03

03

யுனெஸ்கோவின் நிரந்தர தூதராக லயனல் பெர்னாண்டோ

யுனெஸ் கோவின் இலங்கைக்கான நிரந்தர தூதுவராக லயனல் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். பாரிஸிலுள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கொய்சுரோ மட்சூராவிடம் புதன்கிழமை நியமனக் கடிதத்தை லயனல் பெர்னாண்டோ சமர்ப்பித்தார்.

இதன்பின் யுனெஸ்கோ நடவடிக்கைகள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடினர். யுனெஸ்கோ நிறைவேற்றுக் குழுவில் இலங்கை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை – மட்டக்களப்பு புகையிரத சேவை விரைவில் ஆரம்பம்

train-121208.jpg
திருகோணமலை – மட்டக்களப்பு நகரங்களுக்கு இடையிலான புகையிரத சேவை விரைவில் சீரமைக்கப்படும். தினமும் மேலதிகமாக மூன்று சேவைகளை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  இந்தியாவில் இருந்து கிழக்கு மாகாண போக்குவரத்துக்காக வழங்கப்பட்ட ரயில் வண்டிகள் இதற்கு பயன்படுத்தப்பட உள்ளன.

திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு செல்வோர் கல்ஓயா புகையிரத நிலையத்தில் நான்கு மணி நேரத்திற்கும் அதிகமாக காத்திருக்க வேண்டும். இதனால் பத்து மணி நேர பயணத்தை மேற்கொள்ள வேண்டியவர்களாகின்றனர். புதிய சேவை ஆரம்பிக்கப் பட்டால் நான்கு மணி நேரத்தில் எதிர்காலத்தில் பயணம் செய்யக் கூடியதாக இருக்கும். இச் சேவை அடுத்த வருடம் முதல் மாதத்தில் இருந்து மேற்கொள்ள தாங்கள் நடவடிக்கை எடுத்து இருப்பதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

மும்பைத் தாக்குதலைக் கண்டித்த ஒபாமா இஸ்ரேலைக் கண்டிக்கவில்லை -அரேபியர்கள் கவலை

israeli-aircraft.jpgமும்பைத் தாக்குதல் சம்பவத்துக்கு ஓபாமா கண்டனம் தெரிவித்தார். ஆனால் இஸ்ரேல் தாக்குதல் குறித்து மெளனம் காத்து வருகிறார். என்று அரபு நாட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து ஒபாமா தரப்பிடம் கேட்டபோது மும்பைத் தாக்குதல் சம்பவம் பயங்கரவாதம் தொடர்புடையது. இஸ்ரேல் தாக்குதல் நாடுகள் தொடர்புடையது என்று பதில் தெரிவித்ததாகக் கூறப்படு கிறது. இதனிடையே இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்தும் காசா பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதுவரை 370க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்ப தாகவும், 1,720 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த வருடம் 191 படையினர் பலி, 247 பேர் காயம் – விடுதலைப்புலிகள் தெரிவிப்பு

கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் கடந்த வருடம் தாங்கள் நடத்திய தாக்குதல்களில் 191 படையினர் கொல்லப்பட்டும் 247 படையினர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.  இது தொடர்பாக இணையத்தளத்தில் புலிகள் தெரிவித்திருப்பதாவது; தமிழரின் தாயக பூமியை இன்று ஆக்கிரமித்து நிற்கும் இலங்கைப் படைகள் தமிழரிடமிருந்து புலிகளை பிரித்துவிட்டதாகவும், கிழக்கிலிருந்து புலிகளை விரட்டியடித்து விட்டதாகவும் நாள்தோறும் கூறி வருகின்றது. உண்மை என்னவென்பது எம்மக்களுக்கு தெரியும்.

தந்திரோபாய ரீதியிலான சில பின்நகர்வுகளை கிழக்கில் நாம் மேற்கொண்டாலும் படையினருக்கு எதிராகவும் இனத்துரோகிகளுக்கு எதிராகவும் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டில் படையினருக்கு எதிராக பல தாக்குதல் நடவடிக்கைகள் இடம்பெற்றன. கடந்த 01.01.2008 தொடக்கம் 31.12.2008 வரையிலான ஒரு வருட காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்திலும் அதனை சூழவுள்ள வனப்பகுதி உள்ளிட்ட சில பகுதிகளிலும் விடுதலைப்புலிகள் நடாத்திய தாக்குதலில் உயிரிழந்த படையினரது மொத்த எண்ணிக்கையை இந்த வேளையில் நாம் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

