நூலகம்

நூலகம்

நூல்கள் அறிமுகம், விமர்சனம் மற்றும் நூல் வெளியீட்டு விழாக்கள் பற்றிய பதிவுகளும் செய்திகளும்.

குடும்ப நூலகத் திட்டம் ஒரு அறிமுகம்! : என் செல்வராஜா (நூலகவியலாளர்)

Home_Libraryஅன்புடையீர்புகலிடத்தில் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பின்றி நல்ல பல வாசகர்களும் வாசிப்பில் நாட்டமில்லாது போய்விடுகின்றனர். அதே வேளையில் ஈழத்துத் தமிழ்நூல் வெளியீட்டுத்துறையும் உரமின்றி வாடும் செடிபோன்று ஆதரவின்றி அல்லல்படுகின்றது. இந்நிலையில் எனது கடந்த மாத இலங்கை விஜயத்தின்போது சில தொடர்புகளை மேற்கொண்டிருந்தேன். குமரன் புத்தக இல்லம், மலையக வெளியீட்டகம், ஞானம் வெளியீட்டகம். சேமமடு புத்தகசாலை ஆகிய நிறுவனத்தினர் என்னுடன் தொடர்புகொண்டு தங்களது நூல்களில் 25 நூல்களையாவது புகலிடத்தில் விற்பனைசெய்து தந்தால் தமது வெளியீட்டுத்துறைக்கு அது ஆக்கபூர்வமாக உதவும் என்று கேட்டுக்கொண்டார்கள். புகலிட நாடுகளில் ஒரு நூலுக்கு 25 வாசகர்களைத் தேடுவது கடினமாக இருக்குமா என்று ஒரு கணம் சிந்தித்தேன்.

உள்ளுர் விலையுடன் விமானப்பொதியாக நூல்களை எனக்கு அனுப்பும் செலவையும் சேர்த்தால் சராசரி ஒரு நூல் 5 பவுண் வரையில் தான் வருகின்றது என்று அங்கு கணக்கிட்டோம்.

இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுவதன் நோக்கம் என்னவென்றால், நீங்களும் உங்கள் நண்பர்கள் ஒன்றிரண்டு பேரையும் இணைத்து மாதம் 5 பவுண்களை ஈழத்து நூல்களை வாங்க ஒதுக்குவீர்களாயின் ஒரு வாசகர் வட்டமாகச் சேர்ந்து என்னால் மேற்குறிப்பிட்ட பதிப்பாளர்களுக்கும் வாசகர் வட்டத்திற்குமான இணைப்பாளராகச் செயற்படமுடியும்.  உங்கள் வீட்டு முகவரிக்கு தபால் மூலம் மாதாந்தம் ஒரு நூலை அனுப்பிவைக்க முடியும். அதனை உங்கள் குடும்ப நூலகத்தில் சேர்த்துக்கொள்ளலாம். அல்லது வாசிப்புப் பழக்கத்தை எம்மிடையே வளர்த்தெடுக்க ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதன் மூலம் பல அனுகூலங்கள் ஏற்படும்.
1. எம்மவரின் வீடுகளில் விரும்பியோ விரும்பாமலோ குடும்ப நூலகங்கள் உருவாகும்.
2. இலங்கைத் தமிழ்ப் படைப்புகளுக்கான வாசகர் சந்தை வளரும்
3. எம்மிடையே மறைந்துவரும் புத்தகக் கலாச்சாரம் துளிர்விடும்.
4 லண்டனில் நல்லதொரு புத்தகசாலை இல்லாத குறை நீங்கும்.(தற்காலிகமாகவேனும்)

இவை அனைத்தும் நீங்கள் உங்களது மாத வருவாயிலிருந்து ஒதுக்கும் 5 பவுண் பெறுமதியான பணத்தில் செய்யலாம் என்று நம்புகின்றேன். இது எவ்வித வர்த்தக நோக்கத்துடனும் மேற்கொள்ளப்படும் முயற்சியல்ல என்பதைப் புரிந்துகொள்வீர்கள். ஈழத்துப் படைப்புலகத்துடனும், பதிப்புலகத்துடனும் மிக நெருங்கிய உறவைக் கொண்டவன் என்பதால் ஏற்பட்ட எதிர்காலம் பற்றிய பயம் காரணமாக இருக்கலாம்.

வாசகர் வட்டம் பற்றிய உங்கள் கருத்துக்களுடன் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

அன்புடன் என்.செல்வராஜா
(0044) 01582 703786
selvan@ntlworld.com

இலங்கைத் தமிழர்களின் ஆங்கில நூல்கள் – நூல்தேட்டம் ஆங்கில நூல் தொகுப்புக்கானதொரு அறிமுகம் : என். செல்வராஜா (நூலகவியலாளர்)

Selvarajah Nஇலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் ஆங்கில மூலமான நூல்களை எழுதி வெளியிட்டதில் தமிழருக்கும் முஸ்லீம்களுக்கும் முக்கிய பங்குண்டு. அண்மைக்காலத்தில் கூட பல்வேறு நாடுகளில் ஈழத்தமிழர்களின் ஆங்கில நூல்கள் பல்துறைகளிலும் வெளிவந்த வண்ணமே உள்ளன. இவை எவ்வளவுதூரம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன வென்பதையோ திட்டமிட்டு ஆவணப்படுத்தப்படாமல் ஒதுக்கப்பட்டுள்ளனவென்பதையோ நாம் இன்றுவரை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அதை ஓரளவு உணர்ந்தவர்கள்கூட இது வேறு எவனோ ஒருவனுக்கு வித்pக்கப்பட்ட பணி என்று மூன்றாவது மனிதராகக் கைகட்டிப் பார்வையாளராக இருந்துவிடுகின்றார்கள்.

1970களில் பேராதனை பல்கலைக்கழக நூலகராகவிருந்த எச்.ஏ.ஐ.குணத்திலக்கவின் A Bibliography of Ceylon: a systematic  guide to the literature on the land, people, history and culture published in the Western  languages from the sixteenth century to the present day  என்ற தலைப்பில் ஆங்கில நூல்களுக்கான நூற்பட்டியல் 1970-1983 காலப்பகுதியில் 5 தொகுதிகள் வெளிவந்தது. இதை சுருக்கமாக H.A.I.Goonetileke’s Bibliography of Ceylon என்று அழைக்கிறோம். இதில் இலங்கைவாழ் தமிழர்களின் ஆங்கில நூல்கள் பெரும்பாலானவை பதிவுசெய்யப்படாததை அக்காலகட்டத்தில் நாம் கண்டுகொள்ளவில்லை.

ஈழத்தமிழர்களின் ஆங்கில நூல்கள் பெருஞ்சந்தை வாய்ப்புக்களை நாடாததும் தமக்குள்ளேயே வெளியிட்டு சிறுவட்டங்களுக்குள் அதை விநியோகித்து திருப்திகாண்பதும் அன்றும் இன்றும் எமது மக்களைப் பொறுத்தவரையில் பொதுவானதாகவே உள்ளது. ஏ.ஜே.வில்சன், எச்.டபிள்யு தம்பையா, சிவானந்தன் போன்றோரின் நூல்கள் ஓரளவு சர்வதேசச் சந்தையை எட்டியுள்ளனவாயினும் ஒப்பீட்டு அடிப்படையில் எம்மவர்களின் விநியோகத் திட்டம் வலுவிழந்ததே என்பதை எவரும் மறுக்கமுடியாது.

