11

11

இந்த கருணை நிறைந்த பௌத்த தேசத்தில்……….. : லங்காடிசன்ட்

freethepress._._._._._. 

‘ஜனநாயகமும் கருணையும் நிறைந்த இந்த தேசத்தில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. அதனை கற்றுக் கொள்ள முயற்சிப்பவர்கள் சாவிலேயே கற்றுக் கொள்ள வேண்டும் என்றாகிவிட்டது. அதனால் வாழ விரும்பும் நாங்கள் மாற்றுக் குரல், ஒரு சனநாயக உரிமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அனுபவிக்கப்படும் ஒரு நவீன நாட்டில் மற்றவர்களின் பாடுகளுடன் இணைந்து நிற்கும் ஒரு நாட்டில் மீண்டும் வருவோம்’

லங்காடிசன்ற்

._._._._._.

இது கருணை நிறைந்த ‘புத்தரின் தேசம்’ என சிங்கள பௌத்தர்கள் நம்புவதுடன் ஜனநாயக சோசலிச குடியரசு என அரசியலமைப்பில் பெயரிடப்பட்டுள்ள தேசமாகும். அதனால்

‘அறிவின் ஒளியில் புதிய வலுவுடன்
வெறுப்பும் வேறுபாடுகளும் இல்லாதொழிந்து
அன்பின் வலுவடைந்த தேசமாக
எல்லோரும் ஒருவராக அணிவகுத்துச்செல்ல
எம்மை முழுமையான சுதந்திரம் நோக்கி வழிநடத்து தாயே!’
எனத் தமது தேசிய கீதத்தையும் பெருமையுடன்
இசைக்கிறார்கள்.
 
எனினும் கருணையும் ஜனநாயகமும் நிறைந்த இந்த பௌத்த தேசத்தில் ஊடகங்கள் மாற்று கருத்துக்களை கொண்டிருக்க அனுமதியில்லை. ஆட்சியாளர்களின் சட்டங்களை விமர்சிக்க ஊடகங்களுக்கு உரிமையில்லை. மக்களுக்காக பேசும் உரிமையும் ஊடகங்களுக்கு இல்லை.

ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவிக்கும் உரிமை இருப்பதாக சிலர் நினைத்தனர். தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை இருப்பதாகவும் சிலர் நினைத்தனர். நூதனமான ஒழுக்கம் நிறைந்த சமூகத்தில் உள்ள மக்களுக்கு, இந்த உரிமையை ஒரு அடிப்படை உரிமையாக அனுபவிக்க உரிமை உள்ளது என நினைத்தனர்.

ஜனநாயகமும், கருணையும் நிறைந்த இந்த தேசத்தில் இவ்வாறான உரிமை இல்லை என தேசத்தை ஆளும் தேசப்பற்றுள்ள தரப்பினர் பகிரங்கமாவே தெரிவித்துள்ளனர்.

வடக்கில் இருந்த தமிழ் ஊடகங்களே முதலில் இந்த முகத்தில் அறையும் உண்மையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இது முதலில் மிகவும் பகிரங்கமாகவும் கொடூரமாகவும் கற்பிக்கப்பட்டது.

அப்போது வடக்கில் இருந்து வந்த மாறுபட்ட குரல்களை வேறு இடங்களில் ஒலிக்கச் செய்ய கொழும்பு ஊடகங்கள் விரும்பியிருக்கவில்லை. வடக்கில் எழுந்த அந்த உரிமையின் குரலைக் கேட்பதற்கும் தெற்கில் உள்ள ஊடகங்கள் தயாராக இருக்கவில்லை.

சிலர் அவர்கள் பாடம் படிக்கட்டும் என்றே விட்டுவிட்டனர். எங்களுடன் இல்லாத அவர்கள் படித்த பாடம் எங்களுக்கு தேவையில்லையெனவும் கருதியிருந்தனர். அவர்கள் படித்த பாடங்களை எங்களுக்குச் சொல்ல அவர்கள் உரிமையற்றிருந்தார்கள். அவர்கள் அதைச் சொல்லியிருப்பின் இன்னும் சில காலம் வாழும் உரிமையை இழந்திருப்பார்கள். தற்போது தென் பகுதி ஊடகங்கள் அதனை அனுபவிக்க நேர்ந்துள்ளது.

எனினும் அந்தப் பாடத்தைக் கற்றுக் கொடுக்க, அதனை கற்றறிந்தவர் பலர் இன்று எம்மிடத்தில் இல்லை. சிலர் மேலும் சில காலம் உயிர் வாழும் உரிமைக்காக, கற்றுக் கொடுக்கும் அந்த உரிமையை ரத்துச் செய்து கொண்டுள்ளனர். மேலும் சிலரின் உரிமைகள் அவர்களின் ஊடக நிறுவவனங்களுடன் தீப் பற்றி எரிந்து போனது. இந்தப் பாடத்தைக் கற்றுக் கொள்ளவே சிரச ஊடக நிறுவனம் எரியூட்டப்பட்டது.

