கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

அமெரிக்க – பிரித்தானியாவின் ஆதரவோடு இஸ்ரேலின் இனவெறித் தாக்குதல்: காஸா மருத்துவமனை மீது தாக்குதல் 500 பேர் பலி! அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுடனான சந்திப்பை பாலஸ்தினிய விடுதலை அமைப்பின் தலைவர் அப்பாஸ் ரத்துசெய்துள்ளார்:

ஒக்ரோபர் 17 இன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகுவைச் சந்திக்கவும் அரபு நாடுகளின் ஆதரவைத் திரட்டவும் புறப்பட்டுள்ள நிலையில் இச்சந்திப்பு ஒருதலைப் பட்சமாக பாலஸ்தின, ஜோர்டன், எகிப்திய தலைமைகளால் ரத்துசெய்யப்பட்டு உள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் மேற்கு நாடுகளும் வழங்கியுள்ள கேள்வியற்ற ஆதரவுடன் பாலஸ்தினிய அரபுக்களை முஸ்லீம்களை அழிக்கும் திட்டம் மிக வேகமாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே மத்திய கிழக்கு அரசுத் தலைமைகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

மத்திய கிழக்கில் பாலஸ்தினியர்களுக்கான ஆதரவு எப்போதுமே இருந்துள்ளது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகள் அண்மைக் காலம்வரை மேற்கு நாடுகளுடனும் இஸ்ரேலுடன் மிக நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. ஆனால் ஓக்ரோபர் 7ம் திகதி ஹமாஸ் இஸ்ரேலுக்குள் புகந்து நடத்திய தாக்குதலும் இஸ்ரேல் தொடுத்த இன அழிப்பு யுத்தமும் இந்த உறவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் இந்த இன அழிப்பு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு 12 நாட்களாகியும் உத்தியோக பூர்வமான எந்தக் குரல்களும் வெளிப்படுத்தப்படவில்லை.

நேற்று ஒக்ரோபர் 16 ஐநா வின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஸ்யா கொண்டுவந்த யுத்தநிறுத்தத் தீர்மானத்தை அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் எதிர்த்திருந்தது. அதனைத் தொடர்ந்து பிரேசில் கொண்டு வந்த தீர்மானத்திற்கும் இந்நாடுகள் வாக்களிக்கவில்லை. பாலஸ்தினத்தில் நடக்கும் இன அழிப்பை ஊக்கப்படுத்துவதுடன் அதற்கு எண்ணை ஊற்றும் வகையில் அமெரிக்கா தன்னுடைய தாக்குதல் கப்பலை இஸ்ரேல் நோக்கி நகர்த்தி உள்ளது.

இன்று சில மணிநேரங்களுக்கு முன் காஸாவில் உள்ள அல் அஹாலி பப்ரிஸ்ற் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய அடிப்படை மனித விழுமியங்களுக்கு மாறான தாக்குதல் உலக நாடுகளின் பார்வையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய இன அழிப்பு இராணுவம் ஈவிரக்கமற்ற முறையில் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என்று பாரபட்சமில்லாத தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும் காஸவில் வாழும் மக்குளுக்கான அடிப்படைத் தேவைகளான தண்ணீர், உணவு மற்றும் மருந்து விநியோகத்தையும் முற்றாக தடுத்து அவர்களை மரணத்தின் விழிம்புக்குள் தள்ளிக்கொண்டுள்ளது. பாலஸ்தினத்தில் கடந்த 12 நாட்களில் கொல்லப்பட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்கள்.

நூறு தமிழரைக் கொன்றால் அதில் ஒரு ஈழப் போராளியும் இருப்பான் என்று இஸ்ரேலின் புலனாய்வுத்துறை அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தனவுக்கு ஆலொசணை வழங்கியிருந்தது. அதே செயற்திட்டத்தையே இஸ்ரேல் பாலஸ்தினத்திலும் மேற்கொண்டு வருகின்றது. அதற்கு அமெரிக்க – பிரித்தானிய மேற்கு நாட்டு தலைமைகள் தொடர்ச்சியாக ஆதரவளிக்கின்றனர்.

இந்த மேற்கு நாடுகள் உலகில் நடைபெறும் பெரும்பாலும் அனைத்து யுத்தங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருப்பதுடன் இந்த யுத்தங்களை ஆரம்பிப்பவர்களாகவும் அதனை எண்ணையூற்றி வளர்ப்பவர்களாகவும் உள்ளனர். அது மட்டுமல்லாமல் அப்கானிஸ்தானில் அல்கைடாவை அமெரிக்கா உருவாக்கியது. அன்றிருந்த ரஸ்ய சார்பான மொஜஹிதீன்களுக்கு எதிராக அமெரிக்கா ஒசாமா பின் லாடனை உருவாக்கியது. அமெரிக்கா கற்றுக்கொடுத்ததை அல்கைடா ஒரு கட்டத்தில் அமெரிக்காவுக்கு எதிராக பயன்படுத்திய போது அமெரிக்கா அல்கைடாவை அழிக்க முனைந்தது.

அதே போல் யஸீர் அரபாத்தின் தலைமையிலான பாலஸ்தின விடுதலை அமைப்பை பலவீனப்படுத்த இஸ்ரேல் எண்பதுக்களில் உதவி அமைப்பாக செயற்பட்ட அமைப்பை ஹமாஸாக உருவாக்கி கொம்பு சீவிவிட்டது. சிரியாவிலும் அமெரிக்கா ஐஎஸ்ஐஎஸ் அடிப்படைவாதிகளுக்கு ஆயதங்களை விநியோகித்தது. பெரும்பாலான இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை உருவாக்கி வளர்த்துவிட்டவர்கள் முஸ்லீம்கள் அல்ல. அமெரிகாவினதும் அதன் நேசநாடுகளினதும் புலனாய்வுப் பிரிவினரே. காலனித்துவகால பிரித்தாளும் தந்திரத்தின் தொடர்ச்சியே இது. நவகாலனித்துவம்.

மனித உரிமைகள் என்று முதலைக்கண்ணீர் விடும் அமெரிக்க – பிரித்தானிய நேசநாடுகள் மிகமோசமான மனித அவலங்களுக்கு பொறுப்புடையவர்கள். அப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா ஆகிய நாடுகளிலும் மத்திய கிழக்கிலும் தங்களுடைய சொந்த நலன்களுக்காக தலையீடு செய்து அங்கு மிகப்பெரும் மனித அவலங்களை ஏற்படுத்தினர். இந்நாடுகளின் தலைவர்கள் தங்களுடைய அரசியல் லாபங்களுக்காகவும் நலன்களுக்காகவும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாட்டு மக்களின் பெயரில் வலிந்து தாக்குதல் நடத்தி உலக சமாதானத்தை சீர்குலைக்கின்றனர். தங்கள் நாடுகளில் தங்களுடைய இருப்புக்கு ஆபத்து வருகின்ற போது அவர்களுடைய வாக்கு வங்கி சரிகின்ற போது இவர்கள் உலகின் பதட்டமான பகுதியில் யுத்தத்தை ஆரம்பிப்பார்கள்.

பிரித்தானியாவின் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பிரதமராக இருந்த போது தன்னுடைய பார்டிகேற்றை மறைக்க உக்ரைன் போருக்கு ஆயதங்களை வாரி வழங்கினார். உக்ரைனுக்கு ஆயதம் விற்று லாபமடைந்த ஜோ பைடன் குடும்பம் உக்ரைன் போரில் உரிந்துபோட்டு ஆடுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. இப்போது மோசடி, லஞ்சம், ஊழலுக்கு பெயர் போன இஸ்ரேலிய பிரதமருக்கு இஸ்ரேலிலேயே பல வழக்குகள் உள்ளது. இதில் இருந்து தப்பிக்கொள்ளவே அவர் ஹமாஸைச் சீண்டிவிட்டு இந்த யுத்தத்தில் ஆடாத ஆட்டம் ஆடுகின்றார்.

இதனாலேயே தற்போது உலகம் முழவதும் அமெரிக்கா – பிரித்தானிய நேச நாடுகளுக்கு எதிரான உணர்வுகள் கிளர்ந்துள்ளது. உலகம் முழவதும் இந்நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகங்களுக்கு முன் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற ஆரம்பித்துள்ளது.

இந்த யுத்தம் உடனடியாக நிறுத்தப்படுவதுடன், இவற்றுக்கான மூலகாரணமாக இஸ்ரேலிய ஒடுக்குமுறை பாலஸ்தினிய பிரதேசங்கள் மீதான ஆக்கிரமிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். சுதந்திர பாலஸ்தீனம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அது நடைபெறாவிட்டால் ஹமாஸ் அழிக்கப்பட்டாலும் அதனிலும் மோசமான அமைப்பொன்று இன்னும் சில ஆண்டுகளில் உருவாகும். இஸ்ரேலின் அடக்குமுறைகளும் ஆக்கிரமிப்புகளும் ஹமாஸிலும் பார்க்க பல மடங்கு தீவிரமான தீவிரவாதிகளை உருவாக்கும். உலக அமைதி கேள்விக்குறியாகவே இருக்கும்.

பாலஸ்தீன விடுதலைக்கான போரின் புதிய பரிமாணம்: பாலஸ்தீன – இஸ்ரேல் யுத்தம்

48 மணி நேரங்களைக் கடந்து நடக்கின்ற பாலஸ்தீன – இஸ்ரேல் யுத்தத்தில் இரு தரப்பிலும் 2000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. 5000 பேர் வரை காயப்பட்டுள்ளனர். ஒக்ரோபர் 7 சனிக்கிழமை காலை ஆறரை மணி அளவில் பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடிவரும் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள தென் பகுதியை தரை, கடல், ஆகாய மார்க்கமாக தாக்க ஆரம்பித்தனர். எவரும் எதிர்பாத்திராத வகையில் மிகத்திட்டமிட்ட முறையில் இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.

அல் அக்சா ப்ளட் – Al Aqsa Flood என்று பெயரிலியே ஹமாஸ் இத்தாக்குதலை நடத்தியது. காஸா மக்களின் புனிதத்தலமான அல் அக்சா மசூதிக்குள் இஸ்ரேலிய இராணுவப் பொலிஸார் நுழைந்து சோதணை நடத்திய அத்துமீறலுக்காகவே இத்தாக்குதல் நடத்தப்படுவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இந்தியாவில் சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவிலுக்குள் நுழைந்து இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியதற்காகவே அன்றைய பிரதர் இந்திராகாந்தி சீக்கிய மெய்பாதுகாப்பாளரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அல் அக்சா மசூதி மட்டுமல்ல தொடர்ச்சியான மிக மோசமான அடக்குமுறை இத்தாக்குதலுக்கு காரணமாய் அமைந்துள்ளது.

