::பொருளாதாரம்

::பொருளாதாரம்

இலங்கை மற்றும் சர்வதேச பொருளாதாரம் பற்றிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

கொறோனா வைரசும் இன்றைய உலகும்: புதிய திசைகள்

கொள்ளை நோயால் மக்கள் கூட்டம் கூட்டமாக அழிந்தார்கள் என்று பண்டைய வரலாற்றில் படித்திருக்கிறோம். இதுவரை வந்த பெரும்பாலான ஆட்கொல்லி நோய்கள் (epidemic) உலகின் ஏதோ ஒரு அல்லது சில பகுதிகளை தாக்கிவிட்டு தணிந்துவிடும் அல்லது அதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்பட்டுவிடும்.

2019 ல் சீனாவின் வுகான் பகுதியில் விலங்குகளிடம் இருந்து மனிதரை தொற்றிக்கொண்டு விட்டதாக கூறப்படும் இந்த கொவிட்-19 என அழைக்கப்படும் கொறோனா வகை வைரஸ் என்பது கண்ணுக்குத்தெரியாத மிகப்பெரிய மனித எதிரியாக பெருந்தொற்றாக (pandemic) மாறியுள்ளது.

உலகமயமாதல் என்பது மக்களை முன்னெப்போதும் இல்லாத அளவு இடநெருக்கமாக வாழவைத்துள்ள இன்றைய உலக சூழலில், உலகின் ஒரு மூலையில் உருவாகும் பிரச்சனை என்பது அதன் வீரியத்தின் அளவை பொறுத்து உலகின் சகல பாகங்களையும் சென்றடைவதற்கும், சமூகங்களுக்குள் சுற்றி சுற்றி விசச்சுழலாக நிலைத்து நின்று அழிவை ஏற்படுத்துவதற்கான சூழல் காணப்படுகிறது.

சீனாவின் வுகான் மாகாணத்தில் இந்த கொவிட் 19 வைரஸ் பரவியபோது இது வெறும் சீனர்களின் பிரச்சனையாக உலகு பார்த்தது எதோ உண்மைதான். அது மற்றைய இடங்களுக்கு தீவிரமாக பரவியபொழுது சீன மக்கள் பொதுப்புத்தி மட்டத்தில் இழிவுபடுத்தப்பட்டனர். சீன அரசு இந்த நோயின் தீவிரத்தன்மை தொடர்பான சரியான எச்சரிக்கையை உலகிற்கு அளித்ததா? பாதிக்கப்பட்ட, இறந்த சீன மக்களின் எண்ணிக்கைகள் முறையாக வெளிப்படுத்தப்பட்டனவா? என்னும் கேள்விகள் இன்று பலரிடம் இருக்கத்தான் செய்கிறது.

இந்த நோயை எதிர்கொள்வதில் வேறுபட்ட அணுகுமுறைகளை கையாளும் முகாம்களாக சீனா, இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா என பிரித்து பார்ப்பது இன்றுள்ள நிலைமையை புரிந்து கொள்வதற்கு இலகுவானதாக அமையலாம். ஒரு தொற்றுநோயை எதிர்கொள்வதில் கூட அரசுகளும், வேறுபட்ட சமூக கட்டமைப்புகளும் எப்படி பிரிந்து நிற்கிறன, வேறுபட்ட அணுகுமுறைகளை மேற்கொள்கின்றன என்பது கண்கண்ட சாட்சியாக வெளிப்பட்டு நிற்கிறது.

சீன நாடானது தனது ஒரு மாகாணத்திற்குள்ளேயே நோயை கட்டுப்படுத்தி விட்டதாக கூறிக்கொள்கிறது. மிக இறுக்கமான நிர்வாக முறைகளையும் அதிகாரங்களை மக்கள் மீது பிரயோகிப்பதில் பெரியளவு சவால்களை எதிர்கொள்ளாத சமூகக்கட்டமைப்பையும் தன்னகத்தே கொண்டதன் மூலமாக, மக்கள் அசையமுடியாத கட்டுப்பாடுகளையும் பலமான சிவில், மருத்துவ மற்றும் அதிகார பிரயோகங்களை மிக திட்டமிட்ட முறையில் மேற்கொண்டு நோயை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியிருப்பதாக தெரிகிறது. அவர்கள் பயன்படுத்தியிருக்கும் நவீன தொழில்நுட்பம் என்பது நோய் தொற்றுக்கு உள்ளானவரின் இரண்டு மூன்றுவார முழு நடவடிக்கைகளையும் கால அடிப்படையில் அவதானிக்க கூடிய வகையில் இருப்பதால் நோய்பரவலை தடுப்பது இலகுவானதாக இருக்கிறது. இது தனிமனித உரிமை மீறல் என்னும் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லை நாட்டில் பரவிவரும் நோயின் தீவிரத்தை குறைத்து எடைபோட்டிருந்த இந்திய அரசு இந்த நோயின் தீவிரம் தொடர்பான எச்சரிக்கையின் பின் தடாலடியாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து நாட்டை முழு ஊரடங்கு வாழ்விற்குள் வாரக்கணக்காக வைத்திருக்கிறது. மிக நெருக்கமான குடியிருப்பு வாழ்முறையை கொண்ட இந்திய மக்களில் குறிப்பிடத்தக்களாவான மக்கள் நெருக்கமான நகர குடியிருப்புகள், சேரிகள் ஏன் வீடற்ற வீதியோர குடிகள் என நோய்தொற்றலுக்கு ஏதுவான சிக்கலான வாழ்முறையை கொண்டிருக்கிறார்கள். நோய் தொற்று ஏற்படும் பட்சத்தில் அதன் பரவல் எல்லைமீறி சென்று பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளது

இந்திய சனத்தொகையுடன் ஒப்பிடும்போது அரச மருத்துவமனைகள் மிக குறைந்த மருத்துவ வசதிகளையே கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் தனியார் மயப்படுத்தப்பட்டுள்ள இந்திய மருத்தவத்துறை என்பது மக்கள் பேரவலத்தில் இருக்கும் போது வேடிக்கை பார்க்கும் ஒரு பிரிவாக இருக்கும் சாத்தியப்பாடுதான் இருக்கிறது. இந்த பலவீனத்தின் வெளிப்பாடாகவேதான் இந்திய அரசின் இந்த வாரக்கணக்கான நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவை புரிந்து கொள்ளலாம்.
நோய்தொற்றலை தடுக்கும் நோக்கு என்பதைவிட தற்போதைய அரசின் மீது பழி வந்துவிடக்கூடாது என்பதும் அது அவர்களது அரசியல் எதிர்காலத்தை பாதித்து விடக்கூடாது என்பதிலும் இந்திய, இலங்கை அரசுகள் ஆர்வம் காட்டுவதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. சர்வாதிகார அரசுகளுக்கு நெருக்கடி நிலமைகள் எப்பொழுதும் ஒரு வரப்பிரசாதமாகவே அமைகிறது. மோடி அரசுக்கும் சரி, ராஜபக்ஷ அரசுக்கும் சரி எந்த பிரயத்தனங்களும் இன்றி மக்களின் காவலன்களாக தம்மைக் காட்டிக்கொள்வதற்கு கிடைத்த அரிய சந்தர்ப்பமாகவே பயன்படுத்தப் படுகிறது.

ஊரடங்கு உத்தரவை அதிகார தோரணையில் போட்டுமுடித்த இலங்கை, இந்திய அரசுகள் என்பன, தமது நாட்டு மக்களில் அன்றாடம் உழைத்து வாழும் கிராம, நகர கூலி தொழிலாளர் குடும்பங்களுக்கும், இருப்பதற்கு வீடற்று இருக்கும் மக்களுக்குமான உணவிற்கான தீர்வாக எதை முவைத்திருக்கிறார்கள்? குறைந்த விலையில் சில குறிப்பிட்ட அரச விநியோக நிலையங்களில் அதுவும் வாரத்தில் ஒரிரு தினங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு தான் வழங்கப் படும் நிலை. ஒரு பிரிவு மக்களிடம் பொருள் வாங்க பணம் இல்லை. சிறிதளவு பணம் இருக்கும் மக்களும் பொருள் வாங்குவதற்கான ஒழுங்கான விநியோகம் இல்லை. இனம் புரியாத நோய் தொற்றலின் பயபீதியில் இருக்கும் மக்களுக்கும் சில நேரங்களில் அரசின் இந்த நடவடிக்கைகள் நியாயமாக படுவதில் ஆச்சரியமில்லை. அவகாசமற்ற திடீர் அறிவிப்புகளால் தயாரிப்பற்ற மக்களின் பதட்டங்களுக்கு பொலீசின் ஈவிரக்கமற்ற அடி உதைகள் கூட சமூகத்தால் நியாப்படுத்தப்படும் அநியாயம் கூட நடந்தேறுகிறது.

பிரச்சனை என்றால் மக்களை வீட்டிற்குள் அடைக்கும் வேலையை அதிகாரமுள்ள எந்த முட்டாள் அரசாலும் செய்ய முடியும்; இதற்கு எந்த மதிநுட்பமும் தேவையில்லை. கோவிட்-19 என்னும் வைரசின் பரவல் முறை என்ன? அதற்கு எத்தனை கட்டங்கள் இருக்கிறது? மக்களை முழுமையாக அடைத்து வைப்பதன் மூலம் நீண்டகாலம் நீடிக்கும் ஒரு வைரசின் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முடியுமா? மக்கள் சில வாரங்களில் சாதாரண நிலைக்கு திரும்பும்போது மீண்டும் பரவல் ஏற்பட்டால் அதற்கான முன்னேற்பாடுகள் எவை? நீண்டகால மக்கள் நடமாட்ட தடை என்பது நோயில் இருந்து காத்து பட்டினி சாவிற்கு மக்களை இழுத்துச்செல்லாதா? கூடவே நாட்டை மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்கு இட்டு செல்லாதா? என்பன இன்று மக்களை வீட்டிற்குள் பூட்டி வைத்திருக்கும் அரசுகள் முன் எழும் கேள்விகளாகும்.

