மலையகம்

மலையகம்

“நீண்ட கால முயற்சிகளின் பின் 15 இலட்சம் மலையக தமிழர்களின் பிரச்சினைகள் பற்றிய தெளிவு சர்வதேசத்துக்கு ஏற்பட்டுள்ளது.” – மனோ கணேசன்

“நீண்ட கால முயற்சிகளின் பின்னணியில் 15 இலட்சம் மலையக தமிழர்களின் பிரச்சினைகள் பற்றிய தெளிவு சர்வதேசத்துக்கு ஏற்பட்டுள்ளது.” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாட்டுத் தூதுவர்களுடனும், அந்தந்த நாடுகளில் இருந்து இலங்கை வந்துபோகும் ஐ.நா., உலக வங்கி உட்பட பன்னாட்டு நிறுவன மற்றும் அரச பிரதிநிதிகளுடனும் தமிழ் முற்போக்கு கூட்டணி தொடர்ச்சியாக நடத்தி வரும் கலந்துரையாடல்கள் மற்றும் அவர்களுக்கு எம்மால் வழங்கப்பட்டுள்ள எழுத்து மூலமான ஆவணங்கள் காரணமாக இலங்கை இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பான போதிய தெளிவு தற்போது சர்வதேச சமூகத்துக்கு ஏற்பட்டு வருகின்றது. இன்னமும் பல நாட்டு தூதுவர்களுடனும், பன்னாட்டு நிறுவனங்களுடனும் நாம் எதிர்வரும் வாரங்களில் பேசவுள்ளோம்.

மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா, தென் மாகாணங்களில் வாழும் சுமார் 15 இலட்சம் மலையக தமிழர்களின் தேசிய அரசியல் அபிலாஷைகள் மற்றும் அவர்கள் மத்தியிலான பெருந்தோட்ட பிரிவினரின் மிகவும் பின்தங்கிய வாழ்வாதார நிலைமைகள் தொடர்பான எமது தொடர்ச்சியான வலியுறுத்தல்கள் இன்று பலனளிக்க ஆரம்பித்துள்ளன. இது மகிழ்ச்சியை தரும் ஒரு வளர்ச்சி மைல்கல்லாகும்.

நம்மை ஆளும், ஆண்ட அரசாங்கங்கள் எம்மை மாற்றாந்தாய் பிள்ளைகளாக நடத்தும்போது, நாம் அயலவரை நாடி எமது நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ள முயல்வது மிகவும் இயல்பானதாகும்.

இதில் தவறில்லை. இருந்தால், அரசாங்கத்திடமே தவறு இருக்கிறது. இதுபற்றிய தெளிவு என்னிடம் நிறையவே இருக்கிறது. ஆகவே, எந்த இனவாதிகளும் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.

எந்தவொரு முயற்சியும் ஒரே இரவில் பலன் தரப்போவதில்லை. படிப்படியான இடைவிடாத முயற்சிகளின் பின்னரே பலன் கிடைக்கும் என்பது எமக்கு நன்கு தெரியும்.

எம்மை நோக்கிய இந்த சர்வதேச கவனத்தை எமது மக்களுக்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளாக மாற்ற, நாம் நன்கு திட்டமிட்டுள்ளோம். அதன் விபரங்களை அடுத்துவரும் நாட்களில் நாடு அறிந்துகொள்ளும் என கூட்டணி தலைவர் என்ற முறையில் இப்போதே கூறிவைக்கிறேன்.

நாம் சர்வதேச அரசுமுறை பிரதிநிதிகள், தூதுவர்கள் ஆகியோருடனும், யூ.எஸ்.எய்ட், உலக வங்கி உட்பட்ட இலங்கையின் அபிவிருத்தி பங்காளி நிறுவனங்களுடனும் பேசுகிறோம்.

‘இலங்கைக்கு நீங்கள் தரும் நன்கொடைகள், உதவிகள், கடன்கள் இலங்கையில் மிகவும்  பின்தங்கிய எமது மக்கள் பிரிவினருக்கும் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்’ என நாம் வலிந்து வலியுறுத்துகிறோம்.

இன்று அரசு முன்னெடுக்கவுள்ள ‘அஸ்வெசும ஆறுதல்’ என்ற நாளாந்த பிரிவினருக்கான கொடுப்பனவுகள் தொடர்பிலும் நாம் எடுத்த முன்நகர் நடவடிக்கை இன்று உலக வங்கியினதும், அரசாங்கத்தினதும், சர்வதேச சமூகத்தினதும் கவனத்தை பெற்றுள்ளது.

‘அஸ்வெசும ஆறுதல்’ திட்டம் தொடர்பாக உலக வங்கியுடனான எமது அடுத்தகட்ட காத்திரமான பேச்சுகள் அடுத்துவரும் சில நாட்களில் நடைபெறும்.

நாம் அரசில் அங்கம் வகிக்கும் போதும் கணிசமாக பணி செய்தோம். இன்று அரசில் அங்கம் வகிக்கவில்லை என்பதற்காக நாம் அங்கம் வகிக்கும் எமது அரசு மீண்டும் உருவாகும் வரை சும்மாவே இருக்கவும் மாட்டோம்.

எதிரணியில் இருந்தபடி பணி செய்கிறோம். எமது இந்த கொள்கையை கவனத்தில் எடுக்க நமது மக்களையும், சமூக முன்னணியாளர்களையும் கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் வேண்டுகிறேன் என்றார்.

தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட கோதுமை மாவில் பூச்சிகள், வண்டுகள் மற்றும் எலிகளின் கழிவுகள் – தொழிலாளிகள் போராட்டத்தில்!

நுவரெலியா நானுஓயா எடின்பரோ தோட்டத்தைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை முதல் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகத்தால் அண்மையில் வழங்கப்பட்ட கோதுமை மாவில் பூச்சிகள், வண்டுகள் மற்றும் எலிகளின் கழிவுகள் காணப்பட்டதாகவும் அதே கோதுமை மாவினை மீண்டும் வழங்குவதற்காக மேலும் 300 கிலோ கோதுமை மாவை தேயிலை தொழிற்சாலையில் களஞ்சியப்படுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கும் தோட்ட தொழிலாளர்கள் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு தொடர்ச்சியாக தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் வழங்காமல் கொழுந்து பறிப்பதில் மாத்திரம் தொழிலார்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் சுகாதார வசதி மற்றும் ஏனைய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என இம்மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடாமல் தோட்ட நிர்வாகம் தொழிலாளர் நலன்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என இம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்னையா சுப்பிரமணியன்: காணாமல் ஆக்கப்பட்ட மலையகக் குரல்! – காணொலி

மணியன் மாஸ்ரர் என்றழைக்கப்படும் பொன்னையா சுப்பிரமணியன் மலையகத்திலிருந்து வடமாகாணத்துக்குப் புலம்பெயர்ந்து வன்னியில் மலையகத் தமிழர்களின் குரலாக இருந்தவர். தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையில் மொழிபெயர்பாளராக இருந்த இவர் வன்னி இறுதி யுத்தத்தின் பின் வன்னியில் இருந்த மலையக மக்களின் குரலாகச் செயற்பட்டவர். பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் உட்பட இன மத பேதம் கடந்து பல தரப்பட்ட அரசியல் கட்சிகளோடும் தொடர்பில் இருந்தவர்.

இந்நேர்காணல் மேற்கொள்ளப்பட்ட சில வாரங்களுக்குள்ளாகவே இவர் காணாமல் ஆக்கப்பட்டார். இவர் காணாமல் ஆக்கப்படுவதற்கு முற்பட்ட காலகட்டங்களில் இவர் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரனுடன் மிகுந்த முரண்பாட்டைக் கொண்டிருந்தார். எஸ் சிறிதரன் மலையகத் தமிழர்களை அவமதித்துப் பேசிய ஓடியோ பதிவுகள் வெளிவந்திருந்த காலம். பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரனை அம்பலப்படுத்துவதில் முன்நின்றவர். அதனைத் தொடர்ந்தே அவர் காணாமல் ஆக்கப்பட்டார்.

மிகவும் அறியப்பட்ட, உயர்மட்ட அரசியல் தலைமைகளோடு உறவுகளைக் கொண்டிருந்த போதும் மலையகத் தமிழர்களுக்கு தேயிலைத் தோட்டங்களில் மட்டுமல்ல வன்னி மண்ணில் என்ன நடந்தாலும் கேட்க நாதியில்லை என்ற நிலையே இன்னமும் தொடர்கிறது. 200 ஆண்டுகளுக்குப் பின்னும் மலையகத் தமிழர்களின் வாழ்வியலில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவில்லை.

