21

21

‘கட்டுப்பாடற்ற பகுதிகளில் உணவு தட்டுப்பாடு இல்லை’

mahinda-samarasinga.jpg‘கட்டுப்பாடற்ற பகுதிகளில் உணவு மற்றும் மருந்துத் தட்டுப்பாடு எதுவும் கிடையாது. அப்பகுதிக்குத் தேவையான உணவுப் பொருட்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருவதாக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார். வன்னி மனிதாபிமான நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அமைச்சில் நடைபெற்றது.

அமைச்சர் மேலும் கூறியதாவது:- மோதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள போதும் மோதல் நடைபெறும். பகுதிகளுக்கு உணவு வழங்கும் நடவடிக்கை தடையின்றி முன்னெடுக்கப்படுகிறது. கடந்த 16ஆம் திகதி 58 லொறிகளில் 820 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டன. மேலும் ஒரு தொகுதி உணவுப் பொருட்களை அடுத்த வாரம் அங்கு அனுப்பவுள்ளோம்.

வன்னியில் உணவுத் தட்டுப்பாடு கிடையாது. அங்குள்ள தேவைகளுக்கு ஏற்ப உணவு அனுப்பப்படுகிறது.
 
 

தேர்தல் சட்டவிதிகளை மீறி ஆளுங்கட்சி செயற்படுவதாக ஐ.தே.க. குற்றச்சாட்டு

laksmankiriyella.jpgஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேர்தல் சட்ட விதிகளை மீறிச் செயற்பட்டுவருவதாகக் குற்றச்சாட்டு சுமத்தியிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை தவிர்த்து சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவை ஸ்தாபிக்காதிருப்பதன் நோக்கமே தேர்தலை முறைகேடாக நடத்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கேயாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வியையும் ஐக்கிய தேசியக் கட்சி எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார். அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது;

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஐயாயிரம் பேர் கண்டியில் இடம்பெறும் வைபவமொன்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொள்வர் என கடந்த வாரம் முழுவதும் அரச ஊடகங்கள் பெரியளவில் பிசாரங்களை மேற்கொண்டன. இதனைக் கண்ணுற்ற நான் அவர்கள்யார் எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு கண்டியில் கூட்டம் நடைபெற்ற இடத்துக்கருகிலிருந்த கட்டிடமொன்றின் மேல் மாடியில் நின்றவண்ணம் அவதானித்துக் கொண்டிருந்தேன். கூட்டத்துக்கு ஊர்வலமாக வந்தவர்கள், கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே சுதந்திரக்கட்சியை சேர்ந்தவர்களும் அரச ஊழியர்களுமே என்பதை இந்த இடத்தில் உறுதிபடக் கூறவிரும்புகின்றேன். அரச அலுவலகங்கள், திணைக்களங்களிலிருந்து அன்றைய தினம் அனைத்து ஊழியர்களும் நிர்ப்பந்தப்படுத்தி அழைத்து வரப்பட்டிருந்தனர். மத்திய மாகாணத்துக்கு வெளியே இருந்தும் அரச ஊழியர்கள் கட்டாயப்படுத்தி வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பச்சை நிறத் தொப்பிகளையும், சாப்பாட்டுப் பார்சல்களையும் சுதந்திரக்கட்சியினர் விநியோகிப்பதை எமது ஆதரவாளர்கள் நேரிடையாகவே கண்டுள்ளனர். ஆறுவருடங்களுக்கு முன்னர் கட்சியிலிருந்து இடை நிறுத்தப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் ஊர்வலத்தில் காணப்பட்டார்.