இலங்கையில் ஊரடங்கை படிப்படியாக கொண்டுவந்திருக்கும் அரசு, மக்களின் உணவு விநியோகத்தில் அக்கறை கொள்வதாக தெரியவில்லை. மனித நேயம் உள்ள ஊர்மக்கள், புலம்பெயர் மக்கள் என ஒரு மக்கள் கூட்டம் தமது சொந்த மக்களுக்கு உணவளித்து காப்பற்றிக்கொள்கிறது. இதன் அரசியல் பலனை கூட தனதாக்கி அறுவடை செய்வதில் இலங்கை அரசு மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. எவர் உயிர் போனால் என்ன நிலைமை பெரியளவு பாதகம் இல்லாத இன்றைய இலங்கை சூழலில் தேர்தலை நடத்தி வெற்றிவாகை சூடிவிட வேண்டும் என்பதில் ராஜபக்ச சகோதரர்கள் மிகக்குறியாக இருக்கிறார்கள்.

தமது நாட்டை கொரானா வைரஸ் எதுவும் செய்துவிட முடியாது என்று மார்பு தட்டிக்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்பும், அமெரிக்க அரசும் சீனா மீது குற்றம் சுமத்துவதில் குறியாக இருந்தனவே தவிர அமெரிக்க மக்களுக்கு வர இருந்த ஆபத்தை உணர்ந்திருக்கவில்லை. இதன் விளைவாக கண்ணுக்கு அகப்படாத எதிரி இன்று அமெரிக்க மக்களை கொன்றொழித்துக் கொண்டிருக்கிறது. முட்டாள்தனமான தலைமை காரணமாக இன்று மாநில கவர்னர்களுக்கும், அரச அதிபருக்குமான முரண்பாடுகளாக ஒருவகை அரசியல் குழப்பமாக உருவெடுத்துள்ளது. எந்த சீனாவை குற்றம் சுமத்துவதில் குறியாக இருந்த அமெரிக்க அரசு இன்று மருத்துவ தேவைகளுக்கு சீனா போன்ற நாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

உலகின் பெரிய பொருளாதாரங்கள் சிறு தேக்கங்களுக்கும் பெரும் பொருளாதார பாதிப்புகளை அடையும் என்பது சந்தை பொருளாதாரத்தின் யதார்த்தம். இன்று ஏற்பட்டிருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தின் மிகப்பெரிய சரிவு என்பது சராசரியாக நாளுக்கு 2000 மக்களுக்கு மேல் உயிர்களை இழந்துவரும் சூழலிலும், முக்கால் மில்லியன் மக்களுக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையிலும் கூட நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவந்தே தீரவேண்டும் என்னும் அழுத்தத்தை அந்த அரசிற்கு கொடுத்துக்கொண்டிருக்கிறது.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் அணுகுமுறை என்பது, கொரோனாவை வருமுன் காப்போம் என்பதை விட எப்படியும் வரப்போகும் வைரசை எப்படி சமூகமாக கோவிட்-19 இற்கு எதிரான எதிர்ப்பு சக்தியை மக்களிடம் உருவாக்கி (herd immunity) வெற்றி கொள்வது என்னும் அணுகுமுறையில் நகர்வதாகவே உணரமுடிகிறது. அந்த நாடுகளின் சமூக ஓட்டத்தை ஓரளவு அனுமதித்துக் கொண்டு ஒருவகை சுய கட்டுப்பாட்டுடன் மக்களை நகர கோருவதாகவே பெரும்பாலான நாடுகளின் அணுகுமுறை இருக்கிறது.

மேற்கு ஐரோப்பாவின் பிரதான நாடுகளில் ஜேர்மனி தவிர்ந்த மற்றைய நாடுகள் இந்த வைரசை கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளார்களா என்பது அவர்கள் முன் உள்ள பிரதான கேள்வியாகும். ஒரு நோய்த்தொற்று என்பது Epidemic என்னும் பகுதியளவிலான பரவலை கடந்து Pandemic எனும் உலகு ரீதியான பரவல் கட்டத்தை அடையும் போது குறிப்பிட்டளவு உயிரிழப்பை தவிர்க்க முடியாது என்னும் கணக்குடன் இயங்கும் அதேவேளை தமது மருத்துவ வசதிகளை அதிகரித்து முடியுமான அளவிற்கு மக்களை காப்பாற்ற முயற்சிப்பது என்பது பல ஐரோப்பிய நாடுகளின் அணுகுமுறையாக இருப்பதாகவே பார்க்க முடிகிறது.

வயோதிபர்களை அதிகமாக கொண்ட இத்தாலி நாடு மிக அதிகமாக பாதிக்கப்பட்டு பல மரணங்களை சந்திக்க, ஸ்பெயின் நாடு வயோதிப மரணங்களுடன் மருத்துவ பிரிவின் பலவீனங்களால் மருத்துவ பிரிவில் பலரின் மரணங்கள் சம்பவித்த வண்ணம் இருக்கிறது. பிரான்சினதும், பிரித்தானியாவினதும் வைரஸ் நோயாளிகளின் இறப்பு வீதம் அதிகரித்துவர, நோய் தொற்றுள்ளவர்களை பரிசோதிப்பதிலும், தொற்றுக்கு உட்பட்டவர்களை காப்பாற்றுவதிலும் பெரும் சவால்களை இரு நாடுகளும் சந்தித்து வருகின்றன. இராணுவ பொருளாதார பலங்களுடன் இருக்கும் இவ்விரு நாடுகளும் ஒரு நோய்தொற்றில் இருந்து சொந்த நாட்டு மக்களை காப்பதில் பலவீனமாக இருக்கிறார்கள் என்பது இந்நாடுகளின் உண்மையான வளர்ச்சி நிலை தொடர்பான ஆழமான கேள்வியை முன்வைக்கிறது.

ஐரோப்பிய நாடுகள் தமது சொந்த சமூகங்களிடையே கொண்டிருக்கும் ஜனநாயக நடைமுறைகளை அளவிற்கு அதிகமாக மீறுவது பெரும் உள்நாட்டு குழப்பங்களை எதிர்காலத்தில் உருவாக்கும் என்னும் அச்சம், முழு அடைப்பு என்பது மீளமுடியாத பாரிய பொருளாதார சரிவுகளுக்கு இட்டுசெல்லும் என்னும் பாரிய பிரச்சனை, தம்வசம் வைத்திருக்கும் சில விசேட பொருளாதார சந்தை தளங்கள் இடம்மாறிவிடும் எனும் அச்சம், Pandemic என்னும் அளவிலான ஒரு வைரஸ் பரவல் பல கட்டங்களாக கூட வரமுடியும் என்னும் மேற்கு நாடுகளின் கணிப்பு என்பது அவர்களின் நீண்டநாள் சமூக முடக்கம் என்னும் முடிவு என்பதற்கு மாறாக பகுதி அளவிலான சமூக முடக்கம் என்னும் நடைமுறையை பின்பற்றி, மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் படிநிலையை வளர்த்துவிடுவது என்னும் நடைமுறைக்கு இட்டுச்செல்வது என்கின்ற விடயங்கள் தான் இந்த வைரஸ் தொற்று நோக்கிய ஐரோப்பிய அரசுகளின் அணுகுமுறையின் அடிப்படைகளாக இருக்கும் சாத்தியப்பாட்டை உருவாக்குகின்றன.

சீனாவில் இருந்து மற்றைய இடங்களுக்கு பரவியதால் சீன வைரஸ் என உள்நோக்கோடு சில நாடுகள் அழைத்ததும், சீன மக்களின் உணவுமுறைகள் காட்டுமிராண்டித்தனமானதாக பல சமூகங்களால் சித்தரிக்கப்பட்டவையும் அரசியல், சமூக பழிவாங்கல்களாக பார்க்கப்பட முடியும். ரஷ்யா, வடகொரியா,கியூபா போன்ற முன்னைய கொம்யூனிச அரசு ஆட்சியில் இருந்த நாடுகளில் கொரோனாவின் பரவல் மிக குறைவாக இருப்பதென்பதை வைத்துக்கொண்டு ஒருசாரார் இந்தவகை வைரஸ் தொற்று என்பது மேற்குலகம் மற்றும் அமெரிக்கா நோக்கிய சீனாவின் திட்டமிட்ட சதியாக இருக்கும் வாய்ப்புகள் இருக்கிறது என்னும் பொதுப்புத்தி மட்ட பிரச்சாரங்களையும் பரப்பத் தவறவில்லை.

மேற்கு ஐரோப்பாவில் ஜேர்மனி தவிர்ந்த பெரும் பொருளாதார பலம் உள்ள நாடுகள் பலவும் சமீபகாலமாக பொருளாதாரத்தில் வீழ்ச்சியை கண்டுவருகின்றன. குறிப்பாக ஸ்பெயினும், இத்தாலியும் கடும் நெருக்கடிக்குள் இருந்து வந்திருக்கின்றன. கோவிட்-19 தாக்குதல் என்பது இந்த நாடுகளை இன்னும் அதலபாதாளத்திற்குள் தள்ளிவிடப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. இதன் விளைவாக உற்பத்தியும் சந்தையும் வேறு பகுதிகளை நோக்கி நகர்வது நடந்தேறும் வாய்ப்பிருக்கிறது. மலிவான மனித உழைப்புடன் நவீன தொழிநுட்பங்களின் இணைவு என்பது சீனா, இந்தியா, தென்கொரியா, பிரேசில் போன்ற நாடுகளை உலகின் பொருளாதார சந்தையில் மேலே கொண்டுவந்திருக்கிறது. கோவிட்-19 ற்கு பின்னரான உலகத்தில் இது இன்னும் ஐரோப்பாவை விட்டு நகர்ந்து செல்வது தவிர்க்க முடியாததாக இருக்கும்.

