::வடக்கு – கிழக்கு

::வடக்கு – கிழக்கு

வடக்கு – கிழக்கு சம்மந்தமான கட்டுரைகள்

யாழ்.பல்கலைகழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் உள்ள முகங்கங்களுக்கு சொந்தக்காரர்கள் யார்..?

தமிழர் பகுதிகளில் நேற்று முன்தினம்(08.01.2021) இரவு முதல் மிகப்பெரும் பிரச்சினையாக எரிந்து கொண்டிருப்பது யாழ்ப்பாண பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி இரவோடு இரவாக பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புடன் பல்கலைகழக பராமரிப்பு பகுதியினரால் இடித்தழிக்கப்பட்ட சம்பவமாகும்.

Image may contain: one or more people and people sitting

முள்ளிவாய்க்கால் நினைவுதூபி அகற்றப்பட வேண்டியதாக காணப்பட்டடிருக்கும் பட்சத்தில் பல்கழைகழக நிர்வாகம் ஆரம்பத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுதூபி வைப்பதற்கான அனுமதி வழங்கியிருக்க கூடாது என்ற வாதத்தில் தொடங்கிய யாழ்.பல்கலைகழக துணைவேந்தருக்கு எதிரான கருத்துக்களும் கோவமும் மாற்று வடிவமெடுத்து 09 மாணவர்களின் உண்ணாவிரத போராட்டமாகவும் பூரண கடையடைப்பு போராட்டம் ஒன்றிற்கான கதவையும் திறந்து விட்டுள்ளது. இந்நிலையிலேயே உண்மையிலே யாழ்.பல்கலைகழக முள்ளிவாய்க்கால் நினைவுதூபி  உடைக்கப்பட்டதற்கான பின்னணியில் யார் தான் இருக்கிறார்கள்? என்பதை தேடி கண்டறிய வேண்டிய தேவையும் உள்ளது.

2018 ஆம் ஆண்டளவில் அன்றைய யாழ். பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினுடைய இணைவினால் உருவாக்கப்பட்டதே யாழ்.பல்கலைகழக முள்ளிவாய்க்கால் நினைவுதூபியாகும். ஆரம்பம் முதலே அதனை நிறுத்த வேண்டும் என்பதில் பல தடைகள் ஏற்பட்ட போதிலும் கூட மாணவர்கள் ஒரு வழியாக யாழ்.பல்கலைகழக உயர்மட்ட அனுமதியுடனே அதனை பல்கலைகழக பிரதான பகுதியில் நிறுவியுமுள்ளனர். இங்கு பிரச்சினை அது அழிக்கப்பட வேண்டியது எனின் அதற்கான அனுமதியையும் யாழ்.பல்கலைகழக நிர்வாகம் வழங்கியிருக்க கூடாது என்பதேயாகும். அந்து தூபி வைக்கப்பட்ட போதும் பராமரிப்பு பகுதி பல்கலைகழகத்தில் இயங்கிக்கொண்டு தான் இருந்தது. திடீரென இரவோடு இரவாக அழிக்கப்பட்ட தூபி யாழ்.பல்கலைகழக நிர்வாகம் தொடர்பாக பல கேள்விகளையும் புதிய சிக்கல்களையும் தூண்டிவிட்டுள்ளது என்பதே உண்மை.

நினைவுத் தூபியை உடைத்தது நிர்வாகமே! துணைவேந்தர் ஒப்புதல்!! - NewJaffna

யாழ்.பல்கலைகழக துணைவேந்தரான பேராசிரியர்  சிறீ.சற்குணராஜா அவர்கள் தூபி இடிக்கப்பட்டதற்கும் தனக்கும் தொடர்பே இல்லை. அது மேலிடத்து அழுத்தம் என்பது போலவே ஆரம்பம் முதல் ஊடகங்களிடம் பேசி வந்தார்.  “சட்டபூர்வமற்று எது கட்டப்பட்டாலும் அது அகற்றப்படவேண்டும் என எழுத்து மூலமாக எமக்கு அனுப்பப்பட்டது. யாழ் பல்கலைக்கழகம் என்பது அரசாங்கத்தினுடைய சொத்து எனவே அரசாங்கத்தினுடைய சுற்று நிருபங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது துணைவேந்தர் ஆகிய எனது கடமை. அதன் அடிப்படையிலேயே நான் இந்த தூபியினை இடித்து அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனெனில் குறித்த தூபி அமைப்பதற்கு அனுமதி எதுவும் பெறப்படவில்லை.

எனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கடிதத்தின் அடிப்படையில் அனுமதி இல்லாத கட்டடங்கள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவித்தல் வழங்கப்பட்ட தன் அடிப்படையிலேயே நான் அதனை அகற்றியிருந்தேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார் துணைவேந்தர்.

யாழ்ப்பாண பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி சட்டவிரோதமானது எனின் இவ்வளவு காலமாக அது அழிக்கப்படாது இருந்ததற்கான காரணம் என்ன..? என்ற வினாவுக்கு அவர் விடை தர தயாரிவில்லை. அது சட்டவிரோதமானது எனின் மாணவர்கள் இருக்கின்ற பகல் போதிலேயே அதனை அகற்றியிருக்க வேண்டும். இதனை விடுத்து மாணவர்கள் இல்லாத இரவில் பொலிஸார் பாதுகாப்புடன் அதனை அழிக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது ..? யாருக்காக துணைவேந்தர் தன்னுடைய விசுவாசத்தை காட்ட முற்றட்டுள்ளார் ? போன்ற கேள்விகள் சற்று அகலமாக விடை தேடப்பட வேண்டியவை.

ஆரம்பம் முதலே மேலிடத்து அழுத்தம் என யாழ்.பல்கலைகழக துணைவேந்தரான பேராசிரியர்  சிறீ.சற்குணராஜா குறிப்பிட்டிருந்தார். எனினும் அவரால் மேலிடம் எனக்குறிப்பிடப்பட்ட யாரும் அதனை தாம் செய்ததாகவோ அல்லது தூண்டியதாகவோ குறிப்பிடவில்லை என்பதே உண்மை. இராணுவத்தலையீட்டுடன் அது அழிக்கப்பட்டிருக்கலாம் என எண்ணி இராணுவத்தினரிடம் கேட்டால் “நினைவுத் தூபி இடிக்கப்பட்டமையானது, பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானம் என கூறிய அவர், அந்த விடயத்திற்கும் தமக்கும் அறவே தொடர்பு கிடையாது எனவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் இவ்விடயத்தில் தலையீட போவதில்லை” என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து குறிப்பிடும் போது “யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உள்ளக விடயங்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவம் தலையீடு செய்யாது எனவும் இந்த விவகாரத்தில் இராணுவத்தின் தலையீடு எதுவும் இல்லையெனவும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானத்திற்கு அமையவே இந்த விடயம் இடம்பெற்றுள்ளதாகவும்”  குறிப்பிட்டிருந்தார்.

இராணுவம் மறுத்ததை தொடர்ந்து அரசுக்கு சார்பான தமிழ் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் யாருடைய தூண்டுதலிலாவது இதனை செய்ய துணைவேந்தர் முற்பட்டிருக்கலாம் என பேசப்பட்ட போது அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவின் தலையீடு இதில் இருக்கலாம் என பலரும் முனுமுனுக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் யாழ்.பல்கலைகழக நினைவுத்தூபி இடிப்பு பல்கலைகழக துணைவேந்தருடைய முடிவு என அவரும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே இறுதியாக பல்கலைகமானியங்கள் ஆணைக்குழு இந்த துணைவேந்தர் கூறிய சுற்றறிக்கையை அனுப்பியிருக்கலாம் என நினைத்துக்கொண்டிருக்கையில் பல்கலைகழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசியரியர் சம்பத்அமரதுங்க குறிப்பிடுகின்ற போது “2018 ஆம் ஆண்டு இந்த நினைவுதூபி பல்கலைகழக வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ளது. அது வடக்கு-கிழக்கு ஐககியத்துக்கு தடையாக அமையக்கூடும் என்பதாலும் அந்தத்தூபி இன்றையதினத்திற்கும் நாளைய தினத்திற்கும் பொருந்தாது என்பதாலும் துணைவேந்தர் அதனை அகற்றும் முடிவுக்கு வந்துள்ளார்” எனவும் குறிப்பிட்டிருந்தார். ஆணைக்குழுவினுடைய பதில் இடித்த துணைவேந்தருக்கு ஆதரவுக்குரலை வழங்கியிருந்ததே தவிர இடிப்பதற்கான ஆணையை தாம் வழங்கியதாக கூறவில்லை என்பதே உண்மை.

ஆக துணைவேந்தர் கூறிய மேலிடத்தோர் யாருமே அதனை இடிக்க நாம் வலியுறுத்தவில்லை என கூறியாகிவிட்ட நிலையில்.. ,  ஏன்..? எதற்காக ..? யாரை திருப்திப்படுத்துவதற்காக..? துணைவேந்தர் இந்தச்செயலை செய்து முடித்துள்ளார் என்பதே கேள்வி. தன்னுடைய விசுவாசத்தை யாருக்கோ காட்டுவதற்காக துணைவேந்தர் சற்குணராஜா மேற்கொண்ட செயல் அவருக்கான ஆதரவுத்தளத்தை நிர்மூலமாக்கியுள்ளது என்பதே உண்மை.

 

Image may contain: 1 person, tree, plant and outdoorஉண்மையிலேயே இந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி இனவாதத்தை தூண்டி விட்டது என்பது முற்றிலும் ஏற்க முடியாத வாதமாகும். சிங்கள மாணவர்கள் பெரும்பான்மையாக கற்கின்ற பல்கலைக்கழகங்களில் அரசுக்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்ட ஜே.வி.பியினருக்கான நினைவுதூபிகள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. அங்கு அரசுக்கு எதிராக செயற்பட்ட ரோகண விஜயவீர உள்ளிட்டோரின் நினைவு தினங்கள் தொடர்சியாக அனுஷ்டிக்கப்படுகின்றன. அதற்கெல்லாம் தடைவிதிக்காத மேலிடம் இறந்தவர்களை நினைவுகூர்வதற்கான நினைவுத்தூபியை அழிக்ககூறியதாகவும் அதை உடனடியாக அழித்து விட்டோம் எனவும் பொறுப்பு வாய்ந்த ஒரு பதவியில் உள்ள பேராசிரியரும் துணைடவேந்தருமான சிறீசற்குணராஜா அவர்கள் கூறுவது வேடிக்கையானது.

 

Image may contain: tree and outdoor

இது போன்ற நினைவுத்தூபிகள் அவசியமானவை. இந்த யுத்த வலிகள் கடத்தப்பட வேண்டும். குறிப்பாக சிங்கள மாணவர்கள் குறிப்பிடத்தக்களவு யாழ்.பல்கலைகழகத்திலும் கற்க ஆரம்பித்துள்ள நிலையில் எங்களுடைய வலிகளையும் வேதனைகளையும் இனியொரு அடக்குமுறை எம்மீது வேண்டாம் என்ற நிலையினையும் தென்னிலைங்கைக்கு எடுத்துக்கூற இந்தத்தூபிகள் மூலம் அவசியமானவை. அதனை ஆக்கபூர்வமாக கையாள துணைவேந்தர் முற்பட்டிருக்கலாம்.

Image may contain: 1 person, standing and outdoor

 

அத்துடன் பல்கலைகழக மாணவர்களுக்கு பல்கலைகழகத்துக்குள் அனுமதியளிக்காது இராணுவத்தையும் பொலிஸாரையும் குவித்து மாணவர்களை அச்சுறுத்துவது எல்லாம் எக்காலத்திலும் நியாயப்படுத்த முடியாதது. முதலில் பல்கலைகழகம் மாணவர்களுக்கானது என்பதை யாழ்பல்கலைகழக நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும். அது முழுக்க இராணுவத்தினரை குவித்து மாணவர்களை பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தால் சுட்டுவிடுவோம் என்ற தோரணையில் மிரட்டுவது , கைது செய்து விடுவோம் என்பது எல்லாம் ஏற்கமுடியாததது. இந்த மனோ நிலையிலிருந்து பல்கலைகழக நிர்வாகம் விடுபட்டு மாணவர்களுக்கான இயங்க முன்வர வேண்டும். அந்தத்தூபியை உடைப்பதாயின் முதலில் அதனுடன் தொடர்புடைய மாணவர் ஒன்றியத்துடன் துணைவேந்தர் கலந்துரையாடலை மேற்கொண்டிருக்க வேண்டும். அதனை விடுத்து இராணுவத்தினரை அழைத்து பல்கலைகழக விடயங்களை கையாள்வது என்பது மாணவர்களுக்கும் – நிர்வாகத்துக்குமிடையிலான தூரத்தை தெளிவுபடுத்துகின்றது.

இதே துணைவேந்தர் முன்னைய நாட்களில் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட திலீபன் நினைவு நாட்கள் நிகழ்வுகள் தொடங்கி பல நிகழ்வுகளில் பங்குபற்றியுள்ளார். துணைவேந்தருடைய கொள்கை தான் என்ன..? பதவியை பெறுவதற்கு முன்னர் ஒருமுகமும் பதவியை பெற்ற பின்னர் ஒருமுகமாக செயற்படுவோராகவே இவர்களை அடையாளப்படுத்த வேண்டியுள்ளது.

உண்மையிலேயே மேலிடத்து அழுத்தம் இல்லாமல் துணைவேந்தர் இதை செய்ய முற்பட்டிருக்கமாட்டார். இங்கு கேள்வியையும் கோவத்தையும் ஏற்படுத்தியது துணைவேந்தருடைய பதில்களும் மாணவர்களை பொலிஸார் துணையுடன் பல்கலைகழக வளாகத்தினுள் நுழைய விடாது செய்தமையுமேயாகும். மாணவர்களுடைய தீர்க்கப்பட வேண்டிய எத்தனையோ குறைகள் இருக்க அதனை எல்லாம் தீர்க்க முற்படாத துணைவேந்தர் இதனை மட்டும் இரவோடு இரவாக செய்து முடித்துள்ளார். ஒரு சில துறைகளுக்கு மாணவர்களுடைய தொகைக்கு ஏற்ப வகுப்பறைகள் இல்லை, பெறுபேறுகள் வெளியாவதிலுள்ள காலதாமதம் , ஏனைய பல்கலைகழகங்களை விட புதிய வருட அனுமதிகளிலுள்ள தாமதம், நிர்வாகத்திலுள்ள குறைபாடுகள், யாழ்.பல்கலைகழகத்திலிருந்து வெளியேறிய மாணவர்களுக்கு தொழில்வாய்ப்புக்களுக்கான சிக்கல் தீர்க்கப்படாமை,  பட்டமளிப்பு விழா நடத்தப்படாமை, பரீட்சை பெறுபேறு குழப்பங்கள், சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களுக்கான முறையான தீர்வு இன்மை , முறையாக பகிடிவதை கட்டுப்படுத்தப்படாமை, விரிவுரையாளர்களுக்கிடையேயான போட்டி நிலை , உயர் கல்வி நிலையம் என்ற ரீதியில் போரினால் பின்தங்கியுள்ள சமூகத்தை முன்னேற்ற ஆக்கபூர்வமாக இயங்க முடியாமை என எத்தனையோ பிழைகளும் குறைகளும் யாழ்.பல்கலைகழகத்தில் காணப்பட அவற்றையெல்லாம் தீர்க்க பல யுகங்கள் எடுத்துக்கொள்ளும் இந்த துணைவேந்தர்கள் இவற்றை இடிப்பதிலும் நினைவு நாட்களைகட்டுப்படுத்துவதிலும் காட்டும் அக்கறையும் கடமையுணர்ச்சியுமே இன்றைய பல்கலைகழக சூழல் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கான அடிப்படை.

உடனடியாக இடிப்பதற்கும், கேள்வி கேட்கும் மாணவர்களை கட்டுப்படுத்தவும் ஆயிரம் வழிவகைகளை கையாண்ட துணைவேந்தர் பேராசிரியர் சிறீ சற்குணராஜா அவர்கள் அதனை காப்பதற்கு ஏதாவது செய்திருக்கலாம் என்பதே பலருடைய ஆதங்கமும். பொருத்திருந்து பார்ப்போம் துணைவேந்தர் துணைபோனாரா..? அல்லது தன்னுடைய தவறை திருத்தி மீள அந்த நினைவுத்தூபியை அமைக்க வழிசெய்வாரா என்று..?

புரவி புயலின் தாக்கம் – வட கிழக்கில் ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு !

வங்காள விரிகுடாவில் உருவான புரவிப் புயல் நேற்றுப் பின்னிரவில் நாட்டின் கிழக்குத் திசையிலிருந்து திருகோணமலைக்கும் – முல்லைத்தீவுக்கும் இடையே கரையைக் கடந்து, கடுங்காற்றுடன் அனர்த்தங்களை விளைவித்தபடி வவுனியாவைத்தாண்டி, முன்னேறி, மன்னாரைக் கடந்து, தமிழகத் திசையை நோக்கி இன்று அதிகாலை நர்ந்தது என வட-கிoக்குச் செய்திகள் தெரிவிக்கின்றன.

புரவி புயலின் தாக்கத்தினால் வடக்கு மாகாணத்தில் அதிக மழை வீழ்ச்சி ஏற்பட்டது. புயலின் தாக்கமும் எதிர்கொள்ளப்பட்டது. சீரற்ற கால நிலை காரணமாக நேற்று நள்ளிரவு வரை வடக்கில் 750 இற்கும்மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 200ற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர் எனப் பதிவாகியுள்ளதோடு 10 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் மூவர் காணாமல் போயுள்ளனர் என்றும் வடக்கு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வடக்கின் 5 மாவட்டங்களும் அதிகம் பாதிப்புக்களை சந்தித்துள்ளமையோடு வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் நள்ளிரவுக்குப் பின் தாக்கம் காணப்படுகின்றது. இதுவரை முல்லைத்தீவில் களுக்கேணிக்குளம் ஒரு அடி வரையில் வான் பாய்கின்றது. கடற்கரையை அண்டிய பகுதிகளில் இருந்த 450 குடும்பங்கள் முன் ஆயத்தமாக நகர்த்தப்பட்டு 3 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம் கடும் மழை காரணமாக முல்லைத்தீவு நகரிற்குள் பிரவேசிக்கும் அனைத்து வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுகின்றது. இதில் வட்டுவாகல் பாலம், செல்வபுரம் பகுதியிலான வீதிகள் இந்த நிலமை காணப்படுகின்ற போதும் கேப்பாபுலவு முல்லைத்தீவு வீதியே தற்போது தப்பியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இரு வீடுகளின் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் இரு வீடுகளும் சேதமடைந்தன. இதனால் இரு குடும்பங்களும் இடப்பெயர்வை சந்தித்துள்ளன. இதேபோன்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிக மழை பொழிவு இருந்தது.

தாழ் நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது பல குடும்பங்கள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று மீனவர்கள் கடலிற்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ளனர். இதேநேரம் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 167 குடும்பங்களைச் சேர்ந்த 523 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறையில் 58 குடும்பங்களைச் சேர்ந்த 206 பேரும், வேலணையில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்களது உறவினர்களது வீட்டில் தங்கியுள்ளன எனவும், கல்லுண்டாய் பகுதியில் ஓர் இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தின் தேவன் பிட்டியில் 15 குடும்பங்களும், நானாட்டனில் 91 குடும்பங்களும் பாதுகாப்பாக நகர்த்தப்பட்டு இடம்பெயர்ந்தனர். கடற் கரையில் நிறுத்தி வைத்திருந்த இரு படகுகள் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இவ்வாறு வடக்கின் அனைத்து இடங்களிளும் பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. வடக்கு மாகாணத்தில் புரெவிப் புயலினால் 15 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன என்றும் 140 வீடுகள் வரை பகுதியாகப் பாதிக்கப்படுள்ளன என்றும் தற்போது கிடைத்த செய்திகள் தெரிவித்தன

தன்னுடைய கடமைகளை உணர்ந்து ஆரோக்கியமான தளத்தில் பயணிக்கின்றதா யாழ்பாணப் பல்கலைக்கழகம்..? – அருண்மொழி

ஒரு காலகட்டத்தில் ஒட்டுமொத்தமான தமிழ்மக்களுடைய பிரச்சினைகளை தங்களுடைய பிரச்சினையாகவும் பொறுப்பாகவும் முன்னெடுத்தச்சென்ற வகையிலும் , தமிழ் மக்கள் தங்களின் அடையாளம் என்ற வகையிலாக பிரகாசித்த எத்தனையோ உயர்பதவி வகித்த கல்விமான்களையும் உருவாக்கித்தந்த மையமாகவும், இலங்கைத்தமிழர்களுடைய அடையாளமாகவும் பல தசாப்பதங்களாக திகழ்ந்து வந்த உயர்கல்விக்கூடமான யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் இன்றைய காலகட்டங்களில் தன்னுடைய அடையாளங்கள் யாவற்றையும் படிப்படியாக இழந்து சுழியத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதே கசப்பான உண்மையாகும்.

உண்மையில் இதற்கான காரணங்களை என்னவென்று தேட முற்படும்போதெல்லாம் சிலருடைய பதில் அரசு திட்டமிட்டு இங்குள்ள வளங்களையும் மாணவர் ஒற்றுமையையும் அழிக்கின்றது..?  என்றோ அல்லது திட்டமிட்ட வகையிலான கலாச்சார அழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றோ யாரோ ஒருவர் மீது பழி போட்டு விட்டு  கடந்து போகின்ற ஒரு போக்கு தொடர்கின்றதே தவிர, கல்வி கற்கும் மாணவர்களோ அல்லது அங்குள்ள விரிவுரையாளர்களோ யாரும் தங்கள் மீது உள்ள தவறுகளை பேசத்தயாராகவும் இல்லை.., அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உடையோராகவும் இல்லை.

கடந்த 08.10.2020 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் கலைப்பீட 2ம் மற்றும் 3ம் வருட மாணவர்களுக்கிடையே இடம்பெற்ற பிரச்சினை யாவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து அந்தப்பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்கவேண்டிய விரிவுரையாளர்கள் கூட மாணவர்களுடன் மேலும் விவாதத்தில் ஈடுபட்டு பொலிஸாரின் உதவியுடன்  பிரச்சினை தீர்க்கப்பட்டு பின்னர் விரிவுரையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு, தொடர்ந்து 21 மாணவர்களுக்கு வகுப்புத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது. உண்மையிலேயே அங்கு கடமையில் இருந்த விரிவுரையாளர்களாக இருக்கலாம் அல்லது பிரச்சினைக்கு காரணமாக இருந்த மாணவர்களாக இருக்கலாம் யாருமே தங்களுக்கு உள்ள சமூகப்பொறுப்பு என்பது தொடர்பாக எவ்வளவு தூரம் ஆரோக்கியமான புரிதலுடன் உள்ளனர், மாணவர்களுக்கானதா பல்கலைக்கழகம்..? அல்லது விரிவுரையாளர்களுக்கானதா பல்கலைக்கழகம்..? யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் தமிழர்களுடைய அடையாளமாக இருக்கின்றதா என பல விடயங்களை கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய தேவையேற்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களிடையே காலாதிகாலமாக இருக்கக்கூடிய இந்த சீனியர் – ஜூனியர் இடையேயான ஒரு முறுகலின் வெளிப்பாடே இந்த பிரச்சினையும் கூட. யாழ்ப்பாண பல்கலைகழக கலைப்பீட மாணவர்களை பொறுத்தவரை இன ஒடுக்குமுறை சார்ந்து தமிழர்களை சிங்களவர்கள் ஒடுக்குகிறார்கள், தமிழர்களின் அடக்கு முறைக்கான தீர்வுகள் எவை என்பன பற்றி எல்லாம் காலாதிகாலமாக பேசிக்கொண்டே வருகின்ற , அதற்காக குரல் கொடுத்து வருகின்ற ஒருபோக்கு காணப்படுகின்ற போதிலும் கூட அது எந்தளவு தூரம் அவர்களுடைய ஆழ்மனதில் இருந்து வெளியே வருகின்றது என்பது கேள்விக்குட்படுத்தப்படவேண்டியதாகின்றது. ஏனெனில் சிங்களவர்கள் தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதாக கூறிக்கொண்டிருக்கும் இதே மாணவர்கள் தான் தங்களுடைய புதுமுக சகோதரர்களை அல்லது கீழ் வகுப்பு மாணவர்களை பகிடிவதை என்ற போர்வைக்குள்ளேயோ அல்லது நான் சீனியர் எனக்கு நீ அடங்கிப்போகத்தான் வேண்டும் என்ற ஒரு விதமான கருத்துருவுக்குள்ளேயோ அடக்கியாள முற்படுகின்றனர். இலகுவாக சிந்திக்க வேண்டியது ,து தான் தான்..“ சிறிய பல்கலைக்கழக வளாகம் ,எங்களுடைய மொழியை பேசுகின்ற எங்களுடைய சகோதரர்களையே பிரிவினைகள் கூறி அடக்கியாள  முற்படும் நாம்,   அடக்கு முறையை ஏதோவொரு விதத்தில் செய்து கொண்டிருக்கும் நாம் , – எந்த கோணத்தில் பெரும்பான்மை சமூகத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக குரல்கொடுக்க தகுதியானவர்கள் என்பதை ஒவ்வொரு மாணவனும் சிந்தித்து பார்க்க வேண்டியது அவசியமாகின்றது”.

மாணவர்களிடையே அதிகரித்து வரும் இந்தப்பிரச்சினைகளுக்கு விரிவுரையாளர்கள் – மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள பாரிய இடைவெளியே மிக முக்கியமான காரணம் என்பதை மறுத்து விடலாகாது. விரிவுரையாளரகள் பலரும் பாடத்திட்டத்தை கற்பிப்பது , அதற்கான பெறுமதிகளை வழங்குவது என்ற செயற்பாட்டுடன் தங்களுடைய மாணவர்ளுடனான உறவை முடித்துக்கொள்கின்ற ஒரு போக்கே தொடர்கின்றது. அதே நேரத்தில் யாழ்.பல்கலைகழக மட்டத்தில் குறிப்பிட்ட சில  விரிவுரையாளர்களைத் தவிர ஏனைய  பெரும்பாலான விரிவுரையாளர்கள் மாணவர்களுடைய சுய ஒழுக்கம் பற்றியோ, அல்லது அவர்களுடைய கல்விக்கான தேவைகள் என்ன என்பது பற்றியோ,  மாணவர்களுக்கு என்ன பிரச்சினைகள் என்பது பற்றி சிந்திக்கவோ அல்லது மாணவர்களுடன் பேசவோ தயாராகவேயில்லை. மாணவர்கள் தவறு செய்தவுடன் அவர்களுடைய வகுப்புத்தடை பற்றி மட்டும் அதிகம் அலட்டிக்கொள்ளும் பல்கலைக்கழக உயர்மட்டம் அதிலிருந்து அவர்களை மீட்பது எப்படி..? அல்லது இந்தப்பிரச்சினைகளுக்கான ஆக்கபூர்வமான முடிவுகள் எவையாவது உள்ளனவா? என சிந்திக்க தவறிவிடுகின்றனர்.

