22

22

நோர்வேயின் ஆயுதச் சந்தையும் சமாதானச் சதுராட்டமும்: நக்கீரா

Pigeon_&_Peaceஇக்கட்டுரை டிசம்பர் மாதம் காசாவினுள் இஸ்ரேலியப் படைகளின் பிரவேசத்தின் போது எழுதப்பட்டது. இந்த பிரவேசத்தின் போது பாவிக்கப்பட்ட ராக்கேட்டுக்களின் லேசர் கயிடட் ராக்கெட்டுக்கள் (Laser guided Heads for the rocket) நோர்வேயிலேயே தயாரிக்கப்பட்டவைகளாகும்.

._._._._._._.

500 ஆண்டுகளுக்கு மேல் உதிரத்திலும், மரபணுக்களிலும், உயிரணுக்களிலும், வெள்ளையரை உயர்ந்தவன் என்று ஏற்று, அடிமை வாழ்வை மனதார மணந்துகொண்ட, ஏமாற்றப்படவே பிறந்த இனமாகி, பின் தன்னைத் தானே ஏமாற்றும் பண்பில் பழகிப்போன என்தமிழினத்தை நொந்துகொண்டு, ஏமாற்றங்களை, எமக்கு இழைக்கப்பட்ட வஞ்சக, துரோக நினைவுளைச் சுமந்து கொண்டு இதை எழுதத் தொடங்குகின்றேன்.

பலமுள்ளதும், வலுவுள்ளதும், ஆதிக்கவெறியும், அதிகாரவலுவும் உள்ள இனம்தான் வாழ்வது என்ற மிருகங்களின் வாழ்வியலை நியமப்படுத்தும் முகமாக நடந்து கொண்ட நோர்வேயின் முகத்திரையை கிழித்து, பின்புல நிகழ்வுகளை, நிதர்சனங்களை வெளிச்சத்தில் காட்ட வேண்டிய கடமையும் கடைப்பாடும் புலம்பெயர்ந்த தமிழ்மக்களுக்கு உண்டு.

அணுக்குண்டு தயாரிப்பதற்குப் பாவிக்கப்படும் பாரநீர் அதனுடைய இரசாயனக் குறியீடு எச்2ஓ2 நோர்வேயின் வடபகுதியில்தான் உள்ளது. இதை தன்வசப்படுத்துவதற்காகவே கிட்லர் இரண்டாம் உலகயுத்தத்தில் நோர்வேயை தனது கைக்குள் கொண்டுவந்தான். உயரமும், மஞ்சள் தலைமுடியும், நீலக்கண்களுமுடைய யேர்மனியர் நோர்வேயிலும் வாழ்கிறார்கள் என்று பறைசாற்றி உயர்சாதியில் இவர்களையும் சேர்த்துக்கொண்டான். ஆனால் கிட்லரோ இதற்கு முற்றிலும் முரணான உருவ அமைப்பைக் கொண்டவன். தன்னைத்தானே வெறுத்ததால் தான் தற்கொலை செய்து கொண்டானோ என்னவோ?

இந்தப் பாரநீரானது எப்படி ராஜிவ்காந்தி பாரதப் பிரதமராய் இருந்த காலத்தில் இந்தியாவுக்கு விற்கப்பட்டிருக்கிறது? உலக அழிவுக்கே வித்திடும் பாரநீர் எப்படி இந்தியாவை அடைந்தது? நோர்வேயின் வெளிநாட்டு அரசியலின் சாசனம் இதை ஒத்துக்கொண்டதா? இவர்கள் விற்கும் கொலைக் கருவிகளை மற்றைய நாடுகள் மூன்றாமுலக நாடுகளுக்கு விற்கலாமா? ஆயுத விற்பனையில் அறுதி அத்தாட்சிப் பத்திரம் கைச்சாத்திடும் போது விற்பனை செய்யும் நாடுகள் அந்த ஆயுதங்களை வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யக் கூடாது என்பது ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறை. சமாதானப் புறாவை சாப்பிட்டு ஏப்பம் விட்டு கொண்டு தம்மைச் சமாதானப் பிரியர்களாகக் காட்டிக் கொள்கிறது நோர்வே. அறுதி அத்தாட்சிப் பத்திரம் பற்றிய சர்ச்சை நோர்வேஜிய நாடாளுமன்றத்தில் நீண்ட காலமாகவே எடுக்கப்பட்டது, எடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அறுதி அத்தாட்சிப் பத்திரத்தை சர்ச்சையாய் ஆட்சியில் இல்லாத போது எடுத்துக்கொண்ட சிவப்பங்கிக்காரர்கள் (எரிக் சூல்கெயும் கட்சி) இன்று ஆளும் கட்சியில் வந்தபின் மௌனிகளாகிப் போயினர். ஏன் அதை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை. ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி மகளே.

நோர்வேயின் ஆயுதப்பட்டடையில் தயாரிக்கப்பட்ட இராக்கட்டுகள், மெசையில்ஸ்கள் சுடுகலன்கள் நாட்டோயூடாக நிக்கராகுவா கெரில்லாக்களை அடைந்தது எப்படி? இது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக நோர்வேஜியப் பத்திரிகையில் வந்தபோது ஊதி ஊதி எரிப்பதற்குப் பதிலாக அணைத்தார்கள். நோர்வேயுடன் சேர்ந்து நாட்டோ எப்போ ஆயுத வியாபாரியானது? நாட்டோவுடனும், அமெரிக்காவுடனும் இணையக்கூடாது என்று தொழிற்கட்சியில் இருந்து பிரிந்து போன சோசலிச இடதுசாரிகள் (சூல்கெய்மின் கட்சி) ஏன் கண்ணை மூடிக்கொண்டிருந்தார்கள். இதைத் தடுப்பதற்கு என்ன செய்தார்கள்?

அழிவாயுதங்களைத் தயாரிப்பது மட்டுமல்ல அதை விற்பனை செய்யும் நாடான நோர்வேக்கு சமாதானத்தைப் பற்றிப் பேசுவதற்கு என்னதான் அருகதை இருக்கிறது? ஆயுதமே சமாதானத்தின் விரோதி. இது தெரியாதா?

2008 மார்கழியில் இருந்து காசாவை ஆக்கிரமிக்கப் படை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும், அன்று நாசிகளால் ஈன இனமாகக் கருதப்பட்டு துவம்சம் செய்யப்பட்ட யூதர்கள் இன்று பாலஸ்தீனரை அழிப்பதற்காக சுடுகலங்கள், போர் விமானங்கள், கெலிக்கொப்டர்கள் இருந்தும் ஏவப்படும் கெல்ஸ் வயர் எனும் ரொக்கட் நோர்வேயிலேயே தயாரிக்கப்படுகிறது. ஆதாரம்: ரிவி2 நியூகெத்தர் (ரிவி2 செய்திகள்) 10.01.2008 நிகழ்ச்சி கொறொஸ்பொன்டான்ச. இதைப்பற்றி வெளிநாட்டமைச்சிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது பூசி மெழுகினார்கள். இப்படி: ”நாங்கள் செய்வதில்லை அதில் ஒரு பகுதியை மட்டுமே செய்கிறோம்” என்று ஆத்தாக்கொடுமையில் அலம்பினார்கள். விழுந்தாலும் மீசையில் மண்பட விடமாட்டார்கள்.

