::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

பிரித்தானியாவின் பணவீக்கம் இரட்டிப்பானாது! விலைகள் எகுறுகின்றது!! கந்தையானாலும் கசக்கிக் கட்டுங்கள்!!!

பிரித்தானியாவின் பண வீக்கம் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. யூலையில் 2 வீதமாக இருந்த பணவீக்கம் ஓகஸ்ட்டில் 3.2 வீதமாக உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக பொருட்களுக்கு உள்ள தட்டுப்பாடு அது கோவிட்-19 இனால் ஏற்பட்ட முடக்கத்தை அடுத்து எழுந்த தாக்கம். அதைவிடவும் நீண்ட முடக்கத்தின் பின் பொருளாதாரம் விரைந்து நகர ஆரம்பித்ததும் பொருட்களுக்கான தேவையும் கேள்வியும் அதிகரிக்க மூலப்பொருட்களின் விலை சந்தையில் அதிகரித்துள்ளது. அது மட்டுமல்லாமல் பொருளாதாரம் இயங்க ஆரம்பித்ததும் எரிபொருளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. அதனால் எரிபொருளின் விலை உயர ஆரம்பித்துள்ளது. அதனால் விநியோகச் செலவு அதிகரிக்கும். மூலப்பொருட்களினதும் எரிபொருட்களினதும் விலை உயர்ந்தால் அது பொருட்களின் உற்பத்திச் செலவை அதிகரிக்கும்.

மூன்று குழந்தைகளின் தாயார் தேசம்நெற் க்கு தெரிவிக்கையில் தான் வாராவாரம் சொப்பிங் செய்வதாகவும் இன்று ஐஸ்லண்ட் சுப்பர் மார்க்ற்றில் சொப்பிங் செய்யச் சென்ற போது பொருட்களின் விலை வித்தியாசத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிவித்தார். ஐந்து மாஸ்க் ஒரு பவுண்டுக்கு விற்றவர்கள் இப்போது ஒரு மாஸ்க் இரு பவுண்டுக்கும் மூன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்றும் விற்பதாகத் தெரிவித்தார். இவ்வாறு பல பொருட்கள் விலையேற்றப்பட்டுள்ளது அல்லது பொருட்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

பிரித்தானியாவில் பண வீக்கத்தை 2 வீதத்திற்குள் வைத்திருப்பதே அரசின் செயற்திட்டமாக இருந்த போதிலும் அண்மைய நாட்களில் ஏற்பட்டுள்ள எரிசகத்தியின் விலையதிகரிப்புகள் பொருட்களின் விலையை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கலாம். மேலும் நீண்ட விநியோக லொறிகளின் சாரதிகளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டினால் விநியோக வலைப்பின்னலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதை அடுத்து கிழக்கு ஐரோப்பிய தொழிலாளர்கள் பெருமளவிலானோர் பிரித்தானியாவை விட்டு வெளியேறிவிட்டனர். அதனாலும் சாரதிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. சில பெற்றோல் நிலையங்களே இன்று விநியோக நெருக்கடி காரணமாக பெற்றோல் முடிந்த நிலையில் மூடப்பட்டு உள்ளது. பிரித்தானியாவில் பழம் பிடுங்குவதற்னே ரூமேனியாவில் இருந்து ஆட்கள் தருவிக்கப்பட்டனர். மேலும் உணவகங்கள் ஹொட்டல்கள் போன்ற வரவேற்புச் சேவை வேண்டிய இடங்களில் வேலையாட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கணணித் தொழில்நுட்பத்துறையில் துறைசார்ந்த அறிவுடையவர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. இதன் காரணமாக சம்பளத்தை உயர்த்தியே வேலைக்கு பணியாளர்களைத் தேட வேண்டியேற்பட்டுள்ளது.

இவற்றின் பின்னணியிலேயே பாங்க் ஒப் இங்லண்ட் இன் தலைவர் அன்ரூ பெய்லி பிரித்தானியாவின் நிதியமைச்சர் ரிஸ்சி சுனாக்கிற்கு கொள்வனவாளர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட விலை அதிகரிப்பைச் சுட்டிக்காட்டி இருந்தார். வழமைக்கு மாறாக அதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் அரசின் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி அரசு தற்போது பண வீக்கத்தை 2 வீதத்திற்குள் வைத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதையும் சுட்டிக்காட்டி இருந்தார்.

பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் நுகர்வோர் கலாச்சாரத்தை வளர்த்து தேவையற்ற பொருட்களை பெரும் நிறுவனங்கள் எம்மை வாங்க வைக்கின்றன. தேவையும் கேள்வியும் இல்லாதவிடத்து தேவையை உருவாக்கி கேள்வியை அதிகரிக்க வைப்பதே நவீன சந்தைப்படுத்தல் முறையாக வந்துகொண்டுள்ளது. இந்த உற்பத்திக்காக வளங்கள் விரயமாக்கப்பட்டு சுற்றாடல் மாசுபடுத்தப்படுகின்றது. மக்கள் இந்த பெரும் நிறுவனங்களின் வலையில் வீழ்ந்து நுகர்வோர் கலாச்சாரத்தின் அடிமைகளாகாமல் ஒரு பொருளை வாங்கினால் அதிலிருந்து உச்சபட்ச பலனை பெறவேண்டும். நமது முன்னோர் குறிப்பிட்டது போல் கந்தையானாலும் கசக்கிக் கட்டவும். தூக்கி எறிந்துவிட்டு புதிது புதிதாக வாங்கிக் குவிப்பது கொழுத்த நிறுவனங்கள் லாபமீட்டுவதற்கே வழிவகுக்கும்.

என்னதான் நடக்கின்றது ஆப்கானிஸ்தானில்….(பகுதி 3) : சிவா முருகுப்பிள்ளை

சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்க ஆதரவுடன் பிரசவித்து… பாலூட்டி… தாலாட்டி…. பாகிஸ்தானால் வளர்க்கப்பட்ட தீவிரவாதம் முஹாஜிதீன் என்று ஆரம்பித்து தலிபான் என்ற இணைப்பாக பெரு விருட்சமாக வளர்ந்து கோலோச்சி ஆட்சியும் அமைத்தது ஆப்கானிஸ்தானில் இது சோவியத் படைகளின் விலகலுக்கு முந்தைய, பிந்தய காலகட்ட வரலாறு.

தலிபான்கள் நம்பும் மத அடிப்படைவாதம்தான் அவர்களின் ஆட்சி மொழியாக இருந்தன….. இனியும் இருக்கும்…. இந்நிலையில் தன் விருப்பமான சொல் கேட்காது வளர்ந்துவிட்ட இந்த தீவிரவாதத்தை தறிக்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்காவிற்கு 911 என அறியப்பட்ட செப்ரம்பர் 11, 2001 அமெரிக்க இரட்டைக் கோபுரம் மீதான தாக்குதல் ஒரு காரணமாயிற்று.

தனது நாட்டிற்குள் வந்து தாக்குதல் நடாத்தியது கடும் சினத்தை மட்டும் அல்ல கௌரவப் பிரச்சனையும் ஆகியது அமெரிக்காவிற்கு. உண்மையில் இத் தாக்குதலின் பின்னணி என்ன…? யார்…? என்பது இன்றுவரை அவிளாத முடிசாக இருப்பதுவும் அதனைத் தவிர்த்து இங்கு கடந்து செல்லவும் முடியாது.
இதன் அடிப்படையில் ஒரு கல்லில் பல மாங்காய் என்று ஈராக், ஆப்கானிஸ்தான் என்று தனது கழுகுக் கால்களை விரித்துக் கொண்டது அமெரிக்கா. இதற்கு அதன் நேட்டோ கூட்டாளிகளும் ஒத்து பிடில் வாசித்தனர். இதற்குள் லிபியாவையும் இணைத்துக் கொண்டனர்.

அக்டோபர் 2001 இல், செப்டம்பர் 11 தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்று கூறிக் கொண்டு ஒசமா பின் லாடன் மற்றும் அவரது அல்-காய்தா இன் உறுப்பினர்களை அவர்கள் தலிபான்களின் விருந்தினர்கள் என்ற வகையில் தம்மிடம் ஒப்படைக்க மறுத்ததால் தலிபான் ஆட்சியில் உள்ள ஆப்கானிஸ்தானை அமெரிக்கா ஆக்கிரமித்தது.

இவர்களுடன் அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடுகளும் இணைந்து கொண்டன. ஆரம்ப படையெடுப்பின் போது, அமெரிக்க மற்றும் இங்கிலாந்து படைகள் அல்-காய்தா பயிற்சி முகாம்கள் மீது குண்டு வீசின, பின்னர் ஆப்கானிஸ்தானில் செயற்பட்ட வடக்கு கூட்டணியுடன் இணைந்து செயற்பட்டு தலிபான் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

மேலும் அமெரிக்காவும் நேட்டோ நட்பு நாடுகளும் உலகின் பல நாடுகளிலும் மனிதாபிமான செயற்பாட்டை செய்தல்…. ஜனநாயகத்தை மீட்டல்… தீவிரவாதத்தை இல்லாமல் செய்வதில் தாங்களே உலகப் பொலிஸ்காரர்கள் வழிகாட்டிகள் என்பது போன்ற செயற்பாட்டில் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியாவில் தமது ஆக்கிரமிப்பிற்கு நியாயங்களை காட்டி நின்றனர்.

முதலில் போரை தொடுப்பதற்காக நியாயங்கள் உள்ளது போன்ற பிரச்சாரங்களை தமக்கு சாதகமான பிரபல்ய ஊடகங்கள் மூலம் ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கு முன்பு மிக நேர்த்தியாக செய்ய ஆரம்பிப்பர்.
அமெரிக்க மக்களை ஏன் உலக மக்களை இது ஆக்கிரமிப்பு யுத்தம் அல்ல ஜனநாயகத்தை மீட்பதற்காக யுத்தம்… மனிதாபிமான யுத்தம்…. என்று எண்ணும் படியான கருத்தியலை ஓரளவிற்கு ஏற்படுத்துவதில் அமெரிக்கா ‘வெற்றிகரமாக’ செயற்பட்டனர் என்றே கூறவேண்டும்.

இதன் பின்பு அவர்களுக்கு சார்பான அந்தந்த நாடுகளின் உள்ளுர் தீவிரவாதிகளுக்கு பணம், ஆயுதம், ஆலோசனையை வழங்குதல்…. பின்பு போரைத் தொடங்குதல்… என்று ஆரம்பிப்பதே அமெரிக்க ‘மனிதாபிமான’ யுத்தங்கள் ஆகும்.

இதில் அதிகம் தரை மார்க்கமாக அமெரிக்க படைகள் நகருதலை சோமாலியாவில் அவர்களுக்கு கிடைத்து பாரிய இழப்பும்… அனுபவங்களும் கூடவே அமெரிக்க மக்களிடம் தமது பிள்ளைகள் அநியாயமாக சாகடிக்கப்படுகின்றார்கள் என்ற எதிர்ப்பு நிலையை சமாளிக்கும் முகமாக ஆகாய மார்க்கமாக தாக்குதலை அதிகம் செய்தல் மூலம் நாடுகளுக்கு எதிரான யுத்தங்களை செயற்படுத்தினர். இம்முறையையே ஆப்கானிஸ்தானிலும் 2001 அக்ரோபரில் நடைமுறைப்படுத்தினர்.

இங்கும் ஆகாயத் தாக்குதல் என்ற வார்த்தையை தவிர்த்து ஆகாய மார்க்க பிரச்சாராம் (Air campaign) என்பது போன்ற சொல்லாடலைப் பாவிப்பது என்பதுமாக ஆப்கானிஸ்தான் அமெரிக்க கூட்டமைப்பு படைகளிடம் 2001 இறுதியில் இல் வீழ்ந்து.

தலிபான்களின் முக்கிய தலைவர்கள் பாதுகாப்பான இடங்களில் மறைந்தும் கொண்டனர். இதற்கு பாகிஸ்தான் ஆப்கானிதானில் எல்லை பூராக தரையால் இணைக்கப்பட்டிருந்ததும் பெரும் உதவியாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து தமக்கு சார்பான ஒரு அரசை அங்கு நிறுவுவதற்கான தேர்தலை நடாத்துவது…. அமையும் பொம்மை அரசை தமது விருப்பத்திற்கு ஏற்ப நடாத்துவது என்ற ‘ஜனநாயக’ வழி முறையைத்தான் ஆப்பானிஸ்தானில் நடாத்தினர் அமெரிக்க கூட்டமைப்பினர்.

இதில் உள்ளுர் ஆப்கானிஸ்தான் அரசியல் தலைவர்கள், பணியாளர்கள் தமது நாட்டின் செயற்பாட்டில் பொதுப் போக்கில ஈடுபட்டனர். இவ்வாறு அரசு அமைப்பதுவும் நிர்வாகத்தில் பங்கு பற்றுவதற்கும் எதிர் நிலையாக அமெரிக்காவின் படையிடம் தமது ஆட்சியை இழந்த தலிபான்கள் துரோகிகளின் செயற்பாடாகவே கருதினர். அமெரிக்க படைகளின் பிரசன்ன காலமாகிய கடந்த 20 வருடங்களும் நிலமை இவ்வாறுதான் நகர்ந்தது.

தொடர் ஆயுத மோதல்களாக நகர்ந்த இருபது வருடங்களில் மற்றைய எந்த நாடுகளையும் விட ஆப்கானிஸ்தானின் புவியியல் அமைப்பு தலிபான தீவிரவாதிகளின் மறைவிடங்களை முழுமையாக எந்த நவீன ரக ஆயுதங்களைக் கொண்டு அடக்க, அழிக்க முடியவில்லை.

கூடவே அருகில் எல்லைகள் முழுவதும் பரந்திருக்கும் பாகிஸ்தானின் தரையால் உள்ள இணைப்பு இந்த தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானை தமது மறைவிடமாக பாவிப்பதற்கு இருந்து ஏதுவான ‘தட்ப வெப்ப’ நிலமையும் இந்தத் தீவிரவாதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் பாகிஸ்தானில் ஆட்சியை தொடருதல் ஏன் உயிர்வாழுதல் என்பது கடினமானது என்ற ‘ஜனநாயகத்தை’ பாகிஸ்தான் கொண்டிருந்ததும் தலிபான்கள் ஆப்கனிஸ்தானில் நிலைத்து நிற்பதற்கு முக்கிய காரணமாகியது.

கூடவே தலிபான் தரப்பிலும் அமெரிக்க கூட்டமைப்பு படைகள் ஆப்கானிஸ்தான் அரசு என்று முத்தரப்பிலும் போதைவஸ்தில் உலக சந்தையில் பெருந்தொகை பணமீட்டல் என்பது இங்கு இந்த போர் தொடர வேண்டும் என்று முத்தரப்பினரும் விருப்பத்துடன் இருந்த துர்ப்பாக்கிய நிலமையை நாம் புறம் தள்ளிவிட முடியாது.

அமெரிக்க கூட்டமைப்பு படைகளின் பொது மக்களுக்கு எதிரான தாக்குதல், பெண்களுக்கு எதிரான செயற்பாடுகள் மக்களின் வாழ்வை மேம்படுத்த முடியாத ஆப்கான அரசின் செயற்பாடுகள் என்பன பொது மக்களை தலிபான், ஏனைய தீவிரவாத அமைப்புக்கள் பக்கம் சாய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியது.

உலக நவீன ஆயுதங்கள், பல லட்சம் பயிற்சி அளிக்கப்பட்ட ஆப்கான அரசு படைகள் என்று யாராலும் வெல்லப்பட முடியாத அதே வேளை அமெரிக்க அதன் கூட்டமைப்பு நாடுகளின் டாலர்களை தின்று கொண்டிருந்த அவமானகரமான யுத்தமாக அமெரிக்க அரசினால் உணரப்பட்டது. ஆனாலும் உலகப் பொலிஸ்காரனாக செயற்படும் அமெரிக்காவின் கௌரவ பின்வாங்கல் அவர்களால் செய்ய முடியவில்லை. ஆனால் டொனால் ட்றம் போன்ற ஒரு ‘வித்தியாசமான’ அமெரிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானமே ஒரு கௌரவமான பின்வாங்கலை ஜோ பைடன் செய்வதற்கு வாய்ப்பை ஏற்படுதியது.

சில வருடங்களுக்கு முன்பு தலிபான் சீனா இடையில் ஏற்பட்ட தொடர்பும் அதனைத் தொடர்ந்து சீனாவை தலிபான்களிடம் கோர்த்துவிட்டுக் கழட்டிக் கொள்ள நினைத்த அமெரிக்காவின் முயற்சிகளில் சீனா இராணுவ ரீதியில் சிக்கிக் கொள்ளாமல் ‘வெற்றி” கண்டது உலக செய்தி ஊடகங்களில் அதிகம் பேசப்படாவிட்டாலும் வரலாற்று உண்மைகள் இவை.

அமெரிக்கா ஆப்கானில் தங்கியிருந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் மிகக் குறைந்த அளவிலான மக்களே தேர்தலில் பங்குபற்றினர் என்பதற்கு உருவாகப் போகும் ஜனநாயக அரசியல் மக்களுக்கு இருந்த நம்பிக்கையீனங்களும் கூடவே தேர்தலில் பங்கு பற்றினால் தலிபான்களின் துப்பாக்கிக் கோவத்திற்கு ஆளாகலாம் எ ன்பதால் அதனைத் தவிர்த்த செயற்பாடுகள் என்பன காரணங்களாக அமைந்தன.
இது ஒரு பொதுவான போக்குத்தான். நாம் இதனை 1989 ல் இந்தியப் படைகளின் பிரசன்ன காலத்தில் இலங்கையில் சிறப்பாக வடக்கு கிழக்கு மகாணங்களில் அன்றைய காலகட்டத்தில் நடைபெற்ற தேர்தல்களிலும் கண்டோம்.

அமெரிக்க படைகளின் பிரசன்ன காலத்தில் ஹமீத் கர்சாய் 2001 முதல் 2014 வரை நாட்டின் தலைவராக இருந்தார். டிசம்பர் 2001 இல், தாலிபான் அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பிறகு, ஹமீத் கர்சாயின் கீழ் ஆப்கான் இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்பட்டது. கர்சாய் நிர்வாகத்திற்கு உதவுவதற்கும் அடிப்படை பாதுகாப்பை வழங்குவதற்கும் சர்வதேச பாதுகாப்பு உதவிப் படை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலால் நிறுவப்பட்டது.

2001 இற்கு முன்பு இரண்டு தசாப்த கால யுத்தம் மற்றும் கடுமையான பஞ்சத்திற்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் உலகின் மிக உயர்ந்த குழந்தை மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதங்களில் ஒன்றாக காணப்பட்டது.

குறைந்த ஆயுட்காலத்துடன் பெரும்பாலான மக்கள் பசியுடன் இருந்தனர், மற்றும் உள்கட்டமைப்புகள் யுத்தங்களால் இடிபாடுகளின் நடுவேயே காணப்பட்டன. பல வெளிநாட்டு நன்கொடையாளர்கள் போரால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஆளணி உதவி மற்றும் பொருட்கள் உதவிகளை வழங்கத் தொடங்கினர். இதற்கு பின்னாலும் தகவலறியும் ஒரு உள்நோக்கங்களும் இருந்திருக்கும் என்பதில் வியப்பேதும் இல்லை.

இதற்கிடையில், தலிபான் படைகள் பாகிஸ்தானுக்குள் மீண்டும் ஒருங்கிணைக்கத் தொடங்கின, மேலும் அமெரிக்க கூட்டணிப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து புனரமைப்பு செயல்முறைக்கு உதவின. ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை மீட்க தலிபான் கிளர்ச்சியை தொடங்கியது.