இந்த நிலையில் எவருக்கும் அடிபணியாத ஊடக செயற்பாடுகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவுக்கு இது வெற்றி கொள்ள வேண்டிய சவாலாக இருந்தது. இதனை எதிர் கொள்ளும் போது, அவர் வார்த்தைகளை மறைத்து வைக்கவில்லை. இந்த சவாலை எதிர்கொள்ள அவர் தனக்கே உரித்தான பாணியை கைக்கொண்டிருந்தார். இதற்காக அவர் பாராட்டப்பட்டார். கௌரவிக்கப்பட்டார். அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் சவாலை வெற்றி கொள்ள முடியாது அவர் தனிமையானார்.

இது அடிக்கடி படித்துக் கற்றுக்கொள்ளும் பாடம் இல்லை. ஜனநாயகமும் கருணையும் நிறைந்த இந்த தேசத்தில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. அதனை கற்றுக் கொள்ள முயற்சிப்பவர்கள் சாவிலேயே கற்றுக் கொள்ள வேண்டும் என்றாகிவிட்டது. அதனால் வாழ விரும்பும் நாங்கள் மாற்றுக் குரல், ஒரு சனநாயக உரிமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அனுபவிக்கப்படும் ஒரு நவீன நாட்டில் மற்றவர்களின் பாடுகளுடன் இணைந்து நிற்கும் ஒரு நாட்டில் மீண்டும் வருவோம். அதுவரையில்….

லங்காடிசன்ட் ஆசிரியர்.

முல்லைதீவை கைப்பற்ற 50 ஆயிரம் துருப்புக்கள். புலிகளின் சகல விநியோகப் பாதைகளும் துண்டிப்பு; – இராணுவத் தளபதி

kili-05.jpgமுல் லைத்தீவை புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும்நோக்குடன் ஒன்பது படைபிரிவுகளைச் சேர்ந்த ஐம்பது ஆயிரம் இராணுவ வீரர்கள் முன்னேறி வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். புலிகளின் சகல விநியோக பாதைகளும்முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது அந்தப் பிரதேசத்தில் படை நடவடிக் கைகளை படையினர் முன்னெடுத்துள்ளதுடன் பாரிய தேடுதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவ தாகவும் குறிப்பிட்டார். அத்துடன், இராணுவத்தின் 53, 55, 57, 58, 59வது படைப் பிரிவுகளும் முதலாவது இரண்டாவது முன்றாவது மற்றும் நான்காவது செயலணியினருமே முல்லைத்தீவை நோக்கி தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, முள்ளியவளைக்கு மேற்கு பகுதியை நோக்கி முன்னேறிய படையினர் சகல வசதிகளையும் கொண்ட புலிகளின் பாரிய பயிற்சி முகாம் ஒன்றையும் கோவில் காடு பகுதியிலுள்ள புலிகளின் முக்கிய கட்டளைத்தளம் ஒன்றையும் படையினர் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார குறிப்பிட்டார்.

இந்தப் பகுதியிலுள்ள புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை நோக்கி முன்னேறிய படையினர் அங்குள்ள பாரிய பயிற்சி முகாமைக்கைப்பற்றியுள்ளனர். 11 கொங்கிரீட் பதுங்கு குழிகளை கொண்ட இந்த பாரிய முகாமில் 75 அடி நீளமும் 50 அடி அகலமுமான பிரதான மண்டபம், 35 அடி நீலம் 20 அடி அகலமான பாரிய  கொங்கிரீட் பங்கர். 200 அடி நீளம் 100 அடி அகலமான சாப்பாட்டு அறை, 35 அடி நீளம் 25 அடி அகலமுமான சமையல் அறை மற்றும் 35 அடி நீளம் 30 அடி அகலமான காரியாலய கட்டிடம் ஒன்றும் அமையப் பெற்றுள்ளது.

மூன்று கொங்கிரீட் பங்கர்களுடனான கட்டளைத் தளம் ஒன்றையும் கோவில்காடு பகுதியில் கைப்பற்றி யுள்ளனர். இந்த முகாமின் உட்புறத்தில் பெருந்தொகை யான வாகனங்கள் நிறுத்த வசதியான தரிப்பிடம் என்றும் தொலைத்தொடர்பு பரிமாற்ற நிலையமொன் றும் அமையப்பெற்றுள்ளதாக பிரிகேடியர் குறிப்பிட்டார்.

