::முஸ்லீம் விடயங்கள்

::முஸ்லீம் விடயங்கள்

முஸ்லீம் விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

அமெரிக்க – பிரித்தானியாவின் ஆதரவோடு இஸ்ரேலின் இனவெறித் தாக்குதல்: காஸா மருத்துவமனை மீது தாக்குதல் 500 பேர் பலி! அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுடனான சந்திப்பை பாலஸ்தினிய விடுதலை அமைப்பின் தலைவர் அப்பாஸ் ரத்துசெய்துள்ளார்:

ஒக்ரோபர் 17 இன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகுவைச் சந்திக்கவும் அரபு நாடுகளின் ஆதரவைத் திரட்டவும் புறப்பட்டுள்ள நிலையில் இச்சந்திப்பு ஒருதலைப் பட்சமாக பாலஸ்தின, ஜோர்டன், எகிப்திய தலைமைகளால் ரத்துசெய்யப்பட்டு உள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் மேற்கு நாடுகளும் வழங்கியுள்ள கேள்வியற்ற ஆதரவுடன் பாலஸ்தினிய அரபுக்களை முஸ்லீம்களை அழிக்கும் திட்டம் மிக வேகமாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே மத்திய கிழக்கு அரசுத் தலைமைகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

மத்திய கிழக்கில் பாலஸ்தினியர்களுக்கான ஆதரவு எப்போதுமே இருந்துள்ளது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகள் அண்மைக் காலம்வரை மேற்கு நாடுகளுடனும் இஸ்ரேலுடன் மிக நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. ஆனால் ஓக்ரோபர் 7ம் திகதி ஹமாஸ் இஸ்ரேலுக்குள் புகந்து நடத்திய தாக்குதலும் இஸ்ரேல் தொடுத்த இன அழிப்பு யுத்தமும் இந்த உறவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் இந்த இன அழிப்பு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு 12 நாட்களாகியும் உத்தியோக பூர்வமான எந்தக் குரல்களும் வெளிப்படுத்தப்படவில்லை.

நேற்று ஒக்ரோபர் 16 ஐநா வின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஸ்யா கொண்டுவந்த யுத்தநிறுத்தத் தீர்மானத்தை அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் எதிர்த்திருந்தது. அதனைத் தொடர்ந்து பிரேசில் கொண்டு வந்த தீர்மானத்திற்கும் இந்நாடுகள் வாக்களிக்கவில்லை. பாலஸ்தினத்தில் நடக்கும் இன அழிப்பை ஊக்கப்படுத்துவதுடன் அதற்கு எண்ணை ஊற்றும் வகையில் அமெரிக்கா தன்னுடைய தாக்குதல் கப்பலை இஸ்ரேல் நோக்கி நகர்த்தி உள்ளது.

இன்று சில மணிநேரங்களுக்கு முன் காஸாவில் உள்ள அல் அஹாலி பப்ரிஸ்ற் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய அடிப்படை மனித விழுமியங்களுக்கு மாறான தாக்குதல் உலக நாடுகளின் பார்வையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய இன அழிப்பு இராணுவம் ஈவிரக்கமற்ற முறையில் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என்று பாரபட்சமில்லாத தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும் காஸவில் வாழும் மக்குளுக்கான அடிப்படைத் தேவைகளான தண்ணீர், உணவு மற்றும் மருந்து விநியோகத்தையும் முற்றாக தடுத்து அவர்களை மரணத்தின் விழிம்புக்குள் தள்ளிக்கொண்டுள்ளது. பாலஸ்தினத்தில் கடந்த 12 நாட்களில் கொல்லப்பட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்கள்.

நூறு தமிழரைக் கொன்றால் அதில் ஒரு ஈழப் போராளியும் இருப்பான் என்று இஸ்ரேலின் புலனாய்வுத்துறை அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தனவுக்கு ஆலொசணை வழங்கியிருந்தது. அதே செயற்திட்டத்தையே இஸ்ரேல் பாலஸ்தினத்திலும் மேற்கொண்டு வருகின்றது. அதற்கு அமெரிக்க – பிரித்தானிய மேற்கு நாட்டு தலைமைகள் தொடர்ச்சியாக ஆதரவளிக்கின்றனர்.

இந்த மேற்கு நாடுகள் உலகில் நடைபெறும் பெரும்பாலும் அனைத்து யுத்தங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருப்பதுடன் இந்த யுத்தங்களை ஆரம்பிப்பவர்களாகவும் அதனை எண்ணையூற்றி வளர்ப்பவர்களாகவும் உள்ளனர். அது மட்டுமல்லாமல் அப்கானிஸ்தானில் அல்கைடாவை அமெரிக்கா உருவாக்கியது. அன்றிருந்த ரஸ்ய சார்பான மொஜஹிதீன்களுக்கு எதிராக அமெரிக்கா ஒசாமா பின் லாடனை உருவாக்கியது. அமெரிக்கா கற்றுக்கொடுத்ததை அல்கைடா ஒரு கட்டத்தில் அமெரிக்காவுக்கு எதிராக பயன்படுத்திய போது அமெரிக்கா அல்கைடாவை அழிக்க முனைந்தது.

அதே போல் யஸீர் அரபாத்தின் தலைமையிலான பாலஸ்தின விடுதலை அமைப்பை பலவீனப்படுத்த இஸ்ரேல் எண்பதுக்களில் உதவி அமைப்பாக செயற்பட்ட அமைப்பை ஹமாஸாக உருவாக்கி கொம்பு சீவிவிட்டது. சிரியாவிலும் அமெரிக்கா ஐஎஸ்ஐஎஸ் அடிப்படைவாதிகளுக்கு ஆயதங்களை விநியோகித்தது. பெரும்பாலான இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை உருவாக்கி வளர்த்துவிட்டவர்கள் முஸ்லீம்கள் அல்ல. அமெரிகாவினதும் அதன் நேசநாடுகளினதும் புலனாய்வுப் பிரிவினரே. காலனித்துவகால பிரித்தாளும் தந்திரத்தின் தொடர்ச்சியே இது. நவகாலனித்துவம்.

மனித உரிமைகள் என்று முதலைக்கண்ணீர் விடும் அமெரிக்க – பிரித்தானிய நேசநாடுகள் மிகமோசமான மனித அவலங்களுக்கு பொறுப்புடையவர்கள். அப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா ஆகிய நாடுகளிலும் மத்திய கிழக்கிலும் தங்களுடைய சொந்த நலன்களுக்காக தலையீடு செய்து அங்கு மிகப்பெரும் மனித அவலங்களை ஏற்படுத்தினர். இந்நாடுகளின் தலைவர்கள் தங்களுடைய அரசியல் லாபங்களுக்காகவும் நலன்களுக்காகவும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாட்டு மக்களின் பெயரில் வலிந்து தாக்குதல் நடத்தி உலக சமாதானத்தை சீர்குலைக்கின்றனர். தங்கள் நாடுகளில் தங்களுடைய இருப்புக்கு ஆபத்து வருகின்ற போது அவர்களுடைய வாக்கு வங்கி சரிகின்ற போது இவர்கள் உலகின் பதட்டமான பகுதியில் யுத்தத்தை ஆரம்பிப்பார்கள்.

பிரித்தானியாவின் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பிரதமராக இருந்த போது தன்னுடைய பார்டிகேற்றை மறைக்க உக்ரைன் போருக்கு ஆயதங்களை வாரி வழங்கினார். உக்ரைனுக்கு ஆயதம் விற்று லாபமடைந்த ஜோ பைடன் குடும்பம் உக்ரைன் போரில் உரிந்துபோட்டு ஆடுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. இப்போது மோசடி, லஞ்சம், ஊழலுக்கு பெயர் போன இஸ்ரேலிய பிரதமருக்கு இஸ்ரேலிலேயே பல வழக்குகள் உள்ளது. இதில் இருந்து தப்பிக்கொள்ளவே அவர் ஹமாஸைச் சீண்டிவிட்டு இந்த யுத்தத்தில் ஆடாத ஆட்டம் ஆடுகின்றார்.

இதனாலேயே தற்போது உலகம் முழவதும் அமெரிக்கா – பிரித்தானிய நேச நாடுகளுக்கு எதிரான உணர்வுகள் கிளர்ந்துள்ளது. உலகம் முழவதும் இந்நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகங்களுக்கு முன் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற ஆரம்பித்துள்ளது.

இந்த யுத்தம் உடனடியாக நிறுத்தப்படுவதுடன், இவற்றுக்கான மூலகாரணமாக இஸ்ரேலிய ஒடுக்குமுறை பாலஸ்தினிய பிரதேசங்கள் மீதான ஆக்கிரமிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். சுதந்திர பாலஸ்தீனம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அது நடைபெறாவிட்டால் ஹமாஸ் அழிக்கப்பட்டாலும் அதனிலும் மோசமான அமைப்பொன்று இன்னும் சில ஆண்டுகளில் உருவாகும். இஸ்ரேலின் அடக்குமுறைகளும் ஆக்கிரமிப்புகளும் ஹமாஸிலும் பார்க்க பல மடங்கு தீவிரமான தீவிரவாதிகளை உருவாக்கும். உலக அமைதி கேள்விக்குறியாகவே இருக்கும்.

பாலஸ்தீன விடுதலைக்கான போரின் புதிய பரிமாணம்: பாலஸ்தீன – இஸ்ரேல் யுத்தம்

48 மணி நேரங்களைக் கடந்து நடக்கின்ற பாலஸ்தீன – இஸ்ரேல் யுத்தத்தில் இரு தரப்பிலும் 2000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. 5000 பேர் வரை காயப்பட்டுள்ளனர். ஒக்ரோபர் 7 சனிக்கிழமை காலை ஆறரை மணி அளவில் பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடிவரும் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள தென் பகுதியை தரை, கடல், ஆகாய மார்க்கமாக தாக்க ஆரம்பித்தனர். எவரும் எதிர்பாத்திராத வகையில் மிகத்திட்டமிட்ட முறையில் இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.

அல் அக்சா ப்ளட் – Al Aqsa Flood என்று பெயரிலியே ஹமாஸ் இத்தாக்குதலை நடத்தியது. காஸா மக்களின் புனிதத்தலமான அல் அக்சா மசூதிக்குள் இஸ்ரேலிய இராணுவப் பொலிஸார் நுழைந்து சோதணை நடத்திய அத்துமீறலுக்காகவே இத்தாக்குதல் நடத்தப்படுவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இந்தியாவில் சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவிலுக்குள் நுழைந்து இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியதற்காகவே அன்றைய பிரதர் இந்திராகாந்தி சீக்கிய மெய்பாதுகாப்பாளரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அல் அக்சா மசூதி மட்டுமல்ல தொடர்ச்சியான மிக மோசமான அடக்குமுறை இத்தாக்குதலுக்கு காரணமாய் அமைந்துள்ளது.

1948 மே 14இல் அமெரிக்காவின் உதவியுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட இஸ்ரேல் என்ற நாட்டின் வரலாற்றில் நடந்த மிகப் பாரிய தாக்குதல் இதுவாகும். இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை உள்ளடக்கி மதில்களை எழுப்பி இருந்தது. இம்மதில்கள் உடைக்கப்பட்டு தரையாலும் பறக்கும் மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தியும் கடலாலும் ஹமாஸ் தாக்குதலை நடத்தி இருந்தது. இத்தாக்குதல்களில் 25க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தினர், பொலிஸார் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். இன்னும் பல நூறுபேருக்கு என்ன நடந்தது என்பது உறுதிப்படுத்தப்படாமல் உள்ளது. இஸ்ரேலின் வரலாற்றில் இவ்வாறான பெரும் தொகை இழப்பு அந்நாட்டுக்கு முன்எப்போதும் ஏற்பட்டதில்லை. உலகின் பாதுகாப்பு மிக நவீனமயமாக்கப்பட்டு, மிகப் பலமான, மிக வலுவான புலனாய்வு கட்டமைப்பைக் கொண்ட நாடாக இருக்கும் இஸ்ரேல் முற்றிலும் எதிர்பாராத தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இது இஸ்ரேல் மற்றும் மேற்கு நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகளுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம். அவர்கள் புலனாய்வுக்கும் பாதுகாப்புக்கும் கொட்டிய பில்லியன் டொலர்கள் எவ்வித பயனுமற்றதாக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஆதரவையும் ஈரானின் ஆதரவையும் தவிர தொழில்நுட்பமோ பணபலமோ இல்லாமல் மிக இரகசியமாக இவ்வளவு பெரிய தாக்குதலை உலகின் மிகப் பலமான பாதுகாப்பான நாட்டுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய தாக்குதல் இஸ்ரேலையும் அதன் ஆதரவு சக்திகளான அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் உலுப்பியுள்ளது என்றால் மிகையல்ல. மனித உரிமைகள் பற்றி நீலிக் கண்ணீர் வடிக்கும் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இஸ்ரேலின் பாலஸ்தினியர்கள் மீதான இனச்சுத்திகரிப்பை கண்டிப்பதில்லை. ஹமாஸ் றொக்கட் தாக்குதலை நடத்தி ஓரிரு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டால் இஸ்ரேல் பதில் தாக்குதலை நடாத்தி பல நூறு பலஸ்தீனியர்களை படுகொலை செய்வர். இப்பலஸ்தீனியர்கள் கொல்லப்படுவது பற்றி மேற்கு நாடுகள் அலட்டிக்கொள்வதில்லை. இப்பலஸ்தினியர்களுக்கு மனித உரிமைகள் இருப்பதாகவே மேற்கு நாடுகள் கருதுவதில்லை.

தற்போதைய தாக்குதல் தொடர்பில்: இஸ்ரேல் மிக மோசமான பதில் தாக்குதலை நடத்தும் என்றும் தங்கள் பதிலடியில் ஹமாஸின் இடங்களை சுக்குநூறாக்குவோம் என்றும் ஆட்சியில் உள்ள வலதுசாரி இனவாதத் தலைவரான பிரதமர் நெத்தன்யாகு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் காஸாவில் உள்ள மக்களை வெளியேறும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் காஸா உலகின் சனத்தொகை அடர்த்தி மிகக் கூடிய இடம் மட்டுமல்ல கடந்த 17 ஆண்டுகளாக இஸ்ரேலின் முற்றுகைக்குட்பட்ட திறந்தவெளி சிறைச்சாலையாகவும் சர்வதேசத்தினால் உணரப்படுகிறது. இஸ்ரேலிய இனவாதப் பிரதமர் காஸாவை முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு அவர்களை வெளியேறும்படி கோரியதை எந்த மேற்கு நாடுகளும் கண்டிக்கவில்லை. இனவாதப் பிரதமர் நெத்தன்யாகு காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கு தயாராகுனிறார் என்கின்ற அச்சம் அரபுலக மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

அண்மைய தாக்குதலில் ஹமாஸ் படையினர் தாங்கள் இஸ்ரேலிய பொதுமக்களைத் தாக்கவில்லை என்றும் பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பாளர்களையே தாக்கியதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த ஆக்கிரமிப்பாளர்கள் பொதுமக்கள் அல்ல என்றும் ஆயதம் தாங்கிய ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் அவர்கள் சர்வதேச வரையறுப்புகளின் படி பொதுமக்களாக கருதப்பட மாட்டார்கள் என்றும் ஹமாஸ் தனது தாக்குதலையும் படுகொலைகளையும் நியாயப்படுத்தி உள்ளது. இத்தனை வருடங்களாக இஸரேலிய படைகள் பாலஸ்தினியர்களை வகைதொகையில்லாமல் படுகொலை செய்து வருகின்றது. அதற்கு இவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்றும் ஹமாஸ் கேள்வி எழுப்புகின்றது.

பாலஸ்தினிய – இஸ்ரேல் யுத்தத்தின் பின்னணி:

யுதர்களுக்கு என்றொரு நாடு இல்லாத நிலையில் உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழ்ந்த யுதர்களுக்கு பாலஸதீனத்தில் ஒரு நாட்டை உருவாக்க சியோனிச இயக்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அன்றைய காலகட்டத்தில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலேயே பாலஸ்தீனமும் இருந்தது. காலனித்துவ நாடுகள் அனைத்தும் கூறுபடுத்தப்பட்டு சூறையாடப்பட்டும் தங்கள் கால்களில் நிற்க முடியாமல் பலவீனப்படுத்தப்பட்டும் காலனித்துவ ஆட்சியாளர்களால் ஆக்கப்பட்டமை வரலாறு. இந்த காலனித்துவ சுரண்டலின் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் இன்றும் மூன்றாம் உலக நாடுகள் யுத்தம், வறுமை போன்றவற்றினால் சீரழிந்து கொண்டிருக்கின்றது. ஆபிரிக்க கவிஞனொருவன் சுட்டிக்காட்டியது: அவர்கள் வரும்போது எங்களிடம் எல்லாம் இருந்தது. அவர்கள் பைபிளைக் கொண்டு வந்து தந்துவிட்டு எங்களிடம் இருந்த எல்லாவற்றையும் எடுத்துச் சென்றுவிட்டனர். இப்போது எங்களிடம் பைபிள் மட்டும் தான் இருக்கின்றது. வேறு எதுவும் இல்லை.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் அவ்வாறு பாதிக்கப்பட்ட பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த பாலஸ்தினத்தில், அமெரிக்காவின் உதவியுடன் 1948 மே 14 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. பாலஸ்தின மண் பறிக்கப்பட்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டதில் மத்திய கிழக்கு நாடுகள் மிகுந்த அதிருப்தியடைந்திருந்தன. அன்று முதல் மதிய கிழக்கு மிகப் பதட்டமான யுத்தப் பிரதேசமாகவே இருந்து வருகின்றது. இப்பகுதி பல யுத்தங்களைக் கண்டுள்ளது. ஆனால் இந்த யுத்தங்கள் எதிலுமே இஸ்ரேலியர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் 24 மணி நேரத்தில் இவ்வளவு பெரும் இழப்பையோ தாக்குதலையோ சந்தித்து இருக்கவில்லை. இஸ்ரேலின் எல்லைக்கு வெளியே நடந்த யுத்தத்தை ஹமாஸ் தற்போது இஸ்ரேலுக்கு உள்ளேயே கொண்டு சென்றுள்ளது.

