::வடக்கு – கிழக்கு

::வடக்கு – கிழக்கு

வடக்கு – கிழக்கு சம்மந்தமான கட்டுரைகள்

சவால்களை எதிர்நோக்கினாலும் கொள்கையில் உறுதி : கி.மா. முதலமைச்சர்

210909pillayan.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது கொள்கைகளையும் எதிர்காலத் திட்டங்களையும் மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லும் போது பல்வேறு சவால்களை எதிர்நோக்கினாலும் தமது கொள்கையில் உறுதியுடன் இருப்பதாக அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கிராமிய மட்ட அங்கத்தவர்களுக்கான உறுப்புரிமை வழங்கும் வைபவம் பேத்தாழை குகனேசன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்,

“தமிழ் மக்களின் அரசியல் உரிமை, அபிலாஷை மற்றும் தனித்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கொள்கையாகும். சமூக ரீதியான பிராந்திய அரசியல், குறிப்பாக தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகளை முன்னுரிமைப்படுத்துவதற்குரிய ஒரு கட்சியாகவே இன்று எமது கட்சி விளங்குகின்றது. நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஓர் அரசியல் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது எமது கட்சியாகும். கிழக்கில் இதுவரைக்கும் அரசியல் தலைமைத்துவத்தில் ஸ்திரமற்ற நிலையே காணப்பட்டு வருகின்றது.இதனை மாற்றி அமைக்க வேண்டும். என்றார். 

இலங்கைத் தமிழர்களது எதிர்காலம்: ரவி சுந்தரலிங்கம்

Ravi Sundaralingamபாகம் 3
பழசுகள் புதியவை தாரா

முன்குறிப்பு: மேற்படி தலைப்புடன் இங்கு தரப்பட்டுள்ள கட்டுரை புலிகள் எனும்போது எவற்றைக் குறிக்கிறோம் என்ற கேள்விகளுக்கு, இயக்க-சாயல்கள் அற்ற கருத்துகள் சிலவற்றை முன்வைக்கின்றன. இவற்றை, (1) பழைய புதுசுகள், (2) புலிகள் என்றால் யார், என்ன? (3) தமிழீழச் சாதிகள், (4) புலிகளானவர் எம்மவரே என்ற உப-தலையங்கங்களுடன் தந்துள்ளோம். இறுதியில், கட்டுரை தமிழீக் கோரிக்கைகான வாதங்கள் தொடர முடியாதவை என்ற முடிவுக்கு எம்மை இட்டுச் சென்றுள்ளமை தர்க்க ரீதியில் தவிர்க்க முடியாதது.

பூரண பொறுப்புணர்வுடன் சமூக, சமுதாய சிந்தை கொண்டு, மக்களது சகல சமுதாயத் தட்டுகளது எதிர்பார்ப்புகள்-அபிலாசைகள் என்பவற்றை தம்முள்ளேயும், மக்கள் மத்தியிலும் ஒழுங்குபடுத்திக் கொள்பவர்கள் முன்னோடிகள். “நாமே எல்லாம்”; என்ற தன்னுணர்வில் ஒரு சமூகத்தட்டின் சமூகப் பார்வையுடன், ‘சமூக-சேவை’ செய்ய முற்படுபவர்கள் முன்னுக்கு-ஓடுபவர்கள். என இவை கடந்தபாகத்தில் முன்வைத்த வரைவுகளும் ஒப்பீடுகளும். இவர்களைவிட ”எம்மைப் பார்..” என எல்லாத் திக்குகளிலும் முன்னுக்கு- ஓடுபவர்களின் பின்னால் பறந்து திரியும் கிலுகிலுப்பைக்காரரும் பலர் உள்ளனர்.

பொறுப்பான வாசகர்கள் இவற்றையும் கிரகித்து, வரிகளிடையே இருக்கக்கூடிய விளக்கங்களை தாமே தமக்குத் தந்து, அல்லது அனாவசியமானவை என விலக்கி, தமது கருமம் பற்றி வினவ முன்னரே, கிலுகிலுப்பைக்கார்கள் + முன்னுக்கு ஓடுபவர்கள் தமது கூட்டு முயற்சியால், எம்மால் என்றுமே தீர்க்க-முடியாத இன்னுமொரு மர்மத்தை எம்முன் வைத்துள்ளனர்.

“எமது மண்ணை மீட்டெடுப்பதற்கான போராட்டம்” என தொடுக்கப்பட்டது புலிகளது போர். பல மாவீரர் தினங்களையும், தலைவரது வருடாந்தப் பொழிப்புரையையும் கடந்து சென்ற போர், ஈழப்போர்கள் 1 முதல் 4 வரை எட்டியது அந்தப் போர். இன்றோ அது, மூன்று வேளைச் சாப்பாட்டுடன் ஏதாவது எழுத வேண்டும் என வெளி நாடுகளில் தவித்துக் கொண்டிருக்கும் ஜீவனில்லாப்- புத்திமதிப் பண்டிதர்களுக்ககுக் கூட “போர்” அடிக்கும் துப்பறியும்- நாவலாக மாறிக் கொண்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழ்ந்த போதும் எமது மக்களது அன்றாட- வாழ்வின் விடிவுக்காக, தமது பிரத்தியேக வாழ்க்கையின் அபிலாசைகளில் பாரிய தடங்கல்களையும் பலத்த பொருளாதார பின்னடைவையும் சந்தித்த போதும், இன்றும் தமது குறிக்கோள் பற்றிய சிந்தனையுடன் உள்ளவர்கள் பலர். இவர்கள் எல்லோரும் முன்அடி எடுத்து தமது கருத்துக்களை “இந்தா பிடி” என முன்வைப்பதோ, தம்மை விளம்பரப்படுத்திக் கொள்வதோ, பதவிகள் ஸ்தானங்கள் தேடிக் கொள்வதோ கிடையாது. இவர்கள் தமது மன வருத்தங்களை, மக்கள் பற்றிய ஏக்கங்களை வெளிக்காட்ட எம்மைப்போல சந்தர்ப்பங்கள் இல்லாதவர்கள், அவற்றைத் தேடாதவர்கள்.

தவறான வழிகளில் போயிருந்தாலும், எமது மக்களுக்காக தமது வாழ்க்கைகளை அர்ப்பணித்தவர்கள், இன்று சூழ்ச்சிகள் சுத்துமாத்துகள் மர்ம-ஜாலைகளில் ஈடுபடுவதை, அல்லது ஈடுபடுத்தப்படுவதைக் கண்டு படும் வருத்தம், போராட்டமும் மக்களும் உள்ள நிலை கண்டு படும் கவலைகளிலும் பாரக்க பல மடங்கானது.

பழைய புதுசுகள்
இத் தொடரில் இடம் பெறுவதுதான், K.P என அழைக்கப்படும் விடுதலைப் புலிகளது புதிய தலைவர் பத்மநாதனது கைதும், அதனைத் தொடர்ந்த எவ்வளவோ கதைகளும், கட்டுரைகளும். இவைபற்றி என்னதான் எம்மால் சொல்ல முடியும்? அவற்றிகான தகவல்கள் எவ்விடமிருந்து வெளிவருகின்றன? இவ்றை அங்கும் இங்கும் இரகசியமாக வெளிவிடுபவர்களது நோக்கங்கள் என்ன? இவற்றிக்கெல்லாம் பதில் சொல்ல முடியாத நிலையில், விசனம் கொண்ட விலகலே பொறுப்பான பதில் அதற்கு.

பிரபாகரன் இறந்துவிட்டாரா? கொல்லப்பட்டாரா? சரண் அடைந்தாரா? பொட்டு அம்மான் இன்னும் உயிருடன் உள்ளாரா, அரசின் கைகளில் உள்ளாரா? என்ற மர்மங்கள் சூழ்ச்சிகள் போர்த்த துப்பறியும் கைங்காரியங்கள் முற்றுப்பெறும் முன்னரே மேலும் இந்தப் புதிய பரபரப்புகள்.

K.P எவ்வாறு யாருடைய துரோகத்தால் கைது செய்யப்பட்டார்? எந்தக் கிலுகிலுப்பைக்காரர்கள் அவரை அங்கும் இங்கும் இரகசியமாகச் சந்திக்கச் சென்றார்கள்? புலிகளுக்கு ஆதரவாளர்கள் என்று வெளிக்காட்டியபடி அவர்களுக்கு எதிராக கருமம் செய்பவர் யார்? புலிகளுக்கு எதிரானவர்கள் என்று கூறி அவர்களுக்காக அலுவல் செய்பவர்கள் யார்? புலிகள் என்றால் யார், K.P எனபவர் தலைமையிலான Transnational Government in Exile என்பதா அல்லது மாற்றாரது Global Tamil Forum என்பதா? என்றெல்லாம் எமது அறிவை பெருப்பிக்கும் பல தகவல்கள் இருப்பதாக பலர் சொல்லி நாமும்தான் கேள்விப்படுகிறோம்.

இப்படியான எமது பேரறிவு பற்றி புழுதி சேறு சகதிகளுள் தடுப்புக் காவலிலுள்ள எமது மக்கள் சரி, கைதிகளாகிவிட்ட தமிழ்ப் போராளிகள் சரி, என்னதான் சொல்வார்கள்? அல்லது இவைபற்றி ஏதாவது கரிசனம் அவர்களிடம் இருக்க முடியுமா?

ஒருவேளை, இவை அவசியமற்ற கேள்விகள். ஆனால், இப்பேரறிவு பற்றிய நாட்டமோ இருக்க முடியாது என்பதில் மட்டும் மிகுந்த அக்கறை எமக்கு. ஏன்?. போராட்டம் என்பது மக்களது உடமைகள் அவைபற்றிய உரிமைகள் பற்றிய சர்ச்சையே என்பதே எம்மை உழைக்கும் மக்களது வாழ்வுடன் ஈடுபடுத்தியது.

அதன் பின், இலக்கை விட்டகர்ந்து, கூர்-நோக்கை இழந்து, பாதையிலிருந்து இறங்கி மக்களையும், அவர்களது சர்ச்சைகள் பிரச்சனைகளையும் மறந்துவிட முடியாது. கிசுகிசுக்கள் குழப்பங்களுள் எம்மையும் ஆழ்த்திக் கொள்ளக் கூடாது. நாம், கூர்-நோக்குடன், அதாவது focus ஆக இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தைவிட வேறு முக்கிய சரித்திர அவதானிப்புகளும் இந் நிலைப்பாட்டிற்கு காரணமாகின்றன. அவை புலிகள் தமிழீழம் என்பவை பற்றி நாம் கொண்டுள்ள விளக்கங்களும் முடிவுகளுமாகும்.

சரித்திரம் என்பது வெறும் சம்பவங்களின் கோர்வை அல்ல. சரித்திரம் சொல்பவர்களது அரசியல் பொருளாதார நிலைப்பாடுகள், மனோவியல் பாங்குகள், அக் காலகட்டத்தின் இலட்சிய, யதார்த்த சூழல், என்பவையும் சரித்திரத்தினுள் அடங்கிய சரித்திரமே. ஆகவேதான் சரித்திரத்தை ஆய்வு செய்யும் சரித்திரமும் உண்டு என்பதையும் அதனையே சரித்திரத்துவம் ((historiographyh) எனும் துறை விஞ்ஞானத்தின் உதவியுடன் உருவாகி உள்ளது. அதேவேளை, வர்க்க ரீதியில், சமூக-பொரளாதார அரசியல் நிலைப்பாடுகள் சொல்வதையே நாம் இலட்சியச்-சரித்திரம் (objective history) என்றழைப்பது என்பதையும் கவனிக்க வேண்டும்.

புலிகள் என்றால் யார், என்ன?
புலிகள்பற்றி கருத்துச் சொல்பவர்கள் இன்று பலர். ஒருவர் சொல்வதை மற்றவராக முடிவில் Chinese whisper போல வேறேதோ ஒன்றாக விளைந்து வரும் வடிவங்களையே நாம் காண்கிறோம். புலிவெறுப்பை தளமாகக் கொண்டவர்களில் புலிகளது முடிவுக்கான காரியம் ஆற்றியவர்கள் காலம் கடந்த கதைகளை, புலிகள் செய்தது போலவே, சரித்திரமாக மாற்றிடும் முயற்சியில் உள்ளார்கள். இந்நிலையுள் சரித்திரம் பற்றிய பூரண குறிக்கோளுடன் தேடல்செய்வது இன்றும் வியாக்கியானங்கள் கொண்ட வினையாகவே உள்ளது. இதனால், ஆக்க பூர்வமானவர்கள் பின்தங்கி நிற்பது புரிந்து கொள்ளக் கூடியதே.

புலிகள் யார், புலிகள் எனும்போது எவற்றைக் குறித்து நிற்கின்றன? என்பவை சரித்திரம் எழுத முனைவர்கள் ஆய்வு செய்ய வேண்டிய கேள்விகள். புலிகள் எனும்போது ஒரு அரசியல்-இராணுவ அமைப்பை மட்டுமின்றி, தமிழர்களது, தமிழ் பேசும் சமுதாயங்களது நவீன-கால சரித்திரத்தைப் பற்றியும் வினவுகிறோம் என்ற அறிவின் உணர்வும், அதற்கான பொறுப்புணர்வும் அவசியம். ஆகவே, இக் கேள்விகளை அணுக வேண்டிய வழிமுறைகளோ பலவகைகளில் அமைய வேண்டும் என்பதும் அவசியம். எமக்கோ இன்று புலிகளாக தம்மைக் காட்டிக் கொள்பவர்கள் சில ஆலோசனைகளை முன்வைப்பதால் அவை தொடர்பான கேள்விகளுடன் அணுக வேண்டிய அவசியம் உள்ளது.

இவ்வகையில், “புலிகளது இராணுவத்தை தமிழீழக் கோரிக்கை தோற்கடித்ததா? அல்லது தமிழீழக் கோரிக்கைக்கு புலிகளது இராணுவம் காரணி ஆகிற்றா?” என்பது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

இவை இரண்டும் பாம்பின் வாயுள் அகப்பட்ட அதனது வால்போல ஒன்றுபடுத்தப்பட்ட கேள்விகள். ஆனால், விசுவாசங்களைத் தாண்டி தேடல் செய்பவர்களுக்கு அவை வேறுபட்ட விடயங்கள் என்பது புரியும்.

தமிழீழக் கோரிக்கையை புலிகள் கண்டு பிடிக்கவில்லை, மக்களிடம் கொண்டு சென்று வாக்குக் கேட்கவில்லை என்பது சமுதாய அறிவு.

வாசல் படியேறி வியாபாரம் செய்பவன் தோல்விகண்டால் வியாபாரியையா, வியாபாரப் பொருளையா பிழை சொல்வது என்பது அர்த்தமான கேள்வி.

இக் கேள்விகளுக்கு நேர்மையான சரித்திர பூர்வமான பதில் சொல்ல விளைபவர்கள் யாழ்குடாவில் நிலவும் சாதிப் பிரச்சனையை மூடிமறைத்துவிட முடியாது. எனவே, “புலிகள்” என்பதற்கு இவ்விடத்தில் இவ்வழியில் சில கருத்துகளை ஆய்வுகளுக்கு முன்வைக்க வேண்டி உள்ளது. ஆனால், நாம் முன்கூறியபடி ஒரு பாரிய பொருளினை ஒரு கோணப் பிம்பத்தை, சிறு துவாரத்தினூடாகத் தரும் முயற்சியே இது.

தமிழீழச் சாதிகள்
சாதிகள் எவ்வாறு உருவாகின, எவ்வாறு சமுதாயங்களுள் ஒழுங்குபடுத்தப்பட்டன என்பவை மிகவும் சிக்கலான சரித்திரப் பிரச்சனை தருபவை. இவைபற்றிய பதில்களை எம்மால் இங்கு தர முடியாது.

இடதுசாரி நிலைகொண்டு அவதானிப்புகளைச் செய்பவர்கள் சிலர், சாதிகளை வர்க்கங்களுடன் நிகர்படுத்திப் பேசுவதை கண்டுள்ளோம். ஆனால், ஆசிய உற்பத்தி முறைகள் ஐரோப்பிய மாதிரிகளிலிருந்து வேறுபட்டவை என்பதையும், வர்க்கங்கள் என்பதன் வரைவுகள் சாதிகளை இலகுவில் உள்ளடக்க மாட்டா என்பதையும் அறிவோம். மேலும், சாதிகளிடையே இடம்பெறும் சுரண்டல், சாதியினுள்ளே இடம்பெறும் சுரண்டலுடன் தோற்றத்தில் வேறுபட்டதாயினும் நடைமுறையில் ஒன்றுதான் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது, சாதிகளின் அடிப்படையில் வெள்ளாளர் வெள்ளாரையோ, கரையார் கரையாரையோ சுரண்டுவதில் வேறுபாடுகள் இல்லை என்பதே எமது கருத்து.

ஆயினும், கொத்தடிமைத்தனத்துள் ஒருசில மனிதர்களை, தலைமுறையை மட்டுமின்றி, அவர் பரம்பரைகளையும் நிரந்தரமாக உட்படுத்தி, அவர்களது உழைப்பினை மூலதனமாக்கிடும் சமுதாயக் கட்டமைப்பு இது என்பதில் மட்டும் கவனமிழக்க முடியாது.

சிங்கள அரசிடம் இருந்து விடுதலை பேசும் மனிதர்கள், தம்மிடையே உள்ள சாதியப் பிரச்சனையை நடைமுறையில் சர்வசாதாரணமாக ஏற்றுக் கொள்வதும், அரசியலில் சாதகமாகப் பாவித்துக் கொள்வதும், நாம் அன்றாடம் காணும் நிகழ்வுகள். அதனைவிட, ஜனநாயகம் பேசுவோர் தம்மிடையே உள்ள சாதியப்-பழுவைப் போல மனிதாபிமானத்துக்கு குந்தகம் செய்யும் நடத்தைகள் எங்குமே இல்லை என்பதை உணராமல் பேசுவதையும், தாக்காட்டுக் காரணங்கள் சொல்வதையும் காண்கிறோம்.

சாதி பார்த்து குடும்ப உறவுகளை ஏற்படுத்திக் கொள்பவர்கள் சாதியின் பெயர் சொல்லிப் பேச மட்டும் தயங்குகிறார்கள், மறுக்கிறார்கள், சிலர் பிழையெனக் கூடச் சொல்கிறார்கள். இது ஒரு நாகரீகத்தன்மை என்பது சிலர் கொண்ட விளக்கமாக இருக்கலாம்.

ஆனால், உயர்சாதி நாகரீகத் தன்மைகளுக்கு சாதியமும் உயர்-மதித் (superiority complex) தனமுமே அடித்தளம் என்பதை மறந்துவிடலாகாது. உண்மையில் “பேசாதிருந்தால் கீழேயே வைத்துக் கொள்ளலாம்” என்ற தன்-சமுதாய உணர்வின்பால் எழும் விளக்கங்கள் இவை என்பதை மனோவியல் புரிந்தவர்கள் இலகுவாகக் கண்டுகொள்வர்.

இந்தியாவில் உயர்-சாதியினரும் கீழ்-சாதியினரும் தம்மை சாதியினால் அடையாளம் காட்டத் தயங்குவதில்லை எம்மில் பார்க்க சாதியப் பிரச்சனைகள் கொண்ட பிரதேசம் இந்தியா ஆக, அது எப்படி?

முதலாவதாக, இந்தியாவின் அரசியல் சாசனத்தின் 19வது சரத்துக்கள் மக்களது பொருளாதார நிலைப்படி, சாதியங்களது சமூக-பொருளாதார நிலைகளின்படி, தொழில் கல்வி என்ற துறைகளில் ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும் என்று கூறகிறது. இச் சட்டத்திற்கு தனியார் ஸ்தாபனங்களும் விதிவிலக்கல்ல என்பது கவனிக்க வேண்டியது. எனவே, சாதியத்தை முன் இழுப்பது தன் சமுதாயத்திலாவது சமுதாய-நகர்வைத் தரும், தனிமனிதரால் இயலுமாகின், அச் சமுதாயத்தின் முன்னேற்றத்தைக் குறித்து நிற்கும் விடயமாகிறது. ஆகவேதான், உயர்சாதி எனக் கருதப்படும் பிராமணச் சமுதாயம் தம்மை தாழ்த்தப்பட்டவர்களாகக் காட்டிட முற்படும் விசித்திரத்தையும் அங்கு நாம் காண்கிறோம். இரண்டாவதாக, இந்தியா பரப்பளவிலும், பொருளாதார முன்னேற்றத்திலும், நகர்புற வாழ்க்கையிலும் பாரிய அளவினைக் கொண்டமைவதால் சமுதாய-முன்நகரவு (social mobility) என்பது ஓரளவு சாதியங்களைத் தாண்டிப் போகக் கூடிய சாத்தியங்களைக் கொண்டதாக உள்ளது. மூன்றாவதாக, சாதியங்களைத் தளமாக்கி நேரடியான அரசியலில் பங்குபற்றக் கூடியதாக உள்ளமையும், மற்றைய வேளைகளில் தாழ்த்தப்பட்டவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், ஆதிவாசிகள், என்ற கூட்டுப் போராட்டங்கள் சாத்தியம் ஆனவையாகத் தென்படுவதும் காரணமாகிறது. இவற்றில் மேலாக பல காரணிகளும் காரணங்களும் ஆழ்ந்த ஆய்வாளர்களால் கூற முடியும்.

ஆனால் எமக்கு, சாதிகளை இழுத்துப் பேசுவது நாகரீகமல்ல என்ற போலிவாதத்தை நிராகரிப்பதற்கு, இந்தியாவில் சாதியம் சமூக-அரசியலில் எவ்வாறு உள்ளாக்கப்படுகிறது என நாம் காட்டிய சான்றே போதும்.எனவே, பொருளாதார முன்னேற்றங்கள், சமுதாய-முன்நகர்வுகள், சமுதாயமாற்றங்கள் இடம்பெறாத தேக்கமான சமுதாயங்களிலே சாதிஎன்பது தனது பூரண காரியத்தை செய்யக் கூடியதாக உள்ளது. அங்கேதான் அவைபற்றிப் பேசுவது, உயர் சாதிகளைப் பொறுத்தவரை நாகரீகமற்றதாகவும், கீழ்சாதிகளைப் பொறுத்தவரை தமது சமுதாய ஸ்தானங்களை மீண்டும் மீண்டும் ஊர்ஜிதம் செய்வதற்கான சூழ்சியாகவும் காணப்படக் கூடும். எனவே, இவ்வகையான தேங்கிய-சமுதாயங்களிடையே மேற்-சமுதாயங்களது உயர்-மதித் தன்மை தரும் குழப்பங்களுக்குப் பதிலாக கீழ்-சமுதாயங்கள் தம்மகத்தே உருவாக்கிடும் தாழ்வு-மதித் (inferiority complex) தன்மைகளின் விளைவுகள் எவ்வகைப்படும் என்பது சில்லறையான கேள்வியல்ல. மேலும், தமிழ்-சிங்கள வெறுப்பு-வாதங்களையும் குரோத-வெறிகளையும் இவற்றுடன் ஒப்பீடு செய்வதில் தவறுமல்ல.