ஐ.நா. தீர்மானத்தை இரு தரப்பும் நிராகரிப்பு இஸ்ரேல் தொடர்ந்து காஸா மீது தாக்குதல்

gaza_.jpgகாஸா வில் உடனடி யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென்ற ஐ.நா.வின் அழைப்பை இரு தரப்பும் நிராகரித்திருக்கும் நிலையில் காஸாவில் பாலஸ்தீன அதிகாரசபை புதிதாக கால்தடம் பதிப்பதற்கும் சர்வதேச கண்காணிப்பாளர்களை வர வழைப்பதற்குமான திட்டமொன்று நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இராஜதந்திரிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது.

மதச்சார்பற்ற பாத்தா பிரிவின் தலைமையின் கீழ் அதிகாரசபை மீண்டும் அங்கு திரும்புவதற்கு இடமளிப்பது திட்டத்தின் ஓரங்கமாகும். காஸாப்பகுதியிலிருந்து 18 மாதங்களுக்கு முன்னர் ஹமாஸ் அமைப்பால் பாத்தா அமைப்பு வெளியேற்றப்பட்டது. அத்துடன் காஸாவுக்குள் ஆயுதக் கடத்தலை நிறுத்துவதற்கு துருக்கி மற்றும் பிரான்ஸ் கண்காணிப்பாளர்களை எகிப்துக்கான ராபாகடவை, இஸ்ரேலுக்கான கிரெம் சாலொம் கடவை உள்ளடங்கலாக காஸாவின் தெற்கு முனையில் நிறுத்துவதும் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

காஸாப் பிராந்தியத்தில் சர்வதேச அங்கீகாரத்துடனான அரசாங்கமாக அதிகார சபை இயங்கும். 2007 ஜூனின் பின்னர் காஸாவில் ஹமாஸ் அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து அப்பகுதியிலிருந்து போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் போக்குவரத்து மீள ஆரம்பிக்கப்படும்.

எகிப்தின் சமாதான முயற்சியின் ஓரங்கமாக இத்திட்டம் ஆராயப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி சார்கோஸியுடன் பேச்சு வார்த்தை நடத்தியபின் எகிப்திய ஜனாதிபதி முபாரக் இதனை அறிவித்திருக்கிறார். உடனடி யுத்த நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும் அதன் பின்னர் காஸா எகிப்து எல்லைப்பாதுகாப்பு தொடர்பாக பேச்சு வார்த்தை இடம் பெற வேண்டும் எனவும் கடவைகளை திறந்து விடவேண்டுமெனவும் இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் எல்லைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாக இணக்கப்பாடு இல்லாததால் எகிப்தின் முயற்சிகள் நிராகரிக்கப்பட்டு விடுமென இராஜதந்திரிகள் கூறுகின்றனர். எகிப்துடனான எல்லையில் அவதானிப்பாளர்களை அனுமதிப்பது தொடர்பாக பரிசீலிப்பதாக கூறியுள்ள ஹமாஸ் அமைப்பு ஆனால் சர்வதேச படையினர் பிரசன்னத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அதேசமயம் ஹமாஸின் 3 தலைவர்கள் பேச்சு வார்த்தைக்காக எல்லையைக் கடந்து இஸ்ரேலுக்கு வந்துள்ளதையும் ஹமாஸ் சுட்டிக்காட்டியுள்ளது.  ஆனால் எல்லைப்பகுதிகளிலுள்ள சுரங்கப்பாதைகளூடாக ஆயுதங்கள் கடத்தப்படுவதாகவும் அவற்றை அழிக்க சர்வதேசப்படை அவசியமெனவும் இஸ்ரேல் வலியுறுத்துகிறது.

தமது எல்லைப்பகுதியில் சர்வதேசப் படையின் பிரசன்னத்தை எகிப்து விரும்பவில்லை. ஆயினும் 2005 இல் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டை மீண்டும் புதுப்பிக்க வேண்டுமென கெய்ரோ விரும்புகின்றது. அந்த உடன்படிக்கையின்பிரகாரம் நடமாட்டம், விநியோகம் என்பன ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் இடம் பெறும். ராபா கடவையூடாக மக்கள் போக்குவரத்து கேரம் சாலெம் கடவையூடாக வாகனங்களில் போக்குவரத்துக்கு அந்த உடன்படிக்கை வழிவகுத்திருந்தது. ஹமாஸ் அதிகாரத்திற்கு வந்ததையடுத்து அந்த உடன்படிக்கை செயலிழந்தது. ஐ.நா.வின் யுத்த நிறுத்த யோசனைக்கு பாதுகாப்பு சபை 140 அங்கீகாரமளித்திருந்தது. அமெரிக்கா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் உடனடியாகவே ஐ.நா.வின் தீர்மானம் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

அமெரிக்கா ஐ.நா.பாதுகாப்பு சபை தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்பட்டிருந்த போதும் கடைசி நிமிடத்தில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஜனாதிபதி புஷ்ஷிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.