கெல்வ்வெயர் ஏ ஜி எம் 144எம்

நோர்வேயில் தயாரிக்கப்படும் உதிரிப்பாகத்தின் (கொம்பொனட்) தொழில் என்ன? லாசர் கதிர்நோக்கி ஊடு இதை குறிபாத்துச் செலுத்தலாம். 0,5 கிமீ இருந்து 8கிமீ வரை குறிதவறாது பாயக்கூடியதும், பேரழிவைக் கொடுக்கக்கூடியதும் ஆகும். இதை தாங்கி எதிர்ப்பு ஏவுகளைகளாலும் செலுத்தலாம்.

கிளாசபொம்

இலங்கையில் அரசினால் இனவழிப்புக்காக் போடப்படும் கிளாசபொம் பின் உதிரிப்பாகங்கள் நோவேயிலும் செய்யப்படுவதாக அறியப்படுகிறது. இது வானத்தில் வெடித்துச் சிதறி, பின் பரவி விழுந்து சின்னாபின்னமாகச் சிதறும் தன்மை கொண்டது. அது மட்டுமல்ல உடனடியாக வெடிக்காது சில மணித்தியாலங்கள், கிழமைகள், மாதங்கள் கழிந்தும் பிரிந்த துண்டுகள் வெடித்துச்சிதறும். இது ஒரு குறிப்பிட்ட ஒரு முகாமையோ, நபரையோ அழிப்பதற்குப் பயன்படுத்த இயலாது. ஒரு பகுதி நிலப்பரப்பிலுள்ள உயிர் வாழ்வனவற்றையும் கட்டிடங்களையும் அழிக்க வல்லது. இக்குண்டுகள் தயாரிப்பதன் நோக்கம் என்ன? இதை இனவழிப்புக் கருவி என்பதை விட வேறு எப்படிச் சொல்லலாம். ஒரு குண்டானது 250 அலகுகளை (யூனிட்டுக்களை) கொண்டது. அதாவது ஒரு குண்டைப்போட்டால் 250 குண்டுகளை கொட்டியதற்குச் சமனானது.

ஆடு நனைகிறது என்று ஓநாய் விழுந்து விழுந்து அழுதது போல் நோர்வே, 64 நாடுகளை தலைநகர் ஒஸ்லோவிற்கு ஓரிரு மாதங்களுக்கு முன் அழைத்து ஒருமகாநாடு நடத்தி கிளாசபொம் தடைசெய்வது என்று கைச்சாத்திட்டார்கள். மகாநாட்டுக்கு வந்திருந்த போலந்து, ரோமானிய, யப்பான் கையொப்பமிட மறுத்தன. 2ம் உலகயுத்த அழிவின்பின்பும் யப்பானுக்கும் போர் வெறியா? தன் படையை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில்லை என்ற வெளிநாட்டுக் கொள்கையைத் தளர்த்தி இராக்குக்கு யப்பான் படை அனுப்பியது. ஐ.நா வின் ஐயா அக்காசியார் இருக்கும் போதே இப்படி ஒரு கையொப்ப மறுப்பு. இம்மகாநாட்டின் சிறப்பு என்ன என்றால் இக்கிளாச பொம்பை தயாரிக்கும் முக்கியமான நாடுகளான அமெரிக்கா, இரஸ்சியா, இஸ்ரேல் கலந்து கொள்ளவில்லை. இனி நோர்வே இவற்றை தயாரிக்கும், மற்ற நாடுகள் மக்கள் தலையில் இவற்றைக் கொட்டலாம்.

அதேவேளை இலங்கையில் நோர்வேயின் நடுவத்தால் உருவாக்கமடைந்த புரிந்துணர்வு சாமாதானம் கந்தலாகி சிங்கள அரசால் தமிழர்கள் மேல் கிளாசபொம் போடப்படுகிறது. இதை எப்படி நோர்வே மறந்து போனது? இதை நினைவுபடுத்த ஊர்வலமாய் சென்று திரண்டார்கள் ஒஸ்லோவாழ் தமிழ் மக்கள். இது கருத்தில் கொள்ளப்பட்டதா? இதற்குப்பின் இருமாதங்கள் முடியுமுன்னரே நோர்வே தயாரிப்பான கொல்ஸ் வயர் பாலஸ்தீனர்கள் தலையில் வெடித்துச் சிதறியது. எங்கே சமாதானம்? எங்கே உடன்பாடு? நோர்வேஜியர் சமாதானப் பிரியரா? இரத்த வெறியரா?

பாலஸ்தீன சமாதான உடன்படிக்கை, இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பவற்றிடையில் பல ஒற்றுமைகளைக் காணலாம்

· யசீர் அரபாத்துக்கும், இஸ்ரேலிய சீமன் பெரஸ்கும் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கி தாஜா பண்ணப்பட்டது. அதே போன்று அன்ரன் பாலசிங்கத்துக்கு சிறுநீரகம் மாற்றப்பட்டது. இன்று சிறுநீர் கழிக்கவே வழியற்றுப்போனது தமிழ்ச் சமூகம்.

குறிப்பு: இதே சீமன் பேரஸ் இன்று அரசில் இருந்து கொண்டு பாலஸ்தீனர்களைக் கொல்வதற்கும் நாடுபிடிப்பதற்கும் படையனுப்பியுள்ளார். இவருக்கு நோர்வே சமாதானத்துக்கு நோபல் பரிசு கொடுத்தது. நோவேஜியக் கொடியில் சரிந்து கிடக்கிறது சிலுவை. இன்னுமேன் இது உலகத்திற்குப் புரியவில்லை. ஏமாற்றப்படவே பிறந்த தமிழ் இனத்துக்குத்தான் இது புரியவில்லை, மற்றவர்களுக்குமா?

·மேற்கூறியதை எடுத்து நோக்கினால் தனிமனிதத் துதிபாடல்கள் என்னத்தை எமக்குத் தெரிவிக்கிறது? பெரும் போராட்டமும், மனித அழிவுகளும் ஒருசில தனி மனிதர்களிலேயே தங்கியிருக்கிறது என்பதையும், அனைத்து ஏகாதிபத்தியத்தாலும் ஒடுக்கப்படும் மக்கள் கூட்டம் துணிந்து போராட முயன்றால் மட்டுமே சமாதானம் என்பது சாத்தியமாகும்.

·இரண்டு ஒப்பந்தங்களும் ஒஸ்லோவில்தான் கைச்சாத்திப்பட்டன. முடிவு எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் தான் பார்க்கிறீர்களே.

·இந்த ஒப்பந்தங்களுக்குப் பின்பும் நோர்வேஜிய ஆயுதங்கள், போர்க்கருவிகள், வெடி பொருட்கள் இந்நாடுகளுக்கு விற்கப்பட்டுள்ளன. அவை பயன்படுத்துப்பட்டுமுள்ளன.

·ஒப்பந்தங்கள் கைச்சாத்து இட்டபின் இன்நாடுகளின் தலைவிதிகள் அமெரிக்காவிடமே ஒப்படைக்கப்பட்டது.