1948 மே 14இல் அமெரிக்காவின் உதவியுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட இஸ்ரேல் என்ற நாட்டின் வரலாற்றில் நடந்த மிகப் பாரிய தாக்குதல் இதுவாகும். இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை உள்ளடக்கி மதில்களை எழுப்பி இருந்தது. இம்மதில்கள் உடைக்கப்பட்டு தரையாலும் பறக்கும் மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தியும் கடலாலும் ஹமாஸ் தாக்குதலை நடத்தி இருந்தது. இத்தாக்குதல்களில் 25க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தினர், பொலிஸார் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். இன்னும் பல நூறுபேருக்கு என்ன நடந்தது என்பது உறுதிப்படுத்தப்படாமல் உள்ளது. இஸ்ரேலின் வரலாற்றில் இவ்வாறான பெரும் தொகை இழப்பு அந்நாட்டுக்கு முன்எப்போதும் ஏற்பட்டதில்லை. உலகின் பாதுகாப்பு மிக நவீனமயமாக்கப்பட்டு, மிகப் பலமான, மிக வலுவான புலனாய்வு கட்டமைப்பைக் கொண்ட நாடாக இருக்கும் இஸ்ரேல் முற்றிலும் எதிர்பாராத தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இது இஸ்ரேல் மற்றும் மேற்கு நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகளுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம். அவர்கள் புலனாய்வுக்கும் பாதுகாப்புக்கும் கொட்டிய பில்லியன் டொலர்கள் எவ்வித பயனுமற்றதாக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஆதரவையும் ஈரானின் ஆதரவையும் தவிர தொழில்நுட்பமோ பணபலமோ இல்லாமல் மிக இரகசியமாக இவ்வளவு பெரிய தாக்குதலை உலகின் மிகப் பலமான பாதுகாப்பான நாட்டுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய தாக்குதல் இஸ்ரேலையும் அதன் ஆதரவு சக்திகளான அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் உலுப்பியுள்ளது என்றால் மிகையல்ல. மனித உரிமைகள் பற்றி நீலிக் கண்ணீர் வடிக்கும் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இஸ்ரேலின் பாலஸ்தினியர்கள் மீதான இனச்சுத்திகரிப்பை கண்டிப்பதில்லை. ஹமாஸ் றொக்கட் தாக்குதலை நடத்தி ஓரிரு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டால் இஸ்ரேல் பதில் தாக்குதலை நடாத்தி பல நூறு பலஸ்தீனியர்களை படுகொலை செய்வர். இப்பலஸ்தீனியர்கள் கொல்லப்படுவது பற்றி மேற்கு நாடுகள் அலட்டிக்கொள்வதில்லை. இப்பலஸ்தினியர்களுக்கு மனித உரிமைகள் இருப்பதாகவே மேற்கு நாடுகள் கருதுவதில்லை.

தற்போதைய தாக்குதல் தொடர்பில்: இஸ்ரேல் மிக மோசமான பதில் தாக்குதலை நடத்தும் என்றும் தங்கள் பதிலடியில் ஹமாஸின் இடங்களை சுக்குநூறாக்குவோம் என்றும் ஆட்சியில் உள்ள வலதுசாரி இனவாதத் தலைவரான பிரதமர் நெத்தன்யாகு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் காஸாவில் உள்ள மக்களை வெளியேறும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் காஸா உலகின் சனத்தொகை அடர்த்தி மிகக் கூடிய இடம் மட்டுமல்ல கடந்த 17 ஆண்டுகளாக இஸ்ரேலின் முற்றுகைக்குட்பட்ட திறந்தவெளி சிறைச்சாலையாகவும் சர்வதேசத்தினால் உணரப்படுகிறது. இஸ்ரேலிய இனவாதப் பிரதமர் காஸாவை முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு அவர்களை வெளியேறும்படி கோரியதை எந்த மேற்கு நாடுகளும் கண்டிக்கவில்லை. இனவாதப் பிரதமர் நெத்தன்யாகு காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கு தயாராகுனிறார் என்கின்ற அச்சம் அரபுலக மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

அண்மைய தாக்குதலில் ஹமாஸ் படையினர் தாங்கள் இஸ்ரேலிய பொதுமக்களைத் தாக்கவில்லை என்றும் பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பாளர்களையே தாக்கியதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த ஆக்கிரமிப்பாளர்கள் பொதுமக்கள் அல்ல என்றும் ஆயதம் தாங்கிய ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் அவர்கள் சர்வதேச வரையறுப்புகளின் படி பொதுமக்களாக கருதப்பட மாட்டார்கள் என்றும் ஹமாஸ் தனது தாக்குதலையும் படுகொலைகளையும் நியாயப்படுத்தி உள்ளது. இத்தனை வருடங்களாக இஸரேலிய படைகள் பாலஸ்தினியர்களை வகைதொகையில்லாமல் படுகொலை செய்து வருகின்றது. அதற்கு இவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்றும் ஹமாஸ் கேள்வி எழுப்புகின்றது.

பாலஸ்தினிய – இஸ்ரேல் யுத்தத்தின் பின்னணி:

யுதர்களுக்கு என்றொரு நாடு இல்லாத நிலையில் உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழ்ந்த யுதர்களுக்கு பாலஸதீனத்தில் ஒரு நாட்டை உருவாக்க சியோனிச இயக்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அன்றைய காலகட்டத்தில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலேயே பாலஸ்தீனமும் இருந்தது. காலனித்துவ நாடுகள் அனைத்தும் கூறுபடுத்தப்பட்டு சூறையாடப்பட்டும் தங்கள் கால்களில் நிற்க முடியாமல் பலவீனப்படுத்தப்பட்டும் காலனித்துவ ஆட்சியாளர்களால் ஆக்கப்பட்டமை வரலாறு. இந்த காலனித்துவ சுரண்டலின் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் இன்றும் மூன்றாம் உலக நாடுகள் யுத்தம், வறுமை போன்றவற்றினால் சீரழிந்து கொண்டிருக்கின்றது. ஆபிரிக்க கவிஞனொருவன் சுட்டிக்காட்டியது: அவர்கள் வரும்போது எங்களிடம் எல்லாம் இருந்தது. அவர்கள் பைபிளைக் கொண்டு வந்து தந்துவிட்டு எங்களிடம் இருந்த எல்லாவற்றையும் எடுத்துச் சென்றுவிட்டனர். இப்போது எங்களிடம் பைபிள் மட்டும் தான் இருக்கின்றது. வேறு எதுவும் இல்லை.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் அவ்வாறு பாதிக்கப்பட்ட பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த பாலஸ்தினத்தில், அமெரிக்காவின் உதவியுடன் 1948 மே 14 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. பாலஸ்தின மண் பறிக்கப்பட்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டதில் மத்திய கிழக்கு நாடுகள் மிகுந்த அதிருப்தியடைந்திருந்தன. அன்று முதல் மதிய கிழக்கு மிகப் பதட்டமான யுத்தப் பிரதேசமாகவே இருந்து வருகின்றது. இப்பகுதி பல யுத்தங்களைக் கண்டுள்ளது. ஆனால் இந்த யுத்தங்கள் எதிலுமே இஸ்ரேலியர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் 24 மணி நேரத்தில் இவ்வளவு பெரும் இழப்பையோ தாக்குதலையோ சந்தித்து இருக்கவில்லை. இஸ்ரேலின் எல்லைக்கு வெளியே நடந்த யுத்தத்தை ஹமாஸ் தற்போது இஸ்ரேலுக்கு உள்ளேயே கொண்டு சென்றுள்ளது.

பாலஸ்தீனிய மண்ணில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது முதல் அம்மண்ணில் வாழ்ந்த பாலஸ்தினிய மக்களை இஸ்ரேல் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே நடத்தி வந்தனர். அப்பகுதியில் வாழ்ந்த பாலஸ்தினியர்கள் வேறுநாடுகளுக்கு கல்வி மற்றும் நோக்கங்களுக்காகச் சென்ற போது அவர்கள் மீண்டும் தங்கள் பிரதேசங்களுக்கு வரும் உரிமை மறுக்கப்பட்டது. இஸ்ரேல் கடந்த 75 ஆண்டுகளாக பலஸ்தினியர்களை இனச்சுத்திகரிப்புச் செய்வதிலேயே குறியாக இருந்தது. இன்றும் தொடர்கின்றது.
இஸ்ரேலினுடைய புலனாய்வுப் படை மொசாட் அதன் படுமோசமான கொலைத் திட்டமிடல்களுக்கு மிகப் பெயர்பெற்றது. அவர்களையே ஹமாஸ் உச்சிக்கொண்டு இத்தாக்குதலை ஏற்படுத்தியதுடன் தொடர்ந்தும் ஆயுத தளபாடங்களை மீள் விநியோகம் செய்து புதிய ஆக்கிரப்பு நகரம் ஒன்றைக் கைப்பற்றி உள்ளனர்.

ஐந்து தசாப்தங்களுக்கு முன் இஸ்ரேலின் யொம் கிப்பூர் பகுதியில் எகிப்தின் அன்வர் சதாத் யுத்தத்தைத் தொடுத்த அதே பாணியில் ஹமாஸ் அதே தினத்தில் யுத்தத்தைத் தொடுத்தனர். முன்னைய யுத்தத்தில் எகிப்து தோல்வியடைந்தது. இந்த யுத்தத்தில் ஹமாஸினால் ஒரு போதும் யுத்தத்தை வெல்ல முடியாது. ஹமாஸ் ஒரு ஆயத அமைப்பு மட்டுமே. ஆனால் ஹமாஸ் பாலஸ்தினிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்திவிட்டது. மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேல் உடனும் மேற்கு நாடுகளுடனும் நல்லுறவைக் கொண்டிருந்த போதும் மத்திய கிழக்கு அராபிய மக்கள் பாலஸ்தினியர்கள் அனைவருமே ஹமாஸின் தாக்குதலைக் கொண்டாடுகின்றனர். பாலஸ்தின மக்களை தொடர்ந்தும் அடக்கி ஒடுக்கினால் இவ்வாறான தாக்குதல் தவிர்க்க முடியாது என்றும் இந்தப் பிரச்சினையின் காரணத்தைக் கண்டறிந்து அதனைத் தீர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழும்ப ஆரம்பித்துள்ளது.

மூனிச் ஒலிம்பிக் தாக்குதல்:

இஸ்ரேலின் கறுப்பு சனி ஆன தாக்குதலை ஹமாஸ் மிக நிதானமாக பதிவு செய்து உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் பரவவிட்டது. தற்போது உலகின் அனைத்து ஊடகங்களின் கவனமும் திசை திருப்பப்பட்டுள்ளது. உக்ரைன் யுத்தத்தைப் பற்றியோ, அப்கானிஸதான் நிலநடுக்கத்தில் இரண்டாயிரம் பேருக்கு அதிகமானோர் கொல்லப்பட்டது பற்றியோ ஊடகங்கள் அலட்டிக்கொள்ளவில்லை. ஹமாஸ் உலகத்தை பாலஸ்தீனியர்களின் ஒடுக்குமறை மீது மிகத் திட்டமிட்டு திருப்பியுள்ளது. இவ்வாறான செயலை பாலஸ்தீன விடுதலை அமைப்பு சார்ந்த குழவொன்று 1972இல் மேற்கொண்டது. 8 கறுப்பு செப்ரம்பர் படையணி ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற்ற மூனிச் நகர விளையாட்டுத் திடலுக்குள் புகந்து இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை படுகொலை செய்து 11 வீரர்களை பணயக்கைதிகளாக கைப்பற்றினர். இறுதியில் பணயக் கைதிகளை விடுவிக்கும் முயற்சி தோல்வியடைய பணயக்கைதிகள் கொல்லப்பட்டனர். கறுப்பு செப்ரம்பர் படையினர் ஐவரும் கொல்லப்பட்டனர். மூவர் கைது செய்யப்பட்டனர். அதன் சில வாரங்களில் பாலஸ்தினிய படைகள் ஜேர்மனியின் லுப்தான்ஸா எயர்லைனைக் கடத்தி வைத்து தங்கள் வீரர்களை மீட்டனர்.

இவ்வாறு ஒரு இஸ்ரேலிய இராணுவ வீரரைக் கடத்தி சில நூறு தங்கள் வீரர்களை ஹமாஸ் மீட்டிருந்தது. தற்போது பிந்திக் கிடைக்கும் செய்திகளின் படி ஹமாஸ் 50 இராணுவ வீரர்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமானவர்களை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர். இது இஸ்ரேலிய இராணுவத்துக்கும் மொசாட்டுக்கும் மிகப்பெரும் தலையிடியாக அமைய உள்ளது.