மத்திய மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் ஜனாதிபதியா அல்லது சரத் ஏக்க நாயக்காவா என்பது குறித்து சந்தேகமேற்பட்டுள்ளது. மத்திய மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக ஊடகங்களில் ஜனாதிபதியின் பெயர் மட்டுமே பெரிதாகக் காட்டப்படுகின்றது. சரத்ஏக்க நாயக்காவைப் பற்றி ஒரு வார்த்தை கூட வெளிவருவதில்லை அத்துடன் ஜனாதிபதியே தேர்தல் சட்ட விதிகளை மீறிவருகின்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் பிரசாரத்துக்காக கண்டி மகாவலி ரீச் ஹோட்டலிலிருந்து மாத்திரம் இதுவரையில் 27 ஆயிரம் சாப்பாட்டுப் பார்ச்சல்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிகளின் படி உபசரிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளர்களுக்கு புடவைகளும் சாரங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது. வங்கி ஊழியர்கள் மூவாயிரம் பேருக்கு கண்டி ஜனாதிபதி மாளிகையில் விருந்துபசாரமளிக்கப்பட்டுள்ளது.

மகிந்த சிந்தனை ஜனாதிபதி தேர்தலின் போது மத்திய மாகாணத்தில் தோல்வி கண்டது. இந்த மாகாண சபை தேர்தலிலும் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை ஜனாதிபதி நன்குணர்ந்துள்ளார். முழு நாடும் ஜனாதிபதி தேர்தலில் ஏமாந்த நிலையில் கண்டி, நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களின் மக்கள் ஏமாறவில்லை. கண்டி மாவட்டத்தில் மட்டும் 75 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மகிந்த சிந்தனை தோற்கடிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அதிகாரத்தை இழந்த பொதுத் தேர்தலில் கூட கண்டி மாவட்டத்தில் 13 தொகுதிகளிலும் ஐ.தே.க.வே வெற்றியீட்டியது மத்திய மாகாணத்தின் சுதந்திரமுன்னணி முதலமைச்சர் வேட்பாளர் உள்ளிட்ட குழுவினால் தேர்தல் களத்தில் முகம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதை நன்குணர்ந்ததன் காரணமாகவே அரச வளங்களையும், பணத்தையும் அள்ளி வீசி வெற்றியை தமதாக்கிக் கொள்ள ஜனாதிபதி குறுக்குவழிகளை நாடியுள்ளார்.  நடப்பவற்றை அவதானிக்கும் போது இத்தேர்தலை இரத்துச் செய்யக் கூடிய முறைகேடுகள் கூடிக் கொண்டே வருகின்றது. தேர்தல் ஆணைக்குழு இருந்தால் அரசு இத்தகைய முறைகேடுகலீடுபட முடியாது.

தேர்தல் காலத்தில் அரச நியமனங்களோ, விண்ணப்பங்களோ கோர முடியாது. ஆனால் இவ்வாறான நியமனங்களும், விண்ணப்பங்கள் கோரப்படுவதும் மத்திய, வடமேல் மாகாணங்களில் தாராளமாக இடம்பெற்று வருகின்றன. இத்தகைய தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக நாம் ஒவ்வொன்றாக தேர்தல் ஆணையாளருக்கு பட்டியலிட்டு அனுப்பிவருகின்றோம். அவர் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளோம் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

திருத்தவேலை முடிவடைந்ததும் யாழ். – கொழும்பு இடையே தினமும் 5 பஸ்சேவை

bus-17o1.jpgஏ- 9  நெடுஞ்சாலையின் திருத்தப் பணிகள் முடிவுற்றதும், இலங்கைப் போக்குவரத்துச்சபைக்குச் சொந்தமான ஐந்து பஸ்கள் 5 யாழ். – கொழும்பு பயணிகள் சேவைக்காகத் தினமும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இப் போக்குவரத்துச் சேவைக்காக இப்போதே பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகபெரும ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

யாழ்.  – கொழும்பு போக்குவரத்துச் சேவையைத் தொடங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும்  இப்போதே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ள அமைச்சர்,  ஏ- 9 பாதை புனரமைப்புப் பணிகள் முடியும்வரை தாம் காத்திருக்கின்றனர் எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, வவுனியா – யாழ். பயணிகள் போக்குவரத்துச் சேவை மேலும் பலப்படுத்தப்படும் என்றும் அதற்காக மேலதிக பஸ்கள் ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் சொன்னார். ஏ- 9 நெடுஞ்சாலையில் கண்ணிவெடிகள் அதிகம் புதைக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றை அகற்றி முடிந்ததும் அப்பாதை பயணிகளின் பாவனைக்கு விடப்படும் என்றும் அரசு அண்மையில் தெரிவித்திருந்தது.