பாலஸ்தீனிய மண்ணில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது முதல் அம்மண்ணில் வாழ்ந்த பாலஸ்தினிய மக்களை இஸ்ரேல் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே நடத்தி வந்தனர். அப்பகுதியில் வாழ்ந்த பாலஸ்தினியர்கள் வேறுநாடுகளுக்கு கல்வி மற்றும் நோக்கங்களுக்காகச் சென்ற போது அவர்கள் மீண்டும் தங்கள் பிரதேசங்களுக்கு வரும் உரிமை மறுக்கப்பட்டது. இஸ்ரேல் கடந்த 75 ஆண்டுகளாக பலஸ்தினியர்களை இனச்சுத்திகரிப்புச் செய்வதிலேயே குறியாக இருந்தது. இன்றும் தொடர்கின்றது.
இஸ்ரேலினுடைய புலனாய்வுப் படை மொசாட் அதன் படுமோசமான கொலைத் திட்டமிடல்களுக்கு மிகப் பெயர்பெற்றது. அவர்களையே ஹமாஸ் உச்சிக்கொண்டு இத்தாக்குதலை ஏற்படுத்தியதுடன் தொடர்ந்தும் ஆயுத தளபாடங்களை மீள் விநியோகம் செய்து புதிய ஆக்கிரப்பு நகரம் ஒன்றைக் கைப்பற்றி உள்ளனர்.

ஐந்து தசாப்தங்களுக்கு முன் இஸ்ரேலின் யொம் கிப்பூர் பகுதியில் எகிப்தின் அன்வர் சதாத் யுத்தத்தைத் தொடுத்த அதே பாணியில் ஹமாஸ் அதே தினத்தில் யுத்தத்தைத் தொடுத்தனர். முன்னைய யுத்தத்தில் எகிப்து தோல்வியடைந்தது. இந்த யுத்தத்தில் ஹமாஸினால் ஒரு போதும் யுத்தத்தை வெல்ல முடியாது. ஹமாஸ் ஒரு ஆயத அமைப்பு மட்டுமே. ஆனால் ஹமாஸ் பாலஸ்தினிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்திவிட்டது. மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேல் உடனும் மேற்கு நாடுகளுடனும் நல்லுறவைக் கொண்டிருந்த போதும் மத்திய கிழக்கு அராபிய மக்கள் பாலஸ்தினியர்கள் அனைவருமே ஹமாஸின் தாக்குதலைக் கொண்டாடுகின்றனர். பாலஸ்தின மக்களை தொடர்ந்தும் அடக்கி ஒடுக்கினால் இவ்வாறான தாக்குதல் தவிர்க்க முடியாது என்றும் இந்தப் பிரச்சினையின் காரணத்தைக் கண்டறிந்து அதனைத் தீர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழும்ப ஆரம்பித்துள்ளது.

மூனிச் ஒலிம்பிக் தாக்குதல்:

இஸ்ரேலின் கறுப்பு சனி ஆன தாக்குதலை ஹமாஸ் மிக நிதானமாக பதிவு செய்து உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் பரவவிட்டது. தற்போது உலகின் அனைத்து ஊடகங்களின் கவனமும் திசை திருப்பப்பட்டுள்ளது. உக்ரைன் யுத்தத்தைப் பற்றியோ, அப்கானிஸதான் நிலநடுக்கத்தில் இரண்டாயிரம் பேருக்கு அதிகமானோர் கொல்லப்பட்டது பற்றியோ ஊடகங்கள் அலட்டிக்கொள்ளவில்லை. ஹமாஸ் உலகத்தை பாலஸ்தீனியர்களின் ஒடுக்குமறை மீது மிகத் திட்டமிட்டு திருப்பியுள்ளது. இவ்வாறான செயலை பாலஸ்தீன விடுதலை அமைப்பு சார்ந்த குழவொன்று 1972இல் மேற்கொண்டது. 8 கறுப்பு செப்ரம்பர் படையணி ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற்ற மூனிச் நகர விளையாட்டுத் திடலுக்குள் புகந்து இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை படுகொலை செய்து 11 வீரர்களை பணயக்கைதிகளாக கைப்பற்றினர். இறுதியில் பணயக் கைதிகளை விடுவிக்கும் முயற்சி தோல்வியடைய பணயக்கைதிகள் கொல்லப்பட்டனர். கறுப்பு செப்ரம்பர் படையினர் ஐவரும் கொல்லப்பட்டனர். மூவர் கைது செய்யப்பட்டனர். அதன் சில வாரங்களில் பாலஸ்தினிய படைகள் ஜேர்மனியின் லுப்தான்ஸா எயர்லைனைக் கடத்தி வைத்து தங்கள் வீரர்களை மீட்டனர்.

இவ்வாறு ஒரு இஸ்ரேலிய இராணுவ வீரரைக் கடத்தி சில நூறு தங்கள் வீரர்களை ஹமாஸ் மீட்டிருந்தது. தற்போது பிந்திக் கிடைக்கும் செய்திகளின் படி ஹமாஸ் 50 இராணுவ வீரர்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமானவர்களை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர். இது இஸ்ரேலிய இராணுவத்துக்கும் மொசாட்டுக்கும் மிகப்பெரும் தலையிடியாக அமைய உள்ளது.

பாலஸ்தீனப் போராட்டமும் ஈழப் போராட்டமும்:

அன்றைய இலங்கை ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஜே ஆர் ஜெயவர்த்தன மிகுந்த இனவாதி என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. ஐக்கிய தேசியக் கட்சி ஒரு இனவாதக் கட்சியாகவே தன்னை கட்டமைத்திருந்தது. ஜே ஆருக்கும் அவரது படைக்கும் ஆலோசனையும் உதவியும் நல்கியது மொசாட். அன்றும் இன்றும் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கு நாடுகளின் சார்பையே எடுத்து வருகின்றது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இவர்களின் நெருங்கிய நட்புகள். நூறு தமிழர்களைக் கொன்றால் அதில் ஒரு ஈழப் போராளியும் கொல்லப்படுவான் என்ற மொசாட்டின் ஆலோசனை எண்பதுக்களில் அன்றைய பத்திரிகைகளில் இடம்பிடித்திருந்தது. இந்தத் தந்திரத்தைத் தான் மொசாட் பாலஸ்தினியர்கள் மீது இன்றும் மேற்கொள்கின்றது. ஜே ஆர் ஜெயவர்த்தனவின் காலத்திலேயே மிக மோசமான இனப்படுகொலைகளும் இனச் சுத்திகரிப்பும் இடம்பெற்றது.

மாறாக இடதுசாரி நிலைப்பாட்டோடு செயற்பட்ட ஈரோஸ் (ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை அமைப்பு) அமைப்பின் லண்டனில் வாழ்ந்த ஸ்தாபகர் இரத்தினசபாபதி மற்றும் புளொட் (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) செயற்பாட்டாளர் மகா உத்தமன் ஆகியோர் பாலஸ்தீன விடுதலை அமைப்போடு தொடர்பைப் பெற்று தங்களுடைய வீரர்களை பயிற்சிகளுக்காக பாலஸ்தீனம் அனுப்பி வைத்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு சிலரும் பாலஸ்தீன விடுதலை அமைப்போடு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஈரோஸ் அமைப்பில் அன்றைய நாட்களில் கணிசமான எண்ணிக்கையானவர்கள் இல்லாததால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமே கூடுதலாக இப்பயிற்சிகளைப் பெற்றனர். இரண்டுக்கும் மேற்பட்ட அணிகள் பிஎல்ஓ பயிற்சி எடுத்தனர். அவர்களில் சிலர் இன்னமும் மேற்குநாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்கின்றனர். இவர்களுடைய பெயர்களுக்கு முன் பிஎல்ஓ என்ற அடைமொழியும் இருக்கும். பாலஸ்தீனத்தில் முதலாவது இஸ்ரேலிய ராங்கை குண்டு வைத்து தகர்த்தது பயிற்சிக்குச் சென்ற புளொட் வீரர் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் உறுதிப்படுத்த முடியவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலை இயக்கும் (ரெலோ) தவிர்ந்த ஏனைய இடதுசார்புடைய போராளிக்குழக்கள் மத்தியில் பாலஸ்தீன விடுதலைக்கு சார்பான நிலைப்பாடு இருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டமும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும் சமாந்தரமாகப் பயணித்த காலம் அது. பாலஸ்தின விடுதலை அமைப்பின் அப்போதைய தலைவர் யஸீர் அரபாத் ஈழப்போராளிகள் மத்தியில் மதிக்கப்பட்ட ஒரு தலைவராக இருந்த காலம்.

ஈழப் போராளி அமைப்புகள் மத்தியில் இருந்த பிளவுகள் போன்ற பாலஸ்தீனப் போராளிகள் மத்தியிலும் பல பிரிவுகள் காணப்பட்டது. அவர்களிடையே முரண்பாடுகள் பகை முரண்பாடுகளும் இருந்தது. சில படுகொலைகளும் இடம்பெற்றுள்ளது. ஆனால் தமிழீ விடுதலைப் புலிகள் போன்று ஏனைய அமைப்புகளை முற்று முழுதாக துடைத்து அழிக்கின்ற அதிகார வெறி பாலஸ்தின விடுதலை போராட்டத்தில் இருக்கவில்லை. மேலும் அங்கு விடுதலைப் போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்ட அளவுக்கு ஈழவிடுதலைப் போராட்டம் மக்கள் மயப்படுத்தப்படவில்லை. மக்கள் வேறு விடுதலைப் போராளிகள் வேறு என்ற நிலை எப்போதும் இருந்தது. சர்வதேசச் சூழல் அதனைக் கையாள்கின்ற அறிவுநிலை ஈழ விடுதலைப் போராட்டத்தை புலிகள் ஏகபோகமாக்கிய பின் இருக்கவில்லை. 1991ற்கு முன் புலிகள் அனைத்து ஈழ விடுதலை அமைப்புகளையும் இல்லாதொழித்து முஸ்லீம்களையும் விரட்டியடித்து இனச்சுத்திகரிப்புச் செய்தனர். அதனால் 2009இல் புலிகளைக் காப்பாற்ற எவரும் இருக்கவில்லை.

தற்போது ஹமாஸ் உடைய தாக்குதலை வரவேற்று இஸ்ரேலையும் அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் முட்டாள்கள் என்று குறிப்பிட்ட ஹிஸ்புல்லா லெபனானின் எல்லையில் இருந்த இஸ்ரேலிய படையினர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். தாங்கள் இந்த யுத்தத்தில் நடுநிலை வகிக்கவில்லை என்றும் ஹமாஸின் தாக்குதலை வரவேற்பதாகவும் அறிவித்துள்ளனர். பாலஸ்தீன விடுதலை இயக்கமும் ஏனை பாலஸ்தீன விடுதலை குழுக்களும் இத்தாக்குதலை கொண்டாடுகின்றனர். இத்தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேலின் மிக முக்கிய எதிரியான ஈரான் இருப்பது பரகசியமானது. ஈரான் இத்தாக்குதல்களைக் கொண்டாடுகின்றது.

மொசாட் புலிகள் இலங்கை இராணுவம்:

இஸ்ரேல் என்ன தான் பாலஸ்தினியர்களை அழித்து அவர்கள் மண்ணில் நாட்டை உருவாக்கி அவர்களை அகதிகளாக வாழ நிர்ப்பந்தித்த போதும் அதே அடக்குமுறைக்கு உள்ளான கணிசமான தமிழர்கள் மத்தியில் யுதர்களுக்கும் இஸ்ரேலுக்கும் ஆதரவான நிலை எப்போதும் இருந்து வந்தது. இஸ்ரேலினுடைய அறிவு, வளம், பலம், எதிரியை அழிக்கும் கைங்கரியங்கள் பற்றி அவர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தத் தவறுவதில்லை. உலகில் தங்களை விடுதலைப் போராளிகளாகக் காட்டிக்கொண்ட புலிகள் மொசாட் இடமும் பயிற்சிகள் பெற்றனர். அதில் ஆச்சரியம் என்னவென்றால் இலங்கை இராணுவத்துக்கும் புலிகளுக்கு ஒரே காலகட்டத்தில் ஒரே இடத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இத்தகவல் ஆதாரபூர்வமாக நூலில் பதிவு செய்யப்பட்டும் உள்ளது.

உலகின் பல பாகங்களிலிருந்தும் நாடற்ற யூதர்கள் கப்பலில் கொண்டு வந்து பாலஸ்தீனத்தில் இறக்கப்பட்ட பாணியில் இதனையொத்த ஒரு முயற்சியை லண்டனில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் மேற்கொண்டனர். அதுவே ‘வணங்கா மண்’ கப்பல் பயணம். இதனை ஆரம்பித்தவர்களில் காலாநிதி நித்தியானந்தனும் ஒருவர். இவர்களின் முட்டாள்தனம் கப்பல் ஏற்பாடு செய்யப்பட்ட தினங்களிலேயே கைவிடப்பட்டு நபர்கள் பயணிப்பதில்லை என்றும் பொருட்களை ஏற்றிச் செல்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இக்கப்பல் பல மாத இழுபறியின் பின் கொழும்புத் துறைமுகத்தையடைந்து கொண்டு சென்ற பொருட்கள் பழுதடைந்த நிலையில் குப்பையாகக் கொட்டப்பட்டது வரலாறு.

பாலஸ்தின – இஸ்ரேல் யுத்தத்தின் உயிரிழப்புகளும் காயப்பட்டவர்களும் கடத்திச் செல்லப்பட்டவர்களும் இச்செய்தி எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் போதே அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இரும்புக் கரம் கொண்டு இராணுவ தாங்கிகளைக் கொண்டு அடக்கி, நவீன தொழில்நுட்பத்தையும், புலனாய்வையும் கொண்டு ஒடுக்கி ஆள முடியாது என்பதை பாலஸ்தினிய விடுதலை போராளிகள் நிரூபித்துள்ளனர். பாலஸ்தினியர்களுடைய பிரச்சினையின் வேரை அறிந்து அவர்களுடைய சுயாட்சியை உறுதிப்படுத்துவதைத் தவிர இஸ்ரேல் சுமூகமாக வாழ்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை இஸ்ரேலியர்களும் இஸ்ரேலும் உணர்ந்து கொள்வது தவிர்க்க முடியாது. இத்தாக்குதல்களுக்கு பழிவாங்க இஸ்ரேல் பல ஆயிரம் பாலஸ்தீனியர்களைப் படுகொலை செய்யலாம். ஆனால் அவை இப்பிரச்சினைக்கு தீர்வு அல்ல. இஸ்ரேலின் சமாதானத்துக்கு பாலஸ்தினியர்களின் சுயாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். பாலஸ்தீனம் தனிநாடாக வேண்டும்.

நீதி அமைச்சர் அலி சப்ரி மீது, நடவடிக்கை எடுக்குமாறு சிங்கள ராவய அமைப்பு, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு !

கொவிட்-19 மூலம் இறந்தவர்களை தகனம் செய்வதற்கு எதிராக செயற்பட்டுவரும் நீதி அமைச்சர் அலி சப்ரி மீது, நடவடிக்கை எடுக்குமாறு சிங்கள ராவய அமைப்பு, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளது.

சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் இந்த முறைப்பாட்டை இன்று(22.12.2020) பொலிஸ் தலைமையகத்தில் எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ளார்.

அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,

கொவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் அரசாங்கம் மேற்கொள்ளும் பொதுவான சட்டத்தைக் கடைப்பிடிப்பது இந்த நாட்டு மக்களின் கடமையாகும். இவ்வாறான நிலையில் கொவிட் -19 தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களை தகனம் செய்யும் அரசாங்கத்தின் நடைமுறைக்கு எதிராக செயல்பட்டு வரும் நீதி அமைச்சர் அலி சப்ரி மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொற்றுக்கு இலக்காகி உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதிக்காமல் தகனம் செய்யும் நடைமுறையின் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் அடிப்படை வாதத்துக்குள் தள்ளப்படலாம் என நீதியமைச்சர் அலி சப்ரி அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளுமாறு அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒரு பிரிவாக செயற்பட்டு வருகின்ற முஸ்லிம் தேசிய ஒளிபரப்பினை தடைசெய்யக்கோரி பொதுபல சேனா அமைப்பு, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் நேற்று(21.12.2020) திங்கட்கிழமை கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் தமிழர்களை வெட்கித் தலைகுனிய வைத்த நாள்: 1990 ஓகஸ்ட் 30 : சுதர்சன் சரவணமுத்து

1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி அதுதான் யாழ் முஸ்லீம் மக்களின் இருண்ட நாள்!

1990 ஒக்டோபர் 30 காலை 6 மணி:
வீதியெங்கும் புலிகளின் ஒலிபெருக்கிகள் அலறின,சுமார் 8 மணியளவில் 1000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புலிகள் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சுற்றி வளைத்தனர்.

ஒரு இனம் அல்லது சமயக் குழுவினை மற்றுமொரு இனம் அல்லது சமயக் குழு திட்டமிட்டமுறையில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலிருந்து வன்முறையால் அல்லது பயங்கரவாதத்தால் அழித்தொழித்தல் அல்லது வெளியேற்றுதல் ‘இனச்சுத்திகரிப்பு’ எனப் பொருள்பட்டால், சிங்கள அரசு 1983 இல் தமிழர்களை விரட்டியடித்ததை விட, புலிகள் 1990 இல் முஸ்லீம்களை 2 மணித்தியாலயத்தில் தம் பிறப்பிட பூமியிலிருந்து விரட்டப்பட்ட இனச்சுத்திகரிப்பு என்பது எப்போதும் மன்னிக்கவே முடியாதது.