பாலஸ்தீனப் போராட்டமும் ஈழப் போராட்டமும்:

அன்றைய இலங்கை ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஜே ஆர் ஜெயவர்த்தன மிகுந்த இனவாதி என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. ஐக்கிய தேசியக் கட்சி ஒரு இனவாதக் கட்சியாகவே தன்னை கட்டமைத்திருந்தது. ஜே ஆருக்கும் அவரது படைக்கும் ஆலோசனையும் உதவியும் நல்கியது மொசாட். அன்றும் இன்றும் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கு நாடுகளின் சார்பையே எடுத்து வருகின்றது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இவர்களின் நெருங்கிய நட்புகள். நூறு தமிழர்களைக் கொன்றால் அதில் ஒரு ஈழப் போராளியும் கொல்லப்படுவான் என்ற மொசாட்டின் ஆலோசனை எண்பதுக்களில் அன்றைய பத்திரிகைகளில் இடம்பிடித்திருந்தது. இந்தத் தந்திரத்தைத் தான் மொசாட் பாலஸ்தினியர்கள் மீது இன்றும் மேற்கொள்கின்றது. ஜே ஆர் ஜெயவர்த்தனவின் காலத்திலேயே மிக மோசமான இனப்படுகொலைகளும் இனச் சுத்திகரிப்பும் இடம்பெற்றது.

மாறாக இடதுசாரி நிலைப்பாட்டோடு செயற்பட்ட ஈரோஸ் (ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை அமைப்பு) அமைப்பின் லண்டனில் வாழ்ந்த ஸ்தாபகர் இரத்தினசபாபதி மற்றும் புளொட் (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) செயற்பாட்டாளர் மகா உத்தமன் ஆகியோர் பாலஸ்தீன விடுதலை அமைப்போடு தொடர்பைப் பெற்று தங்களுடைய வீரர்களை பயிற்சிகளுக்காக பாலஸ்தீனம் அனுப்பி வைத்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு சிலரும் பாலஸ்தீன விடுதலை அமைப்போடு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஈரோஸ் அமைப்பில் அன்றைய நாட்களில் கணிசமான எண்ணிக்கையானவர்கள் இல்லாததால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமே கூடுதலாக இப்பயிற்சிகளைப் பெற்றனர். இரண்டுக்கும் மேற்பட்ட அணிகள் பிஎல்ஓ பயிற்சி எடுத்தனர். அவர்களில் சிலர் இன்னமும் மேற்குநாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்கின்றனர். இவர்களுடைய பெயர்களுக்கு முன் பிஎல்ஓ என்ற அடைமொழியும் இருக்கும். பாலஸ்தீனத்தில் முதலாவது இஸ்ரேலிய ராங்கை குண்டு வைத்து தகர்த்தது பயிற்சிக்குச் சென்ற புளொட் வீரர் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் உறுதிப்படுத்த முடியவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலை இயக்கும் (ரெலோ) தவிர்ந்த ஏனைய இடதுசார்புடைய போராளிக்குழக்கள் மத்தியில் பாலஸ்தீன விடுதலைக்கு சார்பான நிலைப்பாடு இருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டமும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும் சமாந்தரமாகப் பயணித்த காலம் அது. பாலஸ்தின விடுதலை அமைப்பின் அப்போதைய தலைவர் யஸீர் அரபாத் ஈழப்போராளிகள் மத்தியில் மதிக்கப்பட்ட ஒரு தலைவராக இருந்த காலம்.

ஈழப் போராளி அமைப்புகள் மத்தியில் இருந்த பிளவுகள் போன்ற பாலஸ்தீனப் போராளிகள் மத்தியிலும் பல பிரிவுகள் காணப்பட்டது. அவர்களிடையே முரண்பாடுகள் பகை முரண்பாடுகளும் இருந்தது. சில படுகொலைகளும் இடம்பெற்றுள்ளது. ஆனால் தமிழீ விடுதலைப் புலிகள் போன்று ஏனைய அமைப்புகளை முற்று முழுதாக துடைத்து அழிக்கின்ற அதிகார வெறி பாலஸ்தின விடுதலை போராட்டத்தில் இருக்கவில்லை. மேலும் அங்கு விடுதலைப் போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்ட அளவுக்கு ஈழவிடுதலைப் போராட்டம் மக்கள் மயப்படுத்தப்படவில்லை. மக்கள் வேறு விடுதலைப் போராளிகள் வேறு என்ற நிலை எப்போதும் இருந்தது. சர்வதேசச் சூழல் அதனைக் கையாள்கின்ற அறிவுநிலை ஈழ விடுதலைப் போராட்டத்தை புலிகள் ஏகபோகமாக்கிய பின் இருக்கவில்லை. 1991ற்கு முன் புலிகள் அனைத்து ஈழ விடுதலை அமைப்புகளையும் இல்லாதொழித்து முஸ்லீம்களையும் விரட்டியடித்து இனச்சுத்திகரிப்புச் செய்தனர். அதனால் 2009இல் புலிகளைக் காப்பாற்ற எவரும் இருக்கவில்லை.

தற்போது ஹமாஸ் உடைய தாக்குதலை வரவேற்று இஸ்ரேலையும் அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் முட்டாள்கள் என்று குறிப்பிட்ட ஹிஸ்புல்லா லெபனானின் எல்லையில் இருந்த இஸ்ரேலிய படையினர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். தாங்கள் இந்த யுத்தத்தில் நடுநிலை வகிக்கவில்லை என்றும் ஹமாஸின் தாக்குதலை வரவேற்பதாகவும் அறிவித்துள்ளனர். பாலஸ்தீன விடுதலை இயக்கமும் ஏனை பாலஸ்தீன விடுதலை குழுக்களும் இத்தாக்குதலை கொண்டாடுகின்றனர். இத்தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேலின் மிக முக்கிய எதிரியான ஈரான் இருப்பது பரகசியமானது. ஈரான் இத்தாக்குதல்களைக் கொண்டாடுகின்றது.

மொசாட் புலிகள் இலங்கை இராணுவம்:

இஸ்ரேல் என்ன தான் பாலஸ்தினியர்களை அழித்து அவர்கள் மண்ணில் நாட்டை உருவாக்கி அவர்களை அகதிகளாக வாழ நிர்ப்பந்தித்த போதும் அதே அடக்குமுறைக்கு உள்ளான கணிசமான தமிழர்கள் மத்தியில் யுதர்களுக்கும் இஸ்ரேலுக்கும் ஆதரவான நிலை எப்போதும் இருந்து வந்தது. இஸ்ரேலினுடைய அறிவு, வளம், பலம், எதிரியை அழிக்கும் கைங்கரியங்கள் பற்றி அவர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தத் தவறுவதில்லை. உலகில் தங்களை விடுதலைப் போராளிகளாகக் காட்டிக்கொண்ட புலிகள் மொசாட் இடமும் பயிற்சிகள் பெற்றனர். அதில் ஆச்சரியம் என்னவென்றால் இலங்கை இராணுவத்துக்கும் புலிகளுக்கு ஒரே காலகட்டத்தில் ஒரே இடத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இத்தகவல் ஆதாரபூர்வமாக நூலில் பதிவு செய்யப்பட்டும் உள்ளது.

உலகின் பல பாகங்களிலிருந்தும் நாடற்ற யூதர்கள் கப்பலில் கொண்டு வந்து பாலஸ்தீனத்தில் இறக்கப்பட்ட பாணியில் இதனையொத்த ஒரு முயற்சியை லண்டனில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் மேற்கொண்டனர். அதுவே ‘வணங்கா மண்’ கப்பல் பயணம். இதனை ஆரம்பித்தவர்களில் காலாநிதி நித்தியானந்தனும் ஒருவர். இவர்களின் முட்டாள்தனம் கப்பல் ஏற்பாடு செய்யப்பட்ட தினங்களிலேயே கைவிடப்பட்டு நபர்கள் பயணிப்பதில்லை என்றும் பொருட்களை ஏற்றிச் செல்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இக்கப்பல் பல மாத இழுபறியின் பின் கொழும்புத் துறைமுகத்தையடைந்து கொண்டு சென்ற பொருட்கள் பழுதடைந்த நிலையில் குப்பையாகக் கொட்டப்பட்டது வரலாறு.

பாலஸ்தின – இஸ்ரேல் யுத்தத்தின் உயிரிழப்புகளும் காயப்பட்டவர்களும் கடத்திச் செல்லப்பட்டவர்களும் இச்செய்தி எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் போதே அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இரும்புக் கரம் கொண்டு இராணுவ தாங்கிகளைக் கொண்டு அடக்கி, நவீன தொழில்நுட்பத்தையும், புலனாய்வையும் கொண்டு ஒடுக்கி ஆள முடியாது என்பதை பாலஸ்தினிய விடுதலை போராளிகள் நிரூபித்துள்ளனர். பாலஸ்தினியர்களுடைய பிரச்சினையின் வேரை அறிந்து அவர்களுடைய சுயாட்சியை உறுதிப்படுத்துவதைத் தவிர இஸ்ரேல் சுமூகமாக வாழ்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை இஸ்ரேலியர்களும் இஸ்ரேலும் உணர்ந்து கொள்வது தவிர்க்க முடியாது. இத்தாக்குதல்களுக்கு பழிவாங்க இஸ்ரேல் பல ஆயிரம் பாலஸ்தீனியர்களைப் படுகொலை செய்யலாம். ஆனால் அவை இப்பிரச்சினைக்கு தீர்வு அல்ல. இஸ்ரேலின் சமாதானத்துக்கு பாலஸ்தினியர்களின் சுயாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். பாலஸ்தீனம் தனிநாடாக வேண்டும்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தருஷி கருணாரத்னவுக்கு 10 மில்லியன் ரூபா பரிசு – இலங்கை கிரிக்கெட் சபை

19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற தருஷி கருணாரத்னவுக்கு 10 மில்லியன் ரூபாயை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

19 வயதான அவர், சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் கான்டினென்டல் மல்டி ஸ்போர்ட்ஸ் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் தோற்றத்தை 2.03.20 நிமிடங்களில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

21 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டிற்காக முதல் ஆசிய விளையாட்டு தடகள தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்த தருஷி கருணாரத்னவுக்கு கிரிகெட் சபை பாராட்டு தெரிவித்துள்ளது.

தருஷி கருணாரத்ன 2019 ஆம் ஆண்டு அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் 400 மீற்றர் மற்றும் 800 மீற்றர் போட்டிகள் இரண்டிலும் தங்கப் பதக்கம் வென்றார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக மீண்டும் தசுன்!

2023 சர்வதேச உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக மீண்டும் தசுன் ஷானக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (புதன்கிழமை) இலங்கை கிரிக்கெட் சபையில் நடைபெற்ற தெரிவு குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

2021 இல், இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பெரிய, கடுமையான தோல்விகளுக்குப் பிறகு, இலங்கை அணியின் தலைமை தசுன் சானகவிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

தசுன் சானகவின் தலைமையின் கீழ், இலங்கை அணி அண்மைய மாதங்களில் ஒருநாள் போட்டிகளில் முன்னேற்றத்தை காட்டியிருந்தன.

 

இருப்பினும் இந்தியாவுக்கு எதிரான ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் பாரிய தோல்வியை சந்தித்தமையால் நிலையில் தசுன் சானகவின் தலைமைத்துவம் குறித்து கேள்வியெழுப்பட்டுவந்தது.

 

இந்நிலையில் எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் தலைவராக தசுன் சானக இருக்க வேண்டும். தசுன் சானக மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்று அணியில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியவர் என்று  இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கா கருத்து தெரிவித்திருந்தமையும் கவனிக்கத்தக்கது.

