::பொருளாதாரம்

::பொருளாதாரம்

இலங்கை மற்றும் சர்வதேச பொருளாதாரம் பற்றிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

Silicon Vally Bank, Signature Bank, First Republic Bank, Credit Suisse, … அடுத்தது எந்த வங்கி? ஆனால் ரஷ்யாவின் எந்த வங்கியும் சிக்கலில் சிக்கவில்லை!!!

சிலிக்கன் வலி பாங்க், சிக்னேர்சர் பாங்க், பெஸ்ற் ரிபப்ளிக் பாங்க், கிரடிஸ் சுவிஸ் அடுத்தது எந்த வங்கி? ஆனால் ரஷ்யாவின் எந்த வங்கியும் சிக்கலில் சிக்கவில்லை!!!

வினை விதைத்தவன் வினையறுப்பான் என்பது போல் தற்போது வரிசையாக மேற்கு நாடுகளின் வங்கிகள் சரிந்து வீழ்கின்றது. இது வங்கிகளின் வீழ்ச்சி மட்டுமல்ல டொலர் நாணயத்தினதும் அமெரிக்காவினதும் வீழ்ச்சியை கட்டியம் கூறி நிற்கின்றன. முதலாளித்துவத்தின் முதகெலும்பாக இருக்கும் வங்கிகள் முறிந்து வீழ்வது முதலாளித்துவத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும். அமெரிக்கா எப்படியாவது ரஷ்யாவை இல்லாமல் பண்ணுவதற்கு பல்வேறு முயற்சிகளையும் எடுத்து, ரஷ்யாவின் எல்லை நாடுகளை நேட்டோவில் இணைத்துக்கொண்டது. அதன் தொடரச்சியாக உக்ரைனையும் நேட்டோவில் இணைக்க முயற்சித்ததை அடுத்து, ரஷ்யா தன் படைகளை உக்ரைனுக்கு அனுப்பி, ரஷ்யர்கள் வாழும் பகுதிகளைக் கைப்பற்றியது.

நீண்ட காலமாக ஈடாட்டத்தில் இருந்த கிரடிட் சுவிஸ் வங்கி (Credit Suisse) மார்ச் 19 வீழ்ந்து கொண்டிருக்கையில், அதனை அரச மயப்படுத்துவதா என்ற கேள்வி எழுந்த நிலையில், யுபிஎஸ் (UBS) வங்கி கிரடிட் சுவிஸ் வங்கியை இன்று $3.25 billionக்கு வாங்கியதன் மூலம் வீழ்ச்சி தற்போது ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அதே சமயம் வங்கி வீழ்ச்சிக்கு சம்பந்தம் இல்லாமல் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் மரியோபோல் பகுதிக்கு ரஷ்ய அதிபர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். மார்ச் 18இல் ரஷ்ய அதிபருக்கு போர்க் குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் ‘முடிந்தால் புடுங்கிப் பாருங்கள்’ என்ற தோரணையில் விளாடிமீர் பூட்டின் உக்ரைனின் மரியப்போல் பிரதேசத்துக்கு விஜயம் செய்திருந்தார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துவிட்டது என்று தங்கள் சரிந்து விழும் செல்வாக்கை தூக்கி நிறுத்த முன்னாள் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனும் போர் முழக்கம் இட்டு ‘பொங்கு நேட்டோ’ நடாத்தினர். உக்ரைனை தங்கள் ஆயத தளபாடங்களால் நிறைத்து ரஷ்யாவுக்கு பாடம் புகட்டி, தங்கள் செல்வாக்கை மீளக் கட்டியெழுப்பலாம் என நினைத்தனர். ஆனால் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மண் கவ்வினார். அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. அவரைத் தொடர்ந்து ‘உக்ரைனுக்கு போய் போராடுங்கள்’ என்று அறிக்கை விட்ட லிஸ் ரஸ் பிரதமரானார். அவருடைய ஆட்சியும் 44 நாட்களில் கவிழ்ந்தது.

ரஷ்யாவை மண்டியிட வைக்க பொருளாதாரத் தடைகள், வங்கிப் பரிமாற்றங்களில் கட்டுப்பாடுகள், ஏனைய நாடுகளையும் ரஷ்யாவோடு வர்த்தகம் செய்ய தடை விதித்தனர், நிறுவனங்களையும் ரஷ்யாவில் இருந்து வெளியேற நிர்ப்பந்தித்தனர். ரஷ்யா இதுவரை இவையெல்லாவற்றையும் கொசுக்கடியென தட்டிவிட்டு நகர்ந்து கொண்டிருந்தது. ரஷ்யா உக்ரைனுக்குள் நுழைந்து சில வாரங்களுக்கு முன் ஓராண்டு ஆன நிலையில் ரஷ்யா குறிப்பிடத்தக்க அளவான பொருளாதார நெருக்கடிகள் எதற்கும் முகம்கொடுக்கவில்லை.

தங்களுக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்று செய்த பொருளாதாரத் தடைகள் மற்றும் திருகுதாளங்கள் எல்லாம் சொந்த செலவில் தங்களுக்கு தாங்களே சூனியம் வைத்த கதையாகியது. உக்ரைன் யுத்தத்தை நேட்டோ நாடுகள் நெய்யூற்றி ஆயதங்களை உக்ரைனில் குவித்து தூண்டிவிட, நேட்டோ நாடுகளில் எரிபொருள், உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலையேற்றம் ரொக்கற் வேகத்தில் உயர்ந்தது.

நேட்டோ நாடுகளில் மக்கள் விலையேற்றத்திற்கு எதிராகவும் சம்பள உயர்வு வேண்டியும் வீதிகளில் இறங்கிப் போராடினர். விலையேற்றம் எகிறிக்கொண்டு சென்ற போதும் மக்கள் வேலைக்குச் செல்லவோ மேலதிக வேலைகளைச் செய்யவோ விரும்பவில்லை. அதனால் நிறுவனங்களில் பணி செய்வதற்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இதனைச் சமாளிக்க மக்களுக்கு மேலும் மேலும் நெருக்கடிகளை வழங்கி அவர்களது உழைப்பைச் சுரண்டுவதற்காக தொடர்ந்தும் நேட்டோ நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டிவீதத்தை அதிகரித்தன. இதன் மூலமாவது மக்களை கூடுதலாக வேலை செய்ய நிர்ப்பந்தித்தனர்.

ஆனால் நேட்டோ தலைவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக வட்டிவீதம் அதிகரித்ததால் வங்கிகள் ஏற்கனவே முதலீடு செய்த இணைப்பு பத்திரங்களின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. ஆயினும் அவர்களின் புதிய முதலீடுகளுக்கு கூடிய லாபம் இடைக்கும். மேலும் வங்களின் வரன்முறையற்ற குறுகிய லாபநோக்கம் மட்டும் கொண்ட ஆபத்தான வியாபாரச் செயற்பாடுகளாலும் சில வங்கிகள் கடுமையான ஆபத்தை எதிர்நோக்கின. மேலும் அமெரிக்காவின் பிற்கொயின் நிறுவனம் எப்ரிஎஸ் (FTS) திவாலானது போன்றவற்றால் சில வங்கிகளிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் வங்கிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே எப்போதும் மிக நெருக்கமான உறவும் இருந்து வருவதால் வங்கிகளின் ஊழல் வெளியே பெரும்பாலும் கொண்டு வரப்படுவதில்லை.

இந்தப் பின்னணயில் தான் மார்ச் 10, 2023 அன்று முதலாவதாக சிலிக்கன் வலி வங்கி திவாலானது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சிலிக்கன் வலி வங்கி ஏனைய வங்கிகளின் நிலையை வெளியுலகிற்குக் காட்டிக்கொடுத்தது. அமெரிக்காவும் அதன் நேட்டோ நாடுகளும் உடனடியாக அதன் ஆபத்தையுணர்ந்து 2008 லீமன் பிரதேர்ஸ், ரோயல் பாங்க் ஒப் ஸ்கொட்லன்ட்டுக்கு நடந்தது மீளவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தது. அமெரிக்கா டொலர்களை அச்சிட்டு வங்கிகளைக் காப்பாற்ற பில்லியன் கணக்கில் வங்கிகளுக்கு நிதியை வழங்கியது.

ரஷ்யாவை நொருக்குவோம் உக்ரைனில் இருந்து ரஷ்யாவை விரட்டுவோம் என்ற அமெரிக்க அரசின் ரீல்களை எல்லாம் நம்பிய அமெரிக்கர்கள், வங்கிகள் எல்லாம் ஸ்தீரமாக உள்ளது, வாடிக்கையாளரின் வைப்பீடுகள் பாதுகாக்கப்படும் என்பதை நம்பவில்லை. அமெரிக்க அரசை நம்ப மறுத்து வங்கிகளின் நடைமுறையில் நம்பிக்கையிழந்த வாடிக்கையாளர்கள் தாங்கள் வைப்பிட்டிருந்த நிதியை வெளியே எடுத்தனர். 2008இல் வங்கிகளில் நம்பிக்கையிழந்தவர்கள் வங்கிகளுக்கு முன் வரிசையில் நின்று தங்கள் பணத்தை பெற வேண்டியிருந்தது. தற்போது வாடிக்கையாளர்கள் இணைய வங்கி முறைமூலம் பட்டன்களை அழுத்தி தங்கள் பணத்தை மாற்றினர்.

வழமையாக வாடிக்கையாளர்கள் வைப்பிடும் தொகையை வங்கிகள் நிரந்த மூதலீடுகளுக்குப் பயன்படுத்திவிடுவார்கள். நாளாந்த வங்கி நடைமுறைக்கு மொத்த வைப்பீட்டில் 10 வீதம் மட்டுமே சுழற்சிக்கா வைத்திருப்பார்கள். வழமையாக வாடிக்கையாளர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் பணத்தை மீளெடுப்பதில்லை. ஆனால் வங்கி மீது நம்பிக்கையீனம் ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள் எல்லோருமே பணத்தை அந்த விங்கியில் இருந்து மீளப்பெறவே முயற்சிப்பார்கள். சிலிக்கன் வலி வங்கி சிக்கலில் இருப்பதை சில முதலீட்டாளர்கள் மணந்து பிடித்ததும், அது சில மணி நேரங்களுக்குள்ளாகவே வங்கியின் நிதிக்கையிருப்பை வறளச் செய்தது. உடலுக்கு குருதிச் சுற்றோட்டம் எவ்வளவு முக்கியமோ வங்கிகளுக்கு பணச்சுற்றோட்டம் மிக மிக முக்கியம். பணத்தை வைப்பிட்டவர்கள், முதலிட்டவர்கள் தாங்கள் தேவைப்படும் போது பணத்தை மீளப்பெற முடியாவிட்டால் – வங்கியின் கையிருப்பில் பணம் இல்லாவிட்டால் அந்த வங்கி மரணத்தைச் சந்திக்கும். அதுவே சிலிக்கன் வலி வங்கிக்கு நிகழ்ந்தது.

இதுவொரு டொமினோ அபக்ற் (domio effect). மார்ச் 10இல் சிலிக்கன் விலி வீழ்ந்ததும், அடுத்து சிக்னேச்சர் பாங்க், அடுத்து பெஸ்ற் ரிபப்ளிக் பாங், நாளை காலை (மார்ச் 20) காலை பங்குச் சந்தைகள் திறப்பதற்கு முன் கிரடிட் சுவிஸ் பாங்கை பாதுகாக்க சுவிஸ் அரசும் நேட்டோ நாடுகளும் கடும் முயற்சியில் இறங்கியது. கிரடிட் சுவிஸை அரசுடமையாக்கி வைப்பீட்டாளர்களையும் முதலீட்டாளர்களையும் பாதுகாக்க வேண்டும், இல்லாவிட்டால் ஒட்டுமொத்த வங்கிகளின் எதிர்காலமும் கேளவிக்குறியாகும். ஆனால் வங்கி அரசுடமையாக்கப்பட்டால் அது முதலாளித்தவ பொருளாதாரத்திற்கு கொள்கை அடிப்படையில் வீழ்ந்த மிகப்பெரும் அடியாக இருந்திருக்கும். ஆனால் கிரடிட் சுவிஸ் வங்கியின் போட்டியாளரான யுபிஎஸ் (UBS) வங்கி கிரடிட் சுவிஸ் வங்கியை ($3.25 billion) வாங்கி வங்கிகளின் வீழ்ச்சியை சற்றுத் தள்ளிப் போட்டுள்ளது. யுபிஎஸ் – UBS, கிரடிட் சுவிஸை மட்டும் வாங்கவில்லை. கிரடிட் சுவிஸ் வங்கிக்கு கடந்த பல ஆண்டுகளாக இருந்த நெருக்கடியையும் சேர்த்தே வாங்கியுள்ளது. யுபிஎஸ் – UBS, கிரடிட் சுவிஸ்க்கு ஏற்பட்ட பிரச்சினையை மேவிவருமா அல்லது வந்த வெள்ளம் நின்ற வெள்ளத்தையும் கொண்டு போனது போல் ஆகுமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்தது எந்த பாங்க் வீழ்ச்சியடையும் என்பது காலையில் எழும்போது தான் தெரியவரும். ஏற்கனவே குறிப்பிட்டது போல் முதலாளித்துவத்தின் முதுகெலும்பு வங்கிகள். வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கையிழந்தால் அவர்கள் காட்டாற்று வெள்ளம்போல் பாய்ந்து தங்கள் முதலீட்டை வைப்பீட்டை மீளப்பெறத் துடிப்பார்கள். வங்கிகளின் கையிருப்பு வறளும். வங்களின் குருதிச் சுற்றோட்டம் பணச் சுழற்சி. வங்கியில் பணம் இல்லாவிட்டால் எமக்கு ஒக்ஸிஜன் இல்லாத நிலைமை தான். அதற்காக பணத்தை அச்சடித்து வங்கிகளை நிரப்பினால் பணத்தின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சியடையும். டொலர் வீழ்ச்சியடையும். அதற்கும் அமெரிக்காவின் வீழ்ச்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. டொலரும் அமெரிக்காவும் ஒன்றுதான்.

கோட்டாபய ராஜபக்ச போய் ரணில் ராஜபக்ச வந்தார்!! அமெரிக்க – ஐஎம்எப் க்கு கைக்கூலியானது காலிமுகத்திடல் போராட்டம்!!!

காலிமுகத்திடல் அரகலியாக்களின் போராட்டம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை விரட்டிவிட்டு அமெரிக்க – ஐஎம்எப் (சர்வதேச நாணய நிதியம்) ஆல் சிபாரிசு செய்யப்பட்ட ரணிலை ஜனாதிபதியாக்கியது. அவசரகாலச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது. தங்கள் காரியம் நடந்து முடிந்ததும் அரகலியாக்களை அடித்து விரட்டினர். கோட்டபாய ராஜபக்ச மக்களால் தெரிவு செய்யப்பட்டு இருந்தும் பாராளுமன்றத்தின் பெரும்பான்மையைக் கொண்டிருந்தும் அரகலியாக்களுக்கு எதிராக தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்தவில்லை. அரகலியாக்களின் போராட்டத்தினால் நட்டைவிடே ஓடி பதுங்கி இருக்கின்றார். விரும்பியோ விரும்பாமலோ அதிகாரம் ராஜபக்சக்களின் வசமே இன்னமும் உள்ளது. ராஜபக்சக்கள் யாரைக் காட்டினார்களோ அவர் – ரணில் ராஜபக்ச ஜனாதிபதி ஆக்கப்பட்டார்.

அரகலியாக்களும் அமெரிக்க – ஐஎம்எப் கூடலும் ஊடலும்:

இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான சந்தைப் பொருளாதாரத்தையும் அதனை கண்மூடித்தனமாக அமுல்படுத்தக் கோரும் ஐஎம்எப் – சர்வதேச நாணய நிதியத்தைப் பற்றியும் உலக வங்கியைப் பற்றியும் காலிமுகத்திடல் அரகலியாக்கள் மூச்சேவிடவில்லை. கடன்களை மீளக்கொடுப்பதை நிறுத்தவும் அரகலியாக்கள் கோரவில்லை. அப்படிக் கோரி இருந்தால் நாடு எதிர்காலத்தில் சுயசார்பாக வந்துவிடும். ஐஎம்எப் – உலகவங்கிக்கு அடிமையாக இராது. அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் முழுமையான ஆதரவு போராட்டகாரர்களுக்கு வழங்கப்பட்டு இராது. இந்தப் போராட்டத்தை மேற்கு நாடுகள் கண்டுகொண்டிராது. போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர்களுக்கு 45 மில்லியன் டொலர் வழங்கப்பட்டும் இராது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கோக்கோ கோலா குடிபானம் முதல் இலவச உணவுகள் வழங்கப்பட்டிராது.

ஆனால் நடந்தது என்ன? மேலே சொன்னதெல்லாம் போராட்டகாரர்களுக்கு வாரி வழங்கப்பட்டது. காற்று வாங்க வந்த போராட்டகாரர்களுக்கு முதலுதவி முகாம்கள் அமைக்கப்பட்டது. மேற்குறிப்பிட்டது போல முதற்தரமான சகல வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் உலகில் வேறெங்கும் நடக்கவில்லை. காலிமுகத்திடலில் நடந்த ‘கோட்டா கோ கம – கோட்டா கோ ஹோம்’ போராட்டம் தான் உலகில் நடைபெற்ற ஒரே செழிப்பான போராட்டம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் காரிலும் மோட்டார் சைக்கிள்களிலும் வந்துதான் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இறுதிக் கட்டத்தில் தான் கும்பலில் கோவிந்தா என்று பெரும் தொகையானோர் ஈர்க்கப்பட்டனர். இதனை ஜேவிபி இன் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்தனர்.

பிரித்தானியாவில் இயங்கும் இடதுசாரி அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி ஐஎம்எப் இன் நிபந்தனைகளை நிராகரிக்கவும் கடன்களை மீளச்செலுத்த வேண்டாம் என்பது உட்பட பல முற்போக்கான கோரிக்கைகளை வைத்தது. ஆனாலும் இக்கோரிக்கைகள் பெரும்பாலும் தட்டிக்கழிக்கப்பட்டது. தங்கள் கோரிக்கைகள் தட்டிக் கழிக்கப்பட்ட போதும் கூட தமிழ் சொலிடாரிட்டி அரகலியாக்களுடைய அமெரிக்க ஐஎம்எப் சார்புநிலைக்கு ஆதரவளித்தனர். இந்தப் போராட்டங்களில் தலையைக் காட்டாவிட்டால் தாங்கள் துரோகிகள் ஆகிவிடுவோம் என்பதால் மேற்கத்திய ஜனநாயகத்தால் ஈர்க்கப்பட்ட லிபரல்களும் இடதுசாரிகளும் கூட தங்கள் தங்கள் நாடுகளில் ஆதரவுப் போராட்டங்களை கொப்பிகற் முறையில் அல்லது குழவாத உளவியல் மற்றும் டொமினோ தாக்கம் போல் மேற்கொண்டனர்.

