29

29

28 வயதில் மத்திய அமைச்சரான இளம்பெண்

agatha_sangma.jpgமன் மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அகதா சங்மா (28),  மிகக் குறைந்த வயதில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மக்களவை முன்னாள் தலைவருமான பி.ஏ.சங்மாவின் மகள்தான் இவர். மேகாலாயாவில் உள்ள துரா மக்களவைத் தொகுதியிலிருந்து தேசியவாத காங்கிரஸ் சார்பில் இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டவர் அகதா.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள வேண்டும்- அமைச்சர் முரளீதரன்

muralitharan-mp.jpg“தமிழ் மக்கள் எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக தமது பலத்தை கட்டியெழுப்புவதன் மூலமே இனத்தின் உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் ” என தேசிய நல்லிணக்க அமைச்சர் முரளீதரன் தெரிவிக்கின்றார்.

இன்று வாழைச்சேனை பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :-

“தற்போது 15 தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளன. அக் கட்சிகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருந்தாலும் அவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை. இதன் காரணமாகத் தான் அரசியல் தீர்வு உட்பட எந்த விடயத்திலும் ஒரு முடிவை எட்ட முடியவில்லை.

சில தமிழ் கட்சிகள் இது வரை காலமும் விடுதலைப் புலிகளை வைத்துத் தான் வியாபாரம் செய்தனர். சில அரசியல் கட்சிகள் பிரபாகரனின் பெயரை விற்றார்கள் .இனி அவர்களால் என்ன தான் செய்ய முடியும் என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் ஒற்றுமைப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்புரிமைகளை அதிகரிக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும் எதிர் கட்சியாகவே உள்ளது. அவர்களால் இன்று பாராளுமன்றத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு ஏதாவது அவர்கள் செய்ய வேண்டும் என்ற எதிர்பாரப்பு இருக்குமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள வேண்டும். அப்போது தான் எமது இனத்தின் தேவைகளை சீக்கிரம் நிறைவேற்ற முடியும்.”என்றும் அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் 300 பெற்றோல் நிலையங்கள் திறப்பு : IOC நடவடிக்கை

loc_logo.jpgஇலங் கையின் வடக்கு கிழக்கில் 300 பெற்றோல் நிலையங்களைத் திறக்கிறது இந்தியன் ஒயில் கூட்டுத்தாபன நிறுவனம். இந்தியன் ஒயில் நிறுவனத்தின் இலங்கை கிளைப் பணியாளர் சுரேஷ் குமார் இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வடக்குப் பகுதியில் நீண்ட காலமாகவே எரிபொருள் விநியோகம் இல்லை. அங்குள்ள வாகனங்கள் பெரும்பாலும் தாவர எண்ணெய் மற்றும் மண்ணெண்ணெயிலேயே இயங்கி வந்தன. அதற்கேற்ப வாகனங்களை வடக்குப் பகுதி மக்கள் மாற்றிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போர் நிறைவடைந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளதையடுத்து,  பெற்றோல் நிலையங்களே இல்லாத வடக்குப் பகுதியிலும், கிழக்கு மாகாணத்தின் உள்ளடங்கிய பகுதியிலும் புதிய நிலையங்களைத் திறக்க இந்தியன் ஒயில் உத்தேசித்துள்ளது. இதற்கான அனுமதியை இலங்கை மேற்படி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புலம்பெயர் மக்களின் போராட்டத்தை தீவிரப்படுத்துமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு

இலங்கைப் படைகள் மேற்கொண்ட தாக்குதலின்போது மக்களின் வெளியேற்றத்தை வலியுறுத்திய அனைத்துலக சமூகம் அந்த மக்கள் இன்று தடைமுகாம்களில் அவலப்படும்போது மௌனித்திருப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவை விசனம் வெளியிட்டுள்ளதுடன், புலம்பெயர் தமிழ் மக்களை ஒன்றுபட்டு நின்று தாயக உறவுகளை காப்பாற்றும் வேலைத்திட்டங்களில் இறங்குமாறும் வலியுறுத்தியுள்ளது

ராணுவ வாகனம் மீது தாக்குதல்: மேலும் 6 பேர் கைது

arrest.jpgகோவை அருகே ராணுவ வாகனம் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் மேலும் 6 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

இலங்கைக்கு ஆயுதங்கள் கொண்டு செல்வதாகக் கூறி கோவை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் கடந்த 2-ம் தேதி பயிற்சி முடித்த வீரர்களை ஏற்றி வந்த ராணுவ வாகனங்கள் மீதுசிலர் தாக்குதல் நடத்தினர்.

