01

01

பிரிட்டனில் வெளிநாட்டு “மாணவர் விசா” புதிய நடைமுறை செவ்வாய்க்கிழமை முதல் அறிமுகம்

flag_uk.jpgஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத நாடுகளின் மாணவர்களுக்கான புதிய விசா நடைமுறையொன்றை பிரிட்டிஷ் அரசாங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அறிமுகப்படுத்தியிருக்கிறது. குடிவரவை கட்டுப்படுத்துவதும் மோசடிகளைத் தடுப்பதுமே இந்த புதிய நடைமுறைக்கான நோக்கமென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புள்ளி அடிப்படையிலான விசா வழங்கும்திட்டத்தின் நான்காவது படிமுறையின் ஒரு அங்கமாக கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய ஏற்பாடுகள் விசா வழங்கும் செயன்முறைகளை எளிதாக்கும் என்பதுடன் கூடுதலான அளவுக்கு வெளிப்படைத்தன்மையுடையதாகவும் குடிவரவு முறைமை துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுப்பதாகவும் அமையும் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் ஜாக்குயி சிமித் கூறியிருக்கிறார்.

வெளிநாட்டு மாணவர்களை ஆட்திரட்டும் பிரிட்டனில் உள்ள சகல கல்வி வழங்கும் நிறுவனங்களும் ( பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்) நேற்றுமுதல் பிரிட்டனின் எல்லை பாதுகாப்பு அமைப்பிடம் (UK Border Agancy) தங்களை பதிவு செய்துகொள்ளவேண்டும். அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட அனுசரணையாளர்களாகுவதற்காக (Licensed Sponsors) 2,100 க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களும் சுயாதீன பாடசாலைகளும் கல்லூரிகளும் விண்ணப்பம் செய்திருக்கின்றன.

பிரிட்டனில் தங்கியிருக்கும் காலகட்டத்தில் வெளிநாட்டு மாணவர்கள் தங்களுடைய விசா நிபந்தனைகளுக்கு இசைவாக நடப்பதை உறுதிசெய்துகொள்ளும் பொறுப்பு இனிமேல் இந்தக்கல்வி நிறுவனங்களினுடையதே. எந்தவொரு மாணவரும் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னதாக அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட கல்வி நிறுவனமொன்றிடமிருந்து நிபந்தனையற்ற முறையில் தனக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

தனது கற்கை நெறிக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கும் பிரிட்டனில் தங்கியிருந்து கல்விகற்கும் காலகட்டத்தில் தனது வாழ்க்கைச் செலவுக்கும் போதுமான நிதி தன்னிடம் இருப்பதை மாணவர்கள் சான்றாதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியதும் அவசியமாகிறது.

குறிப்பிட்ட ஒரு கல்வி நிறுவனத்தில் கல்வி கற்பதற்கான விசாவே வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும். பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேலான கற்கைநெறி என்றால் அதைப் பூர்த்தி செய்வதற்கான முழுக்காலகட்டத்துக்கும் விசா வழங்கப்படும்.

பிரிட்டனில் கல்வி கற்பதற்கு செல்கின்ற வெளிநாட்டு மாணவர்களும் அவர்களைக் கற்பிப்பவர்களும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்பதை புதிய நடைமுறை உறுதிசெய்யும். பிரிட்டனில் கல்விகற்பதற்கு உண்மையில் யார் வருகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கும் போலி கல்லூரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் புதிய விசா நடைமுறை அனுமதியளிக்கிறது என்று உள்துறை அமைச்சர் சிமித் தெரிவித்திருக்கிறார்.

பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்டனி காயம்: பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங் கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியை கைப்பற்ற ராணுவம் தீவிரமாக சண்டையிட்டு வருகிறது. ராணுவத்தை எதிர்த்து விடுதலைப்புலிகள் கடுமையாக போரிடுகின்றனர். அந்த போர் முனையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் தலைமையேற்று நேரடியாக போரிடுவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
 
புதுக்குடியிருப்பு வடக்குப் பகுதியில் இராணுவத்தினருக்கும் புலிகளுக்குமிடையே அண்மையில் இடம்பெற்ற உக்கிர மோதலின்போது புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனான சார்ள்ஸ் அன்டனி (வயது 24) காயமடைந்ததாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புலிகளுக்கான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் தயாரிக்கும் பணியின் முக்கிய பொறுப்பாளரான இவர் புலிகளின் விமானங்களுக்கான குண்டுகளைத தயாரிப்பதிலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