இன்றுகூட இலண்டனில் புரட்சி பேசும் ‘உயர்-சாதி’ மனிதர்கள், வெள்ளையர் மத்தியிலே பிறந்து வளர்ந்த தமது பிள்ளைகளுக்கு “பேசிக் கல்யாணம்” செய்து வைப்பதையும், அப் பேச்சு வார்த்தைகள் தமது உயர்சாதிக் குடும்பங்களிடையே இடம்பெறும் விடயம் என்பதையும் நாம் அறிவோம். ஆனால், தம் பிள்ளைகள் யாராவது வெள்ளையரைக் கல்யாணம் செய்யும்போது மட்டும் வெள்ளையரது-சாதி வினவுவது கிடையாது.

வெள்ளையர்க்கு எம்மவர் தரும் மரியாதை, கைகுழைந்து வாய் குமைந்து மண்டியிடும் பக்குவம், அவர்களை ஏன் சாதியவாதிகளாக நிலை கொள்ளச் செய்கிறது, தமது மண்ணிற உடன் பிறப்புகளான இந்தியரை சிங்கள இஸ்லாமியரை, ஏன் கிறிஸ்தவரையும் குறைத்து மதிப்பிடவும், அவர்களுக்கு எதிரான மனோபாவத்தையும் தூண்டுகிறது என்பதற்கு ஓரளவு விளக்கங்கள் தரும். இந்நிலமையே இன்றும் உள்ளபோது, எமது போராடத்திற்கு எதிராக வேறெந்த விமர்சனங்களை யார் ஏன் தர வேண்டும்?

வெள்ளையரின் வருகை ஏற்கனவே உருவாகிவந்த வெள்ளாள-கரையார் போட்டிகளுக்கு தூண்டுதலாக அமைந்தது.
பாரம்பரிய வேளான்மையில் ஈடுபட்டிருந்த வெள்ளாளக் குடும்பங்களுள் பலர் கல்வி பெற்றதையும், அதற்காக மதமாற்றம் கூடச் செய்தமையும் நாம் அறிவோம். இவர்கள் பொதுவாக வெள்ளாராக மட்டுமின்றி, ஏற்கனவே இருந்த அதிகாரக்-குடும்பங்களைச் சேர்ந்தவராகையால் வெள்ளையரது அரச நிர்வாகத்தில் இலகுவில் சேர்த்துக் கொள்ள வேண்டியவருமானார்கள். இதனால், வெள்ளாளர் மத்தியில் புதியதொரு சமுதாயத் தட்டு உருவாகி வந்தது. அதே தருணம், வெள்ளையரது அரசாங்கம் கிழக்கு-இந்தியா வர்த்தக ஸ்தாபனத்தை அடிகொண்டு உருவாகியமையால் கரைகடந்த வாணிபம் முன்னரிலும் முன்னேற்றம் காணத் தொடங்கியது. இவ்வகையில் கரையோரச் சமுதாயங்கள், குறிப்பாக வல்வெட்டித்துறை மக்களில் பலர் வர்த்தகர்களாக மாறியதும், அவர்களது அடுத்த தலைமுறைகள் கல்வியில் ஈடுபடத் தொடங்கியமையும் நாம் அறிந்தவை.

இவ்வாறு மேலதிக- மூலதனத்தை (surplus-capital) சேகரிக்கத் தொடங்கிய கரையோரச் சமுதாயங்கள் அவற்றை முதலீடாகப் பாவிக்கும் வசதிகளை பெற்றிருக்கவில்லை. குடியான சமூகங்கள் நிலையான- முதலீடுகளிலேயே (fixed capital) தமது மேலதிக-மூலதனத்தை செய்யக் கூடிய வாய்ப்புகளைக் கொண்டிருக்கும். அவ்வகையில், நிலம் என்பதே யாழ்குடாவில் முக்கிய வாய்பாக இருந்தது.

பயிரிடும் குடும்பக்காணிகளாக, வெள்ளாளச் சமுதாயத்தின் வரைவுதரும் பொருளாக இருக்கும் செம்பாட்டு மண்ணை கரையார் சமுதாயத்திற்கு விற்றிட அவர்கள் முன்வருவாரா என்ன? வெள்ளாளச் சமுதாயம் குடும்பம் என்ற கட்டுள் வரைவு செய்யப்பட்டது, ஊர்கள் என்ற சமுதாய ஒழுங்கில் அமைந்து கொண்டது. கரையார் சமுதாயங்களும் இதுபோல அமைந்தாலும், நிலம் என்ற விடயத்தில் பிறிதுபட்டவர்கள். இவற்றினால் உருவான சர்ச்சைகள் பலவாகினும், வெள்ளாளர் வெள்ளையருடன் சேர்ந்து பெற்ற அதிகாரப்பலம் அவர்களது ஸ்தானத்தை தொடரக் கூடியதாக உதவியது. 80 களில் கூட, கரையோரத் தீவுகளில் வாழ்ந்த வெள்ளாளர்கள் குடாநாட்டின் நடுப்பகுதிகளான நல்லூர் திருநெல்வேலி போன்ற ஊர்களுள் குடியேறிய போதும், கரையோரச் சமுதாயங்கள் அவ்வாறு ஊடுருவவில்லை என்பதும் அவதானிக்க வேண்டியவை.

பணமிருந்தும் நிலத்திற்கு வரமுடியாத நிலையைச் சந்தித்த கரையோரச் சமுதாயங்கள் வெள்ளாளரது அரசியல் ஓட்டங்களில் ஐயப் பார்வை கொள்வதும், தருணங்கள் கிட்டும்போது முகங்கொள்ள (challenge) முனைவதும் தவிர்க்க முடியாத சமுதாய நியதிகள். எனவே, தமிழர் கூட்டணியினர் வெற்று வாய்ப் பேச்சாளர்கள் என்று அம்பலமான பிற்பாடு, தரப்படுத்தலின் மத்தியில் வெள்ளாள இளம்சமுதாயம் போராட்டம் பேசிய போதிலும், ‘போராட்த்திற்கு’ தயாராக இருந்தவர்களில் கரையோரச் சமுதாயத்தினர் முன்னணிக்கு வந்தமை வியப்பதற்கில்லை.

எனவேதான், புலிகள் யார் என்ற கேள்விக்கு சாதிகளைச் சுற்றிவளைத்துப் பதில் சொல்ல முடியாது என்கிறோம்.
இவ்வாறு இருசாதிகளிடையேயான உரசல்கள் (antogonism) ஒருபுறமாக, ஏற்கனவே வர்த்தகத் தொடர்பிலிருந்த தமிழ்நாட்டுக் கரையோரங்கள் இயற்கையான பின்புலமாக, போராட்டத்திற்கு தயாராக இருந்த கரையோரச் சமுதாயம், குறிப்பாக வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர்கள், தமது கைகளிலே அதிகாரத்தைப் பெற விளைந்ததும், பெற்றுக் கொண்டதும் எதிர்பார்க்க வேண்டியதே.

இனிமேல் நம்பிக்கை, விசுவாசம் என ஊர்தந்த சாதியங்களால் எலும்பூட்டப்பட்ட மனப்பாங்குகளும் இயக்கங்களின் அமைப்பு- வடிவங்களைத் தரவேண்டியதும் கட்டாயமாகி விடுகிறது. இதற்கு புலிகள் சிறந்த வெற்றிகண்ட அமைப்பு என்று கூறுவதில் தவறில்லை. அதேதருணம், அவற்றிக்கு நேர்மாறான சந்தேகம், துரோகம் என்பவையும் கூடவே அமைப்புகளின் மனோவியற் பாங்குகளில் பங்குகளாகும் என்பதும் எதிர்பார்த்திருக்க வேண்டியதே.

எனவே, புலிகள் கரையோரச் சமுதாயத்தினரின் ஆதிக்கத்தில் உருவான அமைப்பு என்பதில் ஒரு ஐயமும் இருக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் மையமாக இருந்த யாழ்ப்பாணத்தில், அவர்களின் அன்றைய பிரதிகளாக இன்றும் இருக்கும் வெளிநாடுகளில், மற்றெல்லா அமைப்புகளையும் அழிக்கும்வரை, புலிகளுக்கு பேராதரவு இருந்தது என்று கூறுவது உண்மைக்குப் புறம்பானது.

புலிகளது தளம் அமைப்பு ரீதியில் சாதியமயமானதாக அமைந்தபோது, அவர்கள் எப்படி மத்தியவர்க்க வெள்ளார்களது தமிழீழத் திட்டத்துடன் தம்மை இணைத்துக் கொள்ள நேரிட்டது? அதிலும், தமிழீழக் கோரிகையை கூட்டணியினரிடமிருந்து கையேற்ற PLOTE மற்றும் EROS, EPRLF போன்ற யாழ்ப்பாணத் தலைமைகள் கொண்ட அமைப்புகள் புரட்சி, சிங்கள உழைக்கும் மக்களுடன் கூட்டு என்று வேறுகதைகள் பேசும் காலத்தில் புலிகளும் இன்னொரு வகையில் வேறொரு குறைந்த-சாதிய மையல்களுடன் TELOவும் தழிழீழக் கோரிக்கையை கட்டிக் கொண்டதேன்? அவற்றிடையே மூரக்கமான போர் எழுந்தமைக்கு, இந்தியாயின் ஊடுருவல் என்ற காரணிகளைவிட சமுதாயக் காரணிகளும் ஊக்கு சக்தியாக அமைந்ததா? இவை எமது வெற்று அவதானிப்புகள்தானா? அல்லது இவற்றின் கீழும் அர்த்தமான காரணிகள் உள்ளனவா?

கரையோரச் சமுதாயங்கள் அரசுகளுடன், அதிகார அமைப்புகளுடன் கடல் சம்பந்தமான சர்ச்சைகளில் உலகில் எங்கும்தான் ஈடுபடுகின்றன. இவ்வகையில் வல்வை மக்களுக்கும் கொழும்பு அரசாங்கக் கெடுபிடியாளர்களுக்கும் இடையே பல பூசல்கள் இருந்தன. ஆனால், வெள்ளாளரது “மண்ணை மீட்கும்;” வாதம் இங்கே எப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது?

புலிகளது தலைமையோ இப்படியாக அமைய, தமிழீழக் கோரிக்கையோ வேறுபட்ட நிலையில் இருந்தது. அதற்கு ஆரம்ப, இடை, இறுதிக் காலங்களில் சகலமக்களும் ஆதரவு தந்தார்களா? அல்லது ஆதரவு இருப்பதாக தவறாகக் கணிக்கப்பட்டதா? புலிகள்சரி, யாராயினும் தமிழீழம் பெற்றுத் தந்தால் போதும் என்ற உணர்வில் மக்கள் இருந்தார்களா? அதாவது, வியாபாரி யாரெனப் பார்க்காது பொருளின் பெறுமதியின் உணர்வால் மட்டும் விற்பனை ஆகிற்றா?

தமிழீழக் கோரிக்கைக்கு வடகிழக்கு இளம் சமுதாயத்திடம் ஆதரவு இல்லாவிடில் எந்த அமைப்பும் முன்னணிக்கு வந்திருக்க முடியாது. ஆனால், “பெடியளது போராட்டம்” என்ற பதத்தின் பொழிப்புள் சாதிய வியாக்கியானங்களும் மறைந்து கிடந்தன என்பதை மறுக்க முடியுமா?

வடகிழக்கு-மலையகம் உட்பட்ட சகல தமிழ் பேசும் மக்களது, அரசியல் வரையறுப்பான, பிரிவினை வாதங்களுக்கு அப்பாற்பட்ட, “ஈழவர்-ஈழம்” என்ற ஈரோஸின் கோட்பாடு இம் மூன்று முக்கிய பிரிவினர் மத்தியிலும் பாரிய அரசியற் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது எனக் கூறவும் முடியாதபோது, அதிலிருந்து பிரிந்து உருவான EPRLF, EPDP போன்ற அமைப்புகள் உட்பட சகல அரசியல் அமைப்புகளும் வடகிழக்கு தமிழ்த் தேசியவாத்தை ஏற்றுக் கொண்டபோது, இளைஞர் சமுதாயம் தழிழீழக் கோரிக்கையை ஏதொவகையில் ஏற்றுக் கொண்டன எனபதையும் மறுக்க முடியாது.
ஆனால், அவ்வாறான இராணுவ-அரசியற் நிலைப்பாடு புறச் சூழலின் நிர்ப்பந்தங்களால் உருவாக்கப்பட்டவா? அல்லது மக்களது ஆதரவின் பேரில், அகச்சூழலின் நிரப்பந்தங்களால் ஏற்பட்டவையா?

எம்மைப் பொறுத்தவரை, தமிழீழக் கோரிக்கு இளைஞர்களிடம் இருந்த ஆதரவு மக்களிடம் இருக்கவில்லை, இந்தியாவினது தலையீடு தமிழிழீத்திற்கான ஆதரவை பல தொகுதிகளிலும் ஊக்குவித்தது என்பன எமது அவதானிப்புகள்.

அப்படியாயின், தமிழீழக் கோரிக்கைக்கான ஆதரவு என்றோ அற்றுப்போகத் தொடங்கியதா? எப்போ தொடங்கியது? இவைபற்றிய பதில்கள் மக்களது வாழ்வின் மறுகட்டத்திற்கு அவசியமானவை.

ஆனால் இன்று தமிழீழத்திற்கான ஆதரவின் நிலை என்ன?
எம்மைப் பொறுத்தவரை, தமிழீழத்திற்கான வாதத்தை சித்தாந்த ரீதியில் ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ளவர்களே அதனை முன்கொண்டு செல்ல விளைகிறார்கள். இந்நிலையில் இல்லாதவர்கள் யதார்த்தவாதத்தால் அல்லது பின்நோக்கிய ஞானத்தால் எழும் காரணங்களால் நிராகரிக்கிறார்கள். வடகிழக்கில் வாழ்பவர்கள் எந்நிலையில் இருந்தாலும் தமிழீழக் கோரிக்கை தவறுதலானது என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். தமிழீழக் கோரிக்கைக்கு வடகிழக்கிற்கு அப்பால் வாழும் சில புகலிகளிடமே இன்று பூரண ஆதரவு இருக்கிறது என்ற கணிப்புகளையே இன்று கொள்ள வேண்டி உள்ளோம்.

இன்றும் என்றும், புலிகள் மட்டுமே தமிழீழக் கோரிக்கையை வென்று தரக்கூடிய ஒரேஒரு சாதனைக் கருவி எனக் தமிழீழவாதிகள் கருதினால், புலிகளின் தோல்வியுடன் அதுவும் தோல்வி அடைந்துவிட்டது என்ற முடிவுக்கு வருவது நியாயம். இல்லாவிடில் புலிகள் தமது முப்படை கொண்ட “இராணுவப் போரில்தான்” சிறீலங்கா இராணுவத்திடம் தோல்வி கண்டனர் என்ற முடிவுக்கு நாம் வர வேண்டும்.

இவ்விடத்தில், உலக அரசுகளின் அனுசரணை, இந்தியா + சீனா இணைந்து தந்த பூரண இராணுவ பொருளாதார ஆதரவுகள் இல்லாது இவ்வெற்றியை சிறீலங்கா அடைந்திருக்க முடியாது என்ற அவதானிப்பும் முக்கியமாகிறது.

எனவே, இன்றைய அகச்-சூழலை, மக்கள்-ஆதரவை, கூடவே புறச்-சூழலையும் சேர்த்தே பார்த்து, தமிழீழத் தேசியவாதம் தோல்வி கண்டுவிட்டது என்ற கணிப்பிற்கு வருவோமாயின், அது புலிகளது இராணுவத் தோல்வியுடன் ஏற்பட்டதல்ல என்கிறோம். அதேசமயம், தமிழீழ தேசியவாதத்தின் தோல்வியை ஊக்குவித்த சக்தி புலிகள் என கூறுவதில் தயக்கம் இருக்க வேண்டியதில்லை என்றும் கூறுகிறோம்.

ஆனால், தமிழீழப் போராட்டம் தோல்வி கண்டமைக்கு அதன் உள்முரண்பாடுகளே பிரதான காரணம் என்பது சரித்திரத்துவம் சொல்லும் முடிவு என்கிறோம்.

தமிழீழக் கோரிக்கையில் புலிகள் பூரண நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்பதையும் அதற்காக தம்மையும் தம்மைச் சார்ந்த மக்களையுமே பணயம் வைத்துப் போர் நடத்தினார்கள் என்பதையும் யாராலும் மறுக்க முடியாது. புலிகளை வெறும் இராணுவ அமைப்பாக மட்டும் கணிப்போமாகின், அதனது தோல்விக்கு, அவர்களது தவறான இராணுவக் கணிப்பீடுகள் எவ்வளவு காரணம் என்பது ஒரு கேள்வி. இதனை இராணுவ நிபுணர்களது கணிப்புகளுக்கு விட்டுவிடுவோம்.

அந்த இராணுவத்தின் சமூக-அரசியற் பிரவேசத்தால் இடம்பெற்ற தவறுகள் இன்னுமொரு கேள்வி. இதுபற்றிய விடயங்கள் பொது அறிவாகி வரும் வேளையிது, எனவே வியாபிப்போ அவசியமற்றது.
ஆனால்,
புலிகளது இராணுவத் தோல்விக்கு தமிழீழக் கோரிக்கையே பிரதான காரணம் என்பது எமதுவாதம்.
புலிகள் இராணுவத்தின் கழுத்தில் தூங்கிய சயனைற்-குப்பிகளிலும் பார்க்க, கூட்டணியினர் போலியாக முன்னெடுத்த தமிழீழக் கோரிக்கையே பாறைக் கல்லானது என்பது எமது கணிப்பு.

தமிழீழக் கோரிக்கை தம்மால் அடைய முடியாத இலட்சியம் என்பதை புரிந்து கொண்டமையாலேயே புலிகள் “நோர்வே” முன்னெடுத்த பேச்சுவார்த்தையில் பங்குபற்றி “ஒஸ்லோ” உடன்பாட்டுக்கும் வந்தார்கள். ஆனால், தாம் கொடுத்த வாக்குறுதியிலும் சிக்கிக் கொண்டார்கள்.

புலிகளானவர்கள் எம்மவரே
தமிழீழக் கோரிக்கை போலியானது, வட்டுக்கோட்டைத் தீர்மானம் அதற்கு முதுகெலும்பு கொடுப்பதற்கான போலி-வெற்று அரசியல் நடவடிக்கை. ஏன்?

தமிழீழக் கோரிக்கையை முன்வைத்த கூட்டணியினர், பின்புறத்தில் அதனை ஒரு “பேச்சுவார்த்தைக்கான தந்திரோபாயம், பகடைக்காய்” என்று கூறவில்லையா? முன்புறத்தில், தேர்தலுக்குச் சென்றதைவிட வேறெந்த செயற்திட்டத்தை வைத்திருந்தார்கள்? வட்டுக்கோட்டைத் தீர்மானம் தேர்தலை அடைந்த போது, மலையகத்தவரும் இஸ்லாமியரும் விலகிவிட்ட, தொடர்ந்த வேலைத்திட்டங்கள் எதுவுமற்ற நிலையே இருந்தது. இந்நிலையில் அதனை போலி அல்லது வெற்றானது என்பதில் என்ன தவறு?

சரி சமுதாய சிந்தனை இருந்திருப்பின், வழமையான சாத்வீகப் போராட்டத்தையாவது பிரேரித்தார்களா? இல்லை.
தமது மடியிலே வளருபவர்கள், “துரோகிகள்” என்றவாறு தமது சீவனத்திற்காக காவற்படையில் அல்லது அரசாங்கத்தில் தொழில் செய்த சாதாரண மக்களை படுகொலை செய்யத் தொடங்கிய போதாவது, குறைந்தபட்சம், ஏதாவது செயற் திட்டம்பற்றிய ஆலோசனையாவது நடத்தினார்களா? இல்லை.

கூட்டணியினரது போலி நாடகத்தில் அகப்பட்டவர்கள் யார்?
முதற்கட்டத்தில், முன்நின்றவர்கள் தரப்படுத்தலால் பாதிக்கப்பட்ட யாழ் இளைஞர்கள். ஆனால், அச்சந்ததியில் எவ்வளவு விகிதத்தினர் தம்மை போராட்ட அமைப்புகளில் இணைத்துக் கொண்டனர்? தமது வாழ்வை பாழாக்கிக் கொள்ளப் போகிறோம் என்ற விடயம் தெரிந்து வெளியேறிக் கொண்டனர்?

83 கலவரங்களுடன் வடகிழக்குக்குத் திரும்பியவர்களுடன் ஆண்டு 85 ஆகிய போது எவ்வளவில் கொழும்பு திரும்பினர்? இயக்கப் பூசல்களுடன் எவ்வளவில் வெள்ளையர் தேசங்களில் புகலிகளாயினர்? இக்கேள்விகளால் வெளியேறியவர்களையும், அமைப்புகளில் சேராதவர்களையும் எவ்விதத்திலும் குறைகூறும் நோக்கு எமக்கில்லை. ஆனால், போராட்டம் போர் என்பவற்றின் அணிவகுப்புகளில் பலிக்கடாக்களாக தம்மை முன்நிறுத்திக் கொள்ளவேண்டிய கட்டாயத்துக்கு உட்படுவோர் யார்? என்பதற்கான பதிலைக் காண்பதே நோக்கம்.

இவை அனைத்தையும் சிந்தையில் கொண்டு நாம் கொள்ளும் முடிவு என்ன?
தமிழீழப் பேராட்டம் என்பது எவ்வளவு தூரம் மத்தியதர வர்க்கத்தினரை உள்வாங்கி உள்ளது, அவற்றுள் மனத்-திடம் கொண்ட எத்தனை மனிதரை முன்னணியில் நிறுத்தியது? என்ற புள்ளிவிபரங்கள் அல்ல. அது இறுதியில், தாம் மத்திய வர்க்கம் என்ற நினைப்பில் இருந்தபோதும் வசதி அற்றவர்களினதும், அவர்களின் கீழ் வாழும் சமுதாயத் தட்டுகளினதும் தலையில் விழும் கட்டாய பொறுப்பாக மாறிவிடும் என்ற உண்மையே, நிலத்தில் உழைப்பதால் உயிர்வாழ்வோர் திரும்பத் திரும்ப கற்கும் படிப்பினையும் அதுவே என்ற முடிவுகள்தான்.

