January

January

புலிகளின் சிறியரக நீர்மூழ்கிப் படகு கண்டுபிடிப்பு

sub-marine-01.jpgதற்போது முல்லைத்தீவை நோக்கி முன்னேறி வரும் படையினர் முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி,  மூன்று சிறிய தற்கொலைத் தாக்குதல் படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.  நேற்று வியாழக்கிழமை காலை உடையார்கட்டுக்குளம் பகுதியில் தேடுதல் நடத்திய விஷேடப் படையணி 3 இவற்றைக் கண்டுபிடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வன்னியில் படையினர் இதுவரை காலமும் நடத்திய தாக்குதலின் போது மேற்கொண்ட மிக முக்கியமான கண்டுபிடிப்பு இவையெனவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.  கட்டுமானப்பணிகள் பூர்த்தியடையாத நிலையிலுள்ள இந்த நீர்மூழ்கி 35 அடி நீளமானதும் கவசத் தகட்டினால் உருவாக்கப்பட்டு வருவதுமாகும்.

இதைவிட இந்த நீர்மூழ்கியைத் தாங்குவதற்கும் அதனை இடத்திற்கிடம் நகர்த்துவதற்குமான சக்கரங்கள் பூட்டப்பட்ட “ரெயிலர்’, கவசத்தகடுகள், ஒட்டுவேலைக்கு பயன்படுத்தப்படும் பாரிய சிலிண்டர்கள், ஒவ்வொன்றும் 20 அடி நீளமான 30 கவசத்தகடுகள், மிதித்துச் செல்லக்கூடிய வகையை சேர்ந்த மூன்று தற்கொலைத்தாக்குதல் படகுகள், டோறா வகையைச் சேர்ந்த வேகத்தாக்குதல் படகொன்றும் பெருமளவு நீரிறைக்கும் கருவிகள் (வாட்டர்பம்), இரு லொறிகள், இரு பஸ்கள், ஒரு ட்ரக், அதிசக்தி வாய்ந்த ஒரு ஜெனரேற்றர், வாட்டபவுசர், இழுவை வண்டி, ஒரு பவுசர், மண்ணெண்ணெய், இரு பெரிய லேத்மெசின்கள், சக்தி வாய்ந்த இரு கொம்புறசர்கள், ஓட்டும் இயந்திரம், ஒரு தொகுதி மின்சார மோட்டார்கள், மிகப்பெரியதொரு உயர்த்தி (ஜய்க்), பலபடகுகள், வாகன இயந்திரங்கள், மிகப்பெரியதொரு கட்டிடம், குளிரூட்டப்பட்ட சிறியரக வீடுகள் 15 என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் நீருக்கடியிலான ஆயுத வகைகளைத் தயாரிப்பதில் ஈடுபட்ட முதலாவது அமைப்பாக விடுதலைப் புலிகளே இருப்பது தெரியவந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

sub-marine-03.jpg

sub-marine-04jpg.jpg

sub-marine-01.jpg

வன்னி மக்களுக்கு மருந்துப் பொருட்களை கொண்டு செல்ல இரு தரப்பினரும் சர்வதேச சட்டத்திற்கு இணங்கவேண்டும் – ஜயலத் ஜயவர்த்தனா

hospital.jpgவன்னியில் தற்போது தொடர்ந்து இடம் பெற்றுவரும் கொடிய யுத்தத்தின் காரணமாக காயமடைபவர்களுக்கும் ஏனைய குழந்தைகள் மற்றும் வயோதிபர்களுக்கும் தேவையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கும் வைத்திய சேவைகளுக்கும் பெருந்தட்டுப்பாடு அப்பகுதியில் நிலவுகிறது. இந்நிலையில் அம்மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களையும் ஏனைய அத்தியாவசிய பொருட்களையும் எடுத்துச் செல்லும் அம்புலன்ஸ் வண்டிகள் செல்லும் மார்க்கத்திற்கும் நோயாளர்களை எடுத்துச் செல்லும் மார்க்கத்திற்கும் விடுதலைபுலிகளும் அரசாங்கமும் எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தக்கூடாது. இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்ட சர்வதேச மனித உரிமை சட்டத்திற்கு இணங்க நடந்துகொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தனா ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; தற்போது நடைபெறும் இந்த யுத்தத்தால் முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட சுதந்திரபுனம், வள்ளிபுரம், உடையார்கட்டு பிரதேசங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதோடு ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் காயத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