ஆட்டநாயகன் விருதுக்காக கிடைத்த $5000 டொலர்களை இலங்கை மைதான பணியாளர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய சிராஜ் !

10 விக்கெட்டுக்களால் அபார வெற்றிபெற்ற இந்திய அணிஆசிய கிண்ணத்தை தனதாக்கி கொண்டது.

51 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி ஏழாவது ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் களமிறங்கிய இஷான் கிஷான் 23 மற்றும் சுப்பமன் கில் 27 ஓட்டங்களை எடுத்தனர்.

ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இலங்கை அணி 50 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

 

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் மளமளவென விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

அதிலும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் பந்துவீச்சில் அனல் பறந்தது.இதனால் அடுத்தடுத்து இலங்கை விக்கெட்டுக்கள் சரிந்தன.

இறுதியில் 15.2 ஓவர்களில் 50 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

 

இலங்கை அணி சார்பாக குசல் மென்டிஸ்17,துசன் ஹேமந்த ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்களைப்பெற்றனர்.ஏனைய அனைவரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

பந்து வீச்சில் இந்திய அணி சர்பாக சிராஜ் 6 விக்கெட்டுகளையும் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் பும்ரா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதேவேளை போட்டியில் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்ற மொஹமத் சிராஜ் தனக்கு கிடைத்த $5000 டொலர்களை கடுமையான மழையிலும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு செயற்பட்டு மைதானத்தை துப்புரவாக்கிய  மைதானம் பணியாளர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியமையானது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உலகக் கிண்ண லீக் சுற்றுக்கான தலைசிறந்த நடுவர் பட்டியலில் குமார தர்மசேனா !

இந்தியாவில் நடைபெறும் ஆடவர் உலகக் கிண்ண லீக் சுற்றுக்கான நடுவர்களை சர்வதேச கிரிக்கெட் சபை ( ஐ.சி.சி) அறிவித்துள்ள அதேவேளை இலங்கையரான அனுபவம் மிக்க ஒருவர் பட்டியலுக்குள் இடம்பித்துள்ளார்.

ஐசிசி நடுவர்களின் எமிரேட்ஸ் எலைட் குழுவின் அனைத்து 12 பேர் மற்றும் ஐசிசி வளர்ந்து வரும் நடுவர் குழுவின் நான்கு உறுப்பினர்கள் உட்பட 16 பேர் நடுவர்களாக இருப்பார்கள்.

லோட்ஸ் மைதானத்தில் 2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு நியமிக்கப்பட்ட நான்கு நடுவர்களில் குமார தர்மசேனா, எராஸ்மஸ் , டக்கர் ஆகிய மூன்று பேர் அனுபவம் வாய்ந்த பட்டியலில் உள்ளனர் – இந்த ஆண்டு மார்ச் மாதம் எலைட் பேனலில் இருந்து விலகிய அலீம் தார் மட்டும் இல்லை.

கிறிஸ் பிரவுன், குமார் தர்மசேனா, மரைஸ் எராஸ்மஸ், கிறிஸ் கஃபனே, மைக்கேல் கோஃப், அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்பரோ, நிதின் மேனன், அஹ்சன் ராசா, பால் ரீஃபெல், ஷர்ஃபுத்தூலா இப்னே ஷெய்ட், ராட் டக்கர், அலெக்ஸ் வில்சன், ஜோல் வில்சன், ஜோல் வால்சன் மற்றும் ஜோயல் வார்ஃப்,ஜெஃப் குரோவ், ஆண்டி பைக்ராஃப்ட், ரிச்சி ரிச்சர்ட்சன் ,ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் நடுவர்களாக மட்டும் நடுவர்களாக பணியாற்றுவார்கள்.

கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவுக்கு எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியல் !

ஆட்ட நிர்ணயம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.

 

விளையாட்டு ஊழல் விசாரணைப் பிரிவின் சரணடைந்த நிலையில் அதன் அதிகாரிகளால் இன்று (06) காலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

 

அதன் பின்னர், சசித்ர சேனாநாயக்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடாவடித்தனத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வவுனியா வைத்தியசாலை ஊழியர்களும் – மேடைகளில் இலவச வைத்தியத்தை காப்போம் என பேசிக்கொண்டிருக்கும் வடமாகாண சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியும் !

அண்மைய நாட்களில் இலங்கையின் இலவச மருத்துவம் தரங்கெட்டு போய்க்கொண்டிருக்கும் துர்பாக்கிய நிலை நீடித்துக்கொண்டிருக்கும் அதேவேளையில் மக்கள் பலரும் இலவச மருத்துவத்தின் மீதான தங்களுடைய நம்பிக்கையை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் மருந்துப்பற்றாக்குறையாலும் – மருந்துப்பொருட்களின் தீவிர விலையேற்றத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களை இந்த வைத்தியசாலைகளின் நிர்வாகமும் – தாதியர்களுமாக சேர்ந்து “மரத்தால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்தாற் போல” கொடூரமாக வதைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதன் நீட்சியாகவே நேற்றையதினம் வவுனியா பொதுவைத்தியசாலையில் இடம்பெற்றுள்ள துயரமாகும். வைத்தியசாலைக்கு தமது சிசுவுக்கான சிகிச்சைக்கு சென்ற தம்பதியினரிடம் அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளார்கள் வவுனியா வைத்தியசாலை அதிகாரிகள் (மருத்துவர்கள் உட்பட) இது தொடர்பில் பாதிக்கபட்ட நபர் தனது பேஸ்புக் கணக்கில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

“04.08.2023 அன்று மாலை எமக்கு குழந்தை கிடைத்தது.

வைத்தியசாலையில் சிங்கள மொழி பேசும் Malki அல்லது Dilshaani என அழைக்கப்படும் தாதியர் ஒருவருக்கும் எமக்கும் இடையில் கடந்த 10 நாட்களாக முறுகல் நிலை ஏற்பட்டு வந்தது. அது கடந்த சனிக்கிழமை மாலை அன்று வாக்குவாதமாக மாறியது. நான் அவருடைய பெயரைக் கேட்ட போது அவர் கூறிவிட்டு பின்னர் என்னை மீண்டும் அழைத்து கடும் உரத்த தொனியில் என்னுடைய பெயர் உங்களுக்கு எதற்கு எனக் கேட்க நான் உங்களைப் பற்றிய முறைப்பாடு மேற்கொள்ள வேண்டும் என்று கூறினேன்.

அதற்கு அதிக கோபம் அடைந்த அந்த தாதியர் மருத்துவ சிட்டையை முடிவுறுத்தி எங்களை வைத்திய சாலையை விட்டு வெளியேறுமாறு கூற நான் அதற்கு இது அரச மருத்துவமனை உங்களுக்கு அதனை கூற உரிமை இல்லை. நாங்கள் இருவரும் அரச உத்தியோகத்தர்கள் தான் எங்களுக்கும் சட்டங்கள் தெரியும் எனக் கூறி விட்டு நான் வீடு திரும்பிகொண்டிருந்தேன். இதனை பெரிசுபடுத்தவில்லை. ஏனெனில் எனது குழந்தை அந்த தாதியரின் கீழ் சிகிச்சை பெற்று வருவதால்….

சுமார் 15 நிமிடங்களின் பின்னர் நான் தாண்டிக்குளத்தை அண்மித்த பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எனது மனைவியார் அழைப்பு எடுத்து 7th Ward இல் உள்ள தலைமைத் தாதியர் அங்கு வந்து நான் சொன்னால் தான் இங்கு உள்ள தாதியர்கள் உங்கள் பிள்ளைக்கு மருத்துவம் செய்வார்கள். உங்கள் கணவர் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அதனால் நாங்கள் செய்ய மாட்டோம் எனக் கூறினாராம்.

அத்துடன் அந்த நேரத்தில் குழந்தை பகுதி 7th Ward இல் கடமையில் இருந்த வைத்தியர் அஸ்ரா (Training period உள்ளவர்) மனைவியை அழைத்து உங்கள் கணவரை எங்களிடம் மன்னிப்பு கேட்க சொல்லுங்கள் இல்லை எனில் நாங்கள் உங்கள் குழந்தைக்கு மருத்துவம் பார்க்க மாட்டோம் எனக் கூறினாராம்.

நான் உடனடியாக மீண்டும் மருத்துவமனை சென்று 7 ஆம் விடுதிக்கு பொறுப்பான VP Doctor இடம் முறையிட்ட போது அவர் உடனடியாக வைத்திய சாலையில் Director அவர்களுக்கு தெரியப்படுத்த அவரும் உடனடியாக அங்கு வந்து நடந்தைக் கேட்டார். எனக்கும் அவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

அதன் பின்னர் நான் உங்களால் எப்படி மருத்துவம் பார்க்க முடியாது இது அரச மருத்துவமனை நீங்கள் அப்படி கூற முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் எனது குழந்தைக்கு சேவை வழங்காத இந்த மருத்துவமனையிலும், உங்கள் தாதியர் இடத்திலும் எனது 10 நாட்களான பச்சிளம் குழந்தையை விட்டு செல்ல எனக்கு நம்பக தன்மை இல்லை.

நீங்கள் தானே சேவை வழங்க மாட்டீர்கள் எனக் கூறினீர்கள் ஆகவே எனக்கு லாமா முறை அடிப்படையில் எனது குழந்தையை விடுவித்து தருமாறு Director அவர்களை கேட்டுக் கொண்டேன்.

அதனை ஏற்றுக் கொண்ட அவர் தாதியர்களிடமும், வைத்தியர் அஸ்ரா அவர்களிடமும் உடனடியாக அவர்களை விடுவிக்குமாறு கூறினார். அதன் பின்னர் லாமா படிவத்தில் எனது மனைவியார் 12.08.2023 இரவு 10.28 மணிக்கு கையொப்பமிட்டார். அதன் பின்னர் குழந்தையின் மருத்துவ படிவங்களை கோரிய போது இந்த நேரத்தில் இந்த வேலை தங்களுக்கு செய்ய முடியாது அதற்கான நேரம் வரும் போது மாத்திரமே நாங்கள் அதை செய்வோம் என உரத்த தொனியில் மிகவும் கடுமையாக கூறினார்கள்.

மீண்டும் நான் Director அவர்களின் அலுவலகத்திற்கு சென்ற போது அது மூடப்பட்டு இருந்தது. பின்னர் அவருக்கு வேறு ஒரு வழியாக தொலைபேசி ஊடாக கதைத்தபோது தான் Off இல் சென்றுவிட்டேன் எனக் கூறினார். பின்னர் நான் மீண்டும் 7 ஆம் விடுதிக்கு வந்து தொலேபேசி ஊடாக வைத்தியர்களை தொடர்பு கொள்ள பல முயற்சிகள் செய்தும் பலன் கிடைக்கவில்லை. ஏனெனில் நேரம் நள்ளிரவு 12 மணியை கடந்திருந்தது. தாதியர்களும் 10 நாட்களான பச்சிளம் குழந்தை என்று கூட பார்க்காமல் தங்களது அதிகாரத்தை கைவரிசையாக வைத்து எங்களை பழிவாங்கினார்கள். அவர்களது சேவை துஸ்பிரயோகமே இது.

வைத்தியசாலையின் தலமை அதிகாரி கூறியும் அதை கொஞ்சம் கூட மதிக்காமல் தமது வைத்திய மற்றும் அரச சேவையை துஷ்பிரயோகம் செய்தனர். சற்று கூட இரக்கம் அற்ற பெண்கள் தாய்மையின் வலியை அறியாத ஓர் பிறப்புகளாக கூட இருக்கலாம்.

