24

24

வன்னியிலிருந்து அடுத்த சில தினங்களில் மேலும் பலர் வவுனியாவுக்கு வருவர் -அமைச்சர் ரிசாட் கூறுகிறார்

_mullai_1.jpg
வன்னியிலிருந்து அடுத்த சில தினங்களில் மேலும் பெருமளவு பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வருவார்களென எதிர்பார்ப்பதாகவும் இடைத்தங்கல் முகாம்களில் வசதிகள் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டிய தேவை உள்ளதாகவும் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஞாயிற்றுக்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

கடந்த இரு நாட்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளார்கள். இவர்களை சனிக்கிழமை சந்தித்தபோது அவர்கள் நீண்டதூரம் நடந்து வந்து இராணுவத்திடம் சரணடைந்துள்ளார்கள். பலர் தாடியுடன் நீண்ட நாட்கள் குளிக்காதவர்கள் போல் காணப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

இடைத்தங்கல் முகாம்களின் தற்போதைய நிலை குறித்து ஆராயும் இந்தக் கூட்டத்தில் குடிநீர், சுகாதாரம், உணவு விநியோகம், மின்சாரம் தொடர்பான விடயங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட உயர் அதிகாரிகள், கிராமசேவையாளர்கள், முகாம் பொறுப்பதிகாரிகள் , மாவட்ட அரச அதிபர் , படையினர், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள சில பிரச்சினைகள் குறித்து இங்கு முன்வைக்கப்பட்டு அதற்கான தீர்வுகளும் காணப்பட்டது. குறிப்பாக நீர் வழங்கல், நோயாளர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் சேவைகள் திருப்திகரமானதாக இருக்கவில்லையென முகாம் பொறுப்பதிகாரிகள் அமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். வவுனியாவிற்குள் சுமார் 40 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் வந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு தயாசிறி எம்.பி.யிடம் விசாரணை

குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று திங்கட்கிழமை கொழும்பு குற்றப்பிரிவினால் சுமார் ஒருமணிநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

அண்மையில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக ஊடகத்துறை விரிவுரையாளரான தம்மிக கங்கனாத் திசாநாயக்க கடத்தப்பட்டமை தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவதினத்தின்போது பிற்பகல் 4 மணியளவில் பொதுத் தொலைபேசிக் கூண்டிலிருந்து கடத்தல்குழு தம்மிக திசாநாயக்காவுடன் தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகவும் அதனையடுத்து 10நிமிடங்கள் கழித்து அதே இலக்கத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறிஜயசேகரவுக்கும் ஒரு அழைப்பு கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் தெரிவித்தே அவரிடம் குற்றத் தடுப்புப்பிரிவினர் விசாரணை நடத்தி வாக்கு மூலமொன்றைப் பெற்றுக் கொண்டனர்.

வடக்கின் நண்பன் நிதியத்துக்கு 10 நிமிடங்களில் 1.4 மில்லியன் ரூபா வசூல் பேதங்களை மறந்து அனைவரும் உதவுமாறு அமைச்சர் டளஸ் கோரிக்கை

dalas_alahapperuma.jpg
யாழ்தேவி ரயில் சேவையை மீண்டும் நடத்துவதற்காக வடக்கின் நண்பன்  எனும் நிதியத்தை நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து 10 நிமிடங்களுக்குள் இந்நிதியத்துக்கு ஒரு கோடி 14 இலட்சம் ரூபா கிடைக்கப்பெற்றதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

மேல் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று முற்பகல் மகாவலி கேந்திர நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையிலான யாழ். தேவி ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வேலைத் திட்டத்தை ஜனாதிபதி நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதற்காக வடக்கின் நண்பன் எனும் பெயரில் நிதியம் ஒன்றும் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி தனது ஏப்ரல் மாத சம்பளத்தை வழங்கி இந்த நிதியத்தை ஆரம்பித்து வைத்தார். அவ்வாறே ஜனாதிபதி செயலக ஊழியர்களும் தமது ஒரு நாள் சம்பளத்தை இந்நிதியத்துக்கு வழங்கினர். இது ஒரு பாரிய வேலைத் திட்டமாகும். கடந்த 30 வருடங்களாக பயங்கரவாத அமைப்புடன் போராடிய எம்மைப்போன்ற ஒரு நாட்டுக்கு இது சமாளிக்க முடியாத ஒரு பொருளாதாரச் சுமையாகும்.

இது எமது நாடு,  இது எமது கடமை என்பதை உணர்ந்து இந்த வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு இன, மத, கட்சி பேதங்களின்றி அனைவரும் ஒன்றுபட்டு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டிக்கொள்கிறேன் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், இந்த வேலைத் திட்டத்துக்கென ஆரம்பிக்கப்பட்டுள்ள நிதியத்துக்கு தமது கட்சியின் 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரின் மே மாதத்துக்கான சம்பளத்தை வழங்குவதென நேற்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். 

