::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

“பேரரசு இறையியலும் காசா இனப்படுகொலையும் – மேற்குலகின் மனிதத்துவத்தில் ஏதோ தவறு இருக்கிறது?” பெத்தலகேம் பாதிரியார் முன்தார் ஐசாக்

பெத்தலகேம் தேவாலயத்தின் பாதிரியார் முன்தர் ஐசாக் டிசம்பர் 22 அன்று வழங்கிய பிரசங்கத்தில், மேற்குலக நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து இன அழிப்புக்கு ஆதரவளிப்பதை வன்மையாகச் சாடினார். மேற்குலக கிறிஸ்தவ நாடுகள் தார்மீகப் பண்பை இழந்துவிட்டதாகத் தெரிவித்த அவர், பாலஸ்தீனம் அழிவுகளில் இருந்து மீண்டெழும் ஆனால் இன்று இன அழிப்புக்கு ஆதரவு வழங்கியவர்கள் என்றைக்கும் தங்கள் கறையைக் கழுவிக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார். டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று தேசம்நெற் நடத்திய கூட்டத்தில் பேசிய ஒவ்வொரு பேச்சாளர்களினதும் உரைகளை எதிரொலிப்பது போல் பாதிரியார் முன்தார் ஐசாக்கின் பேச்சு அமைந்தது.

குழந்தை யேசு பிறந்த மாட்டுத்தொழுவம் அமைந்த பெத்தலகேமில் கட்டப்பட்ட மிகப் பழமையான தேவாலயம். வழமையாக இத்தேவாலயத்தில் கிறிஸ்மஸ் பண்டிகை மிகச் சிறப்பாக நடைபெறுவது வழமை. ஆனால் இம்முறை காசாவில் இடம்பெற்ற இனவெறித் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அத்தேவாலயம் சோடித்து அழகு படுத்தப்படவில்லை. இஸ்ரேல் இராணுவம் காஸா மீது நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதலையும் யுத்தத்தில் 10,000 சிறார்கள் வரை படுகொலை செய்யப்பட்டதையும் குறிக்கும் வகையில் குழந்தை யேசு இடிபாடுகளுக்கு மத்தியில் படுத்திருக்கும் வகையில் யேசுவின் பிறப்பு உருவகப்படுத்தப்பட்டது.

பிறக்க இருக்கும் குழந்தை யேசுவைக் கொலை செய்ய ஆட்சியாளர்கள் கொலைத்திட்டம் தீட்ட நாஸரத்தில் இருந்து மரியாள் ஜோசப்புடன் அகதியாக பெத்தலகேம் வந்து குழந்தையைப் பிரசவித்தார். இதுவே தற்போது காஸாவில் நடைபெறுகின்றது. பாலஸ்தீனப் பெண்கள் பயங்கரவாதிகளை ஹமாஸைப் பிரசவிப்பதாகக் கூறி இஸ்ரேல் இராணுவம் காஸாவில் உள்ள பெண்களையும் குழந்தைகளையும் படுகொலை செய்கின்றது. கடந்த இரு மாதங்களிற்கு மேலாக கிறிஸ்மஸ் தினம் அன்றும் கூட இஸ்ரேல் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 80 வீதமானவர்கள் பெண்களும் குழந்தைகளுமே. இதனை உருவகப்படுத்தும் வகையிலேயே பெத்தலகேம் தேவாலயம் குழந்தை யேசுவை இடுபாடுகளுக்கு இடையே படுக்க வைத்திருந்தது.

பாதிரியார் முன்தர் ஐசாக், தனது பிரசங்கத்தில், மேற்கத்திய உலகின் போலித்தனம் மற்றும் அவர்களின் இனவெறியை கடுமையாக விமர்சித்துள்ளார், காசா உலகின் தார்மீக திசைகாட்டியாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார். பெத்லகேமில் உள்ள எவாஞ்சலிக்கல் லூத்தரன் தேவாலயத்தில் டிசம்பர் 22 அன்று தனது கிறிஸ்துமஸ் செய்தியை வழங்கிய பாதிரியார் ஐசக், “மகிழ்ச்சியின் நேரமாக இருந்திருக்க வேண்டிய இத்தருணம் மரண துக்கம் ஆகி பயப்படுகின்றோம்” என்று கூறினார்.

“காசா, எங்களுக்குத் தெரியும் அன்று இருந்தது போல் இனி இல்லை என்று, இது ஒரு அழிவு. இது இனப்படுகொலை” என்று முன்தார் ஐசாக் கூறினார். “இதனை இந்த உலகம் மௌனமாக இருப்பதைப் பார்த்து நாங்கள் வேதனைப்படுகிறோம். சுதந்திர நாடுகள் என்று அழைக்கப்படுபவர்களின் தலைவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து, சிறைபிடிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான இந்த இனப்படுகொலைக்கு பச்சை விளக்கு காட்டுகிறார்கள்” என்றும் முன்தர் ஐசாக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் தன் பிரசங்கத்தில் சேனனின் மொழியில் சொல்வதானால் ‘கொலை மறைக்கும் அரசியல்’ செய்வதாகக் குற்றஞ்சாட்டினார். “மேற்கு நாடுகள் உண்மைச் சூழலை மறைக்கும் அரசியல் மறைப்பை இனப்படுகொலைகளுக்கு வழங்குகின்றனர்” என்று அவர் குற்றம்;சாட்டினார். “இவர்கள் இனப்படுகொலைகளுக்கு “இறையியல் சாயம் பூசுகின்றனர்” என்றும் காட்டமாகக் கடிந்து கொண்டார். முன்தார் ஐசாக் ‘மேற்கத்திய தேவாலயங்கள்’ இந்த சாயம் பூசுவதற்கு பயன்படுத்தப்படுகின்றது” என்றும் சுட்டிக்காட்டினார். பாலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையுடன் பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிறிஸ்தவ தலைவர்களின் சர்வதேச பிரதிநிதிகள் சபையில் இருந்தனர்.

அரசு – பேரரசு இறையியல்:

தென்னாப்பிரிக்கர்கள், “அரசு இறையியல் பற்றிய கருத்தை எங்களுக்குச் சுட்டிக்காட்டினார்கள். “அரச இறையியல் இனவாதம், முதலாளித்துவம் மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றை நியாயப்படுத்த பயன்படுத்துகின்றது” என்றும் மேலும் விளக்கினர்.

“அரசுகள் அதன் சொந்த அரசியல் நோக்கங்களுக்காக இறையியல் கருத்துகளையும் விவிலிய நூல்களையும் தவறாகப் பயன்படுத்துகின்றது” என்றும் முன்தார் ஐசாக் தெரிவித்தார். “இங்கே பாலஸ்தீனத்தில் பைபிள் – நமது சொந்த புனித நூல். நமக்கு எதிரான ஆயதமாகப் பயன்படுத்தப்படுகின்றது”, என்று மேலும் கூறினார், “இங்கு நாம் பேரரசின் இறையியலை எதிர்கொள்கிறோம், இது மேன்மை, மேலாதிக்கம், தேர்ந்தெடுக்கப்பட்ட தன்மை மற்றும் உரிமைக்கான மாறுவேடமாகும்” என்றும் பாதிரியார் முன்தார் ஐசாக் குற்றம்சாட்டினார். “பேரரசின் இறையியல் தெய்வீக அனுமதியின் கீழ் அடக்குமுறையை மறைக்க ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாறுகிறது” என்று முன்தார் ஐசாக் குற்றம்சாட்டினார்.

“பேரரசு இறையியல் மக்களையும் நிலத்தையும் பிரிக்கின்றது. இது மக்கள் இல்லாத நிலத்தைப் பற்றி பேசுகின்றது. அது மக்களை நமக்கும் அவர்களுக்கும் என்று பிரிக்கின்றது. இது ஒடுக்கப்படுபவர்களை மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமானவர்களாக பிரித்துக் காட்டுகின்றது. நிலத்தில் ஆட்கள் இருப்பதை நன்கு அறிந்திருந்தும் மீண்டும் மக்கள் இல்லாத நிலம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்குகின்றது. அவர்கள் எந்த மக்களுமல்ல, மிகவும் சிறப்பு வாய்ந்த மக்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“பேரரசின் இறையியல் காசாவை இல்லாமல் செய்ய அழைக்கிறது. 1948 இல் இனச் சுத்திகரிப்புக்கு அழைப்பு விடுத்தது போல், ஒரு அதிசயம் அல்லது தெய்வீக அதிசயம் என்று இதனை அழைக்கின்றனர். பாலஸ்தீனியர்களான எங்களை ஏன் எகிப்து, ஒருவேளை ஜோர்டானுக்கு செல்லக் கூடாது என்று கேட்கின்றனர். இனி, ஏன் கடலுக்குச் செல்லக்கூடாது?” என்றும் கேட்பார்கள் என்றார் பாதிரியார் முன்தார் ஐசாக்.

மத வரலாற்றுப் பின்னணி:

பாதிரியார் முன்தார் ஐசாக்கின் மிகுந்த முற்போக்கான இப்பேச்சின் பின்னால் ஒரு பலமான அரசியல் நியாயம் தெளிவாகப் புலப்பட்டது. பிதா, சுதன், பரிசுத்த ஆவி, இறை தூதர் என்பதைச் சுற்றியே யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்கள் கட்டப்பட்டது. பிதா என்பதை முழுமுதற் கடவுளாக யூதம் கருதுகின்றது. அவர்கள் மேசியா – இறைதூதுர் இன்னும் வரவில்லை இனிமேல் தான் வருவார் என்று நம்புகின்றது. அவர்கள் யேசுவின் கதையை நம்பவில்லை. கிறிஸ்தவம் மக்களை பாவங்களில் இருந்து மீட்க பிதாவின் மகன் யேசு பிறந்து அவர்களின் பாவங்களைத் தானே சுமந்து அதற்காக சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்தெழுந்து அவர் பிதாவிடம் செல்ல மக்களை ரட்சிக்க பூமிக்கு பரிசுத்த ஆவி அனுப்பப்ப என்று கிறிஸ்தவம் நம்புகின்றது. இஸ்லாம் யேசுவை ஈசா என்ற இறை தூதர் என்று நம்புகின்றது. அவ்வாறான பல இறைதூதர்கள் வந்து கடைசியாக வந்த இறைதூதர் மொகமட் என்கிறது. இந்த மூன்று மதங்களினதும் உருவாக்கம் தோற்றம் பாலஸ்தீனத்திலும் அதனையொட்டிய பகுதிகளிலுமே நடைபெற்றது.

அதன் பின் கிறிஸ்தவம் பல பிரிவுகளாக உடைந்து பரவிய போதும் தற்போது அமெரிக்காவினால் உலகெங்கும் பரப்பப்படும் ஆவிக்குரிய சபைகளே இஸ்ரேலை பாதுகாக்கும் கைங்கரியத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இஸ்ரேலை நாற்பது நாடுகள் தாக்கி அழிக்கப் போகின்றது என்றும் இஸ்ரேல் என்ற நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அமெரிகாவில் இருந்து கிளைவிட்டுப் பரவியுள்ள ஆவிக்குரிய சபைகள் தங்கள் பிரார்த்தனைகளில் செபிக்கின்றனர்.

கருக்கலைப்புக்கு எதிராக பெண்களது உரிமைகளை மறுக்கும் தீவிர கிறிஸ்தவ மத நாடான அமெரிக்காவின் நவீன காலனித்துவத்தை விரிவுபடுத்துவதற்கு பரிசுத்த ஆவிகளின் சபையை பேரரசு இறையியலாகப் பயன்படுத்துகின்றது. அமெரிக்கா தற்போது இஸ்ரேலுடைய இன அழிப்புக்கு முழமையான ஒத்துழைப்பை வழங்குவதற்குக் காரணம் அவர்களுடைய பொருளாதாரநலன்களே. அதனைக் காப்பதற்கும் நியாயப்படுத்துவதற்கும் ஆவிக்குரிய சபைகளுடாக காரணம் கற்பிக்கின்றது. தற்போது நடைபெறுவதும் ஒரு சிலுவை யுத்தமே. அதனையே பாதிரியார் முன்தார் ஐசாக் தனது பிரசங்கத்தில் தெளிவுபடுத்தி யுள்ளார்.

மேற்கத்திய உலகின் போலித்தனம்

“மேற்கத்திய உலகின் போலித்தனமும் இனவெறியும் பயங்கரமானது” என்று தனது பிரசங்கத்தில் குற்றம்சாட்டிய பாதிரியார் முன்தார் ஐசாக், “எங்கள் ஐரோப்பிய நண்பர்கள், எங்களுக்கு மனித உரிமைகள் அல்லது சர்வதேச சட்டம் பற்றி விரிவுரை செய்வதை நான் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை. நாங்கள் வெள்ளையர்கள் அல்ல, அதனால் உங்கள் சொந்த தர்க்கத்தின்படி அது எங்களுக்குப் பொருந்தாது” என்று அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.

