விமான நிலைய பெண் அதிகாரியிடம் போதையில் ரகளையில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்தவரை பொலிஸார் கைது செய்தனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நவீந்திரன் (வயது 33). லண்டனில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருபவர். இவர் இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் விமானம் மூலம் ஞாயிறு இரவு 7.30 மணிக்கு சென்னை வந்தார். நள்ளிரவு 1.30 மணிக்கு லண்டனுக்கு புறப்படும் ஜெட் எயார்வேஸில் டிக்கெட் எடுத்திருந்தார்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் அவரது சகோதரி வசிக்கும் தாம்பரம் சேலையூருக்குச் சென்றார். பின் மதுக்கடையில் நுழைந்து மதுஅருந்தி விட்டு விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு ஜெட்எயார்வேய்ஸ் விமான அதிகாரி தேவி (வயது 30) நவீந்திரனின் விசா மற்றும் பாஸ்போட்டை சோதனை செய்ய முயன்றார். நவீந்திரன் குடிபோதையில் இருந்ததால் “இன்று விமானத்தில் பயணிக்க அனுமதிக்க முடியாது. நாளை செல்லும் விமானத்தில் அனுப்புகிறோம் ‘ என தேவி கூறினார்.
இதில் கோபமடைந்த நவீந்திரன் “நான் யார் தெரியுமா? என்னுடைய செல்வாக்கு என்ன” என விமானப்பெண் அதிகாரி தேவியிடம் ரகளையில் ஈடுபட்டார். இதையறிந்த விமான நிலைய பொலிஸார் குடிபோதையில் இருந்த நவீந்திரனை அழைத்துச் சென்று குரோம்பேட்டை அரச மருத்துவமனையில் மருத்துவச் சான்று பெற்றனர். அதன்பின் அவர் மீது பொலிஸார் வழக்கு பதிந்து ஆலந்தூர் நீதிமன்றில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.