மலையகம்

மலையகம்

மலையகத்தில் தொடர்ந்தும் கடும் மழை; மவுசாகலை நீர்த்தேக்கம் திறக்கப்படும் நிலை

maussakele-maskeleya.jpgகடந்த சில தினங்களாகத் தொடராகப் பெய்துவரும் மழை காரணமாக மவுசாகலை நீர்த்தேக்கம் எந்தவேளையிலும் நிரம்பி வழியக் கூடிய கட்டத்தை அடைந்திருப்ப தாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கே. டி. ஏக்கநாயக்கா நேற்றுத் தெரிவித்தார்.

இதன் காரணத்தினால் இந்நீர்த்தேக்கத் தின் வான் கதவுகள் எந்த வேளையும் திறந்து விடப்படலாம். அதனால் களனி கங்கைக்கு இரு மருங்கிலும் அமைந்திருக்கும் கித்துல்கல, யட்டியந்தொட்டை, அவிசாவளை, ஹங்வெல்ல போன்ற பிரதேசங்களில் வாழும் மக்கள் பாரிய அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க முடியும் எனவும் அவர் குறிப் பிட்டார்.

இந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் எந்த வேளையிலும் திறந்து விடப்படக் கூடிய நிலைமை இருப்பதால் மேற்படி பிரதேசங்களில் வாழும் மக்கள் முன்னெச் சரிக்கையோடு நடந்துகொள்ளுவது அவசி யம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இரத்தினபுரி மாவட்ட இணைப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் பிரியந்த அபேரெட்ன கூறுகையில் :-களுகங்கையின் நீர் மட்டம் சுமார் இரண்டரை அடிகள் குறைந்துள்ள போதிலும் வெள்ள அபாயம் முழுமையாக நீங்கவில்லை. அயகம, எலபாத்த, இரத்தி னபுரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள தாழ்நி லங்கள் நேற்று இரண்டாவது நாளாகவும் நீரில் மூழ்கி இருந்தன.

வேவல்வத்தையில் இரண்டு சிறியளவு பாராங்கற்கள் நேற்று முன்தினம் மாலையில் உருண்டு விழுந்துள்ள போதிலும் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்றும் கூறினார். அவர் மேலும் கூறுகையில் களுகங்கையின் நீர் மட்டம் நேற்று முன்தினம் 19 அடிகள் 8 அங்குலத்திற்கு உயர்ந்திருந்தது.

அது நேற்று நண்பகலாகும் போது 17 அடிகள் 4 அங்குலம் வரை குறைந்திருந்தது. என்றாலும் இக் கங்கையின் நீர்மட்டம் 15 அடிகளுக்கு மேல் உயருமாயின் வெள்ள அபாயமாகக் கருதப்படுகின்றது.

இதேநேரம் அயகம பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கலத்துர, பகல கலத்துர வீதி சுமார் இருநூறு மீட்டர் நீள த்திற்கு நீரில் மூழ்கியுள்ளது. இந்த வீதியூடாக மூன்றடிகள் உயரத்திற்கு நீர் செல்லுகின்றது- அதனால் இவ்வீதி ஊடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் மண் சரிவு, வெள்ள அபாயம் குறித்து பிரதேசவாசிகளுக்கு அறிவூட்டல்களும் வழங்கப்படுகின்றன என்றார்.

இரத்தினபுரியில் வெள்ளநிலை பிரகடனம்

images.jpgமலையகப் பிரதேசங்களில் தொடராக மழை பெய்து வருகின்ற நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தில் சிறிய வெள்ள நிலைமை ஏற்பட்டிருப்பதாக நேற்று பிரகடனப்படுத்தப்பட்டது.

களுகங்கையின் நீர் மட்டம் 19 அடிகள் வரை உயர்ந்திருப்பதால் இம் மாவட்டத்தில் உள்ள தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அதன் காரணத்தினால் இரத்தினபுரி மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் சிறிய வெள்ள நிலைமையைப் பிரகடனப்படுத்தியதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இரத்தினபுரி மாவட்ட இணைப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் பிரியந்த அபேரட்ன தெரிவித்தார். இதேநேரம், களுகங்கையின் இருமருங்கிலும் வாழும் மக்கள் திடீர் வெள்ளம் குறித்த முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் : இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 9.00 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீச்சு பதிவுப்படி 120 மி. மீ. மழை பெய்திருக்கின்றது. இதனால் இரத்தினபுரி, எலப்பாத்த, குருவிட்ட, கிரியெல்ல, அயகம, கலவான ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்தும் மழை பெய்கிறது. ஆகவே தான் சிறிய வெள்ள நிலமை பிரகடனப்படுத்தப்பட்டு அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார். இதேவேளை, காலி, மற்றும் களுத்துறை மாவட்டங்களின் தாழ் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