நேற்று முன்தினமும் நேற்றும் இஸ்ரேல் காஸா மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியது. தனது பிரஜைகளை பாதுகாப்பதற்கான உரிமை தொடர்பாக தீர்மானிப்பதற்கு வெளியார் செல்வாக்கு செலுத்த இஸ்ரேல் ஒரு போதும் இணங்கவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் ஈகுட் ஒல்மேர்ட் கூறியுள்ளார். இஸ்ரேல் மட்டும் தாக்குதல்களை நடத்தவில்லை. காஸாவிலிருந்தும் டோராட், பீர்சிபா போன்ற குடியேற்றப்பகுதிகளை நோக்கி ரொக்கட் தாக்குதல்கள் இடம்பெற்றன.

அரசுக்கு எதிரான சர்வதேச சதி குறித்து ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும்

ranil-2912.jpgஅரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய நாடு எதுவென்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உடனடியாக பகிரங்கப்படுத்தவேண்டும் எனவும் அந்த நாட்டுக்கு எதிராக ஐ.நா.வில் முறையிட வேண்டுமெனவும் வலியுறுத்தியிருக்கும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டுமக்களை ஏமாற்றாமல் சதிகாரர்கள் யார் என்பது பற்றியும் எம்.ரி.வி. தீவைப்பு, லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாகவும் உண்மைகளை இன்று வெளியிடவேண்டுமெனவும் கேட்டிருக்கின்றார்.  சர்வதேசத்தின் மீது சுட்டுவிரல் நீட்டி அரச பயங்கரவாதத்தை மூடி மறைக்கமுயலும் கபட நாடகம் முடிவுக்கு வரும் நாள் நெருங்கிவிட்டதாகவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மிகிந்தாலை சாஞ்சி விகாரையில்  சனிக்கிழமை காலை இடம்பெற்ற படுகொலை செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் ஜானகபெரேராவின் மூன்று மாத நினைவு சமய நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது; பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை, யாழ்ப்பாணத்தில் ஊடகநிறுனத்தின் மீதான குண்டுத்தாக்குதல், தொப்பிகல மீட்கப்பட்டதன் பின்னர் ஆங்கில ஊடகவியலாளர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை, வவுனியா அகதி முகாம் தீ வைக்கப்பட்டமை, பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை, எம்.ரி.வி. ஊடகநிறுவனம் தீவைக்கப்பட்டமை, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை என்பனவற்றின் பின்னணியில் அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் சர்வதேச சக்தியொன்றின் சதி காணப்படுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்காற்றிய உரையின் போது குற்றச்சாட்டு சுமத்தியிருக்கின்றார்.

இக்குற்றச்சாட்டை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியாது. ஒரு நாட்டின் மீது பழிசுமத்தும் போது ஆழமாக ஆராய்ந்த பின்னரே அதனைச் செய்ய முடியும். நாட்டின் தலைவர் என்ற பொறுப்பைக்கொண்ட ஜனாதிபதி இக்குற்றச்சாட்டை சுமத்துவதான மிக உன்னிப்பாக நோக்கப்படவேண்டியதாகும். சர்வதேசத்தின் சதியென்று பொதுப்படையாகக் கூறிவிட்டு உலகத்தை ஏமாற்றி விடமுடியாது. முன்னே கூறப்பட்ட அனைத்துச் சம்பவங்களும் சர்வதேச சதியென்றால் அவற்றுடன் தொடர்புபட்ட நாடு எது என்பதை ஜனாதிபதி பகிரங்கமாகத் தெரிவிக்கவேண்டும். அதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையிடம் முறையிடாமலிருப்பது ஏன் எனக் கேட்கவிரும்புகின்றோம். தனது அரசியல் நலனுக்கும், அதிகார இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் நாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முயற்சிக்க வேண்டாமென ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வளவு குற்றச்சாட்டுகளையும் சுமத்திய ஜனாதிபதி ராஜபக்ஷ அநுராதபுரத்தில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி குழுவினரின் படுகொலைகள் தொடர்பில் அவ்வாறானதொரு குற்றச்சாட்டை சுமத்தவில்லை எனவே அதற்கான பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ளவேண்டுமென்பது உறுதியாகியுள்ளது.