விரிவுரையாளரகள் மாணவர்களுடன் இணைந்து பயணிக்க முன்வராத வரை இந்தப்பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.  விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக கல்வித்திட்டங்களுக்கு அப்பால் மாணவர்களுடைய சமூகப்பொறுப்பை உணர வைக்க வேண்டிய மிகப்பெரும் பணியை ஆற்ற முன்வர வேண்டும்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்ற போர்கள், இடப்பெயர்வுகள் அவற்றின் மூலமான இழப்புக்கள் என பல விடயங்கள் காரணமாக வட -கிழக்கு தமிழர் சமூகமானது இலங்கையின் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது  கல்வி , பொருளாதாரம், சமூக மேம்பாடு என பல்வேறுபட்ட வகையிலும் பின்தங்கி நிற்கின்ற ஒரு நிலையே காணப்படுகின்றது.  இந்த நிலையில் எங்களுடைய சமூகத்தை முன்னேற்ற கல்வி மட்டுமே இப்போதைக்கு எம்மிடம் உள்ள ஆயுதம் என்பதையும் அதனை மேலும் பட்டை தீட்டி கூர்மையாக்க வேண்டிய தேவை இந்த யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் மிகப்பெரிய கடமை என்பதையும் ஒவ்வொரு பல்கலைகழக மாணவர்களும் – விரிவுரையாளர்களும்  உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

எங்களுடைய தமிழ்ச்சமூகங்களில் காலை தொடங்கி மாலை வரை கூலிவேலை செய்யும் ஒரு கூலித்தொழிலாளியிடம் சென்று ஏன் இப்படி உழைக்கின்றீர்கள் எனக் கேட்டால் “ என் புள்ளைய படிக்க வைச்சு கெம்பஸூக்கு அனுப்பிட வேணும் ” என்ற பதிலை இப்பொழுதும் கேட்க முடியும். அது போலத்தான் உயர்தரம் படிக்கின்ற மாணவர்களிடமும் இலக்கு என்ன என கேட்டால் “ படிச்சு எப்படியாச்சும் கெம்பஸ் போய்டனும்” என்கின்ற  பதிலே கிடைக்கும்.  இன்னமும் இந்த சமூகம் கல்வியை நம்பி நடைபோட்டுக்கொண்டிருக்கின்றது என்பதே இந்த பதில்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இப்படியான சமூகம் ஒன்றில் வாழும் பல்கலைக்கழக மாணவர்கள் தங்களுடைய எதிர்காலத்தலைமுறைக்கு ஆக்கபூர்வமான முன்மாதிரிகளாக திகழவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு பல்கலைக்கழக கல்வி மீதான நம்பிக்கையை இன்னும் அதிகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பாடசாலை மாணவர்களுக்கான இலவசக்கருத்தரங்குகளை செய்தல்,  தமிழர் பகுதிகளிலுள்ள பிரச்சினைகளை ஆவணப்படுத்தல் மற்றும் அதற்கான தீர்வுத்திட்டங்களை ஆவணங்களாக வெளிக்கொண்டுவருதல், மாணவர்களுக்கான உளப்படுத்தல் கருத்தரங்குகளை மேற்கொள்ளுதல், இறுதி வருட மாணவர் ஆய்வுகளை சமூகத்துக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தல் என பயணிக்க எத்தனையோ வழிமுடுறைகள் உள்ளன.

இவையெல்லாவற்றையும் விடுத்து விட்டு இன்னமும் பகிடிவதைகள் , சீனியர் – யூனியர் பிரச்சினைகள், தேவையற்ற சண்டைகள் என பல்கலைக்கழக மாணவர்கள் பயணிப்பது அவ்வளவு ஆரோக்கியமானது இல்லை என்பதை உணர்ந்து செயலாற்ற மாணவர்கள் முன் வரவேண்டிய அதே நேரத்தில் மாணவர்களும் தங்களுடைய பிள்ளைகள் தான் என்ற கோணத்தில் சிந்திக்க விரிவுரையாளர்களும் தங்களை பழக்கப்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும். தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் தானே. அவர்களுடன் தோழமையாக பழகுவதாலும் பல ஆரோக்கியமான மாற்றங்களை  ஏற்படுத்தலாம் என்பதை விரிவுரையாளர்கள் உணர்ந்து செயலாற்ற வேண்டும். இவ்வாறாக பயணிக்க முனைகின்ற போது மட்டுமே யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தனக்கான அடையாளத்தை பேணிக்கொள்ள முடியும்.

தங்களுக்குள்ள சமூகப்பொறுப்பை  உணர்ந்து கொள்ளாது,  பிரிவினைகள் பாராட்டி நீ – நான் பெரியவன் என பல்கலைக்கழக சமூத்தினர் இனியும் பயணிப்பார்களாயின் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகமானது தன்னுடைய அடையாளங்கள் அனைத்தையும் இழந்து உயர் கல்வி கற்பிக்கப்பட்டாலும்  மீண்டும் பாலர்பாடசாலையாகவே மாறிவிட வேண்டிய நிலைதான் ஏற்படும் என்பதை மாணவர்களும் – விரிவுரையாளர்களும் நினைவில் வைத்து செயலாற்ற வேண்டும்.

தொல்லியல் திணைக்களத்தின் தொடரும் பௌத்தமயமாக்கலும் – வெடுக்குநாறிமலை தமிழர் பல தலைமுறை வழிபாட்டுக்கான தடையும் !

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் இலங்கையில் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். இக்கோவில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஒலுமடு-பாலமோட்டை கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலையின் உச்சியில் அமைந்துள்ளது. சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த மலையின் வரலாறானது பல வரலாற்று சிறப்புகளைக்கொண்டு காணப்படுகின்றது.

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் - Nallurlk

300 மீட்டர் உயரமான வெடுக்குநாறிமலை அடிவராத்தில் கேணி, தமிழ் பிராமிய கல்வெட்டுக்கள் என்பன அதன் வரலாற்றைக் கூறுகின்றது. இம்மலையின் உச்சியில் ஆதிலிங்கேசுவரர் என்ற சிவனுடைய இலிங்கம் அமைந்துள்ளது.கிட்டத்தட்ட ஐந்து தலைமுறையினருக்கு மேலாக இப்பிரதேச மக்கள் இந்த ஆலயத்தை வழிபட்டு வருகின்றனர்.

2018 ஆம் ஆண்டில் இலங்கை தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களத்தினர் இம்மலைக்கு மக்கள் சென்று வழிபாடுகளை மேற்கொள்ளத் தடை வித்தனர். ஆனாலும், உள்ளூர் மக்களின் எதிர்ப்பினை அடுத்து, இத்தடையினை தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் நெடுங்கேணி காவல்துறையினர் தற்காலிகமாக நீக்கி வழிபாடுகளை மட்டும் மேற்கொள்ள அனுமதித்தனர். ஆனாலும் கோவிலைப் புனரமைக்கவோ அல்லது புதிய கட்டடங்களை அமைக்கவோ அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீண்டகாலமாக வழிபடப்பட்டுவருகின்ற எமது  வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 17ம்திகதி ஆரம்பிக்கப்பட இருக்கின்ற நிலையில்  அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியிருக்கின்றது. இந்த நிலையில் பொலிஸார் அதனை தடுத்து நிறுத்துவதற்காக கடும் பிரயத்தனங்களை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அறியக்கிடைக்கின்றது.
ஆலய திருவிழாவினை தடுத்து நிறுத்த கோரி அவசர அவசரமாக தொல்லியல் திணைக்களத்தினால் நெடுங்கேணி பொலிஸாருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் ஆலய நிர்வாகத்தினரை அழைத்த பொலிஸார் தொல்லியல் திணைக்களம் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை காண்பித்துள்ளனர். இரண்டு பக்கங்கள் நிரம்பிய அந்தக்கடிதம்  முற்று முழுதாக சிங்கள மொழியில் எழுதப்பட்டிருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த கடிதத்தை காண்பித்த பொலிஸ் பொறுப்பதிகாரி அதில் சில விடயங்களை குறிப்பிட்டு தொல்லியல் சார்ந்த இடங்களை சிரமதானம் செய்ய முடியாது எனவும் அது தொல்லியலுக்குறிய இடம் என்றும் அங்கு செல்வதோ திருவிழா செய்வதோ தடை செய்யுமாறு குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக எமக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதற்கு விளக்கமளித்த ஆலய நிர்வாகத்தினர் எமக்கான வழக்கு நீதிமன்றத்தில் சென்றுகொண்டிருக்கின்றது.எம்மை ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை செய்யுமாறு குறிப்பட்டிப்பதோடு அபிவிருத்திகளை மாத்திரமே செய்ய முடியாது என குறிப்பட்டு இருப்பதாக வழக்கு தொடர்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
எனினும் இதனை ஏற்கமறுத்த பொலிஸ் பொறுப்பதிகாரி தொல்லியல் திணைக்களம் கூறிய கூற்றுக்கு இணங்கியே செயற்பட முடியும் என்றும் ஆலய உற்சவத்தினை நிறுத்துமாறு நாளையதினம் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை ஆலய நிர்வாகத்தினரை  நீதிமன்றம் வருகைதருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மொழிசார்ந்த நம்முடைய அடையாளங்களை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமானதோ ..?அதை விட முக்கியமானது நம்முடைய கலாச்சாரம் சார்ந்த விடயங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கையளிப்பது. அதற்கானவையே இந்த திருவிழாக்களும் பண்பாடு சார் நிகழ்வுகளும்.
வெடுக்குநாறிமலை சிவன் ஆலயம் தொடர்பில் புதிய கட்டுப்பாடுகள் - Tamilwin
அண்மையில் கிழக்கு தொல்லியல் செயலணியில் உள்ள ஒரு பிக்கு ஒருவர் திருக்கோணேஸ்வர ஆலயம் ஒரு விகாரை என குறிப்பிட்டு அதற்கு பௌத்த மயமாக்கல் ரீதியான விளக்கம் ஒன்றை வழங்கியிருந்தார். இது போன்றதான ஒரு நிலையே வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கும் ஏற்பட்டுள்ளது. வெடுக்குநாறி மலை ஆலய வழிபாடுகளை பொலிஸார் தடுப்பது இது முதல்முறையல்ல. கடந்த காலங்களிலும் இது போன்றதான ஒரு கெடுபிடிக்குள்ளேயே இங்கு வழிபாடுகளெ் மேற்கொள்ளப்பட்டன.
மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது ஒரு மலைக்கோவில் இதனாலென்ன வந்து விடப்போகின்றது எனத்தோன்றும் உண்மை நிலை அவ்வாறானது இல்லை. எங்களுடைய கண்ணுக்குத் தெரியாமல் படிப்படியாக தமிழர்களுடைய வழிபாட்டு தலங்கள் பௌத்தமயமாக்கப்பட்டவண்ணமுள்ளன. அண்மையில் கூட முல்லைத்தீவில் நீராவியடி பிள்ளளையார் கோவிலில் கூட இது போன்றதான ஒரு பிரச்சினை அரங்கேறி இறுதியில் பௌத்தபிக்கு ஒருவருடைய உடல் அப்பகுதியில் மக்களுடைய எதிர்ப்பையும் மீறி தகனம் செய்யப்பட்டிருந்தது. அதனுடைய இன்னுமொரு பகுதியாகவே வெடுக்குநாறி மலையை பௌத்தமயபடுத்தும் முயற்சியை தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.
வெடுக்குநாறி மலை ஆலய வழிபாடுகள் தொடர்ந்தும் அப்பகுதியில் வாழும் பல தலைமுறையினரால் வழிபடப்பட்டு வருகின்ற நிலையில் அதனை தடுப்பது அல்லது மக்களை அங்கு சென்று வழிபாடியற்ற தடை செய்வது எவ்வளவு வக்கிரமான ஒரு மனோநிலை. ருவன்வெலிசாய 2000 வருட பழமையான ஒரு விகாரை . அங்கு இப்போதும் வழிபாடுகள் அதே புனிதத்தன்மையுடன் இடம்பெறுகின்றன. அதே போன்றதான ஒரு வழிபாட்டு மையமே வெடுக்குநாறி மலையும் அதற்கு மட்டும் ஏன் இத்தனை
கட்டுப்பாடுகள் ..? தொல்லியல்திணைக்களம் என்பது ஒரு நாட்டினுடைய எல்லா பிரஜைகளுக்குமானதாக இருக்க வேண்மே தவிர ஒரு தரப்பினருடைய வரலாற்றை அழித்து இன்னொரு தரப்பினருடைய வரலாற்றை பதிய வைப்பதாக இருக்க கூடாது. இத்தனைக்கும் வெடுக்குநாரிமலை ஆலயபகுதி தொல்லியல் பகுதி என்பதற்கான எந்த வர்த்தமானி அறிவிப்புமே வெளியாகியிராத சூழலில் இந்த செயல் எத்தனை அபத்தமானது.
ஊடகங்களும் பெரிதாக இது பற்றி அலட்டிக்கொள்வதில்லை. நகர்ப்புறங்களில் இடம்பெறும் பிரச்சினைகளுக்கும் சொந்த அரசியலுக்காகவும் அதிக பக்கங்களையும் நேரத்தையும் ஒதுக்கும் ஊடகங்கள் கிராமப்புறம்தானே என வெடுக்குநாரியை ஒதுக்கிவிட்டனர் போலும். பாராளுமன்ற அமர்வுகளில் தேவைக்கில்லாத விடயங்களை பற்றி அலட்டிக்கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகளுடைய பார்வை கூட வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் மேல் பட்டதில்லை.
வெடுக்குநாறி தனிப்பட்டு அப்பகுதி மக்களுடைய பிரச்சினை மட்டுமேயில்லை. வெடுக்குநாரி தொல்லியல்துறையினரிடம் பறிபோகுமாயின் அழியப்போவது ஆலய சூழல் மட்டுமல்ல. எம்முடைய 2000 ஆண்டுகால வரலாற்று நிலைப்பும் தான். ஊடகங்களுடைய பார்வையும் அரசியல் தலைவர்களுடைய பார்வையும் படாத இடமாகவும் ஒதுக்குப்புறமாக நம்மால் கவனிப்பாரற்றும் வெடுக்குநாறி கிடப்பதால் தான் இலகுவாக அதனை கையகப்படுத்த தொல்லியல்துறை முயற்சிக்கின்றது.
தமிழ் ஊடகங்கள் விரைந்து இந்த செய்தியை எல்லா தரப்பினருக்கும் கொண்டு செல்ல முயற்சிப்பதுடன் வெடுக்குநாறி வரலாற்றை ஆவணப்படுத்தவும் முன்வரவேண்டும். மேலும் இந்த விடயம் தொடர்பில் தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் அரநியல்தலைமைகளும் அதிக கவனம் செலுத்தி விரைந்து இதனை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற பல வெடுக்குநாரிமலைகளை தொல்லியல் திணைக்களத்திடம் இருந்து பாதுகாக்க முடியும்.

யாழ் மேலாதிக்கம் என்பது என்ன? : எம் ஆர் ஸ்டாலின்

யாழ் -மேலாதிக்கம் என்பது முதலில் ஒரு கருத்தியல் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சிங்கள மேலாதிக்கம் என்பது எப்படி சிங்கள மக்களை குறிக்காமல் அந்த சிங்கள சமூகத்தில் இருந்து வெளிக்கிளம்புகின்ற ஆதிக்க சக்திகள் கொண்டிருக்கின்ற இனமேலாதிக்க கருத்தியலை குறிக்கின்றதோ அதேபோலத்தான் இக்கருத்தியலை நாம் புரிந்துகொள்ள முயலவேண்டும். சிங்கள மேலாதிக்கம் என்பது சிங்கள மக்களை குறிக்கவில்லை. சிங்கள மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் என்பது சிங்கள மக்களுக்கு எதிரானதும் இல்லை. அதேபோலத்தான் யாழ் மேலாதிக்கம் என்பதையும் அதற்கெதிரான கருத்துப்பரிமாறல்கள் என்பதையும் யாழ்ப்பாண மக்களுக்கு எதிரானதாக கொச்சையாக புரிந்துகொள்ளக்கூடாது.

ஆனால் துரதிஸ்ட வசமாக இந்த புரிதலில் சிலருக்கு சிக்கல் இருக்கின்றது மேலும் சிலர் புரிந்து கொள்ளாதவாறு திரித்து கிழக்கில் இருந்து யாழ்-மேலாதிக்கம் குறித்து கருத்திடுவோர் மீது பிரதேசவாத துரோக முத்திரை குத்த முனைகின்ற போக்கும் அதிகரித்து வருகின்றது.

தமிழ் தேசியமென்பது பரந்துபட்ட தமிழ் மக்களின் சமூக பொருளாதார பிரச்சனைகளில் இருந்து உருவாகிய கருத்துருவமா? அன்றில் தமிழ் சமூகத்தில் ஆதிக்க சக்திகளாக அகல கால்பதித்து நின்ற யாழ்-மேட்டுக்குடிகளின் நலன்களில் இருந்தே அச்சிந்தனையுருவாக்கம் நிகழ்ந்ததா? இக்கேள்விகளுக்கான விடைகளை நாம் மேலோட்டமாக பார்ப்போம். அதனுடாகவே தமிழ் தேசியம் என்பதையும் யாழ் மேலாதிக்கம் என்பதையும் விளங்கிக்கொள்ளலாம்.

ஒரு சமூகமோ அல்லது ஒரு இனமோ அதன் அசைவியக்கம் சார்ந்து தனக்கான ஒரு கருத்தியலுடனேயே பயணிப்பது வழமையாகும். அந்த கருத்தியலின் உருவாக்கத்தில் அச்சமூகத்தின் சமூக பொருளாதார பண்பாட்டம்சங்களே நிச்சயம் தாக்கம் செலுத்தும். எனவே அந்த சமூக பொருளாதார பண்பாட்டு அம்சங்களில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினரின் செல்வாக்கானது அச்சமூகத்தினது கருத்தியல் உருவாக்கத்தில் பிரதான பங்கெடுக்கும்.

அந்த வகையில் தமிழ் தேசியத்தின் வேர்களாகவும் பிதாமகர்களாகவும் யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதையிட்டு ஆராய்வோமானால் பொன் இராமநாதன், ஜ ஜி பொன்னம்பலம், சுந்தரலிங்கம், எஸ் ஜே வி செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றோரை தவிக்கமுடியாது. இவர்களெல்லாம் தனவந்தர்களாகவும், பிற்போக்குவாதிகளாகவும், ஏழைகளை சுரண்டி பிழைப்போராகவும், ஆதிக்கசாதி வெறியர்களாகவும், ஆணாதிக்க மற்றும் பிரதேசவாதிகளாகவும், ஏகாதிபத்தியத்தின் முகவர்களாகவும் இருந்தார்கள் என்பது நமக்கேயுரித்தான வேதனையான வரலாறு ஆகும். இந்த பின்னணியில் இருந்துதான் தமிழ் தேசியமென்பதன் சிந்தனை மற்றும் கருத்தியல் உருவாக்கத்தில் தாக்கம் செலுத்திய வர்க்கத்தினரையும் இத்தமிழ் தேசியமென்பதன் ரிஷிமூலம் என்ன என்பதையும் நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

1920களில் பள்ளிக்கூடங்களிலே அனைத்து மாணவர்களுக்கும் சம ஆசனமும் சமபந்தி போசனமும் வழங்கப்படக்கூடாதென்றும் தாழ்த்தப்பட்ட சமூக குழந்தைகளை தள்ளி வைக்க வேண்டுமென்றும் பிரித்தானிய தேசாதிபதியிடம் சென்று தலைகீழாக நின்று வாதாடியவர் பொன்.இராமநாதன் ஆகும்.

அதேபோல எல்லோருக்கும் வாக்குரிமை வழங்க கூடாது ‘வேளாளருக்கும் தனவந்தருக்கும்’ மட்டுமே வாக்குரிமை வேண்டும் என்றும் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டால் அது கும்பலாட்சிக்கு வழிகோலும் என்று டொனமூர் ஆணைக்குழு முன் சென்று சாட்சியம் சொன்னவரும் இந்த பொன்.இராமநாதன்தான்.

1944ஆம் ஆண்டு இலவச கல்வி மசோதா முன்வைக்கப்பட்டபோது
ஜி.ஜி பொன்னம்பலம் சிறிபத்மநாதன், மற்றும் அருணாசலம் மகாதேவா போன்றோர் சட்டசபையிலே ஒருமித்து நின்று அந்த மசோதாவை எதிர்த்தார்கள்.

அதுமட்டுமல்ல ஆங்கிலத்தை அகற்றி சுயபாஷைகளை அரச கரும மொழியாக்குவோம் என்று தென்னிலங்கையில் சுயபாஷை இயக்கம் உருவானபோது அதனை கடுமையாக எதிர்த்து ‘சிங்களமும் வேண்டாம் தமிழும் வேண்டாம்’ என்று அரச கரும மொழியாக ஆங்கிலமே இருக்க வேண்டுமென்று காலனித்துவத்தின் முகவர்களாக வாதங்களை முன்வைத்தவர்கள் ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற தலைமைகளேயாகும்.

1947ல் பத்து லட்ஷம் மலையக மக்களின் வாக்குரிமையை பறிக்க காரணமான பிரசா உரிமை சட்டத்தை ஆதரித்து யுஎன்பியின் மக்கள் விரோத ஆட்சிக்கு துணைபோனவரும் இந்த பொன்னம்பலம்தான்.

இன்னுமொருவர் தமிழ்த்தேசியத்தின் தத்துவவாதி என்றும் ‘அடங்கா தமிழன்’ என்கின்ற ‘பெருமைமிகு’ அடைமொழியாலும் போற்றப்படுபவர் சுந்தரலிங்கம். அந்த மனிதனைப்போல் சாதிவெறியன் இனியொருபோதும் பிறக்க முடியாது.

1957 ல் நெற்காணி சட்டம் கொண்டுவரப்பட்டபோது செல்வநாயகம் தலைமையிலான தமிழரசு கட்சியினர் அதை எதிர்த்தனர்.

ஏழை எளிய மாணவர்களுக்கு சமபந்தி போசனத்தையும் சம ஆசனத்தையும் மறுத்தவர்கள், இலவச கல்வி கூடாது ‘கண்ட கண்டவர்களுக்கு’ கல்வி எதற்கு என்று குவித்திரிந்தவர்கள், வாக்குரிமையா ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் கூடவே கூடாது என்று கொக்கரித்தவர்கள், சுயபாஷையா? எதற்கு? ஆங்கிலத்தை அகற்றத்தேவையில்லை என்று தமது சொந்த நலன்களில் நின்று அடித்து பேசியவர்கள், மலையக மக்களை நிர்கதிக்குள்ளாக்கியவர்கள், ஏழைமக்களுக்கு காணிகளை வழங்குவதை எதிர்த்தவர்கள் எல்லோரதும் அரசியல் பரம்பரியமே இன்று வரை தொடருகின்ற தமிழ் தேசிய அரசியலாய் இருக்கின்றது.

மக்களின் நலன் சார்ந்த திட்டங்களையும் மசோதாக்களையும் எதிர்த்தவர்கள், பிரித்தானிய-சிங்கள ஆளும் வர்க்கத்தோடு இணைந்து கொண்டு ஏழை மக்களை ஒடுக்கி பிரபுத்துவ அரசியல் செய்தவர்கள் யாரோ அவர்களே துரதிஸ்ட வசமாக எமக்கு தேசியத்தை போதித்தனர்.

1947 ல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது ‘அங்கே ஜின்னா பாகிஸ்தானை பிரித்தார். இங்கே பொன்னா தமிழீழத்தை பிரித்து எடுப்பேன்’ என்று பேசித்திரிந்தார் பொன்னம்பலம். பாராளுமன்ற முறைமை அறிமுகமானபோது தேர்தல் அரசியலுக்கான இனவாத அணிதிரட்டல் ஒன்றை நோக்கியே அவரது இந்த பேச்சுக்கள் இருந்தன.

1956ல் அரச கருமமொழிச்சட்டம் வந்தபோது பிரித்தானியரின் அருவருடிகளாக ஆங்கிலம் கற்று அரச நிர்வாக அதிகாரிகளாக இலங்கையெங்கும் பரவியிருந்த யாழ்ப்பாணத்து அதிகார வர்க்கம் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டது.

1971ல் கல்வி தரப்படுத்தல் வந்தபோதும் இந்த அதிகார வர்க்கத்தின் வாரிசுகளே பாதிப்படைந்தனர். இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளவே ‘தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டது ஒட்டுமொத்த தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள்’ என்று ஒப்பாரிவைத்தனர் இந்த யாழ்ப்பாண அதிகார வர்க்கத்தினர்.

ஆனால் அதற்கு மாறாக கல்வித்தரப்படுத்தல் என்பது வடக்கு கிழக்கு மாகாணங்களில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய ஆறு மாவட்ட மக்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாய் அமைந்திருந்தன. இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குரிய இட ஒதுக்கீட்டுக்கு சமனான அந்த சட்டத்தை தமிழரசு கட்சியினர் யாழ் மேட்டுக்குடிகளின் நலன்களில் இருந்து எதிர்த்தனர்.

மூதூர் பிரதிநிதியான தங்கதுரையும் மட்டக்களப்பு பிரதிநிதியான இராஜதுரையும் கல்வி தரப்படுத்தலால் பரந்து பட்ட தமிழர்களுக்கு வரலாற்றில் முதற்தடவையாக பல்கலைக்கழக வாய்ப்புக்கள் கிடைக்கும் என்கின்ற மாற்று கருத்துக்களை தமிழரசு கட்சியில் முன்வைத்தபோது அவை புறந்தள்ளப்பட்டன. கல்வி தரப்படுத்தல் ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் எதிரான இனவாத செயற்பாடு என்றே தமிழரசு கட்சி பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது.