அவர் காணாமலாக்கப்படுவதற்கு சிறிது காலத்திற்கு முன் ஓகஸ்ட் 21 2016இல் பதிவு செய்யப்பட்ட இந்நேர்காணல் முதற்தடவையாக காணொலியாக வெளியிடப்படுகின்றது.

“நான் ஒரு திறமையானவன். ஏனெனில் எனக்கு ஒன்றும் தெரியாது” – மு நித்தி: ஒரு தேடி!

மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகால துன்பியல் வரலாறு என்பது வெள்ளைக்கார பிரித்தானியர்கள் நாட்டை விட்டுச் சென்று எழுபது ஆண்டுகளுக்குப் பின் இன்னமும் தொடர் கதையாகவே இருக்கின்றது. இன்றும் இந்த மக்கள் அடிமைத்தளைகளில் இருந்து தங்களை விடுவிக்க முடியாதபடி சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புகளால் விலங்கிடப்பட்டுள்ளனர். இலங்கையின் பிரபல்யமான சிறுநீரக மாற்று மருத்துவமனை கண்டியில் உள்ளது. ஏன்? தோட்டங்களில் தேயிலை பிடுங்கியவர்கள் தலைநகரில் தேநீர் கடைகளுக்குள் முடக்கப்படுகின்றனர். ஏன்? இந்த 21ம் நூற்றாண்டிலும் தேயிலை கொழுந்து பிடுங்குவதில் தானே மலையகத்தில் போட்டி நடத்துகின்றனர். ஏன்?

இதற்கு சிங்கள பௌத்த தேசியவாதம் தான் முழுக்காரணம் என்று சொல்லிவிட்டு நாங்கள் யாரும் கைகழுவிட முடியாது. இந்நிலை தொடர்வதற்கு சிங்கள பௌத்த தேசியவாதத்திற்கு முண்டுகொடுத்துக் கொண்டிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பரபம்பரை அரசியலுக்கு முக்கிய பங்கு உண்டு. இலங்கையின் பொருளாதாரத்தின் அடிநாதமாக இருந்த மக்களின் முதுபெலும்பை அவர்களின் வாக்குரிமையைப் பறித்து ஒடித்ததில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பாட்டனார் ஜி ஜி பொன்னம்பலம் முக்கியமானவர்.

தமிழ் சிறுபான்மையினத்தின் அரசியல் அபிலாசைகள் சந்தேகக் கண்ணோடு பார்க்கப்படவும் இலங்கையில் உள்ள ஏனைய சமூகங்களோடு சமூகமான உறவைப் பேணவும் மிகுந்த தடையாக இருப்பது இவ்வாறான துரோகத்தனங்களும் நயவஞ்சகமான சூழ்ச்சிகளுமே. பெரும் நிலச்சுவந்தராக இருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சியில் பலநூறு ஏக்கர் நிலத்தைக் கொண்டிருந்த போதும் தங்கள் பரம்பரையிழைத்த பாவத்திற்கு ஒரு பிரயாச்சித்தம் கூடச் செய்யவில்லை. இன்னும் கிளிநொச்சி உட்பட்ட வன்னிப் பிரதேசத்தில் வாழும் மலையக மக்களுக்கு எந்த அரசியல் பிரதிநிதித்துவமும் தமிழ் அரசியல் கட்சிகளுக்குள் இல்லை. மலையகத் தமிழர்கள் பற்றிய வடக்கில் உள்ள பாரம்பரிய அரசியல் தலைமைகளின் பரிவு என்பது முதலைக் கண்ணீர்.

மலையகத் தமிழர்கள் பற்றிய மலையகத் தமிழ் அரசியல் கட்சிகளின் நிலை இதனிலும் மோசமானது. அவர்கள் அம்மக்களை எப்போதுமே அடிமையாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டுமோ அதனையே இப்போதும் செய்கின்றனர். அவர்களை சுயமற்றவர்களாக தங்கள் வாக்கு வங்கிகளாக மட்டுமே வைத்திருப்பது. அவர்களை எப்போதும் தோட்டங்களோடே கட்டிப்போடுவது. அதன் மூலம் அவர்களை காலத்துக்கும் அடிமையாக்குவது. மலையகத்தை விட்டு வெளியே வன்னிவரை வந்த மலையகத் தமிழர்களின் வாழ்நிலை மலையகத்தில் உள்ள மலையகத் தமிழர்களின் வாழ்நிலையோடு ஒப்பிடுகையில் கணிசமான முன்னேற்றத்தையே கொண்டுள்ளது. அதற்குக் காரணம் அவர்கள் தோட்டங்களில் இருந்து விடுவிக்கப்பட்டதும் தங்கள் கடின உழைப்பினால் அடைந்த முன்னேற்றம்.

ஆகவே மலையகத் தமிழர்களின் இன்றைய நிலைக்கு பிரித்தானிய ஏகாதிபத்தியமும் சிங்கள பௌத்த பேரினவாதமும் தான் காரணம் என்று சொல்லிவிட்டு யாரும் தப்பித்துவிட முடியாது. தமிழ் சமூகமும் தமிழ் அரசியல் வாதிகள் மீது பழி போட்டுவிட்டு தப்பித்துவிட முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமூகமும் இவ்விடயத்தில் தங்களைக் கேள்விக்குட்படுத்த வேண்டும். மலையக அரசியல் கட்சிகள் மலையக அறிவியில் சமூகம் உட்பட.

ஆங்காங்கே சில தீவிர செயற்பாடுகள் சிலரினால் முன்னெடுக்கப்பட்டு அது மலையக மக்களின் வாழ்வியலை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. இலக்கியவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யும் விரல்விட்டு எண்ணக்கூடிய பொறுப்பான இடங்களில் உள்ளவர்கள். அவ்வாறானவர்கள் இலைமறை காயாகவே உள்ளனர். அந்த வகையில் கிளி விவேகானந்த வித்தியாலயமும் அதன் அதிபர் ஜெயா மாணிக்கவாசன் குறிப்பிடப்பட வேண்டியவர். முற்று முழுதாக மலையக தமிழர்கள் குறிப்பாக கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளோடு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இன்று கிளிநொச்சியின் முன்னரங்க பாடசாலையாகவும் அரசின் கல்வித் திட்டங்களை பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தும் பாடசாலையாகவும் இயற்கையோடு ஒன்றிய பாடசாலையாகவும் மாகாண மட்டத்தில் பரீட்சைகளில் சாதனை படைத்த பாடசாலையாகவும் உள்ளது. இவ்விடத்தில் கிளிநொச்சியின் மற்றுமொரு பின் தங்கிய பிரதேசமாக உள்ள சாந்தபுரம் மகாவித்தியாலய அதிபர் பெருமாள் கணேசன் குறிப்பிடப்பட வேண்டியவர். அவர் மலையகத் தமிழர்களின் ஒரு உரத்த குரலாகவும் கிளிநொச்சியில் உள்ளார்.

இன்னல்களை அனுபவித்த, அனுபவிக்கின்ற மலையக மக்களின் இடைவிடாத குரலாக எனக்கு மிகவும் பரீட்சயமானவர் மு நித்தியானந்தன். ஏப்ரல் 01, 2023இல் நித்தியானந்தனின் 75வது பிறந்த தினத்தையொட்டிய பவள விழா லண்டனின் புறநகர்ப் பகுதியான ஸ்ரான்மோரில் (Stanmore) உள்ள பென்ற்லி ஹை ஸ்கூலில் (Bently High School) இடம்பெற்றது. இந்நிகழ்வில் மு நித்தியானந்தனின் மலையக இலக்கியம் சிறுமை கண்டு பொங்குதல், மலையகச் சுடர் மணிகள், பெருநதியின் பேரோசை, ஆடல் எங்கேயோ அங்கு ஆகிய நான்கு நூல்கள் அந்நிகழ்வில் வெளியிடப்பட்டதுடன் ‘நித்தியம்’ என்ற தலைப்பில் மு நித்தியானந்தனின் பவள விழா மலரொன்றும் வெளியிடப்பட்டது.

