மலையகம்

மலையகம்

மலையகத்தில் காற்றுடன் கூடிய மழை

rain-1.jpgமலை யகத்தில் கடந்த சில தினங்களாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் இரவு வேளைகளிலும் மழை பெய்து வருவதோடு காற்றும் வீசுவதால் கடும் குளிரும் காணப்படுகின்றது.

கடந்த மூன்று மாதத்துக்கு மேலாக மலையகத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மவுசாகலை, காசல்ரீ, கெனியன், நோட்டன் பிரிட்ஜ், விமல சுரேந்திரா உட்பட விக்டோரியா, பொல்கொல்ல நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

எனினும் இந்த ஆண்டின் ஆடி மாதத்தில் அதிக மழை பெய்து வருவதும் ஆடிக் காற்று பலமாக வீசுவதும் குறிப்பிடத்தக்கது.

தோட்ட தொழிலாளர்களின் நலன்களுக்காக பேரம் பேசக்கூடிய சக்தி எம்மிடமே உள்ளது – அமைச்சர் ஆறுமுகன்

arumugam-thondaman.jpg“இந்திய அரசிடமிருந்து இ.தொ.கா. வினால் பெறப்பட்ட பஸ்களில் ஏழு பஸ்களை, பதுளை மாவட்ட தோட்டத் தொழிலாளர் நன்மை கருதி வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றேன். அடுத்த மாதம் மேலும் 35 பஸ்களை இந்திய அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளவுள்ளேன்’. இவ்வாறு இ.தொ.கா. பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், பதுளை வௌஸ்சை, மேமலை, தெல்பத்தை, கோட்டகொடை ஆகிய பெருந்தோட்டங்களில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார். தொண்டமான் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;

தோட்டத் தொழிலாளர்களுக்கு தினச் சம்பளமாக 500 ரூபா என்றடிப்படையில் சம்பள உயர்வு வழங்கப்படல் வேண்டுமென்ற கோரிக்கையை நான் முன்வைத்தேன். ஆனால், தோட்ட கம்பனி நிர்வாகமோ தினச் சம்பளத்தில் 37 ரூபாவினை மட்டுமே அதிகரிக்க முடியுமென்று உறுதியாகக் கூறினார். இதனையடுத்து, நாம் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறினோம். யார் என்ன கூறியபோதிலும் தொழிலாளர்களினது சம்பள உயர்வினை, எம்மால் மட்டுமே பெற்றுக்கொடுக்க முடியும். அரசுடனோ, தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தினுடனோ, தமிழக மற்றும் இந்திய அரசுடனோ, பேச்சுவார்த்தை நடத்தவோ, பேரம்பேசி விடயங்களை சாதிக்கவோ, இ.தொ.கா. வினால் மட்டுமே முடியும். அதற்கான சக்தியும், பலமும் இ.தொ.கா.விற்கே இருந்து வருகின்றது.

சிங்களக் கட்சிகள் மற்றும் சிங்கள மக்களின் பெரும்பாலானோர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான கட்சியையே ஆதரிக்கின்றனர். அக்கட்சியே அமோகப் பெரும்பான்மை வாக்குகளில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெறும். யதார்த்தத்தை புரிந்துகொண்டு நாமும் செயல்பட வேண்டும்.

எனவே, நாமும் அரசுடன் இணைந்து ஊவா மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிடுகின்றோம். அரசுடன் இணைந்து இருப்பதினால் மட்டுமே சமூக மேம்பாடுகள் கருதிய விடயங்களை சாதிக்க முடியும். அரசிலிருந்து பிரிந்து நின்று எதனையும் சாதிக்க முடியாது. சமூகத்திற்கான பாதுகாப்பும் இவ் அரசுடன் இணைந்து இருப்பதினால் மட்டுமே தங்கியிருக்கின்றது.

எமது சமூகப் பிரதிநிதிகளென்று பலரை இ.தொ.கா.உருவாக்கி, அவர்களுக்கான விலாசத்தினையும் பெற்றுக் கொடுத்தது. பட்டம், பதவிகள் கிடைத்ததும் அவர்கள் பணத்திற்காக விலை போய் இ.தொ.கா.வை காட்டிக் கொடுக்கும் செயலில் துரிதமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கட்டுப்பாடுகளுடனும், ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும். தொழிற்சங்க ரீதியிலும் அரசியல் ரீதியிலும் எமது சமூகம் பலமடைய வேண்டும். பிரதேச சபை, மாகாண சபை, பாராளுமன்றம் என்ற ரீதியில் சமூகப் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவும் வேண்டும். இதனை எமது சமூகம் நன்கு புரிந்துகொள்ளல் வேண்டும்’ என்று அவர் தெரிவித்தார்.