அமெரிக்க – ஐஎம்எப் நலன்களுக்காகப் போராடிய இந்த அரகலியாக்களை அமெரிக்க – ஐஎம்எப் ஆதரவு பெற்ற ரணில் பதவியேற்ற 24 மணிநேரங்களிற்குள்ளாக இரவோடு இரவாக விரட்டி அடித்தார். நீதிமன்ற உத்தரவைப் பெற்று, அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி அவர்களை விரட்டி அடித்து, ரணில் தன்னுடைய வீட்டை எரித்ததற்குப் பதிலடி வழங்கினார்.

மக்கள் செல்வாக்கற்ற காலிமுகத்திடல் அரகலியாக்கள்:

பிரித்தானியாவில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்ததும் அவருடைய கொன்சவேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தாங்கள் அடுத்த தேர்தலலில் வெற்றி பெறுவது கடினம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அதனால் அவர்கள் பொறிஸ் ஜோன்சனுக்கு பதிலாக இன்னொருவரை புதிதாக தெரிவு செய்வதன் மூலமே தாங்கள் மக்களிடம் செல்ல முடியும் என்று நம்பினர். அதனால் 24 மணி நேரத்திற்குள் வரலாறு காணாத அளவில் 49 அமைச்சர்கள், துணை அமைசர்கள் பதவி விலகினர்.

ஆனால் ஆறு மாதகாலம் நீடித்த போராட்டத்தின் போதும் அதன் பின் கோட்டபாய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறிய பின்னும் கூட அவருடைய அமைச்சரவையிலோ பாராளுமன்ற பெரும்பான்மையிலோ குறிப்பிடத்தக்க சலசலப்பு ஏற்படவில்லை. அதற்குக் காரணம் கோட்டபாய ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் முன்னணி – பொதுஜனப் பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் அடுத்த தேர்தலிலும் வெற்றிபெறுவோம், அதற்கு ராஜபக்சக்களின் தலைமை தேவை என்ற நம்பிக்கையிலேயே இருக்கின்றனர். பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவு அதனை மிகத் தெளிவாக்கி உள்ளது.

போராட்டத்தை முன்னின்று நடத்திய ஜேவிபிக்கு பாராளுமன்றத்தில் மூன்று வாக்குகள் மட்டுமே கிடைத்தது. தற்போதைய ஜனாதிபதி ரணிலுக்கு இப்பதவியை ராஜபக்சாக்களின் பொதுஜன பெரமுன கட்சியினரே வழங்கி இருந்தனர். 134 வாக்குகளை அவர் பெற்றிருந்தார். மறுமுனையில் ரணிலுக்கு எதிராக களமிறக்கப்பட்டவர் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர். அவர் 82 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரும் ராஜபக்சாக்களின் நெருங்கிய சகா. இவ்விருவரில் யார் வெற்றி பெற்றிருந்தாலும் அவர் ராஜபக்சக்களின் அதரவுடனேயே ஆட்சியை மேற்கொள்கின்றார் என்பதே உண்மை. தற்போதைய பிரதமர் தினேஸ் குணவர்த்தனவும் ராஜபக்சக்களுக்கு மிகவும் விசுவாசமானவர். இவர்கள் அமைக்கின்ற அமைச்சரவை உறுப்பினர்களும் ராஜபக்சாக்களின் அமைச்சரவை உறுப்பினர்களாகவே உள்ளனர். இலங்கை மக்கள் மத்தியில் ராஜபக்சக்களின் ஆதரவுத் தளத்தில் எவ்வித பாரிய பாதிப்பும் ஏற்பட்டு இருக்கவில்லை என்பதையே இது காட்டுகின்றது.

இழப்பதற்கு தம்முடைய வறுமையைத் தவிர எதுவுமற்ற மக்கள் அமெரிக்க நலன்களுக்கும் ஐஎம்எப்க்கும் மசிந்துவிட மாட்டார்கள். காலிமுகத்திடல் அரகலியாக்களுக்கும் இலங்கை வாழ் சாதாரண மக்களுக்கும் இடையே பாரிய இடைவெளி உள்ளது. கொழும்பில் நீர்த்தடாகத்தோடு வீடுவைத்திருக்கும் ஒரு மனிதவுரிமை சட்டத்தரணி, தான் நடுத்தரவர்க்கம் என்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படுவதாகவும் கதையளந்தால் மலையகத்தில் லயன்களில் இலங்கையின் அடிப்படைச் சம்பளத்திலும் குறைவாக சம்பளம் பெறும் குடும்பங்கள் என்ன கருதும்?

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் காரும் மோட்டார் சைக்கிளும் வைத்துள்ளவர்கள். இலங்கை மக்கள் பெரும்பாலும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மருத்துவக் காப்புறுதி உடையவர்கள். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சக்தி கொண்டவர்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தங்களுடைய நாளாந்த தேவைக்கு பெற்றோல் வேண்டும். சமைக்க எரிவாயு வேண்டும். அவர்களுக்கு பெற்றோலுக்கு மானியங்கள் தேவையில்லை. கள்ளச்சந்தையில் பெற்றோலை லீற்றர் 3,000 ரூபாய்க்கும் வாங்கி ஓடக்கூடியவர்கள். ஆனால் இலங்கையின் கிராமப் புறங்களிலேயே வாழும் பெரும்பாலான மக்கள் எரிவாயுவை பயன்படுத்த தெரியாதவர்கள். அடுப்பூதி ஈர விறகை வைத்தே சமைப்பவர்கள். பல லட்சம் கொடுத்து காரையோ மோட்டார் சைக்கிளையோ வாங்க இயலாதவர்கள். சைக்கிள் இல்லாவிட்டால் பொதுப் போக்குவரத்தில் வாழ்பவர்கள்.

இந்த போராட்டங்களில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு ரூபாயாவது வேலை செய்து சம்பாதிக்காதவர்கள். பெற்றோரை கஸ்டப்படுத்தி மோட்டார் சைக்கிளும் அவர்களிடமே ஓசியில் பெற்றோலும் அடித்து முறுக்கித் திரிபவர்கள். ஓசியிலேயே வாழும் இந்த ஜீவன்களுக்கு வாக்களித்து பழக்கம் இருக்கா என்பதே சந்தேகம். இவர்கள ஏன் போராடினார்கள்? என்னத்தை கோரினார்கள்?

‘கோட்டா கோ ஹோம் – பில் மை பெற்ரோல் ராங் (fill my petrol tank)’ போராட்டம் பூரண வெற்றி. இனிவரப்போகும் விளைவுகளுக்கு அவர்கள் பொறுப்பல்ல. இதனால் தான் அரகலியாக்கள் இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான சந்தைப் பொருளாதாரத்தையும் அதனை கண்மூடித்தனமாக அமுல்படுத்தக் கோரும் சர்வதேச நாணய நிதியத்தைப் பற்றியும் உலக வங்கியைப் பற்றியும் மூச்சேவிடவில்லை. கடன்களை மீளக்கொடுப்பதை நிறுத்தக் கோரவும் இல்லை.

இலங்கை அரசியல் வாதிகளை மிஞ்சும் ஒக்ஸ்போர்ட் பட்டதாரி பிரதமர் பொறிஸ் ஜோன்சன்!!!

உலகை ஆட்டிப்படைக்கும் விலைவீக்கம் – இன்பிளேசன் பிரித்தானியாவையும் விட்டுவைக்கவில்லை. இரண்டு வீதமாக இருக்க வேண்டிய விலைவீக்கம் பத்துவீதத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. பெற்றோல் மற்றும் எரிவாயுவின் விலைகள் எகிறிவருகின்றது. பொருளாதாரமட்டத்தில் விளிம்புநிலையில் உள்ள மக்களை காப்பாற்ற அவர்களுக்கு உதவும் படி தொழிற்கட்சி மற்றும் பொது அமைப்புகள் கேட்ட போது பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் கொன்சவேடிவ் அரசு கடுமையாக மறுத்துவந்தது. இந்தப் பின்னணியில் பிரித்தானியாவின் எரிபொருள் நிறுவனங்கள் வரலாறு காணாத லாபத்தை ஈட்டின. அந்த லாபத்திற்கு கூட்டுத்தாபன வரியை அறவிடும்படி தொழிற்கட்சியும் ஏனைய அமைப்புகளும் சில மாதங்களாகவே கோரி வந்தன. கூட்டுத்தாபன வரியை எரிபொருள் நிறுவனங்கள் மீது விதித்தால் அவர்கள் மாற்று சக்திகளில் முதலீடுவது பாதிக்கும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட மாற்று சக்திகளில் முதலீட்டுக்கு தூண்ட வேண்டும் என்றெல்லாம் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அவருடைய பக்கத்து வீட்டுக்காரரான நிதியமைச்சர் ரிஷி சூனாக்கும் தெரிவித்து வந்தனர்.

ஆனால் இரவோடு இரவாக இவர்களுக்கு ஞானோதயம் பிறந்துவிட்டது. இன்று பொருளாதார நிலையில் கீழ்மட்டத்தில் உள்ள மக்களுக்கு மிகப்பெரும் உதவித் திட்டத்தை அறிவித்துள்ளனர். வறுமைக்கோட்டில் உள்ள ஒரு குடும்பம் வருடத்திற்கு 1200 பவுண்களை பெறும் அளவுக்கு உதவித்திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுடைய சொந்தக் கட்சியினரே சோசலிசத்திற்கு இறைச்சியை வீசியெறிவதாக நையாண்டி பண்ணியுள்ளனர். பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் இந்த உதவித்திட்டம் இலங்கை அரசியல் வாதிகளின் சம்பள உயர்வு விரிக்குறைப்பையும் விஞ்சியுள்ளது.

உண்மையில் இந்த உதவி மக்களுக்குக் கிடைக்க வழி செய்தவர் சூ கிரே. இவர் தான் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் ‘லொக்டவுன் பார்ட்டி’களை விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தவர். இந்த அறிக்கை நேற்று மே 25இல் வெளியிடப்பட்டது. அதில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அவருடைய சகபாடிகளும் மேற்கொண்ட 20 வரையான பார்ட்டிகள் அம்பலத்துக்கு வந்தது மட்டுமல்ல பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பாராளுமன்றத்துக்கும் நாட்டு மக்களுக்கும் பொய் சொன்னதும் அம்பலமாகிவிட்டது. இந்த நெருக்கடி நிலையைச் சமாளித்து மக்களையும் ஊடகங்களையும் திசை திருப்ப, பொறிஸ் அரசு மாபெரும் பல்டி அடித்து எரிபொருள் நிறுவனங்கள் மீது 10 பில்லியன் பவுண்கள் வரை வரி விதித்து அதனை மக்களுக்குப் பகிர முன்வந்துள்ளது. இப்போது பொறிஸ் ஜோன்சன் குடுமியில்லாமலேயே ஆட்டுகின்றார். இங்கு பொறிஸ் ஜோன்சனை பல்டி அடிக்க வைத்த சூ கிரேயுக்கு மிகுந்த பாராட்டுக்களை மக்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் தொழிற்கட்சியின் தலைவராக இருந்த ஜெரிமி கோபின் தன்னுடைய கடைசி தேர்தலில் வைத்த திட்டங்களை தற்போது பொறிஸ் ஜோன்சன் ஒவ்வொன்றாக நிறைவேற்ற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். கடைசியாக தன்னுடைய ஊத்தைகளை மறைத்து பேசுபொருளை திசைதிருப்ப எட்டு மில்லியன் மக்கள் வரை பயனடையக்கூடிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பிரதமர் பொறிஸ் ஜோன்சன் போட்ட கூத்தை வைத்து பாதிக்கப்பட்ட மக்கள் நன்மைபெறும் வகையில் சூ கிரேயின் அறிக்கை தகுந்த நேரத்தில் வெளி வந்திருக்கிறது. பிரித்தானிய பிரதமர் பொறிஸ் உக்ரைன் யுத்தத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதன் முக்கிய நோக்கமும் தன்னுடைய ஊத்தைகளை மூடி மறைக்கவே.

அண்மையில் லண்டன் ஸ்கூல் ஒப் மனேஜ்மன்ற் எடியுகேஸன் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பேராசிரியர் ஒருவர் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகம் தான் பொறிஸ் ஜோன்சனையும் உருவாக்கியது என்று நக்கலும் நளினமும் கலந்து தெரிவித்ததுடன் லண்டன் ஸ்கூல் ஒப் மனேஜ்மன்ற் எடியுகேஸன் அதனிலும் பார்க்க தரமான பட்டதாரிகளை உருவாக்குவதாகத் தெரிவித்து இருந்தார்.

அண்மைய விலை வீக்கம் காரணமாக இரு பிள்ளைகளையுடைய கணவன் மனைவியை கொண்ட குடும்பத்தின் செலவீனம் 400 பவுண்களால் அதிகரித்துள்ளது. அதன்படி ஆண்டுக்கு 4,800 பவுண்கள் மேலதிக செலவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசு அதில் 25வீதத்தையே தர நிர்ப்பந்திக்கப்பட்டுவிட்டது. இந்த சூ கிரேயின் அறிக்கை வந்திருக்காவிட்டால் மக்கள் பெரும் திண்டாட்டத்துக்கு உள்ளாகி இருப்பார்கள்.

‘கோட்டா கோ ஹோம்’ அல்ல ‘ஸ்றிலங்கா பெர்ஸ்ற்!’, ‘ரூறிஸ்ற் ஹம் ஹோம்!!’ அன் ‘மேட் இன் சிறிலங்கா!!!’ பணவீக்கம் என்பது அடிப்படையில் தவறான பொருளாதார புரிதல்!

‘இன்று மே 21ம் திகதி முதல் குழந்தைகளின் பால்மாவுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு கடைகளில், சுப்பர்மாக்கற்களில் பால்மா தட்டுக்கள் காலியாகிக் கிடக்கின்றது. கைக் குழந்தைகளின் பெற்றோர் பால்மாவுக்காக கடை கடையாக ஏறி இறங்குகின்றனர். ஏற்கனவே பால்மா உற்பத்தி குறைந்திருந்த நிலையில் பால்மா அருந்திய குழந்தைகளில் பற்றீரியா தொற்று ஏற்பட்டதால் குறிப்பிட்ட நிறுவனம் தன்னுடைய பால்மாக்களை உடனடியாக மீளப்பெற்றது நிலைமையை மோசமடையச் செய்துள்ளது. அதனால் ஜனாதிபதி இராணுவத்தை உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபடுத்துவதாக அறிவித்துள்ளார்’.

இந்நிலை இலங்கையில் அல்ல அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் சமையல் எண்ணைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. கோதுமை மாவுக்கான நெருக்கடி உலகத்தை நெருக்கப் போகின்றது. இந்தியா கோதுமை மற்றும் உணவுப் பொருட்களுக்கான ஏற்றுமதியை தடைசெய்துள்ளது. இன்றைய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் நெருக்கடிகள் இலங்கைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல. அவ்வாறு குறுக்கிப் பார்ப்பது மிகவும் ஆபத்தான பின் விளைவுகளுக்கு நாட்டை இட்டுச் செல்லும்.

உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் சர்வதேச பொருளாதார பயங்கரவாதிகள்:

பின்விளைவுகளை ஆழமாக நோக்காமல், இலங்கையில் அரசியல் மாற்றத்தை கொண்டுவரப் போவதாகக் கூறி நடக்கும் போராட்டங்கள்; உலகப் பொருளாதாரப் பயங்கரவாதிகளான உலக வங்கியிடமும் சர்வதேச நாணய நிதியத்திடமும் இலங்கையைத் தள்ளிவிட்டுள்ளன. பழைய ஆனால் மீண்டும் புதிதாகப் பதவியேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இலங்கை மக்களை தயார்படுத்த ஆரம்பித்துவிட்டார். நிலைமைகள் மோசமடையும் என்பதை மெல்ல மெல்ல அவிழ்த்து வருகின்றார். ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பற்றி அவர் வாய் திறக்கவில்லை. ஆனால் அரையும் குறையுமாக தங்களுக்கே புரியாமல் செய்தி வெளியிடும் ஊடகங்கள், சர்வதேச நாணய நிதியம் கோத்தபாய ராஜபக்ச பதவி விலகினால் தான் தாங்கள் உதவமுடியும் என அறிவித்திருப்பதாக செய்தியை வெளியிட்டு வருகின்றன. சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் நாட்டை சூறையாடுவதற்கு யார் அனுமதித்தாலும் அந்நாடுகளுக்கு தங்கள் ‘உதவிக் கரத்தை’ நீட்டும். உலகில் இருந்த சர்வதிகாரிகள், கொடுங்கோலர்கள் எல்லோருக்கும் வாரி இறைத்து அந்நாடுகளைச் சுரண்டுவது தான் உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியத்தியமும் இதுவரை செய்து வந்தது. அதனை அவர்கள் பசுத்தோல் போர்த்திக் கொண்டு செய்வார்கள்.

ஏப்ரல் 23இல் சர்வதேச நாணய நிதியமும் உலகவங்கியும் இளவேனிற்கால சந்திப்பை வோஷிங்டனில் மேற்கொண்டன. அதில் இலங்கையின் நிதியமைச்சர் அலி சபாரி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கேயும் கலந்துகொண்டனர். இச்சந்திப்பின் பின் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட செய்தி அறிக்கை: Going forward, the IMF team will support Sri Lanka’s efforts to overcome the current economic crisis by working closely with the authorities on their economic program, and by engaging with all other stakeholders in support of a timely resolution of the crisis. – முன்நோக்கிச் செல்ல சர்வதேச நாணய நிதியக் குழு இலங்கை தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கு ஏனைய பங்குதாரர்களோடும் இணைந்து அதிகாரிகளின் பொருளாதாரத் திட்டத்திற்கு ஆதரவு அளித்து தக்க தருணத்தில் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரும்”. இந்தச் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டு மூன்று வாரங்களில் மேற்குலகுக்கு சார்பான ரணில் விக்கிரமசிங்க பதவிக்குக் கொண்டுவரப்பட்டார். ஆயினும் பொருளாதார நெருக்கடிக்கு உதவத்தயார்; பாதிக்கப்படும் ஏழை பாளைகளின் நெருக்கடியை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவத் தயார் என்றெல்லாம் அறிக்கை வெளியிட்டு ஒரு மாதமாகியும் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை.

