25

25

முல்லைத்தீவு நகரமும், படையினர் வசம்.

2501-mullaiteevu.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் கடைசித் தளமான முல்லைத்தீவு நகருக்குள் இன்று (ஜன:25) பிற்பகல் பிரிகேடிய நந்தன உடவத்த தலைமையிலான 59வது டிவிசன் படைப்பிரிவினர் உட்புகுந்துள்ளனர்  என பாதுகாப்பு அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

இன்று காலை  நந்திக்கடல் ஏரி ஊடாக திடீர் தாக்குதல் நடத்திய 593வது பிரிகேட் படைப்பிரிவின் 7வது கெமுனு படைப்பிரிவினரே முல்லைத்தீவு நகருக்குள் உட்புகுந்துள்ளதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  முல்லைத்தீவு நகரம்  நந்திக்கடல் ஏரிக்கும் இந்து சமுத்திரத்துக்கும் இடையில் அமைந்துள்ள சிறிய நிலத்தொடராகும். 1996 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இப்பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாமை கைபற்றி இதை அவர்களின் பிரதான தளமாக பாவித்து வந்தனர்.

1996ம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் இலங்கை இராணுவத்தினர் முல்லைத்தீவைக் கைப்பற்றியுள்ளது இராணுவ நடவடிக்கைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க வெற்றியாக கருதப்படுகிறது. இப்பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்தும் படையினரின் நடவடிக்கைகள் நிறைவுற்றதும் இப்பகுதியை விடுவித்துள்ளதாக அறிவிக்கப்படும் என களவட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.  இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல் எதுவும் வெளியாகவில்லை

இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின்  உத்தியோகபூர்வ அறிவிப்பு 

sarath-fonseka.jpgஇராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின்  உத்தியோகபூர்வ அறிவிப்பின் படி (sri lanka time -6.40 PM) விடுதலைப்புலிகளின் முக்கிய தளமாகக் கருதப்பட்ட முல்லைத்தீவு நகர் சிறிலங்கா படையினரால் இன்று கைப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.

முல்லைத்தீவை புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் இராணுவத்தின் 59வது படைப் பிரிவினர் நேற்று முல்லைத்தீவு நகரை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததாகவும் அவர் தெரிவித்தார். 13 வருடங்களுக்குப் பின்னர் முல்லைத்தீவு நகரை இராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அவர் கூறினார். இந்தச் செய்தியை தொலைக்காட்சிகள் ஊடாக நேற்று மாலை அவர் தெரிவித்தார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா மேலும் உரையாற்றுகையில்:- மிக நீண்ட காலமாக சகலரும் எதிர்பார்த்திருந்த பாரிய வெற்றி தொடர்பாக மிகவும் சந்தோசத்துடன் தெரிவிக்க விரும்புகிறேன். இலங்கை இராணுவம், தீவிரவாதிகளின் பலமான கோட்டையாக விளங்கிய முல்லைத்தீவு நகரை  கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் நேற்று (25) கைப்பற்றியுள்ளனர்.

இந்த வெற்றி தொடர்பாக இராணுவத் தளபதி என்ற வகையில் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றேன். பூநகரி, ஆனையிறவு, பரந்தன், கிளிநொச்சி, தர்மபுரம், இராமநாதபுரம் என்ற முக்கிய பிரதேசங்களைக் கைப்பற்றிய படையினர் முல்லைத்தீவு நகரை தற்போது கைப்பற்றியுள்ளனர். நாட்டின் கிழக்கு கடற்கரை ஓரத்தில் முல்லைத்தீவு அமைந்துள்ளது.

முல்லைத்தீவிலுள்ள காட்டுப்பகுதிகள் பலவற்றைக் கைப்பற்றிய படையினர் அங்கிருந்து முன்னேறிச் சென்று புலிகளால் அமைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான பதுங்கு குழிகளையும், மண் அரண்களையும் கைப்பற்றி முல்லைத்தீவு நகருக்குள் பிரவேசித்தனர். முல்லைத்தீவை புலிகளிடமிருந்து விடுவிக்கும் படை நடவடிக்கைகளை 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் இராணுவத்தின் 59வது படைப்பிரிவினர் ஆரம்பித்தனர். ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில் 40 கிலோ மீற்றர் பரப்பைக் கைப்பற்றிய படையினர் முல்லைத்தீவு நகரை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இந்த வெற்றி தொடர்பாக நாங்கள் பெருமை அடைகின்றோம்.