அண்மையில் 1987இல் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் நகரிலுள்ள Clio Press என்ற நூல் வெளியீட்டாளர்கள் World Bibliographical Series  என்ற ஒரு தொடரை வெளியிட்டார்கள். 77 நாடுகளில் அந்நாட்டவர்களால் ஆங்கிலத்தில் வெளியிடப்பெற்ற சகலதுறையிலான நூல்விபரங்களையும் குறிப்புரையுடன் (நூல்தேட்டம் தொகுப்புகள் போன்று) தொகுத்து ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தொகுதி என்ற வகையில் வெளியிட்டார்கள் 20ஆவது தொகுதி இலங்கைக்குரியது. அதனை விஜய சமரவீர என்பவர் தொகுத்திருந்தார். ((W.H.Smithஇல் இந்நூல் விற்பனைக்குண்டு). 631 ஆங்கில நூல்களை, இலங்கையரால் வெளியிடப்பட்டதாக அவர் அடையாளம் கண்டிருந்தார். இவற்றில் சின்னப்பா அரசரத்தினம், க.குலரத்தினம், சோ.செல்வநாயகம், கைலாசபதி உள்ளிட்ட சில தமிழர்கள் எழுதிய 46 ஆங்கில நூல்களையே இலங்கைக்குரியதாக அவரால் கண்டுகொள்ள முடிந்தது. புத்திஜீவிகளாகவும், முன்தோன்றிய மூத்தகுடிகளாகவும் தம்மை விதந்துரைக்கும் எம்மவரின் பங்களிப்பு வெறும் 46 தானா என்பதைக்கூட நாம் அப்போது சிந்திக்கவில்லை.

இலங்கைத்தீவின் இராணுவ வரலாற்றை முதலில் எழுதியவர் ஒரு தமிழர் என்பதோ (The Military History of Ceylon/ Anton Muttukumaru), கொழும்பு நகரின் தெருக்களின் வரைபடத்தை (A-Z Street  Guide of Greater Colombo, Kandy, Nuwara eliya, Anuradhapura & Polonnaruwa) நூலுருவில் வழங்கியவர் T.சோமசேகரம் என்ற தமிழரென்றோ நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இலங்கையின் சிங்கள குடித்தொகைப் பரம்பலையிட்டு தனது ஆராய்ச்சியை லண்டன் School of Economics  என்ற உயர் பல்கலைக்கழகக் கல்லுரியில் மேற்கொண்டவர் ஆர்.ராஜேந்திரா என்பவர். 1952இல் இவர் மேற்கொண்ட இந்த ஆய்வு இலங்கைப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் விதந்துரைக்கப்பட்டு 1955இல் பெருமையுடன் நூலுருவில் கொண்டுவரப்பட்டது. சிங்களவர்களின் குடித்தொகைப் பரம்பல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆய்வு இதுவென்று குறிப்பிடப்படுகின்றது. இப்படியாக விவசாயத்துறை, பொருளியல்துறை, அரசியல்துறை, உயிரியல்துறை என்று பல்வேறு துறைகளிலும் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் தமிழ் அறிஞர்கள் தமது மேலான பங்களிப்பை வழங்கி வந்துள்ளார்கள். இதுவரை இது உலகில் எங்குமே முழுமையாக ஆவணப்படுத்தப்படவில்லை.

இன்று ஈழத்தமிழர்களின் வாழ்வு திறந்தவெளிச் சிறைகளுக்குள்ளும் தடுப்புமுகாம்களுக்குள்ளும் புலம்பெயர் தேசங்களின் இனக்கலப்புகளுக்குள்ளும் சிக்கிச் சீரழிந்திருக்கும் நிலையில் அவர்களின் தனித்துவம் பற்றிப் பேசப்படுகின்றது. இலங்கையில் அவர்களது கௌரவமான இருப்பிற்கான வழிகள் பற்றிப் பேசப்படுகின்றன. எங்கிருந்தோ வந்த இலங்கைத் தமிழர் தமக்கு ஒரு சுமை என்று இலங்கையின் இனவாத அரசுகள் சிந்தித்து செயற்படும் இன்றைய நிலையில், இலங்கைத் தமிழரின் இருப்பிற்கான உரிமைப்போர் ஒரு சர்வதேச சமூகத்தின் அவதானத்திற்கு உரியதாக மாறிவரும் இவ்வேளையில் இலங்கையில் தமிழ்பேசும் குடியினரின் அந்நாட்டின் கட்டுமானத்திற்கு என்ன செய்தார்கள் என்ற கேள்விக்கு விடைதேடும் பணியொன்றும் எமக்குள்ளது.

அப்பணியை தனிப்பட்டமுறையில் முன்னெடுத்து அண்மையில் ஒரு ஆங்கில நூற்பட்டியல் (Bibliography) ஒன்றினை உருவாக்கியிருக்கிறேன். நான் வாழ்நாள் பணியாக மேற்கொண்டுவரும் நூல்தேட்டம் என்ற தொகுப்பு முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த ஆங்கில நூற்பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். இலங்கைத் தமிழர்களும், தமிழ்பேசும் முஸ்லிம் மக்களும் இதுவரை எழுதி ஆங்கிலத்தில் பிரசுரித்துள்ள 323 நூல்களை பல்வேறு ஐரோப்பிய நூலகங்களிலும், தனியார் சேர்க்கைகளிலும் இருந்து இனம்கண்டு அவற்றை குறிப்புரையுடன் கூடியதாகத் தொகுத்து நூலுருவில் 201 பக்கங்களில் ஐரோப்பிய தமிழ் ஆவணக்காப்பக, ஆய்வகத்தினூடாக வெளியிட்டுள்ளேன்.

இந்த ஆங்கில மொழி நூற்பட்டியலை உலக நாடுகளெங்கும் இயங்கும் சர்வதேச நூலகங்களில் சேர்ப்பிக்க வேண்டிய அவசியம் இன்றுள்ளது. வெறும் வெளியீட்டு விழா நடத்தி ஒரு சிறு நண்பர் குழுவினருடன் சந்திப்பை ஏற்படுத்தி அதன்மூலம் இந்த நூலை அறிமுகம்செய்து விற்பனைசெய்து பணமீட்டும் முயற்சி இதுவல்ல. இக் கட்டுரையின் வாயிலாக ஒரு முக்கியமான ஆவணத்தின் இருப்பினை உங்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறேன். இது எனது முதற்கட்ட நடவடிக்கை.

நூல்தேட்டம் ஆங்கிலப் பதிப்பு ஒரு தனித்தொகுதியாகும். இதன் இரண்டாம் பதிப்பினை தற்போது சேகரித்துவரும் புதியதும், தவறவிடப்பட்டதுமான ஆங்கில நூல்களின் விபரங்களுடன் திருத்திய பதிப்பாக 2012இல் வெளியிடத் தீர்மானித்திருக்கிறேன். இவ்வாறு ஆங்கில நூல்தேட்டம் காலக்கிரமத்தில் முழுமையை நாடியதொரு தொகுப்பு முயற்சியாக அமையும் என்பது எனது நம்பிக்கை.

இந்நூல் தனிப்பட்ட தீவிர ஆய்வாளர்களுக்குப் பயன்பட வேண்டும். அவர்களின் மூலம் ஈழத்தமிழர்களின் பரந்துபட்ட அறிவியல் ஞானம் உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டப்படவேண்டும். இந்த அடுத்த கட்டத்தை முன்நகர்த்திச் செல்லும் பணியை தமிழர் வாழ்வியலுடன் அவர்களின் மேம்பாட்டுடன் தம்மை இணைத்துக்கொண்டுள்ள உங்களையொத்த அனைவரிடமும் ஒப்படைத்திருக்கிறேன்.