பிரிவினை கோரிக்கை எமது மக்களையை அழித்தொழிக்கும் என்று வட்டுக்கோட்டை மாநாட்டிலேயே வந்து சொன்னார்கள் கனவான் தேவநாயகமும் தொண்டமானும். ஆனால் கிழக்கினதும் மலையகத்தினதும் அதிருப்திகளை அமிர்தலிங்கம் போன்றோர் கருத்தில் கொள்ளவில்லை.

யாழ்-மேட்டுக்குடிகள் யாழ்ப்பாணத்துக்கு உள்ளே ஒடுக்கப்பட்ட மக்களினதும் யாழ்ப்பாணத்துக்கு வெளியே வாழும் ஏனைய பிரதேச மக்களினதும் சமூக பொருளாதார வாழ்வியல் பிரச்சனைகளை பின்தள்ளி தாமும் தமது வாரிசுகளும் எதிர்கொண்ட உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சனைகள் மட்டுமே அனைத்து தமிழருக்கும் உரியதான பிரச்சனைகளாக அரசியல் மயப்படுத்தினர். தமது நலன்களை அடிப்படையாக கொண்டே ஆயுத போராட்டத்தை முன்மொழிந்தனர். அதையே தமிழ் தேசியமென்றனர். தமிழீழ கோரிக்கையை பிறப்பித்தனர்.

இதுதான் யாழ் மையவாத சிந்தனை ஆகும். ஒரு சமூகத்தில் மேலாட்சி செலுத்துபவர்கள் தமது நலன்களில் மட்டுமே மையம்கொள்ளும் சிந்தனையின் வழியிலேயே அனைவரையும் பயணிக்க கோருவதும் அதுவே தமிழ் தேசியம் என்று முழங்குவதும் மேலாதிக்கமாகும்.

அதனால்தான் 1960-1970 காலப்பகுதியில் வடமாகாணத்தில் வெளிக்கிளம்பிய சாதி தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை தலைமையேற்று நடத்த அன்றைய காலத்தில் முக்கிய அரசியல் சக்திகளாக இருந்த தமிழ் காங்கிரசும் தமிழரசு கட்சியும் முன்வரவில்லை. அது முழுக்க முழுக்க வர்க்க அரசியல் பேசுகின்ற இடதுசாரி கட்சிகளாலேயே வழிநடத்தப்பட்டது. அதுமட்டுமன்றி அந்த சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை பாராளுமன்றத்தில் கிண்டலடித்து உரையாற்றினார் தளபதி அமிர்தலிங்கம். தமிழ் தேசியத்தின் தந்தை என்று விளிக்கப்படுகின்ற செல்வநாயகமோ ‘நான் கிறிஸ்தவன் இது இந்துக்களின் பிரச்சனை’ என்று ஒதுங்கிக்கொண்டார்.

ஆனால் தேசியமென்பது சமூகத்தில் ஒடுக்கப்படுகின்ற சாமானிய மக்களின் பிரச்சனைகளை புறமொதுக்கி ஆதிக்க வர்க்க நலன்களை முதனிலைப்படுத்துவது அல்ல. மேட்டுக்குடிகளின் பிரச்சனைகளை ஒட்டுமொத்த இனத்தின் அரசியல் அபிலாசைகளாக மேலிருந்து கீழ் நோக்கி திணிப்பதற்கு பெயர் தேசியமல்ல. மாறாக பரந்துபட்டு பெரும்பான்மையாக வாழும் அடித்தள மக்களிடமிருந்து அவர்களின் பிரச்சனைகளில் மையம்கொண்டு கீழிருந்து மேலாக பரந்து விரிய வேண்டியதே தேசியவாத குரலாகும். தேசியம் என்பது வெறும் சொல்லாடல் அல்ல. அது குறிக்கின்ற எல்லைக்குள் வாழும் முழு சமுதாயங்களினதும் வளர்ச்சிக்கான கருத்தியலாக இருக்கவேண்டும்.

ஒரு தேசியவாதத்தின் தொடக்கத்தில் அந்த இனத்தின் சிந்தனை மட்டத்தில் மேலாதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் பிரச்சனைகளே முன்னிறுத்தப்படுவது சிலவேளைகளில் தவிர்க்க முடியாதது ஆகும். ஆனால் காலப்போக்கில் அனைத்து மக்களது குறைபாடுகளையும் உள்வாங்கி தன்னை முற்போக்கான தேசியமாக வளர்த்துக்கொள்வதுண்டு. ஆனால் தமிழ் தேசியத்தில் அது இம்மியளவும் சாத்தியமாகவில்லை.

ஒரு தேசிய இனத்தின் முதன்நிலை பண்பு கூறுகளான மொழி நிலம் பண்பாடு பொருளாதாரம் என்பவற்றை வெறும் சடத்துவ நோக்கில் அணுகுவதால் மட்டும் தேசிய கூட்டுணர்வை உருவாக்கி விட முடியாது. வடக்குக்கும் கிழக்குக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான (மடுவென்பது கிடங்கெனக்கொள்க) அரசியல்,பொருளாதார,பண்பாட்டு வித்தியாசங்கள் குவிந்து கிடக்கின்றன. வரலாற்று ரீதியாக ஒருபோதும் வடக்குக்கும் கிழக்குக்குமான ஒரே அரசியல் தலைமை இருந்ததுமில்லை.

அதையும் தாண்டி வடக்கில் எங்கே பொதுப்பண்பாடு காணப்படுகின்றது. யாழ்ப்பாண சமூகம் என்பது சாதிகளால் கட்டமைக்கப்பட்ட அதிகார படிநிலை சமூகமாகும். சாதிக்கொரு சவக்காலையும் சாதிக்கொரு வீதியும் சாதிக்கொரு கோவிலும் வைத்துக்கொண்டு தமிழினத்துக்கான பொதுப்பண்பாட்டை எப்படி உருவாக்க முடியும்? எல்லோருக்குமான சமூகநீதியை எங்கே தேடுவது? நாமெல்லோரும் ஓரினம் என்னும் கூட்டுணர்வு எப்படி சாத்தியமாகும்? இன்றுவரை அகமண முறையை கைவிட தயாரில்லாது சாதிகளின் பொருட்காட்சி சாலையாக தோற்றமளிக்கும் யாழ்ப்பாணத்தில் வாழுவது ஓரினமா? அன்றி ஒரே மொழி பேசும் பல பழங்குடியினங்களா என்று கேட்க தோன்றுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இன்றுவரை பல கோவில்கள் தலித் மக்களுக்காக பூட்டிக்கிடக்கின்றன. ‘ஊர்கூடி தேரிழுப்பதென்பது’ முதுமொழி. ஆனால் ஊரிலுள்ள ஆதிக்க சாதிகள் புலம்பெயர்ந்து போனபின்பு தேரிழுக்க உயர்குடிகள் இல்லை என்பதால் ஜெஸிபி மெசினை கொண்டு தேரிழுக்கின்றோம் எதற்காக? தலித் மக்களை தேரில் கை வைக்க விடக்கூடாதென்பதற்காகத்தானே, தேர் தீட்டு பட்டுவிடும் என்பதற்காகத்தானே. இந்த நிலையில் தமிழருக்கான பொது பண்பாடு எங்கேஇருக்கின்றது? இருப்பதெல்லாம் வெறும் சாதிய பண்பாடு மாத்திரமேயாகும். அவற்றை கட்டிக்காப்பதுவும் யாழ்ப்பாண- மேலாதிக்கம்தான் நாம் குரல் கொடுப்பது யாழ்பாணத்து மேலாதிக்கத்தால் ஒடுக்கப்படும் ஏழைகள் மற்றும் சாதியரீதியில் ஒடுக்கப்படும் தலித் மக்களுக்காகவும்தான்.

இந்த லட்ஷணத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற கட்சிகளின் தலைவர்களில், பாராளுமன்ற உறுப்பினர்களில், மாகாண சபை உறுப்பினர்களில் யாதொருவராயினும் தாழ்த்தப்பட்ட குலத்தவர் உண்டோ என்கின்ற கேள்வியெழுப்புதல் அவசியமற்றது ஆகும். அப்படி எதுமே இன்னும் சாத்தியமாகவில்லை. ஆனால் தமிழ் மக்களின் நலன்சார்ந்து ஒரு சிறு துரும்பையேனும் நகர்த்திய வரலாற்றை கொண்டிராத கறுவாக்காட்டு பரம்பரைகளான சுமந்திரனும்,விக்கினேஸ்வரனும்,கஜேந்திரகுமாரும் மக்களின் தலைவர்களாக வலம் வர முடிகின்றது.

உண்மையில் தமிழ் தேசிய கொள்கை சார்ந்து தேர்தல் அரசியலுக்கு அப்பால் எத்தனை சிவில் அமைப்புக்கள் செயலாற்றுகின்றன? எத்தனை தன்னுரிமை செயற்பாட்டாளர்கள் களத்தில் வேலை செய்கின்றனர்? என்று கேட்டால் என்ன பதில்? வெறுமனே வாக்கு வங்கி அரசியலுக்காகவே இந்த தமிழ் தேசியவாத பிதற்றல்களை யாழ்ப்பாண கட்சிகள் காவித்திரிகின்றன என்பதே உண்மையாகும். அதனாற்தான் இந்த யாழ் மேட்டுக்குடிகள் பேசுகின்ற தேசியம் என்பது போலியானது. மக்களை ஏமாற்றி மேட்டுக்குடிகளின் நலன்களை மட்டுமே பூர்த்திசெய்கின்ற கபட நோக்கம் கொண்டது என்று சொல்லுகின்றோம்.

ஆனால் தேசியவாதமென்பது இதுவல்ல. பொங்கு தமிழ் ஆரவாரம் பண்ணி மக்களை அணிதிரட்டுவதாலோ பொங்காத தமிழ் ஆர்ப்பரிப்போ செய்து தென்னிலங்கைக்கு சவால் விடுவதாலோ தமிழ் தேசியம் தழைத்தோங்க முடியாது. பூர்வீகம் பற்றிய புல்லரிக்கும் வீர வசனங்களாலோ முள்ளி வாய்க்காலில் சத்தியப்பிரமாணம் எடுக்கின்ற ஆசாமிகளாலோ தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முடியாது.

தேசியம் என்பது பற்றி ரஷ்ய புரட்சியாளன் லெனின் என்ன சொன்னார்? ஸ்டாலின் என்ன சொன்னார்? அல்லது ரோசா லுக்சம்பேக் என்ன சொன்னார்? பெனடிக் ஆண்டர்சன் என்ன சொன்னார்? அந்தோனியா கிராம்சி என்ன சொன்னார்? எரிக் ஹாப்ஸ்வாம் என்ன சொன்னார்? என்பதெல்லாம் நமக்கு புதியவையல்ல. இவையனைத்தையும் எமது முன்னோர்களே சொல்லிச்சென்றுள்ளனர்.

‘துடியன்,பாணன் கடம்பன்,பறையன் என இந்நான்கல்லது குடியும் இலவே’ என்கின்றது புறநானுற்று அறம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பான் கணியன் பூங்குன்றனார் என்னும் சங்ககால தமிழ் புலவன். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பார் திருவள்ளுவர்.

இவைதான் அனைவரையும் உள்ளீர்க்கின்ற தேசிய தர்மம் ஆகும். தமிழர்தம் தேசியத்தின் போற்றத்தக்க முதிசங்கள் இவையே ஆகும். இத்தகைய அரவணைப்பிலும் அகன்று விரிந்த மனப்பான்மையிலும் உருவாகின்ற தமிழுணர்வுதான் தமிழ் தேசியத்தின் அடிப்படையாக இருக்க முடியும்.

தேசியவாதமென்பது இன வெறி, மதவெறி, சாதிய ஆதிக்கம், தனவந்தரதிகாரம், பிரதேச வெறி, ஆணாதிக்கம், பரம்பரையதிகாரம், சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் சுரண்டல், ஏகாதிபத்தியம் போன்ற அனைத்துவித அதிகாரங்களுக்கும் எதிரான ஒருமித்த குரல்களின் சங்கமமாக உருப்பெறவேண்டியதாகும். அதனுடாக சுயநிர்ணயம் கொண்ட வன்முறையற்ற சமூகநீதியுடன் கூடிய சமத்துவ சமூகத்தை கட்டியெழுப்பும் இலட்சிய வேட்கை கொண்டதே தேசியவாதமாகும்.

ஆனால் நமது தமிழ் தேசியமோ யாழ்பாணத்து மேட்டுக்குடிகளின் மையத்தில் நின்றுகொண்டு இவன் பள்ளன், இவன் பறையன் அவன் வன்னிக்காட்டான், அடுத்தவன் மட்டக்களப்பு மடையன், அதற்கப்பால் சோனி, தொலைவில் இருப்பவன் தோட்டக்காட்டான் என்று வக்கணம் சொல்லி சொல்லியே தன்னை உருவாக்கியது. பன்மைத்துவ தன்னிலைகளையும் தனித்துவங்களையும் அங்கீகரித்து உள்ளீர்ப்பதற்கு பதிலாக அனைவரையும் நிராகரித்து தனிமையப்படுத்தி வெளித்தள்ளியது.

நாம் வாழுகின்ற மண்ணையும்,காற்றையும்,கடலையும், நீர்நிலைகளையும் பேணிப்பாதுகாத்தலே இந்த தேசியத்தின் அடிப்படையாகும். அதற்காகவே ஆளும் உரிமையை நாம் கோருகின்றோம் என்பதே அதன் தாற்பரியமாகும். அதேபோன்று அனைவரும் சமம் என்பதும், நாமெல்லாம் ஒரே இனமென்பதும் மனதளவிலும் செயலளவிலும் திரளாகின்ற உணர்வே தேசிய உணர்வாகும்.

செல்வநாயகம் 1949 ஆம் ஆண்டு தமிழரசு கட்சியை தொடங்கி கிழக்கு மாகாணத்துக்கு வந்து தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றாகி அணிதிரளுங்கள் சமஷ்டியை பெற்றுத்தருகின்றேன் என்று அறைகூவல் விடுத்தார். அப்போது சமஸ்டி சாத்தியமில்லாதது,கிழக்கு மூவினங்களும் வாழும் இடம் இங்கே இனவாத அரசியல் வேண்டாம், இரத்த ஆறு ஓட வழிவகுக்க வேண்டாம் என்று செல்வநாயகத்தை எச்சரித்தார் மட்டக்களப்பின் நல்லையா மாஸ்டர் என்னும் பெருந்தகை. பதிலுக்கு கிழக்குமாகாணத்தின் சமூக, பொருளாதார, கல்வி, சுகாதார, மேம்பாட்டுக்காக அயராது பாடுபட்டு சாதனை புரிந்த அந்த மகானை அரச கைக்கூலி என்று பிரச்சாரம் செய்து தோற்கடித்தது தமிழரசு கட்சி.

மறுபுறம் செல்வநாயகத்தின் அறைகூவலின் பின்னால் ஒன்றுபடுவோம் என்று சொல்லி தமிழரசு கட்சியை கிழக்கு மாகாணத்தின் மூலை முடுக்குகளெல்லாம் கொண்டு சென்று வளர்த்து 1977ல் தமிழர் தலைவராக மட்டக்களப்பிலிருந்து மேலெழுந்து வந்த இராஜதுரைக்கு என்ன நடந்தது? அவரை வஞ்சித்து, ஒதுக்கி, துரோகியாக்கி வெளியேற்றியது தமிழரசுகட்சி. சொல்லப்பட்ட காரணம் என்னதெரியுமா? 1978ஆம் ஆண்டு சூறாவளியால் அழிந்து கிடந்த மட்டக்களப்பை பார்வையிட வந்த பிரதமர் ‘பிரேமதாசாவை வரவேற்கச்சென்றது குற்றம்’ என்றது அமிர்தலிங்கத்தின் குற்றப்பத்திரிகை. அத்தனைக்கு பின்னரும் கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரலில் செல்வநாயகத்தின் 35 வது நினைவு கூட்டமொன்றுக்காக யாழ்ப்பாணம் சென்ற ராஜதுரையை ‘மட்டக்களப்பு சக்கிலியா’ ‘துரோகி’ என்று துரத்தினார் சிவாஜிலிங்கம் என்கின்ற தமிழ் தேசிய பித்தர்.

* யாழ் மேயரான செல்லன் கந்தயன் யாழ்- நூலகத்தை திறந்துவைத்தல் கூடாது என்கின்ற மேட்டுக்குடிகளுக்கு ஒத்தாசை வழங்கி திறப்புவிழாவை தடுத்து நிறுத்தினர் தமிழீழவிடுதலைப்புலிகள்.

*தமிழ் பேசும் இஸ்லாமியரை தமிழ் தேசியத்துக்கு வெளியே துரத்தியடித்தனர் தமிழீழ விடுதலைப்புலிகள்.

*2004 ல் தமிழீழத்தின் நிழல் நிர்வாக கட்டமைப்புக்கு 32 துறை செயலாளர்களை தமிழீழ விடுதலை புலிகள் நியமித்தபோது 31 செயலர்களை வடமாகாணத்துக்குள் சுருட்டிக்கொள்ளுதல் தகுமோ? என்று கேட்ட கருணாம்மானை துரோகி என்று அறிவித்து வெருகல் படுகொலைக்கு ஆணையிட்ட அன்றே அறுந்து போனது வடக்கு கிழக்கு தாயக உறவு.

பிரபாகரனது முப்பத்துவருட ஆயுதப்போராட்டம் தமிழ் பேசும் மக்களின் (சாதி,மத, பிரதேச,) பன்மைத்துவத்துவ குரல்களை அங்கீகரிக்க மறுத்து வீணாகி மண்ணோடு மண்ணாகிப்போனது..

இப்போது கிறிஸ்தவரையும் கழித்துவிட்டு இந்து கட்சிகளின் உருவாக்கத்துக்கு அத்திவாரம் இட்டுக்கொண்டிருக்கின்றது. யாழ்-மையவாத சிந்தனை முகாம். அதனை மூத்த தமிழீழவாதிகளில் ஒருவரான மறவன் புலவு சச்சுதானந்தம் கச்சிதமாகவே செய்து வருகின்றார்.

அண்மைக்காலமாக பெண்களின் குரலை உதாசீனம் செய்துவருகின்றது தமிழரசுக்கட்சி. கடந்த தேர்தலில் மட்டக்களப்பு மங்களேஸ்வரி சங்கருக்கு வேட்பாளர் வாய்ப்பு மறுக்கப்பட்டமைக்கு சுமந்திரன் சொன்ன காரணம். ‘அவர் துரோகம் செய்ய கூடியவர்’ என்று முன்னரே உணர்ந்தாராம் சுமந்திரன். இப்படி அவரே முடிவெடுப்பதென்றால் கட்சியின் செயலாளர் பதவியை துரைராசசிங்கத்துக்கு கறிவேப்பிலைக்கா கொடுத்து வைத்திருக்கின்றது தமிழரசு கட்சி? இதைத்தான் யாழ் மேலாதிக்கம் என்கின்றோம். ஒரு கணவனை இழந்த பெண் என்னும் வகையில் சசிகலா ரவிராஜை வைத்து வாக்குசேகரிக்க முயன்றது தமிழரசு கட்சி. அதன்பின்னர் அவருக்கு நடந்த அநியாயத்துக்கு விளக்கம் தேவையில்லை.

தமிழ் சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்துகின்ற இந்த யாழ்ப்பாண மேட்டிமை சக்திகளிடத்தில் உண்மையான தமிழ் தேசிய சிந்தனை இல்லை. இருப்பதெல்லாம் ஆதிக்க சிந்தனை மட்டுமேயாகும். அதில் சிங்களவர்களிடமிருந்து அதிகாரத்தை கைமாறி புதிய எஜமானர்களாக தங்களுக்கு முடி சூட்டி கொள்ளுகின்ற கபட நோக்கம் மட்டுமே மறைந்திருக்கின்றது. அதுவே வடமாகாண சபை முதலமைச்சர் விடயத்திலும் நடந்தேறியது.

நம்மை நாமே ஆளுதல் என்கின்ற அற்புதமான சிந்தனை ஆட்சியாளர்களை அடையாளமிட்டு மலினப்படுத்தப்பட்டுவிட்டது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு பதிலாக தமிழ் எம்பிக்களும் அமைச்சர்களும் முதலமைச்சரும் வந்துவிட்டால் தமிழ் தேசியம் தழைத்தோங்கும் என்று அப்பாவித்தனமாக நம்பவைக்கப்பட்டுள்ளனர் எமது மக்கள். வெறும் இனவாத வெறியை விதைத்து ஆளுவதற்கான உரிமைக்காக மட்டுமே போராட்டம் என்கின்ற எளிமைப்படுத்தப்பட்ட கருத்துருவமே சாமானிய மக்களின் மனநிலையில் ஆழமாக பதிய வைக்கப்பட்டுள்ளது..

இதுவரைகாலமும் தமிழ் தேசியத்தை தலைமையேற்று வழிநடத்தியவர்களில் அநேகமானோர் யாழ்- மேட்டுக்குடி நலன்களில் மையம்கொண்டுள்ள ஆதிக்க சிந்தனைக்கு மாற்றானவர்களாய் இருக்கவில்லை. அப்படியிருக்க முனைந்த ஒரு சிலரும் மைய நீரோட்ட அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டனர். ஒதுக்கப்பட்டனர். அல்லது துரோகிகள் என்று கொன்றொழிக்கப்பட்டனர். இத்தகைய கேடுகெட்ட யாழ்-மேட்டுக்குடி தலைமைகளுடைய ஆதிக்க சிந்தனையின் அம்மணத்தை மறைக்க தேசியம் என்றும் தாயகமென்றும் விடுதலையுணர்வு என்றும் வேசம்கட்டுவதற்கு பெயர்தான் யாழ்- மேலாதிக்கம் என்பதாகும்.

அதனால்தான் சொல்கின்றோம். இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழீழம் என்பது யாழ்-மேலாதிக்க தமிழீழம்தான் . இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழ் தேசியம் என்பது யாழ் மேலாதிக்க தமிழ் தேசியம்தான். இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழ் நோக்கு என்பதும் யாழ் மேலாதிக்க தமிழ் நோக்குத்தான். என்றொருநாள் தமிழ் பேசும் மக்களின் தலைமையானது யாழ்-மேட்டுக்குடிகளிடமிருந்து கைமாறுகின்றதோ அன்றுதான் தமிழர்களின் நன்னாள் தொடங்கும். (Source: padakutv.lk)

வட – கிழக்கில் கூட்டமைப்பின் சரிவும், 2020 தேர்தல் முடிவுகள் தந்த படிப்பினைகளும்! – அருண்மொழி

