02

02

ஒட்டுமொத்த தலித்துகளும் அதிமுகவைப் புறக்கணிக்க வேண்டும் : திருமாவளவன்

thirmavala.jpg“ஒட்டு மொத்த தலித்களும் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுகவைப் புறக்கணிக்க வேண்டும்” என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

மக்களவை தேர்தலுக்கான திமுக பிரசார பொதுக்கூட்டம் திருச்சியில் நேற்றிரவு நடந்தது. முதல்வர் கருணாநிதி இதற்குத் தலைமை வகித்தார்.இப்பிரசாரக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் இணைந்திருக்கும் தொல்.திருமாவளன் பேசுகையில்,

“ஒட்டுமொத்த தலித்களுக்கும் நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுகவை நீங்கள் புறக்கணிக்க வேண்டும். ஏன் தெரியுமா? அதிமுக, தலித்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தலித்துகள் வளர்வதிலும் அதிமுகவுக்கு விருப்பமில்லை.

எத்தனையோ தலித் அமைப்பினர் ஜெயலலிதாவின் காலில் விழுந்தார்கள். ஆனால் அவர் கண்டுகொள்ளவேயில்லை. திமுக தலைவர் கலைஞரோ தலித்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனம் உள்ளவர். அதனால்தான் தலித் அமைப்பான விடுதலை சிறுத்தைகளுக்கு 2 சீட் கொடுத்திருக்கிறார். அதனால் திமுக கூட்டணியை ஆதரியுங்கள்; அதிமுகவைப் புறக்கணியுங்கள்” என்றார்.

‘மாத்தையா`வின் மனைவி பிள்ளைகள் இராணுவத்திடம் சரண்

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மாத்தையா என்றழைக்கப்பட்ட கோபாலச்சாமி மகேந்திரராஜாவின் மனைவியும் மூன்று பிள்ளைகளும் நேற்று (மே. 1) இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட பிரதேசத்துக்கு வந்துள்ளதாக கொழும்பு இருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிக்கையான `ஐலண்ட்` செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய புலனாய்வு துறைக்கு புலிகளின் தலைமை குறித்த தகவல்களை வழங்கியதாக மாத்தையா மீது குற்றஞ் சாட்டிய புலிகள் 1994 டிசம்பர் 25 ஆம் திகதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றினார்கள்.

இடம்பெயர் மக்களுக்கு உலக நாடுகள் உதவி

fily-ap.jpgயுத்த சூழ்நிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க நோர்வே, இந்தியா, சுவிஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் முன் வந்துள்ளன.

நோர்வே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. அமைப்புகள், உள்நாட்டு மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டர் அமைப்புகள் ஊடாக 10 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக நோர்வே உயர் ஸ்தானிகராலயப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தேவை ஏற்படின் மேலும் உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். நோயாளர்களுக்குத் திருப்தியான சேவையை வழங்க குறைந்தது 1000 படுக்கைகள் தேவைப்படுவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவிக்கின்றார்.

ஏற்கனவே திருகோணமலை புல்மோட்டையில் தள வைத்தியசாலையொன்றையும், மருத்துவர்களையும் மருத்துவ உதவிகளையும் வழங்கி உதவியுள்ள இந்தியா, மேலும் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை வழங்க முன் வந்துள்ளது .இதன் பிரகாரம் 40 ஆயிரம் குடும்பங்களுக்குரிய உதவிப் பொதிகள் ஏற்கனவே இடம்பெயர்ந்தோருக்கு வழங்கப்பட்டுள்ளதோடு மேலும் 50 ஆயிரம் பொதிகள் விரைவில் வந்தடையவிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடம் பெயர்ந்துள்ள மக்களின் உடனத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஜப்பான் 4 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை வழங்க முன் வந்துள்ளது. அதனை யு.என்.எச்.சி.ஆர் ,ஐ.சி.ஆர்.சி., யுனிசெப், புலம் பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு ஆகியவற்றின் ஊடகவே வழங்கத் தீர்மானித்துள்ளது.

அவசர மனிதாபிமான உதவிகளுக்காக 1.23 மில்லியன் அமெரிக்க டொலர் உதவிகளை வழங்க சுவிஸ் முன்வந்துள்ளது. ஐ.சி.ஆர்.சி., உலக உணவுத் திட்டம், மற்றும் யு.என்.எச்.சி.ஆர். ஆகியன ஊடாகவே இதனை வழங்கப் போவதாக அது அறிவித்துள்ளது

முசலிப் பிரதேசத்தில் மீள் குடியேற்றம் : ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் வரவேற்பு

