முதல் காதல் தற்கொலையில்! எஞ்சிய வாழ்க்கை குற்ற உணர்வில்!! வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும்!!! – பாகம் 32

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 32 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 05 மார்ச் 2022). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 32:

தேசம்: வணக்கம். நீண்ட உரையாடலில் இன்னுமொரு படி வந்து நிற்கிறோம். எண்பதுகளில் உங்களுடைய அரசியல் பயணத்தை நீங்கள் ஆரம்பித்திருந்தீர்கள். அந்த அரசியல் பயணம் ஒரு நீண்ட பயணம். அதற்கு பிறகு நாங்கள் 91 ஆம் ஆண்டு வரை இலங்கை இந்தியாவில் உங்களுடைய அரசியல் பங்களிப்பை பற்றி நாங்கள் கதைத்திருந்தோம். அதற்கு பிறகு நீங்கள் 92ஆம் ஆண்டு பாரிசுக்கு இடம்பெயர்ந்து பாரிசில் நடந்த அரசியல் இலக்கிய சூழல் பற்றி கதைத்துக் கொண்டு இருக்கிறோம். அதற்கு முதல் உங்களுடைய உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியும் கதைத்திருந்தோம்.

நீண்ட பயணம். கடினமான பயணம். அதில் நீங்கள் இழந்தது, உங்களுடைய வலிகளைத் தொடர்ந்து நீங்கள் ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொண்டது வரைக்கும் கதைத்திருக்கிறோம். இதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. பலத்த வலிகளுக்கு மத்தியிலும் சில விஷயங்களை உங்களால் சொல்லக் கூடியதாக இருந்தது. சில விடயங்கள் சொல்வதற்கு கஷ்டமான விடயங்களும் நடந்திருக்கு. தனிப்பட்ட முறையில் அது உங்களுக்கு நிறைய பாதிப்புகளையும் கொடுத்திருக்கு. அந்த வகையில் நாங்கள் மீளவும் உங்களோட அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப காலத்துக்கு ஒருக்காப் போயிட்டு வரலாம் என்று யோசித்தேன். அதுல பல விடயங்களை நீங்கள் கதைத்திருந்தீர்கள்.

அதில் உங்களுடைய அரசியல் ஆரம்பத்துக்கு முதல், அரசியலில் நீங்கள் முழுமையாக ஈடுபடுவதற்கு முதல், உங்களுடைய இளமை பிராயத்தில் இடம்பெற்ற சம்பவங்களைப் பற்றி கதைத்தோம். அதில் உங்களுக்கு ஏற்பட்ட உறவு சம்பந்தமாகவும் கதைத்திருந்தோம். நான் குறிப்பாக கதைப்பது களுதாவளை கிராமத்தில் இளமைக்காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட ஒரு தோழியினுடைய உறவு பற்றி – லீலா என்பவருடைய உறவு பற்றி. உங்களுக்கு கதைப்பதற்கு சிலநேரம் கஷ்டமாக இருக்கலாம். அவருடைய முடிவு கஷ்டமாக இருக்கலாம். இருந்தாலும் நான் நினைக்கிறேன் இந்த இடத்தில் கதைத்துச் செல்வது நல்லம் என்று. அதைப் பற்றி உங்களுக்கு சொல்ல முடிந்தால் நல்லம்…

அசோக்: இந்த சம்பவத்தை எப்படி தொடங்குவது, கதைப்பது என்று எனக்கு தெரியல்ல. இந்த சம்பவம் நடந்து 40 வருடங்களாகி விட்டது.

80 ம் ஆண்டு நடந்தது… நாம் நினைப்பது, காலம் வலிகளையும் குற்ற உணர்வையும் போக்கி விடும் என்று. அப்படி நடக்கிறது இல்லை. அடிமனதில் படிஞ்சி போய் இருக்கும். நினைவுக்கு வரும் போதெல்லாம் அதன் வேதனை கடுமையானது. ஆனா மனம் விட்டு இப்படி உரையாடுவது குற்றஉணர்வை, வலியை குறைக்க உதவும் என நினைக்கிறன்.

அந்தக் காலகட்டம் எண்பதுகளில் தெரியும்தானே ஒரு இலக்கிய வட்டம் நண்பர்கள் உலகம். இளந்தளிர் வாசகர் வட்டத்தை உருவாக்கிக் செயற்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. எங்களுடைய முழுமையான ஈடுபாடு இலக்கிய வாசிப்பு தான். வாசிகசாலை, வாசிப்பு, படிப்பு. அரசியல் ஆரம்பம் அப்பதான். நாங்கள் இயக்கத்துக்கு போகவில்லை அப்போ. முழுக்க முழுக்க இலக்கிய உலகம் தான்.

அந்த நேரம் எனக்கு நல்ல சிநேகையாக, தோழியாக, என் அன்புக்குரியவங்களாக இருந்தவங்க லீலா. இளமையிருந்தே நாங்க பழக்கம். வாழ்க்கையின் முதல் காதல்.

தேசம்: உங்களுடைய கிராமத்தைச் சேர்ந்தவர் அவர் உங்களுடைய பேனா நண்பி அல்ல…

அசோக்: பேனா நண்பி இல்லை, ஒரே கிராமத்தைச் சேர்ந்தவங்க நாங்க. எங்களுடைய இளந்தளிர் வாசகர் வட்ட நண்பர்கள். எல்லாரும் ஒரே நண்பர்கள் நாங்கள். அதுல லீலாவும் ஒருவர். இந்த நண்பர்களும் தோழர்களும்தான் காலப் போக்கில் என்னோடு புளொட்டிக்கு வந்தவங்க. இது பற்றி முன்னமே கதைத்திருக்கிறன்.

லீலா மிக மென்மையானவர். என்னுடைய நண்பர்கள் எல்லோருக்கும் நெருக்கமாவங்க. ஒரே கிராமம் என்றால் தெரியுங்தானே, ஒவ்வொரு நாளும் சந்திப்பம். கதைப்பம். எங்கட காதல் எங்க நண்பர்கள் வட்டத்தில இயல்பான விசியம். லீலாவுக்கு அப்பா இல்லை. அம்மா வேறு திருமணம் செய்து இன்னொரு ஊரில இருந்தாங்க. லீலா அம்மம்மாவோட இருந்தாங்க. மாமா இரண்டு பேர், மாமி என மிக அன்பான குடும்பம். அருமையான ஆட்கள். எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. லீலாவை மிக அன்பாக பாத்தாங்க.

திடீரென ஒருநாள் விவசாயத்திற்கு பயன்படுத்துற கிருமி நாசினியை லீலா குடிச்சிட்டாங்க. உடனேயே வீட்டிலிருந்து ஹாஸ்பிடலுக்கு கொண்டு போயிட்டாங்க. என்ட நண்பனும் அவரின்ற அம்மாவும்தான் தான் கொண்டு போனவங்க. என்ட நண்பன் என்றது லீலாவுக்கு சகோதர முறையானவர். யோகன் சீவரெத்தினம் என்றுசொல்லி. என்னோடு பிறகு இயக்கத்திக்கு வந்தவர். அவங்க கொண்டு போகும் போது சொல்லியிருக்கிறார் என்னை காப்பாத்துங்க, காப்பாத்துங்க என்று. பெரிசாக தாக்கம் கொடுக்கல்ல. பேசும் நிலையிலதான் இருந்திருக்காங்க. ஹாஸ்பிடல் கொண்டு போகும் வரைக்கும் அவர் பேசிக் கொண்டுதான் இருந்திருக்கிறார். அப்போ ஹாஸ்பிடல் போய் சிகிச்சை கொடுத்த பிறகு நோர்மலா இருந்திருக்காங்க. ஆபத்தைத் தாண்டிவிட்டார் என்று டாக்டர் சொல்லி இருக்கிறார். “நான் செத்து இருந்தா எப்படியெல்லாம் கதைச்சிருப்பாங்க” என்றெல்லாம் லீலா சொல்லி இருக்காங்க. அந்தளவிற்கு சுகமாக இருந்திருக்கிறார். அந்த மருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு தான் வேலை செய்யுமாம். அதற்குப்பிறகு தீடிரென மயக்கம் ஏற்பட்டு இறந்திட்டாங்க.

தேசம்: சிலவேளை அந்த நேரம் மருத்துவ வசதிகளும் அவ்வளவு வளர்ந்திருக்கவில்லை. இன்றைய சூழலில் என்றால் சிலவேளை காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

அசோக்: இதற்கு ஒரு வருஷத்துக்கு முதல் ஸ்லீப்பிங் டேப்லெட் சாப்பிட்டு பிரச்சனையாகி விட்டது. யாருக்கும் சொல்லவில்லை. நித்திரை மயக்கமாக வரும் போதுதான் சொல்லி இருக்கிறா. இப்படி நித்திரை குளிசை பாவித்தேன் என்று. பிறகு என்னுடைய நண்பர்கள் எல்லாம் சேர்ந்து முதல் உதவி செய்து காப்பாற்றீனாங்க. அதற்கும் காரணம் கேட்டும் அவங்க. சொல்லவில்லை. அவருக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருந்ததாக தெரியல்ல. அடுத்தது கதைத்தால்தானே தெரியவரும். குடும்பத்தால் எந்தவொரு நெருக்கடியும் இல்லை. அருமையான குடும்பம்.

தேசம்: ஏன் அந்த முடிவுக்கு அவா போறா…

அசோக்: நண்பர்கள் அபிப்பிராயம் என்ன என்றால் நான் ஒரு காரணமாக இருக்கலாம். முதலும் நித்திரை குளிசை போட்டதற்கான காரணம் சொல்லவில்லை. என்னைவிட என்னுடைய நண்பர்கள் மிக நெருக்கம் அவங்களிட்டையும் காரணம் சொல்ல வில்லை. நானும் நினைக்கிறன் நான் தான் காரணமாக இருக்கலாம் என்று. அவங்களின்ற வீட்டைப் பொறுத்தவரை அம்மம்மா, மாமி, மாமா ஆட்கள் மிக அன்பானவங்க. வீட்டில்பிரச்சனை இருக்க சந்தர்ப்பம் இல்லை.

தேசம்: 80 கால கட்டங்களில் பொதுவாக தற்கொலையின் உச்சியில் இருந்த நாடுகளில் இலங்கையும் ஒன்று. அதுலயும் குறிப்பாக விவசாயத்திற்கு பாவிக்கிற கிருமி நாசினியை குடித்துத்தான் நிறைய பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். அதற்கு பிறகு தான் நான் நினைக்கிறேன் உலகம் முழுதுமே சட்டமூலம் ஒன்று வந்தது கிருமிநாசினி யின் பாதுகாப்பு பற்றி. இதனைப் பாவிப்பதை, கட்டுப்படுத்த வேண்டுமென்ற விஷயங்களெல்லாம் அதற்குப்பிறகுதான் கூடுதலாக பேசப்பட்டு இன்று அது நிறைய குறைந்திருக்கின்றது. ஆனால் இன்றும் இலங்கையில் நிறைய தற்கொலைகள் இடம்பெறுகிறது.

தமிழர் மத்தியில் இந்த தற்கொலை வீதம் ஒப்பீட்டளவில் கூடுதலாக தான் இருக்குது. பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அது ஏன் அவர்கள் எடுத்த உடன்… சில ஆய்வுகள் தெரிவிக்கிறது தற்கொலை பரம்பரையலகுடன் சம்பந்தப்பட்டதாகவும் சொல்லப்படுது. தற்கொலைக்கான எண்ணம் வரும்போது தற்கொலைக்கான துணை காரணிகளும் சேர்ந்து கொள்ளுது. அதுல தான் இந்த அரலி விதை அரைக்கிறதோ அல்லது இதுகள் வந்து இலகுவாக கிடைக்கக்கூடியதாக இருக்குது. அது உடனே வர தூண்டுதல் தானே

லீலாவினுடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள் உங்களுடைய நண்பர்கள் என்று நினைக்கிறேன் அப்படியா…

அசோக்: சகோதரர்கள் எல்லோரும் நல்ல நண்பர்கள் எல்லாம் ஒரே ஊர் ஆக்கள் தானே. இன்றைக்கும் என் நண்பர்கள் அவர்கள்.

தேசம்: எல்லோரும் ஏதோ ஒரு வகையில் உறவுக்காரர் உங்களுக்கு…

அசோக்: ஓம். சின்னம்மா, பெரியம்மா பிள்ளைகள். எல்லாம் என்னுடைய தோழர்கள். இயக்கத்துக்கு என்னுடன் வந்தவர்கள். ஹாஸ்பிடலுக்கு கொண்டு போனது யோகன் தான். யோகன் என்றால் சீவரத்தினம் என்று சொல்லி உங்களுக்கு தெரியும்.

தேசம்: அவருடைய பெயர் தான் உங்களுக்கு வைத்திருக்கிறீர்களா – புனைப்பெயராக?

அசோக்: இல்லை இல்லை என்னுடைய பெயரும் யோகன், அவருடைய பெயரும் யோகன். என்னைவிட வயது குறைவு அவர்.

தேசம்: அவரோட இப்பவும் உங்களுக்கு நல்ல உறவு இருக்குதா…

அசோக்: ஓம் என்னுடைய பிரண்ட் நல்ல தோழர். பிறகு இயக்கத்துக்கு எங்களோடு வந்த தோழர். மச்சான் முறையானவர். சொந்தங்கள் தானே.

தேசம்: அவருடைய இந்த மரணத்துக்கு இந்த நிலைப்பாட்டுக்கு என்ன காரணம்? நீங்கள் வேறு ஒரு உறவுக்குள்ள போயிட்டீங்க என்று நினைக்கிறாவா? அல்லது …

அசோக்: அந்த நேரம் நிறைய பென் பிரண்ட்ஸ் இருந்தது தானே. அந்தக் காலம் பேனா நட்பு உலகம் தானே. 80 ஏப்ரல் தான் இந்த மரணம் நடக்குது. நண்பர்களுடைய அபிப்ராயம் என்ன என்று கேட்டால் என் பேனா நட்புக்கள் தொடர்பான சந்தேகம் இருக்கலாம் என்று. ஏனென்றால் வேற நெருக்கடி அவங்களுக்கு இல்லை. தற்கொலை செய்வதற்கான புறச்சூழல் அவங்களுக்கு வேறு இல்லை. பேசியிருந்தால் இருந்தால் சந்தேகத்தை போக்கி செய்து இருக்கலாம். என்னோட பேசாவிட்டாலும் பரவாயில்லை, நண்பர்களோடு பேசி இருக்கலாம். செய்யவில்லை. அவரோடு மிக நெருக்கமான நண்பர்கள் இருக்கிறார்கள். கடைசியில அவங்களோடயும் கதைக்கவில்லை.

தேசம்: இன்றைக்கும் பார்த்தீர்களென்றால் குடும்பங்களில் நடக்கின்ற நிறைய பிரச்சனைகளுக்கு தற்கொலைகளுக்கு அதீத அன்பு என்று சொல்வதா அல்லது பொசசிவ்னஸ் அது அவர்களை ஏதோ ஒருவகையில் ஒரு பாதுகாப்பு இன்மை நிலவுவதாக ஒரு எண்ணத்தை கொடுக்கும். அது கன பேரை இப்படியான சம்பவங்களுக்கு தூண்டி இருக்கு. அது பல்வேறு காரணங்களும் இருக்கு. சிலபேருக்கு இயல்பாகவே தற்கொலைக்கான காரணிகள் அவர்களுடைய பரம்பரை அலகில் இருக்கும். இவ்வாறு தற்கொலைக்கான காரணங்கள் பல. அதுல எது இந்த முடிவுக்கு இட்டுச் செல்கிறது…

அசோக்: என் மேல சந்தேகம் வந்திருக்கலாம். பேனா நட்புகள் அது இதுவென்று. மனதுக்குள்ளே அதைப் பற்றிய சந்தேகங்கள் இருந்திருக்கலாம். உண்மையிலேயே எனக்கு வேதனையான வலியான விசியம் என்னவென்றால் பிரச்சனையை என்னிடம் கதைத்திருக்கலாம். அல்லது என் நண்பர்களிடம் கதைச்சிருக்கலாம். நினைக்கும்போதெல்லாம் பெரிய வலியாக இருக்கும். பெரியகுற்ற உணர்வாக இருக்கும்.

தேசம்: உண்மையிலேயே கன விடயங்களில் இந்த விடை தெரியாத கேள்விகள் என்று பட்டியலுக்குள் தான் இது எல்லாத்தையும் நாங்கள் போட வேண்டும். ஏனென்றால் உள்ளுணர்வு ரீதியாக என்னத்தை அவர் யோசித்தார் என்று எங்களுக்கும் தெரியாது.

அசோக்: நிறைய பேனா நண்பர்கள் இருந்தபடியால் அந்த சந்தேகங்கள் வந்து இருக்கலாம். என் நண்பர்கள் அபிப்பிராயம். செல்வியின் நட்பு காரணமாக இருக்கலாம் என்று. ஆனா அந்த நேரத்தில செல்வி எனக்கு பென் பிரண்ட்தான். லீலா இறந்ததற்கு பின்னர்தான் 83ல்தான் செல்வியோடு எனக்கு உறவு வருகிறது. அவங்க என்னுடன், என்ட நண்பர்களுடன் பிரச்சனையை கதைத்திருக்கலாம்.

பெரிய மன வருத்தம் என்ன என்று கேட்டால் மிக நெருக்கமான நண்பர்களிடம் கூட இதைப்பற்றி கதைக்கவில்லை. என்னுடன் இப்பவும் கதைப்பார்கள் நண்பர்கள். மிக நெருக்கமான நண்பர்கள் அவர்கள். என்னை விட மிக நெருக்கமாக லீலாவோடு இருந்த நண்பர்கள் அவங்க. அவங்க தற்கொலை பண்ணிக் கொள்வதற்கு முதல் நாள் நானும் ரவியும் சந்திக்கிறோம் லைப்ரரியில் அவங்களை.

தேசம்: அதுல நீங்கள் ஒரு மாற்றத்தையும் கவனிக்கல…

அசோக்: இல்லை இல்லை. வழமைபோலத்தான் இருந்தாங்க.

தேசம்: அதற்குப் பிறகு அவருடைய இறுதி நிகழ்வுகள் சம்பந்தமாக எப்படி அது உங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது…

அசோக்: அரசரெத்தினம் என்று சொல்லி. நாங்க அரசன் என்கிறது. யோகன் சீவரெத்தினத்தின் அண்ணா. எனக்கு மச்சான் முறையானவர். என்னோடு மிக அன்பானவர். என் கிராமத்தைப் பற்றி சொல்லும் போது இவரைப்பற்றி சொல்லி இருக்கிறன். TULF க்கு எங்க ஊரில் முக்கியமான ஆளாக இருந்தவர். தமிழ் இளைஞர் பேரவையிலும் இருந்தவர். 82இல் சிறைக்கு போயிட்டு வரும்போது கடுமையான பொலீஸ் நெருக்கடியில் கூட என்னை தோளில் வைத்துக்கொண்டு எங்கட கிராமத்தின் வீதியெல்லாம் ஊர்வலமாக கொண்டு சென்றவர். லீலாவின் அண்ணா முறையானவர். இறுதி நிகழ்வுக்கு வரும்படி கூப்பிட்டார். நண்பர்களும் கூப்பிட்டாங்க. அப்ப எனக்கு எல்லாமே இருண்டு போய் இருந்தது. எதையும் யோசிக்க முடியல்ல. கடும் வேதனையாக இருந்தது. போக விரும்பல்ல.

பிறகு கொஞ்ச காலத்துக்குப் பிறகு லீலாவின் மூத்த மாமா கேட்டாங்க. இளைய மாமாவுக்கு என் மீது கோபம் இருந்தது. அவர் என்னோடு கதைப்பதை விட்டு விட்டார். இப்ப யோசிக்கும்போது நான் போய் இருக்க வேண்டும். அந்த குற்ற உணர்வு இருக்கிறது.

அன்றைய நண்பர்கள் பலர் நாங்க இன்றைக்கும் நண்பர்களாக தோழர்களாக இருக்கிறம். பழைய நினைவுகளை கதைக்கும்போதெல்லாம் லீலாவின் நினைவுகளும் வரும். அப்ப கடும் வேதனையாக வலியாக இருக்கும். உறவுகளுக்கும், நேசிப்புக்களுக்கும் நேர்மை அவசியம். அதில் நான் தவறிழைத்துவிட்டன் என்றுதான் நினைக்கிறன்.

தேசம்: எண்பது காலகட்டங்களில் அது முக்கியமானது. விவசாய கிருமி நாசினிகளை குடிக்கிறது. அரளி விதை சாப்பிடுவது சாதாரண நிகழ்வாக தான் இருந்தது. இப்ப அந்த வகையில் ஏற்படும் மரணங்கள் குறைக்கப்பட்டு இருக்கு. ஆனாலும் தற்கொலை என்பது தமிழ்ச் சூழலில் முக்கியமான ஒரு பிரச்சனையாக தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். புலம்பெயர் சூழலில் எல்லாம் நிறைய தற்கொலை நடந்தது. அது சில சமயங்களில் தமிழர்கள் மத்தியில் இந்த பரம்பரையியல் தாக்கம் நிறைய இருக்குதா என்றும் நாங்கள் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். உளவியல் சார்ந்த விழிப்புணர்வும் எங்கட சமூகத்தில் இல்லைதானே. அதுகள் சார்ந்தும் நாங்கள் கூட கவனம் எடுக்க வேண்டும். மிகக் கஷ்டமான ஒரு விடயத்தை எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

இப்ப உங்களிடம் நான் நினைக்கிறேன் ஒரு குற்ற உணர்வு இருக்கிறது என்று.

அசோக்: அது நீண்ட காலமாக இருக்கிறது. அதனால் தான் பேர்சனல் வாழ்க்கையை கதைக்கும் போது இதையெல்லாம் கதைக்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு ஒரு ஃப்ரீ வேண்டும். நான் ஆரம்பத்திலேயே களுதாவளை பற்றி கதைக்கும் போது இதை கதைக்கவில்லை. ஏனென்றால் பர்சனல் வாழ்க்கை வரும்போது இதைப்பற்றி கதைக்கலாம் என்று இருந்தேன். ஏனென்றால் ஒரு அரசியல் சமூக வாழ்க்கையில் ஈடுபடும் எனக்கு ஒரு ஒளிவுமறைவு இருக்கக் கூடாது.

தேசம்: இந்தக் கடந்த கால வாழ்க்கை சம்பவங்கள் பற்றி ஜெயந்தி எப்படி உணர்ந்துகொண்டா? அவ அப்படி உங்களுக்கு ஆறுதலாகவும் துணையாகவும் இருந்தார் என்பதை சொன்னீர்கள் என்றால் இதை பார்க்கிறவர்களுக்கும் சிலவேளை உதவியாக இருக்கும்.

அசோக்: கடந்த கால வாழ்க்கை தொடர்பாக நான் ஜெயந்தியிடம் மாத்திரம் அல்ல, செல்வியோடையும் நிறைய கதைத்திருக்கிறேன். ஏனென்றால் குடும்ப வாழ்க்கைக்கு முக்கியமான அடிப்படை மனம் திறந்த உரையாடல். அது எங்களில் குற்றம் இருந்தாலும் அதை ஒத்துக்கொள்ள வேண்டும். நியாயப்படுத்தல் செய்ய இயலாது நாங்கள். லீலாவின் மரணம் தொடர்பாக நான் நியாயப்படுத்த இயலாது. எனக்கு அதில் எந்த விதமான காரணமும் இல்லையென்று. நாங்கள் இன்னுமொரு பக்கத்தில் போய் குற்றத்தை போடக்கூடாது. அந்த இறப்புக்கு காரணம் வெளிப்படையாக தெரியாவிட்டாலும் நான் யோசிக்கிறன் நான்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று. நான் என் பேனா நட்புக்கள பற்றி லீலா கேட்காவிட்டாலும் நான் அந்த உறவுகள் பற்றி அவங்களோடு கதைத்திருக்க வேண்டும்.

ஜெயந்தியிடம் என் கடந்த கால வாழ்க்கைப் பயணம் பற்றி வெளிப்படையாக மனம் விட்டு கதைத்திருகிறன். குடும்ப வாழ்க்கைக்கும் சுய விமர்சனம் அவசியம். அப்பதான் எங்கட தவறுகளை திருத்திக் கொள்ளமுடியும். பரஸ்பரம் நம்பிக்கைகளை ஏற்படுத்திக்கொள்ளமுடியும்.