ஒன்பது வருடங்களுக்கு முன்னர் ஆனையிறவை இழக்க நேரிட்டதாக ஜனாதிபதி தமதுரையில் சுட்டிக்காட்டியுள்ளார். அக்காலப்பகுதியில் ஆட்சியிலிருந்த அரசில் அவரும் ஒரு பங்காளி என்பதை மறந்துவிடக்கூடாது. இம்முறை வன்னி இராணுவ நடவடிக்கையின் போது 2,500 படைவீரர்கள் பலியானதாகவும் 15 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் ஆயிரம் பேர் காணாமல் போயிருப்பதாகவும் அறிக்கையொன்று கூறுகிறது.

இவற்றை அரசு ஏன் நாட்டு மக்களுக்கு மறைக்கவேண்டுமெனக் கேட்கின்றோம். யுத்த வெற்றியின் பெருமை படையினருக்கும் நாட்டுமக்களுக்குமே உரியது. இதனை ஜனாதிபதி தமக்கு சாதகமாக பயன்படுத்தி அரசியல் நலன்களை பெற முயற்சிக்கின்றார் எனவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

நாகர்கோயிலும் படை வசமானது

SL_Army_in_Killinochieவட மராட்சி கிழக்கில் நாகர்கோயில் பகுதியையும் கிளிநொச்சியில் வட்டக்கச்சி கிழக்குப் பகுதியையும் படையினர் தம்வசம் கொண்டு வந்துள்ளனர் என்று படைத்தரப்பு நேற்றுத் தெரிவித்தது. வட்டக்கச்சி மற்றும் இரணைமடுப் பகுதிகளில் கடும் மோதல்கள்  இடம்பெற்று வருகின்றன என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.
 
 

12 தமிழ் இளைஞர்கள் நீர்கொழும்பில் கைது!

handcuff.jpgநீர் கொழும்பில் படையினர் நேற்று முன்தினம் மாலை நடத்திய தேடுதலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 12 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்டிய பிரதேசங்களில் சந்தேகத்துக்கு உரிய முறையில் நடமாடியதன் காரணமாக இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
 
 
 

இலங்கை அரசு இராணுவத் தீர்வை நோக்கிச் செல்கின்றது. நாங்கள் அரசியல் தீர்வினையே விரும்புகின்றோம். – பா. நடேசன்

nadesan.jpgஎமது மக்களின் அரசியல் விருப்பங்களை நிறைவு செய்யக்கூடிய அரசியல் தீர்வினையே நாங்கள் விரும்புகின்றோம் என விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து இந்தியாவிலிருந்து வெளிவரும் பிரதான பத்திரிகைகளுள் ஒன்றான தினமணியின் கேள்விகளுக்கு நடேசன் அளித்துள்ள சிறப்பு பேட்டி விபரம் வருமாறு:

கேள்வி: மக்கள் யாரும் இல்லாத, வெறிச்சோடிக் கிடந்த கிளிநொச்சியைத்தான் இலங்கை இராணுவம் பிடித்துள்ளது என்கிறார்களே, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை கிளிநொச்சியிலிருந்து அழைத்துச் செல்லும் பணியை எவ்வளவு நாட்களாக செய்தீர்கள்?

பதில்: கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்புகளை தமிழ் மக்கள் சந்தித்து வருகிறார்கள். அதுபோன்ற நேரங்களிலும் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உடுத்திய உடையோடு, எல்லா உடைமைகளையும் விட்டுவிட்டு, இடம்பெயர்ந்த வரலாறு பல உண்டு. வன்னி நிலப்பரப்பில் இராணுவ நடவடிக்கையை எங்கள் மக்கள் சந்திப்பதும் இது முதல் தடவையல்ல. இலங்கை இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளில் சிங்களப் படையினர் எத்தகைய சித்திரவதைகள், படுகொலைகள், கற்பழிப்புகள் செய்வார்கள் என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே இராணுவம் எப்போது வரும்? எவ்வாறு வரும்? என்பதை எங்கள் மக்கள் நன்கு அறிவார்கள். அதற்கேற்ப இம்முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓரிரு நாட்களுக்குள்ளேயே முழு உடைமைகளுடனும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். அவர்கள் எதிர்பார்த்த சகல உதவிகளையும் நாங்கள் செய்து வருகிறோம்.

logo.gifகேள்வி: அவர்கள் காடுகளில் தங்கியுள்ளதாகவும், உடல் நிலை மோசமாகி தினமும் பலர் உயிரிழப்பதாகவும் கூறப்படுகிறதே, அது உண்மையா?