UN_Logoமன்னார் மாவட்டம் முசலிப் பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்துள்ள குடும்பங்களை சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்த இலங்கை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதை ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் வரவேற்றுளள்து. இப் பிரதேசத்திலுள்ள சவேரியாபுரத்திலிருந்து இடம் பெயர்ந்துள்ள 400இற்கும் மேற்பட்டவர்கள் இரண்டு வருடங்களின் பின்பு நேற்று மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த பிரதேசத்தைச் சேர்ந்த 15 கிராமங்களை உள்ளடக்கிய மேலும் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் சொந்த இடங்களுக்குத் திரும்பத் தங்களைப் பதிவு செய்துள்ளனர் என ஐ.நா.அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்வாறான செயற்பாடு சிறிய அளவிலேயே இருந்தாலும், இது வரவேற்கப்பட வேண்டிய முக்கியமான ஒரு நிகழ்வு என்று உயர் ஸ்தானிகராலயம் மேலும் கருத்து வெளியிட்டுள்ளது. இதே போன்று வடபகுதியில் இடம் பெயர்ந்த நிலையில் இருக்கும் மக்களும் மீண்டும் தமது இருப்பிடங்களுக்குச் செல்வார்கள் எனத் தாங்கள் நம்புவதாக உயர் ஸ்தானிகராலய இலங்கைப் பிரதிநிதி அமின் அவாத் கூறுகின்றார்.

முல்லைத்தீவிலிருந்து 355 பேர் ஐ.சி.ஆர்.சி. கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்து வருகை

icrc.jpgமுல்லைத் தீவிலிருந்து ஒரு தொகுதியினர் ஐ.சி.ஆர்.சி. கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 92 ஆண்கள் ,149 பெண்கள், 114 சிறுவர்கள் என மொத்தம் 355 பேர் இப்படி அழைத்து வரப்பட்டுள்ளதாக ஐ.சி.ஆர்.சி. தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் 55 ஆண்கள், 54 பெண்கள் என 109 பேர் நோயாளர்களும் காயமடைந்தவர்களும் ஆவர் .ஏனையோர் அவர்களது உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் என தெரிவிக்கப்படுகின்றது

ஐ.நா.மனிதாபிமானக் குழுவை நிராகரித்ததை கொழும்பு மீள்பரிசீலனை செய்வது அவசியம் – அமெரிக்கா வலியுறுத்தல்

usa-flag.jpgஇலங்கைப் படைகளால் தொடர்ந்து கடுமையாக ஷெல்வீச்சு மேற்கொள்ளப்படுவதாகவும் விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் பொதுமக்களை மனிதக்கேடயங்களாக வைத்திருப்பதாகவும் நேற்றுமுன்தினம் வியாழக் கிழமை தெரிவித்துள்ள அமெரிக்கா, இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயம் எனவும் இந்தப் பிரச்சினையை முழுமையான கவனமெடுத்து கையாளுமாறும் ஐ.நா.பாதுகாப்புச்சபையைக் கேட்டிருக்கிறது.

இரு தரப்பினருமே பொறுப்பாளிகள். இந்த மோசமடைந்து செல்லும் நெருக்கடியில் இந்த அறையிலுள்ள எமக்கும் பொறுப்புகள் உண்டு என்று ஐ.நா.பாதுகாப்புச்சபையில் உரையாற்றுகையில் ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் சூசன் ரைஸ் கூறியுள்ளார்.

இலங்கை நிலைவரம் தொடர்பாக அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. அங்கு இடம்பெறும் மோதலினால் பாரிய மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அப்பாவிப் பொதுமக்களை மோசமான துன்பநிலைக்கு இது இட்டுச் சென்றுள்ளது.

சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை இருதரப்பும் மீறுவது தொடர்பான பாரதூரமான குற்றச்சாட்டுகள் குறித்து நாம் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம் என்றும் சூசன் ரைஸ் குறிப்பிட்டதாக இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை நேற்று தெரிவித்தது. யுத்த நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக இலங்கை உறுதிமொழி அளித்திருந்ததற்கு மத்தியிலும் மோதல் வலயத்திற்குள் ஷெல் தாக்குதல் தொடர்ந்து இடம்பெறுவதாக பலதரப்புத் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், பொதுமக்கள் இழப்புகள் எண்ணிக்கை தொடர்பாக விழிப்பை ஏற்படுத்தும் விதத்திலான அறிக்கைகள் எமக்குக் கிடைத்துள்ளன. புலிகள் பொதுமக்களை மனிதக்கேடயங்களாக வைத்திருப்பது தொடர்பான மிகவும் நம்பகரமான அறிக்கைகளையும் நாம் பெற்றுள்ளோம். மோதல் பகுதியிலிருந்து வெளியேற முயற்சிக்கும் பொதுமக்களை அவர்கள் சுட்ட சில சம்பவங்களும் உள்ளன என்று ரைஸ் கூறியுள்ளார்.

இருதரப்பும் மேற்கொள்ளும் இந்தமாதிரியான நடவடிக்கைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும். சுவீடன் வெளிவிவகார அமைச்சர் சார்ல் பில்ட்ற் கொழும்புக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டமை ஏமாற்றமளிக்கும் விடயமாகும். இலங்கை அரசு ஏன் அவருக்கு அனுமதி மறுத்தது என்பதை அமெரிக்காவால் புரிந்துகொள்வது கடினமானதாக உள்ளது.