அடுத்த தசாப்தத்தில், சர்வதேச பாதுகாப்பு உதவிப் படை மற்றும் ஆப்கான் துருப்புக்கள் தலிபான்களுக்கு எதிராக பல தாக்குதல்களை நடத்தின, ஆனால் அவற்றை முழுமையாக தோற்கடிக்க முடியவில்லை. வெளிநாட்டு முதலீடு இல்லாதது, அரசாங்க ஊழல் மற்றும் தலிபான் கிளர்ச்சி காரணமாக ஆப்கானிஸ்தான் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக பயணப்பட்டது.

இதற்கிடையில், கர்சாய் நாட்டின் மக்களை ஒன்றிணைக்க முயன்றார், மற்றும் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் சில ஜனநாயக கட்டமைப்புகளை உருவாக்க முடிந்தது, 2004 இல் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசு என்ற பெயரில் ஒரு அரசியலமைப்பை உருவாக்கியது.

நாட்டின் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் பெரும்பாலும் வெளிநாட்டு நன்கொடை நாடுகளின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டன. சர்வதேச பாதுகாப்பு உதவிப் படைகள் ஆப்கான் தேசிய பாதுகாப்புப் படைகளுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கின.

2002 ஐத் தொடர்ந்து, கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தானுக்கு வெளியில் அகதிகளாக இருந்த ஐந்து மில்லியன் ஆப்கானியர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்த நேட்டோ படைகளின் எண்ணிக்கை 2011 இல் 140,000 ஆக உயர்ந்தது, 2018 இல் சுமார் 16,000 ஆக குறைந்தது.

செப்டம்பர் 2014 இல் அஷ்ரப் கானி 2014 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு ஜனாதிபதியானார். ஆப்கானிஸ்தானின் வரலாற்றில் முதன்முறையாக அதிகாரம் ஜனநாயக ரீதியாக மாற்றப்பட்டது.
தொடர்ந்து 28 டிசம்பர் 2014 அன்று, நேட்டோ ஆப்கானிஸ்தானில் சர்வதேச பாதுகாப்பு உதவிப் படைகள் போர் நடவடிக்கைகளை முறையாக முடித்து, ஆப்கான் அரசு நாட்டின் முழு பாதுகாப்புப் பொறுப்பை பொறுப்பேற்றுக் கொண்டது.

ஆனால் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தான் மண்ணில் நிலை கொண்டு இருந்தன. ஆயிரக்கணக்கான நேட்டோ துருப்புக்கள் ஆப்கானிய அரசாங்கப் படைகளுக்கு பயிற்சி அளிப்பதற்கும் ஆலோசனை வழங்குவதிலும் ஈடுபட்டனர்.

2015 இல் மதிப்பீட்டின்படி ஆப்கானிஸ்தான் போரில் 2001 முதல் சுமார் 147,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 38,000 க்கும் அதிகமானோர் பொதுமக்கள். ‘பாடி கவுன்ட்’ என்ற தலைப்பில், ஆப்கானிஸ்தானில் நடந்த மோதலில் 106,000 தொடக்கம் 170,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையிலும் தலிபான்கள் அமெரிக்க விருப்பு அரசுக்கு எதிரான செயற்பாடுகளை எஞ்சிய நிலையில் தங்கியருந்த நேட்டோ படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்தன.

தலிபான்களை தம்மால் வெற்றி கொள்ள முடியாது என்பதுவும் ஏழு ட்றில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான கனிம வளங்களில் மிகச் சிறிய பகுதியையேனும் தம்மால் வறுக முடியவில்லை என்பதுவும் ஆனால் தினம் தினம் பணம் உயிர் விரயமாவதை உணர்ந்து நேட்டோ படைகள் ஒவ்வொன்றாக கழர தொடங்க அமெரிக்கா ‘மாயநிலை'(Virtual)யில் தனிமைப்படுத்தப்பட்ட நிலைமையை உணர்ந்தது.

தோல்விகரமாக பின்வாங்குதல் என்பதில் இருந்து…. தம்மை விடுவித்துக் கொள்ளுதல் என்பதை தாம் ஆப்கானிஸ்தானுக்கு சென்ற ஜனநாயக மீட்பு மனிதாபிமான செயற்பாடுகள் முடிவடைந்து விட்டன. ஆப்கானிஸ்தான் அரசை காத்துக் கொள்ள மூன்று இலட்சம் படைகள் தம்மால் பயிற்றுவிற்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர் என்று கூறி கொண்டு 2021 ஆகஸ்ட் மாதம் 31 இற்குள் தமது முழுமையான விலகலை செய்வது என்று தலிபானுடன் ஏலவே நடைபெற்ற நீண்ட சந்திப்புகள் பேச்சு வார்ததைகள் உடன்பாடுகள் அடிப்படையில் ஆகஸ்ட் 15, 2021 ல் படை விலகலை ஆரம்பித்தனர்.

மிகுதி அடுத்த பதிவில்…..

என்னதான் நடக்கின்றது ஆப்கானிஸ்தானில்….(பகுதி 2) : சிவா முருகுப்பிள்ளை

ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலமையை மேலும் புரிந்து கொள்ளவதற்கு 1970 களில் நிலவிய பூகோள அரசியலை எமது நாடு இலங்கையுடன் இணைத்து பார்போம்…

வல்லரசுகள் ஆசியாவிற்கான நுளை வாயிலாக மத்திய ஆசிய நாடான ஆப்கானிஸ்தானை பாவிக்க முற்பட்ட சம காலத்தில் ஆசியாவின் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையில் அமெரிக்கா தனது செல்வாக்கை நிறுவ முயன்ற நிகழ்வும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அதற்கு ஏதுவாக அன்றைய ஜேஆர் இன் தேர்தல் வெற்றியும் அவரின் அமெரிக்க நலன் சார்ந்த ஆட்சியும் அமைந்தன. இதன் முக்கிய அம்சம் திறந்த பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்தியதும் ஆகும்.

ஜேஆர் அமெரிக்காவிற்கான செய்தித் தொடர்பு நிலையம் ஒன்றை சிலாபத்தில் அமைக்க அனுமதி வழங்க முற்பட்ட நிலையில் இதற்கு இந்தியாவின் பிரதம மந்திரி இந்திரா காந்தி தனது ஆட்சேபனையை தெரிவித்தார். இதனையும் மீறி இலங்கையில் அமெரிக்காவின் பிரசன்னத்திற்கு பச்சை கொடி காட்டிய ஜேஆர் இற்கு பாடம் கற்பிக்க முயன்றார் இந்திரா காந்தி.

சோசலிச சோவியத் முகாமுடன் நெருங்கிய உறவை கொண்டிருந்த இந்திரா காந்தியின் செயற்பாடுகளை ‘இந்திரா காந்தியின் சோசலிச செயற்பாடுகள்” என்று பேசும் அளவிற்கு நிலமைகள் இருந்தன அன்று. அந்த அளவிற்கு சோவித்த யூனியனுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நெருக்கமும் பரஸ்பர இராணுவ பொருளாதார பரிமாற்றங்களும் இருந்தன. இந்தியாவை மீறி இலங்கை விடயத்தில் யாரும் தலையிடுவதை அனுமதிக்காத செல்வாக்கு பலமும் அன்று இந்தியாவிடம் இருந்தது.

இலங்கையில் இன ஒடுக்கு முறையிற்கு உள்ளாகியிருந்த சிறுபான்மை தமிழ் பேசும் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடுதல் என்ற முடிவிற்குள் தம்மை தகவமைத்து செயற்பாட்டை தொடங்கியிருந்து 1970 களின் பிற்கூற்று நிலமைகளை இந்திரா காந்தி ஜேஆருக்கு பாடம் கற்பிப்பதற்கு தனக்கு சாதகமாக பாவிக்க முற்பட்டார். இதன் தொடர்ச்சியாக நடைபெற்றவைதான் ஈழவிடுதலை அமைப்புகளுக்கான ஆதரவும் இந்தியாவின் பயிற்சிகளும் ஆகும்.

சற்று ஆழமாக பார்த்தால் புரியும் ஆசியாவிற்கு தமது காலடியை வைக்க மத்திய ஆசியா ஊடாக ஆப்கானிஸ்தானிலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையையும் அமெரிக்கா, சோவியத் யூனியன் என்ற இரு முரண்பட்ட முகாங்களின் வல்லரசுகளும் முனைந்ததன் வெளிப்பாடுகள் 1970 களின் நடுப்பகுதியில் கரு கொண்டிருந்தன. அதற்கான செயற்பாடுகள் இவ்விரு நாடுகளிலும் நடைபெற்றன.

சோவியத் யூனியன் இலங்கையை தனது நட்பு நாடான இந்தியா ஊடாகவும் ஆப்கானிஸ்தானை தனது எல்லை நாடாகவும் பாவித்தது. அமெரிக்கா இலங்கையை தனது வலதுசாரிக் கூட்டாளி ஜேஆர் ஊடாகவும் ஆப்கானிஸ்தானை தனது இராணுவக் கூட்டாளி பாகிஸ்தான் ஊடாகவும் கையாண்டன.

இந்தியாவுடனான பகையை கடன் தீர்க்க பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் முஸ்லீம் அடிப்படைவாத தீவிரவாதத்தை தனக்கு சாதமாக அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன் பாவித்தது. கூடவே அமெரிக்காவும் இந்திய சோவியத் நட்பிற்கு பாடம் கற்பிக்க இதனையே பயன்படுத்தியது.

இதன் வெளிபாடுகளும் அமெரிக்காவின் சோவியத்திற்கும் சோசலிசத்திற்கும் எதிரான செயற்பாடுகளை செயற்படுத்த ஆப்கானிஸ்தானின் நஜிபுல்லாவின் அரசை அழிக்க உருவாக்கப்பட்டவைதான் ஆப்கானிஸ்தான் முஹாஜிதீன்களும் அதனைத் தொடர்ந்து உருமாற்றம் அடைந்த தலிபான்களும் ஆகும். இதற்கான முழுப் பொறுப்பும் அமெரிக்கா அதன் கூட்டாளி நாடுகள் நேட்டோவையும் சாரும். இந்த சர்வ தேச பின்னணியின் அடிப்படையிலேயே ஆப்கானின் பிரச்சனையை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

ஈழவிடுதலை அமைப்புகளில் ஒரு பிரிவினர் இடதுசாரிக் கருத்தியலை தமது அடிநாதமாக கொண்ட செயற்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கு கரம் கொடுப்பது போன்று தனது சொல் கேளாத அமெரிக்காவின் பிரசன்னத்தை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உருவாக முயன்ற இலங்கை அரசிற்கு பாடம் புகட்ட ஆயுதப் பயிற்சியும் ஆதரவும் வழங்கிய நிகழ்வுகளைப் போல் 1970 களின் பிற்பகுதியில் ஆப்கானிஸ்தானில் நடைபெற்றன.

ஆப்கானிஸ்தானில் முழு ஆப்கானித்தானும் முஸ்லீம்கள் என்ற அடிப்படைவாதத்தை முன்னிறுத்தி போராட்டத்தை தகவமைத்தாக பொது பார்வையில் பார்க்கப்பட்டாலும் இங்கும் பஷ்தூன் மக்களின் பெருபான்மை நலன்களை முன்னிறுத்திய போராட்டமாக அது இன்றுவரை பெரும்பாலும் கருக்கொண்டு செயற்பட்டு வருவது கவனத்தில் எடுகப்பட வேண்டிய விடயம்.

பாகிஸ்தான் மதராசா பள்ளியில் கற்ற மாணவர்களின் பிரசன்னம் அதிகம் உள்ள தலிபான்களின் அடிநாதமாக விளங்குவதும் இதுதான். அதுதான் தலிபான்களைத் தவிர்த்து வேறு விடுதலை அமைப்புக்களும் உருவாகி செயற்படுவதற்கான காரணமும் ஆகும்.

இலங்கையில் பெரும்பான்மை பௌத்த சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான சிறுபான்மை மக்களின் போராட்டமாக ஈழவிடுதலைப் போராட்டம் கருக் கொண்டிருந்தது. இங்கு பிரிவினைவாதம் முன் நிறுதப்பட்டதால் தனி நாடு என்று கோரிக்கை சார்ந்த போராட்டம் ஒரளவிற்கு மேல் சோவியத் இந்திய ஆதரவுச் செயற்பாடுகள் க(ம)ட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருந்தன.

1970 களில் தாம் சீனச் சார்பான இடதுசாரிக் கருத்தியலாளர்கள் என்ற வடிவத்தில் தமிழ் பேசும் மக்களை இணைத்துக் கொள்ளாமல் முழு இலங்கையிற்குமான புரட்சி என்று போதுமான அளவு தயாரிப்புகளில் ஈடுபடாத ஜேவிபின் இலங்கையின் அரசை கைப்பற்றும் புரட்சி இந்திய இராணுவத்தின் உதவியுடன் தோற்கடிக்கப்பட்டதன் பின்னணியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் பேசும் மக்களையும் இணைத்துக் கொண்டு போதிய தயாரிப்புகளுடன் சோவியத் சார்பு நிலைப்பாட்டுடன் புரட்சி ஒன்றை இலங்கையில் நடாத்தியிருந்தால்…. ஜேவிபின் இலங்கை அரசைக் கைப்பற்றுதல் வெற்றி பெற்றிருக்குமோ என்ற கருதுகோளை புறந்தள்ள முடியவில்லை.

அன்றை அமெரிக்க சோவியத் இந்தியா சீனாவின் அரசியல் ஒழுங்குகள் இதற்கான வாய்புக்களை அதிகம் கொண்டிருந்தன.

இங்கு ஜேவிபி பிழையான தந்திரோபாய அடிப்படையிலும் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்து ஆனால் கிட்டத்தட்ட சம காலத்தில் ஆப்கானிஸ்தானில் ஆப்கானிய கம்யூனிஸ்ட்களின் மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றியும் இடதுசாரி ஆட்சியும் அமைந்ததற்கான வாய்புகளையும் நாம் இவ்வாறுதான் இலங்கை நிலமையில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.

இந்த சமாகால பூகோள, பிராந்திய, ஆசிய, இந்து சமுத்திரச் சூழலை அடிப்படையாக கொண்டுதான் ஆப்கானிஸ்தான் வரலாறு. நஜிபுல்லாவின் கொலையும் அதனைத் தொடர்ந்த உள்ள நாட்டுப் போரின் இறுதியில்தான் 1996 ல் தலிபான்களின் முதல் தவணை ஆட்சி ஆப்கானில் உருவானது.

இது முஹாஜீதீன்கள் பஷ்தூன்களை பெருபான்மையாக கொண்ட பழங்குடி மக்கள் பாகிஸ்தான் மதராசில் கல்வி கற்ற மாணவர்களை கொண்டு உருவானவர்களால் தலிபான என்ற அமைப்புதான் அது. இதற்கான தலமைப் பொறுப்பை முஹாஜீதின் தலமைப் பொறுப்பில் இருந்த முகமது உமர் நியமிக்கப்பட்டார்.

இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை அடி நாதமாக கொண்டு உருவான அரசு பல வகையிலும் அந்த மக்களுக்கான சரியான ஆட்சியை வழங்கவில்லை. ஆப்கானிஸ்தானில் வாழும் பலவேறு இனக்குழுக்ளை ஒருங்கிணைத்து சமமாக கையாளுதல் ஆண் பெண் சத்துவம் குறிப்பாக பெண்களுக்கான கல்வி உரிமை உட்பட்ட சகலதையும் மறுத்த நிலமை ஆட்சியில் கோலோச்சியது.

போதை பொருட்களை உலக சந்தையில் அதிகம் ஊக்கிவித்த உற்பத்திச் செயற்பாடுகள்… பாகிஸ்தானின் இஸ்லாமிய மத அடிப்படைவாத தீவிரவாத்தை ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல்…. இதில் அனேகம் அமெரிக்காவின் வேண்டுதலை பாகிஸ்தான் ஊடாக செயற்படுத்தியவை அடங்கும இந்தியா மீதான இஸ்லாமிய மத அடிப்படைவாதத் தாக்குதல்கள் என்று பலதையும் செயற்படுத்தும் ஒரு தளமாக ஆப்கானிஸ்தானும் அதன் தலிபான் அரசும் செயற்பட்டன.

மாறாக பல வருடங்களாக யுத்தம், வல்லரசுகளினால் உருவான ஸ்திரமற்ற அரசு என்று சின்னா பின்னப்பட்டுப் போன நாட்டை கட்டியமைக்க அவர்களால் முடியவில்லை. கூடவே அவர்களுக்கு நேரடி ஆதரவுக்கரமான பாகிஸ்தானின் விருப்பமும் அதுவாக இருக்கவில்லை.

மதத் தீவிரவாதத்தின் தீவிரவாதிகளின் முகாங்களை அமைக்க உதவும் ஒரு நிலமாக மலைப் பிரதேசமாக அதிகம் ஆப்கானிஸ்தான் பாவிக்கப்பட்டது.

ஒரு ஜனநாயக முற்போக்கு மக்கள் நலன்சார்ந்த அரசை செயற்பாட்டை தலிபான்கள் முன்னெடுக்கவில்லை. இதனை மாற்றயமைக்கும் வல்லமையும் மக்களிடம் இருக்கவில்லை. தலிபான்களுக்கு எதிராக செயற்பட்ட ஏனைய சிறுபான்மை மக்களை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்திய வடக்கு கூட்டணியும் இதனை செய்து முடிக்க முடியவில்லை.

இந்நிலையில் 9/11 என்று அறியப்பட்ட அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலும் இதனைச் செயற்படுத்தியதாக உரிமை கோரிய அல்கைதாவின் இருப்பிடம் ஆப்கானிஸ்தான் என்றும் அமெரிக்காவினால் கூறப்பட்டு பின் லாடனை தம்மிடம் ஒப்படைக்குமாறு தலிபான்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு பின்னால் வளங்களை திருடுவதற்கான சந்தர்பங்களைப் பார்த்திருந்தி அமெரிக்க அரேபிய எண்ணையும் ஆப்கானிஸ்தான் மலைகளில் செறிந்திருக்கும் 7 ட்ரிலியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலான வளங்களையும் திருடுவதற்கு இரட்டைக் கோபுரத் தாக்குதலின் சூத்திரதாரி ஒசமா பின் லாடன் ஆப்கானிஸ்தரின் மறைந்திருப்பதாக கூறிக் கொண்ட ஆப்கானிஸ்தானிலும்… அபாயகரமாக இரசாயன ஆயுதங்களை வைத்திருக்கின்றார், சதாம் குசைன் என்று ஈராக் மீதும் படையெடுத்து.
இத்தனைக்கு வரலாற்றுப் போக்கில் ஒசமா பின் லாடன் சவூதியரேபிய பிரஜை மேலும் அவர் கொல்லப்பட்டது அமெரிக்காவின் உற்ற இராணுவத் தோழன் பாகிஸ்தானில். இவ்விரு நாடுகளுடனும் இன்று வரை அமெரிக்கா நல்ல நண்பன் என்ற உறவிலேயே இருக்கின்றது என்பது வேடிக்கையான விடயம். மனித குலம் அமெரிக்காவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டியது இந்தக் குற்றங்களின் அடிப்படையில் என்பதுதான் இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயம்.

என்னென்ன காரணங்களுக்காக அமெரிக்கா தனது படைகளை அனுப்பி ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் லிபியாவை கைபற்றியேதா அவை ஏதும் உண்மை இல்லை என்றாகிவிட்ட நிலையில் ஐ.நா.வின் மனித உரிமை சபையில் இந்த குற்றங்களை புரிந்தமையிற்காக அமெரிக்க ஐரோப்பிய நேட்டோ கூட்டமைப்பை நிறுத்தப் போவது யார்…?