அவ்வாறு உடன்பாடு எட்டப்படாத விடயம் என்ன? யார் அந்த ஏனைய பங்கு தாரர்கள்? சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் உலகெங்கும் சோசலிசக் கொள்கைகள் உருவாகிவிடக்கூடாது, நாடுகள் தங்கள் எல்லைகளை தங்கள் நாட்டு (அமெரிக்க – பிரித்தானிய மற்றும் நாடுகளுக்கு இவர்கள் தான் ஏனைய பங்குதாரர்கள்) நிறுவனங்களுக்கு திறந்துவிட்டு திறந்த சந்தைப் பொருளாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். இந்நாடுகள் தொடர்ந்தும் நவகாலனிகளாக இருக்க வேண்டும். அதற்காக இந்த மக்களின் அடிப்படைத் தேவைகளில் கை வைத்தாலும் கேள்வி எழுப்பக்கூடாது. எரிபொருள், மின் சக்தி, விவசாயத்திற்கு வழங்கப்படும் மானியங்கள் குறைக்கப்பட வேண்டும் அல்லது முற்றாக நிறுத்தப்பட வேண்டும். இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரம் என்பனவற்றுக்கு படிப்படியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இந்நாடுகளில் மக்கள் எவ்வளவு சுரண்டப்பட்டாலும் வறுமைப்பட்டாலும் பரவாயில்லை ஆனால் தாங்கள் அறவிடும் அறாவட்டியை ஒரு சதம் பாக்கி இல்லாமல் செலுத்த வேண்டும். இவை தான் இந்த பொருளாதார பயங்கரவாதிகளின் நிபந்தனை. இவர்கள் ஒன்றும் கோல்பேஸில் காற்று வாங்கவரும் போராளிகள் எதிர்பார்ப்பது போல் தேவதூதர்கள் அல்ல.

போராட்டகாரர்களுக்கு தமிழ் சொலிடாரிட்டியின் வேண்டுகோள் கேட்குமா:

உறுதியாக இருந்த இடதுசாரிகளின் நீண்ட போராட்டங்களினால் இலங்கை மக்கள் பல்வேறு அடிப்படை உரிமைகளைப் பெற்றிருந்தனர். இதனால் இலங்கை, அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளினால் கூட வழங்கமுடியாத இலவசக் கல்வியை பல்கலைக்கழகம் வரை வழங்குகின்றது. இலங்கையில் இலவச அடிப்படைச் சுகாதார கட்டமைப்புகள் குறிப்பிடத்தக்கன. விவசாயிகளுக்கான மானியங்கள், எரிபொருள் மானியங்கள் அடித்தட்டு மக்களுக்கும் குறைந்தபட்ச பாதுகாப்பையாவது வழங்கி இருந்தது.

ஆனால் அடுப்பில் இருந்து நெருப்பில் வீழ்ந்த கதையாக இலங்கையின் நிலைமை மாறி வருகின்றது. பொருளாதார நெருக்கடியில் இருந்த இலங்கை தற்போது சர்வதேச பொருளாதார பயங்கரவாதிகளின் பொறிக்குள் வீழ்ந்துகொண்டிருக்கிறது. காலிமுகத்திடல் போராட்டம் சர்வதேச நாணய நிதியத்திற்கும் உலக வங்கிக்கும் இலங்கையை தாரைவார்த்து கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது போலவே தெரிகின்றது.

பிரித்தானியாவில் இருந்து இயங்கும் இடதுசாரி அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி என்ற அமைப்பு காலிமுகத்திடல் போராட்டத்திற்கு கொள்கையளவான ஆதரவை வழங்கிய போதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அவை அனைத்துமே சர்வதேச நாணய நிதியத்த்தினதும் உலக வங்கியினதும் கொள்கைகளுக்கும் அவர்களுடைய நிபந்தனைகளுக்கும் முற்றிலும் எதிரானதாக உள்ளது. அனைத்து கடன்களையும் இரத்து செய்யுமாறு கோருவதோடு பெரு முதலாளிகளின் சொத்துக்கள் உட்பட ராஜபக்ச குடும்பத்தின் சொத்துக்களையும் பறிமுதல் செய்யக் கோருகின்றது. விவசாயிகளுக்காக மானியங்களை வழங்குவதுடன் மலையக தொழிலாளர்களின் நிலவுரிமையை உறுதி செய்யவும் கோருகின்றது. ஆனால் காலிமுகத்திடல் போராட்டம் இந்த நிபந்தனைகளைப் பற்றி எவ்வித கரிசனையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

கடன்களை திருப்பிச் செலுத்த முடியாது என இலங்கை அறிவிக்க வேண்டும்:

இலங்கை அனைத்து கடன்களையும் இரத்து செய்ய வேண்டும். கடன்களை மீளக் கட்ட முடியாது என்பதை வெளிப்படையாகக் அறிவிக்க வேண்டும் என என்னுடைய முன்னைய பதிவுகளிலும் ஆணித்தரமாகக் குறிப்பிட்டு இருந்தேன். ஏற்கனவே பல தனிப்பட்ட கடன்களை கட்ட முடியாத நிலையில் அக்கடன்களை இலங்கை இரத்துசெய்துள்ளது. ஆனால் நாடுகளுக்கு இடையிலான பன்நிலைக் கடன்களை செலுத்த முயற்சிக்கின்றனர். இக்கடன்களையும் இலங்கை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். புதிதாகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க மேலும் கடன் வாங்கி, கடன்களை திருப்பிச் செலுத்த முயற்சிக்கின்றார். உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் முகவராக இயங்கும் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் நலன்களை முன்னிலைப்படுத்தவில்லை.

அவர் அமெரிக்க தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் ‘உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருவது பாதுகாப்பானதா என்று கேட்கப்பட்ட போது, “அவர்களும் காலிமுகத்திடலில் வந்து போராட்டத்தில் கலந்து கொள்ளலாம்” என்று குறிப்பிட்டார். அவருக்கு கேள்வியின் ஆழம் புரியவில்லை என்பதால் அதே கேள்வி திருப்பிக் கேட்கப்பட்ட போதும் ரணில் விக்கிரமசிங்க உல்லாசப் பயணிகளின் வருகையை வரவேற்று கருத்துத் தெரிவிக்கவில்லை. இலங்கை மக்கள் மீது அழுத்தங்களை இறுக்கி அவர்களை இயலாமையின் விழிம்பில் பணயம் வைத்து, தங்கள் நிபந்தனைகளுக்கு பணிய வைக்கவே அனைத்து முயற்சிகளையும் ரணிலும் – சர்வதேச நாணய நிதியமும் மேற்கொள்கின்றது.

இலங்கை ஆண்டுக்கு 7 முதல் 9 பில்லியன் டாலர்களை 51 பில்லியன் வெளிநாட்டு கடன்களை கட்டுவதற்கு செலுத்துகின்றது. அறவட்டிக்கு வாங்கப்பட்ட இக்கடன்களை தொடர்ந்தும் செலுத்தினால் பெற்றோல், மருந்து மற்றும் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான டொலர் கையிருப்பு இருக்காது. அதனால் அரசு உடனடியாக அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். கடன்களை மீளச்செலுத்துவதற்கான மீள்வரையறை செய்வது இப்போதுள்ள நெருக்கடியை சற்றுத் தள்ளிப்போடவே வழிவகுக்கும். அரசு தற்போது கூட்டு முடிவை எடுப்பதாக இல்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களின் நலனிலும் பார்க்க உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் நலனிலேயே கூடுதலாக அக்கறைகொள்கின்றார்.

‘பணவீக்கம்’ மிகத் தவறான சொற்பாவனை – விலை வீக்கம் என்பதே சரியானது:

தமிழில் தற்சமயம் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்களில் ஒன்று ‘பணவீக்கம்’ இந்தச் சொல்லானது அடிப்படையிலேயே மிகத் தவறான சொல். ஆங்கிலத்தில் இன்பிளேஷன் – inflation என்ற சொல் பொருளாதாரத்தில் மிக முக்கியமானது. அது குறித்த காலப்பகுதியில் பொருட்களின் விலையுயர்வை குறிக்கும். இன்பிளேஷன் – inflation என்பது வீக்கத்தை குறிக்கும். எமது உடலில் ஏற்படும் வீக்கம் முதல் பலூனை ஊதுவது எல்லாமே இன்பிளேயர் – inflare என்ற லத்தீன் சொல்லில் இருந்து ஆங்கிலத்திற்குச் சென்றது. ‘காற்றடித்து பெரிதாவது’ என்பதை அது குறிக்கும். இதனை தமிழில் ‘பணவீக்கம்’ என்கின்றனர். அதன் தமிழாக்கத்தின்படி வீக்கம் என்பது ‘பெரிதாவது’. அதாவது ‘பணவீக்கம்’ என்பது பணத்தின் பெறுமதி அதிகரிப்பது என்றே அர்த்தப்படும். பணத்தின் பெறுமதி அதிகரிப்பது ஒரு பொருளாதாரத்திற்கு சாதகமான விடயம். ஆனால் அதனை புரிதல் இல்லாமல் பாவிக்கின்றனர். பணவீக்கம் என்பது ஆங்கிலத்தில் அப்பிரிசியேஷன் – appreciation என்பார்கள். அதாவது பணத்தின் பெறுமதி அதிகரிப்பது. பணத்தின் பெறுமதி ஒடுங்கினால் அல்லது வீழ்ந்தால் அதனை டிப்பிரிசியேஷன் – depreciation என்பார்கள். பதங்களின் உண்மையான அடிப்படையில் இலங்கையில் தற்போது ஏற்பட்டு இருப்பது பணஒடுக்கமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட விலைவிக்கமும் ஆகும். இதனைப் புரியாமல் விலையுயர்வை பணவீக்கம் என்று குறிப்பிடுவதன் மூலம் பொருளாதாரத்தின் அடிப்படை விதிகளையே போட்டுக் குழப்புகின்றனர். பல்கலைக்கழகங்கள் இவை தொடர்பில் சொற்களஞ்சியத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.

விலைகள் ஏன் உயர்கின்றது:

ஒரு நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு: 1) பொருட்களின் சேவைகளின் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் (போக்குவரத்துச் செலவு உட்பட) விலை அதிகரிக்கின்ற போது – cost push inflation 2) பொருட்களுக்கான தேவை கேள்வி அதிகரிக்கின்ற போது – demand pull inflation 3) நாட்டின் பணத்தின் பெறுமதி வீழ்ச்சி அடையும் போது அதாவது பணஒடுக்கம் – currency depreciation ஏற்படும் போது (இறுக்குமதி செய்கின்ற) பொருட்களின் விலை அதிகரிக்கும். இலங்கையில் மட்டுமல்லாது கோவிட் தாக்கத்தில் இருந்து வெளிவரும் உலகின் பெரும்பாலான நாடுகளின் நிலை இதுவே.

கோவிட் காலத்தில் பெரும் வேலையிழப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்த்த போதும் அமெரிக்கா, பிரித்தானியா, இலங்கை போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வேலையிழப்புகள் ஏற்படவில்லை. பெரும்பாலும் சம்பளம் வழங்கப்பட்டது. மேலும் அரச உதவிகளும் மற்றும் உதவிகளும் மக்களுக்கு கிடைத்தது. ஆனால் சாதாரண காலத்து செலவீனங்கள் அளவுக்கு அவர்களுக்கு செலவீனங்கள் ஏற்படவில்லை. நாடுகள் முடக்கத்தில் இருந்ததால் செலவழிப்பதற்கான வாய்ப்பும் இருக்கவில்லை. அதனால் முடக்கத்தில் இருந்து நாடுகள் தங்களைத் திறக்க ஆரம்பித்ததும் மக்கள் தாராளமாகவே செலவழிக்க ஆரம்பித்தனர். அதனால் பொருட்களுக்கான தேவையும் கேள்வியும் அதிகரித்தது. ஆனால் நாடுகள் திறக்கப்பட்ட வேகத்திற்கு தொழிற்காலைகள் திறக்கப்படவில்லை. உற்பத்திகள் குறைந்தது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விநியோகத்திலும் தடங்கல் ஏற்பட்டது. குறிப்பாக உலகின் தொழிற்சாலையாக இருக்கும் சீனாவின் சில பகுதிகள் மாறி மாறி தொடர்ந்தும் முடக்கத்திலேயே இருக்கின்றது. அதனால் விநியோகத்தில் தடை அது பொருட்களின் விலையை மேலும் அதிகரித்தது. – Demand pull inflation.

கோவிட் முடிவில் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தன் மூலம் உலகில் எரிபொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டது. அனைத்து உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் எரிபொருள் தவிர்க்க முடியாதவொன்று. அதனால் பொருட்களின் விலை மேலும் எகிறியது. Cost push inflation.

ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி இன்னுமொரு நாட்டின் நாணயத்தின் பெறுமதியோடு ஒப்பிட்டே தீர்மானிக்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கை மத்திய வங்கி நிதி நிலையைச் சமாளிக்க ஒரு சோம்பேறித்தனமான முடிவை எடுத்தது. பணத்தை அச்சிட்டு (quantitative easing) புழக்கத்தில் விட்டது. இது பணத்தின் பெறுமதியை மேலும் வீழ்ச்சியடையச் செய்தது. பணத்தின் பெறுமதி வீழ்ச்சியடைய பணஒடுக்கம் (currency depreciation) ஏற்பட இறுக்குமதிப் பொருட்களுக்கு நாங்கள் செலுத்தவேண்டிய பணத்தின் அளவு அதிகரித்தது. பொருட்களின் விலைவீக்கமடைந்தது (விலையுயர்வு).

இலங்கையின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகம்:

பணத்தின் பெறுமதி வீழ்ச்சி அடைவது அல்லது பணஒடுக்கம் முற்றிலும் மோசமானது அல்ல. இலங்கை ஏற்றுமதி வர்த்தகத்தை கூடுதலாக செய்யும் நாடாக இருந்திருந்தால் எமது பொருட்களின் விலை உலக சந்தையில் குறைந்திருக்கும். அதனால் ஏற்றுமதி அதிகரித்து இருக்கும். ஆனால் இலங்கை கூடுதலாக இறக்குமதியையும் மிகக் குறைந்தளவில் ஏற்றுமதியையும் செய்வதால் அதுவும் இலங்கைக்கு பாதகமானதாகி உள்ளது. ஒவ்வொரு நாடும் இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிப்பதையே செயற்திட்டமாகக் கொண்டுள்ளது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம், சீனா அமெரிக்காவினுடைய பொருட்களை இறக்குமதி செய்யும் அளவைக் கூட்ட வேண்டும் என்று அந்நாட்டோடு ஒரு வர்த்தக யுத்தத்தையே மேற்கொண்டார். உலகமயமாதல் – globalization மூலம் தங்களை வளர்த்துக்கொண்ட பெரு முதலாளித்துவ நாடுகளான அமெரிக்காவும் பிரித்தானியாவும் அவற்றின் நட்பு நாடுகளும் தற்போது அதே உலகமயமாதல் தங்களுக்கு சாதகமாக இல்லை என்றதும் திறந்த சந்தைப் பொருளாதாரத்தோடு (open market economy) தங்கள் நாடுகளில் பொருளாதார பாதுகாப்பு கொள்கையை (protectionism) கொண்டு வருகின்றனர். அவர்கள் கோருவதெல்லாம் தாங்கள் உலகெங்கும் சென்று சுரண்டுவதற்கான உரிமையை மட்டுமே. ஆனால் ஆசிய, ஆபிரிக்க நாடுகள் தங்கள் நாடுகளுக்குள் பொருட்களை கொண்டுவரக்கூடாது.

அதனால் சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் இலங்கை போன்ற நாடுகள் ஏற்றுமதி செய்வதை செய்வதை ஒரு போதும் ஊக்கப்படுத்தாது. அவர்களை இறக்குமதியாளர்களாகவும் கடன்காரர்களாகவுமே வைத்திருக்கும். சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக இருந்த 1970க்களில் கொண்டுவரப்பட்ட கடுமையான தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கையால் 1977இல் மட்டும் இலங்கையில் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் ஏற்றுமதி கூடுதலாக இருந்தது. ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் சக 3.6 வீதமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்ததும் 1980இல் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக விகிதாசாரம் சய (எதிர்மறையானது) 22.5 வீதமானது. இன்று வரை இந்த ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக விகிதாசாரம் எதிர்மறையாகவே உள்ளது. தற்போது இது சய மூன்று வீத்திலும் குறைந்திருக்கும்.

இப்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை நாங்கள் பயப்படும் அளவுக்கு ஆபத்தானது அல்ல. இச்சூழலை சாதகமாக்கவும் வாய்ப்பு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்த வெளிநாட்டவர், தற்போது உலகம் சுற்ற விரும்புகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள நாணய ஒடுக்கும் அல்லது நாணயத்தின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இலங்கையின் உல்லாசப் பயணத்துறைக்கு ஒரு வரப்பிரசாதம். இலங்கைக்கு அந்நியச் செலவாணியை ஈட்டித்தரும் முக்கியமான துறை இது. போராடுகிறோம் என்ற பெயரில் சர்வதேச நாயண நிதியத்திற்கும் உலக வங்கிக்கும் நாட்டை தாரைவார்க்காமல், எங்கள் நாட்டுக்கு வந்து குறைந்த செலவில் எம் நாட்டின் அழகை ரசியுங்கள். எங்கள் கலை கலாச்சாரங்களை அறியுங்கள் என்று உல்லாசப் பயணிகளுக்கு செங்கம்பள வரவேற்பளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு போராடுகிறோம், எரிக்கிறோம், கொழுத்துகிறோம் என்பதெல்லம் கஞ்சி ஊத்தாது.

இப்பொருளாதார நெருக்கடியை ஒவ்வொருவரும் நாட்டிற்கு சாதகமானதாக்க வேண்டும். நாட்டினை தற்சார்புப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்த வேண்டும். உள்ளுர் உற்பத்திகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அதரிக்கப்பட வேண்டும். தரமாக்கப்பட வேண்டும். அத்தியவசியமற்ற சர்வதேச பொருட்களை கொக்கோ கோலா முதல் பஜ்ரோ வரை மக்கள் நிராகரிக்க வேண்டும். இவற்றின் இறக்குமதிகள் தடுக்கப்பட வேண்டும். ‘மேட் இன் சிறிலங்கா – made in Sri Lanka’ என்ற சொல்லுமளவிற்கு பல்கலைக்கழகங்கள் உள்ளுர் உற்பத்தியை நோக்கி நாட்டை நகர்த்த வேண்டும்.