கொழும்பை அண்மித்ததான பாரிய தமிழ் ஈழ இராச்சியத்தை உருவாக்கும் நோக்கில் புலிகள் – பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய

sec-def.jpgகொழும்பை அண்மித்ததாக இலங்கையின் தென்பகுதியையும் உள்ளடக்கிய பாரிய தமிழ் ஈழ இராச்சியத்தை உருவாக்கும் நோக்கத்தை விடுதலைப்புலிகள் கொண்டிருந்ததாக பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

பாரியளவில் நிர்மாணிக்கப்பட்ட கடற்படை, விமானப்படை, தற்கொலைப்படையினரை உள்ளடக்கிய தரைப்படை என்பன புலிகளின் இந்த நோக்கத்தை வெளிப்படுத்துவதாக கோதாபய கூறியுள்ளார். விடுதலைப்புலிகளின் இராணுவ தளபாடங்கள், பயிற்சிக்களம் என்பனவற்றை நாம் பார்த்தபோது பாரிய ஈழ இராச்சியத்தை உருவாக்க அவர்கள் நோக்கம் கொண்டிருந்தது தெளிவாகத் தென்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அந்த இடங்களிலிருந்து பெற்றுக்கொண்ட வரைபடங்கள் இந்த விடயத்தை உறுதிப்படுத்துகின்றன. அவர்கள் நீர்கொழும்பு முதல் யால வரை அநுராதபுரத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளை உள்ளடக்கி ஈழத்தை ஸ்தாபிக்க எதிர்பார்த்திருந்ததாகவும் கோதாபய கூறியுள்ளார்.  கொழும்புக்கு வடக்கே 40 கி.மீ. தொலைவில் நீர்கொழும்பு உள்ளது. யால தென்னிலங்கையில் அமைந்துள்ளது.

இந்த மனிதாபிமான நடவடிக்கையை நாம் ஆரம்பித்திராவிடின் என்ன பதில் நடவடிக்கையை நாம் கொண்டிருப்போம், என்பது தெளிவானது என்றும் அவர் குறிப்பிட்டதாக பி.ரி. ஐ. செய்திச்சேவை தெரிவித்தது.

இலங்கை விவகாரம் குறித்து நவநீதம் பிள்ளையிடம் முறைப்பாடு

nawaneetappilli.jpg இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்கும் ஐ. நா சபையின் மனித உரிமைகளுக்கான அமைப்பின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்களை இந்தியாவின் மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான பியுசிஎல் அமைப்பினர் சந்தித்து இலங்கை விவகாரம் தொடர்பில் பேசியிருக்கிறார்கள்.

இந்தச் சந்திப்பின்போது இலங்கையில் மோதல்கள் நடக்கும் பகுதியில், அரசால் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் தொடரும் உயிர்ப்பலிகள் தொடர்பிலும், புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உருவாகிவரும் மனித அவலம் குறித்தும் பேசப்பட்டதாக, பியுசிஎல் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளுக்கான தலைவர் வழக்கறிஞர் வி. சுரேஷ் தெரிவித்தார்.

மேலும் அங்கு இலங்கை அரசின் படை நடவடிக்கையால் பலர் பலியாவதாக கூறிய அவர், இதற்காக இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவர்கள் மீது சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் நடவடிக்கைகளை ஐ. நா மன்றம் துவங்க வேண்டும் என்றும் தாங்கள் கோரியதாகவும் கூறினார்.

பொலிஸாரினால் தேடப்பட்டுவரும் பேக்கரி உரிமையாளர் தலைமறைவு

t-mala-stu.png
திருகோணமலையில் உள்ள பேக்கரி ஒன்றில் தயாரிக்கப்பட்ட பனிஸ் நஞ்சானதன் காரணமாக தேடப்பட்டுவரும் பேக்கரி உரிமையாளர் தலைமறைவாகியுள்ளதாக திருகோணமலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பேக்கரியில் தயாரிக்கப்பட்ட பனிஸை உட்கொண்ட 62 வயது நபரொருவர் மரணமடைந்துள்ளார் எனவும் 80 மாணவர்கள் உட்பட 107 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளர் எனவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனையடுத்து குறிப்பிட்ட பேக்கரியை பொலிஸார் உடனடியாக சீல் வைத்து மூடியுள்ளனர்.

இன்று ரணிலுக்கு 60

ranil-wickramasinghe.jpgஎதிர்க் கட்சித்தலைவரும், ஐக்கிய தேசியக்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று 60ஆவது பிறந்த நாளாகும்.  இதனை முன்னிட்டு கட்சியாலும், ஆதரவாளர்களாலும் மதவழிபாட்டுத் தலங்களில் விசேட மதவழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிரதான வழிபாடு கொழும்பு கங்காராம விகாரையில் மாலை 6 மணிக்கு இடம் பெறவிருக்கின்றது. இந்த நிகழ்வின் போது “சுதந்திரத்துக்கான மேடை’ என்ற வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவமும் இடம் பெறவுள்ளது.