ஒரு சிறுபான்மையாக இருந்த இனம், பெரும்பான்மையினரின் அடக்குமுறைக்கெதிராகப் போராடியவர்கள் தமக்கு சிறுபான்மையினராக வாழ்ந்து வந்த சமூகத்தின் மீது அதிகாரம், வன்முறை, அடக்குமுறை, இனஅழிப்பு என மேற்கொண்டதன் நியாயம் என்ன? ஒரு சிலர் தவறிழைத்தார்கள் என்பதற்காக முழு முஸ்லிம்களையும் வெளியேற்றி இனச்சுத்திகரிப்பு செய்த செயலை யாரும் என்றும் நியாயப்படுத்த முடியாது.

ஹிட்லருக்கு பணக்கார யூதர்கள் மீது எப்படி வெறுப்பு இருந்ததோ, அதே போல இலங்கையில் வாழும் பணக்கார முஸ்லீம் சகோதரர்கள் மீதும் புலிகளுக்கு வெறுப்பு இருந்தது, சிங்களவன் யாழ்பாண நூலகத்தை எரித்தற்கும், புலிகள் முஸ்லீம் சகோதர்களை தாம் பிறந்து வாழ்ந்த இடத்தை விட்டு விரட்டியடித்ததற்கும், புலிகளின் பள்ளிவாசல் கொலைகளுக்கும் என்ன வித்தியாசம் கண்டீர்கள்? மனித தன்மையுள்ளோர் இதனை ஏற்க முடியுமா?

ஆண்டுகள் பல கடந்த நிலையிலும் கூட அந்த கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக் குழந்தைகளோடு எதிர்காலமே என்னவென்று தெரியாத நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.

1990 ஒக்டோபர் 30 காலை 6 மணி:
வீதியெங்கும் புலிகளின் ஒலிபெருக்கிகள் அலறின, சுமார் 8 மணியளவில் 1000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புலிகள் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சுற்றி வளைத்தனர்.

காலை 10 மணியளவில் புலி உறுப்பினர்கள் வாகனங்களில் ஏறிக்கொண்டு ஒலிபெருக்கியை கையில் வைத்துக்கொண்டு வீதி வீதியாக சென்று அழைப்பு விடுத்தார்கள். “முஸ்லிம்களே! ஒவ்வொரு வீட்டிலிருந்தும் உடனடியாக ஒருவர் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திற்கு இப்போதே வர வேண்டும்” என்று கட்டளையிட்டனர் புலிகள்.

அனைவரும் ஜின்னா மைதானத்திற்கு விரைந்து ஓடினார்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என ஜின்னா மைதானம் நிரம்பி வழிந்தது. ஆயிரக்கணக்கான புலிகள் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். அப்போது இளம்பருதி என்ற புலி மைதானத்தின் நடுவே மோட்டார் சைக்கிள் ஒன்றின் மேல் ஏறி நின்று கொண்டு கையில் ஒலிபெருக்கியுடன் பேசத் தொடங்கினான். “முஸ்லிம் மக்களே நீங்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை விட்டு உடனடியாக இன்னும் 2 மணித்தியாலங்களில் வெளியேற வேண்டும். இது எம் தலைவரின் உத்தரவு. தமிழீழத்தில் உழைத்தவை எல்லாம் தமிழீழத்திற்கே சொந்தம். உங்கள் சொத்துக்கள் அனைத்தையும் இங்கே விட்டு விட்டு நீங்கள் உடனே வெளியேறுங்கள்” என்று இளம்பருதி என்ற புலி அறிவித்தது.

ஜின்னா மைதானமே கதிகலங்கியது. பெண்கள், ஆண்கள் அனைவரினதும் கண்களிலிருந்தும் கண்ணீர் ஓடத் தொடங்கியது. செய்வதறியாது அனைவரும் திண்டாடினார்கள். சிலர் புலிகளிடம் நியாயம் கேட்டார்கள். வாதாடினார்கள். இது எங்களுடைய சொந்த இடம் என கூச்சலிட்டு கதறியழுது கண்ணீர் விட்டு கெஞ்சினார்கள்.

புலிகளுக்கு ஏது மனசாட்சி:
புலிகள் மனமிரங்கவில்லை. “இது எங்கள் தலைவரின் உத்தரவு. நீங்கள் அனைவரும் வெளியேறித்தான் ஆக வேண்டும். ஊரை விட்டு நீங்கள் செல்லாவிட்டால் அநியாயமாக அனைவரும் சுட்டுக் ொல்லப்படுவீர்கள்” என்று கூறிக்கொண்டு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து புலி உறுப்பினர்கள் அனைவரும் வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்தனர். ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானமே வெடிச்சத்தத்தினால் அதிர்ந்தது.

அனைவரும் பயந்து நடுநடுங்கி அழுது வீங்கிய முகங்களுடன், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எங்கே போவது? என்ன செய்வது? என்று தெரியாமல் நடைபிணமாக ஊரை விட்டு வெளியேறினார்கள்.
புலிகள் அவர்களின் உடமைகளை பறித்தெடுத்தனர். பெண்களின் நகைகளை கழற்றினார்கள்; காதணிகளைக்கூட விடவில்லை.

சிறுகுழந்தைகளின் கையில், கழுத்தில், காதில் இருந்த நகையைக்கூட பிடுங்கி எடுத்துக் கொண்டனர். கழற்ற முடியாத நகைகளை வெட்டி எடுத்தனர்.

ஆண்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கினார்கள். செலவுக்குப் பணம் வேண்டுமே என கெஞ்ச, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருநூறு ரூபா மட்டுமே கொண்டு செல்ல அனுமதித்தனர்.

சொந்த ஊரில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பெருமிதமாக வாழ்ந்து கொண்டிருந்தவர்களை வெளியூர்களில் அகதி எனும் பட்டத்தோடு கூனிக்குறுகி நாலா புறமும் சிதறி வாழ வைத்தார்கள் இந்தப் புலிகள்.

மனோகரா தியேட்டரில் அடைக்கப்பட்ட பலர் மந்தைகளாக புலிகளின் வாகனங்களில் ஏற்றப்பட்டு கேரதீவுக்குள் விடப்பட்டார்கள். கடல்ப் பயணத்திற்கு பழக்கமற்ற அப்பாவி மக்கள் தம்வசம் வைத்திருந்த ஆடை மூட்டைகளுடன் கடலுக்குள் விழுந்து நனைந்தார்கள். பற்றைக்காடுகளும் முட்புதர்களும் சேற்று நிலங்களும் கடந்து நடைப்பயணமாக பல மணித்தியாலங்கள் அலைந்து வவுனியா பூந்தோட்ட அகதிமுகாமில் தஞ்சமடைந்தார்கள். ஒரு காலத்தில் குட்டி சிங்கப்பூரென வர்ணிக்கப்பட்ட சோனகத் தெருவின் வர்த்தகர்களான முஸ்லீம் சகோதரர்களை, நிவாரணப் பொருட்களையும், நிவாரண உணவுகளையும் கையேந்த வைத்தனர் புலிகள்.

யாழ் பூமிக்கு அவர்களும் சொந்தக்காரர்கள்தான். இது அவர்களது பாரம்பரிய பூமி. பல வருடங்களாக முஸ்லிம்களும் தமிழர்களும் மொழியால் ஒன்றிணைந்து ஒற்றுமையாய் இருந்தார்கள். அவர்கள் மதத்தால் இனத்தால் வேறுபட்டவர்கள் என்பதால் வெளியேற்றப்பட்டார்கள்.

ஒரு மாகாணத்திலிருந்து முழு இனமும் வெளியேற்றப்படுவது சர்வதேச சட்டத்தில் குற்றமென்று தெரிந்தும் கூட அன்றைய காலகட்டத்தில் அவர்கள் வெளியேற்றப்பட்டதை சர்வதேச ரீதியில் வெளிப்படுத்த, எந்த ஊடகமும், எந்த அரசியல் வாதிகளும் முன்வரவுமில்லை, அதற்கு முயற்சிக்கவுமில்லை.

நடை பெற்ற சம்பவத்திற்கு இதுவரையும் எந்தவொரு ஊடகமும் மன்னிப்பும் கோரவில்லை. அந்த அளவுக்கு மனிதாபிமானம் அற்ற. ஊடக தர்மம் அற்ற ஊடகங்கள் தான் இன்றும் உள்ளது. ஆக குறைந்தது ஒரு கண்டன கூட்டத்தைக் கூட ஏற்பாடு செய்யவில்லை.

ஆனாலும் யாழ் பூமியிலிருந்து முஸ்லீம் மக்களை புலிகள் வெளியேறும்படி கேட்டபோது, இந்து சமய குருக்கள், கிறிஸ்தவ பாதிரிமார்கள் முஸ்லிம்களின் வெளியேற்றத்தினை தடுத்து நிறுத்த புலிகளிடம் உடனடி அவசரப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியும் கூட அவை தோல்வியிலேயே முடிவடைந்தன.

புலிகளின் ஆயுதங்களையும் மீறி ஒரு சில தனிநபர்கள், ஒரு சில முஸ்லீம் குடும்பங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முன்வந்தனர், அதில் ஒருவர் எனக்கு படிப்பித்த, நான் பிறந்த இடத்தில், பிரபல தனியார் ரியூட்டரி நடாத்திய, எனக்கு மிகவும் பிடித்த மனித நேயம் மிக்க ஆசிரியர் உதவ முன் வந்தது குறிப்பிடத்தக்கது.

புலிகள் முஸ்லீம் மக்களுக்குச் செய்த கொடுமைகள் கொஞ்சமல்ல. ஆனாலும் புலிகளின் பெரும் படுகொலைகளில் ஒன்று அந்த காத்தன்குடி பள்ளிவாசல் படுகொலை. தொழுகையிலிருந்த அந்த முஸ்லீம்கள் மீதான படுகொலை பெரும் ரத்த அடையாளம். அவர்களின் மிகக் கொடூரமான வெறிக்கு பெரும் சாட்சி. புனிதமான மசூதி அன்று இரத்த காடாயிற்று. குரான் ஒலித்த இடம் அன்று ஓப்பாரி ஓலத்தில் அழுதது.

இச்சம்பவத்தில் 3 வயது குழந்தையினை புலிகள் கொன்ற கோரமும் உண்டு. 10 வயதிற்குட்பட்ட 30 சிறுவர்கள் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர். அந்த பள்ளிவாசலில் பிஞ்சுகள் உட்பட ஏராளமானோர் கொல்லபட்டு மசூதி ரத்தத்தில் நனைந்தது. இதனை எல்லாம் கடந்து புலிகள் சாதித்தது என்ன? தன்வினை தன்னைச் சுடும் என்பதற்கு அமைவாக அடுத்த சில ஆண்டுகளிலேயே புலிகள் யாழ் மண்ணில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். அடுத்த இரு தசாப்தங்களிற்குள் புலிகள் இவ்வுலகில் இருந்தே களையப்பட்டனர்.

உலகம் இவற்றை அறிந்ததால்தான் இவர்களை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கின்றது. இறுதி யுத்தத்தில் ஈரான், பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகள் மட்டுமல்ல புலிகள் தலைமேல் வைத்துக் கொண்டாடிய மேற்கு நாடுகளும் இலங்கை அரசோடு இணைந்து பிரபாகர சம்காரம் செய்தனர்.

என்னிடம் ஆயுதம் இருக்கின்றது. இது என் நாடு. அதனால் எல்லோரையும் கொன்றுகொண்டே இருப்பேன் என்பது போராட்டம் ஆகாது. அதன் பெயர் காட்டுமிராண்டித்தனம். ஏன் உங்களிடம் ஆயுதமிருந்தால் எதுவும் செய்வீர்களா? எங்களிடம் இருக்கும் ஆயுதங்களை காட்டட்டுமா? என உலக நாடுகள் திரண்ட பொழுது புலிகள் காணாமல் போனார்கள்.

சோனகர் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர்… : எஸ் ஆர் நிஸ்தார் மொகமட்

SL_Moorsஎன் அம்மாவின் இயற்பெயர் “நாச்சியா(ர்)”, என்ன அழகான தமிழ் பெயர்? “தலைவி” என்ற பொருள்பட அப்படி இடப்பட்டதாம். பெயரை மாத்திரம் பார்த்து இது சுத்த தமிழ்பெயர் எனவே இவர் இப்போது இல்லாவிட்டாலும் இவரின் பரம்பரை தமிழர் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று இனம் பிரிக்கும் தன்மை தமிழரிடையே காணப்படுவது கண்கூடு. இந்த அடிப்படையில்தான் இரண்டாம் புவனேகபாகுவின் வாரிசு “கலே பண்டார” அல்லது ” வத்ஹிமி” என்பவனின் பெயரை வைத்து அவன் சிங்களவன் என்ற முடிவுக்கு வருவதும் பிழையாகிவிடும். ஏனெனில் அந்த அரசன் “சோனகர்” இனத்தை சேர்ந்தவன். இப்படியாக அடிப்படை விடயங்களில் தெளிவில்லாமல் குழப்பங்களுக்கு மத்தியில் அரைத்த மாவை மீண்டும் மீண்டும் அரைப்பது போல இந்த சர்ச்சைக் குரிய “சோனகர்” இனம் பற்றி மிண்டும் பேச வேண்டியுள்ளதாக தேசம்நெற் கருதுவதால் மிண்டும் உங்களோடு.

இந்த சோனகர் என்ற வரையறைக்குள் வருபவர்கள் அனேகமா “இஸ்லாம்” என்ற சமயத்தை பின்பற்றுவதால், அவர்கள் சமய அடிப்படையில் “முஸ்லிம்” என்ற பெயரையும் பெறுகின்றனர். இந்த முஸ்லிம் என்ற வார்த்தை எல்லைகள், மொழிகள், கலாச்சாரங்களை கடந்த பெயர். அதாவது யார் இஸ்லாம் என்ற மதத்தை பின்பற்றுகிறார்களோ அவர்களைக் குறிக்கும் சொல். அவர் எங்கு இருக்கிறார், என்ன மொழி பேசுகிறார், என்ன நிறத்தையுடையவர் என்ற கேள்விகளை எல்லாம் தாண்டிய ஒரு அடையாளம். ஆனாலும் இலங்கையை பொறுத்தவரை தெரிந்தோ தெரியாமலோ இதுதான் அது, ஆகவே அதுதான் இது என்ற ஒரு குழப்பத்துக்குள் தமிழர் மாத்திரமல்ல, இந்த சோனகரும் மூழ்கிவிட்டனர்.

இனம் என்பது மொழிவாரியாகத்தான் இருக்க வேண்டும் என்று பலர் வாதிட்டாலும் இனத்துக்கான வரைவிலக்கணம் “ஒரு சமயத்தை பின்பற்றும் அல்லது குறிப்பிட்ட கலாச்சார தன்மைகளை கொண்டுள்ளோரும் கூட தனியான இனமாக வகைப்படுத்தப்படலாம் ” என்கிறது. ஆகவே சமய ரீதியில் முஸ்லிம்கள் என்போர் “தனியான இனம்” என்று வாதிடுவதற்கு இது வழிவகுக்கின்றது. ஆனால் உலகலாவிய ரீதியில் “முஸ்லிம்” என்பவர் ஒரு இனமாக பார்க்கப்படாமையால் இலங்கையில் மாத்திரம் அப்படி பார்க்கப்பட வேண்டும் என்பது பல சிக்கல்களை அரசியல் ரீதியில் உருவாக்கக் கூடியது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

மனிதன் இயற்கையாகவே இப்படியான வேறுபட்ட அடையாளங்களை கொண்டிருக்கும் போது அவனை ஒற்றை சொலுக்குள் அடக்குவது, பாரதியாரின் ஆண், பெண் தவிர இனங்கள் வேறெதுவுமிலலை என்ற நிலைப்பாட்டை ஒத்ததாகும். ஆனால் நடைமுறையில் காரியங்கள் அப்படி நடந்தேறுவதுமில்லை. மனிதன் ஒரு சமூக பிராணி என்பதால் சமூக வாழ்வியல் சூழலில் அவனுக்கு பல அடையாளங்கள் தேவைப்படுகிறன அல்லது அப்படியான அடையாளகள் தேவைகருதி கொடுக்கப்படுகிறன. இந்த அடிப்படையில் சமயம் சார்ந்த அடையாளமாக “முஸ்லீம்” அல்லது “இஸ்லாமியர்” என்ற போதிலும் எமக்கு இன்னும் பல அடையாளங்கள் தேவைப்படுகிறன. அதில் முக்கியமானது “இலங்கையர்” என்பது.

இந்த இலங்கையர் என்ற பதப் பிரயோகம் “அமெரிக்கர்” என்ற பதப் பிரயோகத்தின் தன்மையை ஒத்தல்ல. எழுதப்படாத பல கட்டுப்பாடுகள், சட்டங்கள் மறைமுகமாகவும், சிலவேளை வெளிப்படையாகவும் நடைமுறைப் படுத்தப்பட்டாலும் அரம்பத்தில் அடிமைகளாக அமெரிக்காவுக்குள் கொண்டுவரப்பட்ட கறுப்பினத்தவன், கலப்பினத்தவன் அமெரிக்க ஜனாதிபதியாக முடியுமாய் இருப்பது ஒருவகை அமெரிக்க தன்மை(Americanism) எனலாம். அத்தகைய வாய்ப்பு வசதிகளோ, அரசியலமைப்பு ஏற்பாடுகளோ, வளர்ச்சியடந்த சிந்தனை போக்குகளோ இல்லாத ஒரு நாட்டில் அதுவும் உலகத்தின் தனித்த ஒரு இனத்தையும், தனித்த ஒரு மொழியையும் பெரும்பான்மையாகக் கொண்ட நாட்டில் அங்கே உள்ள சிறுபாமையினர் தொடர்பாக எழும் காரணமற்ற ஆனால் அனுபவரிதியில் ஏற்படும் நியாயமான பயத்தின் அடிப்படையில் பெருன்பான்மை சமூகத்தின் அரசியல் நகர்வுகள் வடிவமைக்கப்படும் என்பதில் புதுமை ஒன்றுமில்லை.