யாழ் பல்கலைக்கழக உப வேந்தரின் ஆதங்கம்:

இது பற்றி யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ் சற்குணராஜா தனது ஆழமான விசனத்தை வெளிப்படுத்தி உள்ளார். தமிழ் அரசியல் தலைவர்களை பிச்சைக்கராரர் என்றும் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை ‘கொழும்பு செவன்’ இறக்குமதி என்றும் கடுமையாகத் தாக்கி உள்ளார். வடக்கு – கிழக்கு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் ஒருவர் இவ்வளவு துணிச்சலாக தனது கருத்தை வெளிப்படுத்தி இருப்பது இதுவே முதற் தடவை என நினைக்கிறேன். சில வாரங்களுக்கு முன் அவர் ஆற்றிய உரையில்: “இப்போது வோஷிங்டனில் இருந்து பத்தரமுல்ல வரை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் ஆண்களோ பெண்களோ most of them GCE(O/L) qualified இல்லை. அவர்களால் எப்படி எங்களை lead பண்ண இயலும். blind serve the blind என்று சொல்வார் என்னுடைய மாஸ்டர். நாங்கள் தான் எங்களை lead பண்ண வேண்டும். எங்கட பலம் strength என்ன என்று பார்க்க வேண்டும். எங்களுடைய பலவீனம் weakness என்ன என்று பார்க்க வேண்டும். எங்கட தமிழ் கலாசாரத்தில தமிழ் கலாசாரத்தில, சுதந்திரத்தைப் பற்றி கதைக்கிறத விட துரோகிய பற்றி கதைக்கிறதுதான் கூட. Parliment வேண்டாம் pajero வேண்டாம் permit வேண்டாம் extra disel வேண்டாம் என்றெல்லாம் சும்மா சொல்றது. எங்களுடைய அரசியல்வாதிகள் எல்லாம் beggars (பிச்சைக்காரர்கள்). ஏன் நீங்கள் பங்ளோவில இருக்கிறியல்.

இன்றைக்கு ஆயிரம் விதவைகள் இருக்கிறார்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம். Women lead families எங்களிடம் ஒரு பிளானும் இல்ல. நாங்கள் அடுத்த மாகாண சபை வருதென்றால் உடனே வேர்த்து விறுவிருத்து statementவிடத் தொடங்கிடுவோம். மோடி, அம்பேத்கர் அவங்க தங்கட ambassador இல்ல வாராங்க. நாங்க அந்நியத்தை நாடுறம்.

இன்றைக்கு மினி யாழ்ப்பாணம் எங்கிருக்கு. வெள்ளவத்தையில் இருக்கு. விட்ட நிலத்தில் சீவிக்க ஆட்களில்லை. எங்களுக்கு நாட்டம் அங்க. கொழும்பு செவன் வடக்கையும் கிழக்கையும் கண்டுகொள்ளயில்ல. ஆனால் எங்களுடைய weakness ஆடி… அடி… அடி… அடிச்சால் எல்லாத்தையும் weak ஆக்கிக் கொடுத்தால் எதிரிக்கு சுகம். இப்ப நாங்கள் politicianனையும் கொழும்பில் இருந்து import பண்ணற அளவுக்கு போய்ட்டம். நாங்க அந்நியத்தை நாடினால் என்ன நடக்கும்? இப்ப இருக்கும் economic இந்த problem எங்க கொண்டு போய் முடிக்கும் என்று தெரியாது. ஒருவர் ஒருவர் அடிச்சுக் கொல்லலாம், இன்னும் கொஞ்ச நாளில். Body guard போட்டுத் தடுக்க இயலாது. நடக்கலாம். இதெல்லாம் கன நாடுகளில் நடந்திருக்கு. இப்படியே போனால் என்ன நடக்குமோ எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு மார்ட்டின் லூதர் கிங் வேணும். மொரார்ஜி தேசாய் வேணும். மாவோ சேத்துங் வேணும், லெனின் வேணும்” என்று தமிழ் மக்களிடம் சீரான ஒரு அரசியல் தலைமையில்லாத ஆதங்கத்தைக் கொட்டினார்.

துணைவேந்தர் எஸ் சற்குணராஜா தொடர்ந்தும் குறிப்பிடுகையில்: “எத்தனை சாம்ராஜ்யங்கள் உலகத்தில் இருந்திருக்கு. பாபிலோனியா சாம்ராஜ்யம். இன்றைக்கு பாருங்கள் ஈராக் எப்படி இருக்கிறதென்று? எகிப்திய சாம்ராஜ்யம் எப்படியிருக்கு? இன்றைக்கு பிரிட்டன் மூன்றாம் உலக நாடாக போயிருக்கும், Northsea oil கண்டுபிடிக்காட்டி. நாம் deserving ஆக இருந்தால் எம்மை யாரும் அடிமைப்படுத்த இயலாது. இது natural law. இதில் பெண் என்றால் என்ன? ஆண் என்றால் என்ன?

சுதந்திர சரித்திரத்தை இவர்கள் சுதந்திரத்திற்கு பின்தான் கதைக்கிறார்கள். எமக்கு 2000 ஆண்டு 3000 ஆண்டு history இருக்கிறது. நல்லுரடிக்கு போனால் ஆட்கள் தரிசனத்திற்கு போகிறார்கள். பெரிய பெரிய தலங்களுக்கு எல்லாம் தரிசனத்திற்கு போகிறார்கள். ஆனால் அதில பிச்சைக்காரரகள் எப்பொழுதும் அங்கு இருக்கிறார்கள். 24 மணித்தியாலயமும். ஆனால் அவர்களுக்கு ஏதாவது ஆத்ம சித்தி கிடைத்ததா என்றால் இல்லை. 24 மணித்தியாலயமும் அந்தத் தளத்தில் இருக்கிறார்கள். ஏன் என்றால் அவர்களின் சிந்தனை முழுவதும் ரொட்டித் துண்டும் பிளேன் டீ யும். உயர்ந்த சிந்தனை இல்லை. Vision தான் முதல் எங்களுடைய பலம். எங்களுக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது. எங்களுக்கு ஒரு கலை இருக்கு, எங்களுக்கு ஒரு அழிவில்லா மொழி இருக்கு. அழிவில்லாத மொழி எங்களுக்கு. அப்படி பொக்கிஷங்கள் இருக்கு. இன்றைக்கு எங்களுக்கு knowledge நிறைய வேணும்” என்று சொல்லி தமிழ் மக்களில் மாற்றத்தை வேண்டி எஸ் சற்குணராஜா தன்னுரையை முடித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அமைச்சர்கள் காலிமுகத்திடல் போராளிகள் உட்பட அனைவரும் ஒரே குரலில் சிறிலங்கா பெஸ்ற் – Sri Lanka First, ருறிஸ்ற் ஹம் ஹோம் – Tourists Come Home, மேட் இன் சிறிலங்கா – Made in Sri Lanka என்ற கோசங்களை முன் வைக்க வேண்டும். எந்தக் கடனையும் மீளச் செலுத்த முடியாது என அறிவிக்க வேண்டும். இலவசக் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் அந்நாட்டை தோள்களில் தாங்கக் கூடிய கல்விச் சமூகத்தை உருவாக்க வேண்டுமெயொழிய பட்டத்தை பெற்றபின் வேலையையும் வாங்கித் தரச்சொல்லி போராடும் சோம்பேறிக் கூட்டத்தை உருவாக்கக் கூடாது. அப்படிச் செய்தால் நிச்சயம் இலங்கை சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கிச் செல்லும்.

அரப் ஸ்பிரிங் (Arab Spring) முதல் காலிமுகத்திடல் ஸ்பிரிங் (Galleface Spring) வரை போராட்டங்கள் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்குமா? இந்தப் போராட்டங்கள் யாருக்காக?

காலிமுகத்திடலில் அசௌகரியத்தை விரும்பாத உயர் மத்திய வர்க்கம் எரிவாயு, பெற்றோல் இல்லாமையால் போராட புறப்படுவதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்னதாகவே மத்திய கிழக்கு நாடுகளில் கணணி இளைஞர்கள் அந்நாடுகளில் இடம்பெற்று வந்த லஞ்சம், ஊழல் தொடர்பில் முறுகல் நிலையில் இருந்தனர். அதற்குப் பொறிதட்டும் வகையில் 2010 டிசம்பரில் ருனிசியாவில் தள்ளுவண்டி வியாபாரி ஒருவரிடம் பொலிசார் லஞ்சம் கேட்டு அவமானப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அத்தொழிலாளி தீக்குளித்து மரணித்தார். அத்தொழிலாளி தன் மீது வைத்த தீ, மத்திய கிழக்கில் பல நாடுகளுக்கும் பரவியது. பரப்பப்பட்டது. போராட்டங்கள் வெடித்தது.

புரட்சி வெடித்துவிட்டதாக, நவகாலனித்துவம் சரிந்து விட்டதாக கீ போட் மார்க்ஸிட்டுக்கள் ‘தண்ணி அடிக்காமலேயே உளற ஆரம்பித்தனர். கட்டுரை, கட்டுரையாக எழுதித் தள்ளினர். ஒருபடி மேலே போய் முதலாளித்துவத்திற்கு சாவு மணி அடிக்கப்பட்டுவிட்டதாகவும் எழுதினர். ருனிசீயா, எகிப்து, யேமன், லிபியா என சிரியாவுக்கும் பரவிய இப்புரட்சியில் அமெரிக்க – பிரித்தானிய முதலாளித்துவக் கூட்டும் குளிர்காய்ந்தது. இந்த ‘அராபிய புரட்சி’யில் 180,000 பேர் உயிரிழந்தனர். ஆறு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர். ருனிசியா தவிர்ந்த அரப் ஸ்பிரிங் நடைபெற்ற நாடுகள், அவை முன்னிருந்த நிலையைக் காட்டிலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டன. வாழ்நிலை மிகக் கீழ்நிலைக்கு சென்றது மட்டுமல்ல, இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பின்னும் அவை முன்னைய நிலைக்கு வருமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

ஜேவிபி கிளர்ச்சி:

1971இல் இரவோடு இரவாக அதிகாரத்தை கைப்பற்றலாம் என்ற நம்பிக்கையில் ஜேவிபி புரட்சியில் இறங்கியது. இதற்காகப் போடப்பட்ட ஊரடங்கு காலத்தில் 1971 மார்ச்சில் தான் நானும் இவ்வுலகில் இலங்கையின் கலாச்சார தலைநகரான அனுராதபுரத்தில் அவதரித்தேன். 1971 ஜேவிபி புரட்சியில் என்ன நடந்தது? பிரேமாவதி மன்னம்பேரி என்ற கிராமத்து அழகியை நிர்வாணமாக்கி தெருவில் இழுத்துச் சென்று படுகொலை செய்தனர். இவ்வாறு பல்லாயிரக்கணக்காண இளைஞர்கள் யுவதிகள் கொன்றொழிக்கப்பட்டனர். இன்று ஜேவிபியின் ஒரு பகுதி அரசோடு, மறுபகுதி போராட்டகளத்தில், அதிலும் ஒரு பகுதி இந்த தீவைப்புகளுக்குப் பின்னால்.

தமிழீழ விடுதலைப் போராட்டம்:

மேதகுவில் 1980க்களின் முற்பகுதில் பஸ்க்கு தீ வைத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக கதை சொல்லப்படுகின்றது. முப்பது ஆண்டு தமிழீழ விடுதலைப் போராட்டம் முடிவுக்கு தள்ளப்பட்டு, பத்தாண்டுகள் கடந்து; இன்று நாற்பது ஆண்டுகளில் தமிழ் மக்கள்; எண்பதுக்களில் இருந்த அரசியல் பொருளாதார நிலைகளிலும் பார்க்க கீழான அரசியல் பொருளாதார நிலையிலேயே கொண்டு வந்து நிறுத்தப்பட்டு உள்ளனர். போராட்டம் என்ற பெயரில் கொடுத்த உயிரிழப்புகள், பொருளிழப்புகள் எதுவும் தமிழர்களின் அரசியல் பொருளாதார நிலைகளை உயர்த்த தவறிவிட்டது மட்டுமல்லாமல் இன்னமும் கீழ்நிலைக்குத் தள்ளிவிட்டன.

தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார உரிமைகளில் அறிவுபூர்வமான நம்பிக்கை கொண்ட, அதற்காக இதயபூர்வமாக தங்களை அர்ப்பணிக்கத்தக்க அரசியல் தலைமைகள் போராட்டத்தை தலைமை தாங்க வரவில்லை. உணச்சிவசப்பட்ட இளைஞர்களால் உந்தப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டம், அதன் முளையிலேயே தன் இலக்கை இழந்தது. தனிமனித வழிபாட்டிலும் அதற்காக சகோதரப் படுகொலைகளிலும் இறங்கியது. சிந்தனையும் இதயமும் தமிழீழ விடுதலையை கைவிட்டு, தனிமனித வழிபாடே போராட்டமான பின், தமிழீழம் முளையிலேயே கருகிவிட்டது. அதன் பின் இடம்பெற்றதெல்லாம் வெறும் அதிகாரத்துக்கான போட்டியே. பலமுடையவர்கள் பலமிழந்தவர்களை அழித்தொழித்தனர். நடந்து முடிந்தது விடுதலைப் போராட்டமே அல்ல. உணர்ச்சிக்கு அடிமையாகி போராட்டம் என்ற பெயரில் தமிழர்கள் சாதித்தது என்ன? தமிழர்களுக்கு கிடைத்தது வெறும் ஒப்பாரியும் சேதமும் தான். இந்த ஒப்பாரியை வைத்துக்கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் எஸ் சிறீதரனும் சாணக்கியணும் இன்னும் இன்னும் பேர்களும் பாராளுமன்றம் போய் தம்பட்டம் அடிப்பதும் அவர்களது வாக்கு வங்கியை பலப்படுத்துவதும் தான் இன்றும் நடைபெறுகின்றது.

காலிமுகத்திடல் போராட்டம்:

இப்போது இதே பாதையில் காலிமுகத்திடலில் போராடியவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரிக்கிறோம், கார்களை எரிக்கின்றோம், பஸ்களை எரிக்கின்றோம் என்று நெருப்பை பற்ற வைத்துக்கொண்டுள்ளனர். இவர்களுடைய கூட்டுஉளவியல் அராஜகம் இலங்கை எதிர்நோக்குகின்ற எந்தப் பிரச்சினைக்கும் தீர்வாகப் போவதில்லை. பதவியில் இருந்து இறக்கப்பட்ட ராஜபக்ச அடியாட்களை இறக்கி போராட்ட காரர்களை தாக்கியதால், மக்கள் கொதித்து எழுந்து; ஆனால் மிகத் திட்டமிட்டு முப்பது வரையான பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீவைத்தது என்பது சற்று ஆச்சரியம் தான். மிகவும் உசார் நிலையில் இருந்த பாதுகாப்புப் படைகள் ஒரு வீடு எரிக்கப்பட்ட பின்னும் ஏனைய வீடுகளுக்கு பாதுகாப்பு வழங்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்ததும் அதைவிட ஆச்சரியமானது தான். இலங்கைப் பாதுகாப்புப் படைகள் இவ்வளவு கண்ணியாமாக இயங்குகின்றன என கோத்தபாய ராஜபக்ச நிரூபிக்க முயற்சிக்கிறாரோ என்று எண்ணத் தோண்றுகிறது. அதற்குப் பின் மேற்குலகின் செல்லப் பிள்ளையான ரணில் விக்கிரமசிங்க பிரதமராக்கப்பட்டார். மேற்கு நாடுகள் நான் முந்தி நீ முந்தி என்று தங்கள் வாழ்த்துக்களை நேரில் சென்று தெரிவித்துக்கொண்டுள்ளன. காலிமுகத் திடல் ஸ்பிரிங் – காத்து வாங்கும் போராட்டம் தனது இலக்கை எட்டியது?

இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் போராட்டத்தை துண்டிவிட்டவர்களுக்கு எவ்வித அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலருக்கும் அவர்களுடைய பிரச்சினை தங்களுக்கு பெற்றொல், எரிவாயு கிடைக்கவில்லை என்பதே. பொருட்கள் விலையேறுகிறது என்பது உண்மை தான். மக்கள் அப்படித்தான் இருப்பார்கள், அவர்களுக்கு அரசியல் பொருளாதாரம் தொடர்பாக பெரிய புரிதல் இருப்பதில்லை என்பது உண்மைதான். இலவசக் கல்வியில் பல்கலைக்கழகம் வரை சென்று படித்துவந்த இளம்தலைமுறையினரும் இப்படி இருந்தால் சனநாயகம் எப்படி இயங்கும்? இந்த பொருளாதார பிரச்சினை பற்றி ஊடகங்களும் தங்களுடைய 24 மணிநேரச் செய்தியை நிரப்ப உணர்ச்சி பூர்வமான செய்திகளுக்கு மட்டுமே அலைகின்றன.

ஒரு பிரச்சினை வந்தால் பழியை யார் மீதாவது போட்டுவிட்டு போவதே வேலையாகிப் போய்விட்டது. பிறகு அதை வைத்து நாலு பேரை உசுப்பேத்தி எரிக்கிறது, கொழுத்துகிறது என்று தான் சுதந்திர இலங்iகியின் அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு இன, மத பேதம் எதுவும் கிடையாது. ஆரம்பத்தில் சிங்கள இளைஞர், யுவதிகளை அரசு கொன்று குவித்தது. அதன் பின் தமிழர்களை அரசு கொன்று குவித்தது. பின் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என அரசு வன்முறையை அவிழ்த்து விட்டது. இப்போது இரண்டாவது சுற்று ஆரம்பித்துள்ளது.

போராட்டத்தை தூண்டியவர்களையும் போராட வந்தவர்களையும் காக்க மேற்கின் செல்லப் பிள்ளை ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவிக்கு கொண்டுவரப்பட்டுவிட்டார். அதிஸ்ரவசமாக விரல் விட்டு எண்ணக் கூடிய கொலைகளுக்குள் ‘போராட்டம்’ தணிய ஆரம்பித்துள்ளது. வாக்குகளால் பதவிக்கு வரமுடியாத ரணில் விக்கிரமசிங்க போராட்டம் என்ற பெயரில் இடம்பெற்ற தீ வைப்புகள் கொலைகளைத் தொடர்ந்து பதவிக்கு கொண்டுவரப்பட்டார்.

ரணில் விக்கிரமசிங்க பதவிக்கு வந்தது எப்படி பொருளாதார பிரச்சினைக்கும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட ‘போராட்டத்துக்கும்’ தீர்வானது? இது தான் மேற்குலகின் மாயா ஜாலம். ஆரப் ஸ்பிரிங் முதல் கோல்பேஸ் ஸ்பிரிங் வரை போராட்டங்களை மேற்குலகு தனக்கான வரப்பிரசாதமாக மாற்றிக் கொள்வதில் மிகக் கைதேர்ந்தவர்கள். ஆனால் போராட்டத்தை தூண்டுபவர்கள், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் உணர்ச்சி வசப்பட்ட முட்டாள்களாகவே உள்ளனர். அவர்களை வழிநடத்துவதற்கான புரட்சிகர சிந்தனையுடைய கட்சிகள் அங்கு இல்லை. அவ்வாறு இருந்தாலும் அவர்கள் முகவரி அற்றவர்களாகவே உள்ளனர் அல்லது இந்த அலைக்குள் அவர்களும் அள்ளுண்டு விடுகின்றனர்.