நடந்து முடிந்த இலங்கையினுடைய ஒன்பதாவது பாராளுமன்றத்தேர்தல் இலங்கையின் அரசியல் பொருட்டு எதிர்பார்க்காத பல திருப்பங்களை வழங்கியுள்ளது. குறிப்பாக இலங்கையை அடுத்த 05 ஆண்டுகள் ஆள்வதற்கான ஆணையை பொதுஜன பெரமுன  கட்சிக்கு வழங்கியுள்ள மக்களுடைய தீர்ப்பானது பழம்பெரும் கட்சிகளைஅரசியல் அரியாசனத்திலிருத்தே தூரத்தூக்கி வீசிவிட்ட சோகமும் இந்த தேர்தலில் இடம்பெற்றுள்ளது. இலங்கையின் மத்திய ஆட்சி நிலை மாற்றங்கள் இவ்வாறு இருக்க  தமிழர் அரசியல் சார்ந்து இருக்கக்கூடிய அபத்தங்களையும் ஒரு விதமான அரசியல் வெற்றிடத்தையும் இந்தத்தேர்தல் தோலுரித்துக்காட்டியுள்ளதுடன் எதிர்கால நகர்வுகள் எத்தன்மையனவாக அமையும் வேண்டும் என்பதையும் சிந்திக்கச்செய்திருக்கின்றன இந்தத்தேர்தல் முடிவுகள். இந்த கட்டுரையின் நோக்கமும் 2020 தேர்தல் முடிவுகள் கற்றுந்தந்த பாடங்கள் என்ன என்பதை தமிழர் தாயகமான வட-கிழக்கை மையப்படுத்தி நோக்குவதாக அமைந்து கொள்கின்றது.
தமிழர்களின் உரிமைகளை வேண்டிய தமிழ்தேசிய கோரிக்கைகளுடனான ஆயுதப்போராட்டமானது மௌனித்துப்போய் கிட்டத்தட்ட  10 வருடங்கள் கடந்து போயுள்ள நிலையில் அரசியல் ரீதியான வழிமுறைகளே இறுதியானது என்ற முடிவுக்குள் வந்துள்ள தமிழினமானது 2009 இன் பின்னர் இரண்டு பாராளுமன்றத்தேர்தல்களை சந்தித்துள்ள போதிலும் கூட தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கான எந்த தீர்வுககளும் இது வரையில் கிடைத்திருக்கவில்லை. அதன் தொடர்ச்சியான மூன்றாவதும் தீர்க்கமானதுமான தேர்தல் முடிவுகளில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது கணிசமான மாற்றங்களை காணக்கூடியதாக உள்ளது. அதாவது 2010 தொடங்கியது முதல் தேசியம்/ தமிழர் தாயகம் என்ற விடயத்துக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து வந்த தமிழ்மக்களுடைய முடிவுகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை காண முடிகின்றது. அதிலும் குறிப்பாக தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு இதுவரை காணப்பட்ட வாக்கு வங்கி சரி அரைவாசிக்கு குறைவடைந்துள்ளதுடன் வடக்கு – கிழக்கு இலங்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு வாக்கு சிதறல் அதிகரித்துள்ளதுடன் மக்களில் கணிசமான தொகையினர்  பொருளாதார அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்பவற்றை  மையப்படுத்திய அரசாங்கத்துடன் சார்ந்த  அரசியல் கட்சிகளின் பக்கம் கவனம் செலுத்தியுள்ளமையும் துலாம்பரமாக வெளிப்படக் காணலாம். தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக வடக்கு – கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள இந்த எதிர்ப்பு மனோநிலை,  தமிழர் அரசியல் தொடர்பாக காணப்படும் வெறுமை , மக்களுடைய மனநிலை போன்ற விடயங்கள் நன்கு ஆராயப்பட வேண்டியனவாகும்.
2009 ஆம் ஆண்டு தமிழர்களின் ஆயுதப்போராட்டமானது மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ் மக்களுடைய அரசியல் சார் அபிலாசைகளை காவிச்சென்ற அல்லது செல்லக்கூடிய ஒரு அமைப்பாக மக்களின் ஒரே தெரிவாக காணப்பட்டது இலங்கை தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்தேசிய கூட்டமைப்பு மட்டுமேயாகும். இந்த நிலையில் யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பாராளுமன்ற தேர்தல்களாகட்டும், ஜனாதிபதி தேர்தலாகட்டும், மாகாண மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களிலும் கூட தமிழ் மக்கள் 2009 முதல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முடிவுகளுக்கே பெரும்பாலும் கட்டுப்பட்டோராக காணப்பட்டனர். எனினும் 2020 தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பினுடைய வாக்குவங்கியில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த ஆகப்பெரிய பின்னடைவுக்கான காரணங்களை முதலில் அறிந்து கொள்ளுதல் தலையாயது. கடந்து முடிந்த ஒரு தசாப்பத காலத்தில் தமிழ்  மக்கள் அதிகம் விரும்பிய நம்பியிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்களினால் தமிழ்மக்களுடைய அரசியல் பிரச்சினைகளுக்கு எது விதமான ஆரோக்கியமான முடிவுகளையும் எட்ட முடியவில்லை என்ற விரக்தியான மனநிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டு விட்டனர் என்பதே ஆகப்பெரிய அபத்தமாகும். இந்த நிலையிலேயே தமிழ்தேசிய கூட்டமைப்பு மீதான வெறுப்புணர்வும் தமிழர்களிடையே அதிகரிக்க ஆரம்பித்தது. குறிப்பாக நல்லாட்சி அரசினை பாதுகாக்க தமிழ்தேசிய கூட்டமைப்பினர் அதிக பிரயத்தனம் மேற்கொண்ட அளவிற்கு கூட தமிழர் பிரச்சினைகளில் கூட்டமைப்பு கவனம் செலுத்தவில்லை. இராணுவமயப்படுத்தலிலுள்ள தமிழர் காணிகளை விடுவிப்பதிலோ அல்லது சிங்கள மயப்படுத்தப்பட்ட / சிங்கள மயப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழர் பகுதிகளை மீட்பதிலோ பெரியளவிலான அக்கறை காட்டமை, தமிழ்தேசிய நீக்க அரசியலை கையிலெடுத்தமை, சுமந்திரனை மையப்படுத்திய அரசியல் போக்கை கடைப்பிடித்தமை , அபிவிருத்தி சார்ந்து முன்னேற்றகரமான திட்டங்களை வடக்கு – கிழக்கில் முன்னெடுக்காமை,  வேலையில்லா பிரச்சினைகளுக்கான தீர்வுத்திட்டங்களை செயற்படுத்தாமை, வலிந்து காணாமலாக்கப்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அலட்டிக்கொள்ளாமை என பல காரணங்களிடைப்படையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீதான வெறுப்புணர்வு இன்னும் தீவிரமாகியதே தவிர குறைந்தபாடில்லை.
இந்த அடிப்படையிலாக கூட்டமைப்பின் மீதான ஒரு வெறுப்பான மனோநிலை மக்களை அதற்கு மாற்றீடான புதிய கட்சிகளின் பக்கம் சாரவும்,  அபிவிருத்தியை நோக்கி மக்கள் சிந்தனை நகரவும் காரணமானது. இந்த ஒரு புள்ளியிலிருந்தே 2020 பாராளுமன்றத்தேர்தலுக்கான பிரச்சாரங்கள் ஆரம்பித்திருந்தன.  தமிழ்தேசிய கூட்டமைபின் மீது தமிழ்மக்களுக்கு ஏற்பட்டிருந்த வெறுப்பு மனோநிலை தமிழ்தேசியம் பேசிய அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சி மீதும் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மீதும் ஒரு தொகுதி மக்களுடைய பார்வை திரும்ப காரணமானது. அது மட்டுமன்றி அபிவிருத்தி நோக்கிய மக்களுடைய பார்வை அரசுடன் இணைந்து பயணிக்க கூடிய தலைவர்கள் மூலமாகவே அது கிடைக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டதுடன் வடக்கு – கிழக்கில் அரசுடன் இணையவுள்ள கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அவர்களுடைய வாக்குகள் ஒருங்கு சேர காரணமானது. இந்த வகை கட்சிகளான ஈ.பி.டி.பி,  அங்கஜனை முதன்மை வேட்பாளாராக கொண்டு களமிறங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போன்ற கட்சிகள் பெற்ற  முழுமையான வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு கிட்டியதாக உள்ளது யாழ் தேர்தல் தொகுதியில் மட்டும். அதுபோல வடக்கு கிழக்கில் பொதுஜன  பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி,  தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கடசி, ஈ.பி.டீ.பி,ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி என்பனவற்றுக்கு  கிடைத்துள்ள ஆசனங்கள் என எல்லாமுமாக சேர்த்து கிட்டத்தட்ட 17 ஆசனங்களாகும். இது  வடகிழக்கில் கூட்டமைப்பின் ஆசனங்களை விட   அதிகமாகும். சுருக்கமாக சொல்லப்போனால் இந்த சிதறுண்ட ஆசனங்கள் யாவுமே முழுமையாக தமிழ்மக்கள் தங்களுடைய தலைமைக்கட்சியாக எண்ணிய  தமிழ்தேசிய கூட்டமைப்பினுடைய கடந்தகால  தூரநோக்கற்ற அரசியல் நகர்வுகளாலும் தமிழர் தலைமைகளிடையே காணப்பட்ட  ஒற்றுமையீனத்தாலும் அரசியல்தீர்வு , பொருளாதார அபிவிருத்தி என்ற இரண்டு தளங்களிலும் 2009ன் பின்னரான அடைவுமட்டங்களில் மாற்றங்களின்மையாலும்    மக்களுக்கு ஏற்பட்ட விரக்தி நிலையினுடைய வெளிப்பாடே  என்பதை தமிழ்தேசியம் பேசும் தலைமைகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கடந்த கால நல்லாட்சி அரசில் பெற முடியாத எதனையும் இன்றைய பொதுஜன பெரமுனபாராளுமன்றில் அல்லது ஆட்சியில் நினைத்தும் பார்க்க முடியாது. ஏனெனில் பொதுஜன பெரமுன எனும் ராஜபக்சக்களின் கட்டமைப்பில் தீவிர சிங்கள மக்களின் வாக்குகளே அதிகம் குவிந்துள்ளமையால் இந்த அரசில் தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பான விடயங்களை நினைத்துப்பார்ப்பதென்பது குதிரைக்கொம்பு போன்றதே. இது ஒரு புறமிருக்க ஜனாதிபதி தேர்தல் வெற்றியை தொடர்ந்து இந்திய விஜயத்தினை மேற்கொண்டிருந்த கோட்டபாய ராஜபக்ஷ அவர்களிடம் இந்தியப்பிரதமர் மோடி தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினை பற்றி பேசிய போது தமிழ்மக்களுக்கு அரசியல் பிரச்சினைகள் எவையுமேயில்லை. தீர்க்கப்பட வேண்டிய பொருளாதார அபிவிருத்தி சார் நடவடிக்கைகளே உள்ளன எனக்குறிப்பிட்டிருப்பதும் நோக்கத்தக்கது.  இவ்வாறான ஒரு அரசிடம் இருந்து தமிழரின் அரசியல் சார் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக முழுமுயற்சியுடன் செயற்பட வேண்டிய தேவை தமிழ்தேசியம் பேசிய பாராளுமன்ற தலைவர்களிடம் காணப்படுவதுடன் சர்வதேசத்திற்கும் எங்களுடைய பிரச்சினைகளை இடித்துரைக்க வேண்டிய தமிழ்மக்களின் பிரதிநிதிகள் இவர்கள் என்பதையும் புரிந்து செயலாற்ற வேண்டியவர்களாக உள்ளனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு மறுநாள் காலை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரன் அவர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,  சி.வி விக்னேஸ்வரன் போன்றோரை இணைந்து செயற்பட அழைப்பு விடுத்திருந்தார். இது எந்தளவு தூரம் அகவயமானது என்பது கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியது.
வடக்கை பொறுத்த வரை அங்கஜனுக்கு கிடைத்த ஒரு ஆசனம் ஈ.பி.டி.பிக்கு கிடைத்த இரு ஆசனங்கள், பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்திக்கு வன்னியில் கிடைத்த தலா ஒரு ஆசனங்கள் அபிவிருத்திக்காக கிடத்த ஆசனம் என ஒரு விதமாக கூறப்பட்டாலும் கூட யாழில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , சீ.வி.விக்னேஸ்வரன் போன்றோருக்கு கிடைத்த  ஆசனங்கள் தமிழ்தேசியகொள்கைக்கு கிடைத்த ஆசனங்களேயாகும் . இதே நேரத்தில் தமிழ்தேசியம் பேசிய கட்சிகள் பொருளாதார மேம்பாடு பற்றி  பேசாமையை காரணம் காட்டியே அங்கஜன் அவர்களுடைய வாக்கு வங்கி நிரப்பப்பட்டது. அது போல வன்னி தேர்தல் தொகுதியை பொருத்த மட்டில் தமிழ்தேசிய தலைவர்களிடம் காணப்பட்ட ஒற்றுமையில்லாத நிலையே வன்னி வாக்குச்சிதைவுக்கு காரணமானது.  அது மட்டுமன்றி தமிழ் மக்கள்  தேசிய கூட்டணிக்கு வன்னி தேர்தல் தொகுதியில் பெரிய பரீட்சையமின்மையால் சிவசக்தி ஆனந்தனுக்கு சென்ற தேர்தலில் கிடைத்த ஆசனம் இந்த தடவை இல்லாது போனது. இந்த அடிப்படையிலே ஈ.பி.டி.பி கட்சிக்கான ஒரு ஆசனம் வன்னியில் பங்கிடப்பட்டது. இந்த இடத்தில் தமிழ்தேசியம் பேசும் பாராளுமன்ற  தலைமைகளிடம் பெரிய பொறுப்பு ஒன்று காணப்படுவதை விளங்கிக்கொள்ள வேண்டும். அரசியல் தீர்வுகளை மையப்படுத்தி நகர்வது தமிழர்கள் பொருட்டு எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியமானது பொருளாதார அபிவிருத்தி நோக்கிய பயணங்கள். அதற்காகவும் சேர்த்து இனிமேல் செயற்ப்பட வேண்டும்.
அடுத்ததாக கிழக்கின் நிலை பற்றியும் அதீத கவனம் செலுத்த வேண்டிள்ளது.கடந்த கால நல்லாட்சி அரசிலும் சரி அதற்கு முற்பட்ட காலம் 2010இல் இருந்தே நாம் படிப்படியாக இழக்க தொடங்கி விட்ட ஒரு பகுதியாக கிழக்கு உள்ளது. குறிப்பாக இந்த தேர்தல் முடிவுகளின் படி மட்டக்களப்பில் இரண்டு ஆசனங்களும் திருகோணமலையில் ஒரு ஆசனமுமே கூட்டமைப்புக்கு கிடைத்துள்ளது. அதே நேரத்தில் கடந்த காலத்தில் அம்பாறையில் காணப்பட்ட நிலையை விடஇந்த தடவை மிக மோசமானதாகவே உள்ளது.  அம்பாறையில் பொதுஜன பெரமுன கட்சி பெற்ற மொத்தமான வாக்குககள் 1,29,012 ஆக காணப்பட கூட்டமைப்பு வெறுமனே 25,255 வாக்குகளையே பெற்றது. மேலும் அம்பாறையில் இருந்த ஒரு நேரடி தமிழ்கட்சியின் கடந்த கால ஆசனமும் பறிபோயுள்ளது என்பதே கசப்பான உண்மை. இது ஒருபுறமிருக்க திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையே கூட்டமைப்பால் தக்கவைத்துக்கொள்ள முடிந்தமை கிழக்கில் தமிழர்தாயகம் என்ற நிலைக்கு விழுந்த மிகப்பெரிய சறுக்கலேயாகும். இதுதவிர மட்டக்களப்பில் நான்கு ஆசனங்கள் தமிழருடைய ஆசனங்கள் எனக்குறிப்பிட்டு மார்தட்டிக்கொள்ளும் போதிலும் கூட சாணக்யாராஹுல் கடந்த காலங்களில் அரசுதரப்பு கட்சிகளுடன் பயணித்து இந்த தேர்தலில் கூட்டமைப்பில் நின்று வெற்றிபெற்றுள்ளார். பிள்ளையான் மற்றும்  வியாழேந்திரன் ஆகியோருடைய ஆசனங்கள்  அரசினுடைய கொள்கைகளுக்கு ஆதரவான ஒரு போக்கிலேயே அமைந்து கொள்ளும் என்பதில் எந்த ஒரு கேள்விக்குமிடமில்லை. இந்த நிலையிலேயே நாம் கிழக்கினுடைய நிலை பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவர்களாகவுள்ளோம்.
ஏற்கனவே கன்னியா உள்ளிட்ட பிரதேசங்களில் பௌத்தமயப்படுத்தல் வேகமாக உருவெடுத்து கடந்த காலங்களில் பல இடர்பாடுகளை தோற்றுவித்துள்ளது. அதே நேரம் வேகமாக கிழக்கு தாயகத்தில் சிங்கள குடியேற்றங்கள் அதிகரித்து வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது. அண்மையில் கூட தொல்லியல் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு தமிழர் வரலாற்று பகுதிகள் யாவுமே சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கைககள் முனைப்பாக மேற்கொள்ளப்பட்டவண்ணமுள்ளன. இந்த பின்னணியில் கிழக்கில் தமிழ்பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது மட்டுமே கையில் கிடைத்திருந்த ஒரே வாய்ப்பாக இருந்தது. எனினும் அதனை முழுமையாக  தவறவிட்டிருக்கிறோம் என்பதே நிஜமும் கூட.
இந்த நிலையிலேயே தமிழர் தாயகம் என்ற நிலையில் நாம் கூறிக்கொண்டிருக்கும் வடக்கு – கிழக்கின் எதிர்கால நிலை பற்றி ஆழமாகவும் அகலமாகவும் சிந்திக்கவேண்டியவர்களாக நாம் உள்ளோம். உண்மையில் வடக்கில் குறிப்பாக யாழ் தேர்தல் மாவட்டத்தை பொறுத்தவரை தமிழ்தேசிய கூட்டமைப்புக்கான ஐந்து ஆசனங்கள்  என்ற நிலை மாற்றமடைந்து தமிழ்தேசியம் பேசிய கட்சிகள் மூன்றிற்கான ஆசனங்கள் ஐந்து என்ற நிலையே தோற்றம் பெற்றுள்ளது. இதே நேரத்தில் கூட்டமைப்பினுடைய நகர்வுகளில் இனிவரும் நாட்களில் பெரியளவிற்கான மாற்றங்கள் அல்லது சிறப்பான அரசியலை முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளது. கட்டுரையாளர் இந்தக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போது  பல்வேறுபட்ட அரசியல் அவதானிப்பாளர்களும் கூட்டமைப்பினுடைய  தேசியப்பட்டியலினை பயன்படுத்தி அம்பாறை மாவட்டத்தில் தமிழ்தேசிய இருப்புக்கான ஒருவரை தெரிவு செய்ய முனைய வேண்டும் என கேட்கப்பட்ட போதிலும் கூட அந்த  தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் தொடர்பான ஒரு விதமான இழுபறி நிலையே தொடரந்து வருகின்றது. இந்த அடிப்படையில் ஒரு தூரநோக்கற்ற நகர்வுகளே இனியும் தொடருமாயின் தமிழ்தேசிய கூட்டமைப்பு எனும் அமைப்பு காலவோட்டத்தில் இல்லாமலேயே போய்விடும் என்பது கண்கூடு. அதுபோல அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினுடைய நகர்வுகள் தனித்து யாழ்ப்பாணத்திற்குள் மட்டுமே முடங்கி காணப்படுவதால் அது தன்னுடைய கட்சிக்கான மக்கள் அபிப்பிராயத்தை பெறவும் கிழக்கில் குறிப்பாக அம்பாறையில் இழந்துபோயுள்ள ஒரு ஆசனத்தை தக்கவைத்துக்கொள்ள அம்பாறையை சேர்ந்த ஒருவருக்கு அது வழங்கப்பட வேண்டும் என பல அரசியல் ஆர்வலர்களாலும்  வலியுறுத்தப்பட்ட போதிலும் கூட அதுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
உண்மையிலேயே தமிழ்தேசியம் தமிழர் தாயகம் போன்ற விடயங்களை வெளிப்படையாக பேசிக்கொண்டேயிருந்தாலும் கூட நம்மிடையே ஆளுக்கொரு கட்சி கொள்கைக்கொரு கூட்டம்   என்ற ரீதியிலான ஒரு நிலைப்பாடே இந்த பாராளுமன்ற தேர்தலின் முழுமையான பின்னடைவுக்கான காரணமாகும். இந்த தேர்தலில் தமிழர் தலைமைகள் நிலையை உணர்ந்து ஒரு மித்த குரலாக இந்த தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும். ஆனால் நிலை மாறியதே வடக்கு கிழக்கில் புதிய சக்தியான பெரமுனவும்,  ஐக்கியமக்கள் சக்தியும் கனிசமான ஆசனங்களை பெற காரணமாயமைந்ததது. இது தவிர பொதுஜன பெரமுன கட்சி பெரும்பான்மை சிங்கள மக்களினுடைய முழுமையான ஆதரவுகளுடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை அமைக்கும் என்பது ஏற்கனவே எதிர்வுகூறப்பட்ட நிலையில் தமிழ்தேசிய அரசியல் பரப்பின் முக்கியமான ஆளுமைகள் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து இந்த தேர்தலை எதிர்கொண்டிருக்க வேண்டும். அதுவே பெரமுன போன்ற பெருங்கட்சிகளை எதிர்த்து நிற்க போதுமான வீரியத்தை எமக்கு வழங்கியிருக்கும். ஆனால் தமிழ்த்தலைவர்கள் மூன்றுகட்சிகளாக பிரிந்து மேலும் பெரிய வரலாற்று தவறை செய்துவிட்டனர் என்பதே உண்மை.
கடந்த காலத்தவறுகளை சுட்டிக்காட்டுவது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியமானது எதிர்காலத்துக்கான நகர்வுகள் பற்றிய முன்னாயத்தங்களாகும். தற்போதைய பாராளுமன்றில் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என்ற கொள்கையோடு பயணிக்க கூடிய கட்சிகளின்  13 அங்கத்தவர்களே பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடைய ஒவ்வொரு அசைவும் தீர்க்கமானதாகவும் தமிழருடைய எதிர்கால அரசியல் இருப்பு,  பொருளாதார , அபிவிருத்தி நலன்களையும்  மையப்படுத்தியதாக காணப்படுவதுடன் கடந்த காலத்தில் விடப்பட்டதான தவறுகளை திருத்திக்கொள்வதாகவும் அமைந்து கொள்ள வேண்டும். அவ்வாறு செயற்படுகின்ற போது மட்டுமே இழந்து போன வடக்கு – கிழக்கு மக்களுடைய அபிப்பிராயத்தை மீள கட்டியெழுப்ப முடியும் என்பதுடன் தமிழ்தேசியம் என்ற கொள்கையை உயிர்ப்புநிலையிலும் வைத்திருக்க முடியும்.  வடக்கு – கிழக்கு பகுதிகள் இணைந்ததமிழர் தாயகம் என்ற நிலையே நம்முடைய வரலாற்று இருப்பை தொடர்ந்தும் பேண அவசியமானது என்பதை இந்த தமிழர் தலைமைகள் உணர்ந்து செயற்டவேண்டியவர்களாகவுள்ளனர். இந்தத்தேர்தல் முடிவுகளில் இருந்து எவ்வளவு பாடங்களை நம்முடைய அரசியல் தலைமைகள் கற்றுக்கொள்கின்றனரோ..? அவ்வளவுக்கு தமிழர் அரசியல் சார்ந்து ஆரோக்கியமான நகர்வுகளை மேற்கொள்ளமுடியும். மேலும் இந்த தமிழர்தலைமைகள் ஒற்றுமையுடன் பயணிக்கும் போது மட்டுமே பெரும்பான்மை அங்கத்தவர்களை கொண்டுள்ள பொதுஜன பெரபமுன பாராளுமன்றில் அவர்களுக்கு ஈடுகொடுத்து ஓரளவாவது ஓரளவாவது புதிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அல்லாது விடின் வழமை போல ஒவ்வொருவரும் தங்கள் தங்களுடைய கொள்கைகளை மட்டுமே இறுகப் பிடித்து வழமை போல பிரிவினை பாராட்டி வருவார்களாயின் எஞ்சியுள்ள மக்கள் ஆதரவையும் இழந்து , வருகின்ற காலங்களில் பெரும்பான்மை வாதத்துக்குள் அல்லது ராஜபக்சக்களின் இலங்கைக்குள் நம்முடைய அடையாளத்தை இழந்து வரலாற்றை தொலைத்து பயணிக்கப்போகின்ற அவலமான ஒரு நிலையே ஏற்படும் என்பதை மறந்துவிடக்கூடாது.
 பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நமது தமிழர் தலைமைகள் ஒருபுறத்தில் சர்வதேசத்திற்கு தமிழர் பிரச்சினைகளை கொண்டு செல்ல வேண்டியவர்களாகவும், மறுபுறத்தில் பெரும்பான்மை சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவோடு ஆட்சியேறிய பொதுஜனபெரமுன பாராளுமன்றில் தமிழர்களின் தனிக்குரலாக ஒலிக்க வேண்டியவர்களாகவும் , பொருளாதார அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டியோராகவும் காணப்படுகின்றனர்.மிகப்பிரதானமாக மேற்குறிப்பிட்ட மூன்று விதங்களில் கடமையாற்ற வேண்டிய நமது தலைமைகள் அடுத்த 05 வருடங்களுக்கு  என்ன செய்யப்போகின்றனர்..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வடக்கு வடக்காயும், கிழக்கு கிழக்காயும் இருக்க வட – கிழக்கு பிரிந்தே இருக்க வேண்டியது காலத்தின் தேவை! : இரா வி விஷ்ணு (swiss)

North_East_SLஅண்மைய சில நாட்களாக தமிழ் அரசியல் வாதிகளுக்கும் ஆதரவாலர்கக்கும் மட்டும் மெல்லக்கிடைத்திருக்கும் அவல் (பழசுதான் ) வட-கிழக்கு இணைப்பு. வட-கிழக்கு இணைப்பு என்பது இனப்பிரச்சனை ஆரம்பிக்கப்பட்டபோதே தமிழ் தலைமைகளினால் கையில் எடுக்கப்பட்ட தீர்வு கோரிக்கையில் ஒன்று அல்லது தாயக கோரிக்கை என்பது அறிந்ததே.

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக நீடித்த அரசியல், ஆயுத போராட்டம் பல விடையங்களை செய்து முடித்திருக்கிறது, ஒரு சில விடங்களை புரட்டி போட்டிருக்கிறது அரசியல் ரீதியில் மக்களின் மனங்களை பக்குவமடைய செய்திருக்கிறது (புலம்பெயர் தமிழர்?? ) எல்லாவற்றுக்கும் மேலாக போராட்டம் தொடர்பான படிப்பினையை அனுபவ ரீதியில் கற்றுத்தந்திருக்கிறது. இன்னும் சில அரசியல் வாதிகள் கொள்கைரீதியில் தம்மை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை என்பது எம் சமூகத்தின் பாரிய குறை என்பதே உண்மை .

வடக்கும் கிழக்கும் இணைத்திருக்க வேண்டுமா, பிரிந்திருக்க வேண்டுமா, சேர்த்து இயங்குவதா அல்லது நிர்வாக ரீதியில் செர்ந்தியகுவதா பிரிந்தியங்குவதா என்பது வடக்கில் வாழும் தமிழ், முஸ்லீம் மக்களும் அரசியல்வாதிகளும், கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லீம் மக்களும், அரசியல்வாதிகளும் சேர்ந்து விவாதித்து முடிவெடுக்க வேண்டிய விடையம் என்பது யதார்த்தம்.

இப்போதிருக்கின்ற பிரச்சனை என்னவென்றால் வட-கிழக்கு இணைப்பு என்பது பரவலாக வடமாகாணத்தை பிரதிநித்துவ படுத்துகின்ற பல தமிழ் தலைமைகளின் பக்கமிருந்து மட்டுமே இக்கோரிக்கை வருகின்றதே தவிர கிழக்கு தலைமைக்களும் சரி, கிழக்கு மக்களும் சரி இந்த விடையத்தை பெரிதாக கருதுவதாக இல்லை .

கிழக்கு மக்களை பொருத்தவரை விசேடமாக தமிழ் மக்களை பொறுத்தவரை தங்களுக்கென்றொரு சரியான தலைமை கிழக்கை பிரதிநித்துவப்படுத்துவதர்க்கு தேவை என கருதுகின்றனர். அதற்கு சான்றாகவே கிழக்கு மாகாண சபை தேர்தலின் பொது கிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் கட்சியை சார்ந்தவர்களுக்கு தமது பரவலான ஆதரவை தெருவித்திருந்தனர் . வடகிழக்கு இணைப்பை வலியுறுத்திய தமிழ் கட்சிக் கூட்டமைப்புக்கு ஒரே ஒரு ஆசனமே கிடைத்திருந்தது. இன்றைய நிலைமையில் வடகிழக்கு இணைப்பு என்பது வெறுமனே அரசியல் வாதிகள் முடிவு செய்ய வேண்டிய விடயமில்லை கிழக்கு மக்களும் கிழக்கு அரசியல் வாதிகளும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய விடயம் என்பதை பெரும்பாலும் வடமாகாணத்தை பிரதிநித்துவப்படுத்தும் தமிழ் தலைமைகளும் அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.சிங்கள ஆட்சியாளர்களை போல் கடந்த கால கசப்புனர்வுக்களும், நப்பிக்கைஜீனங்க்களும் தமிழ் தலைமகள் மீதும் இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.
 