போலீசார் வழக்கு பதிந்து பெரியார் தி.க. பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட 35 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சிலரை தேடி வந்தனர். இந்நிலையில், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 6 பேரை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

ஸ்டாலினு‌க்கு துணை முத‌ல்வ‌ர் பத‌வி கொடு‌த்தது ஏ‌ன்- கருணா‌நி‌தி ‌விள‌‌க்க‌ம்

stalin-karuna.jpgஇது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த பிப்ரவரி திங்களில் இருந்து சுமார் நான்கு மாத காலமாக என் உடலில் தவிர்க்க முடியாததும் அபாயம் நிறைந்ததுமான முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை நடைபெற்று, அதன் தொடர்ச்சியாக உடல் நலிவுற்று-இன்னமும் நடக்க முடியாமல், சக்கர நாற்காலியில் தான் சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது.

தேர்தல் பிரசாரத்துக்காக திருச்சி கூட்டத்திற்கு சென்றதாலும், வேறு சில மண விழாக்களில் பங்கேற்றதாலும் மீண்டும் உடல் நலிவுற்று, திரும்பவும் மருத்துவமனையில் பத்து நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று. தேர்தல் பிரசாரக் கூட்டங்களைத் தவிர்க்கவும் ஒரு சூழ்நிலை உருவானதை அனைவரும் அறிவர்.

இந்த உடல் நலிவுடன் அரசு நிர்வாகப்பணிகளில் முழு கவனம் செலுத்த இயலவில்லை. வாரம் ஒன்றுக்கு நூறு கோப்புகளுக்குக் குறையாமல் பார்த்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. மேலும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு வாரியப்பணிகள் மற்றும் அரசுத்துறை பணிகளை எல்லாம் அன்றாடம் கலந்து பேசி முடிவெடுத்து செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு கவனிக்க வேண்டிய அவசியமும் உள்ளது.

எனவே இந்தப் பணிகளை நிதியமைச்சர் பேராசிரியர் ஏற்று நடத்த முடியுமா என்று அவரிடம் விவாதித்ததில் அவருக்கும் உடல் நிலை இடந்தராத நிலைமையை எடுத்துச்சொல்லி, அதன் பிறகு நாங்கள் இருவரும் கலந்து பேசி இரண்டொரு முக்கிய துறைகளின் பொறுப்புகளை மட்டும் நான் வைத்துக் கொள்வதென்றும் பேராசிரியர் அவையின் முன்னவராகவும், நிதி அமைச்சராகவும், தொடர்வதென்றும், எங்கள் இருவருக்கும் அடுத்து இப்போது பகிர்ந்தளிக்கப்படுகிற இலாக்காக்களையும் பொறுப்பேற்று துணை முதல்வர் என்ற நிலையில் மு.க.ஸ்டாலின் செயல்படுவதென்றும் முடிவு செய்து அதற்கான அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

பிரித்தானியாவில் ரிம் மாற்றின் 12 ஆவது நாளாக உண்ணாநிலைப் போராட்டம்

rim-marteen.jpgஇலங்கையில் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் அவலங்களை தடுத்து நிறுத்தி அங்குள்ள தமிழ் மக்களைக் காப்பாற்றக் கோரி பிரித்தானியாவில் ரிம் மாற்றின் முன்னெடுக்கும் உண்ணாநிலைப் போராட்டம் 12 ஆவது நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

தன்னுடைய இந்த போராட்டத்திற்கு சர்வதேசம் ஒரு பதில் தரும் என்ற நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தன்னுடைய போராட்டத்தை தொடர்வேன் என ரிம் தெரிவித்துள்ளார்.  தனக்கு துணையாக அடையாள உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொள்ளும் தாய்மாரை தான் நன்றி உணர்வுடன் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரித்தானியா வாழ் தமிழ் இளையோரால் மேற்கொள்ளப்படும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் தமிழ் மக்களுக்கு ஒரு அமைதியான நிரந்தர முடிவு வரும் வரை தொடரும் எனவும் இதற்கு அனைத்து மக்களும் ஆதரவு தரவேண்டும் எனவும் கேட்டுள்ளனர் ஏற்பாட்டாளர்கள்.