நாட்டின் பொருளாதார நிலையை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக இந்த் சூழலை மாற்றுவதற்கு பதிலாக அவரவர் தங்கள் குறுகிய அரசியல் லாபங்களுக்காக எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்றளவில் செயற்பட்டனர். மற்றும்படி எவ்வித அடிப்படை மாற்றத்தையும் அவர்களால் முன்வைக்க முடியவில்லை. ராஜபக்ச குடும்பம் கொன்றொழிக்கப்பட வேண்டிய நரகாசுரர்களாகவும் இந்தியாவும் மேற்குலகும் இலங்கையை காப்பாற்ற வந்த தேவதூதர்களாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய பொருளாதார நெருக்கடியின் பின்னணி:

இன்றைய பொருளாதார நெருக்கடியை ராஜபக்ச குடும்பத்திற்குள் போட்டு மூடி மறைப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்குச் சமன். ராஜபக்ச ஒன்றும் புனிதரும் அல்ல போராடுபவர்கள் யாவரும் பொறுப்பற்றவர்களும் அல்ல. வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் 24 மணி நேரத்தலைப்புச் செய்திகளுக்கு மட்டுமே பயன்படும்.

இரண்டாம் உலகப் போரில் ரஷ்யாவின் சோசலிச விரிவாக்கத்தை தடுக்கவே அமெரிக்கா ஜப்பானில் ஹிரோசிமா மற்றும் நாகசாக்கி நகரங்களில் அணு ஆயதங்களை பரீட்சித்துப், பல லட்சம் மக்களைக் கொன்றுகுவித்தது. இப்போது உக்ரைனில் ஆயதங்களை குவித்து வருவதும் நேட்டோவை விஸ்தரித்து தன்னுடைய சந்தைப் பொருளாதாரத்தை விரிவாக்கவே. அமேரிக்கா பேசுகின்ற ஜனநாயகம், மனித உரிமைகள் அனைத்துமே மிகப் போலித்தனமானவை. அவர்கள் ஜனநாயகம் மனித உரிமைகள் பேசுவது சந்தைப் பொருளாதாரத்தை விஸ்தரிப்பதற்கு மட்டுமே.

இச்செய்தியை எழுதிக்கொண்டிருக்கின்ற போதே அமெரிக்காவில் வெள்ளை இனவாதி ஒருவர் கறுப்பின மக்கள் வாழும் பகுதியில் உள்ள சுப்பர்மாக்கற்றினுள் புகந்து பத்துப் பேரைப் படுகொலை செய்துள்ளார். அமெரிக்கா உலகெங்கும் ஆயதங்களை விற்று உலக சமாதானத்தை அழித்துவரவது மட்டுமல்ல தன்னுடைய நாட்டிலும் சமாதானத்தை அழித்து வருகின்றது. கொரோனா காலத்தில் அவரவர் பஞ்சம் வந்துவிடும் என உணவுப் பொருட்களை வாங்கி வீட்டில் சேர்க்க அமெரிக்காவில் ஆயுதங்களையும் தோட்டாக்களையும் வாங்கிக் குவித்தனர். தற்பாதுகாப்பிற்காம். இவர்கள் தன்னியக்க துப்பாக்கிகளை வாங்கியது என்ன கொரோனா வைரஸை சுடுவதற்கா?

புரட்சிக்கு எதிரான அபிவிருத்திக் கொள்கை:

இந்த இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து பல நாடுகள் தங்கள் காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திரமடைய ஆரம்பித்தன. அந்தக் காலகட்டத்தில் தான் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளும் சுதந்திரமடைந்தன. இவ்வாறு சுதந்திரம் அடையும் நாடுகள் சோசலிச முகாமுக்குள் சாய்ந்து பொருளாதார தன்னிறைவடைந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களை தன்னுடைய முதலாளித்துவ கொள்கையின்பால் ஈர்த்து கடன்காராக, காலம்பூராவும் நவகாலனித்துவத்திற்குள் வைத்திருப்பதற்கு ஒரு கொள்கைத் திட்டத்தை வகுத்தது, முதலாளித்துவத்திற்கு தலைமை தாங்கிய அமெரிக்க – பிரித்தானிய நாடுகள். அது தான் புரட்சிக்கு எதிரான அபிவிருத்திக் கொள்கை.

ஒரு நாடு சுதந்திரம் அடைந்து சொந்தக் காலில் நிற்பதற்கு, பொருளாதார வளம் அவசியமாக இருந்தது. இந்தப் புரட்சிக்கு எதிரான அபிவிருத்தி கொள்கைத் திட்டத்தினூடாக அமெரிக்கா – பிரித்தானிய நாடுகள் இந்த சுதந்திர நாடுகளுக்குள் தங்கள் மூலதனத்தை ஊடுருவச் செய்து, அந்நாடுகளை தமது நவகாலனிகள் ஆக்கின. அது எவ்வாறு? உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மூலமாக அந்நாடுகளை கடன்காரர் ஆக்குவது. இறக்குமதிகளை ஊக்குவித்து; தங்கள் நாடுகளின் பொருட்களை இறக்குமதி செய்ய வைத்து; நுகர்வோர் கலாச்சாரத்தை தூண்டிவிட்டு; நாட்டையும் நாட்டு மக்களையும் கடன்காரர் ஆக்குவது. பின் கடன்காரர்களாக வைத்திருப்பதற்காக, நிபந்தனைகளை விதிப்பது. தாங்கள் இந்நாடுகளை தொடர்ந்தும் சுரண்டுவதற்கு வாய்ப்பாக திறந்த சந்தைப் பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது, இந்த வல்லாதிக்க நாடுகளின் நிபந்தனையாக இருந்தது. இலங்கை போன்ற சிறிய நாடுகளால் இந்த வல்லாதிக்க சக்திகளுக்கு எதிராகச் செயற்பட முடியாத நிலை. அதனால் படிப்படியாக நட்டை அந்நிய சக்திகளிள் சுரண்டலுக்கு அனுமதித்தனர்.

உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் இந்த வல்லாதிக்க சக்திகளின் முகவர்களே. உலகம் முழவதும் கொடும்கோலர்களுக்கும் சர்வதிகாரிகளுக்கும் (சதாம் ஹ_சைன், முகம்மர் கடாபி, ரொபேட் முகாபே, ஹொஸ்னி முபாரக், பேர்டினட் மார்க்கோஸ்) எதிர் புரட்சிகர அபிவிருத்திக் கொள்கையினூடாக வாரி இறைத்து அந்நாடுகளை வங்குரோத்து ஆக்கியதும் இந்த வல்லாதிக்க நாடுகள் தான். ஆபிரிக்க ஒன்றிய நாடுகள் தங்களுக்கு கடன்தர வேண்டாம், தங்களுடைய உற்பத்திப் பொருட்களை வரித் தடையில்லாமல் ஏற்றுமதி செய்ய அனுமதியுங்கள் என்ற போது இந்த வல்லாதிக்க நாடுகள் மறுத்துவிட்டன. இவ்வாறு தான் எங்களுடைய மூலப் பொருட்களை குறைந்த விலையில் வாங்கி அவற்றை முடிவுப் பொருளாக்கி, அதனை கூடிய விலைக்கு எமக்கே விற்றனர். எங்களுடைய பாலை குறைந்த விலையில் வாங்கி, அங்கர் மாவை எமக்கே கூடியவிலைக்கு விற்றனர். இங்கு பிரித்தானியாவில் கூட நாங்கள் பசுப்பாலைத் தான் பாவிக்கிறோம். ஆனால் இலங்கையிலோ மக்கள் அங்கர் பிரியர்களாகி விட்டனர். இந்தப் பொருளாதார நெருக்கடி வந்திராவிட்டால் நாங்கள் கோழி போடாத முட்டை சாப்பிடவும் பழகிக்கொண்டிருப்போம். மீளா முடியாத இன்னும் மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருப்போம்.

போபால் விசவாயுக் கசிவு:

1984இல் நான் இளைஞனாக இருந்த காலம் எங்களை உலுக்கிய செய்தி. இந்தப் பெரிய இந்தியாவுக்கே அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைட் தண்ணி காட்டியது. 1984 டிசம்பர் 2இல் போபால் விசவாயுக் கசிவு 15,000 பேரைப் பலிகொண்டது. போபால் விசவாயூக் கசிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்நிறுவனம் இன்றுவரை நட்ட ஈடு வழங்கவில்லை. இப்போது நாற்பது ஆண்டுகளாகியும் இன்னமும் பிள்ளைகள் ஊனமாகவே பிறக்கின்றன. இந்த அமெரிக்க – பிரித்தானிய அரசுகளின் சுரண்டல் பொருளாதாரக் கொள்கைகள் ஏனைய நாடுகளில் ஏற்படுத்திய அழிவுகள் பசுமரத்து ஆணிபோல் இன்னமும் மனங்களில் உள்ளது. மறக்க முடியவில்லை. அதற்கு மேல் இன்னமும் இந்த நாடுகளின் சுரண்டல்களுக்காக பங்களாதேஸில் ஆடைத் தொழிற்சாலைகள் தீப்பிடித்து எரிந்து தொழிலாளர்கள் உயிரிழக்கின்றனர்.

இலங்கையிலும் அவ்வாறான ஒரு பொருளாதார சுதந்திர வர்த்தக வலயத்தை அன்றைய ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனா உருவாக்கினார். இலங்கையை சர்வதேச சந்தைக்கு திறந்துவிட்டார். சிறிலங்கா சுதந்திரக்கட்சி இடதுசாரிக் கட்சிகளோடு இணைந்து உருவாக்கிய தன்னிறைவு பொருளாதாக் கொள்கைக்கு சாவுமணி அடித்தார். தமிழ் தேசியவாதக் கட்சிகளும் ஜே ஆர் ஜெயவர்த்தனவோடு சேர்ந்து அந்த மணியை ஆட்டிவிட்டனர்.

பேர்டினட் மார்க்கோஸ் – இமெல்டா மார்க்கோஸின் லஞ்சம் ஊழல்:

1980க்களில் எங்களை உலுக்கிய மற்றுமொரு செய்தி பிலிப்பைன்ஸில் பேர்டினட் மார்க்கோஸ் – இமெல்டா மார்க்கோஸின் லஞ்சம் ஊழல் மற்றும் டாம்பீகரமான வாழ்க்கை. அதற்கு எதிராக போராட்டம் வெடித்து. இந்த பரம்பரையான குடும்ப ஆட்சித் தம்பதிகள் ஓரம்கட்டப்பட்டனர். அப்போது இமெல்டா மார்க்கோஸின் வீட்டு அலுமாரிகளில் அவருக்கு 1000 சோடி பாதஅணிகள் இருந்தது. இவ்வாறு பரம்பரை பரம்பரையாகவே பிலிபைன்ஸ்சை சூறையாடிய இப்பரம்பரையில் இருந்து; மார்க்கோஸ் தம்பதிகளின் மகன் பொங் பொங் மார்க்கோஸ் இன்று அவதார புருஷராக வந்துள்ளார். தனது பெற்றோரின் காலம் பிலிப்பைன்ஸின் பொற்காலம் என்று சொல்லி தற்போது தேர்தலில் அமோக வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்துள்ளார். மக்கள் இப்போதெல்லாம் எதனையும் குறுகிய காலத்திலேயே மறந்துவிடுகின்றனர். ஜனநாயகம் என்ற பெயரில் நடைபெறும் தேர்தல்கள் கூட ஒரு சூதாட்டம் ஆகிவிட்டது.

இலங்கையின் மத்திய வங்கியை சுருட்டிக்கொண்டு சென்ற, ஈஸ்ரர் குண்டு வெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டதைப் பற்றி கவலையேபடாத முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஆறாவது தடவையாக பிரதமராக்கப்பட்டு உள்ளார். மேற்குலகின் செல்லப் பிள்ளையான இவர் உலக வங்கிக்கு சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கையை அடகு வைப்பாரா இல்லையா என்பது விரைவில் தெரியவரும். அல்லது பெற்றோல் பிரச்சினையும் எரிவாயுப் பிரச்சினையும் தீர அவரை ஆறாவது தடவையாகவும் கலைத்துவிடுவார்களா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

திறந்த சந்தைப் பொருளாதாரம்:

இலங்கையை கடன்காரர் ஆக்கிய வல்லாதிக்க நாடுகளின் எதிர் புரட்சி அபிவிருத்திக்கொள்கை இலங்கையை 16 தடவைகள் வங்குரோத்து அடையாமல் காப்பாற்றி இருந்தது. பதினேழாவது தடவையாகவும் அவர்கள் காப்பாற்றுவார்கள். இலங்கை மக்களுக்காக அல்ல இலங்கையை இன்னும் இன்னும் கொள்ளையடிப்பதற்காக. ஏன் இலங்கை இவ்வாறு கடனாளியானது? ராஜபக்ச குடும்பம் கொள்ளையடித்து என்பது பொருளாதாரத்தில் அரிவரி தெரியாதவர்களின் வாதம். இன்றைய பொருளாதார நெருக்கடிக்கும் ராஜபக்ச குடும்பத்தின் கொள்ளைக்கும் சம்பந்தம் கிடையாது. டொனால்ட் ரம்மில் இருந்து ராஜபக்ச வரை பொறிஸ் ஜோன்சன் உட்பட எல்லோருமே தங்கள் தங்கள் நாட்டை கொள்ளையடித்துள்ளனர். என்ன ராஜாபக்ச கொஞ்சம் மொக்குத்தனமாக செய்துவிட்டார் போல் தெரிகின்றது. உலக்கை போன ஓட்டையைப் பார்க்காமல் ஊசிபோன ஓட்டைக்கு போராட்டம் என்ற பெயரில் நாட்டை பெரும் கொள்ளையர்களிடம் தள்ளிவிட்டுள்ளனர்.

இலங்கையன் பெருமை:

திறந்த சந்தைப் பொருளாதாரமே செல்வத்தை உருவாக்கும் வறுமையை ஒழிக்கும் என்று உலகுக்கு வகுப்பெடுக்கின்றது அமெரிக்கா. ஆனால் உலகின் செல்வத்தில் 50 வீதத்தை தன்னகத்தே வைத்துள்ள அமெரிக்காவில் இலவச மருத்துவம் இல்லை. ஆனால் இலங்கையில் இலவச மருத்துவம். அடிப்படைச் சுகாதார சேவைகளை வழங்குவதில் இலங்கை இன்னமும் குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளது. அமெரிக்காவின் மனித உரிமை என்பது பட்டினியாலும் வருத்தம் துன்பம் வந்து சாவதற்குமான உரிமையாகவே உள்ளது. இலங்கையில் இன்னும் இந்நிலை இல்லை. இலங்கையர்களாக இருப்பதில் பெருமைப்பட வேண்டிய விடயம். ஆசிறி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போதே மரணமானவரின் உடலை வைத்துக்கொண்டு அவ்வுடலை திருப்பிக் கொடுக்க 5 லட்சம் ரூபாய் கேட்டனர். அப்படியிருக்கும் போது இத்தனை தசாப்தங்கள் பல லட்சம் உயிரிகளை காப்பாற்றுவதற்கான செலவை யார் கொடுத்தது? அதற்கான நிதி எங்கிருந்து வந்தது?

பிரித்தானியாவில் கல்வி கற்கும் ஒவ்வொரு பிள்ளையும் பல்கலைக்கழகப் படிப்பை முடித்து வெளியேறுகின்ற போது £ 50,000 பவுண்கள் (500 x 50,000 = 25,000,000 ரூபாய் / 25 மில்லியன் ரூபாய்) கடனோடு தான் தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர். இலங்கையில் பல்கலைக்கழகம் முடிக்கும் மாணவனுக்கு ஒரு சதம் கடன் கிடையாது. உலகிலேயே உயர்கல்வியை முற்றிலும் இலவசமாக வழங்குகின்ற நாடுகளில் இலங்கை மிக முக்கியமானது. இலங்கையில் இலவசமாகக் கல்வி கற்ற மருத்துவர்களும் பொறியியலாளர்களும் தான் அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டுள்ளனர். அந்நாடுகளை கட்டியெழுப்பவும் உதவுகின்றனர். இது இலங்கையர்கள் பெருமைப்பட வேண்டிய விடயம். அப்படியானால் பல தசாப்தங்களாக பல்கலைக்கழகம் வரை இந்த இலவசக் கல்வியை வழங்குவதற்கான செலவை யார் கொடுத்தது? அதற்கான நிதி எங்கிருந்து வந்தது?

பிரித்தானியாவில் நாங்கள் கொள்வனவு செய்யும் பெற்றோல் எரிவாயுவிற்கு நாங்கள் அவற்றின் நிர்ணயிக்கப்பட் விலையைக் காட்டிலும் கூடுதலாக வரியையும் சேர்த்து செலுத்துகின்றோம். ஆனால் இலங்கையில் பெற்றோலையும் எரி வாயுவையும் வாங்கிய விலையைக் காட்டிலும் குறைந்த விலைக்கு அரசு விற்பனை செய்கிறது. அப்படியானால் குறைக்கப்பட்ட அந்தப் பெறுமதியை யார் கொடுத்தது? அதற்கான நிதி எங்கிருந்து வந்தது?

மண்வீடுகள் எல்லாம் கல்வீடுகளாகி உள்ளதே அதற்கான செலவை யார் கொடுத்தது? அதற்கான நிதி எங்கிருந்து வந்தது?

வீட்டுத்தோட்டம் செய்வதற்கு வழங்கப்பட்ட உபகரணங்கள், விதைகள், இலவச உலர் உணவுகள் இதற்கான செலவை யார் கொடுத்தது? அதற்கான நிதி எங்கிருந்து வந்தது?

உலகிலேயே அதிக விடுமுறை தினத்தை கொண்ட நாடு இலங்கை. இந்தச் சலுகை எப்படி சாத்தியமானது?

இவ்வளவு விடுமுறையும் கொடுத்து 16 லட்சம் அரச ஊழியர்களை தேவைக்கதிகமாக அமர்த்தி சம்பளம் கொடுக்கப்படுகின்றது. உத்தியோகத்தில் இருப்பவர்களும் வேலையே செய்யாமல் ஊதியம் பெற நினைக்கின்றனர். அமெரிக்காவிலோ பிரித்தானியாவிலோ இவை சாத்தியமில்லை.