“மேற்கத்திய உலகில் உள்ள பல கிறிஸ்தவர்களை” அவர் விமர்சித்தார், “மேற்கத்திய உலகம் இந்த போரில், பேரரசுக்கு தேவையான இறையியல் இருப்பதை உறுதிசெய்தனர். இது அவர்களின் தற்காப்பு என்று எங்களிடம் கூறப்பட்டது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“9,000 குழந்தைகளைக் கொன்றது எப்படி தற்காப்பு ஆகும்? 1.9 மில்லியன் பாலஸ்தீனியர்களின் இடப்பெயர்வு எவ்வாறு தற்காப்பு ஆகும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்தார்: “பேரரசின் நிழலில் அவர்கள் காலனித்துவவாதிகளான ஆக்கிரமிப்பாளர்களைப் பாவிகளாகவும், ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களை ஆக்கிரமிப்பாளராகவும் மாற்றினர். அவர்கள் பேசும் நகரங்கள் மற்றும் கிராமங்கள் பாலஸ்தீனியர்களின் இடிபாடுகளில் கட்டப்பட்டது என்பதை நாம் மறந்துவிட்டோமா?”

பாதிரியார் முன்தார் ஐசாக் மேலும் தனது விசனத்தை வெளிப்படுத்துகையில், “இந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு தேவாலயங்களின் சம்மதம் இருப்பதால் நாங்கள் கோபமடைந்துள்ளோம். தெளிவாக இருக்கட்டும் நண்பர்களே, மௌனம் சம்மதம். மேலும் போர் நிறுத்தம் இல்லாமல் அமைதிக்கான வெற்று அழைப்புகள் மற்றும் ஆக்கிரமிப்பிற்கு முடிவு கட்டுதல், மற்றும் நேரடி நடவடிக்கை இல்லாமல் பச்சாதாபத்தின் ஆழமற்ற வார்த்தைகள் அனைத்தும் சம்மதம் என்றே அர்த்தம்” என்று சொல்லி தேவாலயங்களின் மௌனத்தை, அவர்கள் யுத்த நிறுத்தத்தைக் கோரி அழுத்தம் கொடுக்காததை காத்திரமான நடவடிக்கைகள் எடுக்காததை கடுமையாகச் சாடினார் அவர்.

காசா: உலகின் தார்மீக திசைகாட்டி

“எனவே எனது செய்தி இதோ, காசா இன்று உலகின் தார்மீக திசைகாட்டியாக மாறியுள்ளது. அக்டோபர் 7ஆம் தேதிக்கு முன் காசா ஒரு நரகமாகவே இருந்தது. ஆனால் உலகம் அமைதியாக இருந்தது. இப்போது அந்த உலகின் அமைதியைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார் பாதிரியார் முன்தார் ஐசாக். அவர் மேலும் தொடர்கையில், “காஸாவில் என்ன நடக்கிறது என்று நீங்கள் திகைக்கவில்லை என்றால். உங்கள் உணர்வுகளை அது தொட்டுவிடவில்லை என்றால், உங்கள் மனிதத்துவத்தில் ஏதோ தவறு இருக்கிறது”, என்று தன் ஆதங்கத்தை மிகத் தெளிவாக வைத்தார் முன்தார் ஐசாக்.

“கிறிஸ்தவர்களாகிய நாம் இனப்படுகொலையால் கோபப்படாவிட்டால், அதை நியாயப்படுத்த பைபிளை ஆயுதமாக்கினால், எங்கள் கிறிஸ்தவ சாட்சியில் ஏதோ தவறு உள்ளது, மேலும் எங்கள் நற்செய்தியின் நம்பகத்தன்மையை நாங்கள் சமரசம் செய்கிறோம்” என்றும் அவர் எச்சரித்தார். “இதை நீங்கள் ஒரு இனப்படுகொலை என்று அழைக்கத் தவறினால், அது ஒரு பாவம். இந்தப் பாவத்தை நீங்கள் விரும்பி ஏற்றுக்கொள்கிறீர்கள். காசா இடிபாடுகளுக்கு அடியில் இயேசு பிறப்பார்.

அவர் கூறினார், “சிலர் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை, சில தேவாலயங்கள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. நான் உனக்காக வருத்தப்படுகிறேன். இருப்பினும், பாலஸ்தீனியர்கள் மீது வீழ்ந்த பெரும் அடியையும் மீறி, நாங்கள் மீண்டு வருவோம், எழுவோம், நாங்கள் பாலஸ்தீனியர்களாக எப்பொழுதும் செய்தது போல் அழிவின் மத்தியில் இருந்து மீண்டும் எழுந்து நிற்போம்” என்று கூறி பாலஸ்தீனியர்களை சாம்பல் மேடுகளில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவைகளுக்கு ஒப்பாகக் கருதினார் பாதிரியார் முன்தார் ஐசாக்.

ஆனால் இந்த இன அழிப்புக்கு ‘சம்மதம்’ தெரிவித்தவர்களுக்காக, நான் வருத்தப்படுகிறேன். நீங்கள் எப்போதாவது மீண்டு வருவீர்களா? இனப்படுகொலைக்குப் பிறகு உங்கள் நீலிக் கண்ணீர்கள் முதலைக் கண்ணீர்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் உங்கள் ஆறதல் வார்த்தைகள் உங்களுக்கே போதுமானதாக இருக்காது” என்று எச்சரித்த பாதிரியார் முன்தார் ஐசாக் “இனப்படுகொலைக்குப் பிறகு உங்கள் மன்னிப்பை நாங்கள் ஏற்க மாட்டோம்” என்று உறுதியுடன் தெரிவித்தார். “காசா: உலகின் தார்மீக திசைகாட்டி எனவே எனது செய்தி இதோ, அவர் கூறினார்: “காசா இன்று தார்மீக திசைகாட்டியாக மாறிவிட்டது” என்று கூறி நீங்கள் யாருடன் நிற்கின்றீர்கள் இனப்படுகொலை செய்பவர்களுடனா அல்லது இனப்படுகொலைகளை நிறுத்தச் சொல்பவர்களுடனான என கருப்பு வெள்ளையாக தன் கேள்வியை முன் வைத்தார் பாதிரியார் முன்தார் ஐசாக்.

 

லண்டனில் பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும் ஈழப் போராட்டமும் – கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும்!

நாளை டிசம்பர் 10, சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பாலஸ்தீனப் போராட்டமும் ஈழப் போராட்டமும் எனும் தலைப்பிலான கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும் தேசம் ஊடகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

ஐநா செயலாளார் நாயகம் அன்ரனியோ பூட்ரஸ் அவர்களின் ‘யுத்த நிறுத்தம்’ வேண்டும் என்ற அவசர தீர்மானத்தை அமெரிக்கா மீண்டும் நிராகரித்துள்ளது. பிரித்தானியா வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தது. அமெரிக்கா பிரித்தானியா மற்றும் அவற்றின் நேசநாடுகள் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு முழுமையான ஆதரவை மீண்டும் வழங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் தன்னை ‘Genocide Joe’ என்று மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சர்வதேசப் பின்னணியிலேயே இக்கருத்துப் பகிர்வு நடைபெறுகின்றது.

எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 தொடக்கம் இரவு 7மணி வரை 10th village way, Rayners Lane, Pinner இல் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில், முரண்பட்ட அரசியல் பின்புலத்திலிருந்து தங்கள் அனுபவங்களை வளவாளர்கள் பகிரவுள்ளனர்.

நிகழ்வுக்கு தேசம் எழுத்தாளர் த. ஜெயபாலன் தலைமைதாங்கவுள்ளார். ஒடுக்குமுறைகளும் மக்கள் எழுச்சிகளும் எனும் தலைப்பில் எழுத்தாளரும் Committee for Workers International கட்சியின் International Secretariat ட்டருமான சேனன் உரை நிகழ்த்தவுள்ளார்.

யூடாயிசம் – சியோனிசம் – சர்வதேசம் எனும் தலைப்பில் அரசியல் ஆய்வாளரும் சட்ட வல்லுனருமான சையத் பஷீர் உரை நிகழ்த்தவுள்ளார்.

ஹொலக்கோஸ்ட் முதல் காசா வரை : ஜேர்மனியின் அரசியல் போக்கு எனும் தலைப்பில் சமூக செயற்பாட்டாளர் கங்கா ஜெயபாலன் உரை நிகழ்த்தவுள்ளார்.

பாலஸ்தீன – ஈழ மக்களின் எதிர்காலமும் சர்வதேசத்தின் அணுகுமுறைகளும் எனும் தலைப்பில் Asatic.org இன் Academic Secretriatரும் முன்னாள் ஈரோஸ் உறுப்பினருமான ரவி சுந்தரலிங்கம் உரை நிகழ்த்தவுள்ளார்.

வளவாளர்களின் உரைகளைத் தொடர்ந்து கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும் இடம்பெறும். தமிழ் மக்களின் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்துக்கும் நெருக்கமான உறவுகள் காணப்பட்டது. பாலஸ்தீன விடுதலை இயக்கம் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு பயிற்சிகளை அழித்தது. அவ்வாறு பயிற்சி பெற்ற பலர் இன்னமும் எம்மத்தியில் வாழ்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறானதொரு கலந்துரையாடல் இடம்பெறுவது இதுவே முதற்தடவை. அந்த வகையில் இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கெடுத்து ஆக்கபூர்வமாக கருத்துப் பகிர்வில் ஈடுபடுமாறு ஆர்வலர்கள் அனைவருக்கும் தேசம் அழைப்புவிடுத்துள்ளது.

தமிழ் மக்களும் ஒரு நீண்ட போராட்டத்துக்கூடாக வாழ்ந்துவரும் ஒடுக்கப்பட்ட சமூகம் என்ற வகையில் மேற்குநாடுகள் அனைத்தும் இஸ்ரேல் உடன் ஒன்றிணைந்து பாலத்தீனமக்களை கொண்றொழிக்கும் இந்த இனப்படுகொலையைக் கண்டிப்பது ஒவ்வொரு மனிதாபிமான மிக்க மனிதனதும் கடமையும் பொறுப்பும். இவ்வாறான இனப்படுகொலைகளை கண்டிக்கத் தவறுவது இவ்வாறான படுகொலைகள் தொடருவதற்கும் மோசமடைவதற்கும் வழிவகுக்கும்.

நரகாசுரன்களைக் கொண்டாடும் பிரித்தானிய பிரதமர் சுனாக்! கொன்சவேடிவ் நாஸ்திக் கட்சியாகவும் நாஸிக் கட்சியாகவும் மாறுகிறது!! அதன் குடிவரவு அமைச்சர் பதவி விலகினார்!!!

டிசம்பர் 6 சில மணி நேரங்களுக்கு முன் பிரித்தானிய ஆளும் கட்சியின் குடிவரவு அமைச்சர் ரொபேட் ஜென்ரிக் அமைச்சுப் பதவியிலிருந்து விலகினார். ‘அகதிகளை ருவான்டாவுக்கு விமானம் ஏற்றுவதே தனது கனவு’ என்று குறிப்பிட்ட முன்னாள் உள்துறை அமைச்சர் சுவலா பிரவர்மன் கடந்த சில வாரங்களுக்கு முன் பதவியிலிருந்து தூக்கப்பட்டார். 1968இல் கொன்சவேடிவ் கட்சியின்பா உ (Enoch Powell) எனொச் பவலின் மிகப் பிரபல்யமான “Rivers of Blood இரத்த ஆறுகள்” உரைக்குப் பின் மிக மோசமான இனவாதக் கருத்துக்களை நவீன பிரித்தானியாவில் கக்கியவர் ஒரு முன்னாள் குடிவரவாளரான சுவலா பிரவர்மன். எனொச் பவலின் இனவாதக் கருத்துக்கள் அலைமோதிய காலத்தில் 1960க்களில் சுவலா பிரவர்மன்னின் பெற்றோர் கென்யா – மொரிஸியஸில் இருந்து புலம்பெயர்ந்தனர். இவருடைய பெற்றோரைப் போன்ற குடிவரவாளர்களால் தான் பிரித்தானியாவுக்கு பொருளாதார நெருக்கடி, பாடசாலைகளில் நெருக்கடி, மருத்துவமனைகளில் நெருக்கடி என எனொச் பவல் தன்னுடைய இனவாத வக்கிரத்தை கக்கினார். இப்போது அக்குடிவரவாளர்களுக்கு பிள்ளையாகப் பிறந்த சுவலா பிரவர்மன் அகதிகளை மட்டும் ஏளனம் செய்யவில்லை வறுமைக் கோட்டில் வாழ்பவர்களையும் வீடற்றவர்களையும் கூட அது அவர்களின் வாழ்க்கைத் தெரிவு என்று நளினம் செய்கின்றார்.

இனவாதமும் ஸ்லாமோபோபியாவும் கொன்சவேட்டிவ் கட்சியின் வாக்கு வங்கியின் பலமாகி உள்ளது. அதனால் அந்த வாக்கு வங்கியை இலக்கு வைத்து சுவலா பிரவர்மன் காய்களை நகர்த்துகிறார். அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தலில் தற்போதைய மற்றுமொரு குடிவரவுத் தம்பதிகளின் புத்திரனான ரிசி சுனாக் மண் கவ்வுவார் என்று கணக்குப் பண்ணியுள்ள சுவலா பிரவர்மன் ருவான்டாக் கனவை வைத்துக்கொண்டு ரிசி சுனாக்கை பந்தாடுகின்றார்.

