அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கும் திட்டம் இல்லை – அனோமா பொன்சேகா

anoma-fonseka.jpgமன்னிப் புக்கோரி ஜனாதிபதியிடம் மேன்முறையீடு செய்யும் திட்டங்கள் எம்மிடம் இல்லை. அவர் (பொன்சேகா) எந்தவொரு குற்றத்தையும் இழைத்திருக்கவில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.

கேள்வி மனு நடைமுறைகளை மீறிய குற்றத்திற்காக 30 மாதங்கள் கடூழியச் சிறைத்தண்டனையைப் பெற்றிருக்கும் சரத் பொன்சேகா வியாழன் மாலை கொழும்பிலுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார். பொன்சேகா மன்னிப்புக்கோரி வேண்டுகோள் விடுத்தால் தீர்ப்பை மீளாய்வு செய்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தயாராக இருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக ஐலன்ட் பத்திரிகை மேற்கோள்காட்டியிருந்தது. இந்நிலையிலேயே திருமதி பொன்சேகாவிடமிருந்து இக்கருத்து வெளிப்பட்டிருக்கிறது.

இதேவேளை, பொன்சேகாவின்விவகாரம் அரசியல் விவகாரம் அல்ல. ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மூன்றாம் தரப்பின் தலையீடுகளால் இதற்கு தீர்வுகாண முடியாது என்று கோதாபய ராஜபக்ஷ கூறியதாக ஐலன்ட் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. ஆனால், தனது கணவருக்குத் தண்டனை வழங்கும் தீர்மானம் அரசியல் ரீதியானது என்றும் ஜனாதிபதியின் விருப்பங்களுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டதென்றும் அனோமா கூறியிருக்கிறார்.

பொன்சேகா வேண்டுகோள் விடுத்தால் மீள்பரிசீலனை

பொன்சேகா வேண்டுகோள் விடுத்தால் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறைத்தண்டனைக் காலம் குறித்து மீள்பரிசீலனை செய்வதற்கு ஜனாதிபதி விரும்புவதாக பத்திரிகையொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை மேற்கோள்காட்டி ஐலன்ட் பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டிருக்கிறது. பொன்சேகா, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் நேரடியாக வேண்டுகோள் விடுக்க வேண்டுமென கோதாபய ராஜபக்ஷ கூறியதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை பொன்சேகாவின் 30 மாத சிறைத்தண்டனைக் காலம் ஆரம்பமாகியுள்ளது. இராணுவ நீதிமன்றத்தின் பரிந்துரையை மீள்மதிப்பீடு செய்ய ஜனாதிபதி தயாராகவுள்ளார். பொன்சேகாவின் கோரிக்கையின் அடிப்படையில் அதனை மீள்பரிசீலனை செய்ய அவர் தயாராகவிருந்தார் என்று பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக சிவில் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்போவதாக பொன்சேகாவின் கட்சியான ஜனநாயகத் தேசியக் கூட்டணி நேற்று முன்தினம் தெரிவித்தது.

வலி. மேற்கில் உயர் பாதுகாப்பு வலயம் எனும் பகுதி இனிமேல் இருக்காது

cc.jpg“வலி. மேற்கில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பிரதேசம் இனி இருக்கமாட்டாது. அவ்வாறான பிரதேசம் அகற்றப்பட்டு அபிவிருத்திக்காக மக்களின் கைகளில் வழங்கப்படும்.” வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி இவ்வாறு தெரிவித்தார்.

வலி. மேற்கு பிரதேசத்தின் “தரிசுநிலப் பயன்பாடு அபிவிருத்தி” தொடர்பான கலந்துரையாடல் யாழ். ஆளுநர் அலு வலகத்தில் இடம்பெற்றது. இதில் கல ந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி கருத்துத் தெரிவிக்கையில், வலி. மேற்கு பிரதேசம் 25 கிராம அலுவலர் பிரிவினை கொண்ட பரந்து விரிந்த பிரதேசம். இப்பிரதேசத்தில் உள்ள பயன்படு மற்றும் பயன்படாத நிலங்களின் விபரங்களை திரட்ட வேண்டும்.

