January

January

மக்கள் விரும்பினால் வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டும்: தமிழ் தேசிய கூட்டமைப்பு

tna.jpgஇலங்கையின் ஜனாதிபதி வடக்கே போர் நடக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டும் என்று கோரியுள்ள நிலையில், அவ்வாறு மக்கள் வெளியேற விரும்பினால், அதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவரான இரா சம்பந்தர் தெரிவித்தார்.

எனினும், அப்பகுதியிலிருந்து வெளியேறுவது குறித்த முடிவை அங்கிருக்கும் மக்கள்தான் எடுக்க வேண்டும் என்றும் அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாததற்கு விடுதலைப் புலிகள் மட்டுமே காரணம் என்று கூறப்படுவது ஏற்க முடியாதது என்றும் சம்பந்தர் கூறுகிறார்.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸும் இலங்கையில் உடனடி யுத்தநிறுத்தத்தை கோருகிறது

SL_Army_in_Killinochieசுய நிர்ணய உரிமைக்காக போராடும் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் 27 வருடங்களாக நடந்து வரும் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மாபெரும் அழிவுகளும் ஏற்பட்டுள்ளதாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கைத் தீவில் தீவிரமடைந்து வரும் மனிதாபிமான அவலத்தையிட்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தனது தீவிர கவனத்தை கொள்கின்றது. வடக்கு வன்னிப்பிரதேசத்தில் நிகழ்ந்துவரும் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான யுத்தத்தில் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் அகப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சுயநிர்ணய உரிமைக்காக போராடும் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் 27 வருடங்களாக நடந்து வரும் கடும் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், மாபெரும் அழிவுகளும் ஏற்பட்டுள்ளன.

இந்தப் போரைக் கண்காணித்து வரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், இந்தப் போரானது ஒரு இனப் படுகொலைக்குரிய நிலையை அடைந்திருப்பதாகக் கூறியுள்ளது. பெரும் உதவிகளை எதிர்நோக்கியுள்ள மக்களுக்காக போரில் ஈடுபட்டுள்ள இரு பகுதியினரும் உடனடியாக யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தி மக்களுக்குரிய மனிதாபிமான உதவிகள் சென்றடைய வழி செய்ய வேண்டும்.

அதேநேரம், இரு பகுதியினரையும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பி ஒரு நிலையான சமாதானத்திற்கு வழிவகுக்குமாறும் ஆபரிக்க தேசிய காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
 

இலங்கை அரசு அவகாசம்: தமிழக சட்டமன்றத்தில் விவாதம்

assembly.jpgஇலங்கையின் வடக்கே புலிகளின் கட்டுபாட்டுப் பிரதேசங்களில் இருக்கும் பொதுமக்கள் வெளியேறுவதற்காக இலங்கை அரசு அறிவித்துள்ள 48 மணிநேர கால அவகாசம் குறித்து தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் வெள்ளியன்று விவாதிக்கப்பட்டது.

இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவை சந்தித்து வந்ததன் விளைவாகவே இந்த அறிவிப்பு வந்துள்ளது என்றும், இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மோதலில் சிக்கியுள்ள அப்பாவிப் பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடா பீட்டர் அல்ஃபோன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் சார்பாகப் பேசியவர்கள் இலங்கை அரசின் அறிவிப்பைத் தாங்கள் ஏற்கவில்லை என்று கூறினர். ஆளும் திமுக சார்பில் பேசிய நிதியமைச்சர் க.அன்பழகன், இலங்கை அரசின் அறிவிப்பை ஏற்று அப்பாவிப் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குள் செல்வதை விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் மோதலில் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலை குறித்து ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழு கவலை

