20

20

யுத்தத்தை காரணம் காட்டி அபிவிருத்தியை நிறுத்தும் நோக்கம் அரசுக்கு கிடையாது

president.jpgயுத்தத்தைக் காரணம் காட்டி அபிவிருத்தியை நிறுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை. சகல மக்களும் சுதந்திரமாகவும் உரிமைகளுடனும் வாழக்கூடிய நாட்டை விரைவாகக் கட்டியெழுப்பவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அபிவிருத்தியை நோக்கிய அரசாங்கத்தின் பயணம் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து செல்லும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய மாகாண சபைக்கான தேர்தல் பிரசாரக் கூட்டம் (18) மாத்தளை மாவட்டத்தின் நாவுல்ல பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. இத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

பயங்கரவாதத்தினால் சீரழிந்திருந்த நாட்டை மீட்டெடுக்க மாவிலாறிலிருந்து தொடங்கிய மனிதாபிமான நடவடிக்கைகள் இன்று புலிகளை கடலில் தள்ளும் நிலைவரை முன்னெடுக்கப்பட்டுள்ளது. புலிகளை முழுமையாகக் கடலில் தள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.அந்நாள் விரைவில் மலரும். அத்தினத்தில் சுதந்திரத்தின் மகிழ்ச்சியை சகலரும் கொண்டாடும் அதேவேளை, அதனைப் பெற்றுத் தந்த படைவீரர்களை கெளரவிக்கும் வகையில் உங்கள் வீடுகளில் சிங்கக்கொடியை ஏற்றுங்கள். கண்டியில் 6,500 ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் எம்மோடு இணைந்தனர். மாத்தளையிலும் இணைவர். இந்தப் பிரசார மேடையில் ஜே. வி. பி.யில் போட்டியிடும் அபேட்சகரான சரத் விஜேசிங்க எம்முடன் இணைந்துகொண்டுள்ளார். இது எமது பெரு வெற்றியினை நிரூபிக்கின்றது.

நாம் நாட்டை அபிவிருத்தி செய்யும் அதேவேளை சகல கிராமங்களின் குறைபாடுகளையும் நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். விரைவில் உங்கள் கிராமங்களும் அபிவிருத்தி காண்பது உறுதி. மாத்தளை மாவட்டத்தில் மாத்திரம் 300 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அபிவிருத்தியை மேற்கொள்ளும் பொறுப்பு எங்களுடையது. அதேபோன்று ஆதரவு வழங்கவேண்டியதும் உங்களது பொறுப்பாகிறது. எதிர்வரும் பெப்ரவரி 14ம் திகதி வெற்றிலைக்கு வாக்களித்து அரசாங்கத்துக்கு ஆதரவு தாருங்கள். இத்தேர்தலில் நீங்கள் வழங்கும் ஆதரவு ஐக்கிய இலங்கையை உருவாக்கவும் அபிவிருத்திப் பயணத்தைத் தொடரவும் மிக முக்கியமானதாக அமையும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது மத்திய மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் 13 அபேட்சகர்களும் ஜனாதிபதியிடம் தமது உறுதிமொழியினைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ 9 பாதையூடாக இரண்டு மாதங்களில் பஸ் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் -அமைச்சர் டலஸ் அழகப்பெரும

bus-17o1.jpgஏ9 பாதையூடாக இரண்டு மாதங்களில் பஸ் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். தற்போது வவுனியாவில் இருந்து வன்னிக்கு பொதுமக்களை அனுப்பும் பணியில் இ.போ.ச. பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் 20 வருடங்களுக்குப் பிறகு இச் சேவை நடைபெற்றுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். வன்னிப் பகுதியில் இருந்து வவுனியாவுக்கு வந்தவர்கள் அண்மையில் அனுப்பப்பட்டனர்.