நூல்விபரம், விலை, மற்றும் கிடைக்குமிடம் போன்ற தகவல்களை இக்கட்டுரையின் இறுதியில் வழங்கியிருக்கிறேன். இந்நூலின் ஒரு பிரதியையாவது விலைகொடுத்து வாங்கி, அதனை உங்கள் பிரதேச நூலகத்திற்கு உங்கள் அன்பளிப்பாக வழங்க முன்வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இதன்மூலம் ஈழத்தமிழரின் ஒரு ஆவணம் உலகின் முக்கியமான நூலகங்கள் அனைத்திலும் வைப்பிலிடப்படுவதை உறுதிசெய்துகொள்வோம். தயவுசெய்து இதையும் நானே செய்து முடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். உலகின் பிரபல நூலகங்கள் விலைகொடுத்து இந்நூலை எம்மிடத் பெற்றுக்கொள்ளத் துடிக்கும் என்று நம்பியிருப்பது மடைமை. நாம் தான் நூலகங்களை நாடி இந்நூலை எடுத்துச்சென்று வழங்க வேண்டும். அதற்கு நீங்கள் முன்வருவீர்களா மாட்டீர்களா என்ற கேள்விகளுடன் இந்த அறிமுகத்தை நிறைவுசெய்கின்றேன். நன்றி.

நூல் விபரம்:

Title: Noolthettam: An annotated bibliography of Sri Lankan Tamils.
Compiler: N.Selvarajah,  Co-ordinator,
European Tamil Documentation and Research Centre, London.
Publishers: European Tamil Documentation and Research Centre, London.
Pages: 201
Price: £ 15.00

Payment methods: Pay pal transaction: Noolthettam
Cheque: (UK only) payable to ETDRC
Bank: Abbey (Santender), 
Account Name: ETDRC, Sort Code 09-01-27, A/c No. 24459051,
IBAN: GB93ABBY09012724459051

Available at: United Kingdom:  N.Selvarajah, ETDRC, 48 Hallwicks Road, Luton LU2 9BH, United Kingdom.

பிரான்ஸில் வியூகம் வெளியிடப்பட்டது!

Viyoogam_Launch_Parisரொறன்ரோ லண்டன் வியூகம் வெளியீடுகளைத் தொடர்ந்து வீயூகம் வெளியீடு டிசம்பர் 27 அன்று பிரான்ஸில் நடைபெற்றது. அரசியல் ஆர்வலரும் செயற்பாட்டாளருமான அசோக் யோகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வியூகம் ஆசிரியர் குழுவின் சார்பில் ரகுமான் ஜான் கலந்துகொண்டார். சஞ்சிகை பற்றிய அறிமுகத்தையும் விமர்சனத்தையும் வி.ரி இளங்கோவும், லியோதர் பெர்ணான்டோவும் முன் வைத்து உரையாற்றினார்கள்.

Viyoogam_Launch_Parisஇவ் விமர்சன உரையாடல் நிகழ்வில் “ஓசை” மனோ, உதயகுமார், நேசன் சுதாகரன், மகேஸ் உட்பட பலரும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். சஞ்சிகை ஒன்றின் வெளியீடு வெவ்வேறு நாடுகளில் குறித்த காலத்தில் வெளியிடப்படுவது இதுவே முதற்தடவையாகும். மே 18 இயக்கத்தின் இதழாக வெளிவரும் வியூகம் இதழுடன் நூல் வெளியீடுகளையும் அவ்வமைப்பினர் மேற்கொள்ள உள்ளனர்.

வியூகம் தொடர்பான மேலதிக வாசிப்பிற்கு:

‘ஜனநாயகப் பண்போடு நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ ரகுமான் ஜான் – வியூகம் வெளியீடு தொகுப்பு : த ஜெயபாலன்

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்
 
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்

‘ஜனநாயகப் பண்போடு நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ ரகுமான் ஜான் – வியூகம் வெளியீடு தொகுப்பு : த ஜெயபாலன்

Viyoogam_CoverRahuman_Jan‘மாற்றுக் கருத்து ஜனநாயகப் பண்போடு நாம் நடந்து கொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ என பிரித்தானியாவில் நடைபெற்ற மே 18 இயக்கத்தின் கோட்பாட்டு இதழான வியூகம் வெளியிட்டு நிகழ்வில் அச்சஞ்சிகையின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ரகுமான் ஜான் தெரிவித்தார். டிசம்பர் 21ல் லண்டனுக்கு வெளியே நோர்பிற்றன் என்ற இடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மாறுபட்ட அரசியல் கருத்துக்களை உடையவர்களின் சந்திப்பாக இது அமைந்தது. கௌரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யமுனா ராஜேந்திரன், என் சபேசன் ஆகியோர் சஞ்சிகையின் மதிப்பீட்டை மேற்கொண்டனர். சஞ்சிகை மதிப்பீடு அதன் ஏற்புரை ஆகியவற்றைத் தொடர்ந்து கலந்தரையாடல் இடம்பெற்றது. வழமை போன்ற நூலாசிரியரை நோக்கிய கேள்விகளாக அல்லாமல் கலந்துகொண்டவர்களிடையே கருத்துப் பரிமாற்றங்களும் விவாதங்களும் இடம்பெற்றது.

டிசம்பர் 13ல் இச்சஞ்சிகையின் வெளியீடு ரொறன்ரோவில் இடம்பெற்றது. இவ்வார நடுப்பகுதியில் இதன் வெளியீடு பாரிஸில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Yamuna_Rajendiranவியூகம் விரிவான ஆழமான விடயங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் அவற்றை இத்தளத்தில் விரிவாக ஆய்வு செய்ய முடியாது எனத் தெரிவித்த யமுனா ராஜேந்திரன் பொதுவான தனது மதிப்பீட்டை அங்கு வைத்தார். மே 18 இயக்கத்தின் கோட்பாட்டு இதழாக வெளிவந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள இச்சஞ்சிகையில் வெளியாகியுள்ள கட்டுரைகள் அவ்வாறு அமையவில்லை என்றும் இச்சஞ்சிகை கோட்பாடு மற்றும் நடைமுறைசார்ந்த விடயங்களின் கலப்பாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். சஞ்சிகையின் வடிவமைப்பு மற்றும் தோற்றம் அதனை ஒரு சஞ்சிகை என்பதிலும் பார்க்க நூலின் தோற்றத்தினையே வழங்குவதாகவும் யமுனா ராஜேந்திரன் குறிப்பிட்டார். வியூகத்தின் ஆசிரியர் தலையங்கம் அதன் கடந்த காலம் பற்றியும் தீப்பொறி மற்றும் உயிர்ப்பு சஞ்சிகை பற்றியும் பேசுவதைச் சுட்டிக்காட்டிய யமுனா ராஜேந்திரன் சுயவிமர்சனம் செய்வதற்கான தளம் ஈழத் தமிழர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டு உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் பெரும்பாலும் வெவ்வேறு வகைகளில் கடந்த காலப் போராட்டங்களுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டு உள்ளனர் எனத் தெரிவித்த யமுனா ராஜேந்திரன் அவர்கள் இழப்புகளையும் துயரங்களையும் நேரடியாக அனுபவித்தவர்கள் அவர்கள் உணர்ச்சிபூர்வமாகவே அரசியலைப் பார்க்கின்றனர் எனத் தெரிவித்தார். ஆனால் அரசியல் என்பது உணர்ச்சிபூர்வமானது அல்ல என்றும் அது அறிவுபூர்வமாக கையாளப்பட வேண்டும் என்பதையும் அவர் தனது மதிப்பீட்டில் சுட்டிக்காட்டினார்.

ஒரு கோட்பாட்டு இதழானது அவ்வியக்கத்தின் கோட்பாட்டு அரசியலை வெளிப்படையாக வைக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய யமுனா ராஜேந்திரன் வியூகத்தில் வெளிவந்துள்ள அத்தனை கட்டுரைகளுமே புனைப்பெயர்களில் வெளிவந்துள்ளதாகவும் வியூகம் சஞ்சிகையிலும் தொடர்புகளுக்கான எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை எனவும் யமுனா ராஜேந்திரன் சுட்டிக்காட்டினார்.