புலிகள் தற்பொழுது 25 கிலோ மீற்றர் நீளமும் 15 கிலோ மீற்றர் அகலமும் பரப்பைக் கொண்ட மிகச் சிறிய பிரதேசத்திற்குள் முடக்கிவிடப்பட்டுள்ளனர். இந்த பிரதேசத்தையும் வென்றெடுத்து புலிகள் பலாத்காரமாக பிடித்து வைத்துள்ள ஒன்றரை இலட்சம் மக்களை காப்பாற்றுவேன் என்று உத்தரவாதம் வழங்குகின்றேன்.

இந்த வெற்றிக்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவினதும் சரியானதும், சிறப்பானதும் வழிகாட்டல்களும், ஆலோசனைகளுமே பிரதான காரணமாகும். அதேபோன்று இந்த நடவடிக்கைகளுக்காக தன்னை அர்ப்பணித்த வீரர்களையும் எமக்கு இந்த சந்தர்ப்பத்தில் மறக்க முடியாது.

முல்லைத்தீவை விடுவிப்பதற்கான ஒருவருட கால படை நடவடிக்கைகளில் தாய் நாட்டுக்காக தனது உயிர் நீத்தவர்களை இந்த சந்தர்ப்பத்தில் நான் நன்றியுடனும், கெளரவத்துடனும் ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன். அதேசமயம் எமது இந்த இராணுவ நடவடிக்கைகளுக்கான இறுதிக் கட்டத்தில் புலிகளின் பதுங்கு குழிகளை நிர்மூலமாக்கி படை முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய விமானப் படையினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோன்று ஆரம்பத்திலிருந்து எமக்கு மக்கள் மூலம் கிடைத்த ஒத்துழைப்பும் மக்களது பிரார்த்தனைகளும் இந்த வெற்றிகளுக்கு மற்றுமொரு காரணமாகும். அத்துடன் 2 வருட காலத்திற்குள் 80 ஆயிரம் வரையான இளைஞர்கள் படையில் இணைந்து தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். நாட்டிலுள்ள சகல இளைஞர்களும் இன்னும் முன்வர வேண்டும் என்றும் இறுதி நடவடிக்கைகளில் இராணுவத்தில் இணையுமாறும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றும் கூறினார்.

முல்லைத்தீவைக் கைப்பற்றியமை தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார குறிப்பிட்டதாவது:-

இந்தப் பிரதேசத்தில் படை நடவடிக்கைகளில் ஈடு பட்டுள்ள இராணுவத்தின் 59வது படைப்பிரிவின் கட்ட ளைத் தளபதி பிரிகேடியர் நந்தன உடவத்த தலைமை யிலான படையினர் தற்பொழுது முல்லைத்தீவு நகரு க்குள் பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கிளிநொச்சி பிரதேசத்தை பாதுகாப்புப் படையினர் கடந்த 2ம் திகதி தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். கிளிநொச்சியை கைப்பற்றி 23 நாட் களில் முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றியமை படையினருக்குக் கிடைத்த மற்றுமொரு பாரிய வெற்றியாகும்.

593 படையணியின் கட்டளைத் தளபதி கேர்ணல் ஜயந்த குணரத்ன தலைமையிலான படையினர் நந்திகண்டல் ஏரியை ஊடறுத்து திடீர் தாக்குதல்களை நடத்தயுள்ளனர். புலிகளின் கடுமையான பதில் தாக்குதல்களை வெற்றிகர மாக முறியடித்துக் கொண்டு 7வது கெமுனு படைய ணியின் பொறுப்பதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் சமிந்த லமாஹேவா தலைமையிலான படையினர் நகரை நேற்று கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை விசுவமடு நகரை நேற்று முன்தினம் கைப்பற்றிய 58வது படைப்பிரிவினர் அங்கிருந்து தொடர்ந்தும் முன்னேறுவதற்கான நடவடிக்கை களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டி னார். முல்லைத்தீவை கைப்பற்றும் நோக்கில் முன்னேறி வரும் படையினரின் நடவடிக்கைகளுக்கு விமானப் படை விமானங்கள் நேற்றும் கடுமையான தாக்குதல் நடத்தி வருவதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