பாதுகாப்பு படையினர் இப்பகுதி வீதிகளில் இடங்களில் உள்ள கண்ணிவெடிகள், மிதிவெடிகளை அகற்றி பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க இரண்டு மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளனர். அதனால், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதும் ஏ9 பாதையூடான பஸ்சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார். நிலமை சீரடைந்ததும் முல்லைத்தீவு, கிளிநொச்சி டிப்போக்களுக்கு புதிய பஸ்களை அனுப்பி அந்த டிப்போக்களை இயங்கவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக இ.போ.ச. உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக இ.போ.ச. அதிகாரிகள் ஆராய்ந்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.ஏ9 பாதையூடாக இரண்டு மாதங்களில் பஸ் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

தற்போது வவுனியாவில் இருந்து வன்னிக்கு பொதுமக்களை அனுப்பும் பணியில் இ.போ.ச. பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் 20 வருடங்களுக்குப் பிறகு இச் சேவை நடைபெற்றுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். வன்னிப் பகுதியில் இருந்து வவுனியாவுக்கு வந்தவர்கள் அண்மையில் அனுப்பப்பட்டனர். பாதுகாப்பு படையினர் இப்பகுதி வீதிகளில் இடங்களில் உள்ள கண்ணிவெடிகள், மிதிவெடிகளை அகற்றி பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க இரண்டு மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளனர். அதனால், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதும் ஏ9 பாதையூடான பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார். நிலமை சீரடைந்ததும் முல்லைத்தீவு, கிளிநொச்சி டிப்போக்களுக்கு புதிய பஸ்களை அனுப்பி அந்த டிப்போக்களை இயங்கவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக இ.போ.ச. உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக இ.போ.ச. அதிகாரிகள் ஆராய்ந்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை பிரச்சினைக்கு தீர்வுகாண இருதரப்பும் பேசவேண்டும் – இல.கணேசன் கூறுகிறார்

eela-ganash.jpgஇலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றும் அதன் முடிவுகள் அமுல்படுத்தப்படுவதை இந்திய அரசு கண்காணிக்க வேண்டுமென்றும் தமிழக பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.  இது குறித்து அவர் கோவையில் (18) செய்தியாளர்களிடம் கூறியதாவது;

இலங்கையில் இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். எனவே, இதனை அந்நாட்டின் உள்நாட்டு பிரச்சினையாகக் கருதாமல் இந்திய அரசு இதில் நேரடியாகத் தலையிட வேண்டும். இந்தச் சண்டையின் மூலம் பிரபாகரனைப் பிடிக்க முடியாது. ஆகையால், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வுகாண முயல வேண்டும். ராஜீவ்காந்தி ஜெயவர்தன ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்த இலங்கை அரசு முன்வர வேண்டும். தற்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு இலங்கைப் பிரச்சினையில் போதிய அக்கறை காட்டவில்லை. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களுக்குள் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

முழு நாடும் ஆயுதமுனையில் ஆளப்படும் காலம் அண்மித்துக் கொண்டிருக்கிறது – எஸ்.பி.திஸாநாயக்க

sbdisanayakka.jpg
தென்னிலங்கையில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துக்கொண்டு வடக்குக்கு ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுக்கப்போவதாக மெதமுலன ராஜபக்ஷ குடும்பம் தெரிவித்து வருகின்றது. முழு நாடும் ஆயுத முனையில் ஆளப்படும் காலம் அண்மித்துக் கொண்டிருக்கின்றதெனத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சரும் மத்திய மாகாண ஐக்கிய தேசியக் கட்சி முதலமைச்சர் வேட்பாளருமான எஸ்.பி.திஸாநாயக்கா நாட்டில் ஜனநாயகத்தைப்பாதுகாத்து நல்லாட்சியை மலரச் செய்ய வேண்டுமானால் அராஜகத்துக்கு எதிராக மக்கள் ஒன்றுபட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

