அறிக்கைகள்

அறிக்கைகள்

கட்சிகள் அமைப்புகள் நிறுவனங்கள் வெளியிடும் அறிக்கைகள்

கருத்துக்களை அடக்கவோ அழிக்கவோ முற்படுவது கடும் கண்டனத்துக்குரியதாகும்.

daglas.jpg
பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தமொன்று நடைபெறுகையில் ஊடகங்கள் சமூக அக்கறையோடும் தேவையற்ற பதற்றத்துக்கு இடம்தராத வகையிலும் பணியாற்ற வேண்டும். அதேவேளையில் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கருவிகொண்டு அழிப்பது, அச்சுறுத்துவது, ஊடக நிறுவனங்களைத் தாக்குவது போன்ற மிலேச்சத்தனமான செயற்பாடுகளை எவரும் அனுமதிக்க முடியாது. இவ்வாறான சம்பவங்கள் மிக வன்மையான கண்டனத்துக்குரியவையாகும் என்று செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது கண்டனச் செய்தியில் தெரிவித்துள்ளார்.  ஒவ்வொருவருக்கும் கருத்துச் சொல்லும் சுதந்திரம் உண்டு. அதை இன்னொரு கருத்தினால் எதிர்கொள்வதே சரியானதாகும். மாறாக ஆயுதங்களைக் கொண்டு கருத்துக்களை அடக்கவோ அழிக்கவோ முற்படுவது கடும் கண்டனத்துக்குரியதாகும்.

அது ஒருவகையில் இயலாமையின் வெளிப்பாடுமாகும். பத்திரிகை விநியோகங்களுக்குத் தடை விதிப்பது, அச்சுறுத்துவது, ஊடக நிறுவனங்களைத் தாக்குவது ஊடகவியலாளர்களைக் கொலை செய்வது என்பன கருத்துக்களின் குரல் வளையை நெரிக்கின்ற கொடூரமாகும். இதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அண்மையில் எம்.ரி.வி. நிறுவனம் தாக்கப்பட்டது, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டது போன்ற சம்பவங்கள் எமக்கு அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.

இவ்வாறான சம்பவங்கள் மேலும் தொடராதிருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம். மக்களுக்கு செய்திகளையும் நாட்டு நடப்புக்களையும் அறிந்து கொள்ளும் உரிமையை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும். அதற்காக ஊடகங்கள் ஆற்றும் பணி மகத்தானதாகும். கருத்து ரீதியாக விமர்சனங்கள் இருக்கின்றபோதும் இன்னொருவரின் கருத்துச் சொல்லும் சுதந்திரத்தை ஈ.பி.டி.பி. யினராகிய நாம் என்றும் மதிக்கின்றோம். எனவே, நடைபெற்றுள்ள கசப்பான மற்றும் துயரமான சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தவிரவும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது என்பதையும் உரியவர்கள் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சண்டே லீடர் ஆசிரியரின் படுகொலையை தேசம்நெற் வன்மையாகக் கண்டிக்கிறது. : த ஜெயபாலன்

lasantha-02.jpgஇலங்கை அரசாங்கம் தொடர்பாகவும் தற்போது முன்னெடுக்கப்படும் யுத்தம் தொடர்பாகவும் மிகுந்த விமர்சனத்தைக் கொண்டிருந்த லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையை தேசம்நெற் வன்மையாகக் கண்டிக்கிறது. ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் இலங்கையில் நாளாந்த நிகழ்வுகளாகி வருகின்றது. ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடுகளில் ஒன்றாக இலங்கையும் தற்போது உள்ளது என்பதை லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளது.

இன்று காலை துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சண்டே லீடரின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க பி.பகல. 2 மணியளவில் மரணமடைந்தார்.

கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெகிவளை – அத்துருகிரிய வீதியில் இன்று வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில் லசந்த விக்கிரமதுங்க மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் கடுமையான காயமடைந்த அவர், களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

அலுவலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து பிரதி புதன்கிழமை தோறும் வெளிவரும் “மோர்ணிங் லீடர்” வார ஏட்டின் ஆசிரியராகவும் லசந்த விக்கிரதுங்க உள்ளார்.

சண்டேலீடர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் மூலம் தனது நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்பட்டதாகக் கூறி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ச வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ‘மிக்’ விமான கொள்வனவில் முறைகேடு இடம்பெற்றதாக அவதூறான செய்திகள் வெளியிட்டதால் தனக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்த கோதபாய ராஜபக்ச லண்டே லிடர் வெளியீட்டாளர்களுக்கும் அதன் ஆசியிரயர் லசந்த விக்கிரமதுங்கவுக்கும் எதிராக வழக்கு தொடுத்திருந்தார். அவ்வழக்கில் கோதாபய ராஜபக்ஷ பற்றிய செய்திகளை வெளியிடக் கூடாதென “சண்டே லீடர்’ பத்திரிகைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் நடுப்பகுதியில் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

நீதிமன்றத்தின் இவ்வுத்தரவைக் கண்டித்த பாரிஸை தளமாகக் கொண்டியங்கும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு (Reporters Without Border) ‘இலங்கையில் ஊடகங்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகள் பெரும் கவலையளிக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிரான செய்திகளையும் ஒளி, ஒலிபரப்பு மற்றும் பிரசுரம் செய்யும் உரிமை ஊடகங்களுக்கு உண்டு.’ என அப்போது தெரிவித்து இருந்தது.