வவுனியா அகதிகள் முகாமை பார்வையிட்டார் யசூசி அகாசி

yasusi.jpg
வவுனியாவிற்கு நேற்று சனிக்கிழமை பிற்பகல் விஜயம் செய்த இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளார்.  நெலுக்குளத்திலுள்ள வன்னி அகதிகள் தங்கியுள்ள முகாமுக்குச் சென்ற அகாசி அங்கு தங்கியுள்ளவர்களைப் பார்வையிட்ட போதும் அகாசியுடன் உரையாட அந்த மக்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. அகாசியின் வவுனியா விஜயம் குறித்து மேலும் தெரியவருவதாவது;

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ஹெலிகொப்டர் மூலம் வவுனியாவிலுள்ள இராணுவத் தலைமையகத்திற்கு வந்த அகாசியை படை உயரதிகாரிகள் வரவேற்றனர். அதன் பின் அவர் குருமண்காட்டிலுள்ள ஐ.நா.அலுவலகத்திற்குச் சென்று ஐ.நா.அதிகாரிகளுடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளார். இதுன்போது வன்னி நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடினார். இதன்பின் அவர் நெலுக்குளதிற்குச் சென்று வன்னியிலிருந்து வந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களிற்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டார். அங்கு அவரை மாவட்ட அரசாங்க அதிபரும் சிரேஷ்ட அதிகாரிகளும் சந்தித்துப் பேசினார். இதன் போது அவர் வன்னியிலிருந்து வந்த அகதிகளைப் பார்வையிட்டார்.

புலிகளுக்கு எதிரான போர் 99 வீதம் முடிவுற்று விட்டது. படை நடவடிக்கை அச்சொட்டாக முன்னேற்றம் – கெஹலிய

kkhaliya.jpgதமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான போரில் 99 சதவீதம் முடிவுற்றுள்ளது. இன்னும் ஒரு வீதம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. இவ்வாறு  பாதுகாப்புத்துறைப் பேச்சாளரான அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டம்  குண்டசாலையில் புதிய வர்த்தக நிலையம்  ஒன்றின் கட்டடத்தைத் திறந்து வைத்துபேசுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்ககையில், ஒரு சில சதுர மீற்றர் நிலப்பரப்பே இப்போது விடுதலைப் புலிகள் வசம் உள்ளது. அதையும் இன்னும் சில நாள்களில் எமது பாதுகாப்புப் படையினர் கைப்பற்றிவிடுவர் திட்டமிட்டவாறு வடக்கில்  இப்போது  அச்சொட்டாக படைநடவடிக்கை முன்னேனற்றம் அடைந்து வருகிறது என்றார்.

வன்னி மக்களின் துயர்துடைக்க அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட முன்வரவேண்டும்

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைரத்தினம் பெரும் அவலத்திற்குள் சிக்குண்டுள்ள வன்னி மக்களின் துயர்துடைக்க அனைத்து சக்திகளும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வன்னி நிலப்பரப்பில் பயங்கரவாதத்திற்கெதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் யுத்தம் காரணமாக பயங்கரவாதம் ஒழிக்கப்படுகின்றது. பயங்கரவாதம் ஒழிக்கப்படுவதில் இலங்கைப் பிரஜை ஒருவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பயங்கரவாதம் அடியோடு உடைத்தெறியப்பட வேண்டும்.

இதேவேளை, பயங்கரவாத அழிப்பு என்னும் பெயரில் கொழும்பில் ஊடகத்துறை திட்டமிட்டு அளிக்கப்படுவதும், மட்டக்களப்பில் கடத்திக் கொலை செய்யப்படுவதும், குண்டுவைத்து அப்பாவி மாணவர்கள் கொலை செய்யப்படுவதும், வன்னி நிலப்பரப்பில் ஷெல் தாக்குதல் காரணமாக மக்கள் இடம்பெயர்வு, தங்குமிடமின்றிப் பரிதவித்தல் , பட்டினிச்சாவு, குழந்தை தொடக்கம் முதியோர் வரை ஷெல் தாக்குதல்களுக்கு இலக்காகி மரணிப்பதும் அங்கவீனமாக்கப்படுவதும் , கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான பொருளாதாரம் அளிக்கப்படுவதும் , கல்வி முற்றாகப்பாதிப்படைந்து மாணவர்கள் பரீட்சை எழுதமுடியாத நிலை தோற்றுவிக்கப்படுவதும், ஒட்டுமொத்தமாக தமிழின அழிப்பு இடம்பெறுவது உறுதிப்படுத்தப்படுகின்றது.