மகிந்த ராஜபக்ஷவின் யுத்த சிந்தனை மக்களை தவறாக வழிநடத்திக் கொண்டிருப்பதாகவும் எஸ்.பி.திஸாநாயக்கா சுட்டிக்காட்டினார். பெப்ரவரி 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் மத்திய, வடமேல் மாகாணசபைகளுக்கான தேர்தலில் மக்கள் ஆட்சிமாற்றத்துக்கு வழி வகுக்கும் தீர்ப்பை வழங்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடக்கவிருக்கும் மாகாணசபை தேர்தல் தொடர்பாக எஸ்.பி.திஸாநாயக்கா இரண்டு மாகாணங்களதும் மக்களுக்கு பொது வேண்டுகோளொன்றை விடுக்கும் கடிதமொன்றை வாக்காளர்களுக்கு அனுப்பியுள்ளார். அக்கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சொல்கிறார் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து கிழக்குப் போன்று வடக்கிலும் ஜனநாயகத்தைப் பெற்றுத்தரப்போவதாக. ஆனால், தம்மை விமர்சிக்கும் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அழித்து தென்னிலங்கையில் ஜனநாயகத்தை புதைக்கும் முயற்சியல் தீவிரம் காட்டிவரும் மெதமுலன ராஜபக்ஷ குடும்பம், எவ்வாறு ஆயுதமேந்திய வடக்குக்கு ஜனநாயகத்தை பெற்றுக் கொடுக்கப் போகின்றது என்று கேட்கவிரும்புகின்றேன். நாட்டில் எந்தவொரு மூலையிலாவது ஜனநாயகமோ, நல்லாட்சியோ காணப்படுகின்றதா? இலங்கைக்கு அமெரிக்காவிடமிருந்தோ, இங்கிலாந்திடமோ இருந்துதான் ஜனநாயகத்தை கொண்டுவரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்ததும் சந்திரிகா பண்டார நாயக்கா குமார துங்கவினால் முந்திய நிலைக்குத்தள்ளப்பட்டிருந்த பொருளாதாரத்தை மிகக் குறுகிய காலத்தில் ஸ்திரமான நிலைக்குக் கட்டியெழுப்பினார். இன்றைய அரசு காட்டுவது போல் மத்திய வங்கி அறிக்கையால் பொருளாதாரம் வளர்ச்சிகாணவில்லை. பொருளாதார வளர்ச்சியை அன்று ஒவ்வொருகிராமத்து விவசாயியும் கூட நேரிடையாக அனுபவித்தனர். இன்று பொருளாதார வளர்ச்சியானது மத்திய வங்கி அறிக்கைக்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதையே காணக்கூடியதாகவுள்ளது.

அன்று பிரதமர் ரணில் முன் வைத்த  ‘மீண்டெழும் இலங்கை’  திட்டத்தின் மூலம் நாட்டுக்கு உலக நாடுகளிடமிருந்து பெருமளவிலான பொருளாதார உதவிகள் கிட்டின. அந்த உதவிகளை வைத்துக் கொண்டே மகிந்த ராஜபக்ஷ இன்று பொருமைபேசிக் கொண்டிருக்கிறார். வீராப்புக் காட்டிக் கொண்ருக்கின்றார். மகிந்த ஆட்சிக்கு வந்த பின்னர் இன்று வரையில் பொருளாதார உதவியென்று உலக நாடுகளெதுவும் ஒரு சதம் கூட வழங்கமுன்வர வில்லை. கடல்கோள் அனர்த்த நிவாரணத்துக்கு கிடைத்த வெளிநாட்டு உதவியை ஹெல்பிங் அம்பாந்தோட்டை வங்கிக் கணக்கிலிட்டுக் கொண்ட ஜனாதிபதி, இன்று ரணில் 2001 இல் நாட்டின் அபிவிருத்திக்காக பெற்றுக்கொண்ட அனைத்து பொருளாதார உதவிகள், திட்டங்களை தெற்குக்கு மட்டும் என்ற கொள்கை அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றார்.

நாடு மிகமோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இந்தப் பேரழிவிலிருந்து மீட்சி பெற வேண்டுமானால், நாட்டில் ஜனநாயகம் மலர்ந்து நல்லாட்சி ஏற்படவேண்டுமானால் அதற்குரிய தீர்ப்பை மக்கள் தான் வழங்க வேண்டும். மத்திய மாகாணத்திலும், வடமேல் மாகாணத்திலும் பெப்ரவரி 14 ஆம் திகதி மக்கள் அளிக்கும் தீர்ப்புத்தான் முழுநாட்டையும் அழிவிலிருந்து மீட்டெடுப்பதற்காக வழங்கப்படக்கூடிய ஆணையாகும். அந்த ஆணையை வழங்குவதற்கு ஒவ்வொருவரும் உறுதிபூணவேண்டும். இரவில் விழுந்த குழியில் பகலிலும் விழந்துவிடாதீர்கள் என்று உங்கள் ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொள்கின்றேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிதைவடைந்த நிலையில் புலிகளின் விமானப் பாகங்கள் கண்டுபிடிப்பு