தேசம்: ஒன்று அதை நீங்கள் வெளிப்படையாக சொல்லியும் இருக்கிறீர்கள். அதே நேரம் அவர்களும் அதை உணர்ந்து கொண்டு ஒரு சுமுகமான உறவை வாழ்க்கைப் பயணத்தை நீங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள். அந்த வகையில் மிகவும் மகிழ்ச்சி. அதே சமயத்தில் நீங்கள் எந்த குற்ற உணர்வில் வாழ வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அவங்களுடைய எண்ணம் துரதிஷ்டவசமாக அப்படி அமைந்துவிட்டது. அதற்காக நீங்கள் குற்றவாளியாகவோ அல்லது குற்ற உணர்வுடனோ வாழ வேண்டிய அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன். இவ்வளவு விடயத்தையும் மனம் திறந்த கதைத்ததற்கு உங்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்த பாகத்தில் புலம்பெயர் சூழலில் இருந்த அரசியல் இலக்கிய சூழல் அதுக்கு ஊடாக உங்கள் பயணத்தை பற்றி பார்ப்போம்.

கல்வி குறையில் – அரசியலில் தோல்வி – வாழ்க்கையில் விரக்தி – ஜெயந்தி! புதிய அத்தியாயம் !!! பாகம் 31

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 31 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 13.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

தேசம்: நீங்கள் பாரிசுக்கு வந்து அரசியல் தஞ்சம் கோரி உங்களுடைய வாழ்க்கையை புலம்பெயர் தேசத்தில் ஆரம்பிக்கிறீர்கள். நீங்கள் வந்த காரணம் ஏற்கனவே குறிப்பிட்டது போல செல்வி கடத்தப்பட்டு இருந்த நேரம் நீங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தால் ,அவர் விடுதலை ஆவார் என்ற எண்ணத்தில் வந்தீர்கள். ஆனால் கடைசி வரைக்கும் செல்வி உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற விடயம் கூட உங்களுக்கு மிக நீண்ட காலமாக தெரியாது. எந்தக் கட்டத்தில் செல்வி உயிருடன் இல்லை என்ற கட்டத்திற்கு நீங்கள் வாறீர்கள்? ஏனென்றால் உங்களுடைய வாழ்க்கை பயணமும் இதில் சம்பந்தப்பட்டிருக்கு அல்லவா…

அசோக்: எப்படியும் ஒரு வருஷம் இருக்கும் அதுவரைக்கும் நான் நம்பிக் கொண்டு தான் இருந்தேன் செல்வி இருப்பாங்க என. அதற்குப் பிற்பாடு தான் எனக்கு தெரிய வருகிறது. செல்வி இல்லை என்று.

தேசம்: உண்மையிலேயே இந்தக் கொலையை விடுதலைப் புலிகள் கடத்திக் கொண்டு போன உடனேயே செய்துவிட்டார்களா? அல்லது குறிப்பிட்ட காலம் வைத்திருந்தார்களா?

அசோக்: நீண்ட காலம் வைத்திருந்தவர்கள் என்று நினைக்கிறேன். 6-7 மாதமாவது வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் கைது செய்யப்பட்டதற்கு பிற்பாடு கைதிகள் சிறையில் இருந்த பெண் ஒருவர் செல்வியைக் கண்டதாக வேற ஆட்களிட்ட சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். நான் அவங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்றால் அவங்கள் விரும்பவில்லை.

தேசம்: இந்தச் சம்பவம் எல்லாம் நடந்தது 92 ஆம் ஆண்டு காலப்பகுதியா?

அசோக்: நான் தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு இங்க வாறேன். செல்வி 91 ஓகஸ் ட் 30ம் திகதி கைது செய்யப்படுறாங்க.

தேசம்: 93 நீங்கள் முடிவுக்கு வாறீர்கள். அந்தக் கற்பனை, அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் முடிவுக்கு வருது.

அசோக்: ஓம்…

தேசம்: அதுக்குப்பிறகு அது மிகக் கஷ்டமான சூழலில் தான் நான் நினைக்கிறேன் நீங்கள் மன உளைச்சலோடு நிறைய சிக்கல்கள்களை கடந்து வந்திருப்பீர்கள். அந்தக்காலங்களை எப்படி எப்படி சமாளித்தீர்கள்? அரசியல் ரீதியாக விரக்தி, தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் விரக்தி. நான் நினைக்கிறேன் உங்கள் வயது இளைஞர்களுக்கு உங்களுடைய தலைமுறை ஆட்களுக்கு இவ்வாறான வாழ்க்கை என்பது மிகப்பெரிய பாதிப்பு என்று நினைக்கிறேன். படிப்பை விட்டு வந்தவர்கள் அரசியல் ரீதியாக தோல்வி இதில் இருந்து எப்படி வெளியில் வந்தீர்கள்?

அசோக்: போராட்டத்தில் ஏற்பட்ட தோல்விகள் இருக்குதானே, நம்பி வந்த இயக்கத்திலும் தோல்வி , தவறுகளிலிருந்து மீளலாம் என எண்ணி எடுத்த முயற்சிகளும் தோல்வி. ஒவ்வொரு காலகட்டத்திலும் நம்பி நம்பி ஏமாந்து…

தேசம்: அப்படி ஒரு ஃபீலிங் வந்ததா நாங்கள் எல்லாத்தையும் இழந்திட்டம் என்று…

அசோக்: ஒரு கால கட்டத்தில் இருந்தது. இயக்கத்தில் முரண்பட்டு வரேக்க. பெரும் நம்பிக்கைகளோடுதானே போராட்டத்திற்கும் புளொட்டிக்கும் வந்தது. நான் தனியா வந்திருந்தால் பரவாயில்லை. எங்க கிராமத்திலிருந்து என்னை நம்பி வந்த தோழர்கள், மற்ற எல்லாத் தோழர்களையும் நினைக்கும் போது அவர்களின்ற, என்னுடைய இளமை வாழ்க்கையை எதிர்காலத்தை விணாக்கி விட்டேனோ என்ற குற்ற உணர்வு வரும்.

அதே நேரம் புளொட்டின் அரசியல் கோட்பாட்டை, அதன் செயற் திட்ட வடிவங்களை இதுவரைக்கும் சிறந்ததாக்தான் கருதுகிறேன். நாங்கள் விட்ட தவறுகளினால், அதிகார ஆசைகளினால் இந்த கோட்பாடுகளை போராட்ட வடிவங்களை சிதைத்தோம் என்பது வேறு விடயம்… அது அனைத்து ஒடுக்குமுறைகளையும் பற்றிக் கதைக்குது, ஒரு வர்க்கப் போராட்டத்தைப் பற்றி கதைக்குது, தேச விடுதலை பற்றி… அது சாத்தியமா சாத்தியம் இல்லையா என்பது இன்று விவாதத்துக்கு உரியது. ஆனால் அன்றைய காலகட்டத்தில் அது முற்போக்கானதாக இருந்தது. இன்றும் கூட அது நடைமுறைக்கு சாத்தியமானது தான்.

இலங்கை தழுவிய வர்க்கப் போராட்ட சூழல் இல்லைதான். ஆனால் கோட்பாட்டு அடிப்படையில் ஒரு நம்பிக்கை தரக்கூடியது. அந்த அடிப்படையில் புளொட்டின் அடிப்படை அரசியல் என்பது வித்தியாசமானது. எல்லா இயக்கங்களின் அரசியலை விட வித்தியாசமானது. சாதிய ஒடுக்குமுறை, பெண்ணியம் பற்றி பேசுகிறது. பல்வேறு விடயங்களை கதைக்குது. அதை நம்பி தானே நாங்கள் வந்தோம். அந்த தோல்வி என்பது பெரிய சிக்கல் தான்.

கடைசி நம்பிக்கையிழந்து நான் வெளியேறி அந்த காலகட்டத்தில்தான் செல்வியினுடைய பிரச்சினையும் வருது. அது பெரிய தாக்கம், கடும் மன உளைச்சல் இருந்தது. அதுல இருந்து மீண்டதற்கு நண்பர்களும் தோழர்களும் தான் காரணம். அடுத்தது நிறைய வாசிப்புகள் இருந்தது.

அடுத்தது அந்த நேரத்தில் நிறைய பயணங்கள். தோழர் திருநாவுக்கரசு குடவறைக் கோயில் ஓவியங்கள் தொடர்பாக ஆய்வு செய்து கொண்டிருந்தவர். அவரோடு பல்வேறு இடங்களுக்கு போயிருக்கிறேன். ஓரளவு என்னுடைய மனதை திசை திருப்பக் கூடிய சூழல் இருந்தது. அடுத்தது வாசிப்பு. வாசிப்புதான் என்னை ஆற்றுப்படுத்தியது. இங்க வந்தும் அதுதான். இலக்கிய தொடர்புகள் அரசியல் தொடர்புகள் மீண்டும் தொடங்கிவிட்டது அந்த இடைவெளியை நிரப்பி விட்டது. அந்த இடைக்காலம் என்பது சிக்கலானது தான்.

தேசம்: இதுல வந்து உங்கட அந்த நீண்ட இடைவெளியில் நீண்ட காலம் திருமணம் செய்யாமல் இருந்தீர்கள். இந்த அரசியல் குழப்பங்கள் தனிப்பட்ட இந்த நிலைகளுக்கு பிற்பாடு எப்படி உங்களுக்கு அந்த புதிய வாழ்க்கை பயணத்தை தொடர்வதற்கான அந்த உத்வேகம் வந்தது எப்படி அதை ஆரம்பித்தீர்கள். அதைப் பற்றி சொல்லுங்கள்…

அசோக்: தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு நான் இங்கு வந்தேன். பிறகு அரசியல் வாழ்க்கை இலக்கிய வாழ்க்கை என்று இயல்பாகவே போய்க் கொண்டிருந்தது அதுக்குள்ள தான் இலக்கியச் சந்திப்பு, நண்பர்கள் வட்டம் மனித உரிமைச் செயற்பாடுகள். இங்குள்ள கட்சி சாரா இடதுசாரிகளோடு இணைந்து வேலை செய்தல் என காலம் போனது… அந்த காலகட்டத்தில் புலிகளுடைய மோசமான அதிகார ராஜ்யம் ஐரோப்பிய நாடுகளில் இருந்தது அதற்கு எதிராக பிரச்சாரங்களில் ஈடுபடுவது…

தேசம்: இதை நாங்கள் கொஞ்சம் பிறகு டீடெய்லா கதைப்பம். இப்ப உங்களுடைய புதிய தனிப்பட்ட வாழ்க்கை அப்ப நீங்கள் ஜெயந்தியை சந்திக்கிறீர்கள்… எப்ப இந்த புதிய உறவை நீங்கள் ஆரம்பிக்க கூடியதாக இருந்தது…

அசோக்: நான் தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு இங்கு வாரேன். ஜெயந்தியை நான் 2003ல் தான் சந்திக்கிறேன்.

தேசம்: பாரிசிலா?

அசோக்: பாரிசில் தான் சந்திக்கிறேன்.

தேசம்: அதற்கு முதல் தொடர்புகள் என்ன மாதிரி…

அசோக்: ஜெயந்தியோடு தொடர்புகள் இருக்கவில்லை. பாரிசில்தான் நாங்கள் முதல்முதல் சந்திக்கிறோம். அதற்கு முதல் வேறு திருமணங்கள் தொடர்பாக நண்பர்களுடைய முயற்சிகள் நிறைய நடந்தது. நான் விரும்பவில்லை. எங்களுடன் சார்ந்த குடும்ப உறவுகள் இருக்கக்கும்தானே. நிறைய திருமணத்துக்கான அழுத்தங்கள் இருந்தது.

தேசம்: 2003 என்றால் உங்களுக்கு எத்தனை வயது இருக்கும்…

அசோக்: எனக்கு 40, 45 வயது இருக்கும். அப்போ எனக்கு ஒரு நண்பர் இருந்தவர் ஆதவன் என்று கனடாவில் இருக்கிறார். புளொட் மாணவர் அமைப்பில் இருந்தவர். பிற்காலங்களில் மனித உரிமைகள் தொடர்பாக வேலை செய்தவர், அவர் ஜெயந்திக்கு மிக நெருக்கமான நண்பர். அவர்தான் ஜெயந்தி பற்றி சொன்னார்.

ஜெயந்தி ஆரம்பத்தில் பூரணி பெண்கள் அமைப்பில் வேலை செய்தவர். அங்கதான் செல்வி, சிவரமணி, ராஜினி திராணகம, சித்திரலேகா மௌனகுரு, வாசுகி ராஜசிங்கம் போன்றவங்களோட உறவு கிடைக்கிது.
அதற்குப் பிற்பாடு சூரியா பெண்கள் அமைப்பு மட்டக்களப்பில் வேலை செய்தவர்.

தேசம்: அப்போ செல்விக்கு முதலே ஜெயந்தியை தெரியும்.

அசோக்: ஓம் செல்வியும் ஜெயந்தியும் ஒன்றாக வேலை செய்தவர்கள்.

அப்போ ஆதவன் ஜெயந்தியை பற்றி சொல்லி, இப்ப ஜெயந்தி அயர்லாந்தில் கொலாஷிப்பில் படிக்கிறார். அவங்க ஜெர்மனிக்கு வந்துட்டு பிரான்சுக்கு வாறாங்க. என்னை சந்திக்கும்படி சொன்னார். பிரான்சில் ஜெயந்திக்கு உறவினர்களும் இருந்தாங்க. ஜெயந்தி இலக்கியங்களுடன் சம்பந்தப்பட்ட ஆர்வம் இருந்தபடியால் சூர்யா நூலகத்துக்கு சிறு சஞ்சிகைகள் இருக்குதானே அதைத் தேடும் ஆர்வம் ஜெயந்திக்கு இருந்தது.

அப்போ ஆதவன் சொல்லியிருக்கிறார் ஜெயந்தியிடம் இப்படி அசோக் என்று ஒருத்தர் இருக்கிறார் என்று. என்னைப் பற்றி ஜெயந்தி முதலே கேள்விப்பட்டிருக்கிறார். அப்போ அசோக்கை போய் சந்தி என்று சொல்லி எனக்கும் டெலிபோன் நம்பர் தந்தவர். அப்போ பிரான்சுக்கு வந்த ஜெயந்தியை நான் சந்தித்து கதைக்கிறேன்.

என்னுடைய சமூக ஆர்வம், இலக்கிய ஆர்வம் முழுக்க ஜெயந்தியிடம் இருந்தது. அப்போ எங்களுடைய உரையாடல்கள் எல்லாம் அரசியல் சமூகம் இலக்கியம் என்று போயிட்டு இருந்தது.

அப்போ ஆதவன் சொன்னார் நீ ஜெயந்தியை திருமணம் செய்வது பற்றி யோசி. நான் ஜெயந்தியோடு கதைக்கிறன் என்று. எங்க திருமணத்துக்கு முழுக் காரணமும் ஆதவன் தான். ஆதவனை நானும் ஜெயந்தியும் மறக்க முடியாது. ஆதவனுக்கு நன்றி சொல்லவேண்டும்.

தேசம்: ஜெயந்தியும் 90களில் இந்த பெண்ணியம் தொடர்பான கருத்துக்கள் அந்த செயற்பாடுகளில் ஈடுபட தொடங்கி விட்டாரா?

அசோக்: ஓம். இலக்கியம், பெண்ணியம், மனித உரிமைகள் தொடர்பான ஈடுபாடு எல்லாம் இருந்தது. அவர் உண்மையில் ஒரு கள செயற்பாட்டாளர். பெண்கள் மத்தியில் களப்பணி செய்வதுதான் அவரின் பிரதான நோக்கமாக இருந்தது.

தேசம்: ஆனால் அந்தக் காலகட்டத்தில் உண்மையாக பெண்கள் அந்த வயசுல ஈடுபடுவது என்பது குறைவு…

அசோக்: ஓம். அடுத்தது புலிகளுடைய மிக நெருக்கடியான காலகட்டம் தானே. அப்போ பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்வது தொடர்பாகத்தான் உடுவில் பெண்கள் இல்லம் உருவாக்கப்பட்டது. ஜெயந்தி அதில்தான் முதல்முதல் வேலை செய்கிறாங்க.

அடுத்தது நாங்கள் எங்களுக்கு வார துணைவி, எங்களுடைய உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணப்பாடு இருக்கும்தானே. அடுத்தது இன்னும் ஒரு பக்கத்தில் அவர் செல்வியினுடைய நெருங்கிய சினேகிதியாக இருந்தபடியால் என்னை பற்றிய முழு பின்புலமும் தெரிந்திருக்கும். என்னுடைய பலம் பலவீனம் எல்லாம் தெரிந்தவராக இருந்தார். என்னுடைய குளறுபடிகள் ஆதவனுக்கு தெரியும். ஆதவன் எல்லாம் சொல்லி இருப்பார்தானே…

தேசம்: இந்த உறவு ஏற்பட்டதற்கு பிற்பாடு 2003இலேயே திருமணம் ஆகிவிட்டதா…

அசோக்: இல்லை.. இங்க பாரிசில் சந்தித்த பின் அயர்லாந்து போயிட்டாங்க. பிறகு என்னை திருமணம் செய்வதற்காக பிரான்ஸ் வந்து என்னை ரெஜிஸ்ட்ரேஷன் செய்திட்டு திரும்ப இலங்கைக்கு போயிட்டாங்க. பிறகு நான் உத்தியோகபூர்வமாக திரும்ப அழைக்கிறேன்.

தேசம்: நான் நினைக்கிறேன் பிற்காலத்தில் சூர்யா பெண்கள் அமைப்போடு தான் அவர் ஈடுபட்டிருந்தார் என்று.

அசோக்: சூரியா பெண்கள் அமைப்பில் தான் அவங்க மட்டக்களப்பில் வேலை செய்து கொண்டிருந்தங்க. அவங்களுக்கு மனித உரிமைகள் பெண்கள் தொடர்பான செயற்பாடுகளில் ஆர்வம் இருந்ததால குறிப்பிட்டு ஒரு அமைப்போடு மாத்திரமல்ல வெவ்வேறு சிறு குழுக்கள் சார்ந்தும் வேலை செய்தார். மட்டக்களப்பில் இயங்கிக் கொண்டிருந்த அகிம்சைப் பணிக்குழு, இது அமரா அவங்களின்ற நண்பர்கள் சேர்ந்து சுயாதீனமாக இயங்கிய அமைப்பு. இவங்க நிறையவேலை செய்திருக்காங்க. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்கள் தாய்மார்கள் மத்தியில் நிறைய வேலைகள் செய்திருக்காங்க.

தேசம்: பிற்காலத்தில் தன்னுடைய கல்வியிலும் நிறைய நாட்டம் கொண்டிருந்தவா என்று நினைக்கிறேன்.

அசோக்: ஓம். அயர்லாந்தில் படிப்பை முடித்துவிட்டு திரும்பி மட்டக்களப்பிற்கு போய் வேலை செய்தாங்க. மட்டக்களப்பில் இருந்தபோது அமரா என்று மனித உரிமைச் செயற்பாட்டாளர். மிகுந்த சமூக அக்கறை கொண்டவர். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் மத்தியில் களப்பணி செய்து கொண்டிருந்தாங்க. தாங்களாக சிறுகுழுவாக இயங்கிக் கொண்டிருந்தாங்க. அவங்க சிங்கள சமூகத்தை சேர்ந்தவர். ஒருபக்கம் இலங்கை அரசு, மறுபக்கம் புலிகள். மிக மோசமான சூழ்நிலையில் துணிந்து நின்று மட்டக்களப்பில் அவங்க அமரா வேலை செய்தாங்க. அவங்களுக்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் நெருக்கடி. புலிகளால் நெருக்கடி… இலங்கை அரசாங்கத்தால் நெருக்கடி…

தேசம்: அவருடைய கணவர் தான் சொர்ணலிங்கம்…

அசோக்: ஓம். அவரும் ஒரு சமூக செயற்பாட்டாளர்.

தேசம்: நான் நினைக்கிறேன் சூரியா அமைப்பில் அவர்கள் வேலை செய்கின்ற நேரம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை தொடர்பாக… அந்த நேரம் மட்டக்களப்பில் அது பெரிய பிரச்சனை. அடிக்கடி கைதுகள் இடம்பெறும். அவர்களைப் பார்க்க இயலாத நிலைமை அந்த நேரத்தில் எல்லாம் இவர்களுடைய ஒத்துழைப்பு நிறைய இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். திருமணத்திற்கு பிறகு தொடர்ச்சியாக அவர்களோடு வேலை செய்தார்களா?

அசோக்: இல்லை திருமணத்துக்குப் பிறகு இங்கேயே வந்திட்டா. அந்த உறவுகள் இருந்தது. இலங்கைக்கு போகும்போது அங்க நட்புக்களை உறவுகளை எல்லாம் சந்திப்பா. அமரா அவங்களோடு சேர்ந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் தாய்மார்களுடன் வேலை செய்வது… மனித உரிமை விடயங்களில் ஈடுபடுவது…

தேசம்: உங்களுடைய வாழ்க்கையைப் பொறுத்தவரைக்கும் நீங்கள் மிக உடைந்த நிலையில் தான் இருந்தீர்கள். இப்ப எப்படி பார்க்கிறீர்கள் 18 ஆண்டுகள் கடந்து…

அசோக்: என்னோடு வாழ்வது என்பதே அது ஒரு துணிச்சல் தானே ..! ஜெயந்தி வந்ததற்குப் பிறகுதான் நிறைய மாற்றங்கள் என்னிடம். நிறைய கற்றிருக்கிறேன் ஜெயந்தியிடமிருந்து. அடுத்தது ஜெயந்தியிடம் பொறுமை கூட. முரண்பாடுகளை எப்படி கையாளுவது என்று ஜெயந்தியிடம் தான் நான் கற்றேன்.

தேசம்: புலம்பெயர்ந்த தேசத்தில் உங்களுக்கு அரசியல் ரீதியாக நிறைய முரண்பாடுகள் இருந்தது. அந்த முரண்பாடுகளுக்குள் அவங்க வரேல பெரும்பாலும்.

அசோக்: ஜெயந்தி அதிலே தெளிவாக இருந்தாங்க. வந்த ஆரம்பத்தில் அவங்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. இங்கு புகலிட சூழலில் பிரயோசனமான வேலைகளில் ஈடுபடலாம் என்று. எங்களுடைய புகலிட சண்டைகளையும், முரண்பாடுகளையும், குழிபறிப்புக்களையும் பார்த்து பயந்து போயிற்றா. அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டா. ஜெயந்திக்கு ஆவணப்படுத்தலில் ஆர்வம் இருக்கு. பல விடயங்களை செய்து கொண்டிருக்கிறா.

புகலிட அரசியல் இலக்கிய செயற்பாடுகள் என்பது மக்களுக்கானது இல்லைத்தானே. அது எங்களின்ற அடையாள இருத்தலுக்கான ஒரு உத்திதானே . எனக்கு நிறைய விமர்சனங்களை வைத்திருக்காங்க. எங்களுடைய புகலிட அரசியல் இலக்கிய முரண்பாடு ஆரோக்கியமில்லாத முரண்பாடு. அதைப்பற்றி பிறகு கதைக்கலாம். நீண்ட நேரம் கதைக்க வேண்டும் அதை. என்னுடைய திசை வழியை மாற்றியதில் ஜெயந்திக்கு நிறைய பங்கு இருக்கு. ஒரு தோழியாக, சினேகிதியாக …

தேசம்: உங்களோடு ஏற்கனவே தொடர்பில் இருந்த நண்பர்கள் வரக்கூடியதாக இருக்கு தங்கக்கூடியதாக இருக்கு. அதுகளில் எல்லாம் நான் நினைக்கிறேன் நல்ல தோழியாகவும் அரசியல் துணையாக கூட இருக்கிறா…

அசோக்: எங்களுக்கு நண்பர்கள் தோழர்களின் வருகையைப் போல் சந்தோசம் தருவது வேறு எதுவும் இல்லை. செல்வியினுடைய சினேகிதங்கள் முழு பேரும் ஜெயந்திக்கும் சினேகிதங்கள் அந்தப் பழைய வட்டம் அப்படியே இரண்டு பேருக்கும் உறவாக இருக்கு. நீங்கள் பார்த்தீர்கள் என்றால் செல்வியினுடைய சினேகிதங்கள் எனக்கும் உறவு ஜெயந்திக்கும் உறவு. அது எங்களுக்கு ஒரு பெரிய ஆரோக்கியமாக இருந்தது. ஜெயந்திக்கு ஒரு நண்பர் வட்டம், எனக்கு ஒரு நண்பர் வட்டம் இருக்கு. இந்த நட்புக்களும் உறவுகளும்தான் எங்களுக்கு பலம். எங்களை காப்பாத்தினது. ஏனென்றால் நாங்கள் எங்களுடைய வட்டத்தை மீறி வேறு மட்டங்களுடன் பழக முடியாது. அவர்களுடைய வாழ்க்கையும் சிந்தனையும் போக்கும் வித்தியாசம். அப்போ எங்களைத் தக்க வைத்துக்கொள்வதற்கு குடும்ப வாழ்க்கையில் இந்த நட்புக்களின் துணையும் உதவ வேண்டும். அந்தவிதத்தில் ஜெயந்தியின் துணை என்பது பெரியது. இல்லாவிட்டால் நான் சாமியார் ஆகியிருப்பேன்…

தேசம்: உண்மையிலேயே நீங்கள் வாழ்க்கையில் தோற்றுப் போய் விட்டேன் என்ற நிலையில் இருந்தீர்கள். இப்ப வாழ்க்கை ஓரளவு பூரணப்படுத்தப்பட்டிருக்கு…

அசோக்: பூரணம் என்பது… பொருளாதார ரீதியாக…

தேசம்: அதைப்பற்றி நான் கேட்கவில்லை. உணர்வு ரீதியாக…

அசோக்: எங்களுக்கு சந்தோஷமான ஒரு வாழ்க்கை அமைஞ்சிருக்கு. பரஸ்பரம் புரிந்துணர்வு இருந்தாலே அது சந்தோசமான வாழ்க்கையாகத்தான் இருக்கும். மகிழ்ச்சியான குடும்பவாழ்விற்கு, ஜனநாயகப் பண்புகளும், சமத்துவ உணர்வுகளும் அவசியம். இது இருந்தாலே வாழ்க்கை சந்தோசம்தான். அடுத்தது ஒவ்வொருவரின் தனித்துவங்களை அங்கிகரிக்க, மதிக்க பழகணும். இவை பற்றி விமர்சனங்கள் இருந்தால் ஆரோக்கியமாக வைக்கணும். இது குடும்ப வாழ்க்கைக்கு மாத்திரம் அல்ல அரசியல் சமூக வாழ்க்கைக்கும் முக்கியம். இந்தப் பார்வை எங்களிடம் இருக்கு.

