25
25
வன்னியில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு சமைத்து உதவுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 115 முஸ்லிம்கள் இன்று வன்னிக்கு சென்றனர். அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர்அலியின் வேண்டுகோளுக்கிணங்க காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், காத்தான்குடி நகரசபை, ஆகியவற்றின் ஏற்பாட்டில் இவர்கள் இன்று வன்னிக்கு சென்றனர். இரண்டு பஸ் வண்டிகளிலும், ஒரு லொறியிலும் சமையல் பாத்திரங்களுடன் காத்தான்குடிப்பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திற்கு முன்பாக இருந்து இவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எஸ். எச். அஸ்பர் தலைமையில் இவர்கள் வன்னிக்கு சென்றுள்ளனர்.
இடம் பெயர்ந்துவரும் எமது சகோதர தமிழ் மக்களுக்கு உலர் உணவு, அத்தியாவசிய பொருட்களை வழங்கும் போது அணிந்த பழைய ஆடைகளை வழங்க வேண்டாம். அவர்களுக்கு புதிய ஆடைகளையே வழங்குங்கள் என ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
சுனாமி தாக்குதல் ஏற்பட்ட போது எவ்வாறு நாம் ஒன்றிணைந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி னோமோ அதேபோன்று தென் பகுதி மக்களின் மனிதாபிமான உணர்வுகளை வெளிக்காட்ட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
சுனாமியின் போது நாம் பழைய அணிந்த ஆடைக ளையே அவசர தேவைக்காக வழங்கினோம். ஆனால் வன்னியிலுள்ள எமது சகோதர தமிழ் மக்களுக்கு அப்படி வழங்காமல் புதிய ஆடைகளையே வழங்குவோம். அவர்கள் எமது மக்கள் என்றும் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
உலர் உணவு பொருட்கள், பிஸ்கட்வகைகள், குடிநீர் போத்தல்கள், பால்மா, திரவப்பால் பக்கற், குழந்தைகள் பால்மா, குழந்தைகளுக்கான பால் போத்தல், பற்பொடி, பற்பசை, பிரஷ்கள், டவல்கள், பெண்களுக்கான ஆரோக்கிய துவாய்கள், பெண்களின் உள்ளாடைகள், நுளம்பு வலை, சவர்க்காரம், சமையல் பாத்திரங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை சேகரித்து வழங்க முன்வாருங்கள் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
வன்னி மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக பிரதான சேகரிப்பு நிலையமாக பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலுள்ள ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபமும் இயங்குகிறது.
உதவ விரும்பும் அமைப்புகள், தனி மனிதர்கள், நலன் விரும்பிகள், தயாளகுணம் படைத்தவர்கள் நிவாரண பொருட்களை தமது பகுதியிலுள்ள பிரதேச செயலகத்திலோ, மாவட்ட செயலகத்திலோ, உதவி பிரதேச செயலகத்திலோ ஒப்படைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.நாட்டிலுள்ள அனைத்து ஊடக நிறுவனங்களின் பிரதி நிதிகளையும் அழைத்து அமைச்சர் பிரிய தர்ஷன யாப்பா மனிதாபிமான உதவி குறித்து விளக்கமளித்தார்.
மோதல் நிறுத்தத்தை வலியுறுத்துவதற்காக இந்தியா இரு உயர் அதிகாரிகளை இலங்கைக்கு நேற்று அனுப்பியுள்ளபோதும் இந்த விடயம் தொடர்பான இந்தியாவின் “தெரிவுகள்’ மட்டுப்படுத்தப்பட்டவையென்று வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.
என்.டி.ரி.வி. தொலைக்காட்சி சேவைக்கு நேற்று வெள்ளிக்கிழமை இதனை தெரிவித்துள்ள ஆனந்த் சர்மா.
அழுத்தம் என்பது பற்றி இங்கு கேள்விக்கு இடமில்லை. எமது கவலையை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். இதனைவிட நாம் மேற்கொள்ள வேண்டிய வேறு மேலதிகமான இராஜதந்திர நடவடிக்கை என்ன? நாம் இராஜதந்திர மார்க்கத்திலான சகல வழிமுறைகளையும் பயன்படுத்தியுள்ளோம் என்று ஆனந்த் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா கூறுவதை இலங்கை செவிமடுக்குமா? என்பது பாரிய கேள்வி என்று என்.டி.ரி.வி. கூறியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்டுள்ள இறுதி கட்ட நடவடிக்கை தொடரும் என்றும் சர்வதேச அழுத்தத்தினால் அதனை கைவிடப் போவதில்லையெனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெளிவாக கூறியிருந்ததையும் என்.டி.ரி.வி. சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் பிரபல எழுத்தாளர் கலாபூஷணம் ரூபராணி ஜோசப் நேற்று முன்தினம் காலமானார். இவர் இறக்கும் போது வயது 79.