நான் 1991இல் லண்டனுக்குப் புலம்பெயர்ந்த போது எனக்கு வயது இருபது. இயக்க மோதல்கள், பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான தாக்குதல்கள், படுகொலைகள், அதற்குப் பின் இந்திய இராணுவத்தின் வரவு பின் இந்திய இராணுவத்தின் வெளியேற்றம். இலங்கையிலும் தமிழ் பிரதேசங்களிலும் எங்களுக்கு எதிர்காலம் மட்டுமல்ல வாழ்வதே கேள்விக்குறியாகி இருந்த நிலையில் என்னைப் போன்று பலர், ஆயிரக்கணக்கில் நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்த காலம். வட்டுக்கோட்டையில் இருந்து யாழ் நகருக்கு சைக்கிள் மிதித்துச் சென்றால் யாழ் நகரின் பிரதான சந்திகளில் சுரேஸ் பிரேமச்சந்திரனின் மண்டையன் குழு கழுத்தை வெட்டி முண்டத்தை மட்டும் போட்டுவிட்டுச் சென்றிருப்பார்கள் அல்லது புலிகள் நெற்றியில் பொட்டு வைத்து மின்கம்பத்தில் கட்டிவிட்டிருப்பார்கள். யாருக்கு யார் துரோகி என்ற குழப்பமான காலகட்டம். புளொட், ரெலோ போன்ற அமைப்புகளும் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை கொலைகளினூடாக நிரூபிக்கத்தவறவில்லை. வே பிரபாகரன் அதற்கு முன்னரே கூட இருந்த பலரைப் போட்டுத் தள்ளியருந்தாலும் சுந்தரம் படுகொலை முதலாவது சகோதரப் படுகொலையானது.

இவ்வாறான பின்னணியில் தான் அன்றைய செய்திகள் இருந்தது. அன்றைய காலகட்டங்களில் கொலை, கொள்ளை என்பதெல்லாம் எண்ணிக்கையின் அல்லது மதிப்பீட்டின் அடிப்படையில் தான் முன்பக்கத்திற்கு வரும். எம் என் எம் அனஸின் மொழியில் சொன்னால் அது ‘பிணம் செய்த தேசம்’.

அப்போது, நித்தியானந்தன், வண பிதா சிங்கராயர், குட்டிமணி, தங்கத்துரை, நிர்மலா போன்ற பெயர்களை பத்திரிகைகளில் அறிந்த காலம். அதன் பின் 1983 வெலிகடைப்படுகொலை. அதில் தப்பியவர்கள் மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றப்பட்டது. மட்டக்களப்புச் சிறையை புளொட் வாசுதேவா – ஈஸ்வரன் – அசோக் ஆகியோர் உடைக்கத் திட்டமிட்டதும் உடைத்ததும் மு நித்தியானந்தன் இந்தியாவுக்குச் சென்றதும் நிர்மலா “புலிகள் வந்து கூட்டிக்கொண்டு போனால் தான் சிறைக்கு வெளியே வருவேன்” என்றதும் பத்திரிகைகளிலும் செவிவழியாகவும் அறிந்த தகவல்கள். இவ்வாறுதான் நித்தியானந்தன் எனக்கு அறிமுகமாகி இருந்தார். அவர்களை புலிகளாக கருதியிருந்த காலம். இந்த தகவல்களுக்கு அப்பால் 1991இல் இலங்கையைவிட்டு லண்டனுக்கு புலம்பெயர்ந்த போது எனக்கு இவர்கள் தொடர்பில் வேறேதும் அறிந்திருக்கவில்லை. ஆனால் இவர்கள் மீது ஒரு பிரமிப்பு இருந்தது.

லண்டனுக்கு வந்த எனக்கு தீப்பொறி குழுவினருடன் ஊரிலிருந்தே தொடர்பு இருந்ததால் லண்டனில் நடைபெறுகின்ற இலக்கிய, சமூக, அரசியல் சந்திப்புகளிலும் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். அந்த நட்புவட்டம் வளர்ந்தது, விரிந்தது, ஆழமானது. இவ்வாறு நித்தியானந்தனும் அறிமுகமாகின்றார். என்னிடம் இருந்த பிரமிப்பை நித்தியானந்தன் தன்னுடைய எளிமையான இயல்பான உரையாடலால் தகர்த்துவிட்டார். விரைவிலேயே நித்தி அண்ணையாகிவிட்டார்.

மு நித்தியானந்தனின் உரைகளின்பால் நான் மிகவும் கவரப்பட்டேன். அவருடைய கதை சொல்லும் நளினம், எளிமை மிகவும் கவர்ச்சியானது. கேட்போரின் ஆர்வத்தைத் தூண்டும் அவருடைய ஆளுமை மிகச் சிறப்பானது. கல்வியியல் கோட்பாட்டாளர்களில் ஒருவரான ஸ்கினர் நடத்தையியலாளர் “யாரும் எதையும் கற்கலாம்” என்பவர். சிறு குழந்தைக்கும் விண்வெளிக்கு ரொகட் விடுவதை கற்பிக்க முடியும் என்பவர். மு நித்தியானந்தனின் உரையில் இதனைக் காணலாம். யாருக்கும் எதனையும் தெளிவுபடுத்தும் ஆற்றல் அவருக்கு இருந்தது.

என்னுடைய வாசிப்பு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. இருந்தாலும் நித்தியானந்தனின் உரைகளுக்கூடாக பலநூல்களை வாசித்த அனுபவம் கூட்டத்தின் முடிவில் எனக்கு ஏற்படும். அதில் நித்தியானந்தன் எவ்வித மாயவித்தையையும் மேற்கொள்ளவில்லை. தான் உரையாற்றுவதற்கு முன்னர் அதற்கான ஆய்வுகளில் மூழ்கி தன்னைத் தயார்படுத்தியிருப்பார். தன்னுடைய உரையைக் கேட்போரின் நேரத்தை அவர் மிகவும் மதிப்பவர். அதனால் தான் அதற்கான முன் தயாரிப்போடு புதிய தகவல்களோடும் புதிய பார்வையோடும் அவர் கூட்டத்திற்கு வருவார்.

இவ்வாறான ஒரு பின்னணியில் 1997இல் நானும் ‘தேசம்’ என்ற சஞ்சிகையை ஆரம்பித்தேன். புலம்பெயர் தேசத்தில் குறிப்பாக லண்டனில் நீண்டகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகையாக இணைய ஊடகமாக (தேசம்நெற்) தற்போது காட்சி ஊடகமாகவும் (தேசம்திரை) வந்துகொண்டிருக்கின்றது. 2000ம் ஆண்டு காலகட்டங்களில் லண்டனில் புலிகளுக்கு ஆதரவில்லாத தரப்பினரால் நடத்தப்படும் கூட்டங்கள் என்றால் அது தேசம் நிகழ்த்தும் கூட்டமாகமே இருந்த காலம். தேசத்தின் ஆரம்ப நாட்களில் நித்தியானந்தனின் உணர்வுபூர்வமான ஆதரவு மிகக் காத்திரமானது. தேசத்தின் கூட்டங்களுக்கு தலைமை தாங்குவது, உரை நிகழ்த்துவது, நூலாய்வுகளை மேற்கொள்வது என நித்தியானந்தன் மிகுந்த ஆதரவை வழங்கி வந்தவர். தேசம் ஏற்பாடு செய்த சண்முகதாசனின் நூல் அறிமுகவிழா, மலேசியத் தமிழ் இலக்கியம் – மாநாடு, யாழ் பொதுசன நூலக எரிப்பு நினைவு நிகழ்வு, மற்றும் பல அரசியல் கலந்துரையாடல்களில் மு நித்தியானந்தனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

நான் எனது வாழ்வின் பிந்திய காலத்தில் எனது நாற்பத்து ஒன்பதாவது வயதிலேயே கலைமாணிப் பட்டத்தை முடித்து முதகலை மாணிப் பட்டத்தை முடித்து ஆசிரியரானவன். எனக்கு தேடலையும் ஆர்வத்தையும் தூண்டியதுடன் எனது தேடலுக்கு இரையூட்டியது புலத்தில் இடம்பெற்ற கலை, இலக்கிய, சமூக, பொருளாதார, அரிசியல் கூட்டங்கள் அங்கு நடைபெறும் விவாதங்கள் தர்க்கங்கள். எனது எழுத்தாற்றலையும் கூட நான் புலத்திலேயே வளர்த்துக்கொண்டேன். எனக்கு தமிழில் இருந்த ஆளுமையே அதனை ஆங்கிலத்திற்கும் மாற்றிக்கொள்ள உதவியது. என்னுடைய தேடலின் வளர்ச்சியில் நித்தியானந்தனின் பங்கும் கணிசமனது.