·தறிய றோலாசன் (பாலஸ்தீன ஒப்பந்தம்) எரிக் சூல்கெயிம் (இலங்கை ஒப்பந்தங்கள்) முடிந்த கையுடன் அமெரிக்கா பறந்ததை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். நோர்வே அமெரிக்காவின் கைப்பொம்மையாகிப் போனதும், அமெரிக்கா தன் விரல் நுனியசைவில் நோர்வேயை வைத்து பொம்மலாட்டம் புரிவதும் ஏன் இன்னும் புரியவில்லை?

·இரு ஒப்பந்தங்களும் கைச்சாத்திட்ட மேசையின் கீழேயே நோர்வேஜிய கொலைக்கருவிகள் வலிமையுள்ள பக்கத்தாருக்கு விற்கப்பட்டுள்ளது. ஆதாரம்: உயிர்மெய்யில் சியாமளாவின் கட்டுரையும், ரிவி-2 கொரெஸ்போன்டன்ஸ். கேவலம் சமாதானப் பேச்சுவார்த்தை என்பதே ஆயத விற்பனையாகிவிட்டது.

·இருபக்கங்களிலும் முறுகல் நிலை ஏற்படும்போது அயல்நாடான எகிப்துக்கும், இந்தியாவுக்கும் தடிகொடுத்து ஓடுகிறார்கள். பேசவேண்டியது பிரச்சனைக்குரியவர்களுடனேயே தவிர, இவர்களோடல்லவே.

ஒரு பூனைக்குக் கால்முறிந்ததும் கூயோ மாயோ என்று குளறியடித்து ஒடித்திரிந்து ஆயிரக்கணக்கில் செலவு செய்து தொலைக்காட்சிகளில் முகம் துலைக்கும் நோர்வேக்கு, இலங்கை அரசு புலிகளை வெல்வதாய் என்று உலகுக்கு காட்டாப்புக் காட்டிக்கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்தையே குலையோடு கொய்தெறியும் படையெடுப்பைத் தொடங்கியுள்ளது என்பது புரியாமலில்லை. ”இந்த இன அழிப்பு நோர்வேக்குப் புரியவில்லையா…?” இப்படியொரு நினைப்பு நமக்கு ஏற்படுமாகில் பச்சை முட்டாள்கள் நாமேயன்றி வேறாருமல்ல. இந்தக் கள்ளப் பூனை இப்படியேதான் பாசாங்கு காட்டும். இது நோர்வேஜியப் பூனை.

இன்றுவரை நோர்வே ஈடுபட்ட சமாதான நடவடிக்கைகளில் வெற்றிகரமாய் நடந்து முடிந்து, மக்கள் அமைதியாக வாழும் ஒரு நாட்டைச் கூறுங்கள் பார்க்கலாம்? குவாத்தமாலா என்கிறீர்களா? அங்கும் நோபல்பரிசு கொடுக்கப்பட்டது. பிரச்சனை முடிந்ததா? தீர்ந்ததா? விடமாட்டார்கள் சமாதானப் பிரியர்கள்… சமாதானத்தைப் பிரிப்பவர்கள்.

இங்கே வேடிக்கை என்னவென்றால் இலங்கையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் முறுகல்நிலையில், முறியும் தறுவாயில் அல்லாடும் போது திரு எறிக் சூல்கெய்ம் அவர்கள் ”நேபாளம் விரும்பினால் தாம் தரகராக இருக்கத் தயார்” என்று சர்வதேச ஊடகங்களுக்கு இலங்கைத்தரகர் எரிக் சூல்கெம் கூறியதை உலகமக்களே வாய்பொத்திச் சிரித்தார்கள், தம்நாடுகளிலும் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு சமாதானத்துக்கு வந்துவிடுவார்களோ என்ற பயம்தான்.

இலங்கையில் ”புரிந்துணர்வு ஒப்பந்தம்” என்பது எவ்வளவு சாத்தியம் என்பதை நாம் பெரிய பெரிய ஆய்வுகள் செய்துதான் விளங்கிக்கொள்ள வேண்டிய எந்த அவசியமுமில்லை. எவ்வளவோ பொருள், உயிர், உடைமை அழிவுகளின் பின்பும் உணர்ந்து புரிய முடியாதவர்களிடம், புரிந்து உணருங்கள் என்றால் இது எப்படிச் சாத்தியமாகும். சாத்தியமாகா ஒன்றை பேச்சுவார்த்தை மேடைக்குக் கொண்டுவருவது என்பது வெறும் கண்துடைப்பு மட்டுமல்ல பெருலாபம் ஈட்டக்கூடிய ஆயுதக் கடைவிரிப்புத்தான். சமாதான மேசையை ஆயுதச்சந்தையாக மாற்றவல்ல அனுபவம் வாய்ந்தது நோர்வே போன்ற நாடுகள் என்பது ஒன்றும் அதிசயமான விடையமல்ல.

அரசியல், பொருளாதார, கலாச்சார, சரித்திரப் பின்னணிகளைப் புறம்தள்ளி பேச்சு வார்த்தைக்கு அழைப்பது என்பது வெறும் ஆயுதச்சந்தைப்படுத்தலே. இலங்கை ஒப்பந்தத்தில் மேற்குறிப்பிட்ட எதுவுமே கருந்தில் கொண்டதாக தெரியவில்லை. பலவகையான சமாதானங்கள் உலகில் உண்டு. அமைதி என்பது பலவழிகளில் ஆக்கப்படலாம். இரு சமூகங்களும் ஒன்றை ஒன்று சமமாக மதிப்பதூடும், சுயநிர்ணய உரிமையுடனும், மற்றை அல்லது ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பில்… இப்படிப் பலமுறைகளில் பலநாடுகள் பல்லினக்கலாசார சமூகங்கள் சேர்ந்து வாழுகின்றன.

இன்னுமொரு அமைதியான சமாதான வாழ்வும் உண்டு என்பதை இலங்கை அரசாங்கம் மட்டுமே உணர்ந்துள்ளது. ஒரு இனத்தை முழுமையாக அழிப்பதூடும், வாய்மூடி மௌனியாக்குவதூடும் சாமாதானத்தை ஏற்படுத்தலாம் என்பதை இலங்கையரசு நன்கறியும். காரணம் கையாலாகாத தமிழ்சகோதரங்கள் அயல்நாட்டில் வாழ்வதும், காசைமட்டும் கொடுப்பதால் சமாதானத்தை வாங்கிவிடலாம் என்று கனவுகாணும் புலம்பெயர் சமூகம் இருப்பதுமேயாகும். தமிழ்நாடு துப்பித்தள்ளினால் இலங்கையில் சுனாமி ஏற்படும் என்ற நிலையிருந்தும், தமிழக மீனவர்கள் கன்னாபின்னமாக பாவத்தின் ஒரு கண்ணீர்துளியாய் காட்சியளிக்கும் இலங்கையின் இராணுவத்தால் சுடப்பட்டபோதும் கண்மூடிக் கிடந்தது இந்திய மத்திய அரசம், மாநிலஅரசு? கொடிபிடிக்கலாம், ஊர்வலம் நடத்தலாம் முடிவு என்ன என்பதே முக்கியமானது. தள்ளாத வயதிலும் தளராத ஆசையுடன், கெட்டுப்போன கண்ணுக்கு கறுப்புக்கண்ணாடி போடும் கிழவனால் எப்படித் தன் மக்களைக் பார்க்க முடியும். இப்படிப்பட்டவரிடம் எம்மக்கள் மதிப்பும், மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்தார்களே என்பது வேதனைக்குரியதுதான்.

