::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

ரஷ்யாவில் வெடி விபத்து; 102 பேர் பலி; 135 காயம்

ரஷ்யாவின் பெர்ம் நகரின் கேளிக்கை விடுதி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 102 பேர் உயிரிழந்தனர், 135 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் 85 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கேளிக்கை விடுதியின் 8வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த போது இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

வெடிபொருட்களை பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை முறையாக கடை பிடிக்காததே இந்த விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் மசூதி தாக்குதலில் நாற்பது பேர் பலி

pakisthan.jpgபாகிஸ் தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு அருகிலிருக்கும் மசூதியில் மக்கள் நிறைந்திருந்த நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் நாற்பது பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

அங்கே தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது குறைந்தது நான்குபேர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினார்கள். மசூதியின் ஆண்கள் மற்றும் பெண்கள் தொழுகை செய்யும் இரண்டு பகுதிகளிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கே மனிதர்கள் விலங்குகளைபோல படுகொலை செய்யப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.

தாக்குதல்தாரிகளுடன் பாதுகாப்பு படையினர் சுமார் ஒரு மணித்தியாலம் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாகவும், இறுதியில் தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் தம்மீது கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தில் பணிபுரியும் இந்நாள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் பலரும் இந்த மசூதிக்கு வருவது வழமை.

ஒசாமாவை தப்ப விட்டது புஷ் நிர்வாகமே; அமெரிக்க செனட் உறுப்பினர் புகார்

ஆப்கானிஸ்தான் மலைப் பகுதியில் ஒளிந்திருந்த அல்-கொய்தா தலைவர் ஒசாமாவை இராணுவ அதிகாரி உத்தரவால் பிடிக்க முடியாமல் போனது, என அமெரிக்க செனட் தெரிவித்துள்ளது.

அமெரிக்க செனட்டின் வெளி விவகாரக் குழு தலைவர் ஜோன் கெர்ரி தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது :-அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீது தாக்குதல் நடந்த சில மாதங்களிலேயே ஆப்கானிஸ்தானின் டோரா போரா மலை பகுதிகளில் ஒளிந்திருந்த அல்-கொய்தா தலைவர் ஒசாமாவை அமெரிக்க படைகள் சுற்றி வளைத்தன. அப்போதே ஒசாமாவை உயிரோடு அல்லது சுட்டு வீழ்த்தி பிடித்திருக்கலாம்.

ஆனால், இராணுவ தலைமை அதிகாரியின் உத்தரவின் காரணமாக, அப்போது அமெரிக்க படைகளில் அங்கிருந்து வெளியேறி விட்டன.

அப்போதே சுட்டு வீழ்த்தியிருந்தால், தொடரும் பயங்கரவாத சம்பவங்களை தடுத்திருக்கலாம். அப்போது செய்த தவறால் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் இன்று பயங்கரவாதம் தாண்டவமாடுகிறது.

எதிரியை ஒழிப்பதற்காக படையோடு ஆப்கானுக்கு சென்றாகி விட்டது. அங்கு சென்றபின் எதிரியை கொல்வதற்கு என்ன தயக்கம் வேண்டியிருக்கிறது? பாகிஸ்தானுக்கு சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை பகுதிகளை அமெரிக்க படைகள் முற்றுகையிட்டு, பாகிஸ்தான் வழியை அடைத்திருந்தால், ஒசாமாவின் கதை முடிந்திருக்கும்.

அதை புஷ் நிர்வாகத்தில் இருந்த ரம்ஸ்பீல்டு போன்றவர்கள் செய்ய தவறி விட்டனர். எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் செய்த தவறினால் இன்று பல நாடுகளிலும் அல்-கொய்தா ஆதரவுடன் பயங்கரவாதிகள் கொடி கட்டி பறக்கின்றனர். இவ்வாறு ஜான் கெர்ரி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் 2017ம் ஆண்டு வெளியேறி விடும்