எனவே, மத்திய வர்க்கங்களது வெளியேற்றங்களின் பின்னர், புலிகளது இராணுவத்தில் சேர்ந்தவர் உட்பட, எஞ்சியவர் யாவரும் எமது அரசியற் தொகுதியைச் சார்ந்தவர்கள் எனபதில் எமக்கு அசைவிலா நம்பிக்கை.

அன்று யாரோ வெளியார், ஐரோப்பிய சீன மக்களது விடுதலை அல்லது புரட்சிப் போராட்டங்கள் பற்றி எழுதிய சித்தாந்தங்களை, வாக்குமூலங்களை, உள்வாங்க முன்னரே, மனிதாபிமானம் தந்த உணர்வுகளால், அத்தொகுதியினரையே எமது மக்கள் என்று சித்தம் பூராகமட்டுமின்றி மனத்திலும் ஏற்றுக் கொண்டோம். அவர்கள் புலிகளது போராளிகள், ஆதரவாளர்கள், கருணா பிள்ளையானுடன் போனவர்கள் என்ற வேறுபாடுகளோ வெறுப்புகளோ எம்வசம் இருக்க முடியாது. மற்ற அமைப்புகளில் இருந்து எமக்கு எதிராகவும் இயங்கியவர்கள் என்ற கருத்துள் தாண்டு மாண்டுபோகவும் முடியாது. கூட்டணியின் கையாட்களும் வால்களும் என வர்ணிக்கப்பட்டவர்களே எதிர்காலத்தில் புலிகளதும் மற்ற அமைப்புகளதும் வீரப் போராளிகளைப் பெற்றுத் தந்தார்கள்.

தமது வாழ்க்கைக்காக போராடும் அந்த மக்கள் தமது கசப்பான அனுபவங்கள் தரும் படிப்பினைகளுடன், அவற்றின் உள்ளேகூட ஆக்கபூர்வமான விடயங்களை அடையாளம் காணும் மனிதர்களை பெற்றுக் கொள்வார்கள் என்பதில் அசைவிலா நம்பிக்கை எமக்கு. அந்த மனிதரே முன்னேற்றத்தைக் குறித்து நிற்கும் சக்தி என்ற நம்பிக்கை இல்லாவிடில், மனித சமுதாயம் தனது சுபீட்சத்திற்கு தடையானவற்றை கையாளும் பாங்கினை வளர்த்துக்கொள்ளும் பிராணி என்ற சரித்திர பூர்வமான அறிவு இல்லாவிடில், எமது வாழ்வுகளின் பலனை சிந்திக்க வேண்டியவராக நாம் ஆகிவிடுவோம். இந்த அறிவுகள் பெறமுதல், எமது தொகுதி என ஏற்றவர்களை என்றும் கைவிட முடியாதென எம்முள்ளே எப்போதோ செய்து கொண்ட வாக்குறுதியே இன்றும் எம்மை வழிநடத்தும் புவி-ஈர்ப்பு போன்ற சக்தியாக இருப்பதானால் புலிகளானவர்கள் எம்மவரே என்கிறோம்.

எம்மவர் எனும்போது நீவிர் யார்? மாற்று அமைப்பா, இன்னுமொரு இயக்கமா? என்ற கேள்விகள் நியாயமானவைதான்.
நாம் எப்போதோ புலிகளால் தடை செய்யப்பட்டபோது அமைப்பு ரீதியான இயக்கம் இழந்த பல்லாயிரக் கணக்கான இளம் சந்ததியினரைச் சேர்ந்தவர்தான். இராணுவத் தோல்வியால் இன்று அமைப்பை இழந்துள்ள வீரம் செழிந்த, நேர்மையை தன்உணர்வில்லாது தன்னையே தரும் வள்ளத்துவம் கொண்ட, தமிழீழ போராட்டத்தில் பலியானவர்களுடன், அரசியற்-பொருளாதாரத் தொகுதியில் ஒருமைப் படுபவர்களும்தான். மேலும் சிறீலங்கா- அரசமைப்பு மாற்றம் காணும்வரை சிறுபான்மை மக்களுக்கோ, இலங்கைவாழ் உழைக்கும் மக்களுக்கோ விடிவு என்பதே கற்பனை வாதம் என்ற விளக்கத்தை இன்றும் கொண்டவர்கள்தான். இவ்வறிவு கொண்ட இப்பெரும் தொகுதிக்கு அமைப்பென ஒன்று இல்லாததால் “நாம் யார்” என்ற தன்ணுணர்வு இருக்க முடியாது என்பது தவறான விளக்கம்.

இவ்வகையில் நாம்யார் என்ற பொது அறிவுடன், பழையதையே புதிதெனக் கற்பிற்பதையும், பழசுகளுள்ளே தோண்டித் தோண்டி பதில்கள் தேடும் வாழ்க்கையில் விரையம் செய்வதையும், கைவிட வேண்டும் என்கிறோம். எனவே, தமிழீழம் என்பது எமது தொகுதிகளின் மக்களுக்கு, அவர்களில் புலிகளானவர்களுக்கு மட்டுமல்ல, தமிழரருக்கும், அதனிலும் முக்கியமாக சகல தமிழ் பேசும் சமுதாயங்களுக்கும் உடன்படாத இலக்கு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதனை நோக்கிய காரியங்களிலும் பார்க்க, தமிழ் பேசும் சமுதாயங்களது கூட்டுறவுபற்றிய முயற்சிகளே அவசியமானவை என்பதையும், அவ்வாறான திட்டங்கள் செயற்பாடுகளையே மக்கள் எதிர்காலத்தில் ஏற்றுக் கொள்வார்கள் என்பதையும் நாம் எற்றுக்கொள்ள வேண்டும்.

நன்றி
ரவி சுந்தரலிங்கம்
Academic Secretary – ASATiC

16 ஆவணி 2009

இக்கட்டுரை தொடர்பான முன்னைய பதிவுகளுக்கு :

பாகம் 1
வன்னியன் பிரபாகரன்– புலிகளின் ஆட்சிக் காலம்

பாகம் 2:
நேற்றைய போராட்டம்– நாளைய போராட்டம்

இலங்கைத் தமிழர்களது எதிர்காலம்: ரவி சுந்தரலிங்கம்

Tamil_Eelam_Arms_Strugleபாகம் 2:
நேற்றைய போராட்டம்
நாளைய போராட்டம்

“பயன்தரா முயற்சிகள் எனும் புறங்கூறலால் மனத் தடங்கலா? முயற்சியே பயன் என ஏற்றுக்கொள்.

தோல்விகளால் பலமிழந்த தோற்றமா? மாற்றாரால் உன் வெற்றிகள் கிட்டாது என புரிந்துகொள்.

உழைப்பின் பலாபலன் மற்றான் கைப்பொருளா? உழைப்பின் பொருளை மட்டும் உணர்த்திக்கொள்.

பலாபலன்கள் இன்றி வெறும் பயன்படுத்தலால் வருத்தமா? உன்பயனின் அறிவால் உள்ளே உயர்ந்துகொள்.

இருள்சூழ் உலகில் ஏற்றிய ஒளி சிறுதுளி என்ற துன்பமா? உள்ளே உன்னைக் காண அது போதும் எனத் தெரிந்துகொள்.

உள்ளும் புறமும் கண்களென வளர்வே விளக்கமெனக் கொண்டபின், செவ்வனே செய்வன சேவை எனவும் வார்த்தைகள் மௌனம் என்றும் தேர்ந்துகொள்.”

இலங்கைத் தமிழரது அகச்-சூழ்நிலை, புறச்-சூழ்நிலை என்பவை பற்றியும் அவர்களது சமூக- பொருளாதார- அரசியல் வாழ்வுக்கான அன்றாடப் போராட்டத்தின் யதார்த்த-சூழ்நிலை இலட்சியச்-சூழ்நிலை என்பவை பற்றியும் எமது கருத்துக்களை பல தடவைகளில் பலவித கோணங்களில் இருந்து கூறியுள்ளோம், எழுத்து வடிவத்திலும் முன்வைத்து விவாதங்களுக்கும் உட்படுத்தி உள்ளோம்.

இருந்தும் எமது பாகம் 1: வன்னியன் பிரபாகரன் ( இலங்கைத் தமிழர்களது எதிர்காலம் – ரவி சுந்தரலிங்கம் : பாகம் 1) என்ற தலைப்பிலான கட்டுரையைத் தொடர்ந்து சில விமர்சனங்களுள் ஒளிந்த கேள்விகளும் எழும்பி இருந்தன. அவற்றிக்கான பதிலை சிலர் அவசரமாகக் கோருவதால் (demanding) எம்மால் இயன்றவை முதலில்.

கேள்வி: தற்சமயத்தில் மக்களது போராட்டத்தில் ஆயுதப்-போராட்டம் ஒரு அங்கமாக அமைய முடியுமா?
பதில்: இல்லை.
எமது கருத்துக்கு ஒத்துப் போவதே விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் பத்மனாதனது (K.P) வார்த்தைகளும்1.

(குறிப்பு 1: (i) காரணங்கள்:
a. புலிகளின் கைகளில், மக்களின் பாதுகாப்புக்கு ஒவ்வாது என நிரூபிக்கப்பட்ட,
b. மக்களது ஆதரவு அற்று அந்நியப்படும்,
c. சிறீலங்கா தனக்குச் சாதகமாக்கி தமிழர்களை நிர்முலமாக்கிட வரப்பிசாதமாக அமையும்,
d. பிராந்திய ரீதியில், குறிப்பாக இந்தியாவால் ஏற்றுக் கொள்ள முடியாத,
e. தற்சமயம் சர்வதேசிய ரீதியில் அதி நெருக்கடிகளுள் தத்தளிக்கும், போராட்ட வழிமுறை அது.

(ii) எம்மைப் பொறுத்தவரை, மக்கள் தமது தற்பாதுகாப்புக்காக ஆயுதம் தரிக்கும் உரிமை உள்ளவர்கள். தற்பாதுகாப்பு என்பது தேசங்களுக்கும் நாடுகளுக்கும் மட்டுமே உள்ள உரித்தல்ல. வெறும் சமூகக் குழுக்களும் அந்த உரிமையை சுயமாகவே கொண்டவை.

(iii) உயிர்கள், சமூகம், மக்கள், என்பவற்றை எவை பூரணமாக வரைவு தருகின்றனவோ அவற்றில் எதனையும் இழந்திடாது காத்திடுவதற்கான முயற்சியே தற்பாதுகாப்பு நடவடிக்கை ஆகும்.

(iv) தற்பாதுகாப்பு நடவடிக்கை என்பவற்றில் ஆயுதம் தரிப்பது ஒரு வழியேயன்றி, அதுதான் ஒரேஒரு வழி என்று கூறும் உரிமை யாருக்கும் கிடையாது.

(v) தற்பாதுகாப்பு என்பது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை என்பதை, தன்னையோ, தன்னை அண்டிய மக்களையோ, ஏன்? ‘எதிரிகள்’ என கணிக்கப்படுபவர்களையும் அழிக்கவும் உள்ள உரிமை என்று அர்த்தம் கொடுத்திட முடியாது.

அவ்வாறு ஏற்றுக் கொண்டால், பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டின் பாதுகாப்பிற்காக என 2009 இல் மட்டும் 20,000 தமிழர்களை சிறீலங்கா கொன்றொழித்ததும், தமது பாதுகாப்பிற்காக மக்களை அன்று யாழ்பாணத்திலிருந்தும், அண்மையில் யாழ்பாணத்தை நோக்கியும் மக்களை குடிபெயர்த்துச் சென்று ஆயிரக் கணக்கில் நரபலிகொடுத்த புலிகளது நடத்தையும் நியாயப்பட்டுவிடும்.

(vi) அரசியல் அபிலாசைகளை அடைய ஆயுதப்-போராட்டத்தை ‘உரிமை’ அல்லது ‘எமக்கு வலிமை தருவது’ என்ற ரீதியில் மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனை கேந்திர (strategic) ரீதியில் கணித்து, அதன் வடிவத்தை சமயத்திற்கு ஏற்றவாறு தந்திரோபாயம் (tactics) அமைத்து, அதனால் எதிர்பார்க்கும் விளைவுகள் கிட்டுமா என்ற கேள்வியின் அடிப்படையியேயே முன்னெடுக்க முடியும்.

(viii) இலங்கைத் தமிழரது ஆயுதப்-போராட்டம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்று கூறுவது பொருத்தமற்ற கணிப்பு என்பதிலும், அது ஒத்தி வைக்கப்பட்ட செயற்பாடாக அமைந்துவிட்டது என்பது சரியானது.
ஆனால், புலிகளது ஆயுதப்-போராட்டம், அவர்களது ஆயுதப் போராட்ட-வடிவம் என்பன தோல்வி கண்டுவிட்டன. புலிகள் ஆயுதப்-போராட்டம் நடத்தினார்கள் என்பதிலும் புலிகள் சிறீலங்காவுடன் போர் புரிந்தார்கள், இறுதியில் நாம் எதிர்பார்த்தது போலவே, அப்போரில் தோல்வி கண்டார்கள் என்பதே பொருத்தமான கணிப்பு.

(ix) தமிழரது தற்பாதுகாப்பிற்காக ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டதாயின், முன்னர் எப்போதிலும் பார்க்க அவர்கள் ஏன் இன்று தோற்கடிக்கப்பட்வர்களாக, சகலதையும் இழந்தவர்களாக, சாதாரண மனித உரிமைகளுக்குக்கூட தலை-நிமிர்ந்து குரல் எழுப்பும் திராணியற்றவர்களாக, தோற்றம் அளிக்கிறார்கள்? தற்பாதுகாப்பிற்காக ஆயுதம் தரித்திருந்தால் இன்று ஏன் தமது, பிராந்திய, சர்வதேசிய நிலைப்பாடுகளால் வழங்கப்படும் சகல பாதுகாப்புகளையும் இழந்து அநாதரவாக அல்லல் படுகிறார்கள்?

(x) ‘பொல்லுக் கொடுத்து அடிவாங்கிறது’ என்ற உவமையை அறிந்துள்ளோம். தற்பாதுகாப்பு என்ற நோக்கத்தில் கத்திகளைக் காவித்திரிந்து அவற்றாலேயே கொல்லப்படும் அல்லது கொலைகள் செய்யும் இளைஞர்களைப்பற்றி பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆனால், அவர்களது பாதுகாப்பு அவர்களை மிஞ்சிய விடயம் என்பதையும் நாம் அறிவோம்.)

Tamil_Eelam_Arms_Strugleகேள்வி: அப்படியாயின் ஆயுதப் போராட்டம் என்பதே பிழையான வழியா?
பதில்: இல்லை.

(குறிப்பு 2: (i) ஆயுதப் போராட்டம் என்பது மக்களது தற்பாதுகாப்பு என்பதற்கு அப்பால் ஒரு அரசியல் திட்டத்தின் அங்கமேயன்றி ஒரு வாழ்க்கை முறையல்ல.

(ii) ஆயுதப் போராட்டம் என்றால் அரச தருப்பினருடன் முப்படைப் போரில் ஈடுபடுவது என்பதுமல்ல. ஆயுதப் போராட்டம் என்றதும் ஆயிரக்கணக்கில் ஆட்பலம் சேர்த்து எண்ணுக் கணக்கற்ற படுகொலைகள் செய்திட வேண்டும் என்பதுமல்ல.

(iii) தகுந்த தருணத்தில் அதிஉயர்வான தாக்கத்தை அதிகுறைவான உயிர்ச் செலவுடன், ‘எதிரியும்’ அவர்களது சர்வதேசிய ஆதரவாளர்களும் ‘ஏற்றுக் கொள்ளும் வகையிலும்’ ஆயுதப் போராட்டம் ஒன்றினை நடத்தி இருக்க முடியும், இனிமேலும் யாராவது நடத்திட முடியும்.

(iv) ஆனால், இன்றைய காலத்தில் அக-புற யதார்த்த-இலட்சிய சூழலில், புலிகளது கைகளில் ஆயுதப்-போராட்டம் தொடர்ந்தும் போராகவே இடம்பெறப்போகும் தவறான வழியாகவே அமையும்.)

கேள்வி: போராட்டங்கள் எதற்காக?
பதில்: தமது வாழ்க்கைத் தரத்தை, தமது எதிர்கால சந்ததிகளின் நிலைகொள்ளலை அவர்களது வாழ்க்கையை அதன் தரத்தை உயர்த்திடுவதற்காக.

(குறிப்பு 3: (i) இலங்கையில் தமிழர்கள் மட்டுமின்றி தமிழ் பேசும் சமூகங்களும், ஏன் சிங்களம் பேசும் சமூகங்களும்கூட தமது வாழ்க்கைத் தரத்தை உயர்திட முடியாது தமது அன்றாட வாழ்வுக்கு போராட வேண்டி உள்ளார்கள்.

(ii) ஆனால், இவர்களுள் பொதுவாக தமிழ் பேசும் சமூகங்களும், குறிப்பாக வடகிழக்குத் தமிழர்களும், தமிழ் பேசுவோர் என்ற காரணத்தால் மேலதிக அளவில் போராட வேண்டி உள்ளதுடன், தமது சமூகங்களின் நிலை கொள்ளலுக்குக்கூட போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

(iii) தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட மக்கள் சமூகங்களிடையே உள்ள சமுதாயக் குழுக்கள் பல யுக்திகளை கையாள்கின்றன.

a. காலனித்துவத்தின் பின்னணியில் புதிதாக உருவாகிவந்த மத்திய வர்க்கமும் அவற்றைச் சுற்றி வளர்ந்த குட்டி-முதலாளித்துவ வர்க்கமும் ‘தனது நாடு’ என்ற பரப்பளவுக்குள் தனக்கு எதிரான வர்த்தகப் போட்டியைக் குறைத்துக் கொள்ள மொழி-தேசம்-மதம் ஆகிய வேறுபாடுகளை சித்தாந்தங்களாக, வெறியூட்டும் மனோவியல் நம்பிக்கைகளாக முன்வைப்பது சகஜம்.
b. சற்று வளர்ச்சி கண்ட முதலாளித்துவங்கள் பிரதேச-ரீதியில் வர்த்தகம் தேடும்போது சந்தைக்கான போட்டிலும், தனது உள்நாட்டுச் சந்தையை தனக்காக பாதுகாத்துக் கொள்ளவும் ‘நாடுப்பற்று’ என்ற ரீதியிலான சித்தாந்தங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வதும் வழக்கம்.
c. முதிர்ச்சி கண்ட முதலாளித்துவங்கள் தமது சர்வதேசியச் சந்தைப் பங்குகளை பாதுகாத்துக் கொள்ளவும், தனது பிராந்தியத்தின் சந்தைகளை தமது கைகளுள் வைத்துக் கொள்ளவும் மற்றைய ‘நாட்டுத் தேசியங்களுடன்’ கூட்டுச் சேர்ந்து பொதுச்-சந்தைகள் என்ற பெயரில் ‘பிராந்திய-தேசிய’ வாதங்களை முன்னெடுப்பது இன்றைய காலத்தில் முக்கியமாக இருக்கிறது.
d. ஆயினும், இப் பிராந்திய-தேசிய வாதங்கள் அடிகொள்வதற்கான காலம் கடந்துவிட்டது போலவே ‘சர்வதேசிய சந்தைப்படுத்தலின்’ புதிய போக்குகள் எமக்கு உணர்த்துகின்றன.

(iv) கடந்த 30 ஆண்டுப் போராட்டத்தில் இலங்கைத் தமிழ் பேசும் மக்களது, குறிப்பாக வடகிழக்கு மத்திய மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் சமுதாயங்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் கீழடைந்துள்ளது. இதனை சமூக-பொருளாதார புள்ளி விபரங்கள் யாவுமே சான்று சொல்லும்.
ஆயினும், போரட்டத்தின் மத்தியில் தமது வாழ்வு, அதன் வெற்றிகள் தோல்விகளில் பெற்ற தனிமனித அல்லது சமூக விழிப்புணர்வு, வெளியேறியவர்கள் வெளி நாடுகளிலும் அவர்களது உதவியுடன் கொழுப்பைச் சுற்றியும் இந்தியாவிலும் வாழும் உறவினர்கள் பெற்றுள்ள பொருளாதார உயர்வினால் கண்டுள்ள வாழ்க்கைத்தரத்தின் நுகர்வு என்பன காரணிகளாக அமைய தாமும் அவ்வளர்ச்சியை பெற்றிய வேண்டும் என்ற உணர்வை பெற்றுக் கொண்டுள்ளனர் என்பது முக்கிய விடயம்.

(v) மக்கள் சமூகங்களது பொருளாதார அபிலாசைகளின் வளர்ச்சிக்கு அவர்களது சுற்றாடல் அவசியம் என்ற கூற்றில் பல்-பொருள் அடங்கி உள்ளன.
இங்கிலாந்தில் முதல் வந்தவர்கள் 25 வருடங்களாகப் பெற்ற சமூக-பொருளாதார வளர்ச்சியை 1985 இன் பின் வந்தவர்கள் 15 வருடங்களுள் அடைந்துள்ளனர் என்பது வெறும் சுற்றாடல் என்பதைவிட சுவாத்திய-எதிர்பார்ப்பின்-ஏற்றம் (potential expectation-gratdien) என்பது கூடிய ஊக்கு சக்தியாக அமைகிறது என்பது எமது வாதம்.
அதாவது, மனிதன் தனியவனாகவும், அவசியத்தின் நிமிர்த்தம் சமூகமாகவும், தான் காணவேண்டிய வளர்ச்சியின் ஏற்றம் உயர்வாக இருக்கும்போது, அதனால் பெறக்கூடிய பலாபலனை மற்றவரூடாக நுகர முடியும்போது, அவற்றினை அடையக் கூடிய எதிர்பார்ப்புகளாக உணரும்போது, கூடிய முயற்சியுடன் முன்னேற விளைகிறான் என்பதே பொருள். மனித முன்னேற்றத்தின் போக்குகளை அறிவதற்கான குறிகாட்டிகளில் ஒன்றாக நாம் முன்வைக்கும் இக் கருத்து புதியதாகினும் அவதானிப்புகளுடன் பொருத்தமாகிறது.

இவ்வகையில் வடகிழக்குச் சமுதாயங்களில் பல தொடர்ந்தும் தமது பாரம்பரிய தொழில்களுடாக, தமது பொருளாதார வாழ்க்கையை அமைப்பதற்கு இசைவாக இருக்கப் போவதில்லை என்பதே எமது கணிப்பு.