நித்தியானந்தனேடு நெருக்கமான சிலரை கடுமையாக விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டியிருந்ததால் நித்தியானந்தனோடு ஒரு முரண்பாடு ஏற்பட்டது. இருந்த போது 2016இல் “வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால்வரை ” என்ற என்னுடைய நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு காத்திரமான விமர்சன உரையை வழங்கி இருந்தார். அந்நூலில் இஸ்ரேலிய மொசாட் படைகள் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி அளித்ததைக் குறிப்பிட்டு இருந்தேன். அதுபற்றி மற்றுமொரு ஆய்வாளர் கேள்வி எழுப்பிய போது என்னால் உடனடியாக அந்த தகவல் மூலத்தை குறிப்பிட முடியவில்லை. ஆனால் நித்தியானந்தன் எந்தப் புத்தகம் அது யாரால் எழுதப்பட்டது என்பதை அவ்விடத்தில் உடனடியாகவே சுட்டிக்காட்டினார்.

ஒரு மாணவனின் கல்வியியல் ஆளுமையில் அவன் ஆசானின் கல்வியியல் ஆளுமை மிகுந்த தாக்கத்தைச் செலுத்தும். ஒரு பேராசானாக நித்தியானந்தன் தன்னுடைய உரைகளுக்கு மேற்கொள்ளும் தயாரிப்புக்கள் எங்களிலும் துளித்துளியாக தாக்கத்தைச் செலுத்தி உள்ளது. மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கல்வி என்பது ஒரு அனுபவம். அது ஒப்பீட்டளவில் நிரந்தரமான மாற்றத்தை மனிதர்களின் நடத்தையில் பழக்கத்தில் ஏற்படுத்தும். அவ்வாறான மாற்றத்தை நித்தியானந்தன் என்னில் ஏற்படுத்தி இருந்தார். அவருக்கு இந்றைய நாளில் எனது பிறந்த தின வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் எனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

“எனக்குத் தெரியும் நான் ஒரு திறமையானவன் என்று ஏனென்றால் எனக்குத் தொரியும் எனக்கு ஒன்றும் தெரியாது என்று – ‘I know that I am intelligent, because I know that I know nothing” என்று சொன்னவர் தத்துவமேதை சோக்கிரட்டிஸ். அப்படித்தான் நித்தியானந்தனும் அவருக்கு ஒன்றுமே தெரியாது. அதனால் அவர் 75 வயதிலும் இளமையோடு தேடுகின்றார். தேடிக்கொண்டே இருக்கின்றார். தன் அறிவுக் கண்களைத் திறந்து வைத்து எமது அறிவுப் பசியையும் ஆற்றுகின்றார்.

நானும் சில கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருக்கின்றேன். எனக்கு விடை தெரியாத கேள்விகள் சிலவற்றுக்கு விடையை அறிய ஆவலாக இருக்கின்றேன். கேள்விகளில் முட்டாள்தனமான கேள்விகள் இல்லையென நம்ப விரும்புபவன் நான். அதனால் இதனை கேட்டுவிட வேண்டும் என நினைக்கிறேன்.

கேள்வி ஒன்று: எனக்கு தெரிந்தவரை நித்தியானந்தன் ஒரு இடதுசாரி. மனிதத்தை மனித நேயத்தை மதிப்பவர். அப்படியிருக்கையில் இடதுசாரிக் கருத்துக்களில் ஆர்வம்கொண்டவர்கள் எந்த அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்தனர்? வே பிரபாகரனை தலைவராக ஏற்றனர்? இது வே பிரபாகரனின் ஆளுமையா? இடதுசாரிகளின் ஆளுமையின்மையா? கருத்தியல் தோல்வியா?

கேள்வி இரண்டு: இன்றைய பவள விழாவிற்கு 25 ஆண்டுகளுக்கு முன் 50வது பிறந்ததின விழா கொண்டாடப்பட்டிருந்தால், அது இவ்வாறு அமைந்திருக்க வாய்ப்பேயில்லை. இது கருத்தியல் சமரசமா? அல்லது கருத்தியல் அம்னீசியாவா?

மு நித்தியானந்தன் ஒரு சிறந்த ஆய்வாளர் விமர்சகர். அவருடைய பவளவிழாவில் ஒரு கேள்வியை முன் வைக்காமல் நிகழ்வை முடிவுக்கு கொண்டுவருவது பூரணத்துவத்தைத் தராது என்பதற்காக மட்டுமே இக்கேள்விகள்.

 

மலையக மக்களுக்கு நிரந்தர முகவரி வேண்டும் – உயர்நீதிமன்றில் மனு தாக்கல் !

பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரிகளை பதிவு செய்யுமாறு கோரி பெருந்தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பெருந்தோட்ட சமூக குடியிருப்பாளர்களுக்கான நிரந்தர முகவரிகளை வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, மனுதாரரான மாவத்தகம, மூவன்கந்த தோட்டத்தை சேர்ந்த ஜீவரத்தினம் சுரேஸ்குமார் என்பவர் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இலங்கையில் வாழும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், தமது குடியிருப்புகளுக்கு முகவரிகள் இல்லாத காரணத்தால் இந்த நாட்டின் குடிமக்களாகக் கருதப்படாது பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனுதாரர், தமது மனுவில் பிரதிவாதிகளாக. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட பலரை குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவின்படி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான பதிவு செய்யப்பட்ட நிரந்தர குடியிருப்பு முகவரிகள் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இதன் மூலமே அவர்கள் அரச சேவைகளை அணுகலாம் என்றும் நாட்டின் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் வசிக்கும் மூவன்கந்த தோட்டத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இந்த குடும்பங்கள் எவற்றுக்கும் சொந்த முகவரிகள் இல்லை எனவும் மனுதாரர் குறிப்பிடுகிறார்.

நிரந்தர அஞ்சல் முகவரி இல்லாமையால், அந்த தோட்டத்தில் வசிக்கும் குடிமக்கள் தனிப்பட்ட முறையில் கடிதங்கள் மற்றும் அஞ்சல் பொருட்களைப் பெறுவதில்லை. தோட்டத்தில் வசிக்கும் அனைவருக்கும் ‘மூவன்கந்த வத்த, மாவத்தகம’ என்ற முகவரியே தரப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூவன்கந்த துணை அஞ்சல் அலுவலகத்திற்கு மொத்தமாக கடிதங்கள் வந்த பின்னர், அங்குள்ள அதிகாரி, குறித்த கடிதங்களை நம்பத்தகாத முகவர் மூலமாக பெருந்தோட்டத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வழங்குவதையே நடைமுறையாக கொண்டுள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே தாம் உட்பட்ட பெருந்தோட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை பிரதிவாதிகள் மீறியுள்ளனர் என்று அறிவிக்குமாறு மனுதாரர் உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

மலையகம் 200 ஆண்டுகள் – தோட்டத்தொழிலாளர்களின் இரத்தத்தை அட்டைகளை விட மோசமாக உறிஞ்சிய அரசியல்வாதிகள் !

இன்றைய தேதிக்கு இலங்கைக்கு டொலர்களை  கொண்டு வரக்கூடிய மிக முக்கியமான துறைகளாக 03 T காணப்படுகிறது.