இந்தியத் தமிழர்களே! சிந்திப்பீர்களா? உங்கள் கடற்கரைகளில் பிணமாய் மிதந்து எண்ணின உயிர்களுக்கு கொடுக்கப்பட்ட விலை என்ன? கித்துல் மரங்களில் கள்ளு இறக்கியவர்களை இராணுவத்தில் சேர்த்து எம்மினத்து இந்தியகரைஞர்களை கொன்று கடலில் விதைத்தார்களே…. உங்கள் விலை என்ன என்பது புரிகிறதா? ஈழப்போராட்டம் உண்மையிலேயே தமிழ்நாட்டிலேயே மையம் கொண்டிருக்க வேண்டும்…. நடந்தா? ஏன் இன்னும் இல்லை. கெடுகிறேன் பிடிபந்தம் என்றால் நாம் என்ன செய்வது?

இனி இலங்கைக்கு வருவோம். அன்ரன் பாலசிங்கத்துக்கு சிறுநீரகம் மாற்றி புலிகளிடம் நன்மதிப்பைப் பெற்று பின் தமிழரின் சிறுநீரகங்களை எடுப்பதற்காக சமாதானம் பேசிக்கொண்டு ஆயுதவிற்பனையை மேற்கொண்டது நோர்வே. கேட்டுப் பாருங்கள் நாம் எங்கு விற்றோம் என்பார்கள். செக்கியா, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளுக்கு அறுதி அதிகாரசாசனம் இன்றி ஆயுதங்களை விற்றது யார்? இன்று கூட அறுதி அதிகாரசாசனம் இன்னும் கைச்சாத்திடப் படவில்லை. நோர்வேயால் தன்கொடியில் சரிந்து கிடக்கும் சிலுவையை நிமிர்த்தி, நெஞ்சில் கைவைத்து தம் ஆயுதங்களால் உலகில் எவரும் சாகவில்லை என்று கூறமுடியுமா?

இலங்கைக்கு இரஸ்சிய ஆயுதங்களையும், இரஸ்சிய பழங்கிடவல் மிக்-29 போன்ற போர் விமானங்களையும் இலங்கைக்கு விற்பனை செய்தது உக்கிரேனியா? இரஸ்சியா நாட்டேவில் இல்லையா? இதே நாட்Cவில்தானே நோர்வேயும் இருக்கிறது. இந்த நாட்டோவைத்தானே வேண்டாம் என்று புறக்கணித்து புதிய சோசலிச இடதுசாரிகள் உருவானார்கள் (எரிக் சூல் கெய்மின் கட்சி)

நடுவர்களாகவோ, இணைப்பாளர்களாகவோ, தொடர்பாளராகவோ இருப்பவர்களுக்கு குறைந்த பட்சம் அந்நாட்டுப் பின்னணிகள் தெரிவதுடன் அம்மக்கள் மேல் அக்கறையும் அபிலாசைகளும் இருப்பது முக்கியமானது. ஏரிக் சூல்கெய்ம் கொம்பனிக்கு இந்த அக்கறைகள் இருந்ததாக யாராவது சொல்லட்டும்…? அப்படி அக்கறை இருந்திருந்தால், இரு தரப்பினரும் ”ஒப்பந்தத்தை நீதான் முதல் முறித்தாய், இல்லை நீதான் முதலில் மீறினாய்”; என்று ஒருவரையொருவர் சாட்டுச் சொல்லிக்கொண்டு சுடுபட்டதுமல்லாமல் உடன்படிக்கையை முறித்து, மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையையும் சிதைத்து, இரு பக்கமும் அடி வாங்கும் மத்தளத்தின் நிலைக்கு மக்களை மரணத் தீயில் தள்ளி போரை முதன்மைப் படுத்திய போது குறைந்த பட்சம் எரிக் சூல்கெய்ம் அமெரிக்காவுக்கு முதுகு சொறியவாவது போயிருக்கலாம். போனாரா? அது எமக்குத் தேவையுமல்ல. பத்திரிகையில் பார்த்தேன் நோர்வேயின் அறிக்கை ஒன்றை ”பெரிதாகச் சண்டை பிடியாதீர்கள்” என்றிருந்தது. கொலை என்று வந்தபின் அதில் பெரிதென்ன, சிறிதென்ன?

புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிவடைந்து, இனவழிப்புப்போர் உக்கிரமடைந்தும் நோர்வே வாய் மூடி மௌனியாக இருந்தது ஏன்? செஞ்சோலையில் சிறுவர்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டார்களே, உலகெங்கும் தமிழ் வானெலிகள், இணையங்கள், சகல ஊடகங்களும் கண்ணீர் விட்டதே, நோர்வே மட்டும் கண்மூடிக்கிடந்தது ஏன்? சரி அரசு சொல்வது போல் புலிப்பிள்ளைகளாவோ அன்றி புலிக்குட்டிகளாகவோ இருக்கட்டுமே. நோர்வேயின் அக்கறை என்ன ஆனது? உயிர்களின் விலை என்ன? நோவேயிய தெருப்பூனையின் விலையை விடக்குறைவுதான்.

புலிகளின் தரப்பிலிருந்து செய்திகளைக் காவிவந்த தமிழ்ச்செல்வன் சமாதானத்தின் முகமாக உலகுக்கு காட்டப்பட்டு வந்தார். இந்த முகம் சிதைக்கப்பட்டபோது இந்த ஒப்பந்ததைத்தை எற்படுத்திய நடுமக்குழு யாருக்கு சிறுநீரகம் மாற்றிக் கொண்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக இவர்களிடமிருந்து வெளிவந்த காத்திரமான கண்டனமோ, கனமான கவலைகளோ, குறைந்தபட்ச கேள்விகளோ இல்லை. வந்தோம், பார்த்தோம், கதைத்தோம், விற்றோம், சண்டை பிடிக்கப் போறோம் என்றீர்கள் விட்டுவிட்டோம். இச்சமாதானக்குழுவை நடுமக்குழு என்பதா? தரசர்கள் குழு என்பதா? சமாதானத்தின் பெயரில் பொழுது போக்கும் சுயலாபக்குழு என்பதா?

சமாதான ஒப்பந்த காலத்திலேயே பல அறிவாளிகளையும், அப்பாவிப் பொது மக்களையும் துரோகிகள் என்ற முத்திரையை முகத்தில் குத்தி உயிர்களைக் கிழித்துப் போட்டார்களே அவற்றையும் இந்தக் எரிக் சூல்கெய்ம் கொம்பனி கண்காணித்துக் கொண்டு பேசாமல்த்தானே நின்றது. அக்கறை அக்-கரையானதேன்? அக்கறை ஆயுத விற்பனையில் இருக்கும் போது உயிர்களைப் பற்றி ஏன் இவர்கள் அக்கறை கொள்ளப்போகிறார்கள். புலிகளுக்கு நவீன தொலைத் தொடர்புசாதனச் சாமான்கள் கொஞ்சத்தைக் கொடுத்துக் குளிரப் பண்ணிவிட்டு, மறு கதவால் சர்வதேச நாடுகளால் தடை செய்யப்பட்ட சமூக அழிவுப் போராயுதங்களை இலங்கைக்கு வியாபாரம் செய்த இவர்களின் அங்கிடு தத்தங்களை எந்த நீதியின் தராசில் வைத்துத் தீர்ப்பிடுவது.