1801.jpgசிதைவடைந்த நிலையிலுள்ள புலிகளின் விமானம் ஒன்றை இரணைமடுவுக்கு வடக்குப் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவு, காட்டுப் பகுதிக்குள் படை நடவடிக்கைளை மேற்கொண்டுள்ள இராணுவத்தின் 57வது படைப் பிரிவினர் அங்கிருந்து முன்னேறி மேற்கொண்ட தேடுதலின் போதே படையினர் அந்த விமானத்தை கண்டுபிடித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இரணைமடு குளக்கட்டையும் அதனை அண்மித்த பிரதேசங்களையும் கைப்பற்றிய இராணுவத்தினர் இரணைமடு குளத்திற்கு தென் கிழக்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் ஆறாவது விமான ஓடுபாதை ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமை படையினர் கைப்பற்றினர். அந்தப் பிரதேசத்தில் முன்னேறி தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே சிதைந்த விமானம் ஒன்றை படையினர் கண்டு பிடித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகள் இந்த விமானத்தை தமது பயிற்சி நடவடிக்கைகளுக்கு பாவித்திருக்கலாம் என படையினர் சந்தேகிப்பதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர், இந்த விமானம் தொடர்பாக விரிவாக ஆராயும் பொருட்டு விமானப் படையின் நிபுணத்துவம் பெற்ற விசேட குழுவொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

விமானப் படையினரின் பூரண ஆராய்ச்சிக்குப் பின்னரே மேலதிக தகவல்களை வெளியிட முடியும் என்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம்,  கண்டுபிடிக்கப்பட்ட பழுதடைந்த விமான உறுதிப்பாகங்கள் இலங்கை இராணுவத்தின் விமான உறுதிப்பாகங்களாக இருக்கலாம் என்றும் சில இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒற்றையாட்சியை பாதுகாத்த வரலாற்றுப் பதிவை இன்றைய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது – ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ

president.jpgநாட்டில் ஒற்றையாட்சியைப் பாதுகாத்த அரசாங்கமாகவும் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை வெற்றி கொண்ட அரசாகவும் இன்றைய அரசாங்கம் வரலாற்றுப் பதிவை உறுதிசெய்யும் எனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இனி ஒருபோதும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்டிருக்கிறார். பயங்கரவாதத்துக்கு துணைபோகும் துரோகிகள் விடயத்தில் நாட்டு மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய, வடமேல் மாகாணங்களின் அரச வங்கி ஊழியர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் சனிக்கிழமை இரவு இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி இங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;  “ஒரு புறத்தில் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. மறுபுறத்தில் பகற்கொள்ளையரிடமிருந்தும் ஏமாற்றுப் பேர்வழிகளிடமிருந்தும் நாட்டை மீட்டெடுக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு தேசிய வளங்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. அதேபோன்று கொழும்புக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை கிராமத்துக்குக் கொண்டு செல்லும் திட்டத்திலும் நாம் வெற்றிகண்டு வருகின்றோம். எமது படையினர் கிழக்கை வென்றெடுத்த பின்னர் நூற்றுக்கணக்கான கிலோ மீற்றர் தூரப்பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. கொங்கிரீட் வீதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கிராமத்துக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வருடத்தில் மாகாண மட்டத்திலான வீதி அபிவிருத்திக்கு 360 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளோம். மத்திய மாகாண அபிவிருத்திக்கு மட்டும் 900 மில்லியன் ரூபாவை பெற்றுக் கொடுத்துள்ளோம். கடந்த மூன்று வருடங்களில் 65 ஆயிரம் கோடி ரூபா நாட்டின் அபிவிருத்திக்குச் செலவிடப்பட்டுள்ளது. 661 பாரிய அபிவிருத்தி திட்டங்கள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மொத்தச் செல வீனம் ட்ரிலியன் ரூபா தாண்டியுள்ளது. யுத்தத்தை முன்னெடுத்த வண்ணமே நாட்டில் அபிவிருத்தியையும் துரிதப்படுத்தியுள்ளோம். எதிர்காலத்தில் எமது மக்கள் வரலாற்றைப் புரட்டும் போது இந்த அரசாங்கமே இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை வெற்றி கொண்டதாகப் பார்க்க முடியும். தேசத்தின் ஒற்றையாட்சியை பாதுகாத்து உறுதிசெய்த அரசு என்றும் பதியப்பட்டிருக்கும் முழுநாட்டை முழுமையாக அபிவிருத்தி செய்த அரசாகவும் அந்த வரலாற்றில் பதியப்பட்டிருக்கும்.