‘ருவான்டா அகதிகளுக்கு பாதுகாப்பான நாடு அல்ல’ என்று பிரித்தானிய உச்ச நீதிமன்றம் நவம்பர் 16 திகதி வழங்கிய தீர்ப்பில் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துவிட்டது. இருந்தாலும் கொன்சவேடிவ் கட்சியின் இனவாத வாக்கு வங்கியைப் பாதுகாப்பதில் சுவலா பிரவர்மன்னும் ரிசி சுனாக்கும் தங்களில் யார் பெரும் இனவாதி என்பதை நிரூபிப்பதில் போட்டி போடுகின்றனர். ‘ரிசி சுனாக் நீர் வெறும் அலம்பல் பேர்வழி உம்மால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது’ என்ற பாணியில் சுவலா பிரவர்மன் அறிக்கைகள் விடுகின்றார். ‘நான் சொன்னால் சொன்னது தான் ஆணியைப் புடுங்குகிறேன். ருவாண்டாவுக்கு அகதிகளை அனுப்புகிறேன்’ என்று சவால் விட்டுள்ளார் ரிசி சுனாக். அதுமட்டுமல்ல அவசர அவசரமாக புதிய உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்ளியை ருவாண்டாவுக்கு அனுப்பி புதிய உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திட்டு வந்து ‘ருவான்டா இப்போது அகதிகளுக்கு பாதுகாப்பானதாக மாறிவிட்டது’ என்று சொல்கின்றது கொன்சவேடிவ் காட்சி. நாங்கள் ‘வெள்ளை’ என்று சொன்னால் அது ‘வெள்ளை’ என்று நிரூபிப்போம் என்கிறது கொன்சவேடிவ்கட்சி. ஆனால் உச்சநீதிமன்றமோ அது நிச்சயமாக ‘கறுப்பு’ என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துவிட்டது.

உச்ச நீதிமன்றம் கொன்சவேடிவ்கட்சி சொல்வதை கேட்டு தங்களை ‘கோல்’ அடிக்க விடாவிட்டால் ‘கோல்ட் போஸ்றை’ தாங்கள் மாற்றத் தயார் என இன்று மிரட்டினர். அதாவது டிசம்பர் 6 அவசர ருவாண்டா சட்டமுலம் ஒன்றை அமூலாக்க முயற்சித்தனர். கொன்சவேடிவ் இனவாதப் பிரிவின் இச்சட்டமூலத்தை கொண்டு செல்ல விரும்பாத ரொபேட் ஜென்ரிக் ‘உந்த ஆட்டத்துக்கு நான் தயாரில்லை’ என்று தன்னுடைய அமைச்சுப் பதவியில் இருந்து விலகினார். இன்று கொண்டுவரப்பட்ட இந்த அவசரச் சட்டமூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் பாதுகாப்பை வெட்டி ஓடும் ஒரு தந்திரோபாயம் என்றும் சர்வதேச சட்ட விதிமுறைகளை மீறும் செயல் என்றும் ரொபேட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள ‘Conservetive for Tamils – கொன்சவேடிவ் போர் ரமிளஸ்’ தற்போதைய நிலையை இட்டு மௌனமாக இருப்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய செயல் என முன்னாள் கிழக்கு லண்டன் கவுன்சிலர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் கொன்சவேடிவ் கட்சி இந்தக் குடிவரவுத் தலைமைகளின் வழிநடத்தலில் மிகத் தீவிர இனவாதக் கட்சியாக மாறிவருகின்றது எனக் குறிப்பிட்டார். இலங்கையில் உள்ள இனவாதக் கட்சிகளிலும் பார்க்க மிகத் தீவிரமான இனவாதத்தை ஆழமான உள்நோக்கத்தோடும் நீண்டகாலத் திட்டமிடலில் இக்கட்சி மேற்கொண்டுவருகின்றது என்ற அச்சம் சிறுபான்மை இனங்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியக் கட்சிகள் அமெரிக்க அரசோடு இணைந்து உலகின் பல பாகங்களிலும் தங்கள் நாடுகளின் நலனுக்காகவும் ஆட்சியாளர்களின் சொந்த நலனுக்காகவும் வாக்கு வங்கிகளைத் தக்க வைப்பதற்காக ஆக்கிரமிப்புகளைச் செய்து அந்நாடுகளைச் சீரழித்தனர். அந்த நாடுகளிலிருந்தே இங்கு பெரும்பாலான அகதிகள் வருகின்றனர். இப்போது அவர்களை ஐரோப்பாவிற்குள் வரவிடாமல் தடுப்பதற்கு துருக்கி, ருனிசியா, ருவாண்டா போன்ற நாடுகளுக்கு பெரும்தொகைப் பணத்தை வாரி வழங்குகின்றனர். சில அரசுகள் மிக மோசமான மனித உரிமைகளை மீறி அகதிகளாக வருபவர்களை சித்திரவதை, பாலியல் பலாத்காரம் ஏன் கொலையும் செய்து அவர்கள் ஐரோப்பாவிற்கு வருவதைத் தடுக்கின்றனர். இவை அனைத்தும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் உதவியோடு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது.

தற்போது இதற்கும் அப்பால் சென்று மற்றுமொரு இன அழிப்பு நடவடிக்கைக்கு பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தோளோடு தோள் நிற்கின்றனர். ஆம் இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்தும் இனப்படுகொலைக்கு இந்நாடுகள் முழமையான ஆதரவை வழங்குவதோடு ஆயுதமும் வழங்குகின்றனர். தற்போது இந்த யுத்தத்தை எப்படியும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக ஐநா செயலாளர் நாயகம் அன்ரனியோ குர்ரரஸ் பாதுகாப்பு செயலக நாடுகளின் கூட்டத்திற்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார். அதேசமயம் அரபு நாடுகளின் குழுவொன்றும் அமெரிக்கா செல்கின்றது. அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்தும் இஸ்ரேலின் பாலஸ்தீன மக்களின்இன அழிப்பில் தங்களை பங்காளிகளாக வைத்திருக்கப் போகின்றார்களா இல்லையா என்பது தெரியவரும்.

அண்மைய தீபாவளிப் பண்டிகையில் பிரித்தானிய பிரதமரின் உத்தியோகபூர்வ வாஸஸ்தலத்தில் தீபம் ஏற்றிய சுனாக் தம்பதிகள் நிஜஉலகில் நரகாசுரர்களைக் கொண்டாடுவது ஒன்றும் ஆச்சரியமான செயல் அல்ல. சுனாக் தலைமையிலான கொன்சவேடிவ் கட்சி தற்போது அருவருக்கத் தக்க நாஸ்திக் கட்சியாகவும் நாஸிஸக் கட்சியாகவும் மாறிவருகின்றது. அன்று ஒரு Enoch Powell இன்றோ பலர். “Rivers of Blood இரத்த ஆறுகள்”. நாற்றம் தாங்க முடியவில்லை.

ஒரு மனித குல விரோதியின் மரணம்!!!

பல்லாயிரக் கணக்காண மனிதர்களைக் கொன்றொழித்த அமெரிக்க கொலை இயந்திரத்தின் சூத்திரதாரி ஹென்றி கிசிஞ்சர் இன்று தனது 100வது வயதில் மரணித்தார். உலகின் மிக மோசமான யுத்தக்குற்றவாளி நரகாசுரன் இயற்கையால் இந்த உலகை விட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளார். யூத இனத்தவரான ஹென்றி கிசிஞ்சர் இனவெறி கொலை வெறி கொண்ட ஹிட்லரின் கொலைத் தாண்டவத்திலிருந்து தப்பித்து அமெரிக்காவிற்கு அகதியாகச் சென்று பிற்காலத்தில் அமெரிக்க வெளியுறவுக்கொள்கையை அல்ல கொள்ளைகளை கொலைகளை வகுத்தவர். இவரது வழிகாட்டலிலேயே வியட்நாம், கம்போடியா முதல் சிலி வரை இலங்கை உட்பட இன அழிப்பு, காப்பற் பொம்பிங், கொம்யுனிச அழிப்பு என்பன முடுக்கி விடப்பட்டது.

மனித நேயத்திற்கு புறம்பான மனிதனாகக் கருதப்படும் ஹென்றி கிசிஞ்சர் மனித குலத்தின் சாபக்கேடாகவே பார்க்கப்பட வேண்டியவர். ஹிட்லரால் பாதிக்கப்பட்ட இனத்தில் இருந்து மேலெழுந்து வந்த ஹென்றி கிசிஞ்சர் ஹிட்லர் அளவுக்கு மிகப் பாரிய மனித அழிவுகளை உலகெங்கும் ஏற்படுத்தியவர். அதே ஹிட்லரின் கொலை வெறியில் இருந்து தப்பித்து வந்த யூத சமூகத்திலிருந்து உருவான இஸரேல் பாதுகாப்புப் படைகள் ஹிட்லரைக் காட்டிலும் மோசமான அழிவுகளை கொலை வெறியை காஸாவிலும் வெஸ்ற் பாங்கிலும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்களை மட்டும் கொல்லவில்லை. நாளைய பாலஸ்தீன சமூகத்தை துடைத்தழிக்கும் வகையில் பெண்களை, சிறார்களை கொல்கின்றனர். காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றக் கூடாது என்பதற்காக மருத்துவ வண்டிகளையும் மருத்துவ மனைகளையும் தாக்கி அழிக்கின்றனர். கருவுற்றிருக்கும் பெண்கள் கருக்கள் கலைக்கப்படும் அளவுக்கு தாக்குதல் முடக்கிவிடப்படுகிறது. குறைப்பிரசவக் குழந்தைகளைக்கூடக் கொல்ல வேண்டும் என கொலை வெறிகொண்ட இஸ்ரேலிய பயங்கரவாத அரசு துடிக்கின்றது.

ஹன்றி கிசிஞ்சர் எழுபதுக்களில் கம்போடியா, வியட்நாமில் “நகர்வது எதுவானாலும் தாக்கி அழியுங்கள்” என்று குறிப்பிட்டது போல் காசாவில் நகருவது எதுவானாலும் தாக்கி அழிக்கப்பட்டது. ஹிட்லர் கொலைவெறித் தாண்டவம் ஆடிய போது சமூக வலைத்தளங்கள் எதுவும் கிடையாது. தகவல் தொழில்நுட்பமும் குறிப்பிடத்தக்க அளவில் வளரவில்லை. ஆனாலும் உலகம் முழுவதும் ஹிட்லருக்கு எதிராக கொதித்து எழுந்தது. ஆனால் ஹிட்லரின் வாரிசுகளாக மாறியுள்ள இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களை உலகம் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்க துடைத்து அழிக்கின்றனர்.

உலகம் என்றும் கண்டிராத அதர்மத்துடன் இஸ்ரேல் இராணுவம் தனது கொலைவெறித் தாண்டவத்தை புரிகின்றது. அதற்கு அமெரிக்தகா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பூரண அங்கிகாரம் வழங்கியுள்ளன. ஹின்றி கிசிஞ்சர் கொம்யுனிசத்தை தீண்டத்தகாத சொல்லக்கூட்டாத கெட்ட வார்த்தை என்று மேற்குலகை நம்ப வைத்தார். இன்றைய வலதுசாரி இஸ்ரோலிய பென்ஜமின் நெத்தன்யாகு யுத்த நிறுத்தத்தை கெட்ட வார்த்தை என்று அறிவித்துவிட்டார். ஹென்றி கிசிஞ்சரின் பள்ளியில் படித்த அன்ரனி பிளின்கனும் அதனைப் பிடித்துக்கொண்டுவிட்டார். அவரோடு சேர்த்த மேற்குலகக் கும்பலும் இப்போது யுத்த நிறுத்தம் என்றால் ஏதோ துஸணம் பேசுவது போல் கருதி அதனை பொது மேடைகளில் சொல்வதில்லை. பத்திரிகையாளர்கள் அதுபற்றி கேட்டாலும் வெட்கப்பட்டு பூசிமெழுகி அந்தச் சொல்லையே சொல்வதில்லை.

ஆயத வன்முறையால் உலகெங்கும் ஆண்டு தோறும் 500,000 பேர் கொல்லப்படுகின்றனர். உலகின் ஆயத விற்பனையில் 75 வீதத்திற்கும் அதிகமான வியாபாரம் நேட்டோ நாடுகளினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. இதில் 40 வீதமான வியாபாரம் அமெரிக்காவினால் மட்டும் மேற்கொள்ளப்படுகின்றது. அமெரிக்காவில் பாடசாலைகளுக்குள்ளேயே துப்பாக்கிச் சுடுகள் நடத்தப்படுவதும் குழந்தைகள் கொல்லப்படுவதும் சாதாரண விடயமாக உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த ஆயத விற்பனைக்கு தடையைக் கொண்டுவருவதே முடியாத காரியமாக இருந்து வருகின்றது. தங்கள் சொந்த மக்களின் குழத்தைகளின் உயிரிழப்புப் பற்றியே அக்கறையற்ற அமெரிக்க ஆட்சியாளர்கள், அச்சிறார்களின் குருதியில் லாபத்தை சுவைக்கும் அமெரிக்க ஆட்சியாளர்கள் பாலஸ்தீனத்தில், உக்ரெயினில், எரித்திரியாவில், சுடானில் உயிரிழப்பவர்கள் பற்றி கரிசனை கொள்வார்களா?

