::முஸ்லீம் விடயங்கள்

::முஸ்லீம் விடயங்கள்

முஸ்லீம் விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

அடுத்த மாத முற்பகுதியில் முதற்கட்டமாக 99 பேருக்கு மெளலவி ஆசிரியர் நியமனம்

நாடு பூராவும் உள்ள பாடசாலைகளில் நிலவும் மெளலவி ஆசிரியர் வெற்றிடங்களுக்கு 615 பேரைப் புதிதாக நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. முதற் கட்டமாக அடுத்த மாத முதற்பகுதியில் 99 பேருக்கு மெளலவி ஆசிரியர் நியமனம் வழங்க உள்ளதாகக் கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் மொஹம்மட் தம்பி தெரிவித்தார்.

இவர்களுக்கான கடிதங்கள் கல்வி வலயங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு நேர்முகப் பரீட்சையில் தெரிவான ஏனைய விண்ணப்பதாரிகளுக்கு இரண்டாம் கட்டத்தின் போது நியமனம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங் களுக்கு ஏற்ப இவர்கள் நியமிக்கப்பட உள்ளதாகக் கூறிய அவர், சிங்களமொழி மூலம் 11 பேருக்கான வெற்றிடம் காணப்படுவதாகக் கூறினார். ஆனால் இந்த வெற்றிடங்களை நிரப்பத் தகுதியானவர்கள் இல்லை எனவும் அறியவருகிறது. மெளலவி ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் புதிதாக ஆசிரியர்களை நியமிப்பதற்காக 194 விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டனர். அதிலே முதற்கட்டமாக 99 பேர் தெரிவானதோடு ஏனையவர்கள் அடுத்த கட்டத்தின் போது மெளலவி ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜிஹாத், அல்பத்தாஹ், புலிகள், சங்கிலியன் படை. : யஹியா வாஸித்

Mosque_Bomb_Blast_Mar_2009புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் மட்டுமல்ல, புலிகள் சார்பான புத்தி ஜீவிகள் கூட இன்னும், இன்றும் முஸ்லீம்களை இரண்டாம் கண்கொண்டே பார்க்கின்றனர். அதிலும் கிழக்கில் முஸ்லீம்களையும், தமிழர்களையும் எவ்வாறு மோதவிடலாம் என்பதில் கண்ணும் கருத்துமாகவே உள்ளனர். அண்மையில் சகோதரர் பக்ஷீர் எழுதிய ஒரு கட்டுரையில் புலிகள் இறந்த பாறூக்குக்கு எவ்வாறு பட்டுக்குஞ்சம் கட்டி, பட்டுத்தாம்பரம் விரித்தனர் என எழுதியிருந்தார். யார் இந்த பாறூக், யார் அந்த மொகமட் ஹாசீம் மொகமட் றாபி என்பதை பார்க்க முதல், 1983 க்கு முந்தைய கிழக்கு மாகாணம் எப்படி இருந்தது என்பதை சற்று பார்ப்போம்.

1960,1970,1980 காலகட்டங்களில் கிட்டத்தட்ட மொத்த கிழக்கு மாகாணத்தவனும் படிக்காத முட்டாளாகவே இருந்தார்கள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப் பசேலென்ற வயல்வெளிகள், ஆங்காங்கே மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, வயல்வெளிகளுக்குள் குட்டிக்குட்டி தேனீர்கடைகள், நீண்ட நெடிய ஆறுகள், இடுப்பளவு தண்ணீருடன் குளங்கள், நாள்சந்தைகள், வாரச்சந்தைகள், துடிக்கத் துடிக்க கடல் மீன்களை கூறு போட்டு விற்கும் மீன் சந்தைகள், வீடுகள், பாடசாலைகள், கோயில்கள், தீர்த்தோற்சவங்கள், தீமிதிப்புகள், பெருநாட்கள், விளையாட்டுப் போட்டிகள்.

நாங்கள் வயலுக்கு பைசிக்கிளில் அதிகாலை போய்கொண்டிருப்போம். வழியில் தமிழ் சகோதரர் ஒருவர் மீன் வண்டியுடன் வந்து கொண்டிருப்பார். எங்களை கண்டதும் காக்கா நல்ல விரால் மீன் இருக்கு காக்கா வாங்கலையா என்பார். நான் வயலுக்கு போறன். வீட்ட பொண்டாட்டி இருப்பா நல்ல விரால் மீனாகப் பார்த்து ஒரு நாலு விரால் கொடு. நாளை பணம் தருகின்றேன் என சொல்லி விட்டு நாங்கள் வயலுக்கு செல்வோம். எஸ் வீ ஓல்ஆர் பிறதர்ஸ்.

புட் போல் மெச். ஒன்று யங்ஸ்டார். சித்திரவேல், நடராஜா, சின்னவன், போளையன், சங்கர், மூர்த்தி, தவராஜா என தமிழ் சகோதரர்களின் ரீம். ஆதம்பாவா, சீனிக்காக்கா, பாறூக், அஸீஸ், ஜமால், வட்டானை என முஸ்லீம் சகோதரர்களை கொண்ட ரீம். இரண்டு ரீம்காறர்களும் வெலிங்டன் தியேட்டர் அருகில் சந்தித்து அடுத்த வாரம் மோதுவதாக முடிவெடுப்பார்கள். செய்தி காட்டுத் தீயாக ஊர் முழுக்க றெக்கை கட்டிப் பறக்கும். தமிழ் பகுதிகளில் அடுத்தவாரம், காக்காமாருக்கு இருக்குது அடி எனவும், முஸ்லீம் பகுதிகளில் வாற வெள்ளிக் கிழமை தமிழனுக்கு இருக்குது குறுமா எனவும் இளைஞர்கள் பேசிக் கொள்வார்கள். மரவெட்டான் குளம் ( எழுதுமட்டுவான் மைதானம் ) வெள்ளிக் கிழமை தமிழ் முஸ்லீம் இளைஞர்களால் நிரம்பி வழியும். மச்சான் நடராஜா, பின்னால சீனிக்காக்கா வாறான் கவனம் மச்சான் என தமிழ் இளைஞர்களும், சீனிக்காக்கோவ் கோணர் கிக் ஒண்டு கொடுங்கோ சீனிக்காக்கா என முஸ்லீம் இளைஞர்களும் குரல் கொடுப்பார்கள். ஆம் யுத்தம், தர்ம யுத்தம் நடக்கும். இறுதியில் தமிழ் இளைஞர்கள் வென்று விடுவார்கள். முஸ்லீம் இளைஞர்கள் வெடி கொழுத்துவார்கள். பக்கத்தில் உள்ள யாசீன் காக்காட சினிமா தியேட்டரில் அனைவரும் ஒன்றாக 6.30 படம் பார்த்து, அடுத்தவாரம் தர்மசங்கரி மைதானத்தில மோதுவோம் மச்சான் என புறப்படுவார்கள். எஸ் வீ ஓல்ஆர் கசின்.