சண்டெ லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு 24 மணிநேரத்திற்கு முன் ஜனவரி 6 அன்று மகாராஜா நிறுவனத்தின் சிரச தொலைக்காட்சி தாக்குதலுக்கு உள்ளானது. மேலும் கடந்த ஆண்டு சண்டே லீடர் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டதும் தெரிந்ததே.

இலங்கையில் கடந்த இரு தசாப்தங்களில், 50 க்கும் அதிகமான ஊடகவியலாளர்களும் கலைஞர்களும் நேரடியாக தமது கருத்துக்களுக்காக கொல்லப்பட்டமை ஆவணப்படுத்தப்பட்டு உள்ளதாக War of Words : Freedom of Expression in South Asia – May 2005 அறிக்கையில் Article 19  என்ற ஊடக உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்து உள்ளது.
 
Reporters Without Border அமைப்பு நாடுகளை பத்திரிகைச் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்தியுள்ளது. 167 நாடுகளைக் கொண்ட 2005ம் ஆண்டு வரிசைப்படுத்தலில் இலங்கை 115வது இடத்தில் உள்ளமை இலங்கையில் ஊடகங்களின் நிலையை விளங்கிக் கொள்ள உதவும்.

சண்டே லீடர் ஆசிரியரின் படுகொலையைக் கண்டித்தும் ஊடகங்கள் ஊடகவியலாளருக்கு எதிரான தாக்குதலுக்கு மற்றுப்புள்ளி வைக்கவும் கோரும் அடையாளப் போராட்டம் ஒன்றை செய்வதற்கு தேசம்நெற் முயற்சிக்கிறது. மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

கடைசித் தமிழன் என்கிற கடைசிப் புலி உள்ளவரையில் அங்கே விடுதலைப் போர் தொடரும் – திருமாவளவன்

thiruma.jpg
இனவாதிகளின் கும்மாளத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் தமிழ் இனத்திற்கு எதிராக இந்திய அரசின் பச்சைத் துரோகமே முதன்மையான காரணமாகும் என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

கிளிநொச்சியை இலங்கைப்படை கைப்பற்றிவிட்டதென ராஜபக்ஷவும் தமிழின துரோகக் கும்பலும் கும்மாளம் அடிக்கின்றனர். ஆறேழு நாடுகளின் படைத் துணையோடு ஆறேழு மாதங்களாக பெரும்பாடுபட்டு தற்போது புலிகள் பின்வாங்கிய நிலையில், ஆயிரக்கணக்கான சிங்கள வீரர்களை பலிக்கொடுத்தும் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தும் கிளிநொச்சியை கைப்பற்றியுள்ளோம் என்று கொக்கரிக்கின்றனர்.  இந்த நிகழ்வால் புலிகள் வீழ்ந்து விட்டதாகவும், போர் ஓய்ந்துவிட்டதாகவும் கருதிவிட முடியாது.

படையினரை விரட்டி பல பகுதிகளை கைப்பற்றுவதும் , பின்னர் கைவிடுவதும் புலிகளின் வரலாற்றில் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளே. ஆகவே, பின்வாங்கல் என்பது பின்னடைவு ஆகாது. இனவாதிகளின் இந்தக் கும்மாளத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் தமிழ் இனத்திற்கு எதிராக இந்திய அரசின் பச்சைத் துரோகமே முதன்மையானதாகும். விடுதலைப் புலிகளோடு தனியாக மோத வக்கில்லாத இங்கை அரசு இந்திய அரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் துணையோடு ஒற்றையாய் எதிர்த்து நிற்கும் விடுதலைப்புலிகளை பின்வாங்கச் செய்திருப்பது பெரிய வெற்றியாகாது. தாம் எதிர்பாத்தது நடந்துவிட்டதெனவும், தமது கனவு பலித்துவிட்டதெனவும் இந்திய அரசும் மகிழ்ச்சியடையலாம்.

பத்துக்கோடி தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டு சிங்களவர்களுக்கு முட்டுக்கொடுக்கும் இந்திய அரசின் துரோகப் போக்கை எந்தக் காலத்திலும் தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்க முடியாது. தமிழ் இனத்தின் முதுபெரும் தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி அவர்களின் தலைமையில் தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் இந்திய தலைமை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த முறையிட்டு ஒருமாத காலம் உருண்டோடிவிட்டது.

வெளிவிவகாரத்துறை அமைச்சர் விரைவில் கொழும்பு சென்று அதற்கான முயற்சிகளை மேற்கொள்வார் என உறுதியளித்தும் கூட இது வரையில் அதற்கான முனைப்பு ஏதுமில்லை என்பதில் இருந்து இந்திய அரசின் உள்நோக்கம் என்னவென்பது வெளிப்பட்டிருக்கிறது. இந்திய ஆட்சியாளின் இத்தகைய தமிழன துரோகத்தை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை இந்தச் சூழலில் விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது. கடைசித் தமிழன் என்கிற கடைசிப் புலி உள்ளவரையில் அங்கே விடுதலைப் போர் தொடரும் என்பதில் ஐயமில்லை இனப்பகையும் , துரோகமும் வீழ்த்தப்பட்டு ஈழம் வென்றெடுக்கப்படும் என்கிற நம்பிக்கை இனமான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது. “மரபு வழி போர்’ முறையிலிருந்து கொரிலா போர் முறைக்கு புலிகள் மாறும் நிலை ஏற்படுமே தவிர கிளிநொச்சியே போரின் எல்லையாக மாறிவிடாது என்பதை இலங்கை அரசை தாங்கிப்பிடிக்கும் இந்திய அரசுக்கும் காலம் விரைவில் உணர்த்தும்.