நீண்ட நேரமாக முயற்சிகள் செய்து ஏதும் பலன் அளிக்காமல் போய் அவ்விடத்தில் தந்தையாகவும், ஓர் அரச உத்தியோகத்தராகவும் தோற்றுபோய் நின்றிருந்தேன். அப்போது நேரம் 13.08.2023 அதிகாலை 2 மணி ஆகிவிட்டது. அப்போது மகப்பேறு விடுதியில் கடமையில் இருந்த சகோதர மொழி பேசும் வைத்தியர் (எனது மனைவிக்கு அறுவைச் சிகிச்சை செய்தவர்) எல்லா வழிகளிலும் தோற்று போய் நின்ற என்னைத் தேற்றி நீங்கள் நம்பிக்கையுடன் வீடு செல்லுங்கள் உங்கள் குழந்தைக்கு நான் பொறுப்பு என என்னிடம் சத்தியம் கூறினார். அவருடைய நம்பிக்கையில் மனைவிக்கும் ஆறுதல் கூறி விட்டு நான் வீடு திரும்பினேன். அந்த உயர்ந்த வைத்தியரிடம் உள்ள இரக்க குணம் கூட அந்த ஈனர் தாதியரிடம் இல்லை.

அதன் பின்னர் மீண்டும் காலை 6 மணிக்கு மீண்டும் வைத்தியசாலை வந்து மனைவியை பார்வையிட்ட பின்னர் 7 ஆம் விடுதிக்கு அந்த வேளையில் கடமையில் இருந்த வைத்தியரிடம் முறையிட்டேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டு மீண்டும் தாதியர்களிடம் அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பணித்தார். ஆனாலும் அவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை.

சற்று நேரத்தின் பின்னர் அந்த விடுதிக்கு பொறுப்பான VOG Doctor Kunawardena Sir அவர்கள் அங்கு கடமைக்கு சமுகமளித்தார் நான் அவரிடம் இது பற்றி முறையிட்ட போது நான் அவர்களுக்கு கட்டளை இட்டிருக்கின்றேன் இப்போது உங்களுக்கு விடுவித்தல் பத்திரம் கிடைக்கும் நீங்கள் செல்லாம் என பணிவுடன் கூறினார். அப்போது நேரம் 9.30 மணி

மீண்டும் காத்து கொண்டு இருந்தேன். எந்த வித முடிவுகளும் இல்லை. மகப்பேறு விடுதி என்பதால் பார்வை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் ஆண்கள் உள்ளே செல்ல முடியாது.

ஆத்திரம் அடைந்த நான் வைத்திய சாலையின் Director இடம் சென்று எனது மனைவியார் கடந்த இரவு 10.28 pm இற்கு லாமாவில் கையொப்பம் இட்டார் ஆனால் தாதியர்கள் இன்னும் அவர்களை விடுவிக்கவில்லை எனக் கூறினேன். அதற்கு உடனடியாக அவர் அந்த விடுதிக்கு அழைப்பு எடுத்து அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பணித்தார்.

ஆனால் எந்த விடுவிப்புகளும் இடம் பெறவில்லை.

இவ்வாறு வெளியில் மணிக்கணக்காக காத்திருந்த போது நேரம் 12 மணி ஆகி இருந்தது அடுத்த பார்வை நேரமும் வந்தது. அப்போது அங்கு கடமைக்காக பிரசன்னமாகி இருந்த குழந்தை பிரிவுக்கான VP Doctor Ranjith Sir அவர்களிடம் மீண்டும் முறையிட்ட போது நான் உங்களை நேற்று இரவு விடுவிக்குமாறு தாதியர்களுக்கு பணித்தேன் எனக் கூறினார். மீண்டும் அவர் அவர்கள் காலதாமதம் இன்றி உடனடியாக விடுவிக்குமாறு பணித்தார்.

ஆனால் பிற்பகல் இரண்டு மணியாகியும் எந்த விடுவிப்புகளும் இடம் பெற வில்லை. மிகவும் ஆத்திரம் அடைந்த நான் மீண்டும் Director இடம் சென்றேன் அங்கு அவர் இல்லை. அங்கு கடமையில் இருந்த மற்றுமொரு பதவிநிலை உத்தியோகத்தர் இடம் சென்று விடையத்தை கூறி நான் Director ஐ சந்திக்க வேண்டும் என கூற அந்த உத்தியோகத்தர் தொலைபேசி ஊடாக அவரை தொடர்பு கொண்டு விடையத்தை கூறினார். அதற்கு Director 10 நிமிடத்தில் உங்களை விடுவிக்கிறேன் என கூறினார். மீண்டும் நான் விடுதிக்கு வரும் போது குழந்தை பிரிவுக்கான VP அவர்களும் விரைவாக விடுதிக்கு வந்தார் அதன் பின்னரே மாலை 3 மணிக்கே எங்களை விடுவித்தார்கள்.

குழந்தைக்கு infection இருந்ததால் Antibiotics ஊசி தினமும் மூன்று முறை வழங்கப்பட்டு கொண்டு இருந்தது. அந்த தாதியர்கள் 2 மணிக்கு வழங்க வேண்டிய ஊசி வழங்கவில்லை. மாறாக நான் வைத்தியரை வேண்டிநின்ற போது 2.50 மணிக்கே ஊசி வழங்கினர்.

அத்துடன் அங்கு மதிய நேர மருந்து வில்லைகள் மனைவிக்கு வழங்காமல் புறக்கணித்தனர். இது ஒரு மிகவும் கேவலமான சேவை துஸ்பிரயோகம் அவர்களது சேவை சத்திய பிரமாணம் எங்கே போனது இதுவா உங்கள் உயிரைக் காப்பாற்றும் மருத்துவ சேவை?10. நாளான பச்சிளம் குழந்தைக்கு செய்யும் வேலையா இது நீங்கள் எல்லாம் ஓர் பெண்களா? உங்களுக்கு தாய்மை உணர்வு இல்லையா? ஈனப்பிறவிகளா நீங்கள்? உங்களை என்ன வார்த்தைகளை கொண்டு அழைப்பது என எனக்கு தெரியவில்லை…..

விடுதிக்கு பொறுப்பான வைத்தியர்,

VOG

VP

Director என பல வைத்திய அதிகாரிகள் கட்டளை இட்டும் கொஞ்சம் கூட செவி சாய்காத தாதியர்கள்.

உங்கள் மருத்துவமனையின் நிர்வாக கட்டமைப்புகள் தான் என்ன? உங்கள் பணிப்புக்கு கட்டுப்படாதவர்களுக்கு என்ன ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தீர்கள்?

தாதியர்கள் என்ன வைத்தியர்களை விட பெரியவர்களா? எவ்வளவு படித்த வைத்தியர் இவ்வாறு கண்ணியமாக எவ்வளவு பணிவுடன் பொறுப்பாக கதைக்கிறார்கள். இந்த அரைவேக்காடு சில்லறைகள் போடும் கூத்துக்கள் தான் இங்கு பெரியதாக இருக்கிறது.

உங்கள் மருத்துவமனையின் Quality Management System தொடர்பான ஆய்வுகள் யாவும் பொய்த்து தான் போகும்.

உங்கள் Vision and Mission களை எப்படி நீங்கள் அடைய முடியும்?

அந்த இலக்குகளை நோக்கி இந்த தாதியர்களைக் கொண்டு எவ்வாறு பயணிக்க முடியும்?

ஒன்றுக்கும் விடைகள் கிடையாது….

சக மனிதர்களை மனிதர்களாக மதிக்காத ஒர் நாடு நம் நாடு தான்……

இன்னும் பல சகிக்க முடியாத கசப்பான சம்பவங்கள் பல இருக்கின்றன. அதை எல்லாம் ஏழுத பல நாட்கள் எடுக்கும்.” என.

குறித்த பதிவின் முகநூல் இணைப்பு https://www.facebook.com/balasubramaniampavithan

மேற்குறித்த பதிவை எழுதியவர் ஒரு அசர அதிகாரியாவார் . ஒரு அரச அதிகாரியே இலங்கையின் இலவச சேவையை நுகர்வதில் இவ்வளவு தடை இருக்குமாயின் இலங்கையில் வைத்தியசாலைகளில் மருத்துவத்திற்காக செல்லும் பாமரமக்களின் நிலை இன்னமும் மோசமானதாகவே இருக்கும் என எண்ணத்தோன்றுகிறது. மேலும் வவுனியா வைத்திஜயசாலையில் நடைபெறும் அடாவடிதட்தனம் தொடர்பில் பலரும் சமூக வலைத்தளங்களில் தமது அனுபவங்களையும் எழுத ஆரம்பித்துள்ளனர் .

அண்மையில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் ஒரே வாரத்தில் பிறந்த ஐந்து சிசுக்கள் வைத்திய பராமரிப்பு இன்றி இறந்த சம்பவமும் நாம் அறிந்தததே. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தந்தை ஒருவர் நீதிக்காக போராடிய போதும் கிளிநொச்சி வைத்தியசாலை அவரை அட்டையை தூக்கி வீசுவது போல கவனத்தில் எடுக்காது விட்டுவிட்டது.

இதனைப்போலவே முல்லைத்தீவு மாவட்டபொது வைத்தியசாலையில் கடந்த 21.05.2023 அன்று சத்திர சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்த கருநாட்டுக்கேணியைச் சேர்ந்த 34 வயது பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

இலங்கை மருத்துவ சங்கமோ – இலங்கை சுகாதார அமைச்சோ நேரடியாக தலையிட்டு இந்த மருத்துவத்துறையை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த துர்பாக்கியமான மருத்துவ சூழல் பற்றி பேசவவேண்டிய நாடாளுமன்ற அரசியல் தலைமைகள் பாராளுமன்றத்தில் இராவணன் தமிழனா..? சிங்களவனா ..? என பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இது பற்றி தீவிர கவனம் செலுத்த வேண்டிய வடமாகாண சுகாதார பணிப்பாளர் கலாநிதி த. சத்தியமூர்த்தி இன்னமும் செயற்படவே ஆரம்பிக்கவில்லை. பாவம் அவரும் யாழ்ப்பாணம் மட்டுமே தனது பகுதி என ஓய்வெடுத்துவிட்டார் போல. யாழப்பாணத்து முருத்துவத்தை கண்காணிப்பதிலுள்ள அதே அக்கறை அவரிடம் ஏனைய பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளை கவனிப்பதிலும் இருக்கவேண்டும். ஆனால் அவர் கூட்டங்களில் கலந்து கொண்டு “வைத்தியர்கள் நம்நாட்டின் கண்கள். இலவச மருத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.” என பேசுவதுடன் சரி. அந்த இலவச மருத்துவத்தை தூக்கி நிறுத்த – நியாயமானதாக மக்களுக்கு வழங்க அவர் எதுவித நடவடிக்கைகளையுமே எடுக்கவில்லை என்பதே உண்மை. இந்த விடயத்திலும் அதுதான் நீடிக்கும் என தோன்றுகிறது.

இலங்கையில் இன்னமும் மக்கள் தன்னம்பிக்கையுடன் நகர்வதற்கு இலவசமாக கிடைக்கும் கல்வியும் – இலவசமாக கிடைக்கும் மருதா்துவமுமே காரணமாகும். அதை முறையாக மக்களுக்கு வழங்க வேண்டிய தேவை அனைத்து சுகாதார துறை ஊழியர்களுக்கும் உண்டு. மக்களின் வரிப்பணத்தில் இலவசமாக படித்துவிட்டு – மக்களின் வரிப்பணத்தில் மாத சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் வைத்தியசாலை நிர்வாகிகளும் – ஊழியர்களும் மக்களுக்கு சேவை செய்வதற்கு மட்டும் ஏன் இத்தனை அவதானமின்மையுடனும் – அடாவடித்தனத்துடனும் நடக்கிறார்கள் எனத்தெரியவில்லை.