white-house.jpgஆப்கா னிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் 2017ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக வெளியேறிவிடும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. 2001ம் ஆண்டு நியூயோர்க் இரட்டை கோபுர தகர்ப்புக்கு பின் ஆப்கானிஸ்தானில் பதுங்கியுள்ள அல்கொய்தா, தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தனது படைகளை அனுப்பி வைத்தது. இது தவிர நேட்டோ நாட்டு படைகளும் ஆப் கானிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் தங்களது படை வீரர்களை படிப்படியாக திரும்ப பெற்று வருகின்றன. 2011ம் ஆண்டுக்குள் தனது படைகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள கனடா முடிவு செய்துள்ளது. இதனால் ஆப் கானிஸ்தான் காந்தகார் பகுதியில் பாது காப்பில் ஈடுபட்டு வரும் அமெரிக்க படைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஒபாமா நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தானுக் கான அமெரிக்க படைத் தளபதி ஸ்டான்லி மெக் கிறிஸ்டல் நிலைமையை சமாளிக்க கூடுதல் படைகளை அனுப்பும்படி கேட்டுக்கொண்டு இருக்கிறார். எனவே 35 முதல் 40 ஆயிரம் வரையிலான இராணுவ வீரர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டு இருக்கிறது.

இது குறித்து வெள்ளைமாளிகை செய்தி தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறியதாவது :-

நமது படைகள் ஏன் அங்கு இன்னும் இருக்கின்றன என்று கேட்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா எடுத்து வரும் முயற்சிகள் இன்னும் முற்றுப்பெறவில்லை. அதற்காகவே தமது படைகள் அங்கு உள்ளன. ஆப்கானிஸ்தானில் கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்க படைகள் உள்ளன. இன்னும் 7 அல்லது 8 ஆண்டுகள் வரை இந்த படை இருக்கும். 2017ம் ஆண்டுக்குள் அமெரிக்க படைகள் முற்றிலுமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிடும்.

அரசியல் கட்சியினர் 57 பேரை படுகொலை செய்த பிலிப்பைன்ஸ் மாகாண கவர்னர் மகன் உட்பட 21 பேர் கைது

பிலிப்பைன்ஸ் நாட்டில் மாகாண கவர்னர் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்கிறது.  இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு குடாடாட்டு பழங்குடியின தலைவர் இஸ்மாயில்கான் ஆதரவாளர்கள் மனுதாக்கல் செய்ய சென்றனர்.

அப்போது இஸ்மாயில் மனைவி ஜெனாலின், அவரது ஆதரவாளர்கள், வக்கில்கள், பத்திரிகையாளர்கள் உட்பட 57 பேர் அம்பாட்டுவான் பழங்குடியின அரசியல் கட்சியினரால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இவர்களில் 22 பேர் பத்திரிகையாளர்கள் ஆவர்.

pili.bmpபிலிப்பைன்ஸ் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படுகொலை தொடர்பாக பலிப்பைன்ஸ் இராணுவத்தினர் 20 பேரை நேற்று கைது செய்தனர். மகுயின்டநாவ் மாகாண கவர்னராக உள்ள அண்தால் அம்பாட்டுவான் மகனும் மேயருமான ஜூனியர் அண்தால் என்பவரது தலைமையில்தான் ஆயுதம் தாங்கிய குழு குடாடாட்டு ஆதரவாளர்களை கடத்திச் சென்று படுகொலையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவர் இராணுவத்திடம் சரண் அடைந்தார்.

மும்பைத் தாக்குதல் தினமான நேற்று தமிழக கரையோரப் பாதுகாப்பு தீவிரம்

mumbai-terror-attack.jpgமும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தினமான (நவம்பர் 26 ஆம் திகதி) நேற்று தமிழகத்தின் தென்கிழக்கு கடலோரப் பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. மும்பையில் மீண்டும் தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறையினர் சமீபத்தில் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தென்கிழக்கு கடலோரப் பகுதிகளில் இந்திய கடற்படையும் கடலோர காவல்படையினரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பாக்கு நீரினை சந்தியில் இந்திய கடற்படையினரும் கடலோர காவல்படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உச்சிபுலியில் உள்ள விமான கண்காணிப்பு நிலையம் உஷார்படுத்தப்பட்டுள்ளதுடன், பாக்ஜலசந்தி,மன்னார் வளைகுடா பகுதியிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டக்கூடாது என்றும் தங்களுடைய அடையாள அட்டைகளை வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள், பெண்கள் உட்பட 21 பேர் பிலிப்பைன்ஸில் படுகொலை தேர்தல் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யச் சென்றவேளை சம்பவம்