50 வருடங்களுக்கு மேலாக கலை, இலக்கிய சமூக, நாடக, அரசியல் தொழிற்சங்கத்துறைகளில் சேவையாற்றிய இவர் சிறந்த மேடைப் பேச்சாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரது எழுத்துப்பணிகளுக்காக வடகிழக்கு மத்திய மாகாண மற்றும் தேசிய சாகித்திய விழாக்களில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுமுள்ளார். இவருக்கு சொல்லின் செவ்வி, கலையரசி, கலாரூபி, கலாஜோதி, நடிப்பரசி, கலாபூஷணம் போன்ற பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன.
ஏணியும் தோணியும், இல்லை இல்லை, ஒரு வித்தியாசமான விளம்பரம், ஒரு தாயின் மடியில் போன்ற நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
கண்டி நல்லாயன் மகளிர் கல்லூரியில் கால்நூற்றாண்டு காலமாக ஆசிரியராக கடமையாற்றி தனது கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை போர் நிறுத்தத்திற்கு உண்மையாக முயற்சி செய்யாவிட்டால் காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று, உங்கள் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் வயலார் ரவி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், ‘’விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் தான் கூட்டணி வைத்துள்ளது. காங்கிரசுடன் இல்லை’’ என்று தெரிவித்தார்.
“1956 ஆம் ஆண்டின் பண்டாரநாயக்கவின் புரட்சிகரமான அரசாங்கத்தை நிறுவுவதற்கு உந்து சக்தியாக இருந்தவர்களும் கிராமிய மண்வாசனையை கொண்டவர்களும் ராஜபக்ஷாக்களே’என்று அம்பாந்தோட்டை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் பெலியத்தை தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சு.கட்சியின் புதிய அமைப்பாளருமான நிருபமா ராஜபக்ஷ தெரிவித்தார்.
சிட்டினா மதுறு என்ற இடத்தில் வீட்டுக்கு வீடு தனது புதிய அமைப்பு வேலைகள் தொடர்பான பிரசார நடவடிக்கையின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். நிருபமா ராஜபக்ஷ மேலும் தெரிவித்ததாவது;
“மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின் ஜனாதிபதி பதவியை ஏற்றபோது சில நகரவாசிகளுக்கும் சில நகரசபை உறுப்பினர்களுக்கும் பெரும் அச்சம் ஏற்பட்டது. காரணம், 56 புரட்சிகரமான அரசியல் ஏடு புரட்டப்பட்டதும் கிராமப்புறவாசிகளே சகல துறைகளிலும் முன்னுரிமை பெறுவார்கள். ராஜபக்ஷாக்கள் அவர்களுக்கு உதவி புரிவார்கள் என்ற எண்ணமே நகர வாசிகளின் அச்சப்பாட்டுக்குக் காரணியாக அமைந்தது.
நாட்டின் அரசியலில் பாராளுமன்றத்திற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழுபேர் சென்றது ராஜபக்ஷ குடும்பத்திலேயே உள்ளது. நாம் என்றும் கிராமவாசிகளின் இன்பதுன்பங்களில் பங்கேற்ற வண்ணமே இருக்கின்றோம். இதனால் தான் கிராம மக்களின் ஆதரவு எமக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
எனது தந்தை ஜோர்ஜ் ராஜபக்ஷ முதலாவது மீன்பிடி அமைச்சராக இருந்து மக்களுக்கு விசேடமாகக் கடற்றொழிலாளருக்குச் சேவை செய்ததோடு, சுகாதார அமைச்சராக இருந்தும் பெரும் பணிகளைச் செய்தார். அதேபோல் என் அண்ணாவான மஹிந்தராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்து இன, மதபேதம் பாராது முழு நாட்டுக்கும் பணிசெய்கிறார். வடக்கையும் கிழக்கையும் மீட்டெடுத்து வரும் அவரது பணியை யாரும் மறப்பதற்கில்லை’ என்றார்.
ஈழத்தில் தற்போது சண்டை நடந்து வருகிறது. எனவேதான் தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சாதாரண பிரச்சினைதான் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில், விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பினர். அது ஒரு தீவிரவாத அமைப்பு. எனது தந்தையையும், அப்பாவி மக்கள் பலரையும் கொன்ற அமைப்பு அது.
இலங்கைப் பிரச்சினை சாதாரணமானதுதான். அங்கு தற்போது போர் நடந்து கொண்டிருக்கிறது. எனவே தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்படும் தமிழர்களின் பாதிப்புகளைக் குறைக்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது. தமிழ் மக்களின் நிலை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.
அதை நாங்கள் குறைக்க முயற்சிப்போம். இதுகுறித்து இலங்கை அரசை வலியுறுத்தி வருகிறது இந்தியா. இலங்கை தமிழர்களின் உரிமைகள் அவர்களுக்கு கிடைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பாடுபடும். அவர்களின் துயரை துடைப்பதுதான் எங்களின் தலையாய கடமை.