இந்த அடிப்படையில் சிறுபான்மையினருக்கு “இலங்கையர்” என்ற அடையாளம் மாத்திரம் அரசியல் ரீதியில் போதுமானதல்ல. ஆகவே இந்த சிறுபான்மையினாரில் ஒரு பிரிவினர், பெருன்பன்மையோரின் அரசியல் நகர்வினாலும், சிறுபான்மையோரில் பெரும் பன்மையாக இருக்கும் தமிழரின் அரசியல் நகர்வுகளினாலும் ஏற்படும் பயத்தின் காரணமாக தங்களுக்கு இருக்கும் அனைத்து அடையாளங்களையும் பாவனையில் வைத்திருப்பது பிழையான அம்சமாக இருக்கப் போவதில்லை. மாறாக இது ஒருவகை பாதுகாப்பு ஏற்பாடகவே அமையும். சிங்களவரையும், தமிழரையும் பொறுத்தவரை மொழிசார்ந்த, இனம் சார்ந்த, சமயம் சார்ந்த அடையாளங்கள் பாவனையில் இருக்கும் போது, முஸ்லிம்கள் என்ற மத அடையாளத்தைக் கொண்டுள்ள இஸ்லாமியர்கள் தமது இன அடையாளத்தை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயமாகும். இந்த உரிமை பிரச்சினை என்பது புதிய பிரச்சினைகளை உருவாக்குவதற்கல்ல, புதிதான பிரச்சினைகளின் சாத்தியபாடுகள் மிக அதிகமாகவே உள்ளதால் அவற்றை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டுமாயின் நாம் இலங்கையர் என்ற உரிமையோடு, அது பல்லின மக்கள் வாழும் இலங்கை என்ற விடயத்தை அச்சமின்றி, தெளிவாக நிலைநிறுத்த எமது இந்த “சோனகர்” என்ற இன அடையாளம் மிக இன்றியமையாததாகும்.

பிரதேசங்கள் எல்லை இடப்படுவதும், எல்லை இடப்பட்ட பிரதேசங்கள் பெயரிடப்படுவதும் அவற்றை “நாடுகள்” என்று நாம் அழைப்பதும் புதுமையான விடயங்கள் அல்ல. அதேபோல் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் மக்கள் மீள் பகுப்புக்குள்ளாவது ஏற்றுக் கொள்ளப்படுகின்ற ஒரு விடயமாகவே காணப்படுகின்றது. எனவே ஏதோ ஒரு அடிப்படையில் மக்கள் குழுக்களாக, குலங்களாக, கோத்திரங்களாக, இனங்களாக, தேசியங்க்களாக பிரிவடைவதை நாம் மறுதலிக்க முடியாது. அனால் இந்த பிரிவின் அடிப்படையில் ஒருவர் மற்றவரைவிட உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் என்ற நிலைவரும் போது அல்லது ஒருவர் தன் போன்ற மற்றவர்களுடனான கூட்டுக்கு தடை ஏற்படும் போது அங்கே பிரச்சினைகள் எழுவது தவிர்க்க படமுடியாதுள்ளது.

வரலாறுகள் தோறும் நமக்கு போதுமான படிப்பினைகள் இருப்பினும், இத்தகைய பிரச்சினைகள் பூதாகாரமாகி மனித குலம் அழிவை சந்தித்ததற்கு நாம் சாட்சிகளாக இருந்தபோதும் அதன் பாரதூரம் இன்னும் சரியாக அறியப்பட்டதற்கான அறிகுறிகள் மிக சொற்பமாகவே காணப்படுகின்றன. யூத இனத்துக்கு எதிரான ஆரிய ஹிட்லரின் இன அழிப்பும், ரூவெண்டா நாட்டில் ஹூட்டு, டுட்சி இனங்களுக்கிடையிலான இனவழிப்பு நடவடிக்கைகளும், சூடானில் பூர்விக மகளுக்கும் ஜஞ்சூவின் அறபு நாடோடிகளுக்கும் இடையிலான அழிப்பு நடவடிக்கைகளும், சேர்பியாவில் பொஸ்னிய இன அழிப்பு செய்யற்பாடும், இலங்கையிலே அரசாங்கம், புலி என்ற போர்வைக்குள் பலியாக்கப்பட்ட மக்களும் இந்த பரிதாப நிலையின் சான்றுகள். இத்தகைய அநாகரிகங்களின் அடிப்படை இரண்டு விடயங்களே. ஓன்றில் ஒரு இனம் மற்றைய இனத்தை தாழ்வாகக் கருதுவது, மற்றயது ஒருவரின் அடையாளத்தை மற்றவர் மறுக்க முற்படுவது.

இந்த அடிப்படையிலேயே “இலங்கை சோனகர்” பற்றிய எனது பார்வை அமைந்திருக்கிறது. இலங்கை “பல்லின மக்கள்” வாழும் நாடு. இந்த “பல்லினம்” என்ற வார்த்தை குழப்பமே இந்த விடயத்தை சிக்கலாக்கியுள்ளதாக நான் கருதுகிறேன். சுதந்திரத்துக்கு பின்னான இலங்கையில் தமிழர்களின் “வட்டுக்கோட்டை தீர்மானம்” என்ற தனி நாட்டுக்கான அடித்தளம் இடப்பட்டபோது இலங்கையில் சிங்களம், தமிழ் என்ற இரண்டு மொழிசார் இனங்கள் தான் இருப்பதாகவும் எனவே இலங்கை பெளதிக ரிதியாக இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும் என்பது தமிழ் அரசியல்வாதிகளின் ஆசையாக இருந்தது. அங்கே தமிழை அதிகமாக பேசும் ஒருசாரார் (சோனகர்) பற்றியோ, அல்லது சிங்களமும், தமிழும் பேசும் இன்னொரு சாரார்(பறங்கியர்) பற்றியோ பேசப்படவிலை. ஆனால் இங்கிலாந்தில் உருக்கொண்ட ஒரு தீவிரவாத / போராட்ட தமிழ் அமைப்பு “இஸ்லாமியர்”, “தோட்ட தொழிலாளர்”, ஏனைய சிறு இனத்தினரையும் இந்த தமிழ் போராட்டம் உள்ளடக்க வேண்டும், அப்படி இல்லாவிட்டால் தமிழரின் சுதந்திர போராட்டம் வெற்றி பெறாது, வெற்றி பெற்றாலும் நிறைவு பெறாது என்று எதிர்வு கூறினர். அவர்கள் தங்கள் போராட்ட வடிவத்தை இப்போது மாற்றிவிட்டனர் என்றாலும், இஸ்லாமியர், தோட்டத்தொழிலாளர் என்பதோடு பறங்கியர் விடயத்திலும் அவர்களின் கருத்து அவ்வாறே இன்றும் உள்ளது.

ஆனாலும் அவர்கள் சொல்லும் “இஸ்லாமியர்” என்ற பதப்பிரயோகம் அரசியல் ரிதியில் தூர நோக்கு கொண்டதாகக் காணப்படவிலை. ஆகவேதான் அதற்கான மாற்றிடாக , சரியான இன அடையாயளமாக நாம் “சோனகர்” என்ற பதத்தை பிரயோகிப்பதற்கான தேவையை உணர்த்தி நிற்கின்றோம். இந்த சோனகர் என்ற விடயம் வசதிகருதிய புதிய கண்டுபிடிப்போ அல்லது இலங்கையின் அரசியல் சூழ் நிலையை என்றும் குழப்பம் நிறைந்ததாக வைப்பதுவுமாக அமையக் கூடியதல்ல, மாறாக அது இஸ்லாமியர் அல்லது முஸ்லீம் என்ற மத அடையாளத்தில் நாம் எதிர் நோக்கக் கூடிய சாத்தியமான ஆபத்துக்களை விட, சோனகர் என்ற இனஅடையாளதில் சற்று பாதுகாப்பை பெறலாம் என்ற நிலைப்பாடே. எனது இந்த வாதத்தை பிழையாக அர்த்தப்படுத்தி விடக்கூடாது, அதாவது எமது அரசியல் இருப்புக்காக நாம் சோனகர் என்ற இனப் பெயரை முதன்மை படுத்துவதே ஒழிய எந்தக் காரணம் கொண்டும் எமது மத அடையாளத்தையோ அல்லது மதத்தையோ விட்டு விடுவதற்கான யோசனையல்ல, இது என்பதை முதலில் சோனகர் உணர வேண்டும். அடுத்ததாக இந்த பெயரை மீள் நிலை நிறுத்த முயல்வதென்பது ஏனைய இனங்களின் உரிமைகளில் தலையிடும் விடயமும் அல்ல என்பதும் குறிப்பாக தமிழ் இனத்தினரால் உணரப்பட வேண்டும்.

சாதுவான தமிழர்கள் போர்க் குணம் கொண்டோராக மாற்றப்பட்டதும், அதன் தாக்கத்தை நேரடியாக பெரும்பான்மை சிங்கள அரசாங்கதின் மேல் பாய்ச்சி அது மறைமுகமாக சிங்கள இனத்தினை கிலிகொள்ளச் செய்ததும், அதே நேரம் சக மொழி பேசுவோர், இரண்டறக் கலந்து வாழ்ந்தோர் என்றும் பாராமல் அவர்களையும் பயமுறுத்தி தம் கீழ் வைத்திருக்க புலி பயங்கர வாதிகள் எடுத்த முயற்சி, முழு தமிழினத்தின் நிலைப்பாடாக கொள்ளமுடியாது என்றாலும், இலங்கையின் அரசியல் சூழ் நிலையானது குழகப்பரமானதாகவே செல்வதற்கு ஏதுவாக அரசியல் அமைப்பு திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையிலும், இன வாத சிங்கள், தமிழ் அரசியல்வாதிகள் அத்தகைய ஒரு அடிப்படையிலேயே தமது அரசியலை முன் நடத்தி செல்ல முயல்வதாலும் அப்படியான நிலைமைகளுக்கு உறுதியாக நின்று முகம் கொடுக்கவுமே நாம் எமது இனத்தின் அடையாளத்தை தெளிவாக முன்வைக்க வேண்டும் என்பது எனது நிலப்பாடு.

வட்டுக்கோட்டை திர்மானத்துக்கு முன்பிருந்த காலத்திலும், புலி பயங்கரவாத காலத்திலும், அதற்கு பின்பும், கடந்த பொது தேர்தல் காலங்களிலும் தமிழர்களை பெருவாரியாக பிரதி நிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் இலங்கையில் இரண்டு இனங்கள் உள்ளதாகவே பேசின, பேசுகின்றன. அதே போல் இவர்களுடன் சம்பந்தமில்லாத சுயபிரகடனம் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமரான திரு. வி. உருத்திரகுமரன் மே/ஜூன் 2010 தில் புதிய திசைகளின் வானொலி அரசியல் ( லண்டன் சூரியோதயம் வானொலியூடாக) கலந்துரையாடல் ஒன்றில் கூறிய ஒரு விடயம் மிகவும் கவனிக்கத்தக்கது. அதாவது இந்த பிரதமர்(?) நாடு கடந்த தமிழீழ அரசு பற்றி விளக்கமளித்தபோது நம்மால் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்த அரசு பற்றி இலங்கையில் வாழும் தமிழரின் விருப்பம் அறியப்பட்டதோ இல்லையோ நான் அறியேன், இருந்தம் உங்கள் உத்தேச தமிழீழ ஆட்சிக்குள் வரவிருக்கும் சோனகரிடம் அவர்களின் விருப்பு பற்றி அறியப்பட்டதா? என்ற கருவை உள்ளடக்கியதே அந்தக் கேள்வி. அதற்கான அவரின் பதில்,” இந்தியாவின் தமிழ் நாட்டில் ஒரு முஸ்லிம் பிரமுகர் இந்த நாடு கடந்த தமிழீழ அரசை ஆதரித்துளார்” என்பதே. ஆகவே இப்படியான ஒரு ஏமாற்று போக்கு இந்த தமிழ் அரசியல் வாதிகளிடம் இருக்கும் வரை நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டியது எமது கடமையே ஒழிய அது தமிழரின் பிரச்சினை கூட இல்லை. நாம் நம் இனத்தை இது வென்று சொல்லும் போது அதை ஆதாரங்களோடு பிழையென நிறுவுவது வேறு. ஆனால் காரணங்கள் இல்லாமலே அதை தந்திரமாக முறியடிக்க முற்படுவது கேவலமானது. இலங்கை சோனகரை தமிழர் என்று குறிப்பிடுவது விருப்பம்மில்லாத ஒருவரை பலாத்கார கலியாணத்துகு ஒப்புதல் அளிக்க செய்யும் முயற்சி போன்றது. அது ஒரு இனத்துக் கொதிரான உரிமை மீறல். இதைவிட வேறு வார்த்தைகளால் இந்த நிலைப்பாட்டை விளங்கவைக்க முடியாது.

Moors_Map_of_SL01இனி இந்த “சோனகர்” ரின் வரலாற்றைப் பார்ப்போம். மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் இந்தியா நோக்கிய தம் பார்வையை செலுத்தமுன்பே அரேபியர் தெற்கு, தென்கிழக்காசிய பிராந்தியத்தில் தமது குடியிருப்புக்களை நிறுவியுள்ளனர். இந்த வகையில் கி.மு. 310 ஆண்டளவில் மடகஸ்கார் தீவுக்கும் சுமாத்திரா தீவுக்கும் இடையிலான வியாபாரபாதையின் கடல் வழி இணைப்பு இலங்கையூடாகவே இடம் பெற்றுள்ளது. எகிப்திய பல்கலை வல்லுனர் க்ளோடியுஸ் தொலமி(Claudius Ptolemy) கி.பி. 150களில் இலங்கை பற்றிய வழங்கிய தகவல்கள் அவர் அறேபியரிடம் இருந்து பெற்றதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த தொலமி வரைந்த இலங்கை படத்தில் நதிகள் புலூவியஸ்(Fluvius) என்று கூறப்படுகிறன. அதன் அடிப்படையில் மன்னாரின் தென் புறத்தில் ஓடும் நதி “பாசிஸ் புலூவியஸ்” அதாவது பாரசிகர் நதி, அதாவது அப்பிரதேசத்தில் பாரசிகர் அதிகம் வாழ்ந்ததால் அப்பெயர் வழங்கப் பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. இந்த நதி இன்று அருவி ஆறாக பெயர் பெற்றுள்ளது, (மகாவழி கங்கை ஓரத்திலும் பாரசீகர் வாழ்ந்ததாக காணக்கிடைகின்றது). இந்த நதிக்குக் கீழ் இன்றைய புத்தளம் நகருக்கு வடக்காக “சோனா புலூவியஸ்” (Soana Fluvious) என்ற நதியை அவர் வரைந்துள்ளார். சோனகர் நதி என்பதை அது குறிக்கிறது. அதாவது சோனகர் அதிகம் வாழ்ந்த இடமாக அது அடையாளப் படுத்தப்படுகிறது. இந்த நதியினை இன்றும் புத்தள பிரதேச மக்கள் “பொன்பரப்பி ஆறு”, அல்லது “காலாவி ஆறு” என்றழைகின்றனர். இது சிங்களதில் “கலா ஒய” என்றழைக்கப் படுகின்றது. இந்த நதி தீரங்களுக்கே இன்றும் புத்தளம் வாழ் மக்கள் குடும்பம் குடும்பமாக சென்று குடிசை(tent)அடித்து, இரவு வேளைகளில் வேட்டையாடி தமது கோடைகாலத்தை கழிக்கும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர். இது ஆற்றங்கரையில் வாழ்ந்தோரின் பழக்க வழக்கங்களின் மிச்சசொச்சங்கள்.

இதே நேரம் கி.மு. 327-326 இடைப்பட்ட காலத்தில் மகா அலெக்ஸ்சந்தரின் கட்டளை பிரகாரம் இலங்கையின் புவி வரை படத்தைத் தந்த கிரேக்க மாலுமி ஓனொஸ் கிறிட்டோஸ்( Oneus Crites ) புத்தளத்திளும் அதைச் சுற்றியுள்ள அயல் பாகங்களுடன் நிலத்தொடர்புடைய பகுதிகளிலும் “சோனகர்”களின் குடியேற்றம், விஜயன் இலங்கைக்கு வர முன்னரே அதிகம் காணப்பட்டதாக குறிப்பிடுகின்றார். அதே நேரம் இந்த பொன்பரப்பி ஆற்றை “சோனாள் பொட்டமஸ்” என்று குறிப்பிட்டுள்ளார். “சோனாள்” என்பது “சோனகரையும்”, “பொட்டமஸ்” என்பது ஆற்றையும் குறிக்கும். இந்த பிரதேசம் தான் அதாவது அருவி ஆற்றுக்கும், மாயன் ஆறு என்றழைக்கப்படும் தெதுறு ஒயாவுக்கும், அதாவது இன்றைய சிலாபத்துக்கு வடக்கே பாயும் தெதூறு ஓயாவில் இருந்து மன்னாருக்கு தெற்காகவுள்ள குதிரைமலைக்கும் இடைப் பட்ட பிரதேசமே “சோனகம்” என்ற பிரதேசமாகவும் இந்த மாலுமி சித்தரிக்கின்றார். இந்த பகுதியை, அதாவது அரிப்பு, பொன்பரப்பு, புத்தளம் பிரதேசத்தை “Igona Civitas” ,அதாவது அறேபிய பழங்குடிகள் வாழ்ந்த இடமாகும் என J.R. Sinnathamby என்ற ஒரு ஆய்வாளரும் குறிப்பிடுகின்றார்.