வீழ்ந்து வரும் அமெரிக்க பொருளாதாரத்தின் பக்க விழைவுதான் மத்திய கிழக்கில் திட்டமிட்டு உருவாகப்பட்ட யுத்தங்களும் பேரழிவுகளும். சீனாவிடம் பொருளாதார ரீதியாக தோல்வியை சந்தித்துவிடக் கூடாது என பெரும் பிரயத்தனத்துடன் வலம் வரும் அமெரிக்க அரசு என்பது இன்று சீனா தன்னை மீறி செல்வதை பார்த்து சகித்துக்கொள்ள முடியாது சினம் கொண்டிருக்கிறது. கோவிட்-19 க்கு பிந்தய உலகில் அமெரிக்கா பொருளாதார ரீதியில் சீனாவைவிட பின் தங்கிவிடும் என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது. இதன் தாக்கம் என்பது, ஐரோப்பா நோக்கிய அமெரிக்காவின் மென்மை போக்கும், இறுக்கமான கூட்டுக்களும், இந்தியா, பிரேசில், போன்ற நாடுகளுடன் கூட்டை இறுக்கமாக்கும் போக்குகளும் அதிகரிக்க, சீனா நோக்கிய அமெரிக்காவின் கடும் போக்குகள் நகர்ந்து அடங்குவது தவிர்க்கமுடியாததாக இருக்கலாம்.

மனிதனும், வாகனங்களும் அடங்கி விட்டால் உலகம் எப்படி இருக்கும் என்பதை ஒரு மனித பேரவலத்தினூடாக நாம் உணர ஆரம்பித்திருக்கிறோம். எமது காலத்தில் முன்னெப்போதும் இல்லாத இயற்கையான சுற்றாடலும், பறவைகள் மிருகங்களின் நடமாட்டமும் உலகை வியக்க வைக்கிறது. நெருக்கடிகள், அவலங்கள் மக்களை பிணைப்புற வைக்கிறது. போட்டி பொறாமை; ஓட்டமும் நடையுமான வாழ்க்கையில் இருந்து உலகமே ஓய்வு எடுக்கும் போது மதம், போதகர்கள் எதுவும் இன்றி மனிதநேயம் புது வடிவம் பெறுகிறது. அரசியலும் மதமும்,சாதியும், பிரிவினைகளும் இங்கு கோலோச்ச முடிவதில்லை. உண்மையில் மனிதனின் எதிரி எது என்பதை இந்த சூழல் மீண்டும் ஒருமுறை நிரூபித்து விடுகிறது. அதிகாரங்கள், அரசுகள், மத நிறுவனங்கள் இந்த மனித அவலத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுமா என்றால் நிச்சயமாக இல்லை. மக்கள் வாழ்முறையில், இயற்கையை நோக்கிய மக்களின் அணுகுமுறையில், சக மனிதன் பற்றிய கருத்தமைவில் சிறு மாற்றத்தை கொண்டுவருமாக இருந்தால் மட்டுமே இந்த மனித பேரவலத்தில் தமது உயிர்களை இழந்த மக்களுக்கு உலக மக்கள் காட்டும் மரியாதையாக இருக்கும்.

புதிய திசைகள்
23/04/2020

இலங்கையில் மீண்டும் தன்னிறைவுப் பொருளாதாரம்?

கோவிட்-19 உலக அரசியல் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த இருக்கின்றது. இலங்கைளில் மீண்டும் தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கு இது வழிகோலி இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகின்ற தானியங்கள் மரக்கறிகளை குறைப்பதற்கு அரசு முயற்சி எடுத்துள்ளது. இந்த வகையில் 17 தானியங்கள் மரக்கறிகளின் இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டு இருக்கினற்து. மேலும் பரசிட்டமோல் மற்றும் தொற்று மற்றும் தொற்றா நோய்க்கான மருந்துகளின் உங்பத்தியையும் அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கின்றது.

சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களின் பொற்காலமாக கருதப்பட்டது அரசில் ரீதியாக அல்ல பொருளாதார ரீதியில் 1970க்கள். இலங்கையின் தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கைகளால் தமிழ் விவசாயிகள் பெருமளவில் நன்மை அடைந்தனர். அக்காலத்தில் உருவாக்கப்பட்ட விவசாய முயற்சிகளாலேயே வன்னியயை நோக்கி யாழிலிருந்து மக்கள் பெயர்ந்தனர். படித்த வாலிபர் திட்டத்தில் கல்லெறிந்து பிடித்த காணிகளையே கஜேந்திர குமார் பொன்னம்பலம் போன்ற நிலச்சுவந்தர்கள் இன்றும் கிறுக்குப் பிடியில் வைத்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு காணிப்பதிவை கணணி மயப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததும் இதனால் தான். இன்றைன தமிழர் விடுதலைக் கூட்டணியின் சொத்தும் அது தான்.

மாநிலங்களுக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் – உலகவங்கி

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்குக் காரணமாக இருந்த இனமுரண்பாட்டுக்கு தீர்வு காணாதவரை நீண்டகால உறுதித்தன்மையை தக்க வைக்கவோ மூலதனத்தை கவரவோ முடியாது என உலக வங்கி அறிக்கை தெரிவிக்கின்றது. மாநிலங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதே ஏற்புடைய செயன்முறையாக இருக்கும் என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள அரிய சூழல் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவிக்கும் உலக வங்கி அறிக்கை இச்சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி தமிழ் மக்களுடைய அரசியல் குற்றச்சாட்டுக்களை திருப்திப்படுத்துகின்ற தீர்வை முன் வைக்க வேண்டும் என்று அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

குறுகிய காலத்திலிருந்து இடைக்கால கட்ட பொருளாதார வளர்ச்சி சாதகமானதாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள உலகவங்கி அறிக்கை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து உலகு வெளியேவருவது அதற்கு உறுதுணையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. உல்லாசப் பயணத்துறையிலும் குறிப்பிடத்தக்க உயர்ச்சியையும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

போருக்குப் பின்னான இலங்கைப் பொருளாதாரம் வளர்ச்சியைக் கொண்டிருந்தாலும் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளுக்குத் தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும் இனமுரண்பாடுகள் தலைதுக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் உலக வங்கி அறிக்கை எச்சரித்துள்ளது.

மாநிலங்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்தை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற ஆலோசணையையும் உலக வங்கி தனது அறிக்கையில் வழங்கி உள்ளது. அடுத்த தேர்தலுக்கு பின்னரேயே அதிகாரப் பரவலாக்கம் பற்றி அரசு சிந்திக்கும் என அரச தரப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கொழும்பு பங்குச் சந்தை முதலாவது இடத்தில்!

071009stock_mkt.pngகொழும்பு பங்குச் சந்தை உலகின் சிறந்த பங்குச் சந்தையாக விளங்குவதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றைய முன் தினம் (05)  இந்தப் பங்குச் சந்தையின் முதலீட்டுத் தொகை வரலாற்றில் என்றுமில்லாதவாறு முதற்தடவையாக  994.5 பில்லியன் ரூபாவாக அதிகரித்துக் காணப்பட்டதாக  அறிவிக்கப்படுகின்றது.

பங்கு நிலைவரங்கள்  106.1 வீதத்தால் அதிகரித்துள்ளது.

மிலங்கா விலைச் சுட்டெண் 3508.7 ஆகக் காணப்பட்டதுடன் அதன் அதிகரிப்பு வீதம் 115.1 எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.எம். எப் (IMF) அழுங்குப் பிடியில் இலங்கை : வ அழகலிங்கம்

Protest_Against_IMF கடந்த சில நாட்களாக சர்வதேச நாணய சபை இலங்கைக்கு 2.6 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாகக் கொடுத்ததை ஒரு வெற்றியாக இலங்கை அரச ஆதிக்ககுழாங்கள் கொண்டாடுகின்றன. ஒரு நாடு கடன்கார நாடாகிவிட்டால்  அந்த நாட்டை அழிக்கப் பிரத்தியேக எதிரி எவரும் தேவையில்லை. அது தானாகவே அழிந்துபடும். எதையும் உயர்வு நவிர்ச்சியாகச் சொல்லும் கம்பன் “கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்று கடன் எவ்வளவு பெரிய சோகத்தைத் தரவல்லது என்று குறிப்பிடுகிறான். இந்த நிதியானது கடுமையான நிபந்தனையின் கீழேயே மேலும் இலங்கை மக்களின் வறுமைக் கோட்டக்குக் கீழ் வாழும்  வாழ்க்கைத் தரத்தை மேலும் வெட்டி வீழ்த்தும் நடவடிக்கையாகும். இலங்கைப் பொருளாதாரமோ நெருக்கடிக்கு மேல் நெருக்கடியில் உள்ளது. வெளி நாட்டு முதலீடுகளும் ஏற்றுமதிகளும் பாரிய அளவில் விழ்ந்துள்ளது. மாசி மதத்தில் வெளிநாட்டுச் செலவாணிச் சேமிப்பானது ஒன்றரை மாதத்திற்கே போதுமானதாக இருந்தது. அரச ஊழியர்களுக்குச் சம்பளம்கொடுக்கவே பணம் இல்லாத நிலை இருந்தது.

இதற்கிடையில் நிதிக் கொள்ளை நோய் உலகெங்கும் கடுமையான சீரழிவுகளைச் செய்த கொண்டிருக்கிறது. அது ஒவ்வொரு நாடாகக் கபளீகரம்செய்து கொண்டிருக்கிறது. அதன்விளைவாக வறுமையும் தொழிற்சாலை மூடல்களும் வேலையில்லாத்திண்டாட்டமும் தலைவிரித்தாடுகிறது. நிதி மூலதன ஒட்டுண்ணிகளின் சூதாட்டமானது ருத்திரத் தாண்டவமாடுகிறது. இதன் தாக்கம் யுத்தக் காயங்களால் பீடிக்கப்பட்ட இலங்கையில் பாரியளவு இருக்கிறது. இதிலிருந்து மீளவே மாற்று வழி ஏதுமில்லாமல் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கெட்டது.

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்ட பழைய காலனித்துவ நாடுகளை இன்றுவரை முன்னேறவிடாமற் தடுத்ததிலே சர்வதேச நாணய நிதியத்தின் பங்கு பிரதானமானது. இன்று வரை சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெற்று உலகில் எந்த நாடும் முன்னேறியது கிடையாது. ஆனால் இலங்கையோ இது தொடர்பாகப் பிரத்தியேகமான வரலாற்று அனுபவத்தைக் கொண்டுள்ளது. எந்த உரிமையுமே பொருளாதார அபிவிருத்திக்குக் கட்டுப் பட்டது என்று ஏங்கல்ஸ் கூறுகின்றார்.