“தோட்டப் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை உரியமுறையில் மேற்கொள்ளப்படவில்லை’

aedes_aegypti.jpgமத்திய மாகாணத்திலுள்ள தோட்டப் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் இதுவரை உரியவகையில் மேற்கொள்ளப்படவில்லையென ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் பிரகாஷ் கணேஷன் தெரிவித்துள்ளார். இச் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவித்ததாவது;

டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென சுகாதார தரப்பினர் அறிவித்துள்ளனர். இவ்வாறானதொரு நிலையில் மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள், பொதுசுகாதார தரப்புகள், சிவில் பாதுகாப்புக் குழுக்கள் என்பனவற்றின் ஒத்துழைப்புடன் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் நகரங்கள் மற்றும் கிராமப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும் தோட்டப் பகுதிகளில் இவ்வாறான நடவடிக்கைகள் மிகவும் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன. தோட்டப் பகுதிகளைப் பொறுத்த வரையில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி பொறுப்பு நிறுவனமே பொதுசுகாதார வைத்திய சேவைகளுக்குப் பொறுப்பாக உள்ளது. இவ்வாறானதொரு நிலையில் மத்திய மாகாணத்துக்கு உட்பட்ட தோட்டப்பகுதிகளில் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை இந்த நிறுவனமும் சுகாதர அமைச்சும் உரிய வகையில் முன்னெடுக்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும். ஏற்கனவே பெருந்தோட்டப் பகுதிகளில் அடிப்படை சுகாதாரம் மற்றும் வைத்திய சேவை உரிய வகையில் ஏற்படுத்தப்படவில்லை. எனவே, இவ்விடயம் குறித்து மத்திய மாகாண சபை சுகாதார அமைச்சு, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி பொறுப்பு நிறுவனம் என்பன உரிய கவனம் செலுத்த வேண்டும்.

கடும் மழை; மண் சரிவு அச்சுறுத்தல்; மலையகப் பகுதிகளுக்கு 24 மணி நேர முன்னெச்சரிக்கை

images.jpgமலையகப் பிரதேசங்களில் கடந்த சில தினங்களாகத் தொடராக மழை பெய்து வருவதால் மண்சரிவு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் 24 மணி நேர முன்னெச்சரிக்கையொன்றை நேற்று விடுத்தது. இதன் காரணத்தினால் மலையகத்தின் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் வசிப்பவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அந்நிறுவனம் மக்களைக் கேட்டிருக்கிறது.

இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க இடங்களாக எற்கனவே அடை யாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மண்சரிவு ஆபத்து குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.

நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வுகள் பிரிவுத் தலைவர் ஆர். எம். எஸ். பண்டார மேலும் குறிப்பிடுகையில் :-மலையகப் பிரதேசங்களில் கடந்த சில தினங்களாகத் தொடராக மழை பெய்து வருகின்றது. இதனால் மலையகப் பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இப்பிரதேசங்களில் 100 மி. மீட்டருக்கும் மேல் தொடராக மழை பெய்திருப்பதோடு தொடர்ந்தும் மழை பெய்யும் என்றும் வானிலை அவதான நிலையம் அறிவித்திருக்கின்றது.

ஆகவே இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள எலபாத்த, பெல்மடுல்ல, இரத்தினபுரி, எஹலியகொட, கலவான, கஹவத்தை ஆகிய பிரதேசப் பிரிவுகளிலும் கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை, புளத்ஹோபிட்டிய, தெரணியாகல, ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, பிரதேச செயலகப் பிரிவிலும் கினிக்கத்தேன, நோட்டன் பிரிஜ், கெனியன், லக்ஷபான, மஸ்கெலிய பிரதேசங்களிலும், களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, புளத்சிங்கள, மதுகம, அகலவத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பல இடங்கள் உள்ளன.

தற்போது இம்மாவட்டங்களுக்கு தொடராக அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறுகின்றது. அதனால் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் வசிப்பவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுவது மிக அவசியம். இதனடிப்படையில் தான் இந்த 24 மணி நேர முன்னெச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது என்றார்.

கஹவத்தை மண்சரிவில் இரு வீடுகள் சேதம்

sri-lanka-upcountry.jpgகஹவத்தை கொட்டதென்னைப் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளது.  இச்சம்பவம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. எனினும் உயிரிழப்புகள் எவையும் இடம்பெற வில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் பனிமூட்டத்துடன் கூடிய சீரற்ற காலநிலை காணப்படுவதால் சில இடங்களில் மண்சரி அபாயம் ஏற்பட்டுள்ளதாக அம்மாவட்ட செயலாளர் ஜி.பி குமாரசிறி தெரிவித்துள்ளார்.