navaneetham-pilli.jpgஇலங்கையில் வடபகுதியில் இலங்கைப் படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடக்கின்ற மோதல்களில் அகப்பட்டுள்ள சுமார் இரண்டரை லட்சம் மக்களின் நிலை குறித்து தான் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவியான நவநீதம் பிள்ளை கூறியுள்ளார். பல மாதங்களாக தொடரும் மோதல்களும், பல தடவைகள் ஏற்பட்ட இடப்பெயர்வுகளும், மடுமையான மழை மற்றும் வெள்ளமும் அங்கு மக்களுக்கு மிகுந்த ஆபத்தான நிலைமை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மோதல் பகுதிகளில் இருந்து தப்ப முற்படும் மக்கள் ஒன்றில் தடுக்கப்படுவதாகவோ அல்லது அவர்களது விருப்புக்கு மாறாக சிறப்பு மையங்களில் தடுத்து வைக்கப்படுவதாகவோ செய்திகள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் மோதலில் ஈடுபடுகின்ற இருதரப்பினர் மீதும் கண்டனம் தெரிவித்துள்ள ஐ. நா. மனித உரிமைகள் ஆணையர், மோதலில் அகப்பட்டுள்ள மக்களின் நலன்களுக்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

அரசாங்கத்தின் அறிவிப்பை புலிகள் நிராகரிப்பு

வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் சிக்குண்டுள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்குப் பாதுகாப்பான வழி அமைத்துக் கொடுக்கப்படும் எனக் குறிப்பிட்டு, அடுத்த 48 மணி நேரத்துக்குள் அவர்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்கும்படி புலிகள் இயக்கத்துக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை மாலையில் பகிரங்க அறிக்கை மூலம் விடுத்தகோரிக்கையைப் புலிகள் இயக்கம் அடியோடு நிராகரித்து விட்டது.

இந்த அறிவிப்பு உலகத்தை ஏமாற்றும் சூழ்ச்சி எனவும் புலிகள் விமர்சித்திருக்கின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பு “இரண்டு நாள் போர்நிறுத்தப் பிரகடனம்” என அர்த்தப்படுத்தப்படும் பின்னணியில், நேற்றும் அரசுப் படைகளின் கொடூரமான தாக்குதல்கள் காரணமாக குழந்தைகள், பெண்கள் உட்பட 28 பேர்வரை கொல்லப்பட்டு அறுபதுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்றும் புலிகள் குற்றம் சுமத்தினர்.

லஸந்தவின் கொலை: சந்தேகத்தில் ஒருவர் கைது

Lasantha_Wickramathunga“த சண்டே லீடர்” ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேநபர் ஒருவர் பொலிஸாரால் நேற்றுமாலை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்நபர் தெஹிவளை, அத்திடியப் பகுதியில் கைதுசெய்யப்பட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.  இருப்பினும் சந்தேக நபர் குறித்த விவரங்களை பொலிஸார் இதுவரை வெளிவிடவில்லை.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். இம் மாதம் 8 ஆம் திகதி லஸந்த விக்கிரமதுங்க தெஹிவளையில் உள்ள சந்தேக நபர் கைதுசெய்யப்பட்ட அத்திடியப் பகுதியிலேயே படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சர்வதேச சமூகத்திற்கு அரசாங்கம் விளக்கம்

 mahinda-samara.jpgவன்னிப் பிரதேசத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக அரசாங்கம் நேற்று சர்வதேச சமூகத்திற்குத் தெளிவுபடுத்தியது. கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் ஐ.நா. நிறுவனங்கள் உள்ளிட்ட சர்வதேச தொண்டர் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் வன்னியின் தற்போதைய நிலைமை தொடர்பாகத் தெளிவுபடுத்தப்பட்டதென அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அதேநேரம், சிவிலியன்களை விடுவிக்கவென புலிகள் இயக்கத்தினருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ள 48 மணிநேர காலக்கெடு ஒரு யுத்த நிறுத்தமல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வன்னிப் பிரதேசத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக சர்வதேச சமூகத்திற்குத் தெளிவுபடுத்தியமை குறித்து ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இச்செய்தியாளர் மாநாட்டின்போது அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது: வன்னிப் பிரதேசத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு நன்கு தெளிவுபடுத்தியுள்ளோம். இராணுவ தளபதி மனிதாபிமான நடவடிக்கை குறித்து விஷேடமாகத் தெளிவுபடுத்தினார்.