வன்னியில் பல வைத்தியசாலைகள் யுத்தம் காரணமாக மூடப்பட்டுள்ளதோடு, சேவையில் இருக்கும் சில வைத்தியசாலைகளின் அத்தியாவசியமான மருந்துப்பொருட்கள், வைத்திய சேவைகள் உட்பட பல வைத்திய செயற்பாடுகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் அவசர நிலையிலுள்ள நோயாளர்களுக்குக் கூட உடனடியாக சிகிச்சையளிப்பதற்கான மருந்துப் பொருட்கள் கூட போதியளவு அவ்வைத்தியசாலைகளில் இல்லாதது குறிப்பிடத்தக்கது. எனவே வன்னியில் அல்லல்படும் அப்பாவி மக்களுக்கு அவசிய மருத்துவ சேவையை வழங்குவதற்கு பொறுப்பிலுள்ள அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

வன்னி அப்பாவி மக்களின் இன்னல் அறிந்து விஷேடமாக இந்தியா உட்பட்ட சர்வதேச சமூகம் முன்வந்து அக்கறை செலுத்த வேண்டும். அவ்வாறில்லையாயின் வன்னியில் தற்போதுள்ள 4 இலட்சம் மக்களின் உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையே தோற்றுவிக்கப்படும். இவர்களுள் கர்ப்பிணித்தாய்மார்கள், சிறுவர்கள், முதியோர் போன்றோரும் உள்ளமை கவனிக்கவேண்டியது.

வன்னி மக்களுக்குத் தேவையான தட்டுப்பாட்டிலுள்ள மருந்துப் பொருட்களை அன்பளிப்புச் செய்ய விரும்பும் தனிநபரோ, ஏற்றுக் கொள்ளப்பட்ட அமைப்போ விரும்பினால் தயவு கூர்ந்து என்னைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். அவர்கள் 0112507799, 0114527297 என்ற தொலைபேசி இலக்கத்தினூடோ என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

152 மி.மீ. ரக ஆட்டிலறியும் படையினரால் மீட்பு

_army.jpgபுலிகள் பாவித்து வந்த 152 மி. மீ. ரக ஆட்டிலறி ஒன்றை பாதுகாப்புப் படையினர் நேற்றுக் காலை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். விசுவமடு பிரதேசத்தில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர். இந்த ஆட்டிலறியை கண்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விசுவமடு கிழக்கு பிரதேசத்தில் இந்த ஆட்டிலறியும் 70 வெற்று ரவைகளும் புதைக்கப்பட்டிருந்த நிலையிலே படையினர் மீட்டெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 58வது படைப் பிரிவின் 10வது கஜபா படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜனக உடுவோவிட்ட தலைமையிலான படைப் பிரிவினர் இந்த ஆட்டிலறியை கைப்பற்றியுள்ளனர். இந்த ஆட்டிலறி மூலம் 17 கி. மீ. தொடக்கம் 24 கிலோ மீற்றர் தூரம்வரை தாக்குதல் நடத்த முடியும்.