இவ்வாறான பூகோள அரசியல் நிலமையில் இலங்கை மக்கள் சிறப்பாக தமிழ் பேசும் மக்கள் தமக்கான அரசியல் தீர்வை இதே அமெரிக்கா அதன் நட்பு சக்திகள் பெற்றுக் கொடுக்கும் என்று இலவுகாத்தி கிளியாக இருப்பது ஆப்கானிஸ்தான் பாடங்களை நாம் புரியாதவர்கள் என்றே ஆகிவிடும்.

மிகுதி அடுத்த பதிவில்…..

ஆப்கானிஸ்தான் தொடக்கமும் அல்ல முடிவும் அல்ல : மேற்குலகின் தலையீடுகள் எப்போதும் ஆபத்தானதே !

இன்று ஆப்கானின் நெருக்கடிகள் ஒன்றும் புதில்ல. அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகள் காலம் காலமாகச் செய்துவருகின்ற குறளி வித்தைகளின் தொடர்ச்சியே. செல்வத்தால் கொழுத்த மேற்கு நாடுகள் ஐநா வின் பொது உடன்பாடு இன்றி. ஏனைய நாடுகளில் தலையீடு செய்வது தங்களின் சொந்த நலன்களுக்காக மட்டுமே. அதனால் இத்தலையீடுகள் பெரும்பாலும் அந்நாடுகளைச் சீரழிவிற்குள்ளேயே தள்ளி விடுகின்றன. அண்மைய தசாப்தங்களில் வளைகுடா யுத்தம் – ஈராக், லிபியா, யேர்மன், ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளில் தலையீடு செய்து அங்கிருந்த அதிகாரக் கட்டமைப்புகளை உடைத்து தங்களுக்கு சாதகமான பொம்மைத் தலைமைகளை உருவாக்கும் முயற்சி எதனிலும் மேற்குலகம் வெற்றிபெறவில்லை.

ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்கின்றோம் என்ற பெயரில் இந்த மேற்கு நாடுகள் நேரடி அல்லது மறைமுக தலையீடுகளைச் செய்து அந்நாடுகளின் மக்களையும் வளங்களையும் அழித்து அந்நாடுகளை பல தசாப்தங்களுக்கு முன்னேற முடியாதளவிற்கு சீரழித்து வந்துள்ளன. ஈராக், லிபியா போன்ற நாடுகளில் ஆராஜகப் போக்குகளை ஆரம்பத்தில் ஊக்குவித்தவர்களும் இந்த மேற்கு நாட்டினரே. ஈராக் அதிபராக இருந்த சதாம் ஹுசைனுக்கு உயிரியல் ஆயுதங்களை வழங்கியது, லிபிய அதிபராக இருந்த கேர்ணல் கடாபிக்கு ஆயுதங்கள், நிதியை வழங்கியது மேற்கு நாடுகளே. ஆப்கானிஸ்தானில் முஜாஹிதீன்களையும் தலிபான்களையும் தொடர்ந்து அல்ஹைடா பின்லாடனையும் வளர்த்துவிட்டது இந்த மேற்குலகமே. சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் க்கு ஆயுதம் வழங்கி வளர்த்ததும் இவர்களே. இப்போது தலிபான்களோடு பேச்சுவார்த்தை நடாத்தியதும் இந்த மேற்குலகமே.

இவ்வாறெல்லாம் சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுக்கும் இந்த மேற்குலகின் நடவடிக்கைகள் தங்களுக்கு லாபத்தை தரவில்லை என்றால், அவர்கள் அம்போ என்று அந்த நாடுகளை கைவிட்டு ஓடிவிடுவார்கள். இதுதான் ஒவ்வொரு தலையீட்டின் போதும் நடைபெற்றது. அதுவே ஆப்கானிஸ்தானிலும் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. இதற்கு முன்னர் அமெரிக்க நேட்டோ படைகளுடன் சேர்ந்து போரிட்ட குர்திஷ் போராளிகள் கைவிடப்பட்டனர். அமெரிக்க துருப்புக்கள் மீளப்பெறப்பட்ட போது குர்திஷ் வீரர்கள் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு விடப்பட்டனர். அமெரிக்க நேசநாட்டுப் படைகளுக்கு மொழிபெயர்ப்பு மற்றும் உதவிகளுக்கு உதவிய உள்ளுரவர்கள் பல நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். இவர்களில் பல நூற்றுக்கணக்கானோரை பயங்கரவாதிகளிடம் கைவிட்டுவிட்டே இந்த மேற்கத்தைய படைகள் வெளியேறின. வெளியேறிக் கொண்டிருக்கின்றன.

இதே மாதிரியான அரசியல் சூழல் இலங்கையிலும் இருந்தது. 1980களில் தனக்கு மாறாக அரெிக்காவுடன் உறவைப் பேணிய இலங்கை அரசுக்கு பாடம் புகட்ட இந்திய அரசு விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் ஆயுதப் பயிற்சியும் வழங்கி, ஆயுதங்களையும் வாரி வழங்கியது. ஆனால் இந்திய புலனாய்வுத்துறை இந்தப் போராளிகளுக்கு தமிழீழம் அமைவதை இந்தியா ஒரு போதும் அனுதியாது என்பதை மிகத் தெட்டத் தெளிவாக தெரிவித்தும் இருந்தது. ஆனால் இந்த ‘ஈ’ அமைப்புகள் (EPRLF & EPDP) தவிர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம் என்பன மக்களை தொடர்ந்தும் தமிழீழம் என்ற போர்வையில் ஏமாற்றியே போராட்டத்தை முன்னெடுத்தன. ஈபிஆர்எல்எப், ஈபிடிபி மட்டுமே வெளிப்படையாக தமிழீழத்தைக் கைவிட்டு தூர நோக்கோடு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை ஏற்று ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்கு வந்தது. EPDP, தமிழீழ விடுதலைப் புலிகளோடு இருந்த முரண்பாட்டால் தொடர்ந்தும் ஆயுதம் ஏந்தியதும் விடுதலைப் புலிகள் போல ஆயுத வன்முறைகளில் ஈடுபட்டதும் வரலாறு.

1987இல் இலங்கையில் நேரடித் தலையீட்டை மேற்கொண்ட இந்திய இராணுவம் 1990இல் இலங்கையை விட்டு வெளியேறியதும் அக்கால கட்டத்தில் இந்திய இராணுவத்திற்கு உதவியவர்கள் அவர்களுக்கு ரற்றா காட்டியவர்கள், இந்திய இராணுவம் வெளியேறியதைத் தொடர்ந்து நூற்றக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர்.

மீண்டும் இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் சில தசாப்தங்களுக்கு பின் தள்ளப்பட்டு நிற்கின்றது. இந்த போராட்டங்கள் என்ற பெயரில் கொல்லப்பட்ட போராளிகள், பொதுமக்கள், இராணுவ வீரர்கள் என்று எந்த உயிரிழப்பிற்கும் எவ்வித அர்த்தமும் இல்லை. டட்ட கஸ்டங்களுக்கும் இழப்புகளுக்கும் கூட எவ்வித அர்த்தமும் இல்லை. ஏனெனில் நாங்கள் மீண்டும் ஆரம்பப் புள்ளியில் வந்து நிற்கின்றோம். எங்களிடம் எஞ்சியிருப்பது வெறும் அனுபவங்கள் மட்டுமே. அதிலிருந்தும் எதனையும் கற்றுக்கொள்ளவும் நாங்கள் தாரில்லை.

இன்று உலகமே ஒரு கிராமமாகிவிட்டது. இன்று ஆப்கானிஸ்தானில் வெளியேற்றம் பற்றி 24 மணிநேரச் செய்திச் சேவைகள் பிளந்து தள்ளுகின்றன. இன்னும் சில வாரங்களில் ஆப்கானிஸ்தான்காரர்கள் எங்கள் நாடுகளுக்கு அகதிகளாக படையெடுக்கிறார்கள் என்று இந்த மேற்கு நாட்டுச் செய்தி நிறுவனங்கள் ஒப்பாரி வைக்கும். ஈராக் அகதிகளுக்கு ஒப்பாரி வைத்தார்கள், லிபிய அகதிகளுக்கு ஒப்பாரி வைத்தார்கள், சிரிய அகதிகளுக்கு ஒப்பாரி வைத்தார்கள் இன்றும் இத்தாலியின் மெடிற்றிரேனியன் கடற் பரப்பில் தினமும் அகதிகள் உயிரிழக்கின்றனர். ஏன்? இந்த மேற்கு நாடுகள் தலையீடு செய்து அவர்களின் நாடுகளைச் சீரழித்து சின்னாபின்னமாக்கியதால், அவர்கள் வாழ வழியின்றி மேற்கு நோக்கி வருகின்றனர். அவர்களுடைய இந்த நிலைக்கு இந் நாடுகளே தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

நீங்கள் ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்து கிழித்தது போதும், உங்கள் சர்வதேச பொலிஸ்காரன் அடாவடிகள் போதும், மூடிட்டு இருங்கள் செய்த பாவங்களுக்கு, அனைவருக்கும் அகதி அந்தஸ்த்தை வழங்குகள்.

என்னதான் நடக்கின்றது ஆப்கானிஸ்தானில் … : சிவா முருகுப்பிள்ளை (பகுதி 1)

உலகின் ஒரு மூலையில் மனித குலம் எதிர்பாராத நிகழ்வுகள் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றது. அப்படியான ஒரு வரலாற்று திருப்பு முனையாக 20 வருடம் ஆப்கானிதானில் நிலை கொண்டிருந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளின் திடீர் வெளியேற்றமும தொடரந்தாற் போல் ஒரு கிழமையிற்குள்…? அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட அரசு பதவியை இழந்ததும் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிகழ்வும் நடைபெற்று இருக்கின்றது தற்போது.

எதிர்பாராத நிகழ்வு என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தாலும் உண்மையில் இவை எல்லாம் ஒரு வரலாற்றுப் போக்கில் நடைபெற்ற ஒரு வேக நிகழ்வுதான்.

இன்றைய ஆப்கானிஸ்தான் பிரச்சனையை புரிந்து கொள்வதற்கு நாம் ஆப்கானிஸ்தானின் வரலாற்றை குறைந்தது ஐம்பது வருடங்களாவது பின் சென்று பார்த்தாக வேண்டும். அந்த வகையில் உலகின் வல்லரசுகளா ஒரு காலத்தில் இருந்த சோவியத் யூனியன் அமெரிக்கா என்று இரு முகாங்கள் வலுவாக உலகில் கோலோச்சிய காலத்தில் இருந்து நாம் வரலாற்றைப் பார்த்தாக வேண்டும்
அதிகம் மலைப் பிரதேசங்களையும் தட்டையற்ற நிலப்பரப்பையும் மலைகளில் அதிக கனிம வளங்களையும் கொண்டிருப்பதுதான் ஆப்கானிஸ்தான். பல்வேறு சிற்றரசுகளாக அவற்றிற்கிடையே அதிக தொடர்புகள் குறைவாக வெவ்வேறு ஆளுமையிற்குள் காலத்திற்கு காலம் இருந்து வந்திருக்கின்றது ஆப்கான். இன்று கூட நிலமை அவ்வாறுதான் உள்ளது.

ஆப்கானிஸ்தான் ஒரு பல்லின மற்றும் பெரும்பாலும் பழங்குடி சமூகங்களைக் கொண்ட நாடு. பஷ்தூன்;, தாஜிக், ஹசாரா, உஸ்பெக், ஐமக், துர்க்மேன், பலோச், பாஷாய், நூரிஸ்தானி, குஜ்ஜார், அரபு, பிராகுய், கிசில்பாஷ், பமிரி, கிர்கிஸ், சாதத் என்ற இனங்களையும் மேலும் சில மிகச் சிறிய அளவிலான இனங்களையும் தன்னகத்தே கொண்டது. ஆப்கான் அரசியலமைப்பு, தேசிய கீதம் போன்றவற்றில் பதினான்கு இனங்கள் பற்றி குறிப்புக்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது தலிபான் முழு ஆப்கானிஸ்தானையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றதா என்றால் இல்லை என்பதே பதிலாக அமையும். வடக்கு கூட்டமைப்பு என்று அழைக்கப்படும் பஷ்தூன்; இனம் தவிர்ந்த ஏனைய சிறுபான்மை இனங்களை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்தும் விடுதலை அமைப்பும் இங்கு பலமான ஒரு நிலையில் உள்ளது சில பிரதேசங்களில். குறிப்பாக பஞ்ஷிர் பள்ளத்தாக்கு பகுதியைக் குறிப்பிடலாம்.

வரலாற்றில் சற்று பின் நோக்கிச் செல்வோம்….

இஸ்லாமிய மக்களை அதிகம் கொண்டுள்ள உலக நாடுகளில் பல நாடுகள் முன்னேற்றகரமான சமூக அமைப்பை, ஆண் பெண் சமத்துவத்தை தமது மத நம்பிக்கை மார்க்கத்தையும் தொடர்ந்த வண்ணம் உள்ளதை உதாரணத்திற்கு காட்ட முடியும். உலகின் பொதுப் பார்வையில் இஸ்லாமிய மார்க்கம் மத அடிப்படைவாத செயற்பாட்டை தமக்குள் வகுத்துக் கொண்டு செயற்படுபவர்கள் என்ற பார்வை அதிகம் மேலோங்கி உள்ளது. ஆனால் உண்மை நிலை அவ்வாறு இல்லை.

மத அடிப்படை வாதத்திற்கு அப்பால் மனித குல மேம்பாடு என்ற தளத்தில் இவற்றின் அடிப்படைக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டு பயணிக்க முற்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களும் அங்கு உருவான அரசுகளும் கடந்த காலங்களிலும் இருந்து வந்தன என்பதை வரலாறு கூறி நிற்கின்றது.
மன்னர் ஆட்சிக் கோலோட்சிய 1960 களில்….

மன்னராட்சிக் காலத்தில் மன்னரின் மைத்துனரும் பஷ்தூன் தேசியவாதியான முகமது தாவூத் கான் பஷ்துனிஸ்தான் என்ற நாட்டை ஆப்கானிஸ்தானில் உருவாக்க முயன்றார் இதனால் அயல்நாடான பாகிஸ்தானுடன் முறுகல் நிலை ஏற்படட்டது. 1963 வரை பதவியில் இருந்த பத்து ஆண்டுகளில், தாவூத் கான் சமூக நவீனமயமாக்கல் சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுத்தார் மற்றும் சோவியத் யூனியனுடன் நெருக்கமான உறவையையும் பேணி வந்தார். இதன் தொடர்ச்சியாக 1964 ஆப்கானிஸ்தானுக்கான புதிய அரசியலமைப்பும் உருவாக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானின் சர்தார் தௌவுத் கானின் மன்னராட்சிக்கு எதிராக ஆப்கானிய கம்யூனிஸ்ட்களின் மக்கள் ஜனநாயகக் கட்சி ஏப்ரல் 1978 இல் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. இவர்கள் கிளர்ச்சிக்கு ஆதரவாக அன்றைய ஆப்கானிய அரச இராணுவம் செயற்பட்டது.

இந்தப் புரட்சியை தலைமை தாங்கிய நூர் முஹம்மது தராக்கி சோவியத் ரஷ்யாவின் உதவியுடன் ஆட்சியமைத்தார். அவர் பழமைவாதம் நிறைந்த ஆப்கானிய சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பை நவீனப்படுத்தும் திட்டங்களையும் முக்கியமாக நிலப் பிரபுகளுக்கு எதிரான நில சீர்த்திருத்தத்தையும் செயற்படுத்தினார்.

இது ஆப்கானிய நிலப் பிரபுக்களை ஆப்கானிய கம்யூனிச அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை செய்வதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது. அன்றைய ஆப்கானிஸ்தான் அரசில் அங்கம் வகித்த ஆப்கானிய கம்யூனிஸ்ட் தலைவர் நூர் மற்றும் நிலப்பிரபுகளுக்கு ஆதரவான ஹபிசுல்லா அமினுக்கு இடையே மோதல் முற்ற, இராணுவத் தளபதி அமின் இன் உத்தரவின் பேரில் நூர் படுகொலை செய்யபடுகிறார்.

அதனைத் தொடர்ந்து அமின் சோவியத் நாட்டை தவிர்த்து அமெரிக்காவின் பக்கம் சாய்கின்றார் என்பதன் அடிப்படையில் சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி தளபதி அமினை படுகொலை செய்து விட்டு சோவியத் ஆதரவாளரான பாப்ரக் கர்மலை நாட்டின் தலைவராக நியமித்தது.

அதனைத் தொடர்ந்து மத்திய ஆசியாவின் கேத்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆப்கானிஸ்தானில் கம்யூனிசம் காலூன்றுகின்றது என்ற வெறுப்பு மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளைப் பற்றிக் கொண்டது. அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இதற்கு எதிராக செயற்படத் தொடங்கினர். சோவியத் இராணுவம் உடனடியாக ஆப்கானை விட்டு வெளியேற வேண்டும் என்று தீர்மானங்களை அவை நிறைவேற்றின. சோவியத் ஆப்கானை விட்டு வெளியேற மறுக்கின்றது.

ஆப்கானிஸ்தானில் இருக்கும் சோவியத் படைகளை வெற்றி கொள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், சவூதிஅரேபியா, சீனா போன்ற நாடுகள் ‘முஜாஹிதீன்” என்ற இஸ்லாமிய சித்தாந்த ரீதியிலான மத அடிப்படைவாதப் போராளிகளை உருவாக்குகிறார்கள்.

அதன் தலைவர் முல்லா உமர் தலமையில் சோவியத் படைகளுக்கு எதிராகவும் அவரின் ஆதரவு ஆப்கானிஸ்தான் கம்யூனிச அரசுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றன. அன்றைய காலகட்டத்தில் சோவியத் சீனா இடையிலான முரண்பாடுகள் காரணமாக சீனாவின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் அமெரிக்கா இருந்தது.

உண்மையில் மேற்கத்திய நாடுகளின் சோவியத்திற்கு எதிரான பனிப்போரை முஜாஹிதீன்கள் நடத்தினார்கள். இவர்களின் தளபதிகள் பெரும்பாலும் நிலப்பிரபுக்களாக இருந்து போராளிகளாக உருமாறியவர்கள். பெரும்பாலும் இவர்கள் பழங்குடியினர் மத்தியில் இருந்து வந்த பஷ்தூன்; இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதற்கிடையில் பாப்ரக் கர்மலின் ஆட்சியின் மீது மக்களின் அதிருப்தி அதிகரிக்க, சோவியத் யூனியன் புதிய அதிபராக முஹம்மது நஜிபுல்லாவை நியமித்தது.

முஜாஹிதீன் களின் கெரில்லா யுத்தம் சோவியத் நாட்டுக்கு பெரும் இழப்பையும் பொருளாதாரச் சுமையையும் ஏற்படுத்தியதன் விளைவாக பத்து வருடங்கள் ஆப்கானில் நிலை கொண்டிருந்த சோவியத் இராணுவம் பெப்ரவரி 1989 ஆப்கானை விட்டு வெளியேறுகிறது.

ஆனாலும் தொடர்ந்து பொருளாதார இராணுவ உதவிகளை நஜிபுல்லா அரசிற்கு வழங்கி வந்தது. 1991 இல் சோவியத்தின் வலிந்த உடைவும் அதனைத் தொடர்ந்த சோவியத் ஆதரவு அற்ற ஆப்கானிஸ்தானின் நஜிபுல்லா அரசும் அதிக காலம் தாக்கு பிடிக்க முடியவில்லை. முஜாஹிதீன் இற்கு பாகிஸ்தான் ஊடாக அமெரிக்க கூட்டமைப்புகள் ஆயுத பொருளாதார ஆதரவுகளை வழங்கி வந்த நிலையில் ஆப்கான் அரசு 1992 இல் வீழ்சியடைகின்றது.