20 வருடங்களுக்குப் பின்னர் தோழர் என்றழைக்கக் கூடிய நிலை உருவாகியுள்ளதாகக் கூறி தன் மதிப்பீட்டை ஆரம்பித்த என் சபேசன் இதனை ஆரோக்கியமான சூழல் ஒன்று உருவாகி உள்ளதாகக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் என்பது தேசிய அரசியல் என்பதைக் கடந்து செல்ல முடியாது எனத் தெரிவித்த என் சபேசன் தமிழ் தேசியம் அக முரண்பாடுகள் பலவற்றைக் கொண்டிருந்ததையும் சுட்டிக்காட்டினார். ஆனால் அவற்றுக்காக தமிழ் தேசியத்தை குறைத்து மதிப்பீடு செய்ய முடியாது எனவும் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் இனசமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கத் தவறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Sabesan_Nசமூகத்தில் உள்ள காழ்ப்புகள் முன்னோக்கி நகரவிடாமல் தடுப்பதாகக் கூறிய என் சபேசன் யமுனா ராஜேந்திரனின் மதிப்பீட்டில் பெரும்பாலும் உடன்படுவதாகத் தெரிவித்தார். குறிப்பாக கட்டுரைகளில் ஊகங்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். புனைபெயர்களில் எழுதுவதில் யமுனா ராஜேந்திரனுடன் முரண்பட்ட என் சபேசன் புனைபெயரில் எழுதுவதற்கான பாதுகாப்பு போன்ற காரணங்களும் தேவையும் இன்னமும் இருப்பதாகத் தெரிவித்தார். வியூகம் அடுத்த கட்டத்திற்கு தன்னை நகர்த்தும் என்ற நம்பிக்கையை வெளியிட்டு தனது மதிப்பீட்டை முடித்துக் கொண்டார்.

மே 18 இயக்கம் சார்பாகவும் வியூகம் ஆசிரியர் குழு சார்பாகவும் கருத்து வெளியிட்ட ரகுமான் ஜான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வி என்பது எதிர்பார்க்கப்பட்டாலும் அது நடந்து முடிந்த விதமும் முற்றாக அழிக்கப்பட்டதும் எதிர்பார்க்காத ஒன்று எனத் தனது கருத்துரையை ஆரம்பித்தார். இந்தப் புள்ளியில் இருந்து மாறுபட்ட கருத்துக்கள் எழுவதைச் சுட்டிக்காட்டிய ரகுமான் ஜான் தேசிய இனப் பிரச்சினை என்ற ஒன்றில்லை என்றால் அதனை வலிந்து போராட வேண்டிய அவசியமில்லை என்றும் ஆனால் அவ்வாறான ஒரு பிரச்சினை இருக்கும் போது ஒடுக்குகின்ற தேசம் வெற்றி கொண்ட படையாகக் கொக்கரிக்கின்ற போது அதற்க எதிராகப் பேசுவது ஒவ்வொரு அரசியல் உணர்வுள்ளவரினதும் தார்மீகக் கடமையென்றே தான் நினைப்பதாகத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் இவ்வாறான விவாதங்கள் பல்வேறு தளங்களிலும் இடம்பெறுவதாகக் கூறிய அவர் அவ்வாறான விவாதங்களிற்கான தொடக்கப் புள்ளியாகவும் அவ்வாறான விவாதங்களை ஒருங்கிணைக்கும் நோக்கிலுமே மே 18 இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். இது ‘முடிவல்ல புதிய தொடகம்’ என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வி என்பது தமிழ் மக்களின் போராட்டத்தின் தோல்வியாக தற்காலிகமாக அமைந்தாலும் அவர்களைக் காப்பாற்றி இருக்க முடியாது எனக் குறிப்பிட்ட ரகுமான் ஜான் தமிழீழ விடுதலைப் புலிகள் பிழையான தலைமையைக் கொண்டிருந்தது மட்டுமல்ல சரியான தலைமைகள் உருவாக முடியாமல் அவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்தனர் எனவும் குற்றம்சாட்டினார். போலியான ஒரு தலைமையைக் காப்பாற்றி இருக்க முடியாது எனத் தெரிவித்த ரகுமான் ஜான் தமிழீழ விடுதலைப் புலிகளால் விடுவிக்கபட்டிருந்த பிரதேசங்களில் மக்கள் எவ்வளவு சுதந்திரமாக இருந்தார்கள் என்பதும் அவர்கள் தாங்கள் விடுதலை அடைந்ததாக உணர்ந்தார்களா என்பதுமே முக்கியமான கேள்வி என்றும் சுட்டிக்காட்டினார்.  

சரி பிழையென்பது இருவழிகள் இவற்றில் எது சரி என்பதை வரலாறே தீர்மானிக்கும் எனச் சுட்டிக்காட்டிய ரகுமான் ஜான் இதில் நான் சரியாக இருக்கலாம் சிலவேளை நீங்கள் சரியாக இருக்கலாம் அதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது எனத் தெரிவித்தார். மாற்றுக் கருத்து ஜனநாயகப் பண்போடு நாம் நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும் என்பதையும் அவர் விளக்கினார். ஆனால் அப்படியல்லாமல் வெறும் காழ்ப்புணர்வுடன் வெறிகொண்ட மிருகங்கள் போல் குத்திக் குதறுகின்றோம் என்றும் கொம்பியூட்டர்களில் இருந்து இரத்த ஆறு ஓடாதது தான் ஒரு குறையாக இருப்பதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். எல்லாவற்றையும் அரசியல் என்கிறார்கள் எனச் சுட்டிக்காட்டிய ரகுமான் ஜான் மார்க்சியம் புரட்சி ஏகாதிபத்தியம் திரிபுவாதம் இவற்றை நீக்கிப் போட்டப் பார்த்தால் வெறும் சேறும் சகதியுமே எஞ்சியிருக்கும் எனத் தெரிவித்தார். நபர்கள் சம்பவங்கள் என்பதைத் தாண்டி சமூக உறவுகளாக அரசியல் போக்குகளாகப் புரிந்தகொள்ள முடியவில்லை என்றால் இது என்ன அரசியல் என்றும் கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து சஞ்சிகையின் மதிப்பீடு தொடர்பான தனது கருத்துக்களை வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற்றுது. இதில் பெரும்பாலும் தேசியவாதம் தொடர்பான விவாதமே கூடுதலாக நடைபெற்றது.

தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வு என்பது தமிழ் தேசிய விடுதலையூடாகவே அமையும் என்று மார்க்சிய அடிப்படையில் கூறிக்கொண்டாலும் அது இனரீதியான தோற்றப்பாட்டையே காட்டுவதாக ராகவன் சுட்டிக்காட்டினார். அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பாண்டியன் தமிழ் மக்களுடைய பிரச்சினையை மார்க்சிய ரீதியில் அணுகுவதாகக் கூறிக்கொள்பவர்கள் வர்க்கப் போராட்டத்தின் மூலம் தீர்வுகாணலாம் என்று தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறையை மறைக்க முயல்வதாகக் குற்றம்சாட்டினார்.

கலந்தரையாடலில் கருத்து வெளியிட்ட என் சபேசன் முஸ்லிம்கள் தனியான தேசம் என்பதைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் இலங்கையில் சிங்களம் தமிழ் என்ற இருதேசங்களே உள்ளதாகவும் கருத்து வெளியிட்டார். அப்போது குறுக்கிட்ட ராகவன் அவ்வாறே சிங்களத் தலைமைகள் தமிழர்கள் ஒரு தனியான இனம் இல்லை எனக் கருதுவதாகத் தெரிவித்தார். என் சபேசனின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட மாசில் பாலன் தேசிய இனங்களை வரையறுப்பது என்பது ஸ்ராலினின் வரையறைகளைக் கடந்து வரவேண்டும் என்றும் ஒரு குறிப்பிட்ட சமூகம் தன்னைத் தனித்துவமான இனமாக உணருமானல் அவர்கள் தனித்துவமான இனமாகக் கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள பழங்குடிகள் இன்று அவ்வாறே உணருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சபா நாவலனும் இதே கருத்தை வெளிப்படுத்தினார்.