பல்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்ட படையினரது எண்ணிக்கையை பார்ப்போம். கொல்லப்பட்ட விஷேட அதிரடிப்படையினரது எண்ணிக்கை 123, இராணுவத்தினரது எண்ணிக்கை 35, ஊர்காவல் படையினரது எண்ணிக்கை 15, பொலிஸாரின் எண்ணிக்கை 18, கொல்லப்பட்ட ஆயுதக்குழுக்களின் எண்ணிக்கை 07 ஆகும். இவ்வாறு உயிரிழந்த ஆயுதக்குழு தவிர்ந்த 191 படையினரில் 13 படையினர் புலிகளின் தந்திரோபாய தாக்குதல் வியூகங்களினால் தமக்கிடையிலான தவறுதலான துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளையில், காயமடைந்த படைத்தரப்பின் எண்ணிக்கையை பார்த்தால், காயமடைந்த விஷேட அதிரடிப்படையினரது எண்ணிக்கை 192, இராணுவத்தினரது எண்ணிக்கை 44, ஊர்காவல் படையினரது எண்ணிக்கை05, பொலிஸாரின் எண்ணிக்கை 06, காயமடைந்த ஆயுக் குழுவினரது எண்ணிக்கை 05 ஆகும். புலிகளின் தந்திரோபாய தாக்குதல் வியூகங்களினால் தமக்கிடையிலான தவறுதலான துப்பாக்கிச்சூட்டில் 09 படையினர் படுகாயமடைந்துள்ளதோடு, காயமடைந்த 247 படையினரில் 72 பேர் போர்முனைக்கு மீண்டும் செல்ல முடியாதவாறு தமது உடல் அவயங்களை இழந்துள்ளனர். இக்காலப்பகுதியில் படையினருடனான மோதல்களின் போது 23 போராளிகள் தமது இன்னுயிர்களை இம்மண்ணின் விடுதலைக்காக அர்ப்பணித்துள்ளனர். 13 போராளிகள் விழுப்புண் அடைந்துமுள்ளனர்மேலும், 2008 ஆம் ஆண்டில் எமது மக்கள் பல இன்னல்களையும் வேதனைகளையும் சந்தித்த ஆண்டாகவே இந்த ஆண்டு இருந்தது. படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் காரணமாக தமது சொந்த மண்ணிலேயே எமது மக்கள் அகதி வாழ்வு வாழ வேண்டிய நிர்க்கதிக்கு இன்று தள்ளப்பட்டுள்ளார்கள்.

2008 ஆம் ஆண்டுக்கு விடை கொடுக்கும் இந்த வேளையிலே 2009 எனும் புதிய ஆண்டு எம் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் ஆண்டாகவும், நிம்மதியான வாழ்வை கொடுக்கும் ஆண்டாகவும் அமைய வேண்டும். தமிழீழ தேசத்தின் விடிவுக்காக களமாடி தம் இன்னுயிர்களை இம் மண்ணுக்காக தந்த மாவீரர்களின் கனவு நனவாகும் ஆண்டாகவும் 2009 ஆம் ஆண்டு அமைய வேண்டும்என்ற எதிர்பார்ப்பு எம்மக்கள் மத்தியில் இருக்கிறது. இந்த வேளையில், உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு, கடந்த ஆண்டுகளைப் போல் இப்புதிய ஆண்டிலும் தமிழீழ தேசத்தின் விடியலுக்காக எல்லா வகையிலுமான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் நீங்கள் தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். தமிழர் சேனையின் கரங்களை பலப்படுத்தும் உங்களது செயற்பாடுகள் தான் எமது மண்ணின் விடுதலையை விரைவுபடுத்தும் என்பதனை என்றும் நினைவில் வைத்துக்கொள்ளுமாறும் வேண்டிக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் பாடசாலை மாணவர்களுக்கு முதலுதவிப் பயிற்சிகள் வழங்கத் திட்டம்

school-2.jpgகிழக்கு மாகாண பாடசாலைகளில் சென்.ஜோன் அம்புலன்ஸ் அமைப்பின் உதவியுடன் பாடசாலை மாணவர்கள் மத்தியில் முதலுதவிப் பயிற்சித் திட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. தமது பிரதேசத்திலும் பாடசாலை சூழலிலும் திடீர் அனர்த்தம் மற்றும் விபத்துகள் ஏற்படும் வேளையில் முதலுதவி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக மாணவர்களுக்கு அறிவூட்டுதல் தொடர்பாகவும் செய்முறை பயிற்சிகள் வழங்குவது தொடர்பாகவும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கடந்த கால யுத்த மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது மாணவர்கள் மத்தியில் முதலுதவி சம்பந்தமான போதிய அறிவு இல்லாததினால் விலை மதிப்புள்ள பெறுமதி வாய்ந்த மக்களின் உயிர்கள் பறிபோயின. சரியான தருணத்தில் முதலுதவிகள் வழங்கப்பட்டிருந்தால் அதிகமான மக்களை உயிர் இழப்புகளிலிருந்து பாதுகாத்திருக்க முடியும். கிழக்கு மாகாணத்திலுள்ள 13 கல்வி வலயங்களிலும் வலய மட்டத்தில் முதலுதவி பயிற்சி முகாம்களை ஒழுங்கு செய்து பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்க வலயக் கல்வி பணிப்பாளர்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