ஜனாதிபதி புலிகள் இயக்கத்தினருக்கு வழங்கியுள்ள 48 மணி நேரக் கால அவகாசம் ஒரு யுத்த அறிவிப்பு அல்ல, மாறாக புலிகள் இயக்கத்தினர் தடுத்து வைத்துள்ள சிவிலியன்களை அவர்கள் விடுவிக்கவும் அந்த மக்கள் அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்திற்குள்ளும், இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள்ளும் வந்து சேரவுமே இந்த கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

புலிகள் இயக்கத்தினர் ஆயிரக்கணக்கான சிவிலியன்களை தடுத்து வைத்துள்ளனர். அம்மக்களின் சுதந்திர நடமாட்டத்தை மறுத்துள்ளனர். ஆனால் அம்மக்களும் இலங்கைப் பிரஜைகளே. அவர்களும் எமது சகோதரர்களே. எமது பாதுகாப்புப் படையினர் சிவிலியன்களை இலக்கு வைத்து மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. புலிகள் இயக்கத்தினரால் தடுத்து வைக்கப்ப ட்டுள்ள அம்மக்களை விடுவித்து அவர்களுக்கு அரசியல் யாப்பு ரீதியான சகல ஜனநாயக உரிமைகளை பெற்றுக் கொடுக்கவும், அம்மக்களுக்கு நல்வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கவுமே நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த மக்கள் தெற்கு மக்களுடன் சினேகபூர்வ நட்புறவுடன் வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் பொறுப்பாகும்.

புலிகள் இயக்கத்தினர் தடுத்து வைத்துள்ள மக்களை விடுவித்து அம்மக்கள் அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு இடங்களுக்கு வந்து சேர்ந்ததும் அவர்களைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் சர்வதேச சமூகத்திற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது. பாதுகாப்பு படையினர் அப்பாவி சிவிலியன்களை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காகத் தான் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். பயங்கரவாதம் ஒழித்துக்கட்டப்படும் வரையும் இந்நடவடிக்கை தொடரும்.

தற்போது புலிகள் இயக்கத்தினர் அரசாங்கம் அறிவித்துள்ள யுத்த சூனிய பிரதேசத்திற்கு மிகவும் நெருங்கிய இடமொன்றில்தான் தங்களது கனரக ஆயுதத் தளத்தை அமைத்துள்ளனர். இதனை இராணுவத்தினர் செய்மதி படங்கள் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த இடத்திலிருந்து தான் புலிகள் இயக்கத்தினர் இப்போது இராணுவத்தினர் மீது தாக்குதல் நடாத்துவதாகவும், அந்த நிலைகள் மீது துல்லியமாக இனம் கண்டு பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடாத்துவதாகவும் இத்தாக்குதல்களில் சிவிலியன்களுக்குப் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் புலிகள் இயக்கத்தினர் அமைத்துள்ள கனரக ஆயுத நிலைக்கு அருகில் சிவிலியன்கள் இல்லை என்றும் இராணுவத் தளபதி தெளிவுபடுத்தினார்.

இதேவேளை புலிகள் இயக்கத்தினர், தாம் தடுத்து வைத்துள்ள சிவிலியன்களுக்கு இரண்டு, மூன்று நாட்கள் ஆயுதப் பயிற்சி வழங்கி அவர்களை புலிகளின் பதுங்கு குழிகளை பாதுகாக்கும் பணியிலும் ஈடுபடுத்தியுள்ளனர். சிவிலியன்களை விடுவிக்கும்படி ஜனாதிபதி கால அவகாசம் வழங்கியுள்ள இதேநேரம் ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச மன்னிப்பு சபையும், மனித உரிமை கண்காணிப்பகமும் சிவிலியன்களை விடுவிக்கும்படி ஏற்கனவே கோரியுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் செயலாளர் டாக்டர் அத்துல கஹந்த லியனகே உரையாற்றுகையில், விடுவிக்கப்படாத பிரதேசங்களில் தங்கியுள்ள மக்களுக்கு எதுவிதமான குறைபாடுகளுமின்றி ஆரோக்கிய சேவையை வழங்கும் படி ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதற்கு ஏற்ப நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அங்கு எதுவிதமான மருந்துப் பொருள் தட்டுப்பாடும் கிடையாது. நான்கு நாட்களுக்கு முன்னர் கூட அப்பிரதேசங்களுக்கென மருந்து பொருட் தொகுதியை அனுப்பி வைத்துள்ளோம். கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் பணிபுரியவென புதிதாக 40 டாக்டர்கள் கூட நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