முஹம்மது நஜிபுல்லா பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவிற்குத் தப்பியோட முயற்சித்தார். அது தோல்வியில் முடிய – ஆப்கானில் இருக்கும் ஐக்கிய நாடுகளின் தலைமை குடியிருப்பில் தங்கியிருந்த முஹம்மது நஜிபுல்லாவை முஜாஹிதீன் துக்கிலிட்டு படுகொலை செய்து அதன் பின்பு வாகனம் ஒன்றில் பின்புறமாக கட்டி தெருத் தெருவாக இழுத்துச் சென்றனர்.

முஜாஹிதீன்களின் ஆட்சி ஆப்கானிஸ்தானில் துவங்கியது இவ்வாறுதான்.

கம்யூனிசத்திற்கு மாற்றாக இஸ்லாமிய நாடுகளில் மத அடிப்படைவாதத்தை பரப்பிய ‘பெருமை’ மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளையே சேரும். சவூதிரேபியாவின் எண்ணெய் வளம், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ, அமெரிக்காவின் நேட்டோ கூட்டணி என்பது இந்த மத அடிப்படைவாதத்தின் அச்சாணி.
இதனைத் தொடர்ந்து பல்வேறு முஜாஹிதீன் பிரிவுகளின் கூட்டணியினர் அரசாங்கத்தை சலாவுதீன் ரப்பானி தலமையில் உருவாக்கினர். ஆனால் மற்றொரு உள்நாட்டுப் போர் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. 1996 வரை தொடர்ந்த உள்ள நாட்டுப் போரின் இறுதியில்தான் தலிபான்களின் முதல் தவணை ஆட்சி ஆப்கானில் உருவானது…

மிகுதி அடுத்த பதிவில்…

(நன்றி: சிவா முருகுப்பிள்ளை – அவருடைய முகநூலில் இருந்து)

அமெரிக்க – பிரித்தானிய கூட்டு வக்சீன் உற்பத்தியை தடுக்கின்றது!!!

பிரித்தானியாவில் சுதந்திர நாள்! வறுமைப்பட்ட நாடுகளில் மரண ஓலம்!
அமெரிக்க – பிரித்தானிய கூட்டு வக்சீன் உற்பத்தியை தடுக்கின்றது!!!

தனது நாட்டு மக்களுக்கு வக்சீனை வழங்கி கோவிட்-19 தாக்கத்தை கட்டுப்படுத்தி உள்ள அமெரிக்க – பிரித்தானியா அரசுகள் வக்சீனை ஏனைய நாடுகள் உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை சிறிது காலத்திற்கு விட்டுக்கொடுப்பதற்கு மறுத்து வருகின்றது. அதனால் உலகில் பல்லாயிரம் கோவிட் மரணங்கள் சம்பவிக்க உள்ளது. இன்று முற்றிலும் களியாட்டங்களுக்கு நாட்டைத் திறந்துவிட்டுள்ள பிரித்தானிய அரசு உலகின் பல்வேறு பாகங்களிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் மரணமாவதைப் பற்றி எவ்வித கரிசனையும் கொள்ளவில்லை.

நுனிநாக்கில் மனித உரிமை பேசி தங்களை மனித உரிமைகளின் ஜனநாயகத்தின் காவலர்களாகக் காட்டிக்கொள்ளும் அமெரிக்க – பிரித்தானிய நாடுகள் கோவிட் வக்சீன் உரிமத்தை முற்றிலும் லாபநோக்கத்திற்காக தனியார் நிறுவனங்களிடம் கையளித்து உற்பத்தியை தடுப்பதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மரணங்களுக்கு வழிகோலுகின்றனர். எவ்வித மனிநேயமும் அற்று செயற்படுகின்ற அமெரிக்க – பிரித்தானிய கூட்டு எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கு வழிகாட்டவோ தலைமையேற்கவோ தகுதயற்றவையாகி வருகின்றன.

பிரித்தானியா ப்ரீடம்டே – சுதந்திரநாள் என்று அறிவிப்பதற்கு 48 மணிநேரங்களிற்கு முன்னரே சுகாதார அமைச்சர், நிதி அமைச்சர், பிரதம மந்திரி மூவருமே தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டியேற்பட்டு விட்டது. தற்போதைய டெல்டா வேரியன் மிகவேகமாகப் பரவி வருகின்றது. ஆனால் நாட்டில் வயது வந்தவர்களுக்கு பெரும்பாலும் வக்சீன் போடப்பட்டு இருப்பதால் பாதிப்பு வீதம் மிக மிகக் குறைவான நிலையிலேயே காணப்படுகிறது. மேலும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் வரும் இரு மாதங்களுக்குள் வக்சீன் போடப்பட்டு விடும் என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்த வக்சீன் காரணமாக கோவிட் பாதிப்பும் மரணங்களும் பெரும்பாலும் முற்றாக தடுக்கப்படுகின்ற நிலைக்கு மேற்கு நாடுகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் சனத்தொகை அதிகமான வறிய மற்றும் வளர்ந்துவரும் நாடுகளில் கோவிட் பாதிப்பும் மரணமும் அதிகரித்து வருகின்றது.

இதனைத் தடுப்பதற்கு தேவையான வக்சீனை உற்பத்தி செய்வதற்கு வக்சீன் உற்பத்தி உரிமத்தை அமெரிக்க – பிரித்தானிய அரசுகள் தற்காலிகமாகவேனும் வழங்கினால் உற்பத்தியயை வேறுநாடுகளிலும் வக்சீன் உற்பத்தி செய்து கோவிட் பாதிப்பையும் மரணத்தையும் கட்டுப்படுத்தலாம். வறிய நாடுகளில் ஒரு வீதமான சன்தொகைக்கு கூட வக்சீன் போடப்படவில்லை. அமெரிக்க – பிரித்தானிய அரசுகளின் சுயநலமிக்க முற்றிலும் லாபத்தையீட்டும் நிறுவனங்களுக்கு சாதகமாகச் செயற்படுவது மனித குலத்தை பெரும் அவலத்திற்குள் தள்ளவுள்ளது.

கிறிஸ்மஸ் ஸ்பெசல்: யேசுநாதர் – சிவபெருமான் – அல்லாஹ் உடன் சூம் மீற்றிங் பிரித்தானியர்கள் முட்டாள்களா அல்லது அவர்களது பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அவர்களை முட்டாள்கள் எனக் கருதுகின்றாரா?

பிரித்தானியா மீண்டும் ஒரு லொக் டவுனுக்குச் சென்றுள்ளது. இந்த அறிவிப்பு நேற்று சனிக்கிழமை மாலை பிரித்தானியப் பிரதமரால் வெளியிடப்பட்டது. அதற்கு முன்பாக புதன்கிழமை டிசம்பர் 16 அன்று ‘மேரி லிற்றில் கிறிஸ்மஸ்’ என்ற பிரித்தானிய பிரதமர், ‘விதிமுறைகளில் எவ்வித மாற்றமும் வராது. லொக்டவுன் கொண்டு வருவது மனிதாபிமானமற்ற செயல்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் கியர் ஸ்ராமர் முன்வைத்த கேள்விக்குப் பதிலளித்தார். ‘கிறிஸ்மஸ் புத்தாண்டு காலத்தையொட்டி சமூக இடைவெளியயைப் பேணும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தவறு’ என்றும் ‘கொரோனா வைரஸ் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை’ என்றெல்லாம் அரசினுடைய நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் எதனையும் செவிமடுக்கவில்லை.

தனது முட்டாள்தனமான நடவடிக்கைகளால் பிரிதானிய மக்களும் பிரித்தானிய பொருளாதாரமும் எதிர்கொள்ளும் கடுமையான நிலைதொடர்பில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அவரது கொன்சவேடிவ் கட்சியும் எதனையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. வெறும் வெற்று வாரத்தைகளின் சோடினையாலும் ‘பஞ்ஜ் டயலக்’ பேசியும் மக்களை வசீகரிக்கலாம் என்ற எண்ணத்தோடு, தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார். அவரது பேச்சுக்களில் ஒரு போதும் உள்ளடக்கம் இருப்பதில்லை. வார்த்தை ஜாலங்களை அப்புறப்படுத்தி உள்ளடக்கத்தைப் பார்ப்பவர்களுக்கு எதுவும் கிடைக்காது. ‘பஞ்ஜ் டயலக்’ தான் எஞ்சியிருக்கும்.

கிரீன்விச் பாடசாலை மீளத் திறப்பு – கவுண்டமணி – செந்தில் நகைச்சுவை:
டிசம்பர் 19ம் திகதி புதிய லொக் டவுன் அறிவிற்ப்பிற்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக கிறீவிச் கவுன்சில் தனது உள்ளுராட்சிப் பிரிவில் உள்ள பாடசாலைகளுக்கு டிசம்பர் 14ம் திகதி விடுமுறையயை அறிவித்தது. அதாவது 17ம் 18ம் திகதிகளில் கிறிஸ்மஸ் கால தவணை விடுமுறையயை, வெள்ளிக் கிழமைக்குப் பதிலாக திங்கட் கிழமையே விடுமுறையயை வழங்கியது. அதற்குக் காரணம் லண்டனின் பல பகுதிகளில் கொரோனா வேகமாகப் பரவுவதால், குறிப்பாக பாடசாலை மட்டத்தில் பல ஆசிரியர்கள் அரச விதிமுறைப்படி தனிமைப்படுத்தலுக்குச் சென்றனர். பாடசாலை வகுப்புகளை நடாத்த ஆசியர் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் கிறின்விச் கவுன்சில் தனது உள்ளுராட்சிப் பிரிவில் உள்ள பாடசாலைகளை மூடுவதாக அறிவித்தது. பாடசாலைகள் பலவும் ஆசிரியர் பற்றாக்குறையினால் பல வகுப்புகளை இடைநிறுத்தி மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். உண்மையில் டிசம்பர் மாத ஆரம்பம் முதலே பாடசாலைகளில் மாணவர், ஆசிரயர் வரவில் வீழ்ச்சி ஏற்பட்டு பாடசாலைகள் சீராக இயங்கவில்லை.

ஆனால் அரசு என்ன செய்தது? தொழிற்கட்சியின் அதகாரத்தில் இருந்த உள்ளுராட்சி சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டி, மறுநாள் மூடிய பாடசாலைகளை மீளத் திறக்க வைத்தது. மக்களுக்கு எதிரும் புதிருமான தகவல்கள் வழங்கப்பட்டு குழப்பத்திற்குள் தள்ளப்பட்டனர். கிறின்விச் கவுன்சில் தலைவர் தனது முடிவு சரியானது தான் என்றாலும், அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் நிலையில் கிரின்விச் கவுன்சிலின் நிதியயை விரயமாக்க விரும்பவில்லை என்பதால், அரசின் வேண்டுகோளின்படி பாடசாலைகளை மீளத் திறக்குமாறு அறிவித்தார்.

டிசம்பர் 20 இன்று ‘ஜனவரியில் பாடசாலைகள் வழமைபோல் ஜனவரி 4இல் திறக்கப்படமாட்டாது’ என்றும் ‘இரு வாரங்களின் பின்னதாகவே பாடசாலைகள் திறக்கப்படும்’ எனவும் அரசு அறிவித்துள்ளது. இந்த அரசின் கோமாளித் தனம் தமிழ்பட நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி – செந்திலின் நகைச்சுவையளவுக்கு மலிந்துவிட்டது.

ஒரு படத்தில் வீட்டிற்கு பிச்சை எடுக்க வந்தவரை ‘பிச்சை தர முடியாது’ என்று செந்தில் விரட்டியடித்துவிட்டடார். அப்போது அங்கு வரும் கவுண்டமணி, அதே பிச்சைக்காரரை திருப்பிக் கூட்டி வந்து பிச்சை கேட்கும்படி சொல்வார். அந்தப் பிச்சைக்காரரும் அதன்படி ‘பிச்சை போடுங்க தாயே ஐயா’ என்று இரந்து நிற்பார். உடனே கவுண்ட மணி ‘பிச்சை தரமுடியாது நாயே! வெளியே போ!’ என்று திட்டி துரத்திவிடுவார். இந்த நகைச்சுவைக்கும் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் செய்யும் கோமாளி அரசியலுக்கும் ஏதும் வித்தியாசம் தெரிகின்றதா? பள்ளிக் கூடத்தை நீ பூட்டக் கூடாது நான்தான் பூட்டுவேன் என்ற மாதிரித்தான் கிரின்விச் விவகாரம் அமைந்தது.

பிரதமர் பொறிஸ் என் முகநூலையாவது படித்திருக்கலாம்:
தனக்கு கிடைத்த விஞ்ஞானபூர்வமான தகவலின் அடிப்படையில் தான், தனது முடிவை தான் மாற்றியதாக பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது செயலை நேற்று நியாயப்படுத்தினார். ஒக்ரோபர் 31ம் திகதி எனது முகநூல் பதிவு இது: பிரித்தானியாவில் ஒரு நாளுக்கு 4 000 மரணங்கள் சம்பவிக்கலாம்!!! – கோவிட்-19 ஒரு நாளைக்கு நாலாயிரம் உயிர்களை பலி எடுக்கும் அபாயம் இருப்பதாக அரசின் விஞ்ஞான மருத்துவக்குழு எச்சரித்து உள்ளது. அரசின் விஞ்ஞான மருத்துவக் குழு விடுத்த இந்த எச்சரிக்கையயை பிரதமர் எங்கு சொருகி வைத்தார்? அன்று அனைவரும் கேட்டுக்கொண்டது இடைத் தவணை விடுமுறையயை இரு வாரங்கள் மேலும் நீடித்து முழுமையான லொக் டவுணைக் கொண்டு வந்து இந்த வைரஸைக் கட்டுப்படுத்தி, ரெஸ்ற் அன் ரேஸ் திட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி இருந்தால், இந்த கிஸ்மஸ் கால விடுமுறையயை மக்கள் ஓரளவு சந்தோசமாக களித்திருப்பார்கள். பிரித்தானியாவின் பொருளாதாரத்தின் ஒரு முக்கியமான வாரமான இந்த வாரத்தில் பல நிறுவனங்களும் தங்கள் வியாபாரத்தை நடத்தி இருக்கும். ஏற்கனவே விளிம்புக்குத் தள்ளப்பட்ட பொருளாதாரத்தை ஆதாள பாதாளத்தில் வீழ்ந்துவிடாமல் தடுத்திருக்க முடியும். தேவைப்பட்டால் ஜனவரி முதல் ஒரு லொக்டவுணைக் கொண்டு வந்திருக்க முடியும். இது எவ்வித திடமிடலும் இன்றி எழுந்தமானமாக அவ்வப்போது வீட்டில் எழும் பிரச்சினைகளுக்கு கணவன் மனைவியர் எடுக்கும் கடுகதி எதிர்வினைகள் போல் தான் பிரித்தானியா பிரதமரின் ஆட்சி நகர்கிறது. விஞ்ஞானத்தை பின்பற்றுகின்றேன் பொருளாதாரத்தை காப்பாற்றுகின்றேன் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கின்றேன் என்று சொல்லிச் சொல்லி அவற்றை அரசு சீரழித்து வருகின்றது.

அரசின் பொய்யும் புரட்டும்:
அரசின் விஞ்ஞான மருத்துவக்குழுவின் ஆலோசணைகளை அரசு உதாசீனப் படுத்தியது மட்டுமல்ல அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை; இதுவெல்லாம் கற்பனைக் கதைகள் என்றெல்லாம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் அரச தரப்பு கொன்சவேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். பிரித்தானிய பிரதமரும் கொன்சவேடிவ் கட்சியும் அவர்களது பிரச்சாரப் பீரங்கிகளான சன் மற்றும் டெய்லி மெயில் ஊடகங்களும்; 1980களில் தைப்பொங்கலுக்கு தமிழீழம் என்று தமிழ் இயக்கங்கள் ரீல் விட்டது போல கிறிஸ்மஸ் இற்குள் வைரஸ்யை வென்றுவிடுவோம் என்றெல்லாம் ரீல் விட்டன. புதிய வக்சினுக்கு விழுந்துகட்டி அனுமதியயை வழங்கிவிட்டு தாங்கள் தான் உலகத்திலேயே முதல் முதல் வக்சீன் போடுவதாக பீலாவிட்டனர். சினா, கொரியா, சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகள் வைரஸ்யை முழுமையாக கட்டுப்படுத்தி, பொருளாதாரத்தை கட்டி எழுப்பி வரும் நிலையில் பிரித்தானிய அரசு இன்றும் ‘வாய்ச் சொல் வீரன்’ என்ற நிலையில் தப்பட்டம் அடிப்பவர்களாகவே உள்ளனர்.

சீனா, ரஸ்யா போன்ற நாடுகளும் புதிய வக்சீனை அறிமுகப்படுத்தி வருகின்ற நிலையில் அவர்கள் வக்சீன் தவிர்ந்த ஏனைய கட்டுப்பாடுகளாலும் நோயயைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர். மேலும் ரஸ்யாவின் ஸ்புட்னிக்-5 வக்சீனை பரீட்சித்துப் பார்க்க அஸ்ராசெனிக்கா என்ற பெரும் பார்மஸிட்டிகல் நிறுவனமும் முன்வந்துள்ளது. ஸ்புட்னிக் – 5 வக்சீனுக்கு பயன்படுத்திய கூறுகள் வைரஸ்ற்கு எதிராக கூடிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும் அதன் கூறுகள் இயற்கையான வைரஸ் கூறுகளில் இருந்து தயாரிக்கப்பட்டதால் அந்த வக்சீன் நீண்ட கால பாதுகாப்பை வழங்கும் என்றும் கருதப்படுகின்றது. இவை பற்றியெல்லாம் பிரித்தானிய ஊடகங்கள் மூச்சுவிடுவதில்லை. நினைப்பு பிழைப்பை கெடுத்த கதையாக பிரித்தானியாவின் கோவிட்-19 மரணங்கள் இந்த ஆண்டு முடிவதற்குள் 70,000 தை தாண்டிவிடும் நிலைக்கு வந்துவிட்டது.