மற்றது நாங்க வேலை செய்கிறம். அந்த வருமானத்தில் நேர்மையாக வாழ்கிறம். எந்த பெரிய பொருளாதார எதிர்பார்ப்புக்களும் எங்களிட்ட இல்லை. வசதிகளை எங்களுக்கு ஏற்றவாறு உருவாக்கிக் கொள்றம். எங்களுக்கு ஒரு லட்சியம் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட வறிய மக்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று. மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று. ஜெயந்திக்கு நிறைய இருக்கு. அவருடைய நண்பர்கள் சேர்ந்து பல பேரை படிப்பிக்குறனாங்க. கஷ்டப்படுற மக்களுக்கு உதவி செய்வோம். பாதிக்கப்பட்ட மாவீரர் குடும்பங்களுக்கு கூட நாங்க உதவி செய்திருகிறக்கிறம். எங்களைப் பொறுத்தவரை துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்யவேண்டும். அதுதான் முக்கியம்.

பாகம் 30: செல்வியை விடுவிப்பார்கள் என்ற நம்பிக்கையில் வெளிநாட்டுப் பயணம்! நான் ஒன்றும் தூய்மைவாதி கிடையாது!! பேசுகின்ற எழுதுகின்ற கோட்பாட்டுக்கும் வார்த்தைகளுக்கும் குறைந்தது 50 வீதமாவது வாழ வேண்டும்!!!

(ஞானம் – எம் ஆர் ஸ்டாலின்

ஆலோசகர் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்)

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 30 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 13.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

தேசம்: தோழர், செல்வி கடத்தப்பட்டது பற்றி அந்த காலத்தில் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றிய விபரம் உங்களுக்கு தெரியாது. நீங்கள் ஒரு வாழ்க்கையை செல்வியோடு சேர்ந்து அமைப்பதற்கு திட்டமிட்டு இருந்தீர்கள். அதேநேரம் உங்களுக்கு பொருளாதார வளம் தேட வேண்டுமென்ற ஆர்வம் எதுவுமே அந்த நேரம் இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியான சூழலில் நீங்கள் எப்படி வெளிநாட்டுக்கு பயணமாவது என்ற முடிவுக்கு அல்லது தெரிவுக்கு வந்தீர்கள்? பொதுவாக வெளிநாட்டுக்கு வாற எல்லோருக்கும் பொருள் தேட வேண்டும் என்பதுதான் பிரதான காரணமாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். செல்வி கடத்தப்பட்டிருக்கிற அந்த சூழலில் வெளிநாட்டுக்கு வாறது என்று எப்படி முடிவு செய்தீர்கள்.

அசோக்: உண்மையில் வெளிநாட்டிக்குவரும் எண்ணம் எப்போதும் என்னிடம் இருந்ததில்ல. அந்த நேரம் இந்தியா எனக்கு பாதுகாப்பான இடமாக இருந்தது. நிறைய தோழர்கள் இருந்தபடியால் எனக்கு ஆரோக்கியமாக என்னுடைய மனநிலைக்கு ஏற்ற உரையாடலுக்கான நட்புக்கான இடமாக இருந்தது. வெளிநாட்டுக்கு வாற ஐடியாவே இருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் என்ன நடந்தது என்று கேட்டால், நான் இந்தியாவிலிருந்து கொண்டு தங்களுக்கு எதிராக வேலை செய்கின்றேன் என்ற சந்தேகம் புலிகளுக்கு இருப்பதாகவும் நான் இந்தியாவை விட்டு வேறு நாட்டிக்கு சென்றால் செல்வியை விடுவிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் புலிகள் பக்கத்திலிருந்து சந்தேகம் வந்ததாக எனக்கு செல்வியின் வீட்டில் இருந்தும், சில நண்பர்களும் சொன்னார்கள். நான் இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு போனால் செல்வியை புலிகள் விடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சொன்னார்கள்.

இந்த நேரத்தில் தீம்தரிகிட ஞாநி அவங்க செல்வியின் கைது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதி பத்திரிகை ஒன்றுக்கு கொடுத்திருந்தார். இந்த செய்தியை கேட்டதற்குப் பிறகு நானும் தோழர் திருநாவுக்கரசும் ஞாநி அவங்களிடம் சென்று நிலமையை சொல்லி அந்தக் கட்டுரை வேண்டாம் என்று சொன்னோம். நாங்கள் பார்த்தோம், அந்த கட்டுரை வெளி வந்தால், கட்டுரை புலிகள் பக்கத்தில் கோபத்தை உண்டு பண்ணும் என்று. ஆனால் நான் வெளிநாட்டுக்கு போற ஐடியாவை யோசிக்கவில்லை. ஏனென்றால் அப்படி கொஞ்சமாவது எண்ணம் எனக்கு இருந்திருந்தால் யோசித்திருக்கலாம். அப்படி ஒரு எண்ணமே என்னிடம் இருக்கவில்லை. அப்போ திரும்பத் திரும்ப அழுத்தம் வந்துச்சு போனால் விடுவார்கள் என்று. அப்போ உருத்திரனுக்கும் இந்த செய்தி தெரியும். திடீரென்று உருத்திரன் சொல்லிட்டு ஒரு வாரத்துக்குள்ள கிளம்பு போகலாம் என்று. எங்க என்று கேட்க பிரான்சுக்கு போ என்று சொல்லி.

தேசம்: அந்த நேரம் நீங்கள் திருச்சியில் இருக்கிறீர்கள்?

அசோக்: திருச்சியில் தோட்டம் போட்டு கொண்டு இருக்கிறோம். உருத்திரன் சொல்லிட்டுது உடனே மெட்ராஸ் வா என்று. நான் என் நிலைமையை சொன்னேன். இல்லை இல்லை நீ மெட்ராஸ் வா கதைக்கலாம் என்று. நான் மெட்ராஸ் வந்த உடனே…. அதுக்கு முதல் ஒரு சம்பவம் நடந்தது கனடாவிருந்த தோழர் தீபநேசன் வெளிநாட்டிக்கு என்னை வரும்படிகூறி எனக்கு பணம் அனுப்பி இருந்தார். நான் வரமுடியாது என்று சொல்லி ஈஸ்வரனை அந்தப் பணத்தை கொடுத்து உருத்திரன் ஊடாக சுவிஸ் அனுப்பி வைத்துவிட்டேன்.. வெளிநாடு வரும் நோக்கமே இருக்கவில்லை எனக்கு. அப்போ உருத்திரன் சொல்லிச்சு ஈஸ்வரன் அங்கிருந்து சொல்லிக்கொண்டு இருக்கு உன்னை அனுப்பி வைக்க சொல்லி. நீ போனால் சிலநேரம் செல்வியை விட்டுவிடுவதற்கான சாத்தியங்கள் இருக்கு. ஒரு வாரத்துக்குள்ள போக வேண்டும் ஆயத்தமாகு என்றுசொல்லி. அந்த மனநிலையே எனக்கு இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை.

மெட்ராஸ் வந்து ஒரு வாரத்திக்குள்ளே டெல்லி வந்து ஜேர்மன் வந்துட்டேன். ஜேர்மனிக்கு வந்த பிறகுதான் நான் தோழர்களுக்கு அறிவித்தேன் ஜேர்மனிக்கு வந்து விட்டேன் என்று. அவங்களுக்கு நான் முதலில் சொல்லல. அப்போ தோழர் எஸ்.வி. இராஜதுரை அவங்களோடு நெருங்கிய அரசியல் உறவு இருந்தது. எங்களுக்கு நிறைய உதவி செய்து கொண்டிருந்தவர். அவர் ஈழத் தமிழர்களுடைய அரசியல் வளர்ச்சிக்கு அவருடைய புத்தகங்கள் எழுத்துக்கள் மிக உதவியாக இருந்தது. அவரும் நானும் அசோக் நகரில் மூவேந்தர் கொலனி என்று ஒன்று இருந்தது. அங்க ஒரே அபார்ட்மெண்ட்ல இருந்தனாங்கள். நான் கீழ் வீட்டில் இருந்தன். அவர் மேல் வீட்டில் இருந்தவர். அப்ப நாங்க அடிக்கடி கதைத்துக்கொள்ளுவோம். அவரிட்ட தான் டெலிபோன் இருந்தது. நான் இங்கே வெளிநாட்டுக்கு வந்துட்டு அவருக்குத்தான் முதலில் சொன்னேன்.

அங்கிள் நான் ஜேர்மனிக்கு வந்து விட்டேன் என்று. அவருக்கு ஆச்சரியம். ஒரு வாரத்திற்கு முதல் அவரும் நானும் சந்தித்து கதைக்கிறம். பிறகு அவரிடம் சொல்லித்தான் இரா பத்மநாதன் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் ரேடியோ சிலோனில் தயாரிப்பாளராக இருந்தவர்.

தேசம்: ரேடியோ மாமா என்று சொல்லுவது…

அசோக்: ஓம். அவருக்கு நீண்ட வரலாறு ஒன்று இருக்கு. மட்டக்களப்பின் ஆரம்ப கால அரசியல் இலக்கிய ஆளுமைகள். அந்த நேரம் கேள்விப்பட்டிருப்பீர்கள் வீரகேசரி செட்டியார் என்று. அந்தக் காலத்தில் அவரோடு உலகப் பயணம் போய் வீரகேசரியில் பயணக்கட்டுரை எழுதினவர். சுதந்திரன் பத்திரிகையில் எஸ் டி சிவநாயகம் ஆசிரியராக இருக்கும் போது, இவர் துணை ஆசிரியராக இருந்தவர். அவர் ரேடியோ சிலோனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது இனக்கலவரத்தால பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டில் மெட்ராஸ்சில் தங்கி இருந்தாங்க. என் கிராமத்தை பற்றி முன்னர் கதைத்த போது இவங்களைப் பற்றி கதைத்திருக்கிறன். அவர் மகன் காண்டிபனோடு அங்க தங்கி இருந்தார். காண்டீபன் படித்துக் கொண்டிருந்தவர். அவங்களோட நான் விடுமுறை நாட்களில் வந்து நிற்பேன். இயக்கத்தை விட்டதற்குப் பிறகு அங்கேயும் தங்கியிருந்தன். தமிழ்நாட்டில் வாழ்ந்த எங்களைப் போன்ற கஷ்டப்பட்ட பல தோழர்களுக்கு அவரும் மகன் காண்டீபனும் நிறைய உதவி செய்திருக்காங்க. அந்த நேரத்தில் அவங்களுக்கும் கஷ்டம். இருந்தாலும் நிறைய உதவி செய்தாங்க. மறக்க முடியாது.

தேசம்: அவர் உங்களுடைய உறவினரும் கூட என?

அசோக்: அத்தான். பெரியம்மாட மகளை திருமணம் முடித்தவர். நாங்கள் திருச்சிக்கு வரும்வரைக்கும் அங்க தான் இருந்தது. எல்லோருக்கும் பெரிய ஆச்சரியம் அதிர்ச்சி எப்படி திடீரென்று போனது என்று. வந்ததற்கு பிறகு செல்வியை விடுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இன்றைக்கு விடுவார்கள் நாளைக்கு விடுவார்கள் என்று அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. இப்ப முப்பது வருஷமா போயிட்டுது நீங்கள் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். எல்லாம் கனவாகி போய் விட்டது.

தேசம்: பிறகு ஜெர்மனியில் இருந்து எப்படி பிரான்சுக்கு வந்தனீங்க?

அசோக்: ஜெர்மனியில் நான் முகாமில் தான் இருந்தன். அங்கயே நான் இருந்திருக்கலாம். எனக்கு ஜெர்மனியை விட பிரான்ஸ் பிடித்திருந்தது. பிரான்சினுடைய புரட்சி, அரசியல் களம் எனக்கு உவப்பானதாக இருந்தது. அப்போ பிரான்சுக்கு வந்த எனக்கு ஆரோக்கியமாக இருக்கும் என்று நினைத்தேன்.

தேசம்: ஆரோக்கியமாக இருந்ததா…

அசோக்: நான் குறிப்பிட்ட காலம் தானே இருக்கப் போறேன். செல்வி விடுவிக்கப்பட்டதும் திரும்பத்தானே எண்ணி இருந்தன். அப்போ பிரான்ஸில் இருந்துட்டு போகலாம் என்றுதான் வந்தேன். இங்கே வந்ததற்கு பிற்பாடு இங்கே என் வாழ்க்கை திசை மாறிவிட்டது. இப்படி இங்கேயே இருப்பன் என்று நினைத்திருக்கவே இல்லை. நான் போற ஐடியாவிலதான் இருந்தன். கேஸ் போடுற ஐடியாவில இருக்கவில்லை. தோழர்கள் சொன்னார்கள் அகதி தஞ்சம் கோரி விண்ணப்பிக்கும்படி. கிடைச்சா பிறகு இந்தியாவுக்கு போய் வாறது லேசாக இருக்கும் தானே என்று.

இந்த அகதி தஞ்சம் கோரும் வழக்கு தொடர்பாக முறைமைகள் தெரியாது எனக்கு. அப்பதான் சபாலிங்கம் தோழரை தொடர்பு கொள்கிறேன். அப்போ நான் பிரான்சுக்கு வந்ததும் யாருடைய தொடர்பும் இல்லை. என் கிராமத்து புளொட் தோழர்கள் இங்க இருந்தவர்கள் அவங்களோடு தான் நான் இருந்தேன். ஞானம் எம். ஆர். ஸ்டாலின், தயா, நல்லிஸ் என்று சொல்லி தோழர்கள் எல்லாம் இங்கே இருந்தவர்கள். ஞானம் எல்லாம் நிறைய உதவி செய்தாங்க. காலப்போக்கில் அரசியல் முரண்பாடுகள் வந்துவிட்டது என்பது வேறு விசியம். தனிப்பட்ட வகையில் ஞானத்தின் உதவிகளை மறக்கக் கூடாது. அவங்க தான் எல்லா உதவியும் செய்தார்கள். சாப்பாடு எல்லாம். ஒரு மாதத்துக்கு எதுவுமே செய்ய இயலாது. அப்போ எல்லா உதவியும் அவங்கதான் செய்தார்கள்.

அப்போ சேரன் கனடாவிலிருந்து எனக்கு சொன்னார். தன்ர ஃப்ரெண்ட் சபாலிங்கம் என்று, அவர் அகதி வழக்கு போன்ற விடயங்களில் அக்கறையாக இருக்கிறவர். அவரை போய் சந்தி என்று சொல்லி. அப்பதான் சபாலிங்கத்தோட உறவு வருது. சபாலிங்கத்தோடு பேசிட்டு இருக்கும்போது எனக்கு தெரிஞ்சது சபாலிங்கம் எழுதுவதைவிட நான் என் அகதிக் கோரிக்கையை எழுதினால் நல்லாயிருக்கும் என்று சொல்லி நானே எழுதினேன். பிறகு அந்த வழக்கு அகதிகள் காரியாலயத்திற்கு போய் பிறகு என்னுடைய அகதி கோரிக்கை ஏற்கப்பட்டது.

அப்ப செல்வியிட விடுதலைக்காக இங்கே வந்ததற்குப் பிறகு புலிகளுடைய அமைப்போடு தொடர்பில் இருந்த புளொட் தோழர் ஒருவர். இங்க ராஜ் என்று இருந்தவர். அவர் போய் திலகரோட எல்லாம் கதைத்து திலகர் என்னை ஆபிசுக்கு கூப்பிட்டவங்க. நான் ஆபிஸ் போகவில்லை. பிறகு தொடர்பாளர் என்று சொல்லி ஒரு ஆளை அனுப்பினார்கள். அவரிட்ட நான் இந்த பிரச்சினை எல்லாம் கதைத்தேன் அவர் தங்களுக்கு தெரியாது என்று சொல்லி தாங்கள் கட்டாயம் தலைமையோடு வன்னிக்கு கதைக்கிறம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். உண்மையிலேயே நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிறகு எனக்கு விளங்கிவிட்டது. அவங்க சும்மாதான் என்னோட கதைத்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று. பிறகு எதுவும் நடக்கல.

தேசம்: இப்ப இதுல இந்தியாவில் இருந்த போது அரசியல் செயற்பாடுகளில் நிறைய ஈடுபட்டு இருக்கிறீர்கள். இந்த அரசியல் இலக்கிய உரையாடல்கள் அறிமுகம் நட்பு இதுவெல்லாம் எப்பவுமே இரண்டு பக்கத்துக்கு உரியது விவாதமும் … அதுகளைப் பற்றி சொல்லுங்கள் உங்களுக்கு அ.மாக்ஸோடையும் தொடர்பு இருந்தது என்று நினைக்கிறேன்.

அசோக்: அ. மாக்ஸோடையும் புளொட்டில் இருக்கும் போது தொடர்பு வந்தது. அது நெருக்கமான உறவு இல்லை. அக்காலங்களில் அவரின் அரசியல்கருத்துக்களில் நிறைய உடன்பாடுகள் எனக்கு இருந்தது. காலப்போக்கில் அவரின் அரசியல் நிறைய மாற்றம் அடைய தொடங்கியது. மார்ச்சியத்தை விமர்சனத்தோடு பார்க்காமல் அதை நிராகரிக்கின்ற நிலைக்கு அவர் வந்திட்டார். பின் நவினத்துவம் என்ற கருத்தாக்கத்தை தமிழ்நாட்டில் பிழையாக விளங்கிக் கொண்டவர்களில் அ.மாக்சும் ஒருவர். அதை பெருங்கதையாடல் என்று சொல்லி எல்லாம் நிறப்பிரிகை என்ற சஞ்சிகையில் எழுதினார். இப்படி நிறைய கட்டுரைகள். காலப்போக்கில் அது ஆரோக்கியமான முரண்பாடாக தொடங்கி ஒரு காலகட்டத்துல அவருக்கும் எனக்குமான உறவு கொஞ்சம் விரிசல் கண்டுவிட்டது. ஆனால் அவருடைய புத்தகங்கள் எங்களை பக்குவப்படுத்தி இருக்கு. ஆரம்ப காலத்தில்.

தேசம்: வரலாறு என்பது அப்படித்தானே தத்துவ மேதைகள் எடுத்துக்கொண்டாலும் தத்துவ மேதைகளின் மாணவர்கள் அவர்களுக்கு முரணாக போவது ஒரு இயல்பான வளர்ச்சி தானே.

அசோக்: அவருக்கு ஐரோப்பாவில் கிடைத்த புதிய நண்பர்கள் மிக மோசமான நபர்களாக எனக்குத் தெரிந்தார்கள். அவர்கள் கொள்கையிலும் கோட்பாட்டிலும் எவ்வித அக்கறையுமற்று தனிமனித நடத்தையிலும் மிக மோசமான நபர்களாக இருந்தபடியால் மாக்ஸோடு எனக்கு இருந்த தொடர்பை துண்டித்துக் கொண்டேன்.

எஸ் வி ராஜதுரை தோழருடன் நிறைய தொடர்பிருந்தது. இங்க வந்து சந்திச்சவர். காலப்போக்கில் அவருடன் சினேக முரண்பாடு இருந்ததேயொழிய அவரோடு உறவு இருந்தது. இந்திய இராணுவத்தை புலிகள் எதிர்த்ததால புலிகள் தொடர்பாக அவரிடம் ஆதரவு நிலைப்பாடு இருந்தது.

தேசம்: உங்களைப் பற்றின விமர்சனங்களில் ஒன்று நீங்கள் கடுமையான தூய்மைவாதம் பேசுவது என்று. என்னிடமும் அந்த விமர்சனம் இருக்கு நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்…

அசோக்: பல்வேறு நண்பர்கள் மத்தியில் இந்த விமர்சனம் குற்றச்சாட்டு இருக்கு. எனக்குதெரியும்.

தேசம்: மற்றது நீங்க சமூக இயக்கங்களில் வேலை செய்யும்போது பல்வேறுபட்ட நபர்களை சந்திப்பீர்கள். எல்லாரும் நூறு வீதம் சரியாக இருப்பார்கள் என்று இல்லைதானே. நானும் நூறுவீதம் சரி என்று இல்லை நீங்களும் நூறுவீதம் சரி என்று இல்லை.

அசோக்: நானும் அப்படி இல்லை. நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்றால் நாங்கள் பேசுகின்ற எழுதுகின்ற கோட்பாட்டுக்கும் வார்த்தைகளுக்கும் குறைந்தது 50 வீதமாவது வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். யார்தான் வாழ்க்கையில் தவறுவிடாதவர்கள். என் வாழ்வே எனக்கு விமர்சனத்திற்கு உரியது. ஆனா கடந்த காலங்களில் விட்ட அதே தவறுகளையும் பிழைகளையும் தொடர்ந்து செய்ய முடியாதுதானே.

என் வாழ்க்கை வேறு, கோட்பாடு வேறு, எழுத்து வேறு என்றால் நான் ஊரிலேயே சந்தோஷமாக இருந்து இருக்க முடியும். அரசியல், ச மூகம், போராட்டம் என்று வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே.
நான் எதிர்பார்ப்பது என்ன என்று கேட்டால் குறைந்தபட்சம் நாங்க பேசுகின்ற வார்த்தைகளுக்கு, எழுதுகின்ற வார்த்தைகளுக்கு, நம்புகின்ற கோட்பாடுகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று. அப்ப நண்பர்களும் தோழர்களும் தவறிழைக்கும்போது அந்த முரண்பாடுகள் வரும். நண்பர்கள் தோழர்களோடு நான் கொள்ளும் அரசியல் முரண்பாடுகளை பகை முரண்படாக்க நான் எப்போதும் விரும்புவதில்லை. ஆனால் சிலர் பகை முரண்பாடாக கையாண்டு எனக்கெதிரான மிகமோசமான செயல்களையெல்லாம் செய்திருக்காங்க. நான் அவங்களையெல்லாம் எதிரிகளாக நினைத்துப்பார்த்தது கூட கிடையாது.

நான் இவர்களைப்போல் வாழ நினைத்திருந்தால் இவர்களைப் போல் நிறைய சமரசம், பிழையாக அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சின்னச்சின்ன சமரசம், செய்தாலே போதும். இதை நண்பர்கள் செய்யும் போது விமர்சனம் எனக்கு வருகின்றது. இதை தூய்மைவாதம் என்று சொல்ல முடியாது. ஆனால் நண்பர்கள் கடும் விமர்சனங்களை எனக்கு வைத்திருக்கிறார்கள். அதை ஆரோக்கியமாகத்தான் எடுத்து இருக்கிறேன். நிறைய திருந்தி இருக்கிறேன். நான் ஆரம்ப காலத்தில் நிறைய நண்பர்களுடன் நான் முரண்படுவேன். இப்ப ஓரளவு குறைவு. முரண்படுவதில் இருந்து ஒதுங்கி விடுவேன். உண்மையிலேயே எனக்கு கோபம் வாரது ஏனென்றால் அரசியல் தவறுகளை மன்னிக்கலாம். அரசியல் தவறுகள் எமது அரசியல் தெளிவற்ற தன்மை, புரிதல் அற்ற நிலைகளில் ஏற்படக்கூடியது. ஆனா சொந்த வாழ்க்கையில் தனிப்பட்ட நலன்களுக்காக பிழைப்புக்காக அயோக்கித்தனங்களை செய்து கொண்டு மறுபுறம் அரசியல் செய்யும் நபர்களை காணும் போது கோபம் வராமல் என்ன செய்யும்.