Pigeon_&_Peaceசமாதானத்தைப் பயன்படுத்தி புலிகளை அழிக்கும் முயற்சியில் இலங்கை அரசும், நோர்வேயும் நினைத்த வெற்றியை ஈட்டியுள்ளனர் என்பதே நிதர்சனம். இதற்கு ஒரு உதாரணத்தை வைக்க விரும்புகிறேன். தமிழ் செல்வனுடனான குழு தம்பிரச்சினைகளையும், அரசாங்கத்தின் அத்துமீறல்களையும் நோர்வேயிடம் கூறுவதற்காக வந்திருந்தபோது, பின்கதவால் சிங்கள அரசை அழைத்துவந்து பேசும்படி திணித்தது நடுமக்குழு. தமிழ்செல்வன் குழுவினர் முன்கூட்டியே நடுமக்குழுவுக்கு அறிவித்திருந்தார்கள் நாம் வருவது நோர்வேயுடன் கதைப்பதற்கே அன்றி இலங்கையரசுடன் அல்ல என்பதை.

சமாதான உடன்படிக்கை இழுபறிப்படும்போது எறிக் சூல்கொயும் எங்கே போனார்? அவர் தனது பிள்ளையையும் புதுமனைவியையும் அழைத்துக்கொண்டு சீனாவுக்கு உல்லாசப்பயணம் போயிருந்தாராம். அங்கும் ஆயுதவிற்பனையோ யாருக்குத் தெரியும். அவ்வளவென்ன இன்னும் எவ்வளவோ நடத்தும் நோர்வே மௌனம் சாதிப்பதில் இருந்து என்ன தெரிகிறது? ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கைச்சாத்திடும்போது, மீறுபவர்கள் மீதான நடவடிக்கை என்ன என்பதை குறிப்பிட்டிருந்தார்களா? குறிப்பிட்டிருந்தால், மீறியவர்கள்மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டதா…? ஏன் எடுக்கப் படவில்லை. ஒப்பந்தத்தில் அப்படி எதுவும் குறிப்பிடப்படாமல் இருந்திருந்தால் இது வெறும் அரசியல் உல்லாசப் பொழுது போக்கும், ஆயதக் கடை விரிப்புமே. நோர்வேயின் சமாதானத்தின் மேலுள்ள நேர்மை, நோக்கம், மனிதநேயம், இரட்டைவேடமும் கபடத்தனமும் என்பன புலனாகிறது.

நோர்வே இதைத்தான், இப்படித்தான் செய்ய வேண்டும் என்று எந்த அபிப்பிராயமும் சொல்லாதாம், (ஒரு தரப்புக்கு சாதகமானதொரு சிறு அபிப்பிராயத்தைச் சொல்லப்போய், மற்றைய தரப்பின் மனஸ்தாபத்தை உண்டாக்கி, ஏன்தான் வீணாக ஆயுத மார்க்கெற்றை அநியாயமாக்குவான்) எதையும் திணிக்காதாம், மிகவும் நல்ல பிள்ளையாம், புலிகளும் அரசும் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வருவதற்கு நோர்வே இருசாராரையும் அழைத்து வந்து வட்டமாய் குந்தியிருந்து கதைக்க மட்டும் ஏற்பாடு செய்யுமாம். என்றால் இதற்கு நோர்வே எதற்கு? ஒரு கொட்டேல் பணியாளர் போதுமே. 1948ல் இருந்தே இரு தரப்பும் பேசிக்கொண்டு தானே இருந்தன. பேசிப் பேசிக் கொண்டேதான் இருக்கின்றன. எடுக்கப்பட்ட முடிவுகள் சரியாக நடைமுறைப்படுத்தப் படுகின்றனாவா? அப்படி நடக்காவிட்டால் முடிவு என்ன?, அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எனும் நிறைவேற்று அதிகாரமோ, அன்றி உலக அரங்கிற்கு இந்தப் பிரச்சனையை காவிச் செல்லும் வலுவோ, வல்லமையோ இல்லாத நோர்வேக்கு எதற்கு இந்த சாமாதான வேசம். இருபகுதியினரையும் தட்டிக்கேட்க திராணியற்ற நோர்வேக்கு எதற்கு இந்த தரகு வேலை.

சமாதானத்தரகு வேலைக்கு முன் எம்அடிப்படை பிரச்சனைகள் அலசி ஆயராயப்பட்டிருந்தால் தரகர்குழுவுக்கு புரிந்திருக்கும் இரு இனத்துக்கும் ஆணிவேரிலேயே துவேசம் ஏறிக்கிடக்கிறது என்று. இதைக் கழுவித் துடைத்தபின்பே ஒற்றையாட்சியையோ, அதிகாரச் சமபயிர்வையோ கதைக்கலாம். இலங்கையின் அமைதிக்கான எந்தவித அடிப்படை வேலைகளையும் செய்யாமல் காடுகளில் கட்டவிழ்த்து நின்ற முரட்டு மாடுகளை எழுத்துவந்த வண்டியில் கட்டினால் அவை எப்படி வண்டியை இழுக்கும். இழுக்கும். முரண்டுதான் பிடிக்கும். எலியையும் பசியுடன் இருக்கும் பூனையையும் பிடித்து வந்து ஒருவரை ஒருவர் கதைத்துக் கொண்டிருங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று விட்டால் என்ன நடக்குமே அதுவே நடந்தது. இது கூடத்தெரியாமல் என்ன பேச்சுவார்த்தை வேண்டியிருக்கிறது?

ஒன்றை ஒன்று வி(பி)ராண்டத் தொடங்கியபோதும் நடுமக்குழு பார்த்துக் கொண்டுதான் இருந்தது. நோர்வே பார்த்துக்கொண்டுதான் இருந்தது. இவர்கள் பார்த்துக்கொண்டு மட்டும் தான் இருப்போம் என்று தானே சொன்னார்கள். அப்படிப் பார்த்துக் கொண்டிருப்பது என்றால் பேச்சு வார்த்தையின்றி போரைப்புகைய விட்டுவிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கலாமே. என்ன புலிகளை வலுவிழக்கச் செய்திருக்க இயலாது. ஆயுதங்களும் கைமாறியிருக்காது. அன்று புலிகள் மிகப்பலத்துடன்தான் இருந்தார்கள்.

புலிகளை விரட்டுகிறேன் சிங்கக்கொடி தேசம் எங்கும் பறக்கும் நாளை விரைவில் எதிர்பாருங்கள் என்று மகிந்த குதிக்கிறார். இதை நோர்வேதான் தேடித்தந்தது என்பதை சிங்களமக்கள் என்று உணர்வார்களோ? நோர்வேயின் சதுரங்கதைத்தைப் புலிகள் எப்போ புரிவார்களோ?