(vi) முன்னேற்றம் என்பதை எவ்வாறு கணிப்பது என்ற வாதம் மனிதரிடையே எப்போதுமே சர்ச்சையாக, பொருளாதார வளர்வே முன்னேற்றமென மத்திய மேல்மட்ட வர்க்கங்கள் விசை கொடுக்க, எதிர்காலம் என்னவாகும் என பல சமூகங்களில் தமது மொழி, கலாச்சாரம் எனபவை பற்றிய சந்தேகங்கள் உருவாகத் தொடங்கி உள்ளன.
புகலிகள் தமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு சந்திக்கும் மனச் சங்கடத்தை, சுயவிருப்புடனேயே விலைக்கு வாங்கத் தயாராக உள்ளன ஆசியாவின் பல சமுதாயக் குழுக்கள். இந்தியாவில், குறிப்பாக வளர்ச்சி காணும் தென்இந்திய மாநிலங்களில் சுயபாசைக் கல்வியை நிராகரித்து ஆங்கிலமே முதற்பாசையாக பாடசாலைகளில் ஏற்கப்பட வேண்டும் என்ற வாதம் ஓங்கி வருகிறது. இவ்வாதத்தை கன்னட உயர் நீதிமன்றம் ஆதரித்து தீரப்பு வழங்கியமை மக்கள்-ஜனநாயகத்திற்கு வெற்றியா, அல்லது மக்களது எதிர்கால-பூரண-ஜனநாயகத்திற்கு பலத்த அடியா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.)

முன்னோடிகளும் முன்னுக்கு-ஓடுபவர்களும்

இலங்கைத் தமிழர் வாழ்வில் வைகாசி 2009, நவயுகப் பாணியில் கூறினால் 5/18, பாரிய திருப்புமுனை தருவது என்பது சரித்திரவாதிகள் அரசியல் அவதானிகளென இன்னபிற நிபுணர்களதும் கணிப்பு. விடுதலைப் புலிகளின் இறுதி இராணுவத் தோல்வியைத் தளுவிய இந்த முடிவுக்கு மாறுபட்ட முரண்பாடான விளக்கங்கள் உண்டு.

அதேசமயம் முப்பது வருடங்களாக இருந்த யுத்த சூழலும் அதனிடையே உருவாக்கப்பட்ட பயங்கரவாத சுவாத்தியமும் முடிவுக்கு வந்துவிட்டது என்ற சிறீலங்காவின் அறிவிப்பும், அதுபற்றிய ஐயங்களும், எதிர்பார்ப்புகளும், கனமான வார்த்தைகளையும் விரையமான பேச்சுக்களையும் விளைவிப்பதும் எதிர்பார்க்க வேண்டியதே.

கற்பனையில் தமது மனவிருப்புகளின்படி வளர்த்து வைத்திருந்த எதிர்பார்புகளைத் தாண்டி, சுயசிந்தையுடன் அங்கும் இங்குமாகக் கிடைக்கும் நம்பகமான ஒருசில தகவல்களை மட்டுமே வைத்து கணிப்புகள் கொண்டவன் புலிகளது தோல்வியை ஏற்கனவே எதிர் பார்த்திருப்பான்; ஆயினும் நடந்துவிடக்கூடாது என்ற நப்பாசையையும் சுமந்திருப்பான்.

இவ்வகையில் சிங்கள பெரும் தேசியவாதிகளும் சோனிசவாதிகளும் வளர்த்து வைத்துள்ள சூழலில் புலிகளது தோல்வி எப்படியான நிலைமைகளை உருவாக்கும் என்ற மனப்பயங்களுடன் இருந்தவர்களே எம்மகத்தே பெரும்பான்மையினர். இறுதி வெற்றியில் ஐயங்கள் இருப்பினும் இவர்கள் ஏன் புலிகளுக்கு ஆதரவு தந்தார்கள் என்பதையும் அவர்களது விசுவாசத்தையும்கூட ஓரளவு புரிந்து கொள்ளலாம்.

ஆனால், “புலிகளது முடிவை முற்கூட்டியே சொல்லக் கூடிய ஞானிகள் தமிழரிடையே எப்போது இருந்தார்கள் என அதிகார தோரணையுடன் கூறும் குருட்டு புத்தி ஜீவிகளை எவ்வாறு அணுகுவது?”
“எனக்கும் பட்டப்படிப்பு படித்த நண்பர்களுக்கும் தெரியாத விடயங்கள் வேறு எவனுக்கும் எப்படித் தெரிய முடியும்?” என்ற வழக்கில் அமைந்த இந்த வாதத்திற்கு நிச்சயமாக விளக்கம் கூறவோ, வாய்பேசவோ, நியாயங்களை எதிர்பார்க்கவோ முடியாது. விசனம் தோய்ந்த புன்சிரிப்பை பதிலாகத் தந்து விலகிச் செல்வதே உத்தமம், எம்மால் முடிந்த காரியம்.

ஆனால், மாவிலாறு அணைக்கட்டுத் தொடர்பாக எழுந்த போரில் புலிகள் மூதூரை இழந்தபோது, எதிர்காலத்தில்
(1) சிறீலங்கா எப்படி நடந்துகொள்ளப் போகிறது? என்பதிலும் பார்க்க,
(2) இந்தியா தனது பொறுப்புகளை எப்படியான முடிவுகளுடன் நிறைவேற்றப் போகிறது? என்பது முக்கிய வினாவாக அமைய,
(3) புலிகளது போர்திட்டம் எங்கு போய் முடியப் போகிறது? என்று அன்றிருந்தே யாராவது சிந்திக்கத் தொடங்கி இருந்தால்?

சரி, அதுதான் முடியாது போயிருப்பினும்
(1) கிழக்கின் முக்கிய புலிகளே பிரிந்து சிறீலங்கா பக்கம் சார்ந்து புலிகளுக்கு எதிராக போரிட்டு அங்கிருந்து புலிகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து,
(2) கிழக்கில் மாகாணசபை தேர்தல் வைக்கப்பட்டு கிழக்கு-வாதப் புலிகள் பதவி ஏறியபோது,
(3) வடக்கு-கிழக்கு இணைப்பு சிறீ லங்காவின் நீதிமன்றத்தில் துண்டாடப்பட்டது குறித்து அதனை உருவாக்கிய இந்தியா கரிசனமில்லாது இருந்ததை கண்டபோது, சுயசிந்தை இருப்பின் வேறு எந்த முடிவைத்தான் எதிர்பார்த்திருக்க முடியும்?

ஏன்? இவ்வளவின் பின்னர்கூடத்தான் விழிப்படைய முடியவில்லையா? பறவாயில்லை.

ஆனால், மன்னார்ப் பகுதியில் புலிகளது தடைகளை உடைத்து சிறீலங்கா இராணுவம் முன்னேறி மடுவரை வந்த பின்னாவது கண்கள் திறந்திருக்க வேண்டாமா? அதன் பின்னரும் “கிளிநொச்சி விழுமா பார்ப்போம்” என்ற சவாலுடன் நம்பி இருந்தவர்கள்கூட தமிழர்களது ஞானம்பற்றி வினவும்போது, மற்றவரது அறிவையா அல்லது ‘தான்’ என்ற தமது குருட்டுத் தனத்தின் மமதையில் எழும் மூடமையையா கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள்?

இவர்கள் போன்றவரது அவசரக் குடுக்கைத்தனமும் அகங்காரமும் கணக்கில் கொள்ளாது ஒருபுறம் தள்ளி வைக்கப்பட வேண்டியவைதான், ஏன்? இவர்கள் முன்னோடிகளுமல்ல முன்னுக்கு ஓடுபவர்களுமல்ல. இவர்கள் மற்றவர்களால் பயன்படுத்தப்படும் கிலுகிலுப்பைக்காரரே அன்றி இவர்கள் யாருமல்ல.

அப்படியானால் முன்னுக்கு ஓடுபவர்கள் யார்? முன்னோடிகள் யார்?

“மக்களே ஆரம்பமும் முடிவும் என்பதற்கான விஞ்ஞான அறிவுடன், அவ்அறிவுடன் வளர்ந்த இயற்கை தந்த இயல்புகளுடன், சமூக-சிந்தையை என்றும் கைவிடாது, தமது பலவீனங்கள் எவையென உணர்ந்து ஏற்று கருமமாற்றும் அசாத்தியத் தன்மைகளுள்ள சாதாரண மனிதர்களே முன்னோடிகள்.”

ஆதலால் தமது முயற்சிகளை மக்கள் தளத்தில் எடைபோட்ட வண்ணம் இருப்பர், எடைபோடாத கருமங்களில் ஈடுபட மாட்டார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் மக்களது ஒவ்வொரு சமூகத் தட்டுகளையும் அங்கெல்லாம் அன்றாட வாழ்க்கையின் அத்தியா அவசியங்களையும் அவற்றின் வாழ்க்கைப் பெறுமதியையும் ஆழப் புரிந்து கொண்டிருப்பர். எனவே தமது ஒவ்வொரு திட்டங்களிலும் அவர்களது அன்றாட வாழ்க்கையையே அடிப்படையாகக் கொண்ட நீண்டகால வீச்சுள்ள வேலைத் திட்டங்களையும், அவற்றுள் மக்களே முன்னணிப் பொறுப்பை வகிப்பதற்கான வழிகளையும் வகுத்து வைத்திருப்பர். அதுமட்டுமின்றி, காலாகாலத்தில் அவர்களது மதிப்பீடுகளை விமர்சனம் சுய-விமர்சனங்களுடாக அத்திட்டங்களின் அங்கங்களுமாக ஆக்கிக்கொள்வர். முன்னோடிகளது பாங்கில் ‘மக்கள்-மத்தியில்’ எனும்போது மக்களிடையேயான நிலைகொள்ளலில் மட்டுமின்றி மனத்திலும் செயற்பாடுகளிலும் அவர்களே மையமும் எல்லையும் என்ற கருத்தும் உறுதியாக இருக்கும்.

“மக்களின் பலவீனங்களை தமது பலமாக மாற்றி தம்மை முன்நிறுத்திக் கொள்வதால்மட்டுமே மற்றவரது வாழ்க்கையின் ஓட்டங்களை தம்வழிக்கு கொண்டுவர எத்தனிப்பவர்களை முன்னுக்கு-ஓடுபவர்கள் எனச் சித்தரிக்கலாம்.”

சுயஅறிவிலோ சுயஆற்றல்களிலோ இல்லாது, தமது முயற்சிகளுக்கு தம்மைச் சார்ந்தவரது சமூக ஸ்தானத்திலும் அதிகாரத்திலுமேயே தங்கி இருக்கும் இவர்கள் வன்முறையையே மக்களை வழி நடத்தும் கருவியாக வார்த்தையிலும் செயற்பாடுகளிலும் கொண்டிருப்பர்.

ஒரு பார்வையில், இங்கே ஜனநாயகப் போக்குள்ளவர்க்கும் சர்வாதிகாரப் பாங்கில் அமைந்தவர்களுக்குமான குணாம்திசயங்கள் புலப்படுகின்றன. வர்க்கப் பார்வையிலோ, சகல மக்களது பூரணமான வளர்ச்சியை வேண்டி நிற்பவர்க்கும், அதிகாரப் பாரம்பரியத்தில் அமைந்த மேல்மட்ட வர்க்கத்தினரது தொடர்ந்த நிலைகொள்ளலுக்கு முன்நிற்பவர்க்கும் இடையேயானமான வேறுபாடுகளும் தொனிப்பாக அமைவதும் தெளிவாகும்.

கேள்வி: அப்படியானால், ‘ஒடுக்கப்பட்ட மக்கள்’ சார்பில் குரல் எழுப்புபவர்கள் யாவரும் சுயமாகவே எதுவித தேர்வுகளும் இல்லாமலே முன்னோடிகள் ஆகிவிடுவார்களா?
பதில்: இல்லை.

(குறிப்பு 4: (i) முன்னுக்கு-ஓடுபவர்களும்தான் முன்னோடிகளது வார்த்தைப் பிரயோகங்களை கடன்வாங்கிக் கையாள முயல்வது வழக்கம். முன்னோடிகள் மக்களது பிரதிநிதித்துவம்பற்றிப் பேச தயங்கும்போது, முன்னே-ஓடுபவர்களோ
தம்மை முன்நிறுத்தி தாமே எல்லாம் என மனக் கூச்சம் எதுவுமில்லாமல் பிரகடனமும் செய்வார்கள்.

(ii) மகாபாரதம் பற்றி பலருக்கும் பலதரப்பட்ட கருத்துக்கள் உண்டு. சிந்தனையை உணவாகக் கொண்டவர்க்கு அங்கே சகல தீனிவகைகளும் உண்டென்பதே போதும். நாம் “பைபிளை” அல்லது “குர்ரானை” படித்துவிடுவதால் கிறிஸ்தவராக அல்லது இஸ்லாமியராக மாறிட வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. அதனால் அந்த நூல்கள் கைகளில் கிட்டியதும் கண்களை மூடியபடி விட்டெறிந்திட வேண்டிய தன்நம்பிக்கையற்ற முரட்டுவாதமும் அவசியமில்லை.

“அஞ்ஞாதவாச காலத்தில் தமக்கு புகலிடம் தந்தவர்க்கு கைமாற்றாக, அவர்களது மைந்தனுக்குப் பதிலாக அசுரனது மலை செல்கிறான் வீமன். தனது பிறப்புக் கருமத்தை முடித்துவிட்டு மலை இறங்கிய வீமனை கண்டு அசுரனெனக் கருதி ஊரையேவிட்டு ஓடத் தொடங்கினர் மக்கள். தருமர் தனது குடும்பத்தினரை ஊராருடன் ஓடுமாறு கூறிகிறார். சகாதேவனோ விடயம் தெரிந்த அறிவாளியாகி, “அண்ணா அது வீமனல்லவா? மக்கள் மூடராயின் நாமும்தான் ஏன் சேர்ந்து ஓட வேண்டும்” என்கிறான். விடயங்கள் தெரிவதற்கும் புரிந்துகொள்வதற்கும் இடையிலான வேறுபாட்டின் உதாரணம் இது.

‘கொலை செய்பவன் எவனும்தான் அசுரன்’ என்பதை நன்கு புரிந்தவர்கள் மக்கள், அவர்கள் மூடர்கள் அல்லர் அநுப-அறிஞர்கள்.
‘விடுதலை செய்து தருகிறோம்’ என்ற கோசத்துடன் சிங்களப் இராணுவத்தினரைக் கொல்வது என்றும், பின்னர் தமிழரிடையே உள்ள எதிரிகளைக் கொன்றும், காலப்போக்கில் தம்மிடையேயும் செய்த கொலைகளைப் கண்டபின் “கொலைகாரன் எப்படியானவன்?” என்ற கேள்விக்கு பதில்கள்தான் எப்படி? கொலைஞனை தோற்றத்தால் அடையாளம் கண்டுவிட முடியுமா? அல்லது அவர்களுக்கு இன மத ரீதிகளில் மச்சங்களும் அடையாளங்களும் உண்டா?

மலை இறங்குபவன் வீமனாகத்தான் இருப்பினும், அதிகொடூரமான அசுரனைக் கொன்றவன் அவன் எப்படியான மனிதனாக இருப்பான்? அவ்வாறு அசுரனைக் கொலை செய்துவிட்டு எப்படியான மனனோவியற் பாங்குடன் திரும்புவான்?
மக்கள் ஊர்விட்டு ஓடுவதைத் தவிர வேறுவழி ஏது?

சரி, மக்கள் மடையர்கள் என்றுதான் கொண்டாலும் அவர்கள் ஓடுகிறார்களே, அவர்களுடன் கூடவே இல்லாவிடில் “வீமன்தான் வருகிறான்” என்ற பேரறிவை எப்படி அவர்களிடம் தெரிவிப்பது? அதனைவிட, “ஏன்தான் ஓடுகிறார்கள் என்பதற்கான காரணங்களை எப்படி அறிவது?”
தருமர் ஒரு முன்னோடி என்பது அவனது சிந்தனை ஓட்டங்களிலிருந்தே புரியும் விடயம்.”)

“முன்னோடிகள் மக்களது அன்றாட வாழ்க்கையின் மத்தியிலேயே தமது சிந்தனைக்கான காரணங்களைப் பெறுகிறார்கள், அவர்களது பாங்கிலிருந்தே இலட்சிய நோக்குகளையும் வரைகிறார்கள். தமக்கும் மக்கள்பற்றிய சிந்தனைக்கும் உள்ள இடைவெளியின் விரிசலே தமது சிந்தனா முடிவுகளின் தேர்ச்சியை மழுங்குபடுத்துவது என்பதை புரிந்தவர்களாக இருப்பார்கள்.

எனவேதான் முன்னோடிகள் மக்கள் செய்யக் கூடியவற்றைச் சொல்வார்கள், மக்களின் சொல்லில் கூடியவற்றை செய்வார்கள்.”

“முன்னுக்கு ஓடுபவர்களோ இலட்சியச் சூழலில் இயலாத காரியங்களை யதார்த்த சூழல்களுள் செய்த முடிவுகளை தமதும் மக்களதும் எதிர்பார்ப்புகளாக முன்கட்டி பொரிமாத்தோண்டிகளாக முடிந்து போவதுடன் மக்களது நிலைமைகளை என்றுமே இல்லாத வகையில் பின்னடைவு செய்திடும் வழிகோலிகளுமாவார்கள்.

குணாதிசயத்தில் அறிவு, கல்வி, இயல்பு, பணம், பலம் என்ற பல காரணிகளை மக்களது நலன் குறித்து தக்க பாவனை செய்யாது, மக்களிலும் பார்க்க தம்மை உயர்வுபடுத்தியே பிரித்துப்பார்க்கும் வகையில் மட்டுமே பாவிக்கும் வழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.”

கேள்வி: ஏன் இந்த முன்னோடிகள் முன்னுக்கு ஓடுபவர்கள் பற்றிய அளப்பு?
பதில்: இன்று முன்னுக்கு-ஓடுபவர்கள் நாளைய தலைவர்கள் ஆகிவிடக் கூடாது என்பதற்காக.

(குறிப்பு 5: (i) “புலிகள் ஒழிந்துவிட்டார்கள் இனிமேல் நாம்தான் மன்னர்கள் அல்லது நாமெல்லோரும் மன்னர்கள்” என்றவாறு தன்னிச்சையுடன் செயற்படும் தனிநபர்களும், அமைப்பு வடிவமோ அதற்கென்ற ஒழுங்கோ மாற்றாக தன்ஒழுக்கோ மற்றவர் கருத்துகளை கிரகித்திடும் வழக்கோ இல்லாது சிறு ‘குழுக்களாக’ ஒருவரோடு ஒருவராக இழுபடும் தனிநபர் கூட்டங்கள் ஒரு புறத்திலும்,

(ii) “போராட்டத்தை இன்றும் முன்னெடுத்துச் செல்பவர்கள் நாம்” அல்லது “மக்களது இன்றைய தேவைகளை பூர்த்தி செய்ய முற்படுபவர்கள் நாம்” என்றவாறு, இரு துருவ அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கும் போதிலும் நடைமுறையில் அந்த ஒரேஒரு வழியைக் கடைப்பிடிப்பவர்கள் மறுபுறமாகவும் இருந்து எமது மக்களது வாழ்க்கை முறைகளின் வகைகளை, அபிலாசைகளின் வீச்சினை, அதன் உயிர் உந்தலை, தம்மையும் அறியாது மட்டுப்படுத்திவிடக் கூடும் என்ற எமது கணிப்புகளாலான ஏக்கமே மேற்படி அமைந்த ஒருதலைப்பட்ட எழுத்தோட்டத்திற்கான (monologue) இரு காரணங்கள்.

(iii) “முன்னோடிகளும் முன்னுக்கு ஓடுபவர்களும்” என்ற சொற்தொடரை முன்மொழிந்தவர் தோழர் இரத்தினா.
ஈரோஸ் அமைப்பினை கனெஸ் சங்கர் என்ற இரண்டே இரண்டு தோழர்களுடன் தொடக்கி வைத்தவர், அதனது ஆரம்பகாலச் சித்தாந்திற்கு முற்றிலும் முழுவதிலும் அதிபதி, தனிநபராக ஆரம்பகால வெளிநாட்டு தொடர்புகள் அனைத்தையும் முற்றிலும் உருவாக்கியவர், என்ற சாதனைகளிலும் பார்க்க அவரது கூர்மையான மொழிப் பிரயோகம் மேலானது. அதற்கு சான்று பகர்வன இவைபோன்ற கூற்றுகள்.
ஆனால் அவரது சொற்தொடருக்கு, மேற்படி தரப்பட்டுள்ள விளக்கமோ முற்றிலும் எமது. அதனைக் கூறுவதற்கான ஒரேஒரு காரணம், நாமும் எம்மிடையே உள்ள பல ஒட்டுண்ணிகள் போல அவரது சாதனைகளின் பெருமைகளில் சுரண்டி வாழக்கூடாது என்பதுதான்.

(iv) ஈரோஸினது ஆரம்பகாலக் கூட்டமொன்றில் அதனது போராட்ட வழிமுறைகள் பற்றிய விளக்கத்தை மிகவும் கடமைப் பொறுப்புடன் கூறியவண்ணமிருந்த தோழரைப் பார்த்து “உதெல்லாம் சரி எங்களுக்கு எப்ப துவக்குகள்?” என அங்கலாய்த்தான் அன்றைய இளைஞன் ஒருவன். “துவக்கா தம்பி? துவக்கு!” என தோழர் இரத்தினா சொன்ன பதில் அவரது சொல்வன்மைக்கு இன்னுமொரு அத்தாட்சி என்பதுடன் அதனது பொழிப்பின் விளைவை இன்று நாம் அனுபவிக்கின்றோம் என்றால் மிகையாகாது. “துவக்கே பொருள் என்றும், துவக்காலேயே எல்லாம்” என நம்பி, மாவோ சொன்ன எதையோ குதர்க்கமாக்கி அப்பிசகிலேயே பலியானவர்களையும் அப்பிசகினுள்ளேயே பலியாகிவிட்ட எமது போராட்டத்தையும் பார்க்கும்போது தோழரது சொல் வன்மையை என்னவென்பது? ஆனால், முன் கூறியிருந்தும் பலனற்றுப்போன அவற்றினை எவ்வாறு எடைபோடுவது?

(v) இவற்றினை நாம் மீள் நோக்குவது அன்றைய தொடரை இன்று எடைபோடுவதற்கல்ல. இனிமேலும் அவ்வாறான நிலமைகளுக்கு இடம்கொடுக்கக் கூடாது என்பதற்காக.)