மோதல் பகுதிக்கு ஐ.நா. மனிதாபிமானக்குழு செல்வதை நிராகரித்திருப்பதை இலங்கை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்துகிறது. பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கான அனுசரணையாகவும் பொதுமக்கள் பாதுகாப்புடன் வெளியேறுவதற்கான ஒத்தாசை புரியவுமே மனிதாபிமானக்குழுவை ஐ.நா. அனுப்பிவைக்க திட்டமிட்டது. இந்தப் பிரச்சினை தொடர்பாக பாரியளவில் பாதுகாப்புச்சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள முகாம்களில் 1 இலட்சத்து 70 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக இடம்பெயர்ந்து வந்தவர்களுக்குரிய பதிவுகள், தங்குமிடங்கள் வழங்கப்பட்டமை தொடர்பாக நேரில் சென்று பார்வையிட ஐ.நா.வுக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் இலங்கை அரசு அனுமதி வழங்க வேண்டும். 400 பேர் தமது வீடுகளுக்கு திரும்பிச் சென்றுள்ளதாக கிடைத்த அறிக்கைகளையிட்டு வரவேற்பு தெரிவிக்கிறோம். அதேசமயம் மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கான தனது உறுதிப்பாட்டை அரசு தொடர்ந்து கடைப்பிடிக்குமென எதிர்பார்க்கின்றோம் என்றும் சூசன் ரைஸ் கூறியுள்ளார்.

பழம்பெரும் நடிகர் பாலாஜி மரணம்

balaji.jpgநடிகரும், தயாரிப்பாளருமான பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே இன்று அவர் காலமானார். மறைந்த அவருக்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிரபாகரன் குறித்த படத்தில் பிரகாஷ் ராஜ்

prakash-raj.jpgவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இந்தப் படத்தில் பிரபாகரன் வேடத்தில் நடிக்கிறார் பிரகாஷ் ராஜ். இந்தத் தகவலை  அவரே வெளியிட்டார். வித்தியாசமான வேடங்களைத் தேடித் தேடி செய்யும் பிரகாஷ் ராஜ், பிரபாகரன் வேடத்தில் நடிப்பது தனது கேரியருக்கே பெருமை சேர்க்கும் விஷயமாகும் என்கிறார்.

இந்த வேடத்துக்காக பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகங்கள் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட வீடியோக்களை தேடிப்பிடித்து பார்க்கிறாராம் பிரகாஷ்ராஜ்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை இன்னும் அவர் வெளியிடவில்லை.  விரைவில் படம் குறித்த முழு விவரங்களைச் சொல்வதாக அறிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.

இனி ராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – கொஹனே

Dr Kohonaசர்வதேச நாடுகளினால் இலங்கை அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை சமாளிக்கும் வகையில் ராஜ்தந்திர ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதுவராலயங்கள் அந்நாடுகளினது உயர் இராஜதந்திரிகளுடன் இலங்கையின் நன்மதிப்பை கூட்டக் கூடிய வகையில் பிரச்சாரங்களை முன்னெப்பார்கள் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித்த கொஹனே தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்கள் சிந்தும் ரத்தம் வீண் போகாது: வைகோ

vaiko00001.jpgவிருது நகர் தொகுதி வேட்பாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ தனது தொகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
 
இலங்கை தமிழர்கள் சிந்தும் ரத்தம் வீண் போகாது. இந்திய அரசாங்கம் கொடுத்த ஆயுதங்களால் காங்கிரஸ் கொடுத்த ஆயுதங்களால் அங்கு தமிழர்கள் படுகொலை நடந்து வருகிறது. கலைஞர் கருணாநிதிக்கும் இது தெரியும். அவரது குடும்ப நலனுக்காக, பிள்ளைகள் நலனுக்காக தமிழர்களை காவு கொடுத்து உள்ளார்.
 
விருதுநகர் தொகுதிக்கு பிரசாரம் செய்ய ராகுல் காந்தி வருகிறார் என அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. வைகோ பாராளுமன்றத்தில் நுழைந்து விடக்கூடாது என்பதில் அவர்களுக்கு அவ்வளவு அக்கறை. உங்கள் சகோதரனை பாராளுமன்றத்தில் நுழைந்து விடக்கூடாது என்பதற்கு அவ்வளவு முயற்சி. நான் விருதுநகர் தொகுதியில் உங்களது எம்.பி.யாக 2 முறை இருந்துள்ளேன்.
 
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இடத்தில் இருப்பார். அவர் ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் ஏற்படுத்துவேன் என்று அறிவித்து உள்ளார். அவருக்கு என்றும் நான் உறுதுணையாக இருப்பேன். மெத்த படித்த காங்கிரஸ் மேதாவிகள் ஜெயலலிதாவுக்கு சட்டம் தெரியாது என்று கூறுகின்றனர். எந்த சட்டத்தை வைத்து கிழக்கு பாகிஸ்தானை உடைத்து வங்கதேசத்தை உருவாக்கினீர்கள். அதே சட்டத்தை வைத்துதான் ஜெயலலிதாவும் ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் உருவாக்குவார். அப்போதும் இந்த வைகோவும் உடன் இருப்பார் என்றார்.