வீடு கட்ட வேண்டும். புது வீடுகட்ட நிலம் பார்க்க, நிலக்கால் நாட்ட தமிழ் சாத்திரிமாருக்கிட்டத்தான் அத்தனை காக்காமாரும் போவார்கள். கிழக்குமாணத்தில் உள்ள 90 வீதமான முஸ்லீம்களின் வீடுகள் 1983க்கு முதல் தமிழ் சகோதரர்களால்தான் கட்டப்பட்டது. அவ்வளவு நேர்த்தி, அவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் இருந்து தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு உதவுவது போல் செய்வார்கள். எஸ் வீ ஓல் ஆர் சேம் பிளட்.

ஆம் தமிழ் முஸ்லீம் இனக்கலவரங்கள் வரும். கல்முனை காக்காமாருக்கும், நற்பிட்டிமுனை தமிழ் சகோதரர்களுக்கும், அக்கரைப்பற்று காக்காமாருக்கும், பனங்காடு, கோளாவில் தமிழ் சகோதரர்களுக்கும், காத்தான்குடி காக்காமாருக்கும், ஆரப்பத்தை தமிழ் சகோதரர்களுக்குமிடையில் இரண்டு வருடத்துக்கொரு முறை இனக்கலவரம் வரும். இது திட்டமிட்ட புத்திஜீவிகளால் உருவாக்கப்படும் இனக்கலவரம் அல்ல. நேற்று இரவு தென்னங்கள்ளையோ அல்லது வடிசாராயத்தையோ அருந்தியவர்களால் உருவான இனக்கலவரம். முதல்நாள் இரண்டு பகுதியிலும் இரண்டு பேரின் செவியை (காது) அறுப்பார்கள்.. அடுத்தநாள் இரண்டு பகுதியிலும் கொஞ்சம் சோடா போத்தல் பறக்கும். மூன்றாம் நாள் அப்பகுதி பொலீஸ் அதிகாரி இருபகுதியிலும் கோயில் தலைவர்கள், பள்ளிவாசல் தலைவர்களை அழைத்து. ஓகே. இன்றிலிருந்து சமாதானம் சரியா என்பார். இருதரப்பாரும் தலையாட்டுவர். பகல் ஒரு மணிபோல் போலீஸ் வண்டியில் ஸ்பீக்கர் கட்டி. சரி இருதரப்பும் சமாதானம் ஆகிவிட்டது. நாளை கடை திறக்கலாம், பாடசாலைக்குப் போகலாம், எல்லாம் வழமை போல் இயங்கும் என்பார்கள். டண். இரண்டு பகுதியிலும் போத்தல் எறிந்த குறுப்புகள் அன்று பின்னேரமே சாறாட ( சிங்கள சகோதரர் ) கொட்டிலில் சோமபானம் அருந்திக் கொண்டிருப்பர். எஸ் வீ ஓல் ஆர் சக்களத்திகள்.

இந்த சக்களத்தி சண்டைகளையும், நண்பர்கள் சண்டையையும். மச்சான் மச்சினன் சண்டையையும் ஊதிப்பெருப்பித்த புண்ணியம் கிழக்கு மாகாணத்தில் 1979ல் வீசிய புயல், வெள்ளத்தையே சாரும். அன்று கிழக்கில் மருதமுனை, நீலாவணை, சின்னக்கல்லாறு, பெரிய கல்லாறு, ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிகுடி, களுதாவளை, பெரிய போரதீவு, கோயில் போரதீவு போன்ற இடங்களில் பாரிய சேதங்கள் ஏற்பட்டது. இப்பகுதி முழுக்க முழுக்க தமிழ் சகோதர, சகோதரிகள் வாழும் பகுதிகள். உடனடியாக அன்று பிற்பகலே பொத்துவில் தொடக்கம் கல்முனை வரையுள்ள முஸ்லீம் இளைஞர்கள் புஸ்பைக்கிலிலும், கால்நடையாகவும் சென்று அவர்களுக்கு எவ்வளவோ உதவிகள் செய்தார்கள்.. செய்தோம். ( இப்போதும் வன்னி புனிதர்களுக்கு, சட்டி பானையுடன் ஓடிப்போய் முதல் சோறு போட்டவனும் இந்த காத்தான்குடி சோனிகள்தான். திஸ் இஸ் இஸ்லாம். வட் ஹெப்பன் ரு வணங்கா மண். தற் இஸ் பக்கா கெப்பிற்றலிஷம். தற்ஸ் வை ரூ லேட் போர் எவ்ரிதிங் ) அப்போது, ஒருவாரத்தின் பின் யாழ்ப்பாணத்திலிருந்து பல இளைஞர்கள் இவர்களுக்கு உதவி செய்கின்றொம் பேர்வழி எனக்கூறிக் கொண்டு வந்து, உதவியுடன் உபத்திரவத்துக்கும் பிள்ளையார் சுழிபோட்டார்கள்.

அடியாத மாடு படியாது, அடி உதவுகின்றாப் போல் அண்ணன் தம்பி உதவமாட்டான், யாமிருக்கப் பயமேன் என ஆரம்பித்து, எங்களை, ஒன்றாக, ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்த எங்களை, கொத்தி கூறு போட்டு, கொத்து பராட்டா போட்டு, கொக்கரித்து, கொந்தளிக்க வைத்து, டேய் காக்கா வாறான், காக்கா வாறான் கதையை நிற்பாட்டு, ஏதோ றெக்கி எடுக்கத்தான் வாறான் என்ற அளவுக்கு எங்கள் நண்பர்களை, எங்களுடன் வாழ்ந்தவர்களை, எங்களுடன் ஒன்றாக உறங்கியவர்களை கிள்ளி தொட்டிலையும் ஆட்டி, திரும்பவும் ஆட்ட நினைக்கின்றீர்களே, இது தகுமா, இது தருமமா. கோவலனை கண்ணகி மாதவி விடயத்தில் மன்னிக்கவில்லையா, நடுக்காட்டில் தன்னை விட்டு விட்டு ஓடிய நளனை தமயந்தி மன்னிக்கவில்லையா, தன்னை வைத்து சூதாடிய அயோக்கியன் தருமனை பாஞ்ஞாலி என்ற பதிவிரதை மன்னிக்கவில்லையா. பிளீஸ் எங்களை கொஞ்சம் பழையபடி சேர்ந்து வாழத்தான் விடுங்களேன். வீ ஆர் ஸ்ரில் திங்கிங் எபவுட் அவர் ஓல்ட் கல்ச்சர்.