Textiles and Garments
Tea Factories
Tourism
இவற்றுள் ஆடை உற்பத்தியும் சுற்றுலாத்துறை சார்ந்த நடவடிக்கைகளும் அண்மை கால இலங்கையில் பெரிய அளவிற்கு வெளிநாட்டு வருவாயை பெற்று தந்தாலும் பிரித்தானியர் இலங்கையை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலப்பகுதி தொடங்கி இலங்கைக்கு பெரிய அளவிலான பொருளாதார லாபத்தை ஈட்டி தரக்கூடிய ஒரு துறையாக தேயிலை உற்பத்தி துறை காணப்படுகின்றது.
No photo description available.
இந்த தேயிலை உற்பத்தியின் முதுகெலும்பு மலையக தோட்டங்களில் கடந்த 2 நூற்றாண்டுகளாக மாடாய் உழைத்துக்கொண்டிருக்கும்  தென்னிந்திய வழ்சாவழி மக்கள்  என்பதை மறுக்கமுடியாது. இவர்கள் இலங்கைக்கு கொத்தடிமைகளாக கொண்டுவரப்பட்டு சுமார் 200 ஆண்டுகளாகியுள்ள நிலையில் அவர்கள் இலங்கையின் பொருளாதாரத்துக்காக ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து பாரிய விழாக்களை முன்னெடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டிருந்த அதே நாளில் என் கண்ணில் இன்னுமொரு படமும் தென்பட்டது. மலையகத் தோட்டத்தொழிலாளியின் மகளான பாடசாலை மாணவி ஒருத்தியின் கிழிந்த சப்பாத்து. இந்த மக்களை அநாதைகளாக்கிய – உழைப்பை சுரண்டிய அரசியல்வாதிகள் ஆடம்பர வாழ்க்கை வாழ – இவர்களுக்காக – இலங்கையின் பொருளாதாரத்துக்காக ஓடாய் தேய்ந்த மக்களின் நிலை இன்று வரை இந்த மாணவியின் கிழிந்த சப்பாத்து போலவே காணப்படுகின்றது. இன்று நாம் காணும் சுற்றுலாத்தளமாக – இலங்கையின் பொருளாதார மையமாக மலையகம் மாறியிருந்தாலும் கூட அந்த பகுதிகளின் காடுகளை வெட்டி – அவற்றை பொருளாதார உற்பத்திக்கான நிலமாக மாற்றி – மனிதர் நடமாட கூடிய பகுதிகளாக மாற்றிய இந்த மலையக தோட்டத்தொழிலுக்காக வந்த மக்கள் இன்று வரை நம்மால் தோட்டக்காட்டான் என விழிக்கப்படும் அவலம் தொடர்கதையாகியுள்ளது.
பிரித்தானியர் கால இலங்கையில் கோப்பிச்செய்கைக்காக தென்னிந்தியாவில் இருந்து குறைந்த ஊதியத்திற்காக வேலை செய்ய மக்கள் கொத்தடிமைகளாக கொண்டு வரப்பட்டனர்.   கோப்பிச்செய்கை வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து அதற்கு மாற்றாக தேயிலை பெருந்தோட்ட பயிராக இலங்கையில் அறிமுகமானது. மிகப்பெரிய அளவில் தேயிலை உற்பத்தி பிரித்தானியருக்கு லாபம் அளித்த நிலையில் அதனை மேற்கொண்டு முன்நகர்த்திச் செல்வதற்காக இன்னும் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். இந்த நிலையில் தேயிலை செய்கையை விருத்தி அடையச் செய்வதற்காகவும் – அங்கு குறைந்த ஊதியத்திற்கோ அல்லது ஊதியம் இல்லாமலோ  வேலை செய்வதற்கான தொழிலாளர்களை தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பிரித்தானிய அரசு  கொத்தடிமைகளாக இலங்கையின் மத்திய மலைநாடு உள்ளிட்ட பகுதிகளில் கொண்டு வந்து குடியமர்த்தியது.
200 வருட மலையக மக்களும் 150 வருட தேயிலையும் – மலையகத் தமிழர் பண்பாட்டு பேரவை
காலனித்துவம் என்பது 19 – 20 ஆம் நூற்றாண்டுகளில் மிகவும் மலிந்து போயிருந்த நிலையில் அடிமைகளாக தேயிலைத் தோட்டங்களுக்குள் கொண்டுவரப்பட்ட தென்னிந்திய மக்கள் குறிப்பாக தென்னிந்திய தமிழர்கள் கவனிப்பாரற்ற நிலையில் காணப்பட்டதுடன்  அவர்களின் உடல் உழைப்ப சுரண்டப்பட்டதுடன் உழைப்புக்கான ஊதியம் வழங்கப்படவில்லை.
அத்துடன் அங்கு வாழ்ந்த மக்களின் அடிப்படை மனித உரிமைகளும் பிரித்தானியரால் எதுவிதமான கவனத்திலும் கொள்ளப்படவில்லை.  இது பிரித்தானியருடைய காலகட்டத்தில் நீண்டு கொண்டே இருந்தது. கொத்தடிமைகளாக கொண்டுவரப்பட்ட மக்கள் அடைக்கப்பட்ட லயங்களில் எந்தவிதமான அடிப்படை சுகாதார வசதிகளும் அற்ற ஒரு நிலத்தில் வாழ நிர்பந்திக்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்களுக்கு கல்வி வசதிகளோ – சுகாதார வசதிகளோ – பொருளாதார உற்பத்தி செயற்பாட்டுக்கான அடிப்படை வசதிகளோ எவையுமே ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை.
காலனித்துவ கால இலங்கையில் மலையக மக்களின் இழிவான நிலை கண்டு கொள்ளாது  விடப்பட்ட போதும் சுதந்திரத்திற்கு பின்னரான கால இலங்கையிலும் கூட மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் கவனிப்பாரற்ற நிலையிலே காணப்படுகின்றனர். இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொடங்கி இன்று வரை ஏதோ ஒரு விதத்தில் அடக்கப்படுபவர்களாகவும் – கண்டுகொள்ளப்படாதவர்களாகவும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களாக உள்ள தமிழர்கள் காணப்படுகின்றனர். சுதந்திரத்திற்கு பின்னரான கால இலங்கையில்  தீர்வு திட்டங்கள் தருவதாக கூறி உருவாக்கப்பட்ட அத்தனை அரசியல் திருத்தங்களின் ஊடாகவும் – சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையில் நடைபெற்ற அத்தனை தமிழ் –  சிங்கள இனக் கலவரங்களின் போதும் பெரும் பாதிப்பை சந்தித்த ஒரு இனமாக மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் காணப்படுகின்றனர். சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையில் மிகப்பெரிய வலிமை உடைய மக்கள் கூட்டத்தினராக காணப்பட்ட மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் திட்டமிட்ட வகையில் அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டனர். இது மிகப்பெரிய ஒரு நீட்சியான கதை.
1931 ஆம் ஆண்டின் உள்ளுராட்சி தேர்தல் திருத்த சட்டம்.
1948 ஆம் ஆண்டின் குடியுரிமை பறிப்பு சட்டம்.
.1949 ஆம் ஆண்டின் இந்திய- பாகிஸ்தானிய குடியுரிமை சட்டம்.
1956 ஆம் ஆண்டின் அரச கரும மொழிகள் சட்டம்.
1958 ஆம் ஆண்டின் பேரின வாத வன்முறை தாக்குதல்கள்.
1964 ஆம் ஆண்டின் சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தம்.
1971 ஆம் ஆண்டின் காணி சீர்திருத்த சட்டம்.
1972 ஆம் ஆண்டின் முதலாம் குடியரசு யாப்பில் சோல்பரி யாப்பின் 29 ஆம் பிரிவை நீக்கிய ஏற்பாடு.
1972 ஆம் ஆண்டின் காணி சீர்திருத்த திருத்த சட்டம்.
1974 ஆம் ஆண்டின் சிறிமா – இந்திரா உடன்படிக்கை.
1978 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பு.
1978 ஆம் ஆண்டு வன்முறை தாக்குதல்கள்.
1979 ஆம்ஆண்டு வன்முறை தாக்குதல்கள்.
1980 ஆம் ஆண்டு வன்முறை தாக்குதல்கள்.
1981 ஆம் ஆண்டு வன்முறை தாக்குதல்கள்.
1983 ஆம்ஆண்டு கறுப்பு ஜீலை இன வன்முறை தாக்குதல்கள்.
1984 ஆம் ஆண்டு இரத்தினபுரி தமிழர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள்.
1986 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் இன வன்முறை தாக்குதல்கள் (தலவாக்கலை)
1994 ஆம் ஆண்டு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் உருவாக்கம்.
என தொடர்ந்து இலங்கையில் நடைபெற்ற அத்தனை மாற்றங்களாலும் பாதிக்கப்பட்ட ஒரு கூட்டத்தினராக மலையகத் தோட்டத் தொழிலாளர்களை குறிப்பிடலாம்.
பழிவாங்கப்பட்ட இலங்கை தோட்டத்தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசினர்
