இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட் பேட்டித் தொடர் ஒன்றில் விளையாடுவதற்காக நேற்று பாக்கிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேல ஜயவர்தன பங்குபற்றும் இறுதி டெஸ்ட் போட்டியாக இது அமைகிறது. இந்த போட்டித் தொடரை வெற்றிகொள்வது தமது ஒரே குறிக்கோள் என மஹேல தெரிவிக்கின்றார்.
இரண்டு போட்டிகளைக் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி கராச்சி தேசிய விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
பாக்கிஸ்தானுடனான போட்டித் தொடரை இந்தியா இரத்து செய்ததையடுத்து அந்தப் போட்டித்தொடரில் விளையாட பாக்கிஸ்தான் இலங்கைக்கு அழைப்பு விடுத்தது. பாக்கிஸ்தானின் அழைப்பை இலங்கை ஏற்றுக்கொணடதற்கு ஏற்ப இந்த போட்டித்தொடர் நடத்தப்படுகிறது.
இந்த போட்டித்தொடர் ஒரு நாள் போட்டிகளையும் டெஸ்ட் போட்டிகளையும் கொண்டதாக உள்ள போதிலும் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதன்படி ஒரு நாள் போட்டித் தொடர் முன்னர் நடத்தப்பட்டதுடன் அதில் இலங்கை அணி வெற்றிபெற்றது. பாக்கிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணியில் புது ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பரன வித்தான மற்றும் வேகப் பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் ஆகிய இரு புதுமுகங்களும் இடம்பெறுகின்றனர்.
மஹேல தலைமயிலான அணியில் குமார் சங்கக்கார, திலக்கரத்ன டில்ஷான், திலான் சமரவீர, பிரசன்ன ஜயவர்தன, மாலிந்த வர்ணபுர, தரங்க பரன வித்தான, சமிந்த வாஸ், முத்தையா முரளீதரன், அஜந்த மெண்டிஸ், சாமர கப்புகெதர,பர்வீஸ் மஹரூப், தில்ஹார பெர்னான்டோ, திலான் துஷார, சுரங்க லக்மால் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.