1981இல் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பாறூக். வீட்டில் தனது குடும்பத்தாருடன் ஏற்பட்ட சிறு பிரச்சனையில் மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்திலும் அலைந்து திரிந்தார். அச்சமயங்களில் இவர் யாழ்பாணத்திலுள்ள டவுண் பள்ளி வாசலில்தான் ( இப்போதைய ஈபிஆர்எல்எப் ஒபீஸ் அருகில் உள்ள பள்ளி வாசல் ) தங்கினார். ஒரு சில நாட்கள் சுபாஸ்கபேயில் வேலையும் செய்தார். பின்னர் யாழ் பஸ் நிலையத்தில் ஒரு கூவி விற்கும் வியாபாரியுடன் சேர்ந்து சிறு சிறு வியாபாரம் செய்தார். 1982 கடைசியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சில ஈபிஆர்எல்எப் முஸ்லீம் இளைஞர்களின் துணையுடன் யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பள்ளியில் தங்கியிருந்தார். அப்போது இவர் ஈபிஆர்எல்எப் இல் இணைய முயற்சி செய்தார். இவரது நடவடிக்கைகள் சிறப்பாக இல்லாததால் அவரை இணைத்துக் கொள்ளவில்லை. பின்னர் அவர் ஐந்து சந்தியில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் வேலை செய்தார்.

அதன் பின் இவர் பருத்தித்துறையைச் சேர்ந்தவரும், புலிகள் இயக்கத்தவருமான கெப்டன் நரேஷ் ( இவர் இப்போது இங்கிலாந்தில் இருக்கின்றார் ) அவர்களூடாக 1984 முற்பகுதியில் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார் அல்லது இணைக்கப்பட்டார். இவரது வேகமான வளர்ச்சி, இறைச்சிக்கடை அனுபவம் புலிகளை மலைக்க வைத்தது. இவரது வெட்டுக்குத்துகளைப் பார்த்த கிட்டண்ணா இவரை தனது மெய்பாதுகாவலராக இணைத்துக் கொண்டார். ஒருசில நேரங்களில் இவரது வளர்ச்சியில் லெப்.கேணல்.ராதாவுக்கு, வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிடுமோ என்ற ஒரு மன உளர்ச்சி, தளர்ச்சி இருந்தது. ஆம் அது 07-01-1987ல் சிங்கள கூலிப்படை கொன்றது என்ற பெயரில் பிற்பகல் 5.55க்கு கே.கே.எஸ்.வீதியில் ராதா தலைமையில் அரங்கேறியது. அக்கரைப்பற்று ( அக்கு, ஆர், அரை, பற்று )பெற்றெடுத்த ஒரு மறவன் செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்தானடா, கர்ணா எய்தவன் கர்ணனடா, கர்ணா எய்தவன் ராதாவடா. இது பாறூக்கின் சரித்திரத்தில் ஒரு துளி.

முகமட் ஹாசீம் முகமட் ராபி, இவர் அட்வகேட் ஹாசீம் பி.எஸ்சி (இந்தியா) அவர்களின் இரண்டாவது மகன். கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் ( அமைச்சர், எம்பி )பேரன். இவர் அக்ரைப்பற்று சென்றல் கொலேஜ்ஜில் ஓஎல் வரை படித்து, ஏஎல் யாழ். மகஜனாவில் படித்தவர். 1983 ஆரம்பத்தில் பரீட்சை முடிவை எதிர்பார்த்து அக்கரைப்பற்றில் இருந்தார். அப்போது 1983 ஜூலை கலவரம் வெடித்து, குட்டிமணி, தங்கத்துரை எல்லாம் பனாகொடையில் கொல்லப்பட, தமிழ் சிறைக்கைதிகளை மட்டக்களப்பு சிறைக்கு மாற்றினார்கள். மட்டக்களப்பு சிறையுடைப்புக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட, அக்கரைப்பற்றில் உள்ள முஸ்லீம் இளைஞர்களும், தமிழ் இளைஞர்களும் சேர்ந்து 1983 செப்டம்பரில் திருக்கோவில், தம்பிலுவில் கிராமங்களில் பொதுமக்களின் ஆயுதங்களை கொள்ளையிட்டார்கள். சிலதை உரிமையாளர்களின் ஒப்புதலுடன் பெற்றார்கள்.

அப்போது, முஸ்லீம் இளைஞர்கள் இந்த மொகமட் ராபியையும் அந்நிகழ்வுக்கு அழைத்து வந்திருந்தார்கள். முகமட் ராபி பங்கு பற்றிய முதல் நிகழ்வு இது. அதன் பின் இவர் பல முறை ஈபிஆர்எலஎப் இல் இணைய முயற்சித்தார். அப்போது இந்திய அரசும், இந்திய ரோவும் இணைந்து தமிழ் அமைப்புகளுக்கு பயிற்சி வழங்க முன் வந்திருந்தது. இச்செய்தி பத்மநாபா ஊடாக முதல் முதலில் கிழக்கு மாகாணத்துக்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக அடுத்த வாரமே கிழக்கு மாகாணத்தில் இருந்து 67 இளைஞர்கள் அனுப்பப்பட்டார்கள். இதில் இந்த முகமட் ராபியும் ஒருவர். இவர் ஒருவர்தான் முஸ்லீம் இளைஞர். யாழ்ப்பாணத்தில் ஈபிஆர்எல்எப்புக்கு அப்போது பொறுப்பாக இருந்த தோழர்கள் அவரை மட்டும் திருப்பி அனுப்பிவிட்டு, மற்றவர்களை மயிலிட்டி ஊடாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆம் தடங்கல் அப்போதே ஆரம்பித்து விட்டது. என்றாலும் அப்போது ஈபிஆர்எல்எப்பில் கிழக்கு மாகாணத்தில் எடுபிடியாக இருந்த ஒருவரின் ( எல்லா இயக்கங்களுமே முஸ்லீம்களை எடுபிடியாகத்தான் பாவித்தார்களா என்பது கடவுளுக்கே வெளிச்சம் ) நச்சரிப்பில், அவரே நேரடியாக யாழ். வந்து தோழர்களை உண்டு இல்லை என பண்ணி, முகமட் ராபியை மயிலிட்டியில் படகில் ஏற்றிக்கொண்டு வேதாராண்யம் ஊடாக மெட்ராஸ் சூழைமேடுவரை வந்து ராபியை, நாபாவின் ஆசீர்வாதத்துடன் உத்தரப்பிரதேசம் அனுப்பி வைத்தார்.

1984 பெப்ரவரிக்குப் பின் கிழக்கு கிழக்காக இல்லை. தடி எடுத்தவன், தண்ணி அடித்தவன், மச்சான் போட்டு பேசியவன், படலைக்குள் புகுந்து மையிறு புடுங்கியவர்கள் எல்லோரும் தடியுடன் இருந்தார்கள். இது கொஞ்சம் வித்தியாசமான தடி. இவனை பார்த்தால் கோழிக் கள்ளன் போல் இருக்கின்றான் மச்சான். போடு, போடு போட்டுத்தள்ளு என போட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார்கள். நண்பர்கள், சகோதரர்கள், ஒன்றாக எங்களை செக்கண் சோவுக்கு அழைத்துச் சென்றவர்கள், வா மச்சான், வாடா காக்கா என அன்பாக அழைத்த நண்பர்கள். வாடா காக்கா என, அடிநாக்கு நாசியையும், தொண்டையையும் ஒட்டுற மாதிரி அழைத்தார்கள். அதில் அன்பில்லை. ஆக்ரோஷம் இருந்தது. பள்ளி வாசல்கள், கடைத்தொகுதிகள், வயல்வெளிகள் எல்லாமே அழிந்து போயின. ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் போல் இருந்த நாங்கள், ஒருவரை ஒருவர் பார்க்க வெட்கப்பட்டோம். வேதனைப்பட்டோம். கையில் தடி வைத்திருந்தவர்கள் தவிர, மற்ற அனைத்து சோனிகளும், தமிழனும் வாழ்வாதாரத்துக்கு கஸ்டப்பட்டார்கள். கஸ்டப்பட்டோம். கூலித்தொழிலாழிகள் ஒரு வேளை உணவுக்கு அல்லாடினர்.