ஐ. தே. க.வின் சூழ்ச்சிகள் வெற்றிபெறப் போவதில்லை – பிரதமர்

pm-sl.jpgமக்களின் பலம் அரசின் பக்கம் இருக்கும் வரை ஐ. தே. கட்சியின் சூழ்ச்சிகள் ஒரு போதும் வெற்றிபெறப் போவதில்லை. பல தோல்விகளைச் சந்தித்துள்ள ஐ. தே. கட்சி எதிர்வரும் தேர்தலிலும் தோல்வியைத் தழுவும் என்பது அவர்களுக்கே தெரிந்த விடயம்.

யுத்த நிலைமை பற்றி பொய் வதந்திகளை எழுப்பி வந்த இக்கட்சியினருக்கு இன்று தேர்தல் மேடைகளில் பேசுவதற்கு ஒன்றுமேயில்லை என பிரதமர் ரத்னசிரி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். யுத்தத்தை வியாபாரமாகவும் அரசியலை இலாப மாகவும் கருதி செயற்பட்ட ஐக்கிய தேசிய கட்சி இன்று வலுவிழந்து காணப்படுவதற்கு காரணம் அவர்களது சூழ்ச்சிகளாகும். இக்கட்சியின் பொய்ப்பிரசாரங்களை மக்கள் இனியும் நம்பப் போவதில்லை.

எதிர்வரும் தேர்தலில் இரண்டு மாகாண சபைகளிலும் பாரிய வெற்றியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே ஈட்டும் என கல்கமுவ வன்னிநாயக்க விளையாட்டரங்கில் இடம்பெற்ற  தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது தெரிவித்தார்.

அமைச்சர் பந்துல பஸ்நாயக்க தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் மேலும் பேசிய பிரதமர், யுத்த களத்தில் உள்ள படைவீரர்களை சக்தி மிக்க தாக்கி அவர்களுக்கு போதிய பலத்தை வழங்கி யுத்தம் புரிவதால் எல். ரீ. ரீ. ஈ.யினருக்கு எதிரான யுத்தத்தில் வெற்றிபெற முடிந்துள்ளது. ஐ. தே. கட்சியினர் போன்று நாமும் யுத்தத்தை வியாபாரமாக்கி அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்தவில்லை.

எனினும் இன்று யுத்தத்தில் வெற்றிபெற்று வரும் நிலையை சகிக்காத சிலர் அரசிற்கு எதிரான பெரும் சூழ்ச்சியொன்றை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. யுத்தத்தை நிறுத்தி அரசின் அபிவிருத்தி நடவடிக்கைகளை சிதறடிக்க எடுக்கப்படும் முயற்சிகளை முறியடிப்பதற்கு அரசு திடமாக நடவடிக்கை எடுக்கும். எதிர்வரும் தேர்தல்களில் அரசு நிச்சயம் வெற்றிபெறும். மக்களின் ஆணை அரசின் பக்கமேயுள்ளது.

இவ்வாண்டு முற்பகுதியில் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் தோன்றி நாடு அபிவிருத்தியின் பக்கம் தன்னை முழுமையாக ஈடுபடுத்தும் முல்லைத்தீவில் இன்னும் எஞ்சியுள்ள பகுதிகள் அடுத்த ஒருசில வாரங்களில் மீட்கப்படும்.