சார்க் மின்வலு அமைச்சர்களின் தலைவராக ஜோன் செனவிரட்ன

senaviratn.jpgசார்க் நாடுகளின் மின்வலு எரிசக்தி அமைச்சர் குழுவின் தலைவராக அமைச்சர் ஜோன் செனவிரட்ன நேற்று உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். சார்க் நாடுகளின் மின்வலு எரிசக்தி அமைச்சர்களின் மூன்றாவது மாநாடு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று இடம்பெற்றது. சார்க் நாடுகளின் அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இம்மாநாட்டின்போதே அமைச்சர் ஜோன் செனவிரட்னவிற்கு இத்தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. மின்சாரத் துறையில் சார்க் நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நெருக்கடிகள் தொடர்பாக நேற்றைய இம் மாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அதனை நிவர்த்திக்கும் வகையிலான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

2008ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் மின்சாரத்துறை சம்பந்தமாக எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் நேற்றும் விரிவாக ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாகவும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பரிமாறப்பட்டுள்ளன. நேற்றைய இம்மாநாட்டில் பூட்டான் பொருளாதாரத்துறை அமைச்சர் லியன்யோ காண்டுவெஞ்சுக், இந்திய மின்வலுத்துறை அமைச்சர் சுசில் குமார் சிண்டே, மாலைதீவு வீடமைப்பு, போக்குவரத்து மற்றும் சுற்றாடல் அமைச்சர் மொகமட் அஸ்லாம், நேபாள நீர்வ ளத்துறை அமைச்சர் பிஷ்ணு பிரசாத்பாவுடே, ஆப்கானிஸ்தான் மின்வலு, நீர்வளத்துறை பிரதியமைச்சர் அஹமட் வலி ஷெர்ஷாய், பங்களாதேஷ் வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் ஹசன் மஹ்மூத், பாகிஸ்தான் பெற்றோலியத்துறை அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஜீ. ஏ. ஷப்ரி, சார்க் செயலாளர் நாயகம் கெண்ட் சர்மா, சார்க் செயலகப் பணிப்பாளர் ஹிலால் ரசாவில் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இழப்புகள் குறித்த செய்திகளை வெளியிடுகையில் ஆதாரம் அவசியம்; இல்லாவிடில் நாட்டுக்கு அபகீர்த்தி – அமைச்சர் கெஹலிய

kkhaliya.jpgமோதல் களில் காயமடைபவர்கள் குறித்து செய்தியை வெளியிடும் போது ஊடகங்கள் சரியான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு செய்தி வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் ஊடகவியலாளரின் நம்பகத்தன்மை இல்லாமல் போய்விடுவதுடன், நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் என்பதால் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டுமென அமைச்சரும் பாதுகாப்பு ஊடகப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். மீள்கட்டுமாணமென்ற பெயரில் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் புலிகளுக்கு உதவி செய்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர், புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களுக்கு ஒரு ரூபா கூட தொண்டு நிறுவனங்கள் செலவளிக்கவில்லையென்று முல்லைத்தீவை கைப்பற்றியதையடுத்து நிரூபணமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் பேசுகையில்; புலிகள் சிறிதளவிலான பகுதியில் முடக்கப்பட்டுள்ளனர். அங்கு காயப்படுபவர்கள் மற்றும் சுகவீனமடைபவர்கள் புலிகள் நிலைகொண்டுள்ள புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு அரசாங்கம் மேலதிக சிகிச்சையை பெற்றுக்கொடுக்க முடியாத நிலையுள்ளது.

இவர்களுக்கு மேலதிக அவசர சிகிச்சையை பெற்றுக்கொடுப்பதற்கு நாம் இராணுவ கட்டுப்பாட்டு எல்லைக்கு கொண்டுவந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கையெடுத்தோம். இதன்படி  செவ்வாய்க் கிழமை சர்வதேச செஞ்சிலுவை குழு மற்றும் ஐ.நா. உதவியுடன் அம்புலன்ஸ் மற்றும் வசதிகளை வழங்கி இராணுவத்தினர் வசமுள்ள முன்னணி நிலையில் தயாராயிருந்தனர்.