பிலிப்பைன்ஸின் மகுண்டனோ மாகாணத்தில் 21 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டோர் மகுண்டனோ மாகாண உள்ளூர் அரசியல் வாதிகளின் ஆதரவாளர்களும், ஊடகவியலாளர்களுமாவர். உள்ளூர் ஆட்சி தேர்தல்களுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்றோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டனர். தீவிரவாத அமைப்பு கடந்த திங்கட்கிழமை இவர்களை ஆயுதமுனையில் கடத்திச் சென்றதாக அறிவிக்கப்படுகின்றது.

படுகொலை செய்யப்பட்ட 21 பேரின் சடலங்களைக் கண்டெடுத்ததாகக் கூறிய பொலிஸார் இவர்களில் 13 பேர் பெண்களென்றும் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுத்ததாகவும் கூறினர். பிரேதங்களின் தலைகள் துண்டிக்கப்பட்டும், உருக்குலைந்த நிலையிலும் காணப்பட்டன.

கொலைசெய்யப்பட்டோரில் உள்ளூர் அரசியல் வாதியின் மனைவியும் அடங்குகின்றார். மாகாண ஆளுநருடன் தொடர்புகொண்ட ஆயுததாரிகள் இவர்களைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுவதை ஆளுநர் முற்றாக நிராகரித்துள்ளார். தேர்தலில் வாக்களிக்கக் கூடாதென முஸ்லிம் அமைப்பொன்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்ததாகப் பொலிஸார் கூறினர்.

அரசியல் நோக்கங்களுக்காக இக்கொலைகள் நடந்துள்ளன. ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமைக்கு பிலிப்பைன்ஸ் அராசங்கம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸில் அடுத்த வருடம் பொதுத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. இதை முன்னிட்டு உள்ளூராட்சித் தேர்தல்கள் சில மாகாணங்களில் நடத்தப்படவுள்ளன. இத் தேர்தலில் வாக்களிக்கவோ போட்டியிடவோ கூடாதென பிரிவினைவாத அமைப்புக்கள் கோரியுள்ளன.

பாகிஸ்தான் பிரதமரின் மனைவி மீது குற்றச்சாட்டு

பாகிஸ்தான் பிரதமர் கிலானியின் மனைவி பவுசியா வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாமல் இழுத்தடித்தார் என்றும் இது தொடர்பான வழக்கில் அவருக்கு சாதகமாக அதிகாரிகள் நடந்துகொண்டனர் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.

பவுசியா, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வங்கியில் இருந்து 20 கோடி ரூபாய் கடன் வாங்கினார். ஆனால் பணத்தை ஒழுங்காக செலுத்தாததால் அந்த கடன் 57 கோடி ரூபாயாக உயர்ந்து விட்டது. அதன்பிறகு வட்டியில் சலுகை காட்டினால் பணத்தை திருப்பி செலுத்துவதாக அவர் வங்கிக்கு விண்ணப்பித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் அவர் 4 கோடியே 55 லட்சம் ரூபாய் மட்டுமே கட்டினால்போதும் என்று அதிகாரிகள் சலுகை காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த குற்றச்சாட்டை பிரதமர் கிலானி மறுத்து இருக்கிறார்.

ஈரான் ஜனாதிபதி பிரேஸில் பயணம்: இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் நேற்று திங்கட்கிழமை பிரேஸில் பயணமானார். இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் பிரேஸில் ஜனாதிபதி ஈரான் ஜனாதிபதியை வரவேற்கவுள்ளார். பிரதான வர்த்தக உடன்படிக்கையில் இருதலைவர்களும் கையெழுத்திட்ட பின்னர் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்ச்சிகளில் ஈரான் தலைவர் பங்கேற்கவுள்ளார்.