தேசம்: முரண்படுவது பிரச்சினை இல்லை பகையாக மாறாமல் இருந்தால் சரி…

அசோக்: நான் எந்த பகைவரோடும் உரையாட தயாராக இருப்பேன். மிக மோசமான புலிகளோடும் உரையாடல் இருந்திருக்கு. உரையாடலுக்கு நான் எப்போதும் தடை விதித்தது இல்லை. அனால் உரையாடலில் நிகழும் தருணத்தில் அந்த உரையாடலுக்கு நேர்மையோடும் உண்மையோடும் நாம் இருக்க வேண்டும்.

அன்புக்குரியவள் செல்வி புலிகளால் கடத்தப்பட்டு படுகொலை! துணைபோனவர்களும்!! ஆதரித்தவர்களும்!!! : பாகம் 29

 

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 29 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 13.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 29:

தேசம்: கடந்த உரையாடலில் நீங்கள் அமைப்பை விட்டு வெளியேறி பிறகு ஈ.என்.டி.எல்.எப் ஆரம்பித்து அதில் இருந்து வெளியேறினது பற்றி எல்லாம் கதைத்திருக்கிறோம். இப்ப கிட்டத்தட்ட நீங்கள் ஒரு நீண்ட ஒரு அரசியல் இடைவெளி ஒன்றுக்குள் வாறீர்கள். கிட்டத்தட்ட 86 ஆம் ஆண்டு கடைசியில் இருந்து அரசியல் வெற்றிடம் ஒன்று வருது. அந்த ஐந்து ஆண்டுகள் 87 களில் இருந்து 92ஆம் ஆண்டு பரிசுக்கு வரும்வரைக்கும் எப்படி அந்த சூழல் இருந்தது தமிழகத்தில்.

அசோக்: நாங்கள் ஈ.என்.டி.எல்.எப் தொடர்பாக முரண்பட்டு வெளியேறும்போது மிகுந்த பொருளாதார நெருக்கடி இருந்தது. நாங்கள் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் தானே இருந்தனாங்கள். பொருளாதார ரீதியாக மிக நொந்துபோன காலம் தான் அது. என்ன செய்வது என்று தெரியவில்லை. தெரிந்த தமிழகத்து இடதுசாரி தோழர்கள் பலர் எங்களுக்கு உதவிகள் செய்தாங்க. குறிப்பாக செம்பியன் என்றொரு தோழர். அடுத்தது ஏழுமலை என்றொரு தோழர்.

தேசம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர்களா?

அசோக்: செம்பியன் தோழர் அவர் கட்சி சார்ந்தவர் அல்ல. அந்த நேரத்தில் எக்ஸ்ரே ரிப்போட் என்ற வாராந்த சஞ்சிகை ஒன்றை வெளியிட்டு கொண்டிருந்தவர். அவர்தான் அதன் ஆசிரியர்.

அவருடைய உதவி கிடைத்தது. இவரும் தோழர் ஏழுமலையும் தோழர் டக்ளஸ் ஆட்களுக்கும் நிறைய ஹெல்ப் பண்ணினார்கள். தோழர் ஏழுமலை எக்ஸ்ரே ரிப்போர்ட் சஞ்சிகையின் காரியாலய பொறுப்பாளராக இருந்தார். இந்த பத்திரிகை காரியாலயம்தான் எங்களுக்கு பல நாட்கள் தஞ்சம் கொடுத்தது. இந்த தோழர்களை எல்லாம் வாழ்க்கையில் மறக்க முடியாது.

தேசம்: இது நீங்கள் எல்லோரும் ஒரு இடதுசாரி கருத்தியலில் இருந்தபடியால் அவர்களோடு தொடர்புகள் இருந்திருக்கு.

அசோக்: ஓம். அடுத்தது ஆரம்ப காலங்களிலேயே இந்தியாவுக்கு போன காலங்களிலேயே இலக்கிய அரசியல் நட்புகள் கூட இருந்தது.

தேசம்: பேனா நண்பர்களுக்கு ஊடாகவா?

அசோக்: இல்லை இல்லை. இந்தியாவில் ஏற்பட்ட உறவுகள். அரசியல் இலக்கிய உறவுகள். நிழல் திருநாவுக்கரசு…

தேசம்: இதெல்லாம் நீங்கள் மத்திய குழு கூட்டங்களுக்கு போகேக்கயா?

அசோக்: போகேக்க அந்தக் காலங்களில் ஏற்பட்ட உறவுகள். அப்போ அவங்களும் நிறைய ஹெல்ப் பண்ணினார்கள்.

தேசம்: யார் அப்படி சொல்லக் கூடிய ஆட்கள்?

அசோக்: தோழர்கள் நிழல் திருநாவுக்கரசு, ஜமாலன், காலக்குறி கான், சண்முகம், நீண்ட பயணம் சுந்தரம் நிறையபேர் இருந்தார்கள். நிறைய தோழர்கள் ஹெல்ப் பண்ணினார்கள். பத்திரிகையாளர் தீம்தரிகிட ஞாநி போன்றவர்களின் உறவுகள் இருந்தபடியால் எங்களுக்கு ஒரு ஆத்ம ரீதியான பலம் ஒன்று இருந்தது. தோழர் கேசவன், தோழர் பொதிய வெற்பன், எஸ்.வீ இராஜதுரை, வீரா.சந்தானம், போன்றவர்களின் உறவும் இருந்தது.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டுக்குள்ள இந்தியாவிலையும் ஒரு இடதுசாரி கருத்தியல் வலுப்பெற்று கொண்டிருந்தது அல்லது மார்க்சிச கட்சிகள் தமிழகத்தில் ஒரு போராட்டத்தை தொடங்குவது மாதிரியான சிந்தனைப் போக்குகளும் இருந்தது தானே.

அசோக்: எம். எல் குரூப்புகள் இருந்தது. மாக்சிச ஐடியோலொஜியோடு அரசியல் இலக்கிய சஞ்சிகைகள் வெளி வந்தகாலம் அது.

தேசம்: அவர்களோடு நீங்கள் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்று யோசித்தீர்களா?

அசோக்: நீண்ட காலமாகவே நான் போன காலத்தில் இருந்து மக்கள் யுத்த குரூப் – பீப்பிள்ஸ் வோரோடு (People’s War) எனக்கு உறவு இருந்தது. அதுல தான் எனக்கு நீண்ட பயணம் தோழர் சுந்தரம், தோழர் கேசவன் நிறைய தோழர்களின் உறவு எனக்கு இருந்தது. பெயர்கள் வேண்டாம். அந்த உறவுகள் ஒரு அரசியல் சார்ந்த உறவாக இருந்தது. அவர்கள் சின்ன சின்ன ஹெல்ப் எல்லாம் பண்ணினார்கள்.

தேசம்: இலக்கியம் சார்ந்த ஈடுபாடுகள் எப்படி இருந்தது அது எவ்வளவு தூரம்?

அசோக்: ஆரம்ப காலத்தில் எனக்கு இலக்கியம் தொடர்பான ஆர்வம் இருந்தபடியால் இலக்கியத் தொடர்பு நிறைய இருந்தது எனக்கு. என்னுடைய நண்பர்களும் இலக்கியவாதிகள் தான். அரசியல் சார்ந்தவர்கள் எல்லோரும் இலக்கியத்தோடு தொடர்பு கொண்ட தோழர்கள்தான். நாங்க அந்த நேரத்தில் பொங்கும் தமிழமுது என்ற சஞ்சிகை வெளியிட்டம் தானே டெசோவுக்கு. அந்த நேரம் நான் ஜெயகாந்தனை போய் பேட்டி கண்டேன். இலக்கிய ஆர்வத்தால்தான் அவரைப் பேட்டி கண்டேன். நீண்ட பேட்டி. அடுத்தது பொங்கும் தமிழமுதுதிற்காக அந்த நேரம் நான் நிறைய பேரை சந்தித்து எழுத வைத்தேன். அப்படி இலக்கிய உறவு ஒன்று இருந்தது. ஆனால் நான் இயக்கம் சார்ந்த இருக்கிறபடியால் அந்த உறவை என்னால் பேண முடியாமல் போய்விட்டது.

தேசம்: பிறகு அந்த இடைப்பட்ட காலத்தில் அந்த உறவுகள்…

அசோக்: அந்த உறவுகள் உதவிச்சு. அவங்க தான் எனக்கு துணையாக இருந்தவர்கள். நிழல் திருநாவுக்கரசு எல்லாம் மறக்க முடியாத தோழர்.

தேசம்: அதைவிட நான் நினைக்கிறேன் தமிழக எழுத்தாளர்களுக்கும் புலம்பெயர்ந்த அல்லது இலங்கை தமிழ் எழுத்தாளர்களுக்கும் இடையில் ஒரு தொடர்பாடல் அல்லது உறவு இருந்தது…

அசோக்: ஓம் அப்படியான உறவும் சூழலும் இருந்திருக்கு. ஒரு பக்கத்தில் பார்க்கப்போனால் அவர்கள் தங்களை இழந்து எங்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள். நாங்கள் அந்த நிலையில் இருந்தால் நான் நினைக்கல நாங்கள் உதவி செய்வோம் என்று. எங்களுக்கு தமிழ்நாட்டு மக்களும், இடதுசாரி இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் கொடுத்த ஒத்துழைப்பு இருக்குதானே, அந்த மனநிலை நான் நினைக்கவில்லை எங்களுக்கு இருக்கும் என்று. தங்களுக்கு சாப்பாடு இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மாதிரி. தோழர் நிழல் திருநாவுக்கரசு எல்லாம் வசதியான தோழர் இல்லை. பிஎச்டி செய்வதற்கு பதிஞ்சுபோட்டு வசதி இல்லாமல் பிஎச்டியை விட்டவர். குடவரைக் கோயில் ஓவியங்கள் தொடர்பாக ஒரு ஆய்வு செய்தவர். அப்படியான நெருக்கடியான சூழலிலும் எங்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தவர்கள். அவங்களை மறக்க இயலாது.

தேசம்: அதற்குப் பிறகு நீங்கள் பரிசுக்கு வந்த பிறகும் இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தீர்கள். அதற்கு அங்க ஆதரவு…

அசோக்: நான் ‘அசை’ என்ற சஞ்சிகை வெளியிட்டேன் தானே. அதுக்கெல்லாம் முழு உதவி. நானும் நாவலனும் நடாத்திய இனியொரு இணையத்தளத்திற்கும் இந்த தோழர்கள் எழுதினாங்க. இங்க தோழர் யமுனா ராஜேந்திரன் செய்த உதவிகள் நிறைய. நான் கோட்பாட்டு ரீதியில் சிந்திக்கவும், எழுதவும் மிகவும் துணை நின்ற தோழர் அவர். அடுத்தது கோட்பாட்டு ரீதியாக பிற்காலத்தில் வளர்வதற்கான பின்புலமாகவும் அவங்க இருந்தார்கள். காலக்குறி சஞ்சிகை எல்லாம் கோட்பாட்டு ரீதியான சஞ்சிகை. கான் கொண்டு வந்தவர். அவர் சமீபத்தில்தான் காலமானவர்.

தேசம்: இந்தியாவில் இருந்த அந்த நான்கு ஆண்டுகளில் நிறைய பேரை வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைத்திருக்கிறீர்கள். அது எப்படி நடந்தது? ஏன் கேட்கிறேன் என்றால் ஒரு பொருளாதார பலம் இல்லாத நிலையில் ஏற்கனவே வெளிநாட்டுக்கு புலம் பெயர்ந்த தோழர்கள் உங்களுக்கு உதவி செய்தவையா? அது எப்படி அந்த ஏற்பாடு நடந்தது? வெளிநாடுகளுக்கு ஒரு காலகட்டத்தில் நான் நினைக்கிறேன் 90, 91 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெருந்தொகையான ஆட்கள் வெளிநாடுகளுக்கு வந்தவர்கள். அதில் குறிப்பாக புளொட் அமைப்பிலிருந்து வந்த ஆட்களும் நிறைய பேர் என்று நினைக்கிறேன். அது எப்படி நிகழ்ந்தது?

அசோக்: உருத்திரன் என்று ஒரு தோழர் இருந்தவர். அவர் புளொட்டில் இருந்தவர். அவர் சென்னையில் கம்யூனிகேஷன் சென்டர் ஒன்று வைத்திருந்தவர். அவர் குறைந்த செலவில் எல்லா தோழர்களையும் அனுப்பினார். அடுத்தது நாங்கள் வந்த பிறகு அங்க உள்ள தோழர்களை கூப்பிடுவது. முழுப் பணத்தையும் கொடுக்கத் தேவையில்லை. அப்போ குறிப்பிட்ட தொகைகளை கொடுத்து விட்டு பின் இங்கு வந்த பின் வேலை செய்து கொடுப்பது.

தேசம்: அப்போ நட்பின் அடிப்படையிலும் நம்பிக்கையின் அடிப்படையிலும் …

அசோக்: ஓம். நிறைய தோழர்கள் அப்படித்தான் வந்தவர்கள். லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வரக்கூடிய சூழல் எங்களுக்கு இருக்கவில்லை தானே. முதல் கொஞ்சம் காசு கொடுக்கறது பிறகு வந்து உழைச்சு மிச்சக்காசு கொடுக்கிறது. உருத்திரன் பக்கத்திலிருந்து அதற்கான உதவி கிடைத்தது.

தேசம்: உருத்திரன் அவர் இறந்து விட்டார் என்று நினைக்கிறேன்…

அசோக்: இறந்திட்டார். தீவுப் பகுதியை சேர்ந்த தோழர். நிறைய பேரை அனுப்பி இருக்கிறார்.

தேசம்: புளொட்டில் இருந்த சிலபேர் இந்தியாவின் மற்ற பகுதிகளில் வட இந்தியாவில் போயிருந்து இப்படியான உதவிகளை செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் அப்படியா? உருத்திரன் போல வேறு சிலரும் அந்த அமைப்புக்குள் இருந்தவர்களா?

அசோக்: அப்படி இருந்த மாதிரி நான் கேள்விப்படவில்லை. நான் அறிந்தவரை உருத்திரன் தான் அந்த காலகட்டத்தில் நிறைய ஹெல்ப் பண்ணினது. வேற ஆட்கள் ஹெல்ப் பண்ணின மாதிரி தெரியல. சில வேளை எனக்கு தெரியாமல் இருக்கலாம்.

தேசம்: எத்தனை பேர் அளவில் உங்களுக்கு தெரிய அந்தக் காலகட்டத்தில் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து இருப்பார்கள்? நீங்கள் இருந்த அந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் ?

அசோக்: எனக்கு தெரிய வெவ்வேறு ஏஜென்சிக்கால வந்த தோழர்கள் இருக்கிறார்கள். உருத்திரனுக்கால வந்த தோழர்களா?

தேசம்: இல்லை இல்லை பொதுவாக…

அசோக்: பொதுவா நாங்கள் ஒரு 100 -150 தோழர்கள் வந்திருப்போம். சில தோழர்களை ஐரோப்ப நாடுகளுக்கு கூப்பிட முடியாமல் போய்விட்டது. அந்தத் தோழர்களை வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி வைத்தோம். இலங்கைக்கு போன தோழர்களுக்கு அங்க இருக்க முடியாமல் போய்விட்டது. அவங்கள் கொழும்புக்கு போய் குறைந்த பயணச் செலவோடு ஏஜென்சிக்கு ஊடாக அப்படி நிறைய தோழர்கள் வளைகுடாவுக்கு போனவர்கள். வளைகுடாவுக்கு போனவர்கள் கூட சில தோழர்கள் ஐரோப்பாவுக்கு வந்து விட்டார்கள். ஏனென்றால் பெருந்தொகை காசு வேணும் தானே அந்த நேரம் வளைகுடாவுக்கு போறதுக்கு குறைந்த காசுதான்.

தேசம்: 87 ஆம் ஆண்டிலிருந்து 92 ஆண்டு அந்த இடைப்பட்ட காலம் வரைக்கும் நீங்கள் இலங்கைக்கு செல்லவில்லை…

அசோக்: பின்தள மாநாட்டுக்கு வந்ததற்கு பிறகு நான் இலங்கைக்கு செல்லவில்லை.

தேசம்: இன்றைக்கு வரைக்கும் செல்லவில்லை…

அசோக்: இன்றைக்கு வரைக்கும் போகவில்லை.

தேசம்: இந்த காலகட்டத்தில் தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் வருது. விடுதலைப் புலிகளுக்கும் முரண்பாடு வந்து ஒரு யுத்தம் நடக்கிறது இந்திய ராணுவத்தோடு. பிறகு 91 ஆம் ஆண்டு இந்திய ராணுவம் திருப்பி வருது. அதுக்குள்ள ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுகிறார். இவ்வாறு இலங்கை அரசியலைப் பொறுத்தவரைக்கும் அது மிக வேகமாக மாறிக் கொண்டிருக்கிற காலகட்டம். அதேநேரம் விடுதலைப் புலிகளின் கரங்கள் நாளுக்கு நாள் பலமடைந்து கொண்டு வருது. செல்வியும் அந்த நேரம் கடத்தப்படுறா…

அசோக்: அந்தக் கால கட்டத்தில் நாங்கள் ஒரு அரசியல் அனாதை தான். ஏனென்றால் இந்த கால கட்டத்தில் நாங்கள் எந்த அரசியலிலும் பெருசா ஆர்வம் காட்டவில்லை. எங்கட சொந்த வாழ்க்கை மிக மோசமாக இருந்த காலகட்டம் தானே. எங்களோட வந்த தோழர்களை காப்பாற்றுவது தான் எங்கட முயற்சியாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில்தான் 91 ஓகஸ்ட் 30 செல்வி புலிகளால் கடத்தப்படுகிறார். யுனிவர்சிட்டிக்கு முன்னால இருந்த ஆத்திசூடி லேனில் எனக்கு தெரிந்த நண்பர்களுடைய வீட்டில் தான் இருந்தவா. அப்போ புலிகளின் பெண்கள் பிரிவால் விசாரணைக்கு என்று அழைக்கப்பட்டு பிறகு என்ன நடந்தது என்று தெரியாது.

தேசம்: அதற்குப்பிறகு என்ன நடந்தது என்றே தெரியாது…

அசோக்: பிறகு கொலை செய்யப்பட்டு விட்டார்.

தேசம்: செல்வியை மீட்பது சம்பந்தமா அல்லது விடுவிப்பது சம்பந்தமா நீங்கள் ஏதாவது நடவடிக்கையில் ஈடுபட்டீர்களா?

அசோக்: கம்யூனிகேஷன் இல்லைதானே. கடத்தி ஒரு வாரத்துக்குப் பிறகு தான் இந்த சம்பவமே எனக்கு தெரியும். இப்படி அரெஸ்ட் பண்ணி விட்டார்கள் என்று. அதற்குப் பிறகு பல்வேறு மட்டங்களில் சிவத்தம்பி தொடர்பாக ஒரு கதை இருந்தது தானே அவருக்கு புலிகளோடு உறவு இருக்கு என்று. அவரோடு உரையாடிய போது அவர் தன்ற பக்கத்தில் உள்ள இயலாமையை சொல்லிக் கொண்டிருந்தார். ட்ரை பண்ணுறேன் ஆனால் தெரியும் தானே பிரச்சினைகள் என்று சொன்னார். பிறகு நாங்கள் இந்தியாவிலிருந்த விடுதலைப் புலிகள் சார்ந்த ஆட்களோடு எல்லாம் நாங்க நிறைய ட்ரை பண்ணினது. அந்த நேரம் பிபிசிக்கு தெற்காசிய பிரிவில் ஒருத்தர் இருந்தவர். விடுதலைப் புலிகளோடு மிக நெருக்கமாக இருந்தவர். அவர் எல்லாம் சொன்னார் நாங்கள் தீவிரமாக முயற்சி செய்கிறோம் என்று. எதுவுமே சாத்தியப்படவில்லை. அந்த நேரத்தில் ஃபாதர் இமானுவேல் வந்தவர். அவரையும் சந்தித்து கதைத்தேன். அவர் ஒரு புலியாகத்தான் கதைத்தார்.

தேசம்: லண்டனில் இருக்கிறார் நாடுகடந்த தமிழீழத்தில்…

அசோக்: ஓம். அப்ப ஒரு சிஸ்டர் தான் ஏற்பாடு செய்து தந்தவர் எனக்கு. அவர் சொன்னார் புலிகள் செய்திருக்க மாட்டார்கள். புலிகள் ஒரு புனிதமான அமைப்பு. அப்படி எல்லாம் கதைக்க வெளிக்கிட்டார். பிறகு சொன்னார் அப்படி நடந்து இருந்தால் நான் முயற்சி செய்கிறேன் என்று. தெரியும் தானே…

தேசம்: அவ்வளவு அக்கறை எடுக்கவில்லை…

அசோக்: அவர் அவ்வளவு அக்கறை எடுக்கவில்லை…

தேசம்: அதை விட உங்களுக்கு தனிப்பட்ட முறையில் புலிகளிலிருந்த சில நண்பர்களையும் உங்களுக்கு ஓரளவு தெரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன். இப்ப ரவி அருணாச்சலம் போன்றவர்கள்…

அசோக்: ரவி அருணாச்சலம் அதற்கு பிறகுதான் புலிகளுக்கு போனவர். வெளிநாடு வந்த பின். அந்த நேரம் இந்தியாவில் புலிகளில் இருந்த நண்பர்கள் தொடர்பு கிடைக்கவில்லை. புலம்பெயர்ந்து வந்த பிறகு சந்தித்தேன். குறிப்பாக நோர்வே ரஞ்சித், இப்ப லண்டனில் இருக்கிறார். அவருக்கு எங்களைக் போலவே புலிகள் தொடர்பாக விமர்சனம் இருந்தது. அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் சிலர் நினைத்திருந்தால் அந்த நேரத்தில் செல்வியை காப்பாற்றி இருக்கமுடியும். உதாரணமாக புலிகளின் மிக முக்கிய அதிகாரத்தில் இருந்தவர் நோர்வே சர்வேஸ்வரன். அவர் இப்ப கடைசியா 2009 வரைக்கும் புலிகளுடைய ஐரோப்பாவில் அதிகாரமிக்க தலைமையில் இருந்தவர். கே பி யோடு மிக நெருங்கிய உறவு. அவர் எல்லாம் நினைத்து இருந்தால் செல்வியை விடுவித்து இருக்கலாம் ஏனென்றால் புலிகளில் பவர்ஃபுல் ஆன ஆட்கள் இவர்கள்.

தேசம்: சிதம்பரநாதன், பத்மினி சிதம்பரநாதன் ஆட்கள்…

அசோக்: சிதம்பரநாதன் ஆட்கள் தொடர்பாக எல்லாம் நிறைய விமர்சனம் இருக்கு…

தேசம்: பல்கலைக்கழகங்களில் இருந்தவர்கள்…

அசோக்: அவங்கதான் பொங்குதமிழ் எல்லாம் செய்தவர்கள். யாழ்ப்பாண பல்கலைக்கழக மட்டத்தில் புலிகளுக்கு மறைமுகமாக வேலை செய்தவங்க. செல்வி கடத்தப்பட்டது தொடர்பாக புலிகள் பக்கத்தில் இருந்து யாரும் கதைக்க தயாரில்லை. இன்றைக்கும் கூட என்ன நடந்ததென கதைக்க தயாரில்லை . அந்த கால கட்டத்தில் புலிகளில் இருந்த பலருக்கும் இது தெரிந்திருக்கும்.

பெண்கள் பிரிவு என்ற படியால் தமிழினிக்கு எல்லாம் தெரிந்திருக்கும். தமிழினி இறந்து விட்டாங்க. ஆனால் யாருமே கதைக்கத் தயாரில்லை புலிகள் பக்கத்திலிருந்து . செல்வி கடத்தப்பட்டு இருந்த காலகட்டத்தில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டி க்கு போன இடத்தில் எனக்கு தெரிந்த ஊடகவியலாளர் ஒருவர் கேட்டிருக்கிறார் தமிழ்ச்செல்வனிடம். அதற்கு தமிழ்ச் செல்வன் சொல்லி இருக்கிறது, அந்த கதையை விடுங்கள் என்று சொல்லி. மற்றது கவுண்டர் பாயிண்ட் பத்திரிகையாளரிடம் சொல்லுகிறார்கள் செல்வி இன்னும் கஸ்டடியில் தான் இருக்கிறார். விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லி அந்த நேரம் அன்டன் பாலசிங்கமே பேட்டி கொடுத்திருக்கிறார். ஆனால் புலிகள் பக்கத்திலிருந்து யாருமே கதைக்கத் தயாரில்லை.