இலங்கையில் தமிழ் மக்களோ சிங்கள மக்களோ எந்த உரிமையைப் பெற வேண்டுமானாலும் இலங்கை பொருளாதாரத்தில் முன்னேறவேண்டும் என்பதை முன் நிபந்தனையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது வரவு செலவுத்திட்டத்தில் பற்றாக்குறை இல்லாத நாடாக மருந்து எண்ணெய்  இயந்திரங்கள் போன்ற அத்தியாவசிய தேவைப் பொருட்களைத் தேவைக்கு ஏற்ற மட்டத்திற்கு இறக்குமதி செய்வதற்கு வேண்டிய வெளிநாட்டுச் செலவாணி உள்ள நாடாக வேண்டும். அது இலங்கை ஒரு நவீன நாடாகி உலகச்சந்தையோடு இரண்டறக் கலக்கும்பொழுதுதான் அது சாத்தியமாக முடியும். அதற்கு முந்நிபந்தனையாக இலங்கை தொழில் நுட்பத்தில் மேலாண்மை பெற வேண்டும். அப்படி மேலாண்மை பெற்றால் மாத்திரம் தான் சர்வதேசச் சந்தையிற்போட்டி போட்டு இலங்கையின் உற்பத்திப் பொருட்களைப் போட்டிகளுக்கு மத்தியில் விற்று வெளிநாட்டுச் செலவாணியை ஈட்டலாம். அந்த மட்டத்திற்கு இலங்கைத் தொழிலாளர்களின் சமூகஉழைப்பு உற்பத்தித்திறன் உள்ளதாகி விலைக்கு வாங்கும் சக்தி உள்ளதாகும்.

ஒவ்வொரு பொருளாதார அபிவிருத்திகளும் சமுதாய உறவுகளிலே மாற்றங்களைக் கொண்டு வரும். ஒவ்வொரு சமுதாய உறவுகளும் அதற்கேற்றாற்போல பொரளாதாரத்தை மறு சீரமைக்கும். சமூகங்களுக்கு உள்ளேயுள்ள உறவுகள் நாகரீகத்தை முன் நோக்கி உந்தித் தள்ளும் மாற்றங்களாக ஏற்பட்டால் மாத்திரம்தான் பொருளாதாரம் மேல் நோக்கி வளரும். இலங்கை அரசாங்கம் தமிழ்மக்களுக்கு உரிமை வழங்காததற்கான முக்கிய காரணம் அதன் பற்றக்குறைப் பொருளாதாரமேயாகும்.  சமூகங்களுக்குள்ளே உரசல் நிகழ்வதால் பொருளாதார வளர்ச்சி தடைப்படுகிறது. மணிக் கூட்டின் உள்ளேயுள்ள பல்லுச்சக்கரங்கள் ஒன்றோன்று இசைந்து இயங்காமல் ஒன்றோடொன்று மல்லுக் கட்டினால் சரியாக மணிக்கூடு இயங்காது போல சமுதாய உறவுகளிலே ஏற்படும் இசையாமையும் உரசல்களும் சமுதாயத்தை முன்னேற விடாது.

அரசியல் என்பது பொருளாதாரத்தின் செறிவே என்று மாக்ஸ் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் ஒரு நாட்டின் பொருளாதாரம் சின்னப் பொருளாதாரமாக இருந்தால் பெரிய அரசியல் செய்ய வேண்டும். ஒரு நாட்டின் பொருளாதாரம் பெரிய பொருளாதாரமாக இருந்தால் சின்ன அரசியலே போதுமானது. இலங்கை மக்கள் அதுவும் சிங்கள வெகுஜனங்கள் அரசியல் பேசுவதுபோல உலகில் எந்த இனமும் பேசுவது கிடையாது. அதன் காரணத்தைப் பற்றாக்குறைப் பொருளாதாரத்தில் தேட வேண்டும்.

இலங்கைக்கு இன்று கடனை வழங்கிய சர்வதேச நாணய நிதியம் என்ன நிபந்தனையின் கீழ் அக்கடனை வழங்கியுள்ளது என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
 
“எண்ணைமானியக் கடன், மின்சக்திமானியக் கடன், மற்றய அரசதொழிற்சாலைகள் ஏற்படுத்தியிருக்கும் கடன் போன்றவற்றைக் குறைக்க வேண்டும். வெளி நாடுகளிலிருந்து பெறும் கடன்களை மட்டுப்படுத்த வேண்டும். மானியம் வழங்குவதைக் குறைக்க வேண்டும். இராணுவச் செலவைக் குறைக்க வேண்டும். வரவுசெலவுப் பற்றாக்குறையைக் குறைக்கவேண்டும். பற்றாக் குறையை ஈடுசெய்யுமகமாக அரச வருமானத்தைக் கூட்டுவதற்காக வரிகளை உயர்த்த வேண்டும். மற்றய நாடுகளிலிருந்து நிதிஉதவி பெறும்பொழுதும், மற்றய அரசியல் நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பும் சர்வதேச நாணய நிதியத்தோடு கலந்துரையாடிவிட்டே எடுக்க வேண்டும்.’

இந்த நிபந்தனைகளில் இராணுவச் செலவைக் குறைக்க வேண்டும் என்பதைத் தவிர மற்றயவை இலங்கை மக்களுக்கு ஏற்புடையதல்ல. இதுகூட புதுமையான நிபந்தனையாகும். இராணுவச் செலவைக் குறையென்று சர்வதேச நாணய நிதியம் ஒரு நாளும் சொல்வதில்லை. இன்று கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்  மூன்றாமுலக நாடுகள், அதிகமாக நேற்று ஏராளமாக ஆயுதங்களை வாங்கிக் குவித்தவை என்பதே உண்மை. ஆயுதங்களுக்காகச் செலவு செய்வதால் அழிவைத் தவிர ஆக்கத்தை ஏற்படுத்துவதில்லை. இராணுவச் செலவீட்டில் வெறும் நுகர்வைத் தவிர வேறு எதுவும் நடக்கப் போவதில்லை. ஆயுதங்களைக் கடனில் வாங்கும் நாடுகள், அசலோடு வட்டியையும் சேர்த்துத் திரும்பக் கட்ட வேண்டியிருக்கும். ஆனால் இவற்றிலிருந்து எந்த வருமானமும் கிடையாது.

இந்தச் சீர்திருத்தங்கள் எண்ணெய் விலையையும் மின் சக்தி விலையையும் மற்றய சாமான்களின் விலையையும் கூட்டும் என்பதை விளங்கிக் கொள்ள  வேண்டும். உலகச் சந்தையிலே விலை கூடினால் அதற்கு ஏற்றாற்போல் இலங்கையிலும் விலையைக் கூட்டவேண்டுமே ஒளிய மானியம் வழங்கி விலையைக் கட்டுப்படுத்தக் கூடாது என்று கண்டிப்பாக எச்சரித்துள்ளது.

வரவுசெலவுப் பற்றாக் குறையைக் குறைப்பதற்கு மேலும் வரிகளைக் கூட்டி அரச வருமானத்தை அதிகரிக்கச் செய்வது  விலைவாசியைப் பாரிய மட்டத்திற்குக் கூட்டும். அரசாங்கத்தின் வரிவசூல் இலாகாவுக்கு வரும் வருமானம் குறைந்தால் மேலும் வரிகளைக் கூட்டுவதன் மூலம் அவற்றை ஈடுசெய்ய வேண்டும்.

இன்றைக்குள்ள இலங்கை மக்களின் விலைக்கு வாங்கும் சக்தியோடு ஒப்பிடுமிடத்து இது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எவருமே இலகுவாக ஊகிப்பர். மூன்று தசாப்த யுத்தத்தால் விரக்தியின் விழிம்பில் உள்ள இந்த மக்களை இந்தச் செயற்பாடுகள் என்ன செய்யத்தூண்டும் என்பதை ஊகிக்க முடியும்.

சில கிழமைகளுக்கு முன்னர் ஜனாதிபதி ராஜபக்ஸ்ச தான் சர்வதேச நாணய சபையின் நிபந்தனைக்குக் கட்டுப்படப் போவதில்லை என்று சூழுரைத்தார். 2007 மார்ச்சில் சர்வதேச நாணயசபை இலங்கை அரசாங்கத்தின் இசைவு இணக்கமும் ஒத்தாசையும் இல்லாமையால் நாட்டடைவிட்டு வெளியேறியது. இருந்தபோதும் அதன் இருபது வீதமான கடனை சர்வதேச நாணய நிதியத்திற்கு வருடா வருடம் பட்டுவாடா செய்ய வேண்டியிருந்தது. 2004 றணில் விக்கிரம சிங்கா அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்தால் பல தனியார்மயமாக்கல் நடவடிக்கை செய்யததாலேயே கலைக்கவேண்டி வந்தது. குறிப்பாக றெயில் சேவையை ஓரு இந்திய நிறுவனத்திற்கு விற்க எடுத்ததைத் தொடர்ந்து, அந்த இந்திய நிறுவனம் கொழும்பு கோட்டை புகையிரத நிலயத்தையும் மருதானைப் புகையிரத நிலயத்தையும் இடித்து அந்த இடங்களில் வர்த்தகக் கட்டிடங்களைக் (shopping complex) கட்ட இருந்தது. அதைத்தொடர்ந்த தொழிலாளர் வேலை நிறுத்மானது நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டு செல்லவே வேறு மார்க்கமில்லாமல் அன்றய ஜனாதிபதி சந்திரிக்கா, றணில்விக்கிரமசிங்கா அரசாங்கத்தைக் கலைக்க வேண்டி வந்தது.