உலக ஒழுங்கு மிகவும் மாறிக்கொண்டுள்ளது. மனிதமும் மனித நேயமும் ஹின்ரி கிசிஞ்சர், பென்சமின் நெத்தன்யாகு மற்றும் அவர்களுக்கு ஒத்து ஊதும் மேற்குலகினால் மரணத்தின் விளிம்புக்கு கொண்டு வந்துவிடப்பட்டுள்ளது. ‘சமாதானம்’ என்பது ஒரு கேவலம் கெட்ட சொல் என்று அடுத்த தலைமுறையை நம்பவைக்க மேற்குலகம் முயற்சித்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. சமாதானம் என்றால் போர் இல்லை. போர் இல்லாவிட்டால் ஆயதங்களை விற்க முடியாது. ஆயதங்களை விற்காவிட்டால் எப்படி லாபமீட்டுவது? லாபமீட்ட எதுவெல்லாம் தடையாக இருக்கின்றதோ அதுவெல்லாம் மிகக் கெட்ட விடயங்கள். இது தான் இன்றைய மேற்குலகின் நியதி.

பாலஸ்தீனக் குழந்தைகளின் உயிரற்ற உடல்கள் குவிகிறது ! அமெரிக்க – பிரித்தானிய ஆயத வியாபாரத்தில் லாபம் பல மடங்காக பெருகுகிறது!! காசா, பாலஸ்தீனிய குழந்தைகளைக் காப்பாற்றும் மாபெரும் போராட்டத்தில் லண்டன் தமிழர்களின் குரல்களும் ஆங்காங்கு எழுந்தது!!!

‘ஞாபகார்த்த தின’ நாளான நவம்பர் 11இல் லண்டனில் நடைபெற்ற மாபெரும் ஊர்வலத்தில் மக்கள் சாரை சாரயாக மிகுந்த ஆக்கிரோசத்துடன் பங்கேற்றனர். ஈராக் ஆக்கிரமிப்பு யுத்தத்தை எதிர்த்து பிரித்தானிய மக்கள் வீதியில் இறங்கியதற்கு ஒப்பாக பெருவரியான மக்கள் நேற்றைய போராட்டத்தில் குதித்திருந்தனர். இன, மத, மொழி பேதமற்று போராட்த்தில் ஈடுபட்டவர்கள் பிரித்தானியப் பிரதமர் ரிசிசுனாக் மற்றும் அவரின் நம்பிக்கைக்குரிய உள்துறை அமைச்சர் சுவலா பிரவர்மன் ஆகியோருக்கு எதிராகவும் மேற்கத்தைய தலைவர்களுக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பினர்.

ரிஸி சுனாக்கை குப்பைப்பை என்று கோசமெழுப்பியவர்கள் இந்த அமைதிப் போராட்டத்தை வஞ்சகப் போராட்டம் என வர்ணித்த உள்துறை அமைச்சர் சுவலா பிரவர்மன்னை இனவாதி என அழைத்தனர். இப்போராட்டத்துக்கு லூட்டனில் இருந்து வந்திருந்த பல்கலைக்கழக மாணவி அலிசா சௌத்திரி, “தான் சுவலா பிரவர்மனுக்கு நன்றி சொல்வதாகவும் அவருடைய இனவாதப் பேச்சுத் தான் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியது” என தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இந்த அமைதிப் போராட்டம் லண்டனில் வாரம் தோறும் நடைபெற்று வருவதுடன் உலகின் பல்வேறு நகரங்களிலும் நடைபெற்று வருகின்றது. மேற்கு நாடுகளினதும் ஏனைய நாடுகளினதும் தலைவர்களும் அரசியல் தலைமைகளும் எவ்வாறு இரட்டைவேடம் கட்டி நடிக்கின்றனர் என்பதை குறைமாதத்தில் பிறந்த இன்குபேற்றர் பேழையில் பேணப்படும் குழந்தைகள் உலகிற்கு அம்பலப்படுத்தி வருகின்றனர்.

“நாங்கள் மனிதத்துவம் இல்லாமல் போய்விட்டது” என்று சொல்ல முடியாது என்று குறிப்பிட்ட கொமிற்றி போர் வேர்கஸ் இன்ரநஷனல் இன் இன்ராநெஷனல் செக்கிரிற்றியற்றும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் ஸ்தாபகருமான சேனன், “ஆம் மேற்குத் தலைமைகளிடமும் ஏனைய அரசியல் தலைமைகளிமும் மனிதத்துவம் செத்துவிட்டது, ஆனால் மக்களிடம் மனிதத்துவம் இன்னும் உயிப்புடன் தான் இருக்கிறது. அதனால் தான் அவர்கள் வெகுண்டு எழுந்து இங்கு வந்து, அதிகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

போராட்டத்தில் வந்தவர்களைக் களைப்படையச் செய்யும் வகையிலும் அவர்களைத் தேவைப்படும் பட்சத்தில் முடக்கும் வகையிலும் அமெரிக்க தூதரலாயத்தை நோக்கிச் செல்வதற்கு நீண்ட பாதையொன்றை மெற்றோபொலிட்டன் பொலிஸார் திட்டமிட்டு இருந்தனர். மாலை ஐந்து மணியளவில் போராடும் மக்களோடு மக்களாக தமிழ் சொலிடாரிட்டி குழவின் ஊர்வலம் வொக்சோல் பிறிட்ஜ்சை எட்டிய போது ஏற்கனவே அங்கு அசையாது நிலைகொண்டிருந்த போராட்டக்காரர்களால் அசைய முடியாத நிலையில் மாலை 5:30 மணியளவில் போராட்டம் அவ்விடத்தில் முற்றுப் பெற்றது.

காலை பத்து மணி முதலே தொகையாகத் திரள ஆரம்பித்த மக்கள் கூட்டம் பதினொரு மணியை எட்டியதும் லண்டனின் இதயப் பகுதியைச் சுற்றியுள்ள ரியூப் ஸ்ரேசன்களில் சன நெருக்குவாரத்தை ஏற்படுத்தி சில பிரதான ரியூப் ஸ்ரேசன்களை மூடிவைக்க வேண்டிய நிலைக்கு கொண்டுவந்தது. மாபிளாச் ரியூப் ஸ்ரேசனில் தங்களை ஒழுங்குபடுத்திய தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் உறுப்பினர் ராஜன், இவ்வாறு தொகையான மக்கள் கூட்டம் இரண்டுமணி நேரமாக வந்து குவிந்து கொண்டிருப்பதை தான் காணவில்லை எனத் தெரிவித்தார். மாபிளாச்சில் இருந்து நகர்ந்து கொண்டிருந்த ஊர்வலத்தோடு 11:30 மணி அளவில் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினரும் கலந்துகொண்டனர். ராஜன் மற்றும் கஜன் தமிழ் சொலிடாரிட்டி பனரைத் தாங்கிச் செல்ல ஏனையவர்கள் பின் தொடர்ந்தனர்.

மிக உயர்த்திப் பிடிக்கப்பட்ட பாலஸ்தீனக் கொடிகளில் ஒன்றாக தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் கொடியும் உயரப் பறந்தது. பாலஸ்தீனியர்கள் முஸ்லீம்கள் அல்லாதவர்களும் போராட்டத்தில் தோள்கொடுப்பதை உணர்ந்து தமிழ் சொலிடாரிட்டிக் குழுவை பலரும் புகைப்படம் எடுப்பதை காணக்கூடியதாக இருந்தது.

இப்போராட்டம் உலகத் தலைவர்களை அம்பலப்படுத்தியதோடு பிரித்தானிய உள்துறை அமைச்சர் போராட்டகாரர்களை வஞ்சம் கொண்டவர்கள் என்று இனவாத்தோடு கூறிய கருத்துக்கு முகத்தில் அறைந்தாற் போல் அமைந்தது. மூன்று லட்சம் பேர் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டதாக உத்தியோகபுர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் உண்மையில் இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை பத்து லட்சமாக இருந்திருக்க வேண்டும் என்ற மதிப்பீடுகளும் உள்ளது. அன்றைய தினம் உள்துறை அமைச்சரின் இனவாதக் கருத்துக்களால் தூண்டப்பட்ட சில நூறு வலதுசாரித் தீவிரவாதிகள் எதிர்ப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களே வஞ்சகத்தோடும் வன்மத்தோடும் காடைத்தனத்தில் ஈடுபட்டு பொலிஸாருடன் மோதி ஞாபகார்த்த நிகழ்வை இழிவு செய்து குழப்பம் விளைவித்தனர். இதற்காக 90 வரையானோர் கைது செய்யப்பட்டனர். பிரதமர் ரிசி சுனக் மற்றும் சுவலா பிரவர்மனின் நேசக்கரங்களே ஞாபகார்த்த நிகழ்வை இழிவுபடுத்தியது அனைத்து ஊடகங்களிலும் பதிவாகியது. போலிஸாரும் அதனை உறுதிப்படுத்தினர். இவற்றைத் தொடர்ந்து சுவலா பிரவர்மன் பதிவியில் இருந்து இறக்கப்பட வேண்டும் என்ற கோஷங்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது.

அமெரிக்க – பிரித்தானிய ஆளும் குழுமம் பாலஸ்தீனியர்களையும் அவர்களின் குழந்தைகளையும் கொல்வதன் மூலம் லாபம் ஈட்டுகின்றனர் என்பதற்காக யுத்தங்களை நெய்யூற்றி வளர்க்கின்றனர். அரபு நாடுகளின் கூட்டமைப்புக் கூட வெறும் கண்டனத்தை தெரிவித்து நேற்று நவம்பர் 11 தனது கூட்டத்தை முடித்துக்கொண்டது. இஸ்ரேலுக்கு எதிராகவோ இஸ்ரேலின் இன அழிப்புக்கு ஆதரவாகச் செயற்படும் அமெரிக்க – பிரித்தானிய அரசுகளுக்கு எதிராகவோ காத்திரமான பொருளாதார எண்ணைத் தடைகள் எதனையும் அறிவிக்கவில்லை. தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் சர்வதேச அரசியலில் காத்திரமான மாற்றங்களைக் கொண்டு வரும். அதனால் அமெரிக்க – பிரித்தானிய அரசுகளின் ஆசீர்வாதத்தோடு இஸ்ரேல் மேற்கொள்ளும் பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலையை, குழந்தைகளைக் கொல்வதன் மூலம் பாலஸ்தீனவம்சத்தை அழிக்கும் இஸ்ரேலின் மிகக் கொடிய திட்டத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் அனைவரும் அம்பலப்படுத்த வேண்டும் அவற்றை பகிர வேண்டும்.

இந்திய அரசு குறிப்பாக குஜராத் படுகொலைகளை முன்நின்று நடத்திய நரேந்திர மோடியும் அவரது பாரதிய ஜனதாக் கட்சியும் இஸ்ரேலுக்கு ஆதரவான பொய்ப் பிரச்சாரங்களை முன்றின்று நடத்துகின்றனர். அத்தோடு தங்களுக்குள்ள முஸ்லீம் எதிர்ப்பின் காரணமாக பாலஸ்தீனியர்கள் முஸ்லீம்கள் என்பதால் பாலஸ்தீனப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வாதந்திகளையும் பரப்பி வருகின்றனர். இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆதரவாகவும் பாலஸ்தீனியர்களின் போராட்டத்துக்கு எதிராகவும் வரும் சமூக வலைத்தளச் செய்திகள் இந்தியாவில் இருந்தே வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் எழுபது, எண்பதுக்களில் இந்திய, இலங்கை அரசுகள் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்தனர். இஸ்ரேலோடு உறவாடுவது என்பது ‘கள்ளத்தொடர்பு’ என்பது போன்றே பார்க்கப்பட்டது. ஆனால் அதனை நரேந்திர மோடி வெளிப்படையாகவே செய்யத் துணிந்துவிட்டார்.

தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினரைத் தவிரவும் வேறு சில தமிழர்களும் தனியாகவும், விரல்விட்டும் எண்ணிக்கையில் குழுவாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இப்போராட்டத்தில் இலங்கைக் கொடியோடு சிங்கள மக்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

கீழைத்தேச ஆசிய நாடுகள் இஸ்ரேலை ஒரு நேச அணியாக பொதுத்தளத்தில் கருதுவதில்லை. மாறாக ஒரு தீண்டத் தகாத அரசாகவே கணித்து வந்தனர். அண்மைய மோடி அரசு அதற்கு விதிவிலக்காக இஸ்ரேலுடன் உறவை வலுப்படுத்தி வருகின்றது.

இந்த மோடி இந்திய அலையில் தங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் என்று கூறிக்கொள்ளும் ஆர்வக்கோளாறுகள் சிலரும் அள்ளுப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் மத்தியில் பாலஸ்தீனப் போராட்;டத்தை கொச்சைப்படுத்தும் நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொள்கின்றனர். “வே பிரபாகரனுக்குப் பின் மோடியை தலைவராக்கிக் கொண்டுள்ள இந்தக் கொசுக்கள் தொல்லை பெரும் தொல்லையாக இருக்கின்றது” என்கிறார் போராட்டத்தில் பங்கேற்ற ஹரோவைச் சேர்ந்த பற்குணன் தவராஜா.