இலங்கையில் கணிசமான அளவிற்கு சிங்களவர்களும் கூட  தோட்டங்கள் உருவான  ஆரம்ப காலங்களில் தோட்டத் தொழிலாளர்களாக காணப்பட்டனர். ஆனால் இன்று சிங்களவர்கள் யாருமே தோட்டத் தொழிலாளர்களாக இல்லை. அவர்கள் அனைவருக்கும் அடுத்தடுத்த ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமும் தங்களுடைய ஆதரவு நிலைப்பாட்டை பொறுத்து மலையகப் பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்த சிங்களவர்களை காணி உரிமையாளர்களாக மாற்றியது. சிங்களவர்களை காணி உரிமையாளர்களாக மாற்றிய இதே அரசாங்கங்கள் மலையகத் தமிழர்களை அரசியல் அனாதைகளாக விட்டுவிட்டனர்.
இந்த அரசாங்கங்களுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை வளர்த்தெடுப்பதாக கூறிக்கொண்ட மலையக கட்சிகள் இன்று வரை அந்த மக்கள் சார்ந்த எந்த முன்னேற்றத்தையும் வழங்கவில்லை. மாறாக அந்தக் கட்சிகளின் ஆட்சி முறை தென்னிந்தியாவில் நடப்பது போல குடும்ப ஆட்சியாக மாறியதுடன் – மலையக அரசியல்வாதிகளின் பிள்ளைகள் வெளிநாடுகளில் ஆடம்பரமான பாடசாலைகளில் படிக்க இவர்களை நம்பி ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கக்கூடிய மலையக மக்களின் பிள்ளைகள் படிப்பதற்கு பாடசாலைகள் இல்லாத தாய்மொழி பாடசாலைகளின் அரவணைப்பில்லாது லயங்களை அண்மித்துள்ள சிங்கள பாடசாலைகளிலும் –  முஸ்லீம்  பாடசாலைகளிலும் கல்வி கற்க ஒதுங்குகின்ற துர்ப்பாக்கிய நிலை பல இடங்களில் இன்று வரை நீடிக்கின்றது.
மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் மட்டுமே வாக்குறுதி அளித்து விட்டு ஏமாற்றும் போக்கே நீடிக்கின்றது.
மலையக மக்கள் மத்தியில் தொடரும் அடிமைமுறைகள்.
அண்மைய தரவுகளின் படி மலையக மக்களிடையே மந்த போசணை அதிகரித்துள்ளதாகவும் – மாணவர்களின் பாடசாலை வருகை வீதம் குறைவடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது எல்லா துறைகளிலும் ஏதோ ஒரு வகையில் மலையக மக்கள் பின்தங்கிய ஒரு வாழ்வியலையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முறையான பாடசாலை வசதிகள் இல்லை – தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் பற்றாக்குறை –  பாடசாலைகள் இருந்தாலும் பாடசாலையில் கற்பித்தல் கருவிகளின் குறைவு – விளையாட்டு மைதானங்கள் இன்மை – சமூக அபிவிருத்தி நிறுவனங்கள் இல்லை – முறையான பாதை வலையமைப்பு வசதிகளில்லை –  முறையான தொலைதொடர்பு வசதிகள் இன்மை – முறையான சுகாதார வசதிகள் இன்மை என இலங்கையின் ஏனைய இடங்களுக்கு சாதாரணமாக கிடைக்கக்கூடிய இந்த சலுகைகள் கூட மலையக தோட்டப்புறங்களில் கிடைப்பது எட்டாக்கனியாகியுள்ளது.
No photo description available.
அண்மையில் சமூக வலைதளங்களில் பெரிதாக ஒரு படம் பேசு பொருளாகியிருந்தது. ஒரு மாணவி கிழிந்த சப்பாத்து  அணிந்திருப்பது தான் அந்த படம். இலங்கையில் இலவச கல்வி என ஒரு பக்கம் இலங்கையின் கல்விமான்கள் மார் தட்டி கொண்டாலும் கூட அந்த இலவசக் கல்வி  கூட மலைகள் சிறுவர்களை சென்றடைவதற்கு பல தடைகள் இன்று வரை காணப்படுகின்றன.  பாதை வசதிகள் முறையாக இல்லாததால் பல கிலோமீட்டர் நடந்தே பாடசாலைக்குச் செல்லும் துர்பாக்கிய நிலை இன்றும் மலையகத்தில் உள்ளன. ஒரு அவசரநிலையில் மருத்துவ சாலைகளுக்கு செல்வது கூட இந்த பாதை வசதிகள் இன்மையால் தடைப்பட்டு விடுகின்றது.
இப்படியான ஒரு நிலையிலேயே அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறிய ஒரு அறிவிப்பு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகிறது. அதாவது மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வருகை தந்து இருநூறு ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில் அதனை ஒரு விழாவாக கொண்டாடும்படி ஜனாதிபதி அறிவித்திருந்தார். இன்று வரை அந்த மக்களின் வாழ்க்கை தரம் இலங்கையின் ஏனைய பகுதி மக்களோடு ஒப்பிடும்போது மிகப் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான உத்தரவை வழங்காது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு விழாவை கொண்டாடும் படி கூறுவதும் – அதனை மலையக அரசியல்வாதிகள் பெருமையான விடயமாக  அதைகாவிச்சென்று மக்கள் மத்தியில் கூறுவதும் – விழா எடுப்பதும் –  அந்த மக்கள் எத்தனை தூரம் ஏமாற்றப்படுகிறார்கள் அல்லது வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதற்கு மிகச் சிறப்பான எடுத்துக்காட்டு.
Jeevan Thondaman steps down - Breaking News | Daily Mirror
கோட்டபாய அரசாங்கம் ஆட்சி அமைத்த போது தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கும் என்ற மிகப்பெரிய ஒரு வாக்குறுதியை வழங்கியிருந்தனர். கோட்டபாய ராஜபச்கவுடன் இணைந்து செயற்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்னும் சில தினங்களில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுக் கொடுக்கப்படும் என உறுதியளித்தே  மக்களிடமிருந்து பாராளுமன்ற தேர்தலின் போது வாக்குகளைப் பெற்றுக் கொண்டனர். புதிய பாராளுமன்றம் பதவியேற்று மூன்று வருடங்கள் ஆகின்ற போதிலும் கூட இன்று வரை அந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு அந்த சம்பளம் கிடைக்கவில்லை. இதே நிலைதான் சுதந்திரம் அடைந்த இலங்கையில் இருந்து இன்று வரை நீடிக்கின்றது.
இலங்கையின் பல துறைகளிலும் வேலை செய்யக்கூடிய எல்லா தொழிலாளர்களுக்கும் நாள் சம்பளம் ஆயிரம் ரூபாய்க்கு அதிகமே. அண்மையில் கூட ஆசிரியர்கள் சம்பளம் அதிகரிப்பு கோரி போராட்டங்களை மேற்கொண்ட போது அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டது. இவ்வாறெல்லாம் இருக்கும்போது மலையகத் தோட்ட தொழிலாளர்கள் கேட்கக்கூடிய ஆயிரம் ரூபாய் சம்பளத்தை கொடுப்பது அரசாங்கத்துக்கு என்ன சிக்கல் இருக்க போகிறது..? இந்த வருட சுதந்திர தினத்திற்காக மட்டுமே 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருட பட்ஜெட்டிலும் சண்டையே நடக்காதுள்ள  இலங்கையில் பாதுகாப்புக்கு என பல மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படுகிறது. இவை அனைத்தும் வீணான செலவுகளே. இவற்றைக் கொண்டு மலையக மக்களின் வாழ்வாதாரத்தை அரசாங்கம் பல்வேறு பட்ட வழிகளிலும் மேம்படுத்த முடியும். ஆனால் அரசாங்கம் செய்யாது.
மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் கொடுப்பதில் இருக்கக்கூடிய – கொடுக்காமல் இருப்பதற்கு பின்னணியில் இருக்கக்கூடிய அரசியலை சற்று ஆழமாக நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.;