அத்துடன் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலையால் இரவு வேளைகளில் வாகனம் செலுத்தும் போது அவதானமாயிருமாறும் அவர் கேட்டுள்ளார். தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை வலுவடைந்துள்ளதால் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 

வேலை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையில்லை நீவூட் தோட்ட தொழிலாளர் விசனம் தெரிவிப்பு

sri-lanka-upcountry.jpgஏழு மாதங்களாகியும் இதுவரை வேலை நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை என நீவூட் தோட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். எந்த தொழிற் கட்சியும் முன்வரவில்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.  ஹப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நீவூட் பெருந்தோட்ட அதிகார சபைக்குரிய தோட்டம் 1989 ஆம் ஆண்டு தனியார் ஒருவருக்கு 30 வருட உப குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இத்தோட்டத்தினை உப குத்தகைக்கு எடுத்த புதிய நிர்வாகம் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டதன் விளைவாக நிர்வாகத்திற்கும் தோட்டத் தொழிலாளிகளுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தன.

103 ஏக்கர் விஸ்திரணம் கொண்ட மேற்படி தோட்டத்தில் பெறுமதியான தேயிலைச் செடிகளை அகற்றி விட்டு கிராண்டிஸ் மரங்களை நடவும் 15 ஏக்கர் நிலப்பரப்பில் மரக்கறி பயிரிடவும் நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் மேற்படி தோட்டத் தொழிலாளிகள் மேற்கொண்ட வேலை நிறுத்தம் இதவரை தொடர்வதாகவும் இவ்வேலை நிறுத்தம் குறித்த எந்தவித தொழிற்கட்சிகளும் நிர்வாகத்தோடோ அல்லது தொழிலாளிகளோடோ பேச்சு வார்த்தை நடத்த வில்லை என நிவ்வூட் தோட்டத் தொழிலாளிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சுமார் 194 தொழிலாளிகள் இத் தோட்டத்தில் பணியாற்றியதாகவும் தற்போது 98 தொழிலாளிகள் மாத்திரமே உள்ளனர் எனவும் தொழிலாளிகள் மேலும் தெரிவித்தனர்.

தோட்டப்புற தபால் சேவகர்களுக்கு சீருடை, சைக்கிள் வழங்கப்படவில்லை

பெருந் தோட்டப் பகுதிகளில் தபால் சேவையை விரிவுபடுத்தும் நோக்குடன் தபால் திணைக்களத்தினால் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்ட 350 தபால் சேவகர்களுக்கான சீருடை, சைக்கிள் என்பன இன்னும் வழங்கப்படவில்லை. ஐந்து மாதங்கள் கடந்துவிட்டபோதிலும், இன்னும் இவை தமக்கு வழங்கப்படாமை குறித்து தபால் சேவகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது, தமது சொந்த சைக்கிள்களையே கடமையின்போது பயன்படுத்திவரும் இவர்களுக்குச் சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, தோட்டப்பகுதிகளில் கடிதங்களைச் சேகரிக்க ஆங்காங்கு குறிப்பிட்ட இடங்களில் தபால் பெட்டிகளைப் பொருத்துவதென முடிவு செய்யப்பட்டபோதிலும் இன்னும் அவை பொருத்தப்படவில்லை.

மாத்தறை மாவட்டத்தில் ஆறு பேரும் காலி மாவட்டத்தில் நான்கு பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் பதினாறு பேரும் கொழும்பு மாவட்டத்தில் ஏழு பேரும் கண்டி மாவட்டத்தில் 29 பேரும் கேகாலை மாவட்டத்தில் 11 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 138 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 13 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 13 பேரும் தபால் சேவகர்களாக நியமிக்கப்பட்டனர்.

எனவே, தபால் திணைக்களம் இவர்களுக்கான சீருடை, சைக்கிள் என்பனவற்றை வழங்க முன்வருவதுடன், ஏற்கனவே அறிவித்தபடி இரண்டாம் கட்டத்திலான தபால் சேவகர்களையும் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில், தபால் சேவகர்களைச் சேர்த்துக்கொள்ளும் முகமாக வெளியிடப்பட்ட அறிவித்தல்கள் உரியமுறையில் தோட்ட இளைஞர்களிடையே போய்ச் சேரவில்லையெனவும் இதனால், தகுதியும் திறமையும் இருந்தும் பலர் நியமனம் பெறும் வாய்ப்பை இழக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