‘யாழ். மக்கள் சுயமாக உழைத்து உண்பதிலேயே பெரும் நாட்டம்’ – பிரதி அத்தியாவசிய ஆணையர்

யாழ்ப்பாண மக்கள் இலவசமாக உணவு பெற்று உண்பதை விரும்பாதவர்கள். அவர்கள் சுயமாக உழை த்து உண்பதிலேயே நாட்டம் கொண்டவர்களென்று அத்தியாவசிய சேவைகள் பிரதி ஆணையாளர் லியனாராச்சி தெரிவித்தார். யாழ். மக்கள் தமது விவசாயத்தை மேம்படுத்திக் கொள்வதற்கென கூடுதலாக உரத்தையே பெற்றுத் தருமாறு கேட்கிறார்கள் என்று தெரிவித்த அவர், யாழ்ப்பாணத்துக்கு உணவு தவிர்ந்த மரக்கறி வகைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

கப்பலில் மரக்கறிகளை அனுப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பில் (01)  நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். யாழ்ப்பாணம், வன்னிப் பிரதேசங்களில் உணவுக்குத் தட்டுப்பாடு கிடையாது என்று தெரிவித்த அவர், அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப் பட்டவர்களுக்காக 1600 மெட்ரிக் தொன் உணவுப் பொருள்கள் கப்பலில் ஏற்றப்பட்டுள்ளதாகவும் பிரதி ஆணையாளர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தற்போது மின்சாரத் துண்டிப்பு 15, 30 நிமிடங்கள், மாத்திரமே மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியல் தீர்வை அரசு முன்வைக்காத வரையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மக்கள் விடுதலைப் புலிகளையே ஆதரிப்பர் – ரொபேர்ட் ஓ பிளேக்

robert_blake.jpg
விடுதலைப் புலிகளை வெல்ல முடியாது. ஆனால் இதரதமிழ்த் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினால் விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி விடலாம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.  ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது;

விடுதலைப்புலிகளை தோற்கடிப்பது கடினம் என்பதில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. அவர்களை ஆயுதங்களைக் கீழே போடுவது பேச்சுவார்த்தையால் வேண்டுமெனில் சாத்தியம். அவர்களை முழுமையாக இராணுவ ரீதியாக தோற்கடித்துவிட முடியாது. அரசாங்கம் பேச்சுகளை நடத்துகிறதா இல்லையா என்பது வேறு விடயம். ஆனால் அரசாங்கம் அப்படியான திட்டத்தில் இல்லை என்று தெரிகிறது. அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் அல்லாத தமிழ்த் தரப்பிடம் பேச்சுகளை நடத்தி ஒரு தீர்வுக்கு அரசாங்கம் முன்வரலாம். இதில் வெற்றி பெற்றுவிட்டால் புலிகளை தனிமைப்படுத்தி விடலாம்.

கொழும்புக்கு நான் வந்தபோது எண்ணற்ற கடத்தல்கள், காணாமல் போதல்கள் நடைபெற்றன. இப்போது குறிப்பிடும்படியான அளவுக்கு அமைதியாக உள்ளது. அத்தகைய நிகழ்வுகள் இப்போது இங்கு இல்லாமல் போனாலும் கிழக்கு மற்றும் வவுனியாவில் நிலைமைகள் மோசமடைந்துள்ளன. இராணுவ வழித் தீர்வில் வெற்றி பெறுவது என்பது கடினமானது. அரசியல் வழியிலான தீர்வை முன்வைக்காத வரையில் பொதுமக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலிகளைத்தான் ஆதரிப்பார்கள். அரசியல் தீர்வை இப்போது முன்வைத்தால் புலிகளை ஒடுக்க உதவியானதாக இருக்கும்.

அனைத்துக் கட்சிக்குழு என்பது தேக்க நிலையடைந்து விட்டது. ஒரு ஆண்டாகவே 90 விழுக்காடு பணிகள் முடிவடைந்து விட்டதாகவே கூறி வருகின்றனர். அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவில் புலிகளுக்கு உதவி செய்யக்கூடிய புலம்பெயர் தமிழர்களின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும். சர்வதேச சமூகத்துடனான இலங்கையின் தொடர்பாடல்கள் நல்ல முறையில் உள்ளபோதும் வடக்கு பற்றிய தகவல்கள் போதுமானதாக இல்லை. தமிழக முதல்வர் கவலை தெரிவித்திருந்தார். வடபகுதிக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும். மேலும் ஐ.நா.சபை குழுவை அப்பகுதிக்கு அனுப்பி நிலைமைகளை அறிய அரசாங்கம் உதவ வேண்டும்.