வடமேல் மாகாணத்தில் மேலும் பல அபிவிருத்தித் திட்டங்கள் இவ்வாண்டுக்குள் தொடங்கப்படவுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

விஷ்வமடு ஆஸ்பத்திரியில் 285 பிள்ளைகள் பிறப்பு

hospital.jpgகடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதியிலுள்ள விஷ்வமடு ஆஸ்பத்திரியில் 285 பிள்ளைகள் பிறந்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் கஹந்த லியனகே தெரிவித்தார்.

இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு உரிய வசதிகளை அரசு வழங்கி வருவதோடு மருத்துவர்கள், தாதிமார்கள் போன்றோரையும் சேவையில் ஈடுபடுத்தியுள்ளோம்.

 அங்கு சிறந்த சுகாதார சேவைகள் நடைபெறுவதாலேயே கடந்த மாதத்தில் அங்கு 285 பிரசவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் போஷாக்கு வசதிகள் அளிப்பதற்கான திரிபோஷா அடங்கலான போஷாக்கு உணவுகள் அனுப்பப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
 
 

6 கோடி தெற்காசியருக்கு இதய நோய் பரம்பரை வியாதி

surgery.jpgமரபணு உருப்பெருக்கம் என்ற ஒரேயொரு காரணத்தால் 6 கோடி தெற்காசியர்கள் (உலக சனத்தொகையில் 1 சதவீதம்) இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக  ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட விஞ்ஞான ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கிறது. பரம்பரைப் பாதிப்பு இந்திய உபகண்டத்தில் 150 கோடி பேருக்கு ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள், மருத்துவர்களை உள்ளடக்கிய குழுவொன்று “நேற்சர் ஜெனற்றிக்ஸ் அக்கடமிக் ஜேர்னல்’ சஞ்சிகையில் எழுதியுள்ளனர்.

தெற்காசியர்களில் 4 சதவீதமானோரை பரம்பரை ரீதியான இதயநோய் தாக்குவதாக பிரிட்டன், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். “இப்போது இந்தப் பாதிப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. கருவுற்றிருக்கும் போது ஆரம்ப கட்டத்திலேயே இப்போது இதனைக் கண்டுபிடிக்க முடியும்’ என்று அவர்கள் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மரபணு ரீதியான சோதனையின் மூலம் இந்தப் பாதிப்புக்களை இளம் பராயத்திலேயே தற்போது இனங் கண்டுகொள்ள முடியும். காலப்போக்கில் இதற்கான மருந்தையும் கண்டுபிடிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடாந்தம் உலகில் 1 கோடி 75 இலட்சம் பேர் இதயநோயால் மரணிக்கின்றனர். இதேவேளை, உலகில் இதய நோயால் பீடிக்கப்படுவோரில் 60 சதவீதமானோர் இந்தியர்கள் என்று அண்மையில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வு குறிப்பிட்டுள்ளது. 26 நாடுகளைச் சேர்ந்த 2,085 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இந்தோனேசியா, மலேசியாவிலுள்ள தெற்காசிய வம்சாவளியினருக்கே இந்த பரம்பரை அலகால் இதயநோயின் தாக்கம் உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிந்ததும் படையினர் அபிவிருத்தி நடவடிக்கையில் – அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

maithiri-pala.jpg
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டுள்ள படையினர் அனைவரையும் யுத்தம் நிறைவடைந்ததும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகுமென அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

யுத்தம் நிறைவடைந்ததும் தெற்கின் தேவேந்திர முனையிலிருந்து வடக்கின் பருத்தித்துறை வரையிலான முழுநாடும் அபிவிருத்திக்குள்ளாக்கப்படும் அதற்காக யுத்தத்தில் ஈடுபட்ட சகல படையினரும் பயன்படுத்தப்படுவார்கள். எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினர் இது விடயத்தில் தேவையற்ற விமர்சனங்களை மேற்கொண்டு வருகின்றனர். அரசாங்கம் யுத்தம் நிறைவடைந்ததன் பின் அரசியலமைப்புக்கிணங்க முறையான எதிர்கால நடவடிக்கையை மேற்கொள்ளுமெனவும் அமைச்சர் தெரிவித்தார். கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின் அரசாங்கம் வெற்றிகரமான செயற்திட்டங்கள் பலவற்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