ஆசிய மனித உரிமை ஆணையக உதவியுடன் மலையகத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்

mosquitfora.jpgமலை யகப் பகுதிகளில் டெங்கு ஒழிப்புக்கான விசேட விழிப்புணர்வு வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆசிய மனித உரிமை ஆணையகம் (செடக் நிறுவனம்) ஹட்டன், கொட்டகல, தலவாக்கலை, நுவரெலியா நகரசபைகளின் உதவியோடும் பொலிஸ் நிலையங்களின் ஒத்துழைப்போடும் பிரதான நகரங்களில் வீதி நாடகம் அரங்கேற்றம், கையேட்டுப் பிரதிகள் விநியோகம் போன்ற விழிப்புணர்வுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஆசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் மலையகப் பிரிவு இத்திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் கண்டி, மாத்தளை பகுதிகளிலும் இச்செயற்றிட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் மலையகப் பகுதிக்கான பொறுப்பாளர் ஆ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

3000 இற்கும் மேற்பட்ட பெருந்தோட்டப்புற மக்கள் இதன் மூலம் டெங்கு நோய் தொடர்பான சிறந்த விளக்கங்களைப் பெறுவதோடு டெங்கு நோயிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும்.  மொத்தம் 15000 டெங்கு நோயாளர்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளதுடன் 146 பேரளவில் இறந்துள்ளனர். இவ்வாறு மரணமானோரில் 46 பேர் மத்திய மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

எனவே, பெருந்தோட்டப் பகுதிகளில் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்றிட்டம் மிகவும் அத்தியாவசியமாகிறது என்றும் பொதுமக்கள் டெங்கு நோய் குறித்து மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நடைபெறவுள்ள தேர்தலில் சுய உரிமையை பாதுகாக்கும் வகையில் தமிழ் மக்கள் வாக்கை பயன்படுத்த வேண்டும் – பிரதிக் கல்வியமைச்சர் சச்சிதானந்தன்

election_cast_ballots.jpgநடை பெறவுள்ள ஊவா மாகாண சபைத்தேர்தலில் தமது சுய உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் வாக்கை தமிழ் மக்கள் பயன்படுத்த வேண்டுமென பிரதிக் கல்வியமைச்சர் சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; “நாடு சுதந்திரமடைந்த பின்னர் ஏற்படுத்தப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டத்தால் மலையக மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன.

அதனையடுத்து, “எடு என்றால் எடுக்கவும் போடு என்றால் போடவுமாக’ இருந்த எமது தமிழினத்தின் நிலை மாறி வரலாற்றில் இடம்பெற்ற அகிம்சை வழிப்போராட்டங்களால் அதாவது மலையகத்தின் தந்தை அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் தாக்கங்களால் எமக்கு பிரஜாவுரிமை, வாக்குரிமை என்பன கிடைத்தது.

இதில் தமிழ் மக்கள் குறிப்பாக வாக்கு எனும் பலத்தை சரியான முறையில் பயன்படுத்துகின்றார்களா? என்றால் அது இல்லை. அதன் விளைவாகவே எமது தமிழினத்தின் சுய உரிமைகளை மற்றவரிடம் கேட்டுப்பெறும் அவசியம் ஏற்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டம் சிறுபான்மையினரின் உரிமைகளை சிறுபான்மையினருக்கே உரித்தாக்குவதற்குத்தான் கொண்டுவரப்பட்டது. இன்று அது விரிவாக்கப்பட்டு நாட்டின் எல்லோருக்கும் உரித்துரிமையாகிவிட்டது.

தமிழ் மக்கள் தொடர்பான முடிவுகளையோ தீர்மானங்களையோ எடுக்கும் அதிகாரம் வேறு எவருக்கும் வழங்காமல் அதனை நம்மிடமே வைத்துக்கொள்ள வேண்டும். இன்று முழு உலகமுமே இலங்கைத் தமிழர் நிலை பற்றி அவதானித்துவரும் நிலையில், எமக்கிடையிலான ஒற்றுமையை இலங்கைக்கும் உலகிற்கும் வெளிப்படுத்துவது சமகால தேவையாகும். அதற்காக நாம் வாக்கினை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

ஏனைய இனத்தவர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள் என்றால் அது சாத்தியமற்றது. ஆனால், தமிழ் வாக்காளர்கள் ஏனைய இன வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வதில் ஒருபோதும் பின் நின்றதில்லை. இதுவே உண்மைநிலை.