இன்றைக்கு மனித உரிமை பேசுற நோர்வே சர்வே எல்லாம் மிகமோசமான ஆட்களா இருந்தவங்க. சர்வே புலிகளின் அதிகாரத்தில் இருந்த காலகட்டத்தில் நானும் பரிசில் இருந்தன். ஊடகத் துறைக்கு எல்லாம் அவர்தான் பொறுப்பாக இருந்தவர். அதிகாரமிக்க நபர்களாகத்தான் இருந்தவர்கள். இன்றைக்கு ஜனநாயகம், மனித உரிமை பற்றி நோர்வேயில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தேசம்: செல்வி கடத்தப்பட்டது கொலை எப்ப நடந்தது என்பதும் தெரியாது…

அசோக்: 91 ஓகஸ்ட் கடைசி காலம் 30 ஆம் திகதி மட்டில. முப்பது வருஷம் வருது.

தேசம்: அதற்கு பிறகு எந்த தகவலும் இல்லை? உத்தியோகபூர்வமாக புலிகள் அறிவிக்கவும் இல்லை.

அசோக்: ஒரு கட்டத்தில் செல்வியின் வீட்டுக்கு போய் சொல்லி உள்ளார்கள். செல்வி வீட்டார் அடிக்கடி புலிகளிடம் சென்று கேட்டுக் கொண்டு இருக்கும் போது புலிகள் ஒரு கட்டத்தில் வரவேண்டாம் முடித்தாச்சு என்று சொல்லிட்டாங்க.

தேசம்: ஆனால் என்ன காரணத்துக்காக என்று தெரியல. அவா ராணுவ ரீதியாக எந்த செயலிலும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை முழுக்க கலை இலக்கிய ஈடுபாடு தான்?

அசோக்: ஒன்றுமே இல்லை. அந்தக் காலத்தில கவிதைகள், மொழிபெயர்ப்பு நாடகங்கள் எல்லாம் செய்துகொண்டிருந்தவங்க… ரவி அருணாச்சலம் போன்றவர்களெல்லாம் செல்வி புலிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தவ அதனால தான் புலிகள் கொலை செய்தது என்று சொல்லிக் கொண்டிருந்தாங்க.

தேசம்: ரவி அருணாச்சலம் புலிகள் பற்றி விமர்சித்த ஒரு ஆள் தானே…

அசோக்: பிற்காலத்தில் புலிகளுடைய ஆதரவாளராக வந்த பிறகு இந்தக் கதைகள் சொன்னவர். செல்வி அந்த நேரம் மொழிபெயர்ப்பு நாடகங்கள் போட்டிருக்கிறா. அதிகாரத்துக்கு எதிரான மொழிபெயர்ப்பு நாடங்களை யாழ்ப்பாணம் யுனிவர்சிட்டியில் போட்டிருக்கிறா. தியேட்டர் சயன்ஸ் தானே செய்தவ செல்வி. அதிகாரத்துக்கு எதிரான நாடகங்கள் போடும்போது புலிகள் இயல்பாகவே தங்களுக்கு எதிரானது என்று கருதிக்கொண்டாங்க. அந்தத் தகவல்களை செல்விக்கு எதிராக புலிகளுக்கு பரிமாறினதில குறிப்பிட்ட ஆட்கள் இருந்திருக்காங்க.

தேசம்: குறிப்பிட்ட அந்த ஆட்கள் யா ர் சொல்ல முடியுமா?

அசோக்: எனக்கு சிதம்பரநாதன் மீது சந்தேகம் இருக்கு. அவரோட மிக நெருக்கமாக இருந்த பல பேர் இது பற்றி அவர்களோடு கதைத்துப் போட்டு மறுத்திருக்கிறார்கள். அவர் அப்படி அதில் சம்பந்தப் படவில்லை என்று சொல்லி.

தேசம்: யார் இந்த தகவல்களை புலிகளுக்கு கொடுத்தது என்பதில்…

அசோக்: இந்தக் குற்றச்சாட்டுகளை வைத்தபோது அவர் மறுத்ததாக அவரோடு நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் எனக்கும் நண்பர்களாக இருக்கிறார்கள், சொல்லி இருக்கிறார்கள்.

தேசம்: கிட்டத்தட்ட இலங்கை ராணுவம் மனித உரிமை மீறல்களை நடத்தியிருக்கோ கிட்டத்தட்ட அதே நிலைமையில்தான் எங்க பக்கத்திலும் நடந்திருக்கு. இல்லை அதிலும் பார்க்க மோசமாக நடந்திருக்கு.

அசோக்: இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். கேட்கலாம். புலிகளுடைய படுகொலை தொடர்பாக எதுவும் செய்யமுடியாது. குறைந்தபட்சம் இதுதொடர்பான வருத்தம் கூட யாரிடமும் இல்லை. இன்றைக்கு புலிகளின் மிக விசுவாசிகளாக படைப்பாளிகளாக, கவிஞர்களாக பெண்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் இருக்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கிறார்கள். பெண்கள் மீது புலிகள் செய்த படுகொலைகள் தொடர்பாக குறைந்தபட்ச மனவருத்தத்தை கூட வெளிப்படுத்தக் கூட தயாரில்லை. அவங்களும் பெண்கள் தான். படைப்பாளிகள், கவிஞர்கள் சொல்லப்படுகிற பெண்கள் கூட பெண்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் தொடர்பாக குறைந்தபட்சமாக மனவருத்தத்தை வெளிப்படுத்தவில்லை. இன்டைக்கு பேஸ்புக்ல பார்க்கலாம் புலிகள் உத்தமமானவர்கள், பிரபாகரன் மிக உத்தமமானவர் என பிழைப்பு இலக்கியம் செய்பவர்களை. அது அவங்கட சுதந்திரம். ஆனா குறைந்தபட்சமாக இந்த மனிதாபிமான கண்டனங்களை, மனவருத்தங்களைக் கூட வெளிப்படுத்த தயாரில்லை தானே. கொலை செய்த புலிகளை விட கொடிய மனநிலை கொண்டவங்க இவர்கள்.

தேசம்: ரவி அருணாச்சலத்தை விட வேறு யாராவது இப்படியான சம்பவங்களை ஏற்றுக்கொண்டு வெளிப்படையாக கருத்துகள் சொல்லி இருக்கிறார்களா?

அசோக்: இல்லை. நண்பர்கள் என்ற அடிப்படையில் ரவி அருணாச்சலம் கொலையை கண்டிக்கின்ற நபராக இல்லை. ஆரம்பத்தில் இருந்தவர். சரிநிகர் பத்திரிகையில் வேலை செய்யும்போது புலிகள் தொடர்பாகவும், பிரபாகரன் தொடர்பாகவும் மிக கடுமையான விமர்சனங்களை முன் வைத்ததில் ரவி அருணாச்சலமும் ஒராள். பல்வேறு புனை பெயர்களில் நிறைய விமர்சனங்களை வைத்தவர். காலப்போக்கில் ஐரோப்பாவுக்கு வந்தபிறகு அவருடைய முகம் மாறிவிட்டது. அவர் மட்டும் இல்லை கடந்த காலங்களில் புலிகளுடைய செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை வைத்த பலர் காலப்போக்கில் தங்களுடைய தனிப்பட்ட நலன்களுக்காக மாறிவிட் டார்கள்.

ரோவின் திருவிளையாடல்கள்: தோழர் டக்ளஸ் – பரந்தன் ராஜன் முரண்பாடு மாணிக்கன் தாசன் அசோக் மீது துப்பாக்கிப் பிரயோகம் – குன்றக்குடி அடிகளாரிடம் அடைக்கலம்!!! – பாகம் 28

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 28 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 12.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 28:

தேசம்: ஈழ தேசிய ஜனநாயக முன்னணியின் ENDLF யின் உருவாக்கம் பற்றி சொல்லி இருந்தீர்கள். அது உண்மையா நீண்ட காலம் நீடிக்கவில்லை. அதுல முரண்பாடு வருது தோழர் டக்ளஸுக்கும் பரந்தன் ராஜனுக்கும். அது எந்த அடிப்படையில் அந்த முரண்பாடு வருது. அரசியல் ரீதியான முரண்பாடா? தனிநபர் பிரச்சினையா? அல்லது ஆளுமை சம்பந்தமான போட்டியா? ஏன் இந்த முரண்பாடு?

அசோக்: முதன்முதல் டக்ளஸ் தோழருடன் நாங்கள் அமைப்பு உருவாக்கம் தொடர்பாக கதைக்கும் போது அவர் கேட்டவர் ராஜன் இதுகுள்ள வாறாரா என்று. நாங்கள் சொன்னோம் அவருடன் நாங்கள் கதைத்திருக்கிறோம். அவங்களோட தோழர்கள் நிறைய பேர் வெளியேறிட்டாங்க. அவங்களையும் உள்வாங்க வேண்டும் என்று நோக்கம் இருக்குது. அவங்களுடனும் நிறைய நல்ல சக்திகள் இருக்கிறார்கள்.

அப்போ அவர் சில விமர்சனங்கள் வைத்தவர் ராஜனை பற்றி. சிறைக்குள் நடந்த பிரச்சனைகள் பற்றி…

தேசம்: இந்தப் போராட்டம் தொடங்குவதற்கு முதலே…

அசோக்: இல்ல. வெலிக்கடை சிறையில இவங்க எல்லாரும் ஒன்றாகத்தான் இருந்தார்கள். அப்போ அங்க புளொட்டில் இருந்த மாணிக்கதாசன், ராஜன் ஆட்கள் எல்லாம் நடந்துகொண்ட முறைகள் தொடர்பாக கடும் விமர்சனம் வைத்தார். அங்கேயே அவங்களுக்கு முரண்பாடு தொடங்கி விட்டது. அந்த முரண்பாடு தனிநபர் முரண்பாடாக கூர்மை அடைந்து விட்டது. அப்போ அவர் சொன்னார் சிக்கலாக இருக்கும் காலப்போக்கில் என்று.

அப்போ நாங்க சொன்னோம் தனிநபர் முரண்பாட்டுக் அப்பால் சுமூகமாக அமைப்பு ஒன்றை உருவாக்குவோம் என்றும் முரண்பாடுகள் வராமல் நாங்கள் பொறுப்பு நிற்கிறோம் என்றும், அந்த முரண்பாடுகள் வராம இருக்க அதற்கான எல்லா பொறுப்புகளையும் நாங்கள் எடுக்கிறோம் என்று சொல்லி அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர் அமைப்பிற்குள் வந்தவர்.

இந்தக் காலகட்டத்தில் இந்தியா இலங்கை தொடர்பான விடயங்களில் கவனம் கொள்ளத் தொடங்குகிறது. காலப்போக்கில் இலங்கையில் இந்திய இராணுவத்தை இறக்கும் எண்ணம் உருவாகிறது. இதற்காக சில இயக்கங்களுக்கு இந்தியா பயிற்சி அளிக்க முடிவு பண்ணுகிறது. எங்களையும் அணுகுகிறது. நாங்களும் பயிற்சிக்காக செல்கிறம். பயிற்சி முடிந்து ஒரு மாதம் கழித்து சென்னை வந்து பார்த்தால் டக்ளசிக்கும் ராஜனுக்கும் முரண்பாடு கூர்மைடைந்து இருந்தது.

தேசம் : என்ன காரணத்தால் இந்த முரண்பாடுகள் ஏற்படுகிறது?

அசோக்: அந்தத் தனி நபர் முரண்பாடு இதுகுள்ள வந்து ஆளுமை செலுத்த தொடங்கிட்டுது. நாங்கள் அமைப்பு தொடங்கினதற்கு பிறகு பல்வேறு அரசியல் சக்திகள் இந்திய அரசு, ஏனைய அரசியல் தொடர்பான உறவுகளை, உளவுத்துறைகள் போன்ற அந்த உறவுகளை கமிட்டி மூலமாக அணுக வேண்டும் என்பதுதான் எங்கட விதி முறை.

ஏனென்றால் தனித்தனியாக அணுகினால் அவர்கள் தனித்தனியாக எங்களை கையாள வெளிக்கிடுவார்கள். உளவுத்துறை எப்பவுமே தனி நபர்களை வைத்து தான் எதையும் செய்கிறது. நாங்கள் அவர்களால் வாங்கப்படுவதே எங்களுக்கு தெரியாம இருக்கும். புளொட்டிலிருந்து தனி நபர்களாக உளவுத்துறைகளோடு உறவு வைத்திருந்தவர்களை குறிப்பாக ரோ எப்படி பயன்படுத்தியது எங்களுக்கு உள்ள படிப்பினைதானே. அதே தவறையும் ஆபத்தையும் மீண்டும் நாம் விடக்கூடாது என்பதில் நாங்க கவனமாக இருந்தம். இனிமேல் வந்து உளவுத்துறை தொடர்பாக ரோ, இந்திய பொலிஸ் துறை, ஐபி, கியூ பிரான்ச் போன்றவற்றோடு தனிநபர்கள் கதைக்கக் கூடாது என்று. அப்படியே அவங்க தனிநபரை கூப்பிட்டாலும், கமிட்டியில் முடிவெடுத்துப் போட்டு தான் போய் கதைக்க வேண்டும் என்று சொல்லி முடிவெடுத்திருந்தோம்.

இரரணுவக்கமிட்டி, அரசியல் கமிட்டி இணைந்து முடிவுகளை எடுக்கும்.எந்த சந்திப்புக்களும் தனிநபர் சார்ந்து இருக்கக் கூடாது என்பது எங்கட தீர்மானம். அவங்கள் வடிவாக தனிநபர்களை கையாளத்தொடங்கிட்டாங்க. ராஜனைத் தனிய சந்திக்கிறது, டக்ளஸை தனிய சந்திக்கிறது, உங்களுக்கு தனிய ஆம்ஸ் தாறம் என்கிறது. இப்படி இவர்கள் கையாண்டவுடன் அது பெரிய முரண்பாடாக போய்விட்டது.

ஒரு தடவை ஒரு தொகுதி ஆம்ஸ் தாறம் என்று தனியா ராஜனுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஆம்ஸ்சும் கொடுத்து விட்டார்கள். இது டக்ளஸ் தோழருக்கு தெரியாது. தெரிந்தவுடன் பிரச்சனையாகி விட்டது. எங்களுக்கு இந்தப் பிரச்சினையெல்லாம் பயிற்சிமுடித்து வந்தபின்தான் தெரியவருகிறது.

இந்த முரண்பாடுகள் பற்றி ராஜனோடு பேசுகிறோம். எந்த முடிவும் தனிநபராக எடுக்கமுடியாது கமிட்டிதான் முடிவு பண்ணவேண்டும் என்று.

மிலிட்டரி கொமிசாரில் கதைக்கப்பட்டு நாங்கள் ஆயுதம் வாங்குவதா இல்லையா என்று தீர்மானத்துக்கு வர வேண்டும் என்று சொல்கிறோம். இந்த முரண்பாடு கூர்மையடையுது. ராஜனுக்கு எங்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்கல. அப்போ நாங்கள் சொல்லுறோம் நாங்கள் வெளியேறுகிறோம் என்று. அதுக்கு முதல் இந்த காலகட்டத்தில் டக்ளஸ் தோழர் வெளியேறிட்டார். இதைப் பற்றி நாங்கள் ராஜனிட்ட கதைக்கும் போது ராஜனுக்கும் எங்களுக்கும் இந்த முரண்பாடு வருகிறது.

தேசம்: இது நான் நினைக்கிறேன்… நீங்கள் அறிக்கைவிட்டு ஒரு சில வாரங்கள் அல்லது நாட்கள்…

அசோக்: எங்களுக்கும் ENDLF க்குமான உறவுக்காலம் காலம் 6 மாதம் 7 மாதம் இருக்கும். அதுக்குள்ள முரண்பாடு வந்து நாங்கள் வெளியேறிட்டம்.

தேசம்: ஒருவகையில் அது நல்லம் என்று பார்த்தால் முதல் உமாமகேஸ்வரன் புளொட்டுக்குள்ள நடந்தவைகளை பார்க்கும்போது எவ்வளவு முன்னுக்கு அந்த பிரிவு முரண்பாடு நடக்குதோ அதால ஏற்படும் இழப்புகளும் குறைவு. இதே மாதிரியான பிரச்சனையை ஆரம்பத்திலேயே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் எடுத்திருந்தால் இவ்வளவு பெருந்தொகையான தோழர்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள் அந்த வகையில இது ஓரளவுக்கு பரவாயில்லை என்றும் பார்க்கலாம்.

அசோக்: அதுல ஒரு நல்ல பண்பு என்ன என்று கேட்டால் நாங்கள் ராஜனுடன் கடுமையான முரண்பாடு வாய்த்தர்க்கம். நாங்கள் வெளியேறிய பின்னர் அதற்குப் பிறகு எங்கள் மீதான நடவடிக்கைகளோ தேடுதலோ குற்றச்சாட்டு எதுவுமே ராஜன் வைக்கேல. மிக கௌரவமாக அவரும் விலகிக்கொண்டார். நாங்களும் விலகிக் கொண்டோம். பிறகு ENDLF என்ற பெயரை தாங்களே எடுத்துக் கொண்டார்கள். அதற்குப் பிறகு தோழர்களை அடிக்கடி சந்திப்பேன். எந்த முரண்பாட்டையும் நாங்கள் வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை. நாங்கள் விலகிக் கொண்டோம். ஜனநாயக பூர்வமாக விலகிக் கொண்டோம்.

காலப்போக்கில் டக்ளஸ் தோழருக்கு நெருக்கடி வருகிறது. சூளைமேடு பிரச்சினை …

தேசம்: சூளைமேட்டில் என்ன பிரச்சினை?

அசோக்: சூளைமேடு சூட்டிங் பிரச்சனை இவர் மீது தான் குற்றம்சாட்டப்பட்டது. அந்த பிரச்சனையில் எல்லாம் மிக அழுத்தம் இருக்கிறது. அப்போ அவங்களுக்கு இந்தியாவில் தொடர்ந்து இருக்க முடியாத சூழல். எப்படியோ அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் வேற இடத்துக்கு போக வேண்டும். அடுத்தது தொடர்ந்து அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கமும் இருக்கு. கட்டின அமைப்பும் சீர்குலைந்து போய்விட்டது. அப்போ நாட்டுக்கு போக வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.

தேசம்: நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எண்பத்தி ஆறு கால கட்டத்தில்தான் இது எல்லாம் நடக்குது.

அசோக்: எண்பத்தி ஆறு கடைசி காலகட்டத்தில்.

தேசம்: அப்போ அங்காள எண்பத்தி ஏழில் இந்திய ராணுவம் அங்க போகுது.

அசோக்: ஓம் அதற்கு முதல் தான் இது நடக்கிறது. அப்போ அவருக்கு இலங்கைக்குப் போய் அரசியல் செய்கின்ற நோக்கமெல்லாம் இருக்கிறது.

தேசம்: இந்த ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியை ராஜன் எடுத்த பிறகு, அந்த காலகட்டத்திலேயா ஈபிடிபி உருவாக்கப்பட்டது?

அசோக்: இல்லை இந்த காலகட்டத்தில்தான் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ன செய்கிறது என்று. இலங்கைக்கு போய் அரசியல் செய்கிற நோக்கமாக அசோக் சந்திரகுமார் 4- 5 பேரை இலங்கைக்கு அனுப்பி அதற்கான ஒரு பேச்சுவார்த்தை களத்தை உருவாக்குகிறார். உருவாக்கின பிறகு இவங்க தீர்மானிக்கிறார்கள் அங்கே போக வேண்டுமென்று. அப்போ அவர் எங்களையும் தங்களுடன் வந்து சேர சொல்லி கேட்கிறார். அதுல நான் மிக கவனமாக இருந்தேன். நான் சொன்னேன் எனக்கு உடன்பாடில்லை எனக்கு இந்த அரசியல் இனி வேண்டாம். நான் ஒதுங்கி இருக்கலாம் என்று.

பிறகு நான் தோட்டம் போட்ட வரலாறு வேற. என்னோட ஒரு 10 – 15 தோழர்கள் வந்துட்டாங்க. அவங்களை நான் காப்பாற்ற வேண்டிய தேவை வந்துவிட்டது. அந்த அடிப்படையில் நான்… அந்த வரலாறு வேற வரலாறு.

தேசம்: ஈபிடிபி ஒரு அறிக்கை விடுதா அந்த காலகட்டத்தில்?

அசோக்: ஓம் அது என்ன நடந்தது என்று கேட்டால், தோழர் ஈஸ்வரன் அவர் இங்கே இருந்து டக்ளஸ் தோழருடன் கதைக்கும்போது டக்ளஸ் தோழர் கேட்டிருக்கிறார் இப்படி ஒரு அமைப்பு ஒன்று தொடங்கப் போகிறோம் நீங்கள் சப்போர்ட் பண்ணுவீங்களா என்று. ஓம் என்று சொல்லியிருக்கிறார் போல. அதை டக்ளஸ் தோழர் தான் சொன்னார் அவர் ஓம் என்று சொன்னவர் என்று.

தேசம்: உங்களை கேட்கும்போது நீங்க மறந்துட்டீங்க…

அசோக்: நான் கிளியரா மறுத்துட்டேன். ஈஸ்வரன் தோழர் ஓகே பண்ணிட்டார் என்று தோழர் சொல்லுறார். ஈஸ்வரன் இந்தக் காலகட்டத்துக்குப் பிறகு நாட்டுக்கு போயிட்டார். அங்க புளொட்டால கடுமையாக தேடப்பட்ட உடனே அவர் மலையகத்துக்கு போயிட்டார். மலையகத்தில் போய் தலைமறைவாக இருக்கிறார். தம்பா என்று ஒரு தோழர். நல்ல அருமையான தோழர். டெசோவில் இருந்தவர். எல்லாருக்கும் உதவி செய்கிற தோழர். அவர் அங்க அரசாங்க தொழில் பார்த்துக் கொண்டிருந்தவர். அவருடைய பாதுகாப்பில் ஈஸ்வரனும் 4 – 5 தோழர்களும் தங்கிவிட்டார்கள்.

அந்த நேரத்தில்தான் தோழர் கொழும்பில போய் ஈபிடிபிய உருவாக்கி ஈபிடிபி சம்பந்தமாக ஒரு அறிக்கை விடுகிறார். அந்த அறிக்கையில் ஈஸ்வரன் தங்களோட இருக்கிறார் என்று அந்தக் கமிட்டியில் ஈஸ்வரனின் பெயரும் வருகிறது. அப்போ ஈஸ்வரன் தலவாக்கலையில் இருக்கிறார். இந்த அறிக்கைகள் எல்லாம் பத்திரிகையில் வந்தவுடன் ஈஸ்வரன் பார்த்துட்டு மறுப்பறிக்கை விடுகிறார். தனக்கும் ஈபிடிபி க்கும் தொடர்பு இல்லை என்று. அப்பதான் அந்த சிக்கல் வருகிறது.

தேசம்: ஈபிடிபியின் உருவாக்கத்தில் உங்களுக்கு எந்தவிதமான பங்களிப்பும் இல்லை…

அசோக்: இல்லை இல்லை. அது அவங்கட சொந்த உருவாக்கம். அவர்களுடைய முயற்சி. என்னை இணயுமாறு கேட்டது அவ்வளவுதான். ஈஸ்வரன் சொன்னார் தான் முதலே மறுத்தது என்று. அவங்களுக்குள்ள நடந்த உரையாடல் எனக்கு தெரியாது.

தேசம்: இப்ப தோழர் கிட்டத்தட்ட உங்கட தள மாநாடு அதுக்குப்பிறகு மத்திய குழு, பின்தள மாநாடு எல்லாம் முடிந்து ஒரு ஸ்தம்பித நிலைக்கு வந்த தான் இலங்கையில் நிறைய அரசியல் மாற்றங்கள் நடக்குது. இந்தியா விடுதலை புலிகளின் தாக்குதலை முடுக்கிவிட்டு இந்திய ராணுவம் இலங்கைக்கு இறங்குது. இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதுக்கு முதல்ல ஈழம் தேசிய ஜனநாயக முன்னணி என்று சொல்லி ஒரு கூட்டு உருவாக்கப்பட்டது தானே. அதுல புளொட், விடுதலைப் புலிகள், டெலோ, ஈபிஆர்எல்எஃப் போன்ற அமைப்புகள் இணைந்த ஒரு கூட்டு முண்ணனி உருவாகியதே…

அசோக்: அது வந்து 84 கடைசியில். ஈழ தேசிய ஜனநாயக முன்னணி – ENLF என்ற பெயரில் எல்லா இயக்கங்களையும் இணைத்து ஐக்கிய முண்ணனி ஒன்றை உருவாக்கும் நோக்கத்தோடுதான் தொடங்கப்பட்டது.

தேசம்: அதுல நீங்கள் ஈடுபடலையா?