பிரேஸில் பல்கலைக்கழகத்தில் உரையாற்றவும் பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொள்ளவும் பிரேஸில் காங்கிரஸில் உரையாற்றவும் ஈரான் ஜனாதிபதி அழைத்துச் செல்லப்படவுள்ளார். மேற்கு நாடுகளின் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் பிரேஸிலுடனான உறவை வளர்ப்பதில் ஈரான் அக்கறை செலுத்தியுள்ளது.

இஸ்ரேல் ஜனாதிபதி ஷிமோன் பெரஸ் அண்மையில் பிரேஸில் சென்ற வேளை இவரது விஜயத்தை எதிர்த்துப் பாரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். ஈரான் யுரேனியத்தை மின்சாரத் தேவைக்காகவும் அமைதியான முறையிலும் கையாள்வதாக கடந்த செப்டம்பர் மாதம் ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு பிரேஸில் ஜனாதிபதி தெரிவித்தார். இதிலிருந்து இவ்விரு நாடுகளினதும் உறவுகள் விரிவடைய ஆரம்பித்துள்ளன.

பிரேஸில் பயணம் குறித்து ஈரான் ஜனாதிபதி கடந்த வெள்ளிக்கிழமை கூறியபோது இருநாடுகளினதும் பல்வேறுபட்டதுறைகளுக்கு இரு நாடுகளினதும் ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தினார். மேற்கத்தேய நாடுகள் ஏனைய நாடுகளின் விஞ்ஞான வளர்ச்சியைத் துண்டிக்க முயற்சிப்பதாகவும் அஹ்மெதி நெஜாத் குறிப்பிட்டார்.

பிரேஸில் மக்கள் உள்ள பக்கம் ஈரான் மக்கள் உள்ளனர். அப்பாவிப் பொது மக்களுக்கெதிரான ஷியோனிஸவாதிகளின் தாக்குதல்களைக் கண்டிக்கும் விடயத்தில் பிரேஸிலியர்களும் ஈரானியர்களும் ஒற்றுமையுடனுள்ளதாகவும் ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டார். மேற்கு நாடுகளின் அழுத்தங்கள் அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாத ஈரான் ஜனாதிபதி தென்னமெரிக்க நாடுகளுடனான உறவை வளர்ப்பதில் அக்கறையுடனுள்ளார். யுரேனியத்தை செறிவூட்டும் ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக இஸ்ரேலும் மேற்குலக நாடுகளும் சந்தேகிக்கின்றன.

இவ்வாறான நிலையில் பிரேஸில் ஈரானுடன் உறவு கொள்வதை அந்நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாப்புப் பெற பிரேஸில் ஈரானுடன் தொடர்புகளைப் புதுப்பிப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது. 2010 ல் ஈரானுக்கு வருமாறு பிரேஸில் ஜனாதிபதியை அஹ்மெதி நெஜாத் அழைப்புவிடுப்பார்

நாளை நடப்பதை யார் அறிவார்? பிரதமராவது பற்றி ராகுல் காந்தி கருத்து

19rahul.jpgவருங்கால பிரதமராக தன்னை நினைக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் என்ன நிகழும் என்று எவராலும் கணிக்க முடியாது. அப்படியிருக்க வருங்கால பிரதமராக எப்படி என்னை நினைக்கிறீர்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பினார். விஜயவாடாவில் புதன்கிழமை கல்லூரி விழாவில் பங்கேற்ற ராகுல், அங்கு மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.

நாட்டின் பிரதமராக யார் வேண்டுமானாலும் வரலாம். அப்படியிருக்கையில் தயவுசெய்து என்னை எதிர்கால பிரதமராக நினைக்க வேண்டாம் என்றார். தற்போது பிரதமராக உள்ள மன்மோகன் சிங் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார். சிறந்த பிரதமர் நிறைவேற்ற வேண்டிய அனைத்துப் பணிகளையும் அவர் மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்” என்றார்