ஆனால், நோயாளர்கள் வரமாட்டார்கள் என்று தகவல் வந்தது. அவர்களைப் புலிகள் தடுத்து விட்டதாகவும் அந்நோயாளர்கள் அரைவாசி பேரும் வந்து திரும்பிவிட்டனர். சில ஊடகங்கள் 300 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக அப்பகுதியிலுள்ள ஊடகவியலாளரை ஆதாரமாகக்கொண்டு செய்தி வெளியிடப்படுகின்றது. ஊடகங்கள் மூலம் செய்திவெளியிடுபவர் சுகாதார அமைச்சில் பதிவு செய்யப்படாதவர். அவர் படையினர் எத்திசையிலிருந்து தாக்குவதாகவும் கூறுகின்றார். அவர் வைத்தியராக இருக்கின்ற நிலையில், எவ்வாறு எத்திசையிலிருந்து யார் சுட்டதென்று தெரிவிக்கமுடியும். வைத்தியராக இருப்பவருக்கு எவ்வாறு ஆய்வு செய்து தெரிவிக்க முடியும்.

எனவே ஊடகங்கள் சரியான மூல ஆதாரங்களைக் கொண்டு செய்தி வெளியிட வேண்டும். இவ்வாறு சரியான ஆதாரமற்ற செய்தி வெளியிடுவதால் நம்பிக்கைத் தன்மை அற்றுப் போவதுடன், நாட்டிற்கும் பாதகமாக அமைவதால் இதனை உணர்ந்து ஊடகவியலாளர் செயற்பட வேண்டும். இதேவேளை, கடல்கோள் அனர்த்த மீள்கட்டுமானம் தொடர்பில் விமர்சனங்கள் அரசிற்கு எதிராக எழுந்தன. மீள் கட்டுமானம் அரசினூடாகவல்ல நேரடியாக மேற்கொள்ள வேண்டுமென சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அரசசார்பற்ற நிறுவனங்களும் தெரிவித்தன.

முல்லைத்தீவில் கடல்கோள் மீள் கட்டுமானத்திற்கு செயற்பட்ட இவ்வாறான நிறுவனங்கள் ஒரு வீட்டைக் கூட நிர்மாணிக்கவில்லை. அந்நிறுவனங்கள் அம்மக்களுக்கு ஒரு ரூபாவையோ அல்லது ஒரு டொலரையோ செலவிடவில்லையென்பது இன்று நிரூபணமாகியுள்ளது. இந்நிலையிலேயே நாம் ஒரு வருடத்திற்கு முன்னர் அங்குள்ள நிறுவனங்கள் செலவிடும் கணக்குகளை காண்பிக்க வேண்டுமென தெரிவித்தோம். இதற்கு எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் சர்வதேச உறவுகள் வீழ்ச்சியடையுமென்று தெரிவித்து விமர்சனம் செய்தனர். அன்று நாம் எடுத்த முடிவு தீர்க்கதரிசனமாகியுள்ளது.

குறிப்பிட்ட சில தொண்டு நிறுவனங்கள் நேரடியாக புலிகளுக்கு உதவியுள்ளதை அறியக் கூடியதாகவுள்ளது. குறிப்பாக தமிழர் புனர்வாழ்வு கழகத்தை நாம் தடைசெய்தது போல் உலக நாடுகளிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவருக்கு காலம் பிந்திய ஞானம் ஏற்பட்டுள்ளது. இப்போது தான் அவர் பாதுகாப்புப்படையினருக்கும் இராணுவத் தளபதிக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் நாம் எடுத்த தீர்க்கமான முடிவினால் இந்நிலை எட்டப்பட்டதென ஊடகவியலாளரின் கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில் அவர் மேலும் தெரிவித்தார்.

