25

25

பத்மநாதனின் அறிவிப்பு துரோகச் செயல் – பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்; வைகோ அறிக்கை

vaiko.jpgதமிழ்த் தேசிய இனத்தின் தலைவரும், உலகத் தமிழர்களின் இதயநாயகனுமான பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார். அதில் எள் அளவும் எனக்குச் சந்தேகம் இல்லை. உரிய காலத்தில் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க வருவார்.

 மே 18 ஆம் நாள் அன்று, பிரபாபரகன் உயிருடன் இருக்கிறார் என்று, ‘சேனல் 4’ என்ற இலண்டன் தொலைக்காட்சியில் அறிவித்த விடுதலைப் புலிகளின் அனைத்து உலகத் தொடர்புப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், திடீரென்று அந்தர் பல்டி அடித்து, ‘பிரபாகரன் இறந்து விட்டார்’ என்று அறிவித்தது, கடைந்து எடுத்த அயோக்கியத்தனமான துரோகச் செயல் ஆகும்.

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கு ஏகப் பிரதிநிதியாக அறிக்கை விடும் அதிகாரம் அவருக்குக் கிடையாது. மிக அண்மையில்தான், அவர் இந்தப் பொறுப்புக்கே நியமிக்கப்பட்டார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களோடும், துரோகம் செய்து வெளியேறியவர்களோடும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு, விடுதலைப்புலிகள் அமைப்பில் குளறுபடிகளை ஏற்படுத்தவும் அவர் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது. வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் பிடிக்குள் பத்மநாதன் சிக்கி இருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்து இருக்கின்றன.

தமிழ் ஈழத்தில் துன்பமும், துயரமும் சூழ்ந்து, ஈழத்தமிழ் மக்கள், மனித குலம் சந்தித்து இராத அவலத்துக்கும் அழிவுக்கும் ஆளாகி இருக்கின்றனர். கொடுந்துயரில் ஈழத் தமிழ் இனம் சிக்கி வதைபடும் நேரத்தில், செல்வராசா பத்மநாதனின் அறிவிப்பு மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். ஈழத்தமிழ் மக்களும், தாய்த்தமிழகத்திலும், தரணி எங்கும் உள்ள தன்மான உணர்வு கொண்ட தமிழர்களும், இதை நம்ப வேண்டாம்; தலைவர் பிரபாகரன் அவர்கள், உயிருடன் இருக்கிறார். தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் அனைத்து உலகப் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர், அறிவழகன்,தனது அறிக்கையில், பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்து உள்ளதையும் சுட்டிக்காட்டவிரும்புகிறேன்.

தலைவர் பிரபாகரன் அவர்கள் வென்றெடுக்கக் களம் அமைத்த இலட்சியங்களை வெல்லவும், ஈழத்தமிழர்களின் துயர் துடைக்கவும் உறுதிகொண்டு நம் கடமைகளைத் தொடர்வோம்

இந்தியா ஆயுதம் தர மறுத்ததாலேயே சீனாவிடம் ஆயுதக் கொள்வனவு செய்தோம்: சரத் பொன்சேகா

fonseka-000.jpgவிடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களின் போது ஆயுதங்களை வழங்க இந்தியா மறுத்ததாலேயே சீனாவிடம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய வேண்டியநிலை ஏற்பட்டதாக இராணுவத் தளபதி ஜென்ரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.  “பாரிய விளைவினை ஏற்படுத்தும் ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கும் அல்லது விற்பனை செய்யும் நிலையில் தாம் இல்லையென இந்தியா கூறிவிட்டது. தொடர்பாடல் சாதனைங்களைக்கூட வழங்கமுடியாது என அவர்கள் கூறிவிட்டனர்” என்று இராணுவத் தளபதி கூறினார்.

இதனாலேயே, பாகிஸ்தான், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் உதவியை நாடவேண்டியேற்பட்டதாக இந்திய செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்தார்.இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்த ஆயுதங்களிலும் குறிப்பிட்டளவு ஆயுதங்களையே பாகிஸ்தான் வழங்கியதுடன், ரஷ்யா, உக்ரேன் உள்ளிட்ட ஏனைய நாடுகளிலிருந்தும் குறிப்பிட்டளவு ஆயுதங்களே தமக்குக் கிடைத்ததுடன், அவை மிகவும் விலையுயர்ந்தவை என்பது தெரியவந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

“எனவே எமக்கு மாற்றுவழியிருக்கவில்லை. சீனாவிடமே கனரக ஆயுதங்களை நாங்கள் வாங்கினோம்” என்றார் சரத் பொன்சேகா.“இந்த ஆயுதங்கள் ரஷ்யாவின் ஆயுதங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் மலிவானவை. எமக்கு மாற்றுவழியிருக்கவில்லை” என அவர் கூறினார்.