பதில்: இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தியுள்ளோம். சிறு கிராமங்கள், காடுகள் என எல்லா இடங்களிலும் குடியேற்றியுள்ளோம். இலங்கை அரசின் பொருளாதாரத் தடை காரணமாக மருந்துப் பொருட்கள் கிடைக்கவில்லை. எனவே பாம்புக் கடிகள், தொற்றுநோய்கள் என எல்லா கொடுமைகளையும் எமது மக்கள் சந்தித்து வருகின்றனர். மிகவும் சிரமப்பட்டு அவர்களை பாதிப்பிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடில்களில் வசிக்கிறார்களா? வெட்ட வெளியில் உள்ளார்களா? அவர்களுக்கு உணவு, உடை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை எவ்வாறு அளித்து வருகிறீர்கள்?

பதில்:  ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தற்போது குடிசைகளிலும், தாற்காலிக கூடாரங்களிலும், மர நிழல்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இடம்பெயர்ந்த மக்களுக்கு மின்சாரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. குப்பி விளக்குகளிலும், காட்டில் நெருப்புகளை மூட்டியும் மக்கள் தமக்கு வேண்டிய வெளிச்சத்தைப் பெறுகின்றனர். தற்காலிக கிணறுகள், குளங்களிலிருந்து எடுக்கப்படும் நீரை, எமது சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்படி கொதிக்க வைத்து பருகி வருகின்றனர். உணவைப் பொறுத்தமட்டில், ஐ.நா. சபையின் உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்படும் உணவுகளையும், உள்ளூர் உற்பத்திகளில் சேகரித்து வைத்த உணவுகளையும் உண்டு வருகின்றனர். பெரிய சிரமங்களுக்கும், சவால்களுக்கும் மத்தியில் எங்கள் மக்கள் உணவு, உடை, குடிநீர் ஆகியவற்றைப் பெற்று வருகின்றனர்.

கேள்வி: கிளிநொச்சியில் தற்போது கட்டடங்கள் அனைத்தும் தரைமட்டமாகக் கிடக்கின்றன. மின்சாரம், குடிநீர் விநியோகம் எதுவும் இல்லை. கிளிநொச்சியை காலி செய்யும் முன் நீங்களே அழித்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறதே. இது உண்மையா?

பதில்:  இது முற்றிலும் பொய்யான பிரசாரமாகும். இலங்கை விமானப் படையின் குண்டு வீச்சுக்களாலும், ஷெல் (பீரங்கிக் குண்டு) வீச்சுக்களாலும் கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. நேரில் சென்று பார்ப்பவர்களுக்கு இது நன்றாகப் புரியும்.

கேள்வி: தமிழ் மக்கள் கிளிநொச்சியை விட்டு முன்னரே வெளியேறி விட்டார்கள் என்றால், தமிழக அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்கள் யாருக்கு போய்ச் சேர்ந்தது?

பதில்:  முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சியை ஒட்டிய பிரதேசங்களில், மக்கள் இடம்பெயர்ந்து சென்று வாழ்கின்ற இடங்களில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரால் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. எமது பிரதேசத்தில் இயங்குகின்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் எங்களுடன் மிகவும் நெருக்கமாகவும், அந்நியோன்னியமாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை எளிதாக விநியோகிக்க முடிகிறது.

கேள்வி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உடல் நிலை மோசமாக உள்ளதாகவும், அவர் விரைவில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வார் என்றும் தொடர்ந்து செய்திகள் வருகின்றன. உண்மை நிலை என்ன?

பதில்:  அவர் மிகவும் தேக ஆரோக்கியத்துடன் இருந்து போராட்டத்தை வழிநடத்தி வருகிறார். இலங்கை அரசுக்கு ஆதரவான ஊடகங்களே இவ்வாறு பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

கேள்வி: இலங்கை இராணுவத்துக்கு இந்திய இராணுவம் உதவி வருவதாகக் கூறப்படுவது உண்மையா?

பதில்:  பல ஊடகங்கள், குறிப்பாக கொழும்பு ஊடகங்கள் இவ்வாறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

கேள்வி: கிளிநொச்சியை மீண்டும் மீட்போம் எனக் கூறுகிறீர்கள். கிளிநொச்சியிலிருந்து இலங்கை இராணுவத்தை விரட்டுவது அவ்வளவு எளிதானதா?

பதில்: இங்குள்ள தமிழ் மக்கள் அனைவரும் எங்களுடன் உள்ளனர். அது மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகத் தமிழ் இனத்தின் தார்மிக ஆதரவும் எங்களுக்கு உள்ளது. இதுவே எங்கள் பலம். இந்த பலத்தின் மூலம் நாங்கள் இழந்த ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

கேள்வி: இலங்கை இனப் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகளின் அணுகுமுறை மற்றும் செயல்பாடு குறித்து தங்கள் கருத்து என்ன?

பதில்:  எங்கள் விடுதலைப் போராட்டத்திற்காக அரசியல் மாறுபாடுகளை மறந்து, குரல் கொடுப்பது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும், எழுச்சியையும் கொடுக்கின்றது.