புரிந்துணர்வு ஒப்பந்தம் 6 மாதம் ஒரு வருடத்துக்கு மேல் இழுபடுமானால் இது புலிகளைப் பலவீனப்படுத்துவதுடன் போருக்கே வழிவகுப்பும் என்று தன்னைத்தான் புலியா பிரமைகாட்டுபவரின் கூறியபோது அவர் சொன்ன பதில் என்னை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. நீங்கள்தான் அறிவாளிகள் அங்குள்ளவர்கள் எல்லாம் முட்டாள்களா என்றார். இன்று நடந்தது என்ன? நாம் கொடுத்த உயிர்கள் என்ன? விலைகள் என்ன?….? மனமுவர்ந்து இருபகுதியும் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்தால் தீர்வுக்கு ஒரு மணிநேரம் போதும். எதையும் விட்டுக்கொடுக்க விரும்பாதவர்களும், நடுமையாய் பார்த்துக் கொண்டிருப்பவர்களும் கூடிக்கதைத்தால் சாவது சனங்கள் தான். இப்படி இழுபட்ட பேச்சுவார்த்தைகாலம் பெரும் போருக்கான, மனிதஅழிவுக்கான தயார்படுத்தல் காலமாகவே இருந்திருக்கிறது. இங்கே அழிந்ததும் அழிந்து கொண்டிருப்பதும் தமிழ், சிங்கள மக்கள் மட்டும் தான். நோர்வே பார்த்துக்கொண்டுதான் இருக்கும். முடிந்தால் கண்ணாடி வாங்கிக் கொடுங்கள் இன்னும் வடிவாகப் பார்க்கட்டும்.

சுனாமி வந்து இலங்கையைத் தின்றது, 60 000 மேற்பட்டோரைக் கொன்றது. இதில் தமிழர்களே அதிகம். ஆனால் நோர்வேயின் உதவிப்பணம் யாரைப்போய் சேர்ந்தது? ஆழிப் பேரலையால் அழிந்து அல்லற்படும் மக்களை அந்தப் பணம் போய்ச் சேர்ந்ததா?, அப்படி சேர்ந்தால் அனுப்பப்பட்ட பணத்தில் எத்தனை சதவீதம் அந்த மக்களைச் சென்று சேர்ந்தது போன்ற கேள்விகளை ஒருபுறம் தள்ளி வைப்போம். இந்த சந்தர்ப்பத்தில் நடந்த சில சம்பவங்களை அறியும்போது நமக்குச் சிறுபிள்ளைத் தனமாகத் தெரியலாம், ஆனால் அதன் பின்னணியில் பொதிந்துள்ள அரசியல் இனம் இனத்தோடு என்பதுபோல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பேரினவாதம் பேரினவாதத்தோடு கை குலுக்கி தனது காதலை வெளிப்படுத்தும். அதாவது ஒரு சிறு சம்பவத்தைப் பாருங்கள்: சுனாமியில் அழிக்கப்பட்ட புத்தவிகாரை ஒன்றை நோர்வே தாம் திருத்தித் தருவதாக செய்தி பத்திரிகைகளில் வந்தது. எத்தனையோ கோவில்கள், தேவாலயங்கள் அழிக்கப்பட்டனவே நோர்வேக்கு அவை ஏன் புலப்படவில்லை. இதையெல்லாம் சிலாகித்து எழுதும் அளவிற்குப் பெரிய விடயமா எனும் கேள்வி உங்களுக்கு எழலாம். நான் இதை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது. ”நான் உன் மீது காதலும் பாசமும் கொண்டனான்தான் கண்ணா, என்னையும் வெள்ளைப் புலியாக்கி கொடும்பாவி கொழுத்தாதே…” என்று சிங்களப் பேரினவாதத்திடம் தன் லவ்வை வெளிப்படுத்தும் ஒரு சென்ரிமென்ற் உளவியல் நடவடிக்கை என்பதுதான் உண்மை.

எத்தனை துரோகங்களைச் சந்தித்தது ஈழத்தமிழினம், ஆனால் நோர்வே செய்தது போன்ற துரோகத்தையோ, ஈனச்செயலையோ எவரும் இந்த இனத்துக்கு இழைத்ததில்லை.

உலகப் பேரினவாத அரசுகள் தத்தமக்குள் ஒன்றுசேரும், உறவாடும் என்பதுவே சர்வதேசிய யதார்த்தம். இந்த சர்வாதிகார அரசுகளால் அடக்கி ஒடுக்கப்படும் மக்களை இவர்கள் ஒன்றுசேர விடாமல் தடுக்கும் பணியையும் கூட்டுச் சேர்ந்தே செய்வார்கள். இதற்குத்தானே இனம் மதம் சாதி குலம் கோத்திரம் என்று எண்ணிலடங்கா வகைகளில் பிரித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் பேரினவாதிகளும், சர்வாதிகாரிகளும் இவற்றையெல்லாம் தாண்டி ஒன்று சேர்வார்கள். உதாரணம் இந்திய மத்திய அரசு, அமெரிக்கா, பாக்கிஸ்தான் நோர்வே….

தமிழ்மக்களின் மக்கள் தொகையைவிடக் குறைந்த கொசோவோ, மெந்தோநீகரோ, எரித்திரியா, கிழக்கு திமோர் போன்ற நாடுகள் தனியாக, தனித்துவத்துடன் வாழப் பிரிந்து போகலாம் என்பதை ஏகோபித்து மானசீகமாக அங்கீகரிக்கும் இவர்கள் இலங்கைத் தமிழர்கள் பிரிவினையில் மட்டும் விதிவிலக்காக நடக்கிறார்களே ஏன்? (ஈழப் பிரிவினைதான் ஒட்டுமொத்த இலங்கைப் பிரச்சனைக்குமான ஒரே தீர்வு என்ற கருத்தியலோடு இயங்கிய பலர் இப்போ புலிகளைப்போல் அதை மறு பரிசீலனை செய்தார்கள். தனித்தமிழீழம் இப்போ தேவையா இல்லையா என்ற வாதப் பிரதிவாதங்கள் ஒரு புறமிருக்கட்டும் அதை இன்னொரு கட்டுரையில் பேசுவோம். ஒரு கண்ணுக்கு எண்ணையும் இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பும் போடும் இந்த சர்வதேச பெரும்பான்மைப் பயங்கரவாத அரசுகளின் பக்கம்சார் நடவடிக்கைக்காகவே இதை இங்கே குறிப்பிடுகின்றேன்.)

நோர்வேயிலும் சிறுபான்மை இனமாக வாழ்ந்து வரும் சாமர் எனும் இனத்தவர் நோர்வேஜியரால் அடிமைகளாக நடத்தப்பட்டனர், உரிமைகள் மறுக்கப்பட்டனர். தாயிடம் பால் குடிக்கும் விலங்குகளுக்கு உரிய உரிமை கூட சாமர் இன மக்களுக்கு மறுக்கப்பட்டது. இந்தச் சாமர் தான் நோர்வேயின் ஆதிக்குடி என்பது உணரக்கடவது. இவர்கள் தமது மொழியான சாமிஸ்கை பேசும் உரிமை மறுக்கப்பட்டது. அவர்கள் குடும்பங்களை சிதைத்துச் சுக்கு நூறாக்கப்பட்டது. தாயின் முலையில் பால்குடித்துக் கொண்டிருந்த சாமர் குழந்தைகள் நோர்வேஜியப் பணக்கார வீட்டுக் கல்யாணத்துக்கு பரிசுப் பொருளாக, வீட்டு வேலைக்காரராக, குழந்தைத் தொழிலாளர்களாக கொடுக்கப்பட்டு அடிமைகளாக தம்வாழ்நாள் முழுவதையும் வாழ்ந்து தீர்த்தார்கள். இச்சாமரைப்பற்றி தொடர்ந்து எழுதினால் இதுவே ஒருதனிப் புத்தமாகி விடும்.