TNA நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்- ஆனந்த சங்கரி

a_sangary.jpgபுலிகள் எனும் அமைப்பு தோற்கடிக்கப்பட்டுள்ளதுடன் அவ்வாறானதொரு அமைப்பு இங்கில்லையாகையால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வெளியேறவேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இங்கே ஓர் புதிய அத்தியாயம் திறக்கப்பட்டுள்ளது. அவ்வத்தியாயம் புலிகள் இல்லாததோர் அத்தியாயம். புலிகள் இல்லாத புதிய அத்தியாயத்தில் தமிழ் கூட்டமைப்பினருக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

ஐலா புயல்: ஒரிசாவில் 12 பேர் பலி

rain.jpgவங்காள விரிகுடா கடலில், ஐலா என்ற பயங்கர புயல் உருவாகி இருந்தது. அந்த புயல் இன்று மேற்கு வங்காளம்-வங்காள தேசம் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் படி அந்த புயல் இன்று மாலை மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா அருகே கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக பர்கானா மாவட்டம், கிழக்கு மிட்னாப்பூர், அவுரா, ஹூக்ளி, பர்தாமன் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
 
மழை-புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, ராணுவம், எல்லை பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், படகுகளில் சென்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த புயல் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை மொத்தம் 12 ஆக இருந்தது. மேற்கு வங்காள மாநிலத்தில் மட்டும் மழைக்கு 9 பேர் பலியானார்கள்.

புலிகளுடன் தொடர்புள்ள 9100 பேர் நிவாரணக் கிராமங்களில் – பிரிகேடியர் உதய நாணாயக்கார

udaya_nanayakkara_brigediars.jpgவடக்கு நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள 9100 பேர் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தமையை ஏற்றுக்கொண்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார சற்று நேரத்துக்கு முன்னர் தெரிவித்தார்.

இவர்களை வவுனியா, வெலிக்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பிவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரிகேடியர் கூறினார். இவர்களில் உள்ள சிறுவர்கள் அம்பேபுஸ்ஸ சிறுவர் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என்றும் அவர் மேலும் கூறினார்.

ஆகஸ்ட் மாதம் வடக்கில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் – ஜுன் 17 முதல் 24 வரை வேட்புமனுத் தாக்கல்

north_.jpgவவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்தலுக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 17ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தலைமையில் அவரது அமைச்சில் இன்று காலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலின் பின்னர் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வட மாகாணத்தில் இறுதியாக கடந்த 1998ஆம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பின்னர் அங்கு எந்தத் தேர்தல்களும் நடைபெறவில்லை. எனினும் தற்போது வட மாகாண மக்களுக்கு 11 வருடங்களின் பின்னர் மீண்டும் தமது அரசியல் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இவ்விரு உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் நடத்துவதற்கு தேர்தல் திணைக்களம் நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.வட மாகாணத்தில் ஒரு மாநகர சபை, 5 நகர சபைகள் மற்றும் 28 பிரதேச சபைகள் உட்பட 34 உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

போராட்டம் தொடரவேண்டும். : சேனன்

Wanni_War_Welfare_Campஇரத்தக்களறியின் பின்

இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்வதை நிறுத்து பிரச்சார கூட்டம் ஒன்று பிரான்ஸ்ல் நடைபெறவுள்ளது

இந்தக் கூட்டம் இம்மாதம் 28ம் திகதி 2009 அன்று (The meeting place is) AGECA, 144 bd de Charonne, 75011 – Métro Alexandre Dumas (ligne 2) நடைபெறவுள்ளது.

கடந்த ஜனவரி 2ல் இரானுவம் கிளிநொச்சியை பிடித்ததில் இருந்து 20,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளின் கட்டுபாட்டு பகுதிக்குள் இருந்த 300 000க்கும் அதிகமான மக்களை சுற்றிவளைத்த இரானுவம் தினமும் கடும் தாக்குதல்செய்து கொலைவெறியாடியது. உணவு மருத்துவம் தங்கும் வசதிகள் இன்றி பட்டினியில் வாடிய மக்கள்மேல் குண்டுமாரி பொழிந்து கொன்று தள்ளியது. மக்கள் கூட்டமாக இருந்த இடங்கள் மருத்துவமனைகள் என்று முரட்டுத்தனமாக செல்கள் அடிக்கப்பட்டு மக்கள் வேட்டையாடப்பட்டதை மனித உரிமை அமைப்புக்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன. அதனால் இராணுவம் இந்த மனித உரிமை அமைப்புக்களையும் பத்திரிகையாளர்களையும் யுத்தபிரதேசத்தில் இருந்து முற்றாக தடைசெய்தது மட்டுமின்றி தெற்கில் தமக்கெதிராக இயங்க அல்லது பேச முற்பட்டவர்ளையும் வேட்டையாடியது.