வறிய மக்களின் துன்ப துயரங்களை இந்த நிதிநிறுவனம் ஒருபோதும் கருத்தில் கொண்டது கிடையாது. மாறாக முதலாளித்துவத் தொழிற்துறைகளை வளர்ப்பதற்காக ஏழைகளின் நிதியில் பெருவீதிகள் துறைமுகங்கள் விமான நிலையங் கட்டிக் கொடுத்ததே வழக்கமாக இருந்தது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்கு மூலகாரணம் சர்வதேச நாணய நிதியமாகும். 1950 தில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தில் அங்கத்துவ நாடாகச் சேர்ந்து கொண்டது. 1953 இல் இதன் நிர்ப்பந்தத்தால் அரிசிவிலை கூட்டப்பட்டதால்  மாபெரும் கர்த்தால் போராட்டம் வெடித்து பிரதம மந்திரி டட்லி சேனனாயக்கா கொழும்பு துறைமுகத்தில் இருந்த பிரித்தானியக் கப்பலில் ஓடி ஒழித்துக் கொண்டார்.

மீண்டும் 1965 டட்லி சேனனாயக்கா அரசாங்கத்தில் கல்விக்கான மானியத்தை வெட்ட சர்வதேச நாணய நிதியம் நிர்ப்பந்தித்தது. ஆனால் அப்பொழுது சர்வகலாசாலைக்குப் புகுவதற்குத் தகுதியான மாணவர்கள்  இலங்கையில் இருந்த பல்கலைக் கழகக் கொள்ளளவைவிடப் பத்து மடங்காக இருந்தனர். பொன்னம்பலம் செல்வனாயகத்தின் இந்துப் பல்கலைக்கழகமா தமிழ் பல்கலைக் கழகமா என்ற வாத விவாத இழுபறியால் ஒரு பல்கலைக் கழகமுமே போடாமல் டட்லி சேனனாயக்க தப்பிக் கொண்டார். உண்மை சர்வதேச நாணய நிதியம் அதற்கு நிதி ஒதுக்க விடவில்லை.

ஆனால் 1969 இல் பல்கலைக்கழகப் புகுமுகத்திற்கான மாணவர் போராட்டங்கள் நடைபெறவே அது 1970 இல் புதிதாக ஆட்சிக்கு வந்த இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசாங்கத்தால் பல்கலைக் கழகப் புகுமுகத்தில் தரப்படுத்தலை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டது. மேலும் சர்வதேச நாணய சபை முன்பு பட்ட கடனைத் திருப்பிக் கட்டும்படி பிடிவாதமாக நின்றதால் புதிய நிதி மந்திரி என்.எம் பெரோராவால் வரவு செலவுத் திட்டத்தைச் சமாளிக்க முடியாமற்போகவே அது ஏற்படுத்திய தாக்கத்தாலும் உலக நாணயமாக விளங்கிய அமெரிக்க டொலருக்கும் தங்கத்துக்கும் உள்ள பிணைப்பு ஜனாதிபதி நிக்ஸ்சன் நிர்வாகத்தால் உடைக்கப்பட்டு பணவீக்கம் கட்டுக்கடங்காமல் போய் அதன் பிரதி விளைவால் எண்ணெய் விலை உலகச் சந்தையில் நாலுமடங்காக கூடி மேலும் நெருக்கடி ஏற்படவே 1971 இல் ஜே.வி.பி கிராமப் புறச் சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சி ஏற்பட்டது. அன்று போடப்பட்ட அவசரகாச் சட்டத்தின் கீழான ஆட்சி இன்று வரை நீடிக்கின்றது.

1977 ஜே.ஆர். ஜெயவர்த்தனா யூ.என்.பி அரசாங்கம் வந்தவுடன் அதன் நிதி மந்திரியாக றொணி டீ.மெல் வந்தார். அப்போதும் சர்வதேச நாணய சபை உணவு மானியத்தையும் கல்வி வைத்திய வசத்திக்கான மானியத்தையும் வெட்டும் படி பிடிவாதமாக நின்று கொண்டது. அப்பொழுது ஜெயவர்த்தனா இலங்கையைச் சிங்பூராக்கக் கனாக்கண்டு 1956 இல் இருந்து நிலவிய இறக்குமதித்தடையை எடுத்ததோடு திறந்த பொருளாதாரத்திற்கு வழி வகுத்தார். முதலாவது வரவு  செலவுத்திட்டத்தை வாசிக்கும் நாள் பாராளுமன்றத்துக்குள் இரண்டு சர்வதேச நாணயநிதியப் பிரதிநிதிகள் கேட்போர் கூடத்தில் காத்திருந்து நிதிமந்திரியின் வரவுசெலவுத்திட்ட நகலைத் பரிசீலித்த பின்பே வாசிக்க அனுமதித்தனர்.

அன்று சர்வதேச நாணய சபை மற்றய மூன்றாமுலக நாடுகளுக்கு  ‘மறுசீரமைப்பு” என்று சொன்ன அதே சுப்ரபாதத்தை இலங்கை அரசுக்கும் சொன்னது.

‘நாணய மதிப்பைக் குறை, அரச செலவுகளைக் கடுமையாக வெட்டு. குறிப்பாக சமுதாயச் செலவு உணவு மற்றும் பிறநுகர்வுக்காக அளிக்கப்படும் மானியத்தைக் குறை, அரச நிறுவனங்களைத் தனியார் மயமாக்கு, அரசு கொடுக்கும் பொருட்களின் விலையை உயர்த்து, (மின்சக்தி, எண்ணெய், போக்குவரத்துக் கட்டணம், உரம், பூச்சிகொல்லி, நீர்), விவசாய நீப்பாசனத்திற்கு இலவச நீர் வழங்காதே, விலைக் கட்டுப்பாடுகளை அறவே அகற்று, ஊதியக் குறைப்பு மூலம் நுகர்வைக் குறை, வரி மற்றும் வட்டி விகிதங்களை உயர்த்து.”

கட்டுனாயக்காவில் போடவிருந்த சுதந்திர வாத்தக  வலையத்திற்கு எதிராக ஏற்பட்ட தொழிலாளர் போராட்டங்களைக் கட்டுப்படுத்த 1977 இனக்கலவரத்தை செயற்கையாக ஆத்திரமூட்டி ‘சண்டையெண்டால் சண்டை சமாதானம் என்றால் சமாதானம்” என்று பயமுறுத்தி அதன் பின்னணியில் 1978 இல் பங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப் பட்டது. அது இன்றுவரை நீடிக்கின்றது. அதைத் தொடர்ந்து 1983 இல் இனக்கலவரம் இராணுவத்தின் உள்சதி காரணமாக  வெடித்ததோடு வெறியாட்டம் ஆடிய இராணுவத்தை ஜெயவர்த்தனாவும் கட்டுப்படுத்த முடியாதவராக இருந்தார்.

அதைத் தொடர்ந்து நீடித்த 36 வருடங்களும் சர்வதேச நாணய நிதியம் உலகவங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் மேற்கு நாடுகள் எல்லாம் ஒவ்வொரு சமாதானப் பேச்சு வார்த்தைகளின் முன்னும் பின்னும் பொருளாதாரத்தைத் தாரளமயமாக்கு, அரசுடமையான நிறுவனங்களைத் தனியார் உடமையாக்கு என்று உச்சாடனம் செய்வதில் ஓய்ந்ததே கிடையாது. மாவிலாற்றுப் பிரச்சனை மத்தியிலும் கூட அவர்கள் தமது தனியார் மயமாக்கு என்ற நிர்ப்பந்தத்தை நிறுத்தியது கிடையாது. இருந்த போதும் பொருளாதாரத் தாரளமயமாக்கலும் தனியுடமையாக்கலும் இலங்கையில் பூரணம் அடையவில்லை. இன்றுவரை இலவச வைத்திய வசதியும் இலவசக் கல்வியும் உணவு எண்ணெய் மின் போக்குவரத்து உர மானியங்களும் பாதியளவென்றாலும் தப்பிப் பிழைத்துள்ளன. மூன்று தசாப்தமாக லட்சக்கணக்கான இலங்கைத்தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களை வெளிநாட்டு நிதி நிறுவனங்களும் ஏகாதிபத்தியங்களும் இரைகொடுத்து தமது உபரி மூலதனங்களை முதலிடுவதற்கான சூழலை ஏற்படுத்தி விட்டன. தமிழ் மக்களுக்கு இந்த யுத்தம் தமிழீழப் போராட்டமாகத் தோன்றிளாலும் மேற்குலக ஏகாதிபத்தியங்களோ இதனுள் தலையிட்டு தமது உபரி மூலதனங்களை முதலிடுவதற்குரிய சூழலை ஏற்படுத்தவே அக்கறையாக இருந்து சமாதானத்தை வஞ்சக வழிகாளாற் குழப்பின. புலியும் அவர்களது மகிடிக்கு வளைந்து வளைந்து ஆடியது.

Board of Investment (BOI), Sri Lanka  என்கின்ற வெளி நாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் திணைக்களம் இன்று இலங்கையிலே எந்தவித அரச தலையீடுமின்றி வெளிநாட்டவர் தமது முதலீடுகளை நூற்றுக்கு நூறுவீதம் தமது சொந்த நிறுவனத்தின் பேரில் முதலிடலாமென்றும் அதனால் வரும் லாபம் முழுவதையும் தமது சொந்த நாட்டிற்கே கொண்டு செல்லலாமென்றும் அதற்காக 15 அன்றேல் 20 வருடங்களுக்கு பூச்சிய வரிச்சலுகை தருவதாகவும் அறை கூவுகின்றன. அவர்களது முதலீடுகளைப் பாதுகாக்க மேலும் 100000 இராணுவத்தைச் சேர்கப் போவதாக இராணுவச் செய்திகள் கூறுகின்றன. இலங்கை மக்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை என்ற தோரணையில் இலங்கை அரசு இராணுவத்தைப் பெருக்கி வருகிறது.

இந்த உள் நாட்டு யுத்தத்திலே வென்றதாக எண்ணற்ற இராணுவக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அதனைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெறும் கெட்டித்தனம் பெற்று விட்டோமென்றும் அரசாங்க மந்திரிகள் புளுகுகிறார்கள். உதவி நிதி மந்திரி றன்ஜித் சியம்பலப்பிற்றியாவும் மத்திய வங்கி முகாமையாளர்  Ajith Nivard Cabraal புலியை வென்றதின் பின் மேலும்ஒரு பெரிய வெற்றி என்று ஊடகங்களக்குக் கூறிப் புழகாங்கிதம் அடைந்தனர்.