அசோக்: நாங்கள் தளத்தில் தானே. பின் தளத்தில் புளொட் இந்த ஐக்கிய முண்ணனி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. ஈழ தேசிய ஜனநாயக முன்னணியின் உருவாக்கத்தில் அதன் பொறுப்பாளராக இருந்தது தோழர் முகிலன் என்று சொல்லி இப்போது பரிசில் இருக்கிறார். ஈரோஸ் தோழர். அவர்தான் அந்த கமிட்டியில் ஒருங்கிணைக்கிற செயலாளரா இருந்தவர்.

அதற்கு முதல் என்ன நடந்தது என்று கேட்டால் ஒவ்வொரு அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. அப்போ புளொட்டுடனும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. அதேநேரம் புலிகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருந்தது. புளொட் சொன்னது தாங்கள் புளொட் என்ற அமைப்பு வரும்போது ரெலா (TELA – Tamil Eelam Lebaration Army – ஒவ்ரோய் தேவன் தலைமையில் இயங்கிய புளொட்டின் துணை இராணுவக்குழு) என்ற அமைப்பையும் உள்ள சேர்க்க வேண்டும் என்று சொல்லி. அவங்க சொல்லிட்டாங்க ரெலா வை சேர்க்க இயலாது அதை அமைப்பாக அங்கீகரிக்க இயலாது, ஐந்து முக்கிய அமைப்புகள் மாத்திரம்தான் அதுக்குள்ள வரலாமென்று, புளொட், எல்ரீரீஈ, ஈரோஸ், ஈபிஆர்எல்எஃப், அடுத்தது ரெலோ அமைப்பு. இந்த முரண்பாடுகளால் புளொட் ENLF இணைப்பில் சேரவில்லை.

தேசம்: இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்குப்பிறகு அதுக்கு முதல் உங்களை தனிப்பட்ட முறையில் கேட்கிறேன். நீங்கள் ஈபிடிபி கூட போகவில்லை. ஈ.என் டி எல் எஃப் கூட போகல. தீப்பொறியோட போகல. என்ன விஷயம் உங்களைத் தடுத்தது. நீங்கள் தொடர்ச்சியாக அரசியலில் ஈடுபட்டு கொண்டிருக்கிறீர்கள். இன்றைக்கு வரைக்கும் அரசியல் செயற்பாடுகளில் ஏதோ ஒரு வகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஏன் இந்த அமைப்புகளுடன் போகல. ஈபிடிபியோடோ, ஈஎன்டிஎல்எஃப் கூட போகாததற்கு ஒரு காரணம் இருக்கும் என்று நினைக்கிறேன். சில நேரம் அவர்களின் தலைமையில் அரசியல் சித்தாந்தம். தீப்பொறியோடு ஏன் நீங்கள் போகல?

அசோக்: எனக்கு இயல்பாகவே தனிப்பட்ட உறவுகள் எல்லோரிடனும் இருந்தது. ஆனால் அவர்களுடைய அரசியல் தொடர்பாக ஆளுமை தொடர்பாக சந்தேகம் இருந்தது. ஏனென்றால் எல்லா தோழர்கள் மத்தியிலும் தங்களுடைய தவறுகளை ஏற்றுக்கொண்டு சுய பரிசீலனை செய்கிற போக்கு எப்பவுமே இருந்ததில்லை. அது டக்ளஸ் தோழராக இருந்தால் என்ன, ராஜன் ஆக இருந்தால் என்ன, ரகுமான் ஜானாக இருந்தால் என்ன நான் உட்பட. இந்தப் பண்பு இருக்காதவரைக்கும் தலைமைத்துவத்துக்கான எந்த அடிப்படையும் அவங்களிடம் இருக்காது. முதல் சுய விமர்சனம், விமர்சனம் எங்களுக்கு அவசியம். அது இருந்தால்தான் தலைமைக்குரிய குணாம்சம் வழிகாட்டியாக இருக்க முடியும்.

எனக்கு தெரியும் எல்லார்கிட்டயும் தங்களுடைய அதிகாரத்துக்கான போட்டி இருந்ததேயொழிய மக்கள் விடுதலைக்கான அமைப்பை உருவாக்கும் நோக்கம் யாரிடமும் இல்லை என்று. ஒரு வரலாறு ஒன்று இதுக்குத்தானே எல்லோருக்கும். இப்ப டக்ளஸ் தோழருடன் எனக்கு நெருக்கம் இருக்கு. ஆனா டக்ளஸ் தோழரின் அமைப்பை நம்பி போகவில்லை. ஏனென்றால் அந்த நேரத்தில் அமைப்புக்கள் அதன் தலைமைகள் மக்கள் விடுதலைக்கான எந்த வொரு முற்போக்கான கோட்பாடுகளையும் செயற்பாடுகளையும் கொண்டு இயங்க தயாராக இருக்கல்ல. இந்த புதிதாக உருவாகும் அமைப்புக்களும் அதே நிலைதான். எந்த வித்தியாசமும் இல்லை.

எங்களுக்கு படிப்பினையும், அனுபவமும் இருக்குத்தானே, எல்லாம் ஒரு பவர் பொலிட்டிஸ். மீண்டும் மீண்டும் நான் தவறுவிட விரும்பவில்லை. அதுக்குள்ள நான் போக விரும்பல. நான் நூறு வீதம் நல்லவனாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை எனக்கு. குறைந்தபட்சம் வாழ்க்கையில் ஒரு 50 வீதம் ஆவது நேர்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி ஒரு 50 வீதம் மக்களுக்கு சேவை செய்கிற நோக்கமாக அமைப்பு இருந்திருந்தால் நான் போய் இருப்பேன். சில நேரம் என்னுடைய கணிப்பு பிழையாக இருக்கலாம். அதைவிட அவங்க நேர்மையான ஆட்களாக இருக்கலாம். ஆனால் என்னுடைய கணிப்பு அப்படித்தான் இருந்தது.

நாங்களும் வரலாற்று ரீதியாக ஒவ்வொரு ஆளையும் பார்த்துக்கொண்டு வாறம். எவ்வளவுதான் தனிப்பட்டவகையில் நல்ல மனிதர்களாக இருந்தாலும் அதிகார ஆசை தவறான திசைக்கு அவங்களை கொண்டு போய் விடுகிறது. இதே தவறை நான் தொடர்ந்து விட இயலாது. இதுவரை சந்தித்த கசப்பான அனுபவங்கள் தோல்விகள், வீழ்ச்சிகள் பற்றிய ஆய்வும், விமர்சனங்களும், என்னைப்பற்றிய சுயவிமர்சனங்களும் கட்டாயம் அவசியம். என்னை நானே குற்றம் சாட்டிக் கொண்டிருந்த காலம் அது. தொடர்ந்து தொடர்ந்து எங்களது கணிப்புக்கள் எதிர்பார்ப்புக்கள் தோல்விதானே கண்டது. மீண்டும் இதே தவறை நான் விட விரும்பவில்லை.

அந்த நேரத்தில எனக்கு அதிகார அரசியல் பற்றிய நிறைய அச்சம் இருந்தது. உண்மையில் பார்க்கப் போனால், அதிகாரம் கிடைக்க முன்னர் எல்லா மனிதர்களும் நல்லவங்களாத்தான் இருக்காங்க. முகுந்தனோ, ராஜனோ ஆரம்பத்தில் நல்லவங்கதான். அதிகாரம் கிடைக்கும்போது பிழையான மனிதர்களாக மாறிப் போறாங்க. இது தோழர் டக்ளசிக்கும் பொருந்தும். அதனால டக்ளஸ் தோழரோடு சேர்ந்து பின் முரண்பட நான் விரும்பவில்லை.

அடுத்தது என்னை நம்பி வந்த தோழர்களையும் திரும்பி அனுப்பி அவங்களுடைய பாதுகாப்பை, வாழ்க்கைக்கான பதிலை நான் தான் சொல்ல வேண்டும். அப்போ என்னோடு வந்த 10 – 15 தோழர்களை காப்பாற்றி நாட்டுக்கு அனுப்புவது தான் என்னுடைய கடமையாக இருந்தது. அந்த வெளியேறிய காலகட்டத்தில் தமிழ்நாட்டுத் தோழர்கள் நிழல் திருநாவுக்கரசு, செம்பியன், ஏழுமலை போன்றவங்க நிறைய உதவி செய்தாங்க. மறக்க முடியாத உதவிகள்.

தேசம்: அப்போ நீங்கள் முதல்ல சந்ததியர் வெளியேறும் போதோ நீங்கள் வெளியேறாமைக்காண முக்கியமான காரணம் உங்களை நம்பி வந்த தோழர்களா?

அசோக்: அது முக்கியம் தானே. போராட்டம் இயக்கம் பற்றிய எல்லாம் தோழர்களுக்கு நம்பிக்கை கொடுத்தவன் என்ற அடிப்படையில் என்னை நம்பி இயக்கத்திற்கு வந்த தோழர்களை கைவிட்டு நான் எப்படி செல்லமுடியும். முகாமில் இருந்து ட்ரெய்னிங் எடுத்தவர்கள். அவங்க என்னோட வெளியேறி வந்துட்டாங்க. அவங்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டும் தானே. அவங்களை காப்பற்ற வேண்டும். அவங்களுடைய பாதுகாப்புக்கான வாழ்க்கைக்கான உத்தரவாதத்தை கொடுக்க வேண்டும்.

நான் மட்டும் தப்பிப் போய் வெளிநாட்டுக்கு வந்து வாழுறதில் அர்த்தம் இல்லை தானே. ஆரம்ப காலத்தில் இருந்து விடுதலைப் போராட்டத்திற்கு வந்திட்டம். இந்த போராட்டத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் கடைசி வரைக்கும் போராட வேண்டும். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை சரியான வழியில் கொண்டு போக வேண்டும் இல்லாதபட்சத்தில் கடைசி வரைக்கும் நம்பி வந்த தோழர்களுக்கான உயிர் பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். இதுதான் என் நோக்கமாக இருந்தது. என்னோடு வெளியேறிய தோழர்களுக்காக கடைசி வரைக்கும் நான் அவங்களோடு இருந்தேன். வெளி நாடு வருவதற்கான பல வாய்ப்புக்கள் எனக்கு வந்தன. நான் எப்பவோ வந்திருக்கலாம்.

தேசம்: அமைப்புக்குள்ள நீங்கள் உள்வாங்கின பெரும்பாலான ஆட்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்பிட்டீங்க. எப்படி தளத்திலிருந்து 17 பேர் வந்து இருக்கிறீங்க நான்கு மத்திய குழு உறுப்பினர்கள் மற்றது உங்கட கிராமங்களில் இயக்கத்துக்கு உள்வாங்கின பல தோழர்கள் இருந்திருப்பார்கள். இவர்களுக்கு எல்லாம் பிறகு என்ன நடந்தது.

அசோக்: தளத்திலிருந்து வந்த அந்த தோழர்கள் ஓரளவு வளர்ந்தவர்கள் தங்கள் தங்களுக்கான வாழ்க்கையை அவங்களே தேடிக் கொண்டார்கள். எங்க கிராமத்து தோழர்களும் தனியாக சென்று பாதுகாப்பான ஒரு இடத்தில் வீடு எடுத்துதங்கி இருந்தாங்க. என்றாலும் எல்லோரும் பின் தளத்தில் மிகவும் கஷ்டம்தான் பட்டோம். தெரிந்தவர்கள், தமிழ்நாட்டு நண்பர்கள், முன்னர் வெளியேறி சுயமாக தங்கி இருந்த புளொட் தோழர்கள் என்றுபலரும் உதவி செய்தாங்க.

தேசம்: வந்த 17 தோழர்களில் தளத்துக்கு போகாமலே…

அசோக்: புலிகளின் கெடுபிடி இருந்த காலம் அது. தளத்துக்கு பல தோழர்கள் போகவில்லை. பிறகு குமரன் போனவர். அவர் விடுதலைப் புலிகளால் அரெஸ்ட் பண்ணப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார். ஈஸ்வரன் தோழர் நாட்டுக்கு போனவர். மத்தவங்க எல்லாரும் தமிழ்நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அடுத்தது நாங்கள் ராஜனிட்ட இருந்து வெளியேறின போது தோழர்களிடம் சொன்னம் நீங்கள் வெளியேற வேண்டாம் என்று. எங்களோடு வருவதை விட ராஜனோடு இருக்கிறது பாதுகாப்பு. உயிர் பாதுகாப்பு. நாங்கள் ராஜனுடன் முரண்பட்டு வெளியேறும்போது நீங்கள் வெளியேற வேண்டாம் என்று சொல்லி விட்டோம். நீங்கள் வந்தீர்கள் என்றால் எங்களால் பாதுகாப்பு தர முடியாது. அப்போ நீங்கள் அங்க இருந்து கொண்டு நாட்டுக்கு போவதற்கான முயற்சியை செய்யுங்கள். என்று. நாங்களும் அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறோம். சரி வரும்போது சொல்லுகிறோம் வாருங்கள் என்று.

அப்படி இருந்தும் ஒரு 10 -15 தோழர்கள் எங்களுடன் வந்து விட்டார்கள். ராஜனும் பாதுகாப்பாக நிறைய தோழர்களை அனுப்பி வைத்தார். ஈ.என்.டி.எல்.எஃப் உருவாகி இந்திய ராணுவம் வந்தபோது நாட்டுக்கு போயிட்டாங்க தானே. எங்களோடு வந்த தோழர்கள் அவ்வளவு பேரையும் மிகப் பாதுகாப்பாக ஊருக்கு அனுப்பினோம். சில தோழர்களை படிப்பித்தோம். தோழர் அர்ச்சுனா ஜெகநாதன் என்னோடு துணையாக இருந்தார். பிறகு ஊருக்கு போயிட்டாங்க. எல்லாரையும் அனுப்பிட்டுத்தான் கடைசியாக நான் வந்து கப்பல் ஏறுகிறேன்.

தேசம்: எத்தனையாம் ஆண்டு அது…

அசோக்: 92 நடுப்பகுதி…

தேசம்: இது எண்பத்தி ஆறு கடைசி பகுதி நடக்குது. பிறகு 87 இருந்து நான்கு ஆண்டுகள்…

அசோக்: ஏனென்றால் நிறைய தோழர்கள் உடனடியாக போக முடியாது தானே. அவங்களை வைத்து தோட்டம் ஒன்று போட்டு… அந்த வாழ்க்கை என்பது சரியான கஷ்டம். மிகவும் மோசமான மன உளச்சல் கொண்ட காலம் அது. பொருளாதார ரீதியாக சரியாக கஷ்டப்பட்டோம். அப்போ தோட்டம் போட்டு ஒரு கொப்பரேடீவ் மாதிரி கூட்டுறவு கூட்டுப்பண்ணை போட்டு அந்த கிராம மக்களோடு வாழ்ந்து அது வேறு ஒரு அனுபவம். காணி பாதர் ஒருவர் தந்தவர். பொருளாதார வசதிகளையும் அவரே தந்தவர். இப்படி கொஞ்ச நாள் கழிந்தது.

ரா ஜீவ் காந்தி படுகொலையோடு எங்களுக்கும் பொலிஸ் நெருக்கடி வந்துவிட்டது.

தேசம்: அதற்குப் பிற்பாடு எண்பத்தி ஆறு காலப்பகுதியில் நீங்கள் வெளியேறின பிற்பாடு அமைக்கப்பட்ட புளொட் அமைப்பு இருக்குதானே அதில் நீங்கள் சார்ந்த யாராவது இருந்தார்களா. அல்லது இப்பவும் இருக்கினமா யாரும் சொல்லக் கூடியவர்கள்…

அசோக்: அதுல ஆனந்தி என்றொரு தோழர் இருக்கிறார். ஆரம்ப காலதோழர். புளொட்டில் இப்பவும் இருக்கிறார். நல்லவர். தானும் தன் பாடும். சமீபத்தில் புளொட் தோழர் ஒருவரோடு பேசிய போது ஆனந்தி புளொட் வரலாறு எழுத தொடங்கி உள்ளதாக சொன்னார். புளொட்டில கடைசி வரை இருந்து புளொட்டை பயன்படுத்தி, எல்லா தவறுகளுக்கும் உடந்தையாக இருந்துபோட்டு தனிப்பட்டபிரச்சனையால் வெளியேறி இன்று புளொட்டைபற்றியும் புளொட்தோழர்களைப் பற்றியும்மிக மோசமாக எழுதும் ஆட்கள்பற்றியும் அவங்கட உண்மை முகம் வெளிவரும் என்றார்.

தேசம்: ஆனந்தி எதில் எழுதுகின்றார்?

அசோக் : அவர் இப்பதான் எழுத தொடங்கி உள்ளார் என நினைக்கிறன். எதில் வருமோ தெரியவில்லை. அவர் எழுதுவது நல்லது. புளொட்டின் உள்ளும் புறமும் அவருக்கு தெரியும்.

தேசம்: அது நீங்கள் அந்த நான்கு ஆண்டு காலப்பகுதியில் புளொட்டால எப்படியான பிரச்சினை வருது..

அசோக்: நாங்கள் வெளியேறி ENDLF உருவாக்கிய காலத்தில் ஒரு நாள் நானும் ஆதவன் தோழரும் வீதியால் போய்க் கொண்டிருக்கும் போது மாணிக்கதாசன் ஜீப்பில் வந்து வெருட்டி எங்களை ஃபுல்லா வளைச்சாச்சு சுடுவதற்கு தயார். 5 – 6 பேர் ஜீப்ல வந்தார்கள். எங்ககிட்ட ஒன்றுமே இல்லை. நாங்க சைக்கிள்ல போனாங்க. அப்போ சத்தம் போட ஊர் ஜனங்கள் எல்லாம் வந்து வந்துவிட்டாங்க. அவங்க எல்லாம் வந்து பிரச்சினைபட்டவுடன் இவர்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போய்விட்டது. அப்போ எங்களுக்கு எச்சரிக்கை செய்தார்கள் எங்கேயாவது நடமாடுவதை கண்டால் வெடி வைப்போம் என்று.

அப்போ எங்களுக்கு என்ன செய்றது என்று தெரியல. பிறகு நான் தோழர் கண்ணனுடன் இது பற்றி கதைக்க அவர் சொன்னார் நீங்கள் ஒருக்கா ஆபீஸ் வாங்க வாசுதேவா, ஆனந்தி ஆட்களோடும் இதுபற்றி கதைக்க வேண்டும் என்று ஒரு டேட் தந்தார். ஒரு பின்னேரம் வரச்சொல்லி. அப்போ நான், ஈஸ்வரன், ஆதவன், பாபுஜி நான்கு பேரும் கதைக்கிறதுக்கு போனோம். அங்க கண்ணன் இல்லை. அந்த நேரம் டெலிபோன் கம்யூனிகேஷன் இல்லைதானே. முதலில் சொன்னதை அதை நம்பித்தான் போனோம். ஆனா அங்க இல்லை. நாங்க திரும்பி வந்துட்டோம். காரில் ஏறப் போக மாணிக்கதாசன் என்ன செய்திருக்கிறார் என்றால் அங்க ஆபீசுக்கு முன்னால மல்லிகை கொடி படர்ந்து போயிருந்தது. அதுக்குள்ள போய் ஒளித்து இருந்திருக்கிறார். எங்களுக்கு தெரியாது.

காரில் ஏறும்போது பட பட படவென வெடி. முதல் வெடி எனக்கு விழுந்துட்டுது. நான் கீழ விழ மற்றவர்களும் விழுந்துட்டாங்க. இல்லாவிட்டால் எல்லோருக்கும் வெடி பட்டிருக்கும். எனக்கு ரெண்டு இடத்துல வெடி. தொடர்ந்து வெடி நடக்குது. நாங்க தற்பாதுகாப்புக்கு ஆயுதங்கள் கொண்டு போனாங்க. காருக்குள்ள இருந்தது. உடனே ஒரு தோழர் எடுத்து திருப்பி சுட்டார். சுட்டதும் அடங்கிப் போய்விட்டது. மாணிக்கதாசன் சுடுவதை விட்டுட்டார். நான் காயப்பட்டு விட்டேன். நான் ஆஸ்பத்திரிக்கு போயிட்டேன். எனக்கு பிறகுதான் தெரியும் நாங்கள் தற்காப்புக்கு திருப்பி சுட்டு ஒரு அப்பாவி தோழர் அவருக்கு வெடி. அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டுவர அவர் இறந்துவிட்டார். பாவம் அவர் வேற எங்கேயோ நின்றிருக்கிறார் துப்பாக்கி சன்னம் போய் அவரில பட்டிட்டு.

தேசம்: அவர் உங்கள் மீது தாக்குதல் நடத் தினவரா?

அசோக்: இல்லை இல்லை. அவர் அருமையான தோழர். மாணிக்கதாசன் தான் சுட்டது. அவருக்கு தெரியாது தானே. அவர் அங்காள நின்றபோது அவருக்கு வெடி பட்டுவிட்டது. அவர் காயப்பட்டிருந்தவர். அருமையான தோழர். அவர் பாவம்.

தேசம்: என்ன பெயர்?

அசோக்: அவரோட பெயர் மறந்துட்டேன். அமுதன் பெயர் என நினைக்கிறேன். பிறகு நான் ஒரு மாதம் ஆஸ்பத்திரியில் இருந்தேன். காலப் போக்கில் பிறகு என்னால் நடக்க முடியாமல் போய்விட்டது. கொஞ்ச காலத்தில் நான் படுத்த படுக்கையாகி விட்டேன். பிறகு திருப்பத்தூரில் சுவிடிஷ் மிசனரி ஹாஸ்பிடல் இருக்கு. அங்க போனேன்… அங்க சொன்னாங்க நீங்கள் பக்கத்திலே பிள்ளையார்பட்டியில் சித்த ஆயுள்வேத ஆஸ்பத்திரிக்கு போங்க என்று சொல்லி அவங்கதான் சிபாரிசு செய்கிறார்கள்.

அங்க போனதும் அது குன்றக்குடி அடிகளாருடைய நிர்வாகத்தின் கீழ் அந்த வைத்தியசாலை நடக்குது. . சுமார் ஒரு வருஷம் நான் அங்கே இருக்கிறேன். அதுக்குப் பிறகுதான் நான் நடக்க முயன்றேன். அந்த காலகட்டத்தில் குன்றக்குடி அடிகளாரின் மகள் மங்கையர்க்கரசி அக்கா குடும்பம்தான் என்னை பராமரித்தாங்க. அந்த வைத்தியசாலையின் பொறுப்பாளர் கோவிந்தசாமி அவர்கள் என் மீது அக்கறை கொண்டு மிகவும் அன்பாக வைத்தியம் செய்தாங்க. எல்லாம் இலவசமாகவே செய்தார். இவை எல்லாம் மறக்க முடியாத உதவிகள்.

தேசம்: அப்பதான் உங்களுக்கு அவர்களுடன் தொடர்பு வருதா…

அசோக்: இல்லை முதலே தெரியும் இயக்கத்துக்கு நிறைய உதவி செய்து கொண்டிருந்தவர்கள்.

தேசம்: எப்படி அந்த உறவு வந்தது…

அசோக்: குன்றக்குடி அடிகளார் அவர் இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக அக்கறை கொண்டு செயற்பட்டவர். குன்றக்குடி அடிகளாரை பொருத்தவரையில் அவர் ஒரு ஆன்மீகவாதி. அதே நேரம் பெரியாருடைய மேடைகளில் பெரியாருடைய கொள்கைகளுக்கு ஆதரவு கொடுத்து துணிந்து பேசும் நபராக இருந்தார். ஒரு பக்கம் ஆன்மிகம். இன்னொரு பக்கம் மாக்சிசம். அவருடைய அறைக்க போனீங்க என்றால் கால் மாக்ஸ், லெனின் எல்லாம் இருப்பார்கள். மார்ச்சியத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். அவருடைய மகள்தான் மங்கையற்கரசு அக்கா. அவர் கணவனும் எஙகளுக்கு நிறைய உதவிகள் செய்தவர். அவர் ஒரு பேராசிரியர்.

தேசம்: குன்றக்குடி அடிகளார் ஒரு வீரசைவர் பரம்பரை அப்படியா?

அசோக்: வீர சைவர் ஆக இருக்க முடியாது. ஆதினம் தான். அவர்கள் சைவர்கள் தான். ஆனால் இந்த பிராமணிய கொள்கை இல்லை. ஆதிசைவர்கள் ஒரு முற்போக்கான வீரசைவர்கள். அதே மாதிரியான பண்புதான் இவர்களிடமும் இருந்தது. ஆரம்ப காலத்திலேயே தெரியும் அவரை.

