செத்தாலும் மக்களோடு மக்களாகத்தான் சாவேனே தவிர ஒரு பிடி சாம்பல் கூட எதிரிகளின் கையில் கிடைக்க கூடாது என்று சபதம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிற விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இலங்கையில் நடந்து வரும் இனப் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகே இன்று (09.04.09) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில், இலங்கையில் விடுதலைப்புலிகள் மீதும் அப்பாவி தமிழர்கள் மீதும் சிங்கள படை கொடூரத் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹீரோசிமா, நாகசாகிப் ஆகிய இடங்களில் விஷவாயு குண்டுகளை வீசி தாக்கிய சம்பவத்தை உலகம் இன்றும் கண்டித்து வருகிறது. அதன் பின்னர்தான் அணு ஆயுத தயாரிப்பு, அணுசக்தி ஒப்பந்தம் போன்றவற்றில் முறையான வரையறைகள் தேவை என விதிமுறைகள் வகுக்கப்பட்டன. ஆனால் அதுபோன்ற ஒரு தாக்குதல் நடத்த ராஜபக்சே தயாராகி வருகிறார்.
சர்வதேச நாடுகள் தடை செய்துள்ள கிளஸ்டர் பாம் (கொத்துக் குண்டுகள்) வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார். இதுபோன்ற தாக்குதல் நடத்தினால் உடலில் காயம் ஏற்படாது, நச்சு வாயு பரவி உடலில் படர்ந்து தோல் உரிந்து ரத்த வாந்தி எடுத்து சாக நேரிடும். இதுபோன்று சமீபத்தில் நடத்திய தாக்குதலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஏராளமான போராளிகள் கரிக்கட்டையாகி உயிர் இழந்துள்ளனர். ஆனாலும் செத்தாலும் மக்களோடு மக்களாகத்தான் சாவேன், நான் செத்தாலும் ஒருபிடி சாம்பல் கூட எதிரிகளின் கையில் கிடைக்க கூடாது என்று சபதம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் பிரபாகரன். இந்த நச்சு வெடிகுண்டுகளுக்கு மத்தியில் பிரபாகரன் வாழ்ந்து கொண்டிருக்கிறார், போராடி கொண்டிருக்கிறார். எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல் நேற்று அதிகாலை எனக்கு கிடைத்தது. இதனால் நேற்று நடைபெற்ற வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் நிகழ்ச்சியையே ரத்து செய்ய நான் திட்டமிட்டேன். தேர்தலை புறக்கணிக்கும் முடிவுக்கும் நான் வந்தேன். விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளையும் முதலமைச்சர் கருணாநிதியிடமே ஒப்படைத்து விட நான் முயற்சி செய்தேன். ஆனால் தோழர் ரவிக்குமார் எம்.எல்.ஏ கேட்டுக் கொண்டதின் பேரில் எனது முடிவை மாற்றிக் கொண்டு நேற்றைய நிகழ்ச்சியை நடத்தினேன். ஈழத் தமிழர் பிரச்சனையில் மனிதாபிமான அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலையிட்டு போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது என்றார்.