புத்தளப் பகுதியில் ஆயுதபாணிகளின் தாக்குதலில் 3 கிராமவாசிகள் உயிரிழப்பு – மூவர் காயம்

ak47.jpgமொன றாகல, புத்தள மாளிகாவில பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆயுதபாணிகளின் தாக்குதலில் மூன்று கிராமவாசிகள் கொல்லப்பட்டதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். காணாமல் போன மூவர் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.  மாளிகாவில சத்தாதிஸ்ஸ பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஞாயிறு மாலை அந்தப் பகுதியில் தங்கள் கால்நடைகளைத் தேடிச் சென்ற 12 கிராமவாசிகளே ஆயுதபாணிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.  இவர்களைச் சுற்றிவளைத்த ஆயுதபாணிகள் இவர்களைக் கடுமையாகத் தாக்கியதாகவும் அதில் இருவர் பலத்த வெட்டுக்காயங்களுக்கு இலக்காகி அந்த இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.  இவர்களுடன் வாள்வெட்டு மற்றும் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில், பின்னர் நால்வர் கண்டுபிடிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் புத்தள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மொனராகல ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு அவசர சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட பின்னர் இதிலொருவர் அங்கு மரணமானார்.

ஆயுதபாணிகளின் தாக்குதலிருந்து தப்பிச்சென்ற மூவர் வழங்கிய தகவலையடுத்து பொலிஸாரும் ஊர்காவல் படையினரும் அப் பகுதிக்கு வந்து தேடுதல் நடத்திய போதே படுகாயமடைந்த நால்வரும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கால்நடைகளைத் தேடிச்சென்ற போது தாக்குதல்களுக் கிலக்கான இவர்களுடன் சென்ற மூவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நால்வரையும் ஆயுதபாணிகள் தங்களுடன் கொண்டு சென்றிருக்கலாமெனவும் கூறப்பட்டது. எனினும் இந்த மூவரும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தையடுத்து படையினரும் பொலிஸாரும் இணைந்து மாளிகாவில பகுதியில் பாரியதேடுதலை நடத்தி வருவதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடரலாம் அந்த நாட்டின் பலவீனமே மும்பைத் தாக்குதல் – அமெரிக்க நிபுணர்கள்

world_news.jpgஇந்தி யாவில் மும்பைத் தாக்குதல் போன்ற மேலும் பல தாக்குதல்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பைத் தாக்குதல் தொடர்பாக, இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் பிளெக்வில் உள்ளிட்ட நிபுணர்கள் நடத்திய ஆய்வொன்றைத் தொடர்ந்தே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிபுணர் குழுவால் வெளிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இந்தியாவின் வர்த்தக மற்றும் உல்லாச மையமாக மும்பை திகழ்கிறது. அங்குள்ள முக்கிய கட்டிடங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மும்பை தாக்குதல் அம்சங்களை வைத்து பார்க்கும்போது இரக்கமற்ற கொலைகள் மட்டுமன்றி அதற்கான திட்டமிடலும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.

அதிகமான மக்களை கொல்வது மட்டுமன்றி சில குறிப்பிட்ட நாட்டினரை குறிவைத்து தாக்குவதும் தீவிரவாதிகளின் நோக்கமாக இருந்துள்ளது. இதன்மூலம் அவர்களின் வியூகம் புலப்படுகிறது.தீவிரவாதத்தை தடுப்பதில் இந்தியாவின் பலவீனத்தையே இத்தாக்குதல் வெளிப்படுத்துகிறது.