இதில் இரு பகுதியினரையும் குறை சொல்ல வேண்டியுள்ளது. தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களுடன் இருந்து திட்டமிட்டு செய்தார்கள். மூஸ்லீம் இளைஞர்கள் எவ்வித ஆயுதமயப்படுத்தலுமின்றி கூட்டம், கூட்டமாக சென்று சில அநாகரிக செயல்களை அரங்கேற்றினர். இதற்கு அரசும் பின்னால் நின்று நெய்யூற்றியது. இவற்றின் உச்சக்கட்டம்தான் சிறிலங்காவில் ஜிஹாத் அமைப்பு தோன்ற வழி வகுத்தது. ஆம் 1984 ஜூன் 17ல் ஜிஹாத் உருவானது. முழு சிறிலங்காவிலுமிருந்து 40 நலன்விரும்பிகளின் ஒத்துழைப்புடன் அது தொடங்கியது. காலி கோட்டை, வேருவளை தொடங்கி யாழ். நயினாதீவு வரையுள்ள மனிதாபிமானிகளின் உளப்பூர்வமான செயல்பாட்டுடன் அது தொடங்கியது.

அது அக்கரைப்பற்றில்தான் உருவானது. உருவாகி அடுத்த தினமே நாடுமுழுக்க துண்டுப்பிரசுரங்களும், கையேடுகளும் வினியோகித்தது. நாங்கள் ஆள வந்தவர்களல்ல. வாழவந்தவர்கள். பிளீஸ் எங்களை விட்டுடுங்கோ என கரம் கூப்பி சகோதர இனங்களை மன்றாடியது. அதன் பின், இனி எம் பகுதியில் நடக்கும் அத்து மீறல்களை நாங்கள் தட்டி கேட்போம் என சிறிலங்கா முழுக்க பறை சாற்றியது. அதன் பின் நடந்த, ஆள் கடத்தல், வரி, கப்பம், கொலைகளுக்கெல்லாம் ஜிஹாத் உரிமையுடன் நடவடிக்கை எடுத்தது. 1985 இல் பயிற்சி முடித்துக் கொண்டு முகமட் ராபி சிறிலங்கா வந்து திருக்கோயில் பகுதியில் ஈபிஆர்எல்எப் அமைப்புடன் தங்கியிருந்தார். இவரும் ஜிஹாத்துடன் இணைந்து விடுவாரோ என்ற பயத்தில் இவரை திருக்கோவிலில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்த ஒரு தமிழ் அமைப்பு முடிவெடுத்து, இவரை சங்கிலியால் கட்டி 1985 ஜனவரியில் ஒரு கொரளா காரில் கடத்திச் சென்றார்கள். ஆம் ஜிஹாத் அமைப்பின் ஒரு அதிரடி நடவடிக்கையின் மூலம், எவ்வித சிராய்ப்புமின்றி முகமட் ராபி நிந்தவூர் பிரதான வீதியில் ஒரு அதிகாலைப் பொழுது மீட்கப்பட்டார். திஸ் ஒப்பரேஷன் புறம் சிறிலங்கன் ஜிஹாத்.

அன்று முதல் அவர் ஜிஹாத் அமைப்பின் இராணுவ தளபதியாக செயல்பட்டார் ( இவர் எக்காலத்திலும் புலிகள் அமைப்பில் இருக்கவில்லை ). ஜிஹாத் அமைப்பின் வளர்ச்சி கண்ட அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி நேரடியாக இவர்களை அழைத்து, இரண்டு மூன்று பேச்சு வார்த்தைகள் நடாத்தி, ஆயுத உதவி செய்வதாக உறுதியளித்தார். ஆம் பயிற்சியும் வளங்கப்பட்டது. ஜிஹாத் பல முறை புலிகளுடன் அக்கரைப்பற்றிலும், காரைதீவிலும், மூதூரிலும் பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளது. ஜிஹாத் அமைப்பின் மிக, மிக பொறுப்பானவர்கள் எவ்வித உயிரச்சமுமின்றி புலிகள் சொன்ன இடங்களுக்கு சென்று பேச்சு வார்த்தைகள் நடாத்தியுள்ளனர். பேச்சு வார்த்தைகளுக்கு சென்றவர்களை கடத்த முயன்னற போதும், வார்த்தை ஜாலங்களால் தப்பி வந்ததுமுண்டு.

ஆம் 1985 மே 21ம் திகதி இரவு 7.15க்கு ராபி கிழக்கு மாகாண ஈரோஸ் அமைப்பினரால் நெஞ்சில் 27 துப்பாக்கி சன்னங்கள் விளாச சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை கொன்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த அவ்விளைஞர் கடந்த 12 வருடங்களாக பிரான்சில் இருந்து, போன வருடம் இங்கிலாந்துக்கு மலையேறியுள்ளார் என்பதையும் தாழ்மையுடன் கூறிக்கொள்ளலாம். அக்கொலைக்கு கட்டளை இட்டவர் இப்போது முஸ்லீம் சகோதரர்களுடன் வியாபாரங்கள் செய்கின்றார். ஆம் மன்னிப்பை விட உயர்ந்த பண்பு இந்த உலகத்தில் வேறு என்ன மண்ணாங்கட்டி இருக்கின்றது.

இந்த ஜிஹாத் அமைப்பு அரசு செய்த சில கூலிக்கு மாரடிக்கும் வேலைகளை செய்ய மறுத்தது. ஆம் சகோதர இனத்தை இரத்த வெறி கொண்டு தாக்குவதை ஜிஹாத் குழுவினர் அங்கீகரிக்க மறுத்ததின் பயனாய், அரசு கட்டாக்காலிகளை அழைத்து துப்பாக்கிளை கொடுத்து என்னென்னவோ செய்ய தூண்டியது. கூலிக்கு மாரடிக்கும் அக்குழு நிறைய செய்தது. அவை அனைத்தும் ஜிஹாத் அமைப்பின் தலையில் கட்டப்பட்டது. ஆம் இவ்வாறு ஒன்று நடந்தால் எப்படி சமாளிப்பது என ஜிஹாத் அமைப்பினர் ஆரம்பத்திலேயே திட்டமிட்டனர். ஆம். ஜிஹாத் அமைப்பிலிருந்து பலர் மறைமுகமாக தெரிவு செய்யப்பட்டு, அல்பத்தாஹ் என்ற அமைப்பு கட்டப்பட்டது. இதுவும் 1984 ஒக்டோபரில் உதயமானது. அல்பத்தாஹ். நிறைய மார்க்க , சன்மார்க்க பணிகள் மற்றும் விதவைகளுக்கு உதவுதல், நோயாளிகளுக்கு, பாடசாலைக்கு செல்ல வழியில்லாதவர்களுக்கு உதவுதல் எனவும் செயல்பட்டதுடன், சில நாகரிக நடவடிக்கைகளிலும் இறங்கியது.. ஆம் 1985 மே 21ல் சுட்டுக் கொல்லப்பட்ட ராபியின் ஞாபகார்த்தமாக, அக்கொலைக்கு துணைபோன சகலரையும் 1985 ஜூன் 21 இரவு 7.15 க்கும், 1986 மே 21 இரவு 7.15 க்கும் கழுவிலேற்றியது. இறுமாப்புடன் உரிமையும் கோரியது.

