பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்க பாகிஸ்தான் விரும்புகிறது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 63 வது சுதந்திர தின விழா கடந்த 15ம் திகதி டில்லியில் நடந்தது. அப்போது டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். பிரதமரின் இந்த பேச்சுக்கு பாகிஸ்தான் வருத்தம் தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமரின் பேச்சை லேசாக எடுத்துக்கொள்ள முடியாது. அது தொடர்பாக தகவல் இருந்தால் எங்களிடம் சொல்லலாம்.
நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று பாகிஸ்தான் கூறியிருந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி தனது நாட்டு தூதரகம் மூலம் டில்லிக்கு தகவல் ஒன்றை அனுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று முன்தினம் நிருபர்களுக்கும் பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர்,
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற விஷயத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்கவே நாங்கள் விரும்புகிறோம். எனவே இது தொடர்பாக நம்பத் தகுந்த தகவல் ஏதும் இருந்தால் இந்தியா எங்கள் அரசுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். மேலும் தங்களது கடுமையான உணர்வுகளையும் இந்தியாவுக்கு தெரிவிக்குமாறு குரேஷி தனது நாட்டு வெளியுறவு செயலாளரிடம் கேட்டுக் கொண்டார்.
இந்தியாவுடன் முழுமையாக ஒத்துழைக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்று மீண்டும் ஒருமுறை அவர் வலியுறுத்தி கூறினார். எனவே தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் பற்றி தகவல் ஏதும் இருந்தால் இந்தியா எங்களிடம் கொடுக்கலாம் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி குரேஷி கேட்டுக்கொண்டார்.