வடக்கும், கிழக்கும் பிரிந்திருப்பதென்பது நிர்வாக ரீதியில் இரு மாகாணங்களுக்கு நன்மையே தவிர. அதிகாரங்கள் என்பதே இன்றைய பிரச்சனை இந்த அதிகாரங்களை எவ்வாறு நாம் மத்திய அரசிடம் இருந்து பெற்றுக்கொள்வது என்பதே நாம் இன்றைய சூழ்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய விடயம். தமிழர்களில் அரசியல், ஆயுதபோராட்டத்தில் நியாயம் இருக்கின்றது. இழப்புக்கள் நிறையவே இருக்கிறது அதனை வெறுமனே ஆயுத போராட்டம் என்றளவில் வெற்றி தோல்வி என்று கணக்கேடுத்துவிட முடியாது. தமிழர்களுக்கான பொதுவாக சொல்வதானால் சிறுபான்மையியருக்கான அரசியல் தீர்வு என்பது உடனடியாக பெற்றே ஆகவேண்டிய விடயம் . வட -கிழக்கு தமிழர்களும் ஏனைய சிறுபான்மையினரான முஸ்லீம், மலையக தமிழர்களுடன் சேர்ந்து குரல் கொடுக்கவேண்டிய விடயம். அவற்றை சரியாக செய்தாலே சிறுபான்மையினருக்கான தீர்வென்பது நிரந்தரமான தீர்வொன்றுக்கு வழிகோலுமே தவிர வட- கிழக்கு இணைப்புதான் நிரந்தர தீர்வில் முக்கியமென சொல்லுவதெல்லாம் வெறுமனே தமிழ் தேசியத்தை மட்டும் கட்டிக்காக்க முயலும் கடும்போக்கு தமிழ் அரசியல் வாதிகள் தொடர்தும் தமது வண்டிகளை உருட்டுவதற்க்கும் தமிழர்களை உசுப்பேத்தி தம் பதவிகளை பாதுகத்துகொள்ளவே இன்றைய சூழ்நிலையில் உதவும் .

இலங்கையின் இன்றைய நிலைமை என்பது தமிழர்களின் பிரச்சனைகளை ஒருமித்து குரல் கொடுக்க வேண்டிய காலகட்டம். அந்தவகையில் தமிழ் கட்சிகள் பல ஒன்றிணைந்து ”கட்சிகள் அரங்கம்” நடத்துவது வரவேற்கத்தக்க விடயம். அதிலும் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்க, செல்வாக்கற்ற கட்சிகள் அனைத்துமே ஒன்றிணைந்து பேச எத்தனித்திருப்பது வரவேற்கத்தக்க விடயம். இதுவரை தமிழர்களிடைய ஆயுதங்களே செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன. இனியாவது கருத்துக்கள் செல்வாக்கு செலுத்தட்டுமே. தமிழ் தேசிய கூட்டமைப்பும் இவ்வரங்கத்தில் சேர்ந்து செயட்படுவதுபோல் சமீட்சை காட்டியிருப்பது வரவேற்கத்தக்க விடயம். ஒற்றுமை என்பதே இலங்கைத் தமிழர்க்கு விதிவிலக்கு போல் இருந்தது, இனியாவது பதவி மோகத்தை விட்டு வெளிவருவார்களா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

North_East_SLதமிழர்களுக்கான தீர்வென்பது வருங்காலத்தில் இப்போதைய பிரச்சனைகளுக்கான தீர்வாகவும் வருங்காலத்தில் புதிய பிரச்சனைகளை உருவாக்காததாகவும் இருக்க வேண்டும். தீர்வென்பது தமிழ் பேசும் மக்களை மட்டுமின்றி சிங்கள மக்களையும் திருப்திபடுத்துவதாய் இருக்க வேண்டுமென்பது சிங்கள தலைமைகளின் கருத்தாக இருந்து வருகின்றது. அதேபோன்றே தமிழ் தலைமைகளும் வடமாகாண, கிழக்குமாகாண தமிழ், முஸ்லீம் மக்கள் திருப்திப்படுத்த கூடியவாறு தமது தீர்வு யோசனைகளை முன்வைக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் வட-கிழக்கு இணைப்பு என்பது வெறுமனே தமிழர்களின் கையில் இல்லை என்பதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல தமிழ் கட்சி அரங்கத்திலுள்ள அனைத்து கட்சிகளுக்கும் தெரிந்த விடயம். இந்நிலையில் வடக்கும் கிழக்கும் சட்டரீதியாய் பிரிக்கப்பட்டிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தைப் போன்று விரைவில் வட மாகாணசபை தேர்தலும் நடத்தப்படும் நிலையில் இருக்கும் பொது வட- கிழக்கு இணைப்புபற்றி இன்றைய சூழ்நிலையில் பேசுவது சிங்கள மக்களை எமக்கெதிராக திருப்பிவிடக்கூடது.
 
வட – கிழக்கு இணைப்பு பற்றி பேசும் தமிழ் தலைமைகள் ஒன்றில் கவனம் செலுத்தவேண்டும். வட -கிழக்கு இணைப்பென்பது இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி தற்காலிகமானதே தவிர கிழக்கு மாகாண மக்கள் விரும்பினாலே தொடர்து இணைந்திருக்க முடியுமென்பது அன்றே மாகாணங்களுக்கிடையில் கசப்புனர்வுவர வாய்புகள் இருக்கலாமென்றே பாதுகாப்புக்காக இந்த விடயம் தெருவிக்க பட்டிருந்தது. தமிழ் தலைமைகளின் மீதுள்ள நம்பிக்கையீனம், பலவீனம், பிரதேசரீதியான கசப்புணர்வுகள் என இன்றைய எமது தமிழ் சமூகத்தின் பலவீனமான நிலையில் இந்தவிடையத்த கையில் எடுத்து வெற்றி காண்பதென்பது கிழக்கு மாகாண தமிழ், முஸ்லீம் மக்கள் கிழக்கு மாகாணம் பிரிந்தே இருக்க வேண்டுமென்பதில் பெரும்பாலானோர் நிலைபாடாக இருக்கும் நிலையில், கிழக்கு மாகாணத்தை பிரதிநித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லீம் தலைமைகள் இணைப்புக்கு இணங்காதவரை சாத்தியமில்லாத விடயமே.

இந்த நிலையில் கிழக்கு மாகாண அரசியல் தலைமைகள் பலமாக உள்ளனவா என்கிற கேள்வி கிழக்குமாகாண மக்களிடையே பரவலாக காணப்படுகின்றன. இன்றைய நிலையில் சந்திரகாந்தன் , முரளிதரன், அரியநேந்திரன், சிவகீதா, துரைரெத்திணம் போன்ற தலைமைகள்தான் அல்லது அவர்களை சார்ந்தவர்கள்தான் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தை பிரதிநித்துவப்படுத்தப் போகின்றனரா? இன்றைய காலகட்டத்தில் இவர்கள் மீது இவர்கள் செயட்பாடுகள் மீதும் சரி பிழைகள் நிச்சயமாக இருக்கின்றன. இந்நிலையில் கிழக்கை பிரதிநிதுத்துவப்படுத்து இவர்களுக்கும் நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. கிழக்குக்கான புதிய பல திறமையான அரசியல் வாதிகளை உருவாக்க வேண்டியதும் இனங்காட்ட வேண்டியதுமான பொறுப்பு கிழக்கு மாகாண அரசியல்வாதிகளுக்கும் கிழக்குமாகாண மக்களுக்கும் இருக்கின்றது. இனி இலங்கையின் எதிகாலமேன்பது மாகாண சபைகளை மையப்படுத்தியதாகவே பொருளாதாரமும், நிர்வாகமும் செயட்படவேண்டி இருக்கும். அந்த நோக்கிலான கருத்துக்களே இலங்கை அரசு பக்கம் இருந்து
வந்து கொண்டிருக்கின்றன. கிழக்காக இருந்தாலும் சரி வடக்காக இருந்தாலும் சரி அவை நிர்வாக ரீதில் பிரிந்தே இன்ருப்பதே இன்றைய நிலையில் சாத்தியமானதாக தோன்றுகிறது. அதே நேரம் நிர்வாக ரீதியில் பிரிந்திருந்தாலும் சிறுபான்மையினர் என்ற ரீதியில் வருங்காலத்தில் வடமாகாண சபையும் கிழக்குமாகாண சபையும் பல விடையங்களில் ஒன்றாக குரல்கொடுக்கவும், இணக்கப்படுகளுடன் பல விடயங்களில் செயற்படவும் வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. அகவே மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களுடனான, இன உறவுகளை மேன்படுத்தகூடியதும், சிறுபான்மையினருக்கு கூடுதல் பாதுகாப்புடன் கூடியதான அதிகாரங்கள், தீர்வுகள் பற்றி பேச ஆரம்பிப்பெதேன்பது இலங்கை அரசிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான தீர்வாக அமையலாம்.
 
அடுத்த வருடம் வடக்கு மாகாணசபை தேர்தல் நடத்தப்படவிருக்கும் நிலையில். புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாடென்ன?, யாரெல்லாம் போட்டியிட போகிறார்கலேன்று பார்க்கலாம். இதில் தற்போதைய அமைச்சர் டக்லஸ் தேவானந்தவா இல்ல சுரேஷ் பிரேமச்சந்திரனா, மாவை செனாதிராஜாவா, (சம்பந்தரையாவை விடுவார்களா?) , முன்னாள் வட – கிழக்கு முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாலா, இல்லை இவர்களையும் தாண்டி கே .பி எனும் குமரன் பத்மாநாதனா வட மாகாணசபையின் முதலமைசராகிராறேன்று பொறுத்திருந்து பார்போம்.

ஜனநாயகமயப்படுத்தல் – ரவி சுந்தரலிங்கம்

10 புரட்டாசி 2009 – சாராம்சம்: இலங்கையில் இன்றுவரை தீர்க்கப்படாத இனப் பிரச்சனை அடிப்படையில் ஜனநாயக உடமைகள் பற்றியது. பிரதேச ரீதியிலான சமூக-பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இப் பிரச்சனைக்கும் சிங்கள மக்களது கிளர்ச்சிகளுக்கும் பொதுக் காரணிகளாக இருந்துள்ளன. ஜனநாயகம் என்பது வெறும் அரசாங்கம் பற்றிய அரசியலும்; வாக்களிப்பும் அல்ல, அவை மக்களது உடமைகள் பற்றியவை. இவ்வுடமைகள் தனி-மனித ரீதியிலும் சமுதாய, சமூக ரீதிகயிலும் ஊர்ஜிதம் செய்யப்பட வேண்டியவை. சர்வதேசிய மயப்படுத்தல் என்பது முதலாளித்துவத்தின் சந்தைப்படுத்தல் ஆயினும் புரட்சிகர தொழிலாள அகராதிகளில் அமைந்தவை ஆகினும், ஜனநாயகத்தின் பரிமாண வாதங்களால் தொடர்பு படுத்தக் கூடியவை என்பவற்றை எடுத்துக் காட்டுவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

1. புலிகளது/புலிகளால் அழிவு

19/5 இலங்கைத் தீவின் அரசியலில் பாரிய திருப்புமுனை என பல அரசியல் அவதானிகளால் கணிக்கப்படுகிறது. தமிழர்களது இன்றைய நிலை, அவை குறித்து புலிகளது நேரடி/மறைமுகமான பங்கு, சாதக/பாதகமான விளைவுகள், என்பவற்றை மட்டுமே கொண்டு இக் கணிப்புக்கு வருபவர்களே பலர் உள்ளனர். இவற்றின் மேல் ஜனநாயகம், தொழிலாளர் உடமைகள் அவர்களது வாழ்க்கைத்தரம், பிராந்தியத்தின் பாதுகாப்பு அதன் ஸ்திரம் என்பவற்றைக் கொண்டு இம் முடிவுக்கு வருபவர்களும் உண்டு.

எவ்வழி தேர்ந்தாலும், இவர்கள் இடது/வலது எனக் கடைப் பிடிக்கும் இடைவெளி அற்றுப்போவதும், அவர்கள் முன்வைக்கும் தர்க்கங்களின் விளக்கங்கள் ஈற்றில் பல விடயங்களில் ஒரு இனப்படுவதும் சில வேளைகளில் ஆச்சரியமானவை. மேலும், இந்நிலமைக்கான அரசியல் நிலைப்பாடுகளை உருவாக்கியது நாமே என ஜே.வி.பியும், சில தமிழ் ஆயுதக்குழுக்களும் உரிமைகோருவது வியப்பூட்டுபவை ஆயினும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

புலிகளது கட்டுப்பாட்டில் தமிழ் பேசும் சமுதாயங்கள் பேச்சற்ற ஊமைகளாக, மூச்சு விடமுடியாது வாழும் பிராணிகளாக, அறிவிலும் ஆற்றல்களிலும் தேக்கம் கண்ட மனித முண்டங்களாக முடங்கி வாழ்ந்தார்கள் என்பது உண்மை. எமது தாயங்களில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வாழும் புகலிகள் கூட அரசியல் கலாச்சாரக் கூட்டங்களை நடத்த முடியாத மனோவியல் நிலைப்பாட்டை உருவாக்கி வைத்திருந்ததையும் யாரும் மறந்து விட முடியாது. தமது ஆதரவாளர்களை மிக உக்கிரமாக பணம் சேகரிக்கும் இயந்திரங்களாகவும், மக்களை பணம்-கறக்கும் பசுக்களாகவும் மட்டுமே கருதிய காலம் இது. எனவே, புலிகள் ஜனநாயகத்திற்கு குந்தகமானவர்கள் என்பதில் ஐயமே இல்லை.

ஜனநாயகம் என்ற கருத்திற்கே இடமில்லை என மாற்று அமைப்புகளை இல்லாது செய்து, மாற்றுக் கருத்துக்கள் தம்மிடையேகூட இருப்பதைத் தவிர்த்து, தாமே தமிழர்களது ஏக-பிரதிநிதிகள் என்று இருந்தும், உலக நாடுகள் புலிகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். ராஜிவின் படுகொலைக்குப் பின்னர் இந்தியாகூட இந்நிலையை ஏற்றுக் கொண்டு தீர்வுகளை தேடியது. சிறீலங்காவும்தான் புலிகளுடன் மட்டுமே உடன்பாடுகளுக்கு வந்தது. எனவே, ஜனநாயகம் என்பதில் இந்தப் போக்கில் பங்குபற்றிய வெளிநாடுகள் எப்படியான நிலைப்பாட்டை கொண்டிருந்தன, முதன்மைப்படுத்தின என்பதை உணராது, ஏற்படுத்திய புறச் சூழ்நிலைகளை அவதானியாது, ஜனநாயகமயப்படுத்தல் பற்றி பேசுவது பொருத்தமற்றது.

இலண்டனில் புலிகளது கெடுபிடிகளைத் தாண்டுவதற்கு ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர்கள் சங்கர் ராஜி, இரத்தினசபாபதி ஆகியோரது இறப்புகளின் பின்னடியிலான ‘நினைவு மாகாநாடுகள்’ தேவைப்பட்டன என்பதிலும் பார்க்க, அதற்கான காலம் பங்குனி 2007 வரை ஆகிற்று என்பதே குறிப்பிட வேண்டியது.

இவ்வாறு புலிகளது அடக்கு முறையின் ஆழத்தை அதன் வீச்சை என்றுமே உணர்ந்து அவற்றை ஏற்றுக் கொள்ளாத போதிலும், “புலிகளது அழிவு என்பது ஜனநாயக-மறுமலர்ச்சியின்” தொடக்ககாலம் என்ற கூற்றை எம்மால் ஏற்று கொள்ள முடியாமல் இருப்பதற்கு மேற்படி நாம் சுட்டிக்காட்டிய புறச் சூழ்நிலையே உணர்த்தப் போதுமானது. இதனத் தவிர்த்தால், இலங்கையின் ஜனநாயகம் என்பது புலிகளது நடத்தையில் மட்டுமே தங்கி இருக்கவில்லை என்ற எமது விளக்கமே போதுமானது.

ஆனால், புலிகளது அழிவு தமிழ்பேசும் மக்களது கைகளில் இருந்திருந்தால், மேற்கத்திய நாடுகளது உதவிகள் இந்தியாவின் ஆதரவு சீனாவின் ஈடுபாடு என உலகாளாவிய ‘சதியுடன்’, எம்மரும் சேர்ந்து நடத்திய மக்கள் அழிவுப் போர்த் திட்டமாக அமைந்திராவிட்டால், சிறீலங்கா அரசிற்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையே உள்ள சரித்திர பூர்வமான உடமைப் பிரச்சனைக்கான தீர்வுடன் இடம் பெற்றிருந்தால், ஏன், சில புலி எதிர்ப்புவாதிகளது வெறியுடன் கூறினால், “குறைந்தபட்சம் பல ஆயிரம் மக்களது படுகொலைகளுடன் முடிந்திராவிட்டால்”, சிலரால் சில வேளைகளில் ஏற்றுக் கொள்ள முடிந்திருக்கும். இது உணர்வு பூர்வமான வாதம்.

மேலும், “கள்வனை கண்டுபிடிக்க இன்னொரு கள்வன் வேண்டும்” எனும் ஆங்கில பழமொழிபோல, ஒரு ஜனநாயக விரோத சக்தியை அழிப்பதற்கு அதற்கு மேலான ஜனநாயக விரோத சக்தி தேவைப்படும் என்பதால், இலங்கை தீவையையே தீயிடுவது போலாகிடும் என்றோம். இன்று எமது வாதங்களுக்கான பதில்கள் கண்முன் உள்ளன. இலங்கையின் சகல அரச, சமுதாய, சமூகக் கட்டுகளும் ஜனநாயகம் இழந்தவையாக இருப்பது வருத்தத்திற்குரிய ஒரு விடயம். அதேசமயம், எவ்வாறு ஜேர்மனியர்களை மனிதாபமற்ற மனித-விரோதிகளாக சரித்திரம் பூராக கணிப்பதற்கான மனோநிலையை யூதர்களதும் மற்றைய ஐரோப்பியரதும் படுகொலைகள் ஏற்படுத்தியதோ, அதேபோன்ற நிலைக்கு தமிழ் மக்களது படுகொலைகள் சிங்கள மக்களையும் அவர்களது அரசையும் சரித்திரத்தில் நிறுத்தி உள்ளது என்பது மேலும் வருத்தத்திற்குரிய விடயம். இவ்வாறான அவதூறுனை சம்பாதிப்பதால் அப்பாவிச் சிங்கள மக்களுக்கு என்ன பலன் எவ்வளவு செலவு என மனோவியல் ரீதியில் வினவுவது தவிர்க்க முடியாதது. இவ்வகையில் சிங்கள மக்களது பாரம்பரியங்கள் சொத்துக்கள்-பெறுமானங்கள் (assets) மாசுபட்டுள்ளன என்று கூறுவது தப்பா என்றும் சிந்திக்க வேண்டும்.

இதற்கு மேலாக தமிழ் மக்களது சொத்துக்கள்-பெறுமானங்கள் என்ற கேந்திர ரீதியிலும் எமது பதில்கள் இருக்க வேண்டும் என்பதால், “வீட்டுள் நச்சுப் பாம்பு புகுந்துவிட்டால் சுற்றாருடன் சேர்ந்து வீட்டையே தீயிடுவதில்லை” என்ற நிதானத்துடன் புலிகளை அணுக வேண்டும் என்றோம். ஆகவேதான், புலிகள் ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள் என்ற போதிலும் “இறுதித் தீர்வில் அவர்களது இயற்கையான சமைவும் இருக்க வேண்டும்” என்றோம்.

ஆனால் ஜனநாயகம் பற்றிய விசித்திரமான வாதங்கள் பலதரப்பட்டவை. கடந்த ஆண்டு இலண்டன் வந்த ஜே.வி.பி பா.உறுப்பினர் நா. சந்திரசேகர், “நாம் மற்றவர்கள் போல புலிகளது இனவாதப் போருக்கும், இனவாதங்களுக்கும் எதிராக வாய்ப் பேச்சுடன் நின்று விடவில்லை. அதற்காக அயாராது நிலத்தில் கருமமும் ஆற்றினோம். புலிகளை அழிக்க வேண்டும் அல்லது பலவீனப்படுத்த வேண்டும் என்பது எமக்கு முதலாவது கருத்தாக இருந்தது. எனவே, மகிந்தாவை பதவிக்கு கொண்டுவருவதே தகுந்த உபாயமாகவும் எம்மால் கணிக்கப்பட்டது. எமது உழைப்பு இல்லாது மகிந்தா வென்றிருக்க முடியாது.” என்ற தமது விளக்கத்தை தருகிறார். மறு கணமே, “புலிகளுடன் அழிக்கப்பட்டது பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் மட்டுமல்ல, அவர்களது ஆயிரமாயிரம் வருடங்களான சரித்திரமும் அவர்களது பலமும் வீரமும் அவர்களது நிலம் மீதான ஆளுமையும் கூடவே” என்கிறார். இவற்றை இணைத்துப் பார்ப்பவர்கள் அவர் கூற்றுகளிடையே உள்ள முரண்பாடுகள் எவ்வளவு பாரதூரமானவை என்பதைப் புரிந்து கொள்வர். ஆனால், அவை அரைவாசி விளக்கமே.

மிகுதி: “1. நாம் சிறீ லங்காவின் தேசிய விடுதலைக்காகப் போராடுகிறோம், 2. தமிழர்களது பூர்வீக-நிலம் என்ற கோரிக்கையை நாம் ஏற்க முடியாது, 3. அதிகார/நிர்வாகப் பரவலாக்கம் என்பது பொறுப்பற்ற விடயம், 4. இந்திய-ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்டதால் நாம் 13ம் சீர்-திருத்தத்தை நிராகரிக்கிறோம், (Further reading, reference 10) 5. ஜே.வி.பி அரசுக்கு வந்தால் தமிழ் பேசும் சமுதாயங்கள் இன ரீதியில் முன் வைக்கும் கோரிக்கைகள் அவசியமற்றவை ஆகிவிடும்”.

புலிகளை அழிக்க அல்லது பலவீனப்படுத்த மகிந்தாவை ஜனாதிபதியாக்கிட தமது தோழர்களது உழைப்பையும் பணத்தையும் விரையம் செய்கிறார்கள் ஜே.வி.பியினர். ஆனால், புலிகளோ அதே மகிந்தாவை ஜனாதிபதியாக்கி தம்மை அழித்துக் கொள்ள அவரிடமிருந்து பணத்தையும் பெற்று தம் மக்களது வாக்குரிமையும் ‘ரத்துச்’ செய்கிறார்கள். இவை இரண்டையும் எவ்வாறு பொருத்திப் பார்ப்பது, புரிந்து கொள்வது? யாதார்த்த வாதத்தால், வெறும் அரசியல்வாதிகள்/ கட்சிகளை முதன்மைப்படுத்திய கருத்துச் சொல்வதால் சரிதிரத்தின் துண்டுகளுக்கு விளக்கம் சொல்பவர்கள் உண்டு.
ஆனால், மக்கள் வாழ்வே அரசியல் என உணர்ந்து ஏற்றுக் கருமம் ஆற்றுபவர்களால் எப்படி இவ் விளங்கங்களை ஏற்றுக்கொள்ள முடியும்?

ஜேவிபியினரது மக்கள் விடுதலைப் போர்களினால் கண்ட ஜனநாயகப் பலா பலன்களை சாதாரண சிங்கள மக்களது அனுபத்துடன், இனங்கள் பிரதேச கலாச்சார வேறுபாடுகள் என்பவற்றுடன் இணைத்துப் பார்க்கும்போது, மேலுள்ள ஐந்து குறிப்புகளும் ஒட்டு மொத்தமாக ஜனநாயக விரோத நிலைப்பாடுகள் என வகைப்படுத்துவது பொருத்தமானது. இவற்றினை, தொழிளார்-சர்வாதிகாரம் என்பதை ஒரு-கட்சிச் சர்வாதிகாரமாகவும் இறுதியில் அதனை ஒரு இனத்தின் சர்வாதிகாரமாகவும் மாற்றிடும், மூன்றாம் உலக வளர்ச்சிகளில் பின்தங்கிய தேசியவாதப்-புரட்சிவாதிகளது குளப்பவாதம் என சரித்திரம் தந்த படிப்பினைகளுள் உட்படுத்தும் போது ஜனநாயகம்பற்றிய இவர்களது விளக்கமும் துலக்கமாகிறது.

ஆகவே, புலிகளது இன ரீதியான தேசியவாதத் திட்டமும், ஜேவிபியினரது தேசியவாதம் கொண்ட புரட்சித் திட்டமும், பிராந்திய வாரியாக எழுந்த இளைஞர்களது அதிருப்த்தியே என்பதும் சமூக-ஜனநாயகத்தை வேண்டிய ஆதங்களின் அடிப்பிறப்பாக இருந்தபோதும், ஜனநாயக விரோத, மக்கள் விரோத போக்குகளுள் முடங்கியதும் ஏன் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

அப்படியாகின், ஜனநாயகப்படுத்தல் எனும்போது நாம் எவற்றைக் குறிப்பிட முடியும், அவற்றை எவ்வாறு வரைவிடுவது என்பவை அடுத்த அத்தியா அவசியமான காரியமாகிறது. பதிலாக நாம் ஏற்கனவே ஏற்றுக் கொண்ட சித்தாந்த வரைவு இலக்கணங்களை மட்டுமே ஒப்பியாது, பலவிதமான உலகளாவிய போக்குகளைவும் அவதானித்து எமது வரைவுகளைக் தேர்ந்து கொள்ள வேண்டியது கடமை என்பதிலும் பார்க்க, மக்களது உடன்பாட்டை ஈடுபாட்டை பெற வேண்டுமாயின் அவசிமானது என்பதும் புரிய வேண்டியதாகிறது.

ஜனநாயக மாதிரிகள் (Theoretical models)

சரித்திர ரீதியில் ஜனநாயகம் என்பதற்கான வரைவுகளின் நிலைதளங்கள் (framework)

1. அரசியல் – பொருளாதாரம், (political versus economical) , 2. நடைமுறை, செயலாக்கம் – நிறைவான பொருளாக்கம் (procedural versus substantial) , 3. விடுதலை – அடக்கு முறை (liberal versus non-liberal) என்பவற்றின் இடையேயான வாதப் பிரதிவாதங்களாகவே இருந்து வந்துள்ளது. இவற்றுடன் நான்காவதாக பிரஜாஉரிமை – சர்வதேசியம் (citizenship and universality) என்பவையும் இணைக்கப்பட வேண்டும் என்பது எமது பிரத்தியேக வாதம்.