ராபி மரணமாகி இரண்டு மணி நேரத்தில் சிறிலங்கா முழுக்க ஒண்ணரை லட்சம் துண்டுப்பிரசுரங்கள் வெளியாகியது. அல்பத்தாஹ் என்ற தலைப்பில், அல்லாஹ் அக்பர், அல்பத்தாஹ் அமைப்பின் இராணவத் தளபதியும், முகமட் ஹாசீம் அவர்களின் மகனுமான முகமட் ராபி, 1985-05-21 இரவு 7..15 க்கு தமிழ் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு, மேலும் பல ஆயிரம் ராபிக்கள் உருவாக வழி வகுத்துள்ளனர் என்பதை, மிக, மிக பெருமையுடன் அறியத்தருகின்றோம். அல்பத்தாஹ், மத்திய செயற்குழு என நாலுக்கு நாலங்குலத்தில் அது வெளியாகி அரபு நாட்டு எம்பஸிகளின் கதவுகளையும் தட்டியது.

1985 மே 21 ராபி மரணமாகி இரண்டு மணி நேரத்தில் சிறிலங்காவின் முழு பாதுகாப்பு தலைமைகளும் அக்கரைப்பற்றில் நின்றன. அம்பாரையில் இருந்தும், கொண்டைகட்டுவான் இராணுவ முகாமில் இருந்தும் ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தயாராகுங்கள். அழியுங்கள் தமிழர்களின் குடியிருப்புக்களையும், வரலாறுகளையும் என்றார்கள். ஆம் உடனடியாக ஜிஹாத், அல்பத்தாஹ் பொறுப்பாளர்கள் கூடி இது தருணமல்ல, இது பொருத்தமுமல்ல, இது நாகரிகமும் அல்ல என முடிவெடுத்தார்கள். அரசுடன் ஒத்துழைப்பதில்லை என ஒரு சேர அத்தனை மத்திய குழு உறுப்பினர்களும் முடிவெடுத்தார்கள் ( சம்மாந்துறையைச் சேர்ந்த, மறைந்த அன்வர் இஸ்மாயீல் எம்பி அவர்கள் அல்பத்தாஹ் அமைப்பில் மத்திய செயற் குழு உறுப்பினராக இருந்தவர்களில் ஒருவர் என்பதை இங்கு பெருமையுடன் சொல்லலாம். ) பாதுகாப்பு பிரிவும், கொஞ்சம் ரத்தம் துடிப்பவர்களும் எவ்வளவோ தலையணை மந்திரங்கள் ஓதினார்கள். ஆனால் அன்பு, மனிதாபிமானம், பொறுப்புணர்ச்சி, எதிர்காலம் என்பதில் முழு நம்பிக்கை கொண்ட சிறிலங்கா ஜிஹாத் அமைப்பு, எய்தவனிருக்க அம்பை நோக வைக்க விரும்பவில்லை. ஆனால்,

ஆயுதம் தருகின்றோம், கொழுத்து முஸ்லீம்களின் பள்ளிவாசல்களை என்றதும் கொழுத்தியவர்களும், ஆயுத கப்பலே அனுப்புகின்றோம் விரட்டு சோனிகளை என்று இஸ்ரேல் சொன்னதும் ஒரு மாவட்ட முஸ்லீம்களின் வரலாறையே அழிக்க முற்பட்டவர்கள்தான் இந்த தமிழீழ விடுதலைப் புலிகள் என்றால் அது மிகையாகாது. ஆனால் அமைப்பு ரீதியாக செயல்பட்ட எந்த முஸ்லீம்களும் எக்காலத்திலும் கூலிக்கு மாரடிக்கவில்லை. மாரடிக்கவும் மாட்டான். தற் இஸ் இஸ்லாம்.

இந்த அல்பத்தாஹ் அமைப்பின் செயல்பாடுகளில்தான் அனைவரும் அக்காலங்களில் கவனம் செலுத்தினர். யார் இவர்கள். எங்கிருந்து தொழில்படுகின்றார்கள் என கண்ணுக்குள் விளக்கெண்ணை போட்டு தேடினார்கள். அதன் ஒரு வெளிப்பாடுதான் பிற்காலங்களில். ஓ இப்படியும் ஒரு ஆள்மாறட்டம் செய்யலாமோ என தோன்றிய சங்கிலியன் படை. ஆம் 1991 முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியதும், முஸ்லீம்களின் வீட்டுத் தொகுதியொன்றை விடுதலைப்புலிகள் தமது அச்சகமாக பாவித்தார்கள். அந்த அச்சகத்துக்கு வே.பிரபாகரன் அவர்கள் வந்து போவது வழமை. ஆனால் ஒரு நாள் தலைவர் வந்து ஒரு முக்கால் மணி நேரத்தின் பின் வெளியேறி இரண்டு நிமிடத்தில் அவ் அச்சகம் வெடித்துச் சிதறியது. அதற்கும் இந்த அல்பத்தாஹ்வுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற போர்வையில், யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே அக்காலங்களில், தமிழ் பெண்களை திருமணம் செய்து கொண்டிருந்த முஸ்லீம் சகோதரர்களை இந்த சங்கிலியன் படை வறுத்தெடுத்ததாகவும் அப்போது பட்சிகள் பேசிக்கொண்டன.