மேல் மாகாண சபை நேற்று கலைப்பு

மேல் மாகாண சபை நேற்று நண்பகல் கலைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவித்தலை மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலான வெளியிட்டார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளிவரவுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கலைக்கப்பட்டுள்ள மேல் மாகாண சபைக்கான தேர்தல் சம்பந்தமான முடிவுகளை தேர்தல் ஆணையாளர் பின்னர் அறிவிப்பார். இது தொடர்பில் மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலான தெரிவிக்கையில், நேற்று நண்பகல் 12 மணிக்கு மேல் மாகாண சபை கலைக்கப்பட்டதாகவும் இதற்கான தேர்தல் நடத்துவது தொடர்பில் கட்சித்தலைவர்கள் கூடி ஆராய்ந்த பின் அதற்கமைய தேர்தல் ஆணையாளர் தேர்தலுக்கான திகதியை அறிவிப்பாளர் என தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தீர்மானத்துக்கமையவே மேல் மாகாண சபையைக் கலைக்கத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர், மேல் மாகாண சபை நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்தும் நோக்கிலேயே இத்தீர்மானத்தை ஜனாதிபதி மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். விரைவில் ஊவா மற்றும் தென் மாகாணமும் கலைக்கப்படலாம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வன்னியில் பெரும் மனிதாபிமான நெருக்கடி’

redcross-2801.jpgவன்னியில் குறுகிய நிலப்பகுதியில் தொடர்ந்து கடும் சமர் நடைபெற்று வருகையில் அங்கு பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜெனீவாவிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய பிராந்திய நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஜேக் மே டயோ தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்;

விடுதலைப்புலிகளின் இறுதிப் பிரதேசமாகிய ஒரு சிறிய நிலப்பரப்பு மீது இராணுவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை காரணமாக இறந்தவர்களினாலும் பெரும் எண்ணிக்கையில் காயமடைந்தவர்களினாலும் வன்னிப் பிரதேசத்தின் வைத்திய நிலையங்கள் யாவும் நிறைந்து வழிகின்றன.

மக்கள் மோதல்களில் சிக்கியிருக்கிறார்கள். வைத்தியசாலைகளும் அம்புலன்ஸ்களும் தாக்குதல்களுக்கு இலக்காகியிருக்கின்றன. காயமடைந்த சிவிலியன்களை மீட்க முயன்ற உதவிப் பணியாளர்கள் பலரும் காயமடைந்திருக்கிறார்கள். சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் பணிகள் அங்கு நிலவுகின்ற வன்முறைச் சூழலினால் தடைப்பட்டிருக்கின்றன.  பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ள பொதுமக்களுக்குப் பாதுகாப்பு, வைத்திய கவனிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தேவையாகவுள்ளது. பெரும் மோதல்கள் இடம்பெறுகின்ற 250 சதுர கிலோ மீற்றர் பரப்பளவான இடத்தில் இரண்டரை இலட்சம் பேர் சிக்கியிருக்கின்றார்கள். அவர்களுக்கு ஒதுங்கியிருப்பதற்குப் பாதுகாப்பான இடமில்லை. அங்கிருந்து தப்பியோடவும் முடியாதவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள்.

எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சர்வதேச மனிதாபிமான சட்டம் மதிக்கப்பட்டு சிவிலியன்கள் பாதுகாக்கப்படாவிட்டால் எல்லாம் ஓயும் போது எண்ணற்றவர்கள் பாதிக்கப்பட்டு மோசமான ஒரு மனிதாபிமான நிலைமை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. நேரம் ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலும் இரத்தம் சிந்துவதைத் தடுத்து நிறுத்துவதற்காக உறுதியான முடிவெடுக்க வேண்டிய நேரமாக இருக்கின்றது.

மோதல் பிரதேசத்தில் இருந்து பொதுமக்கள் சுயமாக வெளியேறுவதற்கு அனுமதிப்பதுடன், அதற்கான வசதிகளையும் செய்ய வேண்டும் என மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரையும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு கேட்டுக் கொள்கின்றது. முடிந்த அளவு காலத்திற்கு சர்வதேச செஞ்சிலுவைக் குழு வன்னியில் இருப்பதற்குத் தீர்மானித்துள்ளது. ஆனால், அதனுடைய பிரசன்னத்தையும் அதன் பணிகளையும் இரு தரப்பினரும் மதித்துச் செயற்பட வேண்டும்.