இன்று ஏறத்தாழ 30 வருடங்களுக்குப் பின்னர் எமது கட்டுரையின் ஒரு பாகத்தை ஓரமாக வாசித்துவிட்டு “ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவா இல்லையா?” என யாரவது வினவும்போது யாரை நாம் நொந்து கொள்வது? எமது இனத்தையே வைதுகொண்டு புறம்காட்டிடுவது ஒரு வழி, காலத்தை நொந்து கொண்டு வாழாதிருப்பது இன்னுமொரு வழி, இரண்டுமே எமக்கு உகந்தவை அல்ல.

கேள்வி: முன்னுக்கு-ஓடுபவர்கள் முன்னோடிகளாக மாறிட முடியுமா?
பதில்: நாய் வாலை நேராக்க முடியாது, புலிகளது வரிகளை புள்ளிகளாக்கிட முடியாது என்பவை உவமைகள். ஆகவே, தனிப்பட்ட ரீதியில் இது அசாத்தியமான விடயம். ஆனால், கூட்டு முயற்சியில் சில கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டால் ஒருவேளை கூட்டாக நடக்கக் கூடிய விந்தை.

(குறிப்பு 6: (i) பிரபாகரன் இறந்துவிட்டார், பல பிழைகளை புலிகள் செய்துள்ளார்கள், என்றெல்லாம் பல விடயங்களை ஒத்துக் கொள்ளும் புலிகளது புதிய தலைமைப் பீடம்,
a. அவற்றிக்கான காரணிகள், விளக்கங்கள், காரணங்கள், என்ன என்பதை பொதுப்பட்ட விவாதங்கள் விமர்சனம் சுய-விமர்சனங்களுடாக மக்களது அடித்தளத்திலிருந்து அறிந்து கொள்ள முன்வரவில்லை, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எப்படியாக வேண்டும் என மக்களிடம் கருத்து கேட்கவுமில்லை.
b. மாறாக, முன்னர் போலவே சில தனிப்பட்டவர்கள் தம்பாட்டிலேயே அடுத்த நடவடிக்கைகள் பற்றிய முடிவுகளை எடுத்தபின் அவற்றினை ஆலோசனைக்கு விட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
c. தற்போது தம்மிடம் 1500 போராளிகள் இருப்பதாகவும் சிறீலங்கா பேச மறுப்பதால் போரிடவேண்டி நேரிடும் என்கிறார்களே, தமது கடந்த ஆயுதப் போராட்டத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளில் எதையும் காப்பற்ற முடியாது போயிற்றே, தம்மை நம்பி வந்த மக்கள் நிர்க்கதியானார்களே, அவர்களது மனநிலை ஆற்றல் சக்தி என்பவைபற்றி சற்றாவது அவர்களுடன் ஆலோசனை செய்திட வேண்டாமா?

(ii) புலிகள் ஒழிந்தால் ஜனநாயகம் பிறக்கும், எமக்குத் தடையாக இருப்பது புலிகள்மட்டும்தான் என்று அடம்பிடித்து சிறீலங்கா-பிரச்சாரத்துடன் ஒத்தாசையானவர்கள்,
c. இன்று “புலிகள் இங்கு இல்லை” என்று சிறீலங்கா சொல்லும் போதிலும் தாம் செயற்பட முடியாதுள்ளமைக்கு சிறீலங்கா சார்பிலேயே காரணங்களும் சொல்லி,
d. “இன்று இவற்றைச் செய்வதைத் தவிர வேறு வழி ஒன்றும் இல்லை” என்றும்,
e. சிறீலங்காவின் முட்கம்பிகளை பொன்-கூடுகளாக்குவதற்கு,
f. முள்வேலிகளுடாக பணயம் வைக்கப்பட்டுள்ள தமிழருக்கு தீனி போடுவதற்கு, அங்கும் இங்குமாக அலைகிறார்களே சிலர்.
இவர்கள் தமது கருமங்கள்பற்றி தம்மை மக்களிடம் விமர்சனங்களுக்கு உள்ளாக்கினார்களா? ஆலோசனை கேட்டார்களா?

(iii) புலிகள் சரி, புலிகளுக்கு எதிரானவர்கள் சரி, தமது நடத்தைகளில் ஒரேமாதிரி ஆனவர்கள். மக்களது பலவீனங்களை தமக்குச் சாதகமாக்கும் சித்தாந்தங்களையும் நியதிகளையும் சொல்லி உணர்ச்சிவசமாகி “நல்லது செய்கிறோம்” என்றவாறு மக்களை பாதாளத்துள்ளும் தள்ளிவிடக் கூடியவர்கள். “நரகத்தைப் சென்றடையும் வழியில் ஆயிரம் நல்லெண்ணங்கள் உண்டு” என லெனின் சொல்லி வைத்ததின் விளக்கம் இவர் மத்தியில் நிரூபணமாகும். இவர்கள் சொல்லும் ஜனநாயகமோ இவர்களே நடைமுறையில் கொள்ளாத, அவர்களது பழக்க வழக்கத்தில் என்றுமே இல்லாத, தன்னைப் போன்றவனுக்கு எதிராக பாவிக்கும் ‘பொல்லே’ அன்றி மக்களை மதிக்கும் வழிமுறை அல்ல. இவர்களது வார்த்தைகளில் கூட வன்முறையே செழிக்கும்.)

இன்றைய போராட்டம்

இலங்கைத் தீவில் இன்று எப்படியான நிலமை உள்ளது? எதிரி- தேசியவாதம்- வன்முறை- போர் என்பவற்றை முதன்மைப் படுத்தியதால் எமது மக்களிடையே புலிகள் முன்னணிக்கு வந்து முற்றான அதிகாரமும் செலுத்தினார்கள். புலிகளது தோற்றத்திற்கு சிங்களச் சோவனிசமும் சிங்களப் பெரும் தேசியவாதிகளும் அரசியல் அடிகோலிகளாயின், புலிகளது இராணுவ வெற்றிகளால் அதனது அரசியற் தலைமையை நிச்சயம் செய்தது இந்தியாவாகும். இக்கருத்தை நாம் எண்ணற்ற தறுவாய்களில் கூறியுள்ளோம். இவற்றினால் 30 வருடங்கள் புலிகளது கட்டுப்பாட்டுள் தமிழர்கள் சீவனம் செய்ய, மற்றைய தமிழ் பேசும் சமூகங்கள் தம்மைத் தாமே கவனிக்க வேண்டியவர்களும் ஆனார்கள். அவர்களைத் தொடர்ந்து தமிழர்களுள் பல சமூகங்கள், குறிப்பாக கிழக்கிலும் குடாநாட்டிலும் வாழ்பவர்கள் அதே முடிவுக்குத் தள்ளப்பட்டார்கள்.

‘எதிரி- தேசியவாதம்- வன்முறை- போர்’ எனபவற்றை முதன்மைப் படுத்தியதால் மகிந்தா தலைமையிலான அரசியல் கூட்டணி சிங்கள மக்களிடையே முன்னணிக்கு வந்துள்ளது. மகிந்தாவின் இராணுவ வெற்றிகளால் அவரது குடும்பத்தினரது அரசியற் தலைமையை நிச்சயம் செய்ததும் இந்தியா ஆகும். உட்கொலைகள் வன்முறை போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ள மகிந்தாவே ஏகபோகச் சிங்களத் தலைவர் என்று ஏற்றுக் கொள்ள ஐக்கிய தேசியக் கட்சிகூடத் தயாராக இருந்தமை, சிங்களவருக்குப் புதியதாக இருக்கலாம், ஆனால் தமிழர்கள் ஏற்கனவே படித்த பாடம்.

புலிகளது தலைவர் பிரபாகரனை உலகத் தமிழரது தலைவர் எனவும் சூரியத்தேவன் என்றும் பெருமைப்படுத்தியது போலவே இன்று புலிகளைத் தோற்கடித்த மகிந்தாவுக்கு ‘பௌத்த-மதப்படி’ ஓமமும் வளர்த்து தங்க-வாள் கையளித்து ‘புதிய துட்டகமுனுவாக’ மகுடம் சூடிடும் நாளும் வெகு தொலைவில் இல்லை.
அங்கே தமிழ் பேசும் மக்கள் அல்லது தமிழர்கள், இஸ்லாமியர்களது பிரதிநிதிகள் நாமேதான் என்ற மிக்க பெருமையுடன் பலர் உலகெங்கிலுமிருந்து சிறீலங்கா சென்று பங்குபற்றி விழாவைச் சிறப்படைய வைப்பார்கள் என்பதில் ஐயமுமில்லை.

ஆனால் சிந்திப்பவர்களாக, சற்றே சுயமரியாதை கொண்டவர்களாக, மக்களது பலமுக- வளர்ச்சியில் கரிசனம் கொண்டவர்களாக, ஜனநாயகம் எனும்போது தம்மைப்பற்றி மட்டுமே பேசாதவர்களாக இருப்பவர்கள் இவ்விரண்டு சமூகங்களிடையே ஒன்றைத்- தொட்டு- மற்றதாக இடம்பெறும் சமூக-அரசியல் நிலைப்பாடுகளை, அவற்றின் ஒற்றுமைகளை, சகல கோணங்களிலிருந்தும் அவதானித்திருப்பார்கள்.

இந்தப் போக்கிற்கு சரித்திர, பொருளாதார ரீதிகளில் காரணிகளாக மட்டுமின்றி, உந்து சக்தியாகவும் இருப்பது வல்லரசாகிக் கொண்டுள்ள பிராந்தியப் பலவான் இந்தியாவே என்பதில் அவர்கள் ஆச்சரியமும் கொள்ள மாட்டார்கள்.

சமூகத்தின் மத்திய தட்டுகளில் இருந்து, பராம்பரிய அல்லது எதிர்-நிலைகொள்ளக் கூடிய சித்தாந்தங்களை அப்புறப் படுத்துவதற்கு அதன் சித்தாந்தத்தை உச்சநிலைக்குக் (extreme) கொண்டு சென்று, அவ் உச்சத்தில் தலைமையை கொய்துவிடுவது மிகவும் தேர்ச்சி பெற்ற கேந்திர யுக்தி (extremise to destabilise) என்பதை நாம் தெரிவித்துள்ளோம்.

சீக்கியரது களகிஸ்தான் தேசியவாதத்தை முறியடிக்க, அதனை அக்காலி டால் போன்ற மிதவாத அரசியல் கட்சிகளிடமிருந்து அகற்றிட எவ்வாறு பிந்திரன்வாலே என்ற மதகுரு முன்கொணரப்பட்டு ஒழிக்கப்பட்டார் என்பதை இத்திட்டதிற்கு சான்றாக சில அவதானிகள் அன்று குறிப்பிட்டிருந்தனர்.
எனவே, அவ்வாறு ஒரு திட்டம் தமிழ் தேசியவாதம் குறித்தும் இடம்பெற்றதாயின் அது சிங்களப் பெரும்-தேசியவாதத்தையும் கவனத்தில் உள்ளடக்கியே இருந்திருக்கும் என எதிர்பார்ப்பதில் தவறில்லை. அதற்காக அங்கேயும் பிந்திரன்வாலே, பிரபாகரன் போன்ற உயிர் இழப்புகளுடனேதான் முடிவு அமைய வேண்டும் என்பதல்ல.

கேள்வி: வடகிழக்கு தமிழ் பேசும் சமூகங்களது போராட்டம் எவ்வாறு அமைய வேண்டும்?
பதில்: அவர்களது சமூக-பொருளாதார வளர்ச்சி குறித்து நிற்க வேண்டும். முக்கியமாக, அவற்றிக்கு குந்தகம் விளைவிக்கும் ஒவ்வொரு விடயத்திற்கும் எதிரானதாகவும் அமைய வேண்டும்.

(குறிப்பு 7: இன்று தமிழர்கள்
(i) காலத்தாலும் பிறத்தியாராலும் நிர்ணயம் செய்யப்பட்ட தலைமையை இழந்து, எத்தலைமையும் இல்லாது தத்தளிக்கிறார்கள்.

(ii) அத்தலைமை செய்த முடிவுகளை யாரும் ரத்து செய்ய முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுவிட்டதால் புதிய தலைமைபற்றி சிந்திப்பதற்கே இயலாதுள்ளனர்.

(iii) அவர்களது சமூக-பொருளாதார நிலைமையோ அவர்களது பூர்வீக நிலத்திலிருந்து அப்புறப்படுத்தும் சூழ்ச்சிக்கு ஒத்தாசையாகவே அமைகிறது.

(iv) குறிப்பாக புலிகளாலும், மற்றைய ஒருசில அமைப்புகளாலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தமிழர்களை அவர்களது தமிழ்பேசும் சகோதர சமூகங்களிடமிருந்து பிரித்து வைக்க உதவியதுடன், அவை சிறீலங்காவுடன் உள்ள தமது முரண்பாடுகளை தாமாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் வளர்த்துள்ளது.

(v) புலிகளது இராணுவத் தோல்வி சிங்கள சோவனிச, பெரும்-தேரிய வாதிகளை மேலும் ஊக்குவித்துள்ளது.

(vi) பெரும்பான்மையான சிங்கள மக்களது சமூக-பொருளாதார விருட்சி, குறைந்தபட்சம் மட்டுப்பட்டதாக இருப்பதனால் உழைக்கும் சமுதாயங்களிடையே உதிரி-தொழிலாளப் புரட்சிவாதம்2 (lumpenproletariatinism) வலதுசாரிப்- புரட்சிவாதம் போன்றவை மேலோங்கும் சூழலைத் தருகின்றன.

(vii) ‘பாதுகாப்புத்-துறை’ 3 இலட்சத்துக்கு மேற்பட்டோரின் வேலைவாய்ப்பைத் தருவதால் சமூக-அரசியல் நிலைப்பாடுகளை நிர்ணயம் செய்யும் அணியாக உருவாகும் நிலைமை உள்ளது. இவ்வழியில் சில காலத்தில் சிறீலங்காவின் ‘பாக்கிஸ்தான்’ மயப்படுத்தலுக்கான சாத்தியகூறுகளும் உள்ளன.)

கேள்வி: நாம் கூறும் போராட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் எவையாக அமைய வேண்டும்?
பதில்: ஒன்றிணைப்பு-மனிதாபிமானம்-அதிகாரமயமாக்கல்-மக்கள்போராட்டம் என்பவற்றை உள்ளடக்கிய நம்பிக்கைகளில் எழும் செயற்பாடுகளை கொண்டதாக வேண்டும்.

(குறிப்பு 8: (i) ஒன்றிணைப்பு எனும்போது தமிழ் பேசும் சமூகங்களிடையேயும் அதேதருணம் தமது சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு தடங்கல்களை எதிர் நோக்கும் சிங்கள சமூகங்களுடனும் அடிப்படைச் செயற் திட்டங்களுடான நீண்டகால உறவுகளின் வளர்ப்பையே இங்கு குறிப்பிடுகின்றோம்.

(ii) மனிதாபிமானம் பற்றி நாம் சொல்ல வேண்டியதே இல்லை, ஆனால் அது வெறும் தனிமனித உரிமைகள் பற்றியதல்ல என்று மட்டும் கூறவேண்டி உள்ளோம்.

(iii) அதிகாரமயமாக்கல்2 (empowerment) எனும்போது தனிமனிதனது, சமுதாயங்களது, சமூகங்களது, சமூக-பொருளாதார உடமைகள், அவற்றை நுகர்வதற்கான உரிமைகள் பற்றியே பேசுகிறோம்.

(iv) மக்கள்-போராட்டம் என்பது மக்களது அன்றாட தேவைகளைக் கொண்டு அவர்களது எதிர்கால அபிலாசைகளுக்கான அரசியற் போராட்டம் என்றும், அதற்கான வழிமுறைகள் காலத்துக்கு ஏற்றவையாக, மக்களது சக்திக்கும் செயற்பாடுகளுக்கும் உட்பட்ட, அவர்களது பூரண பங்குடன் இடம்பெறும் வாழ்க்கைப் போராட்டம் எனக் கொள்கிறோம்.)

நேர்மையான கேள்விகள்?
நேரடியான பதில்கள்

“ஈரோஸ் அமைப்பினர் நேரடியாகப் பதில் சொல்வதில்லை” எனும் போலிக் குற்றச்சாட்டு.
அமைப்புகள் ஸ்தாபனங்களுடன் இணைத்து தனிமனிதருக்கு இழிவு தேடுவதும் தனிமனிதர் மேல் பழிகூறி அமைப்புகள் ஸ்தாபனங்களை கழிவாக்க முயல்வதும் பின்தங்கிய சமுதாயங்களில் சர்வசாதாரண விடயம். தன்னிச்சையான, தம்மையும் அறியாத் தூண்டுதல்களால், சில வேளைகளில் திட்டமிட்ட முயற்சிகளால், எழும் உண்மைகளுக்கு பிறம்பான சேறு பூசும் முயற்சிகளுக்கு பதில் கூறுவது கடினமான விடயம் என்பதிலும் பார்க்க அது அவசியமற்ற காரியம் என்பது பொருத்தமான முடிவாகும்.
ஆயினும், கேள்விகளுக்கு பதில்கள்தான் அவசியமானதென்றால் அவற்றைச் சூழ்ந்த விமர்சனங்கள் எதற்கு? ஏன் இந்த அவசரக் குடுக்கைத்தனம்? என்று நாம் வினவுவதில் தவறில்லை.

(குறிப்பு 9: (i) கட்டுரையை முற்றாக வாசித்தவர்கள் நாம் நேரடியான பதில்களைத் தரவில்லை என்ற கருத்தை நிச்சயமாகக் கூறமுடியாது.

(ii) பலவீனமான காலத்தில் மட்டுமின்றி, மிகவும் அதிகாரபலம் கொண்டிருந்த காலத்திலும்தான் புலிகளிடம் சரி, மற்றைய அமைப்புகளிடம் சரி நேரடியான கேள்விகளையும், தனிமனிதர்-மீதில்லா விமர்சனங்களையும் முன்வைப்பதுடன் நிறுத்திவிடாது, ஆக்கபூர்வமான பதில்களையும் ஆலோசனைகளையும்தான் முன்வைத்துள்ளோம்.

(iii) தனிமனிதர்களது, மனிதக் கூட்டங்களது வாழ்வுகள், அவர்களது நடத்தைகள் என்பவற்றினை ஆளும் விதிகள் யாவுமே மிகவும் சிக்கலான, கடினமான (complex) விடயங்கள். அவற்றிக்கு சுலபமான பதில்கள் உண்டு என்று சொல்வதே மடமை, அம் மடைமையின் விரிவாக்கமே இன்று எமது மக்களது அழிவான நிலைமைக்கு காரணம் என்பது யாருக்கும் விளங்கும்.

(iv) விஞ்ஞான வழிகளில் பூரண நம்பிக்கை கொண்டவன் தனது கருத்துகள், திட்டங்கள் யாவுமே மக்களாலும் காலத்தாலும் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவன என்பதை அடியொட்ட ஏற்றிருப்பான். ஆதலால், அவை பிழையாக இருக்கக்கூடும் என்ற கருத்தையும் சித்தம்-பூராக ஏற்றிருப்பான்.
எனவே, எப்போதும் தான் சொல்வதெல்லாம் சரியாக இருக்கும் என்ற வாதத்தில் வன்முறையுடன் ஈடுபடமாட்டான்.

(v) மனிதன் தான் hydrocarbon 2 என்ற இரசாயனக்கூட்டின் பின்னலின் பரிணாம வளர்ச்சி என்று கூறும் போது தனது மூளையும் அதுபோலவே என அவன் உணர்ந்து கொள்பவன்.
எனவே, அறிவு என்பது மனிதரது பொது ஊற்றிலிருந்து பெற்றுக் கொள்ளும் இயல்பு என்றும், அதன் முன்னேற்றம் என்பது அவ்வியல்புகளின் குறுக்கு-மறுக்கான தொடர்புகளால் ஏற்படும் பரிணாம வளர்ச்சி எனவும் அவன் உணர்ந்து கொண்டிருப்பான்.

(vi) ஆனால், யாராவது நேரடியான பதில்களை கோரும்போது, மூளைகளுக்கு சுலபமான பதில்களைத் தேடுகிறார்கள் என்ற அச்சமே மேலோங்குகின்றது.
வீட்டில் சமைத்துச் சாப்பிடுவதற்கும், ‘மக்டொனாலில்’ வாங்கி விழுங்கும் திடீர் உணவுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்தவர்கள் தொகை வெள்ளையர் சமூகங்களில் பெருகிக்கொண்டுள்ள காலத்தில், எம்மிடையே ‘மக்டொனாலின்’ புண்ணாக்ககுத் தீனி பிரபல்யமாகி வருவருவதைக் கண்டு ஆச்சரியப்படக் கூடாது என்பதையே சில விமர்சனங்கள் எமக்கு உணர்த்துகின்றன.)

நன்றி.
ரவி சுந்தரலிங்கம்
Academic Secretary (ASATiC)

தொடர்புகளுக்கு: academic.secretary@gmail.com

சிறு குறிப்புகள்:

1. C4 News, London, UK, 22.07.09.

2. எமது தமிழ் பதங்கள் “ஆங்கிலத்திலிருந்து நேரடியான மொழிபெயர்ப்பா?” என்ற வாசகரது ஐயத்தில் பிழையே இல்லை.

புலிகளின் புதிய தலைவர் திரு செல்வராசா பத்மநாதன்(கேபி) சனல் 4 தொலைக்காட்சியில்

இன்று 22ம் திகதி மாலை 7மணி (சனல்4) CH4 தொலைக்காட்சியில் புலிகளின் புதிய தலைவர் திரு செல்வராசா பத்மநாதனின் பதிவு செய்யப்பட்ட பேச்சுக்கள் ஒளி பரப்பப்பட்டது. இதில் தாம் புலிகள் ஆயுதப்போராட்டத்தை கைவிட்டுள்ளதாகவும், இலங்கை அரசு இன்று வரையில் அரசியல்த்தீர்வு யோசனையில் இல்லை என்பதையும்,
தமிழ்மக்கள் தமது சுதந்திர வாழ்விற்காகவே தான் மீண்டும் இந்த அமைப்பை பொறுப்பேற்றுள்ளதாகவும், தமது 1500 பேர்வரையிலான போராளிகள் இன்னமும் இலங்கைக் காடுகளில் இருப்பதாகவும், புலிகளால் மீண்டும் ஒரு இராணுவ தயார்படுத்தலை செய்ய முடியும் என்பதை மறைமுகமாகவும் தெரிவித்தார்.