கடந்த காலங்களில் யுத்தத்தைக் காண்பித்து நாட்டின் அனைத்து அபிவிருத்திகளும் நிறுத்தப்பட்டிருந்தன. அப்படியில்லாவிட்டால் அபிவிருத்தி தடைப்பட்டது யுத்தம் காரணமாகவே என்று கூறிவந்தனர். ஆனால் நாங்கள் யுத்தத்தை வியாபாரமாக நடத்துவதை தடுத்து நிறுத்தியுள்ளோம். யுத்தத்தை பிச்சைக்காரனின் புண்களாகக் காண்பிப்பதை இல்லாதொழித்து விட்டோம். எமது தாய்நாட்டை பயங்கரவாதத்திடமிருந்து மீட்டெடுத்ததோடு, சமகாலத்தில் நாட்டில் அபிவிருத்தியையும் முன்னெடுத்து வந்துள்ளோம். சம்பள அதிகரிப்புகளையும் செய்தோம். தெளிவானதொரு வேலைத்திட்டத்துடன் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நாட்டின் வளத்தில் ஒரு சிறுதுளியையேனும் எவருக்கும் தாரை வார்த்துக் கொடுக்க இடமளிக்கப்போவதில்லை. எமது தாய் நாட்டை நாம் பாதுகாத்தே ஆக வேண்டும். துண்டு துண்டாக உடைந்துபோன நாட்டில் நாம் வாழ முடியாது. நாடு ஒற்றையாட்சியின் கீழேயே இருக்க வேண்டும். அதனை தகர்ப்பதற்கு எந்தச் சக்திக்கும் நாம் இடமளிக்க மாட்டோம்.

ஒன்றாகக் காணப்பட்ட ஒற்றையாட்சியின் கீழிருந்த நாட்டைச் சில சக்திகள் தங்களது சுயநலனுக்காக அரசியல் நோக்கங்களுக்காக கூறுபோட முயற்சித்தனர். அதற்கான முதற்கட்டப் பணிகளையும் செய்து முடித்திருந்தனர். அவர்களின் முயற்சியை இன்று நாம் தவிடுபொடியாக்கி விட்டோம். உயிருள்ளவரை நாம் எமது நாட்டைத் துண்டாட இடமளிக்கப் போவதில்லை. துண்டாடப்படப் போகும் தேசத்தைப் பாதுகாத்துத் தருமாறு எமது மக்கள் எனக்கு ஆணை வழங்கினர். ஆறு வருடங்களில் செய்து முடிக்குமாறு வழங்கிய ஆணையை நான் மூன்று வருடங்களில் செய்து முடித்துள்ளேன்.