வெளிநாடு வாழ் இலங்கையர்கள் நாட்டில் முதலீடு செய்ய ஏற்பாடு – ஜனாதிபதி

mahi-raja.jpgவெளி நாடுகளில் வாழும் இலங்கையர்கள் நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்காக முதலீடு செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இதற்கென மத்திய வங்கியின் உத்தியோகத்தர்களை வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு அனுப்பிவைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் மருத்துவர்கள், பொறியியலாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் சுதந்திரதின விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சகல இலங்கையர்களையும் அழைக்குமாறு பணித்துள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, நாட்டின் அபிவிருத்திக்கு உதவுமாறு வெளிநாட்டு இலங்கையர்களுக்கு தாம் விடுத்த கோரிக்கை அடங்கிய இறுவட்டுகளை சுதந்திரதின விழாவில் வெளியிடுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

எமது நாட்டின் நிதிப் பற்றாக்குறையை தீர்க்கவும், அபிவிருத்தியில் இலங்கையை சேர்ந்த வெளிநாட்டவர்கள் பங்குபற்றவும், அவர்களது நிதி உதவிகளாக அல்லாது முதலீடாக பெறும் நோக்கிலேயே இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. நாம் யுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தது போலவே அபிவிருத்தி வேலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் 17 பாலங்கள் அமைக்கப்படவுள்ளன. மின்சாரம் வழங்கியுள்ளோம். பெரும் வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுவிட்டன. கிராம வீதிகளும் கொங்கிரீட் இடப்பட்டது. இப்பொழுது கொழும்பு- யாழ்ப்பாண வீதியாக பூநகரி வீதியை அபிவிருத்தி செய்யவுள்ளோம். இதற்காக பூநகரி ஏரிக்கு மேலாக யாழ்ப்பாண குடாநாட்டு எல்லை வரை பாலமமைக்கவுள்ளோம். இதை ஏ9 வீதியை விட முக்கியமான வீதியாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

வெளிநாட்டவர்கள் எமது அபிவிருத்தி வேலைகளை அங்கீகரித்துள்ளனர். எமது நிதிப் பிரச்சினையை போக்குமுகமாக நான் மலேசியா, லிபியா நாடுகளுக்கு சென்றுவரவுள்ளேன். இங்குள்ள பொறியியலாளர்களது சேவை இனி பன்மடங்கு தேவை. நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் இனி பலமடங்காகும். யுத்தத்திற்கு செலவிட்டதை விட பல மடங்கு அபிவிருத்திக்கு செலவிடவேண்டும். இதில் யாழ்ப்பாணம் முக்கிய இடத்தினை பெறும். நிலங்களை மட்டும் கைப்பற்றி முடிப்பதில் யுத்தம் முடிவடையாது. இனிமேல் தான் மனிதக் குண்டுகள், தற்கொலைப் போராளிகள் வெளிவருவார்கள். எனவே கவனமாகவும், பாதுகாப்புடனும் செயற்படவேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்தியாவில் பிரபாகரன் மீது விசாரணை நடத்தப்படும் வரை காங்கிரஸார் ஓய மாட்டார்கள்.

assembly.jpgஇலங்கை அரசு பிரபாகரனை பிடித்தவுடன் இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். பிரபாகரனை இந்தியாவில் வைத்து விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. சட்டசபையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் துணைத் தலைவர் யசோதா பேசுகையில்,

எங்கள் தலைவர் ராஜீவ் காந்தியை நாங்கள் பலி கொடுத்திருக்கிறோம். சிலர் அதை கூட விமர்சனம் செய்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலைமை அவர்களுக்கு வந்தால் தான் வலி தெரியும். ஒரு தொலைக்காட்சியில் இலங்கை எம்.பி ஒருவர் இங்குள்ள தமிழர்களை தூண்டும் விதத்தில் பேசுகிறார். உண்மையான அக்கறை இருந்தால் இலங்கையில் இருந்து போராட வேண்டியது தானே. தமிழகத்தில் அமைதியை கெடுப்பதற்காக அப்பாவிகளை தூண்டி விட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கப் பார்க்கிறார்கள்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி மற்றும் சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால் முதல் குற்றவாளியான பிரபாகரனை இன்னும் கைது செய்யவில்லை. அவரை பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். அவரை இங்கு வைத்து விசாரிக்க வேண்டும். இப்படி நாங்கள் எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை. அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வரை, இந்தியாவில் அவர் மீது விசாரணை நடத்தப்படும் வரை காங்கிரஸார் ஓய மாட்டார்கள்.