தமிழ் தேசியம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் தளமாக இருந்துள்ளது எனத் தெரிவித்த த ஜெயபாலன் அது புலித் தேசியமாக ஆக்கப்பட்டு அதிலேயே புலிகள் ஊன்றி நின்றனர் என்றும் புலிகளின் தோல்வி என்பது அவர்களுடைய தோல்வி மட்டுமல்ல அவர்கள் ஊன்றி நின்ற தமிழ் தேசியத்தினதும் தோல்வியாகவே அமையும் என்றார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் அதன் அடிப்படையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வில் தமிழ் தேசியம் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றார்.

காலத்திற்குக் காலம் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கியவர்கள் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாகச் செயற்பட்டதை உதாரணங்களுடன் காட்டிய என் கெங்காதரன் மே 18 இயக்கமும் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக முடிவுகளை எடுக்குமோ என்ற ஐயத்தை வெளிப்படுத்தினார்.

மாற்றுக் கருத்தக்கான விவாதத்திற்கான களத்தை உருவாக்குவதே தமது நோக்கு என்றும் இவ்வாறான நிகழ்வுகள் அதற்கு உதவும் என்றும் தெரிவித்த ரகுமான் ஜான் நடைமுறையில் உள்ள சாதனங்களின் இன்றைய பொருத்தப்பாடு பற்றி கேள்வி எழுப்பியதுடன் உண்மைகளை நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் அதனை ஆராய்வதற்கான புதிய கோட்பாட்டு சாதனங்களை உருவாக்கி அறிமுகப்படுத்தி அதனை விவாதிப்போம்! அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம்! என்றும் கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

(குறிப்பு: இது கூட்டத்தில் இடம்பெற்ற உரைகளின் விவாதங்களின் தொகுப்பு. பெரும்பாலும் கருத்து வெளிப்படுத்தியவர்களது கருத்து மாற்றம் இல்லாமல் பதிவு செய்துள்ளேன். தவறுதலாக கருத்துக்கள் தவறாகப் பதிவு செய்யப்பட்டு இருந்தால் சுட்டிக்காட்டவும்.)

Related Articles:

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்
 
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

Rahuman Janமே 18 இயக்கத்தின் கோட்பாட்டு இதழான ‘வியூகம்’ சஞ்சிகையின் வெளியீடு ரொறன்ரோவில் நேற்று (நவம்பர் 12ல்) இடம்பெற்றது. (மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்) பல்வேறு அரசியல் தளங்களில் இருந்தும் வந்திருந்த 100 பேர் வரை கலந்துகொண்ட இந்நிகழ்வில் விவாதக் களத்திற்கான ஒரு தளத்தை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது’ என்றும் ‘அதன் ஆரம்பமே வியூகம்’ என்றும் ரகுமான் யான் தெரிவித்தார். (தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்) இந்நிகழ்வில் தேவானந்தன், கௌசலா ஆகியோர் வியூகம் பற்றிய மதிப்பீட்டை மேற்கொண்டனர். நிவேதா பெண்ணியம் தொடர்பாகவும், சேனா தேசியம் தொடர்பாகவும் வியூகம் இதழை மதிப்பீடு செய்தனர். வந்திருந்தவர்கள் வியூகத்தின் வருகையை எதிர்பார்ப்புகளுடன் எதிர்கொண்டனர்.

தீப்பொறி இயக்கத்தின் கோட்பாட்டு இதழாக வெளிவந்த ‘உயிர்ப்பு’ சஞ்சிகைக்குப் பின் ஏற்பட்டு இருந்த அரசியல் செயற்பாடுகளுக்கான வெற்றிடத்தை தங்களது சுயவிமர்சனத்துடன் மே 18 இயக்கமும் அதன் கோட்பாட்டு இதழான வியூகமும் நிரப்ப முற்பட்டுள்ளது. மே 18 இயக்கத்தின் தோற்றமும் வியூகம் சஞ்சிகையின் வெளியீடும் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் அரசியல் ஆர்வலர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.

இளம் தலைமுறையைச் சேர்ந்த நிவேதா இளம்தலைமுறையினருடைய கருத்துக்களை உள்வாங்க வேண்டியதன் அவசியத்தை அங்கு வலியுறுத்தினார். வியூகம் இதழின் வரவை வரவேற்றுப் பேசிய நிவேதா, இந்த நிகழ்வில் கூட தன்னை பேசுவதற்கு அழைத்தவர்கள் தனது கணவரினூடாகவே அதனை அணுகியதாகச் சுட்டிக்காட்டினார். தமிழீழ விடுதலை இயக்கங்களில் பெண்களின் நிலை பற்றியும் குறிப்பிட்ட நிவேதா விடுதலை இயக்கங்களின் மத்திய குழுவில் ஒரு சில பெண்கள் இருப்பதால் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க முடியாது என்றும் தெரிவித்தார். தமிழ் தேசியம் பற்றிப் பேசிய சேனா தேசியம் சம்பந்தமான கேள்விகளை எழுப்புவதற்கான தருணமாக இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் பேசுகையில் போராட்டத்தை மீளாய்வுக்கு உட்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

சபையில் இருந்தவர்களும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். ‘மே 18 ற்குப் பின்னர் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவதற்கான தளம் ஒன்று உருவாகி இருக்கின்றது’ என்ற அடிப்படையில் ஈஸ்வரகுமார் கருத்து வெளியிட்டார். ‘தேசிய விடுதலை இயக்கங்களின் வரலாறுகளில் தவறுகள் நிகழ்ந்துள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் அது நிகழ்ந்துள்ளது. ஆனால் இவற்றுக்குள்ளேயே நின்றுவிடாமல் அதனைக் கடந்து செல்ல வேண்டும்’ என்ற கருத்துப்பட நடராஜா முரளீதரன் கருத்துத் தெரிவித்தார். 

ரொறன்ரோவில் இடம்பெற்ற நிகழ்வைத் தொடர்ந்து லண்டனின் புறநகர்ப் பகுதியில் நவம்பர் 20ல் வியூகம் சஞ்சிகையின் வெளியீடும் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது. லண்டனைத் தொடர்ந்து பாரிஸ் மற்றும் சூரிச் நகர்களிலும் இதன் வெளியீட்டை மேற்கொள்ள ஏற்பாடுகள் நடைபெறுகின்றது.

Related Articles:

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்

நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்

(குறிப்பு: கனடா நிகழ்வு பற்றிய குறிப்பு அந்நிகழவில் கலந்து கொண்ட ஒருவரின் தகவலில் இருந்து பெறப்பட்டது. மேலதிக விபரங்களை நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தயவு செய்து பதிவு செய்யவும்.)

லண்டனில் வியூகம் வெளியீடு:

December 20, 2009 Sunday

4:00pm to 9:00pm

Shiraz Mirza Hall
76a Coombe Road
Norbiton
KT2 7AZ

லண்டனில் வியூகம் வெளியீடும் கலந்துரையாடலும் அரசியல் ஆர்லர்களிடையேயான கருத்துப் பரிமாற்றத்திற்கான நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதால். பல்வேறு அரசியல் பின்னணிகளில் இருந்தும் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் தற்போதைய அரசியல் சூழல் அதுதொடர்பான விவாதங்களும் இடம்பெறவுள்ளது.

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

Viyoogamமே 18 இயக்கத்தின் கோட்பாட்டு அரசியல் இதழான வியூகம் சஞ்சிகையின் வெளியீடு ரொறன்ரோ, லண்டன், பாரிஸ், சூரிச் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. புலம்பெயர் சூழலில் மிக நீண்ட இடைவெளியின் பின் வெளிவரவுள்ள அரசியல் சஞ்சிகையான வியூகம் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் தங்களை இணைத்துக்கொண்ட முற்போக்கு சக்திகளின் வெளிப்பாடாக வெளிவருகின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டம் திசைமாறிச் சென்றபொழுதும் அதற்கு எதிராக எதிர்நீச்சல் போட்டு தங்களது அரசியல் கொள்கையுடன் உறுதியுடன் நின்றவர்கள் தற்பொழுது வியூகம் அமைக்க முன்வந்துள்ளனர்.