நோர்வேஜியர்களும் ஆதிக்கவாதிகளே, அதிகார வெறியர்களே. அயல் நாடுகளைக் கொள்ளையிட்டு தம்மை வளர்த்த வீக்கிங்குள் எனும் கடற்கொள்ளையர் இனமே இந்த நோவேஜிய இனம். இன்றும் இவர்களது அடிமன அரசியலில் சாமர் இன மக்களை இழிவானவர்களாக, கீழானவர்களாக நோக்கும் தன்மையைக் காணலாம், சட்டம் இறுக்கமாக இருந்தாலும் கூட. இவர்களிடம் இருந்து சமாதானத்தையும் ஒருமைப்பாட்டையும் எதிர்பார்த்த எம்மை என்னத்தால் அடிக்கலாம் சொல்லுங்கள்.

இந்தச் சாமர் மக்களும் நோர்வேஜிய அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து போராட்டம் செய்தார்கள். தங்களுக்கென்று தனிப் பாராளுமன்றமும், கொடியும், தேசியப் பெருநாளும் (மாசி 6) அமைத்துக் கொண்டார்கள். ஆயினும் அவர்களால் வெல்லப்படாத இன்னும் பல உரிமைகள் விடுபட்ட படியேதான் இருக்கின்றது. தனது நாட்டிலுள்ள சிறுபான்மை இனத்தின் தார்மீக உரிமைகளையே மறுக்கும் இந்த நோர்வே எமது பிரச்சனையில் சுத்தமான மத்தியஸ்தம் வகிக்கும் என்று எதிர்பாக்கும் எமது தலையில் எதைக் கரைத்து ஊற்றுவது சொல்லுங்கள்.

._._._._._.

இது ஒரு கட்டுரை மட்டுமல்ல வேறுவழியின்றி இந்நாட்டில் இருப்புக் கொண்டதால் எற்பட்ட வலியும், வேதனையும் மனச்சாட்சியின் தண்டனையுமே இந்தக் கட்டுரை.

ஒரு தனி மனிதனுக்காக நாங்கள் எத்தனை உயிர்களையும், உடைமைகளையும் பறிகொடுத்து விட்டோம்? – அமைச்சர் முரளீதரன்

karuna-daya.jpg“பிரபாகரன் உடலைச் சென்று பார்வையிட்ட போது அது அவரின் உடலாகவே இருந்தது. இதனையடுத்து அங்கு ஊடகவியலாளர் ஒருவர் என்னிடம் கேட்டார், “அந்த உடலை நீங்கள் முதல் முதலாகப் பார்த்த போது எவ்வாறு இருந்தது என்று?” அத்தருணத்தில் நான் சிந்தித்துப் பார்த்தேன். அந்த ஒரு தனி மனிதனுக்காக நாங்கள் எத்தனை உயிர்களையும், உடைமைகளையும் பறிகொடுத்து விட்டோமென”. அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.

நாட்டை மீட்டெடுத்த படை வீரர்களையும் அவர்களது குடும்பத்தார்களையும் கௌரவிக்கும் விசேட நிகழ்வு இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்றத் திடலில் நடைபெறுகிறது. இதில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் சிங்களத்தில் உரையாற்றிய அமைச்சர் தொடர்ந்து தமிழில் உரையாற்றினார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பிரபாகரன் கொல்லப்பட்டதன் பிற்பாடு பல சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்தன. அது அவருடைய உடல் தானா என்கின்ற ஒரு கேள்வி எழுந்திருந்தது. எனவே மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவரது உடலைச் சென்று பார்வையிட்டு உறுதிப்படுத்தும் படி கேட்டிருந்தார்.

அங்கு நாம் சென்று பார்த்த போது அது அவரின் உடலாகவே இருந்தது. இதனையடுத்து அங்கு ஊடகவியலாளர் ஒருவர் என்னிடம் கேட்டார், “அந்த உடலை நீங்கள் முதல் முதலாகப் பார்த்த போது எவ்வாறு இருந்தது என்று?” அத்தருணத்தில் நான் சிந்தித்துப் பார்த்தேன். அந்த ஒரு தனி மனிதனுக்காக நாங்கள் எத்தனை உயிர்களையும், உடைமைகளையும் பறிகொடுத்து விட்டோமென. அவர் கொல்லப்பட்ட தினத்துடன் பயங்கரவாதம் பூண்டோடு ஒழிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நாட்டு மக்கள் அனைவரும் இன்று பயம் , பீதி இன்றி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

தமிழர்களிடையே சில சந்தேகங்கள் இருக்கின்றது. இதன் பிற்பாடு நம்மவரின் நிலை என்னவாக இருக்கும் என வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். அவர்களிடம் நான் கூறினேன்,

” நீங்கள் யாரை நம்புகின்றீர்களோ இல்லையோ எமது மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டுமென்று. ஏனென்றால் அனைத்து மக்களின் தேவைகளையும், அபிலாஷைகளையும் அறிந்து செயற்படுகின்ற ஒரு மாபெரும் தலைவனாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திகழ்ந்து வருகின்றார்.

அது மாத்திரமன்றி ஒரு துணிச்சல் மிக்க, சிறப்புமிக்க, சர்வதேச நாடுகள் போற்றுகின்ற ஒரு தலைவராக ஜனாதிபதி திகழ்ந்து வருகின்றார். அவருடைய இந்த உறுதியான , திடமான முடிவின் காரணமாகத்தான் இன்று பயங்கரவாதம் துடைத்தெறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று நாட்டின் அனைத்து மூலைகளிலும் உள்ள மக்கள் நிம்மதி பெருமூச்சுடன் வாழ்கின்றார்கள். ஆகவே அந்த உத்தம தலைவருக்கு நாம் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.

பிரபாகரனின் கொடுமையிலிருந்து விடுவிக்கப்பட்ட அந்த மக்களின் மனநிலை குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் . அம்மக்களிடமிருந்து பிரிக்கப்பட்ட பல சிறார்கள் பிரபாகரனால் களமுனைகளில் பலிக்கடாவாக்கப்பட்டிருக்கின்றார்கள். இன்று அவர்கள் வேதனையுடன் வாழ்கிறார்கள். அம்மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளது.

மீள் குடியேற்றங்களின் பின்னர் அங்கு தேர்தல் இடம்பெற்று அம்மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும். கடந்த 30 வருட போராட்டங்களின் போது பிரபாகரனால் பல ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டாலும், இறுதியாக நாங்கள் பெற்றுக் கொண்டது ஒன்றுமே இல்லை.

ஆகவே இந்தக் காலப்பகுதியில் நாங்கள் நாடாளுமன்ற பலத்தைக் கூட்டினோமாகில் அதுவும் ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்பட்டிருந்தோமானால் தமிழர்களின் பிரதேசங்கள் பாரிய வளர்ச்சியடைந்திருக்கும். கடந்த காலங்களை மறந்து, அவற்றை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, எமது நாடாளுமன்ற பலத்தை கூட்டி வெற்றியடைவோம்” எனக்கூறி விடைபெற்றார்.