இலங்கையி்ல் அப்பாவி தமிழர்கள் பலியாகும் பிரச்சினையை ஒரு காரணமாக வைத்து சிலர் தேசிய தலைவர்களை அவமதித்து வருகிறார்கள். அவர்களை கைது செய்து அரசியல் நாகரீகத்தை ஏன் காப்பாற்றவில்லை என்று இங்கு நான் கேட்க கடமைப்பட்டிருக்கிறேன். காங்கிரஸ் என்றால் எதுவும் பேசலாம் என்று நினைக்க வேண்டாம். சாது மிரண்டால் காடு கொள்ளாது. எங்கள் கட்சி 125 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. ஆனால் கட்சி தொடங்கி 6 ஆண்டு ஆகாதவர்கள் எங்களை எதிர்க்கிறார்கள். நாங்கள் செய்த நன்றிகளை மறந்தது ஏன்? என்றார் அவர்.

யுத்தத்தின் வெற்றியை சாதகமாகப் பயன்படுத்தி மாகாண சபைத் தேர்தல்களில் அரசு ஈடுபடுகின்றது – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

jvp.jpgயுத்தத்தின் வெற்றியை அரசாங்கம் தமக்குச் சாதகமாகப் பயன்டுத்தி ஜனநாயக விரோதச் செயற்பாடுகளிலும் மாகாணசபைத் தேர்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது என்று ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) குற்றம் சாட்டியுள்ளது.

ஜே.வி.பி.யின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்றகோட்டேயிலுள்ள சோலிய மண்டபத்தில் நடைபெற்ற போது குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; அரசாங்கம் ஜனநாயக விரோதப் பாதையில் தற்போது பயணிக்கின்றது. அதாவது, நாட்டின் அரசியலமைப்பை மீறி செயற்பட்டு வருகின்றது. யுத்த வெற்றியைக் காட்டியே அரசு இவ்வாறு ஜனநாயக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றது.

பயங்கரவாதிகளை அழித்து நாட்டை ஒன்றுபடுத்த வேண்டியது முக்கியமான அதேவேளை இந்த சூழ்நிலையில் எவ்விது காரணமும் இன்றி இரண்டு மாகாண சபைகளைக் கலைத்துத் தேர்தலை நடத்த வேண்டிய தேவை அரசுக்கு இல்லை. இதனை செய்வதற்குக் காரணம் தமது எதிர்காலம் குறித்த அச்சமேயாகும். தமது ஆட்சியை நிலை நிறுத்துவதற்காக இவ்வாறு இரண்டு மாகாண சபைகளை கலைத்துத் தேர்தலை நடத்துவதால் மக்களின் பணம் வீண்விரயம் செய்யப்படுகின்றது.

மக்களின் நலனைக் கருத்துதில் கொள்ளாது அவர்களுக்கு வழங்க வேண்டிய சலுகையை வழங்காது தான் தோன்றித் தனமாக தேர்தலை நடத்தி பணத்தை வீண்விரயம் செய்கின்றது. பெற்றோலின் விலையை உயர் நீதிமன்றம் 100 ரூபாவாகக் குறைக்குமாறு கோரியது. இதனால், 517 கோடி ரூபா நட்டமேற்படுமென அரசு தெரிவித்து அதனை கைவிட்ட நிலையில் ஹெஜ்ஜிங் உடன்படிக்கை மூலம் 8 ஆயிரம் கோடிரூபா நட்டம் ஏற்பட அனுமதியளித்துள்ளது. ஆட்சியாளர்கள் இலாபத்திற்காகவே செயற்படுகின்றார்களே தவிர மக்களின் நன்மைக்காகவல்ல.