”மே 18 இயக்கம், ஒரு அரசியல் முன்னணி அமைப்பு’ எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கின்றது. ”முன்னேறிய பிரிவினர் மத்தியில் காணப்படும் கோட்பாட்டு, அரசியல், அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனை முகம் கொடுப்பதை இலக்காக கொண்டு இந்த அமைப்பானது தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும்” என மே 18 இயக்கம் தெரிவிக்கின்றது. ”வியூகம் இதழானது இந்த அமைப்பின் உத்தியோகபூர்வமான கோட்பாட்டு, அரசியல் இதழாக செயற்படும்” எனத் தெரிவிக்கும் வியூகம் அமைப்பினர், ”அந்த வகையில் எமது தேசத்தினதும், ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரதும் விடுதலையை மையமாக கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த முக்கியமான பணியில் இணைந்து கொள்ளுமாறு எமது தேசத்தினதும், ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரதும் விடுதலையில் அக்கறையுள்ள அத்தனை முன்னேறிய பிரிவினரையும் வியூகம் திறந்த மனதோடு வரவேற்கிறது” என அழைப்பு விடுத்துள்ளனர்.

அரசியல் கோட்பாட்டு இதழ் என்ற வகையில் வியூகம் சஞ்சிகைக்கு முன் வெளியான உயிர்ப்பு சஞ்சிகை குறிப்பிடத்தக்கது. அதுபற்றி வியூகம் ஆசிரியர் தலைப்பு, ”1997 இல் தீப்பொறி அமைப்பும், அதன் கோட்பாட்டு சஞ்சிகையான உயிர்ப்பு-உம் முன்னேறிய பிரிவினர் மத்தியில் செல்வாக்கு மிக்கவையாக திகழ்ந்தன. பத்து வருடத்திற்கும் மேலாக தலைமறைவாக செயற்பட்டு, பல தோழர்களது உயிர்கள் உட்பட பல இழப்புக்களின் ஊடாகத்தான் இந்த குழுவானது இந்த நிலையை அடைந்தது. கணிசமான காலம், உழைப்பு மற்றும் ஏனைய வளங்கள் என்பவற்றை செலவிட்டே தனது கோட்பாட்டு, அரசியல், அமைப்புத்துறை சார்ந்த படிப்பிணைகளைப் பெற்றுக் கொண்டது. புலிகளது நேரடித் தாக்குதல் உட்பட தலைமறைவின் பலவேறு கஷ்டங்களையும் தாங்கி முன்னேறிய ஒரு அமைப்பானது, பகிரங்கமாக செயற்படத் தொடங்கியதும் உள் முரண்பாடுகளினால் சிதைந்து போவது என்பது மிகவும் துரதிஷ்டவசமானது” எனத் தெரிவிக்கின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வேறுபட்ட அமைப்புகளில் செயற்பட்டவர்கள் போராட்டத்தின் போக்கு வழி தவறியபோது அவற்றிலிருந்து விடுபட்டு போராட்டத்தை மீண்டும் சரியான திசைவழி செலுத்த முயன்றனர். அதில் சில உயிரிழப்புகளும் இடம்பெற்றது. அந்தக் கடுமையான சூழ்நிலை மாற்றத்தை எதிர்பார்த்து இருந்தவர்கள் தற்போது வியூகம் அமைப்பதற்கான சரியான தருனமாக இதைக் கருதுகின்றனர்.

அதற்கு முன்னதாக தங்களது சுயவிமர்சனத்திற்கான நேரமாகவும் இதனைக் கருதுகின்றனர். வியூகம் ஆசிரியர் தலையங்கத்தில் அவர்களது கடந்த காலம் பற்றிய சுயவிமர்சனம் வருமாறு ஆரம்பிக்கின்றது. ”இப்போது எமது சுயவிமர்சனத்திற்கான நேரம் வருகிறது. நாம் முன்னேறிய பிரிவினரின் ஒரு பகுதியினர் என்ற வகையில் கடந்த காலத்தில், போராட்டத்தில் நேர்ந்த தவறுகளில் எமது பாத்திரம் என்ன என்ற கேள்விக்கு பதில் கண்டாக வேண்டியுள்ளது. கடந்த காலத்தில் பல்வேறு குழுக்களிலும், தனிநபர்களாகவும் செயற்பட்ட பல்வேறு நபர்களும் எம்முடன் இணைந்து கொண்டிருந்தாலும், அரசியல் அமைப்பு என்ற வகையில் தொடர்ச்சியாக இயங்கி வந்தவர்கள் என்ற வகையில் தமிழீழ மக்கள் கட்சி இலிருந்து வந்தவர்கள் முக்கிய கூறாக அமைகிறார்கள். மாற்று அமைப்பைக் கட்ட முனைந்தவர்கள் என்ற வகையில் எமது அனுபவங்கள், படிப்பினைகள் இப்போது முக்கியத்துவம் பெறுகிறது. அத்தோடு எமது சுயவிமர்சனமும் ஏனைய முன்னேறிய பிரிவினர் மத்தியில் கட்டாயமாக வேண்டப்படும் ஒன்றாக இருக்கிறது. தீப்பொறி குழுவாக எமது தனியான அரசியலை முன்னெடுத்த நாம், பல வருட தலைமறைவு வாழ்க்கையின் பின்னால் 1998 எமது கொங்கிரசை கூட்டி தமிழீழ மக்கள் கட்சி எனும் பெயரில் பகிரங்க அமைப்பாக செயற்பட முனைந்தோம். கொங்கிரசை கூட்டி தீர்மானங்களை எடுத்து அவற்றை செயற்படுத்த தொடங்கும் போது அமைப்பினுள் நடைபெற்ற பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அமைப்பானது 2000 ம் ஆண்டில் கலைந்து போனது. இப்படியாக நேர்ந்ததில் பல்வேறு தனிப்பட்ட, மற்றும் புறநிலை சார்ந்த அம்சங்கள் தாக்கம் நிகழ்த்தியது உண்மையே என்றபோதிலும், அமைப்பின் அரசியல் மற்றும் அமைப்புத்துறை சார்ந்த விடயங்களில் நடைபெற்ற தவறுகள் தீர்க்கமானவையாக அமைந்தன” என்று வியூகம் தனது சுயவிமர்சனத்தை ஆரம்பித்தது.

பல்வேறு அரசியல் பின்னணிகளில் இருந்தவர்களையும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டுவரும் நோக்கில் முன்னைய தொடர்ச்சியாக இல்லாமல் புத்வேகத்துடன் ஆரம்பிப்பதற்காக மே 18 இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மே 18 2009 ஒரு மிக முக்கியமான திருப்புமுனை. அதிலிருந்து முகிழ்த்துள்ளது மே 18 இயக்கம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்து அனைவரையும் அழித்தொழித்து தங்களையே ஏகபிரதிநிதிகளாக அறிவித்த தமிழீழ விடுதலைப் புலிகள் மே 18 2009 உடன் பெரும்பாலும் அழித்தொழிக்கப்பட்டனர். அழித்தொழிக்கப்பட்டது தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களது தவறான அரசியலுமே அன்றி தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளோ அல்லது அவர்களது உரிமைப் போராட்டமோ அல்ல என்பதை அறிவிக்கின்ற வகையில் வியூகம் தனது முதலாவது அரசியல் கோட்பாட்டு இதழை வடிவமைத்துள்ளது.