தமிழ் மக்களிடம் இயல்பாகவே உள்ள சான்றிதழ்க் கல்வி பற்றிய அதீதி உணர்வும் செல்வந்தராவது மற்றும் சாகச உணர்வும் மேல் மட்டத்துக்கு நகரும் எண்ணமும் உள்ளது. ஆனால் அதை அடையும் வழிகள் பற்றிய பண்புகளை கண்டும் காணமல் தவிர்த்துவிடுகின்றனர். அதனால் கல்வியில் செல்வத்தில் வீரத்தில் முன்நிற்கின்ற இஸ்ரேலை அவர்கள் முன்ணுதாரணமாக பார்க்கின்றனர். இஸ்ரேலிய அரசு கல்வியை, செல்வத்தை, வீரத்தை தனக்கு நாடு அமைக்க இடம்விட்ட பாலஸ்தீனியர்களையே கொன்றொழிப்பதை கண்டும் காணாமல் உள்ளனர். இஸ்ரேலியர்களின் மொசாட் அமைப்பு உலகெங்கும் அதிகாரத்தில் உள்ள கொடுங்கோலர்களுக்கு பயிற்சி வழங்குவதையும் இவர்கள் கண்டுகொள்விதில்லை.

நிறையப் சான்றிதழ் வைத்திருப்பவன், நிறைய செல்வம் வைத்திருப்பவன், பலமானவன் பின்னால் தமிழர்கள் அணிதிரளாமல் ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களுக்கு, அடிப்படை நேர்மையுடையவர்களுக்கு, மனிதாபிமானம் கொண்டவர்களுக்கு தோளோடு தோள் கொடுக்க வேண்டும். அந்த வகையில் தமிழர்களுடைய ஆதரவு பாலஸ்தீனியர்களுக்காக இருக்க வேண்டும். நவம்பர் 11 போராட்டத்தை தமிழர்கள் பலரும் கண்டுகொள்ளவில்லை எனபது மிகவும் வேதனையானது.

அமெரிக்க – பிரித்தானியாவின் ஆதரவோடு இஸ்ரேலின் இனவெறித் தாக்குதல்: காஸா மருத்துவமனை மீது தாக்குதல் 500 பேர் பலி! அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுடனான சந்திப்பை பாலஸ்தினிய விடுதலை அமைப்பின் தலைவர் அப்பாஸ் ரத்துசெய்துள்ளார்:

ஒக்ரோபர் 17 இன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகுவைச் சந்திக்கவும் அரபு நாடுகளின் ஆதரவைத் திரட்டவும் புறப்பட்டுள்ள நிலையில் இச்சந்திப்பு ஒருதலைப் பட்சமாக பாலஸ்தின, ஜோர்டன், எகிப்திய தலைமைகளால் ரத்துசெய்யப்பட்டு உள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் மேற்கு நாடுகளும் வழங்கியுள்ள கேள்வியற்ற ஆதரவுடன் பாலஸ்தினிய அரபுக்களை முஸ்லீம்களை அழிக்கும் திட்டம் மிக வேகமாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே மத்திய கிழக்கு அரசுத் தலைமைகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

மத்திய கிழக்கில் பாலஸ்தினியர்களுக்கான ஆதரவு எப்போதுமே இருந்துள்ளது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகள் அண்மைக் காலம்வரை மேற்கு நாடுகளுடனும் இஸ்ரேலுடன் மிக நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. ஆனால் ஓக்ரோபர் 7ம் திகதி ஹமாஸ் இஸ்ரேலுக்குள் புகந்து நடத்திய தாக்குதலும் இஸ்ரேல் தொடுத்த இன அழிப்பு யுத்தமும் இந்த உறவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் இந்த இன அழிப்பு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு 12 நாட்களாகியும் உத்தியோக பூர்வமான எந்தக் குரல்களும் வெளிப்படுத்தப்படவில்லை.

நேற்று ஒக்ரோபர் 16 ஐநா வின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஸ்யா கொண்டுவந்த யுத்தநிறுத்தத் தீர்மானத்தை அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் எதிர்த்திருந்தது. அதனைத் தொடர்ந்து பிரேசில் கொண்டு வந்த தீர்மானத்திற்கும் இந்நாடுகள் வாக்களிக்கவில்லை. பாலஸ்தினத்தில் நடக்கும் இன அழிப்பை ஊக்கப்படுத்துவதுடன் அதற்கு எண்ணை ஊற்றும் வகையில் அமெரிக்கா தன்னுடைய தாக்குதல் கப்பலை இஸ்ரேல் நோக்கி நகர்த்தி உள்ளது.

இன்று சில மணிநேரங்களுக்கு முன் காஸாவில் உள்ள அல் அஹாலி பப்ரிஸ்ற் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய அடிப்படை மனித விழுமியங்களுக்கு மாறான தாக்குதல் உலக நாடுகளின் பார்வையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய இன அழிப்பு இராணுவம் ஈவிரக்கமற்ற முறையில் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என்று பாரபட்சமில்லாத தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும் காஸவில் வாழும் மக்குளுக்கான அடிப்படைத் தேவைகளான தண்ணீர், உணவு மற்றும் மருந்து விநியோகத்தையும் முற்றாக தடுத்து அவர்களை மரணத்தின் விழிம்புக்குள் தள்ளிக்கொண்டுள்ளது. பாலஸ்தினத்தில் கடந்த 12 நாட்களில் கொல்லப்பட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்கள்.

நூறு தமிழரைக் கொன்றால் அதில் ஒரு ஈழப் போராளியும் இருப்பான் என்று இஸ்ரேலின் புலனாய்வுத்துறை அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தனவுக்கு ஆலொசணை வழங்கியிருந்தது. அதே செயற்திட்டத்தையே இஸ்ரேல் பாலஸ்தினத்திலும் மேற்கொண்டு வருகின்றது. அதற்கு அமெரிக்க – பிரித்தானிய மேற்கு நாட்டு தலைமைகள் தொடர்ச்சியாக ஆதரவளிக்கின்றனர்.

இந்த மேற்கு நாடுகள் உலகில் நடைபெறும் பெரும்பாலும் அனைத்து யுத்தங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருப்பதுடன் இந்த யுத்தங்களை ஆரம்பிப்பவர்களாகவும் அதனை எண்ணையூற்றி வளர்ப்பவர்களாகவும் உள்ளனர். அது மட்டுமல்லாமல் அப்கானிஸ்தானில் அல்கைடாவை அமெரிக்கா உருவாக்கியது. அன்றிருந்த ரஸ்ய சார்பான மொஜஹிதீன்களுக்கு எதிராக அமெரிக்கா ஒசாமா பின் லாடனை உருவாக்கியது. அமெரிக்கா கற்றுக்கொடுத்ததை அல்கைடா ஒரு கட்டத்தில் அமெரிக்காவுக்கு எதிராக பயன்படுத்திய போது அமெரிக்கா அல்கைடாவை அழிக்க முனைந்தது.

அதே போல் யஸீர் அரபாத்தின் தலைமையிலான பாலஸ்தின விடுதலை அமைப்பை பலவீனப்படுத்த இஸ்ரேல் எண்பதுக்களில் உதவி அமைப்பாக செயற்பட்ட அமைப்பை ஹமாஸாக உருவாக்கி கொம்பு சீவிவிட்டது. சிரியாவிலும் அமெரிக்கா ஐஎஸ்ஐஎஸ் அடிப்படைவாதிகளுக்கு ஆயதங்களை விநியோகித்தது. பெரும்பாலான இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை உருவாக்கி வளர்த்துவிட்டவர்கள் முஸ்லீம்கள் அல்ல. அமெரிகாவினதும் அதன் நேசநாடுகளினதும் புலனாய்வுப் பிரிவினரே. காலனித்துவகால பிரித்தாளும் தந்திரத்தின் தொடர்ச்சியே இது. நவகாலனித்துவம்.

மனித உரிமைகள் என்று முதலைக்கண்ணீர் விடும் அமெரிக்க – பிரித்தானிய நேசநாடுகள் மிகமோசமான மனித அவலங்களுக்கு பொறுப்புடையவர்கள். அப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா ஆகிய நாடுகளிலும் மத்திய கிழக்கிலும் தங்களுடைய சொந்த நலன்களுக்காக தலையீடு செய்து அங்கு மிகப்பெரும் மனித அவலங்களை ஏற்படுத்தினர். இந்நாடுகளின் தலைவர்கள் தங்களுடைய அரசியல் லாபங்களுக்காகவும் நலன்களுக்காகவும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாட்டு மக்களின் பெயரில் வலிந்து தாக்குதல் நடத்தி உலக சமாதானத்தை சீர்குலைக்கின்றனர். தங்கள் நாடுகளில் தங்களுடைய இருப்புக்கு ஆபத்து வருகின்ற போது அவர்களுடைய வாக்கு வங்கி சரிகின்ற போது இவர்கள் உலகின் பதட்டமான பகுதியில் யுத்தத்தை ஆரம்பிப்பார்கள்.

பிரித்தானியாவின் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பிரதமராக இருந்த போது தன்னுடைய பார்டிகேற்றை மறைக்க உக்ரைன் போருக்கு ஆயதங்களை வாரி வழங்கினார். உக்ரைனுக்கு ஆயதம் விற்று லாபமடைந்த ஜோ பைடன் குடும்பம் உக்ரைன் போரில் உரிந்துபோட்டு ஆடுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. இப்போது மோசடி, லஞ்சம், ஊழலுக்கு பெயர் போன இஸ்ரேலிய பிரதமருக்கு இஸ்ரேலிலேயே பல வழக்குகள் உள்ளது. இதில் இருந்து தப்பிக்கொள்ளவே அவர் ஹமாஸைச் சீண்டிவிட்டு இந்த யுத்தத்தில் ஆடாத ஆட்டம் ஆடுகின்றார்.

இதனாலேயே தற்போது உலகம் முழவதும் அமெரிக்கா – பிரித்தானிய நேச நாடுகளுக்கு எதிரான உணர்வுகள் கிளர்ந்துள்ளது. உலகம் முழவதும் இந்நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகங்களுக்கு முன் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற ஆரம்பித்துள்ளது.

இந்த யுத்தம் உடனடியாக நிறுத்தப்படுவதுடன், இவற்றுக்கான மூலகாரணமாக இஸ்ரேலிய ஒடுக்குமுறை பாலஸ்தினிய பிரதேசங்கள் மீதான ஆக்கிரமிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். சுதந்திர பாலஸ்தீனம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அது நடைபெறாவிட்டால் ஹமாஸ் அழிக்கப்பட்டாலும் அதனிலும் மோசமான அமைப்பொன்று இன்னும் சில ஆண்டுகளில் உருவாகும். இஸ்ரேலின் அடக்குமுறைகளும் ஆக்கிரமிப்புகளும் ஹமாஸிலும் பார்க்க பல மடங்கு தீவிரமான தீவிரவாதிகளை உருவாக்கும். உலக அமைதி கேள்விக்குறியாகவே இருக்கும்.

பாலஸ்தீன விடுதலைக்கான போரின் புதிய பரிமாணம்: பாலஸ்தீன – இஸ்ரேல் யுத்தம்

48 மணி நேரங்களைக் கடந்து நடக்கின்ற பாலஸ்தீன – இஸ்ரேல் யுத்தத்தில் இரு தரப்பிலும் 2000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. 5000 பேர் வரை காயப்பட்டுள்ளனர். ஒக்ரோபர் 7 சனிக்கிழமை காலை ஆறரை மணி அளவில் பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடிவரும் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள தென் பகுதியை தரை, கடல், ஆகாய மார்க்கமாக தாக்க ஆரம்பித்தனர். எவரும் எதிர்பாத்திராத வகையில் மிகத்திட்டமிட்ட முறையில் இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.

அல் அக்சா ப்ளட் – Al Aqsa Flood என்று பெயரிலியே ஹமாஸ் இத்தாக்குதலை நடத்தியது. காஸா மக்களின் புனிதத்தலமான அல் அக்சா மசூதிக்குள் இஸ்ரேலிய இராணுவப் பொலிஸார் நுழைந்து சோதணை நடத்திய அத்துமீறலுக்காகவே இத்தாக்குதல் நடத்தப்படுவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இந்தியாவில் சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவிலுக்குள் நுழைந்து இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியதற்காகவே அன்றைய பிரதர் இந்திராகாந்தி சீக்கிய மெய்பாதுகாப்பாளரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அல் அக்சா மசூதி மட்டுமல்ல தொடர்ச்சியான மிக மோசமான அடக்குமுறை இத்தாக்குதலுக்கு காரணமாய் அமைந்துள்ளது.