அந்தப் பயங்கரவாதியின் மூச்சு முட்டுமளவுக்கு கழுத்து நெரிக்கப்பட்டு இப்போது இறுதி மூச்சு வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், சில சக்திகள் பயங்கரவாதிகளுக்காக குரல் கொடுக்க முற்பட்டு வருகின்றன. இந்த தீய சக்திகளை மக்கள் இனங்காண வேண்டும். அவர்களுக்குத் துணைபோகக்கூடாது. நாட்டை பயங்கரவாதத்திடமிருந்து மீட்டே ஆக வேண்டும். மீண்டுமொரு தடவை பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கப்படக் கூடாது. மீண்டும் நாடு துண்டாடப்பட இடமளிக்க முடியாது. எனவே நீங்கள் உங்கள் மீதுள்ள கடப்பாட்டை நிறைவேற்ற முன்வரவேண்டும். நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்புடன் பணியை உறுதியுடன் முன்கொண்டு செல்ல வேண்டும். உங்கள் குறைபாடுகளை நிவர்த்திக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கின்றேன். அவற்றை விரைவில் தீர்த்துத் தருகின்றேன். முதலில் நாட்டை மீட்டெடுத்துப் பாதுகாப்போம். அதன் பின்னர் எமது உரிமைகளைப் பற்றிப் பேசுவோம். வாழ்வதற்குத் நாடு வேண்டும். உரிமைப் போராட்டத்துக்கும் நாடு தேவை. இந்த உறுதிப்பாட்டுடன் செயற்படுமாறு உங்களனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன் என்று ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

பாடசாலை மாணவர்களிடையே ஊடகத்துறையை மேம்படுத்த நடவடிக்கை – அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா

yappa.jpgபாடசாலை மாணவர்களிடையே ஊடகத்துறை கல்வியை விருத்தி செய்யவும் ஊடகத்துறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஊடகத்துறை அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தின் ஓர் அங்கமாக பாடசாலை மட்டத்தில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருவதாக ஊடகத்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

ஊடகத்துறை அமைச்சு, தகவல் திணைக்களத்துடன் இணைந்து குளியாப்பிட்டிய கல்வி வலய பம்மன்ன அல்கமர் மத்திய கல்லூரியில் நடாத்திய மாணவர்களுக்கான கருத்தரங்கில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் யாப்பா மேற்கண்டவாறு தெரிவித்தார். ‘சிறந்த ஊடக கலாசாரத்திற்கான எமது மாணவர்கள்’ எனும் தலைப்பில் இடம்பெற்ற இக்கருத்தரங்கை ஆரம்பித்து வைத்துள்ளது. மேலும் உரைநிகழ்ச்சிய அமைச்சர், மாணவர்களிடைய ஊடகத்துறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் அவர்களுக்கு இத்துறையில் பயிற்சிகளை வழங்குவது ஊடக எதிர்காலத்தில் சிறந்த ஊடகவியலாளர்களை உருவாக்க முடிவதுடன், சிறந்த ஊடக கலாசாரமொன்றை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முடியும்.

இத்துறையை பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கு கல்வி அமைச்சு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. பல்கலைக் கழகங்களில் ஒரு பாடமாக கற்பிக்கப்படுவதுடன் ஆய்வுத் துறையாகவும் ஊடகத்துறை விளங்குகின்றது. சர்வதேச மட்டத்தில் சிறந்து விளங்கும் ஊடக வியலாளர்கள் பலர் இந்நாட்டில் எதிர்காலத்தில் மேலும் உருவாக்கப்பட வேண்டும்.  இதற்கு தேவையான மொழி விருத்தியும் மாணவர்களிடையே உருவாக்கப்பட வேண்டும் என்பதில் அமைச்சு உறுதியாக உள்ளது.

“பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ சிந்தனை தவறு; பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் கருத்து

flag_uk.jpg“பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ சிந்தனை தவறானதெனத் தெரிவித்துள்ள பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட், இதன் மூலம் இராணுவத்தினர் மிகக் கூடுதலான அழுத்தங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கெதிரான போருக்கான யோசனை வெவ்வேறு நோக்கங்களைக் கொண்ட பயங்கரவாதக் குழுக்கள் அனைத்தையும் மேற்குலகிற்கெதிராக ஒன்று திரட்டியுள்ளதாக “கார்டியன்’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையொன்றில் மிலிபாண்ட் குறிப்பிட்டுள்ளார். மேலும், இவ் அச்சுறுத்தலுக்கு சட்டம் மற்றும் மனித உரிமைகளினூடாக பதிலளித்திருக்கவேண்டுமெனவும் மிலிபாண்ட் தெரிவித்துள்ளார்.