அதேசமயம் வெறுமனே புலி எதிர்ப்பு அரசியலை வியூகம் மேற்கொள்ளவில்லை. அதன் ஆசிரியர் தலையங்கம் தாங்கள் உட்பட போராட்டத்தின் பல்வேறுபட்ட சக்திகளையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றது. வியூகத்தின் ஆசிரியர் தலையங்கத்தின் ஒரு பகுதி ”….. ஆகவே பிரச்சனை இங்கு புலிகளது நடவடிக்கைகளில் மாத்திரமல்ல. மாறாக புலிகளுக்கு மாற்றாக அமைப்புக்களை கட்ட முனைந்தவர்களது பேரிலும் இருக்கிறது. எமது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய சித்தாந்தங்களான வர்க்கவாதம், சாதியம், ஆணாதிக்கம், பிரதேசவாதம், முஸ்லிம் – சிங்கள மக்கள் மீதான தப்பெண்ணங்கள் போன்ற எவற்றுக்குமே சவால் விடும் வேலைகள் எமது தரப்பில் தீவிரமாக முன்னெடுக்கப்படாதபோது, இந்த ஆதிக்க சித்தாந்தங்கள் எமது போராட்டத்தில் அதிகம் செல்வாக்கு செலுத்தியது. அதன் விளைவுகள் தான் இந்தத் தோல்விகளில் வெளிப்பட்டதாகும்.”

200 வரையான பக்கங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இவ்விதழில்
தேசியவாதம் குறித்த சில கருத்துக்கள்….. : தேசபக்தன்
சூறையாடப்படும் தமிழீழ வளங்கள் : அருந்ததி
எட்டினமோ இலக்குகளை : தாமிரா
விடுதலைப் போராட்டமும் புலிகளும் : ஏகலைவன்
ஆகிய அரசியல் ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்தள்ளது.

இச்சஞ்சிகையின் முதலாவது வெளியீட்டு நிகழ்வு கனடாவில் டிசம்பர் 13 மாலை 3:30 மணிக்கு நடைபெற ஏற்பாடாகி உள்ளது. நூல் மதிப்பீடும் கலந்துரையாடலும் இங்கு நடைபெறும்.
Sunday – Dec 13 2009, 3:30pm
Mid Scarborough Community Center
2467 Eglinton Ave East
(Nearest Subway: Kennedy Subway)

லண்டன், பரிஸ், சூரிச் நிகழ்வுகளின் விபரம் விரைவில் அறியத்தரப்படும்.

நோர்வேயில் ‘தீராத மயக்கத்திலே’ நூல் வெளியீடு

ஈழத்து கலைத்துறையில் மூன்று தசாப்தங்களாக அறியப்பெற்ற கார்மேகம் நந்தாவின் மெல்லிசைப் பாடல்களின் தொகுதியான தீராத மயக்கத்திலே என்ற நூலின் வெளியீடும் அவரது தேர்ந்த மெல்லிசைப் பாடல்களின் தொகுப்பான குறுந்தட்டு வெளியீடும் நோர்வேயில், ஒஸ்லோ நகரில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை செப்டெம்பர் 5ம் திகதி இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் லண்டனிலிருந்து நூலகவியலாளர் என்.செல்வராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கவிருக்கிறார்.
 
1973இல் இலங்கை வானொலியில் இணைந்த கார்மேகம் நந்தா, 1987இல்  புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழ்ந்து வருகின்றார். இவர் 1977 முதல் 2008 வரை எழுதிய பாடல்களில் தேர்ந்த 170 பாடல்களை தீராத மயக்கத்திலே என்ற நூல் கொண்டுள்ளது.

முருகையன் “புத்திஜீவிக் கவிஞன்’ மறைவு தமிழ் இலக்கியத்திற்கு பேரிழப்பு – பேராசிரியர் சிவத்தம்பி

Kvingar Murugaiyan Photo - Thamayanthyகவிஞர் முருகையனின் மறைவு ஈழத்து தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமல்லாது தமிழ் இலக்கியம் முழுவதற்குமே பேரிழப்பாகுமென பேராசிரியர் கா.சிவத்தம்பி தெரிவித்துள்ளார். முருகையனின் மறைவு குறித்து அவர் வெளியிட்ட அஞ்சலியில்;

கவிஞர் முருகையன் காலமாகிவிட்டார் என்ற செய்தி எனக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைலாசபதியுடன் யாழ்.இந்துக் கல்லூரியில் சக மாணவனாக இருந்த முருகையன் பின்னர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் போது சிவஞானசுந்தரம் ஆகியோரது நட்பு மூலமாக நன்கு பிணைப்புற்றிருந்தோம்.

கல்விப் பிரசுரத் திணைக்களத்தில் பதிப்பாளர் பதவி வெற்றிடமானதும் அவர் கொழும்புக்கு வந்து முதன் முதலில் எழுதிய கவிதை நாடகம், முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் இடம்பெற்ற, “குற்றம் குற்றமே’ எனும் கவிதை நாடகமாகும். கல்வி மொழித் திணைக்களத்தில் அவர் பதிப்பாசிரியராக செய்த பணிகள் பலப்பல. அக்காலத்தில் பலருக்கும் தெரியாதிருந்த இரகசியம், முருகையனும் நானும் மகாகவியுடன் கொண்டிருந்த உறவாகும்.

நாம் முருகையனை மாத்திரமே விதந்து பேசுகின்றோம். மகாகவியைப் பற்றி எதுவும் பேசுவதில்லையென்ற ஒரு குற்றச் சாட்டிருந்தது. ஆனால், அக்காலத்தில் நாங்கள் இடம்வகித்த இலங்கைத் தமிழ் நாடக நடனக் குழுவில் மகாகவியின் நூல்களுக்கே ஒரு தடவை முதல் பரிசு கிடைத்தது.

முருகையன் தனது மனதிற்குள் பல விடயங்களை வைத்துக் கொள்வார். அவற்றை எடுத்துக் கூறும் பண்பே அலாதியானது. முருகையனை intelectualist Poet என்றே நான் எல்லாக் காலத்திலும் போற்றுவதுண்டு. உண்மையில் முருகையனின் மறைவு ஈழத்து தமிழ் இலக்கியத்திற்கு மாத்திரமல்லாமல் தமிழ் இலக்கியம் முழுவதற்குமே பாரிய இழப்பாகும்.

முருகையன் போன்றவர்களுடைய முழுக் கவிதைத் தொகுதியும் ஒன்றாகச் சேர்த்து பதிக்கப்பட வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை யார் செய்வார்களென்ற எதிர்பார்ப்புடன் நட்பு நினைவுகளிலிருந்து விடைபெற முடியாதவானாய் நிற்கின்றேன்’ எனவும் தெரிவித்துள்ளார்.

கவிஞர் முருகையன் காலமானார்

Kvingar Murugaiyan Photo - Thamayanthyதிறனாய்வாளரும் கவிஞருமான இ. முருகையன் 27 June 2009 காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 75 ஆகும். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக்கொண்ட, கொழும்பில் வசித்துவந்த இவர் திடீரென காலமானார். இறுதிக் கிரியைகள் இன்று காலை 8.30 அளவில் கொழும்பு ஜயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று, 3 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் இவரது பூதவுடல் தகனம் செய்யப்படும்.

ஆதிபகவன், அது அவர்கள், நாங்கள் மனிதர், மாடும் கயிறறுக்கும் உட்பட பல்வேறு நூல்களை எழுதியுள்ள இவர், சிறந்த திறனாய்வு ஆய்வாளராகவும் திகழ்ந்தார்.

வெறியாட்டு, கடூழியம், மேற்பூச்சு, இரு துயரங்கள் போன்ற பா. நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார். பேராசிரியர் கைலாசபதி, மகாகவி உருத்திரமூர்த்தி ஆகியோருடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணி பல்வேறு ஆக்கங்களை மேற்கொண்டுள்ளார்.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவராகப் பணியாற்றிய இவர், கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் பதிப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். யாழ். பல்கலைக்கழக உதவிப் பதிவாளராக இருந்த இவருக்கு பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்கிக் கெளரவித்திருந்தது.