சேக்ஷ்பியரின் “ஹம்லெட” நாடகத்திலே வரும், எரிச்சலூட்டும் அந்த வயதான மனிதனான பொலோனியஸ் தன் மகனிடம் இவ்வாறு கூறுவான் ‘கடன் வாங்கவும் செய்யாதே, கடன் கொடுக்கவும் செய்யாதே.”

இந்த இலங்கை அரசாங்கத்தின் கண்மூடித்தனமான கடனுக்குப் பலியான இலங்கை மக்கள் விளைவுகளைக் கட்டாயம் சந்தித்தே தீரவேண்டும். உள்ளுர்ர் அத்தியாவசிய செலவுகளைக் குறைத்து, இலங்கை மக்களின் கல்வி உடல்நலம் போன்ற அடிப்படைத் தேவைகளை அலட்சியம் செய்து வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி
(பட்டினி பரம ஒளடதம்,
மீதூண் விரும்பேல்,
பாவி பட்டினி கிடந்தால் பரிசுத்தவான் ஆகிறான்)

வாங்கிய கடனுக்கு வட்டி கட்டும் இருண்ட எதிர்காலத்தை ஏக்கத்தோடு எதிர்பார்க்க வேண்டும். பட்ட கடனில் பாதியளவாவது மேலும் கள்ள வழிகளால் கறுப்புப் பணமாக வெளிநாட்டு வங்கிகளில் போய் சேர்வது திண்ணம்.
(எத்தொழிலைச் செய்தாலும்,
ஏது அவஸ்தைப் பட்டாலும்,
முத்தர் மனமிருக்கும் மோனத்தே)

அந்த அயோக்கியத்தனத்தை மறைக்க நாட்டிலே தேசப்பற்றாளர்களும் தேசப்பற்று இல்லாதவர் என்ற இரு பிரிவினரே இருக்கிறார்கள் என்று கடவுளை ஒத்த அதிஅறிவாற்றல் உடைய உத்தமர்கள்  அந்தரத்தில் நின்று பேசும் சுந்தர வசனங்களால் ஊடகங்கள் இனிக்கின்றன. உண்மையில் முழு இலங்கை மக்களும் தாம் கஷ்டப்பட்டுப் போராடி வென்றெடுத்த ஜனனாயக உரிமைகளையும் வாழ்க்கைத்தரத்தையும் சமூக அன்னியோன்யங்களையும் இழந்து விட்டனர். இலங்கையோ புரட்சி ஒன்றைக் கருக் கொண்டுள்ளது என்பதுவே உண்மையாகும். உலகம் முழுவதும் உதவி செய்தாலும் எந்த நிதி நிறுவனமும் எவ்வளவு காசைக் கொட்டினாலும் நெஞ்சை நெருடும் உண்மையொன்று உண்டு.

வன்னி முகாங்கள்  நல்வாழ்வுக்கான சாதனமாய் இல்லாமல் அவல வாழ்வுக்கு எதிரான பரிகாரமாக மட்டும் இருப்பது  தமிழ் இனத்தின் துர்ப்பாக்கியமாகும்.

வ.அழகலிங்கம்
ஜேர்மனி
30.06.2009

பொருளாதார நெருக்கடி குறித்து உலக வங்கி தலைவர் எச்சரிக்கை – உலக வங்கி தலைவர்

roberzoellick.jpg உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் இந்நிலையில், வறிய நாடுகளில் சமுதாயத்திற்காக செலவிடப்படும் தொகைகள் பாதிக்கப்படக்கூடாது என உலக வங்கியின் தலைவர் ராபர்ட் சோலிக் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் நிதி மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சகர்களின் மாநாட்டில் பேசிய அவர், செல்வந்த நாடுகளின் பொருளாதார நெருக்கடியில் கவனத்தை செலுத்துவதை விட்டு, அது வறுமையை எவ்வாறு பாதிக்கும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, சுகாதாரம், கல்வி மற்றும் உணவு போன்றவற்றுக்கு செலவிட வேண்டிய தொகையை முன்பு குறைத்த தவறை மீண்டும் செய்ய கூடாது என அவர் குறிப்பிட்டார்.

பொருட்களின் வரி நீக்கத்தால் அரசுக்கு 999 மில். ரூபா நட்டம்

தேசத்தைக் கட்டியெழுப்புதல் வரியை 3% ஆக அதிகரிப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் எந்தவிதத்திலும் அதிகரிக்கப்படாதென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பத்து அத்தியாவசிய பொருட்களுக்கு வரிகளை நீக்கியதாலும், மட்டுப்படுத்தியதாலும் அரசாங்கத்திற்கு 9991 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தத் தொகை ஒருவருடத்திற்கு சமுர்த்தி நிவாரணமளிக்க போதுமானதென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேசத்தைக் கட்டியெழுப்புதல் வரி திருத்தச் சட்ட மூலம் அதிகார சபை (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்ட மூலம் ஆகியன மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார். பொது மக்களுக்குச் சுமையைக் குறைப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளால், தேசிய வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு இறக்குமதி வரி 25% அறவிடப்பட்டதால் 222 மில்லியன் வருவாய் இருந்தது. ஆனால், தற்போது தேசிய உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், அரசாங்கத்திற்கு பல்வேறு விதமான செலவுகள் உள்ளன. இன்று (நேற்று 21) முற்பகல் 11 மணிவரை பாதுகாப்பு வலயத்திலிருந்து 39042 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளனர்.

இவர்களுக்கு நிவாரணமளிக்க வேண்டும். இன்று சிகரட் மூலம் கிடைக்கும் வருமானம் இழக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இழக்கப்பட்டவற்றை ஈடு செய்து தேசத்தைக் கட்டியெழுப்பு முகமாகவே ஒரு வீதமாக இருந்த வரியை 3%ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் எந்தவித தாக்கமும் ஏற்படாது” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க உலக நாடுகள் மேலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

imf.jpgதற் போதைய உலக நிதிநெருக்கடியை சமாளித்து, சர்வதேச நிதிக்கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு உலக நாடுகள் அனைத் தும் மேலதிக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று, ஐ எம் எப் எனப்படும் சர்வதேச நாணயநிதியம் கோரியிருக்கிறது.

நிதி நிலைமையில் சிறிது முன்னேற்றம் காணப்படுவதாகவும், நிதி நிலைமை தொடர்பான நம்பிக்கை அதிகரிக்கத்துவங்கியிருப்பதாகவும், ஐஎம்எப் அமைப்பின் புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

அதேசமயம் இதுவரை உலகநாடுகள் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தனித்தனியான சிறு நடவடிக்கை களாகவும், எதிர்வினைகளாகவும் இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

உலக அளவில் சிக்கலுக்குள்ளான நிதிச்சுமைகள் குறித்து புதிதாக வெளியிடப்பட்டுள்ள மதிப்பீட்டின்படி, அவற்றின் மதிப்பு நான்கு டிரில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நிதி நெருக்கடி காரணமாக சில நிறுவனங்கள் மூடப்படவேண்டியோ அல்லது வேறுநிறுவனங்கள் அவற்றை தம்வசப்படுத்திக் கொள்ளவேண்டிய நிலையோ உருவாகியிருப்பதாக்வும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கட்டுப்பாட்டு விலையிலும் குறைவாக சந்தையில் பாவனைப் பொருட்கள்- அமைச்சர் பந்துல

bandula_gunawardena.jpgபருப்பு, சீனி உட்பட முக்கிய பாவனைப் பொருட்களுக்கு அரசு கட்டுப்பாட்டு உச்ச விலையை அறிவித்தபோதும் அக்கட்டுப்பாட்டு விலைகளுக்கும் குறைவாகவே சந்தையில் அப்பொருட்கள் விற்கப்படுகின்றன என வர்த்தக, சந்தை  அபிவிருத்தி,  கூட்டுறவு, மற்றும் பாவனையாளர் சேவைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடாந்தும் கூறுகையில்,

கடந்த வருட புதுவருடத்தை விட இவ்வருடம் பாவனைப் பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் பாவனையாளர்களுக்கு கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேங்காய் எண்ணெய் ஒரு போத்தல் 100 ரூபாவாக நேற்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. தேங்காய் மற்றும் முட்டை என்பன விலை குறைந்துள்ளன.; போட்டி வர்த்தகத்துக்கு இடமளிக்கப்பட்டதே இதற்கான காரணமாகும்.

பாவனைப் பொருட்களின்  விலை அதிகம் வீழ்ச்சியடைவதால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பும் அரசாங்கத்து உண்டு. கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்ட பொருட்கள் பெக்கட்டுக்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்போது அவற்றுக்கு கட்டுப்பாட்டு விலை செல்லுபடியாகாது என நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வைத்து சில் வர்த்தகர்கள் அப்பொருட்களை கூடுதல் விலைக்கு விற்கின்றனர் என முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. தனியார் திறந்த பொருளாதாரக் கொள்கையை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன முதன்முதலாக அமுல்படுத்தினார். ஆனால் நாட்டுக்குப் பொருத்தமான  உண்மையான திறந்த பொருளாதாரக் கொள்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிமுகப்படுத்தியுள்ளார்

இதன் மூலம் அரசாங்கமும்  தனியார் துறையினரும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையமும் பொதுவான நன்மைகளை அடைந்துகொள்ள வழி ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

G20 உச்சி மகாநாட்டின் நிலைப்பாடுகளும் மூல உபாயங்களும்: (The G20- Part 2) : வி வசந்தன்

g20-1.jpgபங்குபற்றும் நாடுகளின் நிலைப்பாடுகள்

இந்த உச்சி மகாநாட்டில் கலந்து கொள்ளும் நாடுகள் ஒவ்வொன்றும் தமக்கு என்று தாமே தயாரித்த தாம் விரும்பிய நிகழ்ச்சி நிரலுடன்தான் வரவிருப்பதாக புலப்படுகிறது. ஓவ்வொரு நாடும் வேறு வேறான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற போதிலும் அந்நாடுகள் அக்கறை காட்டும் முக்கிய பிரச்சினைகள் பலவற்றுக்கு வேறு சில நாடுகளும் முக்கியத்துவம் கொடுக்கின்றன. எனவே ஒவ்வொரு நாடும் எதற்கு முக்கியத்துவம் கொடுத்து இம்மகாநாட்டில் பங்குபற்றுகிறது என்பதை கவனிக்க வேண்டிய அத்தியாவசியம் எழுகிறது. இம்மகாநாட்டில் பங்குபற்றும் ஒவ்வொரு நாட்டினதும் நிலைப்பாட்டை கீழே பார்க்கலாம்.