இதற்குப் பின்னால் உள்ள அரசியல் மிகப்பெரியது. மலையகத் தோட்டங்களில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் பட்சத்தில் மலையக தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஒரு குடும்பத்தில் இருவர் ( பெரும்பாலும் கணவன் –  மனைவி) தோட்டங்களில் வேலை செய்தால் குறித்த குடும்பத்துக்கு மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கிடைக்கும். அறுபதாயிரம் ரூபாய் சம்பளமாக அவர்களுக்கு மாதாந்தம்  கிடைக்குமாயின் அவர்களும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களைப் போல சாதாரணமான ஒரு வாழ்க்கையை அவர்களால் வாழ முடியும். தங்களுடைய பிள்ளைகளுக்கு நிறைவான கல்வியை அவர்களால் கொடுக்க முடியும். தங்களுக்கான வீட்டு தேவைகளை யாருடைய துணையுமின்றி அவர்களால் என்ன நிறைவேற்றிக் கொள்ள முடியும். பிள்ளைகளை நன்றாக கல்வி கல்வி கற்க வைப்பதன் மூலம் கல்வி கற்ற பரம்பரை ஒன்றை உருவாக்கி – அவர்களை அரச பணிகளில் அமர வைக்க முடியும். கல்வி கற்றவர்கள் மலையகப் பகுதிகளை கைவிட்டு வேறு பகுதிகளுக்கு சென்று தொழில் தேட ஆரம்பிப்பர். கல்வி கற்ற தலைமுறை ஒன்று உருவாக ஆரம்பித்து விட்டால் இயல்பாகவே  அந்த மக்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் தோட்டங்களை விட்டு விலகி விடுவர். அதன்பின் தோட்டங்களில் வேலை செய்வதற்கு இவர்கள் எதிர்பார்ப்பது போல கொத்தடிமைகள் இல்லாது போய்விடுவார்கள். இதனை தடுப்பதற்காகவே இந்த அரசாங்கமும் – அவர்களோடு இணைந்துள்ள மலையக அரசியல் தலைவர்களும் பல தசாப்தங்களாக  மலையக மக்களின் உரிமைகளை தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கும் வரை மட்டுமே இந்த அரசியல்வாதிகளால் அரசியல் செய்ய முடியும். இந்த ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு பிரச்சனையை தீர்த்து வைத்து விட்டால்..? மலையக அரசியல்வாதிகள் எதை வைத்து அரசியல் செய்வது..?
இதுதான் மலையக மக்களுக்கான சம்பளம் அதிகரிப்பு இன்றுவரை தடைப்பட்டு நிற்பதற்கான முக்கியமான காரணம்.
மலையக மக்கள் இன்று வரை எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான தீர்வு என்ன என கேட்டால்..?
மக்கள் அரசியல் மயப்படுத்தப்படுதல் வேண்டும். மக்கள் அரசியல் மயப்படுத்தப்படாத வரை இந்த ஏமாற்று அரசியல் தலைமைகள் அரசியல் என்ற பெயரில் உழைத்துக் கொண்டுதான் இருக்கப் போகிறார்கள். மலையகத்தில் இயங்கி வரக்கூடிய சமூக மட்ட அமைப்புகள் முதலில் மக்களை அரசியல் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாளாந்த உணவுக்கே பெரும் பாடாக இருக்கின்ற நிலையில் நாட்கூலிகள் ஆகவே வாழ்ந்து பழக்கப்பட்ட மக்களை அரசியல் மயப்படுத்துவது மிக கடினமான ஒரு செயலாக இருந்தாலும் இதனை மலையகத்தில் உள்ள புத்திஜீவிகள் செயல்படுத்த முன்வருதல் வேண்டும். இங்கு அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை. இங்கு நாம் உண்ணக்கூடிய உணவில் இருந்து இரவு தூக்கம் வரையான அனைத்து விடயங்களையும் தீர்மானிப்பது இந்த அரசியலே. எனவே மக்கள் அரசியல் மயப்படுத்தப்படுவது இன்றியமையாது ஒன்றாக உள்ளது. மக்கள் அரசியல்மயப்படுத்தப்படும் போதுதான் தம் இரத்தத்தை உறிஞ்சுவது அட்டைகளல்ல- தம்மால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்தலைவர்களே என்பதை புரிந்து கொள்வார்கள். மலையகத்தில் ஒவ்வொரு மழைக்காலங்களிலும் பாதைகள் காணாமல் போய்விடுகின்றன. அதில் பெரிய ஊழல் நடந்து கொண்டிருக்கிறன்றது. வெள்ளளைக்காரன் போட்ட பாதைகள் கூட இன்றுவரை தாக்குப்பிடிக்க மலையகத்தில் சுதந்திரத்துக்கு பின்பு தலைமையேற்றுக்கொண்ட அரசியல்வாதிகள் போட்ட பாதைகள் ஒர பெருமழையுடன் காணாமல் போய்விடுகின்ற நிலை நீடிக்கின்றது. இன்றைய அரசியல்வாதிகளும் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டவர்களே.., ஆனால் அவர்கள் கார் – மாளிகைவீடு – பிள்ளைகளுக்கான வெளிநாட்டுக்கல்வி என வாழ பாவம் சாதாரண மக்கள் தமது பிள்ளைகளுக்கு  இன்றுவரை தேயிலை கொழுந்து பறிக்க பழக்கிக்கொணடிருக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டுமாயின் மக்கள் அரசியல்மயப்படுத்துவது தான் மலையக மக்கள் சார்ந்த முன்னேற்றத்துக்கான முதல் படி,
கல்விகற்ற  பட்டதாரிகள் கணிசமான அளவுக்கு மலையகப் பகுதிகளில் உருவாகி விட்டார்கள். இருந்தாலும் பட்டதாரிகளால் மட்டுமே இயக்கப்படக்கூடிய சில அமைப்புகளே மலையகப் பகுதிகளில் இன்று வரை காணப்படுகின்றன. ஏனைய பட்டதாரிகள் தாம் படித்தோம் –  தாம் கல்வி கற்றோம் –  ஒரு அரச வேலையை பெற்றுக் கொண்டோம் என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டு தங்களுடைய வாழ்க்கையை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் சமூகம் சார்ந்த செயல்பட முன் வருதல் வேண்டும். குறிப்பாக மலையக பகுதி மாணவர்களுக்கான அடிப்படைக் கல்வி தடைப்பட்டு போகின்ற ஒரு சூழல் காணப்படுகின்றது. எனவே இந்தப் பட்டதாரிகள் இணைந்து மாணவர்களுக்கான கல்வி அறிவை குறிப்பாக  வாசிப்பு பழக்கத்தையும் ஊக்குவிக்க வருதல் வேண்டும். மலையக மக்கள் இன்றுவரை எதிர்கொள்ளக்கூடிய முக்கிய பிரச்சினைகளுக்கு காரணம் இந்த பட்டதாரிகள் பலரின் சுயநல மனப்பாங்கு. பெரும்பாலான மலையகமக்கள் லயப்புற வாழ்க்கைக்கே பழக்கப்பட்டவர்கள். ஆனால் பட்டதாரிகள் பலரும் ஏனைய மக்களை காட்டிலும்  அறிவுநிலையில் மேம்பட்டவர்களாகவும் – தோட்டப்புற வாழ்க்கைக்கு வெளியேயுள்ள சமூகத்தை அறிந்து கொண்டவர்களாகவும் காணப்பட்டாலும் கூட பல பட்டதாரிகளின் சுயநல மனப்பாங்கினால் தம்சார்ந்த முன்னேற்றத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு சமூக முன்னேற்றத்தை மறந்துவிடுகின்றனர். கல்வி கற்ற பட்டதாரிகளுக்கு இருக்கக்கூடிய சமூகப்பொறுப்பு தொடர்பில் மலையக பட்டதாரிகள் விழிப்பாக இருக்கவேண்டும். புரட்சியாளர்  சேகுவேரா “கல்வியே புரட்சிக்கான அடிப்படை ” என கூறுகிறார். எனவே அந்த பொறுப்பை பட்டதாரிகள் எடுத்துக்கொள்ள வுண்டியது காலத்தின் கட்டாயம்.
ஆயிரம் ரூபாய் சம்பள பிரச்சனைக்கான  தீர்வுக்கான போராட்டங்களை தொழிற்சங்கங்கள் இதயசுத்தியுடன் முன்னெடுக்க வேண்டும். தொழிற்சங்கங்களும் அரசியல்வாதிகளுடன் இணைந்து மக்களை ஏமாற்றி வருகின்ற செயற்பாடுகளே  பல தசாப்தங்களாக நிகழ்ந்து வருகின்றன. எனவே  தொழிற்சங்கங்கள் தொடர்பிலும் தொழிற்சங்க அங்கத்தவர்கள் தெரிவு தொடர்பிலும்  மலையகத் தோட்ட தொழிலாளர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தமக்கான தலைவர்களை அடையாளம் காணக்கூடிய – உருவாக்ககூடிய ஒரு களமாக தொழிற்சங்கங்களை மலையக மக்கள்பயன்படுத்த வேண்டும்.
அரசாங்கம் மலையகத் தோட்டத் தொழிலாளர்களையும் தேசிய இனமாக கருதி அவர்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை வழங்க முன் வருதல் வேண்டும். மக்களுக்காக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய உண்மையான அரசியல் தலைமைகளை மக்கள் உருவாக்க வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிகளை நம்பி மதி மயங்காது தெளிவான தலைமைகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்ற விழிப்புணர்வை மலையகப் பகுதிகளில் செயற்பட்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மக்களிடையே தொடர்ச்சியாக மேற்கொள்ளுதல் வேண்டும்.  அதுவே முறையான மாற்றத்துக்கான அடிப்படையாகவும் அமையும்.
இவ்வாறாக ஒரு நீண்ட கால செயற்றிட்டங்களின் அடிப்படையில் மட்டுமே மலையகத்தை மீட்டெடுக்க முடியும்.
“ஆளும் வர்க்கம் எப்போதும் மலையக மக்களை அடிமைப்படுத்தப்பட்டவர்களாகவே அடக்குமுறைக்குள் வைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இன்று மலையகத்தில் உருவாகியுள்ள கல்வி கற்ற மக்கள் கூட்டம் – புத்திஜீவிகளை உள்ளடக்கிய குழுக்கள் என அனைவரும் இணைந்து செயல்பட்டு மலையகத்தை முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாத வரை 400 ஆண்டுகள் கடந்தாலும் இந்த நிலை மாறப்போவதில்லை என்பதே நிதர்சனம்.”
“ஏனெனில் அரசியல்வாதிகளும் ஏமாற்றி பழகி விட்டார்கள் – மக்களும் அவர்களின் வார்த்தைகளுக்கு ஏமாற பழகிவிட்டார்கள்.”