இன்றய இந்த தனது வெளிப்படுத்தலின் மூலம் புலிகளின் இருப்பை திரு செல்வராசா பத்மநாதன் நிரூபிக்க முயற்ச்சித்துள்ளார். இதற்கு பதில் அளித்த பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதுவர் புலிகள் இயக்கம் இல்லை. இலங்கையில் தமிழர்கள் முகாம்களில் துன்புறுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியாக ஆயுதங்களை வாங்கி புலிகளை பலப்படுத்தியவர் இன்று அந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராகி தாம் ஆயுத வன்முறைக் கலாச்சாரத்தைக் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கின்றார் என CH4 தொலைக்காட்சி தெரிவித்தது.

இலங்கைத் தமிழர்களது எதிர்காலம் – ரவி சுந்தரலிங்கம்

SL_Tamils_Stop_&_Search - Photo_London Metroபாகம் 1
வன்னியன் பிரபாகரன்
புலிகளின் ஆட்சிக் காலம்

இலங்கையின் சரித்திரத்தில் 13ம் நூற்றாண்டு முக்கிய பாகத்தை வகிக்கின்றது என்றால் மிகையாகாது. 11ம் நூற்றாண்டுகளின் பிற்பகுதிகளில் உருவாகி சுமார் 150 வருடங்களாக இலங்கைத் தீவு முழுவதையும் ஆண்ட பொலநறுவ இராட்சியம் கலிங்க மன்னன் மாஹாவின் படையெடுப்புடன் முற்றுக்கு வந்த காலம் இது. இனிமேல் தென்புலம் தம்பலேனியா என்றும், இதுவரை “உத்தரதேச” என்றழைக்கப்பட்டு வந்த வடக்குப் பிரதேசம் யாழ்அரசாகவும் உருவெடுக்க மத்திய பகுதியில் ‘வன்னி’ என்ற பெயருடன் பல சிற்றரசுகள் (principalities) தோன்றின. அவற்றை ஆண்டவர்கள் பொதுவாக தமிழ் பேசுவோராக இருந்தமையும் “வன்னியர்” என்ற பொதுப் பெயரும் ஒரு இனத்தவர் என்ற தோற்றத்தைக் கொடுப்பினும் அவர்களது பாரம்பரிய தொடர்புகள் வேறுபட்டவையாகவே இருந்தன. மட்டக்களப்பு புத்தள வன்னியரகள் கேரளப் பிரதேசத்தின் முக்குவருடனும், திருகோணமலை யாப்பாணப்பட்டின வன்னியர்கள் தமிழ்நாட்டு சைவத்-தமிழர்களுடனும் தொடர்பானவர்களாக அமைய வடமத்திய பிரதேசத்து வன்னியர்கள் வேடர்களாகவும் சிங்களவர்களாகவும் இருந்தனர்.

16ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வெள்ளையர்களது காலனித்துவத்தை சந்திக்கும்வரை சிங்களத் தேசத்தில் தமிழ்நாட்டு மன்னர்களது உதவிகளுடன் ஆட்சிகள் கைமாறியபடி இருந்தபோதும் யாழ்அரசும் வன்னி இராட்சியங்களும் பொதுவாக தாக்குபிடித்தபடி இருந்தன. பின்னர் காலனித்துவத்தில் 250 வருடங்களைக் கடந்தபின் அரசமைப்பு ரீதியில் இலங்கைத் தீவு ஒருங்கிணைக்கப்பட்டபோது உடமைகள் உரித்துகள் பற்றிய சர்ச்சைகள் எழுவது எதிர்பார்க்க வேண்டியதே. இவ்வாறான பண்டைய போர்வழியில் தமிழரின் இராசதானிகளை மீட்டெடுப்பதே அரசியற் போராட்டம் என்ற கருத்துடன் 30 ஆண்டுகளாக போர்புரிந்த புதிய வன்னியத்தின் தலைவன் பிரபாகரன் என்று கூறவதில் யாரும் பொறாமையோ ஆத்திரமோ கொள்ளமாட்டார்கள் என்பது கணிப்பு. ஏனெனில், அதே வழியில்தான் இன்று யாழ் பிரதேசத்தையும் திருமலையையும் மட்டக்களப்பையும் வன்னிப் பிரதேசத்தையும் தமதெனப் கோரி கொலைகளைச் செய்து அரசஅநுசரணைக்காக தம்மிடையேயும் போரிடுகிறார்கள் புதியவன்னியர்கள். இவ்வாறு எமது உபதலைப்புக்கான விளக்கம் அமைய நாம் தொடர வேண்டிய விடயங்கள் வேறு.

இதேவேளை, தமிழர்கள் என்றோர் இனம் இலங்கையில் உண்டா? இல்லை வன்னியர்கள் மட்டக்களப்பார் வடமராட்சியார் தென்மாராட்சியார் என்றென்ன சாதியத்தால் ஒடுக்கப்பட்டோர் எல்லோரையும் உள்ளடக்கிய “டாய்லித்துகள்” என்றும் ஒரு புதிய இனம் கூட உண்டா என்றெல்லாம் விசாரித்து எமது 30 வருட போராட்டத்தில் தமிழர்கள் என்ற இனத்திற்கு என்னானது என்று அங்கலாய்ப்பவர் பலர். இவற்றைவிட மூன்று இலட்சத்துக்கு மேலான எமது மக்கள் அரச முகாங்களுள் அடைக்கப்பட்டு அவஸ்தையில் வாழாதுவாழ்ந்து இறந்தும் கொண்டுள்ளனரே அவர்கள் கதி என்னாவது? மற்றவர் விலங்குகளில்லாத கைதிகளாக வாழ்கிறார்களே அவர்கள் நிலை வேறுபட்டதா, அல்லது முகாங்களில் இருப்பவர்களின் எதிர்கால மாதிரிகளா? இப்படி மக்களையும் அவர்களது எதிர்காலம் பற்றியும் ஏங்குபவர் கேள்விகள் ஒருபுறம் அமைய ‘தமிழீழப் போர்’ என்னாது என்ற கேள்வி மற்றும் சிலரை இன்னமும் ஐயத்தில் உள்ளாக்குகிறது.

சிறீ லங்காவுக்கு எதிராக போரில் ரைத்தானிக் (Titanic) போன்ற புலிகளால் முன்நின்று நடத்தப்பட்ட போர் முடிந்துவிட்டதா திரும்பவும் தொடருமா? அல்லது இவ்வளவுகாலமும் புலிகளால் தந்த விளக்கங்களின் கடற்பரப்பில் பனிமலைகளாய் தெரிய அகச் சூழல்களின் மனத்தாக்கங்கள் கப்பலின் நங்கூரம் போலாக எமது மக்களது எதிர்காலம் பனிச்சூழலில் சிக்குண்டே போய்விடுமா? என்றவாறு “இலங்கையில் தமிழர்கள் எதிர்காலம் என்ன?” என்பது பலத்த கேள்வியாக எழுவது நியாயமானதே. இக்கேள்வியின் அடித் தளத்தில் புதைந்து கிடக்கின்றன மேலும் எத்தனையோ கேள்விகள் சந்தேகங்கள்.

மிகவும் துன்பங்கள் தோய்ந்த மனங்களுடன் நேற்றைய உணர்வுடனே வாழும் எமக்கு ஆதங்கங்களோ பல, ஆனால் விளக்கங்களை தரக்கூடய தகவல்களோ சில. ஆதலால் ஐம்புலன்களில் கொண்டுள்ள நம்பிக்கையிலும் பார்க்க ஆறாவதைக் கொண்டே கணிப்புகள் செய்ய வேண்டியது தவிர்க்க முடியாது போகிறது. அரைகுறைத் தகவல்களுடன் ஆரோக்கியமான பதில்களைத் தருவது சாத்தியமானதல்ல. அப்போது முன்கூட்டியே கூறியவை சரியாக பரிணமிக்கும்போது ஞானிகளாகிடும் நாம் பின் வரப்போவதெல்லாம் சரியாக அமைந்திடும் என் திடத்தினை ஏற்றுவிடுவோமாகின் ஏமாற்றத்திலேயே மிதப்போம்.

எனவே, இக்கட்டுரை பிரயோகமானதாகவும் வாசகர்களது மனப்பூர்வமான பங்கும் இருக்க வேணடுமாயின் இன்று மக்களது மனதில் உறைத்தபடி உள்ள சில கேள்விகளுக்கு குறுகிய பதில்கள் சொல்ல வேண்டி உள்ளது. அதேவேளை, அவற்றிக்கான விளக்கங்கள் இல்லாது போகின் பதில்களின் பலன் மழுங்கி விடும் என்பதனால் விளக்கங்களை குறிப்புகளாகத் தருகிறோம்.

இவற்றின் பின்னடியிலேயே கட்டுரையின் பேரிலான ஆய்வுகளைத் தரமுடியும் என்பது எமது கருத்து.

கே: புலிகள் இராணுவ ரீதியில் தோற்று விட்டார்களா?
ப: இதுவரை காலமும் புலிகள் நடத்திய போர் இனிமேலும், ஒரு கணிசமான காலத்திற்கு தொடர முடியாதது.

(குறிப்பு 1: ஆயுதப் போராட்டம், மக்கள் போர், இராணுவ ரீதியில் அமைந்த போராட்டம், மக்கள் போராட்டம் என்பவற்கிடையே பாரிய வேறுபாடுகள் உண்டு.)

(குறிப்பு 2: புலிகளின் தோல்வி எனும்போது எதனை குறிக்கின்றோம்? புலிகளது போராட்டத் திட்டமும், அரசியற் சாணக்கியமும், உலக-அதிகார-அரசியலின் அறிவும், அவர்களது ஆலோசகர்களது ஆற்றலும் எவ்வகைப்பட்டவை என்பது அவர்களது முடிவிலிருந்தே யாரும் ஊகித்துக் கொள்ளலாம். எனவே, அந்நிலைக்கு ஏன் வந்து சேர்ந்தார்கள் என்ற கேள்வியையும் விட்டுவிடுவோம். ஆனால், இவை அனைத்தையும் தாண்டி புலி எதிரப்புத் தன்மைகளையும் கடந்து கேட்கப்பட வேண்டியவையும் உள்ளன. (1) ஒருவனை பன்மடங்கு பலம் கொண்டவன் தோற்கடிப்பது ‘போர்’ என்ற வழியில் பெரும் விடயம் அல்ல. (2) அதிலும் பிராந்திய பலவானின் அனுசரிப்புகளுடன் மண்ணிலும் விண்ணிலும் பெறக்கூடிய துப்பறிவுத் தென்புடன் தோற்கடிப்பது ஆச்சரியமுமல்ல. (3) மேலும் சகல வல்லரசுகளின் கூட்டு அனுசரணையும் இராணுவ உதவிகளும் வழங்கப்பட்டும் உள்ளன என்ற அறிவும் கிட்டும்போது புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்பதிலும் பார்க்க “ஒரு சின்ன-மனிதனின் தோல்வி என்பதன் பொருள் என்ன?” என்ற கேள்வியே மீதமாகிறது.)

கே: புலிகளது தோல்வி தமிழ் மக்களுக்குமான தோல்வியா?
ப: ஒரு சொல்லில்: இல்லை!

(குறிப்பு 3: வெற்றி தோல்விகளை எடைபோடுவதும் அவற்றைக் கொண்டு மக்களது எதிர்காலம்பற்றி கணிப்புகள் செய்வதும் சுலபமான காரியமல்ல. அதற்கென்ற பக்குவமும் அறிவும் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கமாட்டாத மனப்பாங்கும் அவசியம். மேலும், வெற்றிகள் தோல்விகளால் ஏற்படும் (1) உடனடித் தாக்கங்கள் என்ன? (2) அவற்றின் அடிப்படையில் தொடரக் கூடிய நீண்ட காலத் தாக்கங்கள் என்ன? என்பவற்றை சேர்த்தே பார்திடுவதற்கு அவை அனைத்தையும் தாங்கிக் கொள்ளக்கூடிய, ஏற்கனவே உருவாகிவரும் தொலை நோக்கும் அதற்கான விருட்சமும் அவசியம்.)

(குறிப்பு 4: மக்களின் தோல்வி என்பதற்கும் அவர்களது அதிபதிகளது தோல்வி என்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன என்று கூறு கூட பொருளற்ற கருத்து.

அமரிக்க இந்தியர்கள் பூரணமாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என்பதை யாரும்தான் ஒத்துக் கொள்வர். ஏன்? அவர்களது சமூகத் தலைவர்கள் ஒவ்வொருவராக இராணுவரீதியில் கொன்றொழிக்கப்பட்டு விட்டார்கள் என்பதாலா? இல்லை, வடதுருவத்திலிருந்து மெக்ஸிக்கோ வரை உள்ள பிராந்தியத்தியத்தை வெள்ளையர்களிடம் இழந்து விட்டார்கள் என்பதாலா? அதேவேளை மத்திய அமரிக்காவில் இருந்து தென் துருவம்வரை வெள்ளையர் வருகையுடன் அடங்கி ஒதுங்கி வாழ்ந்த அவர்களது சகலர்கள் தம்மை மீளார்த்தனம் செய்து கொள்வதை என்னென்று சொல்வது? அவர்களும் தோற்கடிக்கப்பட்டவரகள் அல்லவா?

வடக்கில் சரி கிழக்கில் சரி அமரிக்காவின் உரிமையாளர்கள் போர்களில் தம்மிலும் பல்மடங்கு பலம் வாய்ந்த எதிரிகளிடம் தோல்வி கண்டார்கள் தமது சொத்துகள் அனைத்தையும் இழந்தார்கள். ஆனால் கிழக்கில்மட்டும் தம்மை அதிகாரத்தில் மீழமைப்பு செய்யக் கூடியவர்களாக உள்ளனர் அது எப்படி?

இலங்கையில் இன்று இடம்பெற்றுள்ள இராணுவத் தோல்வி தமிழர்களது சரித்திரத்தில் புதியதல்ல. முழுத் தீவினையும் ஒரு அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்திட வேண்டும் என்பதற்கான போர்களின் வரிசையில் இன்று ஒப்பேறியது கடைசியாவதும் அல்ல. பொலநறுவா இராசதானியின் விழுக்காட்டின் பின்னடியில் (14ம் நூற்றாண்டு) யாழ் இராசதானி தோற்கடிக்கப்பட்டதும் மக்கள் தமது தமிழ் அடையாளத்தை அதற்கு ஏற்றவாறு கையாண்டமையும் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சகல தமிழ் மக்களையும் ஒன்றிணைக்க போரிட்டதும் சரித்திரம். அப் போரில் இன்று தோற்கடிக்கப்பட்டதும் சரித்திரம். ஆனால் தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்களா?

மக்கள் ஒருபோதும் போர்களினால் தோற்பதில்லை. ஒரு இனமாகத் தங்குவதற்கு அத்தியாவசியமான சமூகக் கட்டுகளை இழந்து போகும்போது, அல்லது இழந்து போய்விட்டதாக ஏற்றுக் கொள்ளும்போதே அவர்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள். மற்றய வேளைகளில் அவர்கள் முற்றாக நிர்முலம் செய்யப்படுகிறார்கள். ஆகவேதான், எம்மைப் பொறுத்தவரை மக்கள் முற்றாக ஒழிக்கப்படுவதையே மக்களது தோல்வி எனக் கருதுகிறோம்.)

கே: புலிகளது தலைவர் வே. பிரபாகரன் உயிருடன் உள்ளாரா?
ப: இல்லை.

(குறிப்பு 5: நாமோ புலிகளது அங்கத்தவர் அல்லது ஆதரவாளர் என்ற நிலையில் ஒருபோதும் இருந்திராத போது ஒரு-இயக்கத்தின்-தலைவர் என்பதன் பிரகாரம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எமக்கில்லை. அவர்கள் தம்முள் வாக்குவாதப் படுகிறார்கள் என்பதனால் அதற்கும் ஒரு கருத்துச் சொல்லிட வேண்டும் என்ற அவாவோ அவசரமோ எமக்கு இல்லை.

அப்படியானால், பிரபாகரன் என்பவர் தமிழர்களுடைய ஏகபோகப் பிரதிநிதிகள் என்கிற அமைப்பின் தலைவர் அதாவது தமிழ் தேசியத் தலைவர் என்ற அழுத்தத்தின் கீழ் வாழ்ந்த தமிழ் பிரஜைகள் என்ற ஒரேஒரு காரணத்தாலேயே எமது பதிலைக் காண வேண்டும்.

எனவே, (1) தமது போரின் நிலைபற்றி, இறந்த தனது இராணுவ வீரர்கள்பற்றி அறிவிக்க முடியாது, (2) மக்கள், அதுவும் புலிகளையே நம்பி அண்டி வாழ்ந்தவர்கள், சிறீ லங்காவின் இராணுவ முகாங்களில் அவஸ்த்தைப் படுவதைக் கண்டும் ஆறுதல் கூட சொல்ல முடியாது, (3) சிங்கள சோவனிசவாதிகளது தமிழ்பிம்பங்களாக, சிங்கக் கொடியின் எதிர்மாறான புலிக் கொடியின் அதிபதியாக வெற்றிகளுடன் இருந்துவிட்டு இன்று சிங்களச் சோவனிசவாதிகள் மீண்டும் எக்கதாளம் போடுவதை கண்டும் புலிகளின் பாணியில் பதில் கூறாது (4) எமது மக்களது வாழ்வில் தலை போடும் உலக நாடுகள் அனைத்தும் “புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டார்கள்” என்ற கருத்தை எமக்கே கூறி அடுத்த நகர்வுகள் பற்றி தாமே முடிவுகள் எடுக்கும் போது, ஒரு தேசியத்தின் தலைவர் எக்காரணத்தாலும் ஒளிந்து வாழ்வது பொறுப்பான காரியம் அல்ல. அதனை மட்டுமே கண்ணியமான நிலைப்பாடாகக் கொண்ட நாம் பிரபாகரன் உயிர் இழந்து போய்விட்டாரா இருக்கிறாரா என்பதற்கு பதில் காண வேண்டிய அவஸ்தையில் இல்லை. ஆனால், தலைவர் அவர்தான் அவரைவிட்டால் வேறொருவரும் உதவாது என்ற நம்பிக்கையில் காலத்தை விரையம் செய்த புலிகளகளின் ஆதரவாளர்களுக்கு அவர்கள் மீது தமது அன்பைக் கொட்டியே வாழ்ந்தவர்களுக்கு ஒரு திடமான பதிலைத் தர மிகவும் கட்டுப்பாடான அமைப்பு என்று கூறியவர்கள் இயலாது போனது மிகுந்த கவலைக்குரியது. மேலும், எமது மக்களது போராட்டத்தை தானாகவே தனியச் சுமக்க முயன்ற மனிதனுக்கு, மற்ற எந்தத் தமிழ் தலைவனிலும் பார்க்க பாரிய இராணுவ வெற்றிகளை ஈட்டிய தந்திரோபாரத் தளபதிக்கு இறுதி வணக்கத்தை செலுத்த முடியாது போய்விட்டதே என்பது புலிகளது போக்கிற்கு எப்போதும் எதிர்ப்பினைக் காட்டிவந்த எமக்கே வேதனை என்றால்? இது முதலைக் கண்ணீரோ மாற்றார் மனதைக் கவர எமது முயற்சியோ அல்ல.)

கே: புலிகளது அழிவை உலகநாடுகள் விரும்பியது ஏன்?
ப: முதலாவதாக, (1) புலிகள் ஒருபோதும் தகுந்த அரசியற் தீர்வை ஏற்கப் போவதில்லை (2) அதற்கான அரசியற் சாணக்கியமோ அதன் தலைமையின் அமைப்பில் வளைவு-சுழிவுகளிலான வாயில்கள் இல்லை (3) புலிகளது தலைமையால் பிராந்திய பூகோள ரீதியிலான அரசியற்-கேந்திர நிலைப்பாடுகளை புரிந்து கொள்ளவோ அவற்றை ஏற்றுக் கொள்ளவோ முடியாது (4) பிரபாகரனிடம் இருந்து பெறாத புலிகளது வாக்குறுதிகள் ஒப்பந்தங்கள் செல்லா கடுதாசிகள் (5) புலிகள் தனிமனிதப் பயங்கரவாத நடை முறையை தமிழரிடையேயும் இலங்கையின் மற்றய சமூகங்களிடையேயும் சர்வ தேசிய ரீதியிலும் பாவனத்தில் கொண்டவர்கள். என்ற காரணங்களைக் கூறலாம்.

இரண்டாவதாக, (1) எந்த நாட்டின் இறைமையை தேசியவாத அடிப்படையில் ஆயுத ரீதியில் புரட்டிடுவதை வல்லரசுகளும் பிராந்தியப் பலவான்களும் அநுமதிக்க முடியாது. (2) ஒரு புதிய நாட்டின் பிறப்பு வல்லரசுகளடையே அல்லது பிராந்திய பலவான்களிடையே ஏற்ப்படும் இயங்கியல் நியதிகளில் மட்டிலுமே தங்கி இருக்க முடியும். (3) மூன்றாவது உலக நாடுகளின் சமூக-மாற்றங்கள் (social transformation) வளர்ந்த நாடுகளின் தேசியத்துவங்களுடன் ஒப்பீடு செய்ய முடியாதது.

மூன்றாவதாக, இந்தியா சீனா ஆகிய பிராந்திய வல்லரசுகள், இருதுருவ சர்வதேசிய அரசியல் சிதைந்து போனதிலிருந்து, (1) தம்மிடையேயான போட்டிகள் எவ்வகையாயினும் தமது பிராந்தியங்களில் மூன்றாம் பகுதியினரின் தலையீட்டை தவிர்ப்பதிலும் மிஞ்சினால் அவற்றின் தாக்கத்தை குறைப்பதிலும் கருத்தாக இருக்கின்றன. (2) தத்தமது நடவடிக்கைகள் காலப்போக்கில் “ஆசியக்-கேந்திர” நிலைப்பாடு ஒன்று உருவாகுவதற்கு ஏதுவாக அல்லது குந்தகம் இல்லாததாக அமைவதை விரும்புகின்றன.

(குறிப்பு 6: உலக நாடுகள் எல்லாம் எல்லா விடயங்களிலும் எப்போதும் தலைபோடுவது கிடையாது. நாடுகளின் தலையீடுகள் யாதார்த்த ரீதியில், (1) எமது தீவில் இடம்பெறும் போரினால் தமக்கு சார்பான-எதிரான விளைவுகள் (2); தமது கருமங்களின் பட்டியலின் ஒழுங்கில் அக்கணிப்புகளின் பிரகாரம் தாம் எடுக்க வேண்டிய நடவடிக்கையின் அத்தியாவசியம் (3) தமது நடவடிக்கையின் விளைவுகள், என்பவற்றில் தங்கி இருக்கும். அவை இலட்சியக் காரணிகள் என்ற ரீதியில், (1) பிராந்தியப் பலவான்களின் தேவைகள், அவற்றின் அவசியங்கள் (2) பிராந்தியப் பலவான்கள்-வல்லரசுகளின் நடை முறைப் போட்டிகள் (3) சகலரும் இணங்கிக் கொள்ளும் விடயங்கள் என்பவற்றில் தங்கி இருக்கும்.)