•உலக நிதி முறைமையை சீரமைப்பதும், புதிய விதிகளை உருவாக்கி கட்டுப்பாட்டுக்குட்படுத்துவதும்.

•வரி ஏய்ப்புப் புகலிடங்களை ஒழிப்பது.

•உள்நாட்டு உற்பத்தியை பாதுகாக்குமுகமாக வெளிநாட்டு இறக்குமதிகளை தடை செய்வதை தடுப்பது.

•உலக நாணய நிதியத்தை (IMF) புனரமைப்பதும் மிகவும் பெரிய அளவில் அதன் முதலாக்கத்தை (Capitalisation) அதிகரித்தல்.

•சந்தைகளை சீரமைப்பது.

•ஏனைய நாடுகளின் கையிறுப்பு பணம் தொடர்ந்தும் அமெரிக்காவின் நாணயமான டொலரில் வைத்திருப்பதா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்வது.

•உலகபொருளாதார ஊக்கிப் பொதிகளை விஸ்த்தரிப்பதும் அதிகரிப்பதும்.

•உருப்படாத வங்கிகளை மூடுதல்.

•வங்கிகள் கடன்களை வழங்குதற்கு தடையாக விளங்கும் நச்சுச் சொத்துக்களை தனிமைப்படுத்த கையாளும் வரைமுறையை உருவாக்க ஆதரவு வழங்குவது.

•உலக நாணய நிதியத்தில் (IMF) வளர்ச்சியடையும் நாடுகளுக்கான வாக்குரிமைகளை அதிகரிக்க அழுத்தம் கொடுப்பது.

•கடன் பெறுவோரது தகமைகளை பரிசீலிக்கும் முகவர்களை சீரமைத்து எதிர்காலத்தில் உருவாகக்கூடிய நிதி நெருக்கடிகளை முன்மதிப்பிட்டுரைப்பதற்காண திறன்களை வளர்ப்பது.

•மேழும் அதிகளவில் வளர்ச்சியடையும் நாடுகளுக்கு ஆதரவுவளிப்பது.

•சூழல் பாதுகாப்பு.

•வங்கிகளின் உயர்நிலை ஊழியர்களின் ஊதியங்களுக்கு உச்சவரம்பு நிர்ணயித்தல்.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் உலகபொருளாதார ஊக்கிப் பொதிகளை விஸ்தரிப்பதும் அவற்றை ஏனைய நாடுகளும் பின்பற்றி அமுல்ப்படுத்துவதுமே மிக முக்கியம் என கருதுகிறது. இந்த நிலைப்பாட்டை ஜப்பான், இந்தியா, சீனா, பிரேசில், தென்கொரியா போன்ற நாடுகளும் ஆதரிக்கின்றன. அதே வேளையில் ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் உலக நிதி முறைமையை சீரமைப்பதும் புதிய விதிகளை உருவாக்கி கட்டுப்பாட்டுக்குட்படுத்துவதும் எதிர்காலத்திற்கு மிக முக்கியமான அடிப்படைத் தேவைகள் என வாதாடுகின்றன. இந்த நிலைப்பாட்டை இத்தாலி, கனடா, ஒல்லாந்து, போன்ற நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரிக்கின்றன. இது தொடர்பாக அமெரிக்கா உடன்பாட்டிற்கு வர மறுத்தால், ஜேர்மனி, பிரான்சு ஆகிய இவ்விரு நாடுகளும் வெளிநடப்புச் செய்யத் தயாராக இருப்பதாக அவ்விரு நாடுகளின் தலைவர்களும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில், வரி ஏய்ப்புப் புகலிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் சீனா தயங்குவதற்கு கொங்கொங், மக்கவு போன்ற இடங்களில் சீனாவுக்கு இருக்கும் நலன்கள்தான் காரணம் என பிரான்சின் அதிபர் பத்திரிகையாளர் மகாநாட்டில் விசனப்பட்டுள்ளார்.

இந்தியாவும் சீனாவும், உள்நாட்டு உற்பத்தியை பாதுகாக்குமுகமாக வெளிநாட்டு இறக்குமதிகளை தடை செய்வதை தடுப்பது, உலக நாணய நிதியத்தை (IMF) புணரமைப்பது, வளர்ச்சியடையும் நாடுகளுக்கான வாக்குரிமைகளை அதிகரிப்பது போன்ற நோக்கங்களில் மிகவும் தீவிரமாக இருப்பதாக காணப்படுகிறது.

சீனா தனது மேலதிக அந்நியசெலாவணி 2,000,000,000,000 (2 திறில்லியன்) டொலர்களை அமெரிக்காவின் வெளிநாட்டு முறிகளில் (Treasury Bond) முதலீடு செய்துள்ளது. இன்றய பொருளாதார நெருக்கடிகளினால் அமெரிக்க டொலர்களில் செய்யப்பட்ட சீனாவின் முதலீடுகள் பாதிக்கப்பட்டு வெளிநாட்டுச் சொத்துக்கள் அதன் பெறுமதியை இழக்கலாம் என சீனா கவலைப்படுவதாகத் தெரியவருகிறது. அண்மையில் சீன மத்திய வங்கியின் ஆளுநர் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், உலக நாணய நிதியம் (IMF) அதன் அங்கத்துவர்களுடைய விசேட உரிமைகளை அதிகரிப்பது மட்டுமல்லாது, புதிய மேன்மையான இறைமையுள்ள கையிறுப்பு நாணயம் (Super Sovereign Reserve Currency) ஒன்றை உருவாக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார்.

பல வங்கிகள் அறவிட முடியாத வீடுகள் வாங்க கொடுக்கப்பட்ட கடன்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான கடன்களை வங்கிகளின் நச்சு சொத்தென அழைக்கப்படுகிறது. இவ்வாறான கடன்களை பட்டுவாட செய்த அமெரிக்க வங்கிகள் மூலதனப் பற்றாக் குறையால் உள்நாட்டு பிற நாட்டு வங்கிகளினிடம் பெரும் தொகையான கடன்களைப் பெற்று அவற்றை திரும்ப செலுத்த முடியாமல் போனதால் ஏற்பட்ட பணஓட்டத் தட்டுப்பாடே, இன்றய பொருளாதார நெருக்கடிகளுக்கு அடித்தளமாக அமைந்தது. இவ்வாறான நச்சு சொத்துக்களை சுததிகரித்து அப்புறப்படுத்தாவிடில் இன்று ஏட்பட்டிருக்கும் பொருளாதார மந்தம் இனி வரும் பல தலைமுறைகளுக்கு நீடிக்கப்படுமென உலக நாணய நிதியத்தின் (IMF) முகாமை இயக்குனர் டொமினிக் ஸ்றவுஸ் கான் எச்சரித்துள்ளார்.

இவ்வாறு பல உள் முரண்பாடான நிலைப்பாடுகளை கொண்டிருக்கும் இந்த கூட்டமைப்புக்கு, இன்றைய மாபெரும் பொருளாதார நெருக்கடியானது எதிர்காலத்தில் பெரும் பொருளாதார மந்த நிலைக்கு உலக நாடுகள் தள்ளப்படும் அபாயம் உள்ளதை உணர்ந்திருப்பதும்; இப்பிரச்சினைக்கு நாடுகள் இணைந்து தீர்வு காண வேண்டிய அவசியத்தையும் ஏற்றுக்கொண்டே இம்மகாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

பிரித்தானியப் பிரதமர் பிரவ்ண் தலைமையில் நடாத்தப்படும் இவ்வுச்சி மகாநாட்டிற்கு அவர் தனது நேரம், செல்வாக்கு, அந்தஸ்த்து, அறிவாற்றல் அனைத்தையும் முதலீடு செய்திருந்தார். வங்கிகளின் வீழ்ச்சியால் தூண்டப்பட்ட இந்த நெருக்கடியிலிருந்து மீள ஏனைய நாடுகளை ஒரு புதிய சமூக பொருளாதார ஏற்பாட்டிற்க்கு (Global New Deal) பங்கு பற்றும் ஏனைய நாடுகளிடம் ஆதரவு கேட்டு கோரிக்கை விட்டிருந்தார். அவரது இந்த ஏற்ப்பாடு பின்வரும் அம்சங்களை கொண்டிருக்கும் என்றார்:

உலக பொருளாதாரம் மீள்வது மட்டுமல்லாது வங்கிகள் சிறந்த விதிகளுக்கு உட்பட்டு நடாத்தப்படும்.
வெளிநாட்டு பொருட்களையும் சேவைகளையும் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்காமல் மும்முனை மூல உபாயங்களை பயன்படுத்தி பொருளாதாரத்தை மீளக்கட்டுதல்.

g20-21.jpgமூல உபாயங்களாவன:

1) குடும்பங்களும் வர்த்தக தாபனங்களும் பொருளாதார மந்தநிலையிலிருந்து மீள நிதிக்கான சந்தையை திட்டநிலைக்கு கொண்டு செல்ல எது தேவையோ அதனை செய்வது.

2) உலக நிதிச் சந்தையின் நம்பகத்தன்மையை மீளப்பெற அதனை மறுசீரமைத்து பலப்படுத்துவது.

3) உலக பொருளாதாரத்தை மீட்டு நீண்ட கால வளச்சிக்காக வழிவகைகளை அமைத்தல்.