1948 மே 14இல் அமெரிக்காவின் உதவியுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட இஸ்ரேல் என்ற நாட்டின் வரலாற்றில் நடந்த மிகப் பாரிய தாக்குதல் இதுவாகும். இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை உள்ளடக்கி மதில்களை எழுப்பி இருந்தது. இம்மதில்கள் உடைக்கப்பட்டு தரையாலும் பறக்கும் மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தியும் கடலாலும் ஹமாஸ் தாக்குதலை நடத்தி இருந்தது. இத்தாக்குதல்களில் 25க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தினர், பொலிஸார் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். இன்னும் பல நூறுபேருக்கு என்ன நடந்தது என்பது உறுதிப்படுத்தப்படாமல் உள்ளது. இஸ்ரேலின் வரலாற்றில் இவ்வாறான பெரும் தொகை இழப்பு அந்நாட்டுக்கு முன்எப்போதும் ஏற்பட்டதில்லை. உலகின் பாதுகாப்பு மிக நவீனமயமாக்கப்பட்டு, மிகப் பலமான, மிக வலுவான புலனாய்வு கட்டமைப்பைக் கொண்ட நாடாக இருக்கும் இஸ்ரேல் முற்றிலும் எதிர்பாராத தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இது இஸ்ரேல் மற்றும் மேற்கு நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகளுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம். அவர்கள் புலனாய்வுக்கும் பாதுகாப்புக்கும் கொட்டிய பில்லியன் டொலர்கள் எவ்வித பயனுமற்றதாக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஆதரவையும் ஈரானின் ஆதரவையும் தவிர தொழில்நுட்பமோ பணபலமோ இல்லாமல் மிக இரகசியமாக இவ்வளவு பெரிய தாக்குதலை உலகின் மிகப் பலமான பாதுகாப்பான நாட்டுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய தாக்குதல் இஸ்ரேலையும் அதன் ஆதரவு சக்திகளான அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் உலுப்பியுள்ளது என்றால் மிகையல்ல. மனித உரிமைகள் பற்றி நீலிக் கண்ணீர் வடிக்கும் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இஸ்ரேலின் பாலஸ்தினியர்கள் மீதான இனச்சுத்திகரிப்பை கண்டிப்பதில்லை. ஹமாஸ் றொக்கட் தாக்குதலை நடத்தி ஓரிரு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டால் இஸ்ரேல் பதில் தாக்குதலை நடாத்தி பல நூறு பலஸ்தீனியர்களை படுகொலை செய்வர். இப்பலஸ்தீனியர்கள் கொல்லப்படுவது பற்றி மேற்கு நாடுகள் அலட்டிக்கொள்வதில்லை. இப்பலஸ்தினியர்களுக்கு மனித உரிமைகள் இருப்பதாகவே மேற்கு நாடுகள் கருதுவதில்லை.

தற்போதைய தாக்குதல் தொடர்பில்: இஸ்ரேல் மிக மோசமான பதில் தாக்குதலை நடத்தும் என்றும் தங்கள் பதிலடியில் ஹமாஸின் இடங்களை சுக்குநூறாக்குவோம் என்றும் ஆட்சியில் உள்ள வலதுசாரி இனவாதத் தலைவரான பிரதமர் நெத்தன்யாகு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் காஸாவில் உள்ள மக்களை வெளியேறும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் காஸா உலகின் சனத்தொகை அடர்த்தி மிகக் கூடிய இடம் மட்டுமல்ல கடந்த 17 ஆண்டுகளாக இஸ்ரேலின் முற்றுகைக்குட்பட்ட திறந்தவெளி சிறைச்சாலையாகவும் சர்வதேசத்தினால் உணரப்படுகிறது. இஸ்ரேலிய இனவாதப் பிரதமர் காஸாவை முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு அவர்களை வெளியேறும்படி கோரியதை எந்த மேற்கு நாடுகளும் கண்டிக்கவில்லை. இனவாதப் பிரதமர் நெத்தன்யாகு காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கு தயாராகுனிறார் என்கின்ற அச்சம் அரபுலக மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

அண்மைய தாக்குதலில் ஹமாஸ் படையினர் தாங்கள் இஸ்ரேலிய பொதுமக்களைத் தாக்கவில்லை என்றும் பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பாளர்களையே தாக்கியதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த ஆக்கிரமிப்பாளர்கள் பொதுமக்கள் அல்ல என்றும் ஆயதம் தாங்கிய ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் அவர்கள் சர்வதேச வரையறுப்புகளின் படி பொதுமக்களாக கருதப்பட மாட்டார்கள் என்றும் ஹமாஸ் தனது தாக்குதலையும் படுகொலைகளையும் நியாயப்படுத்தி உள்ளது. இத்தனை வருடங்களாக இஸரேலிய படைகள் பாலஸ்தினியர்களை வகைதொகையில்லாமல் படுகொலை செய்து வருகின்றது. அதற்கு இவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்றும் ஹமாஸ் கேள்வி எழுப்புகின்றது.

பாலஸ்தினிய – இஸ்ரேல் யுத்தத்தின் பின்னணி:

யுதர்களுக்கு என்றொரு நாடு இல்லாத நிலையில் உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழ்ந்த யுதர்களுக்கு பாலஸதீனத்தில் ஒரு நாட்டை உருவாக்க சியோனிச இயக்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அன்றைய காலகட்டத்தில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலேயே பாலஸ்தீனமும் இருந்தது. காலனித்துவ நாடுகள் அனைத்தும் கூறுபடுத்தப்பட்டு சூறையாடப்பட்டும் தங்கள் கால்களில் நிற்க முடியாமல் பலவீனப்படுத்தப்பட்டும் காலனித்துவ ஆட்சியாளர்களால் ஆக்கப்பட்டமை வரலாறு. இந்த காலனித்துவ சுரண்டலின் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் இன்றும் மூன்றாம் உலக நாடுகள் யுத்தம், வறுமை போன்றவற்றினால் சீரழிந்து கொண்டிருக்கின்றது. ஆபிரிக்க கவிஞனொருவன் சுட்டிக்காட்டியது: அவர்கள் வரும்போது எங்களிடம் எல்லாம் இருந்தது. அவர்கள் பைபிளைக் கொண்டு வந்து தந்துவிட்டு எங்களிடம் இருந்த எல்லாவற்றையும் எடுத்துச் சென்றுவிட்டனர். இப்போது எங்களிடம் பைபிள் மட்டும் தான் இருக்கின்றது. வேறு எதுவும் இல்லை.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் அவ்வாறு பாதிக்கப்பட்ட பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த பாலஸ்தினத்தில், அமெரிக்காவின் உதவியுடன் 1948 மே 14 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. பாலஸ்தின மண் பறிக்கப்பட்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டதில் மத்திய கிழக்கு நாடுகள் மிகுந்த அதிருப்தியடைந்திருந்தன. அன்று முதல் மதிய கிழக்கு மிகப் பதட்டமான யுத்தப் பிரதேசமாகவே இருந்து வருகின்றது. இப்பகுதி பல யுத்தங்களைக் கண்டுள்ளது. ஆனால் இந்த யுத்தங்கள் எதிலுமே இஸ்ரேலியர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் 24 மணி நேரத்தில் இவ்வளவு பெரும் இழப்பையோ தாக்குதலையோ சந்தித்து இருக்கவில்லை. இஸ்ரேலின் எல்லைக்கு வெளியே நடந்த யுத்தத்தை ஹமாஸ் தற்போது இஸ்ரேலுக்கு உள்ளேயே கொண்டு சென்றுள்ளது.

பாலஸ்தீனிய மண்ணில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது முதல் அம்மண்ணில் வாழ்ந்த பாலஸ்தினிய மக்களை இஸ்ரேல் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே நடத்தி வந்தனர். அப்பகுதியில் வாழ்ந்த பாலஸ்தினியர்கள் வேறுநாடுகளுக்கு கல்வி மற்றும் நோக்கங்களுக்காகச் சென்ற போது அவர்கள் மீண்டும் தங்கள் பிரதேசங்களுக்கு வரும் உரிமை மறுக்கப்பட்டது. இஸ்ரேல் கடந்த 75 ஆண்டுகளாக பலஸ்தினியர்களை இனச்சுத்திகரிப்புச் செய்வதிலேயே குறியாக இருந்தது. இன்றும் தொடர்கின்றது.
இஸ்ரேலினுடைய புலனாய்வுப் படை மொசாட் அதன் படுமோசமான கொலைத் திட்டமிடல்களுக்கு மிகப் பெயர்பெற்றது. அவர்களையே ஹமாஸ் உச்சிக்கொண்டு இத்தாக்குதலை ஏற்படுத்தியதுடன் தொடர்ந்தும் ஆயுத தளபாடங்களை மீள் விநியோகம் செய்து புதிய ஆக்கிரப்பு நகரம் ஒன்றைக் கைப்பற்றி உள்ளனர்.

ஐந்து தசாப்தங்களுக்கு முன் இஸ்ரேலின் யொம் கிப்பூர் பகுதியில் எகிப்தின் அன்வர் சதாத் யுத்தத்தைத் தொடுத்த அதே பாணியில் ஹமாஸ் அதே தினத்தில் யுத்தத்தைத் தொடுத்தனர். முன்னைய யுத்தத்தில் எகிப்து தோல்வியடைந்தது. இந்த யுத்தத்தில் ஹமாஸினால் ஒரு போதும் யுத்தத்தை வெல்ல முடியாது. ஹமாஸ் ஒரு ஆயத அமைப்பு மட்டுமே. ஆனால் ஹமாஸ் பாலஸ்தினிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்திவிட்டது. மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேல் உடனும் மேற்கு நாடுகளுடனும் நல்லுறவைக் கொண்டிருந்த போதும் மத்திய கிழக்கு அராபிய மக்கள் பாலஸ்தினியர்கள் அனைவருமே ஹமாஸின் தாக்குதலைக் கொண்டாடுகின்றனர். பாலஸ்தின மக்களை தொடர்ந்தும் அடக்கி ஒடுக்கினால் இவ்வாறான தாக்குதல் தவிர்க்க முடியாது என்றும் இந்தப் பிரச்சினையின் காரணத்தைக் கண்டறிந்து அதனைத் தீர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழும்ப ஆரம்பித்துள்ளது.

மூனிச் ஒலிம்பிக் தாக்குதல்:

இஸ்ரேலின் கறுப்பு சனி ஆன தாக்குதலை ஹமாஸ் மிக நிதானமாக பதிவு செய்து உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் பரவவிட்டது. தற்போது உலகின் அனைத்து ஊடகங்களின் கவனமும் திசை திருப்பப்பட்டுள்ளது. உக்ரைன் யுத்தத்தைப் பற்றியோ, அப்கானிஸதான் நிலநடுக்கத்தில் இரண்டாயிரம் பேருக்கு அதிகமானோர் கொல்லப்பட்டது பற்றியோ ஊடகங்கள் அலட்டிக்கொள்ளவில்லை. ஹமாஸ் உலகத்தை பாலஸ்தீனியர்களின் ஒடுக்குமறை மீது மிகத் திட்டமிட்டு திருப்பியுள்ளது. இவ்வாறான செயலை பாலஸ்தீன விடுதலை அமைப்பு சார்ந்த குழவொன்று 1972இல் மேற்கொண்டது. 8 கறுப்பு செப்ரம்பர் படையணி ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற்ற மூனிச் நகர விளையாட்டுத் திடலுக்குள் புகந்து இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை படுகொலை செய்து 11 வீரர்களை பணயக்கைதிகளாக கைப்பற்றினர். இறுதியில் பணயக் கைதிகளை விடுவிக்கும் முயற்சி தோல்வியடைய பணயக்கைதிகள் கொல்லப்பட்டனர். கறுப்பு செப்ரம்பர் படையினர் ஐவரும் கொல்லப்பட்டனர். மூவர் கைது செய்யப்பட்டனர். அதன் சில வாரங்களில் பாலஸ்தினிய படைகள் ஜேர்மனியின் லுப்தான்ஸா எயர்லைனைக் கடத்தி வைத்து தங்கள் வீரர்களை மீட்டனர்.

இவ்வாறு ஒரு இஸ்ரேலிய இராணுவ வீரரைக் கடத்தி சில நூறு தங்கள் வீரர்களை ஹமாஸ் மீட்டிருந்தது. தற்போது பிந்திக் கிடைக்கும் செய்திகளின் படி ஹமாஸ் 50 இராணுவ வீரர்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமானவர்களை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர். இது இஸ்ரேலிய இராணுவத்துக்கும் மொசாட்டுக்கும் மிகப்பெரும் தலையிடியாக அமைய உள்ளது.

பாலஸ்தீனப் போராட்டமும் ஈழப் போராட்டமும்:

அன்றைய இலங்கை ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஜே ஆர் ஜெயவர்த்தன மிகுந்த இனவாதி என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. ஐக்கிய தேசியக் கட்சி ஒரு இனவாதக் கட்சியாகவே தன்னை கட்டமைத்திருந்தது. ஜே ஆருக்கும் அவரது படைக்கும் ஆலோசனையும் உதவியும் நல்கியது மொசாட். அன்றும் இன்றும் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கு நாடுகளின் சார்பையே எடுத்து வருகின்றது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இவர்களின் நெருங்கிய நட்புகள். நூறு தமிழர்களைக் கொன்றால் அதில் ஒரு ஈழப் போராளியும் கொல்லப்படுவான் என்ற மொசாட்டின் ஆலோசனை எண்பதுக்களில் அன்றைய பத்திரிகைகளில் இடம்பிடித்திருந்தது. இந்தத் தந்திரத்தைத் தான் மொசாட் பாலஸ்தினியர்கள் மீது இன்றும் மேற்கொள்கின்றது. ஜே ஆர் ஜெயவர்த்தனவின் காலத்திலேயே மிக மோசமான இனப்படுகொலைகளும் இனச் சுத்திகரிப்பும் இடம்பெற்றது.