கேள்வி: இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து தங்கள் கருத்தென்ன?

பதில்:  இந்திய அரசினுடைய, இந்திய மக்களுடைய வரலாற்று ரீதியான நண்பர் யார்? பகைவன் யார்? என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள்தான் இந்தியாவின் வரலாற்று ரீதியான நண்பன் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்தியாவுக்கு நம்பிக்கைக்குகந்த நண்பனாக இலங்கை அரசு என்றைக்குமே நடந்து கொள்ளவில்லை. இதற்குப் பல்வேறு ஆதாரங்களைக் கூறமுடியும்.

கேள்வி: போர் நிறுத்த உடன்படிக்கை முறிய விடுதலைப் புலிகளே காரணம் என இங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் கூறி வருவது உண்மையா?

பதில்:  போர் நிறுத்த உடன்படிக்கை முறிந்ததற்கு இலங்கை அரசே காரணம். போர் நிறுத்தத்திலிருந்து விலகுவதாக அவர்கள்தான் முதலில் அறிவித்தனர். நாங்கள் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை. இப்போதும் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்று உருவானால் அதனை வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம்.

கேள்வி: ஈழத் தமிழர் பிரச்னைக்கு எத்தகைய தீர்வை எட்ட முடியும் என நம்புகிறீர்கள்? அதற்குத் தங்களிடம் எத்தகைய திட்டம் உள்ளது?

பதில்:  எமது மக்களின் அரசியல் விருப்பங்களை நிறைவு செய்யக்கூடிய அரசியல் தீர்வினையே நாங்கள் விரும்புகின்றோம். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், நோர்வே போன்ற நாடுகள் அரசியல் பேச்சுவார்த்தைகள் வழியாகவே இனப் பிரச்னைக்கான தீர்வை காண முடியும் என கூறி வரும் நேரத்தில், இலங்கை அரசு எங்கள் மீது தடை விதித்துள்ளது. இலங்கை அரசு இராணுவத் தீர்வை நோக்கிச் செல்கின்றது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. இது சிங்கள அரசின் அப்பட்டமான தமிழின விரோதப் போக்கிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.என்றார் நடேசன்.

நன்றி: தினமணி

A9 கண்ணிகள் அகற்றப்பட்டதும் பயணிகள் போக்குவரத்து

basil.jpgஏ-9  பாதையில் மிதிவெடிகள், நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்த உடனேயே பயணிகளின் போக்குவரத்துக்காகத திறக்கப்படுமென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

மன்னார் – பூநகரி கேரதீவு வரையிலான ஏ-32 பாதை திருத்த வேலைகளில் ஈடுபடும் பொறியியல் குழுவினரின் உதவியுடனேயே ஏ-9 பாதையின் திருத்த வேலைகளும் மேற்கொள்ளப்படும்.

ஓமந்தை முதல் கிளிநொச்சி வரையில் பாதையில் திருத்த வேலைகள் செய்ய தேவையேற்படாது. எனினும், ஆங்காங்கே சிறு திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். கிளிநொச்சி முதல் முகமாலை வரையிலான பாதையே பெரிதும் பழுதடைந்துள்ளன.

இதேவேளை, ஏ-32 பாதையின் திருத்த வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன. இப்பாதையின் திருத்த வேலைகளை முற்று முழுதாக பூரணப்படுத்துவதற்கு புலிகளின் தாக்குதல் தடையாக இருந்தது. ஆனையிறவு கைப்பற்றியதுடன் இத்தடையும் நீங்கியது என்றும் குறிப்பிட்டார்.

கிழக்கின் அபிவிருத்தி முன்னெடுப்பு போன்றே மின்சாரம் வழங்கல், குடிநீர் வழங்கல், அரச நிர்வாக பொறிமுறைகளை ஆரம்பித்தல், பொலிஸ் நிலையங்களை நிறுவுதல் போன்றவை பூர்த்தியடைந்ததன் பின்னரே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் படும் என்றும் பசில் ராஜபக்ஷ எம்.பி. கூறினார்.

பிரபாகரன் தொடர்பாக இந்தியாவிடமிருந்து உத்தியோகபூர்வமான கோரிக்கை எதுவும் இல்லை – வெளிவிவகார அமைச்சர்

bogolagama-1612.jpgவிடு தலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒப்படைக்குமாறு இந்தியா உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் இலங்கையின் சட்ட வரைமுறைக்குட்பட்ட வகையில் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம இந்தத் தகவலை வெளியிட்டார்.