இப்போது சிறிலங்காவில் ஜிஹாத் இருக்கிறதா, இயங்குகின்றதா என்பதுதான் அனைவரின் கேள்வியும். ஜிஹாத் என்பது வாழ்க்கையுடன், வாழ்க்கைக்காக போராடுவது. அடுத்தவனைப் போய் வம்புக்கிழுப்பதல்ல. வம்புக்கிழுக்க இஸ்லாம் எந்த இடத்திலும் கூறவில்லை. அப்போதைய ஜிஹாத்தை சிலர் வம்புக்கிழுத்து, வம்பில் மாட்டிவிட நினைத்தனர். அதனால் நடப்பது தர்மயுத்தம், தமிழ் பேசும் தமிழ் மக்களுக்கும், சிங்கள அரசுக்கும் இடையில் ஒரு தர்மயுத்தம், அது தன் வழியில் நடக்கட்டும், நாம் முதலில் எம்மை புடம் போட்டுக் கொள்வோம். இக்கால கட்டங்களில் எம்மிடமும் ஆயுதம் இருந்தால் அது வேறு, வேறு பின் விழைவுகளை ஏற்படுத்தும் என்பதை பல மார்க்க அறிஞர்களும், புத்தி ஜீவிகளும் எடுத்துரைக்க, ஜிஹாத், அல்பத்தாஹ் அமைப்புக்களின் பைல்கள் மூடப்பட்டு அனைவரும் 1987 டிசம்பரில் நாடு கடந்தனர். கடந்து, முஸ்லீம்களின் கல்வி, வியாபார விடயங்களில் 100 வீத கவனம் செலுத்தினர். செலுத்திக் கொண்டுமிருக்கின்றனர். அதன் பயன்தான் இன்றைய முஸ்லீம்களின் கல்வி, வியாபார எழுச்சிகளெல்லாம். இல்லாவிட்டால், இன்றைய எமது முஸ்லீம் இளைஞர்கள் எங்கேயோ அகதி அந்தஸ்துக்கு விண்ப்பித்துக் கொண்டிருப்பர்.

இனி ஒரு ஜிஹாத்தோ, ஒரு அல்பத்தாஹ்வோ சிறிலங்காவில் தோன்றவும் கூடாது, தோன்றவும் மாட்டாது. இப்போது அனைவருக்கும் தேவை ஒரு பொருளாதாரப் புரட்சி. அந்தப் புரட்சி வெடிக்க நிச்சயம் சிறிலங்கா ஜிஹாத் கொடிபிடிக்கும். அப்புறம் மகிந்தவின் காதையோ, ரணிலின் காதையோ, சரத்பொன்சேகாவின் காதையோ கடித்து, மானில சுயாட்சியாவது எங்களுக்கு தாங்கோ மக்காள் என கேட்போம். ஒன்று பட்டால்தால் உண்டு வாழ்வு.

இதில் உள்ள தகவல்கள் எமது உள்ளக் கிடக்கைகளின் ஒரு பனித்துளி அன்பின் பக்ஷீர் காக்கா. இவ்வாறு ஆயிரம் கோடி பனித்துளிகள் வன்னியில் உறங்கிக் கிடக்கின்றன சகோதரர்களே. இனி இவைகளை மறந்துவிட்டு நல்லதோர் உலகம் செய்வோம்.

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வு; பேராசிரியர்கள் கைலாசபதி, இந்திரபாலா ஆகியோருக்கு நன்றி செலுத்துவது அவசியம்

கடந்த பதினான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாக இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் வரலாற்றைப் பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வுக்கு உட்படுத்தும் நிலை பாடத்திட்டத்தில் காணப்படவில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய நாகரிகம் ஒரு பாடமாக 1976 இல் அங்கீகரிக்கப்பட்டு ஆரம்பமானதன் பின்னரே இலங்கை முஸ்லிம்களின் வரலாறு அப்பல்கலைக்கழக மட்டத்தில் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாகக் கற்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை அங்கீகரித்த அப்போதைய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கே. கைலாசபதி, பீடாதிபதி பேராசிரியர் கே. இந்திரபாலா ஆகியோருக்கு விசேடமாக நாம் நன்றி செலுத்த வேண்டும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய வரலாற்றுத்துறை மாணவர்களுக்கு “இலங்கையில் இஸ்லாம்” என்னும் நூலினை அறிமுகம் செய்து உரையாற்றுகையில் பேராசிரியர் கே. எம். எச். காலிதீன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சென்ற ஆண்டு பங்களாதேஷ் டாக்காவில் இஸ்லாமிய மகாநாட்டு அமைப்பின் இர்ஸிகா என்னும் ஆய்வு நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தென்னாசியாவில் இஸ்லாமிய நாகரிகம் என்னும் சிம்போசியத்தில் முன்வைக்கப்பட்ட பேராசிரியர் காலிதீன் அவர்களின் ஆய்வுக் கட்டுரை நூலாக வெளியிடப்பட்டது.

தொடர்ந்து அங்கு உரை நிகழ்த்திய பேராசிரியர் காலிதீன், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவு மேற்குலக வரலாறு, இந்திய வரலாறுகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், இலங்கை முஸ்லிம்களின் அரசியல், கல்வி, கலாசார பின்னணிகளில் கவனம் செலுத்தி பிரபல்யமான இஸ்லாமிய நாகரிக வரலாற்றையும், அதன் சர்வதேச செல்வாக்கையும் தெளிவுபடுத்தும் வகையில் அதன் பாடத்திட்டத்தை அமைக்க வேண்டும். தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இதற்கு மிகவும் பொருத்தமான உயர் கல்வி நிறுவனமாகும்.

உலக நாகரிகங்களை ஒன்றுபடுத்தும் பணியில், இன்றைய உலகில் இஸ்லாமிய நாகரிகம் முன்னின்று பணியாற்றி வருகின்றது. பல இனங்கள், சமூகங்கள், குழுக்கள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்தி மனித நாகரிகத்தைக் கட்டியெழுப்புவது அதன் பணி எனவும் இஸ்லாம் கருதுகிறது. அப்பணியை முன்னெடுப்பது எமது கடமையாகும்.

உலமா சபையின் செயற்பாடுகளில் அரசியல் சாயம் பூசவேண்டாம் – நியாஸ் மெளலவி

niyas.jpgஉலமா சபையின் நடவடிக்கைகளில் அரசியல் சாயம் பூச முனைய வேண்டாமென மெளலவி நியாஸ் முஹம்மத் (கபூரி) வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-

அண்மையில் ஜனாதிபதி அபேட்சகர் சரத் பொன்சேகா அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைமையகத்திற்கு விஜயம் செய்தார். இவ்வாறான விஜயங்கள் ஜனநாயக உரிமையாகும்.  அவரவரின் தெரிவுமாகும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பக்க சார்புகளின்றி நடுநிலைமையாய் சமய, சமயோசித வழியில் வழிநடத்த ப்படும் முஸ்லிம்களுக்கான ஒரு பொது ஸ்தாபனமாகும்.

இது இவ்வாறிருக்க சரத் பொன்சேகா வந்துசென்றதை சிலர் தவறாக விமர்சிக்கின்ற கதையும் அரசியலாக்க முனைகின்ற கதையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இது விடயத்தில் பிழையாக நடந்துகொண்டதாகவும் அதற்காக எதிரணி உலமா சபை ஒன்று உருவாகி உள்ளதாகவும் கதை ஏற்படுத்தி பிரசாரம் செய்வதும் ஒரு வகை அரசியல் இலாபம் ஈட்ட முன¨யும் காரியமாகும்.