(படம் – தமயந்தி)

தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் இயற்கை எய்தினார்

ira1thiru.JPGபுதுவைத் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் 03.06.2009 விடியற்காலை 1 மணிக்குப் புதுச்சேரியில் உள்ள தம் இல்லத்தில் இயற்கை எய்தினார் இன்று(03.06.2009.) மாலை 4 மணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்படும். புதுவைத் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் பற்றிய சில குறிப்புகள்

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கணப் புலவர்களில் முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர் ஆவார். இயற்றமிழும் இசைத்தமிழும் வல்ல அறிஞர் இவர். இவர் குழல் இசைப்பதில் தனித்திறம் பெற்றவர்.அதுபோல் வாய்ப்பாட்டிலும் தேர்ந்தவர். புதுச்சேரி அரசுப் பள்ளியில் பல காலம் ஆசிரியராக இருந்து தமிழ்ப்பணியாற்றியவர்.

புதுச்சேரி மாநிலத்தில் கூனிச்சம்பட்டு என்னும் ஊரில் 16.03.1929 இல் பிறந்தார்.இவர்தம் பெற்றோர் பெயர் அ.அரசு,இரா.அரங்கநாயகி. திருமுருகனாரின் இயற்பெயர் இரா.சுப்பிரமணியன் என்பதாகும்.தனித்தமிழ் ஆர்வம் ஏற்பட்ட பிறகு தம் பெயரைத் திருமுருகன் என மாற்றிக்கொண்டவர்.

இவர் பண்டிதம்(1951),கருநாடக இசை-குழல் மேனிலை(1958), பிரஞ்சு மொழிப்பட்டயம் (1973),கலைமுதுவர்,கல்வியியல் முதுவர்,மொழியியல் சான்றிதழ்(1983),முனைவர்(1990) உள்ளிட்ட பல பட்டங்கள் சான்றுகளைப் பெற்றவர்.44 ஆண்டுகள் அரசுப்பணியாற்றிய பின்னர் ஓய்வுக்குப் பின் தமிழ் வளர்ச்சி சிறகத்தின் தனி அலுவலர் பணிபுரிந்து புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சிக்கு வேண்டிய ஆக்கப்பணிகளில் ஈடுப்பட்டவர்.

தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக்குழு என்னும் அமைப்பின் சிறப்புத் தலைவராகவும், புதுவைத் தமிழன்பர்கள் தமிழ்ப்பணி அறக்கட்டளையின் நிறுவுநராகவும், தெளிதமிழ் என்னும் திங்கள் ஏட்டின் சிறப்பு ஆசிரியராகவும், தமிழ்க்காவல் என்னும் இணைய இதழின் ஆசிரியராகவும் பணிபுரிபவர்.

சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறைப் பாடத்திட்டக் குழுவில் உறுப்பினராகவும்,புதுவை அரசின் ஆட்சிமொழிச் சட்ட நடைமுறை ஆய்வுக்குழு உறுப்பினராகவும் விளங்குபவர். பல்வேறு பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைப் பொழிவுகள் செய்த பெருமைக்கு உரியவர்.தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்குப் பழந்தமிழ்ப் பனுவல்களை ஒலி வட்டாக்கிய குழுவில் முதன்மையிடம் பெற்றவர்.

இன்றைய தமிழுக்குப் புதிய இலக்கணம் உருவாக்குவதிலும்,இசைத்தமிழ் யாப்பிலக்கணம் உருவாக்குவதிலும்,தமிழ்நலம் கெடும் இடங்களிலில் தலையிட்டுக் கிளர்ச்சி செய்வதிலும் ஈடுபட்டு வருபவர்.

தமிழ்ப்பணிகளின் பொருட்டு இவர் பிரான்சு, செருமனி, உரோமை, மலேசியா, சிங்கப்பூர்,இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்த பெருமைக்கு உரியவர்.என் தமிழியக்கம் என்னும் பெயரில் ஐயா உருவாக்கியுள்ள நூல்களில் இவர்தம் நாற்பதாண்டுக் கால பணிகள் பதிவாகியிள்ளன. சிந்துப்பாடல்களின் யாப்பிலக்கணம் தொடர்பிலான இவர்தம் முனைவர் பட்ட ஆய்வேடு முதன்மையானது. சிந்துப்பாவியில் என்னும் இவர்தம் நூலும் சிந்து இசை பற்றிய இலக்கணத்தை அரிதின் எடுத்துரைக்கும் நூலாகும்.இவர்தம் தமிழ்ப்பணிகள் கண்டு பல நிறுவனங்கள் இவரைப் பாராட்டியுள்ளன.

இலக்கணச்சுடர்,இயலிசைச்செம்மல்,முத்தமிழ்ச்சான்றோர்,நல்லாசிரியர்(நடுவணரசு),மொழிப்போர் மறவர், சிந்திசைச்செம்மல், பாவலர் அரிமா, தமிழ்க்காவலர், கலைச்செல்வம்,பாவேந்தர் பைந்தமிழ்க்காவலர் உள்ளிட்ட பட்டங்ஙகளும் விருதுகளும் குறிப்பிடத்தகுந்தன.

முனைவர் இரா.திருமுருகனாரின் தமிழ்க்கொடைகளுள் குறிப்பிடத்தகுந்தன:

01.நூறு சொல்வதெழுதல்கள்,1957
02.இனிக்கும் இலக்கணம்,1981
03.கம்பன் பாடிய வண்ணங்கள்,1987
04.இலக்கண எண்ணங்கள்,1990
05.பாவேந்தர் வழி பாரதி வழியா?,1990
06.சிந்து இலக்கியம்,1991
07.சிந்துப்பாடல்களின் யாப்பிலக்கணம்,1993
08.சிந்துப்பாவியல்,1994
09.மொழிப்பார்வைகள்,1995
10.பாவலர் பண்ணை,1997
11.மொழிப்புலங்கள்,1999
12.இனிய தமிழைப் பிழையின்றி எழுத எளிய வழிகள்,2001

மொழி வளர்ச்சி

13.என் தமிழ் இயக்கம்-1, 1990
14.என் தமிழ் இயக்கம்-2, 1992
15.தாய்க்கொலை,1992
16.என் தமிழ் இயக்கம்-3, 1994
17.என் தமிழ் இயக்கம்-4, 1996
18.என் தமிழ் இயக்கம்-5, 1998
19.எருமைத் தமிழர்கள்,1998
20.இன்றைய தமிழர்கள் மொழிப்பற்று உள்ளவர்களா?,1999
21.கழிசடைகள்,2002
22.என் தமிழ் இயக்கம்-6, 2005
23.என் தமிழ் இயக்கம்–7,2006
24.இலக்கிய எண்ணங்கள்,1998
25.புகார் முத்தம்,1991
26.கற்பு வழிபாடு,1994

பாடல்

27.ஓட்டைப் புல்லாங்குழல்,1990
28.கம்பனுக்குப் பாட்டோலை,1990
29.பன்னீர்மழை,1991
30.அருளையா? பொருளையா?,1999

இசை

31.பாவேந்தரின் இசைத்தமிழ்,1990
32.இசுலாம் வளர்த்த இசைத்தமிழ்,1996
33.ஏழிசை எண்ணங்கள்,1998
34.சிலப்பதிகாரம்-தமிழன் படைத்த கலைக்கருவூலம்,2000

வரலாறு

35.புதுச்சேரி பாண்டிச்சேரியுடன் போராடுகிறது,1994
36.பாவாணர் கண்ட இன்றைய தமிழின் இலக்கணங்கள்,2003

தகவல் ; முனைவர் மு.இளங்கோவன்