மும்பை தாக்குதலை முன்மாதிரியாக கொண்டு பாகிஸ்தானில் உள்ள வேறு சில தீவிரவாத அமைப்புகள் அதேபாணியில் இந்தியா மீது நிறைய தாக்குதல்களை நடத்தும் அபாயம் உள்ளது. நிறைய உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வகையில் இத்தாக்குதல்கள் நடக்கும். இந்த அபாயத்தை இந்தியாவோ அமெரிக்கவோ குறைக்க முடியாது.

இந்தியாவும்,பாகிஸ்தானும் அணுஆயுத நாடுகள். எனவே ஏதாவது இராணுவ நடவடிக்கை எடுத்தால் அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். அதே சமயத்தில் இந்தியா நடவடிக்கை எடுக்கத்தவறினால் அது இந்தியாவின் உறுதி இன்மையை காட்டுவதாக அமைந்து விடுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1200 வீடுகள் முழுமையாக பூர்த்தி: மார்ச்சில் ஜனாதிபதியால் கையளிப்பு

sarath-amunugama.jpgஅரசாங்க ஊழியர்களுக்கு ஐயாயிரம் வீடுகள் அமைக்கும் திட்டமொன்றை பொதுநிர்வாக அமைச்சு ஆரம்பித்துள்ளது. இதில் சுமார் 1200 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு முதலில் ஹபராதுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 576 வீடுகளும் மார்ச் மாதம் ஜனாதிபதியினால் அரச ஊழியர்களுக்கு கையளிக்கப் படவுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம கூறினார்.

அரசாங்க ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்றது. அமைச்சர் இங்கு மேலும் கூறியதாவது,

மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டவாறு அரசாங்க ஊழியர்களுக்கு வீடுகள் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை முதலீட்டுச் சபையுடன் இணைந்து இந்தத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஹபராதுவ பகுதியில் 576 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மூன்று தரத்திலான வீடுகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகள் ஜனாதிபதியினால் அரச ஊழியர்களுக்கு கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர காலி வெகுனுகொடையில் 640 வீடுகள் அமைக்கப்பட்டு வருவதோடு பூர்த்தியடையும் நிலையில் உள்ளன.

கண்டி, குண்டசாலை பகுதியில் சுமார் 900 வீடுகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான காணி சுவீகரிக்கப்பட்டுள்ளதோடு சில தினங்களில் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க உள்ளோம்.

ராகம பகுதியில் சுமார் 800 முதல் 900 வரையான வீடுகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டமொன்றை ஆரம்பிக்க உள்ளோம். இதற்கான காணியை சுவீகரிக்க கடந்த வாரம் அமைச்சரவை அனுமதி வழங்கியது. அரசாங்கமும் மலேசிய ‘வின்கொண்ட்’ கம்பனியும் இணைந்து இந்த வீடமைப்புத் திட்டத்தை நிர்மாணிக்க உள்ளன.

5000 வீடுகளையும் நிர்மாணிக்க 50 மில்லியன் டொலர் செலவிடப்படவுள்ளது.

வரலாற்றில் ஒரு போதும் அரசாங்க ஊழியர்களுக்கென இந்தளவு அதிகமான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டது கிடையாது. வீடமைப்பு அமைச்சிற்குப் போட்டியாக அதிக மான வீடுகள் நிர்மாணிக்க முடிந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

இதேவேளை, கொழும்பு கெப்பிட்டிபொல மாவத்தையில் 16 மாடிகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டமொன்றை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. அத்தோடு 80 மாடிகளைக் கொண்ட வீடமைப்பு த்திட்டமொன்று பத்தரமுல்லையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா கம்பனியொன்று நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அரசாங்க ஊழியர்களுக்கான வீடுகளை வங்கிக் கடன் அடிப்படையிலா வேறு வகையிலா வழங்குவது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். ஹபராதுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் எந்த நிமிடமும் கையளிக்கக்கூடிய நிலையில் உள்ளன.