அதேநேரம் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் பதவி வகிப்பார் என ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தவில் நேற்றைய தினம் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக தொடர்ந்தும் கரு ஜயசூரிய நீடிப்பார் எனவும், கட்சித் தலைவரின் சில பொறுப்புக்கள் செயற்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், என்ன அதிகாரங்கள் செயற்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகி சிரேஸ்ட தலைவர் பொறுப்பை ரணில் ஏற்றுக்கொள்ள வேண்டுமென செயற்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இரக்கண்டி பாலத்தின் அமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தில்

bridge.jpg
திருகோணமலையிலிருந்து புல்மோட்டைக்குச் செல்லும் வீதியில் அமைந்தள்ள இரக்கண்டி பாலத்தின் அமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பானிய அரசின் உதவியில் அமைக்கப்பட்டுவரும் இப்பாலத்துக்கு  1800 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்த வீதியை விசாலமாக்கும் பணியில் அமைக்கப்படும் மூன்று முக்கிய பாலங்களில் இதுவும் ஒன்றாகும். புதுவைக்கட்டு மற்றும் யான் ஓயா பாலங்கள் ஏனைய இரு பாலங்களாகும்.

இந்தப் பாலத்தை அமைப்பதற்கான அடிக்கல்லை கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் திகதி அப்போதைய பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சராகவிருந்து ஜெயராஜ் பொனாண்டோ புள்ளே நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமலையில் உணவு நஞ்சானதால் ஒருவர் மரணம்; 107 பேர் வைத்தியசாலையில் அனுமதி

foods.jpg
திருகோணமலையில் உணவு நஞ்சானதன் காரணமாக 62 வயதான ஒருவர் மரணமடைந்துள்ளார். எனினும் இவரது மரணம் தொடர்பில் ஊர்ஜித தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. பிரேத பரிசோதனையின் பின்பே இது பற்றி கூறமுடியும் எனத் திருகோணமலை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அனுஸ்யா ராஜ்மோகன் தெரிவித்தார் .

80 பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 107 பேர் வரை திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை திருகோணமலை வைத்தியசாலை தரப்பு உறுதிசெய்துள்ளது.

திருகோணமலையிலுள்ள பேக்கரி ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட பணிஸ் வகையே இவ்வாறு நஞ்சானதாகக் கூறப்படுகின்றது. மேற்படி பேக்கரியைப் பொலிஸார் சீல் வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வர்ஷா படுகொலைச் சந்தேக நபரின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு தலை துண்டிப்பு – பொலிஸார் தெரிவிப்பு

Regie_Varsa
திருகோணமலை மாணவி வர்ஷாவின் (வயது 6) படுகொலைச் சந்தேகநபரும் சயனைட் அருந்தி தற்கொலை செய்தவருமான ஜனார்த்தனனின் சடலத்தை கடந்த சனிக்கிழமை இரவு புதைகுழியிலிருந்து தோண்டி எடுத்த சிலர் தலையை துண்டித்து முகத்தை மிகமோசமாகச் சிதைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமலை சென்.மேரிஸ் கல்லூரி மாணவியான வர்ஷாவை பாடசாலையிலிருந்து ஆட்டோவில் கடத்திய சிலர் அவரது தாயிடம் பெருந்தொகை பணத்தை கப்பமாகக் கோரியதுடன், பின்னர் அந்த மாணவியை படுகொலை செய்தனர்.

இந்தக் கடத்தல் மற்றும் கொலையின் பிரதான சந்தேக நபர் மறுநாள் கைது செய்யப்பட்ட அதேநேரம், அவரை மாணவியின் உடல் கிடந்த இடத்திற்கு பொலிஸார் கொண்டு சென்றபோது பொலிஸாரைத் தாக்கிவிட்டு அவர் தப்பியோடமுற்பட்டதாகக் கூறி பொலிஸார் அவரை சுட்டுக்கொன்றனர்.

அதேநேரம், இவருடன் கைது செய்யப்பட்ட 2 ஆவது சந்தேக நபரும் அங்குள்ள தமிழ் அமைப்பொன்றின் பொறுப்பாளருமான ஜனார்த்தனன் எனப்படும் வரதராஜன் ஜனார்த்தனன் கடந்த 19 ஆம் திகதி பொலிஸாருடன் தடயப் பொருட்களை காட்டுவதாகக் கூறிக் கூட்டிச் சென்றபோது சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது சடலம் பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி பொதுமயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு புதை குழியிலிருந்து இவரது சடலத்தை தோண்டியெடுத்த இனந்தெரியாத சிலர் கழுத்தை துண்டித்ததுடன், முகத்தை மிக மோசமாகச் சிதைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

மறுநாள் காலை இது பற்றி அறிந்த பொலிஸார், அங்கு சென்று சடலத்தை மீண்டும் அதே குழியில் புதைத்துள்ளதுடன், அந்தப் பகுதியை கண்காணித்தும் வருகின்றனர். மாணவியின் கடத்தல் மற்றும் கொலை தொடர்பான விசாரணை தொடந்தும் நடைபெற்று வருகிறது.