(குறிப்பு 7: அமரிக்கா ஒரு சுதந்திர நாடாக ஆங்கிலேயரிடமிருந்து விடுபட்டு, பிராந்தியப் பலவானாகி, வல்லரசுமாகி, இன்று தான் மட்டுமே ஒரேஒரு வல்லரசு என்ற நிலைப்பட்டிற்கு 200 வருடங்களில் வந்துசேர்ந்துள்ளது. அங்கிருந்த பூர்வீகக் குடிகளை முற்றாக அழித்தொழிந்திருந்தும் கறுப்பு இனமக்களை பிரஜைகளாகவல்ல ஏன் மனிதர்களாகவே ஏற்க முடியாது என்ற சட்டங்களை 1960கள் வரை கொண்டிருந்த அமரிக்கா இன்று தன்னை மனிதாபிமானத்தின் பிரதிநிதியாக நியமித்துள்ளது. தனது பாதுகாப்பு கேந்திர அபிலாசைகள் என்றவாறு தனது சுற்றாடலில் மட்டுமல்ல அகிலத்தின் நான்கு கோடிகளிலும் பயங்கரவாதிகளை அரசேற்றியும் பயங்கரவாதத்தை பரப்பியும் வைத்த அதே அமரிக்கா இன்று ஜனநாயகம் என்ற தனது புதிய ஆங்கில-ஷாக்ஸன் சித்தாந்தத்தை, காலனித்துவ காலத்தில் கிறிஸ்தவத்தை பரப்பியது போல, கலாச்சாரப்-போர் ஒன்றினை முன்நின்று நடத்துகிறது. அதற்காக நாடுகளை ஆக்கிரமித்து கைப்பற்றி சமூகங்களை மனிதர்களை கூட்டோடு அழித்திடவும் தயாராக உள்ளது. ஆனால் 9-11 என்பதை உலக அரசியலின் எல்லைக் கல்லாக்கி “பயங்கரவாதத்திற்கு” எதராக பெரும் போர்களையும் நடத்துகிறது. நாடுகளின் இறைமை என்று பிறருக்கு அளந்திடும் போதிலும் தனது நீண்டகால நண்பனான பாக்கிஸ்தானின் பிரதேசத்துள் கூட இராணுவ நடவடிக்கைகள் எடுக்கிறது. முதலாளித்துவத்தின் பாதுகாவல்-வீரனாக(champaion) தன்னை முன்வைத்திடும் அமரிக்கா அதன் பேரில் உலகெலாம் தனது வீச்சை வளர்த்து பாதுகாப்பதை கடமையாகக் கொண்டுள்ளது. அமரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதன் தலையீடுகளுக்கும் எதிரானவர்கள் கூட அதனது வீச்சை, அது ஏற்படுத்தும் இயங்கியற் நியதிகளை அவற்றின் இருப்பை நிராகரித்திட முடியாது. கண்களை மூடியபடி மந்திரங்களை உச்சரிப்பது போல அமரிக்க எதிர்ப்புக் கோஸங்களுடன் மட்டும் காலம் கடத்திட முடியாது.)

அமரிக்கா போலவே பிராந்திய பலவானாகவும் இன்று பிராந்திய வல்லரசாகவும் வளரும் இந்தியா, தன்னைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் இடம் பெறும் சர்ச்சைகள் யாவற்றையும் குறைந்தபட்சம் தனது கவனத்தில் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்கான காரணங்களாக, (1) வெளியார் பிரச்சனைகள், உறவுகள் (உ. ம்: தமிழர், காஸ்மீரிகள், இஸ்லாமியர்கள் போன்ற உறவுகள்), உணர்வுகள் (உ. ம்: போராட வேண்டும், மக்கள் அமைப்புகள், மாற்று அதிகாரக் கட்டுகள் வேண்டும் என்ற உந்தல்கள் போன்ற உணர்வுகள்), புதிய சித்தாந்த அல்லது நடைமுறைக் கருத்துக்களால் (உ. ம்: தேசியம், வர்க்கம், மனித உரிமைகள் என்பவை அவற்றின் கலப்புப் பிறப்புகள் போன்ற கருத்துக்கள்) தொற்று நோய்களாக உள்வருவதை தடுப்பது (2) தனது பிராந்தியத்தில் இடம்பெறும் விடயங்களின் வீச்சையும் ஆழத்தையும் நிச்சயம் செய்வதில் தானே கூடிய பங்கினை வைத்திருப்பது (3) தனது பிராந்தியத்தில் பிறத்தியாரின் தலையீட்டை மட்டுப் படுத்துவது (4) தனது உலகளாவிய செல்வாக்கை மேம்படுத்திடுவது (5) தனது கருவிகள் இயலுமைகள் ஆற்றல்கள் தொழில் நுட்பத் துறைகளின் முன்னேற்றத்திற்கான தருணம் என பாவித்துக் கொள்வது என்பவற்றை முதற்கண் குறிப்பிடலாம்.)

(குறிப்பு 8: ஏகாதிபத்தியங்களுக்கும் எதிரிகளுக்கும் எதிராக எத்தனையோ கோஸங்களை தொண்டை கிழிய கத்துவதென்று முடிவு செய்துவிட்டாலும், குறைந்தபட்சம் இப்பாதையில் எவற்றினை அடைவது என்ற மைல்கற்கள் இல்லாவிடில் எப்படி எமது அடிகளை முன்வைப்பது? இந்தியா ஒரு நாடா? நாடென்றால் அது முன்னேற்றமானதா? அது உண்மையாக ஜனநாயகம் கொண்டதா? அங்குள்ள மக்கள் இனங்களாகவும், வர்க்கங்களாகவும் சுதந்திரமானவர்களா? இந்தியா இலஞ்சத்தின் தலைநகர் அல்லவா? அங்குள்ள அரசியல்வாதிகள் கொலைகாரர்களும் கள்ளர்களும் பொய் சொல்பவர்களுமல்லவா? இப்படியாக ஆயிரம் கேள்விகேட்டு காரியங்கள் எதுவுமே செய்யாது வாயடித்து வாழ்பவர்கள் சுவருடன் மோதுவது போல காரியம் ஆற்ற முயன்று மடிந்த புலிகளை வையாதிருப்பர் என எதிர்பார்ப்பதில் தவறில்லை. இலங்கைத் தீவை அடியோடு வெட்டி சீனாவிற்கு அல்லது அமரிக்காவிற்கு அருகில் இழுத்துச் செல்லும் வரை இந்தியாவின் தலையீட்டினை தவிர்த்துக் கொள்ள முடியாது என்பதையும் ஆகவே, அத் தலையீடுகளின் எதிர்மாறான அல்லது சாதகமற்ற விளைவுகளை எப்படி குறைத்துக் கொள்வது என்பதில் கவனம் செலுத்துவதும்தான் இன்று ஒரே வழி என்பதையும் ஏற்றாகத்தான் வேண்டும். வெற்றுச் சித்தாந்தங்களும் மக்கள் அமைப்புகளும் மட்டும் போதுமாகின் புலிகளுக்கென்ன ஜே.வி.பியினருக்கும்தான் நடந்ததை நாம் மீளாய்வு செய்ய வேண்டும்.)

கே: புலிகளின் போர் முற்றிலும் விரையமானதா?
ப: இல்லை!

முதலாவதாக, (1) சின்ன மனிதராலும் பாரிய இராணுவ வசதிகள் கொண்ட நாட்டுடன் “போரிட” முடியும் (2) அப்போரின் வெற்றிகளால் சில அரசியல் நிலைப்பாடுகளைக் கூட ஏற்படுத்த முடியும் (3) சிறு தொகையினராகினும் பிழையான வழிமுறைகளைக் கொண்டாவது அவர்களுள் கணிசமான விகிதாசாரத்தில் இளைஞர்களை “போரில்” ஈடுபடுத்த முடியும் (4) “சரி” என்ற நம்பிகை இருப்பின் சின்ன மனிதர்கள் இந்தியா போன்னற வல்லரசையும் கையாளலாம். இவ்வாறான சமூக-மனோவியல் ரீதியான தாக்கங்களைக் கூறலாம்.

இரண்டாவதாக, (1) பிராந்திய தமிழ் மக்களது அபிலாசைகளின் எழுச்சி (2) தமிழர்களது சமூக-மாற்றம் (3) தமிழர்களது தேசியவாதத்தை சர்வதேசியமயப் படுத்தியமை (4) இஸ்லாமியர்களது தனித்துவம் முன்னிறுத்தப் பட்டமை. என தமிழர்களிடையேயும் தமிழ் பேசும் சமூகங்களிடையேயும் ஏற்பட்டுள்ள அரசியல் மேலும் அவற்றினூடான பொருளாதாரத் தாக்கங்களைக் குறிப்பிடலாம்.

மூன்றாவதாக, (1) MOU-2002 (2) ஒஸ்லோ ஒப்பந்தம் என்பவற்றாலான சிறீலங்கா அரசியற் அமைப்பு மீதான தாக்கங்களைக் குறிப்பிடலாம்.

(குறிப்பு 9: இன்று பெரிய இனங்களாகத் திரண்டு காண்பவை அன்று, குடியானவர் சமூகங்களின் ஆரம்பக் காலங்களின் முன்னர், தாமாகவே ஒன்று சேர வேண்டிய அல்லது அதன் பின்பு ஒன்று சேர்க்கப் பட்ட சின்ன இனங்களின் கூட்டுகள். தேசியஇனங்கள் இனங்கள் என்பவற்றை நாம் எப்படிக் கணிப்பது என்பது தர்க்கத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டிய பாரிய கேள்வி. எம்மைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழர்கள் ஒரு தேசிய இனமல்ல என்பதை என்றென்றும் கூறிவந்துள்ளோம். மேலும், வடஐரோப்பிய (மேற்கத்திய) உற்பத்தி முறையில் (mode of production) உருவான தேசியம் என்ற வரையறுப்புகளுக்கும் ஆசிய-உற்பத்தி முறையில் கிராமிய அமைப்பு வடிவத்தில் உருவாகி காலனித்துவத்தூடாக வலுக்கட்டாய சமுதாய-மாற்றங்கள+டாக 200 வருடங்களைக் கடந்து வலுக்கட்டாயங்கள+டாக “நாடுகளாக” பரிணமித்த மக்கள் பிரதேசத்தில் இக் கேள்விகளை எப்படி முன்வைக்க வேண்டும் என்பதே முக்கியமான விடயம்.)

(குறிப்பு 10: ஆனால் தேசிய இனங்களோ இல்லையோ தன்னுணர்வு கொண்ட அல்லது எமது நிலைமை போல புறத் தேசியத்தின் வலுவால் தன்னுணர்வு ஊட்டப்பட்ட சமுதாயங்கள் “வளரும்” “நாடுகளில்” மிகப் பல. இன்று அவை யாவுமே அரச- பலாத்தகாரத்தினூடாக ஒரு பொதுத்-தேசியத்துள் ஒன்றுபடுத்துவதற்காக தாக்கப்படுகின்றன, பயங்கரவாதத்திகு உள்ளாக்கப் படுகின்றன. அதற்கான காரணம் பொதுவாக அவர்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள இயற்கை தந்த செல்வங்களே என்பது உண்மை. பெருவின் (Peru) மலைக்காடுகளை பணமாக்குவதற்கு வெளிநாட்டு பெரும்-முதலாளிதுவத்துடன் கூட்டாக உள்நாட்டில் காலனித்துவத்தின் எச்சச்-சமூகங்கள் துணைபோவதும் அத்தேச இந்தியர்கள் தாக்கப்படுவதும், அல்லது பிரேஸிலின் காட்டுவளங்களை அந்நிலங்களின் கீழ் புதைந்துகாணும் தாதுப் பொருட்களை மண்-நெய்யை பெறுவதற்காக அந்நாட்டு இந்தியர்கள் கொல்லப்படுவதும் அப் பிரதேசங்களிலிருந்து அகற்றப் படுவதும், இதுபோல ஆயிரம் அன்றாட நிகழ்வுகளை உலகெங்கும் குறிக்கலாம். ஆனால், பாக்கிஸ்தானின் ஸ்சுவாட் மலைச் சாரல் பிரதேசங்களில், பர்மாவின் கரன் மக்களது கிராமங்களில் அவர் பிரதேசத்தில், இலங்கையில் தமிழரது பாரம்பரிய பிரதேசங்களில் அஷபஸானில் (Azerbagan) உள்ள நகூனகரபாஷின் ஆமீனியர் (Armenia) மீது நடத்தப்படும் தாக்குதல்கள் போன்றவை வௌ;வேறு காரணிகளைக் கொண்டவை. ஆனால் சின்ன மனிதர்களது எதிர்காலம் என்பதில் ஒன்றுபடுத்தப் படுபவை.)

(குறிப்பு 11: சின்ன மனிதர்ளைச் சேர்த்ததுதான் பெரிய இனங்கள் என்றால், சின்ன மனிதர்கள் ஏன்தான் போராடிட வேண்டும்? அவ்வாறான சமூக-மாற்றங்கள் இயற்கையின் ஓட்டமாயின் ஏன்தான் எதிர் நீச்சல் போட வேண்டும்?
மனிதனோ வெறும் பொருளாதார ஓட்டங்களில் மட்டுமே தங்கிய காலம் போய், அவற்றின் நியதிகளைத்; தாண்டி, தனிமனித வாழ்வுகளுடன் ஒட்டி மீண்டும் பொதுமனித உணர்வுகளின் பெறுமதியை தனது நுகர்வுகளால் பெற்றபின் உணர்வு ரீதியில் தாமாகவே ஒன்றென்பதும் அவ்வொருமையை நாடி அதனைப் பேண முயல்வதும் இ;யற்கையின் சமூகவியல் நியதிகளே. அவர்கள் சின்ன மனிதர்கள் என்பதால் மட்டும் அவர்களது அந்த-உணர்வை தடுத்துவிட முடியாது. இதுவொரு காரணியே போதும் பல நூறு காரணங்களை காலாகாலத்தில் வாதங்களாகத் முன்வைப்பதற்கு.

ஏன் எமது போராட்டத்தில் ஒரு பொது-அடையாளத்தை வலக்கட்டாயமாக கொடுக்க முனைந்ததின் விளைவை நாம் காணவில்லையா? தமிழீழம் என்பது எவ்வளவுதான் சிங்கள-பெரும்-தேசியவாதத்திற்கு தர்க்க பூர்வமான பதிலாகத் தோன்றினும், அதனது போர்வைக்குள் தமிழர்களது ஒவ்வொரு சமூகத்தையும் அணைத்துக் கொள்ள முடியவில்லை. மேலும், தமிழீழம் என்ற வரைவுக்கு பூர்வீகநிலம் என்ற உரித்து உத்தரவாதமாக இருக்க வேண்டியதால் அப்பிரதேசத்தில் வாழும் தமிழ் பேசும் இஸ்லாமியர்களுடன் உறவுகளை பேணிடும் அரசியற் கட்டுகளையும் கொண்டிருக்க முடியவில்லை.

தமிழீழப் பிரதேசத்துள் வாழும் இஸ்லாமியரை ஏற்றுக் கொள்ள முடியுமாயின், அவர்களது இருப்பை, நில உரித்தில்லாத அந்தப் பிறஇனத்தின் குடியேற்றத்தை ஏற்றுக்;கொள்ள முடியுமாயின், சிங்களவரது குடியேற்றங்களை எப்படிக் கணிப்பது? இஸ்லாமியரகள் தமிழ் பேசுபவர்களாக இருப்பதாலா, அப்படியாயின் அவர்களது சிங்களம் பேசும் உறவினர்களது உரித்து என்னாவது? சிங்களவரது இருப்பை திட்டமிட்ட அரசக் குடியேற்றம் என்றதால் நிராகரிப்பதாயின், இஸ்லாமியர்கள் அங்கு இருந்துவிட்டதால் பெற்ற உரித்து என்ற ரீதியில் ஏற்பதாயின் நிலங்களை சட்டபூர்வமாக சிங்களவர் வாங்கிக் குடியேறிவிட்டால் எப்படிக் கணிப்பது? இவை விளக்கங்கள் பெறக்கூடிய விடயங்களா? அல்லது தமிழீழுக் கோரிக்கையால் தீர்க்க முடியாத உள்முரண்பாடுகளா?

அவை எவையாகினும் தமிழீழம் எனும் பொது-அடையாளத்துள் யாவரும் அடங்கவிலை என்பது திண்ணம். அதிலும் சின்ன மனிதர்களாக கிழக்கிலும் ஏன் இன்று வடக்கிலும்தான் தமது அடையாளங்களை சில சமூகங்கள் தேடுகின்றன என்பதே ஆதாரங்கள் நாம் தொடுத்த வாததிற்கு.

எனவே சின்ன மனிதர்கள் தமது அடையாளங்களை வெறும் இனம் என்பதன் அடிப்படையிலேயே கோரிடும் உரிமை யாரும் வழங்காமலே அவர்களுக்கு உண்டு. தேசியம் என்பது அவர்கள் அனைவரும் வௌ;வேறு சமூகளாக தமது அடையாளங்கள் என்பவற்றைத் தாண்டி, பொருளாதார சமூக-மாற்றங்களில் மேலும் ஓருபடி உயர்வதற்கு பொது அடையாளத்தின் பாதுகாப்பையும் அநுசரணையையும் தேடும்போதே சகல சமூகங்களையும் ஆட்கொள்ளும் தர்க்கீகமாகிறது.)

(குறிப்பு 12: சின்ன மனிதர்களது இருப்பு உலகிற்கு ஏன் தேவை என்பதற்கு அவர்களது சுயநிலை வாதத்திலும் பார்க்க மாற்றார்களது அவசியங்களோ அதிகம். அந்தமான் தீவிலுள்ள ஆதிவாசிகள் பாவிக்கும் மூலிகைகள் நாகரிக உலகத்தின் புதிய வியாதிகளுக்கே மருத்துவமானது என்பது வியப்பானதாக இருக்கவேண்டுமா? அல்லது பாரம்பரிய வாழ்க்கை முறையில் தங்கி இருப்பவர்கள் தமது உடலால் ஆன இயல்புகளில் மேம்பட்டவர்கள் என்பதும், நாகரீக மனிதர்களாகிய நாம் ஒருகால் களைந்தெறிந்துவிட்டு இன்னொருகால் தேடுவதும் அவை என்பதையும் நாம் உணர்ந்துள்ளோமா? கலாச்சார நாகரீகம் எவ்வளவுதான் இயற்றுமையின் புதிய-உருவாக்கங்களின் எல்லைகளைத் தேடி அடையினும் சின்ன மனிதர்களது பிரத்தியேக அறிவுகளும் ஆற்றல்களும் அவற்றினை மெருகூட்டும் என்பதை புரிந்துள்ளோம் அல்லவா? ஒவ்வொரு விலங்கினமும், ஏன் நுண்ணுயிர்கள் கூட அழிந்து போகும்போது நாமும் ஒருபடி அழிந்து போகிறோம் என்பதை உணர்ந்துள்ளோமா இல்லையா? இவ்வாறான நுகர்வுத் தன்மைகளை அவற்றினை எட்டிடும் ஆறறிவினை கொண்டவர்களாயின் சின்ன மனிதர்களது இருப்பின் அவசியத்தை எவ்வாறு சர்ச்சையாக்கிட முடியும்?)

புலிகளது அதிகாரக்காலத்தின் ஒருபகுதியையே இங்கு தந்துள்ளோம். இன்னுமொரு தருணத்தில் மற்றும் சில பகுதிகளை எமது பார்வைக்கு உட்படுத்த வேண்டி உள்ளோம். அவற்றின் அடிப்படையிலேயே எமது மக்களது எதிர்காலம் பற்றிய சில கருத்துகளை திடமாக முன்வைக்க முடியும் என்பது எமது கணிப்பு.

-நன்றி.

ரவி சுந்தரலிங்கம்
Academic Secretary(ASATiC)
20 ஆனி 2009

இன்று 21 ஆனி 2009 தேசம்நெற்றினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட தமிழர்களின் அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் கூட்டத்திற்காக ரவி சுந்தரலிங்கத்தினால் எழுதப்பட்ட கட்டுரை இது.

மனித உரிமை, பிரதேச அபிவிருத்தி பற்றிய பிரபாவின் கைத்தடி கருணாவின் உபதேசம். : முன்னாள் போராளி.

Karuna(கட்டுரையாளர் தேசம்நெற்றுக்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். ஆயினும் தன்னை இனம் காட்டுவது இன்றைய சூழலில் அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கருதுவதால் அவர் தனது பெயரைக் குறிப்பிடவில்லை. கட்டுரையாளர் மட்டு அம்பாறையைச் சேர்ந்த முன்னாள் ரெலோ போராளி.)

மட்டக்களப்பு சென்றல் கல்லூரியில் பாடசாலையில் படித்த கருணா ஒழுங்காக பாடசாலைக்கு சமூகமளிக்காது தில் சாகசங்களில் விருப்புக் கொண்ட கருணா சிறு வயதிலேயே ஆயுதக் கலாச்சாரத்தில் இணைந்து கொண்டார். இவர் பிரபாகரனின் நன்மதிப்பை பெறுவதற்காக எல்ரிரிஈ க்குள் குள்ளநரி வேலைகளையும்; துதி பாடுதல்களையும் காட்டிக் கொடுப்புக்களையும் ஈவிரக்கமற்ற கொலைகளையும் புரிந்தே பெற்றுக் கொண்டார்.

இவர் மட்டு தளபதியாக உருமாறிய பின் தன்னை ஒரு கதாநாயகனாக நிலை நாட்டுவதற்கு மட்டக்களப்பில் இருந்த கல்விமான்களையும் முற்போக்கு சிந்தனையாளர்களையும் சுட்டு பொசுக்கி மட்டக்களப்பு மக்களை ஒரு அடிமைத்தனத்திற்குள் தள்ளினார்.

பாலங்கள் அரச கட்டடங்கள் வருவாய ஏற்படுத்திக் கொடுக்கும் அரிசியாலைகள் முதல் ஏனைய நிறுவனங்களையும் குண்டு வைத்து தகர்த்ததில் தளபதிகளில் முதன்மையானார். அது மட்டுமல்ல எந்த மாவட்டத்திலும் நிகழாத அளவிற்கு ஏழை முதல் பணக்காரர் வரை கடத்தி கப்பம் பெறுவதில் முன்னோடியானார். ஏழை மீன்பிடி தொழிலாளர்களிடம் இருந்து மீனகளைப் பறிக்கும் அளவிற்கே இவரது கொடுங்கோல் ஆட்சி நிலவியது.