அண்மைய நாட்களில் இலங்கையின் இலவச மருத்துவம் தொடர்பிலும் அது தரங்கெட்டு போய்க்கொண்டிருப்பது தொடர்பிலும் தேசம் இணையதளம் தொடர்ச்சியான பல தகவல்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றது.

போலிச் சாமியார் ஓம் சரவணபவாவுக்கு முண்டுகொடுக்கவில்லை! – தனிமனிதர்களின் நம்பிக்கைகளுக்கு நிறுவனங்கள் பொறுப்பல்ல

வர்த்தக ரீதியில் தென்னிந்திய சினிமாவை கட்டுப்படுத்தும் நிலைக்கு உயர்ந்துள்ள லைக்காமோபைல் நிறுவனத்துக்கு எதிரான தீவிர செய்திப் பிரச்சாரங்கள் தமிழகத்தில் முடக்கிவிடப்பட்டுள்ளது. அதன் எதிரொலிகள் புலம்பெயர் தேசங்களிலும் கேட்கின்றது. “லைக்காமோபைல் நிறுவனத்துக்கும் போலிச் சாமியார் ஓம் சரவணபவவிற்கும் எவ்விதமான அமைப்பு ரீதியான தொடர்புகளும் கிடையாது. வியாபார ரீதியாக லைக்காவுக்கு ஓம் சரவணபவவினால் எவ்வித நன்மையும் கிடையாது. ஓம் சரவணபவவுடன் கறுப்பு பணத்தைக் கூட வெள்ளையாக்க முடியாது. லைக்காவின் நிதிப் புரள்வோடு ஒப்பிடுகையில் ஓம் சரவணபவவின் அறக்கட்டளைக் கணக்கு ஒரு பொருட்டானதேயல்ல.
சமூக வலைத்தளங்களில் போலிச் சாமியார் எப்படி லைக்காவுடன் பேசப்பட்டார்?
லைக்காமோபைல் நிறுவனத்தின் துணை நிறைவேற்று பொறுப்பாளரான பிரேம் என்றழைக்கப்படும் பிரேமநாதன் சிவசாமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்காகப் போராடிய காலகட்டத்தில் பிரேமின் நண்பர்களால் முரளிகிருஸ்ணன் புலிக்கள் பிரேமுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக பிரேமின் குடும்ப நண்பர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். பிரேமின் வீட்டினுள் ஓம் சரவணபவ நுழைந்தார். பிரேம் யார் என்பதையும் பிரேமின் நோயையும் நன்கு அறிந்து வைத்திருந்த ஓம் சரவணபவ திறம்பட தனது காய்களை நகர்த்தி ஆடினார். சுவாமி தனது வித்தைகளை செவ்வனே பயன்படுத்தி பிரேம் குடும்பத்தை குறிப்பாக பிரேமின் மனைவியை ஆன்மீகத்துக்குள் இழுத்தார். இத்தம்பதியர் ஹரோ ஓம் சரவணபவ ஆலயத்தில் அம்மனுக்கான ஒரு இடத்தைக் கட்டிக்கொடுத்தனர். அவர்கள் அதனைத் தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
பிரேம் ஊடாக சுபாஸ்கரனின் தொடர்பும் கிடைத்தது. சுபாஸ்கரனும் சுவாமிகளின் தீர்த்தம் பெற்றார்.
அதேசமயம் என்புமச்சை சிகிச்சை மூலம் பிரேம் நோயில் இருந்து குணமடைந்தார். இருந்தாலும் நோய்வாய்ப்பட்ட காலத்தில் ஓம் சரவணபவ தலையிட்டதால் அன்று அவர் காட்டிய பரிவான கரிசனைக்கு பிரேம் தம்பதியர் நன்றியுடையவர்களாக உள்ளனர். ஓம் சரவணபவ என்ற இந்த முரளிகிருஸ்ணன் புலிக்கள் இவ்வாறான பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள செல்வந்தர்களை அணுகி அவர்களை வென்றெடுப்பதில் பெரும் கில்லாடி. அந்த வலையில் வீழந்துள்ளதே தெரியாமல் உள்ள பல நூற்றுக்கணக்கானோரில் பிரேம் தம்பதியினரும் அடங்குகின்றனர்.
இது தொடர்பாக இவ்வழக்கோடு தொடர்புடைய சட்டவல்லுநர் ஒருவர் கூறுகையில், பிரேம் தம்பதியினரின் நிலையைத் தன்னால் உணரக்கூடியதாக இருப்பதாகத் தெரிவித்தர். தானும் இவ்வாறு ஓம் சரவணபவவின் கரிசனையில் மயங்கி பல்லாயிரம் பவுண்களை இழந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
பிரேமின் குடும்ப நண்பர் மேலும் தெரிவிக்கையில், பிரேமின் மனைவி இப்போதும் அந்த ஆலயத்துக்குச் சென்று தாங்கள் கட்டிய அம்மன் சன்னிதானத்தில் அமைதியாக இருந்து கும்பிட்டு வருகின்றார். இந்த தனிமனித நம்பிக்கைகள், பலவீனங்கள் ஒவ்வொரு மனிதர்களிடமும் உண்டு என அவர் தெரிவித்தார்.
இதன் பின்னணியிலேயே லைக்காமோபைல் நிறுவனத்தை ஓம் சரவணபவவுடன் தொடர்புபடுத்தி தங்கள் வியாபாரப் போட்டிகளுக்காகச் செய்வதாக அந்நிறுவனத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
லைக்காமோபைல் ஒன்றும் சுத்தமான சுவாமிப்பிள்ளைகள் கிடையாது. கூகிள், ஸ்ரார்பக், டொனால்ட் ரம் போல் வரிசெலுத்தாமல் டிமிக்கி விகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இவர்கள் மீது நீண்டகாலமாகவே உள்ளது. மேலும் தமிழ் கோப்பிரேட் நிறுவனமான லைக்காமோபைல் ஏனைய கோப்பிரேட் நிறுவனங்கள் போன்று லாபத்திற்காக எதனையும் தியாகம் செய்ய தயாராக இருப்பவர்களாகவே உள்ளனர். ஆனால் ஓம் சரவணபவவின் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்கும் லைக்காமோபைல் நிறுவனத்துக்கும் தொடர்புகளும் கிடையாது எனத் தெரியவருகின்றது.
இவ்விடயம் தொடர்பாக பிரேம் சிவசாமியிடம் கேள்வி எழுப்பிய போது: “ஓம் சரவணபவ – முரளிகிருஸ்ணன் புலிக்கள் குற்றவாளியா இல்லையா என்பதை பிரித்தானியாவின் சட்டத்திடமே விட்டுவிடுவோம். நானோ எனது நிறுவனமோ அவரைக் காப்பாற்ற எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. அவருக்கு எவ்வித சட்ட உதவிகளையும் செய்து கொடுக்கவில்லை” எனத் தெரிவித்தார். “அவர் குற்றம் செய்திருந்தால் அவரை இந்நாட்டு நீதிமன்றம் தண்டிக்கும்” என்றும் தெரிவித்தார். பிரேம் தேசம்நெற்க்கு மேலும் தெரிவிக்கையில் ஓம் சரவணபவ ரஸ்டிகளிடமே ஒரு மில்லியனுக்கும் அதிகமான நிதியுள்ளது. அவர்களுக்கு நான் சட்ட உதிவியோ நிதியுதவியோ செய்ய வேண்டியதில்லை” என்றும் தெரிவித்தார்.
பிரேம் மேலும் குறிப்பிடுகையில் “தேசம்நெற் இல் வெளியான சில தகவல்கள் தவறானது என்றும் எழுத்தமைப்பு ஆரோக்கியமானதாக அமையவில்லை” என்றும் தெரிவித்தார்.
ஓம் சரவணபவவுக்கு எதிராக பாலியல் வல்லுறவு, பாலியல் பலாத்காரம், பாலியல் துஸ்பிரயோகம் ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு பெண்கள் ஓம் சரவணபவவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்ததைத் தொடர்ந்து லண்டனில் உள்ள தமிழர்கள் ஓம் சரவணபவவுக்கு எதிராகவும் சார்பாகவும் பிளவடைந்துள்ளனர்.
இவ்வழக்கு டிசதம்பர் 5 முதல் ஒரு வாரத்திற்கு நடைபெறவுள்ளது. அதுவரை ஓம் சரவணபவவிற்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. ஓம் சரவணபவ தன்னை பிணையில் விடுவிக்கக்கோரி மேற்கொண்ட விண்ணப்பம் யூலை 24 இல் விசாரணைக்கு வருகின்றது.

பணம் – பக்தி – பாலியல்: ஓம் சரவணபவ! பல மில்லியன் பவுண்கள் என்ன ஆகும்? சமூக வலைத்தளங்களில் முறைப்பாடு செய்யப்பட்டு நீக்கப்பட்ட செய்தியின் எழுத்துரு!

‘ஓம் சரவணபவ’ என்ற லண்டன் மதக்குழுமத்தைப் பற்றிய தேசம்திரை வெளியிட்ட காணொலியை ஓம் சரவணபவவும் அவர்களுக்கு துணைபோகும் வர்த்தக நிறுவனமும் (நிறுவனங்களும்) சேர்ந்து முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இரு தடவைகள் காணொலியை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கி உள்ளனர். அக்காணொலியின் எழுத்து வடிவவே இது. சில ஆண்டுகளுக்கு முன் இதே பாணயில் லண்டனில் வெளியான தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார ஊடகமான ‘ஒரு பேப்பர்’ லைக்கா நிறுவனரை விமர்சித்ததற்காக அதன் பிரதிகள் கடைகளில் இருந்து எடுக்கப்பட்டு எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ‘ஆதவன் தொலைக்காட்சி’ நடாத்தி வரும் லைக்கா நிறுவனமும் அதன் ஸ்தாபகரும் ஊடகங்களுக்கு எதிராகந் நடந்துகொண்டதோடு ஓரு பேப்பர் ஊடகவியலாளரையும் மிரட்டி இருந்தனர். தற்போது ஓம் சரவணகவ பற்றிய செய்திகளை தேசம்திரை வெளியிட்டதையடுத்து அச்செய்தியை வெளியிடாமல் தடுப்பதில் மக்கள் விரோத பாலியல் குற்றங்களுக்கு துணைபோவோர் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உண்மைகள் உறங்குவதில்லை என்ற தாரக மந்திரத்தோடு இயங்கும் தேசம்நெற் இவ்வாறான பூச்சாண்டிகளுக்கு அஞ்சப் போவதில்லை எனத் தெரிவிக்கின்றது. உண்மையே நிலைக்கும் என்று அவர்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர்.

சமூக வலைத்தளத்திலிருந்து மக்கள் விரோத பாலியல் குற்றங்களுக்கு துணைபோகும் வியாபார நிறுவனம் அல்லது நிறுவனங்களால் நீக்கப்பட்ட ஓம் சரவணபவ பற்றிய செய்தியின் எழுத்து வடிவம்:

இன்றைய பொருளாதாரக் கொள்கைகளை இரு நுறு ஆண்டுகளுக்கு முன் விமர்சித்து, அதற்குத் துணைபோகின்ற ‘மதம் ஒரு அபின்’ என்றவர் அரசியல் பொருளாதாரச் சிந்தனையாளர் கார்ள் மார்க்ஸ். வறுமை – பக்தி – பட்டினியில் கிடந்தால் யேசுவைச் சந்திக்கலாம் என்று போதித்த கென்ய மதக் குழுத் தலைவர் போல் மக்கன்சி ன்தன்கே பல நூறு ஏழைகளை பட்டினி இருந்து சாவதற்குக் காரணமானார். இவ்வாண்டு ஏப்ரல் மாதம் பிற்பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது பிணை மறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார். பொருளாதார வளர்ச்சியற்ற கல்வியில் வறுமைப்பட்ட சமூகத்தில் இவ்வாறான சம்பவங்கள் எதிர்பார்க்கக் கூடியதே.

ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக, பணம் – பக்தி – படுக்கையில் கடவுளை (தன்னை)ச் சந்திக்கச் சொன்னார் லோக்கல் (local) முருகக் கடவுள் ஓம் சரவணபவ என்று அறியப்பட்ட முரளிகிருஸ்ணன் புலிக்கள் (புலிக்கள் தெற்கு ஆசியாவில் பொதுவான ஒரு குடும்பப் பெயர்). இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றது லண்டனில் செழிப்பான செல்வந்தர்கள் மிக்க மேற்கு லண்டன் உள்ளாட்சிப் பிரிவுகளில். பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட ஓம் சரவணபவ, பிணை மறுக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 5இல் ஆரம்பிக்கப்படும் வழக்கின் முடிவு வரை தடுத்து சிறை வைக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த ஓம் சரவணபவ?

இந்திய கேரள மாநிலத்தின் பாலக்காட்டைச் சேர்ந்த முரளிகிருஸ்ணன் புலிக்கள் என்பவர் லண்டனில் ஓம் சரவணபவ என்றொரு மதக்குழுமத்தை உருவாக்கி உள்ளார். 1979 மே மாதம் பிறந்த, தற்போது 45 வயதுடைய முரளிகிருஸ்ணன் புலிக்கள் 2009இல் லண்டன் வந்து தன்னுடைய மதக்குழுமத்தை லண்டனிலும் ஸ்தாபித்துள்ளார். அதற்கு முன்னரேயே தென்னிந்தியாவில் இவர் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டு துரத்தப்பட்டவர். இவர் லண்டனில் இருந்து கொண்டு இந்தியாவில் கடவுச்சீட்டு தொடர்பில் போட்ட விண்ணப்பத்திற்கு எதிராக கேரளா நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. அதற்குக் காரணம் கேரளா பொலிஸ் பிரிவில் முடிவடையாத கிரிமினல் வழக்கு ஒன்று இவருக்கு உள்ளது. இந்தப் பின்னணியில் தற்போது ‘விஸிற்றர் விசாவில் – visitor visa’ லண்டனில் வாழும் முரளிகிருஸ்ணனுக்கு பிரித்தானிய உள்துறை அமைச்சும் விசா மறுத்து இருந்தது. ஆனால் லண்டனில் அவரைச் சுற்றியிருந்த செல்வந்தர்களின் அணைவால் அவர் விசாவைப் புதுப்பித்துக் கொண்டு இருந்தார்.

யார் இவரை லண்டனில் காலூன்றச் செய்தது?

பாலியல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு துரத்தப்பட்ட ‘ஜீலேபிசாமி ‘ என்று அறியப்பட்ட முரளிகிருஸ்ணனுக்கு அடைக்கலம் வாழங்கியவர் பிற்காலங்களில் தேவா அம்மா ஆகிய தெய்வதீஸ்வரி செல்வேந்திரன். தெய்வதீஸ்வரியின் முன்னாள் கணவர் கிழக்கு லண்டனில் பெற்றோல் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர். பணவசதி உள்ளவர். ஹரோவில் ஒரு ப்ரன்சைஸியாக தபாலகம் ஒன்றையும் நடத்தி வருபவர். பணவசதி படைத்த தெய்வதீஸ்வரி ஜீலேபி சாமியுடைய பக்தையாகி கேரளா சென்று தரிசனம் பெற்று வருபவர். தெய்வதீஸ்வரி தற்போது விவாகரத்து ஆன போதும் இன்றும் முன்னாள் கணவர் செல்வேந்திரனின் பெயரையே பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தேவா அம்மா முரளிகிருஸ்ணனுடைய பக்தி மார்க்கத்தில் தன்னுடைய மகள் கௌசல்யாவையும் இணைத்துக்கொண்டுள்ளார். மகளின் கணவரும் இந்த மதக்குழுமத்தில் இணைந்துகொண்டார்.

இவர்களால் உருவாக்கப்பட்டது தான் ஓம் சரவணபவ சேவா ரஸ்ட். இது பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழவின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் நான்கு ரஸ்டிகள் உள்ளனர் அவர்கள்: முரளிகிருஸ்ணன் புலிக்கள் (ஓம் சரவணபவ), தெய்வதீஸ்வரி செல்வேந்திரன் (தேவா அம்மா), கௌசிகா செல்வேந்திரன் (தேவா அம்;மாவின் மகள்), பேராசிரியர் ராம்நாத் நாராணயசாமி (தேவா அம்மாவின் மருமகன்)

கோவிட் பெருநோய் காலத்தில் ஆலயங்கள் பூட்டப்பட்டு ஆலயங்களின் வருமானம் வீழ்ச்சியடையை ஓம் சரவணபவ சேவா ரஸ்டின் வருமானம் எகிறி 2021இல் ஒரு மில்லியனைத் தாண்டியது. இது உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட கணக்கு அறிக்கை. இந்த ரஸ்டின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் கணக்காளர் ஒருவர் இது பற்றிக் குறிப்பிடுகையில் இதற்குள் வராத பணம் இதனைக் காட்டிலும் பத்து மடங்கு இருக்கும் எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அதாவது பத்து மில்லியன் பவுண்கள் இந்தக் குழுமத்திடம் இருப்பதாகக் கணிப்பிட்டார்.

ஏன் ஓம் சரவணபவனிடம் செல்கின்றனர்?

ஆரம்பத்தில் யாருக்கும் ஓம் சரவணபவனுடைய பின்னணி தெரிந்திருக்கவில்லை. ஓம் சரவணபவனிடம் மற்றவர்களைக் கவருகின்ற ஒரு ஆளுமை இருப்பதாகக் குறிப்பிடுகின்றார், தனியனாக தன்னுடைய இரு விசேட தேவைகளுடைய பிள்ளைகளையும் வளர்த்து வரும் ஆன்மீக ஈடுபாடுடைய ஒருவர், அவர் மேலும் குறிப்பிடுகையில் அவர் பேச்சாற்றலுடையவராகவும் மற்றையவர்களோடு பேசுகின்ற போதே அவர்களை மதிப்பீடு செய்து பேசக்கூடியவராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இவற்றுக்கும் மேலாக எவ்வாறோ மற்றையவர்களின் மனப்பதிவுகளை வாசிக்கவும் செய்கின்றார் என்கிறார், ஓம்சரவணபவ தன்னுடைய கடந்த காலம் பற்றிக் மிகத்துல்லியமாகக் குறிப்பிட்டதாக தேசம்நெற் இடம் அவர் தெரிவித்தார். இது போன்ற காரணங்களாலும் பெரும்பாலானவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாலும் இழுத்தங்களுடன் வாழ்வதாலும் அவர் மீது ஈர்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார். தான் ஈர்க்கப்பட்டதற்கு தன்னுடைய நெருக்கடிகளும் தனக்கிருந்த அழுத்தங்களும் கூடக் காரணம் என்றவர் அவரிடம் இருந்த சில திறமைகளை அவர் மிகச் சாதுரியமாகப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தார். பல பெண்கள் அவரிடம் செல்வதற்கு அவர்கள் முகம் கொடுக்கும் குடும்ப நெருக்கடிகளும் மன அழுத்தங்களுமே காரணம் என்கிறார் அவர்.

ஏன் செல்வந்தர்கள் விட்டில் பூச்சிகளாக ஓம் சரவணபவனிடம் வீழ்ந்தனர்?

பணம், அது இல்லாதவர்களுக்கு, பணம் குறைவாக உள்ளவர்களுக்கு அதனை அடைவது அவசியமானது. அது உந்துதலைக் கொடுக்கும். அதனை அடைவது ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் பணம் படைத்தவர்களுக்கு பணம் பெருக்குவது கிளர்ச்சியையோ மகிழ்ச்சியையோ குறிப்பிடத்தக்க அளவில் ஏற்படுத்துவதில்லை. அதனால் அவர்கள் அந்தக் கிளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் வெளியே தேடுவார்கள். போதைப்பொருள் (drugs), கம்பிளிங் (gambling), சொப்பிங் (shopping), பார்டியிங் (partying) என்று அதில் ஆன்மீகமும் ஒன்று. ஆனால் இவர்கள் தங்களுக்குள்ள பண அந்தஸ்தை பயன்படுத்தியே அக்கிளர்ச்சியைத் தேடுவார்கள். அதன் மூலம் ஒரு சமூக அங்கிகாரத்தையும் அந்தஸ்தையும் விரும்புவார்கள். இந்தச் செல்வந்தர்களின் இந்தப் பலவீனத்தை ‘ஓம் சரவணபவ’ முதலீடாக்கியது. ‘ஓம் சரவணபவ’ மட்டுமல்ல சுவாமி பிரேமானந்தா, நித்தியானந்தா, மேல்மருவத்தூர் அம்மா சாமி, சற்குரு ஜக்கி முதல் ஆலயங்களில் உள்ள ஐயர்கள் வரை எல்லோரும் இந்தச் செல்வந்தர்களில் அல்லது செல்வந்தர்களாக தங்களை பாவனை செய்ய விரும்புபவர்களை இந்த ரெக்னிக்கை வைத்துத் தான் வீழ்த்துகிறார்கள்.

இதனையே ஓம் சரவணபவ மிகக் கச்சிதமாக பயன்படுத்தினார். உங்களுக்கு என்ன தெரியும் என்பது முக்கியமல்ல உங்களுக்கு யாரைத் தெரியும் என்பது தான் முக்கியம். லண்டனில் கும்பிடுவதற்கு சாமியில்லாமல் கேரளாவரை சென்று தரிசனம் பெற்ற தெய்வதீஸ்வரியை கணக்குப் பண்ணி வளைத்துப் போட்டார் ஓம் சரவணபவ. ஒரு வர்த்தகப் பிரமுகரின் மனைவியாக இருந்தவரின் நட்புவட்டம் குசெலினிகளாக இருக்க வாய்ப்பில்லை. தெய்வதீஸ்வரி ‘நான் பெற்ற இன்பம் பெறுக செல்வந்தர்காள்! என்று லண்டனில் உள்ள தமிழ் வர்த்தகப் புள்ளிகளுக்கு ஓம் சரவணபவாவை அறிமுகப்படுத்தினார். சாமியை வீட்டுக்கு அழைத்து புஜை நடத்துவது செல்வந்தக் குடும்பங்களின் மத்தியில் அவர்களின் அந்தஸ்தை உயர்த்தியது.

கிளேஹோலில் (Clayhall) நடந்த இவ்வாறான பூஜையில் ஒரு குடும்பத்தினரைக் கொண்டு இறக்கிவிட்ட ரக்ஸி றைவர் (taxi driver) தேசம்நெற் க்கு தெரிவிக்கையில் ஓம் சரவணபவவை வீட்டுக்கு அழைத்த குடும்பத்தினர் அவருக்கு 2,500 பவுண்கள் வழங்கியவையாம். அந்தப் பூஜைக்கு வந்திருந்த குடும்பங்கள் 500, 1000 பவுண்கள் என்ற வழங்கியவையாம் என்றார். அன்றைய இரு மணிநேரத்தில் ஓம் சரவணபவவின் கலெக்சன் 10,000 பவுண்கள் என்றும் தெரிவித்தார். ‘சுவாமியின்’ காலைக் கழுவிக் குடித்ததற்கு கட்டணம் 10,000 பவுண்கள்.