பிரித்தானிய அரசின் ஊழல் மோசடி:
கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலைமையை கையாள பிரித்தானிய அரசு 200 பில்லியன் பவுண்களை கடன் வாங்கியது. அதில் 10 வீதமான நிதி 20 பில்லியன் பவுண்கள் பாதுகாப்பு அங்கிகளை வாங்குவதற்கு செலவிடப்பட்டது. இந்தப் பாதுகாப்பு அங்கிகளை வாங்குவதற்கு தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் பலவும் அது தொடர்பான எவ்வித முன் அனுபவங்களும் அற்ற நிறுவனங்கள் மட்டுமல்ல, அவைகளில் பெரும்பாலானவை கொன்சவேடிவ் கட்சியுடன் nநெருக்கமானவர்களின் நிறுவனங்களாகவும் இருக்கின்றது. மேலும் இந்நிறுவனங்கள் பாதுகாப்பு அங்கிகளை உற்பத்தி செய்வதனிலும் அதனை சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளன. ஒரு சில பெனிகளுக்கு சீனாவிடம் இருந்து பொருட்களைத் தருவித்து, அதனை ஐம்பது முதல் ஆயிரம் மடங்கு வரை விலைகளை உயர்த்தி பிரித்தானிய மருத்துவமனைகளுக்கு விற்றுள்ளனர். 20 பில்லியனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அங்கிகளின் உண்மையான பெறுமதி 10 பில்லியன் பவுண்களே என மதிப்பிடப்படுகின்றது. உயிர்களைப் பணயம் வைத்து கொள்ளை இலாபம் ஈட்டிக்கொள்வதில் பிரித்தானிய ஆளும் கட்சி – கொன்சவேடிவ் கட்சி ஈடுபட்டு இருந்தமை நியுயோர்க் ரைம்ஸ் புலனாய்வுக் கட்டுரையில் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் ‘ரெஸ்ற் அன் ரேஸ்’ போன்ற கோவிட்-19 பரிசோதணை செயற்பாடுகள் கூடி அனுபவமிக்க பல்கலைக்கழகங்கள், பிரித்தானிய மருத்துவமனைகளுக்கு வழங்கப்படாமல் எவ்வித அனுபவமுமற்ற தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி, அவர்களுக்கு மில்லியன் கணக்கான நிதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறைகாலத்தில் மாணவர்களின் பட்டினியயைப் போக்க நான்கு மில்லியன் பவுண்களை ஒதுக்க மனமிரங்காத பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது நெருங்கிய வட்டங்கள் 10 பில்லியனை சூறையாடுவதற்கு அனுமதித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னதாக யுனிசெவ் பிரித்தானியச் சிறார்கள் பட்டினியயை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து விசேட் திட்டத்தை பிரித்தானியாவில் நடைமுறைப்படுத்த உள்ளனர். இவ்வாறாக பிரித்தானியச் சிறார்களை பட்டினியில் இருந்து காக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை கடந்த பத்து ஆண்டு கொன்சவேடிவ் ஆட்சிக்காலத்தில் தான் ஏற்பட்டு உள்ளது.

பில்லியனெயர்களின் வருமானம் அதிகரிப்பு:
2020ம் ஆண்டின் சமாதானத்திற்கான நோபல் பரிசு உலக உணவுத் திட்டத்தின் தலைமை அதிகாரியான டேவிட் பெய்ஸ்லிக்கு வழங்கப்பட்டது. அவருடைய கணிப்பின் படி கோவிட்ட-19 இன் பாதிப்பினால் உலகெங்கும் 270 மில்லின் மக்கள் ஒரு நேர உணவுக்கு வழியில்லாமல் பட்டினியயை நோக்கித் தளளப்பட்டு உள்ளனர். இவர்களை பட்டினியில் இருந்து மீட்க 15 முதல் 20 பில்லியன் டொலர் நிதி தேவைப்படுகின்றது. ஆனால் அதனை பெற்றுக்கொள்வது மிகக் கடினமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் 2020 ஏப்ரல் முதல் யூலை வரையான நான்கு மாதங்களில் உலகில் உள்ள 2200 பில்லியனெயர்கள் – செல்வந்தர்கள் 2.7 ரில்லியன் டொலர்களைச் சம்பாதித்து உள்ளனர். அதாவது 1000 பில்லியன் ஒரு ரில்லியன். 2.7 ரில்லியன் சம்பாதித்தவர்களுக்கு ஒரு 20 பில்லியன் வழங்கி 270 மில்லியன் மக்களை காப்பாற்ற முடியாத ஒரு விலங்கினக் கூட்டத்தில் தான் நாங்கள் வாழ்கின்றோம்.

அதிஸ்ரவசமாக உழைத்த உழைக்காத அசையும் அசையாத சொத்துக்கள் எதையும் பரலோகத்திற்கு எடுத்துச் செல்ல முடியாததால் இன்னும் மனித இனம் இப்பூமியில் வாழ முடிகின்றது. தசம் ஒரு வீத சொத்தை பரலோகம் கொண்டு செல்ல முடியும் என்றொரு நிலை இருந்திருந்தால் இந்த 2200 செல்வந்தப் பிசாசுகளும் ஒட்டுமொத்த மனித இனத்தையே அழித்து, சொத்துக்களை பரலோகம் கொண்டு போயிருக்கும். இந்தப் பரலோகத்தில் இருக்கும் பரம பிதாக்கள் சிவபெருமான், யேசுநாதர், அல்லா என்று இப்படி இன்னோரன்னவர்களின் தொலைபேசி இலக்கம் இருந்தால் பதிவிடுங்கள் ஒரு சூம் மிற்றிங் போட்டு இதற்கான தீர்வு பற்றி டிஸ்கஸ் பண்ணலாம்!

டொனால்ட் ட்ரம் வெற்றி பெற்றால் உலக அமைதிக்கு நல்லது! ஜோபைடன் பெற்றி பெற்றால் அமிரிக்கா மீண்டும் எழுச்சி கொள்ளும்!! அமெரிக்க ஜனநாயகத்தின் எதிர்காலம் உசலாடுகின்றது!!!

அமெரிக்க ஜனநாயகம் உசாலாடிக் கொண்டிருக்கின்றிது. தேர்தல் முடிவுகள் மிகவும் இறுக்கமான போட்டியயை காட்டிக் கொண்டிருக்கையில் அமெரிக்க ஜனநாயகம் உசாலாடிக் கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரேயே அமெரிக்க ஜனாதிபதி தனது வெற்றியயை அறிவித்துக் கொண்டிருக்கின்றார். தேர்தல்களில் குளறுபடிகள் நடந்ததாகவும் வாக்கு எண்ணிக்கையயை நிறுத்தவும் கோரியுள்ளார். போட்டியாளர்கள் இருவரது தரப்பிலும் ஆயிரக்கணக்கான சட்டத்தரணிகள் கடுமையான போட்டி நடைபெறும் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாகக் கூறி சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகின்றனர். மேலும் சில கடுமையான போட்டி நிலவுகின்ற மாநிலங்களில் தபால் மூலமான வாக்குகள் தேர்தல் முடிவின் பின்னரே எண்ணப்படுவது வழமை. அதனாலும் சில மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை தாமதமாகலாம். அதனால் தேர்தல் முடிவடைந்த சில நாட்களிற்கு பின் வரையும் இறுதியான் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

வழமையாக வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளிலேயே தேர்தல் மோசடிகள் பற்றியும் தேர்தலைத் தொடர்ந்து ஏற்படும் கலவரங்கள் பற்றியும் அச்சமும் அசம்பாவிதங்களையும் கேள்விப்பட்டு இருந்தோம். ஆனால் இம்முறை உலக ஜனநாயகத்தின் காவலனாக சுதந்திர உலகின் பொலீஸ்காரனாக தன்னைக் காட்டி வந்த அமெரிக்காவில் ஜனநாயகம் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் சில மாநிலங்களில் சுறாவளி போன்ற அழிவுகளில் இருந்து தங்களைக் காப்பதற்காக வர்த்தக நிறுவனங்கள் பலகைகளைக்கொண்டு தங்கள் வினாபார நிறுவனங்களைச் சுற்றி மேலதிக பாதுகாப்புக்காக பொருத்தி வருகின்றனர். துப்பாக்கிகள் விற்கின்ற வியாபார நிலையங்களில் துப்பாக்கிகளும் அதற்கான சன்னங்களும் விற்றுத் தீர்ந்துள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக சங்கிலித் தொடர் வியாபார நிறுவனமான Walmart துப்பாக்கிகள் அதற்கான சன்னங்களின் விற்பனையயை சில நாட்களுக்கு முன்னரேயே நிறுத்திவிட்டது. தேர்தல் முடிவுகள் வருகின்ற போது கலவரம் ஏற்படும் என்பது பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி ட்ரம் தனக்கு ஆதரவான வெள்ளையின தீவிர போக்காளர்களைத் தயார் நிலையில் இருக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார். ட்ரம் – பைடன் முதல் சுற்று தொலைக்காட்சி விவாதத்தின் போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார். தன்னிடம் இருந்து வெற்றி பறிக்கப்படும் என்ற போலியான ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியதன் மூலம் தான் தோற்றுப் போனால் மோசடியே காரணம் என்பதை அவர் தனது தீவிர ஆதரவாளர்களுக்கு தெரிவித்ததுடன் அதற்கு எதிராக சண்டையிடவும் ஆயத்தமாக இருக்குமாறு கூறியுள்ளார். அதன்படி டொனால்ட் ட்ரம் தோல்வியடைந்தால் அமெரிக்காவில் பாரிய குழப்பம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக அமையலாம்.

அமெரிக்க உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த 1865க்களின் பின் இன்று அமெரிக்க மக்கள் மிகவும் பிளவுபட்டுள்ளனர். தீவிர வெள்ளைத்துவ வாதம் மிகவும் தளைத்து ஓங்கியுள்ளது. அதன் பிரதிபலிப்பாக சட்டம் ஒழுங்கு என்பதை டொனால்ட் ட்ரம் முன்கொண்டு செல்கின்றார். அதே சமயம் அங்குள்ள சிறுபான்மைச் சமூகங்கள்: கறுப்பினத்தவர், ஸ்பானியர், மாநிறத்தோர் அங்குள்ள சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய நிறுவனங்களால் வஞ்சிக்கப்படுகின்றனர். அடிப்படையில் சட்டம் ஒழுங்கு என்பது மிக முக்கிய அம்சமாக இருந்த போதும், அது வெவ்வேறு சமூகங்களால் முற்றிலும் முரண்பட்ட நிலையிலேயே நோக்கப்படுகின்றது.

முரண்பாடு என்பது சட்டம் ஒழுங்கு மற்றும் கொள்கைகளில் மட்டடுமல்ல மக்களின் அடிப்படை வாழ்க்கைத் தரத்திலும் இந்த மிகமோசமான முரண்பாடு வெளிப்படுகின்றது. அமெரிக்க செல்வத்தில் 40 வீதத்தை ஒரு வீதமான செல்வந்தக் குடும்பங்கள் வைத்துள்ளன. கால்பங்கு செல்வத்தை 90 வீதமான கீழ்நிலையில் உள்ள குடும்பங்கள் பங்கு போடுகின்றன. அதன்படி பார்த்தால் இக்குடும்பங்களிடம் பத்தாயிரம் டொலர்களுக்குக் குறைவான செல்வமே உள்ளது. இக்குடும்பங்கள் வாழ்வதற்கு சொந்தமான கூரை கூட அற்றவர்களாகவே, பெரும்பாலும் வாடகைக் கூரையின் கீழ் வாழ்கின்றனர். ‘அமெரிக்க கனவு’ என்பது மிகப் போலியான ஒரு மாயயை. ஒவ்வொரு ஆண்டும் கடந்து செல்கின்ற போது ஒரு வீதமான செல்வந்தக் குடும்பங்களின் சொத்துக்கள் தொடர்ந்தும் அதகரித்துச் செல்கின்ற போது; 90 வீதமான கீழ்நிலைக் குடும்பங்களின் சொத்துக்கள் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றது.

ஆனால் அமெரிக்காவின் வீடுகளில் கட்டுப்பட்டுக் கிடக்கின்ற $113 ரில்லியன் சொத்துக்களை அமெரிக்காவில் உள்ள 329 மில்லியன் மக்களுக்கு சரியாகப் பங்கிட்டால் ஒவ்வொருவரும் $ 343,000 சொத்துக்களை வைத்திருப்பார்கள். மூவரைக் கொண்ட குடும்பத்தில் அண்ணளவாக ஒரு மில்லியன் டொலர் சொத்துக்கள் இருக்கும். ஆனால் கடைக்கோடியில் வாழும் 90வீதமான குடும்பங்களிடம் உடு துணிகள், படுக்கைத் தளபாடங்கள் ஒரு சில மின் உபகரணங்களைத் தவிர, அவர்களிடம் வாழ்வதற்கு தேவையான அடிப்படை வசதிகளே மட்டுமட்டாகவே இருந்துள்ளது.

உலக செல்வந்தர்களை மிக அதிகமாகக் கொண்டுள்ள அமெரிக்காவில் உள்ள 788 பில்லியனெயர்கள் $ 3,000,000,000,000,000 ($ 3 ரில்லியன்) செல்வத்தை தங்களிடம் குவித்து வைத்துள்ளனர். இவ்வாறான ஒரு செல்வந்தாரன டொனாலட் ட்ரம் மக்கள் பற்றிய எவ்வித கரிசனையும் உடைய மனிதரல்ல. ஒவ்வொருவரும் எப்படியும் செல்வத்தை சேர்த்துக் குவிப்பது, அவரவர் திறமை என்று கருதுகின்ற ஒரு கொழுத்த செல்வந்தன் தான் டொனால்ட் ட்ரம். அதனால் வரி செலுத்தாமல் ஏமாற்றுவது, நிறுவனங்களை திவாலடையச் செய்து கொள்ளை இலபமீட்டுவது எல்லாமே ஒரு வியாபாரத்தின் திறமை எனக் கருதுபவர். அதனை நடைமுறையிலும் செய்து காட்டியுள்ளார். டொனால்ட் ட்ரம் தனது சொத்துக்கள் மற்றும் வரி போன்ற விடயங்களை வெளியிடவில்லை. கொழுத்த செல்வந்தரான டொனால்ட் ட்ரம் செலுத்திய வருமானவரி; ஒரு சாதாரண ஆசிரியர் செலுத்திய வருமான வரியிலும் குறைவானதாக உள்ளது. மேலும் இவர் 13 தடவைகள் தன்னை திவாலடைய வைத்துள்ளது மட்டுமல்ல, அதனை தனது திறமையாகவும் பறை சாற்றுகின்றார். ஆனால் அவருக்குத் தான் வெள்ளையின அடித்தட்டு மக்களில் பலரும் ஆதரவளிக்கின்றனர். அமெரிக்காவில் உள்ள 8 செல்வந்தர்கள் உலகின் எழைகளான 50 வீதத்தினரின் ஒட்டுமொத்தச் சொத்துக்ககுக்குச் சமனானன சொத்துக்களை வைத்துள்ளனர். இந்தப் பின்னணியில் தான் அமெரிக்க தேர்தல் நடைபெறுகின்றது.

டொனால்ட் ட்ரம்மின் நான்கு ஆண்டுகள் என்பது எப்போதும் மோசமானதாக மட்டும் பார்க்கப்பட வேண்டியதில்லை. உலக சமாதானத்தின் அடிப்படையில் நோக்கினால் அமெரிக்காலில் வந்த அண்மைய ஜனாதிபதிகளில் டொனால்ட் ட்ரம் மட்டுமே யுத்தத்தை உருவாக்கவில்லை என்பது மட்டுமல்ல ஏற்கனவே யுத்த பிராந்தியங்களுக்கு அனுப்பட்ட இராணுவத்தையும் திருப்பி அழைத்து வருகின்றார். நாடுகளின் பாதுகாப்பை அந்தந்த நாடுகளே பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நேட்டோவிற்கான நிதிப்பங்களிப்பையும் குறைத்துள்ளார். இந்த நடவடிக்கைகள் ஒரு வகையில் உலக பொலிஸ்காரனாக அமெரிக்கா தன்னை கட்டமைத்ததை கட்டுடைக்கின்ற நடிவடிக்கையின் முதற்படியாக உள்ளது.

சர்வதேச இராணுவத் தலையீடுகளைக் குறைப்பது, ரஸ்யாவுடனான நல்லுறவு வடகோரியாவுடனா உறவு என்பன ஓரளவு உலகில் இராணுவப் பதட்டத்தை ஒப்பீட்டளவில் குறைத்தே வருகின்றது. இருந்தாலும் சவுதிய அரேபியா யேர்மன் நாட்டில் யுத்தத்தைத் தொடுத்திருந்த நிலையில் அந்நாட்டுடன் பல பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவத் தளபாடங்களை வெறும் வியாபார ரீதியில் மேற்கொண்டிருப்பதும் சுட்டிக்காட்டத் தக்கது. டொனால்ட் ட்ரம் எவ்வித உள்ளுணவும் அற்ற லாபமீட்டுவதை மட்டுமே நோக்காகக் கொண்ட வியாபாரி; என்ற வகையில் வேறுநாடுகளின் விவகாரங்களில் இராணுவ ரீதியாகத் தலையிட்டு பொருளாதாரச் செலவை ஏற்படுத்த விரும்பவில்லை; என்பது அவரிடம் உள்ள முக்கிய வரவேற்கத் தக்க குணாதிசயம். சீனாவோடு உள்ள வர்த்தகப் போட்டியும் கூட, ஒரு வகையில் ஒரு ஒப்பந்தத்திற்கு செல்லும் போக்கே அல்லாமல் யுத்தத்தை நோக்கி நகரும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. டொனால்ட் ட்ரம் இற்கு அமெரிக்காவை உலக பொலிஸ்காரனாக உருவாக்கும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் தன்னுடைய நேட்டோ நட்பு நாடுகளுடனேயே பகைத்துக் கொண்டு ரஸ்யாவோடு உறவாடவும் தயாராக இருப்பதால், டொனால்ட் ட்ரம்மின் காலம் உலகில் ஒப்பீட்டளவில் அமைதியேற்படும் எணக் கொள்ளலாம்.

மேலும் டொனால்ட் ட்ரம் ஒரு இறுக்கமான அரசியல் தலைவரல்ல என்பதும் அவருக்கு ஒரு இறுக்கமான அரசியல் கொள்கை இல்லாமல் இருப்பதும் அமெரிக்காவுக்கு எதிரான வல்லரசுகளான சீனா, ரஸ்யா போன்ற நாடுகளுக்கு ஒரு வரப்பிரசாதம். அதானால் டொனாலட் ட்ரம் மீண்டும் ஜனாதிபதியாவதை இந்நாடுகள் விரும்புகின்றன. ஆனால் நேட்டோ நேச நாடுகளுக்கு டொனால்ட் ட்ரம் வெற்றி பெறுவதில் எவ்வித விருப்பும் கிடையாது. சர்வதேசத்தில் அமெரிக்காவின் தலைமைக்குக் கீழ் குட்டிச் சண்டியர்களாக திரிந்தவர்களை டொனால்ட் ட்ரம் ஓரம்கட்டிவிட்டு ரஸ்யா, சீனா, வடகொரியா என புதிய உறவுகளை ட்ரம் தலைமையிலான அமெரிக்கா ஏற்படுத்தி வருவது அவர்களுக்கு அதிருப்தியயை ஏற்படுத்தி உள்ளது. மத்திய கிழக்கில் கூட அரபு நாடுகளுக்கு இஸ்ரேலுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட உறவு ட்ரம்மின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு மைல்கல். இவ்வெளியுறவுக் கொள்கை பலஸ்தீனியர்களுக்கு கொடுக்கப்பட்ட மிகப் பலமான அடி. டொனாலட் ட்ரம் எவ்வித உள்ளுணவும் அற்ற லாபத்தை மட்டுமே நோக்காக் கொண்டவர் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணம். பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியர்களிடம் தங்கள் நிலத்தை மட்டுமல்ல எதிர்காலத்தையும் இழந்து வருகின்றனர். இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்குமான உறவானது, மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ஒரு நகர்வே. ஈரானை சர்வதேசத்தில் இருந்து ஓரம்கட்டவே அமெரிக்கா முயற்சிக்கின்றது. ஆனால் இந்த முரண்பாடு ஒரு யுத்தமாக அண்மைக்காலத்தில் வெடிப்பதற்கான வாய்ப்புகள் அவ்வளவிற்கு இல்லை.