இப்படிப்பட்ட செயலைச் செய்பவர்களை சர்வதேச நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் , பயங்கரவாதச் செயலெனக் கூறுவார்கள். இச்சம்பவத்தைப் பொறுத்தவரையில் எமது அரசும் பயங்கரவாதச் செயலில் இறங்கியுள்ளதா? தமிழினச் சுத்திகரிப்பில் இறங்கியுள்ளதா? எனும் சந்தேகம் சகல சக்திகளுக்கும் தோன்றி உள்ளது.

வன்னியில் உலருணவு கொண்டு சென்ற ஐ.நா.வின் பிரதிநிதிகளையும் வாகனங்களையும் புலிகள் தடுத்தி நிறுத்தி வைத்திருப்பது மனிதாபிமானமற்ற செயலாகும். இத்தோடு இது ஒரு பயங்கரவாதச் செயலாகவே கருதப்படுகிறது.

புலிகள் தங்களது பயங்கரவாதச் செயலைக் கைவிட்டு ஜனநாயக சூழலுக்கு வருவதற்கு இன்னும் காலம் போகவில்லை. உயிரழிவுகளைத் தடுக்க வேண்டுமாயின் இலங்கை அரசினூடாகவோ அல்லது ஏனைய சக்திகளினூடாகவோ, ஜனநாயக வழிக்கு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

அரசைப் பொறுத்தவரையில் இதுவரை நடந்த யுத்தத்தில் அப்பாவித் தமிழ் மக்களுக்கு அழிவுகள் ஏற்பட்டுள்ளன என்பதை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கை இறைமை உள்ள அரசு என்ற அடிப்படையில் அப்பாவித் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. இதைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அரசியல் தீர்வு அவசியமாகும்.இத் தீர்வை முன்வைப்பது அரசின் தலையாய கடமையாகும். இது சர்வதேச அவதானிப்புடன் இடம்பெற வேண்டும். குறிப்பாக இந்தியாவின் பங்களிப்புடன் இடம்பெற வேண்டும்.

வன்னியிலுள்ள மக்களை உடனடியாகக் காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பாகும். வேலியே பயிரை மேயக் கூடாது. இல்லாத பட்சத்தில் சர்வதேசம் தலையிட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும். எனவே, பயங்கரவாதத்தை அழிப்பதற்கும் மக்களை பாதுகாப்பதற்கும், அரசியல் தீர்வை முன்வைப்பதற்கும் சக சக்திகளும் ஒன்றுபட்டு உழைக்க முன்வர வேண்டும்.

மாலைதீவுக்கு ரணில் விஜயம்

images-01.jpgஎதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று சனிக்கிழமை அதிகாலை மாலைதீவுக்குப் பயணமானார்.

இது அவரது தனிப்பட்ட விஜயமென்று தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் அவர் நாளை திங்கட்கிழமை இரவு நாடு திரும்புவார் எனவும் தெரிவித்துள்ளது.
 

முல்லைத்தீவின் கிழக்கு பகுதியையும் பாதுகாப்பு வலயமாக அறிவிக்க வேண்டும் -அரச அதிபர் ஐ.சி.ஆர்.சி.யிடம் கோரிக்கை

mulli-ga.gifமுல் லைத்தீவு மேற்குப் பகுதி பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கிழக்குப் பகுதியில் 50 வீதமான இடம்பெயர்ந்தவர்கள் உள்ளதனால் அப்பகுதியையும் பாதுகாப்பு வலயமாக்குவதன் மூலம் அங்குள்ளவர்களை பாதுகாக்க முடியுமென முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் உப தலைவியான வலேரியா பெட்டியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு அரச அதிபர் வெள்ளிக்கிழமை மாலை வவுனியா செஞ்சிலுவைச் சங்கப் பிராந்திய அலுவலகத்தில் வைத்து அவரை சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மேற்குப் பகுதி பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவின் கிழக்குப் பகுதியான அம்பவன்பொக்கன், முள்ளிவாய்க்கால், மாத்தளன் மற்றும் வளையார்மடம் ஆகிய பகுதிகளில் இடம்பெயர்ந்தவர்களில் 50 வீதமானவர்கள் தங்கியுள்ளனர். இப்பகுதியையும் பாதுகாப்பு வலயமாக்குவதன் மூலம் இங்கு இடம்பெயர்ந்து தங்கியிருப்போரை பாதுகாக்க முடியும்.