2007 ஆம் ஆண்டில் கட்டுநாயக்க விமானத்தளம் மீதும் கொலன்னாவை எண்ணெய்க் குதம் மற்றும் முத்துராஜவெல எரிவாயு களஞ்சியம் ஆகியவற்றின் மீதும் புலிகள் நடத்திய விமானத் தாக்குதல்களை இவரே  திட்டமிட்டுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்காக இவர் புலிகளின் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டார் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

போர் நிறுத்தத்தை அறிவிக்க இலங்கை அரசை வலியுறுத்துவோம்: சோனியா

sonia-gandhi.jpgஇலங்கையில் வாடும் அப்பாவித் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க மத்திய அரசு தொடர்ந்து பாடுபட்டு வருவதாகவும், கடந்த 30 வருட காலமாக இலங்கையில் அப்பாவி தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சி குரல் கொடுத்து வருவதாகவும், அங்கு போர் நிறுத்தத்தை அறிவிக்க இலங்கை அரசை வலியுறுத்துவோம் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

வவுனியாவுக்கு நேற்று வரை 52 ஆயிரம் பேர் இடம்பெயர்வு – அமைச்சர் றிஷாத் பதியுதீன்

risadbadurudeen.jpgமுல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து நேற்று வரை 52 ஆயிரத்து 208 பேர் வவுனியாவுக்கு வருகை தந்துள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,  விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி வருகை தந்தவர்களுள் ஆகக்கூடிய தொகையாக 23 ஆயிரத்து 606 பேர் கடந்த மார்ச் மாதத்தில் வந்துள்ளனர்.

இடம்பெயர்ந்தவர்களுக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களுக்கு வருகை தரும் மக்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அம்மக்களுக்குத் தேவையான குடிநீர், சுகாதாரம், மலசலகூட வசதி, மின்சாரம் மற்றும் கல்வி உட்பட அனைத்து வசதிகளையும் தமது அமைச்சு செய்து கொடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் போலிப்பிரசாரம் செய்கிறார் : ‘டைம்ஸ் ஒப் இந்தியா’ வில் இலங்கை தூதரகம் கண்டனம்

arunthathy_1.jpgநாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் இந்திய எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராய் போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளதாக ‘டைம்ஸ் ஒப் இந்தியா’ செய்தி வெளியிட்டிருக்கின்றது.

இலங்கையில் பகிரங்க இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் அநாயாசமான கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக அருந்ததி ராய் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் இடம்பெற்று வரும் இனச் சுத்திகரிப்புக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிக்கப்படுவதாவது:

“அருந்ததி ராயின் அண்மைய செய்திக் கட்டுரை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், சிவிலியன்களைத் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வாய்ப்பாகவும் அமையும் எனவும் இலங்கைத் தூதுவராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிங்களப் பெரும்பான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் 54 வீதமான தமிழ் மக்கள் சிக்கல்கள் எதுவுமின்றி வாழ்ந்து வருவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய முதல் செயலாளர் சுகேஸ்வர குணரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கங்களினால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்டங்களைப் புலிகள் நிராகரித்து வந்துள்ளமை நோக்கப்பட வேண்டியதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிவிலியன் நலனை முதன்மை நோக்காகக் கொண்டே வடக்கில் படையினர் மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.” இவ்வாறு ‘டைம்ஸ் ஒப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

‘நமக்காக நாம்’ நிதியத்துக்கு கனடாவிலுள்ள இலங்கையர்கள் 3 மில்லியன் ரூபா அன்பளிப்பு!

jayasekara_canada.jpgஇலங்கை பாதுகாப்புப் படையினருக்கு நலன்புரித் திட்டங்களை வழங்க பாதுகாப்பு அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட ‘நமக்காக நாம்’ எனும் நிதியத்துக்கு கனடாவிலுள்ள இலங்கை வாழ் மக்கள் மூன்று மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். கனடாவின் டொரன்டோ நகரிலுள்ள இலங்கையர்கள் வழங்கிய இந்த பணத் தொகைக்கான காசோலையை கனடாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் பந்துல ஜயசேகர ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

இந்தப் பணத் தொகையை வழங்கியதன் மூலம் கனடாவிலுள்ள இலங்கையர்கள் தமது நன்றியையும் பாராட்டுதல்களையும் இலங்கை படை வீரர்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

தெற்கில் இயல்பு வாழ்வை சீர்குலைக்க புலிகள் திட்டம் – பிரிகேடியர் உதய நாணாயக்கார எச்சரிக்கை

udaya_nanayakkara_brigediars.jpgதமிழ்,  சிங்களப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களையும் தெற்கில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையையும் சீர்குலைக்க புலிகள் திட்டமிட்டுள்ளதாக அறிகிறோம். எனவே மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க ஊடகங்கள் அறிவுறுத்த வேண்டும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் குறித்து தகவல் வழங்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு பிரிகேடியர் மேலும் கூறியதாவது,

படையினரின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத புலிகள் இப்போது மறைந்திருந்து திடீர் தாக்குதல்களை நடத்துகின்றனர். அவற்றை படையினர் வெற்றிகரமக முறியடித்து வருகின்றனர். புலிகளின் பிடியிலிருந்து தப்பி வரும் பொது மக்களின்; எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகின்றது. கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்றுவரை 62,157 பேர் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.