இவ்வகையில் மேற்கத்தய ஜனநாயகம், மனித உரிமைகள் என்பவை மீளாய்வு செய்யப்பட வேண்டியவை, செய்யப்பட்டும் வந்துள்ளன. இரண்டாம் உலகப் போரின் முடிவுகளின் போது ஜோஸேப் ஸ்ஸம்றர் போன்றோரதும் (Schumpeter, Joseph. 1943. Capitalism, Socialism, and Democracy, NY – Harper), சோவியத் கால முடிவு காலத்தில் அடம் பிவோக்ஸ்ஜி (Przeworski, Adam et. al. 2000. Democracy and Political Development: Political Institutions and Well-Being in the World, 1950 – 1990, NY – CUP) போன்றோரது எழுத்துக்களும் மேற்கத்திய ஜனநாயகத்தை 1. தேர்தல் குறித்த நடைமுறை வழக்காகவும் (electoral process), 2. பிரதானமாக, ஸ்தாபன ரீதியிலான அதிகாரமாகவுமே (institutional power) அடையாளம் காட்டி உள்ளன.

இவற்றின் சாரமாக றொபேட் டால் என்பவர் முன்வைத்த எட்டு “உரிமைகளை” இவ்வகைப்பட்ட ஜனநாயகத்தை வரைவுதரும் தேர்வுப் பட்டியலாகக் (check list) கொள்ளலாம்:

1. வாக்களிக்கும் உரிமை, (right to vote) 2. தேர்வு செய்யப் படுவதற்கான உரிமை, (right to be elected) 3. ஆதரவுக்கும் வாக்குகளுக்கும் போட்டியிடும் உரிமை, (right to compete for votes & support) 4. இடையூறுகள் தடைகளற்ற தேர்தலுக்கான உரிமை, (right to free & fair elections) 5. ஒன்று கூடும் உரிமை, (right to free association) 6. கருத்துச் சுதந்திரம், (right to free expression) 7. மாற்று தகவல் தாஸ்தாவேதுகளுக்கன வளம், (right to alternative source of information இறுதியாக, 8. வாக்குகளிலும் கருத்துச் சுதந்திரத்திலும் தங்கிய நிர்வாக அமைப்புகள் என்பவையாகும் (institutions that depend on votes and other expressions of preference). இவற்றை “குறைந்தபட்ச அளவு கோலாகக்” கொண்டு அரசியல் பொருளாதார நிர்வாக அமைப்புகள் உருவாக்கப் படவேண்டும் என்பது எதிர்பார்ப்பு. (Dhal, Roberts. 1971. Polyarchy; 1989. Democracy and its Critics. New Haven: Yale UP)

இங்கே, ஜனநாயகத்தின் ஆழமும் வீச்சும், வெறும் பிரதிநிதித்துவத்தின் ஆளுமை (governance by representation) என மட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்பது உணரப்பட்டது. எனவே, ‘விடுதலையும் சுதந்திரமும்’ (liberty & freedom), “நீதியும் நியாயமும்” (justice & fairness), “வாழ்வில் வெற்றி கொள்ளும் தளமும் வாய்ப்பும்” (opportunity & success in life), போன்ற உன்னதமான விளைவுகளை ஊர்ஜிதம் செய்வதே ஜனநாயகம் என்ற வாதமும் உருவாக்கப்பட்டது.

மாக்ஸினது சரித்திரம், பொருளாதாரம், அரசியல் என்பவை குறித்த தர்க்கீக வாதங்கள் மேற்கத்திய ஜனநாயக வரையறுப்புகளை மாற்றி அமைத்திடுவதில் எவ்வளவு உதவின என்பது புரிந்த விடயம். அவற்றின் விளைவே ‘சமூக அவசியங்கள்’ (social requirement) என்ற வாதம் ஜனநாயகச் சித்தாந்தின் மூன்றாம் பரிமாணம் தருவது எனலாம்.

மாக்ஸினது சித்தாந்த வாதங்களையோ கவனிக்காது, மனிதன் அடிப்படையான பொருளாதார அவசியங்கள் பூர்த்தி செய்ப்படாத பட்ச்சத்தில் ஜனநாயக நடைமுறைகளில் பூணமான தனது பங்கை வகிக்க முடியாதவன், ஆகவே ‘சமூக அவசியங்கள்’ என்பது ஜனநாகயத்தின் அங்கமாகிறது என்று வாதிடப்பட்டது. (Marshall, T. H. 1992. Citizenship and Social class. London: Pluto Press; 1997; Huber, E. et.al. The paradoxes of contemporary democracy: Formal, Participatory, and social democracy) இவற்றின் அடிப்படையிலேயே, 1940 களில் அமரிக்க ஜனாதிபதி ரூஸ்வோல்ற் (F.D. Roosevolt) தனது ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக “தேவைகளில் இருந்து விடுதலை” (freedom from wants) என்ற வாதத்தை முன்வத்திருந்தார்.

புரட்சிக்குப் பதிலாக சீர்திருத்தமே பொருத்தமானது என்ற வாதம் முதலாளித்துவத்தை பூரணமாக ஏற்றுக் கொண்டது என்பதற்கல்ல. அவ்வகையில், ஜனநாயகத்தின் குறைபாடுகளை அன்றாடம் எதிர்முகம் கொண்டவர்கள் ‘உரிமைகள்’ என்ற வரைவுக்குள் ‘அடிப்படையில் சட்டத்தின் முன்னே சம உரிமை’, ‘பெண்களுக்கு சம உரிமை’, ‘சிறுபான்மையினருக்கு சம உரிமை’, என்ற எல்லைகளை முற் கூட்டி சென்ற வண்ணம் உள்ளனர்.

புரட்சி என்றவாறு தொழிற்துறைகளில் (industrial) வளர்ச்சி கண்ட மக்களது சித்தாங்களை உள்வாங்க முற்படும் போது, மூன்றாம் உலக நாடுகளில் ஏற்படும் சிக்கல்களை குளப்பங்களை அநுபவ ரீதியில் அறிந்தவர்கள் நாம். ஆகவே, அதே வழி சென்று சமூக-பொருளாதார வளர்ச்சி கண்டவர்கள், தனிமனிதர்கள் – சமுதாயங்கள்; – சமூகங்கள் என்ற ஒழுங்கில் கட்டி எழுப்பும் “மனித-உரிமைகள்” என்ற சித்தாந்தங்களை நேரடியாக உள்வாங்கிட முடியாது.

இலங்கை போல் சமூக-பொருளாதார வளர்ச்சிகளில் பின்தங்கிய நாடுகளில் அரசு-அரசாங்கம்-ஆளுமை என்பவற்றிக்கு இடையேயான உறவுகளை குடியானவர்-ஜனநாயகம் (feudal democracy) என நாம் வரைவு செய்துள்ளோம். (Further reading, references 7 and 8) இவ்வாறான நாடுகளில் ஜனநயாகம் எவற்றை குறித்து நிற்கிறது, ஜனநாயகத்தின் பேரில் நிலை நாட்டப்பட வேண்டியவை எவை, அவற்றை நிலை நாட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் என்ன, அவற்றின் சித்தாந்தாந்த விளங்கங்கள் வேலைத் திட்டங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? என்பவைபற்றிய ஆய்வுகள் வேண்டியவை.

மேலும், அவற்றிக்கான ஆய்வுகள் செயற்திட்டங்களாக ஆகும்போது விளைவுகளை நேரடியாக அநுபவிப்பவர்கள், நடைமுறைப்படுத்த முற்படுபவர்கள், அரசியல் குழுக்கள் கட்சிகள் என பல தரப்பினரிடையே கலந்தாலோசனைகள் இல்லாது போகின் ஜனநாயகமயப் படுத்தல் என்பதே அர்த்தமற்ற விடயம் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

முதலில், ஜனநாயகம் என்பது முதலாளித்துவ-ஜனநாயகத்தை குறிப்பிடுவதால் நாம் முழுமையான-ஜனநாயகம் அல்லது பூரண-ஜனநாயகம் என்பதன் வரைவைத் தரவேண்டி உள்ளோம்.

பூரண-ஜனநாயகம்: “சமுதாய-உடமைகள் சார்ந்த உரிமைகளுடன், கூட்டாகவும் தனிமனிதனாகவும், தத்தமது அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வழிமுறைகளையும் அவற்றின் உத்தரவாதங்களையும் தன்னியக்கமாகக் கொண்ட ஸ்தாபனமயப்படுத்தலை பூரண-ஜனநாயகம் எனக் கொள்ளலாம்.”

பூரண-ஜனநாயகம்பற்றிய எமது வரையறுப்பு இதுவாக, அவற்றுள் அமைந்துள்ள சில பதங்களது விளக்கமும் அவசியமாகிறது.

சமுதாய-உடமைகள்: “தலைமுறைகளாக மனிதரது உழைப்பினால் உருவாக்கப்பட்டு பல நுகர்வுத் தன்மைகளிலும் பெறுமதி கொண்ட பொதுச் சொத்துக்கள் அவையாகும்.”

தலைமுறைகளது உழைப்பின்றி காட்டு நிலம் பயிர் நிலமாகவும், நிலத்தின் கீழ் புதைந்து கிடைக்கும் தாதுப் பொருட்கள் புகையிரத வண்டிகளாகவும் அவை ஓடும் தண்டவாளங்களும் ஆவதில்லை.

தலைமுறைகளாக சேர்க்கும் அறிவின்றி, பதப்படுத்திய நிலங்களில் எவற்றைப் பயிரிடுவது என்தைத் தேர்ந்தெடுக்கவும், தலைமுறைகளாக மனிதரது சிந்தனைகளின் தொடர்பில் விளையும் அறிவு இல்லாவிடில், இன்றைய விஞ்ஞான தொழி-நுட்பங்கள் என அழைக்கப்படும் மனிதனது கைங்காரியம் இடம்பெற்றிருக்கவும் முடியாது.

பல நூற்றாண்டுகளாக மனிதரது சிந்தனை-முயற்சியும் உழைப்புமே, தலைமுறையாக அதன் சேகரிப்புமே எமது அறிவு என்பதையும், அவனது உழைப்பின்றி சடப் பொருட்கள் பயன் தரும் ஏதுக்கள் கருவிகள் வளங்களாக உருவாகி விடுவதில்லை என்பதையும் நாம் உணரவேண்டும்.

மனித-உரிமைகள் என்ற விடயத்தை போய் சேர முன்னர் குளப்பங்களைத் தவிர்த்திட இவ்விடத்தில் தனிச் சொத்துப்பற்றிய வரைவைத் தரவேண்டியதும் எமது கடமையாகிறது.

தனிச்-சொத்து: “மனிதன் தனதென்று கொள்வதெல்லாம், அவை அவன்கையில் இருக்கும்போது அவற்றில் ஏற்படக்கூடிய பாராமரிப்புக்கும் இயன்றால் முன்னேற்த்திற்காகவும், அவனது நுகர்வுக்கும், தற்காலிகமாக அவன்வசம் உள்ள சமுதாயத்தின் பொதுச் சொத்துகளேயாகும்.”

ஜனநாயகப்படுத்தல் எனும்போது முதலாவது கேள்வி எதனை? யாரை? என்பதே.

மகிந்தா ராஜபக்ஷா பதவி ஏறியமை ஜே.வி.பியினர் தமது உழைப்பைக் கொட்டியதாலா, அல்லது புலிகள் தமது மக்களது வாக்குகளைப் பறித்தமையாலா என்ற கேள்விகளில்தான் தங்கியிருக்குமாயின், எமது சமூகம் பொருளாதாரம் இலட்சியச்-சரித்திரம் சர்வதேசிய நிலைப்பாடு என்பவை பற்றிய அறிவோ தெளிவோ அவசியம் அற்றவை ஆகிவிடும்.

சரித்திரத்தை வெறும் கதையாக (narrative), தனிமனிதரது அரசியற் கட்சிகளது அல்லது குழுக்களது நடத்தைகளூடாக அவதானித்து, அதன் முக்கிய பாகங்களை அந்நடத்தைகளின் விளைவுகளாகக் கற்பிப்பதையே சரித்திரமாக ஏற்று இயங்குபவர்களே மேலதிகமானவர்கள்.
இது காலம் கடந்த, சரித்தித்தைக் கணிப்பது பற்றிய விஞ்ஞான வளர்ச்சியை அறியாத வழி, என்பவற்றிலும் பார்க்க இது தவறான வழி என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டது என்பதே முக்கியமான விடயம்.

மாற்றாக, தனிமனிதரையும் குழுக்களையும் சரித்திரத்தின் விளைவுப் பொருட்களாகவும், அதனுடன் ஒட்டி-உராயும் (interacting) அதன் அங்கங்களாகவும் கொண்டு “மூலதனைத்தை உழைப்பவர் யார் – அதனைச் சேமிப்பவர் யார்” என்ற அடிப்படைக் கேள்வியுடன் நிகழ்வுகளைக் கணிப்பீடு செய்வதை இலட்சியச்-சரித்திரம் (objective-history) என்பர்.

ஜே.வி.பியின் 1971 கிளர்ச்சியின் முன்னர் இலங்கைத் தீவு நிம்மதியன வாழ்வில் இருந்தது. அதுவரை படு-கொலைகளை அறியாத மக்களும், குறிப்பாக இளைஞர்களும், பாதுகாப்புத் துறையினரும் கொடூரமான மனிதர்களாக மாறினர். வன்முறையை இலங்கையர் வாழ்வில் அவர்கள் புகுத்திய பின்னரே நாடு பாழாகத் தொடங்கியது. இவ்வாறான வன்முறைபற்றிய சரித்திரக் கதை சொல்லபவர்கள் உண்டு. அதுபோலவே, புலிகள் தோன்றியதாலேயே தமிழ் பேசுவோர் வன்முறையை அநுபவிக்க நேரிட்டது துரோகி என்ற பதமே உருவாகிற்று என அதே கதையின் தொடர்ச்சி சொல்பவர்களும் உண்டு.

ஆனால், இவை சில தெட்டங்களான சம்பவங்களை தொடர்புபடுத்தும் கதைகளே அன்றி இலட்சியச்-சரித்திரமல்ல. ஜே.வி.பி அல்லது புலிகள் எக்காரணிகளின் வழித்தோன்றல்கள்? ஆகாயத்திலிருந்து குதித்தார்களா? அவற்றின் தலைவர்கள் விஜேவீரா, பிரபாகரன் போன்றோரை எவ்வாறான சூழ்நிலைகள் பெற்றுத் தந்தன? அவற்றிலும் மேலாக, அரசியலில் வன்முறை வழி ஈடுபடுவதற்கான காரணிகள் என்ன? என்றவாறான கேள்விகளுக்கோ சிந்தனைக்கோ, சம்பவங்களூடாக மட்டும் காரணம் கூறிடும் சரித்திரத்தில் அமைப்பு-ரீதியில் (structural) தொடர்போ ஓட்டமோ இருக்கமாட்டாது என்பது தெளிவு.

சமூக-ஜனநாயகம் பொருளாதார-ஜனநாயகம் அரசியல்-ஜனநாயகம் என எந்த வரைவுகளுள் இருந்து பார்த்தாலும், தெற்கு ஆசியாவில் மட்டுமின்றி பல மூன்றாம் உலக நாடுகளில் குழு-வாதமும் சமுதாய-வாதமும் குடும்ப-வாதமுமே ஆளுமை கொள்ளுவதை நாம் அவதானியாது போயிட முடியாது. குடியானவர் சமுதாயங்களை அடியாகக் கொண்ட போது இவை எதிர்பார்க்க வேண்டியவையே என்ற வாதம் ஒரு விளக்கமே. எமது தெற்கு ஆசியாப் பிராந்தியத்தில் இப்போக்கு இராணுவ மயப்படுத்தப்படும் அரச அமைப்புகளே ஸ்தாபனங்களாகி வருவதையும், மக்கள்-நிர்வாக அமைப்புகள் நிர்முலம் செய்யப்படுவதையும் காண்கிறோம். இதனை பாக்கிஸ்தான்-மயப்படல் எனச் சித்தரிப்பதும் உண்டு. இலங்கையும் இவ்வழி செல்கிறதா? அப்படியான கருத்தும் கணிப்பும் பொருத்தமானவையா?

பாக்கிஸ்தான்-மயப்படல்

பாக்கிஸ்தான்-மயப்படல்: “குடியானவரான மக்களைக் கொண்ட, அவர்களது அதிகாரங்கள் ஆளுமைகளுக்கு அப்பாற்பட்ட, அவர்களது அபிலைசைகளின் வரைவுகளுள் இல்லாத, உள்ளார் வெளியார் ஸ்தாபனங்களது அதிகாரப் போட்டிகளிடையே அகப்பட்டும் அவை மீது தங்கியும் உள்ள அரச-ஸ்தாபனங்கள், அவற்றிக்கு அப்பாற்பட்ட இமைப்புகள் யாவும் பாக்கிஸ்தான்-மயப்படுத்தலுக்கு உட்பட்டவையும், அதன் வடிவத்தைத் தருவனவும் எனலாம்”.

பாக்கிஸ்தான் பல மொழி பேசும் சமூகங்களைக் கொண்டு மதம் என்ற பொது உணர்வில் இயற்றப்பட்ட பிரதேச-அமைப்பு (geographical entity). அதன் பிரதேசம் குறிப்பாக சிந்து, பஞ்சாபி, காஸ்மீரி மக்களது சமூகச் சொத்துக்களின் பாகப் பிரிவுகளால் ஏற்படுத்தப்பட்டது. அதன் மக்கள் காலாகாலமாக அங்கு வாழ்ந்தவர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் எஞ்சியவர்களதும் இந்தியா என இன்று அழைக்கப்படும் பிரதேசங்களிலிருந்து வெளியேறியவர்களையும் கொண்ட சமூகக் கூட்டங்களாகும். அதனது, ஆளுமை மக்களது மத-அடையாளத்திலும், இந்தியாவுடனான சரித்தரக் குரோதங்களாலும், தன்உணர்வாகிவிட்ட பலவீனங்களாலும் வரைவு செய்யப்பட்டு, அதன்படி அமைந்த வெளிநாட்டு உறவுகளால் நிச்சயிக்கப்படுவது.

மதத்தின் பெயரில் அமைந்த அதிகார-அமைப்பினுள் தமது அதிகாரப் பங்கை நிலைநாட்டிக் கொள்ள இஸ்லாமிய மத-முதலாளிகள் முன்வருவதை எதிர்பாரக்க வேண்டியதே. ஆனால், இந்தியாவுடனான சரித்திரச் சர்ச்சைகள் போர்களாகவும் அவையே அதனது அடையாத்தின் பெரும் பகுதியை வழங்குவதாலும் பாக்கிஸ்தானிய இராணுவம் அதனது அதிகாரப் பங்கு போடுவதில் ஈடுபட வேண்டியது அவசியமாகிறது. மேலும், நாட்டின் விளை-நிலங்களை தமதாக்கிக் கொண்ட பத்து அல்லது பதினிரண்டு முதற்-குடும்பங்கள் (oligarchs) தமது அதிகாரப்-பங்கினைக் கோருவதும் தர்க்கமாகிறது. எனவே, இஸ்லாமிய மத-முதலாளிகள், இராணுவம், முதற்-குடும்பங்கள் ஆகியவை மூன்றுமே பாக்கிஸ்தானின் மக்களை ஆழும் அரசியல்-ஸ்தாபனங்களது மூலங்களாகி, அதன் அதிகாரத்துக்கான போட்டியில் ஈடுபட வேண்டியவையும் ஆகின.

ஆரம்ப காலங்களில் தமது மதம் சார்ந்த விடயங்கள் கருதி, அவைக்கேற்ப்ப தம்மை முதற்-குடும்பங்களுடனோ அல்லது இராணுவத்துடனோ பக்கம் சார்ந்து கொண்டனர் மத-முதலாளிகள். எனவே, அவர்கள் முதற்-குடும்பங்களின் பக்கமாகும்போது ஜனநாயகம் என்ற பெயரில் பாராளுமன்ற நாடகங்களையும், இரணுவம் பக்கம் சாயும் போது இராணுவ-சர்வாதிகாரப் பலவான்களது நடனங்களையும் காணலாம். அண்மைக் காலங்களில் இஸ்லாமிய மத-முதலாளிகள் தமது தொகுதி மீதான ஆளுமையை இழக்கத் தொடங்கியமையையும் அது தலிபான்மயப்படல் (Talibanisation) என்ற மதவழிப் போக்குள் அகப்பட்டதும், அதனால் தன்னுள் பல வகைகளில் பிளவுற்றமையும் நாம் அறிவோம். இவற்றினால், வழமைப்பட்ட அரசியற் அதிகாரப் போட்டியில் இஸ்லாமிய அணி வலுவிழந்தது போலக காணப்பட்டாலும், மாற்று அரசியல் அதிகாரக்-கட்டு (alternative power centres / referred to as non-state actors) என்றவாக்கில் மிக்க வலிமை பெற்றதையும் அவதானித்து இருப்போம். இவற்றுடன் பாக்கிஸ்தானிய அரசாங்கம் தனது அரசியல் இறைமையை பகிர்ந்து கொள்ள முன்வந்தமையையும் அறிவோம்.

அணு ஆயுதங்களைக் கொண்ட நாடாகினும் அதனது பிரதேசத்துள் அமரிக்கா இராணுவப் பிரவேசம் செய்வதை பாக்கிஸ்தான் தடுக்கமுடியாது உள்ளது. அதனது வடக்குப் பிரதேசத்தில் உள்ள அவ்ப்கனிஸ்தானில் NATO நாடுகளால் நடத்தப்படும் போரில் அதனது பங்கு தனது பாதுகாப்பு அல்லது எதிர்பார்புகளுக்காகவன்றி மேல்நாட்டாரது அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதாகவே உள்ளது.

இவற்றினால், தன்நாட்டில் தனக்கேற்ற வழிகளில் தனது உள்நாட்டு அல்லது பிரதேசப் பிரச்சனைகளை தீரக்க முடியாது, அவற்றிக்கு எதிரான பலமான புறக் காரணிகளால் பாக்கிஸ்தான் அரசாங்கம் தனது-தலிபானுடன் படையெடுப்புப் போர் நடத்தியதையும் கண்டிருப்போம். இப் புறக் காரணிகள் இராணுவத்தையும் முதற்-குடும்பங்களது அரசியற் அமைப்புகளையும் ஒன்றாக்கிட முனைவதையும் ‘அரசைப்’ (state) பலப்படுத்தும் வேலைத் திட்டத்தில் அவற்றினை ஈடுபடுத்த நிர்ப்பந்திப்பதையும் நாம் அவதானித்திருப்போம். இவாறான புறக் காரணிகளின் விளைவுகளுடன் பாக்கிஸ்தானின் சமூக-பொருளாதார, சமூக-அரசியற் புள்ளி விபரங்களையும் சேர்த்துப் பார்க்கும் போது அதனை ஒரு தூர்ந்து போன அரசு (failed state) எனக் கணிப்பது சரியானதே.

இலங்கைத் தீவில் உள்ள நிலைமைகள் என்ன? மேற் குறிப்பிட்டவை யாவும் சிறீலங்காவிற்கும் பொருந்துமா? சிறீ லங்கா பாக்கிஸ்தான்-மயப்படலில் உள்ளாகிவிட்டதா?

சிறீ லங்காவின் சமுதாய-வீழிச்சி புலிகளுடனோ ஜே.வி.பியினருடனனோ ஆரம்பமாகவில்லை. பிருத்தானியரிடம் இருந்து விடுதலை பெற முன்னரே அதற்கான அத்திவாரம் அங்கிருந்தது. சமுதாயங்களின் கீளோட்டங்களாக இருந்த பல மக்கள்-விரோத மனிதாபிமான-விரோத வழக்குகள், நியதிகள், உறவுகளாக அவை இருந்த போதும், தேசிய அல்லது கலாச்சார-வெளிப்பாடுகளால் மறைக்கப்பட்டு இருந்தன.

பாக்கிஸ்தான் போலவே இலங்கைத் தீவும் (சிங்கள தமிழ் பேசும்) பல சமுதாயங்களைக் கொண்ட அன்னியர்களால் வரையப்பட்டு நிறுவப்பட்ட நாடு. பாக்கிஸ்தானில் நிர்பந்தமான புதிய இயங்கில் உறவுகள்; பல சமூகங்களை கொண்டதாக இருக்கும் போது, இலங்கையிலோ அது இரு சமூகங்களிடையே உள்ள உறவில் தங்கியதால் உருவத்தில் வேறாகிறது. பாக்கிஸ்தானை ஒன்றுபடுத்தும் ஸ்பனங்கiளாக மதமும் இராணுவமும் முன் வைக்கப்பட்டது, ஆனால் இலங்கையிலோ அவை மக்களைப் பிறிதுபடுத்தும் ஸ்தாபனங்களாகவே முன்னெடுக்கப்பட்டன. பாக்கிஸ்தான் நடைமுறை ரீதியில் பஞ்சாபி இனத்தவரின் கைகளில் இருப்பதாகக் அவதானிக்கப்படும் போதிலும், பௌத்த-சிங்களச் சித்தாந்தம் இலங்கையை தனதெனக் கோருவது போல பஞ்சாபியரிடம் ஒரு சித்தாந்தம் இல்லை. ஆயினும், மத ரீதியில் ஒரு நாட்டினை, அதன் மக்களை அடையாளம் காண்பது என்பதில் இவ்விரு நாடுகளும் ஒப்பிடக் கூடியவை. ஆகவே, அதனை பாக்கிஸ்தானிய மயப்படல் என்பதற்கான முதல் அடியாகக் கொள்வது தப்பல்ல என்பது வாதம்.

பாரளுமன்ற அரசு என்பதில் இலங்கை பாக்கிஸ்தானிலும் வேறுபட்டதாகினும், பாராளுமன்றங்கள் சர்வாதிகாரங்களின் கரங்களாகின. இலங்கையில் அது பெரும்பான்மையோரின் பேரில் சோவனிசவாதிகளது, அதாவது இனவாதமதத்துடன் இணைந்த குட்டி முதலாளித்துவர் கூட்டின் கைகளிலும் பாக்கிஸ்தானில் அது இராணுவம்-இஸ்லாமியவாதிகள்-முதற் குடும்பங்களின் சர்வாதிகாரமுமானது. அண்மைக்காலம்வரை இலங்கையில் இராணுவம் பாரளுமன்ற அரசியலில் நேரடித்தாக்கங்களை ஏற்படுத்தவில்லை என்பதையும் அந்நிலையில் உள்ள மாற்றங்களையும் அவதானிப்போர் அதனையே இலங்கை பாக்கிஸ்தானிய மயப்படுகிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாக கூறுவர். ஆயினும், பாக்கிஸ்தானைப் போலல்லாது இராணுவம் தானுமொரு அரசியற் ஸ்தாபனமாக மாறிவிடவில்லை என்பதையும் அது இன்னமும் அரசியல்வாதிகளது ஆளுமைக்குள் உள்ளது என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும்.