டொனால்ட் ட்ரமின் தலைமை உலக சமாதானத்திற்கு சாதகமாக இருப்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் அமெரிக்காவிற்கு அது சாதகமாக இருக்க வாய்ப்பில்லை. அமெரிக்க மக்கள் டொனால்ட் ட்ரம் அமெரிக்காவை தலைசிறந்தது ஆக்குவார் என்பதற்காக வாக்களிக்கின்றனர். ஆனால் டொனால்ட் ட்ரம்மின் தலைமை அமெரிக்காவை பெரும்பாலும் தலைகுனியச் செய்தே வருகின்றது. டொனாலட் ட்ரம்மின்: கதையாடல்கள், வாய்கூசாமல் சொல்கின்ற பொய்கள், கொரொனாவை கட்டுப்படுத்த முடியாமை, சுற்றுச்சூழல் பற்றிய கொள்கைகள், விஞ்ஞாபூர்வமான உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பது, செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகள், சிறுபான்மையினங்களுக்கு எதிரான துவேசத்தை வளர்த்துவிடுவது, மக்களைக் கூறுபோடுவது என்பன அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு ஏற்புடையதாக இல்லை. இது அமெரிக்காவின் எதிர்காலத்தை பெரும்பாலும் பாதிக்கும்.

மேலும் நாட்டின் குடிவரவைக் கட்டுப்படுத்தவது என்ற பெயரில் சட்ட விரோதக் குடியேற்றக்கரர்களுக்கு எதிராக எடுக்கின்ற நடவடிக்கைகள் மனிதாபிமானத்துக்கு முரணானவை. இனக்குரோதமாகவும் இந்நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் அமெரிக்கா இதுவரை தலைமை தாங்கிய சுயாதீன கட்டுப்பாடற்ற பொருளாதாரக் கொள்கைகளுக்கு மாறாக, தற்பாதுகாப்பு பொருளாதாரக் கொள்கையயை நோக்கி நகர்த்தப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் மீண்டும் அமெரிக்காவிற்குள் வருவதை இப்பொருளாதாரக் கொள்கை ஊக்குவிக்கின்றது. இதுவும் அமெரிக்காவை சர்வதேசத்தில் இருந்து தனிமைப்படுத்தவே வழிவகுக்கும். உலகமயமாதல் தற்போது வளர்ச்சியடைந்த நாடுகளில் வேலையின்மையயை ஏற்படுத்துவதால், உலகமயமாதலுக்கு எதிர்நிலையயை டொனால்ட் ட்ரம் எடுத்து வருகின்றார். இது அமெரிக்காவில் தொழில் வாய்ப்பை உடனடியாக உருவாக்க உதவுகின்றது. அத்துடன் சர்வதேச நாடுகளில் அமெரிக்காவின் சுரண்டலை இது தடுப்பதற்கும் உதவும். ஆனால் உடனடியாக பாதிக்கப்பட்ட நாடுகளில் வேலையின்மை ஒரு பிரச்சினையாகும். இந்நாடுகள் சுயசார்புப் பொருளாதாரக் கொள்கைகளை நோக்கி தள்ளப்படுவார்கள். ஒருவகையில் சர்வதேசத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை தளர்த்துவதாகவே டொனாலட் ட்ரம்மின் பொருளாதாரக் கொள்கைகள் அமைகிறது. இது இன்று தனது பொருளாதார ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் சீனாவிற்கு மிகுந்த வரப்பிரசாதமாக அமையும்.

ஆகையால் டொனால்ட் ட்ரமின் அமெரிக்கா உலக நாடுகளின் சமாதானத்திற்கு சாதகமாகவும் அமெரிக்காவின் வீழ்ச்சிக்கு காரணமாகவும் அமையும். மாறாக டெமோகிரட் கட்சியின் ஜோ பைடனின் வெற்றி கட்சிபேத மற்று அமரிக்காவின் வல்லாதிக்கத்தை தொடர்ந்தும் நிலைநாட்டுவதாகவும் நேட்டோ நேச நாடுகளின் அணியயை வலுப்படுத்தி, உலக பொலிஸ்காரனா தன்னைக் கட்டமைப்பதுமாகவே அமையும். இது அமெரிக்காவில் எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலுமே அமெரிக்க அரச இயந்திரம் அவ்வாறு தான் செயற்படுத்தும். ஜோ பைடன் அவ்வாறான ஒரு அரசியல் கட்டமைப்பின் படைப்பே. டொனால்ட் ட்ரம் அவ்வாறான ஒரு அரசியல் கட்டமைப்பால் உருவாக்கப்படாததால், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றார். அதனால் ஜோபைடன் அமெரிக்காவின் எழுச்சியயை மீளக் கட்டமைப்பதற்கான முயற்சிகளில் இறங்குவார். அமெரிக்காவை ஒற்றுமைப்படுத்துவது, அங்குள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் சற்று குறைப்பதன் மூலம் பதட்டத்தை தணிப்பது, இனங்களிடையே சுமூக உறவை ஏற்படுத்தி ‘நாங்கள் அமெரிக்கர்’ என்ற உணர்வை ஊட்டுவது, இதன் மூலம் சமூகப் பதட்டத்தை கட்டுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் இறங்குவார். மேலும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மனித உரிமைகள் போன்ற விடயங்களை முன்நிறுத்துவதன் மூலம், சர்வதேச சமூகத்தில் அமெரிக்காவின் தலை நிமிரச் செய்ய முயற்சிப்பார்.

இந்தப் பின்னயிலேயே எதிர்கால அமெரிக்க – சர்வதேச நிலைமைகள் அமையும்.

பிரித்தானியாவில் ஒரு நாளுக்கு 4 000 மரணங்கள் சம்பவிக்கலாம்!!! பொறிஸ் ஜோன்சனின் வினைத்திறனற்ற முடிவுகளின் விளைவு!

பிரித்தானிய பிரதமரின் அசமந்த போக்கு மேலும் பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் கொல்ல இருக்கின்றது. கோவிட்-19 ஒரு நாளைக்கு நாலாயிரம் உயிர்களை பலி எடுக்கும் அபாயம் இருப்பதாக அரசின் விஞ்ஞான மருத்துவக்குழு எச்சரித்து உள்ளது. அவர்களின் மதிப்பீட்டின் படி நவம்பர் மாதத்தில் மரண எண்ணிக்கை நாளொன்றுக்கு 2000 முதல் 4000 வரை சம்பவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வழமைக்கு மாறாக 20 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் பிரித்தானியாவைப் பொறுத்தவரை இன்னமும் வெப்பநிலை கணிசமான அளவில் வீழ்ச்சி அடையவில்லை. வழமைக்கு மாறாக நாடு இன்னமும் கடுமையான குளிருக்குச் செல்லவில்லை. வெப்பநிலை வீழ்ச்சி அடைந்து கடும் குளிர் ஏற்படும் போது நோயின் பரம்பல் மிகத்தீவிரமாகும். வழமையான காய்ச்சல் தடிமன் என்பன இக்காலகட்டத்திலேயே அதிகமாக பரவுவது வழமை. அதுவும் பாடசாலைகளே இந்நோய் பரம்பலின் மையமாக திகழ்ந்து வருகின்றன.

நவம்பர் 5ம் திகதி முதல் இங்கிலாந்தில் மிக இறுக்கமான லொக்டவுன் கொண்டுவரப்பட உள்ளது. ஒரு மாதகாலத்திற்கும் நீடிக்கும் இந்த லொக்டவுன் டிசம்பர் 2 வரை நீடிக்க உள்ளது. இவ்வாறான இறுக்கமான லொக்டவுன் காலத்திலும் பாடசாலைகள் பல்கலைக்கழகங்களை திறந்து வைப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது. ஆனால் இது தேவையான அளவு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு மிகக்குறைவாகவே உள்ளது.

பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் தலைமையும் கொன்சவேடிவ் கட்சியின் பழமைவாத தனிநபர்வாத சிந்தனை முறையும் இதுவரை எண்பதிணாயிரத்துக்கும் அதிகமான உயிர்களைப் பலியெடுத்து உள்ளது. ‘சமூகம்’ என்ற ஒன்றில்லை என்ற சிந்தனை முறையோடு வாழ்கின்ற இந்த முதலாளித்துவ ஆட்சியாளர்கள் தனிநபர் சார்ந்து மட்டுமே சிந்திக்கின்றனர். பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய போது ‘சமூகம்’ என்ற ஒன்று இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அவரோ அவருடைய கட்சியின் கொள்கைகளோ அதனை ஒரு போதும் பிரதிபலிக்கவில்லை.

இந்தப் புதிய பிரித்தானிய அரசு கோவிட்-19 யை கையாண்ட முறை மிக மிக மோசமானது. தனது அரசின் விஞ்ஞான மருத்துவக் குழுக்களின் அலோசணைகளை புறம்தள்ளிவிட்டு குறுக்கு வழியில் தேர்தலை வெறிற்கொள்ள திட்டம் வகுத்த டொமினிக் கம்மிங்ஸ் போன்ற மண்டையன் குழுக்களின் அலோசனையின் படியே பொறிஸ் ஜோன்சன் ஆட்சி செய்கின்றார். அவருடைய நிதியமைச்சர் சான்ஸ்லர் ஒப் எக்செக்கர் ரிசி சுநாக் கூட புதிதான எந்த பொருளாதாரக் கொள்கை வகுப்பையும் மேற்கொள்ளவில்லை. ஜேர்மன் அரசு அறிவித்த உதவிநலத்திட்டங்களை தாங்களும் மறுநாள் அறிவித்தனர். அல்லது பல வாரங்கள் கழித்து அறிவித்தனர்.

ஐரோப்பிய நாடுகள் மார்ச்சில் லொக்டவுனுக்குச் சென்ற போது பிரித்தானிய அரசையும் லொக்டவுன் அறிவிக்க அழுத்தம் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு பிரதமர் மறுத்துவிட்டார். அதனால் லொக்டவுன் அறிவிக்க ஏற்பட்ட தாமதத்தால் பிரித்தானியாவின் கோவிட்-19 பரவலும் மரணமும் உலக எண்ணிக்கையில் உச்சத்தைத் தொட்டது. பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இருவாரங்கள் முன்னதாக லொக்டவுனை அறிவித்து இருந்தால், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் குறைந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

முதற்தடவை கோவிட்-19 பற்றி பெரிதாக தெரிந்திருக்கவில்லை; தவறு இழைக்கப்பட்டுவிட்டது என்றால். ஆனால் இரண்டாவது அலை பாராதூரமான தாக்கத்தை ஏற்படுத்தாலாம் என்ற எச்சரிக்கை ஆரம்பம் முதலே கூறப்பட்டு வந்தது. அரசின் விஞ்ஞான மருத்துவக் குழு தொடர்ச்சியாக அரசை எச்சரித்து வந்துள்ளது. பிரித்தானியாவில் வேல்ஸ், நொர்தன் ஐலன்ட்ஸ் அரசுகள் ஏற்கனவே ஒரு மாத லொக்டவுனை அறிவித்து பல நாட்கள் ஆகிவிட்டது. அப்படி இருந்தும் பொறிஸ் ஜோன்சன் ‘தனக்குத்தான் தெரியும் தான் தான் படைப்பன்’ என்று சன்னதம் ஆடிக்கொண்டு திரிகின்றார். ஒரு மனிதனுக்கு சுயபுத்தி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் புத்தி சொல்லக் கூடியவர்களின் புத்திமதியயையாவது கேட்கவேணும். இந்த இரண்டும் இல்லாத ஒன்று பிரித்தானிய வல்லரசுக்கு பிரதமர் ஆனால் மக்கள் வகை தொகையின்றி கொல்லப்படுவது தவிர்க்க முடியாதது.

கடந்த ஆறு மாதகாலத்திற்கு மேலாக கொரோனா தொற்று இல்லாத நாடாக தாய்வான் இருக்கின்றது. தங்களைப் பற்றிய பெரிய விம்பங்களைக் கட்டிக்கொண்டு திரிகின்ற இந்த காலனித்துவ சிந்தனையில் இருந்து பிரித்தானிய ஆட்சியாளர்கள் விடுபட வேண்டும். கொரோணாவுக்கு பிளீச் குடிக்க கொடுக்கும் அளவுக்கு – அமெரிக்க வல்லரசின் ஏஜென்டாக இருந்தாலும்; அவ்வளவு முட்டாள்கள் என்று சொல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட அந்த நிலைக்குத் தான் பிரித்தானிய வல்லரசின் நிலை வந்து கொண்டிருக்கிறது.

இன்றைய அமெரிக்க பிரித்தானிய வல்லரசுகள் வெளியிடுகின்ற அறிக்கைகள் ‘குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு’ என்றளவிற்கு கேவலமாகிவிட்டது. போதை ஏறியவுடன் வருகின்ற உசாரில் ‘வெட்டுவோம் பிடுங்குவாம்’ என்ற கணக்கில் தான் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும், அவருடைய கிட்டத்தட் அண்ணன் மாதிரியான டொனால்ட் ட்ரம்மும் விடுகின்ற ரீல்கள் உள்ளது. கோவிட்-19 க்கு வக்சீன் கோடிக்குள் இருக்கின்றது, ‘தைப்பொங்கலுக்கு தமிழீழம்’ என்ற கணக்கில் தான் ‘புதுவருசத்தில் கோவிட்-19 க்கு கோவிந்தா’ என்றெல்லாம் பிலா விடுகின்றார்கள்.

உண்மை நிலவரம் அதுவல்ல. கோவிட்-19 வக்சின் அண்மைக்காலத்தில் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அவ்வாறு வந்தாலும் அதனை முழு மக்கள் தொகைக்கும் வழங்குவதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை. அது அரசுடைய நோக்கமும் கிடையாது. இந்த கோவிட்-19 ஒட்டுமொத்த மக்கள்கொகைக்கும் பரவி இயற்கையான நிர்ப்பீடண சக்தி ஒவ்வொருவரது உடலிலும் ஏற்படுவதன் மூலமே இந்நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். மக்கள் தொகைக்குள் இந்நோய் பரவுகின்ற போது அதனை ஒரே நேரத்தில் பரவ அனுமதித்தால் நாட்டில் உள்ள சுகாதார சேவைகளால் அதனை தாக்குப் பிடிக்க முடியாது. கட்டுப்பாடின்றி பரவ அனுமதித்தால் காட்டாற்று வெள்ளத்தில் மக்கள் மரணிப்பது போல் தகுந்த சிகிச்சை இல்லாமல் பல்லாயிரம் மக்கள் மரணிக்க வேண்டி இருக்கும்.

அதனால் கோவிட்-19 மக்கள் தொகைக்குள் பரவுவதை மட்டுப்படுத்ப்பட்ட வீதத்தில் மேற்கொள்ள வேண்டும். இந்த மட்டுப்படுத்தல் என்பது நாட்டின் சுகாதார சேவையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய எண்ணிக்கையயை வைத்து தீர்மானிக்கப்படும்.

பிரித்தானியாவில் இந்நோய்க் கிருமியானது இதுவரை 15 வீதமான மக்களுக்கு பரவி இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகின்றது. உலகில் ஈரானிலேயே கூடுதல் மக்கள் தொகைக்கு – 28வீதம் – இந்நோய் பரவி உள்ளது. கீழுள்ள வரைபு வெவ்வேறு நாடுகளில் எவ்வளவு வீதமான மக்களுக்கு இந்நோய் பரவியுள்ளது என்பதைக் காட்டுகின்றது. ஒரு நாட்டின் எழுபது வீதமான மக்களுக்கு இந்நோய் தொற்று ஏற்பட்டு இருந்தாலேயே அந்நாட்டில் மக்கள் குழும நீர்ப்பீடனம் ஏற்பட்டதாகக் கொள்ள முடியும். அப்படிப் பார்க்கின்ற போது எல்லா நாடுகளுமே முழு நாட்டுக்குமான நீர்ப்பீடனத்தை எட்டுவதற்கு மிகத் தொலைவிலேயே உள்ளனர். பிரித்தானியா அவ்வாறான ஒரு நீர்ப்பீடனத்தை பெறுவதற்கு இன்னும் ஓராண்டுக்கு மோலாகலாம். இப்பொழுதுள்ள நிலையில் ஈரான் மிகவிரைவில் ழுழுநாட்டுக்குமான குழும நீர்ப்பீடணத்தை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கலாம்.

இந்த கோவிட்-19 ஏற்படுத்துகின்ற அடுத்த பெரும் பிரச்சினை பொருளாதார தாக்கம். தற்போது வரை கோவிட்-19க்காக செலவிடப்பட்ட நிதியயை மீளப் பெறுவதற்கு 50 பில்லியன் பவுண் வரியயை அரசு விதிக்க வேண்டியேற்படும். கோவிட்-19 க்கு முன்னதாகவே பிரித்தானிய சுகாதாரசேவைகள் உட்பட பொதுச்சேவைகளுக்கான நிதிவழங்கலை கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கொன்சவேடிவ் அரசு குறைத்துக் குறைத்து வந்தது. பொதுச்சேவைகள் அனைத்தும் கோவிட்-19 க்கு முன்னதாகவே ரிம்மில் தான் ஓடிக்கொண்டிருந்தன. சில உதாரணங்களையும் அதன் விளைவுகளையும் மட்டும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

பிரித்தானிய சுகாதார சேவைகளில் 50,000 வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. ஏனெனில் அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு சுகாதார சேவைகளிடத்தில் போதுமான நிதி இருக்கவில்லை. பாடசாலைகளில் 10,000க்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதற்கான நிதி பாடசாலைகளில் இல்லலை. பாடசாலைகளில் வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டில் வெளியானா ஆய்வின்படி கோவிட்-19 காலத்திற்கு முந்தைய நிலையில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து வரும் மாணவர்களின் கல்வி மட்டத்திற்கும் சாதாரண மட்டத்தில் இருந்து வருகின்ற மாணவர்களின் கல்வி மட்டத்திற்குமான இடைவெளி இரண்டு ஆண்டுகளாக இருந்தது. கோவிட்-19 க்குப் பின் இவ்விடைவெளி ஐந்து மடங்காக அதிகரித்து இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இதன்படி ஆண்டு 13இல் கல்வி கற்கின்ற பிற்படுத்தப்பட்ட சமூகமட்டத்தில் உள்ள ஒரு மாணவனின் கல்விமட்டமும் 9ம் ஆண்டில் கல்விகற்கின்ற ஒரு சாதாரண தரத்தில் உள்ள மாணவனின் கல்விமட்டமும் கிட்டத்தட்ட சமமாக இருக்கும் எனக் கொள்ளலாம்.

அரசு ஏற்கனவே பல உள்ளுராட்சி நூலகங்களை மூடிவருகின்றது. பெரும்பாலான அரச பாடசாலைகளில் நூலகங்கள் இல்லை அல்லது பெயரளவிலேயே இயங்கி வருகின்றன. பிறக்கின்ற குழந்தையின் அடிப்படைத் தேவைகளில் அதன் வளர்ச்சியில் ஏற்படுத்தப்படுகின்ற போதாமைகள் அதன் எதிர்காலத்தை பாரதூரமாக பாதிக்கின்றன. இதன் காரணத்தினால் கோவிட்-19க்கு முன்னதாக பிரித்தானிய சிறைகளை நிரப்புகின்ற குற்றவாளிகளில் 80 வீதத்தினர் பாடசாலைகளில் இருந்து கலைக்கப்பட்ட மாணவர்களாக பாடசாலைக் கல்வியயை விட்டு ஒதுங்கியவர்களாக இருக்கின்றனர்.

பொதுச் சேவைகளில் முதலீடுகள் செய்யப்படாத போது வீட்டுத் திட்டங்கள் போக்குவரத்துக்கள் கல்வி என்று சகலவிடயங்களிலும் பிற்படுத்தப்பட்ட தரப்பினர் மிக மோசமாக பாதிக்கப்படுவர். சமூக ஏற்றத்தாழ்வின் இடைவெளி கோவிட்-19 க்கு பின் மிகமோசமடையும். சமூகப் பதட்டம் தவிர்க்க முடியாததாகும். இது பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கும்.