பிரபாகரன் கைது செய்யப்பட்டால் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் போகொல்லாகம; “இவ்விடயம் தொடர்பில் இதுவரை இந்தியாவிடமிருந்து எந்த உத்தியோகபூர்வ தொடர்பாடல்களும் கிடையாது. ஊடக அறிக்கைகள் மூலமே இதுபற்றி நாம் கேள்வியுற்றிருக்கிறோம். நாடொன்றிலிருந்து இன்னுமொரு நாட்டிற்கு கைதிகளை பரிமாற்றிக்கொள்ளும் சர்வதேச சட்ட வரைவுகள் இருக்கின்றன. எவ்வாறிருப்பினும், மத்திய வங்கி மீதான குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரபாகரனுக்கு இலங்கை நீதிமன்றத்தினால் 200 வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் அதேநேரம், ராஜீவ் காந்தி கொலைச் சம்பவம் தொடர்பாக அவருக்கு இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை நீதிமன்றத்தாலும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் இந்தியாவிடமிருந்து (பிரபாகரனை ஒப்படைக்குமாறு) உத்தியோகபூர்வ வேண்டுகோள் வரும்போது இலங்கையின் சட்ட வரைமுறைகளுக்கு அமைய ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார். இதேநேரம், பிரபாகரன் முதலில் உயிருடன் பிடிபடுகிறாரா என்று பார்ப்போமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறினார்.

வன்முறைகளுக்கு இராணுவ புலனாய்வுத்துறையின் ஒரு பிரிவினர் மீது ரணில் குற்றச்சாட்டு

ranil-2912.jpg“சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் “சிரச’ தொலைக்காட்சி நிறுவனம் மீதான தாக்குதல்கள் போன்ற படுகொலை உட்பட வன்முறை நடவடிக்கைகளை இராணுவ புலனாய்வுத் துறையின் ஒரு பிரிவினரே மேற்கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இராணுவத் தளபதிக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும் மட்டுமே பொறுப்புக் கூறும் இந்தக் குழுவினரின் செயற்பாடுகளை உடனடியாக கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை அரசாங்கம் எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில்  வெள்ளிக் கிழமை விஷேட அறிவிப்பொன்றை விடுத்துப் பேசும்போதே ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; நாட்டை நிர்வகிக்கும் கூட்டுப் பொறுப்பு அமைச்சரவைக்குள்ளது. எனினும், அமைச்சரவை அந்தப் பொறுப்பை நிறைவேற்றத் தவறியுள்ளமை கடந்தகால சம்பவங்களிலிருந்து புலனாகிறது. சிரச தொலைக்காட்சி நிறுவனம் மீதான தாக்குதல் மற்றும் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக அரசாங்கத்தினால் நிர்வகிக்க முடியாத, கட்டுப்படுத்த முடியாத பிரிவு ஒன்று இருக்கிறது. இராணுவ புலனாய்வுத் துறையின் சிறு பிரிவினரே இதைச் செய்கின்றனர். இதன்மூலம் நாம் முழு இராணுவத்தையும் குற்றஞ்சாட்ட முயற்சிக்கவில்லை. இந்தச் சிறு பிரிவினரின் செயற்பாடுகளால் முழு இராணுவத்திற்கே அவப்பெயர் ஏற்படுத்தப்படுகிறது. புலனாய்வுத் துறையின் இந்தக் குழுவினர் இராணுவத் தளபதி ஊடாக பாதுகாப்புச் செயலாளருக்கு மட்டுமே பொறுப்புக் கூறுகின்றனர். வேறு எவருக்கும் இவர்கள் கட்டுப்படுவதில்லை.

எனவே, கொழும்பின் பாதுகாப்பு, இப் பிரதேசத்துக்குப் பொறுப்பான கட்டளைத் தளபதியினதும், பிரதிப் பொலிஸ் மா அதிபரினதும் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். மோட்டார் சைக்கிள்களில் வந்து இவ்வாறான செயல்களில் ஈடுபடும் குழுவினரைப் பொறுப்பானவர்களுக்கு தெரியாமல் வெளியில் சுற்றித்திரிய அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அவர்கள் அனுமதியின்றி செயற்பட்டால் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது எதிர்க்கட்சிக்கும், ஊடகங்களுக்கும் மட்டுமான அச்சுறுத்தல் கிடையாது. ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தரப்புக்கும் அச்சுறுத்தலே. நாம் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோருகிறோம். இத்தகைய நடவடிக்கைகள் இச்சபைக்கும் அச்சுறுத்தலாகும். அத்துடன், நீதிமன்றத்துக்கும் அச்சுறுத்தலாகும். இந்த அச்சுறுத்தல் இதனுடன் மட்டுப்பட்டு விடவில்லை. எனவே, இந்த நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரஉரிய உடனடி நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்’ என்றார்.