லண்டனின் பெரும் வர்த்தகப் புள்ளிகள் சாமியின் வலையில் வீழ்ந்தனர். லைக்கா மோபைல் நிறுவனத்தின் முக்கியஸ்தர் பிரேம், சம்பல் நிறுவனத்தின் உரிமையாளர் சுரேன், மற்றும் வர்த்தக உரிமையாளர்கள், கணக்காளர்கள், மருத்துவர்கள் என்று பணத்தை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பலர் ஓம் சரணவபவ வுக்கு ‘ஓ’ போட்டனர். அவர்களுடைய துணைவியரும் அவர்களோடு சேர்ந்து ‘ஓ’ போட்டனர். அவருடைய காலைக்கழவிக் குடித்தனர். தாங்கள் குடித்தது காணாது என்று அவரை புங்குடு தீவு, நயினா தீவு என்று இலங்கைக்கு கூட்டிச் சென்று அங்குள்ளவர்களுக்கும் குடித்துக் காட்டி அவர்களையும் அந்தக் கால் கழுவிய தண்ணியைக் குடிக்க வைத்தனர்.

எவ்வாறு ஓம் சரவணபவ நிர்வாணமானார்?

ஓம் சரவணபவ ஹரோவில் உள்ள பிரிஸ்டன் ரோட்டில் கடை விரித்தார். ஆச்சிரமம், கோயில் கட்டினார். படுக்கையும் விரித்தார்.

பக்தைகள் ஆச்சிரமத்தில் கூடிய நேரம் செலவழித்தனர். கணவன்மாருக் கதைப்பதற்கு நேரமும் பொறுமையும் இல்லை. சாமிக்கு வேலையா வெட்டியா காலை நீட்டிக்கொண்டு நல்லா கதை கேட்டார். அவர்களுக்கு கதை விட்டார். முருகப்பெருமானோடு ஐக்கியமாக்கினார் ஓம் சரவணபவ! யாமிருக்கப் பயமேன்!! சில குடும்ங்களையும் பிரித்து மேய்ந்தார் என்று தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

“களவு செய்துவிட்டு அதனைவிட்டுவிட்டால் பிடிபடுவது கஸ்டம் என்பது வர்த்கர்கள் நன்கு அறிந்த தொழில் ரகசியம். ஓம் சரவணபவவிற்கு ஓவர் கொன்பிடன். அல்லது அவரும் செல்வம் – செல்வாக்கு – செக்ஸ் என்ற போதைகளுக்கு அடிமையானார். இப்போது சாமிவேசம் குறைந்து சுயரூபம் வெளிவரத் தொடங்கியது. அவருடைய நடவடிக்கைகள் எல்லை மீறியது” என்கிறார் எட்ச்வெயரைச் சேர்ந்த ரரின் சொக்கலிங்கம்.
“மிகக் கீழானவர்களை விமர்சிக்க தமிழர்கள் ஒரு மோசமான சொல்லாடல் வைத்துள்ளனர். ‘சாப்பிட்ட கோப்பையிலேயே பேழ்கிறான்’. அது தான் ஓம் சரவணபவ மாட்டக் காரணம். பெரும்புள்ளிகளின் குடும்பங்களிலேயே, அக்குடும்பப் பெண்களிலேயே, அவர்களின் பிள்ளைகளிலேயே கை வைத்தார் ஓம் சரவணபவ. அப்போது தான் அவருக்கு ஏழரைச் சனி ஆரம்பித்தது. மற்றவர்களுக்கு நடக்கும் போது கண்டும் காணாமல் இருந்தவர்கள் தங்கள் குடும்பங்களில் என்றதும் பதறினர். அதே சமயம் தங்கள் குடும்ப உறுப்பினர்களது பெயர் வெளிவராமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

ஓம் சரவணபவாவுடன் லைக்காவுக்கு என்ன சம்பந்தம்?

ஓம் சரவணபவா பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாதவர்களின் ஆன்மீக குரு. அந்த வலையில் லைக்கா சுபாஸ்கரனின் வலது கரமான பிரேம் மற்றைய செல்வந்தர்கள் போல் வீழ்ந்தார். தன்னுடைய வீட்டுக்கும் ஓம் சரவணபவவை அழைத்து காலைக் கழுவிக்கு குடித்தார். மற்றைய செல்வந்தர்கள் போல் தன்னுடைய வங்கிக் கணக்கும் இரட்டிப்பாகும் புண்ணியம் கூரையை பிய்த்துகொண்டு வளரும் செய்த பாவம் செய்கின்ற பாவம் செய்யப் போகும் பாவம் எல்லாவற்றிலும் இருந்தும் விடுதலை கிடைக்கும் என்று மற்றவர்களைப் போல் தானும் நம்பினார். அது மட்டுமல்லா சுபாஸ்கரனும் ஓம் சரவணபவ சுவாமியை தன் வீட்டுக்கும் அழைத்து அதையே செய்தார். விஸ்கி அடித்த கூட்டம் சரவணபவனின் கால் கழுவிய தண்ணி அடித்தது.

இப்போது இந்த வழக்கு விடயத்தில் லைக்கா தொடர்ந்தும் மௌனமாகவே உள்ளது. இது பற்றி பேராசிரியர் பெக்கோ என்ற புனைப்பெயரில் எழுதிவருபவர் நகைச்சுவையாக வருமாறு குறிப்பிட்டார்: “ஓம் சரவணபவ சுவாமியின் வழக்கை சுபாஸ்கரன் சுவாமியும் பிரேம் சுவாமியும் நடத்துவதாக முன்னாள் போட்டியாளரான லெப்ரா பாஸ்கரன் சுவாமி ஐபிசி ஊடாக கசியவிடுவதாக ஒரு தகவல். லைக்காவின் அபிமானி கண்ணன் சுவமி அதிர்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதகமாக லைக்காவைக் காப்பாற்ற நாலுவரி போட ஹரோ ஜெ சுவாமி பொங்கி எழ லண்டனில் சுவாமிகளின் மோதல் உக்கிரமடைந்துவிட்டது. இதுக்குள் தேவா அம்மா இடையாள சைக்கிளோடி ஆட்டையைப் போட்டுவிட்டா என்று ஜெவாலு சாமி பீலிங்கில தண்ணி அடிக்கிறார். சுவாமியின் கால் கழுவின தண்ணியல்ல.”

அடுத்தது என்ன?

ஓம் சரவணபவனினால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறைந்தது மூவர் முரளிகிருஸ்ணன் புலிக்கள்க்கு எதிராக குற்றம்சுமத்தியுள்ளனர். பாலியல் வல்லுறவு, பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் முரளிகிருஸ்ணன் புலிக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இவர்களின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டும் உள்ளது.
யூன் 12ம் திகதி ஈலிங் மஜிஸ்ரேட் நீதி மன்றத்தில் முரளிகிருஸ்ணன் புலிக்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. அவருக்கு பிணையும் மறுக்கப்பட்டது.

அதற்கு ஒரு மாதத்திற்குப் பின் யூலை 10 ஹரோ கிறவுண் கோர்ட்டில் முரளிகிருஸ்ணன் புலிக்களின் பிணை மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அவருக்கு பிணை மறுக்கப்பட்டது. முரளிகிருஸ்ணன் புலிக்கள் அரச தரப்பின் சாட்சியங்களை தொந்தரவு செய்வார் என்ற அச்சத்தின் அடிப்படையிலும் பிணை மறுக்கப்பட்டிருக்கலாம் என ஓம் சரவணபவ வின் முன்னாள் பக்தர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

முரளிகிருஸ்ணன் புலிக்களின் வழக்கு டிசம்பர் 5 முதல் ஆறு நாட்கள் நடைபெறுவதற்கு திகதியிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முரளிகிருஸ்ணன் புலிக்கள் விடுதலையாவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாகவும் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டால் தண்டனைக்காலம் முடிவடைந்ததும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்படுவார் என்றும் சட்டவல்லுனர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

முரளிகிருஸ்ணன் புலிக்கள் பிணை மறுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பது அவருடைய வழக்கில் பல்வேறு நெருக்கடிகளையும் ஏற்படுத்தி இருக்கும் ஏனெனில் பொது அமைப்புகளின் ஆணைக்குழுவுக்கு வழங்கிய கணக்கறிக்கையில் அவர்களுடைய பெரும்பாலான சொத்துக்கள் பணம் அல்லது இலகுவில் பணமாக்கக் கூடியதாகவே உள்ளது. மேலும் கணக்கறிக்கைக்கு புறம்பான பெருமளவு நிதியும் வெளியே உள்ளது. இவற்றில் பெருமளவு பங்கை தேவா அம்மா என்ற தெய்வதீஸ்வரியே கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இந்த வழக்குக்கான செலவை யார் செலவு செய்கின்றார்கள் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. ஓம் சரவணபவ சேவா ரஸ்ட் செலவழிக்கின்றதா அல்லது லைக்கா போன்ற பக்தர்கள் செலவு செய்கின்றார்களா? ஓம் சரவணபவவின் கணக்குக்கு உட்பட்ட உட்படாத பல மில்லியன் அசையும் அசையா சொத்துக்களுக்கு என்ன நடக்கும்? இவ்வாண்டு முடிவுக்குள் பல முடிச்சுகள் அவிழும். பல முடிச்சவிக்கிகளும் வெளித் தெரிவார்கள்.

லண்டனில் தமிழர்கள் மத்தியில் இவ்வாண்டு நீதிமன்றம் வந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் லண்டனின் செல்வச் செழிப்பு மிக்க பகுதிகளான ஹரோ பார்னற் பகுதியில் இருந்தே வந்துள்ளது. தற்போது ஓம் சரவணபவ சுவாமியும் அவ்விடத்திலேயே கோயில் ஆச்சிரமம் வைத்து வாழ்பவர். பிரேமகுமார் ஆனந்தராஜா, சுப்பிரமணியம் சதானந்தன் ஆகியோர் ஏற்கனவே பாலியல் குற்றங்களுக்கு தண்டனை பெற்றவர்கள். யாழ் இந்ததுக்கல்லூரி பழைய மாணவர்கள் பள்ளி நண்பர்கள். அப்பிரதேசத்திலேயே வாழ்ந்தவர்கள். பிரேமகுமார் ஆனந்தராஜா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பின்பும் அவருக்கு நற்சான்றிதழ் வழங்கிய ஆன்மீக கனவான்களும் கனவாட்டிகளும் இந்தப் பிரதேசத்திலேயே வாழ்கின்றனர்.

இப்பகுதியில் இன்னும் சில ஆன்மீக வாதிகள், கலைஞர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வைத்தால் தங்களையே தூற்றுவார்கள் என்பதால் பல இளம்பெண்கள் தங்கள் மௌனத்தை கலைக்கத் தயங்குவதாகவும் தேசம்நெற்க்கு தெரியவருகின்றது.

பாலியல் குற்றவாளி பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு 42 பேர் நற்சான்றிதழ் வழங்கியமை ஏற்கனவே தேசம்நெற் இல் அம்பலப்படுத்தப்பட்டது. தற்போது முரளிகிருஸ்ணன் புலிக்கள்க்கும் ஆதரவாக பலர் செயற்பட்டு வருகின்றனர். தங்களுடைய தேவைகளை லாபங்களைக் கருதாமல் அனைத்து வகையான பாலியல் சுரண்டல்கள், பாலியல் துஸ்பிரயோகங்களுக்கும் எதிரான எண்ணம் அனைவரிடமும் ஏற்பட வேண்டும்.