“தனது மக்கள்” மீது முப்படை கொண்ட போரை நடத்துவதிலும் இவ்விரு நாடுகள் ஒன்றுபடுவதால், இது பாக்கிஸ்தானிய மயப்படலின் மூன்றாவது சான்றாகக் கணிக்கப்படுகிறது.

நாட்டைக் காப்பாற்றுவது என்றவாறு அதிகார வர்க்கங்கள் படுகொலைகள் நடத்தாத நாடுகள் எங்கும் இல்லை, ஆனால் அவை யாவுமே முப்படை கொண்ட போர்த் தொடுப்புக்களால் ஏற்படுபவைவும் அல்ல. மேலும், இந்நிகழ்வுகள் காலத்தின் பேரில் எடை போடப்படும் போது பிரத்தியேகமானவை என்பதும் கவனிக்க வேண்டியது. சிலவேளைகளில், 150 வருடங்களின் முன்னர் இடம் பெற்ற அமரிக்காவின் உள்நாட்டுப்போரை, ஐ.நா, ஜெனீவா ஒப்பந்தங்கள் என்ற சர்வதேசிய ஸ்தாபன மயப்படுதல்களின் பின்னர், இன்று இலங்கையில் பாக்கிஸ்தானில் இடம்பெற்ற முப்படைப் போர்களுடன் பொருத்தமற்ற ஒப்பீடு செய்யும் வெற்று வாதங்களையும்தான் நாம் கண்டுள்ளோம்.

மக்களது கூட்டுப்பாதுகாப்பை நாட்டின் பேரில் நிராகரிப்பததையும், தேசபாதுகாப்பு என்ற நியாயப்படுத்தலை முன்வைக்கும் போதிலும், நடைமுறையில் தனிமனிதரின் சமுதாயங்களின் பாதுகாப்பு துச்சமாக்குவதையே காண்கிறோம். வெள்ளை ‘வான்கள்’ மக்களது பாதுகாப்பிற்காக ஓடித் திரிவதிலை என்பதும், மக்கள் அடையாளமே இல்லாது போவதும், அரச-நிர்வாக ஸ்தாபனங்கள் நேரடியாகவே தமது மக்கள் மேல் இரகசியப் போர் நடத்துவதற்கான அத்தாட்சிகளும் இருப்பதனால், இந் நிலைப்பாடு இலங்கையின் பாக்கிஸ்தான்-மயப்படுதலுக்கு நான்காவது சான்றாகிறது என்பர்.

பல பின் தங்கிய நாடுகளில், 1. அரசு – மக்கள், 2. ஆளுமை – அதிகாரம் என்பவற்றின் உறவுகளில் உள்ள குளப்பங்கள் ஒரு புறத்திலும், 3. உற்பத்தி உறவுகள் – மூலதனம் என்பவற்றின் இடையேயான சச்சரவுகள் மறு புறத்திலும் பினைந்த குளப்பவாத நிலைகளைப் பிறப்பிக்கின்றன. இதனால் பல நாடுகளால் அந்நியத் தலையீடுகள் தவிர்க்க முடியாது போய்விடுகிறது.
ஆனால், மேற் குறிப்பிட்டவற்றில் மூன்றில் ஏதாவது இரண்டின் சீர் அமைப்பால் இத் தலையீடுகளின் விசையினை குறைத்துக் கொள்ள முயலும் நாடுகளே பெரும்பாலானவை. ஆனால், இம்மூன்று விடயங்களின் குளப்ப நிலையைக் கடைப் பிடிப்பதாலேயே தமது அதிகாரத்தை நீடிக்கலாம் என்றவாறு அமையும் இலங்கை அரசின் நிலைப்பாடுகள் அதனது பாக்கிஸ்தான்-மயப்படலுக்கு ஐந்தாவது சான்றாகிறது.

இலங்கையின் உள்நாட்டுப் போர்கள், கிளர்ச்சிகள், இனக் கலவரங்கள் காலத்துக்குக் காலம் (periodically) இடம் பெறுவதால், அவை நாட்டின் புத்தி-ஜீவிகள், கல்விமான்கள், திறமை பெற்றவர்கள் (skilled people) போன்ற மனித வளத்தின் வெளியேற்றக் காலமாக அமைவதும் வழக்கமாகிவிட்டது. தன்னிசையில் பொருள்வளம் தேடி புகலிடம் தேடுபவர் எப்போதும் உள்ள போதிலும், இப்போக்கினை ஒரு சாதாரண மக்களது நடவடிக்கை ஆக்கிவிடுவது மேற்குறிப்பிட்டவை போன்ற சமுதாய-அசம்பாவிதங்களே. இவ்வகையில், மனித வளங்களை இழப்பதில் ஒற்றுமை காண்பதால் பாக்கிஸ்தான்-மயப்படல் என்தற்கு இது ஆறாவது சான்றாகிறது என்பர்.

எனவே, ஜனநாயகமயப்படுத்தல் எனும்போது ஒரு புறஎல்லையில் பாக்கிஸ்தான்-மயப்படலை தவிர்ப்பது என்பதையும் மறுபுற எல்லையில் இலங்கை பூரான பூரண-ஜனநாயகம் பற்றிய கடமைகளும், நடவடிக்கைகளும் என்பதும் தெளிவாகிறது.

சமுதாய-மாற்றங்கள்

இலங்கையின் பொருளாதாரம் கடந்த 30 ஆண்டுகளில் தனது உள்ளடக்கத்திலும் வெளிப்பாட்டிலும் சில அடியொட்டிய மாற்றங்களைக் கண்டுள்ளது. இவைபற்றிய புள்ளி விபரங்களுடனான ஆய்வு பிறப்பானது. இருந்தும், சமுதாயங்களின் அடிமட்டத்தில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களையும் அவற்றிக்கான சில காரணிகளையும் அவதானிப்புகளாகத் இங்கே தர வேண்டியது அவசியமாகிறது.

இலங்கை காலனித்துவ காலத்தின் பின்னடியில் பெருந் தோட்ட ஏற்றுமதிப் பொருட்களில் தனது 90மூ மேலான அந்நிய வருமானத்தை பெற்றது. இன்று அவை தரும் அந்நிய செலவாணியிலும் பார்க்க வெளி நாடுகளில் வீட்டு-வேலைக்காரர்காளாக பணியாற்றும் பெண்கள், கட்டிடத் துறையின் தொழிலாளிகள் போன்றோரது உழைப்பினால் பெறும் வருவாய் மேலாகிவிட்டது. இவர்களைப் போல விசேட-பொருளாதார-வலையங்களுள் அடிமை ஊழியத்தில் தொழில் செய்வோர் தொகையும் அதிகரித்துள்ளது. மேற்கு மாகாணமும் அதனை அண்டிய பகுதிகளும் வெளிநாட்டுப் பணத்தின் உள்வரவால் வளர்ச்சி கண்டதாக உள்ளன (Central Bank of Sri Lanka Reports 1999 – 2008).

மேலும், வேலை தேடுவோர்களில் 15மூ மேலானோர் அரச பாதுகாப்புத் துறையில் தமது ஊழியத்திற்கு தங்கி உள்ளனர். உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியின் பெரும் பகுதி 56மூ பாராமரிப்புத் துறைகளுள் அடங்கியவையாகவும் உள்ளன. (Sarvananthan, Muttukrishna. 2007. Economy of the Conflict Region in Sri Lanka, East-West Centre, Washington; Asian Development Bank. February 2008. Sri Lanka: Ploitical and Economic Update)

மாகாண ரீதியில் உயர் கல்விக்கான வாய்ப்புகள் அதிகரித்ததில் இருந்து பிராந்திய மக்கள் பட்டப் படிப்பிலான திறமைகளில் (skills) கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளனர். இவ்வாய்ப்பு வடகிழக்கில் நடந்த போரினால் அங்கு வாழ்பவர்க்கு பூரணமான தொடர்ந்த பலனைத் தரமுடியாது போகிலும், அவர்களின் சமுதாயங்களின் இடையான உறவுகளின் விதிகளை ஓரளவு மாற்றி அமைக்க உதவி உள்ளது. மலையகத்துத் தமிழர்களிடம் இன்று கல்விவளமும், அதனை ஒட்டிய தன்நம்பிக்கையும் சுயஉணர்வும், வளர்ந்து உள்ளன. அதனால், தமது கொத்தடிமை வேலைகளை விட்டகன்று பட்டினியாகினும் சுயவாழ்வு தேடும் முனைப்புக் கொண்ட தன்மை அவர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளதைக் காணலாம். நாடு பூரான மக்களது வறுமைக்-கோட்டு விகிதாசாரத்தில் 6% முன்னேற்றம் உள்ளபோது மலையகத்தில்மட்டும் 54% பின்னடைவு ஏற்பட்டு உள்ளமைக்கான (World Bank Report. January 2007. Sri Lanka: Poverty Assessment) காரணிகள்பற்றி நாம் கவனமாக இருக்க வேண்டிய போதிலும் இளம் சந்ததியினரது நகரப்புற வெளியேற்றமும் அவற்றுள் ஒன்றாகும் எனக் கூறுவதில் தவறில்லை.

தமிழர் மீது சிறீலங்கா நடத்திய போரினாலும், புலிகளால் நடத்தப்பட்ட ஈழப் போர்களினாலும், அவற்றினாலான தாக்கங்களாலும் தமிழ் பேசும் சமுதாயங்கள் பாரிய சமுதாய மாற்றங்களை கண்டுள்ளனர். பல இலட்சக்கணக்கான தமிழர்களது வெளியகற்றல் அங்கே பல ஊர்கள் சிறு நகரங்களையே அழித்துள்ளன. எனவே, அதே அளவிலான எதிர்மாறான பொருளாதாரத் தாக்கத்தை இம்மாநிலங்களின் காண்பது ஆச்சரியமானதல்ல. ஆண்-பெண் வயோதிபர்-இளையவர் கற்றோர்-கல்வி இழந்தோர் விதவைகள்;, ஊனமுற்றோர் என்ற சகலதுறைகளிலும் மனதவளத்தின் வீழ்ச்சி ஒரு புறத்திலும், மேற்கத்தைய நாடுகளில் புகலிகளாகி அங்கு முன்னேற்றம் கண்டவரது தொடர்புகள் மறுபுறத்திலும் ஊக்கு சக்திகளாக அமைய இங்குள்ளவர் மனோவியல் ரீதியில் தமது எதிர்பார்புகளில் பலபடிகளை எய்தி உள்ளனர்.

இலங்கைப் பொருளாதாரத்தின் வளர்ச்சி என்பதில் உள்ள பிளறுகள், அதிலும் பிரதேச ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் வேறாகக் கணக்கில் கொள்ப்பட வேண்டியவை. மேலும், அவ்வாறான வளர்ச்சியினால் அதன் வெவ்வேறு மக்கள் சமுதாயங்கள் கண்ட வளர்ச்சி, அவற்றின் ஏற்றத்தாழ்வுகள் பிறம்பாகக் கவனிக்கப்பட வேண்டியவை.

இவ்வகையில் மனத-வளங்களையும் மனிதத்தன்-வளர்ச்சியையும் கணிப்பிட்டு அவற்றில் சரிநிகர் தேடுவதே அர்த்தமான வாழ்கைக்கான அடிப்படை வாதம் என்பது எமது நிலைப்பாடு. எனவேதான் சமூக-ஜனநாயகம் (social-democracy) மக்கள்-ஜனநாயகம் (peoples-democracy) பற்றிய கவனம் இன்று எமக்கு அவசியமாகிறது.

மக்களது ஜனநாயகம்

ஜனநாயகம் என்பதை வெற்று அரசியல் நடைத்தையாக, சமுதாய-சிந்தையற்ற பொருளாதார நடைமுறைகளை ஊர்ஜிதம் செய்யும் கருவியாகக் கருதும் வழக்கே உலகெங்கும் உள்ளதால், இலங்கையோ அங்குள்ள சமுதாயங்களோ அதன் தாக்கங்களுள் அகப்படாது போக முடியாது. ஜனநாயகம் என்பதை ஒரு நாட்டின் அரசில்-அதிகாரத்தினைக் கைப்பற்றும் அரசியல்-வழியாக யாவரும் கருதுவதால் அதனை ஏதாவதொரு ஸ்தாபனத்தின் பொறுப்பானதாகக் கருதியே செயற்படுகின்றோம். எனவே, குடும்பத்துள்ளேயோ, மற்றைய மனிதர்களுடனான உறவுகளின் போதோ பாவனையில் கொள்ள வேண்டியதில்லை என்ற பழக்கத்துடனேயே நடந்தும் கொள்கிறோம்..

ஆதலால்,

(1) சாதியம் என்பதை மக்களது அடிப்டையான ஜனநாயகப் பிரச்சனையாகக் கருதுவதில்லை.

(2) எம்மிடையே சொந்த நிலமற்று, நீக்கல் கூரை கொண்ட குடில்களுள், குனிந்து வளைந்து தலைமுறைகளாக சீவனம் நடத்துபவர்களது ஜனநாயக உடமைகள் பற்றிய சிந்தனைகளும் இருப்பதில்லை.

(3) பிராந்தியங்களாக வேறுபடும் எமது சமுதாயங்களது சமுதாய-பொருளாதார நிலைகள்பற்றியோ அவர்களது அபிலாசைகள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதும், அவையும் ஜனநாயகம் என்ற நடைமுறைகளுக்கு உள்ளேயே அடங்குகின்றன என்பதையும் அவதானிப்பதில்லை.

(4) மொழிவாரி இன அடிப்படையிலான ஒடுக்கு முறைகளுள் அடக்கப்பட்டு விட்டதால், மாற்று இன மக்களது ஜனநாயக உடமைப் பிரச்சனைகளை எம்முடன் இணைத்துப் பார்ப்பதும் இல்லை.

(5) பெண்களும் ஆண்களைப் போன்றே சகல ஜனநாயக உடமைகளுக்கும் உரித்தானவர்கள் என ஏற்றுக் கொள்வதில்லை.

(6) சிறுவர்களுக்கும் ஜனநாயக உரித்துகள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்வதும் இல்லை.

தழிழ் பேசும் சமுதாயங்கள் பிறம்பான இனங்களா? தேசங்களா? என்ற விவாதங்கள் ஒரு கரையிலும், அவை தமது ஒன்றுபட்ட பொதுப்பட்ட ‘தமிழ் மொழிவாரியான தேசத்துவத்தை’ (statehood) அதற்கான அரசியல் அலகுகளை நோக்கிய தேடல் அவசியமா? என்ற வாதம் மறுகரையிலுமாக இனரீதியிலான தீர்வுகளை நோக்கிய ஜனநாயகவாதங்கள் ஒரு புறத்தில் அமைந்துள்ளன. இவற்றிக்கு வரைவும் வடிவும் தருனவாக, புலிகளையும் தமிழீழப் போரையும் வெற்றி கண்டதால் சிங்களமயமாக்கலையே சிறீ லங்கா தேசியத்துவம் என நிலைநாட்ட முயலும் பேரினவாதம் மறு புறத்தில் உள்ளது.

எமது கரிசனமோ அவற்றிலும் மேலாக இவ்விரு மக்களிடையேயும், அவர்கள் மத்தியிலும் இடம்பெற வேண்டிய சமூக-பொருளாதாரத்தை முதன்மைப்படுத்தும் ஜனநாயக மயப்படுத்தல் பற்றியதாக இருக்க வேண்டும் என்பதில் உள்ளது.

சர்வதேசியமும் முதலாளித்துவ-சந்தையும்

மார்க்ஸ் ஏங்கல்ஸின் “பொதுவுடமை பிரகடன” (Communist Manifesto) காலத்திலிருந்து சர்வதேசியம் என்ற வாதம் புரட்சிவதிகளது அரசியல் கைவசம் என்றாகிற்று. ஆயினும் “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்ற அறைகூவலின் அடித்தளத்தில் உள்ள சிந்தாந்தம் நடைமுறைப் பரிணாமம் காண்பதாற்கான காலம் தொலைவாகிக் கொண்டே போகிறது. இதற்கான காரணி காரணங்களை ஆய்வு செய்வோர் விளக்கம் தருவோர் பெருவாரியாக உள்ளர்கள்.

மார்க்ஸ் சொன்னது போல, “உலகை நிலைமைகளை விளக்குவதல்ல, மாற்றி அமைப்பதே முக்கியம்” என ஏற்றுக் கொள்வதாகின், இன்றைய நிலைமைகளில் சர்வதேசியம் என்பதை எடைபோட்டு அதற்கேற்ப்ப எமது செயற் திட்டங்களை அமைத்துக் கொள்வது அவசியமாகும். நாமோ எதிர்மாறாக, புரட்சிகளின் தோல்விகளுக்கு காரணங்கள் கண்டு பிடிப்பவர்களாகவும், யாராவது புரட்சிவாதிகளது துதிபாடிகளாகி அவர்களது பழுதுகளுக்கு குறைவுகளுக்கு மன்னிப்பு-வக்காலத்து வழங்குபவர்களாகவும், சுயசிந்தை இழந்த முடிவுகள் எடுக்கும் திராணி அற்ற பிம்பங்களாக மாறிவிடுகிறோம்.

உலகத்து புரட்சிகள் யாவும் தோல்வி கண்டனவோ இல்லையோ, சீனா இன்றும் பொதுவுடமை நாடோ இல்லையோ, பின்தங்கிய நாடுகளில் தேசியவாதங்கள் முளைவிடுவதும் அவற்றை பெரிய தேசியவாதங்களால் வெட்டி எறிவதும் காலாகால வழக்குகளாகி உள்ளன. அதேவேளை, வளர்ந்த நாடுகள் போலவே மூலதனத்தைக் கொண்டவர்கள் பராமரிப்பவர்கள், தமது முன்னேற்றம் கருதி தத்தமது தேசியவாதங்களின் முதன்மைப்படுத்தலை கைவிட்டு ஒற்றைத் தேசியத்தையும் ‘நாட்டுப் பாதுகாப்பையும்’ ஏற்றுக் கொள்கின்றனர்.

இந்நிலையில், நாட்டின் சில பகுதிகள் சமுதாயங்கள் பிரதேசங்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டுள்ளதையும் உலகளாவிய ரீதியில் தமது வகுப்பு-மட்டங்களை (standards) நிலைநாட்டக் கூடியவையாக உள்ளதையும் அவதானிக்கிறோம். இவை வெறும் மூலதனத்தின் வரம்புடைப்பா என்ற கேள்விக்கு பூரண பதில் இல்லாது போகினும் தேசிய-வரம்புகளுள் அகப்பட்டும்கூட உழைப்பு (labour) பாரிய அளவில் நாடுகடப்பதையும்தான் அவதானிக்கிறோம். இவற்றின் அடித்தளத்தில் முதலாளித்துவச் சந்தையின் சர்வதேசியம் இருப்பதை நாம் யாவரும் அவதானிக்கிறோம், ஆனால் அதுபற்றிய விளக்கங்களில் பாரிய வேறுபாடுகளில் உள்ளோம்.
இவற்றினால் சாதாரண மனிதர்கள், சில சமுதாயங்கள் முன்னேற்றம் கண்டுள்ள போதிலும், பொதுப்படையாக சாராசரி மனிதனுக்கு என்ன பயன் கிட்டியுள்ளது என்பது எடைபோடப்பட வேண்டிய விடயமே.

1. பொதுவுடமை வாதத்தின் சிந்தனா-உணர்வுச் சக்தியினது தாக்கத்திலும் மனிதனது நுகர்வுச் சக்தியால் உலகமக்கள் ஒன்றிழுக்கப் பட்டுள்ளனர் (ஒன்றிணைபு அல்ல).

2. ஐக்கிய அமரிக்கா சீனா இந்தியா ரஸியா போன்ற பெரிய நாட்டின் பேரிலோ, ஐரோப்பா போல நாடுகளின் கூட்டின் பேரிலோ முதலாளித்துவம் சர்வதேசியத்தின் முழுமையான ஆளுமையைக் கொண்டுள்ளது.

3. குடியானவர் சமுதாயங்களைக் கொண்ட சிறிய ‘நாடுகள்’, குறிப்பாக குடியான-ஜனநாயகங்கள், வளர்ந்த நாடுகளது பொருளாதார முன்னேற்றங்களின் நுகர்வுகளின் அடிப்படையில் ஏற்றுமதிக்காகவும் கொள்வனவுக்காகவும் காணவிளையும் வளர்ச்சி அரசியற்-பொருளாதார சிந்தனை அற்றவையாகவும், அரசியல் சொரிவுகளை சந்திக்க வேண்டியவையாகவும் உள்ளன.

4. மனிதனது பொதுவான ஆதங்கங்கள் தனிமனித-உணர்வுகள+டாக, தனிமனித-உரிமைகள் எனவும், அவற்றின் அடிப்படையில் சமுதாய அல்லது சமூக மயப்படுத்தக் கூடியவை என்பதும் பொது-உணர்வாகும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

5. ஜனநாயகம் என்பது சர்வதேசியமயப் படுத்தக் கூடிய சித்தாந்த வாய்ப்புகளை வளர்த்துக் கொண்டுள்ளது.

எனவே, நாம் விளக்கம் மட்டுமே கூறுபவர்களாக இல்லாது, சூழலுடன்-செயலுடன் தொடர்பு கொண்டவராக (pro-active) இருக்க வேண்டின், ஜனநாயக மயப்படுத்தல் என்பதை வெறும் அரசில் சாசன மாற்றங்களாக, குறிப்பாக இன ரீதியில் எழும் சர்ச்சைகளை மட்டுமே தீர்ப்பதற்கான அரசியற் காத்திரங்களாகக் கருதாது, சமூக-பொருளாதார சமநிலைகளுக்கான தீர்வுகளையும் சர்வதேசியத்தையும் உள்ளடக்கியவையாக மாற்றிட வேண்டும் என்கிறோம்.

இவற்றினை உலகளாவிய ரீதியில் காத்திரமாகும் வகையில் மனித–உரிமைகள் என்ற நிலைதளத்தில் (human-rights framework), அதன் அடிப்படையில் பிரதிபடுத்தப்படும் மொழியிலும் செயலாக்கங்களிலும் நிர்வாக வழிமுறைகளையும், அவற்றை தொடர்படுத்தும் உறவுகளுடனும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிறோம்.

இலங்கை அரசின் வடிவமைப்பு 13ம் சரத்தினூடாக அதிகாரப் பரவலாக்கத்திற்கான வழிகளைத் தந்துள்ளபோதும் அவை 1. ஜனாதிபதி அதிகாரங்களால், 2. பல்லின மக்களது பாரம்பரிய உடமைகளை அங்கீகாரம் செய்யாது போவதினால், 3. சரத்தில் உள்ள உரிமைகளையே ஸ்தாபன ரீதியில் காத்திரம் செய்ய முடியாமையினால் அடிப்படை மாற்றங்களை காண வேண்டியவை என்கிறோம்.

மேலும் இரு மொழி பேசும் பல சமுதாயங்களை உள்ளடக்கிய நாடு, ஒரு இன மக்களது 1. அரசியலினுள், 2. அரசியற் காலாச்சாரத்துள் தங்கியுள்ளதால், ‘அரசியல்’ என்பதன் நடைமுறைகளிலும் ஜனநாயகம் தங்கிடும் வகையிலான மாற்றங்களையும் அவை கொண்டதாக இருக்க வேண்டும் என்கிறோம்.

சமூக, பொருளாதார முன்னேற்றங்கள் பிரதேச, இன ரீதியான பாகுபாடுகளுள் உட்படுத்தப் படுவதால் ஜனநாயகம் 1. என்பதை சகரும் சமநிலையில் இருந்து நுகர்வதில்லை, 2. என்பது அதிகார துர்ப்பிரயோகமாகிறது.
இன ரீதியில் வட கிழக்கு மலையக மக்கள் இதுவரை காலமும் புறக்கடிக்கப் பட்டார்கள் என்பதையும், அதே தருணம் பிராந்திய ரீதியில் சிங்களச் சமுதாயங்களது அபிலாசைகள் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ள என்பதையும் தாஸ்தாவேதுகள் குறிப்பிட்டாலும் இருசமூங்களது பொது அறிவானவை என்பதற்கில்லை (Further reading, reference 9).

சிறீ லங்காத் தேசியத்துவம் சிங்கள மயப்படுத்தல் என்ற அரசியலுள் அகப்பட்டுவிட்டதால் அரச, நிர்வாக, இராணுவ நடத்தைகள்யாவுமே சிங்களமயப்படுத்தல் என்பதே சிறீ லங்காவின் அரசியல்-பொருளாதார நிலைப்பாடுகளாகியுள்ளன.

ஜனநாயகம் என்பது தனிமனிதரிடையே, குடும்பத்தினிடையே, சமுதாயங்களிடையே, சமூகங்களிடையே உள்ள இயங்கியல் உறவுகள்பற்றியது என்பது ஏற்கப்பட வேண்டியது. எனவே, அது அடித் தளங்களில் இருந்து கட்டி எழவேண்டியது என்பதும் சமுதாயக் கட்டுக்கள் (civil societies) அரசியற்-பொருளாதார நிலைப்பாடுகளையும் ஆதரித்து நிற்பவையாகவும் இருக்க வேண்டிம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை.

மேற்குறிப்பிட்டுள்ள மூன்று ஜனநாயகக் கட்டுக்களும் வகைகளாகத் தரப்பட்டுள்ள போதிலும் அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லா வகையில் நடைமுறைப் படுத்தப்பட்டால் இலங்கை ஜனநாயகமயப் பட்டுவிடாது என்பதை நாம் சரித்திரத்தின் படிபினைகளாலாவது அறிவோம். ஆதலால், ஜனநாயக மயப்படுத்தல் என்பதே இலங்கைவாழ் சமூகங்களது ஒன்றிணைப்பிற்கான வேலைத் தளம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். சமூகங்களது ஒன்றிணைப்பு என்பது சிறீ லங்கா எனும் தேசியம் என்ற பாணியில் சிங்கள மயப்படுத்தலாகுவது ஜனநாயகமயப்படுத்தல் என்பதற்கு எதிர்மாறானது என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

ஜனநாயகம் பற்றிய விவாதங்கள், பாராளுமன்றஃஜனாதிபதி ஆட்சி என்றவாறான கொழுப்பை மையமாகக் கொண்ட, மத்தியப்ப படுத்தலுள் (centralised) அகப்பட்டு உள்ளபோது அவை ஜனநாயகப்படுத்தல் என்பதற்கு ஒவ்வாது என்பதும் பிரதேச, இன ரீதிகளிலான அதிகாரப் பரவலாக்கம் என்பவை பற்றிய விவாதங்களும் வன்முறைகளுள் அகப்படாது பரவலாக இடம்பெறும்போதே அரத்த புஸ்டி ஆகிறது என்பதும் உணரப்பட வேண்டும்.