வவுனியா முகாம்களில் முதியவர்களின் பெயர்களைப் பார்வைக்கு வைக்க நடவடிக்கை – அரசாங்க அதிபர் தகவல்

chals_.jpgவவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் பெயர் விபரங்களைப் பார்வைக்கு வைக்கத் தீர்மானித்திருப்பதான வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

அவ்வாறு பெயர் விபரங்களைப் பார்வைக்குவைத்தால் முகாம்களுக்கு வெளியிலிருக்கும் உறவினர்கள் முதியவர்களை அழைத்துச்செல்வதற்கு ஏதுவாக இருக்குமென அவர் கூறினார்.

நலன்புரி முகாம்களிலிருக்கும் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களை வெளியேற அனுமதிக்க மாவட்ட செயலகமும்,  மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சும் தீர்மானித்தன.

இதற்கமையவே ஒவ்வொரு முகாம்களிலும் முதியவர்களின் பெயர் விபரங்களை பார்வைக்குவைக்க நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும்,  அதன் பின்னர் வெளியிலிருக்கும் உறவினர்கள் விண்ணப்பித்து முதியவர்களை முகாம்களிலிருந்து அழைத்துச்செல்ல முடியுமெனவும் வவுனியா அரசாங்க அதிபர் கூறினார். 

துணை முதல்வரானார் மு.க.ஸ்டாலின்- ஆளுநர் அறிவிப்பு

stalin-karuna.jpg தமிழகத்தின் துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா வெளியிட்டார்.

இதுவரை முதல்வர் கருணாநிதி கவனித்து வந்த பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அதிகாரிகள், தொழில், சிறுபான்மை நலம், பாஸ்போர்ட், சமூக சீர்திருத்தம் ஆகிய துறைகளை இனிமேல் ஸ்டாலின் கவனிப்பார் என்றும் ஆளுநர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.பி யின் உள்ளுர் ஏஜென்ட் வவுனியா முகாமில் கைது

புலிகளின் சர்வதேச இணைப்பாளரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனின் உள்ளுர் ஏஜென்ட் வவுனியா நிவாரணக் கிராமம்; ஒன்றில் வைத்து நேற்றுக் கைதுசெய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இவர் தொடர்பாக அங்கிருந்த மக்கள்,  இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொடுத்த பிரத்தியேக தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இவர் உருமாறன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் புலிகளுக்கான ஆயுதக்கடத்தல் மன்னாக விளங்கிய கே.பி. யின் இலங்கைக்கான முன்னணி முகவராக செயற்பட்டு வந்ததாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.  இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சகல இராணுவ உபகரணங்களுக்கும் கேபி யுடனான இரகசிய தொடர்பாளராக செயற்பட்டதாக இவர் தெரிவித்துள்ளார். ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகள் சிலவற்றையும் சரளமாக பேசக்கூடிய இவர் சிறந்த கல்விப்பின்புலத்தை கொண்டுள்ளார்.

அத்துடன் இவர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக 19 தடவைகள் நாட்டை விட்டு வெளியே சென்றுள்ளதுடன் சில தடவைகளில் சட்டவிரோதமாக படகுகளிலும் நாட்டினுள் வந்துள்ளார். இவர் வவுனியா நிவாரணக் கிராமத்தில் இருந்த வேளையிலும் கே.பி. யுடன் செய்மதி தொலைத் தொடர்புமூலம் உரையாடியுள்ளார் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதன்மூலம் கே.பி. இப்போது மறைத்துள்ள இடத்தைக் கண்டுபிடிப்பது சுலபமாகிவிடும் எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.