இந்த உச்சிமகாநாட்டில் பங்குபற்றிய ஒவ்வொரு நாடும் தமது நோக்கங்களுக்கும் நிலைப்பாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்ததை பார்க்கும் போது மகாநாட்டின் இறுதியில் மக்களுக்கு நன்மை தரும் முயற்சிகளை எங்கே விட்டுவிடுவார்களோ என்ற எண்ணம் பலருக்கு தோன்றியதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படியிருந்தும் கூட நிதி நெருக்கடியின் மிகவும் ஆக்ரோசமான தாக்கம் அவர்களை ஒரே மேசையைச் சுற்றி அமரச் செய்துள்ளது.

கடந்த 25 வருடங்களாக தொடர்ந்து அமுலாக்கி வந்த வோசிங்டனின் கருத்து (Washington Consensus) என்பது பொதுவாக வளர்ச்சியடையும் நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்படாவிடினும், உலக நாணய நிதியம் (IMF), உலக வங்கி (World Bank) அமெரிக்காவின் திறைசேரி (US Treasury Department) போன்ற பலம்மிக்க நிதி தாபனங்களால் வளர்ச்சியடையும் நாடுகள் மீது திணிக்கப்பட்ட நவ தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளே (Neoliberal Policies). மற்றய காரணிகளை கருத்தில் எடுக்காது, திட்டநிலை (Stability) தனியார் மயமாக்கல் (Privatisation), தாராளமயமாக்கல் (Liberalization) என்னும் மூன்று பொருளாதார கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டதே இந்த வோசிங்டனின் கருத்து. இந்த கொள்கைகளால் பாதிக்கப்பட்ட வளர்ச்சியடையும் நாடுகள் பல. இந்த உச்சிமகாநாடு வோசிங்டனின் கருத்துக்கு எதிராக மாற்றுக்கருத்தை வைக்க முடியுமா என்னும் சர்ச்சையை ஆரம்பித்துள்ளது.

உச்சி மகாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவ்ண் இறுதி அறிக்கையில் “இன்று நாம் வாக்குறுதி கொடுத்திருப்பது எதற்கென்றால் எவற்றை அத்தியாவசியமாக செய்ய வேண்டுமோ அவற்றை செய்து:

1.நம்பிக்கை, பொருளாதார வளர்ச்சி, தொழில் வாய்ப்புகளை புதுப்பிப்பது.

2.நிதி முறைமையை மீள் சீரமைத்து கடன் வழங்களை மீண்டும் ஆரம்பிப்பது.

3.நிதி தொடர்பான விதிகளை பலப்படுத்தி மீள நம்பிக்கை ஊட்டுவது.

4.இந்த நிதி நெருக்கடி மீண்டும் உருவாகாமலிருக்க சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதுடன் இவ்நிறுவனங்களை மறுசீரமைத்தல்.

5.இறக்குமதிக்கெதிராக தடை விதிப்பதை நிராகரிப்பதுடன் உலக வர்த்தகத்திற்கும் முதலீடுகளுக்கும் ஊக்கமளித்து வளத்தை பெருக்குதல்.

6.சகலரையும் உள்ளடக்கிய, சுற்றாடலை பேணும்தக்க வைக்க வல்ல பொருளாதார மீட்சியை உருவாக்குதல் போன்றவைகளாகும்.

தீர்மானங்களும் அமுலாக்கல்களும்

மேலே குறிப்பிட்ட குறிக்கோள்களை அடைய பல வகையான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டியுள்ளது. அவையாவன:

1.உலகநாணய நிதியத்தின் ஊடாகவும் (IMF) மற்றய சர்வதேச நிதி நிறுவனங்கள் ஊடாகவும் சுமார் 1.1 திரில்லியன் டொலர்களை உதவி வேண்டும் நாடுகளுக்கு கடனாக விநியோகிப்பது.

2.நிதி திடநிலை சபை (Financial Stability Board) ஒன்றை ஸ்தாபித்து நிதி முறைமையை பலப்படுத்துவது.

3.சர்வதேச நிதி நிறுவனங்களை பலப்படுத்துமுகமாக அவற்றிற்கு போதிய மூலதனத்தைப் பெற ஏற்பாடுகளை செய்து கொடுத்தல். இதுவரை காலமும் உலக நாணய நிதியம் (IMF) கடன் கொடுப்பதில் காட்டிய கடும் போக்கினை தளர்த்தி தேவையின் நோக்கமறிந்து கடன் உதவிகளை செய்வதற்கேட்ப மறுசீரமைக்கப்படுகிறது.

4.இறக்குமதிக்கெதிராக தடை விதிப்பதை தவிர்ப்பதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொள்வதுடன், உதவும் நோக்கத்துடன் வர்த்தகம் மேம்பட 250 பில்லியன் டொலர்களையும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் டோகா அபிவிருத்தி சுற்றுப் பேச்சு வார்த்தைகளையும் சுமூகமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் மேற் கொள்ளப்படுகிறது.

5.நீதியானதும் தக்கவைக்க கூடியதுமான பொருளாதார மீட்சி பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவும்முகமாக பழைய திட்டங்களை பலப்படுத்துவதுடன் புதிய திட்டங்களும் அமுல் செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக 6 பில்லியன் டொலர்கள் கடன் வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது.

6.வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தமது ஊழியருக்கு வழங்கும் ஊதியம், ஊக்கத்தொகை தொடர்பான வெளிப்படையான காலத்திற்கு காலம் வெளியிட நிர்பந்திக்கப்படுவர்.

7.வரி ஏய்ப்பு புகலிட நாடுகள் தொடர்பாக உருப்படியான பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

8.கணக்கியல் துறையில் கோட்பாடுகள் தொடர்பாக தேவையான மாற்றங்களை செய்வது.

9.கடன் பெறுவோரது தகமைகளை பரிசீலிக்கும் முகவர்களை கண்கானிப்பதற்கான தேசிய அளவில் அதிகார சபைகளை உருவாக்குதல்.

இந்த உச்சிமகாநாடானது பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டு ஆக்கபூர்வமான பல திட்டங்களை முன் வைத்ததுமல்லாமல் அதற்கான அரசியல் ஆதரவையும் முக்கிய நாடுகளிடமிருந்து பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. இத்திட்டங்களெல்லாம் இன்றைய நிதி நெருக்கடியை தீர்த்து வைத்து பொருளாதார தேக்கத்தை அல்லது மந்தத்தை போக்கும் என்று திட்டவட்டமாக கூறுவது கடினம். அதே வேளை மகாநாட்டின் வெற்றியை மனதில் கொண்டு பல முரண்பாடுகள் மூடி மறைக்கப் பட்டிருக்கலாம். இவ்வாறன முரண்பாடுகள் அந்தந்த நாடுகளின் உள்நாட்டு அரசியலைப் பொறுத்தே தங்கியுள்ளது.

சில கேள்விகளுக்கு இன்னும் விடை கிடையாது.

1.இரண்டு திரில்லியன் பெறுமதியுடைய நச்சு சொத்துக்களை என்ன செய்வது?.

2.உலக நாணய நிதியம் (IMF) பல வளர்ச்சியடையும் நாடுகளால் விரும்பப்படாத ஒரு சர்வதேச நிதித்தாபனம். வோசிங்டன் கருத்தை” மிக மோசமான வழிகளில் ஈவு இரக்கமின்றி அமுல்படுத்தி பல நாடுகளில் மக்களை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியதில் உலக நாணய நிதியத்திற்கு பெரும் பங்குண்டு. இத்தாபனம் மறுசீரமைக்கப்பட்டாலும் தனது பழைய சிந்தனையிலிருந்து புதிய பாதைக்கு வருமா என்பது கேள்விக்குறியே.

3.உலக நாணய நிதிற்கு (IMF) பணமாக்குவதற்கான அதிகாரம் வழங்கப்படவுள்ளது. இவ்வாறான அதிகாரங்கள் எவ்வாறான பக்கவிளைவுகளை எதிர் காலத்தில் உருவாக்கும் என்பதில் தெளிவில்லை.

4.நிதி சார்பு முறைமைகள் கட்டுமானங்கள் ஆகியவற்றில் அடிப்படையானதும் முழுமையானதுமான மாற்றங்களை ஏற்படுத்தாமல் இன்று உருவாக்கியிருக்கும் நிதி நெருக்கடி எதிர்காலத்தில மீண்டும் உருவாகாது என உறுதியாக கூற முடியாது.

5.இன்று நிதி நெருக்கடியையும் பொருளாதார தேக்கத்தையும் அகற்ற மேற்கொள்ளப்படும் இம்முயற்சிக்கு ஏராளமான நிதி தேவைப்படுகிறது. இதனை வட்டியும் முதலுமாக மீட்கப்போவது எதிர் கால சந்ததியினர். எமது பொறுப்பற்ற செயலால் ஏற்பட்ட விளைவுகளை சுமக்கப் போவது அவர்களே.

எது எப்படியிருப்பினும் பிரித்தானியா பிரதமர் கோர்டன் பிரவ்ன் தனது முடிவுரையில் கூறியது போல “வோசிங்டன் கருத்து” மேலாதிக்கம் செய்த காலம் முடிவுக்கு வந்துவிட்டது

இன்றைய வளரும் சந்தைகளைக் கொண்ட பிரேசில், ரஸ்சியா, இந்தியா, சீனா (BRIC) போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியானது இதுவரை காலமும் கண்டிராத அதிகார அதிர்வுகளையும் நகர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது. மேற்குலக நாடுகள் தம்மிடமிருந்த பொருளாதார பலம் படிப்படியாக மேலே குறிப்பிட்ட நாடுகளுக்கு கடந்த பல வருடங்களாக நகருவதை உணர்ந்த பொழுதிலும் அதற்கு ஏற்ற அங்கீகாரம் இந்த நாடுகளுக்கு கொடுக்கப்படவில்லை. ஆனால் கடந்த கார்த்திகை மாத உச்சி மகாநாடும் சித்திரை இரண்டாம் நாள் நடந்தேறிய மகாநாடும் இந்த நாடுகளுக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது. இவ்வாறான அங்கீகாரங்கள் அடுத்த கட்ட அரசியல் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள வழிவகுக்கும்.