ஜனநாயக மயப்படுத்தல் என்பது அடிப்படையில் தனிமனிதனதும் அவன்சார்ந்த மக்களதும் அதிகாரவலுவாக்கம் (நஅpழறநசஅநவெ) என்பதாகும் எனப் புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சுருங்கக் கூறின்:

ஜனநாயக மயப்படுத்தல் என்பது,

1.இலங்கை அரசின், அரசியலின் வடிவமைப்பின்,
2.சமூக, சமுதாய-பொருளாதாரத்தின்,
3.தமிழ் சிங்களம் பேசும் சமுதாயங்களின்,

மத்தியில் மனிதனையும் மக்களையும் ஆளுமை கொண்ட ஸ்தாபனங்களாக ஆக்கிடுவதற்கான நடத்தைகள் செயற்பாடுகள் பற்றியவை என்கிறோம்.

முடிவாக, குறைந்தபட்ச புரிந்துணர்வு ஏற்பாட்டுக் குழுவின் பிரேரணைக்குரிய குறிப்புகள்:

1.சிறீ லங்கா அரச சாசனத்தின் 13வது சீர்திருத்தம் இலங்கை அரசியலின் ஜனநாயக மயப்படுத்தலில் அரசக்-கட்டு என்ற (structrally) ரீதியில், நடைமுறையில் நிர்வாக அதிகாரங்களை மட்டுமே பரவலாக்கும் வகையாயினும், முக்கியமான முதற்படியாகும்.

2.அரத்த புஸ்டியான அரசியற்-பரவலாக்கம், அதாவாது மக்கள் தமது சமூக-பொருளாதார அபிலாசைகளை நேரடியாக பாராமரிப்பதால் தமது பூரண ஜனநாயக உடமைகளை நுகரும் உரிமைகளைத் தரும் அரசியல் அதிகாரங்களின் பரவலாக்கம் என்பது, பிராந்திய ரீதியிலும் சமூக ரீதியிலும் அணுகும்போதே சாத்தியமாகிறது.

3.பிரிவினை வாதங்கள் பிரதேச சமூக ரீதியில் ஜனநாயகத்தின் அணுகுமுறை அற்ற, அவற்றிக்கான கட்டுகள் வகைகள் இல்லாத பட்சத்தில், அவற்றினை எய்த முனைவோரதும் அதிகாரங்களை மையப்படுத்த விளைவோருக்கும் இடையிலான இயங்கியல் உறவின் முறிவுகளால் ஏற்படுவன.

4.இவற்றிக்கு அடித்தளமாக பிரதேச மக்களது சமூக-பொருளாதார வளர்ச்சியின் பின் தங்கலும், வளர்ச்சிக்கு எதிரான அரசியற்-பொருளாதார நிலைப்பாடுகளும் காரணமாக, இலங்கையின் ஜனநாயக மயப்படுத்தலுக்கு எதிரான நிலமைகளையே உருவாக்குகின்றன.

5.பிரதேச ரீதியில் சரி, இன ரீதியில் சரி, இலங்கை பூரானதாயினும் சரி, சமூக-பொருளாதார உடமைகளும் வளர்ச்சிகளுக்கான வாய்ப்புகளும் கொண்ட செயற்பாடுகளே ஜனநாயக மயப்படுத்தலை ஊர்ஜிதம் செய்வன எனக் கொள்ள வேண்டும்.

6.எந்த ஒரு இனத்தின் வளர்ச்சியை அல்லது உரிமைகளை முதன்மைப் படுத்துவது அவை பேரிலான தேசிய வாதங்களை முன்னெடுப்பது, அதேவேளை மனிதச் சமுதாயங்களது பூர்வீக உடமைகளை நிராகரிப்பது, யாவும் ஜனநாயக மயப்டுத்தலுக்கு ஒவ்வாதவை.

7.சகல இனங்களும், அவற்றிடையே உள்ள சமுதாயங்களும், ஏற்றத் தாழ்வுகளற்ற சமூக-பொருளாதார வளர்ச்சிகளை காணும்போதே இனப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை அடைய முடியும்.

8.ஜனநாயக மயப்படுத்தல், தனிமனிதனதும் மனிதக் கூட்டுகளதும் பூரண ஜனநாகயக உடமைகளை காத்திரமாக்கும் மனித-உரிமைகள் (human-rights) என்ற நிலைதளத்தை (framework) உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.

9.ஜனநாயக மயப்படுத்தல் அடித்தளத்தில் மனிதனதும் அவனது சமுதாயங்களதும் ஆளுமை (empowerment) பற்றியது.

Further reading
(கருத்துகளின் விபரங்களுக்கு)

1.Committee on Foreign Relations, United States Senate. Dec 7, 2009. Sri Lanka: U.S. Strategy After the War.

2.Peebles, Patrick. 1990. Colonisation and Ethnic Conflict in the Dry Zone of Sri Lanka, The Journal of Asian Studies 49.

3.Sen, Amartya. 1999. Democracy as a universal value, Journal of Democracy.

4.Sen, Amartya. 10.06.2003. Why Democratisation is not the same as Westernisation, The New Republic Online.

5.Smith, J. W. 2005. Economic Democracy: Political Struggle of the Twenty-first Century, Institute for Economic Democracy Press.

6.Ravichandra, (Ravi) Sundaralingam. 09.04.2010. Parliamentary elections and post civil war trajectories in Sri Lanka. Sri Lanka Guardian.

7.Ravichandra, (Ravi) Sundaralingam. 24.01.2010. Police or military state: That is the question for India. South Asia Analysis Group.

8.ரவிச்சந்திரா, (ரவி) சுந்தரலிங்கம். ஆடி, 2008. அரசியற் பொருளாதாரமும் 13ம் சட்ட சீர்திருத்தமும். ASATiC,-Thesamnet.

9.வசந்தி, சுப்பிரமணியம். சித்திரை, 2010.இலங்கையின் வட கிழக்கு மத்தியமாகாகங்களில் இனரீதியான குடிப்பரம்பல்கள்-வளங்கள்-குடியேற்றத் திட்டங்கள்: ஒரு பார்வை. குறைந்தபட்ச புரிந்துணர்வு ஏற்பாட்டுக் குழுச் சந்திப்பில் சமர்ப்பணம்.

10.அமரசிங்க, சோமவன்ச, சில்வா, ரில்வின். 19.09.2008. இலங்கை அரசியலில் இந்தியாவின் தலையீடு. நியமுவா வெளியீடு.

பின்குறிப்பு:
இக்கட்டுரை முக்கிய பகுதி 10.09.09 தேசம் இணையத்தளத்தில் “இலங்கைத் தமிழரது எதிர்காலம்” என்ற தலைப்பில் பதிப்பானது. அதேவேளை, குறைந்தபட்ச புரிந்துணர்வை ஏற்பாடு செய்யும் செயற் குழுவின் பார்வைக்கு London- Leyton, Walthamstow குறிச்சியில் சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது, சுமார் ஒரு வருட காலத்தின் பின்னர் (03.08.10) குழுவால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் (08.08.10) சமர்ப்பிப்பதற்காக திருத்தங்களுடன் தரப்படுகிறது
.

ரவி சுந்தரலிங்கம்
Academic Secretary
ASATiC

தமிழ்தேசியக் கூட்டமைப்பு சரியான பாதையில் செல்கிறது புலம் பெயர் தமிழர்கள் முழுமையான ஆதரவு நல்க வேண்டும்! : ஐ.தி சம்பந்தன் (லண்டன்)

Sampanthar_I_T(தமிழ் தேசிய கூட்டணியும் முன்னணியின் தலைவர் திரு சம்பந்தனை ஆதரித்தும், தமிழ்தேசிய முன்னணிக்கான பிரசாரங்களில் ஈடுபடவும் கலந்தாலோசனைக் கூட்டம் ஒன்று ஈஸ்ற்காம் லண்டனில் நேற்று மாலை திரு சீனிவாசம் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்களும் முன்னாள் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர். – இக்கூட்டத்தை திரு ஜதி சம்பந்தனே ஒழுங்கு செய்திருந்தார் என்றும் அறியப்பட்டுள்ளது.)

இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வட கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழர் தாயகத்தின் ஐந்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

வன்னியில் ஆயுதப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அதாவது சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, அவர்களின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு நல்கி தமது நாடாளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

கடந்த மே மாதம் 18ம் திகதியுடன் ஆயதப் போரராட்டம் மௌனமாகியது அதன்பின்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஈழத்தமிழர்களின் அரசியலை ஜனநாயக வழிகளில் முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

முள்ளிவாய்க்கால் போராட்ட வீழ்ச்சியின் பின் இலங்கை அரசியலில் குறிப்பாக தமிழர் அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஹிட்லர் போன்ற சர்வாதிகார மகிந்த ராஜபக்ஸ ஒரு ராணுவ ஆட்சியைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். அரசுக் கெதிராகக் கருத்துக்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் கடத்தப்படுதல், காணாமற்போதல், வெள்ளை வான் கடத்தல், தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அரச படைகளின் துணையுடன் ஆயதக்குழுக்களால் படுகொலை செய்யப்பட்டமை, பயரங்கரவாத் தடைச்சட்டத்தையும், அவசரகால சட்டத்தையும் பயன்படுத்தி தமிழ்மக்களை அடக்கியொடுக்கும் அரசியல் நிலையை புலம்பெயர் தமிழர்கள் நன்கு அறிவர் தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது தொகுதிக்கு செல்ல முடியாதளவு உயிர் அச்சறுத்தலும். பாதுகாப்பின்மையும் இருந்து வந்ததை யாவரும் அறிவர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு. கஜேந்திரன் செல்வராசா, திருமதி பத்மினி சிதம்பரநாதன், திரு ஜெயானந்த மூர்த்தி, திரு.சிவாஜிலிங்கம் போன்றவர்கள் அங்கு வாழ முடியாது என்று நீண்டகாலம் வெளிநாடுகளில் தங்கியிருந்தனர். ஆனால் தலைவர் திரு. சம்பந்தன் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நெருக்கடியையும் பொருட்படுத்தாது நாட்டிலிருந்து தம்மால் செய்யக்கூடிய கடமைகளை ஆற்றிவந்தனர். வன்னிப்போராட்டம் முடிவடையும் வரை விடுலைப் புலிகளுக்கு முழுமையான ஆதரவு நல்கி அவ்வியக்கத் தலைமையின் வழிகாட்டலுக்கு உட்பட்டு நடந்துவந்ததையும் அணைவரும் அறிவர்.

மக்களால்தெரிவு செய்யப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்ப விடுதலைப் புலிகளின் ஊதுகுழல் என்று மகிந்த அரசாங்கம் பலவழிகளில் அவர்களைப் பழிவாங்கி வந்ததை அனைவரும் அறிவர். இந்தச் சூழலில் முள்ளிவாய்கால் வீழ்ச்சியின் பின் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழ்தேசியக் கூட்மைப்பின் மீது சுமத்தப்பட்டது இந்தப் பொறுப்பை நன்கு உணர்ந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் சூழ் நிலையைக் கருத்தில்கொண்டு ராஜந்திரமாக அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.

25 வருட ஆயுதப்போராட்டம் வீழ்ச்சியடைந்ததால் அதிலிருந்து தமிழர்களை மீட்சிபெற வைத்து தமிழ்மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய நிலையிலுள்ள த.தே.கூட்டமைப்பு தமிழர்களின் வலுவான கட்சியாக வளரவேண்டுமென்பதில் புலம்பெயர் தமிழர்களிடையே மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இலங்கையிலுள்ள பயங்கரமான சூழ்நிலையில் தமிழர்தாயகத்தில் வாழும் மக்களின் அவலநிலை, இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல், உயர்பாதுகாப்பு வலயத்திருந்து இராணுவத்தை அகற்றல், வன்னிப்பிரதேசத்தில் ராணுவ ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தல், போன்ற அதிமுக்கியமான பிரச்சனைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டியுள்ளது. இவற்றை எவ்வாறு அணுகுவது என்பதைத் தமிழ்த்தேசிய கூட்டடைமப்பு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

இந்தியா இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தி வருவதனால் இந்தியாவின் நல்லெண்ணத்தை கட்டியெழுப்ப வேண்டிய அவசியமும் த.தே. கூட்டமைப்புக்கு உண்டு. அதையும் அவர்கள் ராஜதந்திரமாக மேற்கொள்வார்கள் என தமிழ்மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதேபோல் ஒரு அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கும் இந்தியாவின் உதவி அவசியமாக இருக்கிறது. அதே வேளை சர்வதேச நாடுகளின் ஆதரவும் தேவை. முதலில் இந்தியாவுடன் நல்லுறவைப் பேணவேண்டியது அவசியம். அதற்காக இந்தியாவிடம் சரணடையக் கூடாது, ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் சரணடைந்து விட்டதாகக் குரல் எழுப்பப்படுகிறது. அதைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை தெளிவுபடுத்த வேண்டும்.

அந்தவகையில் இந்தியாவுடனும் சர்வதேச சமூகத்துடனும் நல்லுறவைப்பேணி தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுடனான அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கு ராஜதந்திரமாக த.தே. கூட்டமைப்பு செயற்பட வேண்டும் இதைப்புரிந்து கொள்ளாத புலம்பெயர் தமிழர்கள் சிலர் திரு. இரா. சம்பந்தன், திரு.பிரேமச்சந்திரன் ஆகியோர் சோனியா காந்தியின் வலையில் சிக்கிவிட்டதாக கோசம் எழுப்புகின்றார்கள். இலங்கையின் களநிலைமைகளைப் புரிந்து கொள்ளாதவர்கள் கோசத்தை எழுப்பி குழப்பி வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டணியன் தலைவர் திரு. இரா சம்பந்தன் அவர்களைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது மிகக் கசப்பான விடயம்.

ஈழத்தமிழர்கள் அரசியல் ரீதியாக தலைநிமிர்ந்து ஜனநாயக வழியில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலையிலுள்ளனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டு விட்டதாகக் கூறுபவர்கள் இந்தப்பிளவு எத்தகையது என்பதை ஆராயவோ, யதார்த்தமாக சிந்திக்கவோ மறுக்கின்றனர்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு பலகட்சிகளை உள்ளடக்கிய ஒரு கட்டுப்பாடான அமைப்பு. பல கருத்துக்களைக்கொண்ட கட்சிகள் இங்கு அங்கம் வகுக்கின்றனர். முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்கமுடியாது. வன்னித் தலைமை இருக்கும் வரை கட்டுப்பாடாக விருந்தவர்கள் முள்ளிவாய்க்கால் வீழ்சியின் பின் தன்னிச்சையாக கருத்துக் கூற முற்பட்டுள்ளனர். தலைமைக்கு மதிப்புக்கொடுக்கும் நிலை குறைந்து விட்டதாகத் தெரிகிறது. இன்றைய சூழ்நிலையில் நல்ல அரசியல் அனுபமிக்க ஒருவர் கிடைத்தது பாராட்டத்தக்கது. அன்று இந்திரா காந்தியைச் சந்தித்த முத்தலைவர்களில் ஒருவராக இருப்பவர் திரு சம்பந்தன் அவர்களாகும்.

1952ல் திருகோணமலைத் தொகுதியின் பிரதிநிதியாக தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்படவர் திரு.இராசவரோதயம் அவர்கள். திரு சம்பந்தன் தமிழர் தாயத்தின் தலைநகரான திருமலையை சிங்களவர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்து வருபவர்கள். தமிழர்தாயக உணர்வுமிக்க அரசியல் பரம்பரையில் வந்தவர் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை திரு சம்பந்தன். இவரைப் புலம்யெயர் தமிழர் சிலர் மிக மோசமாக விமர்சிப்பதுதான் வேதனைக்குரியது.

எனினும் எந்தக் குறைபாடுகளையும், கண்டனங்களையும் பொருட்படுத்தாது த.தே. கூட்டணித் தலைமை அரசியல் நகர்வுகளைச் சாதுரியமாக மேற்கொண்டு வருகிறது. பிரபாகரன் அவர்களினால் நியமிக்கப்பட இரு வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மகிந்தா அரசிடம் சரணாகதி அடைந்துள்ளனர். தமிழ்த் தேசியத்தைக் கைவிட்டு மகிந்தாவின் சிந்தனையை ஏற்றுக்கொண்ட இவர்கள் பற்றி புலம்பெயர் தமிழர்களோ, ஊடகங்களோ பெரிதாக கூறுவதில்லை.

ஐனாதிபதி தேர்தலின்போது திரு சிறீகாந்தா, திரு சிவாஜிலிங்கம் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டைமீறி தனிவழி மேற்கொண்டனர். இவர்கள் பற்றி புலம்பெயர் ஊடகங்கள் அவ்வளவாக எழுதுவதில்லை.
இப்படியானவர்களை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சேர்த்துக் கொள்ளமுடியுமா? அவர்கள் பிளவு தலைமையால் ஏற்பட்டது என்ற பிரசாரம் செய்பவர்களும் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றார்கள்.

திரு கஜேந்திரகுமார், திருமதி பத்மினி சிதம்பரநாதன், திரு கஜேந்திரன் செல்வராசா ஆகியோரை தமிழத்தேசிய கூட்டமைப்பு வெளியேற விட்டிருக்கக்கூடாது. அரசியல் விவேகமுள்ளவர்களாக இருந்தால் அவர்கள் மூவரையும் த.தே கூட்டணி வேட்பாளர் பட்டியில் கட்டாயம் சேர்த்திருக்க வேணடும். அவ்வாறு செய்யாததற்கான காரணங்களை எம்மால் அறிந்துகொள்ள முடியவில்லை. அதற்கான விளக்கத்தை தலைமை வெளியீடும் என எதிர்பார்க்கின்றோம். என்ன விளக்கத்தை கொடுத்தாலும் எமது பார்வையில் அவர்களைச் சேர்த்துக்கொள்ளாதது தவறு என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எது எப்படியென்றாலும் த.தே. கூட்டமைப்பு என்ற ஒரு தமிழ் அரசியல்கட்சிதான் தமிழர் தாயகத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது அவர்களில் பெரும்பான்மையானவர்களின் வெற்றியிலேயே தமிழர்களின் எதிர்காலம் தங்கியுள்ளது. எனவே புலம்பெயர் தமிழர்கள் அவர்களது பூரண ஆதரவை நல்க வேண்டியது அவசியமாகும்.

உருப்படுமா இந்த யாழ் இனவாதச் சிந்தனை? : யூட் ரட்ணசிங்கம்

Palmyra_Treeyarl_instrumentதமிழரசுக் கட்சியிலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி தொட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அதன் இராணுவப் பிரிவான விடுதலைப் புலிகள் வரை அத்தனையும் யாழ் இனவாதச் சிந்தனையின் பிரதிபலிப்பாகவே இருந்திருக்கிறது. கடந்த 60 ஆண்டுகாலம் சிங்கள இனவாத அரசில் சிக்குண்டு தமிழ்பேசும் மக்கள் என்ன என்ன கொடுமைகளை அனுபவித்தார்களோ அதேயளவு கொடுமைகளையும் வெட்டியோட்டங்களையும் யாழ் இனவாதச் சிந்தனையில் சிக்குண்ட மற்றைய மாவட்டத்து மக்களும் அனுபவித்தார்கள் என்பதை நாம் மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு அண்மைக் காலமாக நடந்து வருகின்ற சம்பவங்கள் எம்மை தள்ளியிருக்கின்றன.

வீரகேசரி, டான் ரிவி  என்று யாழ் இனவாதச் சிந்தனைக்கு வக்காலத்து வாங்கும் ஊடகங்கள் குடாநாட்டுச் செய்திகள் யாழ் செய்திகள் என்று special attention கொடுத்து மற்றைய மாவட்ட மக்களை குறிப்பாக கிழக்கு மாகாண மக்களை கடுப்பேத்தும் வேலையைச் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

டான் ரிவி  வக்காலத்து வாங்குவதென்றால் வாங்கட்டும் அதன்பின் பார்வைகள் போர்வைகள் நேர்காணல் ஓற்றுமை சமத்துவம் என்று தமிழ் பேசும் மக்களுக்கு காதில பூவைக்கிற வேலையை விட்டிருஙகோ. இது 21ம் நூற்றாண்டு குடாநாட்டிலிருந்து வந்து மற்ற மாவட்டங்களின் மீது சவாரி விடுகின்ற நோக்கம் இருந்தால் ஒன்றுக்குப் பலமுறை சிந்தித்து விட்டு வாருங்கள்.
 
கைகழுவிய தண்ணீரை புகையிலையில் தெளித்து சிங்கள மக்களுக்கு புகையிலை வியாபாரம் செய்த காலம் இல்லை இது. சிங்கள மக்களுக்குச் செய்த புகையிலை வியாபாரம் கடைசியில புதுமாத்தளனில கொண்டுவந்து விட்டுது. திரும்பவும் டான் ரிவி  வீரகேசரி போன்ற வடிகட்டிய யாழ்ப்பாணத்து இனவாதச் சிந்தனையின் பிரதிநிதிகள் வெளிக்கிட்டிற்றினம் புகையில வியாபாரத்துக்கு.

மற்றைய மாவட்ட மக்களையும் அவர்களின் தனித்துவங்களையும் தெரிந்து கொள்வதற்கு உங்களுக்கு வாய்ப்பில்லைத்தானே. நீங்கள் கிணற்றுத் தவளைகள்போல் நான்கு வேலிகளையும் கிடுகுகளால் அடைத்து நடுவிலே ஒரு சிறிய ஓட்டையைப் போட்டு அதனூடாக பக்கத்து வீட்டையும் உலகையும் பார்ப்பவர்கள் உங்களுக்கு எங்கே உண்மையான உலகம் தெரியப் போகிறது?

முஸ்லீம் மக்களுடன் வியாபாரத்தில் ஈடுகொடுக்க முடியாத யாழ் சமூகம் ஆயுதப் பலத்தோடு இருந்த புலிகளைப் பயன்படுத்தி அவர்களை அந்தப் பிரதேசத்திலிருந்து விரட்டியடித்து அத்தனை வியாபார ஸ்தாபனங்களையும் தமதாக்கிக் கொண்டதைப் பார்த்தோம் தானே. அதற்கு கொடுக்கப்பட்ட விளக்கம் காட்டிக்கொடுப்பு என்றது. காட்டிக்கொடுப்புதான் அவர்களின் வெளியேற்றத்துக்கு காரணம் என்றால் யாழ்ப்பாணத் தமிழரின் முதல் துரோகி யாழ்ப்பாணத் தமிழன் துரையப்பாதானே (இதை நான் சொல்லவில்லை சொல்லியவர்கள் யார் என்பது கொன்றவர்கள் யார் என்பதும் யாவரும் அறிந்ததே.)

Eelam_and_Panaiயாழ்ப்பாணத்திலிலுந்து வந்து வன்னியில் பாராளுமன்ற உறுப்பினரான சுந்தரலிங்கத்தை வன்னி மக்கள் பாடசாலை கட்டித்தரும்படி கேட்க நீங்கள் படித்தால் யாழ்ப்பாண மக்கள் என்ன மாடா மேய்ப்பது என்று வன்னி மக்களைக் கேட்டதும், இராசதுரையை ஓரம்கட்டி அமிர்தலிங்கத்தை தலைவனாக்கியதும், காசிஆனந்தனை ஒதுக்கி புதுவை ரத்தினதுரையை ஆஸ்தான கவிஞன் ஆக்கியதும் பாலசிங்கத்தைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை கலாச்சார நகரமாக்க முயன்றதும் புலிகள் யாழ் முரியை அறிமுகம் செய்ததும் அதன்பின் வந்த அத்தனை புலிகளின் அடையாளச் சின்னங்களிலும் யாழ் கருவியையும் பனை மரத்தையும் இழுத்து வந்து இருத்தியதும் யாழ்ப்பாண இனவாத சிந்தனையின் வெளிப்பாடே. இது இலங்கை அரசின் திட்டமிட்ட பௌத்த சிங்கள மயமாக்கும் செயல்பாட்டிற்கு ஒப்பானது.

கடந்த 60 ஆண்டு காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்ட கசப்பான அனுபவங்களை தமிழ்பேசும் மக்களின் மனங்களிலிருந்து நிரந்தரமாக நீக்கிவிட முடியாத நிலை இருக்கின்றதோ அதே நிலைதான் யாழ் இனவாத சிந்தனையில் சிக்கித்தவித்த மற்றைய மாவட்டத்து மக்களின் மனங்களிலும் நினைவுகள் நிரந்தரமாக இடம் பிடித்துக் கொண்டன.

கொழும்பு ஆட்சியாளர் தமது இனவாத அரசியலை மாற்றாதவரை தமிழ்பேசும் மக்களின் மனங்களை வெல்லமுடியாது என்ற யதார்த்த நிலையை நம்புகின்ற அதே மனங்கள் யாழ் சிந்தனை என்ற யாழ் இனவாத சிந்தனையை கைவிடாதவரை மற்றைய மாவட்ட மக்களின் மனங்களை வெல்வது என்பது முடியாத காரியம் என்பதையும் நம்ப வேண்டும். 

அதுவரை தமிழ் பேசும் மக்களின் பிரதேசம் என்பது மூன்று ஆட்சி அதிகார அலகுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். கிழக்கு மாகாண அதிகார அலகு யாழ்ப்பாண அதிகார அலகு (ஆனையிறவுக்கப்பால்) வடமாகாண அதிகார அலகு மட்டுமே யாழ்ப்பாண இனவாதச் சிந்தனையிலிருந்து மற்றைய மாவட்டத்து மக்களைக் காப்பாற்றும் சிறந்த அரசியல் பொறிமுறையாக இருக்கும். அதுவே மற்றைய மாவட்ட மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாகும்.

யாழ்ப்பாணத்து தனித்துவம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் அதை அவர்கள் அந்த மண்ணிலிருந்து கொண்டு செய்யட்டும். யாழ்ப்பாண இனவாதச் சிந்தனையின் பாதுகாப்பு அரணாக  மற்றய மாவட்டங்களையும்  மக்களையும் பயன்படுத்தி பலிக்கடா ஆக்கப்படுவதை இனி ஒருபோதும் அந்த மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. (குறிப்பாக வன்னி மக்கள்) வைப்போம் இந்த சிந்தனைக்கு முற்றுப்புள்ளி.