தேசம்: உண்மையிலேயே தமிழ்நாட்டில் எத்தனையோ நூற்றுக்கணக்கானவர்கள் எங்களுடைய போராட்டம் சார்ந்தும் போராளிகளையும் பராமரித்ததில் முக்கிய பங்கு வகித்தவர்கள்…

அசோக்: 83 கலவரத்திற்கு பிறகு தமிழ்நாட்டு மக்கள் நிலையில் நாங்கள் இருந்தால் நாங்கள் எந்த உதவியும் செய்ய மாட்டோம். அந்த மக்கள் விடுதலைப் புலிகளோ, புளொட்டோ என்று பார்க்காமல் உணர்வுபூர்வமாக உதவி செய்தவர்கள். போராளிகள் என்ற அடிப்படையில் மிக உதவிகள் செய்தவர்கள். தமிழ்நாட்டு அரச மட்டத்தில் இருப்பவர்களிடம் இருந்தும் நிறைய உதவிகள். அந்த உணர்வு பூர்வமான பங்களிப்பை உதவிகளை நாங்கள் மதிக்கவில்லை.

தேசம்: அந்த மண்ணை நாங்கள் தவறாக பயன்படுத்தி இருக்கிறோம்.

அசோக்: போராட்ட வரலாற்றை மீளாய்வு செய்தோம் என்றால் நிறையத் தவறுகள் எங்கள் இயக்கங்கள் பக்கத்தில் இருக்கு. அதற்கு வெறுமனே இயக்கம் என்று சொல்ல இயலாது தானே நாங்கள் தானே இயக்கம். முழுப்பேரும் அதைப் பொறுப்பெடுக்க வேண்டும். குற்றம் சாட்டி போட்டு போக இயலாது.

(குறிப்பு: இதில் குறிப்பிடப்படும் ஆனந்தி சில மாதங்களுக்கு முன் இலங்கையில் இயற்கை எய்தினார்.)

இயக்கங்களைவிட்டு வெளியேறியவர்கள் – பரந்தன் ராஜன் – தோழர் டக்ளஸ் இணைந்த புதிய இயக்கம் : பாகம் 27

களுதாவளையிலிருநது பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் (பகுதி 27 ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 12.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 27

தேசம்: பின்தள மாநாடு பற்றிய உரையாடல் போய்க்கொண்டிருக்கிறது. அப்ப நீங்கள் அறிக்கை ஒன்று விட்டிருக்கிறீர்கள். அதாவது கட்சியிலிருந்து உமா மகேஸ்வரனை கிட்டத்தட்ட வெளியேற்றி உள்ளீர்கள். அதைத் தொடர்ந்து என்ன நடக்குது? உமாமகேஸ்வரன் எப்படி அதற்கு ரியாக்ட் பண்ணுறார்?

அசோக்: ரியாக்சன் பயங்கரமாக இருந்தது. தெரியும்தானே அறிக்கைகள் எல்லாம் பத்திரிகைகளில் வந்துவிட்டது. முகுந்தனுக்கு பெரிய பிரச்சினையாக போய்விட்டது. மாநாட்டை குழப்புவதற்கான எல்லா முயற்சியிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அடுத்தது அவருடைய எல்லா கட்டுப்பாடுகளில் இருந்தும் நாங்கள் வெளியேறிவிட்டோம். வெளியேறி மெட்ராஸ் போய்விட்டோம். அங்க எங்களுக்கு பாதுகாப்பு டேவிட் ஐயா ஆட்கள்தான் செய்கிறார்கள்.

தேசம்: பாதுகாப்பு தாறத்துக்கு டேவிட் ஐயாட்ட என்ன இருக்கு…

அசோக்: அதுதான் வாரேன்.

எங்களிட்ட பொருளாதார ரீதியாக ஒன்றுமில்லை. ஏனென்றால் நாட்டிலிருந்து போன ஆட்கள் தானே. எங்களிட்ட பாதுகாப்புக்கான எதுவும் இல்லை. டேவிட் ஐயா, சரோஜினி, சண்முகலிங்கம், தங்கராஜா தோழர், ஜூலி, ஆட்களெல்லாம் ராஜனோடு உறவாக இருக்கிறார்கள். ராஜனோடு கதைக்கிறார்கள். இவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்லி. ராஜன் எங்களுக்கான பாதுகாப்பை வழங்க ஒத்துக் கொள்கிறார். அதற்கான முழு முயற்சியும் டேவிட் ஐயா, சண்முகலிங்கம், சரோஜினி ஆட்கள்தான் செய்தவர்கள்.

அப்போ ராஜனோடு கதைக்கிறோம், பின்தள மாநாடு நடத்துவது பற்றி. ராஜன் சொல்கிறார், நீங்கள் பின்தள மாநாடு நடத்துவதற்கான சகல பாதுகாப்பும் செய்து தரப்படும். நீங்கள் மாநாட்டில் சுயமாக முடிவு எடுத்தீர்கள் என்றால், அந்த அந்த முடிவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் உங்களோடு சேர்ந்து வேலை செய்யத் தயாராக இருக்கிறோம், யோசிப்போம் என்று. அப்போ நாங்கள் பின்தள மாநாட்டுக்கான எல்லா வேலைகளையும் செய்கிறோம்.

இது தஞ்சாவூர்ல ஒரு கல்யாண மண்டபத்தில் நான் நினைக்கிறேன் ஓகஸ்ட் கடைசி பகுதியில் மூன்று நாள் மாநாடு ஒன்றை நடத்துகிறோம். அந்த நேரம் கேம்பிலிருந்து நிறைய தோழர்கள் வெளியேறிவிட்டார்கள். எங்களோடும் கொஞ்சத் தோழர்கள் வந்துவிட்டார்கள். அவங்களையும் ஒரு இடத்தில நாங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். அதுக்கும் ராஜன் தான் பாதுகாப்பு தந்தது. அதுக்குப்பிறகு ராஜனோடு நிறைய தோழர்கள் வந்து சேர்ந்து விட்டார்கள். வெளியேறி வந்த தோழர்கள் மத்தியில் தெரிவு செய்யப்பட்டதோழர்களோடு இந்த பின்தள மாநாடு நடக்கிறது.

மூன்று நாட்கள் நடாத்தி உத்தியோகபூர்வமாக நாங்கள் தான் புளொட் என்று டிக்லேர் பண்ணுறோம். இந்த மாநாட்டில் 15 பேர் கொண்ட பின் தளக் கமிட்டி தெரிவு செய்யப்படுகிறது.

முகுந்தனோடு சம்பந்தப்பட்ட ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுல சில கொலைகள் வெளிப்படையாக கதைக்கப்பட்டது. கேம்பிலிருந்த தோழர்கள் தானே. அப்போ அவங்களுக்கு என்ன என்ன கொலைகள் நடந்தது என்று தெரியும். அந்தக் கொலைகள் தொடர்பாக காக்கா, சந்ததியார் … இது தொடர்பான நடவடிக்கைகள் எல்லாம் குறிப்பிட்டு முகுந்தன், சங்கிலி கந்தசாமி, மாணிக்கதாசன், வாசுதேவா, கண்ணன் இவ்வளவு பேரையும் புளொட்டில் இருந்து வெளியேற்றுகிறோம் என்றும், தளக்கமிட்டியும் பின் தளக்கமிட்டியும் புதிய மத்திய குழுவை தெரிவு செய்யும் என்றும், நாங்கள்தான் புளொட் என்று உரிமை கோரி ஒரு அறிக்கை விட்டு, இதுதொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பை சென்னையில நடத்துறோம்.

இந்த பத்திரிகை மாநாட்டில் கலந்து கொண்டது தீபநேசன், பிரசாத், கௌரிகாந்தன், ஈஸ்வரன், சண்முகலிங்கம், தங்க ராஜா, ஆதவன், ஜெயபாலன், துரைசிங்கம் , சத்தியன், கவாஸ்கர், எல்லாளன். அந்த பத்திரிகை மாநாட்டு அறிக்கை எல்லா பத்திரிகைகளிலும் வெளிவருகின்றது.

தேசம்: என்னத்துக்காக வெளியேறுகிறீர்கள் என்றும் குறிப்பிட்டு…

அசோக்: ஓம். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நிறைய கேள்விகளும் அதற்கான விளக்கங்களும் கொடுக்கப்படுகிறது. ஆங்கில, தமிழ் பத்திரிகைகளில் அந்த சந்திப்பு, அறிக்கை எல்லாம் வருகிறது. வந்து ஒரு வாரத்திற்குள் எங்கள் மீதான விசாரணையை ரோவும், கியூ பிரான்ஜூசும் தொடங்கிவிட்டது. கடும் நெருக்கடியை கொடுக்க தொடங்கிட்டாங்க. ஏன்னென்றால் முகுந்தன் சொல்லிட்டார் நாங்கள் இந்தியாவுக்கு எதிரான ஆட்கள் என்று சொல்லி. வங்கம் தந்த பாடம் நாங்கள்தான் வெளியிட்டோம் என்று சொல்லியும், நாங்கள் மாவோயிஸ்டுகள், சீனச்சார்பானவர்கள் என்று சொல்லியும் புளொட்டை திட்டமிட்டு உடைக்கிறோம் என்று சொல்லியும் இந்த உளவுத்துறைகளுக்கு போட்டுக் கொடுத்து விட்டார்கள். அப்போ கியூ பிரான்ஜூசும், ரோவும் எங்களை விசாரித்தது. அவங்க சொன்னவங்க நீங்கள் புளொட் என்று உரிமை கோர இயலாது. புளொட் என்டுறது முகுந்தன் தான். நாங்கள் உரிமை கோர முடியாது என்று சொல்லி விட்டார்கள்.

தேசம்: உளவுத்துறை வந்து பயப்பிடுத்துவது என்பது…

அசோக்: எங்களுக்கு என்ன செய்றது என்று தெரியல. ஸ்தம்பிதம் அடைந்து விட்டோம் . அதுக்குப் பிறகு தோழர்கள் உளவியல் ரீதியாக நிறைய பலவீனமடையத் தொடங்கி விட்டார்கள். நம்பிக்கைகளை இழக்கத் தொடங்கிட்டாங்க. அடுத்த கட்ட நகர்வை எப்படி தொடர்வது என்பது பற்றி நிறைய குழப்பங்கள்.

அடுத்தது ஒரு உறுதியற்ற தன்மை..

தேசம்: எதிர்பாக்கல நீங்கள்…

அசோக்: எதிர்பாக்கல. உறுதியற்ற தன்மை வந்தவுடன் என்ன செய்வதென்று தெரியல, ஸ்தம்பிதம் அடைந்திட்டம். அதுக்குப் பிறகு கொஞ்சநாள் பேசாம இருக்கிறோம்.

தேசம்: இந்த இடைப்பட்ட காலத்தில் ஜூனில் இருந்து ஜூலை வரைக்குமான இடைப்பட்ட காலத்தில் ஏதாவது உமாமகேஸ்வரன் தலைமையிலான அணியால் ஏதாவது…

அசோக்: ஓம் நிறைய பயமுறுத்தல்கள். வெளியில போக இயலாது. எனக்கெல்லாம் அனுபவம் இருக்கு. நானும் ஆதவன் தோழரும் வீடு பார்க்க வெளியில போகேக்க மாணிக்கதாசன் குரூப் ஆட்கள் வந்து நீங்கள் இங்கே வீடு பார்க்க இயலாது இது எங்க ஏரியா என்று சொன்னார்கள். எச்சரிக்கை செய்தாங்க. உண்மையில் நாங்க வீடுபார்த்த ஏரியாவுக்கும் அவங்களுக்கும் தொடர்பே இல்லை.

ஒரு தடவை சென்னையில் தியேட்டர் ஒன்றுக்கு நான் போயிட்டு இருக்கும்போது மாணிக்கதாசன் கண்டிட்டார். அது அவங்க ஆபீசுக்கு பக்கத்தில் தான் அந்த தியேட்டர். அப்போ மாணிக்கதாசன் என்னோட பிரச்சினைப்பட்டு கொண்டிருந்த அந்த நேரம் தற்செயலாக அது ஆபிஸ் தெரு என்றதால் யோதிஸ்வரன் கண்ணன் வந்தவர். மாணிக்கதாசன் என்னோடு முரண்பட்டுக் கொண்டிருப்பதை அவர் கண்டிட்டார். அதுல அவருக்கும் மாணிக்கதாசனுக்கும் பிரச்சனை. நீ தான் எல்லாத்துக்கும் பிரச்சனை; அவர்கள் வெளியேறினால் வெளியேறிப்போட்டு இருக்காங்க, ஏன் நீ அவங்களோட முரண்படுகிறாய் என்று. அப்படி எல்லாம் பிரச்சினை நடந்திருக்கு.

தேசம்: அந்தக் கட்டத்தில் யோகீஸ்வரன் உமாமகேஸ்வரனோடு தான் இருக்கிறார்?

அசோக்: உமாமகேஸ்வரனோடுயிருக்கிறார். அவர் கொஞ்சம் நியாயம் கொண்டவர். நாங்க வெளியேறிய பின் பல தடவை அவரை சந்தித்து கதைத்திருக்கிறன். இது பற்றி சென்ற உரையாடல்களில் கதைத்திருக்கிறன்.

தேசம்: நீங்கள் பெரும்பாலும் இதில் ஓரளவு முற்போக்கான ஆட்கள் அல்லது அரசியல் மாறுபட்ட சிந்தனை உடைய ஆட்கள் முழுமையாக வெளியேறிட்டீர்கள். அதுக்கு பிறகு புளொட்டில் இருக்கிறதெல்லாம் யார் இருந்தது உமாமகேஸ்வரனோடு?

அசோக்: புளொட்டில் இருந்த தோழர்களை நாங்கள் குறை சொல்ல முடியாது. பயத்தில்தான் இருந்தவர்கள் அவர்கள். வெளியேற முடியாது. அடுத்தது பல்வேறு நெருக்கடி, தோழர்கள் பாவங்கள்.

தேசம்: நான் குறிப்பாக கேட்பது முக்கியமான ஆட்கள்.

அசோக்: முக்கியமான ஆட்கள் அந்த ஐந்து பேரும் தான். முகுந்தன், சங்கிலி, மாணிக்கதாசன், வாசுதேவா அடுத்தது படைத்துறைச் செயலாளர் கண்ணன். வாசுதேவாவும் கண்ணன் மாதிரி அதிருப்தியோடுதான் இருந்தவர்.

தேசம்: அப்போ அதுக்குள்ளே இருந்த குறிப்பாக முகுந்தன்…

அசோக்: சங்கிலி கந்தசாமி, முகுந்தன், மாணிக்கதாசன் 3 பேரும்தான் பிரச்சனைக்குரிய ஆட்கள்.

தேசம்: சரியான துரதிருஷ்டம் என்னவென்றால் இவ்வளவு பேர் எதிர்த்தும் அதை செய்ய முடியாமல் போனது. அது உண்மையிலேயே முற்போக்குப் பாத்திரம் வகித்தவர்களுடைய ஒரு தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும்.

அசோக்: நான் புளொட் தோழர்களே எல்லாம் காணும்போது யோசிப்பேன். நாங்க எல்லாம் நிறைய ஃபைட் பண்ணி இருக்கலாம். புளொட்டின் அனைத்து தவறுகளுக்கும் மற்றவர்களை குற்றஞ்சாட்டி போட்டு போக இயலாது. நாங்கள் ஒவ்வொரு ஆளும் பொறுப்பு கூறவேண்டிய அவசியம் இருக்கு. அதனால்தான் நான் இதைப்பற்றி கதைக்காமல் இருந்தேன். என் தொடர்பாக எனக்கே விமர்சனங்கள் இருந்தன.

தேசம்: முன்னணி தோழர்களுக்கு ஒரு முற்போக்குப் பாத்திரம் எடுக்க வேண்டிய தேவை இருக்குதானே. அவர்கள்தானே தலைமையை கொடுத்திருக்க வேண்டும்.

அசோக்: கட்டாயம்.

தேசம்: அப்போ நீங்கள் உமாமகேஸ்வரன் தலைமையிலான அந்த ஐந்து பேரையும் வெளியேற்றிய பிறகு நீங்கள் தான் புளொட் என்று அறிவித்த பிறகு உளவுத்துறை பயமுறுத்தலை விட்டவுடன் எல்லாம் ஈடாடிப்போச்சு.

அசோக்: அந்த நேரத்தில் மௌன நிலை தான், பேசாம இருந்த காலகட்டம். பிறகு தோழர் டக்லஸ் ஆட்கள் அந்த நேரம் ஈபிஆர்எல்எஃப் இலிருந்து உடைந்து அவங்க தனியாக போய் இருக்கிறார்கள். அவங்களோடு பல்வேறு முற்போக்கான சக்திகள் எல்லாரும் இருக்கிறார்கள். ஈரோஸ் இருந்து பிரிந்த சில தோழர்களும் இருக்கிறார்கள். பார்த்திபன் இதயச்சந்திரன் இருக்கிறார். என் எல் எப் ரீயில் இருந்து பிரிந்த தோழர் ஒருவரும் அவங்களோடு இருந்தாங்க.

தேசம்: இதயச்சந்திரன் லண்டனில் இருக்கிறார்…

அசோக்: ஓம். அப்போ நாங்கள் யோசித்தோம் என்ன என்று கேட்டால் எல்லா சக்திகளும் ஒரு ஜனநாயக உட்கட்சிப் போராட்டத்தை நடத்தி ஒதுங்கி இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் இணைத்து நாங்கள் ஏன் ஜனநாயக பூர்வமான ஒரு அமைப்பை உருவாக்க முடியாது என்று. முதன்முதல் டக்லஸ் தோழருடன் போய்க் கதைக்கிறோம். அப்படி எல்லாருடனும் நாங்க கதைக்கிறோம். எல்லாரும் அப்படி ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான சாத்தியத்தை எங்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள்.

தேசம்: ரோ உங்களுக்கு ஒரு மிரட்டல் விடுத்த பிறகுதான் நீங்கள் இப்படியொரு முடிவுக்கு வாரீர்கள்.

அசோக்: ஓம். பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒருமைப்பாட்டுக்கு வாறம். ராஜனோடையும் கதைக்கிறம். ராஜனும் சம்மதிக்கிறார். அப்ப நாங்கள் அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு கமிட்டியை போஃம் பண்ணி நாங்களும், தோழர் டக்ளஸின் பக்கத்தில் குறிப்பாக அற்புதன், அசோக் சந்திரகுமார், பிரேமானந்தா, இப்ராகிம் என்று சொல்லி பத்து பதினைந்து தோழர்கள் ஒரு கமிட்டி போஃம் பண்ணி ஒரு புதிய அமைப்புக்கான யாப்பை உருவாக்குவதற்கு கூடிக் கதைக்கிறோம். அந்தக் கமிட்டியில் ராஜனோ, டக்ளஸோ இல்லை. நாங்கள் கதைத்ததன் பிற்பாடு அவங்களோடயும் கதைக்கிறம் இதுதான் முடிவு. இதற்கு நீங்கள் கட்டுப்படுகிறீர்களா என்று. ராஜனும், டக்ளஸும் ஓகே பண்ணுறாங்க.

அதற்குப் பிறகு மிலிட்டரிகொமிசார், பொலிட்டிக்கல் கொமிசார் என்று ஒரு இடதுசாரி மக்கள் அமைப்புக்கான… இவ்வளவு கால எங்களுடைய தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளல் என்ற படிப்பினையில் 7-8 நாள் இருந்து யாப்பு மற்றும் அமைப்பு வடிவத்தை உருவாக்கின்றோம். அமைப்பு வடிவத்திற்கு பெயர் ஒன்றை வைக்க விரும்புகின்றோம். அதுல டக்ளஸ் தோழர் ஆட்கள் சொல்லிட்டாங்க நாங்க தமிழீழம் என்ற வார்த்தை வருவதை விரும்பவில்லை என்று. அப்போ நாங்கள் சொன்னம் நீங்களே ஒரு பெயரை தேர்வு செய்யிங்கள் என்று.

தேசம்: டக்ளஸ் தோழர் அப்பவே அதை சொல்லிட்டார்.

அசோக்: ஈழம் என்று சொல்லித்தான் வரவேண்டும் தமிழீழம் என்ற வார்த்தை வருவதை விரும்பவில்லை என்று. நாங்கள் அதை ஒத்துக் கொண்டோம். அற்புதன் ஈஎன்டிஎல்எப் ENDLF என்ற பெயரை உருவாக்குறார். அப்போ ஈழ தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் நாங்கள் ஒன்றாக இணைவது என்று முடிவெடுத்து வேலை செய்கிறோம்.

தேசம்: அற்புதன் தான் தினமுரசு பத்திரிகையின் ஆசிரியராக அதுல ஒரு தொடரையும் எழுதினார். பின்னாட்களில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

தீப்பொறியாக வெளியேறினது மூவர் பரந்தன் ராஜனின் பின்னால் 300 பேர்! உமாவின் தலைமைக்கு சவால்!!! : பாகம் 26

பாகம் 26: தீப்பொறியாக வெளியேறினது மூவர் பரந்தன் ராஜனின் பின்னால் 300 பேர்! உமாவின் தலைமைக்கு சவால்!!!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 26 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 12.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 26

தேசம்: பின்தள மாநாடு பற்றி கதைத்துக் கொண்டிருக்கிறோம். அதில நீங்கள் பரந்தன் ராஜன் பி.எல்.ஓ பயிற்சி முடித்துவிட்டு இங்க வரேக்க, காக்கா சிவனேஸ்வரன் கொலை செய்யப்படுகிறார். அந்த முரண்பாட்டில் அவர் வெளியேறுகிறார். அவர் வெளியேறும் போது 300 – 350 போராளிகளும் சேர்ந்து வெளியேறுகிறார்கள் என்று சொல்லுறீங்க. என்னுடைய கேள்வி என்னவென்றால், இதுவரைக்கும் கதைக்கப்பட்ட விடயங்களை பார்க்கும் போது, பரந்தன் ராஜன் ஒரு முற்போக்கான பாத்திரம் வகித்ததாக எங்கேயும் சொல்ல வில்லை. அப்படி அவருக்கு பாத்திரம் இருக்கா? முற்போக்குப் பாத்திரம் வகித்ததாக சொல்லப்படுவது அல்லது இடதுசாரி சிந்தனை அரசியலில் சொல்லப்பட்ட தீப்பொறி குழு ஆட்கள் வெளியேறும்போது அவர்கள் மூன்று பேர்தான் போகிறார்கள். அது எப்படி சாத்தியமானது? ராஜனுக்கு பின்னாடி எப்படி இவ்வளவு 300 – 350 போராளிகள் சேர்ந்து பிரிகிறார்கள் என்றால் அவர் ஒரு சக்தியாக இருந்திருக்கிறார் தானே? அது எவ்வாறு?

அசோக்: ஒருவரை நம்பி நாம் செல்வதற்கு அடிப்படைக் காரணம் ஒரு நம்பிக்கைதான். நீங்கள் ஒரு நெருக்கடியான உயிர் பயமுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்ற ஒரு நிலையில், யார் உங்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் தருகிறார்களோ, உங்கள் மீதான அக்கறையை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு பின்னால்தான் போவீர்கள். இங்க வந்து முற்போக்கு கருத்துக்களும், மாக்சிஸ ஐடியோலொஜிகளும் துணை புரியாது. மாக்சிஸ ஐடியோலொஜி உள்ளவர்கள், தோழர்களை காப்பாற்ற கூடிய வல்லமை இருந்தால் அவர்களுக்கு பின்னால போவார்கள். அது ஒரு ஆரோக்கியமான அரசியலை முன்எடுப்பதற்கான சாத்தியத்தை வழங்கக் கூடும். ஆனால் உயிர் ஆபத்துக்கள் இருக்கின்ற சூழ்நிலையில் தங்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் போன்ற விடயங்களைத்தான் தோழர்கள் முதல் கவனத்தில கொள்வாங்க.

இங்க கோட்பாடு அரசியல் என்பது இரண்டாம்பட்சமாகி விடும். தோழர் ரகுமான் ஜான் ஆட்கள் வெளியேறின பிற்பாடு அவர்களுக்கு பின்னால போகாதது ஏனென்று கேட்டால் அவர்கள் மீது நம்பிக்கை இருக்கேல. அவர்கள் கருத்தியல் ரீதியாக வளர்ந்தவர்களேயொழிய இவர்கள் ஒரு ஸ்தாபனத்தை கொண்டு நடத்துவார்கள் என்றோ தோழர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள் என்றோ வழி காட்டுவார்கள் என்றோ எந்த நம்பிக்கையும் தோழர்களுக்கு வரவில்லை.

அடுத்தது பொறுப்புக்கூறல் அவங்களுக்கு இல்லை. நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அவங்கள் வெளியேற முதல் யோசித்திருக்க வேண்டும் தங்களால் வந்த தோழர்கள் சந்தேகப்பட்டு பாதிக்கப்படுவார்கள் என்ற எண்ணமே அவர்களுக்கு இருக்கேல. அப்போ அடிப்படைப் பிரச்சனை என்னவென்று கேட்டால் பொறுப்புக்கூறல் அவங்களுக்கு இருக்கேல. உண்மையிலேயே அவர்கள் பைட் பண்ணியிருக்க வேண்டும்.