வன்னிப் பிரதேசத்தினுள்ள மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்பட வேண்டும். சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் கூறுகின்ற படி மனிதாபிமான பணியாளர்களும் அவர்களது இடங்களும் ஷெல் வீச்சுகள், கொள்ளைகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். சண்டைகளிலும் மோதல்களிலும் நேரடியாகப் பங்கு கொள்ளாதவர்களின் உயிர்களையும் பாதுகாக்க வேண்டும் என இரு தரப்பினரும் வலியுறுத்தப்படுகின்றார்கள்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வவுனியா வைத்தியசாலைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் அவசர மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட வேண்டியிருக்கின்றது. நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைக்குழு வன்னியிலுள்ள புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்குத் தனது உதவிகளை வழங்கி வருகின்றது. அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினருடைய உடன்பாட்டுடன் கடந்த நான்கு மாதங்களாக வன்னியில் நிரந்தரமாக இருந்து செயற்பட்டு வருகின்ற ஒரேயொரு நிறுவனமாகிய சர்வதேச செஞ்சிலுவைக் குழுவானது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினருடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்தில் 3 மாவட்டங்களில் 17,47,449 பேர் வாக்களிக்க தகுதி

ballot-box.jpgமத்திய மாகாணசபைத் தேர்தலில் கண்டி , மாத்தளை , நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 17 இலட்சத்து 47 ஆயிரத்து 449 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இந்த வாக்குகளின் அடிப்படையில் கண்டி மாவட்டத்தில் 30 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 16 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 10 பேரும் மத்திய மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 9 இலட்சத்து 55 ஆயிரத்து 108 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 3 இலட்சத்து 38 ஆயிரத்து 946 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 4 இலட்சத்து 53 ஆயிரத்து 395 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் கண்டி மாவட்டத்தில் 13 தேர்தல் தொகுதிகளில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு;

ஹாரிஸ்பத்துவ 1,45,752, கம்பளை 89,422, குண்டசாலை 84,871, நாவலப்பிட்டி 82,686, பாத்தும்பறை 76,751, யட்டிநுவர 76,262, உடுநுவர 75,994, செங்கடகல 71,886, பாத்தஹேவாஹெட்ட 64,133, உடுதும்பறை 54,923, கலகெதரை 52,169 , தெல்தெனிய 44,057 , கண்டி 36,702 வேட்பாளர்கள் உள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிலைப்பாடும் ஆதரவுமே படையினர் முல்லைத்தீவை கைப்பற்றுவதற்கு பிரதான காரணம்

முல்லைத்தீவினை கைப்பற்றி எமது படைவீரர்கள் பெற்றுள்ள வெற்றிக்கு இந்தியாவின் நிலைப்பாடும் ஆதரவுமே முக்கிய காரணம் என்று மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார். கண்டி ஹில்டொப் ஹோட்டலில் நடைபெற்ற இந்தியாவின் 60 ஆவது குடியரசுதின வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கண்டி இந்திய உதவி தூதரகத்தினால் உதவித்தூதுவர் ஆர்.கே. மிஸ்ரா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வைபவத்தில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மகிபால ஹேரத், மத்திய மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, கண்டி மாவட்ட செயலாளர் கோட்டாபே ஜயரத்ன,மத்திய மாகாண அமைச்சின் செயலாளர் சிராணி வீரகோன்,தொழிற்சங்க தலைவர்கள்,மத்தியமாகாண கண்டி மேயர் எல். பீ. அலுவிகார, மாநகரசபை உறுப்பினர்கள், பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஹரிச்சந்திர அபயகுணவர்தன உட்பட பலரும் கலந்து கொண்டனர்