கிளிநொச்சியில் சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற சம்பவம்:

பிரதேச செயலகத்திற்கு தன் காணி உறுதிப்பத்திரத்தை எடுக்கச் சென்றிருந்தார் என் சகோதரி ஒருவர். அங்கு நால்வருக்கு மேல் பணியில் இருந்தனர். 100 ரூபாயை வாங்கி அதற்கு பற்றுச் சீட்டைக்கொடுத்து காணி உறுதியை கையளிக்க வேண்டும். அவர் அலுவலகத்திற்குச் சென்ற போது அங்கு சேவை பெறுவதற்கு வேறு யாரும் வந்திருக்கவில்லை. அதேசமயம் இவர் சென்றதும் இருந்த பணியாளர்கள் ஆளுக்கு ஆள் கண்ணைக் காட்டினார்களேயொழிய யாரும் அவருடைய தேவையைக் கேட்கவில்லை. அவரை இருக்கும்படி உதரவிட்டுவிட்டு, குசு குசுத்தனர். பின்னர் ஒருவர் வந்தார் அவர் ‘நான் அக்ரிங் தான். அதுக்காகா நானா எல்லாருக்கும் அக்ரிங்’ என்று புறுபுறுத்துவிட்டு ஒரு மணிநேரம் இழுத்தடித்துவிட்டு காணி உறுதியைக் கொடுத்தனர். என் சகோதரி முழுநேரம் வேலை பார்ப்பவர். அவர்கள் தாங்கள் வேலை செய்யாமல் இருப்பதும் இல்லாமல் தன் நேரத்தையும் வீணடித்துவிட்டார்கள் என்று சினந்துகொண்டார். இலங்கையில் அரச ஊழியர்களின் நிலை இது தான். புகையிரத ஓட்டுனர் இரு மணிநேரம் தாமதமாக வந்து பல்லாயிரக்கணக்காணவர்களின் நேரத்தை வீணடித்தது போல.

இந்த லட்சணத்தில் ‘Gotta Go Home’ வேறு. கோட்டபாயா ராஜபக்ச செய்த மிகப்பெரிய முட்டாள்தனம் 15 வீதமாக இருந்த பொருட்களுக்கான வரியை ஐம்பது வீதத்தால் 8 வீதமாகக் குறைத்தது. இந்த வரிக்குறைப்புச் சலுகையை அனுபவித்தவர்கள்தான் இப்போது ‘Gotta Go Home’ கோஷம் போடுகின்றனர்.

கோவிட் தாக்கமும் உக்ரைன் யுத்தமும்:

இவ்விடத்தில் கோவிட் தாக்கத்தை தவிர்க்க முடியாது. அமெரிக்கா, பிரித்தானியா நாடுகள் செல்வந்த நாடுகளாகவும் அறிவுக் கணதியான நாடுகளாக இருந்தும் அந்நாட்டு தலைவர்களின் முட்டாள் தனங்களினால் கோவிட்டினால் இறந்த மக்களின் எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கு. அமெரிக்காவில் கோவிட் இனால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டிவிட்டது, அயல்நாடானான இந்தியாவில் கோவிட்டினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 மில்லியன் என மதிப்பிடப்படுகின்றது. இந்நாடுகளில் இன்றும் பல நூறு பேர் இறந்துகொண்டுள்ளனர். பிரித்தானியாவில் சராசரி தினமும் 200 பேர் இறந்துகொண்டுள்ளனர். அது பற்றி அத்தலைவர்கள் கண்டுகொள்வதும் இல்லை. அவை செய்தியாக வருவதும் இல்லை. ஆனால் இலங்கையில் இந்நிலை ஏற்படவில்லை. நாட்டின் எல்லைகள் முடக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டதால் நாடு உயிராபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டது.

ஆனால் கோவிட் தாக்கமும் உக்ரைன் யுத்தமும் இலங்கையின் பொருளாதாரத்தை மட்டுமல்ல உலகின் பொருளாதாரத்தையே ஆட்டிப்படைக்கின்றது. பிரித்தானியாவில் 2 வீதமாக இருக்க வேண்டிய விலைவாசி உயர்வு ஏழவீதத்தைக் கடந்து விட்டது அமெரிக்காவில் அது பத்து வீதத்தை தொட்டுவிட்டது. இலங்கையில் 21 வீதத்தை கடந்துவிட்டது. ஆனாலும் இந்நாடுகளில் வேலையற்றோர் வீதம் இன்னமும் குறைவாகவே காணப்டுவது சாதகமான அம்சமே.

உலக விலைவாசி உயர்வு:

கோவிட்கால முடக்கத்திலும் மக்கள் வருமானத்தை இழக்காததும் (அரசு மற்றும் உதவிகள்) செலவீனங்கள் குறைந்திருந்ததும் (நாடுகள் முடக்கப்பட்டு இருந்ததால் செலவு செய்ய வழியிருக்கவில்லை.) இப்போது முடக்கம் தளர்ந்ததும் பொருட்களுக்கான தேவைகள் அதிகரித்துவிட்டது. ஆனால் கோவிட்காலத்தில் முடக்கப்பட்ட நிறுவனங்கள் இன்னமும் மீள இயங்க ஆரம்பிக்காததால் (குறிப்பாக சீனாவில் இருந்து உற்பத்தி சகஜநிலைக்கு வரவில்லை) பொருட்களின் தட்டுப்பாடு விலையை அதிகரித்தது. அத்தோடு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு எரிபொருட்களின் விலையை எகிற வைத்தது. தானியங்களின் விலையை எகிற வைத்தது. அதனால் பொருட்களின் உற்பத்திச் செலவும் அதிகரித்தது. இந்த விலையேற்றம் என்பது தேவைகளின் அதிகரிப்பும் உற்பத்திச் செலவின் அதிகரிப்பும் இணைந்ததாக உள்ளது. அத்தோடு இலங்கை முற்றிலும் இறக்குமதியை மட்டுமே நம்பி இருந்ததால் நாட்டின் நாயணத்தின் பெறுமதி இறக்கம் இறக்குமதிப் பொருட்களின் விலையை உச்சத்திற்கு கொண்டு செல்லும். அமெரிக்க இந்த விலையேற்றத்தை சமாளிக்க சீனப் பொருட்களின் மீது விதித்திருந்த வரியை நீக்குவதற்கு முடிவு செய்துள்ளது. ஆகவே இந்த விலையேற்றம் மற்றும் பிரச்சினை இலங்கைக்கு மட்டுமான பிரச்சினையும் அல்ல.

கோத்தபாய செய்யத் தவறியதும் செய்ய வேண்டியதும்:

கோவிட் முடக்கம் உலகத்தையே முடக்கியது. இலங்கையில் அந்நியச் செலவாணியை ஈட்டும் உல்லாசப்பயணத்துறை முற்றாக ஸ்தம்பித்தது. நாட்டிற்கு எவ்வித வருமானமும் இல்லை. ஆனால் இறக்குமதி எகிறியது. இந்த நெருக்கடி நிலையை அரசு எதிர்வு கூறியிருக்க வேண்டும். அதனைச் சமாளிப்பதற்கான நீண்ட காலத் திட்டங்களை அரசு வகுத்திருக்க வேண்டும். கடன்களை மீளச் செலுத்த முடியாது என்ற அறிவிப்பை மிக நீண்ட காலத்திற்கு முன்னதாகவே அரசு அறிவித்திருக்க வேண்டும். அவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை நீண்ட காலத்திற்கு முன்னரே முடக்கி இருக்க வேண்டும். உள்ளுர் உற்பத்தியை ஊக்குவித்திருக்க வேண்டும். பல்கலைக்கழகங்களின் அறிவு வளத்தை இதனை நோக்கி திசை திருப்பி இருக்க வேண்டும். இவ்வளவு சூரிய ஒளியை வருடம் முழவதும் பெறும் இலங்கை எரிசக்தியில் தன்னிறைவை காண்பதை நோக்கிச் சென்றிருக்க வேண்டும்.

எண்பதுக்கள் முதல் இன்று வரை ஆட்சிக்கு வந்த எந்த அரசும் இதனைச் செய்யவில்லை. ராஜபக்சாக்களும் செய்யவில்லை. ராஜபக்சாவை மாற்றி ரணிலைக் கொண்டு வந்து உலக வங்கிக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கையை அடகு வைக்கும் போராட்டம், போராட்டம் அல்ல அரசியல் கும்மாளமாகவே அமையும். எவ்வித புரட்சிகர சிந்தனையும் இல்லாமல் வெறும் உணர்ச்சிப் பிளம்பில் நடக்கும் போராட்டங்களில் பொழுது போக்குக்காக ஈடுபட்டு எதிர்காலத்தில் உயிரிழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் நாட்டை இட்டுச்செல்லாமல் நாட்டுக்கு உல்லாசப் பயணிகளை வரவழைத்து அந்நியச் செலவாணியை ஈட்டுவது இப்பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவும்.

இந்தப் போராட்டங்கள் யாருக்காக?

ஏன் இந்தப் போராட்டகாரர்கள் கடன்களை மீளச் செலுத்தாதே என்று கோரவில்லை?
ஏன் இந்தப் போராட்டகாரர்கள் கடன்களை ரத்து செய்யக் கோரவில்லை?
ஏன் இந்த போராட்டகாரர்கள் அநியாய வட்டி வாங்காதே எனக் கோரவில்லை?
ஏன் இந்தப் போராட்டகாரர்கள் சர்வதேச நாணய நிதியத்தையும் உலக வங்கியையும் எதிர்க்கவில்லை?

இந்தப் போராட்டங்களினதும் ரணிலினதும் வரவினாலும் சர்வதேச நாணய நிதியமும் உலகவங்கியும் நாட்டின் பொருளாதாரக் கொள்கையில் தலையீடு செய்யும். நாட்டுக்கு மேலும் மேலும் கடன் வழங்குவார்கள். வட்டி வீதத்தை கூட்டுவார்கள். பெற்றோல் எரிவாயுவிற்கு வழங்கிய மானியத்தை குறைப்பார்கள் அல்லது நிறுத்துவார்கள். பெற்றோல் மற்றும் எரிவாயுவின் விலைகள் நிரந்தரமாக மிகக் கூடுதலாக அதிகரிக்கும். இலவசக் கல்வி, இலவச மருத்துவம் ஆகியவற்றிற்கு செலவிடப்படும் நிதி குறைக்கப்பட்டு அந்நிதி கடனுடைய வட்டியைச் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும். இறக்குமதிகள் அதிகரிக்கப்பட்டு இருப்பவனுக்கும் இல்லாதவனுக்குமான இடைவெளி கூடும். அதன் பின் இன்று போராடிய உயர்தர மத்தியதர வர்க்கம் இல்லாதவர்களைப் பார்த்து பிழைக்கத் தெரியாதவர்கள் என்று முத்திரை குத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்தப் போராட்டங்கள் யாருக்காக? நிச்சயமாக இலங்கை மக்களுக்காக அல்ல.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி – என் பயண அனுபவம்: இலங்கை வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாது என மறுக்க வேண்டும்! சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகளுக்கு உடன்படக் கூடாது!! அத்தியவசிய உணவு – எரிபொருளில் இலங்கை தன்னிறைவு பெற வேண்டும்!!!

கொரோனா மற்றும் காரணங்களால் நான்கு ஆண்டுகளுக்குப் பின், ஏப்ரல் 2ம் திகதி காலை லண்டன் ஹீத்ரோவில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை பஹ்ரெயின், மாலைதீவு ரான்ஸிற் ஊடாக கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தை அடைந்தேன். வக்சீன் பாஸ்ட்போட், கோவிட் மெடிகல் இன்சுரன்ஸ், ஈவீசா ஆகியவற்றோடு இறங்கி குடிவரவு அலுவலர்களின் அனுமதிக்காக வரிசையில் நின்றேன். பெரிதாக நெருக்கடி இருக்கவில்லை. குடிவரவு அதிகாரி கோவிட் பாஸ்ட் போர்டை பாரத்து ஈவிசாவையும் பார்வையிட்டபடி நாட்டின் மோசமான பொருளாதார நிலையைப் பற்றி குறிப்பிட்டார். விலைவாசியைப் பற்றி குறிப்பிட்டார். ஆட்சியாளர்களைச் சொல்லித் திட்டினார். நாட்டின் பொருளாதார நெருக்கடியை நாட்டின் நுழைவாயிலிலேயே உணர முடிந்தது. அதன் பின் என் ஈவிசாவை பார்த்தவர், எனது பாஸ்ட்போட் இலக்கம் பொருந்தவில்லை என்றார். ஈவிசாவுக்கு விண்ணப்பிக்கும் போதே எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. பாஸ்போட் இலக்கத்தின் கடைசி இலக்கம் பார்கோட்டுக்கு உரியது அதனை நான் போடத்தவறி இருந்தேன். நான் மீண்டும் ஈவிசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அதற்கு செலவாகும். நேரம் எடுக்கும். ஆகவே மேலதிகாரியிடம் பேசுவதாக அழைத்துச் சென்றார் அக்குடிவரவு அதகாரி. மேலதிகாரியும் நாங்கள் இப்படிச் செய்வதில்லை இந்த அலுவலர் கேட்டதால் செய்திருக்கிறேன் என்று அவரை கவனிகச் சொன்னார். பிறகென்ன ஒரு நம்பரை இணைத்ததற்காக அவருக்கு 20 பவுண்கள் (8,000 ரூபாய்) வழங்க வேண்டி இருந்தது. வருபவர்களிடம் இருந்து பணம் கறப்பதற்காகவே இந்தப் பஞ்சப்பாட்டு பாடப்பட்டது என்ற உணர்வே எனக்கு வந்தது.

இதனையெல்லாம் முடித்துக்கொண்டு வெளியே வந்து என்னை அழைத்துச் செல்ல வந்திருந்த நண்பர்களைச் சந்தித்தால் கொழும்பில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் எவ்வித கெடுபிடியும் இல்லை. நேரடியாக கிளிநொச்சி செல்லத் திட்டமிட்டு இருந்த பயணம் கொழும்பில் தங்கிச் செல்வது என்று முடிவானது. ஊரடங்கு மறுநாள் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும். இந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் வரும் சனி, ஞாயிறு தினங்களிலும் ஊரடங்கு போடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. நான் வந்த லிற்றில் எய்ட் நிகழ்வுகள் அந்த சனி, ஞாயிறு (ஏப்ரல் 9, 10) தான் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஊரடங்கு போடப்பட்டதற்கு பிரதான காரணம் மக்கள் போராட்டத்தில் இறங்கி அமைதியின்மை ஏற்படும் என்ற அச்சமே. ஆனால் புத்தாண்டு கொண்டாட்டங்களும் போராட்டங்கள் வலுவில்லாததாலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படாது என்ற எண்ணம் நான் தொடர்பு கொண்டவர்களிடம் இருந்தது. அதனால் நிகழ்ச்சியை திட்டமிட்டபடி சனி, ஞாயிறு தினங்களில் நடத்த முடிவு எடுக்கப்பட்டு அது சிறப்பாகவும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வழமையாக இலங்கை செல்கின்ற போது 20, 25 ரூபாய்களுக்கு தனியார் வாகனத்தை அமர்த்தி செல்வதுதான் வழமை. இரு வாரம் இலங்கையில் தங்கினால் எனக்கு ஒரு லட்சம் வரை போக்குவரத்துக்கு செலவாகிவிடும். இம்முறை அதற்கு மாறாக புகையிரதத்தில் செல்ல தீர்மானித்து திங்கட் கிழமை காலை 5:30 மணி புகையிரதத்தை பிடிக்க புகையிரதம் சென்றோம். காலை 5:35, 6:40, 11:30க்கு யாழ் செல்லும் புகையிரதங்கள் புறப்படும். ஆனால் காலை எட்டு மணிவரை ரிக்கற் கவுன்டர் திறக்கப்படவில்லை. அவை திறக்கப்பட்ட போதும் யாழ் செல்லும் புகையிரதம் செல்லுமா இல்லையா என்று யாரும் சொல்லவில்லை. யாருக்கும் தெரியவில்லை. பாரிய வரிசையில் எந்தத் தகவலும் இல்லாமல் அனைவரும் காத்து இருந்தோம். கைக்குழந்தைகளோடு தாய்மார். வேலைக்குச் செல்பவர்கள் என்று அனைவரும் வேறுவழியில்லாமல் காத்திருந்தனர். நீண்ட காத்திருப்புக்குப் பின் ரிக்கற் கவுண்டரில் உள்ளவர் சொன்னார் “யாழ்ப்பாணம் செல்லும் ரெயின் நிற்கிறது. ஆனால் ரைவர் இன்னமும் வரவில்லை. வரவாரோ தெரியாது” என்று. பல்லாயிரம் பேர் பயணிக்கும் ஒரு புகையிரதத்தின் சாரதி, இரு மணிநேரம் கழித்து வந்த பின்னரே ரிக்கற் வழங்கப்பட்டது. வழமையாக பல்லாயிரம் ரூபாய் செலவழித்து செல்லும் எனக்கு ஆயிரத்து ஐந்நூறு ருபாயோடு ஏசி யுடன் பயணம் சௌகரியமாக இருந்தது.

மேற்குறிப்பிட்ட இரு சம்பவங்களுமே இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான அடிப்படைக் காரணங்களை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஆட்சியாளர்களைத் திட்டுபவர்களும் தாங்களும் அந்த லஞ்சம் ஊழல்களிலேயே வாழ்கின்றனர். அதே போல் தனது கடமையைப் பொறுப்பாகச் செய்ய வேண்டிய ஒரு பணியாளர் பல்லாயிரக்கணக்காணவர்களை அங்கலாய்க்க வைத்து காக்க வைத்து எவ்வித அறிவித்தலும் இல்லாமல் இரு மணிநேரம் தாமதமாகப் பணிக்கு வருகின்றார். அந்த ரெயிலுக்காக காத்திருந்த பல்லாயிரக் கணக்கானவர்கள் சில மணிநேரங்களை இழந்துள்ளனர். இவ்வாறான பொறுப்பற்ற மனிதர்களும் பொறுப்பற்ற நிர்வாகமும் பொறுப்பற்ற அரசியல் வாதிகளும் நாட்டின் பொருளாதாரக் கட்டுமானங்களை நிலைகுலைய வைத்துள்ளனர். இதில் ஆட்சியாளர்களை மட்டும் குற்றசம்சாட்டி சார்புநிலை அரசியல் செய்வது இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு எவ்விதத்திலும் தீர்வாகாது.

ஆட்சியில் உள்ளவர்களின் அதிகார துஸ்பிரயோகம், லஞ்சம், ஊழல் எல்லைகளைக் கடந்தது. பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அவரது சகபாடிகளும் கொரோனாவுக்காக காலாண்டில் கடன் வாங்கப்பட்ட 200 பில்லியன் பவுணில் 10வீதமான 20 பில்லியனை ஆட்டையைப் போட்டது பிரித்தானிய நாளிதழ்களில் முன்பக்கச் செய்தியாகவே வெளிவந்தது. இலங்கை ஆட்சியாளர்களான ராஜபக்ச குடும்பத்தினரும் இதற்கு சளைத்தவர்கள் அல்ல. ஆனால் இன்றைய பொருளாதார நெருக்கடி ஆட்சிக்கு வந்த எல்லா கட்சியினரும் எவ்வாறு மக்கள் பணத்தை ஆட்டையைப் போட்டனர் என்பதல்ல. அதுவும் பல காரணிகளில் ஒன்று.