கடந்த பல மாதங்களாக நடத்திமுடித்த கொலைவெறியாட்டத்தின் பின் மகிந்த ராஜபக்ச மக்களை ‘விடுதலை’ செய்துவிட்டதாக தற்போது அறிவித்துள்ளார். பயங்கரவாதத்தில் இருந்து இலங்கையை காப்பாற்றி விட்டதாக கடந்த மே 18ல் ‘வெற்றி’ யை அறிவித்துள்ளார் ஜனாதிபதி. இலங்கை மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் பாரிய உயிரிழப்புக்காக துக்கம் கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் 20ம் திகதியை கொண்டாடும் நாளாக அரச விடுமுறையை அறிவித்துள்ளது அரசு. 20 000க்கும் மேற்பட்ட உயிர்களை சில மாதங்களுக்குள் சூறையாடியதை வெற்றியாக அறிவித்து கொண்டாடும் சிங்கள இலங்கை அரசு தமிழர் உரிமை பற்றி பேச எந்த தகுதியும் அற்றது. வெற்றி கொண்டாட்டங்களுக்கு முந்திய சில நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். எதுவித நடவடிக்கைகளையும் எடுக்க மறுக்கும் ஒன்றுக்கும் உதவாத யு.என் கூட இறுதி நாட்கள் நிகழ்வுகளை ‘இரத்தகளறி’ என்று வர்ணித்துள்ளது. மனித உரிமை மற்றும் ஜனநாயக உரிமை பற்றி எந்த அக்கறையு மற்ற வலதுசாரி வியாபரிகளான ஜரோப்பிய ஒன்றியம் கூட யுத்த குற்றம் சார்பாக தனியாக விசாரனை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.

பாரிய அவலத்தை எதிர்கொண்டுள்ள தமிழ் மக்களை பொறுத்தவரை இந்த யுத்த முடிவு எந்த மாற்றத்தையும் கொண்டு வந்துவிடவில்லை. அரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அகதிகளாக்கப்பட்டு – இரண்டரை லட்சத்துக்கு அதிகமானவர்கள் அடிப்படை வசதிகளற்ற முகாம்களில் அடைக்கப்பட்டு –பேச்சுரிமை உட்பட அனைத்து ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்பட்டு பயக்கெடுதிக்குள் வாழும்படி தள்ளப்பட்டுள்ள நிலையில் கொண்டாட என்ன இருக்கு? தெற்குக்கு தப்பியோடியவர்கள்கூட திரும்பிவர ஒன்றுமில்லாதபடி தரைமட்டமாக்கப்பட்ட வாழ்விடங்களை பார்த்து சந்தோசப்பட என்ன இருக்கு? யுத்தத்தால் ஏற்கனவே கொடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்களை முகாம்களில் அடைத்து தலையாட்டிகள் முன்நிறுத்தி குற்றவாளிகளாக குறுக்கி அவர்களை மேலும் மன உளைச்சல் நோக்கி தள்ளும் அக்கிரமத்தை பார்த்துகொண்டு பேசாமல் இருக்கமுடியாது.

உரிமை போராட்டம் தொடர்வது அவசியதேவை

பயங்கரவாதத்துக்கு எதிரான அரசின் யுத்தம் ஆயிரக்கணக்கான தமிழர் உயிர்களை வேட்டையாடியுள்ளதால் தமிழர்கள் இனி தம்மேல் திணிக்கப்படும் அரசியலை ஏற்றுக்கnhள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. கொலை வெறியாட்டம் மூலம் தமிழர் தம் உரிமைகளை சரணாகதியாக்கிவிடுவார்கள் என்று எதிர்பார்ப்பது மிகத்தவறு. தமிழ் மக்கள் மிகக்கேவலமான வறுமைக்குள் வாழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள இத்தருணத்தில் தமிழ் மக்களின் பாரிய ஒன்றுபட்ட எழுச்சியே அவர்களை அடக்குமுறையில் இருந்து மீட்கக்கூடியது. இருப்பினும் பாதிக்கப்பட்டுள்ள இம்மக்கள் அத்தகைய உரிமை கோரலை தலையெடுக்காவண்ணம் அனைத்து கட்டுப்பாடுகளையும் உருவாக்கியுள்ளது அரசு. இருப்பினும் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் தொடர்வதும் மக்கள் சுதந்திரமாக தமது தேவைக்கான குரலை வைக்கும் சூழலை உருவாக்குவதும் அத்தியாவசிய தேவை. அதற்கான முதற்கட்ட போராட்டத்தை முன்னெடுக்கும் முயற்சியை நாம் செய்துவருகிறோம். எமது அணிதிரட்டல் பின்வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.