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தி – பொருளாதாராதிற்கு முதுகெலும்பாய் பங்காற்றியவர்கள் இன்னமும் உரிமையற்றோராய் !

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்களை கடக்கும் நிலையில் அவர்களுக்கு எந்த ஒரு உரிமையையும் எந்த அரசாங்கமும் கொடுக்கவில்லை எனவும், இதன் விளைவாக நிலம் உரிமை, மொழி உரிமை, கலாசார உரிமை அனைத்தையும் இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து அதற்கு எதிராக இன்று (16) ஹட்டன் நகரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்களின் மாண்பினை பாதுகாக்கும் அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா. சக்திவேலின் தலைமையில் இந்த போராட்டம் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இடம்பெற்றது.

எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு, எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவண்ணம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்கள் இலங்கையில் காலடி வைத்து எதிர்வரும் 2023ம் வருடத்தோடு 200 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இந்த நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமல்ல அபிவிருத்தியிலும், இலங்கையின் பொருளாதாராதிற்கு முதுகெலும்பாய் பங்காற்றியவர்கள் இவர்களின் வாழ்வு நிலை இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

சரியான மலையக அரசியல் தலைவர்கள் இன்மையால் தொடர்ந்து வரும் அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகிறது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் பொது மக்கள், சமூக அமைப்பின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

“ஊவா மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சு பறிக்கப்பட்டமை மலையக மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும்.” – முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன்

“ஊவா மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சு பறிக்கப்பட்டமை மலையக மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும்.” என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று (03.04.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் மத்திய மாகாணத்தில் 522 தமிழ் பாடசாலைகளும் ஊவா மாகாணத்தில் 222 தமிழ் பாடசாலைகளும் உள்ளன. இவ்விரு மாகாணங்களிலும் தமிழ்மொழி மூல கல்வி மேம்பாட்டுக்காக தமிழ்க் கல்வி அமைச்சுகள் உருவாக்கப்பட்டிருந்தன. 1988 இல் தான் மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து மலையக மக்களுக்கானதொரு உரிமையாக இவை கிடைக்கப்பெற்றுவந்தன.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இற்றைக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு இல்லாது செய்யப்பட்டது. தற்போது ஊவா மாகாணத்திலும் தமிழ்க் கல்வி அமைச்சும் பறிக்கப்பட்டுள்ளது. இது பெருந்தோட்ட மக்களுக்கு செய்யப்படும் துரோகம்.

தமிழ்க் கல்வி அமைச்சு இருந்தால் கல்விப்பணிப்பாளர் நியமனம், ஆசிரியர் நியமனம் என பல விடயங்களை செய்யலாம். தமிழ்மொழிமூல கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம். தற்போது அந்த அமைச்சு இல்லாமல் செய்யப்பட்டமையானது கல்வி வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதேவேளை, நாளொன்றுக்கு 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என தோட்ட துரைமார் இன்று வலியுறுத்தி வருகின்றனர். பல நெருக்கடிகளை நிர்வாகம் கொடுத்து வருகின்றது. எனவே, ஆயிரம் ரூபாவை அரசு பெற்றுக்கொடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

“தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு 5 ஆம் திகதி நல்ல முடிவு வரும் என நம்புகின்றோம்.” – ஜீவன் தொண்டமான்

“தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு 5 ஆம் திகதி நல்ல முடிவு வரும் என நம்புகின்றோம்.” என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலையில் அமைந்துள்ள சீல்.எல்.எப் கேட்போர் கூடத்தில் நேற்று (3.4.2021) நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களில் காணப்படும் குறைநிறைகளை கண்டவறிதற்கான கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வு நடைபெற்ற பின்னர் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு மற்றும் கம்பனிகளின் செயற்பாடுகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் ஜீவன் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ 50 ரூபா, 100 ரூபா என கூறிக்கொண்டு கடந்த ஆட்சியின்போது 5 வருடங்கள் கடத்தப்பட்டன. அதற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை. ஆனால் இன்று கம்பனிகளுக்கு எதிராக நாம் நீதிமன்றம்வரை சென்றுள்ளோம்.

இந்நிலையில் தொழிலாளர்களை உசுப்பேத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.அரசாங்கத்திடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது, அப்படி இருக்கையில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றியாவது ஏன் சம்பள உயர்வை வழங்கமுடியாது எனவும் கேட்கின்றனர். எடுத்த எடுப்பிலேயே எல்லாவற்றையும் செய்துவிடமுடியாது. அதற்கென நடைமுறைகள் உள்ளன.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாகத்தான் சம்பள நிர்ணய சபை ஊடாக தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு எதிராக மேன்முறையிடு செய்யும் உரிமையும், நீதிமன்றம் செல்லும் உரிமைகளும் கம்பனிகளுக்கு இருக்கின்றன. ஆனால் 5 ஆம் திகதி நல்ல முடிவு வரும் என நம்புகின்றோம்.

தொழிற்சங்க ரீதியில் தொழிலாளர்களின் பல பிரச்சினைகளுக்கு நாம் தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம். பெற்றுக்கொடுத்தும் வருகின்றோம். மற்றைய தரப்பினரும் தொழிற்சங்கம் நடத்துகின்றனர்.

அவர்கள் விமர்சனங்களை முன்வைப்பதையே பணியாக முன்னெடுக்கின்றனர். நாம் பொறுமையாக இருக்கின்றோம். அதற்கு பயம் காரணம் அல்ல. நீதிமன்ற தீர்ப்புவரும்வரை காத்திருக்கின்றோம்.

சிலவேளை நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிட்டால், அடுத்து என்ன செய்வது என்பதும் தெரியும். பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும். இது தொடர்பில் தொழில் அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.” என்றார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டம் – விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர் கல்வி நிதியத்தினால் புலமைப் பரிசில்கள் வழங்கப்படுவதற்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்தப் புலமைப் பரிசில்கள் க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில் அல்லது தொழில்நுட்பக் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கானவையாகும் என்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தரத்தில் (குறைந்தது 6 திறமைச் சித்திகளுடன்) சித்தியடைந்த அல்லது உயர்தரத்தில் சித்தியடைந்த 25 வயதிற்கு குறைந்தவர்கள் இந்தப் புலமைப் பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதியானவர்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிறப்புச் சான்றிதழ், க.பொ.த சாதாரண தரம் அல்லது உயர் தரப்பரீட்சைப் பெறுபேற்றுத்தாள்கள், பெற்றோர்களது சமீபத்தைய சம்பளத்தாள் விபரம் மற்றும் பெற்றோரது வேலை தொடர்பாக தோட்ட அத்தியட்சகரினது அத்தாட்சி என்பவற்றின் பிரதிகளுடன் இணைந்ததாக அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.

விண்ணப்பப் படிவங்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் www.hcicolombo.gov.in எனும் இணையத்தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். விண்ணப்பப் படிவங்களை இந்திய உயர் ஸ்தானிகராலயம், 36-38 காலி வீதி, கொழும்பு 3 மற்றும் இந்திய பிரதி உயர் ஸ்தானிகராலயம், இல. 31, ரஜபிகில்ல மாவத்தை, கண்டி ஆகிய இடங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் செயலாளர், மே/பா, இந்திய உயர் ஸ்தானிகராலயம், த.பெ எண் 882, கொழும்பு 03 என்ற முகவரிக்கு இம் மாதம் 30 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் கிடைக்கும் வகையில் அனுப்பப்படுதல் வேண்டும் என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.