2007இல் அமெரிக்காவின் வீட்டுச் சந்தையில் இலாபமீட்டும் வெறியர்களால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார வீழ்ச்சியானது பிரித்தானியாவை மிக மோசமாகத் தாக்கியது. இந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு மீண்டும் இப்பொருளாதார வீழ்ச்சிக்கு முன்னைய நிலைக்கு பிரித்தானியாவால் செல்ல முடியவில்லை. முன்னைய பொருளாதார நிலையயை எட்ட 12 ஆண்டுகள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து இந்த கோவிட்-19 ஏற்பட்டது. கோவிட்-19 ஏற்படுத்திய பொருளாதார வீழ்ச்சியானது 2007 இல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியயைக் காட்டிலும் மோசமானது. அத்தோடு கோவிட்-19க்கு முன்னதாகவே உலக பொருளாதாரம் தொழில்நுட்பத்தில் அதீதமாக தங்கி இருக்கும் நிலையயை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டது.

அதன்படி மனித உழைப்பு அதன் முக்கியத்துவத்தை இழந்துவருகின்றது. இந்த மனித உழைப்பின் அவசியத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியானது இந்த கோவிட்-19 தாக்கத்தினால் மேலும் கீழ்நிலைக்குச் சென்று விட்டது. அதன்படி இன்று உள்ள 60 வீதமான வேலைகள் இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் இல்லாமல் போய்விடும். சுப்பர்மார்க்கற், வங்கிகள், தபாலகங்கள், ஊபர் ரைவர்கள் ரக்ஸிகள் கணக்காளர்கள் பெற்றோல் நிலையங்கள் என்பன எமது வீதிகளில் இருந்து காணாமல் போய்விடும். வேலையின்மையும் வறுமையும் மலிந்திருக்கும் எதிர்காலம் என்பது பலருக்கு இருளாகவும் ஒரு சிலருக்கு மட்டுமே ஒளிமயமானதாகவும் இருக்கும். அதனால் அதற்கான திட்டமிடல்கள் ஒவ்வொருவருக்கும் அவசியமாகின்றது. அரசு எவ்வாறான சூழலானாலும் வர்த்தக நிறுவனங்களின் நலனையே முன்நிறுத்தும்.

இன்றும் இந்த கொரோனா காலத்திலும் ரெஸ்ற் அன் ரேர்ஸ் திட்டத்தை அரசிடம் உள்ள அனுபவம் மிக்க 40க்கும் அதிகமான வைரோலொஜி ஆய்வுகூடங்களுக்கு வழங்காமால் தனியார்களிடமே கையளித்துள்ளது. பிரிக்ஸிறின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசு தனியார் நிறுவனங்களிடம் கடற்பாதைப் போக்குவரத்தை கையளித்தது. அவ்வாறு செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் ஒரு நிறுவனம் தான் சீப்புரோன் அதனிடம் ஒரு பெரிகூட இருக்கவில்லை. அதனிடம் அது பற்றிய திட்டமும் இருக்கவில்லை. ஆனால் அரசு பல மில்லியன் ஒப்பந்தத்தை அந்நிறுவனத்துடன் கடந்த ஆண்டு மேற்கொண்டது.

மேலும் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போது ஈரோரணல்க்கு அதில் கலந்துகொள்வதற்கு சந்தர்ப்பம் அளிக்காததால் 33 மில்லியன் பவுண்கள் நஸ்ட்டஈட்டை அரசு வழங்கியது. ஆனால் பாடசாலைகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விடுமுறை காலத்திலும் உணவு வழங்குவதற்கான வவுச்சரை வழங்க அரசு மறுத்துவிட்டது. அதற்கான செலவு 5 மில்லயன் பவுண் மட்டுமே. இவ்வாறு தான் அரசு வினைத்திறன் அற்று செயற்படுகின்றது.

கோவிட்-19 தாக்கத்தனால் ஏனைய நோயாளிகள் வைத்திய சேவைகளைப் பெறுவதை தவிர்த்து வருகின்றனர். அதனால் எதிர்காலத்தில் அவர்களது உடல்நிலை மோசமடையவும் விரைவில் மரணத்தை எட்டவும் வாய்ப்பு உள்ளது. மேலும் கோவிட்-19 அபாயநிலை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பிரித்தானியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பொருளாதார வீழ்ச்சியின் பக்கக விளைவுகளால் 700,000 பேர்களின் ஆயுட்காலம் குறைவடையும் அதாவது அவர்கள் விரைந்து மரணத்தை தழுவுவார்கள் என மதிப்பிட்டுள்ளது.

நீண்டகால தனிமைப்படுத்தல்களும் கை கழுவுதல் மற்றும் சுகாதார நடைமுறைகளும் கூட எதிர்காலத்தில் எமது உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையயை வலுவிழக்கச் செய்யும். ஏனைய வைரஸ் மற்றும் பக்ரீரியா போன்ற நுண் கிருமிகளின் தாக்கத்திற்கு நாம் ஆளாக வாய்ப்பளிக்கும். எமது உடலானது நுண் கிருமிகளைப் பற்றிக்கொள்ளும் போதே தனது நோய் எதிர்ப்பு சக்தியயை வளர்த்துக்கொள்கின்றது. இதுவொரு இயற்கை வக்சின் போன்றது. மேலும் மனநலம் சார்ந்த பிரச்சினைகளையும் இந்தத் தனிமைப்படுத்தல்கள் ஊக்குவிக்கின்றது.

இதுவொரு மிகுந்த நெருக்கடியான கால கட்டம். இதனை கையாள்வதற்கு ஒவ்வொருவரும் பழகிக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது நடைமுறைசார்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதற்கு தங்களை இசைவாக்கிக் கொள்ள வேண்டும். தங்களை இசைவாக்கிக் கொள்ள முடியாதவர்களே பெரும்பாலும் கூடுதல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். முடிவெடுக்கும் ஆற்றல் என்பது ஒவ்வொருவருடைய நுண் திறன்சார்ந்தது. அதனை வளர்த்துக்கொண்டு சமயோசிதமாக முடிவெடுக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பிரச்சினைகளையும் பல வழிகளில் தீர்க்க முடியும். ஆனால் அந்ததந்த் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருப்பதில்லை. அதனால் அவர்கள் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். அதன் விளைவால் கூடுதல் துன்பத்திற்கு ஆளாகின்றனர். நாங்கள் ஒவ்வொரு முடிவையும் எடுக்கின்ற போது நாங்கள் தவிர்கக்கின்ற முடிவுகளால் ஏற்டுகின்ற நன்மை தீமைகளையும் ஆராய்ந்து உணர்ச்சித் தூண்டலா முடிவெடுக்காமல் அறிவுபூர்வமாக முடிவெடுத்தால் நாம் எமது முடிவுகளில் வெற்றி பெறுவதங்கான வாய்ப்புகள் அதிகம்.

பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் கொரோனாவின் சமூகப் பரம்பலின் முக்கிய இடங்களாகும். அங்கு சமூக இடைவெளியயை ஏற்படுத்துவது அசாத்தியமான ஒன்று. பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை அவர்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்து கற்கும் தொலைதூர கல்விக்குச் சென்றதால் பல்கலைக்கழகங்களில் நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஆனால் பாடசாலைகளைப் பொறுத்தவரை மாணவர்கள் பாடசாலைக்கு வந்தே கல்வியயைத் தொடருகின்றனர். இந்நோய் பரம்பலை கட்டுப்படுத்துவதாக இருந்தால், அரசு தற்போது வந்த அரைத்தவணை விடுமுறையோடு பாடசாலைகளை நான்கு வாரங்களுக்கு மூடி, இதனைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும்.

இப்போது அரைத்தவணை முடிந்து, பெரும்பாலான பாடசாலைகள் திங்கட்கிழமை மீள ஆரம்பிக்கும். ஆகையால் நோய்பரம்பலை அரசு எதிர்பார்க்கின்ற அளவுக்கு கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியாது. தொழிற்கட்சி உட்பட அரசுக்கு பலர் எடுத்துக்கூறியும்; ஏனைய அதிகாரப்பகிர்வு செய்யப்பட்ட அரசுகள் விரைந்து செயற்பட்ட போதும்; பொறிஸ் ஜோன்சன் அரைத்தவணைக் காலத்தை வீணடித்துக்கொண்டார். இனி மரணங்கள் எகிறி மருத்துவமனைகள் நிரம்பிவழிய ஆரம்பிக்கவே அவர் பாடசாலைகள் மூடுவது பற்றி சிந்திப்பார். இது நோய்க்கிருமி பரவலை அதிகரிப்பதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்கான காலத்தையும் அதிகரிக்கும். விரைந்து செயற்படாததால் கூடுதலான கற்பித்தல் காலங்கள் வீணடிக்கப்படும்.

இன்றுள்ள இந்த பிரித்தானிய பிரதமரையும் அமெரிக்க ஜனாதிபதியயையும் அன்று தெரிவு செய்கின்ற போது மக்கள் சிந்தித்து ஆராய்ந்து உணர்ச்சிகளுக்கு இடம்கொடாமல் அறிவுபூர்வமாக சிந்தித்து முடிவெடுத்து இருந்தால் இந்தப் பேரழிவு இவ்வளவு மோசமானதாக அமைந்திருக்காது.

பிரித்தானிய பிரதமரின் அசமந்த போக்கு மேலும் பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் கொல்ல இருக்கின்றது. கோவிட்-19 ஒரு நாளைக்கு நாலாயிரம் உயிர்களை பலி எடுக்கும் அபாயம் இருப்பதாக அரசின் விஞ்ஞான மருத்துவக்குழு எச்சரித்து உள்ளது. இன்னும் சில நாட்களில் இங்கிலாந்தில் மிக இறுக்கமான லொக்டவுன் கொண்டுவரப்பட உள்ளது. இவ்வாறான இறுக்கமான லொக்டவுன் காலத்திலும் பாடசாலைகள் பல்கலைக்கழகங்களை திறந்து வைப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது. ஆனால் இது தேவையான அளவு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு மிகக்குறைவாகவே உள்ளது.

பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் தலைமையும் கொன்சவேடிவ் கட்சியின் பழமைவாத தனிநபர்வாத சிந்தனை முறையும் இதுவரை எண்பதிணா யிரத்துக்கும் அதிகமான உயிர்களைப் பலியெடுத்து உள்ளது. ‘சமூகம்’ என்ற ஒன்றில்லை என்ற சிந்தனை முறையோடு வாழ்கின்ற இந்த முதலாளித்துவ ஆட்சியாளர்கள் தனிநபர் சார்ந்து மட்டுமே சிந்திக்கின்றனர். பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய போது ‘சமூகம்’ என்ற ஒன்று இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அவரோ அவருடைய கட்சியின் கொள்கைகளோ அதனை ஒரு போதும் பிரதிபலிக்கவில்லை.

இந்தப் புதிய பிரித்தானிய அரசு கோவிட்-19 யை கையாண்ட முறை மிக மிக மோசமானது. தனது அரசின் விஞ்ஞான மருத்துவக் குழுக்களின் அலோசணைகளை புறம்தள்ளிவிட்டு குறுக்கு வழியில் தேர்தலை வெறிற்கொள்ள திட்டம் வகுத்த டொமினிக் கம்மிங்ஸ் போன்ற மண்டையன் குழுக்களின் அலோசனையின் படியே பொறிஸ் ஜோன்சன் ஆட்சி செய்கின்றார். அவருடைய நிதியமைச்சர் சான்ஸ்லர் ஒப் எக்செக்கர் ரிசி சுநாக் கூட புதிதான எந்த பொருளாதாரக் கொள்கை வகுப்பையும் மேற்கொள்ளவில்லை. ஜேர்மன் அரசு அறிவித்த உதவிநலத்திட்டங்களை தாங்களும் மறுநாள் அறிவித்தனர். அல்லது பல வாரங்கள் கழித்து அறிவித்தனர்.

ஐரோப்பிய நாடுகள் மார்ச்சில் லொக்டவுனுக்குச் சென்ற போது பிரித்தானிய அரசையும் லொக்டவுன் அறிவிக்க அழுத்தம் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு பிரதமர் மறுத்துவிட்டார். அதனால் லொக்டவுன் அறிவிக்க ஏற்பட்ட தாமதத்தால் பிரித்தானியாவின் கோவிட்-19 பரவலும் மரணமும் உலக எண்ணிக்கையில் உச்சத்தைத் தொட்டது. பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இருவாரங்கள் முன்னதாக லொக்டவுனை அறிவித்து இருந்தால்,கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் குறைந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

முதற்தடவை கோவிட்-19 பற்றி பெரிதாக தெரிந்திருக்கவில்லை; தவறு இழைக்கப்பட்டுவிட்டது என்றால். ஆனால் இரண்டாவது அலை பாராதூரமான தாக்கத்தை ஏற்படுத்தாலாம் என்ற எச்சரிக்கை ஆரம்பம் முதலே கூறப்பட்டு வந்தது. அரசின் விஞ்ஞான மருத்துவக் குழு தொடர்ச்சியாக அரசை எச்சரித்து வந்துள்ளது. பிரித்தானியாவில் வேல்ஸ், நொர்தன் ஐலன்ட்ஸ் அரசுகள் ஏற்கனவே ஒரு மாத லொக்டவுனை அறிவித்து பல நாட்கள் ஆகிவிட்டது. அப்படி இருந்தும் பொறிஸ் ஜோன்சன் ‘தனக்குத்தான் தெரியும் தான் தான் படைப்பன்’ என்று சன்னதம் ஆடிக்கொண்டு திரிகின்றார். ஒரு மனிதனுக்கு சுயபுத்தி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் புத்தி சொல்லக் கூடியவர்களின் புத்திமதியயையாவது கேட்கவேணும். இந்த இரண்டும் இல்லாத ஒன்று பிரித்தானிய வல்லரசுக்கு பிரதமர் ஆனால் மக்கள் வகை தொகையின்றி கொல்லப்படுவது தவிர்க்க முடியாதது.

கடந்த ஆறு மாதகாலத்திற்கு மேலாக கொரோனா தொற்று இல்லாத நாடாக தாய்வான் இருக்கின்றது. தங்களைப் பற்றிய பெரிய விம்பங்களைக் கட்டிக்கொண்டு திரிகின்ற இந்த காலனித்துவ சிந்தனையில் இருந்து பிரித்தானிய ஆட்சியாளர்கள் விடுபட வேண்டும். கொரோணாவுக்கு பிளீச் குடிக்க கொடுக்கும் அளவுக்கு – அமெரிக்க வல்லரசின் ஏஜென்டாக இருந்தாலும்; அவ்வளவு முட்டாள்கள் என்று சொல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட அந்த நிலைக்குத் தான் பிரித்தானிய வல்லரசின் நிலை வந்து கொண்டிருக்கிறது.

இன்றைய அமெரிக்க பிரித்தானிய வல்லரசுகள் வெளியிடுகின்ற அறிக்கைகள் ‘குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு’ என்றளவிற்கு கேவலமாகிவிட்டது. போதை ஏறியவுடன் வருகின்ற உசாரில் ‘வெட்டுவோம் பிடுங்குவாம்’ என்ற கணக்கில் தான் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும், அவருடைய கிட்டத்தட் அண்ணன் மாதிரியான டொனால்ட் ட்ரம்மும் விடுகின்ற ரீல்கள் உள்ளது. கோவிட்-19 க்கு வக்சீன் கோடிக்குள் இருக்கின்றது, ‘தைப்பொங்கலுக்கு தமிழீழம்’ என்ற கணக்கில் தான் ‘புதுவருசத்தில் கோவிட்-19 க்கு கோவிந்தா’ என்றெல்லாம் பிலா விடுகின்றார்கள்.

உண்மை நிலவரம் அதுவல்ல. கோவிட்-19 வக்சின் அண்மைக்காலத்தில் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அவ்வாறு வந்தாலும் அதனை முழு மக்கள் தொகைக்கும் வழங்குவதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை. அது அரசுடைய நோக்கமும் கிடையாது. இந்த கோவிட்-19 ஒட்டுமொத்த மக்கள்கொகைக்கும் பரவி இயற்கையான நிர்ப்பீடண சக்தி ஒவ்வொருவரது உடலிலும் ஏற்படுவதன் மூலமே இந்நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். மக்கள் தொகைக்குள் இந்நோய் பரவுகின்ற போது அதனை ஒரே நேரத்தில் பரவ அனுமதித்தால் நாட்டில் உள்ள சுகாதார சேவைகளால் அதனை தாக்குப் பிடிக்க முடியாது. கட்டுப்பாடின்றி பரவ அனுமதித்தால் காட்டாற்று வெள்ளத்தில் மக்கள் மரணிப்பது போல் தகுந்த சிகிச்சை இல்லாமல் பல்லாயிரம் மக்கள் மரணிக்க வேண்டி இருக்கும்.

அதனால் கோவிட்-19 மக்கள் தொகைக்குள் பரவுவதை மட்டுப்படுத்ப்பட்ட வீதத்தில் மேற்கொள்ள வேண்டும். இந்த மட்டுப்படுத்தல் என்பது நாட்டின் சுகாதார சேவையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய எண்ணிக்கையயை வைத்து தீர்மானிக்கப்படும்.

பிரித்தானியாவில் இந்நோய்க் கிருமியானது இதுவரை 15 வீதமான மக்களுக்கு பரவி இருக்கலாம் என்று நியூ சயன்றிஸ்ட் மதிப்பிடப்படுகின்றது. உலகில் ஈரானிலேயே கூடுதல் மக்கள் தொகைக்கு – 28 வீதம் – இந்நோய் பரவி உள்ளது. கீழுள்ள வரைபு வெவ்வேறு நாடுகளில் எவ்வளவு வீதமான மக்களுக்கு இந்நோய் பரவியுள்ளது என்பதைக் காட்டுகின்றது. ஒரு நாட்டின் எழுபது வீதமான மக்களுக்கு இந்நோய் தொற்று ஏற்பட்டு இருந்தாலேயே அந்நாட்டில் மக்கள் குழும நீர்ப்பீடணம் ஏற்பட்டதாகக் கொள்ள முடியும். அப்படிப் பார்க்கின்ற போது எல்லா நாடுகளுமே முழு நாட்டுக்குமான நீர்ப்பீடணத்தை எட்டுவதற்கு மிகத் தொலைவிலேயே உள்ளனர். பிரித்தானியா அவ்வாறான ஒரு நீர்ப்பீடணத்தை பெறுவதற்கு இன்னும் ஓராண்டுக்கு மோலாகலாம். இப்பொழுதுள்ள நிலையில் ஈரான் மிகவிரைவில் ழுழுநாட்டுக்குமான குழும நீர்ப்பீடணத்தை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கலாம்.

இந்த கோவிட்-19 ஏற்படுத்துகின்ற அடுத்த பெரும் பிரச்சினை பொருளாதார தாக்கம். தற்போது வரை கோவிட்-19க்காக செலவிடப்பட்ட நிதியயை மீளப் பெறுவதற்கு 50 பில்லியன் பவுண் வரியயை அரசு விதிக்க வேண்டியேற்படும். கோவிட்-19 க்கு முன்னதாகவே பிரித்தானிய சுகாதாரசேவைகள் உட்பட பொதுச்சேவைகளுக்கான நிதிவழங்கலை கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கொன்சவேடிவ் அரசு குறைத்துக் குறைத்து வந்தது. பொதுச்சேவைகள் அனைத்தும் கோவிட்-19 க்கு முன்னதாகவே ‘ரிம்’மில் தான் ஓடிக்கொண்டிருந்தன.