இன்றைய 21ம் நூற்றாண்டில் நாம் காணும் நாடுகள், கண்டங்களின் அமைவுகள், சமுத்திரங்கள், மலைகள் எல்லாம் உலகம் தோன்றிய நாள் தொட்டு இப்படியே இருக்கவில்லை என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம். இதற்கு “கண்ட நகர்வு”(continental drift) களே காரணமாகும் என்பது நிலவியலாளர் கூற்று. இந்த அடிப்படையில் இன்றைய இந்தியா, அவுஸ்திரேலியா, அண்டார்டிக்கா முனை இதற்கிடையில் உள்ள தீவுகள் எல்லாம் ஓன்றாக இருந்த பகுதியை “கொண்ட்வானா லேண்ட்”(Gondwana Land) என்றழைப்பர். இந்து மாசமுத்திரத்தில் மூழ்கிப் போன பெரும் பகுதி “லெமுரியா கண்டம்” (Lemuria Continent) என அழைக்கப் பட்டதும் நாம் அறி ந்ததே. இந்த கடற்கோளின் விளைவே தென்பகுதி காணாமல் போக வடபகுதி இமய மலையாக நிமிர்ந்து நிற்பதைக் காணலாம். பின்னர் ஏற்பட்ட சிறிய கடற்கோள்களின் விளைவாக இந்திய நிலப்பரபில் இருந்து இலங்கை பிரிந்து சென்றது என்பதற்கு சான்றுகள் அதிகம் உள்ளன. அதே நேரத்தில் க்ளோடியுஸ் தொலமி(Claudius Ptolomy)யின் பிரகாரம் “தப்ரபேன்” (Taprobane) என்று அழைக்கப்பட இலங்கை இன்றை இலங்கையை விட பல மடங்கு விசாலமானது என்கின்றார். அதன் படி “க்கிறினிச்” (Greenwich) 75வது பாகை இன்றைய இலங்கையின் மேற்கு கரையில் இருந்து சுமார் 400 மைல் தூரத்தில் பண்டைய இலங்கையை ஊடறுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. ஆகவே அன்றைய இலங்கை இன்றைய இலங்கையைவிட விசாலமானது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இத்தகைய புதிய நில அமைவுகளுக்கு முன் இலங்கை இந்தியாவுடன் நிலத்தால் இணைந்திருந்த பகுதி என்பதிலும் யாருக்கும் சந்தேகங்கள் எழ நியாமமிருக்காது.

இந்த இணைபின் மூலம் புத்தளம் பிரதேசத்தில் வட மேற்கில் பாய்ந்தோடும் “சோனகர் நதி” யினதும் அதற்கு எதிராக, அதாவது இந்தியாவின் தென் கிழக்கில் காயல்பட்டிணத்தின் கடலில் சங்கமிக்கும் “தாமிரவருணி ஆறு” (அல்லது பொதிகை நதி(?)) என்றழைக்கப்படும் ஆறும் ஓரே நதியே. இந்த நதியையும் “தப்ரபேன்” என்றே அழைத்துள்ளனர். அந்த காலத்தில் ‘சோனகர்” வாழ்ந்த இடமும் அதுவே. சோனகர் பிரதேசத்தைப் பிரிப்பது “தாமிர வருணீ” என்ற நதியே என்றும் கூறப்பட்டுள்ளது. தாமிரவருணி ஆற்றுப் படுக்கைகளில் வாழ்ந்த மக்களின் பழக்க வழக்கங்க்கள், குணாதிசங்கள், உடல் அமைப்பு, நிறம், அவர்கள் பேசும் மொழியின் தன்மை(dialact), அவர்கள் வைத்துக் கொள்ளும் பெயர்கள், தாழி அடக்க முறை என்பதெல்லாம் ஓன்றையே சுற்றி நிற்கின்றது. அதுதான் சோனகர் என்ற இனத்தையும், அது காலங்காலமாக வாழ்ந்த இன்றும் வாழ்ந்து வரும் பிரதேசத்தையுமாகும்.

மேலும், இந்தியாவின் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தின் தெற்கு சுவற்றில் உள்ள கல்வெட்டில் இந்த” சோனகம்” பற்றிய தகவல் பெறமுடியும். தமிழ் நாட்டு பேரசர்கள் வெற்றி கொண்ட பிரதேசங்களில் ஒன்றாக “சோனகம்” குறிப்பிடப் பட்டுள்ளதானது அந்த பிரதேசத்தின் இருப்பையும், முக்கியத்துவத்தையும் உணர்த்துவதா உள்ளது. இதே போலவே போர்த்துகேயர்களின் இலங்கை வருகைக்குமுன் மொரோக்கோ நாட்டின் யாத்ரீகர் இபுனு பதுதா(Ibn Batuta) 1345 ஆண்டு 9ம் மாதம் 12ம் திகதி “பத்தள” என்று அழைக்கப்பட்ட புத்தளத்தின் துறைமுகத்தில் தன் தோழர்களுடன் வந்திறங்கியதாக தனது “The travels of Ibn Batuta” என்ற நூலில் அதன் ஆசிரியர் சாமுவேல் லீ குறிப்பிடுகின்றார். இப்னு பதுதா, பாவாதமலையை தரிசிக்க புத்தளத்தில் வந்திறங்கியபோது அங்கு ஒரு பாரசிக மொழி பேசக்கூடிய பாண்டிய மன்னன் ஆட்சி செய்ததாகவும் குறிப்பிடுகின்றார். இந்த பாண்டிய மன்னனாக வருணிக்கப்பட்டவனே “தக்கியூதீன்” என்று இனங்காணப்பட்டான். தக்கீயுதீன் அடிப்படையில் ஒரு பாரசிகன் என்றும் பாண்டிய மன்னனின் படையில் தளபதியாக இருந்தவன் என்பதும் அவன் பாண்டிய மன்னனின் மகள் ஒருவரை திருமணம் முடித்திருந்தான் என்பதும் வரலாறு. ஆகவே இலங்கையின் புராதன துறைமுகங்களில் ஒன்றான புத்தளத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்து அதை தன் நிருவாகதில் வைத்திருக்க தக்கியுதீன் நியமிக்கப்பட்டிருப்பத்ற்கான வாய்ப்புகள் அதிகம்.

Moors_Map_of_SL02இந்த ”சோனகர்” என்ற இனம் ஒரு கலப்பு இனம். இந்த இனத்தின் தோற்றத்துக்கு பல மூலங்கள் உள்ளன. இருப்பினும் அனைத்து மாறுபட்ட மூலத்திலும் ஒரு அசைக்க முடியாத, மாறாத மூலமாக காணப்படுவது அதன் “அரபு” இரத்த கலப்பு. இந்த அரபுக்கள் முதலில் தென் அறேபியாவில் இருந்து, அதாவது இன்றைய யெமனில் (Yemen)இருந்து ஏடன் (Aden) துறைமுகம் ஊடாக வந்தவர்கள் (என் தாயின் தந்தையின் பேரன் ஒரு யெமனி). அவர்களைத் தொடர்ந்து, ஏற்கனவே கிழக்கு ஐரோப்பிய அரபு கலப்பால் உருவாகிய “மூர்”(Moors)கள், பிற்பாடு பாரசீகர், அவர்களுடன் அபிசினியர்கள் (எகிப்து நாட்டவர்), பிற்பாடு தமிழ் நாட்டு சோனவர்கள், இன்றைய கேரளா அதாவது மலையாளிகள் பிற்பாடு வட அறேபியா, அதாவது பாலைவனத்து அரபிகள் என்று இலங்கை சோனகர் இனத்தின் மூலங்கள் பிரிந்து செல்கின்றன. இந்த மூலத்தின் தன்மைக் கேற்பவே இலங்கை ”சோனகர்” பலவித உடல், நிற அமைப்புகளைக் கொண்டுள்ளனர்.

சபாயீன், அதாவது தென் அறேபியர்கள் கி.பி. 7ம் நூற்றாண்டில் தம் அரசியல், சமய செல்வாக்கை வட அறேபியர்கள், அதாவது பாலைவனத்து அறேபியரிடம் இழக்கும் வரை கடல் மூலமான இந்து சமுத்திர வாணிப சாம்ராஜ்யம் அவர்கள் கையிலேயே இருந்தது. இந்த அறபுக்கள் தான் தென் இந்திய கரைகளிலும் வடமேற்கு இலங்கை கரைகளிலும் சங்கு, முத்து குளிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். இவர்களின் வருகை இந்தியாவிலும், இலங்கையிலும் வியாபார நோக்கமாகவே இருந்தது. பிற்காலத்தில் சமய பரப்பலும் அதில் காணப்பட்டது. ஆனால் தென் இந்தியாவிலும், இலங்கையிலும் அறேபியரின் வருகை, வட இந்தியாவுக்கான அவர்களின் அரசியல் அடிப்படையிலான( நாடு பிடித்தல்) வருகையை விட வித்தியாசமானது. அதுவும் கி.பி. 7ம் நூற்றாண்டளவிலேயே இஸ்லாம் என்ற மதம் இந்த வட அறேபிய முஸ்லீம்களால் இலங்கை சோனகர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகின்றது. எனவே இஸ்லாமியர் அல்லது முஸ்லீம் என்ற சமய அடியாளம், சோனகர் என்ற இன அடையாளத்துக்கு மிகவும் பிற்பட்டது. அதாவது சோனகர் என்ற அடையாளம் கி.மு.4ம் நூற்றாண்டுக்கும் முற்பட்டது. சேர் அலெக்ஸாந்தர் ஜொன்ஸ்டன் (Sri Alexander Johnston), இலங்கையின் முதல் பிரதம நீதியரசர், இவரும் இலங்கை சோனகர்கள் அறபுக்களின் வழித் தோன்றல்கள் என்பதை திட்டவட்டமாகக் கூறுகின்றார். முஸ்லீம் என்ற சமய அடையாளத்துடன் இலங்கைக்குள் பிரவேசித்த வட அறேபியர்கள் அனேகமாக அரசியல் அகதிகளாக பிரவேசித்தவர்கள். இவர்கள் அறேபியாவில் இருந்து வெளியேறி, இன்றைய ஈராகின் யூப்ரிடீஸ், டைக்கிறிஸ் நதியூடாக இந்தியாவின் தென் பகுதியிலும், இலங்கைத் தீவிலும், மலாக்காவிலும் குடியேறினர். இந்த அடிப்படையில் இலங்கையில் ஏற்கனவே அறேபிய தொடர்புடைய மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில் இவர்கள் குடியேறினர். இதில் பிரதான இடங்களாகக் கருதப்படுவது, புத்தளம், கல்பிட்டி, குதிரை மலை, மாந்தோட்டம், மன்னார், யாழ்ப்பாணம், திருக்கோணமலை, மாத்தறை, வெளிகம, காலி, பேருவளை, கொழும்பு, கம்பொலை, ரத்தினபுர என்பனவாகும். மிக பின்னய காலத்தில் போர்த்துக்கேயரின் அச்சுறுத்தளினாலும் துறைமுகப்பட்டணங்களில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டதினாலும் இங்கு வாழ்ந்துவந்த சோனகர்கள் உற்புர கிராமங்களுக்கும், மலை நாட்டு பிரதேசங்களுக்கும் குடியேறினர்.

இரண்டாம் புவனேகபாகுவின் வாரிசு கலேபண்டார (வத்ஹிமி)” ஹஸ்த்தி சைலாபுரம்” என்ற பெயர் கொண்ட ”சோனக” அரசன் இன்றைய குருணாகல் பகுதியை ஆட்சி செய்துள்ளான். அரசனாக இருக்க அடிப்படை தகுதி “பெளத்தன்” ஆக இருத்தல் என்ற அன்றைய, அப்பிரதே மேல்மட்ட அரசியல் வாதிகளின் போக்கினால், இந்த அரசன் எத்துக்கல் மலை உச்சியில் இருந்து வீழ்த்தப்பட்டு கொலை செய்யப்படும் வரை அரசாட்சியிலேயே இருந்துள்ளான். இதைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கும் மன்னனின் எதிர்பாளர்களுக்கும் இக் கொலை தொடர்பாக ஆங்காங்கே கலவரம் நடந்தாக அறியப்படுகின்றது. ஆகவே இந்த விடயமும் இலங்கை சோனகரின் நீண்ட வரலாற்றை கூறுகிறது.

பிற்காலத்தில் இலங்கை கோட்டை, யாழ்ப்பாணம், கண்டி என்ற மூன்று இராச்சியங்களாக பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்ட போதும், இவற்றுக்குப் புறம்பாக ”வன்னிமை” அரசுகளும் இருந்தன. இவை இந்த இராஜதானிகளுக்கு புறம்பாக நிருவாக அதிகாரம் வழங்கப்பட்ட பிரதேசங்களாகும். இதில் முக்கியமானவை கிழக்கில் மட்டக்களப்பு, கொட்டியாரமும், வடமேற்கில் புத்தள பிரதேசமுமாகும். ஆனால் இந்த புத்தள பிரதேசம் ஒருகாலத்தில் கண்டி இராச்சியத்தின் கீழும், இன்னொரு காலத்தில் கோட்டை எல்லைக்கும் உற்பட்டிருந்திருந்தாக அறியக்கிடைக்கின்றது. ஒரு போதும் யாழ் இராஜ்சியதுக்கு கட்டுப்பட்டிருக்கவில்லை. புத்தளத்தில் ஆட்சியை தம் கையில் வைத்திருந்தவன் “தக்கியு தீன்” என்ற பாரசீக தொடர்பும், பாண்டிய மன்னனின் ஆதரவும் கொண்டவனாக சொல்லப்படுகிறது. கண்டி இராஜ்சியத்தின் வெளிநாட்டு வியாபாரம் புத்தளம், கல்பிட்டி துறைமுகம் ஊடாகவே நடைபெற்றுள்ளது. புத்தள நகரின் மேற்கே உள்ள “பெரு வழி ஆறு”, மீ ஒயா என சிங்களத்தில் அழைக்கப்படும், ஆறு புத்தளத்தில் இருந்து, மாத்தளை, அக்குரணை வரையும் செல்கிறது. இந்த ஆற்றோர பாதையை “கண்டிப் பெருவழி” என்றும் அழைப்பர். இந்த ஆற்றங்கரை பாதையில் புத்தளம் முதல் கண்டிவரையும் ஆங்காங்கே இருக்கும் முஸ்லிம்களை அதிகம் கொண்ட சோனக கிராமங்கள், சிறிய நகரங்கள் இன்றும் இருப்பதைக் காணலாம். “பெரு வழி ஆறு” தவளம் எனப்படும் பெருள்காவும் முறை அதாவது கூட்டம், கூட்டமாக மாடுகளின் மேல் பாரமான பொருள்கள் ஏற்றிச் செல்லும் முறைக்கு பெயர் பெற்ற பிரதேசமாகும். கண்டிப்பிரதேசத்தில் இருந்து கண்டிராஜ்ய வெளிநாட்டு ஏற்றுமதி பொருட்கள் புத்தளம், கல்பிட்டி துறைமுகங்கள் வரை கொண்டுவரப்பட்ட முறையும் இதுவாகும். அதேபோல் புத்தள துறைமுகத்திலும், குதிரை மலை துறைமுகத்திலும் இருந்து பொருட்கள் இந்த தவள முறையிலேயே மலைநாடு நோக்கி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆரம்பகால சோனகர் பற்றிய தவல்கள் ஒன்று பின்வரும் செய்தியையும் தருகின்றது. அதாவது கி.பி 437-407 பராக்கிரமபாகு காலத்தில், அநுராதபுரத்தில் “யொனாஸ்’ என்று குறிப்பிட்டு ஒரு பகுதி “சோனவர்”களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தாம். இன்றும் சிங்களவர் இலங்கை சோனகரை “யொன்னு” என்றும் அழைக்கின்றனர். இந்த “யொன்னு” என்ற சொல் பாளி மொழியின் “யொன்ன” என்பதன் திரிபாகக் கொள்ளப்படுகிறது. ஆனாலும் “யோனக்க” என்ற சிங்கள சொல்லாலேயே பொதுவாக இன்று ”சோனகர்” அழைக்கப்படுகின்றனர். “மரக்கல” எனும் காரணப் பெயர், அதாவது மரக் கப்பல்களில் இலங்கை வந்த “அரபிகள்” என்று பொருள்படவும் இவர்கள் அழைக்கப்பட்டாலும், இலங்கையின் “மலாய்”, “போரா”, மேமன் முஸ்லிம்கள் தவிர, ஏனைய முஸ்லிம்களின் இனப் பெயராக அவர்களின் பிறப்புசாட்சி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் “சோனகர்” (தமிழ்) ” யோனக்க” (சிங்களம்) என்பதே. ஆனாலும் இவர்களை இஸ்லாம் என்ற சமையத்துடன் அடையாளப்படுத்தியே, அதாவது 95% மேல்பட்ட சோனகர்கள் இஸ்லாமியர்களாக இருப்பதால் அவர்களை குறிக்கும் முகமாகவே இன்றைய இலங்கை கொடியில் “பச்சை” நிறம் தரப்பட்டுள்ளது. இலங்கைக் கொடியின் சிங்க அடையாலமே அரபியர்களின் அன்பளிப்பென்பது வேறுமொரு கதை.