பயன்படாத தரிசு நிலங்களில் எவ்வாறான அபிவிருத்திகளையும் உட்கட்டுமான செயற்பாடுகளை யும் மேற்கொள்ளலாம் என பட்டியல்படுத்த வேண்டும். அதற்கான நிதி மூலாதாரங்களைத் தேடும் பணியைப் பொருளாதார அபிவிருத்தி நிபுணர் எந்திரி ஆர். ரி. இராமச்சந்திரன் பொறுப்பில் விடப்படுவதாக தெரிவித்ததுடன், தரிசு நில பயன்பாடு அபிவிருத்தி தொடர்பாக பிரதேச மட்டத்தில் விரைவில் துறைசார்ந்த அமைப்புக்களை திரட்டி கூட்டம் நடத்த வேண் டுமெனக் கேட்டுக் கொண்டார்.

மேற்படி ஆளுநரின் கூட் டத்தில் பொருளாதார அபிவிருத்தி நிபுணர், வலி. மேற்கு பிரதேச தரிசுநில பயன்பாடு தொடர்பான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தார். துறைசார்ந்த அபிவிருத்தி உடனடி தேவை குறித்தும் எந்திரி ஆர்.ரி. இராமச்சந்திரன் விளக்கினார்

நாடு முழுவதும் ‘ஒரேநேரம்’ நியம நேரத்தை வர்த்தமானி மூலம் அறிவிக்க தீர்மானம்

clock.jpgநாடு முழுவதும் ஒரே நேரத்தை அமுல்படுத்தும் வகையில் நியம நேரத்தை உத்தியோபூர்வமாக வர்த்தமானி மூலம் அறிவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி நாடு முழுவதற்குமான பொதுவான நேரம், டிசம்பர் 31ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு அறிவிக்கப்பட்டு 2011 முதல் அமுல் படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வேறுபட்ட நேரங்கள் பயன்படுத்தப் படுவதால் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. சில ஊடக நிறுவனங்களும் வேறுபட்ட நேரங்களையே பயன்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக புதிய சரியான நேரத்தை அறிவிக்க அளவீட்டு மற்றும் தரச் சேவைத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கிரீன்விச் நேரத்திற்கும் இலங்கை நேரத்திற்குமிடையே 5.30 மணி நேர வித் தியாசம் காணப்படுகிறது. இதனடிப் படையில் புதிய நேரம் கணிக்கப்பட உள்ள தாக தகவல் திணைக்களம் கூறியது.

நீதிமன்றத்தை நாட ஜ.தே.கூ. முடிவு

இராணுவ நீதிமன்றத்தினால் குற்றவாளியாக காணப்பட்டவர் பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்க வேண்டி வரும் என்ற ஏற்பாடுகள் அரசியலமைப்பில் இல்லாமையால், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாதுகாத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடப்போவதாக அவர்தலைமை வகிக்கும் ஜனநாயக தேசியக் கூட்டணி தெரிவித்துள்ளது.

நாவல சோலிஸ் ஹோட்டலில் நேற்றுவியாழக்கிழமை நடைபெற்ற ஜனநாயக தேசிய கூட்டணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜித ஹேரத் எம்.பி.இது பற்றிய கருத்துக்களை வெளியிட்டார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

“இரண்டாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்புக்கு கையெழுத்திட்டு சரத் பொன்சேகாவுக்கு 30 மாத (இரண்டரை வருடங்கள்) கடூழியச் சிறைத் தண்டனையை ஜனாதிபதி உறுதி செய்துள்ளார். நாம் இந்த இராணுவ நீதிமன்றத்தையும், அதன் தீர்ப்பையும் ஏற்க தயாராக இல்லை. ஏனெனில் இது பக்கச் சார்பான தீர்ப்பு. நாம் ஏற்கனவே சரத் பொன்சேகாவுக்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு அக்டோபர் 8 ஆம் திகதி விசாரிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் இந்த இரண்டாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் விரைவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளோம். இராணுவ சட்டத்தின் 79 ஆவது சரத்தானது இராணுவ நீதிமன்ற தீர்ப்பை ஆட்சேபித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்ல உரிமை இருப்பதாக விதைந்துரைக்கிறது. அதன் பிரகாரமே நாம் மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்கிறோம்.