எனவே, தமிழ் மக்கள் நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும். அதாவது, தமிழர்களின் சுயஉரிமையை பாதுகாக்கும் ஆயுதமாக தமது வாக்கை எமது மக்கள் பயன்படுத்த வேண்டும். நாம் வாக்களிப்பதன் மூலம் எமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய வகையில் தமிழ் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டியதுடன், வழுக்கள் ஏற்படாதவாறு சரியான முறையில் வாக்களிக்க வேண்டியதும் அவசியமாகும்.

இவை அனைத்தும் சுயநல அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து எமது மைந்தர்களே இம்மண்ணை ஆளக்கூடியவாறு ஊவா மாகாணசபைத் தேர்தலில் செயல்பட வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தரக் காணிகள் – அமைச்சர் டி.எம் ஜயரத்ன நடவடிக்கை

முதற் தடவையாக தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் சொந்தமாகக் காணிகள் வழங்கப்படுகின்றன. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம். ஜயரத்னவின் தோட்டக் கிராம ஒருங்கிணைப்புத் திட்டத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்தமாகக் காணிகள் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் தோட்டப் பகுதிகளில் தற்காலிக வசிப்பிடங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏழு பேர்ச் வீதம் காணிகளை வழங்கி அதற்கான நிரந்தர அனுமதிப் பத்திரங்களும்; வழங்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக கண்டி மாவட்டத்தில் கம்பளை தேர்தல் தொகுதியில் இந்தத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊவா மாகாணத்தில் பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் காணிகள் உள்ள பகுதிளுக்கு குடி நீர், மின்சாரம், வீதி அபிவிருத்தி உட்பட அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மஹிந்த சிந்தனைக்கு ஏற்ப தோட்டத் தொழிலாளர்களின் மேம்பாட்டுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகை;கு ஏற்ப இத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் ஜயரத்ன தெரிவித்தார்

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பத்தை அப்புறப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

maussakele-maskeleya.jpgகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பத்தினை தோட்டத்திலிருந்து அப்புறப்படுத்தக் கோரி தலவாக்கலை ஹொலிரூட் ஈஸ்ட் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 400 பேர் கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் பணி நிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த ஒருவரை அதே தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வெட்டிக் கொலை செய்ததைத் தொடர்ந்து தலவாக்கலைப் பொலிஸார் 4 சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

இந்த நிலையில், கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பத்தினை குறிப்பிட்ட தோட்டத்திலிருந்து உடனடியாக அப்புறப்படுத்தி வேறொரு தோட்டத்தில் குடியமர்த்தக் கோரிய ஹொலிரூட் ஈஸ்ட் தோட்டத் தொழிலாளர்கள் பணி நிறுத்தப் போராட்டம் மேற்கொள்கின்றனர். இப்போராட்டம் இதுவரை முடிவுக்கு வரவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பள மீளாய்வு தொடர்பான விபரங்களை பேச்சுகளில் ஈடுபடுவோர் வெளியிட வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பாக இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்களை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்ற தரப்புகள் வெளியிட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் விஜயகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் மேலும் தெரிவித்ததாவது; தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பாக தோட்ட முதலாளிமார் சம்மேளனங்களும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களும் இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் விபரங்கள் குறித்து முறையாக அறிவிக்கவில்லை.

இது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களுக்கிடையில் பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, ஊவா மாகாணசபைத் தேர்தலைக் காரணம் காட்டி சம்பள மீளாய்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் காலதாமதமாக்கப்படுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது.

இவ்வாறானதொரு நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமான இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தோட்டத் தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர் சார்பாக செயற்படுவதற்கு ஐ.தே.க. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தோட்ட தொழிலாளர் சம்பள அதிகரிப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நேற்று கொழும்பில் நடந்தது. முதலாளிமார் சம்மேளன கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சம்பள கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக நேற்று நடை பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் முறுகல் நிலை தோன்றியதையடுத்து முடிவுகள் எடுக்கப்படாமல் கூட்டம் கலைந்தது.

இதையடுத்து இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இ.தொ.கா, இ.தே.தோ.தொ. சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பு என்பன இது தொடர்பாக தத்தமது தொழிற்சங்கங்களோடு கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுப்பது எனவும், ஒரு பொது கூட்டு நடவடிக்கையை மேற்கொள்வது எனவும் தீர்மானித்துள்ளன.