இதைவிடவும் இன்னுமொரு வரலாறு இந்த “சோனவர்”ருக்கு உண்டாம். அதாவது இது மனித வரலாற்றின் ஆரம்பத்துக்கே செல்கின்றது. நாம் ஏற்கனவே பார்த்த இலங்கையும், இந்தியாவும் இன்னும் பல பிரதேசங்களும் ஓன்றிணைந்த காலப்பகுதி அது. அப்போது முதல் மனிதன் “ஆதம்” என்பவர் படைக்கப்படுகின்றார். அவர் இலங்கையின் பாவாதமலை (Adam’s Peak) அல்லது “சமனல கந்த” என்று சிங்களத்தில் சொல்லும் மலை உச்சியில் சுவனத்தில் (Paradise) இருந்து இறக்கப்படுகிறார். அவரின் காலடி அடையாளம் அந்த மலை உச்சியில் இன்றும் யாத்திரிகர்களால் தரிசிக்கப் படுகின்றது. டார்வின்னின் கூர்ப்பு கொள்கையை நம்புவோர்களைவிட மீதிபேர், அல்லது ஆகக் குறைந்தது மதங்களை நம்புவோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்ட விடயம் மனிதன் இறைவனால் படைக்கப்பட்டான் என்பதே. அப்படியானால் உலகத்தில் ஏதோ ஓர் இடத்தில் முதல் மனிதனின் சஞ்சாரிப்பு இருந்திருக்க வேண்டும். ஆப்ரஹாமின் வழி வந்த மதங்களான யூதமும், கிறிஸ்தவமும், இஸ்லாமும் அந்த முதல் மனிதன் “ஆதாம்” என்றே சொல்கின்றன. உலகத்தின் எந்த இடத்திலும் “Adam’s Peak” என்ற இடம் இல்லாமல் அது இலங்கையில் இருப்பதென்பது சிந்தனைக்கு எடுக்க வேண்டிய முதல் விடயமாகும். அதேநேரம் ஐரோப்பியர்தான் இந்த மலைக்கு அப்படி ஒரு பெயர் வைத்தனர் என்பது ஒரு பொய்யான வாதமாகும் என்பதோடு அப்படித்தான் அவர்கள் அம்மலைக்கு பெயர் வைத்தனர் என்றாலும் அது ஒரு தற்ச்செயலான விடயமாக இருக்க முடியாது. ஐரோப்பியரின் இலங்கைக்கான் வருகை ஆரம்பிக்க முன்னரே பல வெளி நாட்டார் இந்த “ஆதம் மலை”யை தரிசிக்கவென்று வந்துள்ளனர். அதில் பிரதானமானவர் நாம் ஏற்கனவே கண்ட மொரோக்கோ நாட்டைச்சேர்ந்த இப்னு பதுதா ஆவார்.

இந்த ஆதாம் சுவனத்தில் இருந்து வந்த படியால்(மதவாதிகளின் நம்பிக்கைப்படி) அவரின் வழிதோன்றகள் “சுவனர்” என அழைக்கப்பட்டனராம். இந்த அடிப்படையிலேயே சுவனர் திரிபடைந்து “சோனகர்” என்றறியப்பட்டனராம். ஆனால் இந்த சோனகரில் பலர் காலவோட்டதின் பிரகாரம் தமது கடவுள் நம்பிக்கைகளை மாற்றிக் கொண்டுள்ளனர். அது சிதறியும், திரிபடைந்தும் “நாகர்” என மாற்றம் அடைந்ததாகவும், இதன் அடிப்படையில் பாம்பை வழிபடும் “நாகர்”இனம் தோன்றியதாகவும், பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட கடற்கோள்களினால் இலங்கை இந்தியாவில் இருந்து பிரிந்து செல்ல நாகர்கள் இலங்கையின் வடக்கிலும், இந்தியாவில் பெங்களுரை அண்டிய பகுதியிலும், நாகர்லாந்து என்ற பிரதேசத்திலும் அதிகம் காணப்பட, சோனகர் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும், தென் இந்தியாவின் கீழைக்ரை, காவிரி பூம்பட்டிணம், வேலூர் பகுதிகளிலும் இன்றும் சோனகர்களாகவே காணப்படுகின்றனர். இந்த வரலாறு இன்னும் ஐயந்திரிபர நிறுவப்படாமல் இருக்க, சோனகர் அறபு கலப்புடைய இனமாக இந்தியாவிலும் இலங்கையிலும் இன்னும் சில இடங்களிலும் உருப்பெற்று அந்தந்த இடங்களில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே வாழ்ந்து வந்துள்ள வரலாறு சந்தேகங்களுக் கப்பால் நிருபிக்கப்பட்டுள்ள விடயமாகும்.

இருப்பினும் இந்த சோனகர் காலாகாலமாக வாழ்ந்த பிரதேசம் இன்று வரலாற்றில் இருந்து மறைக்கப்படுவதற்கான முயற்சியாகவே புலிகளின் “தமிழீழ வரைபடம்” அமைந்துள்ளது. அதயே இன்று அடிப்படை ஏதும் இல்லாத நாடுகடந்த தமிழீழ அரசு “தமிழீழம்” என்றும், அது தமிழர் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் பூர்வீக பூமியாகவும் சித்தரிக்கின்றது. இதையே இன்றும் புலம் பெயர் தமிழரும் (புலி ஆதரவு, தமிழ் பேசும் முஸ்லிம் என்ற கொள்கை ஆதரவு) ஒரு வேதவாக்காக காவித்திரிகின்றனர். இதைவிடவும் மோசமான விடயம் என்னவென்றால் சுமார் 225 வருட காலமாக இலங்கையின் மலை நாட்டு பகுதிகளில் வாழ்ந்துவரும் இந்திய தமிழர்களை இலங்கை பிரசைகளாக ஏற்றுக் கொள்ளும் சில இலங்கை தமிழர், கி.மு.னான காலப்பகுதியில் இருந்தே இலங்கையில் வாழ்ந்துவரும் “சோனகர்”களை அப்படியாரும் இல்லையென்றும், அவர்கள் சைவத் தமிழர்களாக இருந்து இஸ்லாமியத் தமிழர்களாக மாறியவர்கள் என்றும் எனவே அவர்கள் இன அடிப்படையில் “தமிழர்” என்ற அடையாளத்துடன் மெளனித்து இருக்கும்படியும், அப்படி இல்லாவிட்டால் நாடோடிகளாக இங்கு வந்த மாதிரி திரும்பிப் போய்விடவேண்டும் என்று கூறுவது ஒரு இனத்துக் கெதிரான உரிமை மீறலாகும். படுமோசமான, மட்டரகமான இனத் துவேசமாகும். அது இப்போதே கலைந்தெறியப் படாவிட்டால், இந்த நிலைப்பாட்டில் இருக்கும் தமிழர்களே எம் இனத்தின் முதல் எதிரிகளும் ஓன்றுபட்ட இலங்கையினதும் எதிரிகளாவார்கள்.

எனவே நான் மேலே நிறுவியது இலங்கையின் சோனகர் என்ற இனத்தின் இருப்பை மாத்திரமல்ல, அவர்களுக்கோர் வரையறுக்கப்பட்ட இடமும் இருந்தது என்பதையுமே. சோனகர்களுக்கு ஒர் இடம் இருந்தது என்பது ஆண்டபரம்பரை மீண்டும் ஆள வேண்டும் என்ற த.வி.கூ யின் அசட்டுத்தனமான கூக்குரல் போன்றதொரு கொள்கையை முன்வைத்து முழு சோனகர் இனத்தையும் அழித்தொழிக்கவுமல்ல. மாறாக யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு அதாவது இலங்கை சிங்களவர்களை பெரும்பான்மையாக் கொண்ட பல்லின மக்கள் வாழும் நாடு. அதில் ஒவ்வொரு இனத்தின் உரிமைகளும் மதிகப்பட்டு ஓன்றுபட்ட இலங்கையாக அது இருக்க 21ம் நூற்றாண்டின் வளர்ச்சியில் நாம் தவர விடப்பட்டாமல் இருக்க வேண்டும் என்ற எனது நிலைபாட்டை ஐயந்திரிபர நிறுவவுமே.

கடைசியாக இது ஒரு ஆராய்ச்சி கட்டுரையாக வடிவமைக்கப்படாததால் இதற்கான உசாத்துணை நூல்கலின் விபரம் தரப்படவில்லை. இருந்தும் இந்த தலைப்பில் கலந்துரையாட விரும்புவோர் உங்கள் நியாயனாம் சந்தேகங்களை, தெளிவின்மைகளை, மேலதிக விளக்கங்களை பகிர்ந்து கொள்ள முனைந்தால் இது ஒரு ஆரோகியமான அடுத்த கட்டத்துக்கு எம்மை இட்டுச் செல்லும். மாறாக இதற்குள் மதங்களை இழுத்து அல்லது தேவையிலாமல் வேறு கருத்துக்களை புகுத்தி இதை குழப்ப முற்படுவது நாகரிகமற்ற செயலாகும் என கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்பேசும் மக்கள்: அடையாள இருட்டடிப்பு – இலங்கை முஸ்லீம்கள் சோனகர்.: நிஸ்தார் எஸ் ஆர் எம்

Mohamed S R Nisthar1948ல் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து நீறுபூத்த நெருப்பாய் இருந்து வந்த இன அடக்குமுறையும் அதற்கெதிரான போராட்டமும் 1983இல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இரண்டு தசாப்தங்கள் தாண்டி இன்று இந்த இனப்பிரச்சினைத் தீ அணைந்து போகப் பலரும் பல வழிகளிலும் முன்னின்றுழைப்பது மகிழ்ச்சி தருவதாய் இருந்தாலும் இனப்பிரச்சினையின் உச்சகட்ட காலங்களில் ஆங்காங்கே முளைவிட்ட ஒரு கேள்வி இப்போது மரமாகிக் கிளை பரப்பியுள்ளது. இது பெரு விருட்சமாகி புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்காமல் இருக்க தேவைக்கேற்ப அழகாய், அளவாய் கத்தரித்து பராமரித்து வளர்க்கப்பட வேண்டுமா என்ற கேள்வியும் மிகத் தெளிவான குரலில் ஓங்கி ஒலிக்கின்றது.

பல்லின மக்களைக்கொண்ட இலங்கைத் தீவில் இனப்பிரச்சினையைத் தீர்க்க சிங்கள இனத்தின் சார்பில் இலங்கை அரசும் (ஜனாதிபதி நீங்கலாக) தமிழினத்தின் சார்பில் தமிழீழ விடுதலைப்புலிகளும் (வேறு யாரும் சேர்க்கப்படாமல்) பிரதிநிதிகளாகச் செயற்படுவதால் இலங்கையில் இரண்டு இனங்கள் மட்டும் தான் உள்ளன என்பதோ அல்லது வேறு இனங்களுக்கு அரசியலை அடியொட்டியதான பிரச்சினைகள் இல்லை என்பதோ பொருளல்ல. தவிர, போரிட்ட இரண்டு இனங்களும் ஏதோ வொரு தீர்வை அடைந்தால் அது எல்லா இனங்களையும் திருப்திப்படுத்தும் என்ற உத்தரவாதமுமாகாது. ஏனெனில் இலங்கையின் இன்னுமொரு சிறுபான்மையினம் தொடர்பான அதன் அடையாளப் பிரச்சினையில் சில சிக்கல்கள் இருப்பதால் இனப்பிரச்சினை தொடர்பாக அதன் பங்களிப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

“இலங்கை முஸ்லிம்கள்” என்போரே இந்தப் புதிய பிரச்சினையின் கருப்பொருளாகும். 1990இல் நடந்த இரண்டு முக்கிய வரலாற்றுச் சம்பவங்கள் இந்தப் புதிய பிரச்சினைக்கான தீர்வொன்றின் தேவையை உணர்த்தியது. இதில் 1வது, கிழக்கிலங்கையில் தொழுகை நேரத்தின்போது வயதுபேதமின்றி சிறியோர் முதல் தள்ளாடும் வயதினர்வரை நூற்றுக்கு மேற்பட்டோர் மசூதிக்குள் வைத்து புலிகளால் ஒரே நேரத்தில் காரணமின்றிச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம். 2வது அதே ஆண்டில் யாழ், மன்னார், முல்லைத்தீவு ஆகிய தமிழ் – முஸ்லீம் பூர்வீக பகுதிகளிலிருந்து பலாத்காரமாக ஒரு சில மணிநேரத்தில் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டமை.

மேற்படி இரண்டு சம்பவங்களில் இருந்தும் எழும்பிய புதிய கேள்விகள் இக்கட்டுரையின் அடிப்படைப் பிரச்சினையாகிய “சிறுபான்மையினம்” என்ற பதப்பிரயோகத்தின் சரியான விளக்கமொன்றின் தேவையை உணர்த்தி நிற்கின்றது.

இந்த “முஸ்லிம்களை” விடுதலைப்புலிகள் “தமிழ் பேசும் மக்கள்” என்ற பதப்பிரயோகத்தின் கீழ் அடக்கித் தாம் இனப்பிரச்சினை விவகாரத்தில் “தமிழ் பேசுவோரின்” பிரதிநிதிகள் என்றும், தமிழர்களுக்கும் சிங்களவருக்கும் இடையில் ஏற்படும் தீர்வும் உடன்பாடும் “தமிழ் பேசுவோர் எல்லோருக்குமான தீர்வே” என்ற நிலைப்பாட்டையும் கொண்டுள்ளனர். புலிகளின் இந்த நிலைப்பாட்டிற்கு வலிமை சேர்ப்பது போல் இலண்டனில் மையம் கொண்டுள்ள தமிழ் வானொலிகளும் பத்திரிகைகளும் இலங்கை முஸ்லீம்கள் தொடர்பாக எந்தவித விளக்கமுமின்றி “இஸ்லாமியத் தமிழர்” என்றும் “தமிழ் பேசும் முஸ்லீம்கள்” என்றும் இந்த இனத்தை அடையாளப்படுத்துகின்றனர்.

ஓரு இனம் தொடர்பான மேற்படி அனைத்து பதப்பிரயோகங்களும் அரசியல்ரீதியில் தெளிவை ஏற்படுத்தாதது மாத்திரமின்றி பிற்காலத்தில் புதிய பல பிரச்சினைகளையும் தோற்றுவிக்கக் கூடியதாகவே உள்ளன.

விடுதலைப்புலிகளின் “தமிழ் பேசும் மக்கள்” என்ற பதம் இனபேதமின்றி தமிழ் பேசும் மக்கள் எல்லோரினதும் நலன்களையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதாக அமைந்திருக்க வேண்டும். அப்படியானால் 1990இல் நடந்த துயரச் சம்பவங்களும் இதுபோன்ற சிறிய அளவிலான குரங்கு பாஞ்சான், ஏறாவூர், மூதூர் போன்ற இடங்களில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும், இனித் தொடரப் போகும் சம்பவங்களுக்கும் விடுதலைப்புலிகளின் சார்பில் சராசரி மனிதர்தானும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கங்கள், நியாயங்கள், உத்தரவாதங்கள் எதுவுமே இல்லை.

எனவே “தமிழ்பேசுவோர்” என்ற சொற்பிரயோகம் நடைமுறையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பது மிகத்தெளிவு. மேலும் “தமிழ் பேசுவோரின்” பிரதிநிதிகள் தான் புலிகள் என்றால் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் (SLMC) உடனான ஒப்பந்தம் ஏன் செய்யப்பட்டது? அது எதுகுறித்துச் செய்யப்பட்டது என்ற கேள்விகளுக்கப்பால் அப்படியொரு உடன்படிக்கை தேவையும் இல்லாதது. (ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் தெளிவாகப் பகிரங்கப் படுத்தப்படவில்லை). ஆகவே தமிழரும் முஸ்லீம்களும் அரசியல்ரீதியிலும் வேறுபட்டவர்கள் என்பது மிகத்தெளிவு.

மறுபுறத்தில் பொதுசனத் தொடர்பு சாதனங்கள் கூறும் “இஸ்லாமியத் தமிழர்”, தமிழ் பேசும் முஸ்லீம்கள், என்ற பதப் பிரயோகங்களும், மயக்கம்தரும் பண்புகளையே கொண்டுள்ளன. ஏனெனில் தமிழ் இனத்தில் உள்ளவர்கள் “சைவத் தமிழர்” என்றோ, “கிறிஸ்தவத் தமிழர்” என்றோ மதரீதியில் அடையாளம் காணப்படுவது இல்லை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சைவர்களும் கிறீஸ்தவர்களும் (அதன் உட்பிரிவினரும்) இனரீதியில் தமிழரென்றே கொள்ளப்படுகின்றனர். தமிழ் பேசும் சைவர், தமிழ் பேசும் கிறிஸ்தவர் என்று யாரும் அழைக்கப்படாத நேரத்தில் தமிழ் பேசும் முஸ்லீம்கள் என்று மாத்திரம் வரையறைக்குட்படுத்தப்பட்டு உள்ளதைக் காணலாம். இதிலிருந்து தமிழ்பேசும் முஸ்லீம்கள் என்போர் இனத்தால் தமிழர் அல்லர் என்பதோடு மாத்திரம் அல்லாமல் சிங்களம் பேசும் முஸ்லீம்கள் என்போரின் இருப்பையும் உறுதி செய்கின்றது. இது ஒருவகையில் சிங்களம் பேசும் கிறிஸ்தவரின் நிலைபோன்றது.

சிங்களம் பேசும் கிறிஸ்தவரை தமிழ் இனம் உள்வாங்க முடியாது. காரணம் அவர்கள் இனத்தால் சிங்களவர். அதேபோல் தமிழ்க் கிறிஸ்தவர் மதத்தால் சிங்களவர் போன்று கிறிஸ்தவராயினும் இனத்தால் தமிழராகவே இருக்கின்றனர். (இது பேசும் மொழியை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது போல் காணப்பட்டாலும் இது முழுக்க முழுக்க சாரும் இனத்தை அடிப்படையாகக் கொண்டது.) எனவே இங்கு சிங்களம் பேசும் முஸ்லீமை எவ்வாறு சிங்களவர் எனக் கருதக் கூடாதோ, கருத முடியாதோ, அதேபோல் தமிழைப் பேசுவதால் மட்டும் தமிழ் பேசும் முஸ்லீம்களை தமிழர் என்று வரையறுத்துவிட முடியாது.