மாறாக இடதுசாரி நிலைப்பாட்டோடு செயற்பட்ட ஈரோஸ் (ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை அமைப்பு) அமைப்பின் லண்டனில் வாழ்ந்த ஸ்தாபகர் இரத்தினசபாபதி மற்றும் புளொட் (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) செயற்பாட்டாளர் மகா உத்தமன் ஆகியோர் பாலஸ்தீன விடுதலை அமைப்போடு தொடர்பைப் பெற்று தங்களுடைய வீரர்களை பயிற்சிகளுக்காக பாலஸ்தீனம் அனுப்பி வைத்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு சிலரும் பாலஸ்தீன விடுதலை அமைப்போடு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஈரோஸ் அமைப்பில் அன்றைய நாட்களில் கணிசமான எண்ணிக்கையானவர்கள் இல்லாததால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமே கூடுதலாக இப்பயிற்சிகளைப் பெற்றனர். இரண்டுக்கும் மேற்பட்ட அணிகள் பிஎல்ஓ பயிற்சி எடுத்தனர். அவர்களில் சிலர் இன்னமும் மேற்குநாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்கின்றனர். இவர்களுடைய பெயர்களுக்கு முன் பிஎல்ஓ என்ற அடைமொழியும் இருக்கும். பாலஸ்தீனத்தில் முதலாவது இஸ்ரேலிய ராங்கை குண்டு வைத்து தகர்த்தது பயிற்சிக்குச் சென்ற புளொட் வீரர் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் உறுதிப்படுத்த முடியவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலை இயக்கும் (ரெலோ) தவிர்ந்த ஏனைய இடதுசார்புடைய போராளிக்குழக்கள் மத்தியில் பாலஸ்தீன விடுதலைக்கு சார்பான நிலைப்பாடு இருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டமும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும் சமாந்தரமாகப் பயணித்த காலம் அது. பாலஸ்தின விடுதலை அமைப்பின் அப்போதைய தலைவர் யஸீர் அரபாத் ஈழப்போராளிகள் மத்தியில் மதிக்கப்பட்ட ஒரு தலைவராக இருந்த காலம்.

ஈழப் போராளி அமைப்புகள் மத்தியில் இருந்த பிளவுகள் போன்ற பாலஸ்தீனப் போராளிகள் மத்தியிலும் பல பிரிவுகள் காணப்பட்டது. அவர்களிடையே முரண்பாடுகள் பகை முரண்பாடுகளும் இருந்தது. சில படுகொலைகளும் இடம்பெற்றுள்ளது. ஆனால் தமிழீ விடுதலைப் புலிகள் போன்று ஏனைய அமைப்புகளை முற்று முழுதாக துடைத்து அழிக்கின்ற அதிகார வெறி பாலஸ்தின விடுதலை போராட்டத்தில் இருக்கவில்லை. மேலும் அங்கு விடுதலைப் போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்ட அளவுக்கு ஈழவிடுதலைப் போராட்டம் மக்கள் மயப்படுத்தப்படவில்லை. மக்கள் வேறு விடுதலைப் போராளிகள் வேறு என்ற நிலை எப்போதும் இருந்தது. சர்வதேசச் சூழல் அதனைக் கையாள்கின்ற அறிவுநிலை ஈழ விடுதலைப் போராட்டத்தை புலிகள் ஏகபோகமாக்கிய பின் இருக்கவில்லை. 1991ற்கு முன் புலிகள் அனைத்து ஈழ விடுதலை அமைப்புகளையும் இல்லாதொழித்து முஸ்லீம்களையும் விரட்டியடித்து இனச்சுத்திகரிப்புச் செய்தனர். அதனால் 2009இல் புலிகளைக் காப்பாற்ற எவரும் இருக்கவில்லை.

தற்போது ஹமாஸ் உடைய தாக்குதலை வரவேற்று இஸ்ரேலையும் அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் முட்டாள்கள் என்று குறிப்பிட்ட ஹிஸ்புல்லா லெபனானின் எல்லையில் இருந்த இஸ்ரேலிய படையினர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். தாங்கள் இந்த யுத்தத்தில் நடுநிலை வகிக்கவில்லை என்றும் ஹமாஸின் தாக்குதலை வரவேற்பதாகவும் அறிவித்துள்ளனர். பாலஸ்தீன விடுதலை இயக்கமும் ஏனை பாலஸ்தீன விடுதலை குழுக்களும் இத்தாக்குதலை கொண்டாடுகின்றனர். இத்தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேலின் மிக முக்கிய எதிரியான ஈரான் இருப்பது பரகசியமானது. ஈரான் இத்தாக்குதல்களைக் கொண்டாடுகின்றது.

மொசாட் புலிகள் இலங்கை இராணுவம்:

இஸ்ரேல் என்ன தான் பாலஸ்தினியர்களை அழித்து அவர்கள் மண்ணில் நாட்டை உருவாக்கி அவர்களை அகதிகளாக வாழ நிர்ப்பந்தித்த போதும் அதே அடக்குமுறைக்கு உள்ளான கணிசமான தமிழர்கள் மத்தியில் யுதர்களுக்கும் இஸ்ரேலுக்கும் ஆதரவான நிலை எப்போதும் இருந்து வந்தது. இஸ்ரேலினுடைய அறிவு, வளம், பலம், எதிரியை அழிக்கும் கைங்கரியங்கள் பற்றி அவர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தத் தவறுவதில்லை. உலகில் தங்களை விடுதலைப் போராளிகளாகக் காட்டிக்கொண்ட புலிகள் மொசாட் இடமும் பயிற்சிகள் பெற்றனர். அதில் ஆச்சரியம் என்னவென்றால் இலங்கை இராணுவத்துக்கும் புலிகளுக்கு ஒரே காலகட்டத்தில் ஒரே இடத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இத்தகவல் ஆதாரபூர்வமாக நூலில் பதிவு செய்யப்பட்டும் உள்ளது.

உலகின் பல பாகங்களிலிருந்தும் நாடற்ற யூதர்கள் கப்பலில் கொண்டு வந்து பாலஸ்தீனத்தில் இறக்கப்பட்ட பாணியில் இதனையொத்த ஒரு முயற்சியை லண்டனில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் மேற்கொண்டனர். அதுவே ‘வணங்கா மண்’ கப்பல் பயணம். இதனை ஆரம்பித்தவர்களில் காலாநிதி நித்தியானந்தனும் ஒருவர். இவர்களின் முட்டாள்தனம் கப்பல் ஏற்பாடு செய்யப்பட்ட தினங்களிலேயே கைவிடப்பட்டு நபர்கள் பயணிப்பதில்லை என்றும் பொருட்களை ஏற்றிச் செல்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இக்கப்பல் பல மாத இழுபறியின் பின் கொழும்புத் துறைமுகத்தையடைந்து கொண்டு சென்ற பொருட்கள் பழுதடைந்த நிலையில் குப்பையாகக் கொட்டப்பட்டது வரலாறு.

பாலஸ்தின – இஸ்ரேல் யுத்தத்தின் உயிரிழப்புகளும் காயப்பட்டவர்களும் கடத்திச் செல்லப்பட்டவர்களும் இச்செய்தி எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் போதே அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இரும்புக் கரம் கொண்டு இராணுவ தாங்கிகளைக் கொண்டு அடக்கி, நவீன தொழில்நுட்பத்தையும், புலனாய்வையும் கொண்டு ஒடுக்கி ஆள முடியாது என்பதை பாலஸ்தினிய விடுதலை போராளிகள் நிரூபித்துள்ளனர். பாலஸ்தினியர்களுடைய பிரச்சினையின் வேரை அறிந்து அவர்களுடைய சுயாட்சியை உறுதிப்படுத்துவதைத் தவிர இஸ்ரேல் சுமூகமாக வாழ்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை இஸ்ரேலியர்களும் இஸ்ரேலும் உணர்ந்து கொள்வது தவிர்க்க முடியாது. இத்தாக்குதல்களுக்கு பழிவாங்க இஸ்ரேல் பல ஆயிரம் பாலஸ்தீனியர்களைப் படுகொலை செய்யலாம். ஆனால் அவை இப்பிரச்சினைக்கு தீர்வு அல்ல. இஸ்ரேலின் சமாதானத்துக்கு பாலஸ்தினியர்களின் சுயாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். பாலஸ்தீனம் தனிநாடாக வேண்டும்.

Silicon Vally Bank, Signature Bank, First Republic Bank, Credit Suisse, … அடுத்தது எந்த வங்கி? ஆனால் ரஷ்யாவின் எந்த வங்கியும் சிக்கலில் சிக்கவில்லை!!!

சிலிக்கன் வலி பாங்க், சிக்னேர்சர் பாங்க், பெஸ்ற் ரிபப்ளிக் பாங்க், கிரடிஸ் சுவிஸ் அடுத்தது எந்த வங்கி? ஆனால் ரஷ்யாவின் எந்த வங்கியும் சிக்கலில் சிக்கவில்லை!!!

வினை விதைத்தவன் வினையறுப்பான் என்பது போல் தற்போது வரிசையாக மேற்கு நாடுகளின் வங்கிகள் சரிந்து வீழ்கின்றது. இது வங்கிகளின் வீழ்ச்சி மட்டுமல்ல டொலர் நாணயத்தினதும் அமெரிக்காவினதும் வீழ்ச்சியை கட்டியம் கூறி நிற்கின்றன. முதலாளித்துவத்தின் முதகெலும்பாக இருக்கும் வங்கிகள் முறிந்து வீழ்வது முதலாளித்துவத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும். அமெரிக்கா எப்படியாவது ரஷ்யாவை இல்லாமல் பண்ணுவதற்கு பல்வேறு முயற்சிகளையும் எடுத்து, ரஷ்யாவின் எல்லை நாடுகளை நேட்டோவில் இணைத்துக்கொண்டது. அதன் தொடரச்சியாக உக்ரைனையும் நேட்டோவில் இணைக்க முயற்சித்ததை அடுத்து, ரஷ்யா தன் படைகளை உக்ரைனுக்கு அனுப்பி, ரஷ்யர்கள் வாழும் பகுதிகளைக் கைப்பற்றியது.

நீண்ட காலமாக ஈடாட்டத்தில் இருந்த கிரடிட் சுவிஸ் வங்கி (Credit Suisse) மார்ச் 19 வீழ்ந்து கொண்டிருக்கையில், அதனை அரச மயப்படுத்துவதா என்ற கேள்வி எழுந்த நிலையில், யுபிஎஸ் (UBS) வங்கி கிரடிட் சுவிஸ் வங்கியை இன்று $3.25 billionக்கு வாங்கியதன் மூலம் வீழ்ச்சி தற்போது ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அதே சமயம் வங்கி வீழ்ச்சிக்கு சம்பந்தம் இல்லாமல் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் மரியோபோல் பகுதிக்கு ரஷ்ய அதிபர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். மார்ச் 18இல் ரஷ்ய அதிபருக்கு போர்க் குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் ‘முடிந்தால் புடுங்கிப் பாருங்கள்’ என்ற தோரணையில் விளாடிமீர் பூட்டின் உக்ரைனின் மரியப்போல் பிரதேசத்துக்கு விஜயம் செய்திருந்தார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துவிட்டது என்று தங்கள் சரிந்து விழும் செல்வாக்கை தூக்கி நிறுத்த முன்னாள் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனும் போர் முழக்கம் இட்டு ‘பொங்கு நேட்டோ’ நடாத்தினர். உக்ரைனை தங்கள் ஆயத தளபாடங்களால் நிறைத்து ரஷ்யாவுக்கு பாடம் புகட்டி, தங்கள் செல்வாக்கை மீளக் கட்டியெழுப்பலாம் என நினைத்தனர். ஆனால் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மண் கவ்வினார். அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. அவரைத் தொடர்ந்து ‘உக்ரைனுக்கு போய் போராடுங்கள்’ என்று அறிக்கை விட்ட லிஸ் ரஸ் பிரதமரானார். அவருடைய ஆட்சியும் 44 நாட்களில் கவிழ்ந்தது.

ரஷ்யாவை மண்டியிட வைக்க பொருளாதாரத் தடைகள், வங்கிப் பரிமாற்றங்களில் கட்டுப்பாடுகள், ஏனைய நாடுகளையும் ரஷ்யாவோடு வர்த்தகம் செய்ய தடை விதித்தனர், நிறுவனங்களையும் ரஷ்யாவில் இருந்து வெளியேற நிர்ப்பந்தித்தனர். ரஷ்யா இதுவரை இவையெல்லாவற்றையும் கொசுக்கடியென தட்டிவிட்டு நகர்ந்து கொண்டிருந்தது. ரஷ்யா உக்ரைனுக்குள் நுழைந்து சில வாரங்களுக்கு முன் ஓராண்டு ஆன நிலையில் ரஷ்யா குறிப்பிடத்தக்க அளவான பொருளாதார நெருக்கடிகள் எதற்கும் முகம்கொடுக்கவில்லை.

தங்களுக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்று செய்த பொருளாதாரத் தடைகள் மற்றும் திருகுதாளங்கள் எல்லாம் சொந்த செலவில் தங்களுக்கு தாங்களே சூனியம் வைத்த கதையாகியது. உக்ரைன் யுத்தத்தை நேட்டோ நாடுகள் நெய்யூற்றி ஆயதங்களை உக்ரைனில் குவித்து தூண்டிவிட, நேட்டோ நாடுகளில் எரிபொருள், உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலையேற்றம் ரொக்கற் வேகத்தில் உயர்ந்தது.

நேட்டோ நாடுகளில் மக்கள் விலையேற்றத்திற்கு எதிராகவும் சம்பள உயர்வு வேண்டியும் வீதிகளில் இறங்கிப் போராடினர். விலையேற்றம் எகிறிக்கொண்டு சென்ற போதும் மக்கள் வேலைக்குச் செல்லவோ மேலதிக வேலைகளைச் செய்யவோ விரும்பவில்லை. அதனால் நிறுவனங்களில் பணி செய்வதற்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இதனைச் சமாளிக்க மக்களுக்கு மேலும் மேலும் நெருக்கடிகளை வழங்கி அவர்களது உழைப்பைச் சுரண்டுவதற்காக தொடர்ந்தும் நேட்டோ நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டிவீதத்தை அதிகரித்தன. இதன் மூலமாவது மக்களை கூடுதலாக வேலை செய்ய நிர்ப்பந்தித்தனர்.