அத்துடன் இடம்பெயர்ந்தவர்கள் நெருக்கமாகவுள்ளதாலும் வெள்ளப்பாதிப்பு காரணமாகவும் முக்கியமாக குடிநீர் பிரச்சினை குறித்து எடுத்துரைத்ததுடன் மலசலகூட வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை தற்போதைய சூழ்நிலையில் புதுக்குடியிருப்பு உணவு களஞ்சியசாலையை வேறிடத்துக்கு மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ள நிலையில் இதனை பாதுகாப்பு வலயப்பகுதியில் நிறுவுதல் அவசியம் குறித்தும் எடுத்துரைத்துள்ளார். மேலும் உணவுத் தொடரணி செல்லும் ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு பாதையில் இருசாராரும் மோதலில் ஈடுபடுவதால் இருதரப்பின் உத்தரவாதத்துடன் உணவு தொடரணி எடுத்துச் செல்வது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்
 

ஜப்பானின் விஷேட தூதுவர் அகாசியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு

yasusi.jpgஇலங் கைக்கான ஜப்பானிய விஷேட தூதுவர் யசூசி அகாசியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சனிக்கிழமை இரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ரி.கனகசபை, எஸ். பத்மநாதன், ரி.பத்மினி, எஸ். அரியநேத்திரன் ஆகியோரே சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

வன்னியில் அரச படைகளால் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அவல நிலைமைகள் தொடர்பாகவும் அங்குள்ள மக்கள் எதிர் நோக்கும் பாரிய பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர். இதனை விட அரசியல் தீர்வொன்றின் மூலம் உரிய தீர்வொன்றைக் காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

காஸாவில் பொஸ்பரஸ் குண்டு பற்றி விசாரணைக்கு உத்தரவு

gaa-sa.jpgயுத்த நிறுத்தத்தைத் தொடர்ந்து  தற்போது காஸாவில் இஸ்ரேல் இராணுவம் இல்லை. காஸா மக்கள் தங்களது சொந்தங்கள் சொத்துக்களைத் தேடி அலைகின்ற வேளையில் இடி பாடுகளுக்கிடையில் சிக்குண்ட சடலங்களையும் மீட்கும் பணிகள் இடம்பெற்றன.  நாட்கள் கடந்த நிலையில் மீட்டெடுக்கப்படும் சடலங்கள் உருக்குலைந்து அழுகியுள்ளன. இதனால் பிரேதங்களை அடையாளம் காண முடியாதுள்ளது. இடிந்த வீடுகள், தொழிற்சாலைகளைக் கண்ட மக்கள் தலையில் அடித்து கதறி அழுதனர். இதுவரையான கணக்கெடுப்பின்படி காஸாவில் 1284 பேர் பலியானதாகவும் இவற்றில் 894 பேர் அப்பாவிப் பொதுமக்கள் என்றும் 280 பேர் குழந்தைகள் எனவும் மீட்புப் பணியாளர்கள் கூறினர்.

இஸ்ரேல் தாக்குதலின் போது பொஸ்பரஸ் கலந்த இரசாயனக் குண்டுகளைப் பாவித்ததாகவும் இதனால் ஏராளமான காஸா மக்கள் எரி காயங்களால் அவதிப்படுவது பற்றியும் தகவல்கள் கசிந்துள்ளதால் சர்வதேசத்தின் கண்டனங்களுக்கு இஸ்ரேலியத் தலைவர்கள் உள்ளாகியுள்ளனர். மருத்துவர்கள், மீட்புப் பணியாளர்கள் பொஸ்பரஸ் குண்டுகள் பாவிக்கப்பட்டுள்ளதை நிரூபித்துள்ளனர். இதனால் குழப்பமுற்ற இஸ்ரேல் அரசு இது தொடர்பான விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அப்பாவிகள் தாக்கப்பட்டதை ஏற்க முடியாது. சுமார் 500 ஹமாஸ் போராளிகளைக் கொன்றதுடன் ஏராளமான சுரங்கப் பாதைகள் அழிக்கப்பட்டதாகக் கூறும் இஸ்ரேல் இடிபாடுகளைத் துப்புரவு செய்யும் ஒளி நாடாக்களை தொலைக்காட்சியில் காட்டியது.