இந்த இடத்தில் கவனிக்கப்படவேண்டிய இன்னுமொரு விடயம், புதிதாகச் சமயம் மாறுவோர், சமயம் மாறி முஸ்லிமாகவரும் தமிழரும், சிங்களவரும் சமயத்தால் முஸ்லீம் என்பவரே தவிர அவர் இனத்தால் இன்னும் தமிழரும் சிங்களவருமே.

ஒரு காலத்தில் யாழ்ப்பாணப் பகுதியில் பௌத்தம் செழிப்புற்றிருந்ததை வரலாறு கூறுகின்றது. அப்போது பௌத்தத்தைப் பின்பற்றிய தமிழர் சமயத்தால் பௌத்தர் என்று இனங் காணப்பட்டதால், அவர்களின் இனம் சிங்களம் என்றாகி விடவில்லை. அவர் அன்றும் இன்றும் என்றும் தமிழரே. அதேபோல் சமயத்தால் முஸ்லிமாக இருக்குமொருவர் சைவராகவோ கிறிஸ்தவராகவோ பௌத்தராகவோ சமயத்தை மாற்றிக்கொண்டாரென்றால் அவர் சைவர், கிறிஸ்தவர் அல்லது பௌத்தரே தவிர அவரின் இனஅடையாளம் தமிழர் என்றோ அல்லது சிங்களவரென்றோ மாறிவிடப் போவதில்லை. அப்படியானால் இங்கு எழும் நியாயமான கேள்வி இந்த இலங்கை முஸ்லீம் என்போர் இனரீதியில் யார் என்பதே.

இதற்கான பதில்

இனப்பிரச்சினைக்கான தீர்வுநோக்கி முன்னேறும் இந்த முக்கியமான வரலாற்றுக் கட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய நியாயமானதும் அரசியல் ரீதியில் மிக முக்கியமானதுமான (Politically crucial) விடயம் முஸ்லீம்கள் பற்றிய நிலைப்பாடு ஆகும்.

இக்கட்டத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்யப்படும் தவறுகளும் செய்யத் தவறும் விடயங்களும் நாளைய அமைதியான ஒன்றுபட்ட இலங்கையில் அல்லது சிங்களவர் தமிழர் சுயாட்சிப் பிரதேசங்கள் என்ற அமைப்புக்குள் அல்லது ஸ்ரீலங்கா, தமிழீழம் என்ற இரண்டு இறைமையுள்ள நாடுகளில் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்தை தோற்றுவிக்கும்.

இன்று சிங்கள பேரினவாதம் (மறைமுக) தமிழ்ப் பேரினவாதம் என்பவை மாத்திரமல்ல வளர்ந்து வரும் தனி பௌத்த மதவாதமும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. உலகின் முதல் பிக்குகளாட்சி (Theocracy) ஆட்சிக்கான நாடிப்பிடிப்புகளையும் இந்த இடத்தில் மறுப்பதற்கில்லை. (ஆனால் தமிழரிடையே மதவாதம் வெளிப்படுவதற்கான அறிகுறி அரிதிலும் அரிதாகவே காணப்படுகின்றது).

இலங்கை முஸ்லீம்கள் இன அடையாளம் இல்லாமல் மத அடையாளத்திலேயே தமது அரசியலை நடத்த விரும்பினால் பல இனங்கள் வாழும் நாட்டில் மாறுபட்ட சூழலிலுள்ள ஒரு நாட்டில் அதிலும் நாம் சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாய் வாழும் நாட்டில் சர்வதேசங்களின் கவனம் அதிகரித்து வரும் ஒரு நாட்டில் அது நமது இருப்பையே கேள்விக்குறியாக்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

உதாரணமாக விடுதலைப் புலிகளின் முஸ்லீம்கள் தொடர்பான நிலைப்பாட்டை நோக்கும் போது அதில் சந்தர்ப்பவாதம் இழையோடுவதை இலகுவாகக் காணலாம். அவர்களில் தமிழ் பேசும் மக்கள் என்ற நிலையை விடுத்து இப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் முஸ்லீம்களை ஒரு கலாச்சாரக் குழுவாக ஏற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

இந்தக் கலாச்சாரக் குழு என்ற சொற் பிரயோகம், தமிழ் பேசும் மக்கள் என்பதை விடவும் குறைவான நிலை. ஒரு மக்கள் கூட்டத்தில் பல வகையான கலாச்சாரங்கள் பின்பற்றப்படலாம். ஒருவன் உணவு உண்ணும் முறையிலிருந்து நாட்டை நிர்வகிக்கும் விடயங்கள் வரை பலவிதமான கலாச்சாரப் போக்குகளை கடைப்பிடிக்கலாம். இனம் என்ற பரந்த பரப்புக்குள் கலாச்சாரம் என்பது ஒரு சிறு பகுதியே. சரி ஒரு பேச்சுக்காக கலாச்சாரக் குழு என்பதை ஏற்றுக் கொண்டாலும் அக் குழுவின் நிலை என்ன, உரிமைகள் என்ன என்பதற்கு இன்னும் விடை கொடுக்கப்படவில்லை.

இதைவிடவும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இலங்கை முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஒரு தலைமையின் கீழ் வரவேண்டும் அதன் பிறகு அவர்கள் தனியான குழுவாக (Entity) பேச்சு வார்த்தை மேசைக்கு வரலாமா என்பது பற்றித் தீர்மானிக்கலாம் என்று கூறியது மிகவும் அவதானத்துக்குரியது.

ஆலோசகர் பாலசிங்கத்தின் அரசியல், கூட்டல் கழித்தல் படி ‘இலங்கை முஸ்லீம்கள் பரம்பரை பரம்பரையாக ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்ந்த அரசியல் நடத்தியவர்கள். 1990களில் துடிப்போடு முன்னேறிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) அதன் ஸ்தாபக தலைவர் மறைந்த அஷ்ரஃப்பின் திட்டமிட்ட கொலையின்பின் துண்டு துண்டாகி முஸ்லிம்களின் அரசியல் குரல் அஸ்தமிக்க ஆரம்பித்து விட்டது’ என்பதாகும்.

‘இலங்கை முஸ்லிம்கள் தனியான பிரிவினர் எனவே நாட்டின் இனப்பிரச்சினை தொடர்பான சமாதான முன்னெடுப்புகளில் அவர்கள் பங்குகொள்ள வேண்டியது அவசியம். அதை விடுதலைப் புலிகளாகிய நாங்கள் உத்தரவாதப்படுத்துகிறோம். ஆகவே முஸ்லிம்கள் அதற்கான அதிகாரத்தை அவர்கள் விரும்பும் தலைமைக்கு அல்லது கட்சிக்குக் கொடுக்கலாம்’ என்று பாலசிங்கம் கூறி இருந்தால் அதில் சந்தேகிக்க எந்த விடயமும் இல்லை. இதைவிடுத்து முஸ்லிம்கள் முதலில் ஒன்றுபடுங்கள் (ஒன்றுபடமாட்டார்கள் என்பது அவரது எதிர்பார்ப்பு) அப்புறம் மிகுதியைப் பார்க்கலாம் என்பது இனப்பிரச்சினையின் சமாதானத் தீர்வு பேச்சுவார்த்தைகளில் முஸ்லீம்களுக்குத் தனியிடம் இல்லை என்பதற்கான முன் அறிவிப்பாகும்.

இந்த இடத்தில் கலாநிதி சித்தீக்கின் கூற்றொன்றும் சாலப்பொருந்தும். அதாவது முஸ்லிம்களை விட மிக அதிகமாக தமிழர்களே இன்று பிரிந்து காணப்படுகின்றனர். அவர்களின் பிரிவை பத்துக்கும் மேற்பட்டதாக அடையாளங் காணலாம் என்பதாகும். ஆக, இங்கு எத்தனையாக யார் பிரிந்துள்ளனர் என்பது பிரச்சினையல்ல. பேச்சுவார்த்தைக்கு யார் தகுதியான பிரிவினர் என்பதே முக்கியம். அரசதரப்பு, தமிழர்களே முதலில் ஒன்றுபடுங்கள். அப்புறம் மீதியைப் பார்க்கலாம் என்றால், போர் தொடருமே தவிர அருமையான இந்தச் சமாதான ஒப்பந்த சூழல் இன்று இருந்திருக்காது. என்றும் இருக்காது. ஏனெனில், ஜனநாயக ரீதியில் விடுதலைப் புலிகளின் தலைமையின்கீழ், தமிழர் எல்லோரும் ஒன்றுபடுவதென்பது நடக்க முடியாத விடயம்.

இலங்கையில் முஸ்லிம் என்ற சமயவழிப் பதப்பிரயோகம் இலங்கையின் எதிர்கால அரசியலில் அவர்களை ஒரு தேசிய இனத்தின் அந்தஸ்திலிருந்து கீழிறக்கிவிடும். ஆகவே அவர்கள் தமது இனத்தின் பெயரை தூசுதட்ட வேண்டும்.

இலங்கை முஸ்லீம்கள் சமய அடையாளத்தினூடே அரசியலில் செயற்பட விரும்பினால் நாளை சிங்கள இனத்தின் கிறிஸ்தவர்களும் தமிழினத்தின் கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவர்களின் சிறுசிறு சமயப் பிரிவினரும் (Cult), ஏன் முஸ்லீம்களின் உட்பிரிவினரும் கூட தங்கள் இருப்புக்கான சட்ட அங்கீகாரம் கோரலாம். இலங்கையின் இன்றைய கிறிஸ்தவர், சிங்கள பௌத்தர்களின் உன்னிப்பான அவதானிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். சமயரீதியான நெருக்குவாரங்கள் கிறிஸ்தவர்களுக்கு அதிகரிக்கும்போது அதற்கான நிவாரணமாக முஸ்லீம்களுக்கான பிரத்தியேக ஏற்பாட்டை கிறிஸ்தவர்களும் கோரலாம்.

விடுதலைப் புலிகளும் கூட முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகளைத் தட்டிக் கழிக்க தமிழ் கிறிஸ்தவர்களைக் காரணம் காட்டி தமதாட்சியில் ஒரு சமயப் பிரிவினருக்கு மாத்திரம் பிரத்தியேக சலுகை தரஇயலாது எனலாம். நிலைமையை தங்களது அடக்குமுறைக்குச் சாதகமாகவும் பயன்படுத்தலாம்.

இதையெல்லாம் விட மிகப் பயங்கரமான விடயம், விடுதலை புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச் சேரலாம். அதிலும் விஷேடமாக அமெரிக்காவுடனோ அல்லது இஸ்ரேலுடனோ அல்லது இரண்டு நாடுகளோடும் சேர்ந்து இலங்கை முஸ்லீம்களை இஸ்லாமியப் பயங்கரவாதிகள் என்று பெயரிட்டு மிக இலகுவாக ஓரங்கட்டி விடலாம். இது அதீத கற்பனை அல்ல. ஏகாதிபத்தியவாதிகளினதும் பேரினவாதிகளினதும் கைவந்த கலை. விடுதலைப் போராட்டம், பயங்கரவாதம், நாட்டு நிர்மாணம், உலக ஒழுங்கு, நாகரீக உலகு என்ற பதப்பிரயோகங்கள் அவரவர்களின் நலன் கருதியே பொருள் வழங்கப்படும்.

ஆகவே நாம் நமது இனப்பெயரில் அரசியல் நடத்துவதே அரசியல் சாணக்கியமாகும் (Political manoeuvring). நமது இனத்தின் பெயர் நமது பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் மிகத்தெளிவாகத் தெரியப்படுத்தப்பட்டு உள்ளது. சிங்களத்தில் “யோனக்க” என்றும், தமிழில் “சோனகர்” என்றும் ஆங்கிலத்தில் “மூர் (MOOR)” என்றும் எழுதப்பட்டு உள்ளது. இது எமக்கு இழுக்கல்ல. இது ஒரு காரணப் பெயர். எந்த இனமும் தூய்மையான இனமல்ல. அதனால் மாசுபட்டவர் என்ற பொருளல்ல.

நாம் ஒரு கலப்பினம். ஓன்றில் தமிழ்நாட்டில் காயல்பட்டினம், கீழ்க்கரையில் இருந்து வந்த அரபுக் கலப்புடைய தந்தையருக்கும் இலங்கையின் பெரும்பாலும் தமிழ்த் தாய்மாருக்கும் அல்லது நேரடி அரபுத் தந்தையர்களுக்கும் உள்ளுர் தமிழ், சிங்களத் தாய்மார்களுக்கும் அல்லது அரபு கிழக்கு ஐரோப்பியக் கலப்பில் வந்த தந்தை வழியினருக்கும் உள்ளுர் சிங்களத் தமிழ்த் தாய்மாருக்கும் அல்லது மேற்சொன்ன தந்தைவழி வட ஆபிரிக்கக் கலப்பில் தந்தை வழியினருக்கும் உள்ளுர் தமிழ் சிங்களத் தாய்மார்களுக்கும் இடையே ஏற்பட்ட உறவில் அல்லது திருமணப் பந்தத்தின் வழிவந்தவர்கள் இலங்கைச் சோனகர்கள்.

இந்தச் சோனகர் என்போர் இலங்கையில் மாத்திரம் அல்ல, மொரோக்கோ, தமிழ்நாட்டின் சில பகுதிகள் பிலிப்பைன்ஸ் ஆகிய இடங்களிலும் வாழ்வதால் இலங்கையில் உள்ளோர் இலங்கைச் சோனகர் (Ceylon Moor) என அழைக்கப்படுக்கின்றனர்.

இலங்கைச் சோனகர்களின் இருப்பு, இஸ்லாம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் முன்பு அல்லது அதன் சமகாலத்தில் ஏற்பட்டது என்பது வரலாறு. ஆக, சோனகர் என்பதை இஸ்லாத்துடன் முழுக்க முழுக்கத் தொடர்புபடுத்தி தமிழரில் இருந்தும் சிங்களவரில் இருந்தும் மதமாற்றம் பெற்றோர் எனச் சில இலண்டன் வானொலிகளும் தமிழ்ப் புத்திஜீவிகளும் கூறிவருவது நிரூபிக்கப்பட முடியாத வரலாற்றுப் பிழை. இலங்கைச் சோனகரின் தோற்றமும் வாழ்வும், அதன் மொழி, கலாச்சாரத் தாக்கங்கள், ஐரோப்பியப் படையெடுப்புக் காலங்களில் அந்த இனம் நாட்டுக்கு ஆற்றிய சேவை என்பன எல்லாம் நீண்ட வரலாறு ஆகும்.

ஆக, இலங்கைச் சோனகர் என்போர் தனித்தவொரு இனம். அவர்கள் ஒரு தேசியம் (Nation). அந்தத் தேசியம் தனது விவகாரங்களைத் தானே கவனிக்கும் சுயநிர்ணய உரிமை (Right to Self Determination) அதற்குண்டு. தேவைப்படின், நிபந்தனைகளுடன் கூட்டுச் சேரவும் (இதுதான் விடுதலைபுலிகள் – முஸ்லிம் காங்கிரஸ் வன்னிச் சந்திப்பும் ஒப்பந்தமும் என்றால் பாராட்டப்பட வேண்டியதே) தனியே பிரிந்து செல்லவும் அதற்கு உரிமையுண்டு.

இந்த உரிமையைத்தான் இதுவரை காலமும் இலங்கையின் பேரினவாத அரசுகள் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இலங்கைத் தமிழருக்கு கொடுக்க மறுத்து வந்தனர். இப்போதும் மறுக்க முயல்கின்றனர். சுயநிர்ணய உரிமையை தமிழர் தரப்பு சோனகர்களுக்குத் தரமறுத்தால் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை நியாயமற்றதாகிவிடும். அது அவர்களுடைய போராட்டத்தினை போலியாக்கிவிடும்.

மேலும் ஏதாவது ஒரு இடத்தில் இனசுத்திகரிப்பு (Ethnic Cleancing) என்றால் சற்று நின்று உலக நாடுகள் அப்படியா என்று கேட்கின்றன. அதற்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டுமென முன்வருகின்றன. புயல் என்றால் வள்ளம் என்றால் பூகம்பம் என்றால் நோய் என்றால் உதவ முன்வரும் நாடுகள் கூட ஒரு சமயத்தவருக்கு பிரச்சினை என்றால் அடிப்படைவாதிகளாக இருக்க வேண்டும் அல்லது பயங்கரவாதிகளாக இருக்க வேண்டும் என்ற ரீதியில் உதவ முன்வருவதில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மதத்தவருக்கு எதிரானவருக்கு கை கொடுத்து உதவுகின்றன. இதில் உள்நாடு வெளிநாடு என்ற பேதமெல்லாம் கிடையாது.

இவை அனைத்தையும் நாம் கவனத்தில் கொண்டால், உலகின் சமகாலப் போக்குக்கேற்பவே எமது உரிமைகளைப் பெறவும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யவும் முடியும். சமயம் என்ற போர்வைக்குள் எமது அரசியலுக்கு பலம் சேர்க்க முயலலாம். ஆனால் இனம் என்ற வலுவான அடித்தளத்தில் இருந்து நமது கோரிக்கைகள் பிறக்க வேண்டும் என்பது எனது வாதம்.

(தேசம் இதழ் 17 – 2004) & (தேசம் இதழ் 18- 2004 )

ஐக்கியத்தை உணர்த்தும் ஹஜ்ஜுப் பெருநாள் – ஜனாதிபதி

mahinda-rajapaksa.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

 இலங்கை உட்பட உலகெங்கிலும் பரந்து வாழும் தங்களது சகோதர முஸ்லிம் மக்களுடன் இணைந்து ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இப்பெருநாள் வசதி படைத்தவர்கள் ஆவலோடு மேற்கொள்கின்ற புனித ஹஜ் யாத்திரையையும் இஸ்லாம் மார்க்கத்தில் உள்ள உயர்ந்த தியாகத்தையும் நினைவூட்டுவதாய் அமைந்துள்ளது.