அனைத்து முகாம்களுக்கும் போய் வருபவர் தோழர் ரகுமான் ஜான். நிறைய தோழர்களுடைய அன்பும் ஆதரவும் கிடைத்திருக்கும். குறைந்தபட்சம் அவர்களுக்காகவாவது உள்ளுக்க இருந்து ஃபைட் பண்ணி இருக்க வேண்டும். இனி புளொட்டில் இருப்பது பிரயோசனம் இல்லை என தோழர்களுக்கும் தெரியப்படுத்திவிட்டு வெளியேறி இருந்தால் தோழர்கள் மத்தியில் பிரச்சனை உருவாகி அவர்களும் இவங்களோட வெளியேறி இருப்பாங்க. முகுந்தனால் எதுவும்செய்ய முடியாமல் போய் இருக்கும்.

ராஜனைப் பொறுத்தவரை இதுதான் நடந்தது. ராஜனோடு தோழர்களும் நிறைய வெளியேறிவிட்டதினால் முகுந்தனினால் எதுவும் செய்ய முடியாமல் போய் விட்டது. ராஜனை பொறுத்தவரையில் ராஜனுக்கு முற்போக்குப் பாத்திரம் இல்லை. விமர்சனங்கள் இருக்கு. ஆனால் ராஜனிடம் மனிதாபிமானம் இருந்தது. வெளியேறிய தோழர்களை காப்பாற்ற வேண்டும் அவர்களுக்கு பொறுப்பு கூறல் வேண்டும் என்ற உணர்வு இருந்தது.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் ராஜன் தொடர்பாய் என்ன விமர்சனங்கள் இருந்தன…

அசோக்: உளவுத் துறை தொடர்பான குற்றச்சாட்டுக்களில் ராஜன் தொடர்பாக விமர்சனம் இருந்ததாக நான் அறியவில்லை. ஆனால் ராஜன் பி கேம்ப் போட்டது தொடர்பாக விமா்சனம் இருந்தது.

தேசம்: அது என்ன மாதிரியான விமர்சனம்…

அசோக்: அதுல தான் டோச்சர் நடந்தது.

தேசம்: ராஜன்ட கேம்பிலையோ?

அசோக்: பீ கேம்ப் (basic camp – b camp) என்பது ஆரம்ப பயிற்சிநிலை கொண்ட முகாம். அது பேசிக் காம்பாக இருந்தமையால் பீ கேம் என்று சொல்லப்பட்டது. ராஜன் தான் பேசிக் கேம்ப் போட்டது. அங்க தோழர்கள் மீதான சித்திரவதைகள் நடந்த படியால், ராஜன் மீது அந்த குற்றங்கள் வந்து விட்டதென நினைக்கிறன். ராஜன் தொடங்கிய நோக்கம் பேசிக் கேம்ப். ஆரம்ப பயிற்சிக்காக தொடங்கப்பட்டது. அங்கதான் டோச்ஜர் நடந்தது.

தேசம்: அதுக்கு ராஜன் பொறுப்பாக இருக்கேல?

அசோக்: இல்லை இல்லை அந்த காலகட்டத்தில் ராஜன் பீ.எல்.ஓ பயிற்சிக்காக போய் விட்டார் என நினைக்கிறன்.

தேசம்: ராஜன்ட முரண்பாட்டுக்கு அதுவும் காரணமாக இருக்கலாமா? தான் தொடங்கின முகாமில் …

அசோக்: அது தெரியல. பீஎல்ஓ ரெயினிங் முடித்து வந்த பின் முகுந்தனுக்கும் ராஜனுக்கும் பிரச்சனை தொடங்கிவிட்டது. நிறைய கேள்விகள் கேட்டிருக்கிறார். உள்ளுக்குள்ள நடந்த கொலைகள் தொடர்பாக. அவர் கலந்துகொண்ட சென்றல் கமிட்டி மீட்டிங் பிறகுதான் நடந்தது. தனிப்பட்ட சந்திப்புகள் நடக்கும் தானே அதுல முரண்பட்டுதான் கேள்விகள் கேட்கிறார்.

தேசம்: ராஜனுக்கும் தோழர் ரகுமான் ஜான் போன்றவர்களுக்கும் இடையில் தொடர்புகள்…

அசோக்: தொடர்புகள் ஒன்றுமில்லை.

தேசம்: அது எப்படி ஒரே அமைப்பின் மத்திய குழுவில் இருந்தவர்களுக்கு இடையில் தோழமை உரையாடல் இல்லாமல் இருந்தது?

அசோக்: இவங்களைப் பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் ராஜனை முகுந்தனுடைய ஆளாகத்தான் இவங்கள் பார்த்திருக்கிறார்கள். அப்படித்தான் ஆரம்ப காலகட்டத்தில் ராஜன் முகுந்தனுடைய ஆதரவு நிலைப்பாட்டோடுதான் இருந்திருக்கிறார். ராஜன் மாத்திரம் அல்ல ஆரம்ப காலகட்டத்தில் தோழர் ரகுமான் ஜான், கேசவன் நான் உட்பட எல்லோரும் முகுந்தன் விசுவாசிகள்தான். முகுந்தன் விசுவாசம் இல்லாவிட்டால் கட்டுப்பாட்டுக்குழுவில் தோழர் ரகுமான் ஜான், சலீம் எப்படி இடம் பெறமுடியும். காலப்போக்கில் முரண்பாடு ஏற்பாட்டு விட்டதே தவிர ஆரம்ப காலங்களில் எல்லோரும் ஒன்றுதான். விசுவாசம் வேண்டுமென்றால் ஆளுக்கால் கூடிக் குறையலாம் …

தேசம்: இதெல்லாம் ஒரு கற்பனை மாதிரி தெரியவில்லையா. கிட்டத்தட்ட ஒரு கற்பனாவாதம் தான். ஒருவருக்கொருவர் தோழமை இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்தாமல் உரையாடல் நடத்தாமல் என்னென்று நீங்கள் எலலோரும் மத்தியகுழுவில் இருந்தீங்க.

அசோக்: இப்ப யோசிக்கேக்க அது பிழையாகத் தான் தெரியுது. அந்தக் காலகட்டத்தில் நான் நினைக்கிறேன் ஒரு சந்தேகம் பயம் இருந்திருக்கலாம்.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் சந்தேகங்கள் பயம்கள் உருவாகுவதற்கான சாத்தியங்கள் இல்லையே. குறிப்பிட்ட காலத்துக்குள் தானே இது எல்லாம் நடக்குது. ஒன்றில் நீங்கள் அதீத எப்படி சொல்வது, தெனாலியில் கமலஹாசன் சொல்வது மாதிரி அதைக் கண்டால் பயம், இதைக் கண்டால் பயம், அப்படி பயம் என்று சொல்லுறது மாதிரியான பயத்தை நாங்கள் இப்ப கட்டமைக்க இயலாது. மற்றது அந்த காலகட்டத்தில் தான் நீங்கள் புலிகளிடமிருந்து வந்து இதை ஆரம்பிக்கிறீர்கள். ஒரு வருஷத்துக்குள்ள அவ்வளவு ஒரு கொலை கூட்டமாக மாறுவது வாய்ப்பில்லை…

அசோக்: உண்மையிலேயே இப்ப திரும்பி பார்க்கும் போது எங்கள் மீது நிறைய விமர்சனங்கள் வருகிறது. இயக்கம், போராட்டம் விடுதலை என்பதக்கு அப்பால், எங்களிடம் எங்களின்ற தனிப்பட்ட இருத்தலுக்காக அடையாளத்திற்காக முயற்சித்தோமே தவிர எந்த இயக்க நலன்சார்ந்த உரையாடல்கள், விட்டுக்கொடுப்புக்கள், பரஸ்பர நம்பிக்கைகளுக்கு ஊடாக எதையுமே நாங்க முயற்சிக்கல்ல போல தெரிகிறது. முகுந்தனும் உளவுத்துறையும் தான் மிக மிக முக்கியமான பிரச்சினை என்றால் முகுந்தன் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியங்கள் இருந்திருக்கு.

தேசம்: முகுந்தன் பாவித்த அத்தனை பேருமே சுழிபுரத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் எல்லாருமே சந்ததியாரால் புளொட்டிக்கு கொண்டு வரப்பட்டவர்கள். படைத்துறைச் செயலாளர் கண்ணன் இந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

அசோக்: யாழ்ப்பாணம், எந்த பிரதேசம் என்று தெரியவில்லை.

தேசம்: அவரும் ஒரு இடதுசாரி…

அசோக்: இடதுசாரி பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்.

தேசம்: பரந்தன் ராஜன் வெளியேறும்போது… நீங்கள் சொல்கிறீர்கள் பரந்தன் ராஜன் ஒரு தனிக் குழுவாக செயற்பட்டார் என்று.

அசோக்: தனிக் குழுவாக இல்லை. ராஜன் வெளியேறின பிற்பாடு முகாம்களுக்குள் அதிருப்தி அடைந்து வெளியேறின தோழர்கள் அனைவரும் ராஜனிட்ட பாதுகாப்புத்தேடி போயிட்டாங்க.

தேசம்: இந்தத் தோழர்கள் யாரும் தீப்பொறி குழுவோட போகல…

அசோக்: யாரும் போகவில்லை. முதலில் நம்பிக்கை வேண்டுமே. அவங்களோடு மிக நெருக்கமான நாங்களே அவங்களோடு போகவில்லை. தோழர்கள் எப்படி நம்பி போவார்கள். முதலில் தோழர்களுக்கு நம்பிக்கை ஊட்டவேண்டும். ராஜன் ஆட்கள் அந்த நம்பிக்கையை கொடுத்தாங்க. அந்தக் காலகட்டத்தில் தான் நாங்களும் பின்தள மாநாட்டுக்கு போறோம்.

தேசம்: நாங்கள் என்னதான் தலைமைத்துவம் இடதுசாரி, அரசியல் இதெல்லாம் கதைத்தாலும் சரியான தலைமையை அந்த போராளிகளுக்கு கொடுக்க தவறி விட்டோம்.

அசோக்: எங்களிடம் நிறைய தவறுகள் இருந்திருக்கின்றன. புளொட்டின் ஆரம்ப உருவாக்கமே தனிநபர் விருவாசம், குழுவாதம் போன்றவற்றோடு தொடங்கியதுதான் எல்லா வீழ்ச்சிக்கும் காரணம். உங்கட இந்த விமர்சனம் எங்கள் எல்லோருக்கும் உரியது. நாங்கள் சரியான தலைமையை கொடுத்திருந்தால் அந்தத் தோழர்கள் எங்களை நம்பி வந்திருப்பார்கள். நாங்கள் சரியான தலைமையையும் கொடுக்கல்ல. தனி நபர்களாக கூட தோழர்கள் மத்தியில் எங்கள் மீது நம்பிக்கைகளை ஏற்படுத்த தவறிட்டம். இதுதான் ரகுமான் ஜான் தோழர் ஆட்களுக்கு நடந்தது. பிறகு பின்தளம் சென்ற பிறகு நாங்கள் என்ன செய்கிறோம் என்றால் டேவிட் ஐயாவை சந்திக்கிறோம். சரோஜினிதேவி, சண்முகலிங்கம், ஜூலி..

தேசம்: ஜூலி பற்றி சொல்லுங்கள் முதல் சொல்லப்படவில்லை என்று நினைக்கிறேன்…

அசோக்: ஜூலி வந்து காந்தியத்தில் வேலை செய்த ஒரு துணிச்சலான கருத்தியல் ரீதியில் வளர்ந்த தோழர். முதன் முதல் காந்தீயம் வவுனியாவில் நடாத்திய சத்தியா கிரக போராட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பெண்களில் முக்கியமானவர். பொலிசாரின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டவர். மாதகல் பிரதேசத்தை சேர்ந்தவர்.

தேசம்: இப்ப எங்க இருக்கிறா…

அசோக்: இப்ப திருமணம் செய்து. நான் நினைக்கிறேன் அவர்களுடைய சொந்த வாழ்க்கைக்கு போயிட்டாங்க. அப்போ முகுந்தன் மீது அதிருப்தி கொண்ட ஆட்கள் எல்லாரும் அங்க சந்திக்கிறோம். பின் தளத்திலிருந்த மத்திய குழு ஆட்களையும் சந்திக்கிறோம் நாங்கள். ராஜனை சந்திக்கிறோம். பாபுஜி, செந்தில், ஆதவன், சீசர், சேகர் அதாவது முகுந்தனோடு அதிருப்தியாகி மத்திய குழுவில் இருந்து இவங்களும் வெளியேறிட்டாங்க. முகுந்தனோடு இருந்தது கண்ணன், வாசுதேவா, கந்தசாமி, மாணிக்கதாசன், ஆனந்தி. 5 பேர் தான் முகுந்தனோடு இருந்தது. மிச்ச பேர் வெளியில் தான் இருக்கிறார்கள். தளமத்திய குழு நாங்க நாலு பேர் மற்ற முன்னரே வெளியேறி இருந்த சரோஜினி தேவி உட்பட முகுந்தனுக்கு எதிராக மொத்தம் 11 பேர் வெளியில் இருக்கிறம்.

தேசம்: செந்தில், சீசர், ஆதவன் எல்லாம் எங்க…

அசோக்: அவங்க அந்த நேரம் பின்தளத்தில் இருந்தவர்கள்.

அப்போ, வெளியேறின சென்ட்ரல் கமிட்டி உறுப்பினர்களை எல்லாம் சந்திக்கிறோம். அவங்க சொல்லுறாங்க நாங்கள் ஒரு சென்றல் கமிட்டி மீட்டிங்கை முதல் கூட்டவேண்டும் என்று. சென்றல் கமிட்டி மீட்டிங் போட்டு பின்தள மாநாடு நடத்துவது தொடர்பாக முகுந்தன் ஆட்களோடு கதைக்க வேண்டும் என்று. அதற்கிடையில் தளக்கமிட்டி முகுந்தனுடனும் வெளியில் பேச்சுவார்த்தை நடத்தி விட்டார்கள். ஓரளவு மாநாடு நடத்துவதற்கு முகுந்தன் ஒத்துக்கொண்டு, வெளியில் மாநாட்டை தடுப்பதற்கான எல்லா வேலைகளிலும் ஈடுபட்டு கொண்டிருந்தார். சின்ன சின்ன பயமுறுத்தல்கள் எங்களை தனி வீட்டில் தங்க வைத்து வெளித் தொடர்பில்லாமல் வைத்திருப்பது. இப்படி தொடர்ந்தது.

அப்ப நாங்க சொல்றம் மத்திய குழுவைக் கூட்ட வேண்டும் என்று. அப்போ முகுந்தன் ஒத்துக்கொள்கிறார். அப்போ மத்திய குழுக் கூட்டம் நடக்குது. அதுதான் கடைசியாக நடந்த மத்திய குழுக் கூட்டம் அதில் எல்லாரும் கலந்து கொள்கிறார்கள்.

அதுல நாங்கள் தளத்திலிருந்து போனவர்கள் 3 பேர். மற்றவர்கள் ராஜன், பாபுஜி, செந்தில், ஆதவன், சீசர், முகுந்தன், கண்ணன், கந்தசாமி, வாசுதேவா, மாணிக்கதாசன், ஆனந்தி அது ஒரு மிகப் பதட்டமான சூழலில் நடக்குது. நாங்கள் முதலில் முடிவெடுத்து விட்டோம் என்னவென்றால், இந்த சென்ற கமிட்டிக்கான பாதுகாப்பை தள செயற்குழு தளக் கமிட்டி இருக்குதானே அவங்களுடைய மேற்பார்வையில் இந்த மத்திய குழுக் கூட்டம் நடக்க வேண்டும் என்று. யாருமே ஆயுதம் கொண்டு வர இயலாது.

தளக் கமிட்டி இவங்கதான் மத்திய குழுக் கூட்டம் நடக்குற மண்டபத்தில் வெளியில் நிற்பார்கள். இவங்கதான் செக் பண்ணி விடுவார்கள் என்று சொல்லி. எங்களுக்கு ஒரு பயம் இருக்கும் தானே முகுந்தன் எங்களை மாநாட்டுக்கு கூப்பிட்டு ஏதாவது செய்யலாம் என்று.

தேசம்: அது யார் முகுந்தனோடு கதைத்து உடன்பட வைத்தது?

அசோக்: அது தள கமிட்டி. தள கமிட்டிதான் போய் சொன்னது சென்ட்ரல் கமிட்டியை கூட்ட வேண்டும் என்று. நாங்களும் ஒரு கடிதம் அனுப்பினோம் சென்றல் கமிட்டியை கூட்ட வேண்டும் என்று. அப்போ முகுந்தன் ஏற்றுக் கொண்டு சென்றல் கமிட்டியை கூட்டுவதற்கு சம்மதிக்கிறார். அதிலதான் பல்வேறு விவாதங்கள் நடக்குது. நாங்கள் பின் தள மாநாட்டை நடத்துவதற்கான அனுமதியை முகுந்தன் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறம்.

ஏனென்றால் பின்தள மாநாடு நடத்துவதற்கான எந்த சாத்தியத்தையும் முகுந்தன் தரவில்லை. அப்போ அதிலே நாங்கள் ஃபைட் பண்ணுவதற்குத் தான் போறோம். அங்க அந்த மத்திய குழுக் கூட்டத்தில் மிகப் கடுமையான விவாதம் நடந்தது. தள மாநாட்டையே முகுந்தன் ஏற்றுக் கொள்ளாத வகையில் தான் கதைக்கிறார். திட்டமிட்டு புளொட்டை தளத்தில் உடைத்ததாகவும், அதே போல் பின் தளத்தில் உடைக்க நாங்க முயலுவதாகவும் எங்கள் மீது குற்றம் சுமத்தினார்.

பிறகு சொன்னார் பின்தள மாநாட்டை நடத்துவதற்கான எல்லாத்தையும் தாங்கள் செய்கிறோம் என்று. நாங்கள் சொன்னோம் அதை நீங்கள் செய்ய இயலாது. மத்திய குழுவைச் சேர்ந்த எவரும் அதில் அங்கம் பெற முடியாது; தீர்மானிக்கவும் முடியாது. அதை தளக்கமிட்டீயும் முகாம்களில் இருக்கிற தோழர்கள் தான் தீர்மானிக்க வேண்டுமேயொழிய நீங்கள் தீர்மானிக்க இயலாது. குற்றம் சாட்டப்பட்ட உளவுத் துறை சார்ந்தவர்களும் தீர்மானிக்க இயலாது என்று. முகுந்தன் ஏற்றுக் கொள்ளவே இல்லை. பின்தள மாநாட்டை நடாத்தும் எண்ணமே முகுந்தனுக்கு இல்லை. அதற்கிடையில் சந்ததியார் படுகொலை, செல்வன் அகிலன் படுகொலை பற்றி எல்லாம் பிரச்சனை தொடங்கிவிட்டது.

தேசம்: இப்பிரச்சனைகளை யார் கேட்டது?

அசோக்: சந்ததியார் படுகொலை பற்றி ராஜனும், செல்வன், அகிலன் படுகொலை பற்றி நானும் கேள்வி எழுப்பினோம். இதுபற்றி சென்ற உரையாடலில் சொல்லி இருக்கிறன். எங்க மீது முகுந்தன் ஆட்கள் கடும் குற்றச்சாட்டை வைக்க தொடங்கினாங்க. புளொட்டை தளத்தில் உடைத்தோம். நிறைய குற்றச்சாட்டுகள் நேசன் ஆட்கள் வெளியேறியதை, ரீட்டா பிரச்சனை பற்றி தனக்கு நாங்கள் அறிவிக்கவில்லை என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தள இராணுவப் பொறுப்பாளர் மெண்டீசிக்கு நாங்க ஒத்துழைப்பு கொடுக்கல்ல என்று சொல்லியும் முகுந்தன் எங்கள் மீது குற்றச்சாட்டு. முகுந்தனுக்கும் ராஜனுக்கும் பெரும் வாக்குவாதம். முகுந்தனிடம் இருந்து எந்தக் கேள்விக்கும் ஒழுங்கான பதில் இல்லை. கேள்வி கேட்பவர்களை குற்றம்சாட்டி கூட்டத்தை குழப்புவதிலேயே முகுந்தனும், முகுந்தன் சார்பானவர்களும் குறியாக இருந்தாங்க.

தேசம்: அதுல ஒரு உறுதியான முடிவும் இல்லை…

அசோக்: உறுதியான முடிவு இல்லை. கடும் முரண்பாட்டுடன் அந்த மத்திய குழு முடிந்தது…

தேசம்: தங்கள் மீதான எல்லா குற்றச்சாட்டையும் மறுத்துட்டாங்க…

அசோக்: அவங்க மறுத்துட்டாங்க. பின் தள மாநாடு நடத்தவும் உடன்படவில்லை. பிறகு முரண்பட்டு அதோட மத்திய குழு கூட்டம் முடியுது. அதுதான் புளொட்டினுடைய இறுதி மத்திய குழு கூட்டம். நாங்க கலந்து கொண்ட கூட்டம்.

தேசம்: 86 கடைசியில் நடந்தது…

அசோக்: இது வந்து எண்பத்தி ஆறு ஜூனில் நடக்குது. அப்போ நாங்கள் முரண்பட்டு வந்த பிற்பாடு, தளத்தில் இருந்து போன தளக் கமிட்டியும் அங்குள்ள மத்திய குழு உறுப்பினர்களும் சேர்ந்து ஒரு அறிக்கை ஒன்று வெளியிடுகிறோம். இனிமேல் நாங்கள் தான் புளொட் தொடர்பான உத்தியோகபூர்வமான முடிவுகளை எடுப்போம் என்றும் முகுந்தனுடன் புளொட் தொடர்பான எந்த விடயங்களையும் தவிர்த்துக் கொள்ளுமாறும், தளத்தில் இருந்து வந்த தள கமிட்டியும் பின் தளத்தோழர்களும் இணைந்து பின்தள மாநாட்டை நடத்தி அதற்கு ஊடாக தெரிவு செய்யப்படும் மத்தியகுழுதான், புளொட் அமைப்பின் உத்தியோக உத்தியோகபூர்வ நிர்வாகம் என்றும், எனவே புளொட்டின் பெயரில் யாரும் முகுந்தனுடன் தொடர்பு கொள்ளுவதை தவிர்த்துக் கொள்ளும்படியும் அறிக்கை வெளியிடுறோம்.

பெரிய ஒரு அறிக்கை. நிறைய விஷயங்கள் உள்ளடக்கியிருந்தது. அதுல நாங்கள் சைன் பண்ணுறோம். பிறகு தளத்திலிருந்து போன மத்திய குழு உறுப்பினர்களும் அங்குள்ள மத்திய குழு உறுப்பினர்களும் சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிடுகிறோம்.

பிறகு நாங்கள் பின்தள மாநாட்டுக்கான ஆயத்த வேலைகளை செய்கிறோம்.

தேசம்: இப்ப புளொட்டில் இருக்கிற யாராவது உறுப்பினர்கள் அதில் இருந்திருக்கிறார்களா? ஆர் ஆர் அல்லது சித்தார்த்தன்.

அசோக்: இல்லை இல்லை ஒருவரும் இல்லை…

தேசம்: இப்ப புளொட்டின் தலைமையில் இருக்கிற ஒருத்தரும் அதுல இருக்கல?

அசோக்: இப்ப புளொட்டின் தலைமையில் யார் யார் இருக்கிறார்கள்?

தேசம்: சித்தார்த்தன் தலைவர். ஆர் ஆர் அதில் முக்கியமான உறுப்பினர் என்று நினைக்கிறேன்.

அசோக்: ஆர் ஆர் முகாமில் முக்கிய பொறுப்பில் இருந்து இருப்பார் என்று நினைக்கிறேன். சித்தார்த்தன் பெருசா தெரியல. சித்தார்த்தன் வெளிநாட்டிலிருந்து தொடர்பாளராக புளொட்டினுடைய மறைமுகமான வேலைகளுக்கு முகுந்தனின் பின்னால் அவர் இயங்கி இருப்பார் என்று நினைக்கிறேன். பணம், ஆம்ஸ் சம்பந்தப்பட்ட விடயங்களை கவனித்திருப்பார். புளொட்டுக்குள் எதுவும் உத்தியோகபூர்வமாக நடக்கவில்லை தானே. தனிநபர் ரீதியாகத்தான். முகுந்தன் சித்தார்த்தனோடையும், சீனிவாசனோடையும், லண்டன் கிருஷ்ணனோடையும் இப்படியான தனிப்பட்ட உறவைத்தான் பேணிக் கொண்டிருந்தார்.