1 இராணுவ அடக்குமுறையை உடனடியாக நிறுத்து – தமிழ் மக்கள் வாழும் இடங்களில் இருந்து இராணுவத்தைத் திரும்பப்பெறு. மக்கள் கடத்தப்பட்டும் காணாமற் போய்க் கொண்டிருப்பதை நிறுத்து.

2 தடுப்பு முகாம்களை மூடு – தேர்வு செய்யப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் மூலம் மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளான உணவு, தங்கும் வசதி, மருத்துவத் தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்.

3 அனைவருக்குமான ஜனநாயக உரிமைகளை உத்தரவாதப்படுத்து. – பேச்சுரிமை, ஊடக உரிமை, சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களினதும் தொழிற்சங்க உரிமை, இனம் மதம் சாதி பால் வேறுபாடின்றி அனைவரது உரிமைகளையும் சமமாக மதிக்கும் கட்சிகள் சுதந்திரமாக இயங்க தேர்தலில் பங்குபற்றும் உரிமை, முதலான அனைத்து ஜனநாயக உரிமைகளையும் உத்தரவாதப்படுத்து.

4 ஒன்றுபட்ட தொழிற்சங்கங்களை உருவாக்குவதற்கான ஆதரவைத் திரட்டுவோம். – கூட்டமைக்கும் அல்லது அணிதிரள்வதற்கான உரிமையை வழங்கு. கொலை மற்றும் காணாமற் போகின்றவர்கள் பற்றிக் கண்காணிக்கும் ‘மக்கள் கண்காணிப்பு குழு’ போன்ற அமைப்புகள் சுதந்திரமாக பணியாற்றும் உரிமையை வழங்கு.

5 சுயநிர்ணய உரிமையை உத்தரவாதப்படுத்து (நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயமான மக்கள் பிரதிநிதிகளின் கண்காணிப்பில் வாக்கெடுப்பு மூலமோ அல்லது ஒரு சட்ட நிர்ணய சபையை உருவாக்குவதன் மூலமோ அல்லது வேறேதாவது முறையிலோ சுயநிர்ணய உரிமையைப் பாதுகாப்பதற்கான வழியேற்படுத்து.) வறிய மக்கள், தொழிலாளர்கள் ஒன்றுபடுதலின் அடிப்படையில் மக்கள் தம் எதிர்காலத்தைச் சுயமாக நிர்ணயிப்பதற்கான ஆதரவைத் திரட்டுவோம்.

இலங்கை அகதிகளின் நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் – எஸ். சீ. சந்திரஹாசன்

s_j_v_son.pngநீண்ட காலமாக அகதிகளாக இருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விடிவொன்று எட்டும் என்ற நம்பிக்கை எற்பட்டுள்ளதாக  கடந்த 25 வருடங்களாக இலங்கை அகதிகளை புனரமைக்கும் அமைப்பின் தலைவராக செயற்பட்டுவரும் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் மகன் எஸ். சீ. சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய இலங்கை அகதிகளின் நிலைப்பாடு தொடர்பான இந்திய ஊடகத்திற்கு வழங்கியுள்ள பேட்டியொன்றின் போதே அவர் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில் நீண்டகாலமாக அகதிகளாக இருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விடிவொன்று எட்டும் என்ற நம்பிக்கையினை அவர் வெளியிட்டுள்ளார். 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தை அடுத்து அகதியாக இந்தியா சென்ற அவர் ஏனைய அகதிகளின் நலன்களை பேணும் முகமாக இந்த அமைப்பை நிறுவி நிர்வகித்து வருகின்றார்.

இலங்கை தமிழ் மக்களுக்கு சமனான உரிமைகளை வழங்குவதன் மூலம் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அகதிகளாக உள்ள இலங்கையர்களின் சேவைகளை பெறமுடியும் என தெரிவித்துள்ளதுடன் இதன்மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை சிறந்த முறையில் மேம்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்த காலப்பகுதியினுள் இந்தியாவில் உள்ள 25 மாவட்டங்களில் 73 ஆயிரத்து 378 இலங்கை அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்சமயம் முகாம்களி;ல் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கைத்தமிழர்களுக்கு மன்னிப்பு வழங்கி ஜனநாயக நீரோட்டத்தில் இணைய சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் எனவும் அந்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.
 