இத்தகவலை இ.தொ.கா. வெளியிட்டுள்ளது.

நேற்றைய பேச்சுவார்த்தையின் போது இன்றைய வாழ்க்கை சுமைக்கு ஏற்ப குறைந்த பட்சம் 500 ரூபா சம்ள உயர்வு தோட்டத் தொழிலாளர்க்கு வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக வலியுறுத்தின. இது தொடர்பான கருத்து பரிமாற்றத்தின் போது முதலாளிமார் சம்மேளனம் வருடத்திற்கு 12%  சம்பள அதிகரிப்பு வழங்க முன்வந்தது. இதனை முழுமையாக நிராகரித்த கூட்டு ஒப்பந்தம் சார்ந்த கைத்தொழிற் சங்கங்கள் மேல் நடவடிக்கைகளுக்காக பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டன.

ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி நிலை பாதிப்பு; பெற்றோர் விசனம்

schoolgirls-sri-lanka.jpgமத்திய மாகாண கம்பளை கல்வி வலய புப்புரெஸ்ஸ க/கலைவாணி தமிழ் வித்தியாலயத்தில் கணிதம், விஞ்ஞானம், தமிழ்மொழி, ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால் தமது பிள்ளைகளின் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர். 576 மாணவர்களைக் கொண்டு இயங்கிவரும் இப்பாடசாலையில் கற்பித்தல் பணிகளுக்கு 32 ஆசிரியர்கள் தேவையான நிலையில் தற்போது 13 ஆசிரியர்களே கடமையாற்றுகின்றனர்.

19 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்களோடு அடங்கலாக கற்பித்து வந்த நிலையில் 5 ஆசிரியர்கள் பயிற்சியின் பொருட்டு ஆசிரியர் கலாசாலைக்கு சென்றுள்ளனர்.

அண்மையில் 11 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் பெற்ற போதும், பாடசாலையில் ஏற்கனவே இருந்த 11 ஆசிரியர்கள் மாற்றலாகிச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில், கணிதம், விஞ்ஞானம், தமிழ்மொழி பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர் இல்லாத நிலை தோன்றியுள்ளதுடன், ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.

பிரதான பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லாமையால் இப்பாடசாலையில் கற்கும் மாணவர்களின் கல்வி நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கு நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.

இருவருட பயிற்சிக்காக சென்றுள்ள ஆசிரியர்கள் தமது பயிற்சியைத் தொடர அனுமதிக்கப்படுவர்

இருவருட உள்ளகப் பயிற்சிக்காக ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்குச் சென்றுள்ள மலையக ஆசிரியர்கள் தொடர்ந்து தமது பயிற்சியை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவரெனவும் இதற்கான உறுதிமொழியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளதாகவும் இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது;

சப்ரகமுவ மாகாணப் பாடசாலைகளில் நியமனம் பெற்று உள்ளகப் பயிற்சிக்காக ஆசிரியர் கல்லூரிக்குச் சென்ற மலையக ஆசிரியர்கள் தொடர்ந்து தங்களது பயிற்சியை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். இதற்கான உறுதிமொழியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளார்.

சப்ரகமுவ மாகாண தோட்டப் பாடசாலைகளில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு சப்ரகமுவ மாகாணசபை இருவருட உள்ளகப் பயிற்சிக்குச் செல்ல அனுமதி வழங்கவில்லை. வழங்கப்பட்ட நியமனத்தில் மோசடிகள் காணப்படுகின்றன. இதனால் இவ்வாசிரியர்களுக்கு மீள் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவில்லையெனவும் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே பயற்சிகளுக்கு செல்லமுடியும் எனவும் மாகாணசபை அறிவித்து வருகின்றது.

இந்நிலையில், ஆசிரியர்கள் பயிற்சிக் கல்லூரிக்கு விண்ணப்பித்த சிலருக்கு இருவருட உள்ளகப் பயிற்சிகளை தொடர சில கல்லூரி நிர்வாகங்கள் அனுமதியளித்துள்ளன. இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்கள் தமது பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர் கல்லூரியில் பயிற்சி பெறுபவர்களும் உடனடியாக தாம் கடமை செய்த பாடசாலைக்குத் திரும்பவேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். சிலருக்கு வலயக்கல்விப் பணிமனையூடாக இது குறித்து அறிவித்து வருகின்றது.

இது தொடர்பாக ஆசிரியர்கள் என்னிடம் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் முறையிட்டனர். உடனடியாக இது குறித்து மகிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி இதற்கான உறுதிமொழியை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.