குளவி கொட்டிய ஆசிரியை மரணம்

19062009.jpgபாட சாலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் குளவி கொட்டியதால் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று (17) பூண்டுலோயா பகுதியில் இடம்பெற்றுள்ளது. பூண்டுலோயா – ஃபர்ண்ட்லண்ட் வித்தியாலயத்தைச் சேர்ந்த இராணி அன்ஸார் என்ற 41 வயது ஆசிரியையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த ஆசிரியை பாடசாலையிலிருந்து தேயிலை மலைக்காடு ஊடாக வீடு சென்றுகொண்டிருந்தபோது ஆலமரத்தில் கட்டியிருந்த குளவிகள் கொட்டியுள்ளன. இதனால் பதறியடித்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம்வரை ஓடிய அவர், தேயிலை மலையில் வீழ்ந்துள்ளார். அப்போது கடமையிலிருந்த தோட்ட உத்தியோகத்தர் ஒருவர் ஆசிரியையை பூண்டுலோயா வைத்தியசாலைக்குக் கொண்டு சேர்த்துள்ளார்.

ஆனால் அங்கு ஆசிரியை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்த ஆசிரியையுடன் மேலும் ஐவருக்குக் குளவி கொட்டியபோதும் அவர்கள் ஓடிச்சென்று பாதுகாப்புத் தேடிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஊவா மாகாணத்தில் ஆட்பதிவு திணைக்கள நடமாடும் சேவை

uwa_provinces_and_districts.pngஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று ஆர ம்பிக்கப்பட்ட நிலையில், தேர்தலுக்கு முன்னர் அப்பகுதி வாக்காளர்களு க்கு தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொடுப்பதற்கான துரித நடவடிக்கையை உள்நாட்டு நிருவாக அமைச்சு மேற்கொண்டுள்ளது.

இதற்கிணங்க ஆட்பதிவுத் திணைக்களம் பதுளை மாவட்டத்தில் பல்வேறு பகுதிக ளிலும் நடமாடும் சேவைகளை நடத்தி தேசிய அடையாள அட்டைகளை வழங்கத் தீர்மானித்துள்ளது.உள்நாட்டு நிருவாக அமைச்சரான பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் பணிப்பின் பேரில் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஏ. பீ. தர்மதாச இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன்படி நேற்று 17ம் திகதி முதல் எதிர்வரும் 21ம் திகதி வரை பதுளை மாவட்டத்தின் பத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்த நடமாடும் சேவை நடத்தப்படுகிறது. நேற்று ஹல்துமுல்லை, ஹாலிஎல பிரதசங்களில் நடமாடும் சேவை நடைபெற் றதுடன், 18ம் திகதி அப்புத்தளை, வெலி மடையிலும் 19ம் திகதி ஊவா பரணகம, பண்டாரவளையிலும் 20ம் திகதி லுணு கலை, சொரணாதொட்டவிலும் 21ம் திகதி பதுளை மற்றும் கந்தகெட்டிய பிரதேசங்க ளிலும் இந்த நடமாடும் சேவை நடத்தப்ப டவுள்ளது.

ஊவா மாகாணத்தின் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் 2008ம் ஆண்டு தேர் தல் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்பட்டு, இதுவரை தேசிய அடையாள அட்டைக ளைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் மற்றும் அடையாள அட்டை தொலைந்தவர்கள் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளு மாறு ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் தெரிவிக்கின்றார்.இதேவேளை; ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று ஆரம்பமாகியதுடன், எதிர்வரும் 24ம் திகதி வேட்புமனுத் தாக்கல் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தோட்டங்கள் தோறும் டெங்கு விழிப்பூட்டும் நிகழ்ச்சி திட்டம்

dengu_1.gifதோட் டங்கள் தோறும் டெங்கு பற்றி விழிப்பூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தினை விரைவில் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினரும், இ.தொ.கா. உப தலைவருமான கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.  பதுளை மாவட்டத்திலுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கிடையே மேற்படி டெங்கு நுளம்பு தொடர்பான அறிவூட்டும் கருத்தரங்கு மற்றும் இதர நடவடிக்கை தொடர்பான விடயங்களை அந்த தோட்ட முகாமையாளர்களுடன் கலந்தாலோசித்து நடத்தவும், மரணங்களை ஏற்படுத்தும் நுளம்பு ஒழிப்பு தொடர்பான செயற்திட்டம் முன்னெடுக்கப்படும்.

நுளம்புகள் பெருகும் இடங்கள், அன்றாடம் சுத்திகரிக்கப்பட வேண்டிய இடங்கள் மற்றும் இந்த நுளம்பால் ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் முறை போன்ற விடயங்களை நேரடியாக தோட்ட லயன்களுக்குச் சென்று அறிவூட்டவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அறிவூட்டும் நிகழ்ச்சிகளுக்கு இ.தொ.காங்கிரஸ் காரியாலயங்கள் மூலமும் கல்வி அமைச்சின் மூலமும் பூரண அனுசரணை கிடைக்கும் என கே.விஸ்வநாதன் மேலும் தெரிவித்தார்.