இது முற்றிலும் இலங்கையின் பொருளாதாரக் கட்டுமானம் பற்றியது. இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரையுமான இலங்கைப் பொருளாதாரம் இறக்குமதிப் பொருளாதாரமாகவே வளர்ந்து வந்தது. 1971 சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் இதில் ஒரு பாரிய மாற்றம், சிறிமாவோ பண்டாரநாயக்கவால் கொண்டுவரப்பட்ட போதிலும் அடுத்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் உலக சந்தைக்கு இலங்கையைத் திறந்துவிட்டு, மேற்குநாடுகளின் நலன்களுக்கு சேவகம் செய்தது. எமது நாட்டின் மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு முடிவுப் பொருட்களாக இறக்குமதி செய்யப்பட்டது. ஏற்றுமதி வருமானம் தொடர்ச்சியாக கீழ்நோக்கி வீழ்ச்சியடைய இறக்குமதிச் செலவீனம் ரொக்கற் வேகத்தில் எகிறியது. போதாக்குறைக்கு 30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தம். வருமானம் இல்லாமல் செலவு செய்தோம்.

எண்பதுக்களில் பல கிராமங்களில் மின்சாரம் இருக்கவில்லை, கல்வீடுகள் இருக்கவில்லை, மிதி வண்டிகள் இருந்தது, அத்தியவசியமற்ற பொருட்கள் இருக்கவில்லை, ரிவி இருக்கவில்லை. கார்கள் இருக்கவில்லை. ஆனால் இன்று மின்சாரம் இல்லாத வீடுகள் இல்லை. கொட்டில் வீடுகள் காணமுடிவதில்லை கல்வீடுகள் மட்டுமே, இப்போது மிதிவண்டிகள் இல்லை மோட்டார் சைக்கிள்கள் குவிந்துவிட்டது, வீடுகளில் அத்தியவசியமற்ற பொருட்கள் குவிந்து கிடக்கின்றது, கார்களும் பெருகிவிட்டது. வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிட்டது. கோழி எச்சம் போடுவதால் கோழி வளர்ப்பதில்லை. மோபைல் போனும் சீரியலும் வந்ததால் ஆடு, மாடு வளர்க்க நேரமில்லை. அங்கரில் வாழகின்றோம். வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டது.

கோப்ரேட் நிறுவனங்கள் லாபத்திற்காக அறிமுகப்படுத்தும் எல்லாவற்றையும் வாங்கிக் குவித்து சுகபோகம் அனுபவிக்கிறோம். இந்த வாழ்க்கைத் தரம் உழைப்பால் உயரவில்லை. கடனோடு உயர்ந்தது. 16 லட்சம் அரச ஊழியர்கள் தேவைக்கதிகமாக அமர்த்தப்பட்டு உள்ளனர். ஆனாலும் அரச அலுவல் ஒன்றைச் செய்ய மக்கள் இன்னமும் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. கணவர் இறந்து ஓராண்டாகியும் விதவையான சகோதரிக்கு இன்னமும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. பெரும்பாலான அரசாங்க ஊழியர்கள் பொறுப்புடன் பணியாற்றத் தயாரில்லை.

வரவு இல்லாமல் செலவு செய்தால் வீடு மட்டுமல்ல நாடும் வங்குரோத்தில் தான் செல்லும். எங்களுடைய நுகர்வுச் கலாச்சாரத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்;. நாடு ஓரளவு தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டும். இதுவரையான பொருளாதார அணுகுமுறையில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். உள்ளுர் உற்பத்தி ஊக்குவிக்கப்பட வேண்டும். எரிபொருள், மருந்துவகைகள், மற்றும் அத்தியவசிய பொருட்கள் தவிர்ந்த அனைத்து இறக்குமதிகள் மீதும் நிரந்தர கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும்.

ஆட்சியாளர்கள் நாட்டின் அன்றாட சூழ்நிலையை கணக்கிலெடுத்து நாளுக்கு நாள் தங்கள் நடவடிக்கைகளை மாற்றாமல் நீண்ட கால பொருளாதார திட்டங்களை முன்வைக்க வேண்டும். அதற்கு முதற்படியாக:
1. கடன்களை மீளச்செலுத்த முடியாது என அறிவிக்க வேண்டும்
2. சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்தக்கூடாது – அதன் நிபந்தனைகள் நிராகரிக்கப்பட வேண்டும்
3. இறக்குமதிகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்
4. ஏற்றுமதி அதிகரிக்கப்பட வேண்டும்
5. தன்நிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி நாடு நகர வேண்டும்

நாட்டு மக்களுக்கு ஏன் நாடு இந்நிலைக்கு தள்ளப்பட்டது என்ற உண்மையை ஆட்சியாளர்கள் விளக்கி, மேற்குறிப்பிட்டவற்றை உள்ளடக்கிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்து, அதன்படி செயற்பட வேண்டும். இன்று ஆட்சியாளர்கள் பலவீனமாக இருந்தாலும் எதிர்க்கட்சிகள் அதனிலும் பலவீனமானதாகவே இருக்கின்றன. சிறுபான்மைக் கட்சிகள் அரசியல் ஜோக்கர்களாக மாறி நீண்ட காலமாகிவிட்டது. அவர்கள் தங்கள் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. அவர்களுக்கு தங்கள் குறுகிய அரசியல் நலன்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும்.

மேற்குறிப்பிட்ட அதிரடி நடவடிக்கைகள் ஒரு குறுகிய காலத்திற்கு சில ஆண்டுகளுக்கு மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பது உண்மையே. ஆனால் இந்நடவடிக்கைகள் நீண்ட காலத்தில் இலங்கைக்கு பாரிய நன்மை பயப்பதுடன் மக்களின் வாழ்நிலையிலும் வாழ்க்கைத் தரத்திலும் உண்மையான உயர்வை ஏற்படுத்தும்.

நாடு முழுவதும் நடத்தப்பட்ட போராட்டங்கள் பற்றி கிளிநொச்சி செய்தியாளர் குறிப்பிடுகையில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, கிளிநொச்சியில் போராட்டம் ஒன்றைச் செய்ய ஒரு லட்சம் வழங்கியதாகவும் அப்போராட்டத்தில் 20 பேர் மட்டுமே கலந்துகொண்டதாகவும் தெரிவித்தார். எனது பயணத்தின் இறுதியாக ஏப்ரல் 13 மீண்டும் கொழும்பு திரும்பினேன். அப்போது காலிமுகத்திடலில் நிகழும் சுழற்சிமுறைப் போராட்டம் பற்றி பேசிக்கொண்டோம். அங்கு சென்று கடற்கரையோரத்தில் பொழுதைகழித்துவிட்டு வந்தால் உணவு குளிர்பானம் என்று ஒரு விடுமுறையைக் கழிப்பது போல் பன்பலாக இருக்கும் என்றனர். மறுநாள் நேரே சென்று பார்த்தேன் கடற்கரையை அண்மித்து விடுமுறைக் கழியாட்டம் போல் தான் இருந்தது. காரில் வந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு போராடிக்கொண்டிருந்தனர். உணவு, குடிபானங்கள் விநியோகிக்கப்பட்டது. வந்தவர்கள் ரென்ற் அடித்து கடற்கரை காற்றையும் ரசித்து போராட்டத்தையும் நடத்தினர். மற்றும்படி வறுமைக் கோட்டில் இருந்த யாரும் அங்கு போராடியதாகத் தெரியவில்லை. காலிமுகத்திடல் போராட்டமானது நடுத்தர வர்க்கமும் அல்ல அதற்கும் மேல் கார் வைத்திருக்கக் கூடிய நடுத்தர வர்க்கத்தால் நடத்தப்படுகின்ற போராட்டம். அதில் நானும் கலந்து சிறப்பித்தேன்.

எனது பயணத்தின் ஒரு கட்டமாக லிற்றில் எய்ட் மாணவர்களைக் கூட்டிக்கொண்டு சிகிரியா, அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களுக்கு ஒரு நாள் சுற்றுலாவு சென்று ஆடிப் பாடி கொண்டாடித் திரும்பினோம். நாம் சென்ற போது யாழ்ப்பாணம் கிளிநொச்சி பிரதேசங்களில் இருந்தும் வாகனங்களில் சுற்றுலா வந்திருந்தனர். தையல் தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு குழவினரும் சுற்றுலா வந்திருந்தனர். நாம் நாற்பது பேர் சுற்றுலா சென்றோம். 45 பார்சல்கள் எடுத்து இருந்தோம். வாங்கிய சாப்பாடுகளில் 5 பார்சல்கள் மிஞ்சிவிட்டது. அதனை யாரும் பிச்சை எடுப்பவர்களிடம் கொடுக்கலாம் என்றால் சிகிரியாவில் இருந்து அனுராதபுரம் ஊடாக கிளிநொச்சிவரை யாரும் பிச்சை எடுப்பதை பார்க்கவில்லை. அப்பார்சல்களை யாரும் வீட்டுக்கு கொண்டு செல்லவும் தயாரில்லை. நானே கொண்டு சென்று என்வீட்டார் மறுநாள் சாப்பிட்டனர்.

ஆனால் லண்டன் வந்து இருநாட்களில் சூம்மீட்டிங்கில் இலங்கை பட்டினிச்சாவை நோக்கி நகர்வதாக பெரும்கதையாடல் நடந்தது. மருந்து இல்லாமல் மக்கள் உயிராபத்தில் இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த உரையாடல்கள் என் அனுபவத்திற்கு முற்றிலும் எதிர்மாறானதாகவே இருந்தது. அங்கு யாரும் பட்டினியின் விளிம்பில் இல்லை. உண்மை நிலை என்னவென்றால் இலங்கை முழவதுமே பல்வேறுதுறைசார்ந்த வேலைகளுக்கும் ஆட்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. வெள்ளிக்கிழமை வேலைக்கு வருபவர் மீண்டும் திங்கட்கிழமை விடுமுறை கழித்து வேலைக்கு வருவாரா என்ற பதட்டத்தில் வியாபார நிறுவனங்கள் இருக்கின்றன. கிளிநொச்சியில் மருத்துவரொருவரால் இரு மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட போனிக்ஸ ; என்ற உணவகத்திற்கு சென்றிருந்தேன். அங்கு பணியாற்றுபவர்கள் எல்லோருமே மலையகத்தைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்த முகாமையாளரிடம், ஏன் கிளிநொச்சியில் வேலைக்கு ஆட்கள் இல்லையா என்று கேட்டேன். அவர்கள் யாரும் ஓரிருநாட்களுக்கு மேல் நிற்பதில்லை என்றார். என்ன சம்பளம் வழங்குகிறீர்கள் என்று கேட்டேன். உணவு தயாரிப்பவருக்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகம் என்றும் வெய்ற்ரேஸ்க்கு நாற்பதினாயிரம் வழங்குவதாகவும் தெரிவித்தார். நான் அங்கு சென்ற செவ்வாய் அன்று அவர்கள் எல்லோரும் புத்தாண்டுக்கு ஊருக்குச் செல்வதால் உணவகம் சிலநாட்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. என்னோடு பேசிய முகாமையாளருக்கு இருக்கும் பதட்டம் இவர்களில் எத்தனை பேர் திரும்பி வேலைக்கு வருவார்கள் என்பது.

ஆனால் நான் இலங்கை செல்வதற்கு சில வாரங்களுக்கு முன் பிரித்தானியாவில் உள்ள பி அன் ஓ நிறுவனம் 850 பணியாளர்களை எவ்வித முன்னறிவித்தலும் இல்லாமல் வேலையால் நிறுத்திவிட்டு தொழில் முகவர்களுக்கூடாக குறைந்த சம்பளத்திற்கு ஆட்களை எடுத்தனர். பிரித்தானிய அரசு மிரட்டிப்பார்த்தும் எதுவும் ஆகவில்லை. ஆனால் இலங்கையிலோ அரசு 16 லட்சம் அரச ஊழியர்களை தேவைக்கதிகமாக வைத்து சம்பளம் வழங்குகிறது.

கிளிநொச்சி பகுதியில் பல்வேறு வேலைகளுக்கும் ஆட்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் வேலைக்கு ஆட்கள் கிடைப்பது மிகக் கடினமாகி உள்ளது. ஏனைய நாடுகளைப் போல் இலங்கையிலும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும் எரிபொருட்களின் விலை உயர்வாலும் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து செல்கின்றது என்பது உண்மையே. ஆனாலும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையை அவர்களால் சில அசௌகரியங்களுடன் முன்னெடுக்க முடிகின்றது. எரிபொருளே அங்கு முக்கிய சிரமத்தை ஏற்படுத்துகிறது. மின் வெட்டுக்கும் அதுவே காரணம். இதே வகையான பிரச்சினைகளை உலகின் பல நாடுகள் எதிர்கொள்கின்றன. அதில் இலங்கையும் ஒன்று.

2009 ஈவிரக்கமற்ற முறையில் தமிழீழ விடுதலைப் புலிகளை மௌனிக்க வைத்ததால் தமிழ் மக்கள் ராஜபக்ச குடும்பத்தினர் மீது மிகக் கடுப்பிலேயே உள்ளனர். ராஜபக்சக்களின் இனவாதக் கருத்துக்கள் நடவடிக்கைகள் காரணமாக முஸ்லீம், கிறிஸ்தவர் தரப்பிலும் மிகக் கடுமையான எதிர்ப்பு உள்ளது. அரசியல் எதிரிகளுக்கு எவ்வித குறைச்சலும் இல்லை. மேற்கு நாடுகளின் கிடுக்குப் பிடிக்குள் விழாமல் இருப்பதால் அந்நாடுகள் ராஜபக்சாக்களை ஒரு வழி பண்ண வேண்டும் என்ற அங்கலாய்ப்பில் உள்ளனர். இந்த சூழலைப் பயன்படுத்தி தவித்த முயல் அடிக்கும் போட்டியில் ஆளுக்கொரு பொல்லுக் கட்டையுடன் பல முதலைகள் கண்ணீர் வடித்தபடி காத்திருக்கின்றன. ஆடு நனைகிறது என்று ஓநாய்கள் அழுத கதைதான்.

இலங்கை அரசாங்கம் அதிகம் கடன் வாங்கியதும் நாட்டை அடகு வைத்துள்ளதும் இந்தியாவிடம் தான். தங்களின் இன்னொரு மாநிலமாக இலங்கையை அறிவிக்கவும் தயார் எனப் பகிடி விடும் அளவுக்கு இந்திய அமைச்சர்கள் வந்துவிட்டனர். ஆனால் சீனாவால் தான் தாங்கள் நாசமாய் போனதாக இலங்கை மக்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச நாணய நிதியம் ஏதோ இலங்கை மக்களை மீட்க வரவேண்டும் என்ற போக்கில் கதையளப்புகள் நடைபெறுகிறது. சுர்வதேச நாணய நிதியம் இலங்கை மக்களையும் நாட்டையும் பாழங்கிணற்றினுள் தள்ளுவதற்கே வழி செய்யும். 1977இல் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கு நாடுகளும் அதன் காப்ரேட் நிறுவனங்களும் இலங்கையை கொள்ளையிடவும் சுரண்டவும் கதவுகளைத் திறந்துவிட்டது. தங்களுடைய லாபத்திற்காக உள்ளுர் உற்பத்திகளை பலவீனமாக்கி அழித்து இறக்குமதியை ஊக்குவித்தது. அதன் ஒட்டுமொத்த விளைவுகளே இவை. ராஜபக்சாக்களும் ஏனைய ஆட்சியாளர்களும் கொள்ளையடித்தது உண்மைதான். ஊசி போகின்ற அளவு என்றால் இந்த சர்வதேச நாணய நிதியமும் மேற்கு நாடுகளும் இந்தியாவும் அடித்தது உலக்கை போகின்ற அளவு கொள்ளை.

இந்தியா தனது நலனுக்காக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தூண்டிவிட்டு கூத்தடித்தது. இப்போது தான் இலங்கை மக்களை காப்பாற்றுதவதாக நாடகம் போடுகின்றது. தன் மக்கள் பட்டினியால் இறக்க, சாதியின் பெயரால் கொல்லப்பட இந்தியா இலைங்கையர்களுக்கு உதவுகின்றதாம். இலங்கை தன்னுடைய கடன்களை செலுத்த முடியாது என்று அறிவித்தால் முதல் பாதிப்பு இந்தியாவுக்குத் தான். அதனால் தான் இந்தியா இலங்கைக்கு முண்டுகொடுக்கின்றது. இலங்கையர்கள் மீதுள்ள அனுதாபத்தால் அல்ல.

நான் இலங்கையில் இருந்து மீண்டும் லண்டன் திரும்பும் போது மாலைதீவி, பஹ்ரெயின் வழியாகவே திரும்பினேன். கொழும்பில் இருந்து மாலைதீவு வரை விமானத்தில் விமானப் பணியாளர்களைத் தவிர நான் மட்டுமே பயணித்தேன். மாலைவீதில் விமானம் நிரம்பியது. இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வீழ்ச்சியையே அது பிரதிபலித்தது. நாடு பொருளாதாரத்தில் திண்டாட நாட்டில் பயங்கரமான நிலை நிலவுகின்றது என்ற மாயை சர்வதேச ரீதியில் கட்டமைக்கப்பட்டுவிட்டது. அதனால் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வரவில்லை. பொருளாதராரத்தை ஈட்ட முடியவில்லை. கோவிட் பிரச்சினை மேற்கு நாடுகளால் எண்ணை வாரத்து உக்ரெயினில் வளர்க்கப்படும் போர்த் தீ இலங்கை போன் மூன்றாம் உலகநாடுகளில் பாரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும்.

ஆனால் இந்தப் பின்னடைவை ஒரு வரப்பிரசாதமாகப் பயன்படுத்தி நாட்டில் சீரான தன்னிறைவு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அனைவரும் முயற்சிக்க வேண்டும். இலங்கையில் தற்போது 60 வீதம் நிலக்கரி மூலமான மின்சாரமும் 40 வீதம் நீர்வீழ்ச்சி மற்றும் மீள்சக்தி மூலமான மின்சாரமும் பிறப்பிக்கப்படுகின்றது. 60 வீத மின்சார வெட்டுக்குக் காரணம் நிலக்கரியை வாங்குவதற்கு நிதி இல்லாமையே. ஆனால் வெய்யிலும், காற்றும் உள்ள இலங்கையில் மீள்சக்தியூடான மின்சார உருவாக்கத்தை அதிகரித்து மின்சாரத்தில் தன்னிறைவை நோக்கி இலங்கை செல்ல முடியும் என்கிறார் யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீட பேராசிரியர் அ அற்புதராஜா. அரசு 2030இல் நிலக்கரி : மீள்சக்சி மின்சாரத்தை 60 : 40 இல் இருந்து 40 : 60 மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இவை தொடர்பான பாரிய பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நெருக்கடி நிலையை நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் சாதகமாகப் பயன்படுத்தி நாட்டை தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

பிரித்தானியாவின் பணவீக்கம் இரட்டிப்பானாது! விலைகள் எகுறுகின்றது!! கந்தையானாலும் கசக்கிக் கட்டுங்கள்!!!