இதேநேரம், சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமையைப் பொறுத்த வரையில், சிவில் நீதிமன்றத்தில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாதென அரசியலமைப்பில் கூறப்படுகிறது. எனினும் இராணுவ நீதிமன்றத்தினால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரது பாராளுமன்ற உரிமை பறிபோகும் என்று எங்கும் கூறப்படவில்லை. அந்த வகையில் நாம் இந்த இராணுவ நீதிமன்றத் தீர்ப்பை சிவில் சட்டத்தின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்சேபனைக்குட்படுத்தி சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமையைப் பாதுகாத்துக்கொள்ளக் கூடிய தீர்ப்பொன்றை விரைவில் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம். நாம் இவ்விடயத்தில் அதிகபட்ச நீதிமன்ற நடவடிக்கைகளை எடுப்போம். சரத் பொன்சேகாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக இன, மத, குல பேதங்களின்றி அனைத்து மக்களும் அணிதிரள வேண்டும் என்றார்.

புனர்வாழ்வு பெற்ற 402 பேர் பெற்றோரிடம் நேற்று ஒப்படைப்பு

வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் இருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் 151 பெண்கள் உள்ளிட்ட 402 பேர் நேற்று வியாழக்கிழமை காலை உறவினர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.யூ. குணசேகர, பிரதி அமைச்சர் விஜயமுனிசொய்ஸா, வன்னி பாதுகாப்புப்படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் கே. டி. தல்பதாது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

யுத்த காலத்தில் வன்னிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு விசேட புனர்வாழ்வு அளிக்கப்படும். அவர்கள் சமூகத்தில் இணைந்து கொள்வதற்கு விடுவிக்கப் பட்டுள்ளனர் என பிரிகேடியர் ரணசிங்க தெரிவித்தார்.

2011 நவம்பர் 22இல் வரவு-செலவுதிட்டம்

2011 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதி நிதி அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, முதலாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 22 ஆம் திகதி நடைபெறும். இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 22 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. குழு நிலை விவாதம் நவம்பர் மாதம் 29ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடத்தப்பட உள்ளது. குழுநிலை விவாதத்திற்கான திகதி குறித்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை பூர்த்தி செய்யும் வகையில் 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான உத்தேச மதிப்பீட்டு ஆலோசனைகளை முன்வைக்குமாறு சகல அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

சம்பிரதாய வரவு செலவுத் திட்டம் தயாரிக்கும், அதனை நடைமுறைப்படுத்தும் கட்டமைப்பிலிருந்து விலகி 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகளை முன்வைக்குமாறும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இது தவிர நாடு பூராவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொருளாதார உட்கட்டமைப்பு வளங்கள் மற்றும் கைத்தொழிற்துறை அபிவிருத்தி உள்ளிட்ட சகல செயற் திட்டங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் அடுத்த நிதியாண்டிற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி திறைசேரி அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். இதனடிப்படையில் 2011 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி நிலம் 3 தரப்புக்கு சொந்தம்: அலகாபாத் நீதிமன்று பரபரப்பு தீர்ப்பு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி பகுதியில் அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் நேற்று அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது. அயோத்தி நிலம் மூன்று தரப்பினருக்கு சொந்தம் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய 3 மாதகால அவகாசம் உள்ளது என்றும் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் சர்ச்சைக்குரிய நிலம் 2.5 ஏக்கரை மூன்றாக பிரிக்கப்படும் வரை தற்போதயை நிலை தொடரும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள ராமர் சிலைகள் தற்போதைக்கு அகற்றப்படாது என்று தெரிவித்துள்ளதாக சட்டத்தரணி ரவிசங்கர் தெரிவித்துள்ளார். ராமர் சிலைகள் அமைந்துள்ள பகுதியே இந்துக்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்றில் ஒரு பங்கு நிலம் பாபர் மசூதி கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். மற்றொரு பகுதி நிர்மோகி அகாரா அமைப்புக்கு தர வேண்டும். எஞ்சிய இன்னொரு பகுதி புதிதாக அமைக்கப்படும் அறக்கட்டளைக்கு தரப்பட வேண்டும்.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் மாலை 5 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்.அப்போது அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு யாருக்கும் வெற்றியல்ல தோல்வியுமல்ல என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அயோத்தி வழக்கில் அலகாபாத் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை என்றும், அயோத்தி வழக்கில் அலகாபாத் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போவதாகவும் பாபர் மசூதி கமிட்டி தெரிவித்துள்ளது.