பிரித்தானிய சுகாதார சேவைகளில் 50,000 வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. ஏனெனில் அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு சுகாதார சேவைகளிடத்தில் போதுமான நிதி இருக்கவில்லை. பாடசாலைகளில் 10,000க்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதற்கான நிதி பாடசாலைகளில் இல்லலை. பாடசாலைகளில் வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டில் வெளியான ஆய்வின்படி கோவிட்-19 காலத்திற்கு முந்தைய நிலையில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து வரும் மாணவர்களின் கல்வி மட்டத்திற்கும் சாதாரண மட்டத்தில் இருந்து வருகின்ற மாணவர்களின் கல்வி மட்டத்திற்குமான இடைவெளி இரண்டு ஆண்டுகளாக இருந்தது. கோவிட்-19 க்குப் பின் இவ்விடைவெளி ஐந்து மடங்காக அதிகரித்து இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இதன்படி ஆண்டு 13இல் கல்வி கற்கின்ற பிற்படுத்தப்பட்ட சமூகமட்டத்தில் உள்ள ஒரு மாணவனின் கல்விமட்டமும் 9ம் ஆண்டில் கல்விகற்கின்ற ஒரு சாதாரண சமூகமட்டத்தில் உள்ள மாணவனின் கல்விமட்டமும் கிட்டத்தட்ட சமமாக இருக்கும் எனக் கொள்ளலாம்.

அரசு ஏற்கனவே பல உள்ளுராட்சி நூலகங்களை மூடிவருகின்றது. பெரும்பாலான அரச பாடசாலைகளில் நூலகங்கள் இல்லை அல்லது பெயரளவிலேயே இயங்கி வருகின்றன. பிறக்கின்ற குழந்தையின் அடிப்படைத் தேவைகளில், அதன் வளர்ச்சியில், ஏற்படுத்தப்படுகின்ற போதாமைகள் அதன் எதிர்காலத்தை பாரதூரமாக பாதிக்கின்றன. இதன் காரணத்தினால் கோவிட்-19க்கு முன்னதாக பிரித்தானிய சிறைகளை நிரப்புகின்ற குற்றவாளிகளில் 80 வீதத்தினர் பாடசாலைகளில் இருந்து கலைக்கப்பட்ட மாணவர்களாக; பாடசாலைக் கல்வியயை விட்டு ஒதுங்கியவர்களாக இருக்கின்றனர்.

பொதுச் சேவைகளில் முதலீடுகள் செய்யப்படாத போது வீட்டுத் திட்டங்கள், போக்குவரத்துக்கள், கல்வி என்று சகல விடயங்களிலும் பிற்படுத்தப்பட்ட தரப்பினர் மிக மோசமாக பாதிக்கப்படுவர். சமூக ஏற்றத்தாழ்வின் இடைவெளி கோவிட்-19 க்கு பின் மிகமோசமடையும். சமூகப் பதட்டம் தவிர்க்க முடியாததாகும். இது பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கும்.

2007இல் அமெரிக்காவின் வீட்டுச் சந்தையில் இலாபமீட்டும் வெறியர்களால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார வீழ்ச்சியானது பிரித்தானியாவை மிக மோசமாகத் தாக்கியது. இந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு, இப்பொருளாதார வீழ்ச்சிக்கு முன்னைய நிலைக்கு பிரித்தானியாவால் செல்ல முடியவில்லை. முன்னைய பொருளாதார நிலையயை எட்ட 12 ஆண்டுகள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து இந்த கோவிட்-19 ஏற்பட்டது. கோவிட்-19 ஏற்படுத்திய பொருளாதார வீழ்ச்சியானது 2007 இல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியயைக் காட்டிலும் மோசமானது.

அத்தோடு கோவிட்-19க்கு முன்னதாகவே உலக பொருளாதாரம் தொழில்நுட்பத்தில் அதீதமாக தங்கி இருக்கும் நிலையயை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டது. அதன்படி மனித உழைப்பு அதன் முக்கியத்துவத்தை இழந்துவருகின்றது. இந்த மனித உழைப்பின் அவசியத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியானது இந்த கோவிட்-19 தாக்கத்தினால் மேலும் கீழ்நிலைக்குச் சென்று விட்டது. அதன்படி இன்று உள்ள 60 வீதமான வேலைகள் இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் இல்லாமல் போய்விடும். சுப்பர்மார்க்கற்கள் போன்ற கடைத்தெரு வியாபார நிலையங்கள் (உணவகங்கள், மருந்தகங்கள், புடவைக்கடைகள் சில்லறைக் கடைகள்), வங்கிகள், தபாலகங்கள், ஊபர்கள் – ரக்ஸிகள், கணக்காளர்கள் பெற்றோல் நிலையங்கள் என்பன எமது வீதிகளில் இருந்து காணாமல் போய்விடும். வேலையின்மையும் வறுமையும் மலிந்திருக்கும். எதிர்காலம் என்பது பலருக்கு இருளாகவும் ஒரு சிலருக்கு மட்டுமே ஒளிமயமானதாகவும் இருக்கும். அதனால் அதற்கான திட்டமிடல்கள் ஒவ்வொருவருக்கும் அவசியமாகின்றது.

அரசு எவ்வாறான சூழலானாலும் வர்த்தக நிறுவனங்களின் நலனையே முன்நிறுத்தும். இன்றும் இந்த கொரோனா காலத்திலும் ரெஸ்ற் அன் ரேர்ஸ் திட்டத்தை அரசிடம் உள்ள அனுபவம் மிக்க 40க்கும் அதிகமான வைரோலொஜி ஆய்வுகூடங்களுக்கு வழங்காமால் தனியார்களிடமே கையளித்துள்ளது. பிரிக்ஸிறின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசு தனியார் நிறுவனங்களிடம் கடற்பாதைப் போக்குவரத்தை கையளித்தது. அவ்வாறு செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் ஒன்றுதான் ‘சீப்புரோன்’ நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தமும். ஆனால் ‘சீப்புரோன்’ னிடம் ஒரு பெரி – ferry கூட இருக்கவில்லை. அதனிடம் அது பற்றிய திட்டமும் இருக்கவில்லை. ஆனால் அரசு பல மில்லியன் ஒப்பந்தத்தை அந்நிறுவனத்துடன் கடந்த ஆண்டு மேற்கொண்டது.

மேலும் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போது ஈரோ ரணல்க்கு அதில் கலந்துகொள்வதற்கு சந்தர்ப்பம் அளிக்காததால் 33 மில்லியன் பவுண்கள் நஸ்ட்டஈட்டை அரசு வழங்கியது. ஆனால் பாடசாலைகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விடுமுறை காலத்திலும் உணவு வழங்குவதற்கான வவுச்சரை வழங்க அரசு மறுத்துவிட்டது. அதற்கான செலவு 5 மில்லயன் பவுண் மட்டுமே. இவ்வாறு தான் அரசு வினைத்திறன் அற்று செயற்படுகின்றது.

கோவிட்-19 தாக்கத்தனால் ஏனைய நோயாளிகள் வைத்திய சேவைகளைப் பெறுவதை தவிர்த்து வருகின்றனர். அதனால் எதிர்காலத்தில் அவர்களது உடல்நிலை மோசமடையவும் விரைவில் மரணத்தை எட்டவும் வாய்ப்பு உள்ளது. மேலும் கோவிட்-19 அபாயநிலை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பிரித்தானியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பொருளாதார வீழ்ச்சியின் பக்கக விளைவுகளால் 700,000 பேர்களின் ஆயுட்காலம் குறைவடையும் அதாவது அவர்கள் விரைந்து மரணத்தை தழுவுவார்கள் என மதிப்பிட்டுள்ளது.

நீண்டகால தனிமைப்படுத்தல்களும் கை கழுவுதல் மற்றும் சுகாதார நடைமுறைகளும் கூட எதிர்காலத்தில் எமது உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையயை வலுவிழக்கச் செய்யும். ஏனைய வைரஸ் மற்றும் பக்ரீரியா போன்ற நுண் கிருமிகளின் தாக்கத்திற்கு நாம் ஆளாக வாய்ப்பளிக்கும். எமது உடலானது நுண் கிருமிகளைப் பற்றிக்கொள்ளும் போதே தனது நோய் எதிர்ப்பு சக்தியயை வளர்த்துக்கொள்கின்றது. இதுவொரு இயற்கை வக்சின் போன்றது. நீண்டகால தனிமைப்படுத்தலும் அதீத சுகாதாரப் பழக்கங்களும் நாங்கள் நோய்கிருமிகளுக்கு முகம் கொடுப்பதைத் தவிர்க்கும். அவ்வாறு நீண்ட காலத்திற்கு நோய்க்கிருமிகளில் இருந்து எமது உடலைப் பாதுகாத்து வந்தால் எமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவிழக்கும். மேலும் மனநலம் சார்ந்த பிரச்சினைகளையும் இந்தத் தனிமைப்படுத்தல்கள் ஊக்குவிக்கின்றது.

இதுவொரு மிகுந்த நெருக்கடியான கால கட்டம். இதனை கையாள்வதற்கு ஒவ்வொருவரும் பழகிக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது நடைமுறைசார்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதற்கு தங்களை இசைவாக்கிக் கொள்ள வேண்டும். தங்களை இசைவாக்கிக் கொள்ள முடியாதவர்களே பெரும்பாலும் கூடுதல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். முடிவெடுக்கும் ஆற்றல் என்பது ஒவ்வொருவருடைய நுண் திறன்சார்ந்தது. அதனை வளர்த்துக்கொண்டு சமயோசிதமாக முடிவெடுக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பிரச்சினைகளையும் பல வழிகளில் தீர்க்க முடியும். ஆனால் அந்ததந்த் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருப்பதில்லை. அதனால் அவர்கள் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். அதன் விளைவால் கூடுதல் துன்பத்திற்கு ஆளாகின்றனர். நாங்கள் ஒவ்வொரு முடிவையும் எடுக்கின்ற போது, நாங்கள் தவிர்கக்கின்ற முடிவுகளால் ஏற்டுகின்ற நன்மை தீமைகளையும் ஆராய்ந்து; உணர்ச்சித் தூண்டலால் முடிவெடுக்காமல் அறிவுபூர்வமாக முடிவெடுத்தால், நாம் எமது முடிவுகளில் வெற்றி பெறுவதங்கான வாய்ப்புகள் அதிகம்.

பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் கொரோனாவின் சமூகப் பரம்பலின் முக்கிய இடங்களாகும். அங்கு சமூக இடைவெளியயை ஏற்படுத்துவது அசாத்தியமான ஒன்று. பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை அவர்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்து கற்கும் ஒன்லைன் கல்விக்குச் சென்றதால் பல்கலைக்கழகங்களில் நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஆனால் பாடசாலைகளைப் பொறுத்தவரை மாணவர்கள் பாடசாலைக்கு வந்தே கல்வியயைத் தொடருகின்றனர். இந்நோய் பரம்பலை கட்டுப்படுத்துவதாக இருந்தால், அரசு தற்போது வந்த அரைத்தவணை விடுமுறையோடு பாடசாலைகளை நான்கு வாரங்களுக்கு மூடி, இதனைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும். இப்போது அரைத்தவணை முடிந்து, பெரும்பாலான பாடசாலைகள் திங்கட்கிழமை மீள ஆரம்பிக்கும். ஆகையால் நோய்பரம்பலை அரசு எதிர்பார்க்கின்ற அளவுக்கு கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியாது. தொழிற்கட்சி உட்பட அரசுக்கு பலர் எடுத்துக்கூறியும்; ஏனைய அதிகாரப்பகிர்வு செய்யப்பட்ட அரசுகள் விரைந்து செயற்பட்ட போதும்; பொறிஸ் ஜோன்சன் அரைத்தவணைக் காலத்தை வீணடித்துக்கொண்டார். இனி மரணங்கள் எகிறி மருத்துவமனைகள் நிரம்பிவழிய ஆரம்பிக்கவே அவர் பாடசாலைகள் மூடுவது பற்றி சிந்திப்பார். இது நோய்க்கிருமி பரவலை அதிகரிப்பதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்கான காலத்தையும் அதிகரிக்கும். விரைந்து செயற்படாததால் கூடுதலான கற்பித்தல் காலங்கள் வீணடிக்கப்படும்.

இன்றுள்ள இந்த பிரித்தானிய பிரதமரையும் அமெரிக்க ஜனாதிபதியயையும் அன்று தெரிவு செய்கின்ற போது மக்கள் சிந்தித்து ஆராய்ந்து உணர்ச்சிகளுக்கு இடம்கொடாமல் அறிவுபூர்வமாக முடிவெடுத்து இருந்தால் இந்தப் பேரழிவு இவ்வளவு மோசமானதாக அமைந்திருக்காது. மக்கள் எடுத்த அரசியல் முடிவுக்கு அவர்கள் தற்போது கொடுத்துக்கொண்டிருக்கின்ற இந்த விலை மிக அதிகமானதே. அதற்கு அவர்கள் இனிவரும் காலங்களில் கொடுக்கப் போகின்ற விலை இன்னும் அதிகமாக இருக்கும். போது கொடுத்துக் கொண்டிருக்கின்ற இந்த விலை மிக அதிகமானதே. அதற்கு அவர்கள் கொடுக்கப் போகின்ற விலை இன்னும் அதிகமாக இருக்கும்.

பிரித்தானிய அரசியல் கேலிக்கூத்து! தொழிற்கட்சியினுள் யூதர்களுக்கு எதிரான போக்கு ! ஜெரிமி கோபின் தொழிற்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்!

பிரித்தானியாவின் மிக உன்னதமான மனிதத்துவ போராளியான ஜெரிமி கோபின் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த போது கட்சியில் இருந்த யூதர்களுக்கு எதிராக செயற்பாடுகளை கண்டுகொள்ளவில்லை என்று சமத்துவத்திற்கும் மனித உரிமைக்குமான ஆணைக்குழு நேற்று (29/10/2020) குற்றம்சாட்டி இருந்தது. இந்த அறிக்கை வெளிவந்து சில நிமிடங்களிலேயே ஜெரிமி கோர்பின் இந்த அறிக்கையை விமர்சித்து இருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாக மிகைப்படுத்தப்பட்டது என ஜெரிமி கோபின் மிகச்சரியாகவே குற்றம்சாட்டி இருந்தார்.

ஆனால் ஜெரிமி கோபினின் இந்த விமர்சனத்தை தற்போதைய தொழிற்கட்சித் தலைவர் ஹியஸ் ராமர் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். அடுத்த சில மணிநேரங்களில் ஜெரிமி கோபின் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்ககாணலில் தன்னுடைய விமர்சனத்தை மிக அழுத்தம் திருத்தமாக வெளியிட்டார். அதன்படி தனக்கு எதிரான ஒரு அரசியல் சதி என்பதை அவர் மிகத் தெளிவாக சுற்றிக்காட்டினார். இதனை தொழிற்கட்சியில் இருக்கும் பல யூதப் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், ஜெரிமி கோபினுக்கு தங்களுடைய ஆதரவை வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர். ஜெரிமி கோபினின் இந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒளிபரப்பப்பட்டு சில நிமிடங்களிலேயே ஜெரிமி கோபின் நேற்று மதியம் ஒரு மணியளவில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

அன்ரிசெமற்றிசம் – anti semitisam என்பது ஹிட்லருடைய காலத்தில் இரண்டாம் உலகப்போர் காலத்தில் யூதர்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை மறுப்பது. இவ்வாறான எவ்வித மறுப்பையும் ஜெரிமி கோபின் செய்ததற்கு நேரடியான மறைமுகமான எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஆனால் கட்சியில் இருந்த சிலர் அவ்வாறு நடந்து கொண்டிருந்தனர். அது சம்பந்தப்பட்ட ஒழுங்காற்று நடவடிக்கைகளை கட்சி எடுத்துவந்தது. ஆனால் தொழிற்கட்சியில் இருந்த வலதுசாரி பிரிவினர் ஜெரிமி கோபினின் தீவிர இடதுசாரியப் போக்கை நிராகரித்து வந்ததுடன்; ஜெரிமி கோபினை கட்சியின் தலைமையில் இருந்து ஓரம்கட்ட இந்த அன்ரி செமற்றிசம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து ஊதிப் பெருப்பித்து இந்நிலைக்கு இட்டுச்சென்றனர். இதுவொருவகையில் சகல விதமான ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கின்றவர்களை கேலிக்கூத்தாக்கும் ஒரு செயலாகவே கருதப்படுகின்றது.

பிரித்தானியாவில் பெண்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர் அதனால் அவர்கள் தினம் தினம் அவமானப்படுகின்றனர் வன்முறைக்கு உள்ளாகின்றனர். சிறுபான்மைச் சமூகங்கள்நாளாந்தம் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர். கறுப்பினத்தவர்கள் தங்களுடைய தோற்றம் இயல்புகளுக்காக பொலிஸாரின் ஸ்ரொப் அன் சேர்ச் போன்ற கெடுபிடிகளுக்கு உள்ளாகின்றனர். ஸ்லாமியர்கள் தினம் தினம் பிரித்தானியாவில் நையப்புடைக்கப்படுகின்றனர். அகதிகள் கேவலப்படுத்தப்படுகின்றனர். இவையெல்லாம் பிரித்தானிய தெருக்களிலும் பாராளுமன்றத்திலும் அப்பட்டமாக வெளித்தெரிகின்ற சமத்துவம் மனிதஉரிமை மீறல் சம்பவங்கள். இந்த கோவிட்-19 இந்நிலையயை மேலும் மோசமாக்கி ஒடுக்குமுறைகளையும் அடக்குமுறைகளையும் தூண்டியுள்ளது.

மேற்குறிப்பிட்ட சம்பவங்களோடு ஒப்பிடுகின்ற போது யூதர்கள் தொழிற்கட்சிக்குள் ஒடுக்குமுறைக்கு உள்ளானார்கள் என்பது மின்னணு நூக்குக்காட்டியயைக் கொண்டு பெருப்பித்து பார்த்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டிய விடயம். மேலும் இந்த அன்ரிசெமற்றிசம் என்ற குற்றச்சாட்டை வைப்பவர்கள் இஸ்ரேலிய கொடுங்கோன்மை கொலைவெறி அரசை ஆதரிப்பவர்களாக இருக்கின்றனர். இஸ்ரேலிய கொடுங்கோண்மை அரசை விமர்சிப்பது எந்தவகையிலும் யூதர்களின் உரிமைகளை மறுப்பதாகாது. தொழிற்கட்சி உறுப்பினர்கள் பலர் அன்ரி ஸ்யோனிஸ்ட் anti zionists டுக்களாக உள்ளனர். அவர்கள் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதையும் இஸ்ரேலிய அரசின் நில ஆக்கிரமிப்பையும் பலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய அரசின் கொடுங்கோண்மையயையும் வன்மையாகக் கண்டிக்கின்றனர். இந்தப் பின்னணியியேலயே ஜெரிமி கோபின் மீது இவ்வாறான ஒரு அபாண்டமான பழி போடப்பட்டு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

இஸ்ரேலிய அரசு மனிதத்துவத்திற்கு எதிரானது; இஸ்ரேலிய அரசை எதிர்ப்பது; பாலஸ்தீன மக்களின் நில அபகரிப்புக்கு எதிராக குரல்கொடுப்பது; பாலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல்கொடுப்பது ஒருபோதும் யூதமக்களை அவமானப்படுத்துவதாகாது. ஜெரிமி கோபினை தொழிற்கட்சியில் இருந்து நீக்க எடுக்கப்பட்ட முடிவு கட்சிக்குள் உள்ள வலதுசாரி சக்திகள் கடந்த ஆண்டுகளாக ஜெரிமி கோபின் சாதித்த மக்கள் நலன்சார்ந்த முடிவுகளை நிராகரிக்க முயற்சிப்பதன் வெளிப்பாடே.