இந்த வருடமும் ஹஜ் கடமையை மேற்கொள்வதற்காக இலங்கையிலிருந்து சுமார் 6,000 யாத்திரிகர்கள் புனித மக்கா சென்று பல்வேறு நாடுகளையும் சேர்ந்த இலட்சக் கணக்கான முஸ்லிம்களுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

பல்வேறு தேசங்களைச் சேர்ந்த, பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற, பல்வேறு கலாசாரங்களை உடைய இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து இறைவனின் மகத்துவத்தையும் புகழையும் பறைசாற்றுவது ஹஜ் யாத்திரை உணர்த்தும் ஐக்கியத்தை அடையாளப்படுத்தி நிற்கின்றது.

இஸ்லாம் போதிக்கின்ற இந்த ஐக்கியம் அவர்களது வாழ்க்கையில் நீடித்து நிலைத்திருப்பதோடு அவர்கள் அதனை ஏனைய சமயங்களைச் சேர்ந்த சகோதரர்களோடும் மானிட சகோதர உணர்வுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

இலங்கை முஸ்லிம்கள் எமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் எமது மக்களின் ஐக்கியத்திற்கும் குறிப்பிட த்தக் களவு பங்களிப்புகளைச் செய்துள்ளனர்.

பல நூற்றாண்டுகளாக அவர்கள் தாய் நாட்டின் முன்னேற்றத்திற்காக பங்களிப்புச் செய்து எமது நாட்டில் வாழுகின்ற ஏனைய சமூகங்களோடு ஐக்கியத்துடனும் நட்புறவுடனும் வாழ்ந்து வந்துள்ளதோடு அதனைத் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றனர்.

பயங்கரவாதிகளால் தங்களது சொந்த இருப்பிடங்களை விட்டும் வெளியேற் றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்றுவரும் சூழ்நிலையில் இவ்வருட ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இது அவர்கள் ஏற்கனவே வாழ்ந்துவந்த பிரதேசங்களில் சமாதானம், மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு நல்லிணக்க ஏற்பாடாகும்.

முஸ்லிம்கள் இன்றைய நாளில் செய்கின்ற பிரார்த்தனைகளில் எமது எல்லா மக்களுக்கும் கெளரவத்துடனான சமாதானம் நீடித்து நிலைப்பதற்காக வுமிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

எமது எல்லா முஸ்லிம் சகோதரர்களுக்கும் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த ஈத் முபாரக் வாழ்த்துக்கள்.

20வது வருடத்தில் மீண்டும் துளிர்ப்போம்! – யாழ் முஸ்லீம்களின் 20 வருட அனுபவப் பகிர்வு.

Osmaniya Collegeயாழ் முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் 20வது வருட  நிறைவை நினைவு கூறும் நிகழ்வும், தமது தாயகம் மீளும் நிகழ்வும்

இடம்: ஒஸ்மானியா கல்லூரி, யாழ்ப்பாணம்

காலம்: 6 நவம்பர் 2010 சனி காலை 9.00 மணியிலிருந்து 12.00 மணி வரை (தொடர்ந்து மதிய போசனம்)

பிரதம விருந்தினர்: திருமதி இமெல்டா சுகுமார், யாழ் அரச அதிபர்

விசேட விருந்தினர்: வணக்கத்திற்குரிய திருமதி யோகேஸ்வரி பங்குணராஜா, யாழ் மாநகர முதல்வர்

Agenda:

Parade on the Divested Muslim Area
Theme Presented by Dr H S Hazbullah

Panel Presentation

Brief History of Jaffna Muslims up to 1990 – by Mr M M M Ajmal
Displaced Life of Jaffna Muslims – by Mrs M H Sharmila

The Practical Challenges of the resettlement

பேச்சாளர்கள் :
கலாநிதி எச்.எஸ்.ஹஸ்புல்லா
திரு எம்.எம்.எம். அஜ்மால்
திருமதி எம்.எச்.சர்மிளா
அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.நியாஸ்
எஸ்.ஏ.சி.முபீன்
திரு ரெங்கன் தேவராஜன், சட்டத்தரணி
திரு எம்.எம்.ரமீஸ், சட்டத்தரணி, யாழ் மாநகர சபை உறுப்பினர்
சேக் அயூப் அஸ்மின் (நலீமி)
ஏ.கே.சுவர்காகான்

Organised by:
Social Educational & Development Organisation (SEDO)
Ulema (Muslim Theologians) Association of Jaffna
Jaffna Muslim Professionals Forum (JMPF)
Jaffna Civil Society for Equality (JCSE)
Jaffna Muslim Development Committee (JMDC)
School Development Society of Osmaniya College (SDS)
Muslim Members of Jaffna Municipal Council (MMCs)
Trustees of Jaffna Mosques and
Research and Action Forum for Social Development (RAAF)

._._._._._.
 தமிழ் – முஸ்லீம் இன உறவுகள் : த ஜெயபாலன்

தமிழ் – முஸ்லீம் இன உறவுகள்’ என்ற தலைப்பில் தேசம் சஞ்சிகை 2007 மார்ச் 10ல் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் வெளியிடப்பட்ட சிறப்பு மலரின் முன்னுரை இங்கு பதிவிடப்படுகிறது.

இன்று (ஒக்ரோபர் 30 2010) நடைபெறவுள்ள ‘தமிழ் – முஸ்லீம் இன உறவுகள்’ பற்றிய மேலதிக விபரங்களுக்கு: தமிழ் – முஸ்லிம் உறவுகள்: வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் – 20 வருடங்களுக்குப் பின்பு! : SLIF & SLDF

._._._._._.

தமிழ் – முஸ்லீம் மக்கள் புவியியல் ரீதியாக ஒருவரோடு ஒருவர் உறவாடி வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்த போதும் புறச்சூழல் அவர்களை பகைமையுடனும் சந்தேகத்துடனும் நம்பிக்கையீனத்துடனும் வாழ நிர்ப்பந்தித்து உள்ளது. தமிழ் – முஸ்லீம் இன உறவுகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியுடன் சிதைவடைய ஆரம்பித்துவிட்டது. காலத்திற்குக் காலம் முஸ்லீம் சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறைகள் எழுந்தமானமான தனி மனித தாக்குதல்களில் ஆரம்பித்து திட்டமிட்ட இன அழிப்பு, இனச் சுத்திகரிப்பு என்ற பரிமாணத்தைப் பெற்றது. இன்று தமிழ் – முஸ்லீம் இன உறவுகள் அதன் அடி நிலையிலேயே உள்ளது. இந்த நிலையை மாற்றியமைப்பது மிகவும் கடினமானதாக இருந்தாலும் இரு இனங்களினதும் எதிர்காலத்திற்கு இந்நிலை மாற்றி அமைக்கப்படுவது தவிர்க்க முடியாதது.

இந்த கடினமான பாதையை செப்பனிடுவதில் ஒரு காத்திரமான பங்களிப்பை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே ‘தமிழ் – முஸ்லீம் இன உறவுகள்’ என்ற தலைப்பிலான சந்திப்பு மார்ச் 10 2007ல் ஏற்பாடு செய்யப்பட்டது. அதையொட்டி ‘தமிழ் – முஸ்லீம் இன உறவுகள்’ என்ற இந்த சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது. தமிழ் – முஸ்லீம் இன உறவுகளை வலுப்படுத்துவத்கு, அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, அதை நோக்கிய நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இச்சந்திப்போ இந்த சிறப்பு மலரோ உதவுமாக இருந்தால் அது ‘தேசம்’ சஞ்சிகைக்கும் அதன் வாசகர்களுக்கும் கிடைத்த வெற்றியாகவே அமையும்.

தமிழின ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுபவர்கள் தங்களுள் ஓடுக்குமுறையாளர்களாகவும் இரட்டைவேடம் போடுவது தமிழின விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்மையை கொச்சைப்படுத்தி உள்ளது. இதன் துரதிஸ்டம் என்னவெனில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள், முன்னெடுப்பவர்கள் யாரும் உலக வரலாற்றில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வில்லை என்பது மட்டுமல்ல தமது சொந்த வரலாற்றில் இருந்தும் அதனைக் கற்றுக்கொள்ளத் தவறி உள்ளனர். வரலாற்று படிப்பினைகளைக் கற்று தம் போக்கை மாற்றியமைக்காத வரை வரலாறு மீளவும் அதன் ஆரம்பப் புள்ளிக்கே வரும் என்பது இயங்கியல் விதி. தமிழீழ விடுதலைப் போராட்டமும் கால் நூற்றாண்டுகளுக்குப் பின் மீண்டும் அதே இடத்தில் வந்து நிற்கிறது.

தமிழ் பேசும் மக்கள், தமிழர்கள் என்ற ஒற்றைப் பரிமாணத்திற்குள் முஸ்லீம் சமூகத்தை அடக்க, அடைக்க முற்பட்ட தமிழ் தேசியவாதம் பெரும்பாலும் தோல்வியையே சந்தித்து உள்ளது. அதன் ஆற்றாமை விஸ்வரூபம் எடுத்து தேசியவாதத்தின் உச்ச நிலைக்குச் சென்றது. தேசியவாதம் அதன் உச்ச நிலையில் பாசிச பரிமாணத்தை எடுக்கும் என்பதை தமிழ் தேசியவாதம் மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தி உள்ளது. முஸ்லீம் சமூகத்தின் மீதான படுகொலைகளும், அவர்கள் தங்களது தாயகப் பகுதிகளில் இருந்து துரத்தப்பட்டமையும் முஸ்லீம்களது துயரமான வரலாறு மட்மல்ல தமிழின வரலாற்றின் கறை படிந்த பக்கங்கள் என்பதையும் தமிழ் சமூகம் மறந்து விடக்கூடாது.

இந்த வரலாற்றுக் கறையை நீக்க மறப்போம் மன்னிப்போம் என்ற சம்பிரதாய வார்த்தை ஜாலங்கள் மட்டும் போதாது. உண்மையான, நேர்மையான, கடினமான உழைப்பின் மூலம் இரு சமூகங்களும் மற்றைய சமூகத்தினரின் இதயங்களை வென்றெடுக்க வேண்டும். முஸ்லீம் சமூகமே ஒடுக்கப்படும் சமூகமாக இருப்பதால் தமிழ் – முஸ்லீம் உறவுகளை மேம்படுத்துவதில் தமிழ் சமூகம் முன்னிலைப் பாத்திரம் எடுக்கவேண்டும். முஸ்லீம் மக்கள் மீதான சகல ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தோளோடு தோள் நின்று தமிழ் சமூகம் போராட வேண்டும். இதன் மூலமே வரலாற்றின் தவறுகளை சீர்செய்ய முடியும்.

ஒலுவில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் நேரடியாக தலையிடும்படி ஜனாதிபதிபதியிடம் உலமா கட்சி கோரிக்கை

சமீப காலமாக அம்பாரை மாவட்டத்தின் ஒலுவில் பிரதேச ஆலிம் நகர் முஸ்லிம்களின் வயற்காணிகளை அபகரிக்கும் முயற்சியில் சில அதிகாரிகள் ஈடுபடுவதாக அம்மக்கள் முறைப்பாடு செய்கின்றனர். இது சம்பந்தமாக அண்மையில் அவர்கள் ஆர்ப்பாட்டமும் செய்தார்கள்.
 
யானைக்கான வேலிகளை அமைத்தல் என்ற பெயரில் காணிகளையும்ää மக்கள் நடமாட்டத்துக்கெனவுள்ள பாதைகளையும் மறைக்கும் முயற்சிகள் நடைபெறுவதாக மக்கள் குற்றம் சொல்கின்றனர்.  யானைகள் வயல் நிலங்களுள் புகாமல் இருக்கவே வேலி தேவை. ஆனால்  வயற்காணிகளுள் அவற்றின் சொந்தக்காரர்கள் செல்கின்ற வழியை மறைத்து வேலியை அமைப்பது  அரசாங்கத்தின் மீது களங்கம் கற்பிப்பதற்காக எதிர்க்கட்சிகளுக்கு மறைமுக ஆதரவான சில அதிகாரிகளின் நடவடிக்கையாகவே நாம்  நினைக்கிறோம்.

கடந்த 2005 ஜனாதிபதி தேர்தல் தொடக்கம் தங்களுக்கு பகிரங்கமாகவே ஆதரவு தெரிவித்து வரும் நாம் கடந்த காலங்களில் முஸ்லிம்களின் காணிகள் பறிக்கப்படுவதாக அரசின் மீது சில கட்சிகள் குற்றம் சாட்டியபோது அது தவறானது என்பதை பகிரங்கமாக மறுத்தவர்கள் நாம். ஆனால் தற்போது சில மாதங்களாக நடைபெறும் இத்தகைய நிகழ்வுகள் எம்மை கவலைக்குள்ளாக்குகின்றன. எம்மை பொறுத்தவரை எமது அரசியல் பணி மூலம் எமது சுய தேவைகளை கருத்திற்கொள்ளாது நாட்டினதும், மக்களினதும் நலன்களையே கருத்திற்கொள்பவர்கள். இதன்காரணமாகவே பயங்கரவாதத்துக்கெதிரான தங்களின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு வழங்கினோம்.
 
ஆகவே இக்காணிகள் விடயத்தில் நல்லதோர் தீர்வு கடைப்பதற்காக தாங்கள் நேரடியாக இது விடயத்தில் அவதானம் செலுத்தி 1990ம் ஆண்டுக்கு முன் வடக்கு கிழக்கு மற்றும் நாடு முழுவதிலும் எவர் எந்தக்காணிக்கு உரிமையாளரோ அவருக்கு அக்காணியை அனுபவிக்க எவரும் எந்த வழியிலும் தடைபோடாதிருப்பதற்கான தங்களின் நேரடி தலையீட்டை வேண்டுகிறோம். என்று உலமா கட்சி தலைவர், மௌலவி முபாறக் அப்துல் மஜீத் ஜனாதிபதிபதியிடம் 30.10.2010   ம் திகதி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் – முஸ்லிம் உறவுகள்: வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் – 20 வருடங்களுக்குப் பின்பு! : SLIF & SLDF

Tamil_Muslim_RaceRelationவடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்

சமாதானம் புரிந்துணர்வு, பொருளாதார மேம்பாடு, அரசியல் தீர்வு ஆகியவற்றை முன்னெடுக்க சமூகங்களிடையே சிதைந்துபோன சமூக உறவுகளை கட்டியெழுப்பல் அவசியம். இலங்கையை இன்று எதிர்கொள்ளும்  ஜனநாயகம்,  நீதி, சிறுபான்மை மக்களின் உரிமைகள் போன்ற அடிப்படை அரசியல் பிரச்சினைகளை எதிர்கொள்ள இனங்களுக்கான உறவுகள் கட்டியெழுப்பப்படுவது அவசியம்.

நீண்டதொரு போரின் பின் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை நீக்கவோ  துருவப்பட்டுள்ள  சமூகங்களின்  முரண்பாடுகளை களைந்து ஒன்றிணைக்கும் முயற்சிகளை முன்னெடுக்கவோ அரசு மட்டத்திலும் சிவில் சமூக மட்டத்திலும் போதிய செயல்பாடுகள் மேற்கொள்ளப்படாத இன்னிலையில் சமூக உறவுகளை கட்டியெழுப்ப நாம் என்ன பாத்திரம் வகிக்கலாம்.?

சமூகங்கள் தொடர்ந்தும் துருவப்பட்டிருக்கும் நிலையில் பல்வேறு புதிய பிரச்சினைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால் சமூகங்களுக்கிடையான இடைவெளி மேலும் அதிகரிக்கும் அபாய நிலை.

சொந்த இடங்களுக்கு திரும்புதல், மீள் குடியேற்றம், சமூகங்களுக்கிடையான புரிந்துணர்வு என்பன பிரிக்கமுடியாது பின்னிப்பிணந்துள்ளன. எனவே சொந்த இடங்களுக்கு மீளுதல், மீள் குடியேற்றம் என்பன சமூகங்களுக்கிடையான உறவுகளை வலுப்படுத்தும் வகையிலேயே நிகழ்த்தப்படவேண்டும்.

இந்த பின்னணியில் தான் 20 வருடங்களுக்கு முன் வடமாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சனைகளை அணுகவேண்டும்.

பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் புத்தளத்தில் அகதிமுகாம்களில் கடந்த 20 வருடங்களாக அல்லல்படும் அதே வேளை நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வந்த தமது பாரம்பரிய பிரதேசங்களை பௌதீக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் படிப்படியாக இழந்துள்ளனர்.

எனவே வடமாகாண முஸ்லிம்களும் வட கிழக்கின் ஏனைய பிரதேசங்களில் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் தமது சொந்த இடங்களுக்கு மீள சம உரிமையுள்ளவர்கள் என்ற அடிப்படையிலேயே இம்மீள் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். இதுவே சமூகங்களுக்கிடையான நல்லுறவை கட்டியமைக்கும்.

ஜனநாயகம், நீதி, சமாதானம் ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுக்கும் அனைத்து சக்திகளும் வடமாகாண முஸ்லிம்களினதும் ஏனைய பிரதேசங்களில் இடம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினதும் மீள் குடியேற்றமானது நீதியானது  உடனடியாக மேற்கொள்ளப் படவேண்டியது என குரல் கொடுக்க முன்வர வேண்டும். இதுவே இன்றைய சவால்.

Nirmala Rajasingam
SLDF Steering Committee

The venue:
Conference Room
3rd Floor, Berkeley Business Centre
 44 Broadway,  Stratford, London,  E15 1XH
(nearest tube station:  Stratford )

Saturday 30 October from 2- 5 pm

கலந்துரையாடல்:

தலைமை: நஜா மொகமட்

பேச்சாளர்கள்:
ரீஸா யெகியா
சின்னையா ராஜேஸ்குமார்
ராஜேந்திரன் ராமமூர்த்தி

பிரதம பேச்சாளர்:
Ustaz.Hajjul Akbar (Sri Lanka)