அவர் அங்கு மேலும் கூறியதாவது; இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நீண்டகால வரலாற்று அரசியல் ,பொருளாதார, கலாசார தொடர்புகள் உண்டு. இலங்கையும் இந்தியாவும் சிறந்த நட்புகொண்ட நாடுகளாகும். பயங்கரவாதத்தின் தாற்பரியத்தினை இரண்டு நாடுகளும் உணர்ந்துள்ளன. மும்பாய் தாக்குதல் இதற்கு எடுத்துக்காட்டாகும். மும்பாய் தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்காக நாமும் எமது அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இலங்கை சுதந்திரமடைந்து இன்று 61 வருடமாகிறது. இந்தியாவுக்கு 60 வருடமேயாகிறது. எமது மக்கள் சுதந்திரத்தின் முழுத் தன்மையையும் அனுபவிக்கவேண்டும் என்பதற்காகவே பயங்கரவாதத்திற்கெதிராக யுத்தத்தை முன்னெடுக்கின்றோம். இந்த யுத்தத்தில் நாம் பெற்றுவரும் வெற்றிக்கு இந்தியாவும் ஒரு காரணமாகும். இந்தியா கொண்டுள்ள நிலைப்பாடு போற்றுதற்குரியதாகும்.

இந்தியாவும் பயங்கரவாதத்தின் உண்மைத்தன்மை உணர்ந்துள்ளது. இன்று உலகமும் பயங்கரவாதத்தின் உண்மை நிலையை உணர்ந்துள்ளது. எனவே தான் பயங்கரவாதத்திற்கு எதிராக சகல நாடுகளும் போராட வேண்டியுள்ளது. இந்தியா பொருளாதார ரீதியிலும் இலங்கையின் நண்பனாகவேயுள்ளது. பல்வேறு முதலீடுகளை இலங்கையில் மேற்கொண்டுள்ளது. என்றார்.

இந்திய உதவித்தூதுவர் ஆர்.கே மிஸ்ரா உரையாற்றுகையில் கூறியதாவது;
இந்தியா சகல துறைகளிலும் வளர்ச்சிபெற்று வருகிறது. விவசாயத்தில் உணவுப் பற்றாக்குறையை போக்கி தன்னிறைவு பெற்று விளங்குகிறது. இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை நட்புரீதியானது. இலங்கையுடன் நீண்ட கால நட்பினைக் கொண்டுள்ளது. பல்வேறு துறைகளில் இணைந்து செயற்படுகிறது. இலங்கையில் நீண்டகாலமாக சகல இனமக்களுடனும் நட்பினை கொண்டுள்ளது என்றார்.

சகோதர மொழி தெரியாமையினாலேயே நாடு இன்று யுத்தகளமாக மாற்றம்

“இந்த நாட்டில் வாழும் சகல மக்களும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். இன்று நாடு சுதந்திரம் பெற்று 61 வருடங்களாகிய போதிலும் தமிழ் பேசும் மக்களுக்கு சிங்கள மொழி தெரியாமையும் சிங்கள மக்களுக்கு தமிழ் மொழி தெரியாமையினாலேயே நாடு இன்று யுத்தகளமாக மாறியுள்ளது. இந்த நிலைமையை மாற்றி அமைப்பதற்கு எமது எதிர்காலச் சந்ததியினரான இன்றுள்ள சிறார்களுக்கு மூன்று மொழிகளையும் கற்றுக்கொள்ளக் கூடிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்’.

இவ்வாறு கடந்த சனிக்கிழமை அம்பாறை ஆரியபவன் உல்லாச விடுதி மண்டபத்தில் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கு கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகளுக்கான கற்கை நிலையம் ஏற்பாடு செய்திருந்த உரிமைகள் தொடர்பான பயிற்சி முகாமில் விரிவுரை நிகழ்த்திய கண்டி மாவட்ட உயர் நீதிமன்றத்தின் அரச சட்டத்தரணி நவரெத்தின மாரசிங்க தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

“ஊடகவியலாளர்கள் மனித உரிமைகள் பற்றி போதுமான அறிவைப் பெற்றுக்கொள்வதை மையமாக வைத்தே இந்தப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் , இது தொடர்பான கை நூல்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அத்துடன் சட்டங்கள் தொடர்பான விடயங்களும் இந்தப் பயிற்சியின் போது வழங்கப்பட்டுள்ளன’ என்றார்.