மும்பைத் தாக்குதலுக்குப் பின்னரும் மிலிபாண்ட் இக் கருத்தை வலியுறுத்தியிருந்தார். பயங்கரவாதத்திற்கெதிரான போரை வழிநடத்திய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் 5 தினங்கள் உள்ள நிலையில் மிலிபாண்டின் இவ் எச்சரிக்கை வெளிவந்துள்ளது. உலகளாவிய ரீதியிலான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கெதிரான போராட்டத்தை வரையறுக்கும் முகமாக பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற சொற்பதத்தின் கீழான நடவடிக்கைகள் செப்டெம்பர் 11(9/11) இலிருந்து ஆரம்பிக்கப்பட்ட போதும் இதற்கான யோசனை தவறானதும் தவறாக வழிநடத்தப்பட்டதுமாகும்.

நியூயோர்க், வாஷிங்டன் நகரங்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து 2001 செப்டெம்பர் 20 இல் நடைபெற்ற காங்கிரஸின் கூட்டத்தொடரில் உரையாற்றும் போதே “பயங்கரவாதத்திற்கெதிரான போர்’ என்ற சொற்பதம் முதன் முதலாக ஜனாதிபதி புஷ்ஷினால் பயன்படுத்தப்பட்டது. மிலிபாண்ட் தனது கட்டுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; பயங்கரவாதம் மீதான போர் என்ற சொற்பதம் உலகின் அனைத்து குழுக்களையும் ஒசாமா பின்லேடன் மற்றும் அல்ஹைடா என்ற அமைப்பின் கீழ் உள்ளடக்கியுள்ளது.

ஆனால், வெவ்வேறுபட்ட நோக்கங்களைக் குழுக்கள் தனித்தனியாக அணுகப்பட வேண்டும். மிதவாதிகள் தீவிரவாதிகள், நல்லவைகள் கெட்டவைகள் என்ற வரையறைகளை இப்பதம் கொண்டிருக்கவில்லை. அனைத்துக் குழுக்களும் ஒரே மாதிரி அணுகப்பட்டமை அவற்றில் ஒரு தவறாகும். பயங்கரவாதம் மீதான போர் என்ற சொற்பதம் நன்மைகளையா தீமைகளையா அதிகம் ஏற்படுத்தியுள்ளது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் தீர்மானிப்பார்கள்.

குவான்டனாமோ தடுப்புக் காவல் நிலையத்தை மூடும் பராக் ஒபாமாவின் உறுதிமொழிகள் வரவேற்கத்தக்கவை. ஒரே சொற்பதத்தின் கீழ் எதிரிகள் அனைவரும் நோக்கப்படுவதை வெவ்வேறுபட்ட அமைப்புக்கள் தமக்கு அனுகூலமாக எடுத்துக்கொண்டுள்ளன. பயங்கரவாதம் என்பது மரணத்தை விளைவிக்கும் ஒரு தந்திரோபாயம். இது ஒரு நிறுவனமோ அல்லது கொள்கைகளைக் கொண்டதோ அல்ல எனத் தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாதத்தின் மீதான போர் என்ற சொற் பிரயோகத்தை பயன்படுத்துவதை பிரிட்டிஷ் அரசாங்கம் பல வருடங்களுக்கு முன்னரே உத்தியோகப்பற்ற முறையில் கைவிட்டுள்ளதாகவும் மிலிபாண்ட் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறக்குமதியான மருந்து உற்பத்தி பொருட்கள் பழுதடைந்துள்ளதால் பயன்படுத்த முடியாத நிலை