ஆனால் நேட்டோ தலைவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக வட்டிவீதம் அதிகரித்ததால் வங்கிகள் ஏற்கனவே முதலீடு செய்த இணைப்பு பத்திரங்களின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. ஆயினும் அவர்களின் புதிய முதலீடுகளுக்கு கூடிய லாபம் இடைக்கும். மேலும் வங்களின் வரன்முறையற்ற குறுகிய லாபநோக்கம் மட்டும் கொண்ட ஆபத்தான வியாபாரச் செயற்பாடுகளாலும் சில வங்கிகள் கடுமையான ஆபத்தை எதிர்நோக்கின. மேலும் அமெரிக்காவின் பிற்கொயின் நிறுவனம் எப்ரிஎஸ் (FTS) திவாலானது போன்றவற்றால் சில வங்கிகளிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் வங்கிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே எப்போதும் மிக நெருக்கமான உறவும் இருந்து வருவதால் வங்கிகளின் ஊழல் வெளியே பெரும்பாலும் கொண்டு வரப்படுவதில்லை.

இந்தப் பின்னணயில் தான் மார்ச் 10, 2023 அன்று முதலாவதாக சிலிக்கன் வலி வங்கி திவாலானது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சிலிக்கன் வலி வங்கி ஏனைய வங்கிகளின் நிலையை வெளியுலகிற்குக் காட்டிக்கொடுத்தது. அமெரிக்காவும் அதன் நேட்டோ நாடுகளும் உடனடியாக அதன் ஆபத்தையுணர்ந்து 2008 லீமன் பிரதேர்ஸ், ரோயல் பாங்க் ஒப் ஸ்கொட்லன்ட்டுக்கு நடந்தது மீளவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தது. அமெரிக்கா டொலர்களை அச்சிட்டு வங்கிகளைக் காப்பாற்ற பில்லியன் கணக்கில் வங்கிகளுக்கு நிதியை வழங்கியது.

ரஷ்யாவை நொருக்குவோம் உக்ரைனில் இருந்து ரஷ்யாவை விரட்டுவோம் என்ற அமெரிக்க அரசின் ரீல்களை எல்லாம் நம்பிய அமெரிக்கர்கள், வங்கிகள் எல்லாம் ஸ்தீரமாக உள்ளது, வாடிக்கையாளரின் வைப்பீடுகள் பாதுகாக்கப்படும் என்பதை நம்பவில்லை. அமெரிக்க அரசை நம்ப மறுத்து வங்கிகளின் நடைமுறையில் நம்பிக்கையிழந்த வாடிக்கையாளர்கள் தாங்கள் வைப்பிட்டிருந்த நிதியை வெளியே எடுத்தனர். 2008இல் வங்கிகளில் நம்பிக்கையிழந்தவர்கள் வங்கிகளுக்கு முன் வரிசையில் நின்று தங்கள் பணத்தை பெற வேண்டியிருந்தது. தற்போது வாடிக்கையாளர்கள் இணைய வங்கி முறைமூலம் பட்டன்களை அழுத்தி தங்கள் பணத்தை மாற்றினர்.

வழமையாக வாடிக்கையாளர்கள் வைப்பிடும் தொகையை வங்கிகள் நிரந்த மூதலீடுகளுக்குப் பயன்படுத்திவிடுவார்கள். நாளாந்த வங்கி நடைமுறைக்கு மொத்த வைப்பீட்டில் 10 வீதம் மட்டுமே சுழற்சிக்கா வைத்திருப்பார்கள். வழமையாக வாடிக்கையாளர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் பணத்தை மீளெடுப்பதில்லை. ஆனால் வங்கி மீது நம்பிக்கையீனம் ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள் எல்லோருமே பணத்தை அந்த விங்கியில் இருந்து மீளப்பெறவே முயற்சிப்பார்கள். சிலிக்கன் வலி வங்கி சிக்கலில் இருப்பதை சில முதலீட்டாளர்கள் மணந்து பிடித்ததும், அது சில மணி நேரங்களுக்குள்ளாகவே வங்கியின் நிதிக்கையிருப்பை வறளச் செய்தது. உடலுக்கு குருதிச் சுற்றோட்டம் எவ்வளவு முக்கியமோ வங்கிகளுக்கு பணச்சுற்றோட்டம் மிக மிக முக்கியம். பணத்தை வைப்பிட்டவர்கள், முதலிட்டவர்கள் தாங்கள் தேவைப்படும் போது பணத்தை மீளப்பெற முடியாவிட்டால் – வங்கியின் கையிருப்பில் பணம் இல்லாவிட்டால் அந்த வங்கி மரணத்தைச் சந்திக்கும். அதுவே சிலிக்கன் வலி வங்கிக்கு நிகழ்ந்தது.

இதுவொரு டொமினோ அபக்ற் (domio effect). மார்ச் 10இல் சிலிக்கன் விலி வீழ்ந்ததும், அடுத்து சிக்னேச்சர் பாங்க், அடுத்து பெஸ்ற் ரிபப்ளிக் பாங், நாளை காலை (மார்ச் 20) காலை பங்குச் சந்தைகள் திறப்பதற்கு முன் கிரடிட் சுவிஸ் பாங்கை பாதுகாக்க சுவிஸ் அரசும் நேட்டோ நாடுகளும் கடும் முயற்சியில் இறங்கியது. கிரடிட் சுவிஸை அரசுடமையாக்கி வைப்பீட்டாளர்களையும் முதலீட்டாளர்களையும் பாதுகாக்க வேண்டும், இல்லாவிட்டால் ஒட்டுமொத்த வங்கிகளின் எதிர்காலமும் கேளவிக்குறியாகும். ஆனால் வங்கி அரசுடமையாக்கப்பட்டால் அது முதலாளித்தவ பொருளாதாரத்திற்கு கொள்கை அடிப்படையில் வீழ்ந்த மிகப்பெரும் அடியாக இருந்திருக்கும். ஆனால் கிரடிட் சுவிஸ் வங்கியின் போட்டியாளரான யுபிஎஸ் (UBS) வங்கி கிரடிட் சுவிஸ் வங்கியை ($3.25 billion) வாங்கி வங்கிகளின் வீழ்ச்சியை சற்றுத் தள்ளிப் போட்டுள்ளது. யுபிஎஸ் – UBS, கிரடிட் சுவிஸை மட்டும் வாங்கவில்லை. கிரடிட் சுவிஸ் வங்கிக்கு கடந்த பல ஆண்டுகளாக இருந்த நெருக்கடியையும் சேர்த்தே வாங்கியுள்ளது. யுபிஎஸ் – UBS, கிரடிட் சுவிஸ்க்கு ஏற்பட்ட பிரச்சினையை மேவிவருமா அல்லது வந்த வெள்ளம் நின்ற வெள்ளத்தையும் கொண்டு போனது போல் ஆகுமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்தது எந்த பாங்க் வீழ்ச்சியடையும் என்பது காலையில் எழும்போது தான் தெரியவரும். ஏற்கனவே குறிப்பிட்டது போல் முதலாளித்துவத்தின் முதுகெலும்பு வங்கிகள். வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கையிழந்தால் அவர்கள் காட்டாற்று வெள்ளம்போல் பாய்ந்து தங்கள் முதலீட்டை வைப்பீட்டை மீளப்பெறத் துடிப்பார்கள். வங்கிகளின் கையிருப்பு வறளும். வங்களின் குருதிச் சுற்றோட்டம் பணச் சுழற்சி. வங்கியில் பணம் இல்லாவிட்டால் எமக்கு ஒக்ஸிஜன் இல்லாத நிலைமை தான். அதற்காக பணத்தை அச்சடித்து வங்கிகளை நிரப்பினால் பணத்தின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சியடையும். டொலர் வீழ்ச்சியடையும். அதற்கும் அமெரிக்காவின் வீழ்ச்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. டொலரும் அமெரிக்காவும் ஒன்றுதான்.

ஆங் சான் சூகிக்கு மேலும் 7 வருட சிறை

இராணுவ ஆட்சியில் உள்ள மியன்மார் நீதிமன்றத்தினால், அந்நாட்டின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவரான ஆங் சான் சூகி மீது மேலும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பதவியிலிருந்து நீக்கப்பட்ட மியன்மார் நாட்டின் தலைவி ஆங் சான் சூகிக்கு (Aung San Suu Kyi) இதுவரை 33 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் பதவி கவிழ்ப்பு செய்து கடந்த 2021 பெப்ரவரியில் ஆங் சான் சூகி உள்ளிட்ட அந்நாட்டு தலைவர்களை சிறையில் வைத்துள்ள இராணுவம், இதற்கு முன்ன இடம்பெற்ற வழக்குகளில் அவர் மீது தேசத்துரோகம், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி அவருக்கு ஏற்கனவே 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2021 இல் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பில் இராணுவம் அவரது அரசாங்கத்தை அகற்றியதிலிருந்து நாட்டின் முன்னாள் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அப்போதிருந்து, அவர் 18 மாதங்கள் 19 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார் – இது ஒரு போலி குற்றச்சாட்டு என சமூக உரிமைக் குழுக்கள் தெரிவிக்கின்றன.

அவரை விடுதலை செய்யுமாறு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தது.

இன்று (30) அவர் எதிர்கொண்ட கடைசி ஐந்து குற்றச்சாட்டுகளுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அமைச்சர் ஒருவர் ஹெலிகொப்டரை வாடகைக்கு எடுக்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அவர் பின்பற்றாததால், அவர் ஊழல் செய்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொவிட் பொது பாதுகாப்பு விதிகளை மீறியமை, வாக்கி-டாக்கிகளை இறக்குமதி செய்தமை, உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தை மீறியமை உள்ளிட்ட 14 வெவ்வேறு குற்றங்களுக்காக அவருக்கு ஏற்கனவே 26 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஊடகங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட எந்தவொரு நபரும் அனுமதிக்கப்படாமல் இடம்பெற்ற இவ்வழக்கு விசாரணையின்போது இடம்பெற்ற விபரங்களை வெளியில் சொல்வதற்கு சூகியின் சட்டத்தரணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆயினும் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.

77 வயதான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி, தலைநகர் நே பை தாவில் (Nay Pyi Taw) வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கத்தின் (பர்மா) கூற்றுப்படி, ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து இராணுவ ஆட்சிக் குழுவால் கைது செய்யப்பட்ட 16,600 இற்கும் மேற்பட்டவர்களில் ஆங் சான் சூகி மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 13,000 பேர் சிறையில் உள்ளனர்.

கடந்த வாரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், மியான்மரில் வன்முறையை நிறுத்த வேண்டும் என்றும், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் கூறியது. சீனாவும் ரஷ்யாவும் வாக்கெடுப்பில் இருந்து விலகியதோடு, தீர்மானத்தின் வார்த்தைகளில் திருத்தங்களைத் தொடர்ந்து அந்நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங் சான் சூகி மீதான “இடைவிடாத சட்டரீதியான தாக்குதல்”, “எதிரிகளுக்கு எதிராக அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட அல்லது கேலிக்கூத்தான குற்றச்சாட்டுகளை கொண்டு வருவதற்கு இராணுவம் நீதிமன்றங்களை எவ்வாறு ஆயுதமாக்கியுள்ளது” என்பதைக் காட்டுகிறது என்று சர்வதேச பொதுமன்னிப்பு சபை தெரிவித்திருந்தது.

கடந்த பெப்ரவரியில் இராணுவத்தால் மியன்மார் அதிகாரத்தை வன்முறையாகக் கைப்பற்றியதை தொடர்ந்து அதற்கு எதிராக பொதுமக்களால் பரவலான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன் விளையவாக மியன்மர் இராணுவம், ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது.

இது இராணுவம் மற்றும் இராணுவ ஆட்சியாளர்களை எதிர்க்கும் சிவிலியன் படையான தனி இன கிளர்ச்சிக் குழுக்களுக்கு இடையே புதிய உள்நாட்டு சண்டையையும் தூண்டியது.

சட்டத்திற்கு புறம்பான கொலைகள் மற்றும் பொதுமக்கள் தங்கியுள்ள கிராமங்கள் மீது வான்வழி தாக்குதல்களை நடத்தியதாக இராணுவ ஆட்சிக்குழு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவரையில் கருத்து வேறுபாடுகளுக்கு எதிராக அந்நாட்டு இராணுவம் நடத்திய அடக்குமுறையில் 2,600 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

FIFA 2022 – அர்ஜென்டினாவை வீழ்த்தியதற்காக சவுதி அரேபியாவில் ஒருநாள் விடுமுறை !

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா வீழ்த்தி அசத்தியது.

முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் சவுதி அரேபியா வீரர்களின் அசத்தலான ஆட்டத்தால் அந்த அணி 2-1 என வெற்றி பெற்றது. சவுதி அரேபிய அணியின் வெற்றியை ஒட்டுமொத்த அரேபிய நாடுகளும் கொண்டாடி வருகின்றன.

 

இந்நிலையில், சவுதி அரேபியா வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாடு முழுதும் இன்று ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவுதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.