குவாந்தனாமோ தடுப்பு சிறையை மூடுவது என்ற திட்டத்தை ஒபாமா நியாயப்படுத்தியுள்ளார்.

Obama_President_of_Americaகுவாந்தனாமோ தடுப்பு சிறையை மூடுவது என்ற தனது திட்டத்தை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நியாயப்படுத்தியுள்ளார். இந்த தடுப்புச்சிறையும், கொடூரமான விசாரணை முறைகளும் அமெரிக்காவை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தி விட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் யாரும் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.

பரமேஸ்வரனின் பட்டினி போராட்டம் மீண்டும் தொடர்கின்றது.

parames.jpgபிரித்தானிய அரசாங்கத்தின் உறுதிமொழிகளுக்கு மதிப்பளித்து 24 நாட்களுக்கு பின்பு தன்னுடைய பட்டினி போராட்டத்தை இடைநிறுத்திய பரமேஸ்வரன் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தன்னுடைய பட்டினி போராட்டத்தை திரும்பவும் ஆரம்பித்துள்ளார்.

யுத்த வெற்றிகள் பிரச்சினைகளுக்கு தீர்வை தராது: கொபி அனான்

kofianna00.jpgமோதல்களால் இடம்பெயர்ந்தவர்களை துரிதமாக குடியமர்த்துவதன் மூலம் 25 வருடகால யுத்தத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை சரிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கொபி அனான் இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளார்.

உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் இன்றைக்கு புலிகளாக மாறியிருக்கிறார்கள் – பா.ம.க. ராமதாஸ்

ramados1.jpgஇலங்கையில் தமிழனும், சிங்களவனும் சேர்ந்து வாழ முடியாது என்றும், இலங்கை பிரச்சனைக்கு தமிழ் ஈழம் தவிர வேறு தீர்வு இல்லை எ‌ன்று‌ம் பா.ம.க. நிறுவன‌ர் ராமதாஸ் கூ‌றினா‌ர்.
 
ஈழத் தமிழர்களை பாதுகாக்க ஐ.நா மன்றம் நேரடியாக தலையிட்டு பொறுப்பேற்க வேண்டும். முகாம்களில் உள்ள மக்கள் விடுவிக்கப்பட்டு அவர்கள் சொந்த வீடுகளுக்கு திரும்ப வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்ச, சிங்கள இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை போர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற ஐ.நா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் வற்புறுத்தும் வகையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நே‌ற்று மாலை எழுச்சி பேரணி நடைபெற்றது.

சென்னையில் நட‌ந்த எழு‌ச்‌சி பேர‌ணி‌ முடி‌வி‌ல் பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் பேசுகை‌யி‌ல், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவரை யாரும் கொல்ல முடியாது. தமீழம் மலரும் வரையல்ல, அதனுடைய வளர்ச்சியை பார்த்து விட்டே அவர் இயற்கையான மரணத்தை தழுவுவார்.

இப்போது நம்முடைய கோரிக்கையெல்லாம் இந்திய அரசு இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்பதல்ல. இனி, என்றுமே நாம் அதை கேட்கப்போவதில்லை. அதனால் எந்த நன்மையும் இல்லை என்று நமக்கு தெரியும். இனி சர்வதேச சமுதாயம், சர்வதேச நாடுகள், ஐ.நா மன்றம் இவைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக தாய்த் தமிழகத்திற்கான நம்முடைய வேண்டுகோள் இருக்க வேண்டும். உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் இன்றைக்கு புலிகளாக மாறியிருக்கிறார்கள். ஆக, இந்த போரின் மூலமாக நமக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வெற்றி, உலகத்தமிழர்கள் எல்லாம் இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளார்கள். அதே நேரத்திலே இங்கே தமிழீழத்தை தவிர, வேறு தீர்வு இல்லை என்பதை உலக மக்களுக்கு, உலக நாடுகளுக்கு சொல்லியாக வேண்டும். சிங்களவனும், தமிழனும் எந்த காலத்திலும் சேர்ந்து வாழ முடியாது என்பதற்கான காரணத்தை நாங்கள் சொல்கிறோம். தமிழீழத்தை நோக்கித்தான் நம்முடைய பரப்புரை இருக்க வேண்டும். தமிமீழத்தை அடைவதற்கான பரப்புரையை மேற்கொள்ள வேண்டும்” எ‌ன்று ராமதாஸ் பேசினார்.

மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு

pm-manmogan.jpg மன்மோகன் சிங் தலைமையில்  புதிய அமைச்சரவை இன்று மாலை 06.30 மணி அளவில் பதவி ஏற்றது.

சிதம்பரம், மம்தா பானர்ஜி, சரத் பவார், கமல்நாத், எஸ்.எம். கிருஷ்ணா, பிரணாப் முகர்ஜி, அந்தோனி, கபில் சிபல்,முரளி தியோரா, மொய்லி, பரத்வாஜ், சி.பி.ஜோஷி, ஷிண்டே, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி, ஜெய்ப்பால் ரெட்டி, வயலார் ரவி, ஹண்டிக் .பி.கே., ஆகிய 19 பேரும் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு ராஜீவ்காந்தி கௌரவ விருது

rajiv_gandhi_award2009.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ராஜீவ்காந்தி ஞாபகார்த்த விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.

இலங்கையில் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு  தலைமைத்துவத்தை வழங்கிதனை கௌரவிக்கும்  வகையில் அகில இந்திய பயங்கரவாத எதிர்பு அமைப்பு இந்த விருதை வழங்கவுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர்; எம்.எஸ் பிட்தா தெரிவித்ததாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் சி.ஆர். ஜெயசிங்க அறிவித்துள்ளார்.

தமது அமைப்பின் தூதுக்குழு இலங்கைக்கு வருகை தந்து இவ்விருதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

ஜோன் ஹோம்ஸும் இன்று வருகிறார்

john-holmes.jpgஇலங்கைக்கு இன்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விடயங்களுக்கான உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இலங்கைக்கு இன்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் வரவுள்ள நிலையில் அவருடன் இவரும் வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜோன் ஹோம்ஸுடன் ஐக்கிய நாடுகளின் உயர் அதிகாரிகள் 10 பேர் வரவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் முகாம்களுக்கும் மோதல் நடைபெற்ற பகுதிக்கும் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அவரது தலைமை அதிகாரியான நம்பியார் நேற்று வியாழக்கிழமை வவுனியாவிலுள்ள முகாமுக்குச் சென்று பார்வையிட்டதுடன் மோதல் நடைபெற்ற பகுதியை விமானத்தில் சென்று பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஜோன் ஹோம்ஸுடன் 10 ஐ.நா. அதிகாரிகள் வருகை தரவுள்ளதாகவும் இதில் ஐ.நா. அரசியல் தலைவர் லின் ஹஸ்டேயும் வரவுள்ளதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங் இன்று பதவியேற்றார்.

pm-manmogan.jpg இந்தியாவின் 18வது பிரதமராக மன்மோகன் சிங் இன்று மாலை பதவியேற்றார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் உள்ள அசோகா மண்டபத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புரிமையும் செய்து வைத்தார்.