மேலும் ஜனாதிபதியினால் அண்மையில் தேசிய தொலைக்காட்சியில் ஆற்றிய உரையை தாம் வரவேற்பதாக தெரிவித்த சந்திரஹாசன் அதற்கிணங்க தமிழ் மக்களுக்க நிரந்தர தீர்வுடனான அமைதி கிட்டும் எனவும் இந்திய ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி வழங்கப்பட வேண்டும் – நீதியரசர் சரத். என்.சில்வா

sarath-n-silva.jpg மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருள்களை வழங்கினாலும், அவர்கள் தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டுசெல்வதற்கான சட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டுமென பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வா கூறினார். குருநாகல் உயர்நீதிமன்றத்தில் நேற்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதம நீதியரசர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது,

எமது நாட்டில் சட்டம் செயற்படாத இடத்துக்கு நான் அண்மையில் விஜயம் செய்திருந்தேன். வடக்கு, கிழக்கிலுள்ள சில நீதிமன்றங்களில் புலிகளால் தீர்ப்புக்கள் வழங்கப்பட்டன. அந்த நீதிபதிகளை நீக்கிவிட்டு முக்கியமான பதவிகளுக்கு திறமைவாய்ந்த நீதிபதிகளை நான் நியமித்துள்ளேன். அந்தப் பகுதிகளில் தமிழ் நீதிபதிகளுக்கு நாங்கள் முன்னுரிமை வழங்கியுள்ளோம். வெளிநாடுகள் எமது நாட்டைப் பற்றி மிகவும் தாழ்வான அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளமை கவலையளிக்கிறது. எமது நாட்டைப் பற்றி பல்வேறு தொலைக்காட்சிகளில் பிழையான தகவல்கள் வெளியாகியுள்ளமையே அதற்கான காரணம்.

நீதிமன்றங்களை அபிவிருத்திசெய்ய வெளிநாடுகளிடம் நாங்கள் உதவி கோரினால், அவர்கள் அதற்கு இயலாதெனக் கூறுவதுடன்,  வடக்கு கிழக்கு அபிவிருத்திக்குப் பணம் தருவதாக அவர்கள் கூறுகின்றனர் அவ்வாறிருந்தும் பெற்றுக்கொண்ட நிதியுதவிகளிலிருந்தே யாழ்ப்பாணம்,  திருகோணமலை மற்றும் கண்டியிலுள்ள நீதிமன்றக் கட்டத்தொகுதிகளை நாம்  கட்டிமுடித்தோம்.

தற்பொழுது இந்த நீதிமன்றக் கட்டத்தொகுதிகளுக்கு எம்மால் செல்லமுடியும். தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டார்கள் என நினைப்பதற்கு நாம் இடமளிக்கவில்லை. இந்தப் பகுதிகளில் தமிழர்களை நாம் நீதிபதிகளாக நியமித்துள்ளோம். யாழ் நீதிமன்றமும் இலங்கையிலுள்ளதொரு நீதிமன்றம் என்ற எண்ணத்தை நாம் தோற்றுவித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள்: அவற்றை இலங்கை அரசு தீர்க்க வேண்டும்- எஸ்.எம். கிருஷ்ணா

krishna.jpgஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் என்னவென்று கண்டறித்து அவற்றை இலங்கை அரசு தீர்க்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் எந்தக் காரணத்தால் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும், அவர்களின் பிரச்னைகளின் மூல காரணம் என்ன என்பதையும் கண்டறித்து தீர்க்க வேண்டும்.

அந்நாட்டின் அரசியல் சாசனத்துக்கு உள்பட்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் சமஉரிமை அளிக்க வேண்டும். இலங்கை தங்கள் நாடு என்ற உணர்வு அங்குள்ள தமிழர்களுக்கு ஏற்படும் வகையில் அரசு செயல்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது.

போரினால் இடம் பெயர்ந்துள்ள தமிழர்கள் தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்று அமைதியாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்டை நாடுகளுடன் அமைதியான நட்புறவையே இந்தியா விரும்புகிறது. பாகிஸ்தானுடனான உறவுக்கு அந்நாட்டில் உள்ள பயங்கரவாதக் கட்டமைப்பே பெரும் தடையாகவுள்ளது.

பாகிஸ்தானுடன் நட்புறவுடன் செயல்பட இந்தியா எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால் முதலில் அங்குள்ள பயங்கரவாதிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அனைத்து அண்டைநாடுகளும் நிம்மதி அடையும் என்றார்.