உலமா சபை தலைமை பீடத்திற்கு ஜனாதிபதி அபேட்சகராக களமிறங்கிய ஜெனரல் சரத் பொன்சேகா வருகை பற்றி கட்சி உணர்வில் உந்தப்பட்டசிலரின் தனிப்பட்ட வித்தியாசமான கருத்துகளின்றி அது மேல் மட்டத்தில் வெளியான கருத்தல்ல. 16.12.2009ம் திகதி ஜனாதிபதியைச் சந்தித்து இது விடயமாக உலமா சபையின் நிலைப்பாட்டை நான் தெளிவுபடுத்திய போது ஜனாதிபதி புன்னகை பூத்தவராக ‘மெளலவி அவர்களே இதுவெல்லாம் யார் சொன்னகதை’ அப்படி நான் கருத்துக்கள் கொண்டவனுமல்ல இதற்கு எதிராக விமர்சனம் செய்பவனுமல்ல.

உலமா சபை என்பது உலமாக்களின் சமயத்துடன் இணைந்த ஒரு முஸ்லிம் மத ஸ்தாபனமாகும். அங்கு எவரும் வரலாம், வாழ்த்தும் பெறலாம். அவர்களுக்காக ஒரு இடத்தை பெற்றுக் கொடுத்த எனக்கு அவர்கள் நன்றி சொன்னதும் வாழ்த்து தெரிவித்ததும் எனக்கு நன்கு தெரியும். எனக்கும் அந்த உலமா சபை தலைமையகத்துக்குச் செல்ல ஆசைதான். பாதுகாப்பு நலன் கருதி நான் அங்கு செல்ல முடியவில்லை. உங்கள் மூலம் உலமா சபை உலமாக்களை எனது இல்லத்தில் சந்திக்கவும் நான் ஆவலுடன் இருக்கின்றேன்.

இது ஒரு பெரிய விவகாரமும் அல்ல. இதை எனது சார்பில் உலமா சபைக்கு அறிவிக்க தாங்களுக்கு அனுமதி தருகிறேன் என ஜனாதிபதி கூறியதை நினைவூட்டி உலமா சபையை பிரிக்க முனைகிறார்கள் என்ற பிரசாரங்களை விளங்கிக் கொள்வது நல்லது என கருதுகிறேன். எவருக்கும் அரசியல் செய்ய உரிமையுண்டு. ஆனால் உலமா சபையையும் உலமாக்களையும் அடகு வைக்காமல் கீழ்த்தரமாக விமர்சிக்காமல் அவரவரின் அரசியலைத் தொடரட்டும்.’ என அறிவுரை வழங்குகிறேன். இவ்வாறு ஜனாதிபதி கூறியதை நியாஸ் மெளலவி அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

புனித முஹர்ரம் மாத ஆரம்பம்

வியாழன் மாலை மஃரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளி வாசலில் நடைபெற்ற பிறைக்குழு மாநாட்டில் புனித முஹர்ரம் மாதத்தின் தலைப்பிறை வியாழன் மாலை தென்பட்டதற்கான தகவல்கள் கிடைக்கப்பெறாமையினால் துல்ஹிஜ்ஜஹ் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து வெள்ளி மாலை சனி இரவு புனித முஹர்ரம் மாதத்தை ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இம் மாநாட்டில் கலந்துகொண்ட உலமாக்கள், கதீப்மார்கள், அகில இலங்கை ஜம்இயதுல் உலமா, ஷரீஆ கவுன்சில், அன்ஜுமன் பாயிஸ் இ. ரஸா (மேமன் சங்கம்) முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஜும்ஆ பள்ளி வாசல்கள், ஸாவியா, தக்கியா நிருவாகிகள் ஆகியோரால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதன் பிரகாரம் ‘புனித ஸபர்’ மாதத்தின் தலைப்பிறை பார்க்க வேண்டிய நாள் (புனித முஹர்ரம் 29) 16.01.2010 சனி பின்னேரம் ஞாயிறு இரவு எனவும் முடிவு செய்யப்பட்டது.

ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா அமைப்பை உருவாக்க உதவுங்கள் – அலவி, அஸ்வரிடம் உலமாக்கள் கோரிக்கை

macca.jpgஸ்ரீலங்கா ஜம்இய்யத் துல் உலமா என்ற புது இஸ்லாமிய இயக்கத்தை உருவாக்கி பக்கச் சார்பற்ற முறையில் அதனை இயங்க வைக்க உதவிகள் செய்ய வேண்டுமென ஆளுநர் எஸ். அலவி மெளலானா, ஜனாதிபதி ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் ஆகியோரை நேற்றுக் காலை கொழும்பில் சந்தித்த உலமாக்கள் கேட்டுக் கொண்டுள் ளனர்.அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நடுநிலையான அமைப்பு. அரசியல் கட்சிக்கோ அல்லது ஒரு வேட்பாளருக்கோ இந்தமைப்பு அதன் சரித்திரத்திலேயே ஆதரவளித்தது கிடையாது.

உலமா சபைக்கு ஒரு கட்டடம் வேண்டு மென்ற வேண்டுகோளு க்கமைய கொழும்பில் பெறுமதிமிக்க காணித் துண்டை பெற்றுக் கொடு த்து அதில் நிர்வாகக் கட்டடம் அமைத்துக் கொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முஸ்லிம் சமுதாயம் ஒருபோதும் மறக்காது என்றும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தலைமைகள் விடும் தவறுகளுக்காக முழு உலமா சமுதாயமும் பொறுப்பாகாது. நிதான மாக சிந்தித்து நடுநிலை வகித்து முஸ்லிம் சமூகத்தை நல்வழிப்படுத்தும் ஏராளமான உலமாக்கள் இந்நாட்டில் இருக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினர்.

இனங்களுக்கிடையே ஒற்றுமையும் ஒத்துழைப்பும் இன்றைய தேவை – பிரதமர்

061109pm.jpgஉலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் வருடந்தோறும் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவுக்கு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். அவர்களில் படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என்ற பேதங்கள் இல்லை.

அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர். ஒத்துழைப்பும் ஒற்றுமையுமே அதன் அர்த்தம் என்று பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

அச் செய்தியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது :-

இன்று எமக்கு தேவையாக இருப்பது இனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பும் ஒன்றுமையுமேயாகும். எமக்கிடையில் ஒத்துழைப்பும் ஒற்றுமையும் இல்லாமற் போனதன் விளைவாக நாம் வருடக்கணக்கில் வருந்த வேண்டியிருந்தது. சமாதானம் மகிழ்ச்சிக்கு பதிலாக சந்தேகம் வேறூன்றியதால் தான் சமாதான தேசமாகிய இலங்கையில் பயங்கரவாதம் தலைதூக்கியது- அதன்காரணமாக நாட்டிலுள்ள இளைஞர்கள் பலரின் பெறுமதியான உயிர்கள் எமக்கு இல்லாமற் போயின. அந்த நிலையை மாற்றி நாட்டில் சமாதானம் எற்படுத்த இப்போது எம்மால் முடிந்துள்ளது.

பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சமாதானம் ஏற்பட்டுள்ள இலங்கையில் இருந்து முதல்முறையாக ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கும், உலகளாவிய ரீதியில் ஹஜ் பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்களுக்கும் எமது பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் என்று பிரதமரின் வாழ்த்துச் செய்தி கூறுகிறது.