டில்லியிலிருந்து சுமார் 550 கி.மீ. தொலைவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது அயோத்தி நகர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி பகுதியில் அமைந்துள்ள சுமார் இரண்டரை ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையே சிக்கல் நீடித்து வருகிறது.

அயோத்தி விவகாரம் தொடர்பாக அனைத்து வழக்குகளும் இணைக்கப்பட்டு அவற்றை விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்ற சிறப்பு பெஞ்ச் அமைக்கப்பட்டது. 60 ஆண்டுகளாக நீடித்து வரும் வழக்கில் அலகாபாத் மேல் நீதிமன்று லக்னோ பெஞ்ச் தனது விசாரணையை நிறைவு செய்து 24.09.2010 அன்று தீர்ப்பு என்று அறிவித்தது.

அலகாபாத் மேல் நீதிமன்று லக்னோ பெஞ்ச் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்துக்கு வெளியே சமாதானமாக செல்ல முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் திரிபாதி என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வழக்கு தொடர்ந்தார். திரிபாதியின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரிய மனுவை விசாரிப்பதற்காக தீர்ப்பு வெளியிட ஒரு வாரம் தடை விதித்தது.

இந்தத் தடை உத்தரவை 28.09.2010 அன்று விலக்கிக் கொண்டதோடு ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அயோத்தி வழக்கில் 30.09.2010 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்படுமென அலகாபாத் மேல்நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரி ஹரிசங்கர் துபே கூறினார். 30.09.2010 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் நீதிபதிகள் எஸ்.யு.கான், சுதிர் அகர்வால், டி.வி. சர்மா ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் தீர்ப்பை அறிவித்தது.

ஜனாதிபதிக்கு நன்றி…- அனோமா பொன்சேகா

anoma-fonseka.jpgஇலங் கையில் 30 வருடகால தீவிரவாதத்தை முறியடித்த வெற்றி நாயகனுக்கு ஜனாதிபதி கொடுத்த பாரிய பரிசே கடூழிய சிறைதண்டனை எனவும், அதற்கு தான் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அனோமா பொன்சேக்கா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்ட தண்டனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், தீர்ப்பை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதிக்கு நன்றிகூறுவதாகவும் தீர்ப்பை ஏற்றுக் கொண்டதன் மூலம் ஜனாதிபதியின் சுயரூபம் நன்கு தெளிவாகியுள்ளதெனவும் அவர் கூறியுள்ளார்.  இந்த முடிவினால் தாம் தளர்ந்துவிடவில்லை. தொடர்ந்தும் போராடுவோம். இதுதான் ஆரம்பம் இந்த போராட்டத்தில் நாம் பின்வாங்கப்போவதில்லை.  உண்மையான இராணுவ வீரர்களிடம் இந்த தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம் என அனோமா பொன்சேகா தெரிவித்தார்

யாழ். பல்கலைக்கழகத்தை விஸ்தரிக்க இந்திய உதவியை நாடும் அமைச்சர் எஸ். பி.

jaffna-university.jpgயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மொன்றை அமைக்கவும் விவசாய பீடத்தை விஸ்தரிக்கவும் இந்தியாவின் உதவியைப் பெறவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்கா தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜய மொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள அமைச்சர் திஸாநாயக்க, இந்திய மனித வள அபிவிருத்தி அமைச்சர் கபில் சிபிலை நேற்று முன் தினம் (28) சந்தித்தார். அப்போதே மேற்குறித்த விடயம் தொடர்பாக அவர் இந்திய அமைச்சருடன் பேசினார்.

அத்துடன் பிரபல இந்திய பேராசிரியர்களையும் சிரேஷ்ட விரிவுரையாளர்களையும் அவர்களது விடுமுறை நாட்களில் இலங்கை பல்கலைக்கழகங்களில் விரிவுரையாற்றும் வாய்ப்பு பற்றியும் அமைச்சர் திஸாநாயக்க ஆராய்ந்து வருகிறார்.