மருந்துகளை உற்பத்தி செய்யவென கொள்வனவு செய்யப்பட்ட 160 மில்லியன் ரூபா பெறுமதியான மூலப் பொருட்கள் அரச மருத்துகள் உற்பத்தி நிறுவனத்தில் உபயோகிக்க முடியாத நிலையில் பழுதடைந்துள்ளதாக அகில இலங்கை சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. சுமார் 4,000 கிலோ நிறையுள்ள மருந்து உற்பத்திக்கான இந்த மூலப் பொருட்கள் கடந்த வருடம் மே மாதம் இறக்குமதி செய்யப்பட்டபோதும், இவற்றை உரிய காலத்துக்குள் உற்பத்திக்கு பயன்படுத்தாமையால் இம்மூலப் பொருட்கள் காலாவதியாகியுள்ளதாக சுகாதார சேவைகள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்குவதற்காக விநியோகிக்கப்படும் “எரித்ரோமைசீ’ மருந்தை உற்பத்தி செய்வதற்கே இம்மூலப் பொருட்கள் உபயோகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கேள்விப் பத்திரங்களை மதிப்பீடு செய்யும் குழுவில் அரச மருந்துகள் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து அதன் தலைவர் மாத்திரம் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டமை காரணமாக இந்த மூலப் பொருட்கள் இறக்குமதி விடயத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அச்சங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சுமார் 50 வகையான மருந்துகள் பாவனைக்குட்படுத்த முடியாத நிலையில் உள்ளன எனவும் இவை வைத்தியசாலைகளுக்கும் ஒசுசல மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்துக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன எனவும் அரசியல் அழுத்தங்கள் காரணமாகவும் தற்போதுள்ள சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழும் அரச மருந்துகள் உற்பத்தி நிறுவனத்தின் செயற்பாடுகள் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பிரபாகரன் பதுங்கு குழியை கைப்பற்றியது ராணுவம்

ltte-bangar.jpgமுல்லைத் தீவை கைப்பற்ற கடும் போரில் இறங்கியுள்ள இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாகக் கருதப்படும் சொகுசு பதுங்கு குழிகளில் ஒன்றை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளின் வசமிருந்த பெரும்பாலான பகுதிகளை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியுள்ளது. புலிகள் வசமிருக்கும் எஞ்சியிருக்கும் முல்லைத் தீவைக் கைப்பற்ற தற்போது கடும் போரில் அது இறங்கியுள்ளது.

இதற்காக, இதுவரையில்லாத அளவில் பெருமளவு ராணுவத்தைக் குவித்து, இறுதிக் கட்டத் தாக்குதலை இலங்கை ராணுவம் மேற்கொண்டுள்ளது. மேலும், படிப்படியாக முல்லைத் தீவை நோக்கி அது முன்னேறி வருகிறது. இந்நிலையில், முல்லைத் தீவில் உள்ள தர்மாபுரம் வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளை இலங்கை ராணுவம் கைப்பற்றியிருப்பதாக,ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு பதுங்கு குழி குளிர்சாதன வசதி செய்யப்பட்டு, நவீன வசதிகள் கொண்டதாக இருந்ததாகவும், குண்டுகளால் பாதிப்பு ஏற்படாதவகையில் அது அமைக்கப்பட்டு இருந்ததாகவும் ராணுவ தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏழை மக்கள் குடியிருக்கும் பகுதியில் குடிசைப் பகுதியில் இந்த பதுங்கு குழி உள்ளது.இதன் நுழைவாயில் ஒரு குடிசை வீடு போல உள்ளது.

நுழைவாயில் அருகே ஒரு கன்டெய்னர் உள்ளது. அந்த கன்டெய்னரில் குளிர்சாதன வசதியும் உள்ளது. பதுங்கு குழியிலிருந்து வெளியே வரும்போது இந்த கன்டெய்னரில்தான் பிரபாகரன் தங்கியிருக்கக்கூடும்.உள்ளே செல்வதற்கு படிக்கட்டுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.அறைகளில் மின்வசதி செய்யப்பட்டுள்ளது என்று ராணுவம் கூறுகிறது.பதுங்கு குழியில் இருந்த பாதுகாப்பு அரண்கள் வலுவானதாகவும், தேக்குகளாலான கதவாலும், உட்புறம் வண்ணம் தீட்டப்பட்டும் இருந்ததாக, செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த பதுங்கு குழியில் இதற்கு முன் பிரபாகரன் தங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையே முல்லைத் தீவில் நடைபெற்று வரும் கடும் சண்டையில் புலிகள் தரப்பில் ஏராளமான உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகவும், ஆயுதங்களை ராணுவம் கைப்பற்றி உள்ளதாகவும் வேறு சில செய்திகள் தெரிவிக்கின்றன.