பெரும்பாலானோர் சுரங்க இடிபாடுகளைத் துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபடுவதே தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. இஸ்ரேலின் இரசாயன ஆயுதங்கள் தொடர்பான விசாரணைகளை பக்கச் சார்பின்றி முன்னெடுக்க ஐ. நா.வும் ஒத்துழைப்பு வழங்குவுள்ளதாக அறவித்துள்ளது.  சட்ட ரீதியான ஆயுதங்களையே தாம் பயன் படுத்தியதாக இஸ்ரேல் கூறுவதை அனேக நாடுகள் ஏற்க மறுக்கின்றன. இவ்வாறான நிலையில் வெளிநாட்டமைச்சர் சிபிலிவின் சர்வதேச நாடுகளிடம் ஹமாஸின் ஆயுதக் கடத்தல்களைக் கட்டுப்படுத்தத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை தனக்கு வழங்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.

சரியானதை பகிரங்கமாக கூறும் வல்லமை ரஞ்சன் விஜேரட்ணவுக்குப் பின் கோதாபயவுக்கே -பாராட்டுகிறார் ஊடக அமைச்சர்

laksman-yaappa.jpgதனக்குச் சரியெனப்பட்டதை எந்தவித தயக்கமுமின்றி பகிரங்கமாகக் கூறும் வல்லமை முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜேரட்ணவுக்கு அடுத்தபடியாக இன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கு மட்டுமே உண்டு எனத் தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன படையினர் முன்னெடுக்கும் யுத்த நடவடிக்கைக்கு மாசுகற்பிக்க முயற்சி செய்வோர் விடயத்தில் அவர் கடுமையான போக்கைக் கடைப்பிடிப்பவராகவே காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

தனது அமைச்சில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது பாதுகாப்புச் செயலாளர் ஊடகவியலாளர்கள் மீது கடுமையான சொற்பிரயோகத்தைப் பயன்படுத்தியமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாதுகாப்புச் செயலாளர் அரசியல்வாதியல்ல. ஒரு அதிகாரியாவார். அவர் தெரிவிக்கும் கருத்துகள் தொடர்பில் என்னால் எதுவும் கூறமுடியாது. ஆனால் அவரது கருத்துகளில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை. அரசாங்கம் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர  அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சில ஊடகங்கள் உள்ளூரிலும், சர்வதேசத்திலும் தவறான தகவல்களை தெரிவித்துவருகின்றன. அதனைக் கண்டிப்பது தவறாக முடியுமா? எனக் கேட்கவிரும்புகிறேன்.

முன்னாள் அமைச்சர் ரஞ்சன் விஜேரட்ண எந்த விடயத்தையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகக் கூறுபவராவார். அவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் ஜே.வி.பி.யை சேர்ந்த இளைஞர்கள் கொல்லப்பட்டபோது அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ரஞ்சன் விஜேரட்ணவிடம் ஜே.வி.பி. இளைஞர்கள் கொல்லப்பட்டமைக்கு அரசுதானே பொறுப்பேற்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். அதற்கு சட்டெனப்பதிலளித்த ரஞ்சன் விஜேரட்ண ஆமாம் அரசுதான் பொறுப்பேற்கின்றது.அதிலென்ன தவறு. வன்முறை, பயங்கரவாதத்தில் ஈடுபடுவோரை தாலாட்டவா சொல்கிறீர்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதேபோன்றுதான் இன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் செயற்படுகிறார். யுத்தத்தை விமர்சித்து அதற்கு மாசு கற்பிக்க முயற்சி செய்வோர் விடயத்தில் அவர் கடுமையான போக்கை கடைப்பிடிக்கிறார். இதில் எந்தத் தவறுமில்லையே. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கே யுத்தம் நடத்தப்படுகிறது. எந்தவொரு இனத்துக்கும் எதிராக நாம் போர் தொடுக்கவில்லை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார

வடக்கு மக்களின் பாதுகாப்புக் குறித்து பிரிட்டிஷ் தூதுவர் ஹய்ஸ் கவலை

போர் நடைபெறும் வட பகுதில் உள்ள மக்களின் பாதுகாப்புக் குறித்து இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் தூதுவர் பீட்டர் ஹெய்ஸ் கவலை தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்துக்கு மூன்றுநாள் விஜயம் மேற்கொண்டுள்ள அவர் அங்குள்ள நிலவரங்கள் குறித்து அரசியல்வாதிகள், சமய, சமூகப் பிரதிநிதிகள் ஆகியோருடனும் பேச்சு நடத்தியுள்ளார்.

யுத்த நிலைமை விலகிய பின்னர் கிழக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்காக பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், வடக்கு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு ஏற்பட்டால், அனைத்து விடயமும் பலனற்றதாகிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.