படையினரின் முன்னேற்றத்தைத் தடுக்க புலிகள் அமைத்துள்ள மண் அணைகளை படையினர் தாக்கியழித்துள்ளனர். சாலை தெற்கில் கடல் ஏரியைக் கடந்து செல்ல வசதியாக படையினர் விசேட பாலம ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் பிரிகேடியர் கூறினார்.

புலிகளின் பிரிவினை வாதத்துக்கு துணைபோகும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தகவல்

krambukkela.bmp

புலிகளின் பிரிவினை வாதத்துக்கு ஆதரவாக இலங்கை ஊடகவியலாளர்களைப் பயன்படுத்தி சர்வதேச ரீதியில் பிரசாரம் மேற்கொண்டுவரும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் குறித்து தகவல் வழங்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது, பெனோஸ் என்ற பெயரில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனம் புலிகளின் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு நேரடி உதவி வழங்கியுள்ளமை இப்போது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

துரதிஷ்டவசமான இலங்கை ஊடகவியலாளர்கள் சிலர் இதில் சம்பந்தப்பட்டுளளனர். புலிகளுக்கு ஆதரவாக அவர்களால் எழுதப்பட்ட பல கட்டுரைகள் எம்மிடம் சிக்கியுள்ளன. இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மட்டக்களப்பு முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு கோதுமைக்குப் பதில் அரிசி.

மட்டக்களப்பு முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உலக உணவுத்திட்டத்தினால் நிவாரணமாக வழங்கப்படும் கோதுமை மாவிற்கு பதிலாக முன்னர் விநியோகிக்கப்பட்ட விதத்திலேயே அரிசியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது..

கிழக்கு மாகாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் இதற்கான தீர்மாணம் எடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்களாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் ஆகியோர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
அதன்பின்னர் இடம்பெற்ற முதலாவது அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாக பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.  குறிப்பாக கோதுமைக்குப் பதில் அரிசி வழங்கவும் இதற்கென கொள்வனவு செய்யப்படும் அரிசியை கிழக்கு மாகாணத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்தே பெற்றுக் கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளிடமிருந்து மீண்டும் யுத்தநிறுத்த அழைப்பு

lttelogo.jpg
விடுதலைப்புலிகள் மீண்டும் யுத்த நிறுத்தத்திற்கான அழைப்பை விடுத்திருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் சர்வதேச இராஜதந்திர நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான எஸ்.பத்மநாதன் யுத்த நிறுத்தத்திற்கான அழைப்பை விடுத்திருப்பதாக இணையத்தள செய்திகள் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளன.

“விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்தத்திற்கு செல்லுமாறு அரசுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டிய தேவை இருப்பதாக பத்மநாதன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அரசிடமிருந்து உடனடியாக கருத்து எதுவும் வெளிப்படவில்லை . விடுதலைப்புலிகள் ஆயுதங்களை முதலில் கீழே வைக்க வேண்டுமென அரசு கூறியிருந்தது. ஆனால், அரசாங்கம் முன்னர் தெரிவித்திருந்ததை யதார்த்தபூர்வமற்றது என்று பத்மநாதன் கூறியுள்ளார்.

தற்போது குறுகிய நிலப்பரப்புக்குள் புலிகள் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் அதனை தற்காலிக பின்னடைவு என்று பத்மநாதன் கூறியுள்ளார். “புலிகள் பலவீனமடைந்த நிலையில் இருப்பதாக அனுமானிப்பது தவறானதாகும். புலிகள் அமைப்பு பல்வேறு ஆற்றல்களை கொண்ட மீள் எழுச்சி பெற்றுவரும் இயக்கமாகும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயமாக வைத்திருப்பதாக அரசாங்கமும் சர்வதேச அமைப்புகளும் குற்றஞ்சாட்டியுள்ளன. பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து புலிகள் ஆட்லறி, மோட்டார் தாக்குதலை அதிகரித்திருப்பதாக இந்தவாரம் பாதுகாப்பு அமைச்சு கூறியிருந்தது. பொதுமக்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுவதை பத்மநாதன் நிராகரித்துள்ளார்.