முஸ்லிம் தமிழர்களுக்கு இடையில் ஏற்பட்ட இன முரண்பாடுகளையும் கலகங்களையும் இவர் காத்தான் குடி பள்ளிவாசல் படு கொலை மூலமும் ஏறாவூர் படுகொலை மூலமும் நிரந்தர இனப்பகையை ஏற்படுத்தினார். இவர் இந்த படுகொலைகளை தானே முன்னின்று உத்தரவிட்டு கொலை செய்ய கட்டளை இட்டதற்கான ஆதாரங்களும் அதை நியாயப்படுத்த சொன்ன கதைகளும் ஆதாரபூர்வமாக நிரூபிப்பதற்கு இன்றும் சாடசிகள் உள்ளன.

மட்டக்களப்பில் தனக்கென்றே ஒரு படையணியை உருவாக்குவதற்கு பலவந்தமாக பள்ளிச் சிறுவர்களில் இருந்து வறியகுடும்பங்களின் வருமானத்தை ஏற்படுத்தி கொண்டிருந்த உழைப்பாளர்கள் வரை கடத்திச் சென்று ஆயுதப்பயிற்சி கொடுத்தவர் இதை எதிர்த்த பெற்றோர்கள் முதல் கல்வியாளர் வரை அடித்து நையப்புடைத்தார். தாய்மார் என்றும் பாராது அவமானப்படுத்தினார். பாடசாலை முதல் கோயில் திருவிழா வரை சுற்றி வளைத்து சிறுவர் சிறுமியரை கடத்தி சென்றவர். இவரது கட்டாய ஆயுதப் பயிற்சியில் இருந்து தப்பி வந்தவர்களை சுட்டு கொன்று மற்றவர்களை பயமுறுத்தியவர். இந்த பிள்ளை பிடிப்பில் இருந்து தப்பிச் செல்வதற்காக பிறமாவட்டங்களுக்கு செல்ல முயன்றவர்களை வழிமறித்து நடு வீதியிலேயே அவர்களுக்கு சிறுமிகள் என்றும் பார்க்காது தலைமுடியை வெட்டியதை மட்டக்களப்பு மக்கள் மறக்க மாட்டார்கள்.

தன்னை ஒரு ராணுவ திட்டமிடுதலில் திறமையானவர் என தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் கருணா வவுணதீவு ராணுவ முகாமை தான்தோன்றித்தனமாக தாக்கியதில் பல நூறுக்கணக்கான அப்பாவி போராளிகளை பலி கொடுத்ததுடன் முழு தோல்வியை தழுவிக் கொண்ட கருணாவின் ராணுவ அறிவு சம்மந்தமாக  இன்றைய பிதற்றல்களை புரிந்து கொள்ளுங்கள். இவரது முழு பலமும் கல்வியறிவற்ற கிராமப்புற பின்தங்கிய இளைஞர்களையும் யுவதிகளையும் பயிற்சி கொடுத்து விட்டில் பூச்சிகள் போல் ராணுவ முகாங்களுக்கு அனுப்பியதே ஆகும். இதனாலேயே இவர் புலிகளுக்குள் முன்னோடியாகவும் பிரபாகரனிடம் நன்மதிப்பையும் பெற்றுக் கொண்டார். மொத்தத்தில் இவர் மட்டக்களப்பு சின்னஞசிறுசுகளை அழியவிட்டு மட்டு அம்பாறை மக்களை மடையர்களாக்கி தனது சுய பெயரை பொறித்துக் கொண்டார்.

சமாதான உடனபடிக்கையின் காலத்தில் கூட கட்டாய ஆட்சேர்ப்பை நிறுத்தாது அரசியல் எதிரிகளை சுட்டு கொன்று சமாதான உடன்படிக்கையை முதன்முதலில் மீறியவர் இவரே. இவரது மாமனார் (மனைவியின் தந்தையார்) ஒரு சாதாரண கூலி தொழிலாளியாக இருந்தும் இவர்களது பெயரில் ஏராளமான சொத்துக்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளதையும் இவரது தனிப்பட்ட ராணுவ கட்டமைப்பின் பெருக்கத்தையும் விசாரிக்க முற்பட்டபோதே முரண்டு பிடித்தார். இவருக்கு எதிராக குற்றம் கூறியவர்ளை தவறு என சொல்லி தான் பிரபாகரனுக்கு நேரடி பார்வையில் இயங்க தயாராக இருப்பதாகவும் பிரபாகனை தனது  கடவுள் போல் மதிக்கின்றேன் எனவும் தனது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளுமாறு பத்திரிகை துண்டுப்பிரசுரம் மூலம் மன்றாடி கேட்டார். ஆனால் இவர் எல்ரிரி யில் இருந்து நீக்கப்பட்டவுடன் தனது விசுவாசிகளை கொண்டு ஊர்வலங்களும், கூட்டங்களும் நடத்தி குறிப்பாக மாமாங்க பிள்ளையார் கோவில் முன் ஒரு மாபெரும் கூட்டம் நடத்தி தனது ஆதரவாளர்கள் மூலம் மீண்டும் மட்டு அம்பாறை தளபதியாக நியமிக்குமாறு மன்றாடி கேட்டு கொண்டார். இவை அனைத்தும் சரிவராத பட்சத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படுகிறது என பிரதேச அரசியல் செய்யத் தொடங்கினார்.

தான் தப்பி ஓடும் வரை பலாத்காரமாக பிடிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகளை ராணுவத்தின் முன்னரங்குகளில் முன்நிறுத்தி வைத்திருந்தார். சில மனிதாபிமானிகள் இவ்வாறான சிறார்களை யுனிசெப் இல் இந்த சந்தர்ப்பத்திலாவது கையளிக்குமாறு மன்றாடி கேட்டனர். அதை மறுத்து தனது சுயநல, சுய பாதுகாப்பிற்காக புலிகளால் கொலை செய்யப்படுவதற்கு காரணமானார்.

உலகத்தின் எந்த நாட்டிற்கு சென்றாலும் வாழ முடியாததை உணர்ந்த கருணா ராணுவத்திற்கு காட்டிக் கொடுப்பு வேலை செய்வதற்கு முன் வந்தார். அத்துடன் புலிகளில் இருந்த போது கையாண்ட அதே பாணியில் கையாண்டு 2000ற்கு மேற்பட்ட சிறுவர் சிறுமிகளை கடத்தி தமக்கு என ஒரு படையணியை வெலிகந்தை காட்டுப் பகுதியில் நிறுவினார். ராணுவத்துடன் சேர்ந்து கிழக்கு மாகாண புலியழிப்பில் ஈடுபட்டார். ஆட்கடத்தல் கப்பம் அரசியல் எதிரிகளை கொல்லுதல் போன்றவற்றை செய்து கொண்டு இருக்கும் இவர் இன்று ஓரு அரசியல் கொமடியன் போல பல புதினமான கருத்துக்களை அள்ளி வீசி வருகின்றார். கிழக்கின் கல்வி மேம்பாட்டிற்கு உதவி வழங்க போகின்றாராம். போதாக்குறைக்கு இதை வடக்கிற்கும் விஸ்தரிப்பாராம்.

அபிவிருத்தி தந்த வழங்களை அழித்த இவர் தமிழ் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யப் போகின்றாராம்!

பள்ளி வாசல் முதல் முஸ்லிம் கிராமம் வரை நரமாமிச வேட்டையாடிய கருணா தமிழ் முஸ்லிம் உறவு பற்றி பிதற்றுகிறார்.

மட்டு நகர் அபிவிருத்திக்காக உழைத்த முன்னாள் அமைச்சர் தேவநாயகத்துடன் சேர்ந்தியங்கிய காரணத்தால் சித்தாண்டி சிவலிங்கம் ஆசிரியரை மின்கம்ப மரண தண்டனை கொடுத்ததுடன் வாசுதேவாவையும் (புளொட்) அவரது சகாக்களையும் பேச்சு வார்த்தைக்கென அழைத்து கபடமாக கொன்று குவித்ததையும் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்; நிமலன் சவுந்திர நாயகத்தை அழைத்து பேசிய பின் அவர் வீடு சென்று அவரை வழி மறித்து கபடத்தனமாக கொன்றதையும மட்டு மாநகர் முதல்வர் செழியன் பேரின்ப நாயகத்தை கொன்றதையும்  மட்டுநகர் முனன்னாள் அமைச்சர் கணேச மூர்த்தி (சந்திரிகா அரசில்) யின் சகோதரரை கொலை செய்ததையும்  ரெலோ உப தலைவரான மட்டுநகர் ரொபேட்டை (பிரதேச சபை தலைவராக சிறப்புடன் பணியாற்றிய) கொலை செய்ததையும் மறந்து இன்று தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்றும் மட்டு – அம்பாறையில் உள்ள பிரதேசங்கள் பின்தங்கியுள்ளதாக கருணா பிதற்றி திரிகின்றார்.

ஏனைய போராளி அமைப்புக்களையும் போராளிகளையும் கொன்று குவித்ததை எதிர்த்த புலி உறுப்பினர் கல்லாறு கடவுள் (தற்போது ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கின்றார்) வெளியேறிய போதும் தொடர்ந்து இக்கொலைகளையும் கொலைக் கலாச்சரத்தையும் முன்னின்று எடுத்து நடத்திய எமனுடைய தூதன் கருணா இன்று போதனை புரிகின்றார்.

இந்திய ராணுவத்தின் வருகையின் பின் பலாத்காரமாக உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய ராணுவத்தை இந்திய ராணுவம் கைவிட்டு சென்ற பின் அவர்களை கொன்று குவித்தது அன்று இவருக்கு தவறாகப் படவில்லை என இன்று மட்டு – அம்பாறை மக்களின் காதில் இன்று இவர் பூச்சூடுகிறார்.

புத்திஜீவிகள் முதல் சமூக முன்னோடிகள் பாடசாலை ஆசிரியர்கள் வரை சுட்டுக் கொன்ற இவர் நம் சமூகத்தில் (மட்டு -அம்பாறை) கல்விமான்கள் இல்லை என கதறுகிறார்.

புலியால் நீக்கப்பட்ட பின் பிரபாகரனை கடவுள் என கடிதம் கொடுத்து மீண்டும் தன்னை சேர்த்துக் கொள்ளச் சொன்னவர் இன்று பிரபாகரனுக்கு அரசியல் தீர்வுக்கு செல்லுமாறு அறிவுறுத்தயதாகவும் அதை அவர் கேட்காததாலேயே தாம் விடுதலைப் புலிகளிடம் இருந்து விலகியதாக கயிறு விடுகிறார். கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படுவதாக ஆரம்பத்தில் புரளி கிளப்பிய இவர் தனது முன்சொன்ன கருத்துக்களில் முரண்படுகின்றார். பிரபாகரனின் உதவியுடன் மட்டு – அம்பாறை மக்களையும் அப்பாவி இளைஞர் யுவதிகளையும் அடிமைத்தனத்திற்குள் வைத்திருந்த இவர் இன்று ராஜபக்ஸ சகோதரர்களுடன் இணைந்து அதே நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றார். இவர் மட்டு – அம்பாறை மக்களை மீண்டும் மீண்டும் தனது அதிகார பசிக்காக பலி கொடுக்கிறார். ஆனால் மட்டு-அம்பாறை மக்கள் இதை நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். துரதிஸ்டவசமாக புலம்பெயர்ந்த சிலர் இவரின் கடந்த காலத்தை கருத்திற்கெடாது கிழக்கின் விடிவெள்ளியாக உருவாக்க முனைகின்றனர்.

அது மட்டுமல்ல சில இணையத்தளங்கள் இவருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தம் நலன்களில் (மட்டு – அம்பாறை மக்கள்) காட்டாது இருப்பதை இட்டு மட்டு – அம்பாறை விசனம் அடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அபிவிருத்தி ஏற்படுத்தி தந்த ராஜன் செல்வநாயகம், தேவநாயகம் போன்ற மூத்த அரசியல்வாதிகளையே  அரசியல் உரிமைகளே முக்கியம் என புறந்தள்ளி விட்ட மக்களுக்கு அபிவிருத்தி பற்றி பிதற்றுகிறார். இவர் போன்ற அரசியல் சமூக அறிவற்றவர்கள் போராடச் சென்றதாலேயே எம்மக்களுக்கு இப்பேரழிவு ஏற்பட்டது என்பதை மட்டு அம்பாறை மக்கள் புரிந்து வைத்திருக்கின்றனர். எமது சமூகத்தில் இன முரண்பாட்டால் ஏற்பட்ட ஆயுதகலாச்சாரம் முனைப்பு பெற்றதால் சமூக நற்சிந்தனையாளர்களும் கல்வியாளர்களும், சாதாரண மனிதர்களும், அரசியலுக்கு வருவதை தவிர்த்தனர். சமூகத்தில் நன்மதிப்பை பெறாதவர்களும் சமூக விரோதிகளும், சுயநலவாதிகளும், ஊதுகுழல்களும் அரசியல் அதிகாரம் பெற்று பாராளுமன்றம் சென்றனர். இது பல தமிழ் தேசியகூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.

புலிகளைக் காட்டி சட்டத்தையும ஒழுங்கையும் நிலை நிறுத்துவதற்கு தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் தவறியமையே இதற்கு ஒரு காரணமாகும். புலிகளின் அழிவுடன் மீண்டும் சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படும் சந்தர்ப்பத்தில் ஆயுத கலாச்சாரம் இல்லாத சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் தமக்கான சரியான அரசியல் தலைமையை தேர்ந்தெடுக்க முன்வருவார்கள். புலம்பெயர் மக்கள் ஆயுத வன்முறைகளற்ற சட்டமும் ஒழுங்கும் நிலவுகின்ற ஒரு நிலையை இந்தியா போன்ற நாடுகளின் உதவியுடன் கொண்டு வருவதே அவர்கள் முன் உள்ள தலையாய கடமையாகும். இதை விடுத்து கொலைக் கலாச்சாரத்திலும், சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை போற்றுவதையும் – முன்னிலைப் படுத்துவதையும் நிறுத்த வேண்டும். புலம் பெயர்ந்தவர்கள் எப்படி புலிகளை வளர்த்து மக்களை அழிவுக் உள்ளாக்கினார்களோ அதே போன்ற செயலை சில கிழக்கின் விடிவெள்ளிகளும், பல இணையத்தளங்களும்; சுயநலவாதிகளும் செய்வதை தவிர்ப்பதே இன்றைய காலத்தின் தேவையாகும்.

இவரின் பின்னால் அணிசேரும் சிலர் பிரதேச வாதத்தை கூறிக் கொண்டு மட்டக்களப்பு மக்களை ஏமாற்றி சூறையாடியதுடன், பல பெண்களின் கற்பை அதிகாரத்தை பயன்படுத்தி பறித்த சில மௌனமான (ஆ)சாமிகளும் மட்டு நகர் மக்களால் நன்கு அறியப்பட்டுள்ளனர்.

இனத்திற்குள்ளேயான விரிசல்களையும், இயக்கத்திற்குள்ளேயான விரிசல்களையும் பல கொலைகளைப் புரிந்ததன் மூலம் ஏற்படுத்திய கருணா இன்று தேசிய நல்லிணக்க அமைச்சராக உள்ளது நகைப்பிற்கிடமாக உள்ளது!!

பிரபாகரனை அண்ணே அண்ணே என உச்சாடனம் செய்து கொண்டு திரிந்த கருணா இன்று ராஜபக்சவை விநாடிக்கு விநாடி உச்சாடனம் செய்வதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். தலைவர் (கருணாவிற்கு) தமிழ்ஈழம்பெற்றுத் தருவார் என போதித்த கருணா அதை ஏற்க மறுத்தவர்களுக்கு அடியும் உதையும் கொடுத்து பங்கருக்குள் தள்ளி சித்திரவதை செய்தார். இன்று ராஜபக்ச சகோதரர்கள் தமிழ் மக்களுக்கு எல்லாம் பெற்று தருவார்கள் எனறு பிரச்சாரம் செய்கிறார். இந்த போதனைகளை ஏற்க மறுப்பவர்களை அவர் அதே புலிப்பாணியில் கையாள்கிறார்.

இவரது ஆயுத அடாவடித்தனத்தின் மூலம் எந்த மக்களுக்கு அநியாயங்களை புரிந்தாரோ அந்த மக்களை பிரதிநிதித்துவம் செய்ய இன்றைய அரசு முயல்வதை மக்கள் வெறுத்து நிற்கின்றனர். அது மட்டுமல்ல எதிர் வரும் தேர்தல்களில் ஆயுத வன்முறைகள் மூலம் வாக்குப் பெட்டிகளை நிரப்புவதற்கு கருணாவும் அவரது அடியாட்களும் அரச இயந்திரத்தின் உதவியுடனும் தயாராகி வருவதை உணர்ந்தும் உள்ளனர்.

மன்னாரில் மீள்குடியேற்ற இரண்டாம் கட்ட வேலைகள் திங்கள் முதல் ஆரம்பம்

new_welfare.pngயுத்தம் காரணமாக மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் இரண்டாம் கட்ட நடவடிக்கை எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மீள்குடியேற்ற 1 ஆம் கட்ட நடவடிக்கை மன்னார் முசலி கிராமத்தில் நடைபெற்றது. இடம்பெயர்ந்து வந்த மக்களை மீளக் குடியேற்றும் அரசின் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

இடம்பெயர்ந்த சகல மக்களும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்பட வேண்டும் என்பதே அரசின் திட்டமாகும். இதேபோல வன்னிப்பகுதிகளில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள்.

அதற்கு முன்னர் அவர்களின் இருப்பிடங்களில் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றப்பட வேண்டும். அந்தப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அது முடிவடைந்து கண்ணிவெடிகள் அகற்றப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அந்த மக்களின் மீள்குடியேற்றப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

நேற்று இரவு மட்டக்களப்பில் “வார உரைகல்” பத்திரிகை ஆசிரியர் மீது தாக்குதல்

vaarauraika.jpgகாத்தான்குடி பிரதேசத்தில் டீன் வீதியில் இருந்து வெளிவரும் ‘வார உரைகல்’ வார இதழின் ஆசிரியர் புவி ரஹ்மத்துல்லா இனந்தெரியாத ஆயுதக்குழுவினரால் தாக்கப்பட்டுள்ளதுடன் அலுவலகமும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.  நேற்று புதன்கிழமை இரவு 10.30மணியளவில் இவரது வீட்டுக்கு முகத்தை மூடியநிலையில் வந்த ஆயுதக்குழுவினர் இவர் மீது சரமாரியான தாக்குதலை நடத்தியுள்ளனர். அத்துடன் அவரது வீட்டுடன் இணைந்ததாகவுள்ள அலுவலகத்துக்குள்ளும் நுழைந்த ஆயுதக்குழுவினர் அங்கிருந்த கணணி உட்பட அலுவலக ஆவணங்களை தீயிட்டு கொளுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். ரயில் சேவை. பூர்வாங்கப் பணிகள் இன்று ஜனாதிபதியால் ஆரம்பம்

mahinda-rajapaksha.jpgயாழ்ப்பா ணத்துக்கான ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான பூர்வாங்கப் பணிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (23) ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்படுகின்றன. இதன் போது வடக்கிற்கான ரயில் சேவையை திரும்பவும் ஆரம்பிப்பதற்கென தேசிய செயலகமொன்றும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு கூறியது.

கொழும்பு- யாழ்ப்பாணத்துக்கிடையிலான யாழ் தேவி ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கென தேசிய மட்டத்தில் சகல மக்களினதும் பங்களிப்பு பெறப்படவுள்ளது. பொதுமக்களின் உதவியுடன் 34 ரயில் நிலையங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ளதோடு யாழ். ரயில் நிலையத்தை புனரமைக்கும் பணிகளை அம்பாந்தோட்டை மக்களும் கிளிநொச்சி ரயில் நிலையத்தை அமைக்கும் பணிகளை மாத்தறை மக்களும் பொறுப்பேற்கவுள்ளனர்.

இதேவேளை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான ரயில் அனுமதிச் சீட்டுக்கள் விற்பனை செய்தவன் மூலம் வடக்கு ரயில் சேவை ஆரம்பிப்பதற்கான நிதி திரட்டப்பட உள்ளது. ஒரு டிக்கெட்டுக்கு 400 ரூபா அறவிடப்படவுள்ளது.  யாழ் ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட்ட பின் இந்த அனுமதிச் சீட்டைப் பயன்படுத்தி யாழ். செல்ல அனுமதி வழங்கப்படும். அனுமதிச்சீட்டு விநியோகத்தையும் ஜனாதிபதி இன்று (23) ஆரம்பித்து வைப்பார்.

நலன்புரி முகாம்களிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோரை உறவினர்களுடன் சென்று வசிக்க அனுமதி

red-cr.jpgஇடம் பெயர்ந்து வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோரை முகாமுக்கு வெளியே உறவினர்களுடன் சென்று வசிக்க அனுமதிப்பதென்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முகாமுக்கு வெளியே தமது உறவினர்களுடன் சுதந்திரமாக வசிப்பதற்கு 60 வயதுக்கு மேற்பட்டோரை அனுமதிக்க முடியுமென்று வவுனியா அரச அதிபர் திருமதி பி.எஸ்.எப் சாள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியாவிலுள்ள 15 இடைத்தங்கல் முகாம்களில் தற்போது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 31,504 பேர் உள்ளனர். இடம் பெயர்ந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர் தமது உறவினர்களின் உதவியின்றி தமது வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாத நிலையில் உள்ளனர். இதனை கவனத்தில் கொண்டு அவர்களது உறவினர்களுடன் சென்று வசிப்பதற்கு அனுமதித்துள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார்.

ஏற்கனவே 60 வயதுக்கு மேற்பட்டவர்களை விடுவித்துள்ளோம். இனங்காணப்பட்ட மேலும் 73 பேர் ஒரு முகாமில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பெற்றோரை தவறவிட்ட 4 சிறுவர்கள் மீண்டும் தமது உறவினரை கண்டுபிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு தற்போது அவர்கள் தமது பெற்றோருடன் இணைந்துள்ளனர்.

இன்னும் சில சிறுவர்களின் பெற்றோரை தேடிவருகிறோம். இவ்வாறு உறவுகளை தவறவிட்டவர்களுக்கும் உதவும் வகையில் தேவையான தகவல்களை வழங்கவென நேரடித் தகவல் தொடர்பாடல் வசதியொன்றை அரசாங்கம் நடைமுறைப் படுத்தவுள்ளதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.