பிரித்தானியாவின் பண வீக்கம் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. யூலையில் 2 வீதமாக இருந்த பணவீக்கம் ஓகஸ்ட்டில் 3.2 வீதமாக உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக பொருட்களுக்கு உள்ள தட்டுப்பாடு அது கோவிட்-19 இனால் ஏற்பட்ட முடக்கத்தை அடுத்து எழுந்த தாக்கம். அதைவிடவும் நீண்ட முடக்கத்தின் பின் பொருளாதாரம் விரைந்து நகர ஆரம்பித்ததும் பொருட்களுக்கான தேவையும் கேள்வியும் அதிகரிக்க மூலப்பொருட்களின் விலை சந்தையில் அதிகரித்துள்ளது. அது மட்டுமல்லாமல் பொருளாதாரம் இயங்க ஆரம்பித்ததும் எரிபொருளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. அதனால் எரிபொருளின் விலை உயர ஆரம்பித்துள்ளது. அதனால் விநியோகச் செலவு அதிகரிக்கும். மூலப்பொருட்களினதும் எரிபொருட்களினதும் விலை உயர்ந்தால் அது பொருட்களின் உற்பத்திச் செலவை அதிகரிக்கும்.

மூன்று குழந்தைகளின் தாயார் தேசம்நெற் க்கு தெரிவிக்கையில் தான் வாராவாரம் சொப்பிங் செய்வதாகவும் இன்று ஐஸ்லண்ட் சுப்பர் மார்க்ற்றில் சொப்பிங் செய்யச் சென்ற போது பொருட்களின் விலை வித்தியாசத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிவித்தார். ஐந்து மாஸ்க் ஒரு பவுண்டுக்கு விற்றவர்கள் இப்போது ஒரு மாஸ்க் இரு பவுண்டுக்கும் மூன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்றும் விற்பதாகத் தெரிவித்தார். இவ்வாறு பல பொருட்கள் விலையேற்றப்பட்டுள்ளது அல்லது பொருட்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

பிரித்தானியாவில் பண வீக்கத்தை 2 வீதத்திற்குள் வைத்திருப்பதே அரசின் செயற்திட்டமாக இருந்த போதிலும் அண்மைய நாட்களில் ஏற்பட்டுள்ள எரிசகத்தியின் விலையதிகரிப்புகள் பொருட்களின் விலையை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கலாம். மேலும் நீண்ட விநியோக லொறிகளின் சாரதிகளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டினால் விநியோக வலைப்பின்னலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதை அடுத்து கிழக்கு ஐரோப்பிய தொழிலாளர்கள் பெருமளவிலானோர் பிரித்தானியாவை விட்டு வெளியேறிவிட்டனர். அதனாலும் சாரதிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. சில பெற்றோல் நிலையங்களே இன்று விநியோக நெருக்கடி காரணமாக பெற்றோல் முடிந்த நிலையில் மூடப்பட்டு உள்ளது. பிரித்தானியாவில் பழம் பிடுங்குவதற்னே ரூமேனியாவில் இருந்து ஆட்கள் தருவிக்கப்பட்டனர். மேலும் உணவகங்கள் ஹொட்டல்கள் போன்ற வரவேற்புச் சேவை வேண்டிய இடங்களில் வேலையாட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கணணித் தொழில்நுட்பத்துறையில் துறைசார்ந்த அறிவுடையவர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. இதன் காரணமாக சம்பளத்தை உயர்த்தியே வேலைக்கு பணியாளர்களைத் தேட வேண்டியேற்பட்டுள்ளது.

இவற்றின் பின்னணியிலேயே பாங்க் ஒப் இங்லண்ட் இன் தலைவர் அன்ரூ பெய்லி பிரித்தானியாவின் நிதியமைச்சர் ரிஸ்சி சுனாக்கிற்கு கொள்வனவாளர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட விலை அதிகரிப்பைச் சுட்டிக்காட்டி இருந்தார். வழமைக்கு மாறாக அதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் அரசின் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி அரசு தற்போது பண வீக்கத்தை 2 வீதத்திற்குள் வைத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதையும் சுட்டிக்காட்டி இருந்தார்.

பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் நுகர்வோர் கலாச்சாரத்தை வளர்த்து தேவையற்ற பொருட்களை பெரும் நிறுவனங்கள் எம்மை வாங்க வைக்கின்றன. தேவையும் கேள்வியும் இல்லாதவிடத்து தேவையை உருவாக்கி கேள்வியை அதிகரிக்க வைப்பதே நவீன சந்தைப்படுத்தல் முறையாக வந்துகொண்டுள்ளது. இந்த உற்பத்திக்காக வளங்கள் விரயமாக்கப்பட்டு சுற்றாடல் மாசுபடுத்தப்படுகின்றது. மக்கள் இந்த பெரும் நிறுவனங்களின் வலையில் வீழ்ந்து நுகர்வோர் கலாச்சாரத்தின் அடிமைகளாகாமல் ஒரு பொருளை வாங்கினால் அதிலிருந்து உச்சபட்ச பலனை பெறவேண்டும். நமது முன்னோர் குறிப்பிட்டது போல் கந்தையானாலும் கசக்கிக் கட்டவும். தூக்கி எறிந்துவிட்டு புதிது புதிதாக வாங்கிக் குவிப்பது கொழுத்த நிறுவனங்கள் லாபமீட்டுவதற்கே வழிவகுக்கும்.

இங்கிலாந்தில் கொரோனாவோடு வாழ்வு

அரசு பாடசாலைகளை திறக்கக் கோருகின்றது!

விரிவுரையார் சங்கம் பல்கலைக்கழகங்கள் கோவிட்-19 போர்க்களமாகலாம் என்கின்றனர்!!

மக்களில் ஒரு பகுதியினர் கொரோணா தடுப்புச் விதிகளை நிராகரிக்கின்றனர்!!!

இங்கிலாந்தில் பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படவதற்கும் இன்னும் சில நாட்களே உள்ள நிவையில் வெளிவகின்ற செய்திகள் ஒன்றுக்குப் பின் ஒன்று முரணாணதாகவும் குழப்பகரமானதாகவும் உள்ளது. அடுத்து வரும் இரு ஆண்டுகள் வரை உலகம் கொரோணாவோடு தான் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில் இயல்பு நிலைக்கு எவ்வாறு மீள்வது என்பதில் பிரித்தானிய அரசு பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. முதற்கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் கொரோணாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு ஆரம்பகட்டத்தில் அசமந்தமாக இருந்ததினால் தற்போது உத்தியோகபூர்வமாக நேற்று வரை 41,498 பேர் மரணமடைந்ததாக அறிவத்துள்ளது. ஆனால் உண்மையில் இத்தொகை இரட்டிப்பானது என அஞ்சப்படுகிறது.

இப்பின்னணியில் நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. அதன் முதற்கட்டமாக பாடசாலைகளை மீள ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. அதற்கான திட்டமிடல்களை அரசு மேற்கொண்ட போதும் வினைத்திறனற்ற திட்டமிடல்களால் பல சந்தர்ப்பங்களில் அரசு தனது முடிவுகளை மாற்றிக் கொள்ள – யூ ரேன் – எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. அதனால் அரசின் அறிவிப்புகள் தொடர்பில் மக்கள் நம்பிக்கை இழந்தும் வருகின்றனர்.

தற்போது பாடசாலைகளை ஆரம்பிப்பதிலும் அலுவலகங்களுக்கு பணியாளர்களை வரவைப்பதிலும் அரசு மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அடுத்த சில வரங்களுக்கு இங்கிலாந்தைப் பொறுத்தவரை இதுவே அரசின் முக்கிய செயற்பாடாக அமைய உள்ளது. அதற்கான கொரோணா தடுப்புச் செயற்பாடுகளை பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும், அலுவலகங்களும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் பிரித்தானிய மக்களில் ஒரு பிரிவினர் அனைத்து கொரோணா தடுப்புச் செயற்பாடுகளும் அர்த்தமற்றவை என்றும் கொரோணா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டு வருமாறும் கோரி இலண்டனின் போராட்டமையமான ரவல்ஹர் ஸ்ஹயரில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டத்தினை நடத்தி உள்ளனர்.

ஆனால் இன்று விரிவுரையாளர் சங்கம் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு திரும்ப வேண்டாம் என்ற ஆலோசணையை வழங்கி உள்ளது. கொரோணோ பரவிய ஆரம்ப காலத்தில் வயோதிபர் இல்லங்களே கொரோணாவினால் கூடுதலாக பாதிப்படைந்ததுடன், பல்லாயிரம் பேர் வயோதிப இல்லங்களில் மரணித்தும் இருந்தனர். கொரோணா இரண்டாம் கட்டம் பல்கலைக்கழகங்களின் விடுதிகளே கொரோணாவின் போர்க்களமாக மாறும் என விரிவுரையாளர் சஙங்கம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த லெயடஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நிஷான் கனகராஜா (படம்) அதற்காகத்தான் பல்கலைக்கழகங்கள் கொரோணா தடுப்பு நடவடிக்கைகளை கடந்த சிலமாதங்களாக திட்டமிட்டு தீவிரமாக செயற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்கள் இவற்றையெல்லாம் கருத்தில் எடுத்து மிகக் கவனமாக திட்மிட்டு அதன் அடிப்படையிலேயே பல்கலைக்கழகங்கள் இயங்க ஆரம்பிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். பிரித்தானியாவில் லெய்ஸ்ரர் பிரதேசமே முதற் தடவையாக இரண்டாவது லொக்டவுன் க்கு உள்ளானது. ஆசியர்களை மிகச்செறிவாககக் கொண்ட இந்த லெய்ஸ்ரர் பிரதேசத்தில் கிழக்கிலங்கையைச் சேர்ந்த தமிழ், முஸ்லீம் மக்கள் கணிசமான அளவில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இங்கிலாந்தில் கோடைகாலம் முடிவடைந்து குளிர்காலம் ஆரம்பிக்க உள்ளது. இந்த குளிர்காலத்தில் தான் வைரஸ் கிருமிகள் மிகத் தீவிரமாக பரவுவது வழமை. இப்பரவல் பெரும்பாலும் பள்ளி மாவணர்களுடாவவே பரவுகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது புதிதாக உருவாகியுள்ள இந்த வைரஸ்க்கு, பிரித்தானியாவைப் பொறுத்தவரை இதுவே முதற் குளிர்காலம் என்பதால் இந்த வைரஸின் பரவலும், தாக்கமும் எவ்வாறு அமையும் என்பது இன்னமும் மில்லியன் பவுண்ட் கேள்வியாகவே உள்ளது. இதற்குள்ளாக அலுவலர்களையும் தங்கள் அலுவலகங்களுக்கு திருப்புமாறு அரசு கோரத் திட்டமிட்டு உள்ளது. இந்தக் குளிர்காலம் பிரித்தானியாவைப் பொறுத்தவரை மிகக் கடினமான, அபாயமான குளிர்காலமாகவே நோக்கப்படுகின்றது.

அதே சமயம் தொடர்ச்சியாக மக்களை லொக் டவுனிலும் வைத்திருக்க முடியாது. ஏற்கனவே அரசு அளித்து வருகின்ற பேர்லோ திட்டம் இந்த ஒக்ரோபர் உடன் முடிவுக்கு வருகின்றது. அது முடிவுக்கு வருவதுடன் வேலை இழப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகின்றது. ஏற்கனவே வழங்கப்பட்ட உதவிகளை எவ்வாறு மீளப்பெறவது, எவ்வாறு பிரித்தானியாவின் கடன்தொகையைக் குறைப்பது என்ற குழப்பத்தின் மத்தியில் வேலை இழப்புகள் மக்களை மேலும் அரச உதவியை நோக்கித் தள்ள உள்ளது. சில ஆய்வுகளின் படி நேரடியாக கொரோணாவினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அடுத்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடியால் கூடிய மரணங்கள் சம்பவிக்கும் என ஆபாய முகாமைத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. அதன்படி 2025 வரையான ஐந்து ஆண்டுகளில் பிரித்தானியாவில் 700,000 பேர் கொரோணா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பால் மரணத்தை சந்திப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

இன்னும் இரு மாதங்களில் வரவுள்ள வரவுசெலவுத் திட்டத்தில் அரசு கொரோணாவிற்கு செலவழித் பணத்தை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதற்கு வரியயை அதிகரிக்க வேண்டி ஏற்படும். ஏற்கனவே கொரோணாவினால் பொருட்கள் விலையேறி உள்ள நிலையில் வரி அதிகரிக்கப்படும் பட்சத்தில் அந்த வரி அதிகரிப்பு மக்களை நோக்கியே தள்ளப்படும். அதனால் பொருட்கள் விலையேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் அரசு பொதுச் செலவீனங்களை குறைக்க நிர்ப்பந்திக்கப்படும். தற்போது அட்சியில் உள்ள கொன்சவேடிவ் கட்சியானது முற்றிலும் முதலாளிகளினதும் பெரும் கோப்ரேட்களினதும் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சி. இவர்களுடைய பொருளாதாரக் கொள்கைகள் பெரும்பாலும் பின்தங்கிய கீழ் நிலையில் உள்ள மக்களையே கூடுதலாக பாதிக்கும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் கிடையாது. பொதுச்செலவீனங்கள் குறைக்கப்படும் போது அரச உதவிக்கொடுப்பனவுகள் குறைக்கப்படும். சுகாதார சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மக்கள் மேம்பாட்டுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் என பாரிய நிதிக்குறைப்புகள் பொதுச் செலவீனத்தில் மேற்கொள்ளப்படும். இவற்றின் ஒட்டுமொத்த விளைவாகவே 700,000 அடுத்த ஐந்து ஆண்டுகளில் மரணத்தை தழுவுவார்கள் என கணிக்கப்படுகின்றது.

இவற்றுக்கு மத்தியில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் வெளியேறுகின்றது. பிரித்தானியாவின் தான்தோண்றித் தனமான யெற்பாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பதிலடிகொடுக்க முயைலாம். அவ்வாறான ஒரு நிலையேற்பட்டால் பிரித்தானியாவில் அத்தியவசியப் பொருட்களின் விலைகள் உயர்வது தவிர்க்க முடியாததாகும். மேலும் ஐரோப்பிய சந்தையில் தங்கியுள்ள பிரித்தானிய நிறுவனங்கள் இலாபமீட்டமுடியாமல் திவாலாகிப் போகும் சூழல் ஏற்படும். பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழக்கவும் நேரலாம். பிரித்தானிய பொருளாதாரம் கொரோணா என்ற இயற்கை அழிவினாலும் பொறிஸ் ஜோன்சன் என்ற வினைத்திறன் அற்ற செயற்திறனற்ற பிரதமராலும் இரட்டைத் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. இவ்வழிவுகளில் இருந்து பிரித்தானியா மீண்டும் பழையநிலையை எட்ட இன்னும் ஒரு தசாப்தம் – பத்து ஆண்டுகள் ஆகம் என பொருளியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.

பிரிடிஸ் ஏயர்வெய்ஸ் 12,000 பேரை இன்று வேலைநீக்கம் செய்தது!

பெரும் நிறுவனங்கள் வேலையில் இருந்து வேலைசெய்வோரை நிறுத்த ஆரம்பித்து விட்டன. இன்று பிரிடிஸ் ஏயர்வெய்ஸ் 12,000 பேரை வேலையில் இருந்து நிறுத்தியுள்ளது. கொரோனா வந்த அதிஸ்ரம் பெரும் நிறுவனங்கள் எல்லாம் கொள்ளை இலாபமீட்டும் வகையில் தங்கள் நிறுவன வேலைக்கட்டமைப்புகளை மாற்ற உள்ளன. சோசல் டிஸ்ரன்ஸ் வேர்க்கிங் புறம் ஹோம் எல்லாமே இந்த நிறுவனங்களுக்கு சாதகமாகிப் போய்க் கொண்டிருக்கின்றது. மேலும் சுப்பர்மாக்கற்றுக்கள் ஓட்டோமேட்டட் சிஸ்டத்தை ஏற்கனவே அறிமுகப்படுத்தி விட்டனர்.

இன்னும் பத்து ஆண்டுகளில் இப்போது நடைமுறையில் உள்ள 50 வீதமான வேலைகள் இல்லாமல் போய்விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த கொரோனாவின் வரவால் பத்து ஆண்டுகள் அல்ல இன்னும் சில ஆண்டுகளிலேயே தற்போதுள்ள பல வேலைகள் காணாமல் போய்விடும்.

அப்ப இந்த நுகர்வுப் பொருளாதாரத்துக்கு என்ன ஆகும்? வேலை இல்லாதவனிடம் காசு இல்லை. காசு இல்லாதவன் என்த்தை வாங்குவான். உலக நாடுகள் பொருளாதாரக் கொள்கையை மீள்வரைபு செய்ய நெருக்க வேண்டிய காலகட்டம் இது.

பொறிஸ்க்கும் முதலாளித்துவத்திற்கும் பாடம் கற்பிக்கும் கொரோனா!

முதலாளித்துவ சிந்தனையின் அடிநாதமாகச் செயற்பட்ட மார்க்கிரட் தட்சர் ‘சமூகம் என்ற ஒன்றில்லை என்றும் ஆண்களும் பெண்களும் அவர்களுடைய குடும்பங்களுமே இருப்பதாகத் தெரிவித்தார். மக்களே தங்களை தாங்கள் முதலில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மூன்று தசாப்தங்களுக்குப் பின் அதே கொன்சவேடிவ் கட்சியில் இருந்து பிரதமரான பொறிஸ் ஜோன்சன், மார்கிரட் தட்சரினதும் கொன்சவேடிவ் கட்சியினதும் ஒட்டுமொத்த முதலாளித்துவத்தினதும் கொள்கைக்கு மாற்றாக “சமூகம் என்ற ஒன்று இருக்கின்றது” எனத் தெரிவித்து இருந்தார். கொரோனா வைரஸ் தாக்கிய நிலையில் சுகாதார சேவையாளர்கள் அடிமட்ட தொழிலாளர்கள் கொரோனாவுக்கு எதிராக தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிக்கொண்டிருக்கையிலேயே பொறிஸ்க்கு இந்த ஞானோதயம் ஏற்பட்டது.

“They are casting their problems at society. And, you know, there’s no such thing as society. There are individual men and women and there are families.” – Margret Thatcher, 1987

“There really is such a thing as society”. – Boris Johnson, 2020