சவூதி அரேபியாவில் கடும் மழை, வெள்ளம் 77 பேர் பலி; பலரைக் காணவில்லை

சவூதி அரேபியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 77 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.கடந்த வருடங்களில் ஏற்படாதளவு பாரிய மழைவீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஹஜ் யாத்திரைக்காக வருகை தந்திருந்த மில்லியன் கணக்கான யாத்திரிகர்களில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென சவூதி உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

மக்கா நகரில் இடம்பெறும் முஸ்லிம்களின் வருடாந்த நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இப்பாரிய மழை வீழ்ச்சி இடையூறு ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.சவூதி அரசாங்கத்தினால் நடத்தப்படும் பத்திரிகை முகவர் அமைப்பின் தகவலின்படி ஜித்தா ராபி மற்றும் மக்கா ஆகிய நகரங்களிலேயே வெள்ளத்தால் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்த உயிரிழப்புகள் வெள்ளத்தினாலும் வீடுகள் இடிந்து வீழ்ந்தமையாலும் ஏற்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ் வெள்ளப் பெருக்கினால் பெருந்தொகையான மக்கள் கார்கள் மற்றும் பஸ்களினுள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, சவூதி மற்றும் வெளிநாட்டு குடியேற்றவாசிகளின் குடியிருப்புப் பகுதி என்பவற்றில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக ஜித்தாவின் பொதுப் பாதுகாப்பு தலைமை அதிகாரி அப்துல்லா அல்அம்ரீ தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும் நகரைச் சூழவுள்ள குடிசைப் பகுதிகளே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஹஜ் யாத்திரையினை மேற்கொள்வதற்காக உலகம் முழுவதிலுமிருந்தும் 3 மில்லியன் மக்கள் மக்காவிற்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் தமது பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெற இறைவனை வழிபட மலையேறும் போது சனநெரிசல் ஏற்படுவதுண்டு. இந்நிலையில், மழை காலம் என்பதனால் யாத்திரிகர்களை கவனமாக செயற்படுமாறு சவூதி அரசு எச்சரித்துள்ளது. கடந்த காலங்களில் யாத்திரையின் போது ஏற்படும் நெரிசலால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.ஹஜ் யாத்திரைக் காலத்தில் மழை வீழ்ச்சி ஏற்படுவது வழமை என்ற போதிலும் இம்முறை வழமைக்கு மாறாக கடும் மழை ஏற்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்திச் சேவையின் நிருபர் தெரிவித்துள்ளார்.

சமாதானம், சுபீட்சம் நிறைந்த வாழ்க்கை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது – ஜனாதிபதி ஹஜ் வாழ்த்து

mahinda0.jpgவடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் துரித மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் காரணமாக வட மாகாணத்தைச் சேர்ந்த முஸ் லிம்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி சமாதானம், சுபீட்சம் நிறைந்த புதிய வாழ்க்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தையிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

இலங்கை உட்பட உலகெங்கிலுமுள்ள இஸ்லாமிய சமூகத்தவர்களால் கொண்டாடப்படும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். ஹஜ் யாத்திரையையும் தியாகத்தையும் நினைவூட்டும் இப்பெருநாள் உலக முஸ்லிம்களின் மிகப் பெரிய வருடாந்த நிகழ்வாகக் காணப்படுகின்றது.

இன்றைய நாளில் இலங்கையி லிருந்து சுமார் 500 பேர்கள் உட்பட சுமார் நான்கு மில்லியன் முஸ்லிம்கள் புனித மக்கா நகரில் ஒன்றுகூடி ஹஜ் கடமையை நிறைவேற்றுகின்றனர். ஹஜ் யாத்திரையானது பல்வேறு தேசங்களைச் சேர்ந்த பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற பல்வேறு கலாசாரங்களை உடைய இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து ஐக்கியத்தோடும் சகோதரத்துவ உணர்வுடனும் தமது கிரியைகளை மேற்கொள்வதை அடையாளப்படுத்தி நிற்கின்றது. இந்த ஐக்கியம் அவர்களது வாழ்க்கையில் நீடித்து நிலைத்திருப்பதோடு அவர்கள் அதனை ஏனைய சமயங்களைச் சேர்ந்த சகோதரர்களுடனும் மானிட சகோதரத்துவ உணர்வுடன் பரிமாறிக் கொள்கின்றனர்.

இலங்கை முஸ்லிம்கள் எமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் எமது மக்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர். அவர்கள் வரலாற்று நெடுகிலும் எமது நாட்டிலுள்ள ஏனைய சமூகங்களோடு ஐக்கியத்துடனும் நட்புறவுடனும் வாழ்ந்து வந்துள்ளதுடன் அதனைத் தொடர்ந்தும் கடைப்பிடித்தும் வருகின்றனர். மூன்று தசாப்தகால பயங்கரவாதம் முற்றுப் பெற்றுள்ள இச் சூழ்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களோடு அச்சமின்றி வாழுகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நாளில் முஸ்லிம்கள் தமது விசேட சமயக் கிரியைகளின் போது கேட்கின்ற பிரார்த்தனைகளில் எம் எல்லோருக்கும் கெளரவமான சமாதானம் கிடைப்பதற்காக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு மகிழ்ச்சியும் சமாதானமும் மிக்க நன்நாளாக இருக்க எனது நல்வாழ்த்துக்கள்.

நபியவர்களின் பெயரில் பத்திரிகையில் படம் வெளியானமைக்கு ஜனாதிபதி ஆழ்ந்த கவலை! – பிரியதர்ஷன யாப்பா தகவல்

anura.jpgஇலங் கையின் தமிழ் தேசிய நாளிதல் ஒன்றில் கடந்த செவ்வாயன்று வெளியான முகம்மது நபி (ஸல்) அவர்களுடையதென பிரசுரிக்கப்பட்ட படம் ஒன்று தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிர்ச்சியடைந்ததாகவும் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது முஸ்லிம்களின் கலாசாரத்தில் உருவப்படத்துக்கு முக்கியத்துவமளிக்கப்படுவதில்லை. அதிலும் முகம்மது நபி (ஸல்) அவர்களின் உருவப்படத்தை எங்கும் காணமுடியாது.

இந்த உருவப்படம் வெளியான தகவல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினாலும் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள,  பிரமுகர்களினாலும் உடனடியாக ஜனாதிபதியின் கவனத்துகு கொண்டுவரப்பட்டபோதே ஜனாதிபதி இது தொடர்பில் தமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். அத்துடன் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்

அந்தப் பத்திரிகை நிறுவத்தின் தவறு காரணமாக இச்செயல் இடமபெற்றிருந்தாலும் அதனால் பாதகமான வேறு விளைவுகள் ஏற்படக்கூடாதென்ற காரணத்தினாலேயே ஜனாதிபதி உடனடி நடவடிக்கைகு உத்தரவிடடுள்ளார் என்றும் அமைச்சர் கூறினார்.